Tag Archives: TV

மயில்சாமி – அஞ்சலி

முதன் முதலாக அந்த கேசட்டை கேட்டபோது “இப்படித்தானே நகைச்சுவை இருக்க வேண்டும்! சுருளிராஜனும் தேங்காய் சீனிவாசனும் உசிலை மணியும் பக்கோடா காதரும் ஏன் இப்படி பாடாய் படுத்துகிறார்கள்?” எனத் தோன்றியது.

அது “சிரிப்போ சிரிப்பு”

மயில்சாமி என்னும் மிமிக்ரி கலைஞரும் லட்சுமணன் என்பவரும் இணைந்து அன்றைய பிரபலங்களை கிண்டல் அடித்து இருப்பார்கள்.

ஆளுங்கட்சி எம்.ஜி.ஆர். எதிர்க்கட்சி கருணாநிதி. ஆன்மீகச் செம்மல் கிருபானந்த வாரியார். சூப்பர் ஸ்டார் ரஜினி – எல்லோரையும் வைத்து ரசனையாக செய்திருப்பார்.

அதில் கடி ஜோக் ஒரு வகை – அது (சுருதி) லட்சுமணன் வகை – அந்த வகை இன்றும், என்றும், எங்கும், எப்பொழுதும் கடிக்கலாம். அவற்றுக்கு ரொம்ப யோசிக்க வேண்டாம். ஆனந்த விகடனில் வெ. சீதாராமன் நகைச்சுவை மாதிரி. கொஞ்சம் பழைய நினைப்பு + நிறைய கேலி + நிச்சயம் உல்டா. ஜாலியாக இருக்கும். மனதில் நிலைக்காது. மறந்து விடும்.

ஆனால், குரல் மாற்றிப் பேசும் மைல்சாமி குரல் – அந்தந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும். புரட்சித் தலைவர் என்றால் அவரின் பாணி. கலைஞர் என்றால் சொற்சிலம்பம், நெடுங்கவிதை புராணம். ரஜினிக்கேற்ற டயலாக், டி ராஜேந்தருக்கு ஏற்ற எதுகை மோனை வசனம்.

குறிப்பாக, ‘நிலா அது வானத்து மேல’ பாட்டிற்கு வாரியார் சொல்லும் சொற்பொழிவு. அது எனக்கு எந்தப் பாடலை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உயர்த்தி வைக்கலாம்; எந்தக் கருத்தையும் நைச்சியமாக விமர்சனமாக உள்ளே வைக்கலாம்; எந்தக் குப்பை சரக்கையும் நம் வசதிக்கேற்ப மாற்றலாம் – என்னும் நுட்பத்தை செய்முறையாக முதன் முறையாக விளக்குவார் மயில்சாமி.

ஸ்டாண்ட்-அப் என்கிறோம்; பகிடி என்கிறோம்; கலாய்த்தல் என்கிறோம்; டிஜே ஒருங்கிணைப்பு; விஜே வர்ணனை; சந்தானம், சிவ கார்த்திகேயன், மா.க.பா, ரோபோ சங்கர் எல்லோருக்கும் முன்னோடி.

ராஹுல் காந்தியை தங்கபாலு அவர்கள் மொழிபெயர்த்ததற்கு முன்னோடியாக இயக்குநர் விசுவும் கிஷ்மு அவர்களும் ஒரு நிகழ்ச்சியில் அன்றே செய்திருப்பார்கள். அதன் தொடர்ச்சியாக கொஞ்சம் காலம் கழித்து ஈழத்து தமிழை மொழிபெயர்ப்பவராக திரைப்படம் ஒன்றில் மயில்சாமியைப் பார்த்தேன்.

அந்த ஒலிப்பேழையை மீண்டும் மீண்டும் கேட்க வைத்தது அவர்(களின்) சாதனை. அதை சாடர்டே நைட் லைவ் போல் ஒரு இயக்கமாக மாற்றியது தற்செயல் பிறவிப்பயன். எங்காவது பாக்கியராஜையோ சந்திரசேகரையோ ஜனகராஜையோ கேட்டால் மயில்சாமி நினைவில் வருவது மெய்க்கீர்த்தி!

அமெரிக்கத் தேர்தலும் தமிழ்த் தொலைக்காட்சிகளும்

எதிர்பார்க்காமல் அது நிகழ்ந்தது. மாலன் சார் பாரிந்துரைத்ததாக சிங்கை மீடியாகார்ப் அணுகினார்கள்.

ஒரு சவுண்ட் பைட் வேண்டும் என்றார்கள். முன்பின்னே கொடுத்ததில்லை. அனுபவம் கிடையாது என்றேன்.

சரி… அழைத்துப் பேசுகிறோம். அதன் பின் வெட்டி எடுத்துக் கொள்கிறோம் என்று சம்மதித்தார்கள்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினோம்.

–  சமூக ஊடகங்களில் எவ்வாறு இளைஞர்கள் வீழ்ந்து, அமிழ்ந்து, கலந்திருக்கிறார்கள் என்றும்

–  அமெரிக்கத் தேர்தலில் ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் இன்ஸ்டாகிராமும் யூடியூபும் ஆக்கிரமித்திருக்கிறது என்றும்

–  தேர்தலுக்கு முன் நடந்த ஆர்ப்பாட்ட ஒத்திகைகள் எவ்வாறு அரங்கேறின என்றும்

அது கொஞ்சம் தன்னம்பிக்கையை அதிகரித்து, பாட்காஸ்டிங் துவங்கலாமா, நாமும் பொக்கிஷம் டிவி விக்கி ஆகிவிடலாமா என்று ஆசை கொடுத்தது.

அதன்பின் வழக்கம் போல் காலை எழுந்ததும் கட்டஞ்சாயா, அதன் பின் நாள் முழுதும் அலுவல் சந்திப்பில் கேமிராவைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே பேசுவது என்று பழைய வழக்கமான வாழ்க்கைத் தொடர்ந்தது.

தேர்தல் நாளில் திடீரென்று வாட்ஸப் அழைப்புகள் பறக்க ஆரம்பித்தன. எல்லாமே சடாரென்று நடந்தது. நியூஸ் 18 நேரலையில் டொனால்டு டிரம்ப் குறித்தும், வாக்களிப்பு குறித்தும், ஜோ பைடன் குறித்தும், கமலா ஹாரிஸ் குறித்தும், அமெரிக்காவின் இந்தியக் கொள்கை குறித்தும் நிறையப் பேசினேன். ஆசைதீருமளவு வாய் வலிக்குமளவு கருத்துகளை அள்ளிக் கொட்டினேன்.

பின் இரவு ஒரு மணி அளவில் உத்தரவு வாங்கிக் கொண்டேன். தீபாவளிக்கு முந்தின இரவு வெடி வெடிப்போம். எல்லாரும் தூங்கிய பிறகு… அனைத்து வெடிச்சத்தமும் அடங்கிய பிறகு… கடைசி வெடியைப் போடுவோம். சொல்லப் போனால் தூங்காமலேயே, முன்றரை மணிக்கு மீண்டும் வெடியைத் துவங்கி விடுவோம்.

அன்றும் அப்படித்தான். news18 முடிந்ததும் சன் தொலைக்காட்சியில் துவங்கினார்கள். சிவராத்திரியே தான்!

அரைத்த மாவையே அரைத்தேன். காட்டமான எண்ணங்களைச் சொல்வது; அதன் பின் எதிர்த் தரப்பிற்கும் சற்றே வக்காலத்து வாங்குவது. வழவழா கொழகொழா ஆக முத்தாய்ப்பு வைத்து முடிப்பது – இப்படியே த் தொடர்ந்தேன்.

அந்த உலகம் அவசரமும் சுவாரசியமும் பரபரப்பும் நிறைந்த உலகம். எவரோ நுழைகிறார்கள். ஸ்கைப் அழைப்பில் நேரடி ஒலிபரப்பைப் பார்க்கும் போதே, “சற்றுமுன்” என்று மாறிவிடுகிறார்கள். அந்தத் தொலைக்காட்சியில் ஆளுங்கட்சிக்கு ப்ரேக்கிங் நியுஸ்; இந்தத் தொலைக்காட்சியில் கொரோனா நோய் பீடிப்பில் இறந்தவர்களின் கணக்கு – நடுவில் நானும் ஃபாக்ஸ் டிவி (ரிபப்ளிகன் சார்பு), எம் எஸ் என்பிசி (டெமொகிராட்ஸ் ஆதரவு), பி.பி.எஸ். (தூர்தர்ஷன் மாதிரி) எல்லாம் மாற்றி மாற்றி பார்க்கிறேன்.

காபி துளிக் கூட அருந்தாமலே மூளை சுறுசுறுப்பாக இருந்தது. சாந்தோம் பள்ளி மாணவர்கள் எனக்கு செய்திச் சுருக்கங்களை நறுக் நறுக்கெனக் கொடுத்துக் கொண்டிருந்தது வெகு உதவியாக இருந்தது.

நியூஸ் பதினெட்டு கன்னலில் எட்வர்ட் சார் கூடவும் ஜூனியர் விகடன் காலத்தில் இருந்து வாசித்தும் எஸ். ராமகிருஷ்ணன் வந்திருந்தபோது நியூ ஜெர்சியில் வைத்து சந்திக்கவும் செய்த பிரகாஷ் எம் ஸ்வாமி கூடவும் நேரலையில் பேசியது அளவொண்ணா மகிழ்ச்சியைத் தந்தது.

அமெரிக்காவில் அடிக்கடி தேர்தலும் வாக்குப் பதிவும் நடந்தால் எனக்கு வாழ்க்கை விறுவிறுப்பாக இருக்கும். மிட்ச் மெக்கானல் உடனோ ஜான் ராபர்ட்ஸ் கூடவோ பேசி நடத்தி விட வேண்டும்.

போதையில் இருந்து மீண்டு கொண்டிருக்கும்,

பாபா

All Politics is Local


அறிவா உள்ளுணர்வா?  | திண்ணை

இறந்து போன எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் பற்றிச் சில குறிப்புக்கள் | திண்ணை: ஸிந்துஜா

திண்ணைப் பேச்சு – கனிமொழி, சின்னக் குத்தூசி பற்றி ஜெயமோகன் பற்றி பி கே சிவகுமார் பற்றி ஸிந்துஜா | திண்ணை :: கோபால் ராஜாராம்

Rape and Sexual Assault on Women: Actions and Questions

1. பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்து இருக்கின்றன என்று எப்படி சொல்ல முடிகிறது? அதற்கான தரவுகளோ, முறையான ஆய்வுகளோ இல்லாமல், பொத்தாம் பொதுவாக “ஜாஸ்தியாகி விட்டது” என எப்படி சொல்ல முடியும்?

2. அமெரிக்க கல்லூரிகளில் பாலியல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டாமல் போகிறது. குற்றம் செய்தவர்களுக்கு ஆதரவாக நிர்வாகம் செயல்படுவதைத் தடுக்க ஆவன செய்ய வேண்டும் என ஒபாமாவே அறிக்கை விடும் அளவு நிலைமை மோசமாக இருக்கிறது. மேற்குலகில் கற்பு பறிபோய் விட்டது என செய்தியாக்குவதைவிட குற்றவாளி தண்டிக்கப் பட வேண்டும் என்பதே போராட்டத்தின் காரணமாக இருக்கிறது. இந்தியாவிற்கு எது முக்கியமாக இருக்கிறது? ஒவ்வொருவரும் நிம்மதியாக நடமாட வேண்டும் என்பதா (அல்லது) அநீதி இழைத்தவர்களை காலத்தே குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்பதா?

3. பெண்கள் என்றால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை பார்க்கும் உத்தியோகங்கள் நிறைந்த காலத்தில் இருந்து 24 மணி நேரமும் உழைக்கும் காலகட்டத்திற்கு மாறியிருக்கிறோம். ஆண் மட்டும் தனியே திரும்பும்போது ஜேப்படி என்பது பெரிய பிரச்சினை. இன்று பெண்களும் பின்னிரவில் தனியே பயணிக்கும்போது வேறு பிரச்சினைகளும் எழுகின்றன. இதுவும் உலகளாவிய சிக்கலாகவே இருக்கிறது. இவற்றை எப்படி சமாளிக்கலாம்?

4. பெண்களின் பொய் புகார்கள்: ஈ எம் ஃபார்ஸ்டரின் “பாஸேஜ் டு இந்தியா”வில் இருந்து: “Pity, wrath, and heroism filled them, but the power of putting two and two together was annihilated.” பிரிந்த காதலனைப் பழிவாங்கவோ… உறவினரை உள்ளே தள்ளவோ வல்லுறவுக் குற்றச்சாட்டுகள் உதவலாம். அந்த வகையில் எவ்வளவு நிரபராதிகள் மாட்டிக் கொண்டிருப்பார்கள்?

5. போர்னோ தளங்கள்: நம் ஒவ்வொருவர் வீட்டிலும் கத்தி வைத்திருக்கிறோம். தமிழ் சினிமா முழுக்கவே கொலைகளும் வெட்டு குத்துகளும் நிறைந்திருக்கின்றன. பாலியல் படங்கள் சுலபமாகக் கிடைப்பதால் பாலியல் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதை ஒத்துக் கொண்டால் வீட்டுக்கு வீடு அல்லது தெருவிற்கு தெரு இரத்தம் பெருக்கெடுத்து ஓடவேண்டுமோ?

6. மது அதிகம் கிடைப்பதால் மதுவருந்துபவர்கள் பெருகவில்லை. மதுவருந்தும் பணவசதியைப் பலரும் அடைந்திருப்பதால் மதுபானக் கடைகள் பெருகியிருக்கின்றன. அதே போல், கோழி அதிகம் கிடைப்பதால் கோழி சாப்பிடுபவர்கள் பெருகவில்லை. கோழி வாங்கும் சக்தியும் அடிக்கடி வாங்கும் பணவசதியையும் பலரும் பெற்றிருப்பதால், கோழிக்கடைகளும் கோழிப்பண்ணைகளும் பெருகியிருக்கின்றன. கோழி அதிகம் சாப்பிடுவதால்தான் பாலியல் வன்முறைகள் பெருகுகிறது என நிறுவலாமா?

7. பள்ளிக்காலங்களில் என்னுடைய நண்பன் நிறைய கதை சொல்வான். “நான் அவளுடன் இந்த மாதிரி இருந்தேன்” என கற்பனையும் காமமும் கலந்து புதிது புதிதாக விவரிப்பான். ஆர்வமில்லாமல் கேட்பவர்களும் கூட அவனுடைய எந்த காலட்சேபத்தையும் தவறவிடாமல் கேட்பார்கள். இந்த மாதிரி பொய்யும் புரட்டும் சொல்பவர்கள், இந்தக் காலத்திலும் ஊடகங்களிலும் கல்லூரிகளிலும் இருப்பார்கள். இவர்களைப் போன்றோரை நம்மில் எவ்வளவு பேர் தட்டிக் கேட்டு தடுத்திருக்கிறோம்? இந்த மாதிரி இட்டுக் கட்டி கிசுகிசுப்போரைத் தடுக்க சட்டத்தை விட தனி மனித செயல்பாடு அவசியமா?

8. ஐ.நா. புள்ளிவிவரத்தின் படி மூன்றில் ஒரு பெண்ணாவது பாலியல் வன்முறைக்குள்ளாகி இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு பில்லியன் பெண்கள் உலகெங்கும்….. ஆணாக எனக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இருந்ததில்லை. எப்பொழுது வீட்டிற்கு வரவேண்டும், எப்படி அடை அணிய வேண்டும், எங்கே செல்லக் கூடாது, எவ்வாறு நடக்கக்கூடாது என்று எந்த அறிவுரைகளும் வந்ததில்லை. ஆணாக இருப்பதால் மட்டுமே எனக்கு எந்த பய உணர்வும் வந்ததில்லை. ஆனால், பெண்ணால் இருப்பதால் மட்டுமே உருவாகும் அச்ச உணர்வு கலாச்சாரத்தை எப்படித் தவிர்க்கப் போகிறோம்? அவர்களை எப்பொழுது பொதுவெளியில் சுதந்திரமாகப் பேசவிட்டுக் கேட்கப் போகிறோம்?

9. பாலியல் வல்லுறவு கலாச்சாரமாக தனி மனிதன் என்ன செய்ய வேண்டும்? தனி உரையாடலில் அல்லது ஃபேஸ்புக்கில் கீழ்த்தரமான நகைச்சுவை வெளிப்பட்டால் எத்தனை பேர் அந்த நண்பரை கண்டிக்கிறோம்? எத்தனை தடவை கண்டும் காணாமலும் போய்விடுகிறோம்? சினிமாவில், தொலைக்காட்சியில் செய்யப்படும் வார்ப்புரு தோற்றங்களை எவ்வளவு பேர் கண்டிக்கிறோம்? எவ்வாறு அதையெல்லாம் மாற்றப் போகிறோம்?

Who is Who in Tamil TV Morning Shows

ஒவ்வொரு நாளும் காலையில் கன்னலுக்கு ஓரிருவர் வருகிறார்கள்.

கலைஞர் டிவியின் ‘விடியலே வா’வில் திராவிடர் கழக வரலாறு சொல்ல சுப. வீரபாண்டியனும் ”தீதும் நன்றும்” மனுஷ்யபுத்திரனும்; கூடவே குளிராடி மாட்டிக் கொண்ட டாக்டர் காளிமுத்து மாதிரி சித்த வைத்தியரும் வருகிறார். சிறப்பு விருந்தினர் நேர்காணலும் தினசரி உண்டு.

சன் தொலைக்காட்சியில் ஆன்மிகக் கதைகள் சொல்ல கி சிவகுமார்; அரட்டை அடிக்க பாரதி பாஸ்கரும் ராஜாவும்; சப்த நிமிடங்கள் சொல்ல குரல்வளமிக்க சண்முகம். வணக்கம் தமிழகத்தில் வரும் பிரபலங்கள், பெரும்பாலும் திரைத்துறை சார்ந்து இருக்கிறார்கள்.

பொதிகையில் இராமாயணத்தை வேளுக்குடியும் சிவனுக்கு இரா. செல்வக்கணபதியும்; நான்மணிக்கடிகைக்கு சாரதா நம்பி ஆரூரனும், தியான யோகம் சிந்திக்க ஜி கே பாரதியும்; ‘உயிர் யாரிடம்’ சொல்ல டாக்டர் ஜெயம் கண்ணன். தூர்தர்ஷனிலும் ஓவியரோ ஆசிரியரோ வந்து நேர்முகம் கொடுக்கிறார்கள்.

ஜெயாவில் உபன்யாசம் உண்டு. கூடவே (கமல் புகழ்) கு ஞானசம்பந்தனும் உண்டு. நான் பார்த்த நேற்று பொருளாதார வித்தகர் வந்து பங்குச்சந்தையில் முதலீட்ட அழைத்தார்.

பேரா. கு. ஞானசம்பந்தன் புத்தகங்களையும் தமிழிலக்கிய வரலாறையும் நயம்பட எடுத்துரைக்கிறார். மனுஷ்யபுத்திரனை அவரின் சட்டைத் தேர்வுகளுக்காக பார்க்க வேண்டும்; ’இவர் ஒரு காலத்தில் புதுக்கவிதை எல்லாம் எழுதினாராக்கும்’ என்று சொன்னால் நம்பமுடியாதபடி பேசுகிறார். சுப வீரபாண்டியனின் புளித்த மாவை இன்னும் ஒரு இழை கூட எவரும் திரிக்க இயலாது. சிவகுமாரை அவ்வப்போது நுழைக்கும் கம்ப ராமாயணத்திற்காக கேட்கலாம். பச் பச் பளிச்களுக்காக சண்முகத்தை தவறவிடக்கூடாது. ஆனால், டாக்டர் ஜெயம் கண்ணன் மட்டும்தான் ஃபேஸ்புக் குறித்து சொற்பொழிவாற்றுகிறார்.

இதையெல்லாம் காலங்கார்த்தாலே அலுவல் கிளம்பும் அவசரத்தில் யார் பார்க்கிறார்கள் என்பதெல்லாம் நீல்சன் சம்பந்தப்பட்ட விஷயம். ’டிக்… டிக்… டிக்’கில் வரும் கமல்ஹாசனின் விடியல் போல் பாலிமரில் வரும் திரை முன்னோட்டத்தில் துவங்கும் காலை எனக்கு பிடித்தமானது.

ஜெயமோகன் எழுதக்கூடிய கட்டுரை: விளையாட்டும் குழந்தைகளும்: Jeyamohan

அசல் கருத்து: தொலைக்காட்சியும் குழந்தைகளும்http://www.jeyamohan.in/?p=36539

இனி ஜெ. எழுதியிருக்கக் கூடிய அடுத்த பதில் இங்கே…

முந்தைய அறுவடை: நமது இலக்கியநுட்பம்

நானும் என் மனைவியும் 1992 வாக்கில் தொலைக்காட்சியில் குழந்தைகளிடம் விளையாட்டுப் போட்டிகள் உருவாக்கும் எதிர்மறை விளைவுகளைப்பற்றிய விவாதத்தைப் பார்த்தோம். விளையாட்டுச் சிறுமியாக இருந்த என் மகளுக்கு அந்த “அரட்டை அரங்கத்”தில் இருந்ததை நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தேன். எங்கள் கொல்லைப்புறத்தில் கிரிக்கெட் தேவையில்லை என்ற முடிவை அவளும் நாங்களும் சேர்ந்து எடுத்தோம். அப்போது எம்.எஸ்.தோனி சின்னக்குழந்தை. அன்றுமுதல் இன்றுவரை வீட்டில் தொலைக்காட்சி இணைப்பு இல்லை.

கிரிக்கெட் மட்டுமல்ல ஒட்டுமொத்த விளையாட்டுகளே குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் பாதகமானது. பல பெற்றோர் தங்களுக்குத் விளையாட்டுப் பித்து இருப்பதை மறைக்க ‘ஓடியாடி விளையாடினால் உடற்பயிற்சி இல்லியா? அட்ரெனலின் சுரப்பது கூட நல்லதுதானே!’ என்றெல்லாம் வாதிடுவதைக் கேட்டிருக்கிறேன். உண்மையில் விளையாட்டு எல்லாவகையிலும் எதிர்விளைவுகளை மட்டுமே உருவாக்கக்கூடியது. மைதானத்தில் விளையாட்டு இருந்தால் குழந்தைகள் அதைப் பார்ப்பார்கள். அது அவர்களுக்குத் தீங்களிக்கக்கூடியது.

காரணங்களை இவ்வாறு தொகுத்துச் சொல்லலாம். விளையாட்டு மிகப்பிரம்மாண்டமான ஒரு பொது கேளிக்கை. கோடிக்கணக்கான பேருக்கு ஒரேசமயம் அது மகிழ்வூட்டியாகவேண்டும். ஆகவே அது மிகவும் முன்னரே ஒத்துக் கொண்ட விதிப்படியே நடக்க முடியும். சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டு சிந்திப்பதை விளையாட்டுகள் முடக்கிப் போடுகின்றன.

ஆகவே விளையாட்டு அதிகம்பேர் பார்க்கக்கூடிய அந்த சராசரியான மனநிலையை உருவாக்கும். உச்சகட்ட ஊசலாட்டல் மூலம் அவற்றை அனைவரும் பார்க்கவைக்கும்.

கச்சிதமான சிறப்பாக ஆடக்கூடியவரே வெற்றிபெறுகிறார், அதற்குத்தான் அதிக கோப்பைகள் கிடைக்கும். ஆகவே அதற்குத்தான் அதிகமான நிதிமுதலீடு இருக்கும். அதுதான் பிரம்மாண்டமானதாகவும் கவர்ச்ச்சியானதாகவும் இருக்கும்.

அதிகமாக வெற்றி பெறும் அணி, அதாவது மிக அற்புதமாக ஆடுபவர் மட்டுமே ஒலிம்பிக்ஸுக்கு செல்வார். அதைத்தான் பார்க்கவேண்டிய சந்தர்ப்பம் நமக்கு அமையும்.

இதன் விளைவாக விளையாட்டை பார்ப்பவர்கள் அனைவரும் அவர்களைப் போல் விளையாட சிக்கவைக்கப்படுகிறார்கள். அவர்களின் தன்னம்பிக்கை வீழ்ச்சியடைகிறது. உடல் திறன் சராசரியில் கட்டிப்போடப்படுகின்றது.

இது மாந்தர் குலத்திற்கே மிக ஆபத்தானது. ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய சோம்பேறித்தனத்தைக் கண்டடைந்து அதை வளர்த்துக்கொள்ளவேண்டிய வயதில் சராசரித்தன்மையில் சிக்கிக்கொள்கிறார்கள். சராசரி கிட்டிப்புள்ளும் உறியடிகளும் உப்புமூட்டைகளும் மட்டும் அவர்களுக்குக் கிடைக்கின்றன. அவர்கள் சராசரிகளாக வளர்கிறார்கள்.

விளையாட்டுகள் நமக்குத் தரிசனங்களை அளிப்பதில்லை. ஆட்டகளத்தில் சிலர் கலக்குவதை மிதமிஞ்சி வலியுறுத்துகிறது அது. பந்துகளைக் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அது நம்மை பியரிலும் கோக்கோ கோலாவிலும் அடித்துச்செல்லும் தன்மை கொண்டது. மைதானத்திற்கு சென்று பாருங்கள். சிலநாட்களில் அவை உங்களை முழுமையாக உள்ளே இழுத்துக்கொள்ளும். நீங்களும் தினசரி பால் பாட்மிண்டனோ கால்பந்தோ ஆடிக்கொண்டே இருப்பீர்கள்.

ஆனால் ஒருவாரம் முழுக்க இந்த ஆட்டங்கள் மூலம் நீங்கள் பயிற்சி பெற்றது ஒரு உள்ளூர் லீக் ஆட்டத்திற்குக் கூட தகுதி இருக்காதென்பதை யோசித்தால் புரிந்துகொள்ளலாம்.

என்.எஃப்.எல், என்.பி.ஏ., ரக்பி, கால்பந்து, ஐ.பி.எல். போன்ற மேற்கத்திய ஆட்டங்கள் இன்னும் நுட்பமான வலை. அவை சர்வதேச அளவில் துடுப்பாட்டக்காரர்களின் பொதுவான பலவீனங்கள் விருப்பங்கள் ஆகியவற்றை big data மூலம் ஆராய்ந்து மேம்படுத்தப்பட்டு அமைக்கப்பட்டவை. ஆகவே அணிகளை மிக பயங்கரமானப் சரிசமமான போட்டியாக கொண்டு சென்றுவிடுகின்றன.

இந்நிகழ்ச்சிகளைப் பாருங்கள். சில அடிப்படைக்கூறுகள் இருக்கும். மிக பயங்கரமான வலிமை கொண்ட சக்திகளை பலவீனமான, குழந்தைகளான சிலர் எதிர்த்து வெல்வது போல. சாகசம் மூலம் புதையல்களை அடைவதுபோல. மறைமுகமாக இவை குழந்தைகளின் போர்க்குணங்களையே தொட்டு வளர்க்கின்றன. அந்தப் போர்க்குணம் குழந்தைக்கு அதன் தங்கிவாழ்தலுக்காக, தாக்குப்பிடித்தலுக்காக இயற்கையால் வழங்கப்பட்ட ஆயுதம். காமம் போலவே அடிப்படையான ஓர் இச்சை அது. அதை இவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இதற்கு அப்பால் இன்னும் முக்கியமான காரணம் ஒன்று உண்டு. உடல் விளையாட்டு அடிப்படையில் கல்விக்கு எதிரானது. கல்வி என்பது மொழியுடன் சம்பந்தப்பட்டது என்றே நான் என்றும் நினைத்து வருகிறேன். சமீபத்தைய ஆய்வுகள் இதை உறுதிசெய்கின்றன. மொழியில்தான் சிந்தனை நிகழ்கிறது. ஓவியம் இசை போன்ற கலைகளுக்குக் கூட கொள்கைகள் மொழியாகவே அகத்தில் பதியமுடியும்.

மொழிவழிக்கல்விதான் மூளையின் இயல்பான செயல்பாடு. நாம் அறிந்தவற்றை நாம் நினைப்பது மொழியில்தான். ஒன்றை நாம் நம் மொழியில் சொல்லத்தெரிந்திருந்தால்தான் நாம் அதை அறிந்திருக்கிறோம் என்று பொருள்.

விளையாட்டுகள் மொழித்திறனையே அழிக்கின்றன. மொழியில் நுழைந்து தன் சொந்த அகமொழியைக் கண்டடையவேண்டிய காலகட்டத்தில் குழந்தை இந்தக் விளையாட்டுகளில் நுழைவதனால் அது சிந்திக்கத்தெரியாததாக ஆகிவிடுகிறது.

கடைசியாக, விளையாட்டு போன்ற ஆட்படுத்தும் தன்மை கொண்ட சாதனம் குழந்தைக்கு பிறருடனான உறவுகளை இல்லாமலாக்குகிறது. விளையாட்டில் எதிர் அணி என்கிறோம், போட்டியாளர் என்கிறோம். “யாதும் ஊரே! யாவரும் கேளிர்” என்னும் தொன்மையான பண்பாட்டில் வாழ்ந்த சமூகம், களரியிலும் சடுகுடுவிலும் சண்டை போடுவது ஆபத்தான போக்கு.

என் புரிதலில் செயலை விட, ஆக்கத்தை விட குழந்தைகள் பேசிக்கொண்டிருக்க மிகவும் பிரியப்படக்கூடியவை. ‘கதையளப்பதை’ விரும்பாத குழந்தை இல்லை. குழந்தைகள் கணினியில் விளையாடுவதும் அவர்கள் இனையத்தில் அரட்டையடிப்பதும் மிக மிக முக்கியம். அதனூடாகவே குழந்தை அதைச்சூழ்ந்திருக்கும் சமூக வலைப்பின்னலுடன் உறவு கொள்கிறது. அதைப்புரிந்துகொண்டு கையாளக் கற்கிறது. மைன்கிராஃப்டிலோ போர்ட்டல்-இலோ தன் இடத்தைக் கண்டடைகிறது.

நான் இளமையிலேயே என் குழந்தைகளுடன் மணிக்கணக்காக கணிவிளையாட்டுகளில் இருந்தேன். அவர்கள் அடுத்தடுத்த கட்டங்களுக்குப் போய்க்கொண்டே இருப்பார்கள். குழந்தைகள் அவர்களின் உண்மையான உலகை நம்மிடம் அமைத்துக் காட்டுவார்கள். கூடவே ஒரு கற்பனை உலகையும் நமக்காக உருவாக்கிக் காட்டுவார்கள். கற்பனை நகரம், கற்பனை மனிதர்கள். அது அவர்களின் ஆளுமையின் மிக முக்கியமான அம்சம். அவர்களைப் புரிந்துகொள்வதற்கான வாசல் அது. கற்பனையில் கடைசி பந்து சிக்ஸர் அடிக்காதவர் இருக்கிறோமா? கனவுகளில் இறுதி நிமிடத்தில் கோல் அடிக்காதவர் உண்டா? அதை நேரடி விளையாட்டுகள் உடைக்கின்றன.

உரையாடல்மூலம் நாம் குழந்தைகளை அறிகிறோம். அவை நம்மை அறிகின்றன. இவ்வாறுதான் ஃபேஸ்புக் உருவாகிறது. சமூக வலைப்பின்னல் உருவாக்கிறது. அதை விளையாட்டு அடிமைத்தனம் அழிக்கிறது.

விளையாட்டு குழந்தைகளை கணி உலகிலிருந்து அன்னியப்படுத்தும். என்ன சொன்னாலும் இன்று கணினிகளே வருங்காலத்திற்கான ஒரே வழி. நாளெல்லாம் விளையாடும் ஒருவன் முட்டாளாகத்தான் இருப்பான். அரைமணிநேரம் எதையாவது ட்விட்டரில் வாசித்தால்கூட அவனுடைய அறிவிலும் ரசனையிலும் பெரும் வளர்ச்சி காணப்படும்.

ஏனென்றால் கணினிகள் நம்மை செயல்படச்செய்கின்றன. நாம் மேயும்போது அந்த நிலைத்தகவல் நம் கற்பனையாலும் நம் தர்க்கத்தாலும் நாம்தான் உருவாக்கிக்கொள்கிறோம். அது ஓர் கண்டுபிடிப்பு. எந்த Call of Duty® ஆக இருக்கட்டும். நம்மை மேலும் தகுதிகொண்டவர்களாகவே ஆக்கும்.

ஆனால் விளையாடுகையில், எந்த மகத்தான நிகழ்ச்சியானாலும், நாம் அதற்கு செல்வதில்லை. வியர்வை நம் மீது அருவிபோல கொட்டிக்கொண்டிருக்கிறது. அதன் வழியாக நாம் சில கலோரிகளைக் களைந்து உப்பை மட்டுமே அடைகிறோம். நாம் அதன் வழியாக தகுதிப்படுத்திக்கொண்டு ரஞ்சி டிராபிக்கு செல்வதில்லை.

கூகிள்+ முடிவில்லாதவை. உலக ஞானமே அவற்றில் உள்ளது. அவை அளிக்கும் தெரிவுக்கான சாத்தியங்க்ள் முடிவில்லாதவை. சமூக வலைப்பின்னலில் நுழையும் குழந்தை தான் யாரென தானே கண்டுகொள்ளும். சிந்திக்கவும் உரையாடவும் கற்றுக்கொள்ளும்.

அதேசமயம் விளையாட்டை முழுக்க நிராகரிக்கவும் முடியாது. விளையாட்டிற்குப்பதிலாக ரவி சாஸ்திரி ஆட்டங்களை, சித்துவின் வருணணைகளை அவர்களுக்கு யூடியிபில் கண்டுபிடித்துக்கொடுத்தேன். மிகநல்ல ஒரு ப்ளே லிஸ்ட் (play list) அவர்களிடம் உள்ளது. அது அவர்களுக்கு play. இன்று உலகின் மிகத்தரமான புதிய கணிக்கட்டிடம் எது என என் மகளிடம்தான் நான் கேட்டறிகிறேன். இன்று வந்த எந்த மைண்க்ராஃப்ட் கலைத்தரம் மிக்கது என என் மகளிடம்தான் தெரிந்துகொள்கிறேன்.

என் இரு குழந்தைகளும் மகத்தான கணி பயனர்கள். அதற்கு நான் விளையாட்டை விலக்கியதுதான் காரணம் என உறுதியாக நம்புகிறேன்.

நன்றி: ஜெ.

Tamil Thinkers Identity: Generalization vs Speculation: Inventing the Brand

அப்பாவை டிவி பார்ப்பவர் என்று சுருக்கலாம். அம்மா வெறும் சமையற்காரி. மகளோ மூளை வளர்ச்சி பெறாதவள். மனைவி பாலியல் தொழிலாளி.

இப்படி அடைமொழிக்குள்ளும் உருவகங்களுக்கும் நடுவே நிஜ வாழ்க்கை சிக்கிக் கொள்வதில்லை. ஆனால், பெரும்பாலான கலை வடிவங்களின் தமிழ் விமர்சனங்கள் அடைபட்டிருக்கிறது.

ஜெயமோகன் இந்துத்வாவாதி. சாரு நிவேதிதா திருடர். எஸ் ராமகிருஷ்ணன் தேய்வழக்கு. காலச்சுவடு கண்ணன் பிசினஸ்மேன். ’அட்டகத்தி’ தலித் காவியம்; உயிர்மை இலக்கிய பத்திரிகை; மக்கள் தொலைக்காட்சி தமிழை வாழவைக்கிறது.

சிக்குண்டவர்களே புதியவர்களை வலைக்குள் நிறுத்து வைப்பது உப வழக்கம். பெருநிதிக் கிழார், டூரிஸ்ட் இலக்கியவாதி என்று பட்டங்கள் கொடுத்து முடக்குவதும் வாடிக்கை.

திரைப்படத்திற்கு சாயம் பூசுதல், எழுத்தாளர்களை தொலைக்காட்சி சவுண்ட் பைட் பார்ட்டி ஆக்குவது, போன்றவை சந்தைப்படுத்தலின் அங்கம். கருணாநிதி மோதிரம் வாங்கி அண்ணா கையால் போட்டுக் கொண்டது போல் தன் ஆக்கங்களை தானே பிராண்டிங் செய்வது எல்லாமே மார்க்கெடிங்கில் நியாயம்.

மோஸ்தர்களை மட்டுமே முன்னிறுத்தும் தமிழக சூழலுக்கு, போதிய அளவு மாற்று சிந்தனையாளர்கள் இல்லாதது முதல் காரணம். எதிர்கருத்து சொல்பவர்களுக்கு ஆங்கில எழுத்துகள் சோறு போடுகிறது என்பது முக்கிய காரணம்.

உன்னால் முடியும்: ஸ்டார் விஜய் டிவி நிகழ்ச்சி

நேர்காணல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. தூர்தர்ஷனில் ‘மலரும் நினைவுகள்’ நிகழ்ச்சியை தவற விட்டதில்லை. அப்புறமாக சன் டிவி வந்த பிறகு அலுக்க அலுக்க திரை நட்சத்திரங்கள், டெக்னிஷியன்கள் பேட்டி கிடைத்தது. எப்படி இருந்தாலும் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என்று கே விஷ்வநாத் வந்தாலும் சரி… இயக்குநர் கே பாலச்சந்தர் வந்தாலும் சரி… பார்த்து விடுவேன்.

அந்தப் பட்டியலில் சமீபத்திய வரவு – ஸ்டார் விஜய் வழங்கும் ‘உன்னால் முடியும்’.

உலக அளவின் தங்கள் நிறுவனத்தை புகழ் பெற வைத்த நிறுவனர்கள் வருகிறார்கள். நம்ம மொழியில் பேசுகிறார்கள். சந்தையாக்கத்தையும் விற்றுத் தள்ளி வென்ற ரகசியங்களையும் கதைகளையும் பகிர்கிறார்கள். தமிழில் இந்த மாதிரி முயற்சி வரவேற்கத்தக்கது. பலரை ஊக்கப்படுத்தும்.

இதுவரை இடம்பெற்ற ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியான தொகுப்பு:

யூனிவெர்சல் சதீஷ் பாபு: Sathish Babu from UniverCell

ஆச்சி மசாலா பதம்சிங் ஐஸக்: Padmasingh Isaac, the founder of Aachi

அருண் எக்ஸெல்லோ சுரேஷ்: Suresh, the President of Arun Excello

ஹட்சன் சந்திரமோகன்: Chandramohan, the President of Hatsun

இதயம் நல்லெண்ணெய முத்து: Muthu, the President of Idhayam

நேச்சர் பவர் சோப் தனபால்: Dhanapal, the President of Power Soap

Unnal Mudiyum – A interview with the successful personalities, the secrets behind their success.

தொலைக்காட்சி – சீரியத்துவம்

முந்தைய ட்வீட்ஸ்: நியு யார்க் நகரத்துவம்

Power Star: Dr. Srinivasan

சன் தொலைக்காட்சி: பின்னணி, பிசினஸ், பாபா

செபாஸ்டியன் – பொங்கல் நிகழ்ச்சி: தேசிய நெடுஞ்சாலை

சபாஸ்டியன்: 17ஆம் அறிவு: ஆனந்தத் தொல்லை

காப்டன் டிவி: மன்னவன்

கேப்டன் டிவி: தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி

கலக்கல் சினிமா: லத்திகா

புதிய தலைமுறை: மலை போன்ற மனதைரியம்

விஜய் டிவி