Today’s News & Analysis:
- LTTE’s Airforce starts Flight Attacks « தரவைப் பகுதியில் விமானத் தாக்குதல்
- LTTE air power threat to entire South Asian region « வானில் எழுந்த புதிய கவலை
June 30, 2005 (Tamiloviam)
இந்தியாவும் வான்புலிகளும்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவால் வளர்த்து விடப்பட்ட இயக்கம் அல்-கெய்தா. அதே போல், இந்தியாவால் ஆதரிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இயக்கம் எல்.டி.டி.ஈ. உலக வர்த்தக மையத்தை ஒஸாமா பின் லாடன் தாக்கியது போல், மிகப் பெரிய பேரழிவு எதையும் விடுதலைப் புலிகள் இந்தியாவுக்கு நிகழ்த்தவில்லை.
ஆனால், அவ்வாறான தாக்குதலை செய்யக்கூடிய வாய்ப்புகளை விடுதலலப் புலிகள் மேம்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றார்கள். விடுதலைப் புலிகள் துவக்கியிருக்கும் விமானப் படை, செப். 11 போன்ற தாக்குதல்களைத் தொடுக்கும் வலிமையை அவர்களுக்குத் தந்துள்ளதாக இந்தியா டுடே (தமிழ்) ஜூன் 8 கட்டுரை விவரிக்கிறது.
தாய்வான் பதினெட்டு பில்லியன் டாலர்களுக்கு அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்கிறது. தாய்வானை நோக்கி சீனா 610 ஏவுகணைகளை குறி வைத்திருப்பதினாலேயே, தாய்வானின் இராணுவ பட்ஜெட் ஏறுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரையும் சிறையில் வைத்து வாட்டும் மியான்மருக்கு இங்கிலாந்து தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இதே போல், விடுதலைப் புலிகளை பலப்படுத்துவதன் மூலம், இலங்கையும் இந்தியாவும், அமெரிக்காவிடமிருந்தும் இங்கிலாந்திடமிருந்தும் அதிநவீன தற்காப்பு தொழில்நுட்பத்திற்காக செலவிட ஆரம்பிக்கும்.
இலங்கையின் பாதுகாப்புச் செலவீனம் 1990-ஆம் ஆண்டு 550 மில்லியன் இலங்கை ரூபாவாக (ஒரு இந்திய ரூபாய் = 2.3 இலங்கை ரூபாய்) இருந்திருக்கிறது. 1992-ஆம் ஆண்டு 2000 மில்லியனாக உயர்ந்தது என ரோஹான் குணரத்தினாவின் குறிப்பு கூறுவதாக ‘ஈழப் போரட்டத்தில் எனது சாட்சிய’த்தில் சி. புஸ்பராஜா எழுதுகிறார். அவரே தொடர்ந்து, ‘வேறொரு குறிப்பு 1981-ஆம் ஆண்டு 661 மில்லியனாக இருந்த செலவீனம் 1992-ஆம் ஆண்டு 18,058 மில்லியனாக உயர்ந்தது’ எனக் கூறுவதாகவும் சொல்கிறார்.
தரைப்படையும் கப்பல் படையும் ஏற்கனவே கொண்டிருந்த புலிகள், இப்பொழுது விமானப்படையையும் சேர்த்துக் கொண்டதால், முப்படைகளும் கொண்ட ஒரே கெரில்லா அமைப்பாக இருக்கிறார்கள். ஸெக்கில் தயாரான ஸிலின் ஜீ-143 (ZLIN Z 143) விமானங்கள் பல உபயோகங்கள் கொண்டது. விமான ஓட்டுனர் பயிற்சிக்கும் பயன்படும். அதிரடியாக சென்னை வரை பறந்து சென்று, காரியங்களை முடித்துவரவும் உபயோகமாகும். இந்த விமானத்தில் நான்கு பேர் அமர்ந்து பயணம் செய்யலாம். தானியங்கியாக ஆட்டோ-பைலட் முறையில் இயங்கக் கூடியது. 2759 கிலோ மீட்டர் வரை பறக்கலாம். கரடுமுரடான இடங்களிலும் எளிதில் இறக்கமுடியும். பத்து மில்லியன் ரூபாய்க்கு யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.
இது தவிர ஆயிரம் கி.மீ., 600 கி.மீ., 200 கி.மீ. என்று வெவ்வேறு தூரங்கள் சென்றுவரக்கூடிய விமானங்களையும் சமாதான காலத்தின் போருக்கான ஆயத்தங்களாக செய்கிறார்கள் என்று இலங்கைக்கான இந்திய ஹைகமிஷனர் நிருபமா ராவ் விவரிக்கிறார். இந்த விமான பலத்தின் மூலம் ஒற்று அறிவது, வேவு பார்ப்பது போன்றவை புலிகளுக்கு எளிதாகும். போராளிகளை, இலங்கை, தென்னிந்தியா மற்றும் தென் கிழக்காசியா போன்ற அக்கம்பக்கத்து நாடுகளுக்குக் கொண்டு விடுவது இயலும். போர் காலகட்டங்களில் வெளியிடங்களில் இருந்து அவசர உதவிகள் தருவிக்கவும்; சிகிச்சைகளுக்கு கொண்டு செல்லவும்; புதிய ராணுவ உதிரி பாகங்களை வெகுவிரைவில் கொண்டு வரவும் உதவலாம்.
ராஜீவ் காந்தி கொலையில் தேடப்பட்டு வருபவரும் தென்கிழக்கு ஆசியாவில் வசிப்பவருமான சண்முக குமரன் தர்மலிங்கம் விமான பாகங்களை உதிரியாகக் கொண்டு வந்து விமானம் கட்டமைப்பதில் சம்பந்தப் பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. மாதந்தோறும் அயல்நாடுகளில் வசிக்கும் தமிழர்களிடமிருந்து 8.6 கோடி ரூபாய் வருவதாக இந்திய உளவுத்துறை மதிப்பிட்டுள்ளது. இது விமான எரிபொருள், விமானிப் பயிற்சி போன்றவற்றுக்கும் உபயோகப்படும்.
விடுதலைப்புலிகளாகட்டும் அல் கெய்தாவாகட்டும். அவர்களின் மிகப் பெரிய பயமுறுத்தும் பலம் அவர்களின் தற்கொலைப் படைகள்தான். எல்.டி.டி.ஈ.இன் தற்கொலைப் படையின் பெயர் கரும்புலிகள். தற்கொலைத் தாக்குதல் என்றாலே உலகின் எல்லா நாடுகளும் முப்படைகளும் நடுங்குகிறார்கள்.
விடுதலைப் புலிகளின் திறனையும் நடவடிக்கைகளையும் குறைத்து மதிப்பிட்டு மீண்டும் ஏமாறக் கூடாது என்பதற்கு புஸ்பராஜாவின் கருத்து:
“இந்திய இராணுவம் இன்னோர் நாடான பாகிஸ்தானுடன் மோதிக் கிழக்குப் பாகிஸ்தானாக இருந்த பிரதேசத்தை பங்களாதேஷாக உருவாக்கியபோது, அதாவது 1974-ம் ஆண்டு நடந்த இந்த யுத்தத்தில் இறந்த இந்திய இராணுவத்தின் தொகை 1047-தான். அதாவது ஒரு நாட்டுடன் மோதி இருக்கிறது. இன்னோர் நாட்டை உருவாக்கி இருக்கிறது. ஆனால், இலங்கையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கத்துடன் மோதி இறந்த இந்திய இராணுவத்தின் தொகை 1115”.