அயர்லாந்து நாட்டுடன் ஆன போட்டியில், சிக்கந்தர் ராஜா தன் மட்டையை ஓங்கிக் காண்பித்து ‘ஒண்டிக்கு ஒண்டி வரியா’ என ஜோஷ் லிட்டில் என்னும் பந்து வீச்சாளரை அழைத்திருக்கிறார். கர்ட்டிஸ் காம்ஃபர் என்னும் அயர்லாந்து வீரரும் சண்டைக்குத் தயாராக சிக்கந்தருடன் மல்லுக்கட்ட களமிறங்குகிறார். நடுவர் ஒருவழியாக கைகலப்பை விலக்கி விட்டிருக்கிறார்.
அதே போல் இந்தியாவில் கேப்பிடல்ஸ் அணியும் குஜராத் ஜியண்ட்ஸ் அணியும் போட்டியில் ஆடியிருக்கின்றனர்.
இந்த ஆட்டம் எல்லாம் எவர் பார்ப்பார்கள்? ஆனால், கவுதம் கம்பீரும் ஸ்ரீசாந்த்தும் இதைத் திரும்பிப் பார்க்க வைக்கின்றனர். இருவரும் அரசியல்வாதிகள். அதனால், வாய்ச் சவடாலுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டுமா… என்ன!?
ஆட்டத்தின் நடுவில் ஸ்ரீசாந்த்தை “எத்தன்” (ஃபிக்ஸர்) என அழைக்கிறார் கௌதம் கம்பீர். அசாரூதீன், ஜடேஜா, தோனி என்னும் நெடிய வரிசையில் ஸ்ரீசாந்த் சகதலப்புரட்டன். எந்த ஆட்டத்தில் எவர் ஆடுவார், எப்பொழுது தலைக்கு மேல் பந்து போடுவார், துடுப்பாட்டத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை முன்கூட்டியே ஆரூடம் சொல்வது மட்டும் அல்லாமல், சொன்னதை சொன்னபடி நிறைவேற்றிக் காட்டுபவர்.
இப்பொழுது அவரிடம் புதிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கிரிக்கெட் மழையில் மூழ்கித் தவிக்கும் பார்வையாளரை எப்படி உப்பு சப்பில்லாத உள்ளூர் போட்டிகளையும் பார்க்க வைப்பது?
எனவே, கீழ்க்கண்ட புதிய பவர்ப்ளே – லடாய் ப்ளே முறையை அறிமுகம் செய்யுமாறு பரிந்துரைக்கிறேன்:
ஓரு போட்டியில் மூன்று சண்டைகள் வரை போடலாம். (டி10 ஆட்டம் என்றால் அதிகபட்சமாய் இரண்டு சண்டைகள்)
ஒரு அணிக்கு ஒரு சண்டை. நடுவர்களும் ஒரு சண்டையைத் துவக்கலாம். சண்டைகள் ட்விட்டரில் வைரல் ஆனால், துவக்கிய அணிக்கு ஒரு புள்ளி கிடைக்கும். நடுவர் துவங்கினால், மூன்றாவது அம்பையரின் முடிவே இறுதி முடிவாகக் கொண்டு புள்ளிகள் கொடுக்கப்படலாம்/
மட்டையை வைத்துக் கொண்டு அடித்துக் கொள்ளக் கூடாது. குறிபார்த்து பந்தை எறிவது என்றால் நாற்பது மீட்டராவது தள்ளி நின்று வீச வேண்டும்.
ஒரு பந்தயத்தில் ஒருவர் அதிகபட்சமாய் ஒரு முறை மட்டும் களத்தில் குதித்து கட்டிப் புரண்டு சேற்றை வாரி இரைக்கலாம்
சண்டைகளை சமூக ஊடகத்திலும் தொடரலாம். விரைவிற் பரவுகின்ற வரையில் கொண்டு செல்லும் அணிக்கு ஒரு புள்ளி தரப்படும்.
பார்வையாளர்கள் பகுதியில் நடக்கும் கைகலப்புகளுக்கு மதிப்பெண் கிடையாது.
அப்படியாவது இந்த ஆட்டங்களை தொலைக்காட்சியில் பார்ப்பீர்களா? என்ன விதிகளை சேர்க்கலாம்? யார், யார் சிறப்பாக வாய்ச் சவடால் விடுபவர்கள்?
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு. (௲௱௭ – 1107)
தன் சொந்த வீட்டில் இருந்து கொண்டு, தன் உழைப்பில் வந்தவற்றைத் தனக்குரியவர்களுடன் பகிர்ந்து உண்ண வரும் மாபெரும் மகிழ்ச்சி, ஆசான் இடத்தில் முரண்டு தெளிவாகும்போதும் கிடைக்கும்.
இந்தக் குறளை வைத்து ஜெயமோகன் சந்திப்பான பூன் முகாம் கட்டுரையைத் துவங்கினேன்.
மூன்று நாளும் எப்படி இப்படி பம்பரமாக சிந்திக்கிறார்! எல்லாவற்றையும் எப்படி நினைவகங்களில் இருந்து பொருத்தமாகத் தேர்ந்தெடுத்து சந்தர்ப்பத்திற்கேற்ப கனகச்சிதமாகக் கொடுக்கிறார்!! அணுகுவதற்கு ஆர்ப்பாட்டமில்லாமல், வயது வித்தியாசம் பாராமல் கேள்விகளின் அறியாமையை நக்கலிடாமல், எவ்வாறு உண்மையாக, காத்திரமாக, அறத்துடன் உங்களுக்கேற்ப விளக்க முடிகிறது!!!
ஒவ்வொரு முறை அவரை சந்திக்கும் போதும் வரும் ஆச்சரியங்கள்தான். இந்த முறையும் தொடர்ந்தது. ஆஸ்டின் சௌந்தர், இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம், தேயிலை மணக்க காபி போட்ட மகேஸ்வரி, உபசரிப்பு முத்து காளிமுத்து, பவா செல்லத்துரையின் செல்லக்குட்டி பிரகாசம், தத்துவவியலாளர் விவேக், மேய்ப்பர் சிஜோ – விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் ஒவ்வொருவராலும் விழா அமர்க்களமாகியது
எனவே, முடிவில் கம்பரின் இந்தப் பாடல் பொருத்தமாக பட்டது:
”எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே. இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ”
அந்நகரில் வாழ்பவர்கள் எல்லோரும் கல்வி. பொருள் ஆகிய எல்லாச் செல்வமும் அடைந்திருப்பதாலே, அந்த நகரத்திலே இல்லாதவரும் இல்லை. உடையவர்களும் இல்லை. இப்பாடல் அந்நகரத்தவரின் அறிவுப் பெருக்கத்தையும். செல்வச் சிறப்பினையும் தெரிவிக்கிறது. அங்குக் கற்றவர்-கல்லாதவர் என்ற வேறுபாட்டையோ.; செல்வர், வறியவர் என்ற வேறுபாட்டையோ காண இயலாது என்பது கருத்து.
(உரை): ஆதிசேடன் தாங்கும், இந்த நிலமே-அகலாகவும்; கடலே நெய்யாகவும், மேருமலை திரியாகவும், ஞாயிறு.விளக்காகவும். அமைந்திருக்க, : அந்த விளக்குப் புகையினால், வானம் இருண்டது. போன்று வானத்தில் முகில் மூட்டம் காணப் பட்டது.
மேகமூட்டம் என்பதை விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் என நினைக்கிறேன். அமெரிக்கத் தமிழர் கடல்நீர்; அதில் அகல் விளக்கின் குழிவில், இலக்கியத்தை விரும்புவோர் என்னும் நெய்யினை சிக்கெனப் பற்றிக் கொண்டு பூன் மலை என்கின்ற பொன்திரி கொழுந்து விட்டெரியவே அதிலிருந்து கிளம்பிய சிந்தனை மூட்டமே மேகமூட்டம் எனலாமா?
அதன் தொடர்ச்சியாக திசையைக் காண்பிக்கும் கொல்லன், அந்த மேகக்கூட்ட மழைக் காலத்துக் கரிய மேகமாகிய கரிக் குவியலில் வாடைக் காற்றாகிய பெரிய ஊதுலைத் துருத்தியின் வலிமையைக் கொண்டு ஊதி, மின்னல் நெருப்பெழச் செய்து வெளிப்படுத்துகினற கொல்லன்பட்டரையாகப் பார்க்கிறார் கம்பர்:
“மாதிரக் கருமகன் மாரிக் கார்மழை யாதினும் இருண்ட விண் இருந்தைக் குப்பையின் கூதிர் வெங்கால் நெடுந் துருத்திக் கோள் அமைத்து ஊது வெங்கனல் உமிழ் உலையும் ஒத்தவே.”
இந்த மாதிரி எல்லாம் வெம்மையான நெருப்புச் சுடர்கள் பொறி பறக்கும் என எண்ணி என்னுடைய கம்பளிச்சட்டையை கழற்றி விட்டு ஒயிலாகக் குளிரில் நின்றிருந்தேன். உஷ்ணம் மூளைக்குள் அனலாக தகித்தாலும் நெஞ்சில் கபம் தங்கி ஜலதோஷம் பிடித்துக் கொண்டது. அடுத்த முறை மறக்காமல் தலைக்கு குல்லா, காதுக்கு மஃப்ளர், கழுத்துக்குப் போர்வையுடன் பவ்வியமாகச் செல்ல வேண்டும்.
அறிவுப்பூர்வமான தருக்கத்திற்கும், எதார்த்தத்திற்கும் — இடையே உள்ள உறவை ஜெயமோகனின் மொழியில் அவரின் நூல்களின் வாயிலாகவும் சொற்பொழிவுகளின் மூலமாகவும் அன்றாடப் பதிவுகளின் வழியாகவும் நுழையலாம். எனினும், மொழி என்பது பேசப்படுவது. அந்த மொழியை அவரின் நேரடி பிரவாகமாக, ஊற்றாகக் கிடைப்பதற்கு இந்த பூன் முகாம் அரிய வாய்ப்பு.
வாழ்க்கையின் மிகப்பெரிய கேள்விகளுக்கு தத்துவம் நுண்ணறிவை வழங்க முடியுமா? அதை வெளிப்படுத்த மொழியின் எல்லை என்ன? மீமெய்யியலும் நெறிமுறைகளும் வெறும் முட்டாள்தனமான பேச்சுதானா? இவற்றை நேரே எதிர்கொண்டு அதற்கான பதில்களை உணர்த்தும் பேச்சு, இந்தச் சந்திப்பின் உச்சகட்டம். அவர் அர்த்தமுள்ள மொழியின் எல்லைகளை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டு, உணர்வை முட்டாள்தனத்திலிருந்து பிரிக்க மெய்யியலை வாயிற்கதவாக்கும் விரிவுரையைத் தந்தது — விடையில்லா வினாக்களுக்கு விவாதங்களை உள்ளுக்குள் புலப்பட வைத்த தருணம் ஆகி நிறைந்து நிற்கிறது.
சென்ற முறை வந்தவர்களைப் பற்றிய விரிவான பதிவை, ஒவ்வொருவரைப் பற்றிய சிறு குறிப்பையும் எழுத முடிந்தது. இந்த முறை (கிட்டத்தட்ட) அத்தனை பேரும் மீண்டும் வந்தது ஜாக்பாட். நீண்ட கால உறவுகளை, பால்ய காலத் தோழமைகளை மீண்டும் காணும் சந்தோஷம். சென்ற வருடம் ஐம்பது என எல்லை வைத்திருந்தார்கள். இந்த வருடம் எழுபது. அந்த எண்ணிக்கையும் சட்டென்று நிரம்பி காத்திருப்பு பட்டியல் நிரம்பி வழிந்தது. அந்த எழுபதில் ஒருவராக இடம் கிடைத்தது மகிழ்ச்சியைத் தந்தது.
சென்ற ஆண்டு பதிந்தது:
ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்திருந்தார்கள். விமானம் வரும் நேரம் பார்த்து, ஒத்த காலத்தில் வந்து சேர்பவர்களை வாசஸ்தலத்திற்கு அழைத்துச் செல்லும் கார்கள்; வேளா வேளைக்கு உணவு, காபி, டீ, சிற்றுண்டி; அனைவருக்கும் சௌகரியமான ஓய்வெடுக்கும் வசதி; பக்கத்து பக்கத்தில் குடில்கள்; ஆசானுடன் அதிகாலை முதல் பின்னிரவு நள்ளிரவு வரை நேரம் கழிக்கும் வாய்ப்புகள்; விடிய விடிய நட்புகளுடன் அளவளாவும் தனிமை – சென்ற ஆண்டைப் போலவே இவ்வளவு சிறப்பாக செய்து முடித்திருக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் ஒத்த மனதுடன் போட்டி போட்டுக் கொண்டு நிகழ்ச்சியை ஜமாய்த்தார்கள்.
இந்த மாதிரி மாநாடு என்றால் அதற்கான பேச்சாளர்கள் அதிமுக்கியம். ஒவ்வொருவரும் காத்திரமாக தயாரித்து வந்திருந்தார்கள். கச்சிதமாகப் பேசினார்கள். இத்தனை பரந்துபட்டத் தலைப்புகள் ஆயிற்றே! எவ்வாறு பேரவையில் எல்லாவற்றையும் அகல உழப் போகிறார்கள்? மீண்டும் கருத்தரங்கை களை கட்ட வைப்பார்களா? என்னும் அச்சம் இல்லாவிட்டாலும், சென்ற ஆண்டு மாதிரியே சுவாரசியமாகவும் ஆழமாகவும் நயமாகவும் கலந்தாய்வார்களா என்னும் முன்னுதாரணம் சற்றே நிழலாடிக் கொண்டிருந்தது. இந்த முறையும் புடமிட்ட பொன் ஆக ஜொலிக்க வைத்தார்கள்.
எல்லோருக்கும் நன்றி. ஒருவருக்காகக் கூடுகிறோம். அவரின் நிழலில் தழைக்கிறோம். அடுத்த சந்திப்பை எதிர்நோக்குகிறோம்.
“எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே. இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ.”
ராஜா: தப்பு… தப்பு! முதல்ல அது டிவிட்டர் கிடையாது ஆக்கும் — எக்ஸ் என்பார் எலான். இரண்டாவது என்னிக்காவது ட்விட்டரில் ஒண்ணேயொண்னை மட்டும் பார்க்க முடியுமா என்ன!?
ராணி: மிடில… நான் படிச்சது, ‘மனித இனம் ஏன் மற்ற மிருகங்களை முன்னேற்றவில்லை?’ – என்னும் வினா.
ராஜா: ஆட்டுக்குட்டியை இன்னும் சதைப் பற்றொடு வளர்ப்பது எப்படி? பூனையும் நாயும் பிறந்தவுடனேயே சொன்னபடி கேட்டு நடக்கும் செல்லப்பிராணி ஆக ஆக்குவதெப்படி? கசாப்புக் கடைக்கு மிச்சம் மீதி இல்லாமல் முழு ஊனையும் தருவதெப்படி… இப்படியா?
ராணி: முருகா! அதைவிட மனுஷன் மனசு வச்சா எந்த உயிரினத்தையும் புத்திசாலியாக மாற்றி இருக்கலாம்.
ராஜா: கணினிக்கு அறிவுத் திறன் ஊட்டுவதற்கு பதிலாக விலங்குகளுக்கு மதி நுட்பம் புகுத்தியிருக்கலாம் என்கிறாய். இத்தனை ஆண்டுகளாக நாகரிகமாக வாழும் நாமே இன்னும் மந்தையாகத்தான் செயல்படுகிறோம். அதெல்லாம் நடக்கிற காரியமா?
ராணி: Payton E. Pearson III எழுதிய “Artificially Selecting for Intelligence in Dogs to Produce Human-level IQ Within 100 Generations” தேடிப் பார் என்பது ட்விட். அதை வச்சு, ‘ஏன் எவளும் அறிபுனை கதை ஒன்று எழுதவில்லை?’ என்பது சங்கிலிக் கேள்வி.
ராஜா: நல்ல கேள்வி. இதைக் கேட்டவுடன், எனக்குத் தோணுது… ‘கும்பகர்ணன் என்பது AGI குறியீடு. தூங்கிட்டிருக்கிற AI சிங்கம். சாமா-னு செல்லமாக அழைக்கப்படுகிற சாம் ஆல்ட்மேன் தான் இராவணன்!’ – இப்படி ஒரு அறிவியல் புனைவை ராமகாவியமாக எழுதப் போறேன்.
சென்ற சில இதழ்களாக சொல்வனம் வழக்கமான பிரசுர நாட்களில் பிரசுரமாகவில்லை. இந்த இதழும் (307) தாமதமாக இன்று பிரசுரமாகியது.
அடுத்த இதழ் (308) டிசம்பர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று பிரசுரமாகும்.
இதழ் எண் 309 டிசம்பர் 31, 2023, மாதத்தின் ஐந்தாம் ஞாயிறன்று பிரசுரமாகும். 2024 இலிருந்து வழக்கமான இரண்டாம் ஞாயிறு மற்றும் நான்காம் ஞாயிறுகளில் இதழ்கள் பிரசுரமாகும்.
நவம்பர் 27ஆம் தேதியிட்ட ‘தி நியு யார்க்கர்’ – தனிப்பட்ட வரலாறு (Personal History) என்னும் தலைப்பில் பல ஆக்கங்களை வெளியிட்டுள்ளது.
சொல்வனம் தளத்திலும் அவ்வாறு ஒவ்வொரு இதழுக்கும் ஒரு குவிமையம் இருக்கவேண்டும்.
உங்களுக்கு மட்டுமே உரித்தான பிரத்தியேகமான அடிப்பாடுகளை எழுதி அனுப்புங்களேன்.
அப்படியே அடுத்தடுத்த இதழ்களுக்கான தலைப்புகளையும் பரிந்துரையுங்களேன்.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde