1. ”கண்ணிலிருந்து மறைந்த பின்புதான் அவள் அறிந்தாள், அவன் ஒருகணம்கூட திரும்பிப்பார்க்கவேயில்லை என்று.”
திரும்பிப் பார்ப்பது கிரேக்க தொன்மத்திலும் ஆதிசங்கரர் புராணக் கதைகளிலும் கூட அடிக்கடி வருகிறது. உதாசீனப்படுத்துவது ஒரு வகை என்றால், “உனக்கும் கீழே உள்ளவர் கோடி!” என சொல்வது கூட திரும்பிப் பார்ப்பதில் ஒரு வகை.
2. ஜெயமோகனின் மகாபாரதம் படிக்கும்போது உங்களுக்கு எந்த மாதிரி உணர்வு வருகிறது? கல்கியின் “பொன்னியின் செல்வன்” போன்ற அனுபவம் என நினைத்து; சுஜாதா எழுதிய சரித்திர நாவலான “இரத்தம் ஒரே நிறம்” போன்ற எதிர்பார்ப்புடன் துவங்கினால்; சாண்டில்யன் கதை படிப்பது போல் இருக்கிறது. ஜெயமோகனிடம் எனக்குப் பிடித்ததாக இருப்பது அவர் எழுதும் உளவெளிப்பாடுகளின் பதிவுகள். நம் மனம் என்ன நினைக்கிறது, ஏன் அவ்வாறு முடிவெடுக்கிறது என்பதற்கான தத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளை வெளிப்படையாக விவரிப்பது எனக்குப் பிடிக்கும். இங்கே கதை மட்டுமே ஓடுகிறது. சாண்டில்யனில் அதுவும் ஓடாது. ஆனால், இன்னும் கொஞ்சம் நிதானமாக மாரத்தான் துவங்கி இருக்கலாம்.
3. ”அறம்” வந்தபிறகு இந்த சம்பவம் சார்ந்த நடைக்கு மாறிவிட்டாரோ? அல்லது அதுதான் இன்றைய தலைமுறைக்கு எடுபடுகிறதோ? அல்லது சட்டுபுட்டுனு எல்லாருக்கும் தெரிந்த கதைக்கு வருவதற்கான அவசரமோ? தினசரி வாசகர் வருகையைத் தக்கவைத்துக் கொள்ளும் விருப்பமோ?
4. ”அன்னை அவனுக்களித்தவை எல்லாம் வெறும் சொற்களாக இருந்தன. நதிகள், மலைகள், நகரங்கள், ஜனபதங்கள். ஒவ்வொன்றும் அவன் முன் சொல்லில் இருந்து இறங்கி விரிந்து பருவடிவம் கொண்டன.”
பட்டால் மட்டுமே புரியும். எத்தனை சொன்னாலும், எவ்வளவு படித்தாலும் அனுபவம் போல் வருமா?
5. சுட்ட ஒவியங்களாகப் போடாமல், இதற்கென பிரத்தியேகமாகப் போடப்படும் படங்களைக் கண்டு கொண்டாட வேண்டும். அந்தக் கால விகடனில் சில்பி போல் இந்தக் கதைக்கான ஓவியங்களும் காலந்தோறும் பேர் சொல்லும். வெறுமனே கூட்டுக்கலவையாக பல்லிளிக்காமல், பிரதிபிம்பமாக மனிதர்களின் அவயங்களை மட்டும் கிறுக்காமல், படு சிரத்தையாக, அமர்க்களமாக வந்து கொண்டிருக்கிறது. நாளைய தேதியில் பளபளா தாளில் மினுக்கும் ஓவியங்களுக்காகவும் பலரின் காபி மேஜைகளை அலங்கரிக்கும் புத்தகமாக உருவாகிறது.
6. ”பாதாளநாகம் போன்ற கரிய உடல் மீது புதுமழையில் முளைத்த பசும்புற்கள் காற்றில் சிலுசிலுக்க வளைந்து ஓங்கிக் கிடந்தது கோட்டை. ”
நான் இது வரை சீனப் பெருஞ்சுவரை நேரில் பார்த்ததில்லை. அங்கொரு செஞ்சிக் கோட்டையும் இங்கேயொரு லண்டன் பிரபுக்களின் பீரங்கி பாதுகாப்பு கொண்ட இருப்பிடங்களும் எங்கேயோயொரு ராஜபுத் அரண்மனையின் சிதிலமடைந்த மதில்களும் பார்த்திருந்தாலும், ஜெயமோகன் விவரிக்கும் அஸ்தினாபுரி கம்பீரமாக அதே சமயம் தத்துவார்த்தமாக எழுந்து நிற்கிறது.
7. ஆஸ்திகன் பகுதியை சன் டிவியின் முதல் வார மகாபாரதத்தில் பார்த்ததால், இன்னும் எளிதாக உள்வாங்க முடிந்தது. திரைக்காட்சியாக்கத்தில் கண்ட ஒன்றை, படிப்பது என்றுமே அந்த கதாபாத்திரத்தை உருவகப்படுத்த உதவுகிறது.
8. அந்தக் காலம் எப்படி இருந்திருக்கும்? யார் யார் வந்தார்கள்? எப்படி உட்கார்ந்திருந்தார்கள்? என்ன மாதிரியான அலங்காரம்? தாமதமாக வருபவர்களே முக்கியமானவர்களா? சுற்றுச்சூழலும் தட்பவெட்பமும் எங்ஙனம்? எங்கே நடக்கிறது என இடம் மட்டும் பெயர் சூட்டாமல், அந்த விவரிப்பிற்கு உயிர் தருகிறார் ஜெயமோகன்.
9. ஒவ்வொரு சொல்லும் ஆராயலாம். ஒரு பதமாக – அரணிக்கட்டை: பகுத்தறிவு: மரணத்திற்கு அப்பால் – 15
சுட்டி: நூல் ஒன்று – முதற்கனல் – 2