Monthly Archives: செப்ரெம்பர் 2018

பொய் ⇒ புளுகு மூட்டை ⇒ புள்ளிவிவரம்

“செய்தி எப்போதும் ஞானம் கொண்டு உணரும் ஒளியூட்டத்திற்கு மாற்று ஆகாது.” – ‘சொற்களின் மன்சாட்சி’ கட்டுரையில் சூஸன் சொண்டாக்

“சொற்கள் என்பது நிகழ்வுகள், அவை காரியத்தை நிகழ்த்துகின்றன, மாற்றத்தைக் கொணர்கின்றன. தொடர்பாடல் என்பது கேட்பவரையும் பேசுபவரையும் உருமாற்றும்; சக்தியை இரு புறமும் பாய்ச்சி பெருக்கும்; புரிதலையும் உணர்ச்சியையும் முன்னும் பின்னுமாக உட்செலுத்தி விஸ்தரிக்கும்!” – ‘அசல் பேச்சு என்னும் மாயம்’ கட்டுரையில் உர்சுலா கே லெகுவின்

சொற்களை எப்படி பாவிக்கிறோம் என்பதைப் பொருத்து, அதன் அர்த்தம் மாறுகிறது. காப்புறுதிக்கான இந்த விளம்பரத்தைப் பார்திருப்பீர்கள். “இது என்னுடைய கார்!?! நம்பவே முடியவில்லை.” என்னும் எளிய சொற்றொடர் எவ்வாறு அதிர்ச்சியையோ மகிழ்ச்சியையோ குறிக்கும் என்பதை நகையுணர்வுடன் விளக்கும்.

நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, அமைதி என ஒன்பதுவகைச் சுவைகளில் உண்டாகும் மனநிலை மெய்ப்பாடுகள் மனிதருக்குள் உண்டு. ஆசியம், இரதி, அரதி, சோகம், அர்ச்சம், மற்றும் குர்ச்சை என்ற ஆறு வகையான ரசம் இருக்கிறது. அதே போல் முகவபிநயத்தில்:

  1. அஞ்சித முகம் – வருத்தமாற்றாதிரு தோண்மேற்றலைசாய்தல்
  2. அதோ முகம் – ஆற்றுநீர்க்கழிமுகம், கீழ்நோக்கியமுகம்
  3. ஆகம்பித முகம் – சினத்தானுஞ் சம்மதியானும் மேற்கீழ்த் தலையாட்டல்
  4. ஆலோலித முகம் – ஆசையான் மலர்ந்தமுகமா ஒருவனை அழைத்தல்
  5. உத்துவாகித முகம் – தலை நிமிர்ந்து பார்த்தல்
  6. உலோலித முகம் – சிந்தையாலொரு தோண் மேற்றலைசாய்ந்து நிற்கு முகம், துக்கமுகம்
  7. சம முகம் – தலையசையாதிருத்தல்
  8. சௌந்தர முகம் – மலர்ந்தமுகங் காட்டல்
  9. திரச்சீன முகம் – நாணத்தாற்றலை யாட்டுமுகம்
  10. துத முகம் – வேண்டாமைக்குத் தலை யசைத்தல்
  11. பராவிருத்த முகம் – வேண்டாத தற்குமுகந்திருப்பல்
  12. பரிவாகித முகம் – மதத்தாற்றலையை ஒருபுறஞ் சாய்த்துச் சிறிதாய்ச் சுற்றியாட்டல்
  13. பிரகம்பித முகம் – அதிசயக்குறி காட்டும் முகம்
  14. விதுத முகம் – வேண்டாமைக்குத் தலை அசைத்தல்

இப்படிப்பட்ட வார்த்தை பாகுபாட்டை ஏன் விரிவாக விவரிக்க வேண்டும்? கணினிக்கு மனித உணர்வுகள் புரியாது. குறிப்பால் குறிப்புணர்ந்து செயல்படாது. மௌனமும் புரியாது; விரிவாக சொன்னாலும் குழம்பும். வார்த்தைகளும் பாவங்களும் நமக்கு ஒளியூட்டுபவை. அந்த ஞானத்தை எவ்வாறு கணினிக்கு புகட்டுவது? அரை நூற்றாண்டிற்கு முன் நார்பர்ட் வீனர் (Norbert Wiener) The Human Use of Human Beings: Cybernetics and Society என்னும் புத்தகம் எழுதுகிறார். அந்தப் புத்தகத்தை படிக்குமுன் பதஞ்சலி யோகத்திற்கு சென்று பார்க்கலாம்.

ப்ரமாண – விபர்யாய – விகல்ப நித்ரா – சம்ருதய |
பிரத்யக்ஷானுமானாகமா: ப்ரமாணானி ||

மன அலைகள் ஐந்து என்கிறது பதஞ்சலி யோகம். அந்த ஐந்து வகையாவது:

  1. சரியாகப் புரிந்து கொள்வது,
  2. தவறாகப் புரிந்து கொள்வது,
  3. பொருளற்ற கற்பனை,
  4. நினைவு
  5. தூக்கம்.

சரியான அறிவென்பது கீழ்கண்ட மூன்றின் மூலம் பெறப்படும் என்கிறது:

கட்டகம் என்றும் ஆச்சரியப்படுத்துபவை. உடங்கியம் என்னும் நம் உடலின் கட்டகம் நரம்புகளால் ஆனது. அந்த நரம்பணுக்களில் இருந்து விழிப்புணர்வு என்னும் சைதன்யம் தோன்றுகிறது. நம் உடலைப் போல் நகரம் என்னும் கட்டகம் கார்களால் ஆனது. கார்களில் இருந்து சாலை நெரிசல் தோன்றுகிறது. ஒரே ஒரு நரம்பு மட்டும் விழிப்புணர்விற்கு இட்டுச் செல்வதில்லை. ஒரு காரினால் போக்குவரத்து ஸ்தம்பிப்பது இல்லை. ஆனால், பல ஒன்றுகளின் குணாதிசயங்களினால், மொத்த கட்டகமும் உருப்பெருகிறது. இவற்றை தோற்றுவாய் எனலாம். நான்கு லட்சம் விதைகளை செக்கோயா மரம் அள்ளித் தெளிக்கிறது. எல்லா விதைகளும் விருட்சம் ஆவதில்லை. மரங்கள் அடர்ந்த வனத்தில், ஒரு சிறிய விதையில் இருந்து மற்ற மரங்களை விட உயரமாக வளரும் இயல்புடைய மரவகையை, தாவரவியலளர் இவ்விதம் தோற்றுவாய் என சுருக்கமாகக் குறிப்பிடுவர்.

இதற்கு மாற்றாக அமிழ்ந்திருக்கும் குணாதிசயங்களைக் காணலாம். மொத்த குழுவின் அங்கமாக நாம் இருக்கும்போது, நம்முடைய தனிப்பட்ட குணங்கள் மூழ்கி மறையும். கட்டகங்களில் ஒரு எளிய உதாரணம் கொண்டு இந்த எதிர்ப்பாதையை அணுகலாம். ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் ஒரு கருத்தை எழுதுகிறோம். நண்பர்கள் யாருமே அதற்கு பதிலிடவில்லை. எனவே, அவர்களுக்கு இசைவானதாக இன்னொரு கருத்தை அந்த லைக் விழுவதற்காக எழுதுகிறோம். இப்போது மறுவினைகள் குவிகின்றன. இது “எதிர்ப்பாதை” பயணம்.

தீர்வை நோக்கிய பாதையில் பயணிப்பது ஒரு வகை. நமக்கு என்ன வகையான விளைவு வர வேண்டும் என்பதற்கான காரணங்களில் ஈடுபடுவது அந்த வகை. மனம் லேசாக ஆவதற்காக தியானம் செய்வது இந்த வகை. யோகா செய்தால் ரத்த அழுத்தம் குறையும் என்பதற்காக அந்த உடற்பயிற்சி செய்வது “நேர்ப்பாதை”. ஆனால், மேலாளர்களில் பலரும் தியானம் செய்கிறார்கள்; அவர்களுடன் நேரம் செலவிட்டால் பதவி உயர்வு கிட்டும்; எனவே, நாமும் கண் மூடினாற் போல் உட்கார்வோம் என்பது “எதிர்ப்பாதை”. மனநிம்மதி என்னும் விளைவு கிட்டாமல், கட்டகத்தில் அமிழும் வகை. வெறும் சடங்காகிப் போகும் காரணத்தினால், விளைவு தோன்றாது.

ஆதாரத்தில் துவங்கி முடிவுக்குச் செல்லலாம். அல்லது, புதிரின் முடிவுப்பாதையில் துவங்கி, துவக்கத்தை நோக்கி பயணிக்கலாம். ஆனால், அதே போன்ற திட்டம் எல்லா இடங்களிலும் பலிக்காது.

மூளை பாதிக்கப்பட்டோரில் பலர் நல்ல கவிஞர்களாகவும் முக்கியமான ஓவியர்களாகவும் பரிசு பெற்ற எழுத்தாளர்களாகவும் இருந்திருக்கிறார்கள். எனவே, நானும் என்னுடைய சாதாரண மூளையை மாற்றப்போகிறேன் என யோசிப்பது பைத்தியக்கார காரணம். இது எதிர்ப்பாதை. இந்த உள்விளைவுகளையும் விளையாட்டான மனித சிந்தை பரிசோதனைகளையும் எவ்வாறு கணினிக்கு உணர்த்தி, நம் சேஷ்டைகளை புரியவைப்பது?

ஒரு குட்டிக்கதை பார்ப்போம். குரு ஒருவர் சீடர்களுக்கு யாகம் நடத்துவது பற்றி விரிவாகப் பாடம் நடத்தினார். குருகுலத்தில் எலித் தொல்லை அதிகம். எனவே, பூனை வளர்த்தார். யாகத்தில் வார்க்கப்படும் நெய்யின் வாசனையால் ஈர்க்கப்பட்ட ஆசிரமப்பூனை நெய் பாத்திரத்தை வட்டமிட்டது. எனவே, யாகம் ஆரம்பிக்கும் முன் பூனையை ஒரு தூணில் கட்டி போட்டு விடுவார். அதன் பின்னரே குரு யாகம் நடத்துவார். பாடம் முடிந்தது. வேறு நாட்டிற்குச் சென்ற மாணவனிடம், யாகம் செய்ய முதலில் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். அந்த நாட்டிலோ எலிகள் நடமாட்டம் கிடையாது. எனினும், அந்த புது குரு — பூனையைத் தேடி பிடித்தான். எதிரில் இருக்கும் தூணில் கட்டி, அதன்பின்னரே யாகத்தைத் துவங்கினான்.

பூனைக்கதை எப்படி கணினிக்குப் பொருந்தும்?

ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் டெண்ட்ரல் (Dendral) என்னும் தர்க்க ரீதியான கட்டகத்தை 1960களில் அமைத்தார்கள். வேதியியலின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அது தெரியாத பொருளை ஆராய்ந்து, கண்டுபிடித்துக் கொடுத்தது. ஒரு விஷயம் மட்டுமே செய்யத் தெரியும். கரிம வேதியியல் மட்டுமே அறியும். மனிதர்களை விட வேகமாக இயங்கும். அதற்கு கற்றுக் கொடுத்த கரிம வேதியயலில் இராப்பகலாக அயராது ஆராயும்; எப்போதும் துல்லிய முடிவுகளை நல்கும். சொல்லிக் கொடுத்தது மட்டுமே தெரியும். ஆனால், அதை பிஎச்டி செய்யாத மாணவரை விட நேர்த்தியாகவும் துரிதமாகவும் செய்து முடிக்கும்.

இன்றைய நவீன மருத்துவமனைகளில் நோயாளியின் ஒவ்வொரு தகவலும் சேமிக்கப்படுகிறது; ஆராயப்படுகிறது. மருத்துவமனையிலோ ஆயிரக்கணக்கான நோயாளிகள். அவர்களுக்கு ஒரேயொரு மருத்துவர். எப்படி சமாளிக்கிறார்கள்? கோடிக்கணக்கான விஷயங்களை ஒவ்வொரு நொடித்துளியும், ஒவ்வொரு நோயாளியின் நரம்பும் அனுப்புகிறது. அதில் இதயத் துடிப்பு, சர்க்கரை அளவு, உடலின் வெப்பநிலை போன்றவற்றில் ஏற்படும் மாறுதலை வைத்து, நோயாளியின் உடல்நிலை சீராகிறதா அல்லது மோசமாகிறதா என்பதை கணினிகள் தெரிவித்துக் கொண்டேயிருக்கின்றன. அந்தத் தகவலை வைத்து மருத்துவரை தானியங்கியாக அழைக்கின்றன.

இதற்கு எதிர்ப்பாதையாக, மைசின் (MYCIN) இயங்குகிறது. உங்களின் உடல் உபாதைகளையும் மாற்றங்களையும் நீங்களே சொல்ல வேண்டும். நீங்கள் கொடுக்கும் தகவலை வைத்து எந்த நுண்ணியிரி இதை விளைவித்து இருக்கும் என்பதை சொல்லும். இது பின்னோக்கிய சங்கிலிப் பாதை.

நமக்கு சாதகமான முடிவெடுக்க, இரண்டு விஷயங்களைக் குறித்த புரிதல் கலந்த அணுகுமுறை வேண்டும்:

1. எவ்வாறு நாம் தேர்ந்தெடுக்கும் வித விதமான விருப்பங்கள், வெவ்வேறு பாதைகளுக்கு இட்டுச் சென்று, பல்வேறு இறுதி முடிவுகளைக் கொடுக்கும்?
2. இவ்வளவு இறுதி முடிவுகளில், இருப்பதற்குள் நமக்கு உகந்த முடிவு எது?

இந்த மாதிரி எந்த ஒரு விஷயத்தையும் அணுக, ஸ்திரமான மதிப்பீடும், வருவது உரைக்கும் ஊகமும் தேவை. இந்தத் திறனாய்வை எப்படி எல்லோரும் ஒவ்வொரு காரியத்திலும் செய்வது?

அ) எதிலும் இறுதித் தீர்ப்பை முடிவாகக் கொள்ளாதீர்கள்: தன்னிடம் மட்டும் மந்திரக்கோல் இருந்தால், இந்த உலகில் எல்லோரிடமும் ஒருக்கும் ஓரவஞ்சனையை நீக்கிவிட வேண்டுவேன் என்கிறார் டானியல் கானிமான் (Daniel Kahneman). அதிலும், பெரும்பாலான பணக்காரர்களிடமும், ஆண்களிடமும், வல்லுநர்களிடமும் இந்த ஒருதலைச் சார்பு கோலோச்சுகிறது. அகம்பாவம் எனலாம்; மட்டுமீறிய தன்னம்பிக்கை எனலாம்; அந்த சுய உறுதியை சற்றே தளர்த்துங்கள். இந்தப் பாதையில் சென்றால், உங்களுக்கு சாதகமான முடிவு நிச்சயமாகக் கிட்டும் என நம்புகிறீர்களா? அதில் சந்தேகம் கொள்ளுங்கள். மாற்றுப் பாதையையும் மனதில் வையுங்கள். அந்த இறுதி பலனை விட இன்னொரு இறுதி விளைவு லாபகரமானது என நினைக்கிறீர்களா? இரண்டு விளைவையும் காமாலைக்கண் கொண்டு அணுகுங்கள்.

ஆ) அனேகமாக எவ்வளவு முறை இவ்வாறு நிகழ்ந்திருக்கிறது?” என வினவுங்கள்: டானியல் கானிமான் சொல்லும் கதையைப் பார்ப்போம். தாங்கள் எழுதும் இந்தப் புத்தகத்தை எழுத எத்தனை நாள் ஆகும் என சக நூலாசிரியர்களிடம் வினாத் தொடுக்கிறார் கானிமான். எல்லோரும் பதினெட்டு மாதங்களிலிருந்து இரண்டரை வருடத்திற்குள் புத்தகத்தை எழுதி முடித்துவிடலாம் என்கிறார்கள். அதன் பிறகு, இதற்கு முன்பு பல்வேறு நூல்களை எழுதிய ஒருவரிடம், “உங்களின் போன புத்தகங்களை எழுத எவ்வளவு நாள் ஆனது?” எனக் கேட்கிறார்.

– பத்தில் நாலு புத்தகம் முற்றுப் பெறவேயில்லை
– ஒரு புத்தகம் கூட ஏழு வருடத்திற்குள் முடிந்ததாக சரித்திரமே இல்லை

இத்தனைக்கும் அவர்களின் புத்தகம் பகுத்தறியும் திறன் குறித்தது. இருந்தாலும், சென்ற அனுபவங்களைக் கணக்கில் கொள்ளாமல் பதிலளித்து இருக்கிறார்கள். பழைய பாதைகளை நினைவில் கொண்டு புதிய திட்டங்களை கணக்கு போட வேண்டும். என்னுடைய கட்டுரையை, சாதாரணமாக பத்து சதவிகிதத்தினர் முழுமையாகப் படிக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அந்த 10% என்பது அடிப்படை வீதம். எனக்குத் தெரிந்த என்னுடைய நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் முழுமையாக படிக்கிறார்கள் என்பது உள்மாந்தரப் பார்வை. ஆனால், நம்பகமான முடுவெடுக்க “வெளிப்பார்வை” தேவை. எனவே, “பொதுவாக இது எப்போது நடக்கிறது?” எனக் கேட்டுப் பார்க்க வேண்டும்.

இ) சிந்தனையில் சாத்தியப்பாட்டை ஏற்றவும் – நிகழ்தகவு சூத்திரங்களை மனதில் எப்போதும் வைத்துக் கொள்ளவும்: நம்முடைய ஒருபுறச் சாய்வுகளை, நிகழ்தகவு பாடங்களினால் நீக்கலாம். சராசரியாக, பெரும்பாலும், அனேகமாக, பொதுவாக, ஏறக்குறைய என்னும் பதங்களை விட்டுவிடுவீர்கள்.

அடுத்து கொஞ்சம் நிகழ்தகவு, புள்ளிவிபரம், எந்திர தற்கற்றல் என்று ஆராயலாம். பொதுவாக புள்ளி இயல் குறித்து குறிப்பிடும்போது “பொய், புளுகு, அண்டபுளுகு, புள்ளிவிவரம்” என்ற சொலவடை உள்ளது. அதுவே இந்தப் பகுதியின் தலைப்பானது.

முந்தையவை:

உசாத்துணை:
1. யாழ்ப்பாண அகராதி
ஆசிரியர்: சந்திரசேகரப் பண்டிதர், சரவணமுத்துப் பிள்ளை
பதிப்பாளர்: கோ. இளவழகன்
முதல் பதிப்பு: 1842
இரண்டாம் பதிப்பு: 2006
பக்கம்: 8+ 488 = 496
தமிழ்மண் பதிப்பகம்
நூலாக்கம்: பாவாணர் கணினி

2. The Book of Why – Judea Pearl replies to Kevin Gray article 
3. Tyler Vigen: “Spurious Correlations
4. Harvard Business Review: “Beware Spurious Correlations
5. Andrew Gelman: “‘How to Lie with Statistics’ Guy Worked for the Tobacco Industry to Mock Studies of the Risks of Smoking Statistics
6. BuzzFeed: “13 Graphs That Are Clearly Lying

பாரதிராஜா படங்கள்

தலை பத்து குறிப்புகள்:

  1. அனேக படத்தின் துவக்கத்திலும் பேசுவார். “என் இனிய தமிழ் மக்களே…”
  2. தன்னுடைய உதவியாளர்களை உருவாக்கி, குறிப்பிடத்தக்க இயக்குனர்களாக ஆக்கியது முக்கிய சாதனை. பாசறை, பட்டறை என துணை இயக்குநர்கள் தங்களை பாரதிராஜா கேம்ப் என அழைத்துக் கொண்டனர்.
  3. நாயகன் சம்பந்தப்பட்ட படங்களே எங்கும் நிறைந்திருந்தபோது, பெண்களை முக்கியப்படுத்தும் ஆக்கங்களைத் தொடர்ந்து வழங்கியவர்.
  4. வரிசை பெயர்களை தன் கதாநாயகிகளுக்குத் தொடர்ந்து வழங்கி வந்தவர்.
  5. இவரை காப்பியடிக்கும் எண்ணத்துடன் ஸ்டெல்லா மேரீஸ்  வாசலிலும் இராணி மேரி கல்லூரி வாயிலிலும் தங்களின் ஹீரோயினுக்காக தவமிருந்தவர்கள் எக்கச்சக்கம்.
  6. மணி கௌல், ரிஷிகேஷ் முகர்ஜி, அடூர் கோபாலகிருஷ்ணன், குரு தத், மிருனாள் சென், ஷியாம் பெனகல் போல் இல்லாவிட்டாலும் நம்ம ஊர் நாயகர்
  7. ஒளிப்பதிவாளர்கள் – நிவாஸ், பி கண்ணன்
  8. படத்தொகுப்பாளர்கள் – பாஸ்கரன், டி திருநாவுக்கரசு, சண்டி, வி இராஜகோபால், பி மோகன் ராஜ்
  9. எழுத்தாளர்கள் – மணிவண்ணன், ரங்கராஜன், சந்திரபோஸ், கலைமணி, பஞ்சு அருணாச்சலம், ஆர் செல்வராஜ், கே சோமசுந்தரேஷ்வர், கே கண்ணன், சுஜாதா ரங்கராஜன், எம் ரத்தினகுமார், சீமான்
  10. அரசியல், மகன், போன்ற திசைதிருப்பல்களும் இடையூறுகளும் இல்லாவிட்டாலும், அமிதாப் போல் நல்ல நடிகராகவும் கிடைத்திருப்பார்.
ஆண்டு படம் குறிப்புகள்
1977 16 வயதினிலே முதல் படம்
1978 கிழக்கே போகும் ரயில் கிராமம் – காதல் – ராதிகா
1978 சிகப்பு ரோஜாக்கள் குத்துங்க எஜமான் குத்துங்க! இந்த பொம்பளைங்களே இப்படிதான்!!

நல்லவேளையாக சந்திரசேகரின் மசாலா கம்யூனிசம் இல்லாத சிவப்பு

1979 புதிய வார்ப்புகள் பாக்யராஜ் – பாரதிராஜாவின் ஹீரோக்களில் தேறியவர்
1979 நிறம் மாறாத பூக்கள் மீண்டும் ஒரு கி.போ.ர. – பணம் பண்ணும் வழி
1980 நிழல்கள் வைரமுத்து உதயம்

வறுமையின் நிறம் சிகப்பை விட நேர்மையான, உன்னதமான படைப்பு

1980 கல்லுக்குள் ஈரம் இயக்குநர் இல்லை

என்றாலும், மீண்டும் ரசிக்கலாம்

1981 அலைகள் ஓய்வதில்லை ஸ்ஸ்ஸ்ஸ்… ப்பா…அஆ….
1981 டிக் டிக் டிக் மணிக்கு ‘திருடா… திருடா’ என்றால் பா.ரா.விற்கு இது
1982 காதல் ஓவியம் பாடலுக்கு வை.மு.; இசைக்கு இளையராஜா; இரண்டும் மட்டும் போதுமா?
1982 வாலிபமே வா வா போன படத்தில் வாங்கிய அடியில் இருந்து மீள – அந்தக் கால டபுள் எக்ஸ்
1983 மண் வாசனை ராதா போய் ரேவதி வந்தது… டும்! டும்!! டும்!!!
1984 புதுமைப் பெண் ஏவியெம் #MeToo
1985 ஒரு கைதியின் டைரி சீடன் குருவிற்கு ஆற்றும் கடமை
1985 முதல் மரியாதை இசை, கதை, ராதா, சத்யராஜ், சிவாஜி எல்லோரும் ஜொலிப்பார்கள்
1986 கடலோரக் கவிதைகள் கொடுமை
1987 வேதம் புதிது நீங்க இன்னும் கரையேறாம நிக்கறேளே!
1988 கொடி பறக்குது அமலா டைம்ஸ்
1990 என் உயிர் தோழன் சரிவின் உச்சிக்காலம்
1991 புது நெல்லு புது நாத்து கிராமத்திற்கு போனாலாவது இளமை திரும்புமா?
1992 நாடோடித் தென்றல் இளையராஜாவிற்குத் திரும்பினாலாவது வெற்றியை ருசிக்கலாமா?
1993 கேப்டன் மகள் எல்லோரும் குஷ்பு படம் எடுக்கிறார்கள்
1993 கிழக்குச் சீமையிலே மீட்சி
1994 கருத்தம்மா பாரதிராஜாவின் அம்மா பேரில் ஒரு படம்
1995 பசும்பொன் முடியல
1996 தமிழ்ச் செல்வன் இதற்கு குஷ்பூவே தேவலாம்.
1996 அந்திமந்தாரை அவார்ட் வேணும்
1999 தாஜ் மஹால் பையன் வேணும்
2001 கடல் பூக்கள் பையனும் வேணும்; அவார்டும் வேணும்.
2003 ஈர நிலம் மகனுக்காக
2004 கண்களால் கைது செய் ப்ரியா மணிக்காக
2008 பொம்மலாட்டம் அப்பாடா! இன்னும் டைரக்டரிடம் ஏதோ சரக்கு இருக்கு
2013 அன்னக்கொடி அரசியலில் ஒரு கால்; சினிமாவிலும் இன்னொரு கால்

 

 

நாய்பால்: “ஒவ்வொரு எழுத்தும் அட்சர லட்சம் பெறுமாறு எழுதணும்”

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ருஷ்யாவைப் போல் பெரிய நாட்டில் இருந்து வந்தால், எங்காவது போய் யாரையாவது பார்த்து, அத்தனை விரிந்த பரப்பில் எதையாவது கண்டுபிடித்து எழுதிவிடலாம். நைபால் அப்படி அல்ல. அவர் தன்னுடைய சுயசரிதைக்கான முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்:

”எழுத்தாளரின் பாதி உழைப்பு என்பது தன் கர்த்தாக்களைக் கண்டுபிடிப்பதில் இருக்கிறது.”

நய்பால் தன்னில் பிறரைத் தேடினார். ப்ரௌஸ்ட் எழுதிய “தொலைந்த நேரத்தைத் தேடி”யின் கதைசொல்லியின் கூற்றுப்படி ஞாபகங்களுக்கும் சுய அறிதலுக்கும் பெரும் இலக்கிய முயற்சிகளுக்கும் நுண்ணிய வேர் இழைத் தொடர் இருக்கிறது. சுயத்தில் இருந்து உண்மையைக் கண்டெடுத்து சொல்வது என்பது நிஜ சுதந்திரத்தில் இருந்தே கிட்டும். அந்த விடுதலை வேட்கை அவரிடம் இருந்தது.

இந்த சொல்வனம் இலக்கிய இதழ் 194-ல் நய்பாலைக் குறித்து பல கட்டுரைகள் வந்திருக்கின்றன. அதில் இது சிறப்பானது: நம்பி கிருஷ்ணன் » படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்: வி.எஸ். நைபால்

காலச்சுவட்டில் விஷ்ணு ஸ்வரூப் சம்பிரதாயமான கட்டுரை எழுதியிருக்கிறார். அதன் தலைப்பு நன்றாக இருக்கிறது. தகவலில் எந்தப் பிழையும் இல்லை: : வி.எஸ். நைபால் (1932-2018) பின்காலனிய உலகின் வீடற்ற மனிதன்

எழுத்தாளர் ஜெயமோகன் தன் கட்டுரையை நிறைவாகக் கொடுத்திருந்தார். ஆனால், அதற்கும் பதில்களை வெளியிட்டு, அசல் அஞ்சலியின் உண்மையான குறிக்கோள் என்பது சர்ச்சையை வளர்த்து திசைதிருப்புவது மட்டுமே என்னும் வாதத்தை நிரூபித்தார்.

ஆனால், கடித பரிமாற்றம் இலக்கியம் ஆகலாம் என்பதற்கு இந்தப் பதிவு ஒரு சிறந்த உதாரணம்: The Painful Sum of Things | Pankaj Mishra, Nikil Saval On V. S. Naipaul | n+1. சு.ரா. மாதிரி ஒரு ஆளுமையின் மறைவிற்கு பின்னால், இப்படி இருவர் பேசி, பகிரும், நீண்ட மடல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நைபால் எல்லா பத்திருகைகளுக்கும் தினசரிகளுக்கும் சிறிய கட்டுரைகள், அறிமுகக் குறிப்புகள், இந்திய அரசியல் குறித்த பதிவுகள் எழுதினார். நியு யார்க் டைம்ஸ் நாளிதழுக்கு நிருபர் போல் செயல்பட்டார். எமர்ஜென்சி குறித்து, இந்திரா மறைவு குறித்து என்று இருநூறு வார்த்தைகளுக்கு மிகாத செய்தித் தொகுப்புகள் கொடுத்தார். சத்யஜித் ராயின் ‘சதுரங்க ஆட்டக்காரர்கள்’ திரைப்படத்திற்கு சினிமா விமர்சனம் போட்டிருக்கிறார்.

என்னுடைய கட்டுரையும் சொல்வனம் இதழில் வெளியாகி இருக்கிறது: கஞ்சனம் வாசிப்பவர்களுக்கு ஒரு புதிய தமிழ் வார்த்தை கிடைக்கும்.

கட்டுரையில் இருந்து மேற்கோள்:

“மார்க்சிஸ்ட் என்பவர் மத வெறியர். மார்க்சிஸ்டுகள் மக்களின் கனவை அழித்தொழிக்க வினவுகிறார்கள். உங்களுக்கு கற்பனை என்றொன்று இருந்தால், அதை நசுக்கி, தூரத்தே வீசி, நசுக்குவது மார்க்சிச சித்தாந்தம். முழு சமூகப் புரட்சி என்பது விபரீதமானது; கிளர்ச்சி மூலமும் கலகம் மூலமும் சட்டென்று சமூகத்தைப் புரட்டிப் போடுவது என்பது அபத்தத்தில் முடியும்.”

இவ்வளவு ஆதுரமான பார்வை கொடுத்துவிட்டு, மற்றொரு பக்கத்தைச் சொல்லும் முந்தைய பதிவுகளை சொல்லாமல் விடலாமா? எனவே: பின்-காலனிய இலக்கியம் : ஏகாதிபத்தியற்கெதிரான பண்பாட்டு வெடிகுண்டு-ஜிவ்ரி | இனியொரு

பின்காலனிய இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளாக சினுவா ஆச்சுபே, கூகி வா தியாங்கோ, மரியாமா பா, மிஷேல் கிளிஃப், அதொல் புகாட், அகமத் நுக்குறுமா, ஹனிஃப் குறைஷி, அனிதா தேசாய், சல்மான் ருஷ்தி, வீ.எஸ்.நைபால், காப்ரியேல் கார்ஸியா மார்குவேஸ், முகார்ஜி, கமலாதாஸ் சுரைய்யா, ஏன் ரணசிங்க, அருந்ததி ரோய்,பாரதி, போன்றோர் அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

அதில் குறிப்பிடப்படும் கூகி வா தியோங்கோ குறித்த மொழியாக்க கட்டுரையை படித்து விட்டீர்கள்தானே? — கூகி வா தியோங்கோ -வும், மொழியின் கொடுங்கோலும் :: ஃப்ரான்ஸிஸ் (உ) வேட்தமிழில்: மைத்ரேயன்


நய்பால் குறித்து 2004-ல் எழுதிய என்னுடைய தமிழோவயம் பதிவு:

இருண்ட பிரதேசம்

இந்தியாவுக்கு 1962-இல் முதல் வருகை. ‘இருண்ட பிரதேசம்’ (அன் ஏரியா ஆ·ப் டார்க்னெஸ்) என்றும் முதல் பயணத் தொகுப்பு பரந்த வாசிப்பைப் பெற்றது. இந்தியாவைப் பற்றி ஒரு மேற்கத்தியப் பார்வையாக அது இருந்த்து. இருபத்தி ஏழு வருடம் கழித்து 1989-இல் மீண்டும் செல்கையில் ஒரு மாறுபட்ட நாட்டை பார்க்க நைபால் நேரிடுகிறது.

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், வளரும் பங்குச் சந்தையும், புதிய அடுக்கு மாடி கட்டிடங்களும் ஒரு வளரும் சமுதாயத்தை சுட்டுகிறது. நய்பால் சந்திக்கும் மனிதர்களின் மூலமாக சமுதாயத்தின் கதையை சொல்கிறார்

வெற்றிப் பெற்ற முதலாளியின் அலுவலகத்தில் உள்ள மினி கோவில், வாழ்க்கையை வெறுத்து ஞானம் அடைந்ததாகப் பகர்ந்த பழைய நண்பன், சூறையாடப்பட்ட சில மணித்துளிகளில் நிவாரண நிதி கொடுக்கச் செல்லும் மத்திய அமைச்சராக விரைந்து சென்று பார்த்த சீக்கியரின் வயல் என காட்சிகளை ஒவியமாக்கிச் செலகிறார்.

இந்தியாவெங்கும் காணப்படும் வேறுபாடுகள், பிராமண எதிர்ப்பு, பிரிட்டிஷ் எதிர்ப்பு, அரசாங்கத்தின் மேல் சலிப்பு என பல கலகங்களின் மூலம் இந்தியாவைப் பதிவு செய்வது ‘இந்தியாவில் இப்பொழுது ஒரு கோடி கலகங்கள்’ (இந்தியா: எ மில்லியன் ம்யூடினீஸ் நௌ).

நய்பாலுக்கு ஜயப்பனை பிடித்திருக்கிறது. கர்நாடகாவிற்கு பஸ்ஸில் செல்லும் பொழுது பார்த்த கறுப்பு வேட்டி மனிதர்களை பார்த்து பயப்படுகிறார். இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள், முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த வாபர் சாமியை கும்பிடுவதால் பிடித்திருக்கிறது.

தேவையன் என்பவர் ஜயப்ப வரலாறுகளையும், வழிபாட்டு முறைகளையும் சொல்கிறார். தேவையன் ஒரு சராசரி இந்திய பக்தரின் குறியீடு. விஞ்ஞானப் பகுதியை தினசரியில் எழுதி வருபவர். எட்டு வருடம் முன்பு கன்னி சாமியாக சென்றிருக்கிறார். கல்லூரி முடித்து ஜந்து வருடம் வெறுமையாகக் கழிந்ததால், ஒரு மாறுதலுக்காக மீண்டும் சென்றுள்ளார். மண்டல விரதம், கடுமையான பாதை, உடன் கூட்டிச் சென்றத் தோழமை, சாமிமார்களின் உதவும் மனப்பான்மையை பயணத்தின் நன்மைகளாகப் பட்டியலிடுகிறார்.

ஆனால், மகர ஜோதியை நம்பாமல் இருப்பதையும் சொல்லிச் செல்கிறார். ஒரு சிலரின் மோசடி வேலை, கஷ்டமான காட்டுப் பாதையில் காண்பிக்கப்படும் கற்பூர விளக்கு என்று வாசகர்களுக்கு அறிவுறுத்துகிறார். ஆனால், போய் வந்த பிறகு தேவையனின் வாழ்க்கை முன்னேறியதையும், எட்டு வருடங்களாகத் தொடர்ந்து சென்று வருவதையும் தொடர்கிறார். சொல்வது தேவையன் மட்டுமே. நய்பாலின் இடைச் செருகல்கள் இதில் எதுவுமே இல்லை.

ஆனால், அவருடன் பயணித்த ஜயப்பன்மார்களில் பலரிடம் அவர் பேச்சுக் கொடுத்திருப்பார். அவர்களில் பலரும் மகர ஜோதியின் அதிசயத்தையும், சபரி மலையின் அற்புதங்களையும் விளக்கியிருப்பதையும் நியுஸ் ஏஜென்ஸி போன்ற ரிப்போர்ட்டிங் கொடுக்கிறார். தேவையனின் வாய் வழியாக ஜயப்பனைக் காண்பிப்பதில் இந்தியர்களின் மெய்ஞான விஞ்ஞானக் கலவையையும், ‘எப்பொருளிலும் மெய்பொருள் காண்பதையும்’ தொட்டுச் செல்கிறார். தேவையனுக்கு இரு மதங்களின் ஒற்றுமை பிடித்திருந்தது.

வாபரை மதம் மாறச் செய்யாத ஜயப்பன் பிடித்திருக்கிறது. எல்லா ஜயப்ப சாமிகளும் வாபர் சமாதியில் மரியாதை செலுத்த வேண்டிய வழக்கம் பிடித்திருக்கிறது.

ஜயப்பனின் சமீபத்திய பெரும்புகழுக்கு நய்பால் கூறும் காரணங்களைப் பார்க்கலாம். மக்களிடம் புழங்கும் பணத்தின் அதிகரிப்பு, நன்றாக போடப்பட்ட சாலைகள், வழியெங்கும் முளைத்த கடைகள், சீர் செய்யப்பட்ட நடைபாதை, நிறையப் பேருந்துகள், ஆண்கள் மட்டும் தனியாக இன்பச்சுற்றுலா செய்யும் விருப்பம் என அடுக்கிச் செல்கிறார்.

இந்தியாவின் ஆன்மிக இயக்கங்களுக்கும் கடவுள் கோட்பாடுகளுக்கும் அறிவியல் முன்னேற்றத்துக்கும் இடையே உள்ள முரண்களை, அவருடைய ஸ்டைலில் போகிற போக்கில் சொல்லி செல்கிறார்.

ஸ்ரீனிவாசன், சுப்ரமணியன் என இரண்டு விஞ்ஞானிகளை சந்தித்த விவரம் சொல்லும் போதே அவர்களின் தாத்தாக்கள் சாஸ்திரிகளாக புரோகிதம் செய்ததை சொல்லி தன்னுடைய மெல்லிய ஆச்சரியத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

சீனிவாசன் அனு எரிசக்தி குழுவின் தலைவர். இவரின் அப்பா நாமம் போட்டுக் கொண்டு இருக்கிறார். சீனிவாசனின் தாத்தா புகைப்படத்தையும் கேட்டு வாங்கிப் பார்த்துவிட்டு விவரிக்கிறார். சட்டை இல்லாத பஞ்சகச்ச வேஷ்டி; நெற்றியின் நடுவே ஒரு மெல்லிய சிவப்பு கோடு, புருவங்களில் ஆரம்பித்து தலைமுடி வரை இருக்கும் இரு வெள்ளைக் கோடுகள் என நாமத்தை விலாவரியாக இவருக்கும் வர்ணிக்கிறார்.

நாமத்தின் தாத்பரியம், எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்று நமக்கு சொல்லிக் கொண்டே தொழிற்புறட்சியில் சீனிவாசனின் பங்கை அசை போடுகிறார். சந்தியாவந்தனத்துக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை, பிராமணர்கள் ஆங்கிலப் புலமைக்கு அரசாங்க உத்தியோகங்களுக்கும் கொடுத்தார்கள் என்பதை பல உதாரணங்களினால் அவர்களின் வாயாலேயே சொல்ல வைக்கிறார்.

“சீனிவாசனின் தாத்தா சடகோபாச்சாரிக்கு எல்லா வேதங்களும் தெரியும். ஆனால், நாலணாதான் அவருக்கு புரோகிதத்தில் கிடைக்கும். அவர் மஹாராஜாவிடம் க்ளார்க்காகவும் இருந்தார். மெடரிக் மட்டுமே முடித்து இருந்ததால் கம்மி சம்பளம். அவர் மட்டும் கல்லூரி முடித்திருந்தால் மூன்று மடங்கு சம்பளம் கிட்டி இருக்கும்.”

இதனால் படிப்பின் அருமையையும் ஆங்கிலத்தின் அவசியத்தையும் அவரின் குழந்தைகளுக்கு சின்ன வயதிலேயே வலியுறுத்தி வருகிறார். படிப்பு, ஆங்கில வழிக் கல்வி, கடனே என்று செய்யும் ஆகமங்கள், மூன்று வேளை இறை வழிபாடு, புரியாத சம்ஸ்கிருத வேத பாராயணம் என வளர்ந்தவர்கள் சிறந்த அறிவியல் வல்லுனர்கள் ஆகி உள்ளார்கள் என்று கருதுகிறா நய்பால்.

இந்தியாவை விவரிப்பதில் உள்ள பற்றற்ற தன்மை, மூன்றாம் மனிதனை எட்டிப் பார்த்து படம் பிடித்து, ஒவ்வொரு படத்துக்கும் தலைப்புக் கொடுக்காமல், ஃபோட்டோ ஆல்பம் காட்டுவது போல் விரிகிறது இந்தப் புத்தகப் பதிவு. மேற்கத்தியர்களைக் கட்டிப் போட்டு ரசிக்கவைத்ததற்கும் இந்த non-glorification மற்றும் non-gorification இரண்டுமே காரணம்.


அது இருக்கட்டும். நைபாலா? நய்பாலா? நாய்பாலா?