மத்தகம் (ஜெயமோகனின் நாவல் அல்ல) – டிவி சீரிஸ்


ஹாலிவுட்டில் சமீபத்தில் எழுத்தாளர்கள் போராட்டம் நடைபெற்று சமாதானம் ஆகி முடிவுக்கு வந்தது. அதற்கு பல மூல காரணங்கள் இருந்தாலும், என் கவனத்தை ஈர்த்த காரணம்:

புஷ்கர் – காய்த்ரி” போன்று சுழல், வதந்தி போன்ற குறுந்தொடர்களைத் துவக்குபவர்கள், அந்தத் தொடரின் கடைசி பாகம் வரை, உறுதுணையாக கவனம் செலுத்தி, திரைக்கதைக்கு பக்கபலமாக நின்று; இறுதியாக வெளியிடப்படும் பிரதியிலும் — தங்களின் முத்திரை பங்களிப்பை நல்குவார்கள்.

இந்திய தொலைக்காட்சி தொடர்களுக்கு இந்த சிக்கல் இல்லை. எனினும் பல்வேறு குழப்பங்கள் இருக்கிறது.

துவக்கம் அமர்க்களமாக இருக்கும். அதன் பிறகு, அடுத்தடுத்து சில பளிச். பின்… எப்படி தொடர்வது என்று குழம்பி நிற்போர் உண்டு. – இது “பாதாள் லோக்” (Paatal Lok – அமேசான் ப்ரைம்)
எப்படி முடிப்பது என்று குழம்பி நிற்போர் உண்டு. – இது “ஹ்யுமன்” (Human – டிஸ்னி+ / ஹாட்ஸ்டார்)

எனினும், பெரும்பாலானவை முதல் பகுதியை ஒட்டியே செல்லும். சடாரென்று திசை திரும்பாது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு இயக்குநரால் கொணரப்பட்டாலும் அந்தத் தொடரிழை அறாது தொடரும்.

இதற்கு சிறந்த உதாரணம் – பஞ்சாயத் (Panchayat – அமேசான் ப்ரைம்)

உங்கள் மனதில் ”சேக்ரெட் கேம்ஸ்” (Sacred Games – நெட்ஃப்ளிக்ஸ்) நிழலாடுவதை உணர்கிறேன். அது எல்லாத் தொடருக்கும் பாட்டி. அதைக் கணக்கில் சேர்க்க வேண்டாம். அந்தத் தொடர் ஒரு தனித்துவமான முயற்சி. அது இந்திய மக்களை, பெருங்கூட்டத்தை, பார்வையாளர்களைச் சென்றடடைந்ததா என்பதில் எனக்கு பெரும் சந்தேகம் உண்டு. அந்தத் தொடருக்குப் பிறகு செட்ஃப்ளிக்ஸும் விழித்துக் கொண்டுவிட்டது.

இப்பொழுது நெட்ஃப்ளிக்ஸ் டிவியில் வரும் நெடுந்தொடர் எல்லாமே ஒரே வார்ப்புரு — பழைய சோற்றில் ஒரே மாதிரியான சோடையான வடகறி சம்பவங்களைக் கொண்டு காய்கறியாக நடிகர்களை மட்டும் மாற்றி மாற்றி எவ்விதச் சுவையும் ரசனையும் இல்லாமல் உவ்வேக் என ஓட வைக்கிறார்கள்.

ஆனால், அமேசான் ப்ரைம் ஒவ்வொரு சீரியலிலும் “அட… பேஷ்!” போட வைக்கிறார்கள். காதல், இந்துஸ்தானி, நிஜ நாடக ரியாலிடி டிவி என அரைத்த மாவாகும் அபாயம் இருந்தாலும் ”பேண்டிஷ் பண்டிட்ஸ்” (Bandish Bandits) எட்டிப் பார்த்த போதெல்லாம் புன்முறுவலையும் துருபத் ஆலாபனையையும் கவனிக்க வைத்தது.

இவ்வளவு பீடிகை எதற்கு?

பிரசாத் முருகேசன் இயக்கத்தில் அதர்வா, ‘குட்நைட்’ மணிகண்டன் நிகிலா விமல் நடித்து டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில், “மத்தகம்” – நெட்ஃப்ளிக்ஸ் தொடர் போன்று பல்லிளிக்கும் பித்தளையாகாமல், பிரைம் டிவி தொடர் போல் ஜொலிக்கிறது.

இதில் வரும் கதாபாத்திரங்களை ரொம்ப நாளாக பார்த்து வருகிறோம். கவுதம் வாசுதேவ் மேனன் படங்களில் வில்லன்களாக. பா. ரஞ்சித் படங்களில் கதாபாத்திரங்களாக. மேலும் வடசென்னை மண்ணின் மணம் கமழும் படங்களில் நாயகர்களாக. மத்தகம் தொடரில் இவ்வளவு அதிகமாக தேய்வழக்காகி விட்டவர்களை புத்தம்புதிய முலாம் பூசி ஒவ்வொருவருக்கும் முன் கதை சுருக்கம் கொடுத்து, பொருத்தமான முகவெட்டும் உடல்மொழியும் ஆடை அணிகலனும் போட்டு நம்ப வைக்கும் திருப்பங்களில் உபயோகிக்கிறார்கள்.

இளவரசு, வடிவுக்கரசி, டிடி திவ்யதர்ஷினி, நந்தினி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் என பல தெரிந்த முகங்கள். பொருந்தி நடிக்கிறார்கள். இனி இவர்களில் சிலரை, ‘மத்தக’த்தில் நடித்தாரே என்று சொல்லும் அளவு இயல்பாக வந்து போகிறார்கள்.

வெப் சீரீஸுக்கேயுரிய இழுவைகள் உண்டு. தமிழ் சினிமாவுக்கேயுரிய மாறா குணச்சித்திரங்கள் உண்டு. இருந்தாலும், இவர்களின் இருளுலுக்கிற்குள் எழுத்தின் வழியாக சென்றவர்கள் குறைவு. பா. ராகவனின் ஓரிரண்டு நாவல்களில் சற்றே உள்நுழையலாம். அதன் பிறகு இந்தத் தொடர்.

சரி… ‘விக்ரம் – வேதா’வை எதற்கு இதில் இழித்தேன்?
அந்தப் படத்தின் பாணியில் இரண்டு முக்கிய நபர்கள். இருரையும் நேர் எதிராக நிறுத்தி அவர்களுக்கிடையிலான திருடன் – போலீஸ் கதை அமைத்து, இருவருக்கும் சரியான போட்டியாக அமைத்தது இந்த ‘மத்தக’த்தை ரசிக்க வைக்கிறது.

நாயகர் காவல்துறை அதிகாரிக்கு மனைவி மேல் பெரிதாக பாசம் இல்லை. அல்லது, மனைவியாகி விட்டார் என்பதால் குடும்பத்தில் ஏற்படும் அசுவாரசியம் எனலாம்.
இன்னொரு பக்கம் வில்லனுக்கு காதலி மட்டுமே இலட்சியம். அவளுடன் அமைதியாக வாழ்வதிலே நாட்டம். உருகோ உருகு என்று பாசமழையைக் கொட்டுகிறார்.

இந்த மாதிரி முரண்கள் நிறைந்த நிழலுலகத் தொடர். பாரதிராஜா முடிவிற்குள் அகப்படாமல் இருப்பாராக என எல்லாம்வல்ல பாடிகாட் முனியை வேண்டுகிறேன்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.