Tag Archives: Tamils

புனைவுப் புதைவும் அகவெழுச்சி ஆக்கங்களும்

சிறுகதைக் களஞ்சியம் ஆக சொல்வனம் மாறிக் கொண்டிருக்கிறதோ என்னும் பயம் உங்களுக்கு வந்திருக்கும்.

வருகிற எல்லா புனைவுகளையும், பொறுமையாகப் படித்து, ஒவ்வொன்றுக்கும் கருத்தும், எதற்காக மறுதலிக்கிறோம், எப்படி தேர்ந்தெடுப்பில் வைக்கிறோம் என்று ஒவ்வொரு நாளும் (பதினைந்து நாளுக்கு ஒரு முறைதான் என்றாலும்… தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தால் மட்டுமே வீட்டுப்பாடத்தின் பளு) குறையும், நிறையும் சொல்லும் அனைத்து பதிப்பாசிரியர்களுக்கும் நன்றி.

முக்கியமாக லண்டன் சிவா.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-318/

சரி… சுய புராணம் போதும்.

இந்த 318ஆம் இதழைப் பார்த்தால்
ஏழு கதைகள்
ஏழு மொழியாக்கங்கள்

மொழிபெயர்ப்புகள் எல்லாவற்றையும் கடகடவென்று ஓட்டியதில்:
1. நம்பி – சுய முன்னேற்ற கட்டுரையைத் தந்திருக்கிறார். அமெரிக்காவில் உழைத்துத் தள்ளுவோருக்கான ஊக்க விட்டமின்

2. மயக்கமா… கலக்கமா… என்பது போல் டொடரொண்டோ வெங்கட் ஆக்கம் – இன்னும் ஆழமாக வாசிக்க வேண்டும். ஓவியம், மதம், புத்தம் என்று காக்டெயில் போட்டிருக்கிறார்.

3. ரேமண்ட் வில்லியம்ஸ் – நம்பிக்கைக்கான ஆதாரங்கள் : இப்பொழுது உங்களுக்கு இந்த இதழ் தினுசாக மன ஊக்கத்திற்க்காக, உள் உற்சாகத்திற்காக உருவானதோ என்னும் சந்தேகம் வர வேண்டும்.

4. நாம் அனைவரும் அர்ஸுலா லெ க்வினை அதிகம் படிக்க வேண்டும் – விபி வெங்கட் பிரசாத்தின் தமிழாக்கம். லெ குவின் எழுதிய ‘Sea Road’ போன்ற அதிகம கவனம் பெறாத ஆக்கங்களை அடுத்துக் கையில் எடுக்க வேண்டும். இது தெரிந்த விஷயங்களை அர்சுலா மூலமாகத் தொட்டுச் செல்கிறது.

5. எல்லா நேரத்திலும் அதிகபட்ச முயற்சியைக் கொடுங்கள் – பால் ஆஸ்டர் : நியு யார்க் நகரமும் நகரத்தின் எழுத்தாளர்களும் நியு யார்க்கை சுற்றி நடக்கும் எந்தக் கதையும் திரைப்படமும் எனக்கு ரசிக்கும். பால் ஆஸ்டர் இதெல்லாம் ஒருங்கேக் கொடுத்தவர். கூடவே ஃப்ரெஞ்சு வாசிப்பு + வளர்ப்பு வேறு உண்டு.

கூடவே…
யூதர்களைப் பற்றி, மார்கெரித் யூர்செனார் என்ன சொல்லியிருக்கிறார்?

இவ்வளவு சொல்லிவிட்டு அந்த ஏழு கதைகளைப் பற்றி ஒன்றுமே சொல்லாவிட்டால்…
நவீன உணவுமுறையில் பாரம்பரிய சோற்றை விரும்பும் தற்கால ஆண்களைச் சாடும் ’அறிவுப்புருசன் ‘ வாசித்தேன்.

சிறுகதை என்றால்
அ) முடிவுக்கு அருகில் துவங்க வேண்டும்
ஆ) சம்பவங்கள் நிறையவும் தாவல்கள் குறைவாகவும் இருக்க வேண்டும்
இ) போதனை வேண்டாம்; புரிதல் கொடுக்க வேண்டும்.

இது எதுவுமே அந்தக் கதையில் இல்லை. தமிழில் ஒரு பக்கம் காமம் + சுயம் குறித்து எழுதி அலுக்க வைக்கிறார்கள். இன்னொரு பக்கம் எண்பதுகளில் இருந்தே மீளாமல் புரளுகிறார்கள்.

நன்றாக எழுதுபவர்கள் எல்லாம் சினிமாவில் வாசம் செய்கிறார்களோ!?

அனேக அகமுடையார்: யானம் சிறுகதை விமர்சனம்

ஜெயமோகன் அவ்வப்போது சிறுகதைகளை வெளியிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரின் வயதில் அல்லது அவரைப் போன்ற ஆளுமையை அடைந்த பிறகு அவரின் சமகாலத்தவரோ, அவருக்கு முந்தைய இலக்கிய ஜாம்பவான்களோ அத்திப் பூத்தது போலத்தான் சிறுகதைகள் எழுதினார்கள். அவர்கள் நாவல் எழுதுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். அல்லது பேசாமல் இருப்பதே கௌரவத்தைக் காப்பாற்றும் என்று அமைதி காத்தார்கள்.

நான் நினைத்தது – ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, வண்ணதாசன், வண்ணநிலவன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றோர். சுஜாதா மட்டும் விதிவிலக்கோ!?

இந்த எண்ணம் தவறுதலாக இருக்கலாம். இருபதுகளில் துவங்கி அறுபது வயது தாண்டியும் எந்த எழுத்தாளராவது தொடர்ச்சியாக சிறுகதைகளை தொண்ணூறுகளில், 2000களில் வெளியிட்டார்களா?
தீபாவளி சிறப்பிதழ்கள் தவிர்த்து அதற்கான பத்திரிகைகள் இருந்ததா என்பதைக் குறித்த என் எண்ணத்தையும் திருத்தவும்.

நிற்க.

யானம் (சிறுகதை) | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)

இந்தப் பதிவு இலக்கியகர்த்தாக்களின் பிற்கால படைப்பூக்கம் பற்றியது அல்ல. அமெரிக்காவில் வசிக்காத ஒருவர் அமெரிக்காவைப் பற்றி புனைவு எழுதலாமா என்பதைப் பற்றியும் அல்ல. எனினும், அதையும் நோக்குவோம்.

ஒரே ஒரு மேற்கோள்: “என்ஜாய் பண்றாங்களோ இல்லியோ, இது ஸ்கூலிலே பிரெஸ்டிஜ் இஷ்யூவா இருக்கு”

பொத்தாம்பொதுவாக ஜல்லியடிப்பது வாத்தியாரின் வித்தை. ஜெயமோகனின் சிறுகதைகளில் ஒற்றை வரி தீர்ப்பு கொடுத்து மொத்த சமுதாயத்தை சுருக்குவதும் அவ்வப்போது செய்வதுதான். இதிலும் சாமர்த்தியமாக கதாபாத்திரத்தின் வசனமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதே போல் கதை நெடுக மனைவியும் கணவனும் கனமான உரையாடல்களில் ஈடுபடுகிறார்கள்.

கார் என்பது எல்லைகளில்லா சுதந்திரம். நான்கு சுவருக்குள் அடைபட்டுக் கிடக்கும் வீட்டில் இருந்தும், உடன் இருக்கும் நபர்களிடமிருந்தும் கட்டற்ற விடுதலை. பிடித்த பாடல். நினைத்த வேகம். இலக்கற்ற பாதை. அமெரிக்காவில் ஆண்டி முதல் அரசர் வரை எவரும் எளிதில் வாங்கி, உடனடியாக ஊர்ச்சுற்ற, இல்லமாக குடியிருக்க என்று நினைத்த மாதிரிக்கு பயன்படுத்தும் மூலமுதலாதாரப்பொருள்.

யானம் சிறுகதையில் நான்கைந்து நல்ல பொறிகள், துவக்க கண்ணிகள் இருக்கின்றன:
1. அந்தத் தற்கொலை எண்ணம்
2. பச்சை விளக்கிற்காக காத்திருக்கும்போது(ம்) பக்கத்து வண்டிகளை எட்டிப் பார்ப்பது
3. விடுமுறை விட்டால் காரை எடுத்துக் கொண்டு எங்காவது கிளம்புவது

அதை விட அந்த இடங்களை உளவியல் ரீதியாக தீர்க்கமாகவோ சம்பவங்களின் கோர்வையில் ஆழமாகவோ உள்ளே செல்லாமல் ஹெலிகாப்டரில் பறக்கும் அவசரத்துடன் தாண்டி விடுகிறார். அதை விட ஆபத்தான பிரதேசம் – இந்திய சாலைகளையும் போக்குவரத்தையும் அமெரிக்க மக்களோடும் இயந்திரங்களோடும் ஒப்பிடும் பிரதேசங்கள். அவை இன்னும் தேய்வழக்காக அலுமினிய பிரகாசத்துடன் மின்னிடுகின்றன.

காரில் இருக்கும் விடலைகளும் பாந்தன்களும் இன்றைய காலத்தில் செல்பேசியில் மூழ்குவார்களேத் தவிர இந்த மாதிரி தத்துவபூர்வமான விவாதங்களுக்குள் செல்லமாட்டார்கள். கதைதானே? ஜெயமோகன் கற்பனைதானே? அரட்டை அடிக்கக் கூடாதா என்ன!?

எனினும், கதையின் அடிநாதம் முக்கியமான ஒன்றைச் சுட்டுகிறது.

இந்தக் காலத் தம்பதியினருக்கு விவாகரத்தில் விருப்பமில்லை. இல்லறமும் போரடிக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்னும் பத்தாம்பசலி கொள்கைகளிலும் கிஞ்சித்தும் நம்பிக்கை இல்லை.

அவர்கள் திறந்த வாழ்க்கையை விரும்புகிறார்கள். அன்றாடம் ஒரேயொருவடன் தாம்பத்தியம் வைத்துக் கொள்வதினால் வரும் அலுப்புகளை உணர்ந்தவர்கள்.

”நியு யார்க்கர்” கட்டுரையில் இருந்து நறுக்:

So many rules! “American Poly” reveals Americans to be very American. Good Puritans, we made marriage into work and non-monogamy into even more work—something that requires scheduling software, self-help manuals, even networking events. Presumably, participants could at least skip the icebreakers.

https://www.newyorker.com/magazine/2024/01/01/american-poly-christopher-gleason-book-review-more-a-memoir-of-open-marriage-molly-roden-winter

”அன்புள்ள அல்லி” கேள்வியில் இருந்து இன்னொரு மேற்கோள்:

My nesting partner of a decade and I opened our relationship about four years ago, and for the first three years, we were ethically non-monogamous, but not poly. We’re pretty parallel, but we’re recently trying garden party style for big events… the polycule… metamour…

https://slate.com/human-interest/2024/01/birthday-plan-relationships-sex-advice.html

மணிரத்னம் ஓகே கண்மணி எடுத்தது போல், அனேக அகமுடையார் கொள்கைகளை ஜனரஞ்சகமாக்க இன்றைய கல்கித்தனமான கதை. மணி ரத்தினம் சினிமா போல் இதுவும் ஒட்டிக்கோ/கட்டிக்கோ வேட்டியாக பல்லிளிக்கிறது.

உங்கள் வாசிப்பில் என்ன உணர்ந்தீர்கள்?

அஞ்சனக்காரன்

விஜய்காந்த்தை முதன் முதலில் பார்த்தது விவித் பாரதியில். இளையராஜா என்று நினைத்த ‘உள்ளம் எல்லாம் தள்ளாடுதே’ பாடலில். இப்பொழுது பார்த்தால் சலீல் சௌத்ரி!

அசல் ரஜினி இருக்கும்போது இன்னொரு புரட்சியாளரும் ஏழைப் பங்காளரும் எனக்கெதற்கு என்று அவரின் ‘நூறாவது நாள்’ கூட தள்ளிப் போட்டு வந்த எனக்கு, தீபாவளி வந்தது. கூடவே, ‘வைதேகி காத்திருந்தாள்’ படமும் வந்தது.

ராத்திரி ஆனால் பாட்டு பாடுவதை நிறுத்திவிட்டு ரேவதியை கல்யாணம் செய்வானா!? அதை விட்டுவிட்டு வெறுமனே ‘ராசாத்தி… ஒன்ன காணாத நெஞ்சு’னு எவராவது புலம்புவானா? கதாபாத்திரம் நம்பமுடியவில்லை. எனினும், தமிழ் சினிமா. திகிலடையவோ அதிர்ச்சியடையவோ ஏதாவது செய்வார்கள். பத்து வருடத்திற்கு மேல் குடித்தனம் நடத்தி குழந்தைகள் பெற்ற மனைவியை எரியூட்டி விட்டு வரும்போதே, ‘எந்த வீட்டில் எவ வயசுக்கு வந்திருக்கா?’ என்பதை நேரடியாகக் கேட்டும் பார்த்தும் வளர்ந்த எனக்கு இயக்குநர் ஆர். சுந்தர்ராஜனும் மோசமான படைப்பாளி பட்டியலில் இணைந்து கொண்டார்.

அதன் பின்பும் ‘ஒலியும் ஒளியும்’ பாடல்கள் மூலமே விஜய்காந்த் ஈர்த்தார்.

ராதா படங்களைத் தேடித் தேடி பார்த்தபோது, ‘அம்மன் கோவில் கிழக்காலே’ அகப்பட்டது.
’முத்துமணி மாலை… என்னத் தொட்டுத் தொட்டு தாலாட்ட..’விற்காக ”சின்ன கவுண்டர்” கண்ணில் விழுந்தது.
அன்றைய (இன்றைக்கும் தான்) தேவதையான பானுப்ரியாவிற்காக ‘சத்ரியன்’ + ‘பரதன்’. இதில், ‘புன்னகையில் மின்சாரம்’ பாடலில் சுவர்களே தெரியாதவாறும் வெறும் வண்ணம் மட்டும் பின்னணியில் வருமாறு உழைத்ததாக சாந்தோம் மாணவர், அந்த நாள் நடன இயக்குநர் பிரபு தேவா சொல்ல, பாட்டின் சிறப்பு சற்றே புலப்பட்டது.
’சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு’ அர்த்தம் புரிந்ததா என்று பொறிப்புரை கொடுத்த விடலை பள்ளித் தோழர்களுக்காக ”பூந்தோட்ட காவல்காரன்”.
’மயங்கினேன்… சொல்லத் தயங்கினேன்!’ குறித்து தமிழ்த்திரை சுப்புடு சுரேஷ் கண்ணன் முதல் மரவண்டு வரை பலரும் மரத்தடி முதல் முகநூல் வரை எழுதி விட்டார்கள்.

விஜய்காந்த் நடித்த முதல் படம் – ‘ஊமை விழிகள்’.
விஜய்காந்த் கொடுத்த முதல் ஏ+பி+சி செண்டர் ஹிட் படம் – ‘அம்மன் கோயில் கிழக்காலே’; அவரின் பிற படங்களில் இதே கதாபாத்திரத்தை ஷோபனா, ரேகா என வாந்தியெடுத்தார்,

பிற்காலத்தில், ‘வல்லரசு’, ‘சிம்மாசனம்’, ‘பேரரசு’, ‘தர்மபுரி’ போன்ற படங்கள் இவரை தெலுங்கு மண்ணில் கொடி கட்டி — தம்பி பாலகிருஷ்ணாவுக்கு டஃப் கொடுக்க வேண்டியவர் தமிழ் மண்ணில் பிறந்த நம்மை இன்னும் கொடுமை செய்கிறாரே என மிரள வைத்தது.

எனினும், இன்றும் என் மனதில் நிற்பது, “தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை! மன்னிப்பு!!”.

விஜயகாந்த் உருவாக்கிய நம்பிக்கைகள் எனக்கு நிஜம்.
’இளைய தளபதி” ஆக விஜய் போன்றோர் உருவாக துணை நின்றது நிஜம்.
சினிமா கல்லூரியில் படித்து விட்டு, வெளியே வந்த புதியவர்களுக்கு துணை நின்றது நிஜம்.
யேசுவோ, மாரியம்மனோ, ஓரங்க நாடகத்தை ஒளியோவியராக்கிய விசுவோ எவருக்கும் கரிசனம் பார்க்காமல் நடித்து குவித்தது நிஜம்.
நடிகர் சங்கமோ, கேப்டன் தொலைக்காட்சியோ, சொந்த கட்சியோ நடத்தி, ஜெயித்தது நிஜம். (இது டி ஆர். ராஜேந்தர், பாக்யராஜ் போன்ற ஆளுமைகள் வழுக்கிய இடம்).
அவருக்கு என் நெஞ்சில் ஒரு பெக் அடிக்க நினைக்கும் போது, ‘ஒரு மூணு முடிச்சால முட்டாளா போனேன்… கேளு! கேளு!! தம்பீ!!!’ நினைவிற்கு வருவதோ, ’சாமிகளே… சாமிகளே… சொந்தக் கதக் கேளுங்க!!’ என தன் பாட்டுக்கு பாடும்போது என்னுள் ஒளிந்திருக்கும் அந்தக் கருப்புத் தங்கம் வெளிவருவதும் நிஜம்.

அஞ்சலிகள்!

போக்குவாக்கு

சென்ற சில இதழ்களாக சொல்வனம் வழக்கமான பிரசுர நாட்களில் பிரசுரமாகவில்லை. இந்த இதழும் (307) தாமதமாக இன்று பிரசுரமாகியது.

அடுத்த இதழ் (308) டிசம்பர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று பிரசுரமாகும்.

இதழ் எண் 309 டிசம்பர் 31, 2023, மாதத்தின் ஐந்தாம் ஞாயிறன்று பிரசுரமாகும். 2024 இலிருந்து வழக்கமான இரண்டாம் ஞாயிறு மற்றும் நான்காம் ஞாயிறுகளில் இதழ்கள் பிரசுரமாகும்.

நவம்பர் 27ஆம் தேதியிட்ட ‘தி நியு யார்க்கர்’ – தனிப்பட்ட வரலாறு (Personal History) என்னும் தலைப்பில் பல ஆக்கங்களை வெளியிட்டுள்ளது.

சொல்வனம் தளத்திலும் அவ்வாறு ஒவ்வொரு இதழுக்கும் ஒரு குவிமையம் இருக்கவேண்டும்.

உங்களுக்கு மட்டுமே உரித்தான பிரத்தியேகமான அடிப்பாடுகளை எழுதி அனுப்புங்களேன்.

அப்படியே அடுத்தடுத்த இதழ்களுக்கான தலைப்புகளையும் பரிந்துரையுங்களேன்.

solvanam.editor@gmail.com

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை – முதலாமாண்டு விழா

வெர்னர் ஹெர்சாக் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் 11வது பிராயத்தில் தான் தன் முதன் முதல் சினிமாவைப் பார்க்கிறார். அதன் பிறகு பின் வரும் காலத்தில் உலகம் மெச்சும் இயக்குநர் ஆகிறார். குட்டிப் பயலாக இருக்கும்போதே மண்டைக்குள் விதைகளை ஊன்றிவிட வேண்டும்.

அந்த மாதிரி சொர்ணம் சங்கரபாண்டி Sornam Valavan Sankar சின்னஞ்சிறிய வயதிலேயே பள்ளிகளில் திருக்குறளின் முழுப் பதிப்பையும் குறள்நெறிக் கதைகளையும் அந்தந்த வகுப்பிற்கேற்ப அறிமுகம் செய்யும் நூல்களை இல்லந்தோறும், கிராமமெங்கும் ஊராட்சி ஊராட்சியாக ஒவ்வொரு ஒன்றியத்திலும் விலையில்லாமல் கொடுக்கிறார். தருவதுடன் நிற்காமல், முற்றோதல் போட்டிகளை முன்னெடுக்கிறார். குழந்தைகளின் வாழ்வில் மந்திரமாக, நினைவில் ஊறி நிற்கும் அறநெறிச்சாரமாக வள்ளுவரின் குறள்களை ஊன்றுகிறார்.

இந்த சந்திப்பு அதற்கானதல்ல. இது ஹார்வார்டு தமிழ் இருக்கையை உருவாக்கியதற்கான விழா. அதன் பின் பல்வேறு அமெரிக்க, கனடா பல்கலைக்கழகங்களில் வெறுமனே தமிழ்மொழியை மட்டும் பயிற்றுவிக்கும் தமிழ்த்துறையாக மட்டும் இயங்காமல், நாற்காலி போட்டு தீவிரமாக தமிழாக்கங்களை புதினங்களை உலகெங்கும் உள்ள அயநாடுகளில் பல்வேறு பாஷைகளுக்கும் ”தமிழ் இருக்கை” முயற்சிகளைத் தொடரும் விழா.

அமெரிக்க பல்கலை எங்கும், பேராசிரியர்கள் மூலம் பல ஆராய்ச்சி மாணவர்களை கொண்டு ஆய்வுகளும், கருத்தரங்குகளும், மொழிசார்ந்த நிகழ்வுகளும் நடத்தப்படும் தமிழ் இருக்கைகள் உருவாகிக் கொண்டே வருகின்றன (“துறைத்தலைவரையும், அவர்களின் கீழ் பணியாற்றும் பேராசிரியர்கள், துணைப்பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை கொண்டு தமிழில் இளநிலை, முதுகலை பட்டப்படிப்புகளும், ஆராய்ச்சி படிப்பும் வழங்கப்பட்டால் அதுவே தமிழ்த் துறையாகும்” – எழுத்தாளர் அ. முத்துலிங்கம்.)

ஹார்வார்டில் வெற்றிகரமாக தமிழுக்கு சிம்மாசனத்தை உருவாக்கி ஓராண்டு நிறைவடைந்ததைக் கொண்டாடும் எளிய விழா. மார்த்தா செல்பி (Martha Ann Selby) சிறப்புரை ஆற்றினார். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் இன்ன பிற மொழிகளுக்கும் தற்காலப் படைப்புகளையும் செவ்வியல் இலக்கியங்களையும் மொழிமாற்றம் செய்யும் முன்னெடுப்புகளைக் குறிப்பிட்டார். இரு மொழியிலும் ஆற்றல் பெற்றவர்களை மூன்று நான்கு மாதம் தங்கவைத்து மொழியாக்கம் செய்வது, ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு தமிழ் எழுத்தாளர்களை விருந்தினராக அழைத்து அவரின் நாவல்களைக் குவிமையமாக பார்வைக்கு உள்ளாக்கி விமர்சன விழாக்களை நடத்துவது, இலக்கியப் பயிற்சி முகாம் வழியாக மொழியாக்கங்களைப் பரவலாக பல எழுத்தாளர்களிடம் கொண்டு செல்வது, படைப்பாளிகள் பட்டறைகள் – என பல எண்ணங்களையும் திட்டங்களையும் அதற்கான வழிமுறைகளையும் தொலைநோக்கு பார்வையையும் பகிர்ந்தார்.

இந்த விழாவில் பழைய நண்பர்களான ஃபெட்னா சிவா, சொர்ணம். சங்கர் போன்றவர்களை மீண்டும் பார்க்க முடிந்தது. இது வரை வாசித்து மட்டுமே அறிந்திருந்த சிவகாமி ஐ.ஏ.எஸ். போன்றவர்களை சந்தித்து மனம் விட்டு பேச முடிந்தது. அடிக்கடி பார்க்கும் ப்ராவிடென்ஸ், ரோட் ஐலண்ட், கனெக்டிகட், மாஸாசூஸெட்ஸ் தமிழ் மக்கள் மன்றம், நியு இங்கிலாந்து தமிழ் சங்கம் போன்ற பாஸ்டன் வட்டார உறவுகளை புதுப்பிக்க முடிந்தது.

ஹார்வர்டு இருக்கைக்கு அஸ்திவாரம் போட்டு நடத்தி முடித்து அதன் பின்னும் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் மருத்துவர் ஜானகிராமன் அவர்களையும், மருத்துவர் சம்பந்தம் அவர்களையும், நேரில் வாழ்த்த முடிந்தது.

இனிய மாலைப் பொழுதில் விருந்தில் பங்கெடுக்க அழைப்பு விடுத்த பமீலாவிற்கு Saroj Bamiela Sankaran நன்றி!

IPL, LPL, LTTE, IPKF – T20 and Team Names

பத்து வயதிருக்கும். வீட்டில் எதையும் படிக்கும் சுதந்திரம். அந்த அட்டை கிழிக்கப்பட்ட நூல் வாசிக்கக் கிடைத்தது. ரஜினியின் படமான ‘தர்ம் யுத்தம்’ போல் அந்த 1983 கொலைகாரர்கள், கறுப்பு ஜூலை அராஜகவாதிகள் எல்லோரையும் தீர்த்துக் கட்ட எவராவது பிறக்க மாட்டார்களாக என மனம் துடிதுடிக்க வைத்த புத்தகம். கற்பனையில் பல்வேறு சண்டைகளை எண்ணிப் பார்த்து சமாதானம் அடைவேன்.

இன்றைய காலகட்டத்தில் இலங்கை பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் நடத்துகிறது. அதற்கான அணிகளின் பெயர்களில் இயக்கங்களின் பெயரைப் போட்டால் எப்படி இருக்கும்!?

இலங்கையில் இருக்கும் தமிழருக்கான சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பல நிலைகளில் பல்வேறு காலகட்டங்களில் இயக்கங்கள் செயல்பட்டன. ஈழ இயக்கங்களில் புகழ்பெற்றவற்றின் பெயர்கள் (அகரவரிசைப்படி):

1. ஈழ தேசிய விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எஃப். – Eelam National Democratic Liberation Front (ENDLF))
2. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) (Eelam People Democratic Party (EPDP))
3. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈ.பிஆர்.எல்.எஃப். – Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF))
4. ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ் – Eelam Revolutionary Organization of Students (EROS) – ஈ.ஆர்.ஓ.எஸ்.)
5. தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ – Liberation Tigers of Tamil Eelam (LTTE) – எல்.ரி.ரி.ஈ.)
6. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (ப்ளாட் (அ) புளொட் – People’s Liberation Organization of Tamil Eelam (PLOTE) – பி.எல்.ஒ.டி.ஈ.)
7. தமிழீழ விடுதலை இயக்கம் (டெலொ (அ) ரெலா – Tamil Eelam Liberation Organization (TELO) – டெலோ)
8. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (டி.எம்.வி.பி. – Tamileela Makkal Viduthalai Pulikal (TMVP))
9. தமிழர் விடுதலைக் கூட்டணி (அரசியல் கட்சி) (டுல்ஃப் (அ) ரி.யு.எல்.எப் – Tamil United Liberation Front (TULF) – டி.யு. எல்.எஃப்)

இலங்கை ப்ரீமியர் லீக் எல்.பி.எல் டி20 அணிகளின் பெயர்கள்:

1. Colombo Strikers – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் என்பதற்கு பதில்: கொழும்பு கொமாண்டோக்க‌ள்
2. Dambulla Aura – டம்புல்லா ஆரா என்பதற்கு பதில்: தம்புள்ளை துள்ளர்கள்
3. Galle Titans – கேலே டைட்டன்ஸ் என்பதற்கு பதில்: கல்லே கெரில்லாக்கள்
4. Jaffna Kings – ஜாஃப்னா கிங்ஸ் என்பதற்கு பதில்: யாழ்ப்பாண புலிகள்
5. B-Love Kandy – கண்டி பி-லவ் என்பதற்கு பதில்: கண்டி கழுகுகள்

இன்னும் ஆர்வமாக இலங்கை டிவெண்டி 20 பார்ப்போமோ?

Tamil Podcasts: Novels, Classics and Literature for Listening

சொல்வனம் ஒலிவனம் வழியாக: தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி : ஒவ்வொரு புதன்கிழமையும் கேட்கத் தவறாதீர்கள்!

கூடிய சீக்கிரமே, Saraswathi Thiagarajan சரஸ்வதி தியாகராஜன் ‘தினம் ஒரு தொடர்’ போர்டு போட்டுவிடுவார்.

இப்போதைக்கு இவற்றை ஒலியும் ஒளியுமாகக் கொடுத்து வருகிறார்:
1. இரா. முருகனின் ‘மிளகு’ – #சொல்வனம் தளத்தில் வெளியாகும் பெருங்காப்பியம் (மாதத்தின் இரண்டாம் ஞாயிறு மற்றும் நான்காம் ஞாயிறு)

2. கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம்: செவ்வியல் இலக்கியங்கள்

3. தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் நாவல்: காலச்சுவடு கிளாசிக்

4. இரா. முருகனின் ‘தினை’ – புத்தம் புதிய புதினம்: திண்ணை (வாரந்தோறும்)

5. அதிரியன் நினைவுகள் – #solvanam Series (மாதத்திற்கு இரு முறை)


6. ராக் தர்பாரி – சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் : வெள்ளிதோறும்

இது தவிர சமகாலச் சிறுகதைகள், அஞ்சலிகள், சுவாரசியமான கட்டுரைகள், சொல்வனம் இதழில் வெளியாகும் இடுகைகள் எல்லாமும் சொல்வனம் ஒலி/ஒளிவனத்தில் கிடைக்கிறது.

https://www.youtube.com/@thamils/playlists

அவருடன் ஜமீலா. ஜி என்பவரும், வித்யா அருண் என்பவரும் கூட இணைந்து செயல்படுகிறார்கள். சுகா எழுதிய கட்டுரைகளை வித்யா சுபாஷ் வாசித்து இருந்தார்.

தரையில் இறங்கும் விமானங்கள் இந்துமதியால் 1982-ல் ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதப்பட்டு பின்னர் நூல்வடிவம் பெற்றது. பொதுவாசிப்புக்குரிய படைப்பு எனினும் நாடகத்தன்மை கொண்ட நிகழ்வுகளோ செயற்கையான உணர்வுகளோ இல்லாமல் எளிய உரையாடல்கள், ரசனையின் பரிமாற்றங்கள் வழியாகச் சென்று நிறைவுறுகிறது. எண்பதுகளின் உணர்வுநிலைகளை மிகச்சரியாக வெளிப்படுத்திய பொதுவாசிப்புக்குரிய நூல்களில் ஒன்று என அடையாளப்படுத்தப்படுகிறது (நன்றி: ஜெ. விக்கி)

இந்த நாவல், துரை இயக்கி அஜித் நடித்த திரைப்படமான ‘முகவரி’யை எனக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தது. இசைத்துறையில் ஆர்வமும் திறமையும் கொண்ட ஓர் இளைஞன் சினிமாவில் முட்டி மோதி தோற்றுப் போய் குடும்பச் சூழல் காரணமாக இறுதியில் பணிக்குச் செல்லும் கதை. இந்துமதியின் நாவலில் இருந்து துரை தூண்டுதல் பெற்றிருந்தாலும் ஆச்சரியமில்லை. அண்ணன், அண்ணி பாத்திரம் உட்பட திரைப்படத்திற்கும் நாவலுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இந்த நாவல், தொலைக்காட்சி தொடராக படமாக்கப்பட்ட போது விஸ்வம் பாத்திரத்தில் ரகுவரன் நடித்திருந்தார் என்று நினைவு. ஆனால் ‘முகவரி’யில் நாயகனுக்கு அண்ணனாக, அதாவது பரசு பாத்திரத்தை அவர் ஏற்றிருந்தார். (நன்றி: பிச்சைப்பாத்திரம் சுரேஷ் கண்ணன்)

வலைபரப்பு – உங்களுக்குப் பிடித்த பாட்காஸ்டிங் வலையொலி நிரலி வழியாகக் கேட்கலாம்
காணொளி – யூடியுப் கன்னல் வழியாகப் பார்க்கலாம்.

சொல்வனம் ஒலிவனம் வழியாக: தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி : ஒவ்வொரு புதன்கிழமையும் கேட்கத் தவறாதீர்கள்!

வளநீர்ப் பண்ணையும் வாவியும்

”சின்னச் சின்னக் குற்றங்கள்” என்னும் தலைப்பைத்தான் முதலில் தேர்ந்தெடுத்திருந்தேன். அது எதிர்மறை என்பதால் வேறு தலைப்பிற்கு மாறிவிட்டேன். ஏன் அந்தத் தலைப்பை முன்வைக்க நினைத்தேன்? ஏன் அப்படிப்பட்ட அனுபவத்தை முன்னிலையாக்க எண்ணினேன்?

நான் ஓர் அக்மார்க் இண்ட்ரோவெர்ட். விக்சனரி பாஷையில் சொல்வதானால் “தன்னைப் பற்றியே எண்ணுபவன்”. எனவே முகாமிற்கு வந்த ஒவ்வொருவரைப் பற்றிய சிறுகுறிப்புடன் தொடங்குவது சாலச் சிறந்தது.

முதற்கண்ணாக ஏற்கனவே அறிமுகமானவர்கள். அவர்களில் முதன்மையாகத் தெரிந்தது பழனி ஜோதியும் மகேஸ்வரியும். எனக்குப் பெயர்கள் மறந்து விடும். முகங்கள் நினைவில் தங்கும். மகேஸ்வரியை ஓட்டுநர் என்று அறிந்து வைத்திருந்தேன். நியூ ஹாம்ப்ஷைருக்கு ஜெயமோகன் உடன் சென்றபோது கும்மிருட்டில் அலுங்காது குலுங்காது தூங்காது கொண்டு சேர்த்தவர். அவரின் சாரதித்தன்மை தெரிந்திருந்தாலும் எங்கு பார்த்தோம் என்று தடுமாறி ஓரளவு சமாளித்து மீண்டும் அறிமுகம் செய்து கொண்டேன். இவர்கள் இருவரும் பாடல் பெற்ற வாசகர்கள். அவர்களை ஜெயமோகன்.இன் தளத்திலேயே அறியலாம்.

அடுத்தவர் சிஜோ. இவர் இன்றைய சாரதி. கஷ்டமான மொழியாக்கம் என்றால் “கூப்பிடு சிஜோவை!” என்று சொல்வனம் பதிப்புக் குழுவினால் பரிந்துரைக்கப்படுபவர். இந்த பூன் முகாமிற்கு வெளியூரில் இருந்து வந்தவர்களை பத்திரமாகக் கொண்டு சேர்த்தவர்களில் ஒருவர்.

இன்னொரு ஓட்டுனர் தாமோ எனப்படும் தாமோதரன். இவரும் அட்லாண்டாக்காரர். தன் காரை இசை-ரதமாக ஆக்கியவர். சிஜோ-வையும், விபி எனப்படும் வெங்கட் பிரசாத்தின் அழைப்புகளையும் கவனித்துக் கொண்டே பின்னால் நடக்கும் தாளக் கச்சேரியையும் ஒருங்கிணைத்த மேஸ்ட்ரோ.

நிறைய வெங்கட்கள் இருப்பதாலோ விஐபி என்பதன் சுருக்கமாகவோ, வி.பி. என்று அழைக்கப்படும் வெங்கட்பிரசாத் வீட்டில் நளபாக உணவு கிடைத்தது. இதை கொண்டாட்டத்தின் துவக்கம் எனலாம். முதன் முதலாக சக பயணிகளின் அறிமுகமும் உரையாடலும் கூடவே அமர்க்களமான விருந்தும் கிடைத்தது. சின்ன வெங்காயம் போட்ட கார குழம்பு, பூசணிக்காய் கிடைக்கும் அரைத்து விட்ட சாம்பார், மிளகும் தக்காளியும் போட்டி போட்ட சூடான ரசம், சிறிது சிறிதாக வெட்டப்பட்ட உருளைக் கறி, சுரைக்காய் கூட்டு, கெட்டித் தயிர், ஊறுகாய் என அனைத்தையும் கபளீகரம் செய்த பிறகு இரண்டு டம்ளர் பருப்பு பாயாசம் என்று கனஜோரான வீட்டுச் சமையல் போஜனத்தில் விழாவைத் துவக்கி களைகட்ட வைத்தனர் விபி தம்பதியினர். விபி ஒரு கவிஞர்.

இவ்வளவு முக்கியமான சாரதிகளைச் சொல்லிவிட்டு, சாரதியைச் சொல்லாவிட்டால் எப்படி? “நீங்க கிஷோர்தானே?” என்று அவரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். அவர் சாந்தமாக புன்னகையுடன் “நான் சாரதி.” என்றார். வழக்கம் போல் எதற்கும் உதவாத “மன்னிக்கவும்.” உதிர்த்துவிட்டு என் ஆர்பாட்டப் பேச்சைத் தொடர்ந்தேன். இந்த சாரதி என் பெட்டியை விமான நிலையம் முழுக்க சுமந்தவர். கலிஃபோர்னியாக்காரர். தலபுராணங்கள் எதன்பொருட்டு?, ஓநாய்குலச் சின்னம் என கடிதங்கள் எழுதியவர்.

சாரதியின் பேட்டைக்கு பக்கத்திலேயே வசிப்பவர் சாரதா. விவாதங்களில் பங்கெடுத்தவர். தன் கருத்தை வெளிப்படையாக பதிவு செய்தவர். அமெரிக்க பண்பாட்டையும் இந்தியாவில் வாழாவிட்டாலும் பட்டிக்காட்டான் போல் குட்டி பாரத்தை உருவாக்கி அதில் மட்டும் பவனிவரும் தேஸி கலாச்சாரத்தையும் அவர்களுக்குப் பிறந்த இந்திய-அமெரிக்க குழந்தைகளின் குழப்பங்களையும் வினாக்களாகத் தொடுத்தவர்.

முக அடையாளம் நன்றாக ஞாபகம் இருக்கும் எனச் சொல்லிக் குழப்பிக் கொண்ட கிஷோர் – கனெக்டிகட் வாசி. சாரதிக்கும் இவருக்கும் ஆறு வித்தியாசத்திற்கும் மேல் இருக்கும். ஒற்றுமைகள் எனப் பார்த்தால் இருவரும் கண்ணாடி அணிந்திருந்தனர். இருவரும் கவனிப்பவர்கள். உள்வாங்குபவர்கள். அமைதியானவர்கள்.

சிஜோ அழைத்து வந்த பட்டாளத்தில் எங்களுடன் இணைந்தவர் கண்ணப்பன். துடிப்பானவர். நான்கைந்து கார்கள் சார்லட் நகரத்தில் பூன் மலைவாசஸ்தலத்திற்கு கிளம்பின. இதில் பயணித்த இருபதிற்கும் மேற்பற்பட்டவர்களின் விண்ணப்பங்கள். ”ஸ்டார்பக்ஸ் போகலாம்!”, “குடிநீர் வாங்கலாம்!”, “அவசரமாக ஒன்றுக்கு வருகிறது”, என்னும் கோரிக்கைகளை காதில் வாங்கிக் கொண்டு செல்பேசியையும் இன்னொரு காதில் வைத்து பேசிக் கொண்டு அதே செல்பேசியில் செல்லுமிடத்திற்கான வழித்தடத்தையும் காண்பித்தவர். நிறைய வினாக்களுடன் உண்மையான மாணவராக ஆசான் முன் கைகட்டி நின்று கவனித்தவர்.

டாலஸ் பாலாஜி. இவர் ஏ.டபிள்யூ.எஸ். (AWS) கஞ்சுகம் அணிந்திருந்தார். என்னுடன் தன் படுக்கையை பாதியாக விட்டுக் கொடுத்துப் பகிர்ந்தவர். என் குறட்டையை பொருட்படுத்தாது இன்முகத்தோடு அடுத்த நாளும் சிரித்து, மீண்டும் என்னுடன் துணிந்து உறங்கிய தைரியசாலி.

இசையமைப்பாளர் ராஜன். முதல் இரு ஜெயமோகன் வருகைகளை முன்னின்று கவனித்தவன் நான் என்றால், சமீபத்திய இரு வருகைகளை செவ்வனே செய்பவர் ராஜன். விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவர். வெண்முரசு பிள்ளைத்தமிழுக்கு சங்கீதம் இயற்றியவர்.

மியாமியில் இருந்து இன்னொரு ராஜன். ஜெயமோகனுக்காக… ஆசானை சந்திப்பதற்காக மட்டும்… பிரத்தியேகமாக குருவின் குரலைக் கேட்பதற்காக… என வந்தவர்கள் பெரும்பாலானோர். அவர்களின் பிரதிநித்துவம் இவரைப் போன்றோர்.

விபி வீட்டில் ஸ்ரீகாந்த் அறிமுகமானாலும் அவரின் புல்லாங்குழல் திறமை பின்னரே தெரியவந்தது. சினிமாப் பாட்டு, கர்னாடக சங்கீதம், பஜன்கள் என்று எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுக்கும் விரல்களும் பான்சூரியும் நிகழ்வின் ஒவ்வொரு பகுதியின் துவக்கத்தில் ஒலிக்கும் பாடலுக்கும் சூழலுக்கும் இனிமையைக் கொணர்ந்தது.

இனி சற்றே கொத்து கொத்தாக வந்தவர்களைப் பார்க்கலாம்.

வெண்முரசு ஆவணப்பட மொழிபெயர்ப்பில் பெரும் பங்காற்றியவர் என நான் அறிந்திருந்த ரெமிதா சதீஷ். ஜெயமோகன் தளத்தை சற்றே தேடிய பிறகு, பல்வேறு மொழியாக்கங்களை ரமிதா சிறப்பாக செய்து வெளியிடுவது தெரிய வந்தது. சிரித்த முகமும் மோனப் புன்னகையும் தவழவிட்ட ராலே ரவி. விழா ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக நடத்திய முத்து காளிமுத்து. ஏற்கனவே செய்த சொல்வன மொழிபெயர்ப்புகள் மூலமாகவும் நன்கு அறிமுகமானவர் முத்து. பூன் முகாமில் உணவும் உபசரிப்பும் சிறக்க இன்னொரு முக்கிய காரணமான விவேக்கும் வட கரோலினாகாரர்.

இவர்கள் உள்ளூர் படை என்றால், தமிழ்.விக்கி திறப்புவிழாவைத் தொடர்ந்து வந்த வாஷிங்டன் டிசி, மேரிலாந்து மாகாணம் மற்றும் வர்ஜினியா மாநிலக்காரர்கள் பெரும்சேனை. ஆசான் முதன் முறை அமெரிக்கா வந்தபோது வரவேற்று விருந்தோபியவர்கள் வேல்முருகன் பெரியசாமியும் நிர்மல் பிச்சையும். இருவரும் பல தசாப்தங்களாக ஜெயமோகனை வாசித்து பின் தொடர்பவர்கள். பாசக்கார மகேந்திரன் பெரியசாமி. யோகா குறித்து கட்டுரை மட்டுமல்ல காலையில் யோகம் செய்து காண்பித்த விஜய் சத்தியா. ரவியும் அவரின் மனைவி ஸ்வர்ணலதாவும் தத்தமது அறிமுகத்தில் ஆழமாக அசத்தினார்கள். என் வாசிப்பெல்லாம் ஒன்றுமேயில்லை என எண்ணவைக்குமளவு நேர்த்தியான வாசகர்கள் நிறைந்த சபை என்பதை உணர்த்தினார்கள்.

வந்தவர்களை நிறுத்திவைத்துவிட்டு, கொஞ்சம் மூச்சு வாங்கி தமிழ்.விக்கி குறித்து பார்ப்போம். ஒரு பக்கம் கூகுள் தேடுபொறியில் எதைத் தேடினாலும் முதல் முடிவாக வரும் தமிழ் விக்கிப்பீடியா. இன்னொரு பக்கம் காலச்சுவடு, உயிர்மை, சொல்வனம் போன்ற அதிகாரமையங்கள். இவர்களுக்கு நடுவாந்தரமாக திரிசங்கு சொர்க்கம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பூமியிலிருந்து சொர்க்கத்துக்கு தன்னுடைய உடலுடனேயே போக முயற்சித்தானாம் திரிசங்கு என்கிற மன்னன். ராஜா திரிசங்குவை தமிழர் என வைத்துக் கொள்ளுங்கள். சொர்க்கத்துக்கான யாத்திரையில் பாதிவழியிலேயே அவனுக்கு விசா கொடுக்காமல் நிறுத்தி விட்டாராம் சொர்க்கத்தின் அதிபர் இந்திரன். இந்திரனை கூகிள் எனக் கொள்ளவும். பூமியை விட்டு வெளியேறி விட்டதால் மீண்டும் பூமிக்கும் திரும்ப முடியவில்லையாம் திரிசங்குவால். அந்தரத்திலேயே இருந்த அவனுக்கு தன் தவ வலிமையால் தனி சொர்க்கத்தை விஸ்வாமித்திரர் உருவாக்கிக் கொடுத்தாராம். விசுவாமித்திரரை ஜெயமோகன் எனலாம். இதைத்தான் திரிசங்கு சொர்க்கம் என்கிறது புராணக் கதை. இந்தக் காலத்தில் தமிழ்.விக்கி. அந்தத் திரிசங்கு சொர்க்கத்தில் கரப்பான் பூச்சிகளைத் தோற்றுவிக்கிறார் கௌசிகர். அங்கே எலிகளையும் பல்லிகளையும் உருவாக்குகிறார் பிரும்மரிஷி. இந்த திரிசங்கு போல் இங்குமில்லாமல் அங்குமில்லாமல் நடுவில் இருக்கிறது தமிழ்.விக்கி என்பது என் எண்ணம்.

சாதாரண மக்கள் தங்களுக்கானத் தேடல் முடிவுகளைச் சென்றடைய கூகிள் உதவுகிறது. கூகுள் தளத்திற்கு அதிகாரபூர்வ விக்கிப்பீடியா மிகவும் பிடித்திருக்கிறது. எனவே, கூகிளில் எதைத் தேடினாலும் முதன்முதல் முடிவாக விக்கிப்பிடியாவை வரவைக்கிறது. அந்த கூகிள் உதவியில்லாமல் தமிழ்.விக்கி முதல் பக்கத்தில் சாதாரணத் தமிழரின் கவனத்திற்கு வரவே வராது. கூகுள் தளமே க்னால் (knol), கீன் (keen) என்று பல்வேறு முயற்சிகளில் சோதனை செய்கிறது. அவர்களின் ஆசி, அதாவது அசல் ப்ரம்மரிஷியான வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பெறாவிட்டால் தமிழ்.விக்கி தளத்திற்கு சொர்க்கலோகம் கிட்டாது.

ஏன் வசிஷ்டர் கூகுள், புதிய தமிழ்.விக்கியை கைகொடுத்து வரவேற்க மாட்டேன் என்கிறது? நவீன விருட்சம் அழகியசிங்கர் தினசரியைத் துவங்குவார். கௌதம சித்தார்த்தன் ஆலா என்னும் நிரலியை புழக்கத்தில் விடுகிறார். 25க்கும் மேற்பட்ட இலக்கிய பத்திரிகைகள் இணையத்தில் தீவிரமாக இயங்குகின்றன. இவற்றில் எது கொந்தர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு உங்களின் கணினியை பாதிக்காது என்பதையும் கூகுள் கண்காணிக்க வேண்டும். இந்தத் தளங்களில் எதில் உள்ளடக்கம் சீரழிந்து சற்றே மோசமான ஆக்கங்களை உள்ளீடு செய்கிறார்கள் என்னும் தரக்கட்டுப்பாடும் தேவை. அதே சமயம் தினசரி புதுசு புதுசாக, வித விதமாக, வெவ்வேறுத் தலைப்புகளில் தனித்துவமான விஷயங்களைக் கொடுக்கிறார்களா என்றும் பார்க்க வேண்டும். பணத்திற்காக விளம்பரங்களை விஷயங்கள் என்று விற்கிறார்களா என்றும் யோசிக்க வேண்டும். இப்படியெல்லாம் நாள்தோறும் எல்லாவற்றையும் மேய்த்து தன் சக்தியை வீணடிப்பதற்கு பதிலாக விக்கிப்பிடியாவிற்கு தன் முடிவுகளை குத்தகைக்கு விட்டிருக்கிறது கூகுள்.

ஜெயமோகனின் நண்பரான வேதசகாயகுமார் விட்டுவிட்டதை ஜெயமோகன் கையில் எடுத்திருக்கிறார்:

தமிழ் விமார்சனக் கலைக் களஞ்சியம், தமிழ்ப் புனைகதைக் களஞ்சியம், சங்க இலக்கியக் கலைக் களஞ்சியம் என்ற மூன்று கலைக் களஞ்சியங்களை உருவாக்கத் திட்டமிட்டார் குமார். தமிழ் விமர்சனக் கலைக் களஞ்சியம் பல்கலைக்கழக மானியக் குழு நிதி உதவியுடன் நிறைவு பெற்றது. அவருடைய கல்விப் பணியில் இது முக்கியமானது.

பொன்னீலன்

அது வேறு சிக்கல். இன்னொரு தடவை விரிவாக அரசியலும் சமூகப் போரும் தனித் தமிழ்ப் போராளிகளின் நிலையையும் பல்கலைக்கழகப் பதவி போட்டியும் கலந்து ஆலோசிக்க வேண்டிய ஒன்று. அதற்குள் இன்னொரு நாள் செல்லலாம்.

மீண்டும்… பூன் காவிய முகாமிற்குள்ளும் அங்கே பங்கு பெற்றவர்களுக்குள்ளும் செல்லலாம்…

டெக்சாஸில் இருந்து வந்தவர்கள் தனித்தனியாக வந்ததாலோ என்னவோ தனித்துவம் கொண்டிருந்தார்கள். கிதார் வாங்கபோவதாக மிரட்டி கைக்கு அடக்கமான வாத்தியப் பொட்டி வாங்கி அதை வாசித்தும் அசத்திய ஸ்கந்தநாராயணன். இரண்டாம் நாள் புகைப்படங்களில் ஒவ்வொருவரையும் தனித்தனியே அழகழகாக சுட்டுத் தள்ளிய கோபி. பண்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பாளராக நன்கு அறிமுகமான ஹூஸ்டன் சிவா.

டெட்ராயிட்டில் இருந்து வந்தவர்கள் இன்னொரு இனிய குழுமம். திருச்செந்தாழையின் கதையான ஆபரணத்தை அறிமுகம் செய்த மதுநிகா. எல்லோருடனும் இயல்பாக கலந்து பழகி வாய் நிறையப் பேசிய மேனகா. ஒளி ஓவியரும் மண்டலா கலைஞரும் இனிய குரல் கொண்ட பாடகருமான டெட்ராயிட் சங்கர்.

கலிஃபோர்னியாவில் இருந்து வந்த பெருங்கூட்டத்தில் பெரும்பாலானோரை ஏற்கனவே அறிமுகம் செய்து கொண்டோம். அவர்களைப் போலவே புத்தரைப் போன்ற சாந்தத்துடனும் அதே ஆனந்தர் போல் ஆழமான அவதானிப்புகளுடன் பழகிய சன்னிவேல் விஜய்.

அடுத்து தம்பதி சமேதராக வந்தவர்களைப் பார்க்கலாம்.

விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான ஆஸ்டின் சௌந்தரும் அவரின் மனைவி ராதாவும். காற்றின்நிழல் மூலமாகவும் வெண்முரசு ஆவணப்படம் மூலமாகவும் நன்கு அறிமுகமானவர்கள். முதல் முறையாக நேரில் பார்க்கிறேன்.

ஜெகதீஷ் குமாரும் அவரின் மனைவி அனுஷாவும். ஆங்கிலத்தில் பல கதைகளை மொழிபெயர்த்து அவற்றை பல்வேறு பத்திரிகைகளில் வெளியிட்டவர் என ஜெகதீஷை அறிந்து வைத்திருந்தேன். அனுஷா அவர்கள் முதல் நாள் புகைப்படங்களை சுட்டுத் தள்ளினார். இருவரும் கல்யாணத்திற்கு வந்தது போல் பாரம்பரிய ஆடைகளில் வளைய வந்தது முகாமிற்கு திருவிழா கோலத்தைக் கொடுத்தது.

விசுவும் அவரின் மனைவி பிரமோதினியும். இவர்கள் இருவரும் ஜெயமோகனோடும் அருண்மொழியோடும் அமெரிக்கா நெடுக பயணிக்கப் போகிறவர்கள் என்றவுடன் காதில் பெரும்புகை கிளம்பியது.

அதே போல் அந்த தொடர் பயணத்தில் காரில் கூட செல்லப் போகிறவராக ஸ்ரீராம் அறிமுகமானார்.

கடைசி அங்கமாக இந்த கால்கோள் முகாமில் பேசியவர்களில் சிலர்.

மெம்ஃபிஸ் செந்தில் கம்பராமாயணப் பாடல்களை வாசித்து விளக்கினார். கவிதைகள் குறித்து பாலாஜி ராஜு.

இறுதியாக என்னை பூன் முகாமிற்கு கொண்டு சேர்த்த ஷங்கர் பிரதாப். உடன் பயணித்த மதன். மற்றும் திரும்பும் வழியில் அமரிக்கையாக முதன்மையான கேள்விகளைத் தொடுத்து பயணத்தை சுவாரசியமானதாக்கிய ஓவியர் அருண். செல்பேசி உரையாடல்களில் மூலமே அறிமுகமாகியிருந்த பிரகாசம். இவர்கள் மீண்டும் மீண்டும் என்னைத் தரைக்குக் கொணர்ந்தவர்கள். உனக்கும் மேலே உள்ளவர்கள் கோடி… நினைத்துப் பார்த்து நிம்மதியை நாடு என்னும் தத்துவத்தை பூடகமாக தங்களின் வாசிப்பினாலும் (மதன், சியாட்டில் ஷங்கர் ப்ரதாப் போன்றோர்), திறமையினாலும் (ஓவியக்கார அருண், ஓளி ஓவிய கலைஞரான மிச்சிகன் சங்கர நாராயணன் போன்ற படைப்பாளிகள்), ஹூஸ்டன் சிவா போன்ற திறமையான முழுமையான மொழியாக்க வல்லுநர்களும் என் போதாமையையும் போக வேண்டிய தூரத்தையும் தங்களின் செயல்திறமையினால் விளக்கினார்கள்.

விடுபட்டவர்கள் மன்னிக்க வேண்டும். அவர்கள் மட்டுமே ஜெ என்னும் ஆளுமையின் முழுமையான சொற்பொழிவுக்கும் ஈர்க்கும் வசீகரத்திற்கும் உட்பட்டவர்கள்.

மீண்டும் தலைப்பிற்கே வந்துவிடலாம். ஜெயமோகனின் புகழ் பெற்ற பிரிவுகளில் ஒன்று – டால்ஸ்டாயும் தாஸ்தவெய்ஸ்கியும். ஒருவர் நல்லவர்களைப் பார்ப்பவர். இன்னொருவர் எதிலும் எல்லாவற்றிலும் குற்றங்களை நுணுக்கி நுணுக்கி தெரிந்து மகிழ்பவர். அறம் அற்ற இந்தியர்களை எங்கும் காண்கிறேன். குப்பையை அப்படியே வீசுவது. மாற்றுத் திறனாளிக்கான கார் நிறுத்துமிடத்தைத் திருடுபவர். பத்து பைசா அதிகம் கொடுத்தால் தன் விசுவாசத்தை இன்னொருவருக்குத் தந்துவிடும் முதலிய வழிபாட்டாளர். பற்பசை திருடுபவர்.

கூட்டம் என்பது மந்தை. திரள் பொதுசனம். அதில் இருந்து எது ஒருவரை வித்தியாசப்படுத்துகிறது?

அவர்கள் மேற்சென்று தங்கள் திறமையை செயலூக்கமாக்குகிறார்களா? ஒரு renaissance போல் மறுமலர்ச்சி போன்ற குறுகியவட்டத்தில் தளத்தில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு ஒரு கூட்டத்தை, ஒரு நாட்டை, ஒரு பிரதேசத்தை, தங்களின் ஈர்ப்பு விசையால் ஆகர்ஷித்து மேற்கொணர்ந்து முன்னகர்த்துகிறார்களா? ஆசானையும் குருவையும் வெறுமனே போஷிக்காமல், அவரின் லட்சியங்களையும் அவரின் குணாதிசயங்களையும் கடைபிடித்து, அவரின் சித்தாந்தங்களை உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக செயல்படுத்துகிறார்களா?

இங்கே குழுமியவர்களில் படத் தயாரிப்பாளர்கள் இருந்தார்கள். திறமையான இசைக் கலைஞர்கள் பலரும் பங்கு பெற்றார்கள். நிர்வாகமும் எல்லோரையும் கட்டி மேய்க்கும் அதிகாரமும் கொண்டவர்கள் விழாவை வெகு சிறப்பாக நடத்திக் காட்டினார்கள். ஓவியர்கள், சித்திரக்காரர்கள், கலைநயம் மிக்க புகைப்படக்காரர்கள், என்று தங்கள் பணிபுரியும் அறிவியல், பொறியியல், கணிதம், நிதி நிர்வாகம், மேலாண்மை போன்ற துறைகள் தவிர்த்து பரிமளிக்கும் வித்தகர்கள் இருந்தார்கள். பலரும் பண்பட்ட எழுத்தாளர்கள்.

பொது யுகத்திற்கு முன் நான்காம் நூற்றாண்டில் ஏத்தனியர்கள் என்று கிரேக்கத்தில் ஒரு குழு அமைகிறது. நாம் அறிந்த சாக்ரடீஸ், ப்ளாட்டோ, அரிஸ்டாட்டில், பித்தோகரஸ் போன்ற பல அறிஞர்களும் அவர்களின் வழித்தோன்றல்களும் இன்றளவும் நம் சிந்தையையும் செயலையும் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.

அதே போல் பொது யுகத்திற்கு பின் பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பிய வரலாற்றின் மறுமலர்ச்சி (renaissance) காலம் இத்தாலியில் உதயமாகிறது. அதற்கு ஆதரவு தந்தவர்கள் கலைகளில் அவதானம் செலுத்தக்கூடிய சுதந்திர மனநிலையை உடையோராக இருந்ததுடன் கலைகளை ஆதரிக்கக்கூடிய பணபலமும் அவர்களிடம் இருந்தது.

இத்தாலியில் தாந்தே, இங்கிலாந்தில் வில்லியம் ஷேக்ஸ்பியர், பிரான்சில் இராஸ்மஸ், சித்திரக் கலைஞர்களில் லியானாடோ டாவின்சி, மைக்கல் ஆஞ்சலோ, விஞ்ஞானத் துறையில் போலந்தரான நிக்கலஸ் கொபர்னிகஸ், ஜேர்மனியரான ஜொஹென்ஸ் கெப்லர், இத்தாலியரான கலிலியோ கலிலி, இங்கிலாந்தைச் சேர்ந்த ஐசக் நியுட்டன் என அறிவியல், அரசியல், மருத்துவம், சிற்பம், கட்டிடம், பொருளாதாரம், மொழி, இலக்கியம் என பலவற்றிலும் தங்கள் முத்திரையைப் பதித்து புதிய எழுச்சியை உருவாக்கினார்கள்.

இந்தக் குழு அப்படிப்பட்டகுழு என்றுதான் எண்ணுகிறேன். காலம் விடை சொல்லும்.

வந்தவர்கள் எல்லாம் சரி! விஷயம் என்ன? எதைக் குறித்து விவாதித்தீர்கள்? என்னவெல்லாம் பேசினீர்கள்? யார் உரைத்தார்கள்? அவற்றை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

மேலும்:

  1. பூன் முகாம் முழுநிகழ்வு- ஜெகதீஷ்குமார்
  2. கூடுதல் என்பது களிப்பு
  3. டல்லாஸ், டெக்ஸாஸ் வாசகர் சந்திப்பு – கடிதம்
  4. அமெரிக்கா- கடிதம்
  5. பூன்முகாம், கவிதை -கடிதம்: ஷங்கர் பிரதாப்
  6. அமெரிக்க பயணம் 2022
  7. பூன் இலக்கியக்கூடுகை

NR Daasan – Writers and Authors

என்.ஆர். தாசன்

உருவகக்கதைகளுக்குரிய மொழி உரைவீச்சு வசனகவிதை எழுதியவர். 1994ல் மறைந்தார்.

கண்ணதாசன் சிறுபத்திரிகைக் குறிப்பு

வல்லிக்கண்ணன்

அப்படி எல்லாம் நடந்தபோதிலும் வாழ்வின் இறுதி வரையில் அவன் தன் எழுத்துக்களுக்கு உரிய மதிப்பையும், தனக்கு உரிய கவனிப்பையும் பெறமுடிவதில்லை என்பதை அந்த நாவல் விவரிக்கிறது. என்னிடம் மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டிருந்த நண்பர்களில் என்.ஆர். தாசனும் முக்கியமானவர். அவர் அரசுப் பணியில் ஈடுபட்டிருந்தார். அத்துடன் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ஆற்றல் நிறைந்தவர் சுயசிந்தனையாளர் உழைக்கத் தயங்காதவர். புத்தகங்கள் படிப்பதில் உற்சாகம் உடையவர். கதைகள், நாவல்கள், வசன கவிதைகள், நாடகம் முதலியன எழுதினார்.

கவிஞர் கண்ணதாசன் நடத்திய தரமான இலக்கிய இதழான ‘கண்ணதாசனில் என். ஆர். தாசன் அதிகம் எழுதினார். பிறமொழிக் கவிதைகளைத் தமிழாக்கம் செய்துள்ளார். ரவீந்திரநாத தாகூர், கலீல் கிப்ரான் கவிதைகளின் தாக்கத்தினால், தாசனும் தத்துவச் சிந்தனைகளும் வாழ்க்கை அனுபவங்களும் செறிந்த வசனகவிதைகளைச் சொற்கோலம்’ என்ற பெயரில் அதிகமாகவே எழுதியிருக்கிறார்.

என். ஆர். தாசன் சிறுகதைகள், ஓரிரு நாவல்களை அவருடைய நண்பர் ஒருவர் வெளியிட்டார். ஆரம்ப காலத்தில், பிறகு தாசனின் எழுத்துக்கள் புத்தகங்களாக வர வாய்ப்பில்லாது போயின. எனவே தாசன் தாமே புத்தக வெளியீட்டிலும் முனைந்தார். நாவல்களையும், சிறுகதைகளையும், சொற்கோலங்களையும் தொகுத்து அக்கறையோடு கவனித்து, அழகு அழகான புத்தகங்களாகப் பிரசுரித்தார். அவற்றைத் தாமே எடுத்துச் சென்று புத்தக விற்பனையாளர்களிடம் கொடுத்து வந்தார். பின்னர், பணம் வசூலிப்பதற்காக அலைந்தார்.

இப்படியெல்லாம் தீவிரமாக முயன்று உழைத்ததனால்தான் என். ஆர். தாசன் எழுத்துக்கள் புத்தகங்களாக உருவம் பெறமுடிந்தது. அது அவருக்குத் திருப்தி தந்தது. ஆயினும், அவருடைய படைப்புகளும் எழுத்தாற்றலும் உரிய கவனிப்பைப் பெறாமலே போயின. அவருடைய அருமையான சொற்கோலம்’ எவ்வளவுக்குப் பேசப்பட்டிருக்க வேண்டுமோ, அவ்வளவுக்குப் பேசப்படவில்லை- சிறிது கூடக் கவனிக்கப்படவில்லை என்பது வருத்தம் தரும் விஷயம் ஆகும். சில வருடங்களுக்கு முன்பு அவர் இறந்துபோனார்.

காலவெள்ளத்தில் அமிழ்ந்துவிட்ட எத்தனையோ திறமைசாலிகள் சிந்தனையாளர்கள்- படைப்பாளிகளைப் போல என்.ஆர். தாசனும் மறக்கப்பட்டார். தமிழ்நாட்டில் இது புதிய விஷயம் ஒன்றுமில்லை.

இந்திரா பத்திரிகை மூலம் எனக்கு அறிமுகமான நண்பர் கோத சண்முகசுந்தரம் – பின்னர் ஆதித்தனாரின் தமிழன்’ இதழ் மூலம் மேதாவி’ என்று பெயர் பெற்றவர் வாழ்க்கையில் பலவித அனுபவங்கள் பெற்று…

ஒரு சிறுகதை

சார்,,, உங்க தோட்டத்த வேவு பார்க்குறானே… அவன் பக்கா திருடன்.. அவனை விரட்டி அடிங்க என்றான் அவன்

அப்படியா… என அலட்டிக்கொள்ளாமல் சொல்லி விட்டு வீட்டுக்குள் சென்றவனை அவன் மனைவி பிடித்துக்கொண்டாள்

திருட்டு எச்சரிக்கையை ஏன் அலட்சியம் செய்கிறீர்கள் என்றாள்

அவன் சொன்னான்.. எச்சரித்தானே..அவன் இவனை விட பெரிய திருடன்… ஒருவனை விரட்டினால் என்ன பயன் ?

மனைவி கேட்டாள்… இருவரும் திருடன் என்றாலும் ஒருவனை விரட்டினால் பாதி தீமையாவது குறையுமே ?

அவன் சொன்னான்.. தீமையை அப்படி படிப்படியாக குறைக்க முடியாது.. ஒரேயடியாக அழித்தால்தான் உண்டு.. அதற்கான வழிகளைத்தான் யோசிக்கிறேன்

அவள் கேட்டாள் . சரி.. அவனும் திருடன் என எப்படி சொல்கிறீர்கள்

அவன் சொன்னான்.. அவன் சொன்ன தொனியை கவனித்தாயா… என்ன சத்தம், என்ன கூச்சல்..   ஒருவரை குற்றம் சொல்கையில் அவன் மனசாட்சி நீயும்தான் குற்றவாளி என சப்தமிடும்.. அந்த சப்தத்தை மறைக்கவே சத்தமாக பேசுகிறார்கள்… சத்தியத்துக்கு சத்தம் தேவையில்லை

சில குறிப்புகள்

பாலச்சந்தர் மேல் வழக்கு தொடர்ந்த எழுத்தாளர்- தாசன் படைப்புலகம்

1 இந்த நூற்றாண்டு சிறந்த கதைகள்  நூறு என்ற தலைப்பில் வீ அரசு தொகுத்த கதைகள் ஒரு புத்தகமாக வந்துள்ளது.. அதில் என் தாசன் எழுதிய கதை இடம்பிடித்துள்ளது .கதையின் பெயர் – அவள் அறியாள்

2 அகிலன் தொகுத்துள்ள சிறந்த கதைகளில் இவர் கதை இடம்பெற்றுள்ளது

கதையின் பெயர் –  நீலச்சிலுவை

3 1996ல் வல்லிக்கண்ணன் , ஆ சிவசுப்ரமணியம் தொகுத்து வெளிவந்த சிறுகதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள இவர் கதை : சுய வதம்

ஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்

முதலில் வீடியோக்களைப் பார்த்து விடுங்கள்:

காலை

மாலை

1. காலையில் மூன்று மணி நேரம்; மாலையில் நான்கு மணி நேரம். நான் இரண்டு நேரங்களிலும் ஓரளவு கேட்டேன்; கலந்து கொண்டேன். காலை சந்திப்பின் துவக்க தொண்ணூறு நிமிடங்கள் நேரலையில் யுடியுப் வாயிலாக உன்னிப்பாகக் கேட்டேன். அதே போல் மாலை சந்திப்பின் கடைசி 90 நிமிடங்களில் ஜூம் வாயிலாக இணைந்தேன். இவ்வளவு நேரம் பேசுவது என்பது, ஜஸ்ட் சாதனை. அதுவும் தெளிவாக, கோர்வையாக, மேமிராவைப் பார்த்துக் கொண்டு, இருந்த இடத்தில் இருந்து அசையாது – பிரமிக்கிறேன். உங்களால் கூறியது கூறல் இன்றி சொற்கோர்வையுடன் ஏழு மணி நேரம் பல் வேறு (வாசகர் + உலகளாவிய அளவில் காணுவோர்) தரப்போடு அளவளாவ முடியுமா?! இந்த ஆசான் என்பவர் கதைகளில் வருபவர். வியாசர். குரு பகவான். தெய்வம் மனுஷ ரூபேண

2. இந்த மாதிரி ஒருவரால் உரையாட முடியும் என்று எவராவது சொல்லி இருந்தால் நகைத்து புறந்தள்ளி இருப்பேன். அதிலும் காலையில் 400 பேர், மாலையில் 400 பேர் இருப்பார்கள் என்றால், “அலுத்துப் போய், பாதியில் கழன்று கொண்டு விடுவார்கள்” என்றெல்லாம் கருத்து சொல்லியிருப்பேன். என்னுடைய கணக்கின் படி ஐநூறு பேராவது இதில் பங்கெடுத்திருப்பார்கள். பல பேர் என்னைப் போன்று காலையிலும் மாலையிலும் என இரு வேளையிலும் ஆஜர் செய்தாலும், 500+ இலக்கிய வாசகர்களை மூன்று மணி நேரத்திற்கு இணையச் சந்திப்பில் ஒரேயொருத்தர் கட்டுற வைத்திருப்பார் / வைத்திருந்தார் என்பது சற்றே நம்ப இயலவில்லை. ஆனால், நம்புங்கள். சினிமா நடிகரோ, திரைப்படக் கவர்ச்சியோ, பொய்யோ, ஆபாசமோ, கிசுகிசுவோ, வம்போ எதுவும் இல்லாமல், வெறும் மஹாபாரதம்; அவரின் நாவல்; 7 வருடங்கள் ,26 நாவல்கள், 25,000 பக்கங்கள் – அதற்காக நன்றி சொல்லவும் ஆசி வாங்கவும் கருத்துகளைப் பகிரவும் வந்தவர்கள். அசகாய சூரருக்கு வணக்கங்கள்.

3. நாம் நம் ஆதர்சங்களை சம கால சாதனையாளர்களைக் கொண்டாடுவதில்லை. இந்த நிகழ்வு எல்லா தொலைக்காட்சிகளிலும் அனைத்து சமூக ஊடகங்களிலும் சாதாரண திரள் மந்தை வாட்ஸப் வாயிலாக வைரலாக வேண்டியது. பாதி நிகழ்வில் கலந்த பிறகுதான் தோன்றியது. இதை நான் லைவ் ட்வீட் செய்திருக்க வேண்டும். பட்டி தொட்டியெங்கும் பரப்ப வேண்டும். இதற்கு டீசர் ஒன்று வீடியோவாக விட்டிருக்க வேண்டும். அதன் பிறகு டீஸர் ட்ரெயிலர் விட வேண்டும். இதையெல்லாம் செய்யாமல், ஆசானின் வாசகர் eன்று சொல்லுவதில் அர்த்தம் என்பதேயில்லை.

4. திருவள்ளுவரே எல்லா குறள்களையும் எழுதவில்லை. 1330 குறள்களும் தொகை நூல் போல் பல வள்ளுவர்களால் உருவாக்கப்பட்டது என்றே நினைத்திருந்தேன். இப்போது சத்தியமாக நம்புகிறேன். ஒருவரே எல்லாவற்றையும் செய்திருக்க முடியும்; செய்திருப்பார். அறம், பொருள் மற்றும் இன்பம் – எல்லாமும் ஒருவரே எழுதுவார். தெளிவாக கூறியது கூறல் இருந்தாலும் இலக்கிய நயமும் இலக்கணக் கட்டமைப்பும் புதுமையும் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்தாலும் பொருந்தும் தன்மையும் கொண்டு இயற்றுவார் என்பதற்கு நவீன வியாசர் ஜெமோ-வே ஆகச் சிறந்த உதாரணம்.

6. ஆங்கிலத்தில் ஜெயமோகனின் புகழ் பாட வேண்டும். இதை ஏன் இன்னும் ஜெர்மனியில் இங்கிலாந்தில் அமெரிக்காவில் உள்ளவர்கள் அவரவர் நாட்டின் உள்ளூர் மொழியில் கொண்டு செல்லவில்லை? ஆங்கில விக்கிப்பிடியா ஆகட்டும்; அல்லது மற்ற மொழிகள் ஆன ஃப்ரெஞ்சு, இத்தாலி, ஸ்பானிஷ் ஆகட்டும்; அந்தந்த ஊரில் மைந்தருக்கு ஏற்றவாறு வலையகங்கள் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிற்கும் கொண்டு செல்ல வேண்டும். மஹாபாரதம் எனபது எது? அது எவ்வாறு தமிழில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது? எங்கனம் அதை நீங்கள் வாசிக்கலாம்? அதெல்லாம் அந்தந்த மொழியின் வலையகங்களில் அறிமுகங்களாகவோ குறிப்புகளாகவோ விமர்சனங்களாகவே செய்யப்பட வேண்டும். ஆங்கிலத்திற்கான வலைத்தளங்களிலாவது நான் செய்ய வேண்டும்!

7. ஜெயமோகனின் தனிப் பதிவுகளை, விமர்சனங்களை, இடையிடையே போடும் ஆசுவாசங்களை எல்லோரும் எதிர்கொள்கிறார்கள். சுந்தர ராமசமியின் பிள்ளை கெடுத்தாள் விளை சிறுகதைக்கு கிடைத்த கடுமையான எதிர்வினையில் ஒரு சதவிகிதம் கூட ஜெமோ-வின் வெண்முரசு மகாபாரதத்தின் எந்தப் பகுதிக்கும் கிடைக்கவில்லை என்பது சற்றே வருத்தம் கலந்த சோகமான நிகழ்வு. 2000-களில் இலக்கியகர்த்தாக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரேயொரு கதையை அது சொல்லாத விஷயங்கள், உணர்த்திய விஷயங்கள்; புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்று ஒன்று சேர்ந்து சு.ரா.வுக்கு எதிரே காலச்சுவடு என்னும் பண்பாட்டு நிறுவனத்திற்கு எதிராக வெறுமனே கிளர்ந்தார்கள். இன்று அது போல் வெண்முரசு வாசிப்புள்ளாக்க வேண்டும். எல்லோரும் அதன் ஒவ்வொரு கூறுகளையும் விடுபடுதல்களையும் சேர்த்தல்களையும் அர்த்த அனர்த்தங்களையும் அறைகூவி அலசி ஆராய வேண்டும். இப்பொழுது இல்லாவிட்டால்… எப்பொழுது!?

ஜெம் எழுதும் இராஜன் குறை, மாமல்லன் போன்ற ஆசுவாசங்களைத் தவிர்த்து அது போன்ற பா ஜெயபிராகாசர்களும் இன்ன பிறரும் இலக்கிய விமர்சனங்களை முன் வைத்து விவாதிக்க வேண்டும் என்பது தீரவொண்ணா ஆவல் + வேண்டுகோள். எவராவது சுவாரசியமாக அக்கபோர் அற்று விவரங்கள் உடன் வெண்முரசு போன்ற காவியத்தை விமர்சித்து அளவெடுக்க வேண்டும். இப்போதைக்கு அடிமுடி காணமுடியாத அண்ணாமுலையான் போல் வியாபித்து பிரமித்து ஸ்தம்பிக்க வைக்கிறது. காட்டான் ஜெமோ!

8. தமிழில் எழுத்தாளர் எக்கச்சக்கம். ஒவ்வொருவரையும் கொண்டாட வேண்டும். ஒவ்வொருவரையும் மேலும் மேலும் மேலும் (முன்று முறை சொல்லியாகி விட்டது) ஆராதித்துக் கொண்டாடி மகிழ வேண்டும். ஒரு பட்டியல்:

  1. புதுமைப்பித்தன்,
  2. கல்கி,
  3. மௌனி,
  4. ஜெயகாந்தன்,
  5. கு.அழகிரிசாமி,
  6. கு.ப.ரா,
  7. சி.சு.செல்லப்பா,
  8. ந.பிச்சமூர்த்தி
  9. லா.ச.ரா,
  10. சுஜாதா. — நிறைய பேசிவிட்டோம்
  11. ராஜம் கிருஷ்ணன்,
  12. சுந்தரராமசாமி, நிறைய பேசிவிட்டோம்
  13. ஆதவன்,
  14. கரிச்சான்குஞ்சு,
  15. ஆர்.சூடாமணி,
  16. ஜெயந்தன்,
  17. ப.சிங்காரம்,
  18. நகுலன்,
  19. ஜி.நாகராஜன்,
  20. லட்சுமி,
  21. நா.பார்த்தசாரதி,
  22. எம்.வி.வெங்கட்ராம்,
  23. பாலகுமாரன்,
  24. ஆர்.சண்முகசுந்தரம்,.
  25. ர.சு.நல்லபெருமாள்,
  26. கந்தர்வன்,
  27. மேலாண்மை பொன்னுசாமி

அன்றையத் தேதியில் வாழும் எழுத்தாளர்கள் :

அ.முத்துலிங்கம், – சொல்வனம் சிறப்பிதழ் நன்றாக கவனம் கோருகிறது
அம்பை, – சொல்வனம் சிறப்பிதழ் நன்றாக கவனம் கோருகிறது
பாவண்ணன்பதாகை சிறப்பாக செய்திருக்கிறார்கள்; அதை மீறி இன்னும் நன்றாக செய்ய நம்மிடம் நல்ல உழைப்பு தேவை; இயலாதவை.
நாஞ்சில்நாடன் – பதாகை சிறப்பாக செய்திருக்கிறார்கள்; அதை மீறி இன்னும் நன்றாக செய்ய நம்மிடம் நல்ல உழைப்பு தேவை; மற்ற ஆதர்சங்களைப் பகிர்வோம்.

  1. இந்திராபார்த்தசாரதி,
  2. கி.ராஜநாராயணன்,
  3.  வண்ணதாசன்,
  4.  பிரபஞ்சன்,
  5.  வண்ணநிலவன்,
  6.  மாலன்
  7. ஆ.மாதவன்,
  8. நீலபத்மநாபன்,
  9. எஸ்ராமகிருஷ்ணன் — இன்னும் தீவிரமாக இயங்குபவர். இப்போதைக்கு சந்திப்புகள், யுடியுப் கேள்வி நேரங்கள், ஜூம் தொலைக்காணல்கள் என்றே வைத்துக் கோள்வோம். மேதை!
  10. சிவசங்கரி,
  11. பொன்னீலன்,
  12. எஸ்.சங்கரநாராயணன்,
  13. சா.கந்தசாமி,
  14. வாசந்தி,
  15. கோணங்கி,
  16. சோ .தர்மன்,
  17. தோப்பில்முகமது மீரான்,
  18. பூமணி,
  19. சு.வேணுகோபால்,
  20. பாமா,
  21. திலீப்குமார்,
  22. இந்துமதி,
  23. அழகிய பெரியவன்,
  24. சாரு நிவேதிதா, — நிறைய செய்கிறார். ஆதரவு (பணம் அல்ல) நல்குவோம். இன்னொரு அகிலன் போன்று காணாமல் போவாரா அல்லது சோ போன்று குறிப்பிட்ட சராரின் இஷ்ட தெய்வமாவாரா என்று காலம் இவரின் இலக்கிய இடத்தை நிர்ணயம் செய்யும்.
  25. இரா.முருகன்,
  26. பட்டுக்கோட்டைபிரபாகர்,
  27. சுபா,
  28. யுவன்சந்திரசேகர்,
  29. தமிழவன்,
  30. பெருமாள்முருகன்,
  31. விமலாதித்த மாமல்லன்,
  32. இமையம்,
  33. சுப்ரபாரதிமணியன்,
  34. ச.தமிழ்ச்செல்வன்,
  35. ஜோதிர்லதாகிரிஜா,
  36. ஜோ டி குரூஸ்,
  37. பா.செயப்பிரகாசம்,
  38. ஜி.முருகன்,
  39. திலகவதி,
  40. சு.தமிழ்ச்செல்வி,
  41. வித்யாசுப்ரமணியம்,
  42. போகன்சங்கர்,
  43. உதயசங்கர்,
  44. விக்ரமாதித்யன்,
  45. வேல.ராமமூர்த்தி,
  46. சு.வெங்கடேசன்,
  47. பா.வெங்கடேசன்
  48. உமாமகேஸ்வரி,
  49. விட்டல்ராவ்,
  50. கலாப்பிரியா,
  51. கவிஞர் ரவிசுப்ரமணியன்,
  52. பா.ராகவன்,
  53. மகரிஷி,
  54. நரசய்யா,
  55. பவா செல்லதுரை,
  56. தமிழ்மகன்,
  57. ராஜசுந்தரராஜன்,
  58. கீரனூர் ஜாகிர்ராஜா,
  59. ஜே.பி.சாணக்கியா,
  60. கலைச்செல்வி,
  61. கே.என்.செந்தில்,
  62. சமயவேல்,
  63. சுநீல்கிருஷ்ணன்,
  64. பி.ஏ.கிருஷ்ணன்,
  65. இரா.முருகவேள்,
  66. அஜயன்பாலா,
  67. திருப்பூர் கிருஷ்ணன்,
  68. ரவிபிரகாஷ்,
  69. ச.சுப்பாராவ்,
  70. சிவகாமி,
  71. கண்மணி குணசேகரன் ,
  72. ஆதவன் தீட்சண்யா,
  73. ஆண்டாள் பிரியதர்ஷினி ,
  74. தமயந்தி ,
  75. புதியமாதவி ,
  76. சுதாகர்கஸ்தூரி,
  77. வா.மு.கோமு,
  78. அ.வெண்ணிலா,
  79. கவிஞர் வைத்தீஸ்வரன்,
  80. கவிஞர் ஜெயதேவன்,
  81. அழகியசிங்கர்,
  82. ஜெயந்திசங்கர்,
  83. கவிஞர் வைரமுத்து,
  84. கவிஞர் இந்திரன்,
  85. உஷாசுப்பிரமணியன்,
  86. கௌதமசித்தார்த்தன்,
  87. ரமணிசந்திரன்.
  88. தேவிபாரதி,
  89. சுகா,
  90. உஷாதீபன்,
  91. கார்த்திகா ராஜ்குமார்,
  92. சுரேஷ்குமார இந்திரஜித்,
  93. நாகூர்ரூமி,
  94. தி.குலசேகர்,
  95. நாகரத்தினம் கிருஷ்ணா,
  96. ஷோபாசக்தி ,
  97. தமிழ்நதி,
  98. பாரதிமணி
  99. கவிஞர் சிற்பி,
  100. கவிஞர் மனுஷ்ய புத்திரன்,
  101. கவிஞர் சுகுமாரன்,
  102. எம்.கோபால கிருஷ்ணன்,
  103. அகரமுதல்வன்,
  104. சி.மோகன்,
  105. களந்தை பீர்முகம்மது,
  106. பாரதி பாலன்,
  107. நேசமிகு ராஜகுமாரன்,
  108. ஆத்மார்த்தி,
  109. சுரேஷ் ப்ரதீப்,
  110. நரன்,
  111. எம்.எம்.தீன்,
  112. விஜயமகேந்திரன்,
  113. கே.ஜே. அசோக்குமார்,
  114. அமிர்தம்சூர்யா
  115. ராஜேஷ்குமார்,
  116. இந்திரா சௌந்தரராஜன்,
  117. தேவிபாலா,
  118. ஆர்னிகா நாசர்
  119. ரா. கிரிதரன்

தொடர்புடைய பதிவுகள்: