Tag Archives: Jeyamohan

அனேக அகமுடையார்: யானம் சிறுகதை விமர்சனம்

ஜெயமோகன் அவ்வப்போது சிறுகதைகளை வெளியிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரின் வயதில் அல்லது அவரைப் போன்ற ஆளுமையை அடைந்த பிறகு அவரின் சமகாலத்தவரோ, அவருக்கு முந்தைய இலக்கிய ஜாம்பவான்களோ அத்திப் பூத்தது போலத்தான் சிறுகதைகள் எழுதினார்கள். அவர்கள் நாவல் எழுதுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். அல்லது பேசாமல் இருப்பதே கௌரவத்தைக் காப்பாற்றும் என்று அமைதி காத்தார்கள்.

நான் நினைத்தது – ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, வண்ணதாசன், வண்ணநிலவன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றோர். சுஜாதா மட்டும் விதிவிலக்கோ!?

இந்த எண்ணம் தவறுதலாக இருக்கலாம். இருபதுகளில் துவங்கி அறுபது வயது தாண்டியும் எந்த எழுத்தாளராவது தொடர்ச்சியாக சிறுகதைகளை தொண்ணூறுகளில், 2000களில் வெளியிட்டார்களா?
தீபாவளி சிறப்பிதழ்கள் தவிர்த்து அதற்கான பத்திரிகைகள் இருந்ததா என்பதைக் குறித்த என் எண்ணத்தையும் திருத்தவும்.

நிற்க.

யானம் (சிறுகதை) | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)

இந்தப் பதிவு இலக்கியகர்த்தாக்களின் பிற்கால படைப்பூக்கம் பற்றியது அல்ல. அமெரிக்காவில் வசிக்காத ஒருவர் அமெரிக்காவைப் பற்றி புனைவு எழுதலாமா என்பதைப் பற்றியும் அல்ல. எனினும், அதையும் நோக்குவோம்.

ஒரே ஒரு மேற்கோள்: “என்ஜாய் பண்றாங்களோ இல்லியோ, இது ஸ்கூலிலே பிரெஸ்டிஜ் இஷ்யூவா இருக்கு”

பொத்தாம்பொதுவாக ஜல்லியடிப்பது வாத்தியாரின் வித்தை. ஜெயமோகனின் சிறுகதைகளில் ஒற்றை வரி தீர்ப்பு கொடுத்து மொத்த சமுதாயத்தை சுருக்குவதும் அவ்வப்போது செய்வதுதான். இதிலும் சாமர்த்தியமாக கதாபாத்திரத்தின் வசனமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதே போல் கதை நெடுக மனைவியும் கணவனும் கனமான உரையாடல்களில் ஈடுபடுகிறார்கள்.

கார் என்பது எல்லைகளில்லா சுதந்திரம். நான்கு சுவருக்குள் அடைபட்டுக் கிடக்கும் வீட்டில் இருந்தும், உடன் இருக்கும் நபர்களிடமிருந்தும் கட்டற்ற விடுதலை. பிடித்த பாடல். நினைத்த வேகம். இலக்கற்ற பாதை. அமெரிக்காவில் ஆண்டி முதல் அரசர் வரை எவரும் எளிதில் வாங்கி, உடனடியாக ஊர்ச்சுற்ற, இல்லமாக குடியிருக்க என்று நினைத்த மாதிரிக்கு பயன்படுத்தும் மூலமுதலாதாரப்பொருள்.

யானம் சிறுகதையில் நான்கைந்து நல்ல பொறிகள், துவக்க கண்ணிகள் இருக்கின்றன:
1. அந்தத் தற்கொலை எண்ணம்
2. பச்சை விளக்கிற்காக காத்திருக்கும்போது(ம்) பக்கத்து வண்டிகளை எட்டிப் பார்ப்பது
3. விடுமுறை விட்டால் காரை எடுத்துக் கொண்டு எங்காவது கிளம்புவது

அதை விட அந்த இடங்களை உளவியல் ரீதியாக தீர்க்கமாகவோ சம்பவங்களின் கோர்வையில் ஆழமாகவோ உள்ளே செல்லாமல் ஹெலிகாப்டரில் பறக்கும் அவசரத்துடன் தாண்டி விடுகிறார். அதை விட ஆபத்தான பிரதேசம் – இந்திய சாலைகளையும் போக்குவரத்தையும் அமெரிக்க மக்களோடும் இயந்திரங்களோடும் ஒப்பிடும் பிரதேசங்கள். அவை இன்னும் தேய்வழக்காக அலுமினிய பிரகாசத்துடன் மின்னிடுகின்றன.

காரில் இருக்கும் விடலைகளும் பாந்தன்களும் இன்றைய காலத்தில் செல்பேசியில் மூழ்குவார்களேத் தவிர இந்த மாதிரி தத்துவபூர்வமான விவாதங்களுக்குள் செல்லமாட்டார்கள். கதைதானே? ஜெயமோகன் கற்பனைதானே? அரட்டை அடிக்கக் கூடாதா என்ன!?

எனினும், கதையின் அடிநாதம் முக்கியமான ஒன்றைச் சுட்டுகிறது.

இந்தக் காலத் தம்பதியினருக்கு விவாகரத்தில் விருப்பமில்லை. இல்லறமும் போரடிக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்னும் பத்தாம்பசலி கொள்கைகளிலும் கிஞ்சித்தும் நம்பிக்கை இல்லை.

அவர்கள் திறந்த வாழ்க்கையை விரும்புகிறார்கள். அன்றாடம் ஒரேயொருவடன் தாம்பத்தியம் வைத்துக் கொள்வதினால் வரும் அலுப்புகளை உணர்ந்தவர்கள்.

”நியு யார்க்கர்” கட்டுரையில் இருந்து நறுக்:

So many rules! “American Poly” reveals Americans to be very American. Good Puritans, we made marriage into work and non-monogamy into even more work—something that requires scheduling software, self-help manuals, even networking events. Presumably, participants could at least skip the icebreakers.

https://www.newyorker.com/magazine/2024/01/01/american-poly-christopher-gleason-book-review-more-a-memoir-of-open-marriage-molly-roden-winter

”அன்புள்ள அல்லி” கேள்வியில் இருந்து இன்னொரு மேற்கோள்:

My nesting partner of a decade and I opened our relationship about four years ago, and for the first three years, we were ethically non-monogamous, but not poly. We’re pretty parallel, but we’re recently trying garden party style for big events… the polycule… metamour…

https://slate.com/human-interest/2024/01/birthday-plan-relationships-sex-advice.html

மணிரத்னம் ஓகே கண்மணி எடுத்தது போல், அனேக அகமுடையார் கொள்கைகளை ஜனரஞ்சகமாக்க இன்றைய கல்கித்தனமான கதை. மணி ரத்தினம் சினிமா போல் இதுவும் ஒட்டிக்கோ/கட்டிக்கோ வேட்டியாக பல்லிளிக்கிறது.

உங்கள் வாசிப்பில் என்ன உணர்ந்தீர்கள்?

சிறுகதை – பரிந்துரை

நல்ல மலையாளப் படம் போல் தத்ரூபமான கதை.
வெண்முரசு எழுதியதின் மிகுதியில் உருவான சேடி.
தத்துவமும் குட்டிக்கதையும் பின்னிப் பிணைந்திருக்கும் பாதை.

கலைமகள், அமுதசுரபி, மஞ்சரி, ஞானபூமி போன்ற இதழ்களில் படித்திருக்க வேண்டியது;
பார்த்தனும் முராரியும் உரையாடுவது;
சாந்தமாக நிச்சிந்தையாக நேரம் எடுத்துக் கொண்டு நீண்ட காலம் நெஞ்சில் நிலைத்திருப்பது.

இந்த 310ஆம் சொல்வனம் இதழில் ராமராஜன் மாணிக்கவேல் எழுதிய “கொடை” குறிப்பிடத்தக்க ஆக்கம்.
வாசியுங்கள்

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

பூன் 2023

ஜெயமோகன் பதிவு: பூன் முகாம் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. (௲௱௭ – 1107)

தன் சொந்த வீட்டில் இருந்து கொண்டு, தன் உழைப்பில் வந்தவற்றைத் தனக்குரியவர்களுடன் பகிர்ந்து உண்ண வரும் மாபெரும் மகிழ்ச்சி, ஆசான் இடத்தில் முரண்டு தெளிவாகும்போதும் கிடைக்கும்.

இந்தக் குறளை வைத்து ஜெயமோகன் சந்திப்பான பூன் முகாம் கட்டுரையைத் துவங்கினேன்.

மூன்று நாளும் எப்படி இப்படி பம்பரமாக சிந்திக்கிறார்! எல்லாவற்றையும் எப்படி நினைவகங்களில் இருந்து பொருத்தமாகத் தேர்ந்தெடுத்து சந்தர்ப்பத்திற்கேற்ப கனகச்சிதமாகக் கொடுக்கிறார்!! அணுகுவதற்கு ஆர்ப்பாட்டமில்லாமல், வயது வித்தியாசம் பாராமல் கேள்விகளின் அறியாமையை நக்கலிடாமல், எவ்வாறு உண்மையாக, காத்திரமாக, அறத்துடன் உங்களுக்கேற்ப விளக்க முடிகிறது!!!

ஒவ்வொரு முறை அவரை சந்திக்கும் போதும் வரும் ஆச்சரியங்கள்தான். இந்த முறையும் தொடர்ந்தது. ஆஸ்டின் சௌந்தர், இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம், தேயிலை மணக்க காபி போட்ட மகேஸ்வரி, உபசரிப்பு முத்து காளிமுத்து, பவா செல்லத்துரையின் செல்லக்குட்டி பிரகாசம், தத்துவவியலாளர் விவேக், மேய்ப்பர் சிஜோ – விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் ஒவ்வொருவராலும் விழா அமர்க்களமாகியது

எனவே, முடிவில் கம்பரின் இந்தப் பாடல் பொருத்தமாக பட்டது:

”எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே.
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ”

அந்நகரில் வாழ்பவர்கள் எல்லோரும் கல்வி. பொருள் ஆகிய எல்லாச் செல்வமும் அடைந்திருப்பதாலே, அந்த நகரத்திலே இல்லாதவரும் இல்லை. உடையவர்களும் இல்லை. இப்பாடல் அந்நகரத்தவரின் அறிவுப் பெருக்கத்தையும். செல்வச் சிறப்பினையும் தெரிவிக்கிறது. அங்குக் கற்றவர்-கல்லாதவர் என்ற வேறுபாட்டையோ.; செல்வர்,
வறியவர் என்ற வேறுபாட்டையோ காண இயலாது என்பது கருத்து.

“பையணைப்‌ பஃறலைப்‌. பாந்தள்‌ ஏந்திய
மொய்ந்நிலத்‌ தகளியில்‌: முழங்கு: நீர்நெயின்‌
வெய்யவன்‌ விளக்கமா மேருப்‌ பொன்திரி
மைஅடுத்‌ தொத்தது மழைத்த வானமே”

(உரை): ஆதிசேடன்‌ தாங்கும்‌, இந்த நிலமே-அகலாகவும்‌; கடலே நெய்யாகவும்‌, மேருமலை திரியாகவும்‌, ஞாயிறு.விளக்காகவும்‌. அமைந்திருக்க, : அந்த விளக்குப்‌ புகையினால்‌, வானம்‌ இருண்டது. போன்று வானத்தில்‌ முகில்‌ மூட்டம்‌ காணப்‌ பட்டது.

மேகமூட்டம் என்பதை விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் என நினைக்கிறேன். அமெரிக்கத் தமிழர் கடல்நீர்; அதில் அகல் விளக்கின் குழிவில், இலக்கியத்தை விரும்புவோர் என்னும் நெய்யினை சிக்கெனப் பற்றிக் கொண்டு பூன் மலை என்கின்ற பொன்திரி கொழுந்து விட்டெரியவே அதிலிருந்து கிளம்பிய சிந்தனை மூட்டமே மேகமூட்டம் எனலாமா?

அதன் தொடர்ச்சியாக திசையைக் காண்பிக்கும் கொல்லன், அந்த மேகக்கூட்ட மழைக் காலத்துக் கரிய மேகமாகிய கரிக் குவியலில் வாடைக் காற்றாகிய பெரிய ஊதுலைத் துருத்தியின் வலிமையைக் கொண்டு ஊதி, மின்னல் நெருப்பெழச் செய்து வெளிப்படுத்துகினற கொல்லன்பட்டரையாகப் பார்க்கிறார் கம்பர்:

“மாதிரக் கருமகன் மாரிக் கார்மழை
யாதினும் இருண்ட விண் இருந்தைக் குப்பையின்
கூதிர் வெங்கால் நெடுந் துருத்திக் கோள் அமைத்து
ஊது வெங்கனல் உமிழ் உலையும் ஒத்தவே.”

இந்த மாதிரி எல்லாம் வெம்மையான நெருப்புச் சுடர்கள் பொறி பறக்கும் என எண்ணி என்னுடைய கம்பளிச்சட்டையை கழற்றி விட்டு ஒயிலாகக் குளிரில் நின்றிருந்தேன். உஷ்ணம் மூளைக்குள் அனலாக தகித்தாலும் நெஞ்சில் கபம் தங்கி ஜலதோஷம் பிடித்துக் கொண்டது. அடுத்த முறை மறக்காமல் தலைக்கு குல்லா, காதுக்கு மஃப்ளர், கழுத்துக்குப் போர்வையுடன் பவ்வியமாகச் செல்ல வேண்டும்.

அறிவுப்பூர்வமான தருக்கத்திற்கும், எதார்த்தத்திற்கும் — இடையே உள்ள உறவை ஜெயமோகனின் மொழியில் அவரின் நூல்களின் வாயிலாகவும் சொற்பொழிவுகளின் மூலமாகவும் அன்றாடப் பதிவுகளின் வழியாகவும் நுழையலாம். எனினும், மொழி என்பது பேசப்படுவது. அந்த மொழியை அவரின் நேரடி பிரவாகமாக, ஊற்றாகக் கிடைப்பதற்கு இந்த பூன் முகாம் அரிய வாய்ப்பு.

வாழ்க்கையின் மிகப்பெரிய கேள்விகளுக்கு தத்துவம் நுண்ணறிவை வழங்க முடியுமா? அதை வெளிப்படுத்த மொழியின் எல்லை என்ன? மீமெய்யியலும் நெறிமுறைகளும் வெறும் முட்டாள்தனமான பேச்சுதானா? இவற்றை நேரே எதிர்கொண்டு அதற்கான பதில்களை உணர்த்தும் பேச்சு, இந்தச் சந்திப்பின் உச்சகட்டம். அவர் அர்த்தமுள்ள மொழியின் எல்லைகளை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டு, உணர்வை முட்டாள்தனத்திலிருந்து பிரிக்க மெய்யியலை வாயிற்கதவாக்கும் விரிவுரையைத் தந்தது — விடையில்லா வினாக்களுக்கு விவாதங்களை உள்ளுக்குள் புலப்பட வைத்த தருணம் ஆகி நிறைந்து நிற்கிறது.

சென்ற முறை வந்தவர்களைப் பற்றிய விரிவான பதிவை, ஒவ்வொருவரைப் பற்றிய சிறு குறிப்பையும் எழுத முடிந்தது. இந்த முறை (கிட்டத்தட்ட) அத்தனை பேரும் மீண்டும் வந்தது ஜாக்பாட். நீண்ட கால உறவுகளை, பால்ய காலத் தோழமைகளை மீண்டும் காணும் சந்தோஷம். சென்ற வருடம் ஐம்பது என எல்லை வைத்திருந்தார்கள். இந்த வருடம் எழுபது. அந்த எண்ணிக்கையும் சட்டென்று நிரம்பி காத்திருப்பு பட்டியல் நிரம்பி வழிந்தது. அந்த எழுபதில் ஒருவராக இடம் கிடைத்தது மகிழ்ச்சியைத் தந்தது.

சென்ற ஆண்டு பதிந்தது:

ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்திருந்தார்கள். விமானம் வரும் நேரம் பார்த்து, ஒத்த காலத்தில் வந்து சேர்பவர்களை வாசஸ்தலத்திற்கு அழைத்துச் செல்லும் கார்கள்; வேளா வேளைக்கு உணவு, காபி, டீ, சிற்றுண்டி; அனைவருக்கும் சௌகரியமான ஓய்வெடுக்கும் வசதி; பக்கத்து பக்கத்தில் குடில்கள்; ஆசானுடன் அதிகாலை முதல் பின்னிரவு நள்ளிரவு வரை நேரம் கழிக்கும் வாய்ப்புகள்; விடிய விடிய நட்புகளுடன் அளவளாவும் தனிமை – சென்ற ஆண்டைப் போலவே இவ்வளவு சிறப்பாக செய்து முடித்திருக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் ஒத்த மனதுடன் போட்டி போட்டுக் கொண்டு நிகழ்ச்சியை ஜமாய்த்தார்கள்.

இந்த மாதிரி மாநாடு என்றால் அதற்கான பேச்சாளர்கள் அதிமுக்கியம். ஒவ்வொருவரும் காத்திரமாக தயாரித்து வந்திருந்தார்கள். கச்சிதமாகப் பேசினார்கள். இத்தனை பரந்துபட்டத் தலைப்புகள் ஆயிற்றே! எவ்வாறு பேரவையில் எல்லாவற்றையும் அகல உழப் போகிறார்கள்? மீண்டும் கருத்தரங்கை களை கட்ட வைப்பார்களா? என்னும் அச்சம் இல்லாவிட்டாலும், சென்ற ஆண்டு மாதிரியே சுவாரசியமாகவும் ஆழமாகவும் நயமாகவும் கலந்தாய்வார்களா என்னும் முன்னுதாரணம் சற்றே நிழலாடிக் கொண்டிருந்தது. இந்த முறையும் புடமிட்ட பொன் ஆக ஜொலிக்க வைத்தார்கள்.

எல்லோருக்கும் நன்றி. ஒருவருக்காகக் கூடுகிறோம். அவரின் நிழலில் தழைக்கிறோம். அடுத்த சந்திப்பை எதிர்நோக்குகிறோம்.

“எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே.
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ.”

மேலும்:

வனபோசனம்

சென்ற மாதம் லண்டன் சென்ற வர நேரம் வாய்த்தது.
போன சமயத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக #சொல்வனம் பதிப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் பிரபுவையும் கிரியையும் சந்திக்க வாய்ப்பும் அமைந்தது.
அலுவல் நெருக்கடியினாலும் கடைசி நிமிட திட்டமிடலினாலும் சிவாவினால் தலை காட்ட இயலவில்லை.
அவருக்காக இன்னொரு தடவை இங்கிலாந்து போக வேண்டும்.

வழக்கம் போல் சுவாரசியப் பேச்சு.
நிறைய இலக்கிய அரட்டை.
கொஞ்சம் போல் சொந்தக் கதை.

ஒரு தசாப்தம் முன்று சென்றிருந்தபோது ரதசாரதியாக கையில் குழலுக்கு பதில் ஸ்டியரிங் வளையத்தைப் பிடித்து விமானதளத்தில் இருந்து அழைத்துச் சென்ற கிரியின் வீட்டிற்கு சென்று சுவையான தமிழக சிற்றுண்டிகளை வெட்ட முடிந்தது.
இந்த தடவை பிரபுவின் வீட்டிற்கு செல்ல முடிந்தது. இரு வால் பெண்கள். படு சுட்டி. இங்கிலீஷ் டீ. வாயில் கரையும் இனிப்புகள்.

Jeyamohan’s Stories of the True : Translated from the Tamil கொண்டு வந்திருந்தார் கிரி.

Solvanam முன்னூறாவது இதழ் குறித்து ஆக்கபூர்வமான ஆலோசனையை முன்வைத்தார்.

நாள் முழுதும் உழைத்து, பேசிக் களைத்த சோர்வு தெரியாமல் உற்சாகமாக விவாதித்து, ஆரோக்கியமான விஷயங்களை முன்னெடுத்து, நான்கு மணி நேரத்திற்கும் மேல் என் தர்க்கங்களுக்கு செவி மடுத்த பிரபுவிற்கும் கிரிக்கும் நன்றி!

பூன் கேம்பிற்கு உள்ளாவது ஆங்கிலக் கதைகளை வாசித்து விட வேண்டும்.

பொன்னியின் செல்வன் – இரண்டாம் பாகம்

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் தேவலாம்.
அதாவது ரஜினியின் ‘பாபா’ படத்தைப் பார்த்த பிறகு ‘சந்திரமுகி’ தேவலாம் என்று தோன்றுமே… அந்த மாதிரி தேவலாம்!

கல்கியின் ‘நந்தினி’ என்ன ஆனாள்? பொன்னியின் செல்வன்/முடிவுரை – விக்கிமூலம் (wikisource.org)

ஆபத்துதவிகள் பாண்டிய ராஜ்யத்தை ஸ்தாபிக்கும் முயற்சிகளில் மேலும் ஈடுபட்டு வருகிறார்கள். நந்தினி உயிரோடு இருந்த வரையில் ஆதித்த கரிகாலனுடைய அகால மரண இரகசியம் பற்றி விசாரிக்கப்படவில்லை. அதில் நந்தினியின் பெயரும் வரும் என்ற காரணத்தினால்தான். நந்தினியின் மரணத்துக்குப் பிறகு, இராஜராஜ சோழன், ரவிதாஸன் முதலிய ஆபத்துதவிகளைக் கைப்பற்றித் தண்டனை விதித்து அவர்களுடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் கட்டளை பிறப்பிக்கிறான்.

நந்தினி அமரபுஜங்கன் இறந்த பிறகு தானும் உயிர் துறக்கிறாள். அதற்கு முன்னால் அவளை இராஜ ராஜ சோழர் சந்திக்கிறார். அவரிடம் தன் பிறப்பைக் குறித்த உண்மையையும், கரிகாலனின் மரணத்தைப் பற்றிய உண்மையையும் கூறிவிட்டு இறக்கிறாள்.

ஆனால், ஜெயமோகன் என்ன செய்து விடுகிறார்?

அந்த மாதிரி ஒரு தைரியசாலி சட்டென்று முடிவை எடுத்து விடுவதாகச் சொல்கிறார். நந்தினியைப் போன்று பல்வேறு சிக்கல்களை சாதுரியமாக எதிர்கொண்ட கதாபாத்திரம் அவ்வாறான இறுதியைத் தேடிக்கொள்ளும் என்பது மஹாபாரதத்தை வெண்முரசாக்கிய போதும் மாற்றப்பட்டது போல் இங்கும் பெண்களுக்கான அவருடைய பொதுமைப்படுத்திய சிறுமையாக்கம்.

சில அசல் வசனங்களும் அதற்கு ஆசானின் அசல் எண்ணங்களும்:

அசல்: குதிரை உங்களுடையதாக இருக்கலாம்; காடு என்னுடையது.
ஆசான்: கதை கல்கி உடையதாக இருக்கலாம்; கோணி என்னுடையது.

அசல்: மக்களை நம்பாதவன் மக்களை ஆள முடியாது.
ஆசான்: வாசகரை நம்பாதவன் வாசகரை வரவழைக்க முடியாது.

அசல்: அரசர் அறம் தவறினால் மக்கள் எப்படி இருப்பார்கள்?
ஆசான்: நான் அறம் உபயோகிக்காவிடில் மக்கள் எப்படி என்னை நினைப்பார்கள்?

பல இடங்களில் #PS2 இன்ன பிற படங்களையும் பாடல்களையும் நினைவுக்கு மீட்டன. #பொசெ2 -க்கு என்று தனித்துவமான மனதில் நிற்கும் காட்சி என்றால் ஒன்றே ஒன்றுதான்: கடம்பூர் மாளிகைக்குள் அபிமன்யு போல் தன்னந்தனியே குதிரை மேல் எகத்தாளமோடு சுற்றி நிற்கும் சிற்றரசர்களிடமும் பாட்டா-விடமும் ஆதித்த கரிகாலன் பொங்கி கர்ஜிக்கும் இடம்.

மற்ற எல்லா காட்சியமைப்புகளும் கதாபாத்திரங்களும் வுட்வர்ட்ஸ் கிரைப்வாட்டர் தேய்வழக்காக, ஃப்ரிட்ஜ் கஞ்சியாக, ஏற்கனவே எங்கேயோ பார்த்த குரலாக, முன்பெங்கோ கண்ட காட்சியாக இருக்கிறார்கள்.

என் பங்கிற்கு:
1. நெஞ்சில் ஓர் ஆலயம்
2. பாசமலர்
3. 96
4. திரிசூலம்

உங்களுக்கு என்னவெல்லாம் படம் நினைவிற்கு வந்து தொலைத்தது?

PS1 | Snap Judgment (snapjudge.blog)

கல்கி: பொன்னியின் செல்வன் 2

சொல்வனம் தளத்தில் வெளியான “ஜே ஜே சில குறிப்புகள் – புத்தக விமர்சனத்தில்” இருந்து:

*

உண்மையில் மலையாள எழுத்தாளன் என்ற ஒரு கருவியைப் பயன்படுத்தி தமிழ் கலாச்சாரத்தையே கலாய்க்கிறார் சு.ரா. சரித்திர கதைகள் கொண்டு மக்களை titillate செய்து பிழைப்பு நடத்தும் சரித்தர நாவலாசிரியர்களைப் பார்த்து மலையாள எழுத்தாளர்கள் கேட்பது போல ’என்ன சிவகாமி அம்மாள் தன்னுடைய சபதத்தை முடித்துவிட்டாளா?’ என்று கேட்டு அப்பட்டமாக கலாய்த்துவிடுகிறார்.

*

சுந்தர ராமசாமியின் அந்த நறுக்: (ப.38)

“திடீரென்று சத்தம் போட்டுப் பரிகாசமாகச் சிரித்தபடியே, ‘சிவகாமி அம்மாள் அவளுடைய சபதத்தை நிறைவேற்றிவிட்டாளா?’ என்று கேட்டான். இந்தக் கேள்வியின் உட்பொருள் விளங்க எனக்குச் சற்று நேரம் பிடித்தது. தமிழின் கட்டற்ற கற்பனைப் பண்புகளையும் காதல் கதைகளையும் எண்ணியா சிரிக்கிறான் இப்படி?

நான் ஆண்மையற்ற மெல்லிய குரலில் ஜே.ஜேயைப் பார்த்துப் பேச ஆரம்பித்தேன்.

‘புதுமைப் பித்தன் என்றொருவர் எங்கள் பாஷையின் எழுதியிருக்கிறார். நீங்கள் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’

ஜே.ஜே. தலையைக் குனித்து கவனிக்க ஆரம்பித்தான். ஆனால் அதற்குள் அவனுடைய ஆராதகர்கள் அவன் கவனத்தை வேறு பக்கம் திருப்பிவிட்டார்கள்.”

*

அந்த சு.ரா. சிஷ்யன் இன்று சொன்னியின் செல்வன் திரைக்கதையாளர் + வசனகர்த்தா.

காலம்தான் எவ்வளவு பெரிய ஆசான்!?

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஏன் எடுத்தார்கள்?

பத்து நாளுக்கு தினம் ஒரு காரணம் போட திட்டம். உங்கள் உதவியைக் கோருகிறேன்.

முதல் காரணம் எளிது:

கல்கி கதையின் போதாமைகளைச் சொல்லத்தான் இந்தப் படம் வெளிவந்திருக்கிறது. இதுவரை யானைக்காலாக யாரும் படிக்க முடியாத அளவு பக்கங்களாக பாகங்களாக இருந்ததை திரைப்படமாக்கியதால் இப்போது எல்லோரும், “இந்தக் கதை மொக்கையா இருக்கே!” என ஊர் எல்லாம் அறியும்படி தன் ஆனைக்கால் கொண்டு உதைத்து விட்டார் மணி ரத்னம்.

ஜெயமோகனுக்கு எப்போதுமே தனக்கு மட்டுமே அரியாசனம் வேண்டும். அது சுஜாதா, ஜெயகாந்தன், கல்கி போன்றோரால் சரியாசனமாக இருந்தது. கூடவே மும்மூர்த்திகள் என்று எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா போன்ற சமகாலத்தவரும் போட்டியில் இருந்தார்கள். விஷ்ணுபுரம் எழுதி ஒருவரை சாய்த்தார் என்றால், விஷ்ணுபுரம் விருது கொடுத்து இன்னொருவரை சாய்க்கிறார்.

இப்பொழுது கல்கியின் போதாமைகளை உணர்த்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறார் ஆசான். அதற்கான பிரும்மாஸ்திரம் — பொ.செ.1, 2, 3…

ஆதித்த கரிகாலனுக்கு தோல்வியைக் கண்டு பயம் என்பதை கல்கி உணர்த்துவார். படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தை பார்த்தால் வடிவேலு மாதிரி சிரிப்பு வருகிறது.

யானை ராணியை மாந்திரீகமாக, மாயாவாதமாக, பூடகமாக கல்கி உலவ விடுவார். இங்கே மேக்கப் இல்லாத ஐஷ்வர்யா என்று கெக்கலிப்பு வருகிறது.

ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரம் தூணிலும் இருப்பான், தூணாகவும் இருப்பானாக மிளிரும். இங்கே நிஜமாக நகைச்சுவைக்காக உலவுகிறது.

கல்கியைக் கொண்டாட வேண்டுமானால் சமரசங்கள் இல்லாமல் திரைக்குக் கொணர முயன்றிருக்க வேண்டும்.

மஹாபாரதம் எழுதிய போது எவ்வாறு தன் திரைவடிவத்தை ஏற்க மறுத்த சன் டிவியை உதாசீனம் செய்தாரோ… அது மாதிரி!

ஆனால், ”கடல்” போல் உருப்படியாக எடுத்தால் எவ பார்ப்பாள்? எனவே, திருடா… திருடா… பகுதி இரண்டை #PS1 ஆக எடுத்து விட்டார்கள்.

சிவாஜி என்றால் ரஜினியின் படம் என நிறுவியது ஷங்கர்.

பொன்னியின் செல்வன் என்றால் ஜொள்ளுச்சோழர் படம் என நிறுவுவது – 1ஸ்ட் ரீஸன்

வளநீர்ப் பண்ணையும் வாவியும்

”சின்னச் சின்னக் குற்றங்கள்” என்னும் தலைப்பைத்தான் முதலில் தேர்ந்தெடுத்திருந்தேன். அது எதிர்மறை என்பதால் வேறு தலைப்பிற்கு மாறிவிட்டேன். ஏன் அந்தத் தலைப்பை முன்வைக்க நினைத்தேன்? ஏன் அப்படிப்பட்ட அனுபவத்தை முன்னிலையாக்க எண்ணினேன்?

நான் ஓர் அக்மார்க் இண்ட்ரோவெர்ட். விக்சனரி பாஷையில் சொல்வதானால் “தன்னைப் பற்றியே எண்ணுபவன்”. எனவே முகாமிற்கு வந்த ஒவ்வொருவரைப் பற்றிய சிறுகுறிப்புடன் தொடங்குவது சாலச் சிறந்தது.

முதற்கண்ணாக ஏற்கனவே அறிமுகமானவர்கள். அவர்களில் முதன்மையாகத் தெரிந்தது பழனி ஜோதியும் மகேஸ்வரியும். எனக்குப் பெயர்கள் மறந்து விடும். முகங்கள் நினைவில் தங்கும். மகேஸ்வரியை ஓட்டுநர் என்று அறிந்து வைத்திருந்தேன். நியூ ஹாம்ப்ஷைருக்கு ஜெயமோகன் உடன் சென்றபோது கும்மிருட்டில் அலுங்காது குலுங்காது தூங்காது கொண்டு சேர்த்தவர். அவரின் சாரதித்தன்மை தெரிந்திருந்தாலும் எங்கு பார்த்தோம் என்று தடுமாறி ஓரளவு சமாளித்து மீண்டும் அறிமுகம் செய்து கொண்டேன். இவர்கள் இருவரும் பாடல் பெற்ற வாசகர்கள். அவர்களை ஜெயமோகன்.இன் தளத்திலேயே அறியலாம்.

அடுத்தவர் சிஜோ. இவர் இன்றைய சாரதி. கஷ்டமான மொழியாக்கம் என்றால் “கூப்பிடு சிஜோவை!” என்று சொல்வனம் பதிப்புக் குழுவினால் பரிந்துரைக்கப்படுபவர். இந்த பூன் முகாமிற்கு வெளியூரில் இருந்து வந்தவர்களை பத்திரமாகக் கொண்டு சேர்த்தவர்களில் ஒருவர்.

இன்னொரு ஓட்டுனர் தாமோ எனப்படும் தாமோதரன். இவரும் அட்லாண்டாக்காரர். தன் காரை இசை-ரதமாக ஆக்கியவர். சிஜோ-வையும், விபி எனப்படும் வெங்கட் பிரசாத்தின் அழைப்புகளையும் கவனித்துக் கொண்டே பின்னால் நடக்கும் தாளக் கச்சேரியையும் ஒருங்கிணைத்த மேஸ்ட்ரோ.

நிறைய வெங்கட்கள் இருப்பதாலோ விஐபி என்பதன் சுருக்கமாகவோ, வி.பி. என்று அழைக்கப்படும் வெங்கட்பிரசாத் வீட்டில் நளபாக உணவு கிடைத்தது. இதை கொண்டாட்டத்தின் துவக்கம் எனலாம். முதன் முதலாக சக பயணிகளின் அறிமுகமும் உரையாடலும் கூடவே அமர்க்களமான விருந்தும் கிடைத்தது. சின்ன வெங்காயம் போட்ட கார குழம்பு, பூசணிக்காய் கிடைக்கும் அரைத்து விட்ட சாம்பார், மிளகும் தக்காளியும் போட்டி போட்ட சூடான ரசம், சிறிது சிறிதாக வெட்டப்பட்ட உருளைக் கறி, சுரைக்காய் கூட்டு, கெட்டித் தயிர், ஊறுகாய் என அனைத்தையும் கபளீகரம் செய்த பிறகு இரண்டு டம்ளர் பருப்பு பாயாசம் என்று கனஜோரான வீட்டுச் சமையல் போஜனத்தில் விழாவைத் துவக்கி களைகட்ட வைத்தனர் விபி தம்பதியினர். விபி ஒரு கவிஞர்.

இவ்வளவு முக்கியமான சாரதிகளைச் சொல்லிவிட்டு, சாரதியைச் சொல்லாவிட்டால் எப்படி? “நீங்க கிஷோர்தானே?” என்று அவரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். அவர் சாந்தமாக புன்னகையுடன் “நான் சாரதி.” என்றார். வழக்கம் போல் எதற்கும் உதவாத “மன்னிக்கவும்.” உதிர்த்துவிட்டு என் ஆர்பாட்டப் பேச்சைத் தொடர்ந்தேன். இந்த சாரதி என் பெட்டியை விமான நிலையம் முழுக்க சுமந்தவர். கலிஃபோர்னியாக்காரர். தலபுராணங்கள் எதன்பொருட்டு?, ஓநாய்குலச் சின்னம் என கடிதங்கள் எழுதியவர்.

சாரதியின் பேட்டைக்கு பக்கத்திலேயே வசிப்பவர் சாரதா. விவாதங்களில் பங்கெடுத்தவர். தன் கருத்தை வெளிப்படையாக பதிவு செய்தவர். அமெரிக்க பண்பாட்டையும் இந்தியாவில் வாழாவிட்டாலும் பட்டிக்காட்டான் போல் குட்டி பாரத்தை உருவாக்கி அதில் மட்டும் பவனிவரும் தேஸி கலாச்சாரத்தையும் அவர்களுக்குப் பிறந்த இந்திய-அமெரிக்க குழந்தைகளின் குழப்பங்களையும் வினாக்களாகத் தொடுத்தவர்.

முக அடையாளம் நன்றாக ஞாபகம் இருக்கும் எனச் சொல்லிக் குழப்பிக் கொண்ட கிஷோர் – கனெக்டிகட் வாசி. சாரதிக்கும் இவருக்கும் ஆறு வித்தியாசத்திற்கும் மேல் இருக்கும். ஒற்றுமைகள் எனப் பார்த்தால் இருவரும் கண்ணாடி அணிந்திருந்தனர். இருவரும் கவனிப்பவர்கள். உள்வாங்குபவர்கள். அமைதியானவர்கள்.

சிஜோ அழைத்து வந்த பட்டாளத்தில் எங்களுடன் இணைந்தவர் கண்ணப்பன். துடிப்பானவர். நான்கைந்து கார்கள் சார்லட் நகரத்தில் பூன் மலைவாசஸ்தலத்திற்கு கிளம்பின. இதில் பயணித்த இருபதிற்கும் மேற்பற்பட்டவர்களின் விண்ணப்பங்கள். ”ஸ்டார்பக்ஸ் போகலாம்!”, “குடிநீர் வாங்கலாம்!”, “அவசரமாக ஒன்றுக்கு வருகிறது”, என்னும் கோரிக்கைகளை காதில் வாங்கிக் கொண்டு செல்பேசியையும் இன்னொரு காதில் வைத்து பேசிக் கொண்டு அதே செல்பேசியில் செல்லுமிடத்திற்கான வழித்தடத்தையும் காண்பித்தவர். நிறைய வினாக்களுடன் உண்மையான மாணவராக ஆசான் முன் கைகட்டி நின்று கவனித்தவர்.

டாலஸ் பாலாஜி. இவர் ஏ.டபிள்யூ.எஸ். (AWS) கஞ்சுகம் அணிந்திருந்தார். என்னுடன் தன் படுக்கையை பாதியாக விட்டுக் கொடுத்துப் பகிர்ந்தவர். என் குறட்டையை பொருட்படுத்தாது இன்முகத்தோடு அடுத்த நாளும் சிரித்து, மீண்டும் என்னுடன் துணிந்து உறங்கிய தைரியசாலி.

இசையமைப்பாளர் ராஜன். முதல் இரு ஜெயமோகன் வருகைகளை முன்னின்று கவனித்தவன் நான் என்றால், சமீபத்திய இரு வருகைகளை செவ்வனே செய்பவர் ராஜன். விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவர். வெண்முரசு பிள்ளைத்தமிழுக்கு சங்கீதம் இயற்றியவர்.

மியாமியில் இருந்து இன்னொரு ராஜன். ஜெயமோகனுக்காக… ஆசானை சந்திப்பதற்காக மட்டும்… பிரத்தியேகமாக குருவின் குரலைக் கேட்பதற்காக… என வந்தவர்கள் பெரும்பாலானோர். அவர்களின் பிரதிநித்துவம் இவரைப் போன்றோர்.

விபி வீட்டில் ஸ்ரீகாந்த் அறிமுகமானாலும் அவரின் புல்லாங்குழல் திறமை பின்னரே தெரியவந்தது. சினிமாப் பாட்டு, கர்னாடக சங்கீதம், பஜன்கள் என்று எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுக்கும் விரல்களும் பான்சூரியும் நிகழ்வின் ஒவ்வொரு பகுதியின் துவக்கத்தில் ஒலிக்கும் பாடலுக்கும் சூழலுக்கும் இனிமையைக் கொணர்ந்தது.

இனி சற்றே கொத்து கொத்தாக வந்தவர்களைப் பார்க்கலாம்.

வெண்முரசு ஆவணப்பட மொழிபெயர்ப்பில் பெரும் பங்காற்றியவர் என நான் அறிந்திருந்த ரெமிதா சதீஷ். ஜெயமோகன் தளத்தை சற்றே தேடிய பிறகு, பல்வேறு மொழியாக்கங்களை ரமிதா சிறப்பாக செய்து வெளியிடுவது தெரிய வந்தது. சிரித்த முகமும் மோனப் புன்னகையும் தவழவிட்ட ராலே ரவி. விழா ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக நடத்திய முத்து காளிமுத்து. ஏற்கனவே செய்த சொல்வன மொழிபெயர்ப்புகள் மூலமாகவும் நன்கு அறிமுகமானவர் முத்து. பூன் முகாமில் உணவும் உபசரிப்பும் சிறக்க இன்னொரு முக்கிய காரணமான விவேக்கும் வட கரோலினாகாரர்.

இவர்கள் உள்ளூர் படை என்றால், தமிழ்.விக்கி திறப்புவிழாவைத் தொடர்ந்து வந்த வாஷிங்டன் டிசி, மேரிலாந்து மாகாணம் மற்றும் வர்ஜினியா மாநிலக்காரர்கள் பெரும்சேனை. ஆசான் முதன் முறை அமெரிக்கா வந்தபோது வரவேற்று விருந்தோபியவர்கள் வேல்முருகன் பெரியசாமியும் நிர்மல் பிச்சையும். இருவரும் பல தசாப்தங்களாக ஜெயமோகனை வாசித்து பின் தொடர்பவர்கள். பாசக்கார மகேந்திரன் பெரியசாமி. யோகா குறித்து கட்டுரை மட்டுமல்ல காலையில் யோகம் செய்து காண்பித்த விஜய் சத்தியா. ரவியும் அவரின் மனைவி ஸ்வர்ணலதாவும் தத்தமது அறிமுகத்தில் ஆழமாக அசத்தினார்கள். என் வாசிப்பெல்லாம் ஒன்றுமேயில்லை என எண்ணவைக்குமளவு நேர்த்தியான வாசகர்கள் நிறைந்த சபை என்பதை உணர்த்தினார்கள்.

வந்தவர்களை நிறுத்திவைத்துவிட்டு, கொஞ்சம் மூச்சு வாங்கி தமிழ்.விக்கி குறித்து பார்ப்போம். ஒரு பக்கம் கூகுள் தேடுபொறியில் எதைத் தேடினாலும் முதல் முடிவாக வரும் தமிழ் விக்கிப்பீடியா. இன்னொரு பக்கம் காலச்சுவடு, உயிர்மை, சொல்வனம் போன்ற அதிகாரமையங்கள். இவர்களுக்கு நடுவாந்தரமாக திரிசங்கு சொர்க்கம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பூமியிலிருந்து சொர்க்கத்துக்கு தன்னுடைய உடலுடனேயே போக முயற்சித்தானாம் திரிசங்கு என்கிற மன்னன். ராஜா திரிசங்குவை தமிழர் என வைத்துக் கொள்ளுங்கள். சொர்க்கத்துக்கான யாத்திரையில் பாதிவழியிலேயே அவனுக்கு விசா கொடுக்காமல் நிறுத்தி விட்டாராம் சொர்க்கத்தின் அதிபர் இந்திரன். இந்திரனை கூகிள் எனக் கொள்ளவும். பூமியை விட்டு வெளியேறி விட்டதால் மீண்டும் பூமிக்கும் திரும்ப முடியவில்லையாம் திரிசங்குவால். அந்தரத்திலேயே இருந்த அவனுக்கு தன் தவ வலிமையால் தனி சொர்க்கத்தை விஸ்வாமித்திரர் உருவாக்கிக் கொடுத்தாராம். விசுவாமித்திரரை ஜெயமோகன் எனலாம். இதைத்தான் திரிசங்கு சொர்க்கம் என்கிறது புராணக் கதை. இந்தக் காலத்தில் தமிழ்.விக்கி. அந்தத் திரிசங்கு சொர்க்கத்தில் கரப்பான் பூச்சிகளைத் தோற்றுவிக்கிறார் கௌசிகர். அங்கே எலிகளையும் பல்லிகளையும் உருவாக்குகிறார் பிரும்மரிஷி. இந்த திரிசங்கு போல் இங்குமில்லாமல் அங்குமில்லாமல் நடுவில் இருக்கிறது தமிழ்.விக்கி என்பது என் எண்ணம்.

சாதாரண மக்கள் தங்களுக்கானத் தேடல் முடிவுகளைச் சென்றடைய கூகிள் உதவுகிறது. கூகுள் தளத்திற்கு அதிகாரபூர்வ விக்கிப்பீடியா மிகவும் பிடித்திருக்கிறது. எனவே, கூகிளில் எதைத் தேடினாலும் முதன்முதல் முடிவாக விக்கிப்பிடியாவை வரவைக்கிறது. அந்த கூகிள் உதவியில்லாமல் தமிழ்.விக்கி முதல் பக்கத்தில் சாதாரணத் தமிழரின் கவனத்திற்கு வரவே வராது. கூகுள் தளமே க்னால் (knol), கீன் (keen) என்று பல்வேறு முயற்சிகளில் சோதனை செய்கிறது. அவர்களின் ஆசி, அதாவது அசல் ப்ரம்மரிஷியான வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பெறாவிட்டால் தமிழ்.விக்கி தளத்திற்கு சொர்க்கலோகம் கிட்டாது.

ஏன் வசிஷ்டர் கூகுள், புதிய தமிழ்.விக்கியை கைகொடுத்து வரவேற்க மாட்டேன் என்கிறது? நவீன விருட்சம் அழகியசிங்கர் தினசரியைத் துவங்குவார். கௌதம சித்தார்த்தன் ஆலா என்னும் நிரலியை புழக்கத்தில் விடுகிறார். 25க்கும் மேற்பட்ட இலக்கிய பத்திரிகைகள் இணையத்தில் தீவிரமாக இயங்குகின்றன. இவற்றில் எது கொந்தர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு உங்களின் கணினியை பாதிக்காது என்பதையும் கூகுள் கண்காணிக்க வேண்டும். இந்தத் தளங்களில் எதில் உள்ளடக்கம் சீரழிந்து சற்றே மோசமான ஆக்கங்களை உள்ளீடு செய்கிறார்கள் என்னும் தரக்கட்டுப்பாடும் தேவை. அதே சமயம் தினசரி புதுசு புதுசாக, வித விதமாக, வெவ்வேறுத் தலைப்புகளில் தனித்துவமான விஷயங்களைக் கொடுக்கிறார்களா என்றும் பார்க்க வேண்டும். பணத்திற்காக விளம்பரங்களை விஷயங்கள் என்று விற்கிறார்களா என்றும் யோசிக்க வேண்டும். இப்படியெல்லாம் நாள்தோறும் எல்லாவற்றையும் மேய்த்து தன் சக்தியை வீணடிப்பதற்கு பதிலாக விக்கிப்பிடியாவிற்கு தன் முடிவுகளை குத்தகைக்கு விட்டிருக்கிறது கூகுள்.

ஜெயமோகனின் நண்பரான வேதசகாயகுமார் விட்டுவிட்டதை ஜெயமோகன் கையில் எடுத்திருக்கிறார்:

தமிழ் விமார்சனக் கலைக் களஞ்சியம், தமிழ்ப் புனைகதைக் களஞ்சியம், சங்க இலக்கியக் கலைக் களஞ்சியம் என்ற மூன்று கலைக் களஞ்சியங்களை உருவாக்கத் திட்டமிட்டார் குமார். தமிழ் விமர்சனக் கலைக் களஞ்சியம் பல்கலைக்கழக மானியக் குழு நிதி உதவியுடன் நிறைவு பெற்றது. அவருடைய கல்விப் பணியில் இது முக்கியமானது.

பொன்னீலன்

அது வேறு சிக்கல். இன்னொரு தடவை விரிவாக அரசியலும் சமூகப் போரும் தனித் தமிழ்ப் போராளிகளின் நிலையையும் பல்கலைக்கழகப் பதவி போட்டியும் கலந்து ஆலோசிக்க வேண்டிய ஒன்று. அதற்குள் இன்னொரு நாள் செல்லலாம்.

மீண்டும்… பூன் காவிய முகாமிற்குள்ளும் அங்கே பங்கு பெற்றவர்களுக்குள்ளும் செல்லலாம்…

டெக்சாஸில் இருந்து வந்தவர்கள் தனித்தனியாக வந்ததாலோ என்னவோ தனித்துவம் கொண்டிருந்தார்கள். கிதார் வாங்கபோவதாக மிரட்டி கைக்கு அடக்கமான வாத்தியப் பொட்டி வாங்கி அதை வாசித்தும் அசத்திய ஸ்கந்தநாராயணன். இரண்டாம் நாள் புகைப்படங்களில் ஒவ்வொருவரையும் தனித்தனியே அழகழகாக சுட்டுத் தள்ளிய கோபி. பண்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பாளராக நன்கு அறிமுகமான ஹூஸ்டன் சிவா.

டெட்ராயிட்டில் இருந்து வந்தவர்கள் இன்னொரு இனிய குழுமம். திருச்செந்தாழையின் கதையான ஆபரணத்தை அறிமுகம் செய்த மதுநிகா. எல்லோருடனும் இயல்பாக கலந்து பழகி வாய் நிறையப் பேசிய மேனகா. ஒளி ஓவியரும் மண்டலா கலைஞரும் இனிய குரல் கொண்ட பாடகருமான டெட்ராயிட் சங்கர்.

கலிஃபோர்னியாவில் இருந்து வந்த பெருங்கூட்டத்தில் பெரும்பாலானோரை ஏற்கனவே அறிமுகம் செய்து கொண்டோம். அவர்களைப் போலவே புத்தரைப் போன்ற சாந்தத்துடனும் அதே ஆனந்தர் போல் ஆழமான அவதானிப்புகளுடன் பழகிய சன்னிவேல் விஜய்.

அடுத்து தம்பதி சமேதராக வந்தவர்களைப் பார்க்கலாம்.

விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான ஆஸ்டின் சௌந்தரும் அவரின் மனைவி ராதாவும். காற்றின்நிழல் மூலமாகவும் வெண்முரசு ஆவணப்படம் மூலமாகவும் நன்கு அறிமுகமானவர்கள். முதல் முறையாக நேரில் பார்க்கிறேன்.

ஜெகதீஷ் குமாரும் அவரின் மனைவி அனுஷாவும். ஆங்கிலத்தில் பல கதைகளை மொழிபெயர்த்து அவற்றை பல்வேறு பத்திரிகைகளில் வெளியிட்டவர் என ஜெகதீஷை அறிந்து வைத்திருந்தேன். அனுஷா அவர்கள் முதல் நாள் புகைப்படங்களை சுட்டுத் தள்ளினார். இருவரும் கல்யாணத்திற்கு வந்தது போல் பாரம்பரிய ஆடைகளில் வளைய வந்தது முகாமிற்கு திருவிழா கோலத்தைக் கொடுத்தது.

விசுவும் அவரின் மனைவி பிரமோதினியும். இவர்கள் இருவரும் ஜெயமோகனோடும் அருண்மொழியோடும் அமெரிக்கா நெடுக பயணிக்கப் போகிறவர்கள் என்றவுடன் காதில் பெரும்புகை கிளம்பியது.

அதே போல் அந்த தொடர் பயணத்தில் காரில் கூட செல்லப் போகிறவராக ஸ்ரீராம் அறிமுகமானார்.

கடைசி அங்கமாக இந்த கால்கோள் முகாமில் பேசியவர்களில் சிலர்.

மெம்ஃபிஸ் செந்தில் கம்பராமாயணப் பாடல்களை வாசித்து விளக்கினார். கவிதைகள் குறித்து பாலாஜி ராஜு.

இறுதியாக என்னை பூன் முகாமிற்கு கொண்டு சேர்த்த ஷங்கர் பிரதாப். உடன் பயணித்த மதன். மற்றும் திரும்பும் வழியில் அமரிக்கையாக முதன்மையான கேள்விகளைத் தொடுத்து பயணத்தை சுவாரசியமானதாக்கிய ஓவியர் அருண். செல்பேசி உரையாடல்களில் மூலமே அறிமுகமாகியிருந்த பிரகாசம். இவர்கள் மீண்டும் மீண்டும் என்னைத் தரைக்குக் கொணர்ந்தவர்கள். உனக்கும் மேலே உள்ளவர்கள் கோடி… நினைத்துப் பார்த்து நிம்மதியை நாடு என்னும் தத்துவத்தை பூடகமாக தங்களின் வாசிப்பினாலும் (மதன், சியாட்டில் ஷங்கர் ப்ரதாப் போன்றோர்), திறமையினாலும் (ஓவியக்கார அருண், ஓளி ஓவிய கலைஞரான மிச்சிகன் சங்கர நாராயணன் போன்ற படைப்பாளிகள்), ஹூஸ்டன் சிவா போன்ற திறமையான முழுமையான மொழியாக்க வல்லுநர்களும் என் போதாமையையும் போக வேண்டிய தூரத்தையும் தங்களின் செயல்திறமையினால் விளக்கினார்கள்.

விடுபட்டவர்கள் மன்னிக்க வேண்டும். அவர்கள் மட்டுமே ஜெ என்னும் ஆளுமையின் முழுமையான சொற்பொழிவுக்கும் ஈர்க்கும் வசீகரத்திற்கும் உட்பட்டவர்கள்.

மீண்டும் தலைப்பிற்கே வந்துவிடலாம். ஜெயமோகனின் புகழ் பெற்ற பிரிவுகளில் ஒன்று – டால்ஸ்டாயும் தாஸ்தவெய்ஸ்கியும். ஒருவர் நல்லவர்களைப் பார்ப்பவர். இன்னொருவர் எதிலும் எல்லாவற்றிலும் குற்றங்களை நுணுக்கி நுணுக்கி தெரிந்து மகிழ்பவர். அறம் அற்ற இந்தியர்களை எங்கும் காண்கிறேன். குப்பையை அப்படியே வீசுவது. மாற்றுத் திறனாளிக்கான கார் நிறுத்துமிடத்தைத் திருடுபவர். பத்து பைசா அதிகம் கொடுத்தால் தன் விசுவாசத்தை இன்னொருவருக்குத் தந்துவிடும் முதலிய வழிபாட்டாளர். பற்பசை திருடுபவர்.

கூட்டம் என்பது மந்தை. திரள் பொதுசனம். அதில் இருந்து எது ஒருவரை வித்தியாசப்படுத்துகிறது?

அவர்கள் மேற்சென்று தங்கள் திறமையை செயலூக்கமாக்குகிறார்களா? ஒரு renaissance போல் மறுமலர்ச்சி போன்ற குறுகியவட்டத்தில் தளத்தில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு ஒரு கூட்டத்தை, ஒரு நாட்டை, ஒரு பிரதேசத்தை, தங்களின் ஈர்ப்பு விசையால் ஆகர்ஷித்து மேற்கொணர்ந்து முன்னகர்த்துகிறார்களா? ஆசானையும் குருவையும் வெறுமனே போஷிக்காமல், அவரின் லட்சியங்களையும் அவரின் குணாதிசயங்களையும் கடைபிடித்து, அவரின் சித்தாந்தங்களை உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக செயல்படுத்துகிறார்களா?

இங்கே குழுமியவர்களில் படத் தயாரிப்பாளர்கள் இருந்தார்கள். திறமையான இசைக் கலைஞர்கள் பலரும் பங்கு பெற்றார்கள். நிர்வாகமும் எல்லோரையும் கட்டி மேய்க்கும் அதிகாரமும் கொண்டவர்கள் விழாவை வெகு சிறப்பாக நடத்திக் காட்டினார்கள். ஓவியர்கள், சித்திரக்காரர்கள், கலைநயம் மிக்க புகைப்படக்காரர்கள், என்று தங்கள் பணிபுரியும் அறிவியல், பொறியியல், கணிதம், நிதி நிர்வாகம், மேலாண்மை போன்ற துறைகள் தவிர்த்து பரிமளிக்கும் வித்தகர்கள் இருந்தார்கள். பலரும் பண்பட்ட எழுத்தாளர்கள்.

பொது யுகத்திற்கு முன் நான்காம் நூற்றாண்டில் ஏத்தனியர்கள் என்று கிரேக்கத்தில் ஒரு குழு அமைகிறது. நாம் அறிந்த சாக்ரடீஸ், ப்ளாட்டோ, அரிஸ்டாட்டில், பித்தோகரஸ் போன்ற பல அறிஞர்களும் அவர்களின் வழித்தோன்றல்களும் இன்றளவும் நம் சிந்தையையும் செயலையும் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.

அதே போல் பொது யுகத்திற்கு பின் பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பிய வரலாற்றின் மறுமலர்ச்சி (renaissance) காலம் இத்தாலியில் உதயமாகிறது. அதற்கு ஆதரவு தந்தவர்கள் கலைகளில் அவதானம் செலுத்தக்கூடிய சுதந்திர மனநிலையை உடையோராக இருந்ததுடன் கலைகளை ஆதரிக்கக்கூடிய பணபலமும் அவர்களிடம் இருந்தது.

இத்தாலியில் தாந்தே, இங்கிலாந்தில் வில்லியம் ஷேக்ஸ்பியர், பிரான்சில் இராஸ்மஸ், சித்திரக் கலைஞர்களில் லியானாடோ டாவின்சி, மைக்கல் ஆஞ்சலோ, விஞ்ஞானத் துறையில் போலந்தரான நிக்கலஸ் கொபர்னிகஸ், ஜேர்மனியரான ஜொஹென்ஸ் கெப்லர், இத்தாலியரான கலிலியோ கலிலி, இங்கிலாந்தைச் சேர்ந்த ஐசக் நியுட்டன் என அறிவியல், அரசியல், மருத்துவம், சிற்பம், கட்டிடம், பொருளாதாரம், மொழி, இலக்கியம் என பலவற்றிலும் தங்கள் முத்திரையைப் பதித்து புதிய எழுச்சியை உருவாக்கினார்கள்.

இந்தக் குழு அப்படிப்பட்டகுழு என்றுதான் எண்ணுகிறேன். காலம் விடை சொல்லும்.

வந்தவர்கள் எல்லாம் சரி! விஷயம் என்ன? எதைக் குறித்து விவாதித்தீர்கள்? என்னவெல்லாம் பேசினீர்கள்? யார் உரைத்தார்கள்? அவற்றை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

மேலும்:

  1. பூன் முகாம் முழுநிகழ்வு- ஜெகதீஷ்குமார்
  2. கூடுதல் என்பது களிப்பு
  3. டல்லாஸ், டெக்ஸாஸ் வாசகர் சந்திப்பு – கடிதம்
  4. அமெரிக்கா- கடிதம்
  5. பூன்முகாம், கவிதை -கடிதம்: ஷங்கர் பிரதாப்
  6. அமெரிக்க பயணம் 2022
  7. பூன் இலக்கியக்கூடுகை

Asokamithiran on Jeyamohan

தமிழில் இப்போது எழுதுபவர்களில் நம்பிக்கை அளிப்பவர்களாக யாரைக் கருதுகிறீர்கள்?”

ஜெயமோகன். அவருக்கு இருக்கும் அனுபவங்களும் வாசிப்பும் இன்னும் அவரைப் பெரிய உயரங்களுக்குக்கொண்டு செல்லும் என்று நினைக்கிறேன். ஆனால், படைப்புகளைத் தாண்டி அவர் எழுது வதும் பேசுவதும்… ம்ஹூம்…”

அசோகமித்திரனின் கதைகளில் சினிமா குறித்தும் அரசியல் குறித்தும் இலக்கியம் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் இருக்கும். அதையே அவர் நேரடியாக பெயரைக் குறிப்பிட்டு சொல்லி இருந்தால் ஜெயகாந்தன் போல் புகழ் அடைந்திருப்பார். உதாரணத்திற்கு விழா மாலைப் போதில் எடுத்துக் கொள்ளலாம்.

அதில் சொல்லப்பட்டவர்களை அடையாளம் காட்டி ஆங்கிலக் கட்டுரை எழுதி இருக்கலாம். குஷ்வந்த் சிங் மாதிரி கவனம் பெற்றிருப்பார்.

அதை அசோகமித்திரன் விரும்பியதில்லை. அதனால்தான் ‘படைப்புகளைத் தாண்டி எழுதுவதும் பேசுவதும்’ அவருக்கு உவப்பாய் இருக்கவில்லை.

‘செய் அல்லது செய்தவரை சுட்டிக் காட்டு’ விரும்பிகள் ஒரு பக்கம். ‘என் கடன் எழுதி கிடப்பதே’ இன்னொரு பக்கம்.

All Politics is Local


அறிவா உள்ளுணர்வா?  | திண்ணை

இறந்து போன எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் பற்றிச் சில குறிப்புக்கள் | திண்ணை: ஸிந்துஜா

திண்ணைப் பேச்சு – கனிமொழி, சின்னக் குத்தூசி பற்றி ஜெயமோகன் பற்றி பி கே சிவகுமார் பற்றி ஸிந்துஜா | திண்ணை :: கோபால் ராஜாராம்