Monthly Archives: மார்ச் 2015

உன்னப் பெத்ததுக்கு உங்கப்பா அம்மா நைட் ஷோ போயிருக்கலாம்டா!

Cat_Critic

மகள் எட்டாம் வகுப்பு படிக்கிறாள். மகளைப் பள்ளிக்கூடத்தில் இருந்து பெற்று வருவதற்காக பள்ளிக்கு சென்றிருந்தேன். அவளுக்கு ஏதோ வேலை இருந்தது. பத்து நிமிடம் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

காத்திருக்கும் அறையில், மகளின் வகுப்பில் படிக்கும், சக மாணவனைப் பார்த்தேன். அவனுக்கு வகுப்பு முடிந்துவிட்டது. பெற்றோருக்காகக் காத்திருக்கிறான். காத்திருக்கும் சமயத்தில் பல சமயம் அவனைப் பார்த்திருக்கிறேன். வீட்டுப்பாடம் செய்து கொண்டிருப்பான். கடகடவென்று எழுதுவான். அன்று ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ என்று எழுதிக் கொண்டே இருந்தான். ஒரு முறை… இரு முறை… ஐந்தாம் முறை எழுதும்போது பொறுக்கவில்லை.

கேட்டுவிட்டேன். “ஏன் இப்படி ஏபிசிடி… எழுதிக் கொண்டிருக்கிறாய்? செல்பேசி வைத்திருக்கிறாய். அதில் ஏதாவது விளையாடலாம்; அரட்டை அடிக்கலாம். உன்னுடைய புத்தகப் பையில் கதைப் புத்தகம் இருக்கிறது. அதையாவது வாசிக்கலாம். நாளைக்கு அறிவியல் பரீட்சை இருக்கிறது. அதற்காவது படிக்கலாம். அதையெல்லாம் விட்டுட்டு… எதற்கு ஏபிசிடி…?”

“எனக்கு இடது கைப் பழக்கமாச்சே! இத்தனை நாளாப் பார்க்கறீங்களே? இதைக் கூட கவனிச்சது இல்லியா? வலது கையிலும் எழுதிப் பழக்கிக் கொள்ளலாம்னு இந்தக் கையில் எழுதிப் பார்க்கிறேன். Ambidextrous கேள்விப்பட்டதில்லையா? லியனார்டோ டாவின்சி, ஐன்ஸ்டீன், லெப்ரான் ஜேம்ஸ், பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்… எல்லாருமே இரண்டு கையிலும் சமமாக உபயோகிக்கக் கூடியவர்கள். நானும் அப்படி ஆகப் பார்க்கிறேன்.” என்றான்.

அது மாதிரி நீங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் என்று நிலைத்தகவல் எழுதினால், ”நீயெல்லாம் எழுதறதுக்கு, உங்க அப்பா அம்மா நைட் ஷோ போயிருக்கலாம்டா!” என்று எவர் எப்படி பாராட்டினாலும், தொடர்ந்து எழுதிப் பழகுங்கள். நீங்கள் எழுதுவதைப் பார்த்து, “அட… நான் இதை விட நன்றாக எழுதுவேனே!” என்று பலரை எழுத்துத்துறைக்கு கொண்டுவரும் உற்சாக டானிக் ஆக நீங்கள் இருக்கிறீர்கள்.

சிங்கப்பூர்: முதலிய நாடா? கம்யூனிசத் தோட்டமா?

எகனாமிஸ்ட் பத்திரிகையையும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தினசரியையும் மட்டுமே வாசித்துக் கொண்டிருந்தால், சிங்கப்பூர் தடையிலா வணிகக் கொள்கை கொண்டிருக்கிறது என நினைப்போம். அயல்நாட்டினரிடம் இருந்து மூலதனத்தை, இரு கரம் கொண்டு சிரம் தாழ்த்தி வரவேற்பதாகக் கேட்டிருப்போம். இதனால் வரிக் கட்டுப் பாடற்ற வாணிபமும் வியாபாரத் தடையின்மையும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு வித்திட்டன என உறுதியான தீர்மானத்திற்கு வந்திருப்போம்.

சிந்தனைக்கு சில தகவல்களும் எண்ணங்களும்:

  1. சிங்கப்பூரின் நிலம் அனைத்தும் அரசாங்கத்திற்கே, முழுக்க முழுக்க சொந்தம்.
  2. உங்களுக்கு வீடு வாடகைக்கு வேண்டுமானால், அரசுத்துறை சார்ந்த ’குடியமைப்பு அபிவிருத்தி குழு’விடம் இருந்து பெறலாம். – கிட்டத்தட்ட 85% குடியிருப்புகளை நிர்வாகமே தருகிறது.
  3. உலக அளவில் வெறும் பத்து சதவிகிதமே அரசு சார்ந்த நிறுவனங்களால் நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது. சிங்கப்பூரில் இது உலக அளவை விட இரண்டு மடங்கு அதிகம்! நடுவண் அரசின் நான்கில் ஒரு பங்கு எடுமுதல் பயன்பாட்டை அரசாங்க அமைப்புகளே உருவாக்குகிறது.
  4. சென்னை, மும்பை போன்ற நகரங்களின் அளவோடும், மக்கள் தொகையோடும் சிங்கப்பூர் நகரத்தையும் ஒப்பிடலாம்:

 

நகரம்

சிங்கப்பூர்

மும்பை

சென்னை

1. நிலப்பரப்பு 277 ச.மை. 233 ச.மை. 164.8 ச.மை.
2. மக்கள்தொகை 5,469,700 12,478,447 4,681,087
3. மக்கள் தொகை அடர்த்தி 19,725/ச.மை. 54,000/ச.மை. 28,000/ச.மை.
4. தண்ணீர் போத்தலின் விலை (0.33 லிட்டர் புட்டி) 53.80 14.50 14.50
5. பியர் விலை (0.5 லிட்டர் மது) 362.53 60.00 60.00
6. மின்சார கட்டணம்(சராசரி) 9,629.71 1,483.33 1,483.33

இதை சோஷலிஸம் என்பதா? மார்க்சிஸம் என்பதா? கீனிசிய கோட்பாடு என்பதா?புதுச்செவ்வியல்வாதம் (neoclassicism) என்பதா?

யாராவது, சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ கொண்டிருந்த சித்தாந்தம் ‘இதுதான்!’ என்று அறுதியிட்டு வாதிட்டால், அந்த நபருக்கு நிதிநிலைக் கொள்கை, பொருளாதாரக் கருத்தியல் ஆகியவற்றில் எதுவும் தெரியாது என்பதை மட்டும் உறுதியாக அறியலாம்.

சாது மிரண்டால்: சிக்கல் பின்னல்

வாசிக்க: “Labyrinth” – The New Yorker

Amelia Gray is the author of the novel “Threats” and the short-story collection “Gutshot,” which will be published by FSG Originals in April. Amelia Gray’s “Labyrinth” was originally published in the February 16, 2015 issue of The New Yorker.

Amelia+Gray_Labyrinth_New_Yorker_Fiction_Story

அமீலியா கிரே எழுதியதில் இது சற்றே சாதாரணமான கதை. பழங்காலத் தொன்மத்தை, நவீன யுகத்திற்கு ஏற்ப சொல்வது அமீலியாவின் வழக்கம். இந்தக் கதையும் அவ்வாறே முன்னுமொரு யுகத்தில் நம்பப்பட்ட கதையை, தற்காலச் சூழலில் விவரிக்கிறது.

சிக்கல்வழி என்னும் இந்தக் கதைக்கு கிரேக்கப் புராணத்தில் வரும் தீஸியஸ் கதை தெரிந்திருப்பது அவசியம். ஹிந்து மதத்தில் வரும் நந்தி போல் கிரேக்க ஹெல்லனிய தொன்மத்தில் மினடோர் இருக்கிறான். கீழே அவனைப் பார்க்கலாம். பாதி மனிதன்; பாதி எருது.

minotaur-Nandhi_Theseus_Greek_Hellenic_Mythology_Apis_Egypt

பேரரசன் மினோஸ் என்பவருக்கும் அவரின் அரசியார் ஆன பாஸிஃபே என்பவருக்கும் மகனாகப் பிறக்கிறார் மினொடார். சூஸ் (Zeus) அனுப்பிய காளையோடு அரசி பாஸிஃபே உறவு கொண்டு, அந்தக் கள்ள உறவினால் ரிஷபத்தின் தலையும் மானுட உடலுமாகப் பிறக்கிறான் மினொடார். இதைக் கண்டு அரசன் மினோஸ் வெட்கம் கொண்டு, வினோத மினொடார் குழந்தையை ’இடர்ப்பின்னல்’ (labyrinth)ல் அடைத்து வைக்கிறான்.

நாட்டில் குற்றம் புரிபவர்களையும், போரில் சிறைப் பிடித்தவர்களையும் இந்த இடர்ப் பின்னலுக்குள் அனுப்பி வைப்பான் அரசன் மினோஸ். அவர்களால், அந்த சிக்கலில் இருந்து வெளியே வர இயலாது. மாட்டிக் கொள்வார்கள்; முழிப்பார்கள். இந்த முரட்டுக் குழந்தைக்கு தீனியாவார்கள்.

காலம் ஓடுகிறது. அரசன் மினோஸின் இன்னொரு மகன் ஆன இளவரசன் ஆண்ட்ரோஜியஸ் (Androgeus) ஒலிம்பிக்ஸில் கலந்துகொள்ளச் செல்கிறான். ஏஜியஸ் (Aegeus) அரசனின் சொந்த ஊரில் ஏத்தனிய (Panathenaic) போட்டிகள் நடக்கின்றன. போட்டிக்குச் சென்ற இடத்தில் தன்னுடைய அம்மாவை முறைதவறி உறவு கொண்ட காளையோடு மராத்தான் ஓட்டம் ஓடுகிறான். அந்தக் காளை, மினொடாரின் தந்தை. மினொடாரின் தந்தை, இளவரசன் ஆன்டிரோஜியஸைக் கொன்று விடுகிறது.

ஏஜியஸ் அரசனின் ஆளுகைக்கு உட்பட்ட இடத்தில் நடந்த இந்தப் பலிக்கு பிராயச்சித்தமாக ஒவ்வொரு வருடமும் ஏழு ஆண்களையும், ஏழு பெண்களையும் பலியாகத் தருமாறு அரசன் மினோஸ் ஒப்பந்தம் போடுகிறான். ஏஜியஸ் அரசனும், இந்த பலிக்கடாக்களை மினோடார் இருக்கும் சிக்கல் வளைக்குள் அனுப்பி இரையாக்குகிறான்.

மகாபாரதத்தில் பீமனின் பகாசுர வதம் நினைவுக்கு வரலாம். ஏகசக்ர நகரத்தில் பாண்டவர்கள் தங்கியிருந்தபோது பீமனால் பகாசுர வதம் நடைபெற்றது. பகன் என்னும் அசுரன் இந்த நகரத்தை ஒட்டிய மலையடிவாரத்தில் இருந்துகொண்டு ஊரில் உள்ள அவ்வளவு பேரையும் அடித்துக் கொன்று ஊரையே ரணகளமாக்கியிருந்தான். இதனால் அவர்கள் ஒன்று திரண்டு பகாசுரனை சந்தித்து ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி பகாசுரன் பசிக்கு உணவாக “எள்ளு அன்னம், மூன்று வகையான பருப்பு உருண்டைகள், பொரி, அப்பம், கள், சாராயக் குடங்கள், கரடி, பன்றி மாமிசம், கறுப்பு நிறம் கொண்ட இரண்டு காளைமாடுகள், ஒரு நரனாகிய மனிதன்” என்று ஒரு பட்டியலை தயார்செய்து தினமும் வேளை தவறாமல் அனுப்பி வைப்பதாக ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தனர்.

பீமன் வண்டி நிறைய உணவு இருக்க அந்த வண்டியை ஓட்டிக்கொண்டு மலையடிவாரத்துக்கு சென்று, பகாசுரனையும் யுத்தம் செய்ய அழைத்து அவனோடு மோதி, அவன் குடலை உருவி மாலையாகவே போட்டுக்கொள்கிறான். குடல் மாலையோடு பகாசுரனை தலைக்கு மேல் தூக்கி வந்து ஊர் எல்லையில் கொண்டுவந்து போட, ஊரே ஊர்வலம் போல வந்து இறந்துகிடந்த பகாசுரனைப் பார்த்து மகிழ்கிறது.

ஆனால், கிரேக்கக் கதை கொஞ்சம் மாறுபடுகிறது.

இரண்டாண்டுகளாக ஏஜியஸ் அரசன் தன்னுடைய குடிமக்களை அனுப்பி வைக்கிறான். மூன்றாம் ஆண்டு ஏஜியஸ் அரசனின் மகன் தீஸியஸ் (Theseus) “என்னை அனுப்பு! அந்த அதிகாரநந்தியைக் கொல்கிறேன்!” எனச் சூளூரைக்கிறான்.

கடலில் செல்வதற்கு முன் கடைசியாகச் சொல்கிறான். “நான் வெற்றியோடு திரும்பினால், இந்தப் பாய்மரப் படகில் வெள்ளை நிறப் பாய் பறக்கும். மினாடொரிடம் பலியாகி விட்டால், கறுப்பு நிறப் பாய் இருக்கும்! அதை வைத்து உன்னைக் காப்பாற்றிக் கொள்!” என முன் ஜாக்கிரதையாக இருக்குமாறு சொல்லியும் செல்கிறான்.

மினொடாருக்கு ஏரியாட்னி (Ariadne) என்னும் மகள் இருக்கிறாள். எல்லா இளவரசிகளையும் போலவே, இவளும் பேரழகி. ஆண்வாடையே பார்க்காமல் வளர்ந்தவள். வந்த ஒன்றிரண்டு ஆண்களும் அப்பா மினொடாருக்கு இறையாகிப் போனவர்கள். தீஸியஸைக் கண்டதும் காதல் வருகிறது. தீஸியஸிற்கு மினொடார் இருக்கும் சிக்கல் வளையின் நுட்பங்களைச் சொல்கிறாள்.

ஒரு நூற்கண்டைக் கொடுக்கிறாள். உள்ளே நுழைவது எளிது. நடுவை அடைந்து விடுவதும் எளிது. மினோடாரை கொன்று விடுவது கூட எளிது. ஆனால், கொன்ற பிறகு எவ்வாறு வெளியேறுவது? அபிமன்யு போல் சக்கர வியூகத்தை பிளந்து கொண்டு நட்ட நடு வலைப்பின்னலில் வந்து விடலாம். அந்த இடர்ப்பின்னலில் இருந்து சுருக்கே வெளிப்பாதை கண்டுகொள்வது எவ்வாறு? அந்த நூற்கண்டை வைத்து, உள்ளே வந்த வழியை அடையாளம் காணலாம். நூற்கண்டின் வாலைப் பிடித்தால், வெளிச்சம் கிட்டும் என்கிறாள்.

அவனும் இளாவரசி ஏரியாட்னி சொற்படியே நடக்கிறான். நூலைப் பிரித்துப் போட்டுக் கொண்டே இடர்ப்பின்னல் உள் செல்கிறான். Mazerunner படம் போல் இருக்கிறது. மினொடார் நந்திதேவரை வீழ்த்துகிறான். நூல் போட்ட பாதையிலேயே வெளி வந்து இளவரசி ஏரியாட்னியின் கைப்பிடிக்கிறான்.

இங்கே சுபம் போட்டிருக்கலாம். ஆனால், கதை நீள்கிறது.

வெற்றிக் கொடி கட்டிய தீஸியஸ் படகை நடுவில் இளைப்பாறலுக்காக நக்ஸோஸ் (Naxos) தீவில் நிறுத்துகிறான். உல்லாசமாகப் பொழுது போகிறது. விடியற்காலையில் எழுந்து படகை செலுத்துகிறான். இளவரசி ஏரியாட்னியை தீவிலேயே மறந்து (?!?) விட்டுவிடுகிறான். அவளைப் பிரிந்த துக்கம் தாளாது, தன்னுடையக் கப்பலில் கறுப்புக் கொடியைப் பறக்கவிட்டுத் திரும்புகிறான்.

கறுப்புப் பாய்மரத்தை பார்த்த அப்பா ஏஜியஸ், மினோடார் வருகிறான் என பயந்து, கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்கிறான்.

இப்பொழுது, மீண்டும் நியு யார்க்கர் கதைக்கே வந்துவிடலாம். அதற்கு முன் எனக்கு ஏன் அமீலியா கிரே பிடிக்கும் என்பதைச் சொல்லிவிடுகிறேன்.

நியு யார்க்கர் பேட்டியில் அமீலியா இவ்வாறு சொல்கிறார்: “நான் புராணத்திலும் பைபிளிலும் தொன்மக் கதைகளிலும் வளர்ந்தவள். எந்தப் புத்தகத்தை எடுத்தாலும், அதில் உள்ள மிக மிகச் சிறியக் கதையில்தான் படிக்கத் துவங்குவேன். குறைந்த வார்த்தைகளில் என்ன சொல்ல முடியும்? அதை எப்படி இந்தக் கதாசிரியர் சொல்கிறார்? பெரிய நாவல் எழுதும்போது கூட குட்டி விஷயங்களில் தனித்து நிற்கும் காட்சிப்பரப்பைக் கண்டுகொள்வதில் தனி சுகம் கிடைக்கிறது!”

என்னதான் ஜெயமோகனைக் கும்பிட்டாலும், இந்த மாதிரி சுறுக் புனைவுகள் தரும் சுகம் அலாதியானது.

Amelia Gray on October 28, 2010

உள்ளுர் திருவிழாவில் நியு யார்க்கர் கதை துவங்குகிறது. ரங்க ராட்டினம் ஒரு புறம். விதவிதமான தின்பண்டங்கள் இன்னொரு புறம். வருடா வருடம் நடக்கும் அறுவடைக் கொண்டாட்டம். அதன் ஒரு அங்கமாக மனிதனை விட உயரமாக வளர்ந்து இருக்கும் கதிர்களின் நடுவே கண்ணாமூச்சி விளையாட்டு இருக்கிறது. இந்த வருடம் அது கிடையாது.

ஒரு இடத்தில் துவங்கி, இன்னொரு இடத்தில் முடியும் புதிர்பாதை (corn maze) கிடையாது. வாழ்க்கை போல், இதுதான் ஆரம்பம், இது நடுப்பகுதி, இது இறுதி இடம் என்று சென்று முடிக்க முடியாது. இந்த வருடம் கதையின் தலைப்பில் வரும் ‘சுருள் வளைவு சிக்கல் அமைப்பு’ (labyrinth). இதன் மையத்தை அடைந்தால் “உங்களுக்கு வாழ்க்கையில் என்ன வேண்டுமோ, அதை உணர்வீர்கள்!” என்கிறார், இந்த அமைப்பைக் கட்டியவர்.

எவருமே அந்தச் சுழலுக்குள் செல்ல விரும்பவில்லை. தலையை எதற்கு தேவையில்லாமல் நுழைக்க வேண்டும்? வழக்கம் போல், எல்லா வருடங்களும் போல், கூட்டம் கூட்டமாக, மந்தை மந்தையாக, சாரி சாரியாக, ஒன்று சேர்ந்து, ஒரு பாதையில் செல்வோம். நடுவே வழி தெரியாமல் தொலைந்து போவோம். எல்லோருடனும், ஒன்றாக வெளியேறுவோம். அதைத்தான் ஆசைப்படுகிறோம் என்கிறார்கள்.

சுழல்பாதையைக் கட்டியவனுக்கோ கோபம்; அப்படியே நிறைய வருத்தம்; கூடவே கழிவிறக்கம். என்னடா இது! ஒருவருக்குக் கூடவா, இந்தப் பாதைக்குள் நுழைந்து பார்க்க திராணி இல்லை! எதற்காக ஆசைப்படுகிறோம் என்பதைக் கண்டு அடைவதுதானே, இந்தச் சுழலின் நோக்கம்? அதைச் செய்து பார்க்காமல், ஒதுங்கி, கரையிலேயே தேங்கி இருக்கிறார்களே!

கரையிலேயேத் தேங்கி இருக்கிறோம் என்று பிறர் சொல்வதை நாம் ஏன் குற்றமாகப் பார்க்கிறோம்? எதற்காக, யாருக்கு நிரூபிப்பதற்காக எந்தவொரு விஷயத்தையும் கையில் எடுக்கிறோம்? மற்றவர்களின் சான்றிதழுக்காகத்தான் போட்டிகளில் குதிக்கிறோமா?

கோட்டையில் ஏறி கொடியை நாட்டியபின், கீழிறங்கும் வித்தை உங்களுக்குத் தெரியுமா? சுழலை வெற்றிகரமாக முடித்துவிட்டபின், அந்த சுழலை முழுமையாகப் புரிந்துகொண்டபின், அதைவிட்டு, வெளியேற முடியுமா?

இந்தக் கதையைப் படித்தபின் உங்களுக்கு என்ன கேள்விகள் தோன்றின…?

சரி… இந்த சாதாரணக் கதையை நியு யார்க்கர் ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? இரு பதிப்பாசிரியர்களின் உரையாடலை இங்கேக் காணலாம்: