Monthly Archives: ஜனவரி 2014

ஜெயமோகன்: வெண்முரசு: முதற்கனல் – 2

முந்தைய பதிவு

1. ”கண்ணிலிருந்து மறைந்த பின்புதான் அவள் அறிந்தாள், அவன் ஒருகணம்கூட திரும்பிப்பார்க்கவேயில்லை என்று.”

திரும்பிப் பார்ப்பது கிரேக்க தொன்மத்திலும் ஆதிசங்கரர் புராணக் கதைகளிலும் கூட அடிக்கடி வருகிறது. உதாசீனப்படுத்துவது ஒரு வகை என்றால், “உனக்கும் கீழே உள்ளவர் கோடி!” என சொல்வது கூட திரும்பிப் பார்ப்பதில் ஒரு வகை.

2. ஜெயமோகனின் மகாபாரதம் படிக்கும்போது உங்களுக்கு எந்த மாதிரி உணர்வு வருகிறது? கல்கியின் “பொன்னியின் செல்வன்” போன்ற அனுபவம் என நினைத்து; சுஜாதா எழுதிய சரித்திர நாவலான “இரத்தம் ஒரே நிறம்” போன்ற எதிர்பார்ப்புடன் துவங்கினால்; சாண்டில்யன் கதை படிப்பது போல் இருக்கிறது. ஜெயமோகனிடம் எனக்குப் பிடித்ததாக இருப்பது அவர் எழுதும் உளவெளிப்பாடுகளின் பதிவுகள். நம் மனம் என்ன நினைக்கிறது, ஏன் அவ்வாறு முடிவெடுக்கிறது என்பதற்கான தத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளை வெளிப்படையாக விவரிப்பது எனக்குப் பிடிக்கும். இங்கே கதை மட்டுமே ஓடுகிறது. சாண்டில்யனில் அதுவும் ஓடாது. ஆனால், இன்னும் கொஞ்சம் நிதானமாக மாரத்தான் துவங்கி இருக்கலாம்.

3. ”அறம்” வந்தபிறகு இந்த சம்பவம் சார்ந்த நடைக்கு மாறிவிட்டாரோ? அல்லது அதுதான் இன்றைய தலைமுறைக்கு எடுபடுகிறதோ? அல்லது சட்டுபுட்டுனு எல்லாருக்கும் தெரிந்த கதைக்கு வருவதற்கான அவசரமோ? தினசரி வாசகர் வருகையைத் தக்கவைத்துக் கொள்ளும் விருப்பமோ?

4. ”அன்னை அவனுக்களித்தவை எல்லாம் வெறும் சொற்களாக இருந்தன. நதிகள், மலைகள், நகரங்கள், ஜனபதங்கள். ஒவ்வொன்றும் அவன் முன் சொல்லில் இருந்து இறங்கி விரிந்து பருவடிவம் கொண்டன.”

பட்டால் மட்டுமே புரியும். எத்தனை சொன்னாலும், எவ்வளவு படித்தாலும் அனுபவம் போல் வருமா?

5. சுட்ட ஒவியங்களாகப் போடாமல், இதற்கென பிரத்தியேகமாகப் போடப்படும் படங்களைக் கண்டு கொண்டாட வேண்டும். அந்தக் கால விகடனில் சில்பி போல் இந்தக் கதைக்கான ஓவியங்களும் காலந்தோறும் பேர் சொல்லும். வெறுமனே கூட்டுக்கலவையாக பல்லிளிக்காமல், பிரதிபிம்பமாக மனிதர்களின் அவயங்களை மட்டும் கிறுக்காமல், படு சிரத்தையாக, அமர்க்களமாக வந்து கொண்டிருக்கிறது. நாளைய தேதியில் பளபளா தாளில் மினுக்கும் ஓவியங்களுக்காகவும் பலரின் காபி மேஜைகளை அலங்கரிக்கும் புத்தகமாக உருவாகிறது.

6. ”பாதாளநாகம் போன்ற கரிய உடல் மீது புதுமழையில் முளைத்த பசும்புற்கள் காற்றில் சிலுசிலுக்க வளைந்து ஓங்கிக் கிடந்தது கோட்டை. ”

நான் இது வரை சீனப் பெருஞ்சுவரை நேரில் பார்த்ததில்லை. அங்கொரு செஞ்சிக் கோட்டையும் இங்கேயொரு லண்டன் பிரபுக்களின் பீரங்கி பாதுகாப்பு கொண்ட இருப்பிடங்களும் எங்கேயோயொரு ராஜபுத் அரண்மனையின் சிதிலமடைந்த மதில்களும் பார்த்திருந்தாலும், ஜெயமோகன் விவரிக்கும் அஸ்தினாபுரி கம்பீரமாக அதே சமயம் தத்துவார்த்தமாக எழுந்து நிற்கிறது.

7. ஆஸ்திகன் பகுதியை சன் டிவியின் முதல் வார மகாபாரதத்தில் பார்த்ததால், இன்னும் எளிதாக உள்வாங்க முடிந்தது. திரைக்காட்சியாக்கத்தில் கண்ட ஒன்றை, படிப்பது என்றுமே அந்த கதாபாத்திரத்தை உருவகப்படுத்த உதவுகிறது.

8. அந்தக் காலம் எப்படி இருந்திருக்கும்? யார் யார் வந்தார்கள்? எப்படி உட்கார்ந்திருந்தார்கள்? என்ன மாதிரியான அலங்காரம்? தாமதமாக வருபவர்களே முக்கியமானவர்களா? சுற்றுச்சூழலும் தட்பவெட்பமும் எங்ஙனம்? எங்கே நடக்கிறது என இடம் மட்டும் பெயர் சூட்டாமல், அந்த விவரிப்பிற்கு உயிர் தருகிறார் ஜெயமோகன்.

9. ஒவ்வொரு சொல்லும் ஆராயலாம். ஒரு பதமாக – அரணிக்கட்டை: பகுத்தறிவு: மரணத்திற்கு அப்பால் – 15

சுட்டி: நூல் ஒன்று – முதற்கனல் – 2

ஜெயமோகனின் வெண்முரசு – வேள்விமுகம்

தினம் ஒரு கதை எழுதுகிறார் ஜெயமோகன். அசகாய சூரன். யார் வேண்டுமானாலும் தினசரி ஒரு பகுதியாக மகாபாரதம் எழுதிவிடலாம். ஆனால், ஜெ.மோ. எழுதும்போது அது முக்கியத்துவம் பெறுகிறது.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படத்தை இயக்குவது போல்…
ஸ்டீவ் ஜாப்ஸ் காலத்து ஆப்பிள், புதிய நுட்பத்தை அறிமுகம் செய்வது போல்…
எனக்கு புதிய இடத்தில் வேலை கிடைப்பது போல்…

எல்லாமே எதிர்பார்ப்பு கலந்த ஆர்வம் எழவைக்கும் நிகழ்வுகள். வித்தியாசமாக இனி என்ன நிகழ்ந்துவிட முடியும் என நினைக்கும்போது அசத்தும் விஷயங்களைக் கொணர்பவை.

அவ்வப்போது தோன்றுபவற்றை எழுதி வைக்கலாம். முதல் பகுதி குறித்து

  1. அம்மா ஆர். பொன்னம்மாள் எழுதிய கதையொன்றில் ஆஸ்திகரை கேள்விப்பட்டிருக்கிறேன். நாஸ்திகருக்கு எதிர்ப்பதம் ஆஸ்திகர் என்பது தவிர வேறு எதுவும் இவரைக் குறித்து என்னுடைய நினைவில் ஆழமாகப் பதியவில்லை. “தீபம்” பக்கங்களைப் புரட்டினால் அல்லாது தொலைபேசும்போது கேட்டால் ஏதாவது மேட்டர் கிடைக்கும். விசாரிக்க வேண்டும்.
  2. முதல் பகுதியில் நிறைய பெயர்கள். கத்ரு-விற்கும், வினதை-க்கும் நடுவே கிடந்த ஓரகத்தி சண்டைகளை ஏற்கனவே கேட்டிருப்பதாலும், அருணனும், கருடனும் அறிந்திருப்பதாலும், அந்தப் பகுதிகளைப் படிக்க சிரமமில்லை. ஆனால், சுவாரசியமுமில்லை.
  3. இந்தப் பத்தியில் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுபவையாக அந்த வரம் தரும் பகுதி அமைந்திருக்கிறது. மேட்ரிக்ஸ் படத்திற்கு பிறகு “What is your purpose in life?” வேரூன்றிய மாதிரி, கல்வியா / செல்வமா / வீரமா-விற்கு பதில், “உள்ளிருந்து எழும் கனல், அதை அடைய அடைய அடுத்ததை நோக்கும் தாகம்” என்னும் வேண்டுகோள் – புதிய கீதை ஒன்று.
  4. ஜரத்காரு – மின்மினி – பிண்டம் – பித்ரு…விற்கெல்லாம் இன்னும் கொஞ்சம் நீட்டி முழக்கி இருக்கலாமோ? சுண்டுவிரல் அளவில் நடமாடும் மூதாதையர்களைக் கண்டு நாம் பயப்படுகிறோம். அவர்களுக்கு திவசம் போடுகிறோம். வாழைக்காய் கொடுக்கிறோம். அவர்களும் அந்தக் கன்றுக்குட்டியையும் எண்ணெயையும் வைத்துக் கொண்டு கடைத்தேறுகிறார்கள்.
  5. வரமோ… சாபமோ… கொடுத்ததற்குப் பின்னேயே கவலை கொள்கிறோம். ஆத்திரம் வந்தால் திட்டிவிடுவது ஆகட்டும்; அன்பு பெருகினால் வைரமாலை வாங்கி விடுவது ஆகட்டும். சிந்திய வார்த்தைகளையும் வாங்கிய கடனையும் அடைப்பது பெரும்பாடு என்பதை மகாபாரதத்தைப் பார்த்தும் அமெரிக்கா புரிந்துகொள்ளவில்லை.
  6. ’தழுவித்தழுவி இறுகியபின் மேலும் தழுவும்பொருட்டு அவர்களின் தழுவல் சற்றே தளர்ந்தபோது இருவருக்கும் நடுவே காலம் புகுந்து கொண்டது.’ : )
  7. கடிதம் இல்லாமல் ஜெ.இன்-னா? – http://www.jeyamohan.in/?p=44023 :: http://mahabharatham.arasan.info/2014/01/1.html
  8. இவ்வளவு பெரிய கதையில் அயர்ச்சியூட்டும் பிரயோகங்கள்… ஒரே மாதிரிக் கதைகளை வேறுவேறு விதமாக சொல்வது… பத்தாண்டுகளாக தொடர்ச்சியான மொழிநடை! பிரமிக்க வைக்கிறார்.
  9. ’உன்னுடைய சின்னஞ்சிறு உடலுக்குள் விதைக்குள் பெருமரம்போல இப்பிரபஞ்சத்தின் பெருநிகழ்வொன்று குடியிருக்கிறது.’ – இது ஜெயமோகனை நோக்கி சொல்லப்பட்டாலும் சரியே!

நூல் ஒன்று – முதற்கனல் – 1

அ. முத்துலிங்கமும் தற்கால உலக இலக்கியமும்: சிறுகதைகள்

விடுமுறையில் ரெண்டு கதைகள் படித்தேன். இரண்டுமே பயங்கர எதிர்பார்ப்போடு படித்தேன். இரண்டுமே திருப்தியான கதைகள்.

1. http://www.newyorker.com/fiction/features/2013/10/21/131021fi_fiction_munro
முதியோர் இல்லம் அனுப்ப படுபவரின் வாழ்க்கையை சொல்கிறார் நோபல் பரிசு பெற்ற ஆலிஸ் மன்றோ. இணையத்திலேயே இலவசமாகப் படிக்கலாம்.

2. http://harpers.org/archive/2013/10/sic-transit-2/
இது இணையத்தில் இலவசமாகக் கிடைக்கவில்லை. சாதாரண விஷயத்தை எப்படி பிரும்மாண்டமாக்குவது என்பதை உணர்த்துகிறார். சமூகக் கதையில் மர்மத்தை உண்டாக்குகிறார். பிறன்மனை நோக்குவதை அறப்பார்வையாக சொல்வதை சத்தமாக கத்தாமல் சன்னமாக உணர்த்துகிறார்.

தமிழில் அ முத்துலிங்கம் கொஞ்சம் இவர்களை எட்டிப் பிடித்து தாண்டிக் கூட விடுகிறார் இங்கே:
http://amuttu.net/viewArticle/getArticle/334

சிறுகதை: பாவண்ணன் – பாதை

முதியோரை நாம் எப்படி நடத்துகிறோம்? வயதான பிறகு தோன்றும் கனவுகளுக்கு என்ன அர்த்தம்? மனநிலை பாதிக்கப்பட்டவர்களை சமூகம் எவ்வாறு பார்க்கிறது?

பாவண்ணனின் “பாதை” கதை இவற்றை பேசுபொருள்களாகக் கொண்டிருக்கின்றன.

தமிழில் முக்கியமான சிறுகதை எழுதும் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஒரு நடையில் தேர்ந்த பிறகு இன்னொரு நடைக்குத் தாவிடுகிறார்கள். அதாவது, எனக்கு சி/சி++/சி# நன்றாக நிரலி எழுத வரும். அவற்றில் திறமைசாலி ஆனவுடன், சீக்வல், எஃப்# என்று வேறு நுட்பத்திற்கு சென்று பயில்வேன். அந்த மாதிரி எதார்த்தம் முடிந்த பிறகு மாயாஜாலம்; அதன் கூடவே அதிபுனை, அறிபுனை என்று கூடு விட்டு கூடு பாய முயல்கிறார்கள்.

சில சமயம் அவர்கள் அந்த புதுப் பகுதியிலும் வெற்றி காண்கிறார்கள். புதிய வாசக்ர்களை ஈர்க்கிறார்கள். தங்களைப் படிக்கும் நுகர்வோர் வட்டத்தைப் பெரிதாக்கிக் கொள்கிறார்கள். இது சாதகமான விஷயம்.

ஆனால், பாவண்னன் இப்படி எல்லாம் குரங்கு போல் கிளை பாய்வதில்லை. இது எனக்குப் பிடித்த விஷயம். எடுத்துக் கொண்டதில் முழுமையாக பரிமளிப்பது மகிழ்ச்சி தருகிறது.

இன்னும் சிலர் ஜே.பி.சாணக்யா, பெருமாள் முருகன் போன்றோர் அலைபாயாமல் ஒரு அலைவரிசையிலேயே இயங்கினாலும், அவரவர்களின் முதல் பருவத்தின் சிறுகதைகள் போல் தற்கால புனைவுகள் கவரவில்லை. இவர்களுக்கு கதை எழுதும் வித்தை கைவசப்பட்டிருப்பதால் கதை நன்றாகவே கட்டமைக்கப்பட்டிருக்கும். இருந்தாலும் கதை வாசித்து முடித்த பிறகு ஏதோ தவறவிட்டது போல் இருக்கும். பாவண்ணன் இந்த வகைக்குள்ளும் இன்றளவும் சிக்காமல் இருப்பது இன்னும் மகிழ்ச்சி தருகிறது.

நீங்களும் கதையைப் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை சொல்லுங்களேன்…
http://puthu.thinnai.com/?p=23838