அமெரிக்கா எவ்வாறு வாக்களித்துள்ளது?
எந்தப் பகுதிகள் ஒபாமா ஆதரவு?
எந்தப் பகுதிகளில் மெகயின் ஆதரவு?
நன்றி: Obamaland and McCainland
அமெரிக்கா எவ்வாறு வாக்களித்துள்ளது?
எந்தப் பகுதிகள் ஒபாமா ஆதரவு?
எந்தப் பகுதிகளில் மெகயின் ஆதரவு?
நன்றி: Obamaland and McCainland
இவரின் முந்தைய பதிவு: மாநாடுகள் குறித்த ஒரு ஒப்பீட்டு அலசல்
தொடர்புள்ள பதிவு: வாக்களித்த வைபவம் – மைத்ரேயன்
நேற்று மாலை அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பொழுது 6 மணிக்கே நன்கு இருட்டி விட்டிருந்தது. லேசான மழையில் இலையுதிர்க்கால பொன்னிற இலைகளின் சருகுகளால் சாலையோரங்கள் பொன்னிறக் காசுக் குவியல் போல மழைநீரில் மின்னிக் கொண்டிருந்தன. சிக்னலில் சிவப்பு விழ அநிச்சையாக கால்கள் காரை நிறுத்தின. மழை பெய்யும் பொழுது சிக்னல்களின் மஞசள், சிவப்பு, பச்சைகளை ஒரு வித அழகுடன் மின்னும். மழைக்காலத்து சிக்னல்கள் என் மனதுக்குப் பிடித்த ஒரு காட்சி.
மழையில் நனைந்த சிக்னலனின் ஈரமான சிவப்பை ரசித்துக் கொண்டிருந்த பொழுதுதான் தீடீரென நாளைக்கு எலக்ஷன் நாள் என்பது உறைத்து இடது புறம் இருந்த ஓட்டுச் சாவடியாகிய தீயணைப்பு நிலையத்தை நோக்கினேன். சாதாரண நாட்களில் கூட ஒரு சில தீயணைப்பு வண்டிகள் பள பளவென வெளியில் நிற்க ஆளரவம் தெரியும் அந்த நிலையமோ. மழையிலும் இருட்டிலும் அநேகமாக காணாமலேயேப் போயிருந்தது. இந்த இடத்திலா நாளைக்கு சுமார் ஆயிரம் பேர் ஓட்டுப் போடப் போகிறார்கள் என்று. எந்தவித பரபரப்பும் இன்றி இருட்டில் கிடந்தது அந்த தீயணைப்பு நிலையம்.
மழையில் ஊறிய பச்சை மிளிர, கார் முன்னே செல்ல என் நினைவுகள் மெல்ல பின்னே சென்றன. தேர்தல் என்பது இந்தியாவின் பல்லாயிரக்கணக்கான பண்டிகைகளில் தேர்தலும் ஒரு திருவிழாவக மாறிப் போன கால கடத்தில் பல தேர்தல்களைப் பார்த்திருக்கிறேன்.
நம் மக்களுக்கு பரபரபுத் தீனி போடவும், கொண்டாடவும் வம்பு பேசவும் வாய்ப்பளிக்கும் மற்றொரு திருவிழாவாக மட்டுமே நம் தேர்தல்கள் இயங்கி வருகின்றன. உபரியாக தேர்தல் தினங்கள் கிரிமினல்களை உற்பத்தி செய்யும் தினமாகவே மாறி வருகின்றன. தேர்தல் கமிஷன்களின் கெடுபிடியால் திருவிழாவின் உற்சாகம் இப்பொழுதெல்லாம் கொஞ்சம் மட்டுப் பட்டிருக்கும் என்றே நினைக்கிறேன்.
இருந்தாலும் சிறு வயதில் தீபாவளியைப் போலவே தேர்தல் தினங்களும் உற்சாகமளிக்கும் தினங்களாகவே இருந்தன.
நிச்சயம் இந்த அமெரிக்க ஓட்டுச் சாவடி போல களையிழந்த ஒரு ஓட்டுச் சாவடியை இந்தியாவின் மனித நடமாட்டமில்லாத காட்டுப்புற ஓட்டுச் சாவடிகளில் கூடக் காண இயலாதுதான். வாக்குச் சாவடிகள் என்றுமே பரபரப்பான ஒரு வித ஆர்வத்தைத் தூண்டும் இடங்களாகவே உள்ளன. ட்யூப் லைட்டுக்கள், துப்பாக்கிகளுடன் போலீஸ்காரர்கள். கலவரப் பகுதிகளில் சட்டித் தொப்பி போலீஸ்கள், பூத்தைச் சுற்றி சுற்றி வந்து காவல் காக்கும் கட்சிக் காரர்கள், மறுநாள் தேர்தலை நடத்த முந்திய நாளே வந்திருந்து
பள்ளிக்கூடங்களில் தங்கியிருக்கும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள், அவர்களுக்கு உபசாரம் செய்ய டீக் கடைகள், வரிசை, வரிசையாக வந்து ஏற்பாடுகளைச் சரிபார்க்கும் தேர்தல் அதிகாரிகளின் ஜபர்தஸ்துகள், போலீஸ்காரர்களின் விரட்டல்கள் என்று பூத்கள் மறுநாள் மர்மத்தைத் தன்னிடம் தேக்கி வைத்திருக்கும் ப்ரபரப்பான இடங்களாக்வே இருக்கும்.
தேர்தல் தினத்தன்று ஓட்டுச் சாவடிக்கு 200 அடிக்கு முன்னாலேயே கீற்றினால் வேயப் பட்ட கட்சி அலுவலகங்கள் பரபரப்பாக இயங்கும். கரை வேட்டித் தொண்டர்கள் கைகள் கூப்பி வரவேற்றுக் கொண்டேயிருப்பார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் ஓட்டருக்கும் கட்சி சின்னம் பொறிக்கப் பட்ட சின்ன ஸ்லிப் தயார் செய்வது சரிபார்ப்பது அவற்றை வீடுகளில் கொண்டு கொடுப்பது, என்று தேர்தலுக்கு முந்திய நாளும் தேர்தல் நாளும் பரபரப்பாக இயங்கும் தினங்களாகவே இருக்கும்.
வேட்பாளர்கள் கடைசி கடைசியாக வீடு வீடாகப் போய் ஓட்டுச் சேகரிப்பதும் மும்முரமாய் அந்த இரு தினங்களே நடக்கும். வயதான பாட்டி தாத்தக்களை காரில் அழைத்து வந்து ஓட்டுப் போட வைத்து பத்திரிகைகளுக்கு போஸ் கொடுப்பது தனி காமெடியாக இருக்கும். முக்கியமாக தேர்தல் தினங்களில் விடுமுறை இருக்கும். யார் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது கணவன்மார்களால் மனைவிகளுக்கு நினைவுறுத்தப் பட்ட படியே இருக்கும்.
கிருஷ்ணன் நம்பியின் மருமகள் வாக்கு என்ற சிறுகதையில் மாமியாருக்கு ஓட்டுப் போட்டேன் என்று சொன்ன மருமகள் நினவுக்கு வருகிறது. ஓட்டுப் போடும் தினத்தன்று ஃபார்முலா தமிழ் படங்கள் போலவே வெட்டு குத்து கொலை போன்ற வயலன்ஸ் காட்சிகளுக்கும் நம் தேர்தல்கள் குறை வைப்பதேயில்லை. சமீப காலங்களாக தெலுங்குப் படங்களை நிறுவுத்தும் காட்சிகளை தமிழினத் தலைவரும் அவரதம் புத்திரபாக்கியங்களும் குறையில்லாமல் அரங்கேற்றி வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் என்றாலே பரபரப்பு மிகுந்த ஒரு மசாலா படத்திற்கு இணையானதாகவே இருந்து வருகிறது.
அமெரிக்காவில் ஓட்டுப் போடும் இடம் என்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எங்கள் தெருவில் தீயணைப்பு நிலையம். பள்ளிக் கூடம், அரசு கட்டிடங்கள் மட்டுமல்லாது யார் வீட்டு கார் நிறுத்தும் காரேஜ் கூட ஓட்டுச் சாவடியாக உருமாறி விடுகிறது. தேர்தல் நாளன்று காலையில் வந்து ஓட்டுப் பெட்டிகளையும் இன்ன பிற சாதனங்களையும் சாவகசாமாகக் கொண்டு வைத்து விடுகிறார்கள்.
இங்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் தவிர வேறு யார் யார் நிற்கிறார்கள் என்பதை நாம் தான் கண்டு பிடித்துக் கொள்ள வேண்டும். ஒரு சில போட்டியாளர்கள் ஆட்களை வேலைக்கு அமர்த்தி வீட்டுக்குப் ஃபோன் போட்டு ஓட்டுக் கேட்க்கிறார்கள். மற்றவர்கள் சின்னதாக ஒரு சில இடங்களில் போர்டுகள் வைப்பதுடன் தங்கள் பிரச்சாரத்தை நிறுத்தி விடுகிறார்கள்.
தாரை தப்பட்டை, ரெக்கார்ட் டான்ஸ், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்றவை முன்னே வர வேட்டிகளும் துண்டுகளும் தரையைத் துடைக்க வரும் வேட்ப்பாளர்களை இங்கு காண முடிவதில்லை. இங்கு தேர்தல்கள் டி வி யில் தொடங்கி டி வி யிலேயே முடிந்து விடுகின்றன. உற்சாகத் திருவிழாக்கள் காணக் கிடைப்பதில்லை. தலைவர்களின் திருமுகங்கள் டி வி யில் மட்டுமே காணக் கிடைக்கின்றன.
இந்தியாவில் தேர்தல் திருவிழாவின் பொழுதுதான் தலைவர்கள் வெளியே வருவார்கள். ஐந்தாண்டுகள் ஓய்வில்லாமேலேயே ஹைதராபாத் தோட்டத்திலும் கொடநாட்டுப் பங்களாவிலும் ஒயாது ஓய்வில் இருக்கும் ஜெயலலிதா கூட தேர்தல் திருவிழாக்களின் பொழுது மக்களுக்குத் தரிசனம் தரத் தவறுவதேயில்லை. தலைவர்கள் மட்டும் என்ன சிவாஜி, எம் ஜி ஆர் தொடங்கி தவக்களை குமரி முத்து வரை நடிகர்களையும் அருகில் இருந்து பார்க்கக் கிடைக்கும் தருணங்களும் இந்தத் திருவிழாக்கள்தானே?
சிவாஜி என்றால் சிவப்பு, பச்சை, மெரூன், அல்லது ஊதா நிறத்தில் பட்டில் செய்த இறுக்கமான ஜிப்பா அணிந்து வருவார். எம் ஜி ஆரோ பள பளக்கும் வெள்ளை வேட்டி சட்டையில் புசு ப்சு தொப்பியும் ஒரு இஞ்சு ரோஸ் பவுடருமாக தரிசனம் தருவார். இன்னும் பல தலைவர்கள் ஜீப்புகளில் கைகளைக் கூப்பிக் கொண்டு நின்று வரும் பிம்பங்களாகவே மனதில் பதிந்து போய் விட்டனர்.
காமராஜர், அண்ணாத்துரை, ராஜாஜி, ஜூப்பில் இருந்து ஊன்று கோலோடு இறங்கிய பி.ராமமூர்த்தி துணையாக ஏ பாலசுப்ரமணியன் போன்ற தலைவர்கள் அவர்கள் நின்று வரும் ஜீப்புடன் சேர்ந்தே என் மனதில் பதிந்து உறைந்து போயினர். இந்திரா என்றால் தலையில் கட்டிய ஸ்கார்ஃப் பட படக்க கூலிங் கிளாசுடன் கன்வெர்டிபிள் காரில் பறந்து செல்லும் படிவம், ராஜீவ் என்றால் ஜிப்சி ஜூப்பில் தொங்கிக் கொண்டு போகும் உருவம், ஜெயலலிதா என்றால் டாட்டா சுமோவில் கண்ணாடிக்குப் பின்னால் அமர்ந்து கொண்டு கையசைக்கும் தோற்றம் என்று வாகனங்களை விலக்கித் தலைவர்களின் உருவங்களை மனக்கண் முன் கொண்டு வர முடிவதேயில்லை. அது போல வாகனங்களில் விரைந்து செல்லும் தரிசனங்களைக் கூட இங்குள்ள தலைவர்கள் தருவதில்லை.
பல்லாயிரம் வாட்ஸ் ஃபோகஸ் லைட்டுக்களின் வெளிச்சத்தையும் மீறி பளீரென்று தோன்றிய அழகி ஜெயலலிதாவின் முகத்தை முதன் முறை கண்ட நினைவை இன்றும் என்னால் மறக்க முடிவதேயில்லை. தமிழ் நாட்டில் எந்தவொரு நடிகைக்கும் இல்லாதிருந்த தோரணை அது. அந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்காக ஓட்டுப் போட்டேன் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை 🙂
அதே அழகும் கவர்ச்சியும் இன்று சாராப் பெல்லனிடம் இங்கு காண்கிறேன். ஜெயலலிதாவிடம் இருக்கும் அறிவு மட்டுமே இவரிடம் மிஸ்ஸிங். மற்றபடி இவர ஒரு ஜெயலலிதாவின் க்ளோனாகவே தோன்றுகிறார்.
ஒரு முறை தாசில்தார் ஒருவர் ஓட்டுச் சாவடி அமைப்பதற்காக மேற்உத் தொடர்ச்சி மலைக்குச் செல்ல நேர்ந்ததையும் யானை துரத்தியதால் வெகு நேரமாக பதுங்கிக் கிடந்ததையும் சொல்லி என் ஆர்வத்தைத் தூண்டி விட்டார். யானைகள், சிறுத்தைகள் அதிகம் உள்ள தொலை தூர மலைக் கிராமம் அது. இந்தியத் தேர்தலகள் இது போன்ற சாகசங்களையும் உள்ளடக்கியது.
என் பக்கத்து வீட்டுக்காரர் எலெக்ஷன் டூட்டிக்காக ஒரு ஊருக்குப் போய் விட்டு ரெண்டு கட்சிக்காரர்களுக்குள் சண்டை வந்து விட ஓட்டுப் பெட்டிகளுடன் தூக்கிப் போட்டு இவரையும் கொளுத்த இருந்திருக்கிறார்கள்,. பத்து மைல் தூரம் ஓடி வந்து உயிர் பிழைத்த கதையை இன்றும் சொல்வார். தேர்தல் வேலைக்குப் போவது அப்படி ஒன்றும் சுவாரசியமான காரியமோ, பாதுகாப்பான காரியமோ கிடையாது. உயிருக்கு உத்தரவாதமில்லாத ஓட்டுச் சாவடிகள் இந்தியாவில் லட்சக்கணக்கில் உள்ளன. உயிர் பலி விழாமல் ஒரு பஞ்சாயத்துத் தேர்தலைக் கூட இந்தியாவில் நடத்தி விட முடியாது.
பழைய நினைவுகளுடன் வீடு வந்து உறங்கி காலையில் சற்றுச் சந்தேகத்துடனேதான் ஓட்டுச் சாவடிக்குச் சென்றேன். ராத்திரி ஒருவரைக் கூட காணுமே இன்றைக்கு நிஜமாகவே இந்த இடத்தில் எலக்ஷன் நடக்குமா என்றொரு சம்சய்த்தோடுதான் சென்றேன்.
வீட்டிலிருந்து ஒரு இருநூறு அடி தூரத்திலேயேதான் ஓட்டுச்சாவடி (ஓட்டுப் போட்டால் சாவடிப்பார்கள் என்று எவ்வளவு முன்யோசனையுடன் பெயர் வைத்திருக்கிறார்கள் பாருங்கள்) இருந்தது, காலையில் ஒரு எட்டரை வாக்கில் நடந்தே சென்றோம். வழி மறித்து யாரும் ஓட்டுக் கேட்க்கவில்லை. தோரணங்கள் இல்லை. கொடிகள் இல்லை. ஆரவாரங்கள் இல்லை. ஸ்லிப் கொடுக்க ஆளில்லை.
வயதானவர்களை ஏற்றிச் செல்ல வாகனங்கள் வரவில்லை. கரை வேட்டிகள் இல்லை. பட்டா பட்டி டவுசர்கள் இல்லை, அம்மா இரட்டை இலைக்குப் போடுங்க, ஐயா உதய சூரியனுக்குப் போடுங்கள் என்ற கெஞ்சல்கள் இல்லை. அப்படி ஒரு பேரமைதி,.
தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு நூறடி தூரத்தில் ஒரு பெண் ப்ரோபிஷன் 8 க்கு நோ என்று ஓட்டுப் போடுங்கள் என்று ஒரு நோட்டீஸ் கொடுத்தார்.
ஃபையர் ஸ்டேஷன் முன்னால் சோம்பலாக ஒரு இருபது பேர்கள் வரிசையில் நின்றார்கள்.
அங்கிருந்த ஒரு வாலண்டியரிடம் ஏனுங்க நிஜமாகவே எலக்ஷன் நடக்குதுங்களா என்றேன். ஏன் சந்தேகம் என்றவரிடம் ஒரு போலீசைக் கூடக் காணோமே என்றேன். போலீசா? அவர்கள் எதற்கு என்று சற்றே மிரண்டு போய் என்ன ஏற இறங்கப் பார்த்தார்.
வரிசையில் நகர்ந்து உள்ளே போனோம். முதல் முறையாக ஒரு தீயணைப்பு நிலையத்திற்குள் நுழைந்தேன். உள்ளே எஞ்சினீயரிங் காலேஜ் ஹைட்ராலிக்ஸ் லாப் போல இருந்தது. சுற்றி உயர உயர ஏணிகளை சாத்தியும் நிறுத்தியும் வைத்திருந்தார்கள். மேலே ராட்சச மஞ்சள் வண்ன தண்ணீர் ஹோஸ்கள் ஓடிக் கொண்டிருந்தன. அந்த ஃபயர் ஸ்டேஷனில். இருந்த ரெண்டும் எஞ்சினையும் வெளியே டிரைவ் வேயில் கொண்டு போய் நிறுத்தி உள்ளே ஓட்டுப் போட இடம் தயார் செய்து வைத்திருந்தார்கள்.
எலக்ஷனை நடத்தியதும் தொண்டர்களே. அரசாங்க அதிகாரிகள், ஜீப்புகள். ஜபர் தஸ்துகள், கலெக்டர், எஸ் பி விசிட்கள் ஏதும் கிடையாது. நிறைய பேர் குழந்தைகளையும் வேடிக்கை காண்பிக்க அழைத்து வந்திருந்தனர். எனக்கு முன்னால் நின்ற கருப்புப் பெண்மணி தன் பையனையும் பள்ளிக் கூடத்துக்குப் பெர்மிஷன் சொல்லி விட்டு அழைத்து வந்திருந்தார். அவர்கள் இனத்தில் ஒருவர் பிரசிடெண்டாகப் போகும் வரலாற்றுத் தருணத்தைத் தன் பையனும் காண வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த பரபரப்பு அவரிடம் தெரிந்தது.
எல்லோரிடமும் ஒரு வித தோழமையும் புன்னகையும் தவழ்ந்து கொண்டிருந்தது, மாற்றம் வரப் போகிறது என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டன அந்தப் புன்னகைகள். அனேகமாக 90 சதம் ஒபாமாவுக்கு ஓட்டுப் போடும் கூட்டம் அது. நாங்கள் ஓட்டுப் போடுவதை வேடிக்கைப் பார்க்க சில வயதான இந்தியர்கள் கூடியிருந்தார்கள். யாரையும் யாரும் விரட்டவிலலை. எந்த விதமான கெடுபிடிகளோ பரபரப்புக்களோ இல்லை.
ஒரு பாட்டி என் பெயரைச் சரிபார்த்து இவ்வளவு நீள பெயரை என் வாழ்நாளில் உச்சரிக்க முடியாது டியர் வெரி சாரி என்று சொல்லி, பட்டியலில் இருந்த என் பெயருக்கு மேலாக ஒரு அடிஸ்ஸ்கலை வைத்து பென்சிலால் பெயரை அடித்து விட்டு என்னிடம் வாக்குச் சீட்டைக் கொடுத்தார்.
கையில் மை வைப்பது எல்லாம், இல்லை. ஒரு ரெஜிஸ்டரில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள் அவ்வளவுதான். அதை ஓட்டுச் சீட்டு என்று சொல்வது அபத்தம்,. ரெண்டு பக்கங்களும் 26 தேர்தல்களும் அடங்கிய பெரிய லிஸ்ட் அது. ஜனாதிபதி தேர்வில் ஆரம்பித்து உள்ளூர் முனிசிபாலிட்டி ஸ்கூல் போர்டு வரைக்கும் மொத்தம் 16 பதவிகளுக்கான வாக்கெடுப்புக்களும், ஒரு 10 பிரசின்னைகளுக்கான வாக்கெடுப்புக்களும் நிரம்பியிருந்தன,.
ஜனாதிபதி வேட்பாளர் தவிர பிற பதவிகளுக்குக் குத்து மதிப்பாக ஒரு பெயருக்கு நேர் கோடு போட்டோம். ஆம் பேனாவால் நாம் விரும்பும் பெயருக்கு நேராக ஒரு கோடு கிழிக்க வேண்டும். நம்ம ஊர் மாதிரி முத்திரை குத்துவது எல்லாம் கிடையாது. பல பிரச்சினைகளுக்கான கேள்விகள் குழப்பமான வாக்கிய அமைப்புகளாக இருந்தன.
படித்துப் பார்த்து ஓட்டு போட்டால் சரியாகத் தப்பாகப் போட்டு விடும் விதத்தில் கேள்விகளை மிகப் புத்திசாலித்தனமாக அமைத்திருந்தனர் முட்டாள்கள்.
உதாரணமாக ப்ரோபிஷன் 8: ஓரினபாலர் திருமணத்தைத் தடை செய்ய வேண்டும். இதற்கு யெஸ் என்று கோடு கிழித்தால் ஆம் தடை செய்ய வேண்டும் நோ என்பதற்கு நேர் கோடு கிழித்தால் ஓரின திருமணத்தைத் தடை செய்யும் முயற்சியைத் தடை செய்ய வேண்டும் என்று விசு பட வசனம் போலக் கேள்விகள் அமைந்திருந்தன.
இப்படி ஒரு குப்பாச்சு குழப்பாச்சாக ஓட்டுச் சீட்டை வடிவமைத்தால் எப்படி ஜனநாயகம் வெளங்கும்? ஓரினத் திருமணத்தை தடை செய்ய வேண்டுமா வேண்டாமா?, ரெண்டு நகரங்களுக்கு இடையில் ரெயில் விடலாமா வேண்டாமா? மிருகங்களைச் மாமிசத்திற்காகக் கொல்வதற்கு முன்னால் அவைகளைச் சுதந்திரமாக இருக்க விட வேண்டுமா வேண்டாமா? விபச்சாரத்தை சட்டப் படி அனுமதிக்கலாமா வேண்டாமா? உள்ளூர் பார்க்குகளை மேற்பார்வை செய்ய வரி விதிக்கலாமா வேண்டாமா என்பது போல ஒரு பத்து வேண்டுமா வேண்டாமா ஓட்டுக்களுக்கும் வாக்கிழித்தோம்.
இவர்கள் எலக்ஷன் நடத்தும் விதம் அப்படி ஒன்றும் திருப்திகரமாக இல்லை. அமெரிக்கா இந்த விஷயத்தில் இந்தியாவிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அல்லது டி என் சேஷனிடம் இந்த வேலையை அவுட் சோர்ஸ் செய்து விட வேண்டும். 200 வருடங்களுக்கு மேலாகியும் ஒரு எலக்ஷனை ஒழுங்காக நடத்தத் துப்பில்லாத ஒரு தேசமாகவே இருப்பதாகத் தோன்றுகிறது.
நானும் என் மனைவியும் ஓரமாக உட்கார்ந்து கொண்டு ஆலோசனையெல்லாம் செய்து கோடு கிழித்து, கோடு கிழித்து ஓட்டுப் போட்டுக் கிழித்தோம். எல்லா தேர்வுகளுக்கும் சரியாகத் தப்பாகக் கோடு கிழித்த பின்னால் பூர்த்தி செய்த பாலட்டை ஒரு குப்பைத் தொட்டி போன்றிருந்த மெஷினில் உள்ளே கொடுத்தோம். அது உள்ளே வாங்கிக்க் கொண்டு 111 என்று எனது எண்ணைக் காட்டியது.
காலை 6 மணி முதல் 9 வரை மொத்தம் 111 பேர்கள் போட்டிருந்தனர். பலர் ஏற்கனவே ஓட்டுப் போட்டு போஸ்டலில் அனுப்பி விட்டார்கள். நேரில் வந்து போடுபவர்கள் மிகக் குறைவாக இருந்தது. ஓட்டுச் சீட்டை அந்தக் குப்பைத் தொட்டிக்குள் போட்ட்வுடன் ஒருவர் ஐ வோட்டட் என்றொரு ஸ்டிக்கரைக் கொடுத்தார்.
அமெரிக்க வரலாற்றின் ஒரு முக்கியமான தேர்தல் முதல் முறையாக ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் முக்கிய பதவிக்கு வரப் போகும் எலக்ஷன். வரலாற்றில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன் என்று சொல்லிக் கொள்ளலாம்
இவரின் முந்தைய பதிவு: ஒபாமா ஜனாதிபதியானால் என்ன செய்வார்?
இங்கே வாக்களித்து விட்டேன்.
நானும் இன்று வாக்குச் சாவடிக்குப் போனேன். சிறிது மழையில் வீடுகளெல்லாம் நனைந்திருந்தன. நல்ல குளிர். காலை 7.45க்குப் போனால் எப்படி இருக்கும்?
வழக்கமாக வீடுகளெல்லாம் கோடை முடிவதற்குள் வெளிப்பக்கம் அடிக்க வேண்டிய (தேவையாய் இருந்தால்) பெயிண்ட் எல்லாம் அடித்து, கூரைகளை எல்லாம் புதிதாக்கி 90 சதவீதம் வீடுகள் புதுப்பிக்கப் படும் ஒரு பகுதியில் இருக்கிறேன். இந்த வருடம், சென்ற வருடம் போலவே, மக்களின் நிதி நிலை சரியில்லை என்பது தெரிய வர ஆரம்பித்திருக்கிறது. ஒரு தெளிவான வேறுபாடும் புலப்படுகிறது.
காலை இளம் வெயிலில் அந்த ஈரப் பிசுபிசுப்பு உள்ள மெலிய குளிர் காற்றில் நடக்கையில் பல வீடுகள் தம் பொலிவிழந்து காணப்பட்டது புலப்பட்டதில் சிறிது யோசித்ததில் அவை அனேகமாக வயதான மனிதர்கள் வாழும் வீடுகள் என்பது புலப்பட்டது. ஓய்வு ஊதியம், சேமிப்பில் காலம் தள்ளும் மனிதருக்கு வயதானவருக்கு இந்த வருடங்கள் நல்ல வருடங்களே அல்ல.
ஓரளவு பார்க்கப் புதிதாகவும் நல்ல பராமரிப்பிலும் இருந்த வீடுகள் தெருவில் எவை என்றால் புதிதாய்க் குடி வந்தவர்கள், இளம் குழந்தைகள் உள்ளவர்கள், இருவரும் வேலைக்குப் போகும் மனிதர் உள்ள வீடுகள் இப்படி. இன்னும் வேலை பார்க்கும் குடும்பங்களால் இந்தக் கஷ்ட காலத்திலும் அதிகம் பிரச்சினை இல்லாமல் காலம் தள்ள முடிகிறது போலும்.
கூட என் மகள் வந்தாள். கல்லூரியில் இருந்து நேற்று இரவே வந்து விட்டாள்.
ப்ரைமரியில் முதல் தடவையாக வாக்களித்தாள். அவளுடைய மொத்த ஹாஸ்டலும் ஒபாமா என்று தெரிவித்தாள். சிலர் பழமைப் பார்வை உள்ளவர்கள்- மகெய்ன் ஆதரவாளர்கள் உண்டு, ஆனால் ஒபாமாவுக்கு உள்ள பெரும்பான்மை ஆதரவால் மௌனம் காக்கிறார்களாம்.
அவளுக்கு இந்தத் தேர்தலில் வாக்களிப்பதில் மிக மகிழ்ச்சி, பெருமை. அவளை விட வாக்குப் போட உரிமை பெற பல ஆண்டுகள் இன்னும் இருக்கும் மகனுக்கு ஒரே துடிப்பு, தானும் வருவேன் என்று. அம்மாவோடு போ என்று சொல்லி, பள்ளிக்கு அனுப்பி
வைத்தேன்.
பெயரைக்கேட்டு சிறிது திக்குமுக்காடினார் வாக்காளர் உதவியாளர். வயதானவர். ஒரு பென்சில் டிக் போட்டு விட்டு அடுத்த மேஜையில் வாக்குச் சீட்டு கொடுத்தவரிடம் அனுப்பினார்.
சீட்டு கையில். பெண் ஒரு பூத் போன்ற இடத்தில் எல்லாவற்றிலும் வாக்கு போட்டாள். நான் ஒரு மேஜையில் அமர்ந்து கவனமாகக் குறித்தேன். இருவரும் ஓட்டுப் போட அந்த எந்திரத்துக்கு அருகில் போகையில் ஒரு போலிஸ்காரர், மேஜையில் அமர்ந்து பெயர், முகவரி கேட்டார். சொன்னதற்கு அவரும் ஒரு டிக் போட்டுக் கொண்டார் (நோட்டுப் புத்தகத்தில்).
Optical scanner எந்திரத்தருகே இருந்த பெண்மணி என் மகளிடம் இதுதான் முதல் தடவையா பெண்ணே என்றார். இல்லை, ப்ரைமரியில் வாக்களித்தேன் என்றாள்.
வாக்காளருக்கு உதவி செய்பவர்கள் சார்பின்றி இயங்க வேண்டும் என்று ஒரு விதி உண்டு. என்றாலும் மகளுடைய உற்சாகத்தைப் பார்த்து அவ்ருக்கும் உற்சாகம்.
Exciting isn’t it? என்றார்.
ஏன் அப்படிச் சொல்கிறார் என்று எங்கள் மூவருக்கும் தெரியும். சிரித்து விட்டுத் தலை அசைத்தோம். அந்த எந்திரத்துக்குப் போவதற்குள், ஒரு சர்ச்சுடைய பெரிய சமுகக் கூட்ட அறையான அந்த பெரிய கூடத்தில் நாங்கள் பல கருப்பர்களைக் கடந்தோம். அவர்களில் சிலர் வாக்காளர், சிலர் உதவியாளர். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக்
கொண்டோம்.
சொல்லாமல் சொல்வது ஊக்குவிப்பது பாராட்டுவது வாழ்த்துவது எல்லாம் அந்தச் சிறு சிரிப்புகளில் பரிமாறப்பட்டன. அதே பரிமாறல் இந்த நடுவயதைத் தாண்டிய வெள்ளைப் பெண்மணியுடனும் நடந்தது.
வெளியே வந்தோம். சரித்திரம் நிகழ்ந்தது, அதில் நாம் ஒரு சிறு பங்கு வகித்தோம் என்று எங்களுக்குத் தெரிந்திருந்த ஒரு அதிசய நேரம் அது.
குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெகயினின் உரை:
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் பராக் ஒபாமா ஆற்றிய உரை:
* ஒபாமாவுக்கு கருத்துக்கணிப்பில் இருக்கும் இதே அளவு செல்வாக்கு வேறு ஒரு வெள்ளை இனத்து ஜனநாயகக்கட்சி அதிபர் வேட்பாளருக்கு இருந்திருந்தால் தேர்தல் முடிந்தது என்று பலகாலம் முன்னரே முடிவுகட்டி இருப்பார்ர்கள். மெக்கெய்ன் ஆதரவாளர்கள் இன்னமும் துள்ளிக் கொண்டு இருப்பதற்கும், நம்பிக்கை இழக்காமல் பேசிக்கொண்டிருப்பதற்கும் ஒபாமவின் இன அடையாளமே காரணம்.
* இந்தத் தேர்தலில் கட்சி சார்புள்ளவர்களை விட கட்சி சார்பற்றவர்களே முடிவை தீர்மானிக்கும் காரணிகளாகிறார்கள். அடுத்ததாக இளைய தலைமுறையினர் மற்றும் – முதன் முறை ஓட்டளிப்பவர்கள்
* 2000 ம் வருடத் தேர்தலில் மெகெயின் குடியரசுக் கட்சி வேட்பாளாராக முன்மொழியப்பட்டிருந்தால் எதிர்த்த எந்த ஜனநாயகக்கட்சி வேட்பாளரையும் கபளீகரம் செய்திருக்கும் அளவிற்கு தனிப்பட்ட செல்வாக்கு உடையவர்.
தவறான நேரத்தில் முன்மொழியப்பட்டிருக்கும் சரியான நபர் அவர். பாவம்.. !!
* ஒபாமா லேசுப்பட்ட ஆள் அல்ல. அட்டகாசமான EQ உள்ள பக்கா அரசியல்வாதி. அவருடைய நிர்வாகத்திறமை என்ன என்பதை காலம்தான் சொல்லும். தெரியாத பிசாசே மேல் என்று எடுக்கப்படும் முடிவே அவர் பெறப்போகும் அதிபர் பதவி.
* காலகாலமாக போரில் அசகாயம் புரிந்தவர்களை அரியணை ஏற்றும் நாடு அமெரிக்கா. பனிப்போருக்கு முந்தைய அமெரிக்க அரசின் ராணுவ நடவடிக்கைகளுடன் எச்சரிக்கை கலந்த செயல்பாடுகளும் இருந்தன. காரணம் சோவியத் அரசு. ஆனால் பனிப்போருக்கு பிந்தைய, ருஷ்யா சிதறுண்ட பிறகான காலகட்டத்திற்கு பிறகு, ராணுவ நடவடிக்கைகள் கேட்பார் இல்லை என்ற காரணத்தால் மிகுந்த அராஜகமான முறையில் மேற்கொள்ளப்பட்டன. இந் நிலையில் அமெரிக்க அதிபர், போரில் முனைப்பில்லாத/ விருப்பமில்லாத பேச்சு வார்த்தையில் அதிக நம்பிக்கை உள்ள ஒரு Diplomat ஆக இருப்பது அவசியமாகிறது.இந்த வட்டத்துக்குள் அட்டகாசமாக பொருந்தும் முகம் ஒபாமாவுக்கு
* எட்டுவருட புஷ் அரசின் தோல்வி அடைந்த பிடிவாத முகத்தை உலக அரங்கில் மாற்ற, மழுப்பலும் பசப்பலும் மிக்க அரசியல் முகம் தேவைப்படுகிறது. இதே முகம் உள்நாட்டு குழப்பங்களையும் சீர்செய்தால் வரலாறு படைக்கும் – கருப்பினத்தின் முதல் அதிபர் என்ற வரலாற்று மாற்றத்தோடு மெற்சொன்னதும் சேரும். ஆனால் ஒபாமாவினால் கருப்பர்களது இனரீதியிலான எண்ணங்களில் ஏற்படும் திருப்தி அளவுக்கு, அவர்களுக்கு ஆதரவான அவரது செயல்பாடுகளினால் வராது. கூடியவரை தன்னைப் பொதுவான அதிபராக காட்டிக் கொள்ள முயல்வதே நல்லது என்கிற இன்றைய அவரது என்ணம் பின்னும் தொடரும்
* சமயங்களில் சர்ச் பிரசங்கம் போல அமைந்துவிடும் ஒபாமாவின் உரை, மெகெயின் உடனான வாதப் பிரதிவாதங்களில் அடக்கமாக, கொஞ்சம் அலுப்பாகக் கூட இருந்தது. தான் ஒன்றும் பேசாமல் இருந்தாலே போதும், சர்ச்சைகளை தவிர்க்கலாம். உணர்ச்சிவசப்படுகிற , அங்க சேஷ்டைகளில் முகம் சுளிக்க வைக்கிற பெரியவர் பார்ப்பவர்களின் அதிருப்தியை சம்பாதிக்கும் வேலையை தானே பார்த்துக் கொள்வார் என்று அவர் நினைத்து இருக்கலாம். மொத்தத்தில் மூன்று டிபேட்டிலும் மெகெயின் தொற்றார். ஒபாமா அவரை ஜெயிக்கவில்லை.
* ஒபாமாவின் இனம், மதம், அவர் தொடர்புகள், அவருடைய அனுபவம், சம்பத்தப்பட்ட மெகெயின் கேள்விகள் எல்லாமே நெகடிவ் ஆயுதங்கள் என்று மீடியாவால் நிராகரிக்கப்பட்டதற்கு காலமே காரணம்.
மீடியாவின் செல்லப்பிள்ளைகளை மக்கள் நிராகரித்ததாக சரித்திரமே இல்லை- இத்துடன் அபரிமிதமான தேர்தல் நிதியும் சேர்ந்து விட ஒபாமாவின் தேர்தல் விளம்பர முயற்சிகள் வரலாறு காணாத வெற்றி – சம்யங்களில் திமுகவை ஞாபகப்படுத்துகிற தொண்டர் கட்டுமானம்.
* உள்ளூரில் திமுக/ அதிமுக போன்ற ப்ழுத்த பழங்களின் அமைப்புக்கு எதிராக விஜயகாந்துக்கு சாமரம் வீசும் நண்பர்கள் நியாயமாக சித்தாந்த ரீதியாக அதே எண்ண ஓட்டத்தின்படி புதியமுகமான பாரக்கிற்கு ஆதரவு அளித்திருக்க வேண்டும். என்னே அதிசயம். அவர்கள் ஆதரவு மெகெயினுக்குத்தான்.
விஜயகாந்துக்கு ஆதரவு அளிப்பது மு.க.வை எதிர்க்கவே என்பதும், . மெகெயினுக்கு ஆதரவு அளிப்பது லிபரலான ஒபாமாவை எதிர்க்கவே என்பதும் இந்த வலதுசாரி சிந்தனையாளர்களின் உலகளாவிய பார்வையாக இருக்கக்கூடும்.
* அதிகாரம் கைக்கு வந்தபிறகுதான் நிஜ ஒபாமா வெளிவருவார். அப்படி வராமல் போவது நம் அதிர்ஷ்டம் அல்லது என்னைப் பொன்றவர்களின் அபரிமிதமான எச்சரிக்கைக்கு தேவை இல்லாத உண்மையான நல்ல மனிதர் ஒபாமா.
* நவம்பர் நாலுக்காக உலகம் காத்திருக்கிறது. அமெரிக்கா ஒபாமாவுக்கு மகுடம் சூடினால் அது “வெள்ளை இனத்தவர்கள் இன அழுக்குகள் இல்லாது காலத்திற்கு தேவைப்பட்ட முடிவை எடுத்தார்கள்” என்பதற்காக உலகமே மனந்திறந்து அமெரிக்கர்களை தலையில் துக்கி வைத்து வைத்துக் கொண்டாடும் நாளாகி விடும்
பார்ப்போம்…!!!
முதலில் வீடியோ பார்த்துவிடவும்: (இறுதி வரை பார்க்கவும்)
அமெரிக்காவில் ஈகோ முக்கியம். தோல்வி என்பது அகராதியில் கூடாது. இராக்கில் பின்வாங்கும் ஒபாமாவுக்கு வாக்கா? அல்லது வெற்றித் திருமகன் ஜான் மெகயினா?
போரில் சிறைபிடிக்கப்பட்டாலும் உள்ளந்தளராத உத்தமர் மெகயின் என்பது முதற் காரணம்.
அடுத்த வீடியோவும் அமெரிக்கர்களின் மனவோட்டத்தை சொல்கிறது:
நீங்கள் சம்பாதிக்கும் ஓரணாவில் இருந்து அரையணாவைப் பிடுங்கி, பிச்சையெடுப்பவருக்கு தரும் ஒபாமாவுக்கு ஓட்டா? அள்ளது சோம்பேறிகளை உழைத்து சம்பாதித்து முன்னேறச் சொல்லும் ஜான் மெகயினா?
கிடைக்கிற சம்பளத்தை சுளையாக வீட்டுக்கு எடுத்துப் போக சொல்பவரா? ஈட்டிக்கடைகாரராக பாதி பிடுங்கிக் கொள்பவரா?
மெகயின் வருமான வரிவிலக்கு தருவார் என்பது இரண்டாவது காரணம்.
தொடர்புள்ள இடுகைகள்:
1. அசலாக சொன்ன பத்து காரணங்கள்: ஏன் மெகயின்?
2. அமெரிக்க தேர்தல் களம், பாஸ்கர் – உயிரோசை:
மெகைனின் திட்டத்தைப் பொறுத்த வரை கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 35% இல் இருந்து 25% குறைப்பது, புஷ் தற்காலிகமாக அறிமுகப்படுத்திய வரிக் குறைப்பை நிரந்தரமாக்குவது, முக்கியமாக அரசாங்கத்தின் செலவைக் குறைப்பது முதலானவை பிரதான அம்சங்கள். ஈராக்கில் உள்ள ராணுவத்தை இப்போதைக்கு, திரும்ப அழைக்க முடியாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார் மெகைன்.
Posted in ஒபாமா, கருத்து, குடியரசு, ஜனநாயகம், மெக்கெய்ன், வாக்களிப்பு
குறிச்சொல்லிடப்பட்டது America, அமெரிக்கா, அரசியல், இராக், ஒபாமா, சண்டை, தோல்வி, நிதி, போர், மெகயின், வரி, வருமானம், வெற்றி, Citizens, Common man, Defeat, Economy, Finance, Gulf, Iraq, Mccain, Obama, Polls, President, Tax, Victory, Voters, War
1. இராக்: ஒபாமா வந்தாலும் உடனடியாக வாபஸ் ஆரம்பித்துவிடுமா? அங்கு நிலை எப்படி இருக்கிறது? குர்துக்கள் தனி நாடாக்கிக் கொள்வார்களா? மெகயின் அதிபரானால் ஒபாமாவின் நிலையில் இருந்து எவ்வாறு சூழல் மாறுபடும்? ஆருடம் ப்ளீஸ்!
1a) ஒபமா வந்தால் : வாபஸ் ஆரம்பிக்காது. பிரச்சாரத்தில் இதுவரை ஒபாமா தெளிவாகத் தன் நிலையை விளக்கவில்லை. விரைவில் வெளியேறுவோம் என முழங்கி தென் மாகாணங்களை அவர் இழக்கத் தயாராக இல்லை (முக்கியமாக இராணுவத் தலைமையை).
1983-ல் லெபனானை விட்டு வெளியெறுவதற்கு ஒரு குண்டு வெடிப்பு போதுமானதாக இருந்தது. இராக்கில் அது இயலாது. காரணம்: எண்ணை வளம். அருகாமையில் இரான். அமெரிக்கப் ப்டைகள் வெளியேறினால் நிச்சயம் அந்தப் பிராந்தியம் 1800-களுக்குச் செல்லும் வாய்ப்புகள் நிறைய. பிரிட்டன் இரண்டாம் உலகப் போருக்குப் பின் செய்தத் தவறை அமெரிக்கா செய்யாது. இப்பொதைக்கு அமெரிக்கா அங்கே ஆப்பசைத்தக் குரங்கு.
ஒபாமா என்ன செய்ய வேண்டும்: செனட்டில் இருப்பது வேறு, ஜனாதிபதியாக இருப்பது வேறு என்று ஒபாமாவிற்கு முதல் நாளே தெரிந்து விடும் (இதுவரை தெரியாமல் இருந்தால்). எனவே வறட்டு ‘ராம்போ’ வசனங்களை எல்லாம் மூட்டைக் கட்டி வைத்து விட்டு இராக்கிய மித வாதிகளைக் கண்டறிய வேண்டும். அவர்களை இராக் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்.
இராக் நாடு மதப்பிரிவுகளில் மிகுந்த அக்கறை காட்டும் நாடு. இதனால் அனைத்துப் பிரிவினரயும் உள்ளடக்கிய ஒரு குழு பதவியில் இல்லாமல் மக்களை அணுக வேண்டும். தேவைப்பட்டால், முக்தாதா அல் சதர் போன்ற உக்கிரமான மதத் தலைவர்களையும் அந்தக் குழுவில் இடம் பெறச் செய்யவேண்டும். வரும் வன்முறைகளுக்கு அந்த மதத் தலைவர்கள் பொறுப்பு என சுட்ட வேண்டும். இதையும் மீறி அந்த மதத் தலைவர்களின் ஆட்கள் வன்முறையில் இறங்கினால் மக்களே புறக்கணிப்பார்கள். இவை அனைத்தும் பின்புலத்தில் நடக்க வேண்டும்.
தற்போதைய அரசாங்கம் சதாமிற்கு ஒரு மாற்றுதானே தவிர மக்கள் இன்னும் அதை ‘வரதராஜ பெருமாள்’ அரசாகத்தான் பார்க்கிறார்கள்.
அமெரிக்க அரசாங்கம் (அரசியல் செயல்களில்) முண்ணனியில் இருப்பதாகக் காண்பித்துக் கொண்டால் பிரிவினை/தீவிர வாதிகள் நிச்சயம் விரும்பமாட்டார்கள். இதன் பின் அமெரிக்கத் துருப்புகள் விலகல் ஆரம்பித்தால் நல்லது. நிச்சயம் இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகும்.
1b) அங்குள்ள நிலை: சதாம் இருந்த வரை செய்திகள் கசிந்தன. இப்போதைய அரசில் (?!) வெளி வருகின்றன. மற்றபடி ஆட்சி முறை அப்ப்டியே தான் இருக்கிறது. ஷியா, சுன்னி பிரிவினரிடயே ‘அமெரிக்கா எப்போ ஒதுங்குவான், நம்ம அடித்துக்கொண்டு சாகலாம்’ என்று காத்திருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் ‘இதெல்லாம் இருக்கட்டும், வடக்கே குர்துக்களின் தலையை எப்படி எடுக்கலாம்’ என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மற்றபடி, பணத்துக்கு விலை போதல், இரு குழுக்களிடையே மோதல் உண்டாக்கி குளிர் காய்தல், வருங்காலத்தைப் பற்றி யோசிக்காமல் முட்டாள்களாகவே இருத்தல் என்ற typical அராபிய ஆட்சி முறை ஜோராக நடக்கிறது.
1c) குர்துக்கள் தனிநாடு பெறுவது இராக்கை விட துருக்கியின் கைகளில் தான் இருக்கிறது. துருக்கி இராணுவம் பலமானது (மற்ற அரபு நாடுகளோடு ஒப்பிடும் போது). இவர்களை மீறி வடக்கே இராக்கில் மட்டும் குர்துக்கள் தனி நாடு பெற முடியாது. துருக்கி நேட்டோவில் இருப்பதால் மேற்கத்திய வல்லரசுகள் சும்மா முனகிவிட்டு பேசாமல் போய்விடும்.
காஷ்மீரைப் போன்றது இந்தப் பிரச்சினை.
1d) மெக்கெய்ன் அதிபரானால்: ஆரம்பத்தில் மெக்கய்னிடம் இருந்த நம்பிக்கை போகப் போக நீர்த்து விட்டது. இராக் பிரச்சினக்கு, இவர் ஆட்சிக்கு வருவதும், டிக் செய்னி வருவதும் ஒன்றுதான். இயல்பாகவே மெக்கெய்ன் இராணுவ வீரர். இவரால் விட்டுக் கொடுத்து தொலை நோக்குப் பார்வையோடு இராக் மிதவாதத் தலைவர்களை அணுக முடியாது,
2. Africom: ஆப்பிரிக்காவில் மூக்கை நுழைப்பது ஜெர்மனி/ஜப்பானில் இருக்கும் நிரந்தர அமெரிக்க படை போல் சாதுவாக சமாதானமாக அமையுமா? அல்லது சவூதியில் புகுந்த அமீனாவாக இன்னும் சில குவைத்களையும் இராக்குகளையும் குட்டி போட்டு குழப்பத்திற்கு இட்டு செல்லுமா?
மத்தியக் கிழக்கு நாடுகளில் பட்ட சூட்டில் ஆப்பிர்க்காவில் அமெரிக்கா சர்வ ஜாக்கிரதையாகத்தான் இருப்பதாகக் கருதுகிறேன் (இதைப் பற்றி சொற்பமாகப் படித்த வரையில்). சொமாலியா மற்றும் சூடான் தவிர்த்து மிகப் பெரியப் பிரச்சினை இதுவரை இல்லை. எகிப்து அமெரிக்காவின் செல்லப் பிள்ளை.
லிபியா, சதாமுக்கு நடந்த மண்டகப்படியில் அரண்டுப் போய் கிடக்கிறது. மற்ற ஆப்பிரிக்க மக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளிலும் தங்கள் இனத்திலேயே அடைந்துக் கிடப்பதாலும், அமெரிக்காவைப் பற்றி கவலைக் கொள்ளவில்லை.
3. லெபனான், பாலஸ்தீனம்: சுதந்திரம், விடுதலை போன்றவை ஹெஸ்பொல்லா, ஹமாஸ் என்று மொழியாக்கப்பட்ட நிலையை அமெரிக்கா தோற்றுவித்திருக்கிறது. நல்லதா/கெட்டதா? அடுத்து எங்கே ராஜா கவிழ்ந்து மக்கள் ராச்சியம் உதிக்கும்? உதிக்க வேண்டுமா?
Posted in உலகம், ஒபாமா, கருத்து, செவ்வி, மெக்கெய்ன்
குறிச்சொல்லிடப்பட்டது Affairs, Africa, Africom, Alliance, Army, Bush, Chandra, Cheney, Coalition, Conflicts, Congo, Darfur, Dynasty, External, Foreign, Gulf, GWB, Hamas, Hezbollah, Hussein, Imperial, iran, Iraq, Islam, Israel, Kashmir, Kings, Kurds, Lebanaon, Libya, Mccain, Military, Muslims, Obama, Rajesh, Regime, Saddam, Shia, Somalia, Sudan, Sunni, Turkey, War, World, Zaire
இத்தனையும் இருந்தும் தேர்தல் நாள்வரை ஆளுங்கட்சியின் வேட்பாளர் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சியின் வேட்பாளர் மக்களின் முழுநம்பிக்கையைப் பெறவில்லை.
இது மெக்கேன் – ஒபாமா போட்டியைப் பற்றிய செய்தியல்ல.
28 ஆண்டுகளுக்கு முன்னர், 1980இல் அதிபர் கார்ட்டர் – ஆளுநர் ரேகன் போட்டியின் கடைசிவாரச் செய்தி.
“நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட இப்போது நல்ல நிலையில் இருக்கிறீர்களா? நல்ல நிலையில் இருக்கிறீர்கள் என்றால் ஆளுங்கட்சிக்கு வாக்களியுங்கள். இல்லை என்றால் எனக்கு வாய்ப்பளியுங்கள்.” இது குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோனால்டு ரேகனின் அறைகூவல்.
எதிர்க்கட்சி வேட்பாளர் உலக அரசியல் அனுபவமில்லாதவர். அவரைத் தேர்ந்தெடுத்தால், அணுவாயுதங்கள் வெடிக்கும் மூன்றாம் உலகப் போருக்கு ஆயத்தமாகுங்கள். இது ஆளுங்கட்சியான மக்களாட்சிக் கட்சியினரின் மிரட்டல்.
தேர்தல் நாளான நவம்பர் முதல் செவ்வாய்க்கு மூன்று நாள் முன்னர் வரை மக்கள் வேண்டா வெறுப்புடன் அதிபர் கார்ட்டரைத்தான் ஆதரித்தார்கள். ஈரானில் சிக்கியிருந்த அமெரிக்கப் பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் கார்ட்டரின் தோல்வி, 23% அடமான வட்டி வீதம், வேலையில்லாத் திண்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம், பெட்ரோல் சிக்கனப் படுத்தும் சின்ன கார் உற்பத்தியில் அமெரிக்க நிறுவனங்களின் தடுமாற்றம் இவை எல்லாவற்றையும் விட மூன்றாம் உலகப் போரை முடுக்கி விடுவதைப் போல சோவியத் யூனியனை மிரட்டிக் கொண்டிருந்த ரோனால்டு ரேகனைத் தேர்ந்தெடுக்க பயமாகத்தான் இருந்தது. ஆனாலும், அவர் போர் வெறியை விட அமெரிக்காவின் ஏற்றத்தைப் பற்றிய அவரது நம்பிக்கையும், உறுதியும் மக்களை ஈர்த்தது.
தேர்தலுக்கு முந்திய மூன்று நாட்களில் ஓர் அரசியல் பேரலை எழும்பியது. அந்த அலையின் தாக்கத்தில்தான் அரசாங்கம் என்பது மக்களின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை என்ற கொள்கை அமெரிக்க அரசியலின் தாரக மந்திரமாயிற்று. தனி மனிதர்கள், அவர்களது நிறுவனங்கள், அவர்கள் பொருளாதாரச் சந்தை, இவை அரசாங்கத்தின் சங்கிலிகளிலிருந்து விடுவிக்கப் பட்டால் மாபெரும் பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற ஏயின் ரேண்ட் கொள்கைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அப்படி வந்தவர்களில் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேனும் ஒருவர்.
1929இல் பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்குப் பின்னர் அரசாங்கம் கொண்டு வந்த எல்லாக் கட்டுக்கோப்புகளையும் உடைத்தெறியும் முயற்சியில் இவர்கள் ஈடு பட்டனர். அரசு விதிக்கும் வரி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை போகும் முதலீட்டைப் பறித்து சோம்பேறிகள் சுகமாக வாழ வழிவகுக்கும் போதைப் பொருள் என்பது இவர்கள் வாதம். ஏழ்மைக்குக் காரணம் சோம்பல் என்பது இவர்கள் கூற்று. எதிரி நாட்டுகளைக் கட்டுப் படுத்தவும் அமெரிக்க நிறுவனங்களுக்கு உதவவும் மட்டுமே அரசாங்கம் தேவை என்ற பொருளாதார அடிப்படை வாதம் இவர்கள் அடிநாதம்.
1932-ல் அதிபர் பிராங்க்ளின் டெலினோ ரூசவெல்ட் உருவாக்கிய முற்போக்குக் கூட்டணியை உடைத்தெறிய இவர்கள் அதிபர் நிக்சன் தந்திரங்களைப் பயன்படுத்திப் பிற்போக்குச் சக்திகளைத் திரட்டி மாபெரும் கூட்டணி ஒன்றை அமைத்தார்கள்.
இவை அனைத்தும் ஒரே கூடாரத்தில் ரேகன் தலைமையில் கூடின. ரூசவெல்ட் தலைமையில் உருவான முற்போக்கு அரசு அமைப்புகள் மக்களின் வரிப்பணத்தை அட்டை போல் உறிஞ்சிக் கொண்டு ஊழலில் ஊறியிருந்தது இவர்களுக்குச் சாதகமாக இருந்தது.
உழைப்பவர்களுக்கு வரி, சோம்பேறிகளுக்கு அரசு சலுகையா? என்ற இவர்கள் அறைகூவல் வரிகளை நம்பியிருந்த அரசாங்கத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்தது. “வரி விதி, செலவு செய்” என்பதுதான் மக்களாட்சிக் கட்சியின் கொள்கை என்று இவர்கள் கட்டிய பட்டம் இன்று வரை மக்களாட்சிக் கட்சியை மிரள வைத்துக் கொண்டிருக்கிறது. 1992-ல் அதிபரான பில் கிளின்டனும் கூட இந்தப் பேரலையின் தாக்கத்தை எதிர் கொள்ள முடியாமல் இவர்களோடு ஒட்டி உறவாடிக் கொண்டே முற்போக்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
ரேகனின் பேரலையை வானளாவ உயர்த்தும் முயற்சியில் எழுந்தவர்தாம் இன்றைய அதிபர் ஜோர்ஜ் டப்யா புஷ். ரேகனைப் போன்ற பேரலையில் ஆட்சிக்கு வராமல், தட்டுத் தடுமாறி ஆட்சிக்கு வந்தாலும் தன்னை ரேகனின் மறு அவதாரமாகக் கருதிக் கொண்டவர் டப்யா புஷ். ரேகனைப் போலவே அரசு அமைப்புகளைச் சற்றும் நம்பாதவர் இவர். வாஷிங்டன் மக்கள் வரிப்பணத்தில் வாழும் அட்டைகள் நிரம்பிய குட்டை என்பது இவர் கொள்கை.
ரேகன் கொள்கைகளின் அடித்தளமே ஆடத் தொடங்கியது இவரது ஆட்சியில்தான்.
“கடன் வாங்கு, செலவு செய்” என்ற இவரது பொறுப்பற்ற கொள்கையின் விளைவுகளப் பார்க்கும்போது “வரி விதி, செலவு செய்” என்பது மிகவும் பொறுப்பான செயல் என்றே தோன்றுகிறது. மக்கள் வங்கிக்கணக்குகளைப் பாதுகாக்கத் தனியார் நிதி நிறுவனங்களின் மீது ரூசவெல்ட் ஆட்சி விதித்திருந்த கட்டுப் பாடுகளை வெகுவாகத் தளர்த்தியதில் முன்னணியில் இருந்தவர்கள் டப்யா புஷ், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கேன், மற்றும் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேன்.
என்னென்ன காரணங்களால் 1929 பங்குச் சந்தை வீழ்ச்சி பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்கு வழி வகுத்ததோ அதே காரணங்கள் மீண்டும் மேலெழுவதைப் பற்றிக் கவலைப் படாமல் கிளிப்பிள்ளை போல் அரசுக் கட்டுப்பாடுகள் தளர்ச்சி, செல்வந்தர்கள் வரி குறைப்பு என்ற மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தவர்கள் இவர்கள். இதில் உண்மையிலேயே பொருளாதார நிபுணரான ஆலன் கிரீன்ஸ்பான் அண்மையில் தனது கொள்கைகளால் அமெரிக்க, மற்றும் உலகப் பொருளாதார அமைப்புகள் அனைத்துமே நொறுங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதை உணர்ந்து, தன் கொள்கைகள் இந்த வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதை உணராமல் போய் விட்டதைப் பற்றி வருத்தம் தெரிவித்தார்.
ஆனால், டப்யா புஷ்ஷோ, ஜான் மெக்கேனோ இதைப் பற்றிப் புரிந்து கொண்டிருப்பதாகவோ, வருந்துவதாகவோ தெரியவில்லை. ஒபாமாவைப் பற்றிய மெக்கேனின் குற்றச்சாட்டு என்ன – “ஒபாமாவின் கொள்கை ‘வரி விதி, செலவு செய்’ – ஒபாமாவைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் வரி கூடும்” என்பதே. புஷ் – மெக்கேனின் ‘கடன் வாங்கு, செலவு செய்’ கொள்கையால் மக்களின் 401(k) ஓய்வுநிதிக் கணக்குகள் பேரிழப்புக்கு ஆளாகிக் கொண்டிருப்பதைப் பற்றி இவர்கள் வாயைத் திறக்க மாட்டார்கள்.
செப்டம்பர் 11 தாக்குதல் இவர்கள் கண்காணிப்பில்தான் நடந்தது. நியூ ஆர்லியன்ஸ் நகர் இவர்கள் ஆட்சியின் கீழ்தான் மூழ்கியது. ஓசாமா பின் லாடனின் முடியைத் தொடக்கூட இவர்கள் வக்கற்றவர்கள். ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களிலும் இவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஆட்சியின் கீழ்தான் பங்குச் சந்தையின் பெரு வீழ்ச்சியும், பொருளாதாரப் பெருவீழ்ச்சியும் தொடங்கியுள்ளன. இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் அரசாங்கக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவதற்குப் பதிலாக அரசாங்கத்தையே தளர்த்தும் மனப்பான்மை.
இதை மாற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் எத்தைகைய மாற்றம்? மெக்கேனுக்கும், டப்யாவுக்கும் அரசாங்கத்தைப் பற்றிய கொள்கைகளில் வேறுபாடு இல்லை. கடன் வாங்கிச் செலவு செய்யும் கொள்கையிலும் வேறுபாடு இல்லை. புஷ்ஷுக்குப் பதிலாக மெக்கேன் வந்தால் மட்டும் பெரிதாக என்ன மாற்றம் இருக்க முடியும்?
ஆனால், மக்களாட்சிக் கட்சியின் கொண்டு வரும் மாற்றம் என்ன?
அதற்கு எடுத்துக்காட்டு ஒன்றைப் பார்ப்போம்.
1989-ல் டப்யா புஷ்ஷின் தந்தை ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் ஆட்சியின் கீழ் சான் ஃபிரான்சிஸ்கோ நகரம் நிலநடுக்கத்தால் விளைந்த சேதங்களால் திணறியது. முக்கியமான பல மேம்பாலங்கள் சுக்கு நூறாகின. அவற்றை மீண்டும் கட்டி முடிக்கப் பல ஆண்டுகளாகின. நகரத்தின் வளர்ச்சி மட்டுப் பட்டது. பின்னர் 1992-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகரம் இனக் கலவரத்தால் பற்றி எரிந்தது. நாட்டின் அதிபர் புஷ்ஷும் சரி, கலிஃபோர்னியா மாநில ஆளுநர் வில்சனும் சரி நகரத்தைக் காப்பாற்ற முன் வரவில்லை. லாஸ் ஏஞ்சலஸ் நாதியற்றுத் தவித்தது.
1994-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்குள்ளே நார்த்ரிட்ஜில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தால் மிகுந்த சேதம் அடைந்தது. நிலநடுக்கத்தின் சேதம் தெரிந்த சில மணி நேரத்துக்குள் அதிபர் பில் கிளின்டன் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் மீட்சித் திட்டத்துக்கு வழி வகுத்தார். அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் இவர்கள் அனைவரும் நிலநடுக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்போதும் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு விரைந்து மீட்சிப் பணிகளைத் தொடங்கினார்கள். சில மாதங்களுக்குள் நகரத்தின் உடைந்த மேம்பாலங்கள் மீண்டும் கட்டப் பட்டன. பெருவீதிகள் சீரமைக்கப் பட்டன. நில நடுக்கத்தின் அடையாளமே தெரியாத அளவுக்கு நகரமும் புத்துணர்ச்சி பெற்று வளரத் தொடங்கியது. நல்ல அரசாட்சி என்பதற்கு இலக்கணம் வகுத்தார் பில் கிளின்டன். அவரது ஆட்சியின் கீழ் அமெரிக்கப் பொருளாதாரம் பெரு வளர்ச்சி நிலையை எட்டியது. ஏனென்றால், அரசாங்கத்தின் தேவையை முற்றும் உணர்ந்தவர் அவர்.
2008 தேர்தலின் முக்கியக் கொள்கைப் போராட்டம் இதுதான். அரசாங்கத்தின் தன்மை என்ன? அதன் தேவை என்ன?
குடியரசுக் கட்சிக்காரர்கள், அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்கள் அரசியல் எதிரிகளைப் பழி தீர்த்துக் கொள்வார்கள். தங்கள் மத நம்பிக்கைகளை மேம்படுத்துவார்கள். ஊழல் செய்யும் பெரு நிறுவனங்களைச் செல்லமாகத் தட்டி அனுப்பி விடுவார்கள். ஆனால், வெளிநாட்டுக் கொள்கைகளிலும், பொருளாதாரக் கொள்கைகளிலும் கெட்டிக்காரர்கள் என்று எடுத்த பெயரைக் கெடுத்துக் கொண்டுவிட்டார்கள்.
மக்களாட்சிக் கட்சிக்காரர்கள், மக்களின் தனி வாழ்க்கையில் அரசாங்கம் குறுக்கிடுவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் வசதியுள்ளவர்கள் மீது வரி விதித்து வசதியற்றவர்களுக்கு வாழ்வு கொடுப்பது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமை என்று நம்புபவர்கள்.
பொருளாதார வீழ்ச்சி சமயத்தில் இவர்கள் இருவரில் எவர் கொள்கை மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்?
1980-ல் கார்ட்டர் காட்டிய பூச்சாண்டிகளையும் மீறி மக்கள் ரேகனை வாக்குப் பேரலை மூலம் தேர்ந்தெடுத்தார்கள். 2008-ல் ரேகன் பேரலை வடியும்போது மெக்கேன் காட்டும் பூச்சாண்டிகளையும் மீறி ஒபாமா பேரலை எழுந்து கொண்டிருப்பது புலப்படுகிறது.
அமெரிக்க வரலாற்றிலேயே முக்கியமான தேர்தல் இது என்று பலர் கருதுகிறார்கள். ஆனால், அமெரிக்க வரலாற்றிலேயே மிக முக்கியமான தேர்தல் எட்டாண்டுகளுக்கு முன்னர் நடந்தது. புதிய ஆயிரத்தாண்டு தொடங்கும்போது தேர்ந்தெடுக்கப் பட்ட ஜார்ஜ் டப்யா புஷ்ஷின் திறமையின்மை அமெரிக்க வல்லரசின் சறுக்கலுக்கு வித்திட்டு விட்டது. கடந்த எட்டாண்டுகளில் அவர் செய்தவற்றின் பின் விளைவுகளில் இருந்து மீளப் பெரு முயற்சி தேவைப்படும்.
ஒபாமா அதிபராகத் தேர்தெடுக்கப் பட்டால் குறைந்தது அமெரிக்கச் சறுக்கல் நிதானப் படலாம். புஷ்ஷின் கொடுங்கோலாட்சியின் கடுமையான விளைவுகளால் வாடும் அமெரிக்கா மட்டுமல்ல உலகமே ஒபாமாவின் வெற்றியை வரவேற்கும்.
– மணி மு. மணிவண்ணன், சென்னை, இந்தியா.
Posted in இனம், ஒபாமா, கருத்து, குடியரசு, ஜனநாயகம், ஜார்ஜ் புஷ், மெக்கெய்ன்
குறிச்சொல்லிடப்பட்டது 1980, Analysis, அரசியல், அலசல், இரான், ஒபாமா, கட்டுரை, கருத்து, கார்டர், கார்ட்டர், கிளிண்டன், குடியரசு, க்ளின்டன், சமூகம், சரித்திரம், ஜனநாயகம், நிதிநிலை, பில், புஷ், பெட்ரோல், பொருளாதாரம், மகயின், மக்களாட்சி, மெகயின், ரீகன், ரேகன், வரலாறு, விலைவாசி, Bush, Carter, Economy, Elections, Fear, Finance, GWB, History, iran, Mccain, Obama, Politics, Polls, President, Regan, Wars
அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியக்கூறுகள் மிகப்பிரகாசம் – பேராசிரியர் எரிக் அஸ்லானர் நேர்காணல் :: வீரகேசரி நாளேடு – 10/27
கேள்வி: இலங்கை போன்ற நாடுகளில் கடைசி நேர அனுதாப அலைகள் தேர்தல் முடிவில் தாக்கம் செலுத்துவது வரலாற்றில் நிருபணமாகியுள்ளது அந்தவகையில் தற்போது பின்னிலையிருக்கும் மக்கெய்னுக்கு சாதகமாக ஏதேனும் திடீர் திருப்பங்கள் ஏற்படச்சாத்தியமுள்ளதா?
:::
கேள்வி: இந்தத்தேர்தலுக்கு முன்னர் அதிகம் அறியப்படாத பராக் ஒபாமாவின் எழுச்சிக்கு காரணம் யாது?
பதில்:
– முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை
மிகவும் நோயுற்றிருக்கும் அவருடைய தாய் வழிப் பாட்டியைப் பார்க்க ஹவாய்க்குப் போயிருக்கும் ஒபாமா தான் அமெரிக்கப் பிரஜை இல்லை என்பதற்கான ஆவணங்களை அழிக்கப் போயிருக்கிறார் என்ற வதந்தியைக் கிளப்பியிருக்கிறது.
:::
ஸ்பெயினைத் தோற்கடித்து கியூபாவை அமெரிக்கா தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது. அது மட்டுமல்ல, பிலிப்பைன்ஸ், போர்ட்டரீகோ மற்றும் பசிபிக் கடலில் உள்ள குவாம் என்னும் தீவு ஆகியவற்றையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது.
:::
இந்திய பத்திரிக்கையாளர் எம்.ஜே. அக்பர் கூறுவது போல் உள்நாட்டைப் பொறுத்தவரை அமெரிக்கா ஜனநாயக நாடு என்றாலும் உலகைப் பொறுத்தவரை ஒரு சர்வாதிகாரி.
:::
அமெரிக்காவின் முழு ஆளுமையிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றிய பெருமை, மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தியைத்தான் சேரும்.
:::
தன் சிறு வயதில் இந்தோனேஷியாவின் ஜாகர்த்தாவில் வளர்ந்து வந்த போது எப்போதும் சண்டை போட அமெரிக்கா தயாராக இருப்பதையும், தன்னுடைய பொருளாதார அமைப்பை மற்ற நாடுகளின் மீது திணிக்க விரும்புவதையும், தன் நலனுக்காக ஊழல் நிறைந்த சர்வாதிகார்களை அமெரிக்கா ஆதரித்து வந்ததோடு அந்த நாடுகளில் நடக்கும் ஊழலைக் கண்டுகொள்ளாமல் இருந்ததையும் அறிந்ததாகவும் தன் புத்தகத்தில் கூறியிருக்கிறார்.
– ஸதக்கத்துல்லாஹ், கடையநல்லூர்
அமெரிக்கத் தேர்தல் முடிவை விட அங்குள்ள மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது பொருளியல் பிரச்சினைக்கான தீர்வைத்தான். ஓராண்டுக்கு முன் அதிபர் தேர்தல் பிரசாரம் தொடங்கியபோது, அமெரிக்கப் பொருளியல் நிலைத் தன்மையோடு இருந்தது.
4. Conservative Tamils for McCain | Asian Americans for McCain