Monthly Archives: ஏப்ரல் 2006

The Week says too Close Call

தி வீக்கின் கருத்துக் கணிப்புகளில் இருந்து:

திமுக வாக்கு சதவீதம்: 45 %
அஇஅதிமுக சதவிகிதம்: 42 %

இன்னும் 1.5 % வாக்குகள் திமுக பக்கம் திரும்பினால், 160-165 இடங்கள் வரை திமுக கூட்டணிக்கு கிடைக்கும்.

செய்தி: நியுஸ் டுடேயில் வெளிவந்ததாக சன் நியுஸ்

பி.கு.: மாலைச்சுடரிலும் தேடியாச்சு; கிடைக்கவில்லை.

Ju.Vi – Galatta Cocktail

நன்றி: ஜூனியர் விகடன்

Tips on ‘How to’ Advice

துப்பு கொடுக்க பத்து துப்புகள்

  1. பத்து துப்புகள் வழங்குவது சிறப்பு; 10+கொசுறு, ஒன்பது கட்டளை, எட்டு எட்டா மனுசன் வாழ்வைப் பிரிச்சுக்கோ என்று துப்பினால் சாலச் சிறப்பு. (காட்டாக, ஜெயலலிதாவுக்காக எழுதினால் 9, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கினால் 13).
  2. உங்களால் வழங்கப்படும் துப்புகளை, நீங்கள் கடைபிடிக்காமல் இருப்பது சிறப்பைத் தரும். (காட்டாக, கண்ணியமாக எழுத ஆலோசனை கொடுக்கும்போது, பயன்படுத்தக் கூடாத சுடுசொற்கள் என்று ஒரு துப்பு கொடுக்கவும்).
  3. பொத்தாம்பொதுவாக வலைப்பதிவருக்கு டிப்ஸ் என்பதைவிட, பெயர் போட்டு குறிப்பிட்ட வலைப்பதிவருக்கு டிப்ஸ் என்றால், ஏழு வாசகர்களே மீண்டும் மீண்டும் துப்பைப் படிக்க ஓடோடி வருவார்கள். (பல வலைப்பதிவர்கள் ஏற்கனவே இதை சிறப்பாக அனுசரிப்பதால் எடுத்துக்காட்டுக்கே வேலையில்லை).
  4. துப்புக்கு எதிர்துப்பு வழங்குமாறு துப்புகளைத் தொடுக்கவும். (காட்டாக சென்ற புல்லட்டில், ‘ஏழு’ வாசகர் யார், எந்த வலைப்பதிவர்கள் சகாக்களுக்கு தலைப்பு அந்தஸ்து கொடுக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா என்னும் அனானி கேள்வி எழவைக்கவும்).
  5. எந்தத் துப்பு வழங்கினாலும், தொழில் நுட்ப சங்கதிகள் ஒன்றிரண்டை சொருகி விடவும். (காட்டாக, கவிதை நன்றாக அமைய முரசு அஞ்சலைக் கொண்டு தட்டச்சவும்.)
  6. மறுப்புக்கூற்றுகள் இல்லாமல் துப்புகள் கொடுக்காதீர்கள். (காட்டாக, என்னுடைய துப்புகள் அவார்டு படம் பார்க்கிற மாதிரி என்ன சொல்லவருகிறது என்று புரியவில்லை போல் தோன்றினால் அது சிறுவனின் அறியாமுயற்சி என்று விட்டுவிடவும்).
  7. மன விகாரங்களை ஆலோசனகளாக எழுத்தில் வடிக்காமல், உங்கள் நோட்பேடில் எழுதிக் கிழித்து விடல் அல்லது கடாசிவிட்டு ‘குப்பைத் தொட்டி’யையும் காலியாக்கி (சந்தேகமாக இருந்தால்) கடின இயக்கியை (hard-drive) format-உம் செய்துவிடல் நலம்.
  8. சிறுகதை இலக்கணம் என்று பாரா சொல்பவற்றில் சில துப்பு விநியோகிகளுக்கும் பொருந்தும்.
  9. யார் யாரோ சொன்னதன் தொகுப்பாக இருந்தால் மூலங்களை குறிப்பிட்டு திரட்டு என்று சொல்லிவிடவும் அல்லது திருட்டு தர்ம அடி கிடைக்கும்.
  10. இலவசமாக எளிதாக வழங்கக் கூடியது அட்வைஸ்தான். எனவே, பதிவெழுத விஷயம் இல்லாவிட்டால் ‘டிப்ஸ்’ பதிவு இடவும். (காட்டாக, எந்த விஷயத்திற்கு துப்பு தருவது என்று விளங்காவிட்டால், துப்பு கொடுக்க துப்புகள் கொடுக்கவும்).

| |

Cinematographer U.K. Senthil Kumar

நிகழ்ச்சி: முதல் பயணம்
தொலைக்காட்சி: கே டிவி
பேசுபவர்: ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில்குமார்
பங்காற்றிய சில திரைப்படங்கள்: உள்ளத்தை அள்ளித்தா, அருணாசலம், முறை மாமன்.
பேட்டியாளர்: ப்ரியதர்ஷிணி

Cinematographer U.K. Senthil Kumar's Introduction in Sun TV 'Muthal Payanam' - Cameraman of 'Ullathai Alli Thaa', 'Murai Maaman' - an audio post - click to play


மணிவண்ணனுடன் வேலை பார்த்த முதல் பட அனுபவம் மற்றும் FAO (UN)இல் வேலை பார்த்தபோது நிகழ்ந்த ஒடுக்குமுறை:

Cinematographer U.K. Senthil Kumar's Introduction in Sun TV 'Muthal Payanam' - Cameraman of 'Ullathai Alli Thaa', 'Murai Maaman' : an audio post - click to play

நன்றி: கே டிவி


| |

Reality TV Show

சீரியஸாக விளக்கிய இதழ்: தமிழ் முரசு

Jayalalitha’s Jewels

வெளியான இதழ்: தினகரன்

Contestant Stats, EVM, Thoughtful Debates

மின்னி வாக்கு எந்திரங்கள் (Electronic voting machines) குறித்த இராம.கி.யின் தமிழ்-உலகம் பதிவு:

தமிழ்நாட்டில் 234 தொகுதிகள். பொதுவாக ஒவ்வொரு தொகுதிக்குள்ளும் பல வாக்கு நிலையங்கள் (polling stations) இருக்கும். ஒவ்வொரு வாக்கு நிலையமும் இரண்டு அல்லது 3 வட்டுகளைக் (wards) கொண்டிருக்கும். ஒரு வாக்கு அறை (polling booths) என்பது கிட்டத் தட்ட 1200 பேருக்கு ஒன்றாக இருக்கும். ஒரு வாக்கு நிலையத்தில் உள்ள வாக்காளர் எண்ணிக்கை 3, 4 வாக்கு அறைகள் கொண்டதாக இருக்கும். (5 வாக்கு அறைகள் வரைக்கும் கூட பெரிய வாக்கு நிலையங்களில் இருந்து நான் பார்த்திருக்கிறேன்.) ஒவ்வொரு வாக்கு அறைக்கும் ஒரு தலைமை வாக்கு அதிகாரி இருப்பார்.

தமிழ்நாட்டின் வாக்காளர் எண்ணிக்கை கிட்டத் தட்ட 62 மில்லியன்கள்.(சரியான எண்ணிக்கையைத் தேடினால் கண்டுபிடிக்க முடியும்; நான் நேரம் கருதி அதைத் தேடிக் கண்டுபிடிக்கவில்லை.) இதை 1200ல் வகுத்தால் மொத்தம் 51700 வாக்கு எந்திரங்கள் தமிழ்நாட்டில் மட்டும் பயன்படும் என்று கணக்கிட முடியும். (புதுச்சேரி 0.65 மில்லியன்கள்.)


தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக 160 பெண்கள் போட்டி: தினமணி

  • நாகப்பட்டினம், திருத்துறைப் பூண்டி (தனி), ஒரத்தநாடு ஆகிய தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் எவரும் போட்டியிடவில்லை.
  • ஸ்டாலின் போட்டியிடும் ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிகபட்சமாக 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
  • மிகக் குறைவாக ஒரத்தநாடு தொகுதியில் 4 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
  • ஒரு மின்னணு இயந்திரத்தில் 16 பேர் வரை இடம்பெறச் செய்யமுடியும். இதன்படி 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2 மின்னணு இயந்திரங்கள் வைக்க வேண்டியுள்ளது.

    கையேந்தி பவனும் அமுதசுரபியும்எஸ். முரளி

    கட்சி 1: “”… எனவே நாங்கள் விவசாயத்துக்குப் பிரதான முன்னுரிமை வழங்க வேண்டும் என்கிறோம். அமெரிக்காவில் விளையும் சோயா பீன்சுக்கு மானியத்தை அள்ளி விடுகிறதே அமெரிக்க அரசு! ஆனால் நம் நாட்டில் மட்டும் உரத்துக்கு மானிய வெட்டு. இது ஏன்? மிகப் பெரிய முதலீட்டின் தொழில் தொடங்கினால் அதற்குத் தரும் பல்வேறு சலுகைகளுக்கு சுங்கத் தீர்வை விலக்கில் இருந்து மின் கட்டணச் சலுகை வரை – நீங்கள் வைத்துள்ள பெயர் ஊக்கத்தொகை. ஆனால் விவசாயி போடும் உரத்துக்குத் தந்தால் அதன் பெயர் “மானியம்’. நீங்கள் என்ன பிச்சையா போடுகிறீர்கள்?”

    கட்சி 2: “”விவசாயம் பிரதானம் என்பதை நாங்கள் மறுக்கவில்லை – தொழில் வளர்ச்சியும் நவீன மயமும் காலத்தின் தேவை என்கிறோம். எல்லாம் பெரு முதலீட்டுக்கும் நிதி திரட்டுதல் என்பது அரசுக்குச் சாத்தியமில்லை. எனவேதான் தனியார் மூலதனப் பங்களிப்பை வரவேற்கிறோம்…”

    கட்சி 1: “”இப்படிச் சொல்லித்தான் கல்வித்துறையையே வியாபாரமாக்கி விட்டீர்கள். மருத்துவம் என்பதை, அதன் மனிதநேய முகத்தையே இழக்க வைத்து, வெறும் பண உற்பத்தி மையமாக ஆக்கிவிட்டீர்கள்.”

    கட்சி 2: “”எந்தத் தனியார் கல்வி நிறுவனம் அல்லது மருத்துவமனை தவறு செய்தாலும், தயவுதாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அதற்கேற்ற வகையில் சட்டங்களும், கண்காணிப்பு அமைப்புகளும் விரிவுபடுத்தப்பட வேண்டும். இதில் எங்களுக்கும் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் “போட்டி’ என்று “தாராளமயம்’ வந்தவுடன் மக்களுக்கு எவ்வளவு நல்ல விஷயங்கள் நடந்துள்ளது என்பதைப் பாருங்கள். இன்று வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு, ஒரே ஒரு சம்பளச் சான்றிதழையும், இன்கம் டாக்ஸ் ரசீதையும் வைத்துக் கொண்டு கடன்களை அள்ளி வீசுகிறார்கள் – இது பொருளாதார வளர்ச்சி இல்லையா?

    கட்சி 1: “”ஆனால் வயிற்றுக்கு இல்லையே சுவாமி! திறந்துவிடப்பட்ட பொருளாதாரத்தில் மார்க்கெட் முழுவதும் சம்மர் காட்டன் சர்ட்டுகளும் ஜீன்சும் கொட்டிக் கிடக்கிறது. ஆனால் பருத்தி விவசாயி தற்கொலை செய்து கொள்கிறானே, ஏன் இந்த முரண்பாடு…?”

  • One Block; One Joke

    அலுவலில் காமதேனு.காம் செல்ல முடிவதில்லை. ‘அட்வகஸி’ என்று சொல்லி வெப்சென்(ஸார்) செய்கிறது. ஒரு வேளை பெயரின் துவக்கத்தில் ‘காம’ இருப்பதினால் காமசூத்ராவிற்கும் காமதேனுவிற்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரியவில்லை போல!?

    Kamadenu Site Blocked @ Work


    x=5 என்று குருட்டாம்போக்கில் கணக்குப் போட்டுப் பேந்தப் பேந்த விழித்த பிறகுதான் மண்டைக்கு விளங்கிச்சு :-))) (லேட்டரல் திங்கிங் என்பது இதுதானா?)

    Can U Laugh?


    |

    How Balaji Wrote Blog, Translate Stuff and Made up Gilli

    காவ்யா என்ன செய்து விட்டார்(ள்)
    எழுதியவர்: பாஸ்டன் பாலாஜி

    (கா) இந்தப் பதிவில் உள்ள கட்டுரையின் முழு உரிமை, ஆசிரியரை (அதாவது என்னைச்) சாரும். இக்குறிப்பிட்ட கட்டுரையில் இருந்து பகுதிகளை எடுத்தாள்வதோ, சில பகுதிகளை மட்டும் பயன்படுத்துவதோ, வேறு வகைகளில் மறு பிரசுரம் செய்வதோ, அச்சு மற்றும் மின் ஊடகங்களில் மறு பதிப்பிடுவதோ, கப்புரிமைச் சட்டப்படி தடை செய்யப்பட்டதாகும். மதிப்புரைகள், விமர்சனங்களின் தேவைக்கேற்ப இந்நூலின் சில பகுதிகளை மேற்கோளாக எடுத்துக்காட்டுவது இவ்வகையில் சேராது.

    காவ்யா விஸ்வநாதன் என்று ஓர் இளம் படைப்பாளி. அவரின் நாவலிலுள்ள சில பகுதிகள் இன்னொரு படைப்பாளியின் கதையிலிருந்து எடுக்கப்பட்டிருப்பதாக குற்றம் எழுந்துள்ளதையொட்டி சர்ச்சை எழுந்துள்ளது. அந்த படைப்பாளியின் எழுத்தைப் படித்திருப்பதாகவும், அவரது கதை தான் மிகவும் ரசித்தவை என்று அவர் சொல்லியிருக்கிறார். அவர் உணராமலே இது நடந்திருக்கலாம் என்று அவர் சொன்னாலும் பிரச்சினை சால்வ் ஆகப் போவதில்லை. ஏனெனில் காவ்யா செய்தது முறையான பயன்பாடு (fair use) என்பதன் அடியில் வராது. அவர் எழுதியது அந்த கதையைக் கிண்டல் செய்தும் அல்ல. அதே சமயம் இவர் எழுதிய படைப்புக்கும், அந்த படைப்புகளுக்கும் கதையின் மையக்கரு, கதாபாத்திரங்கள், கதையில் வரும் நிகழ்வுகள் ஒற்றுமைகள் இருக்கின்றனவா என்பதையும் கண்டறிய வேண்டும்.அப்படி இருப்பின் அதை தற்செயல் என்று ஒதுக்கிவிட முடியாது. ஒரே மாதிரியான கதைக்கருவினை பல கர்த்தாக்கள் எழுதலாம். ஒருவருக்கொருவர் அறியாமல் இது வெளியாக வாய்ப்பிருக்கிறது. ஆனால் இங்கு நடந்திருப்பது வேறு. காவ்யாவின் நாவல் வெளிவருவத்ற்கு முன்னரே அந்த நாவல்கள் வெளியாகியுள்ளன, காவ்யாவும் அவற்றைப் படித்துள்ளார். பின் இது எப்படி நடந்திருக்கும்.

    ஒரு சாத்தியக் கூறு எழுதும் போது ஒரு மாதிரிக்காக அவர் இந்த நாவல்களிலிருந்து சிலவற்றை எழுதிவைத்திருந்திருக்கலாம். அவரது நாவலை செதுக்க ஒரு நிறுவனம் உதவி செய்திருக்கிறது.அவர் முதலில் சில பக்கங்களும், நாவலின் சுருக்கமும் கொடுத்திருக்கிறார். ஒப்பந்தம் கையொப்பான பின்னர்தான் முழு கதையும் விட்டார். அதை செப்பனிட ஒரு நிறுவனம் உதவியிருக்கிறது. படைப்பாளியின் எழுத்தை வெளியிடத்தக்க பிரதியாக உருமாற்ற இந்த நிறுவனம் உதவியிருக்கிறது. இதில் புதுமை ஏதும் இல்லை. இப்படி பிரதியை செப்பனிடும் போதோ அல்லது கதையை எழுதும் போதோ இது மாதிரி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. நாவலை குறிப்பிட்டகாலக கெடுவிற்குள் எழுத வேண்டும் என்ற பரபரப்பில் அவர் எழுதும் போது அவர் எழுதி வைத்திருந்ததும் நகல் எடுத்திருந்த பத்திகளும் கலந்து கலந்திருக்கலாம்.

    அவர் அறியாமலே சில பத்திகளை தன் குறிப்புகள் என்று நினைத்து பிரதியில் சேர்த்திருக்கலாம். அல்லது இறுதி வடிவம் பெறும் போது குறிப்புகளிலிருந்து சிலவற்றைச் சேர்த்திருக்கலாம்.கவனகுறைவினால் எதை எங்கிருந்து எடுத்தோம் என்பதை அவர் சிந்திக்காமல் சேர்த்திருக்கலாம்.

    இது போன்ற சர்ச்சைகள் நீண்ட ஆய்வறிக்கைகள் எழுதும் போதும் எழும். குறிப்புகளில் ஆதாரங்களைக் குறிப்பிடாமல் விட்டால் இது நமது கருத்தா அல்லது எங்கிருந்தாவது எடுத்தோமா என்ற அய்யம் எழும். ஆய்வாளர்கள் இதைத் தவிர்க்க சில உத்திகளை கையாள்வர். கதை எழுதும் போதும், பின்னர் அதை மீண்டும் படித்து, எழுதி செப்பனிடும் போது அவர் அது போன்ற துப்புகளை கையாண்டிருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் இந்தப் விஷயம் எழுந்திராது.

    சட்டரீதியாகப் பார்த்தால் அவர் செய்தது சரியல்ல, அது திருட்டுத்தான். பதிப்புரிமை என்பது எண்ணங்களின் (ideas) மீது சொந்தம் கொண்டாட அனுமதிக்கவில்லை. விளக்கமாக சொல்லும் சொற்றொடரின் வடிவின் (expression) மீது தான் பந்தம் கொண்டாட முடியும். ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் சேர ஒரு மாணவர் படும் அவஸ்தைகள் என்பது எண்ணமென்றால் அதை வைத்து நான் ஒருவன் தான் கதை எழுதுவேன் என்று உரிமை கொண்டாடமுடியாது. அதை வைத்து நான் ஒரு கதை எழுதி வெளியிட்ட பின் அதே போன்ற கதைகளன், கதாபாத்திரங்கள், நிகழ்வுகளை வைத்து ஒருவர் நாவல் எழுதினால், என் நாவலைத் தழுவி அவர் எழுதினார் என்று வழக்குத் தொடரலாம். காவ்யா எழுதிய நாவலுக்கும், அந்த நாவல்களுக்கும் இந்த வகையில் பெரும் ஒற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை.

    எனவே அவர் செய்திருப்பது பல பத்திகளை பிறர் நூலிலிருந்து பயன்படுத்தியிருப்பதும், அதை தன் பெயரில் வெளியிட்டதும். அந்த நூற்களின் பதிப்புரை யாரிடம் இருக்கிறதோ அவர் நஷ்ட ஈடு கோரலாம், மேலும் சர்ச்சைக்குரிய பத்திகளை நீக்க வேண்டும் என்றும் கோரலாம்.

    இதில் காவ்யாவின் பங்கைவிட கதையை செப்பனிட உதவிய நிறுவனத்தின் பங்கு அதிகம் என்று நிரூபிக்கப்பட்டாலும் காவ்யா தன் பொறுப்பினை தட்டிக்கழித்து விட முடியாது. ஏனெனில் அவர்தான் கதாசிரியர் என்று கூறிக்கொண்டவர், அங்கீகரிக்கப்பட்டவர். மேலும் ஒப்பந்தம் அவருக்கும், வெளியீட்டாளருக்கும் இடையேதான் இருப்பதால் வெளியீட்டாளரைப் பொறுத்தவரை காவ்யாவே பொறுப்பாவார். பொதுவாக இது போன்றபிரச்சினைகள் எழக் கூடும் என்பதால் பதிப்பகங்கள் நூலாசிரியருடன் போடும் ஒப்பந்த்தில் இலக்கியத் திருட்டு, அனுமதியற்ற பயன்பாடு போன்ற வழக்குகள் போடப்பட்டால் அவற்றிற்கு கதாசிரியர் பொறுப்பு அல்லது அது குறித்த வழக்குகளில் பதிப்பாளருக்கு ஏற்படும் செலவினை, நட்டத்தினை ஏற்க வேண்டும் என்று ஒரு விதியை போட்டிருப்பார்கள்.

    இந்த பிரச்சினைக்குத் தீர்வாக சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கிவிட்டு மாற்றி எழுதிக் கொடுத்து புத்தகத்தை வெளியிட வாய்ப்புள்ளது.

    இப்போது தேடியுள்ள சுட்டிகளை வைத்து இவ்வளவே எழுத முடியும்.


    பாலாஜி என்ன செய்து விட்டார்(ன்)

    வலைப்பதிவில் புகழ்பெற்ற பாலாஜி ரவி ஸ்ரீனிவாசின் குறிப்புகளில் இருந்து அப்படியே திருடியுள்ளது தெரிய வந்துள்ளது.

    இரு தினங்களுக்கு முன்பு காவ்யா விஸ்வநாதனின் புத்தகம் தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து ரவி எழுதினார். இன்று அதைக் குறித்து எழுதிய பாலாஜி, ரவியின் கட்டுரைய அடியொற்றி அப்படியே பிரதியெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    இணைய நண்பர்கள் பாலாஜியைத் தொடர்பு கொண்டபோது அவர் ‘இந்த செய்கை தன்னையறியாமல் நிகழ்ந்த ஒன்று’ என்றார். “என்னுடைய வலைப்பதிவுக்கு ரவியின் கண்ணோட்டங்கள் பயனுள்ளதாக இருந்திருக்கிறது. அவரின் கருத்தோடு பல சமயம் ஒத்துப் போயும் இருக்கிறேன். என் எண்ணங்களை அவர் மொழியிலேயே எழுதுவது ஆச்சரியமும் வருத்தமும் அளிக்கிறது” என்று தொடர்ந்தார்.

    குறிப்பிட்ட ரவி ஸ்ரீனிவாசின் பதிவை பாலாஜி படித்தும் இருக்கிறார்.

    கில்லியில் பாலாஜியின் பதிவை எடுத்துப் போட்டிருந்த பிரகாஷ் இந்தப் பிரச்சினை குறித்து பேசும்போது, “ரவியின் பதிவோடு ஒப்புநோக்காமல் பரிந்துரைத்தது என்னுடைய தவறுதான். கில்லியின் அடுத்த பரிந்துரைகளில் கவனமாக இருக்கப் போகிறோம். இருவர் எழுதும் ஒத்த பத்திகளில் இருந்து மேற்காள் காண்பிக்க மாட்டேன்” என்று முடித்துக் கொண்டார்.


    |

    Drunkards’ Divorce

    தலாக் போதை

    ஈரானுக்கு நீங்கள் தொலைபேசினால் அது அமெரிக்காவால் ஒட்டுக் கேட்கப்படும். தெரியாத்தனமாக ‘நான் வெப்பன்ஸ் ஆஃப் மாஸ் டிஸ்ட்ரக்ஷன் குறித்து வலைப்பதிவு செய்திருக்கிறேன்’ என்று நண்பரிடம் அளந்தால், ஐ.நா.விடம் அமெரிக்கா “அமெரிக்காவை அணுகுண்டு கொண்டுத் தாக்க ஈரான் திட்டமிடுகிறது. இதற்கு ஆதாரம் உண்டு” என்று அறிவித்து ஈரான் மீது போர் தொடுக்கலாம்.

    ஒட்டுக்கேட்கப்படும் உப்புப்பெறாத… சாரி… அரிசி பெறாத விஷயங்கள், பூதாகாரமாக விசுவரூபம் எடுக்குமா? ஒரிஸ்ஸாவில் எடுத்திருக்கிறது.

    /”>கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன் குடிபோதையில் இருந்த ஷேர் மொஹமத் அலி உளறியதை ஒட்டுக் கேட்டதால், அவரின் குடும்பமே ஊருக்கு பயந்து வாழ்ந்து வருகிறது. பதினொரு வருடமாக குடித்தனம் செய்த மனைவி நஜ்மா பீவியிடம், 2003 ஜூலை ஐந்தாம் தேதி, தண்ணியடித்துவிட்டு ‘தலாக்… தலாக்… தலாக்…’ சொல்கிறான்.

    ‘டாஸ்மார்க்-காரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு’; தேர்தல் இலவச வாக்குறுதியை, மந்திரிசபை அமைத்தவுடன் மறந்துவிடும் அரசியல்வாதியாக, அடுத்த நாள் காலையே மறந்தும் விடுகிறான்.

    வழக்கமான தன்னுடைய லாரி டிரைவர் பணிக்கு செல்ல ஆரம்பித்து, வாழ்க்கை வழக்கம் போல் நடக்கிறது.

    ‘பகலில் பக்கம் பார்த்து பேசு; இராத்திரியில் அதுவும் பேசாதே’ என்னும் ஔவையார் காலத்துப் பழமொழியை மறந்ததால், அண்டை அயலார் ஒட்டுக் கேட்டு, உள்ளூர் மார்க்கப் பெரியோரிடம் வத்தி வைக்கிறார்கள். அவர்களும் தங்கள் பணியை செவ்வனே நிறைவேற்ற, இருவரையும் பிரிந்து வாழுமாறு பணிக்கிறார்கள்.

    லாபம் சாரா அமைப்பு (என்.ஜி.ஓ) ‘ஆஷியானா‘வின் உதவியுடன் தாம்நகரில் இருக்கும் மௌலானா இஸ்லாமுதீனை சந்திக்கிறார்கள். தெளிவற்ற குடியுண்ட நிலையில் சொன்ன ‘முத்தலாக்’ செல்லாது என்று மார்க்க அறிஞர் மௌலானா மொழிகிறார். பிரிந்தவர் இணைகிறார்கள்.

    சன்னி முஸ்லீம்களை தொண்ணூறு சதவீதம் கொண்ட கண்டபானியா (Kantabania)வில் மொத்தமாக ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கான உள்ளூர் ஜமாத் (Choudah Mohalla Muslim Jamat) பிரமுகர் பல்லூ சர்தார், அலி-நஜ்மாவின் வீட்டிற்கு சென்று கைகலப்புக்குப் பிறகு இருவரையும் மீண்டும் பிரித்துவைக்கிறார். ஜமாத்தின் தலைவர் ஷேக் அப்துல் பாரி, தாம்நகருக்கு சென்று வேறொரு மார்க்க அறிஞரான முஃப்தி ஷேக் க்வாஸிமை அணுகி ‘குடிபோதையில் உளறினாலும் முத்தலாக் செல்லுபடியாகும்’ என்று தீர்ப்பு வாங்கி வருகிறார்.

    தேசிய மகளிர் அமைப்பின் (National Commission for Women – NCW) உதவியை தம்பதியர் நாடுகிறார்கள்.

    கட்டாக்கில் இருக்கும் குடும்ப நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படுகிறது. டிசம்பர் 12, 2003 அன்று கட்டாக் குடும்ப நீதிமன்றம் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்காகத் தீர்ப்பளித்தது. தீர்ப்பை நடைமுறைப்படுத்த, காவல்துறை உதவ மறுக்கிறது. ஊரை விட்டுத் தள்ளி வைத்தப் பெரியோர்களுக்கு சாதகமாக காவல்துறை செயல்படுகிறது. தம்பதியர்களால் தங்கள் வாழ்வைத் தொடர முடியவில்லை.

    உள்ளூர் மார்க்க அறிஞர்களை சமாதானம் செய்ய, மே 21, 2004 அன்று ஐந்து பேர் கொண்ட குழுவை, கண்டபானியா கிராமத்திற்கு NCW அனுப்புகிறது. இந்த செய்கை ‘அயலாரின் தலையீட்டை ஒப்புக் கொள்ளமாட்டோம்’ என்று ஜமாத்தை கொதித்தெழ செய்கிறது. மௌன ஊர்வலாமாக ஜூன் 3, 2004 அன்று இஸ்லாமிய சட்டத்தை நிலைநிறுத்துவதற்காக பேரணி நடக்கிறது.

    சமரசமாக மார்க்க அறிஞர்கள், நஜ்மாவும் அலியும் மீண்டும் குடும்பம் நடத்த ‘ஹலாலா‘வைப் பரிந்துரைக்கிறார்கள். இதன்படி நஜ்மா வேறொருவனை மணப்பாள். அவன் நஜ்மாவுக்கு முத்தலாக் கொடுப்பான். அதன் பின், மீண்டும் கணவன் அலியுடன் மறுமணம் புரிந்து கொள்ளலாம்.

    இதற்கு ஒப்புக்கொள்ளாத நஜ்மாவின் பெற்றோர் குடும்பம் – ஊரை விட்டு ஒதுக்கிவைக்கப்படுகிறது. குடிக்கத் தண்ணீர் கூட கிடைக்காத நிலை. தேசிய மகளிர் அமைப்பின் உதவியுடன் வாசலில் கை-பம்பு அமைத்துத் தரப்படுகிறது.

    உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார்கள். உயர்நீதிமன்றம் தலையிட மறுத்து, ஏப்ரல் 18, 2005 வழக்கை தள்ளுபடி செய்கிறது.

    அதன் பின், ஒரு வருட உச்சநீதிமன்றப் போராட்டத்திற்குப் பின்,

    “இந்தியா போன்ற மதச்சார்ப்பற்ற ஒரு நாட்டில் தம்பதிகள் ஒன்றாக வாழ்வதை தடுக்க யாருக்குமே உரிமை இல்லை என்று குறிப்பிட்டது. தமது சமூகத்தினரால் தள்ளி வைக்கப்பட்டுள்ள இந்த தம்பதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை”

    என்று தீர்ப்பளித்துள்ளது.

    நஜ்மாவின் அத்தை கைரூன் பீவி ‘உடனடியாக, இந்த கொடூரமான, நியாயமற்ற முத்தலாக் முறையை தடை செய்ய வேண்டும். மதத்தை ஆயுதமாக வைத்துக் கொண்டு, எங்களை, ஆண்கள் பூஜ்யமாக்கி விட்டார்கள்’ என்று உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்றிருக்கிறார். நஜ்மாவின் அம்மா நசீமா பீவியும் முத்தலாக் சட்டத்தில் மறுமலர்ச்சிக்கு விண்ணப்பம் வைக்கிறார்.

    இருபத்தியாறு வயதான நஜ்மா தன்னுடைய பெற்றோர் வீட்டில் நான்கு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சொந்த ஊரில் பிழைப்பு நடத்த முடியாததால் நாற்பது வயதான கணவர் ஷேர் அலியும் 140 கிலோமீட்டர் தாண்டி தனியாக இருக்கிறார்.

    சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்குப் பிறகாவது இருவரும் மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்ப முடிகிறதா? இருவரும் சேர்ந்து வாழ இயலுமா?

    ஓரிஸாவின் ஜமாயத் உலாமா (Jamiat Ulama) தலைவர் மௌலானா சாஜிதீன் க்வாஸ்மி: “அவர்களுக்கு அரசு பாதுகாப்பு கிடைக்கலாம். ஆனால், நாங்கள் அவர்களை இணைந்து வாழ அனுமதிக்க மாட்டோம். மீறினால், இஸ்லாமிய மர்க்கத்தில் இருந்து அவர்களை நீக்குவோம்.

    மதம் சம்பந்தமான விஷயங்களில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது. மற்ற வழக்குகளில் கவனம் செலுத்துவதோடு அவர்கள் நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும். தீர்ப்பு கொடுப்பதற்கு முன் மார்க்க அறிஞர்களையும் மத நிறுவனங்களையும் ஆலோசித்திருக்க வேண்டும்”.

    உள்ளூர் ஜமாத் தலைவர் மொஹமது அப்துல் பாரி: “அவர்கள் சேர்ந்து வாழ்வதை நாங்கள் தவிர்க்கவே இல்லை. அது உள்ளூராரின் விருப்பத்திற்குட்ப்பட்டது”.

    இஸ்லாமிய சட்ட அமைப்பின் (Muslim Law Board) தலைவர் கமல் ஃபரூக்கி: “இது சுதந்திர நாடு என்றும், எவருடன் வாழ விருப்பமோ அவருடன் வாழலாம் என்று உச்சநீதிமன்றம் சொன்னது சரியானதே. ஆனால், சுதந்திர நாட்டில் எல்லோரும் தங்களின் சட்டத்துக்கு உட்பட வேண்டும்;

    இந்தச் சம்பவத்தில் இவர்கள் இருவரும் இஸ்லாமிய சட்டத்துக்கு உட்பட்டு வாழ்கிறார்கள். அவர்களின் திருமணம் இஸ்லாமிய சட்டப்படி நடைபெற்றது. விவாகரத்துக்கும் அதுவே பொருந்தும்”.

    இரு உள்ளங்கள் இணைந்து வாழ விரும்புகின்றன. ஒரு மாமாங்கமாய் மணமுடித்து நான்கு குழந்தைகள் உடைய குடும்பம், கோபத்தில் சிந்திய வார்த்தையை அழிக்க முயற்சிக்கிறது. இவ்வாறு நடப்பது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல.

    மேற்கு வங்காளத்தின் ஜல்பாய்குரியில் (Jalpaiguri) இதே போல் குடித்து விட்டு முத்தலாக் குழறியிருக்கிறான். அங்கும் அவர்களின் குடும்பம் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. லக்னௌவின் ·பிரங்கி மஹல் (Firangi Mahal) மற்றும் அகில இந்திய இஸ்லாமிய சட்ட மன்றம் (AIMPLB) போன்ற பல மார்க்க வழிகாட்டிகள் குடித்துவிட்டு சொல்வது செல்லுபடியாகாது என்றாலும், உள்ளூர் அமைப்புகளில் அவர்களால் தாக்கமோ மாற்றமோ ஏற்படுத்த இயலவில்லை.

    பத்ராக் (Bhadrak)-இல் மட்டும் குறைந்தது ஐம்பது சன்னி குடும்பங்களில் இந்த ‘குடிபோதை முத்தலாக்’ பிரச்சினை நீடித்து வருகிறது. நஜ்மாவின் நிலை மட்டுமே நீதிமன்றப்படிகளைத் தொட்டு அல்லலுக்குள்ளாகி இருக்கிறது. மற்ற மனைவியர் அனைவரும் இந்தத் தீர்ப்பின் சுமுக முடிவை ஆவலுடன் எதிர்நோக்குகிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்தால், பிரிந்த பல குடும்பங்கள் ஒரிஸாவில் சேர்ந்து வாழ முன்னோடியான தீர்ப்பாக இது இருக்கப் போகிறது.

    ஒரு பில்லியனைத் தாண்டிய இந்தியாவின் மக்கள் தொகையில் 13.4% இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவர்கள். சொத்து விவகாரம், திருமணம், பூர்வீக உரிமை, விவாகரத்து போன்ற தனிநபர் சம்பந்தமான பிரச்சினைகளில் இஸ்லாமிய சட்டத்தை அனுசரிக்கிறார்கள்.

    தூக்கத்தில் உளறிய ‘முத்தலாக்’கால் விவாகரத்து; பங்காளி சண்டையில் கொண்ட பிணக்கினால், அண்ணனுக்கு வாக்களித்த கோபத்தில் முத்தலாக் என்று விவாகரத்து குழப்பமாக நொடிநேர விளையாட்டாகக் கையாளப்பட்டு வருகிறது.

    சென்ற வருடம் AIMPLB வெளியிட்ட ‘திருமண ஒப்பந்தத்திற்கான மாதிரி வழிமுறைகள்’ இப்பொழுது முக்கியத்துவம் பெறுகிறது.

  • வாய்மொழியப்படும் ‘தலாக்; தலாக்; தலாக்…’ செல்லுபடியாகாது
  • அனைத்து விவாகரத்துகளும் காஜியார்களிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும்

    இந்தியாவின் உச்சநீதிமன்றம் கரிசனத்தோடு இந்த வழக்கை அணுகி தீர்ப்பு வழங்கியுள்ளது. தனி மனித சுதந்திரத்திற்கு ஊறு விளைவிப்பதாக இஸ்லாமிய சட்டங்கள் இயங்கக் கூடாது. தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள மார்க்க அறிஞரின் அறிவுரையை எதிர்பார்த்திருக்காமல், பக்கத்துவீட்டுக்காரர்களின் ஒப்புதலை நோக்காமல் சுதந்திரமாக வாழ இஸ்லாமும் அனுமதிக்க வேண்டும்.

    புகைப்படம்/செய்தி: டெலிகிராஃப் | நியு கேரளா


    | |