Monthly Archives: ஜனவரி 2024

சிறுகதை – பரிந்துரை

நல்ல மலையாளப் படம் போல் தத்ரூபமான கதை.
வெண்முரசு எழுதியதின் மிகுதியில் உருவான சேடி.
தத்துவமும் குட்டிக்கதையும் பின்னிப் பிணைந்திருக்கும் பாதை.

கலைமகள், அமுதசுரபி, மஞ்சரி, ஞானபூமி போன்ற இதழ்களில் படித்திருக்க வேண்டியது;
பார்த்தனும் முராரியும் உரையாடுவது;
சாந்தமாக நிச்சிந்தையாக நேரம் எடுத்துக் கொண்டு நீண்ட காலம் நெஞ்சில் நிலைத்திருப்பது.

இந்த 310ஆம் சொல்வனம் இதழில் ராமராஜன் மாணிக்கவேல் எழுதிய “கொடை” குறிப்பிடத்தக்க ஆக்கம்.
வாசியுங்கள்

வட்டிகை (சொல்வனம் #310)

பத்திரிகைகளில் லே-அவுட் என்பது கண்கவர் வித்தை.

அவற்றை தலைசிறந்த ஓவியர்கள் கொண்டு வடிவமைப்பது பிரசித்தம். அன்றைய ஆனந்த விகடனுக்கு கோபுலு, மாலி. இதயம் பேசுகிறது வாராந்தரிக்கு மாயா. குமுதம் குழுமத்தில் இராமு, அர்ஸ், மாருதி, வர்ணம் என எல்லோரும் பங்களித்ததாக நினைவு.

வயதானவர்களுக்கு பழைய நினைப்பு எப்பொழுதும் பிளாட்டினம் காலம். தீபாவளி சிறப்பிதழோ புத்தாண்டு மலரோ கொண்டு வந்து, பெரிய புத்தகத்தை வெளியிட்டு, கடைகளுக்கு அனுப்பி வைத்து விட்டால் — நியு யார்க்கர் பதிப்புக் குழு மாதிரி சுருட்டும் விஸ்கியும் பருகாவிட்டாலும், அந்த அச்சாபீஸ் ஊதுபத்தி மணக்க, இதழ் வெளியாக உழைத்த ஒவ்வொருவரும், மகப்பேறை அடைந்த மகிழ்ச்சியோடு அந்த நூலைக் கொண்டாடினார்கள்.

இன்றைய இணையச் சூழலில் ஒரேயடியாக இத்தனை கனமான விஷயங்களைக் கொடுத்தால் எவரும் வாசிக்க மாட்டார்கள். ஒவ்வொரு கட்டுரையாக, தனித்தனி தினங்களில், இந்திய விடுமுறைகளைத் தவிர்த்து, போதிய அளவு முன்னோட்டங்களை சமூக ஊடகங்களில் துளிரவிட்டு, புதன் சாயங்காலமாக வலையில் போட்டால், வாசகர்கள் அள்ளும். அதன் புறகு அந்தப் பதிவிற்கு துணைப் பதிவு, கொசுறு கலவரம், அடுத்த நாள் மீம் என்று விளம்பரங்களையும் விழியங்களையும் உலவ விட வேண்டும்.

இது சமூக பரவல் சித்தாந்தம். இதற்கும் ஓவியர்களுக்கும் என்ன சம்பந்தம்?

ஓவியர்கள் கண்ணைப் பறிக்கும் செப்படி வித்தைக்காரர்கள்; சமூகப் பம்பல்கள் கண்ணில் பட்ட இடமெல்லாம் விதை தூவும் விளம்பரதாரர்கள்.
சித்திரக்காரர் உங்கள் சிந்தையை நீங்களே அறியாமல் கவர்வார்; சமூகப் பம்பல்காரர் அலறி முகத்தில் அடித்து ஆக்கிரமிப்பார்.
எழுத்துக்காரரின் ஆக்கத்தை தூரிகை கொண்டு தூண்டில் போடுபவர் அவர். மூச்சு முட்டுமளவு நாமம் அடித்து பட்டை போட்டு எழுத்தையும் சிந்தையையும் மறைப்பவர் மீம்காரர்.

செல்பேசி இருப்பவரெல்லாம் ஒளிப்படம் எடுத்து தள்ளுவது இக்காலம். இந்தக் காலத்தில் நல்ல புகைப்படக்காரரை கண்டுகொள்வது எவ்வளவு கடினமோ…
அதை விட கடினம்: நல்ல படக்காரரை கண்டுகொள்வது.

சாட் ஜிபிடி-யோ, பிங் அரட்டை பெட்டியோ, டால்-ஈ, மிட் ஜர்னி, கூகுள் பார்ட் என எந்தப் பக்கம் பார்த்தாலும் செயற்கை நுண்ணறிவு ஓவியம் தீட்டுகிறது. கைவிரல்களை எண்ணாத வரைக்கும் அசல் படைப்பாளி மாதிரியே பாவ்லா காட்டுகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழுக்கும் இந்தியத்திற்கும் புனைவிற்கும் பொருத்தமாக வரைய இருவர் கிட்டி இருக்கிறார்கள்.

அருண் – இரா முருகனின் மிளகு என்னும் பெருநாவலுக்கு சொல்வனம் தளத்தில் வரைந்து காட்சிகளை உருவாக்குகிறார்.


சங்கர நாராயணன். – கவிஞர் ஜகன்னாத பண்டித ராஜா மொழியாக்கத்திற்கு உயிர் கொடுக்கிறார்.

பொக்கிஷங்கள்! தொடர்ந்து மென்மேலும் உருவாக்கி நம் எண்ணத்தை செழுமையாக்க வாழ்த்துகள்

அஞ்சனக்காரன்

விஜய்காந்த்தை முதன் முதலில் பார்த்தது விவித் பாரதியில். இளையராஜா என்று நினைத்த ‘உள்ளம் எல்லாம் தள்ளாடுதே’ பாடலில். இப்பொழுது பார்த்தால் சலீல் சௌத்ரி!

அசல் ரஜினி இருக்கும்போது இன்னொரு புரட்சியாளரும் ஏழைப் பங்காளரும் எனக்கெதற்கு என்று அவரின் ‘நூறாவது நாள்’ கூட தள்ளிப் போட்டு வந்த எனக்கு, தீபாவளி வந்தது. கூடவே, ‘வைதேகி காத்திருந்தாள்’ படமும் வந்தது.

ராத்திரி ஆனால் பாட்டு பாடுவதை நிறுத்திவிட்டு ரேவதியை கல்யாணம் செய்வானா!? அதை விட்டுவிட்டு வெறுமனே ‘ராசாத்தி… ஒன்ன காணாத நெஞ்சு’னு எவராவது புலம்புவானா? கதாபாத்திரம் நம்பமுடியவில்லை. எனினும், தமிழ் சினிமா. திகிலடையவோ அதிர்ச்சியடையவோ ஏதாவது செய்வார்கள். பத்து வருடத்திற்கு மேல் குடித்தனம் நடத்தி குழந்தைகள் பெற்ற மனைவியை எரியூட்டி விட்டு வரும்போதே, ‘எந்த வீட்டில் எவ வயசுக்கு வந்திருக்கா?’ என்பதை நேரடியாகக் கேட்டும் பார்த்தும் வளர்ந்த எனக்கு இயக்குநர் ஆர். சுந்தர்ராஜனும் மோசமான படைப்பாளி பட்டியலில் இணைந்து கொண்டார்.

அதன் பின்பும் ‘ஒலியும் ஒளியும்’ பாடல்கள் மூலமே விஜய்காந்த் ஈர்த்தார்.

ராதா படங்களைத் தேடித் தேடி பார்த்தபோது, ‘அம்மன் கோவில் கிழக்காலே’ அகப்பட்டது.
’முத்துமணி மாலை… என்னத் தொட்டுத் தொட்டு தாலாட்ட..’விற்காக ”சின்ன கவுண்டர்” கண்ணில் விழுந்தது.
அன்றைய (இன்றைக்கும் தான்) தேவதையான பானுப்ரியாவிற்காக ‘சத்ரியன்’ + ‘பரதன்’. இதில், ‘புன்னகையில் மின்சாரம்’ பாடலில் சுவர்களே தெரியாதவாறும் வெறும் வண்ணம் மட்டும் பின்னணியில் வருமாறு உழைத்ததாக சாந்தோம் மாணவர், அந்த நாள் நடன இயக்குநர் பிரபு தேவா சொல்ல, பாட்டின் சிறப்பு சற்றே புலப்பட்டது.
’சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு’ அர்த்தம் புரிந்ததா என்று பொறிப்புரை கொடுத்த விடலை பள்ளித் தோழர்களுக்காக ”பூந்தோட்ட காவல்காரன்”.
’மயங்கினேன்… சொல்லத் தயங்கினேன்!’ குறித்து தமிழ்த்திரை சுப்புடு சுரேஷ் கண்ணன் முதல் மரவண்டு வரை பலரும் மரத்தடி முதல் முகநூல் வரை எழுதி விட்டார்கள்.

விஜய்காந்த் நடித்த முதல் படம் – ‘ஊமை விழிகள்’.
விஜய்காந்த் கொடுத்த முதல் ஏ+பி+சி செண்டர் ஹிட் படம் – ‘அம்மன் கோயில் கிழக்காலே’; அவரின் பிற படங்களில் இதே கதாபாத்திரத்தை ஷோபனா, ரேகா என வாந்தியெடுத்தார்,

பிற்காலத்தில், ‘வல்லரசு’, ‘சிம்மாசனம்’, ‘பேரரசு’, ‘தர்மபுரி’ போன்ற படங்கள் இவரை தெலுங்கு மண்ணில் கொடி கட்டி — தம்பி பாலகிருஷ்ணாவுக்கு டஃப் கொடுக்க வேண்டியவர் தமிழ் மண்ணில் பிறந்த நம்மை இன்னும் கொடுமை செய்கிறாரே என மிரள வைத்தது.

எனினும், இன்றும் என் மனதில் நிற்பது, “தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை! மன்னிப்பு!!”.

விஜயகாந்த் உருவாக்கிய நம்பிக்கைகள் எனக்கு நிஜம்.
’இளைய தளபதி” ஆக விஜய் போன்றோர் உருவாக துணை நின்றது நிஜம்.
சினிமா கல்லூரியில் படித்து விட்டு, வெளியே வந்த புதியவர்களுக்கு துணை நின்றது நிஜம்.
யேசுவோ, மாரியம்மனோ, ஓரங்க நாடகத்தை ஒளியோவியராக்கிய விசுவோ எவருக்கும் கரிசனம் பார்க்காமல் நடித்து குவித்தது நிஜம்.
நடிகர் சங்கமோ, கேப்டன் தொலைக்காட்சியோ, சொந்த கட்சியோ நடத்தி, ஜெயித்தது நிஜம். (இது டி ஆர். ராஜேந்தர், பாக்யராஜ் போன்ற ஆளுமைகள் வழுக்கிய இடம்).
அவருக்கு என் நெஞ்சில் ஒரு பெக் அடிக்க நினைக்கும் போது, ‘ஒரு மூணு முடிச்சால முட்டாளா போனேன்… கேளு! கேளு!! தம்பீ!!!’ நினைவிற்கு வருவதோ, ’சாமிகளே… சாமிகளே… சொந்தக் கதக் கேளுங்க!!’ என தன் பாட்டுக்கு பாடும்போது என்னுள் ஒளிந்திருக்கும் அந்தக் கருப்புத் தங்கம் வெளிவருவதும் நிஜம்.

அஞ்சலிகள்!

அம்பையர் அவுட்!

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!’ என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்லலாம்.
கிராண்ட் ஸ்லாம்களில் சிறந்தது அமெரிக்க ஓப்பன் டென்னிஸ்.

ஏன் என்றால், இங்கே பந்து, ‘உள்ளேவா? வெளியேவா?’ என சோதிக்கும் நடுவர்கள் கிடையாது.

கிரிக்கெட்டுக்கும் இது தேவை. சுவாரசியமான ஆட்டத்தின் நடுவே அந்த கறுப்பு+வெளுப்பு ஆடை மத்தியஸ்தர்கள் தேவையே இல்லை.
ஏன்?

1. எல்லாவற்றுக்கும் தொலைக்காட்சியில் அசரீரியாக ஒலிக்கும் மூன்றாம் நடுவர் இருக்கிறார். அவர் போதும்.

2. ஒரு ஓவருக்கு ஆறு பந்து. அதை அரங்கில் இருக்கும் வெள்ளித்திரை காண்பிக்கும். அது போதும்.

3. தொப்பியையும் கம்பளி ஜாக்கெட்டையும் தாங்கிக் கொள்ள கோட் தலைப்பாமாட்டி போதும்.

4. பந்து வீசுபவர் எல்லைக் கோட்டைத் தொட்டாரா; இடுப்புக்கு மேல் போட்டாரா என்பற்கு எல்லாம் கேமிராக்கள் போதும்.

5. காலில் வாங்கி ஓடினாரா, கையைத் தொட்டுப் போனதா எல்லாம் தப்பு தப்பாகவோ, குத்துமதிப்பாகவோ சொல்லாமல் இருக்க கணினி போதும்.

6. சண்டையோ கலகலப்போ சூடான தடித்த வார்த்தைகளோ இருந்தால்தான் ஆட்டம் களை கட்டும். அவற்றை விலக்கி விடாமல் இருக்க நடுவர் இல்லாவிட்டால் போதும்.

7. பந்து, ஆடுகளம் எல்லாம் தேர்ந்தெடுக்க ஐ.சி.சி (அல்லது பி.சி.சி.ஐ.) போதும்

8. இடக்கை ஆட்டக்காரரும் வலக்கை ஆட்டக்காரரும் ஆடும் போதும் அங்குமிங்கும் ஒட சதுரக்கால் அம்பையர் வேண்டாம். ஃபீல்டிங் அரணை மாற்றுவது மட்டும் போதும்.

9. அம்பையர் மாதிரி நடுவில் நின்று கொண்டு ஆட்டத்தைப் பார்க்க வேண்டுமென்றால் காசு கொடுத்தால் போதும் என்னும் ஷரத்து வரவேண்டும்.

அந்த இரண்டு பேர் இன்னும் தேவையா? என்ன சாதிக்கிறார்கள்? எதற்காக இன்னும் ஏதோ வேலை செய்வது போல் நடிக்கிறார்கள்?