Monthly Archives: ஓகஸ்ட் 2017

பியானோ ஆசிரியரின் கண்மணி

சிறுகதையை இங்கு வாசிக்கலாம் – The Piano Teacher’s Pupil | The New Yorker

அவசரமில்லை… படித்து விட்டு வாருங்கள். ஜான் அப்டைக் போல் இந்தக் கதையை எழுதியவரையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்தானே?

சாதாரணமான நியு யார்க்கரின் கதைகள் போல் நீளமான சிறுகதையும் அல்ல. இரண்டாயிரம் வார்த்தைகளுக்குள் அடங்கி இருக்கிறது. மூன்றே பக்கங்கள்தான். சட்டென்று வாசிக்க முடியும். படித்து விட்டீர்களா?

ஆசிரியர் என்பவர் யார்? ஒரே இடத்திலேயே தேங்கி நிற்பவர் ஆசிரியர். கற்றுத்தரப் பட்டவர்கள் முன்னேறி வித்தை காண்பித்து புகழும் பணமும் பெறக்கூடியவர்கள். ஆனால், கற்றுத் தந்தவருக்கு அந்த வித்தையை அப்படி ஆக்கத் தெரிவதில்லை. வித்தகர் ஆக முடியாதவர் வாத்தியார் ஆகிறார். வர்த்தகமாக்க தெரியாதவர் வாத்தியாராக மட்டுமே வதங்குகிறார். எப்படி செய்ய வேண்டும் என்பது பியானோ ஆசிரியருக்குத் தெரியும். ஆனால், எதை எல்லாம் உருவாக்க முடியும் என்பது ஆசிரியர்களுக்கு புலப்படுவதில்லை.

இந்தக் கதை பியானோ ஆசிரியரைப் பற்றியது. மிஸ் நைட்டிங்கேல் (செல்வி வானம்பாடி) ஐம்பது வயதொத்த பெண்மணி. தன்னுடைய முப்பதுகள் வரை தந்தையோடு வசித்தார். தந்தைக்குத் தெரியாமல் மணமான ஒருவரின் காதல் பரத்தையாக பதினாறு ஆண்டுகள் இருந்திருக்கிறார். அந்தக் காதலர் இப்பொழுது அவளை நாடுவதில்லை. திங்கள் முதல் வெள்ளி வரை பல்வேறு தரப்பட்ட மாணவர்களுக்கு பியானோ வாசிக்கக் கற்றுத் தருகிறார்.

அவளிடம் ஒரு புத்தம்புது மாணவன் படிப்பு சொல்லிக் கொள்ள சேர்கிறான். வெள்ளி சாயங்காலம் அந்த மாணவன் வருகிறான். அவனிடம் கடவுள் கொடுத்த திறமை மட்டுமல்ல; அதற்கு மேற்பட்ட மேதாவித்தனம் கைவரிசையாக பியானோ இசையில் வெளியாகிறது. அவளுக்கெனவே பிரத்தியேகமாக வாசிக்கிறான். அவனுடைய கற்பனாசக்தியைத் தாண்டி கற்றுக் கொடுக்க என்று அவளுக்கு எதுவுமில்லை.

அவன் புறப்பட்ட பிறகு வீட்டில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு பொருள் காணாமல் போகிறது. மிகச் சிறிய கலைப்பொருள். அவளுடைய தந்தையார் ஞாபகார்த்தமாக சேமித்த சின்னச் சின்ன ஷோகேஸ் சின்னங்கள் மறைந்துவிடுகின்றன. அவளுடைய கழுத்தைச்சுற்றித் தொங்கவிடும் துகிலை, அவன் ஒரு சமயம் திருடி விடுகிறான். இன்னொரு சமயம் காலணியில் போட்டுக் கொள்ளும் அற்பமான அணிகலனை கவர்ந்து விடுகிறான். நகை போட்டு வைக்கும் பெட்டியை அவளுக்குத் தெரியாமல் எடுத்துச் சென்றுவிடுகிறான்.

கதை சொன்ன விதம் சுவாரசியமாக இருந்தது. டக்கென்று முடிந்ததும், முடிவு தெளிவாக புரியாததும் சற்றே எமாற்றம் தந்தது. வாழ்நாள் பறந்து சென்றுவிடுகிறது. நேரம் காணாமல் போகிறது என்பது புரிகிறது. இளமை கழிந்த பிறகே நமக்கு அதை இன்னும் பயனுள்ள முறையில் செலவிட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

வில்லியம் டிரெவரைக் குறித்து இணையத்தில் தேடினால், ‘பதாகை’ தளத்தில் உருப்படியாக அறிமுகம் செய்திருக்கிறார்கள். அந்தக் குறிப்பில் இருந்து:

ட்ரெவரிடம் சிறுகதையின் வரையறை என்ன என்று கேட்கப்படுகிறது. அதற்கு பதிலளிக்கும் ட்ரெவர், அது ஒரு கண்ணுறு கலை என்று சொல்கிறார் (‘art of the glimpse‘). அதைத் தொடர்ந்து, சிறுகதையின் உண்மை வெடித்துத் தெறிக்க வேண்டும் என்று அவர் சொல்வதை, அதன் மிகச் சிறிய வடிவத்தில் மிகப் பெரிய ஆற்றல் பொதிந்திருக்க வேண்டுமென்பதாய் புரிந்து கொள்கிறேன். அது எதைச் சொல்லாமல் விடுகிறதோ, அதுவே சிறுகதையின் பலம் என்கிறார் அவர். அர்த்தப்படுத்துதல் மட்டுமே அதன் நோக்கம் – வில்லியம் ட்ரெவரின் சொற்களில், ‘It is concerned with the total exclusion of meaninglessness‘. வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் நாவல் வடிவம் பெரும்பாலும் பொருளற்றதாகவும் அலைவுகள் கொண்டதாகவும் இருக்கலாம், ஆனால் சிறுகதை வடிவம் கலையின் சாரம் என்று அவர் வரையறை செய்கிறார் (‘It is essential art‘). நாவல்கள் ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களைக் காட்டினால் சிறுகதை மனித வாழ்வின் ஆதார எலும்புகளை தொட்டுக் காட்டுகிறது.

இரக்கமே இல்லாமல் சிறுகதையை வெட்டித் தள்ளுபவர் டிரெவெர். அவருடைய கார்டியன் பேட்டியில் இவ்வாறு சொல்கிறார்:

திரைப்படத்தை உருவாக்குவது போல் நான் சிறுகதையை செதுக்குகிறேன். நாம் எதை சொல்லாமல் விடுகிறோமோ அதுதான் ஒரு கதையின் முக்கியமான அங்கம். ஒரே சிறுகதையை பல மாதம் வைத்து மறுபடியும் மறுபடியும் அந்தச் சிறுகதையை எழுதுவேன். ஒரு சிறுகதை என்பது ஒருவரின் வாழ்க்கையை போகிற போக்கில் காண்பிப்பது; அல்லது அந்த ஒருவரின் ஏதோவொரு உறவை புகைப்படமாகக் கண்ணுறுவது.

எழுதுவது என்பது எனக்கு அறியவியலாத இரகசியம். அது மறைபொருள் என்று நான் நம்பாவிட்டால், எழுதுவதே உபயோகமற்றதாகிவிடும்.

எனவே நாம்தான் கதையின் ஒவ்வொரு ரகசியத்தையும் அர்த்தம் கொள்ள வேண்டும். கதையில் பதினாறு ஆண்டு கழிந்ததை குறிப்பிடுவதை, நான் ஆயுர்வேதத்தில் ஷோடஷ சமஸ்காரம் என பதினாறு வகையாக வாழ்க்கையை பிரிப்பதோடு ஒப்பிடுவேன். மானுட வாழ்வில் பதினாறு சமஸ்காரங்கள் உள்ளன.

ஷோடச கர்மாக்களை ஐந்து வகையாக பிரிக்கலாம்:

அ) கார்பிகா சமஸ்காரம் (குழந்தை பிறப்பு சம்பந்தமானவை)
1) கர்ப்பாதனம்
2) பும்சவனம்
3) சீமந்தம்

மேலே உள்ளவை தம்பதியரால் அனுஷ்டிக்கப்படுபவை.

ஆ) சைஷவ சமஸ்காரம் (குழந்தை சம்பந்தமானவை)
4) ஜாதகர்மம்
5) நாமகர்ணம்
6) நிஷ்கிரமணம்
7) அன்னப்பிராசினம்
8) சூடாகர்மம்
9) கர்ணவேதம்

மேலே உள்ளவை பெற்றோரால் கடைபிடிக்கவேண்டியவை.

இ) சைக்ஷ்னிகா சமஸ்காரம் (கல்வி சம்பந்தமானவை)
10) உபநயனம்
11) வேதாரம்பம்
12) சமாவர்த்தனம்

மேலே உள்ளவை உபாத்தியாயரால் செய்யவேண்டியவை.

ஈ) ஆஷ்ரமிகா சமஸ்காரம் (மணம் புரிந்தவர்கள் சம்பந்தமானவை)
13) விவாகம்
14) வானப்பிரஸ்தம்
15) சன்யாசம்

மேலே உள்ளவை சுயமாக செய்யவேண்டியவை.

உ) பிரயான் சமஸ்காரம் (மரணம் சம்பந்தமானவை)
16) அந்தியேஷ்டி

மேலே உள்ளவை உங்களின் இறப்பிற்கு பின் உங்கள் குழந்தைகளால் செய்யப்பட வேண்டியவை ஆகும்.

பதினாறு வகையாக இப்படி வாழ்க்கையை பிரித்து நம் நடவடிக்கைகளை வகுக்கலாம். இந்தப் பதினாறை இவ்வளவு வலியுறுத்த என்ன அவசியம்?

கதையில் மீண்டும் மீண்டும் இந்தப் பதினாறு வருகிறது. முதல் தடவை பியானோ ஆசிரியையின் கள்ளக் காதல் பருவம் குறித்த விவரிப்பில் எடுத்த எடுப்பிலேயே பதினாறு சொல்லப்படுகிறது.. இரண்டாவது தடவையும் அதே பதினாறு என்னும் எண் இன்னொரு பக்கத்தில் வலியுறுத்தப்படுகிறது – அவளின் தந்தையின் கடைசிக் காலத்தை நேசத்துடன் கவனித்துக் கொண்டு கழித்த பதினாறு ஆண்டுகள் என்கிறார் டிரெவர். தன்னுடைய ஒவ்வொரு பேட்டியிலும் தான் ஒரு கிறித்துவ ப்ராடெஸ்டண்ட் என்பதை ஊக்கமாக சொல்லிக் கொள்கிறார்.

கிருத்துவ மதத்தின் திருத்தூதர் பால் என்பவரும் விவிலியத்தில், தன்னுடைய முதல் நூலில், 16 வகையான நேசம் இருப்பதாக விரிவுரை எழுதுகிறார்.

Corinthians 13:4 – 8:

  1. அன்பு பொறுமையும்
  2. கருணையும் உள்ளது.
  3. அன்பு பொறாமைப்படாது,
  4. பெருமையடிக்காது,
  5. தலைக்கனம் அடையாது,
  6. கேவலமாக நடந்துகொள்ளாது,
  7. சுயநலமாக நடந்துகொள்ளாது,
  8. எரிச்சல் அடையாது,
  9. தீங்கை கணக்கு வைக்காது,
  10. அநீதியைக் குறித்து சந்தோஷப்படாமல்
  11. உண்மையைக் குறித்து சந்தோஷப்படும்.
  12. எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும்,
  13. எல்லாவற்றையும் நம்பும்,
  14. எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும்,
  15. எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும்.
  16. அன்பு ஒருபோதும் ஒழியாது.

இந்தக் கதையை எழுதிய வில்லியம் ட்ரெவர் (William Trevor) கடந்த நவம்பரில் தன்னுடைய 88ஆம் வயதில் மறைந்துவிட்டார். அவரின் இறப்பிற்கு பிறகு வெளியாகும் கதை இது. கடைசிக் காலத்தில் எழுதிய இந்தக் கதை முற்றுப்பெற்றதா? இதுதான் இந்த இந்தச் சிறுகதையின் இறுதி வடிவமா? இவ்வளவு சிறிய ஆக்கமாக இருப்பதற்கு அவரின் அந்திமக் காலமும் ஒரு காரணமா? கல்கியின் மறைவிற்குப் பின் அவருடைய புதல்வர் நிறைவாக்கிய ‘பொன்னியின் செல்வன்’ போல் வில்லியம் எடுத்திருந்த குறிப்புகளைக் கொண்டு இந்தக் கதை வடிவாக்கம் பெற்றதா?

வில்லியம் டிரவர் “The Piano Tuner’s Wives” என்னும் கதையை 1995ல் எழுதியிருக்கிறார். அந்தக் கதையை இங்கே வாசிக்கலாம்.

டிரெவரின் பெரும்பாலான சிறுகதைகள் போலவே இந்தக் கதையும் முன்னும் பின்னும் பயணிப்பவை. துவக்கத்தில் முடிவிற்கு வெகு அருகே இருக்கும். கொஞ்ச நேரம் படித்தவுடன் கதாபாத்திரங்களின் இளமைக் காலத்திற்கு சென்றிருப்போம். வாசிப்பவரின் ஆர்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்னும் அக்கறையை டிரவெர் எடுத்துக் கொள்வதில்லை. அதாவது வலிந்து அந்த விறுவிறுப்பைக் கொணர மாட்டார். நீங்கள் எப்பொழுதோ தூண்டிலில் சிக்கி இருப்பீர்கள்.

”கதையில் உணரவேண்டியதை விரித்துரைத்து சொல்லக் கூடாது; சம்பவங்களினால் காட்ட வேண்டும்; அன்றாட செயல்களினால் விஷயங்கள் புலப்பட வேண்டும்.” என்பதை சிறுகதையின் பாலபாடமாக அறிவுறுத்துவார்கள். ’அது எப்படி?’ எனக் கேட்பவர்களுக்கு வில்லியம் ட்ரெவரின் இந்த “பியானோவிற்கு சுருதிசேர்ப்பவரின் மனைவிகள்” கதையையும் சுட்டலாம்.

அவரின் இன்னொரு கதைய அவரே வாசிப்பதை இங்கு பார்க்கலாம்:

மீண்டும் இந்தக் கதைக்கே வந்து விடலாம்.

ஆசிரியை எண்ணற்ற பொருள்களை சேமித்து இருக்கிறாள். ஒரு இடத்தின் ஞாபகமாக சில பொருள்கள் இருக்கின்றன. இருவரின் நினைவை சொல்லும் பொருட்டு சில பொருள்கள் அலங்காரமாக இருக்கின்றன. ஒரு வயதை, அந்தக் காலத்தை எண்ணிப் பார்க்கும்வகையில் சில பொருள்கள் அவளின் வீட்டை நிரப்புகின்றன. நம் பொருள்கள் காணாமல் போன பிறகே அவற்றின் அவசியத்தையோ, அல்லது அவசியமற்ற தன்மையையோ உணர்கிறோம். பொருள் இருக்கும் அந்த அறை எப்படிப்பட்டது?

அதற்கு அவளின் மூன்று பருவங்கள் நினைவுகூறப்படுகிறது. முதலில் பால்ய காலம். சாக்லேட் என்றால் உயிர். ஒவ்வொரு நாளும் அவளுடைய அப்பா புதிய இனிப்புகளை அவருடைய வினோத சாக்லேட்களைக் கொண்டு வருவார். அதே அறையில்தான் அவளுடைய ரகசியக் காதலன் அவளை இறுக்கி தேய்த்து, அவளை ஒரு அழகி என கிசுகிசுத்தான். அந்த பியானோ அறையில்தான் இப்பொழுது வாத்தியஜாலம் நிகழ்கிறது. வசீகரிக்கும் இசை வருடுகிறது; அந்த மாணவன் அவளுக்கு மட்டுமே நிகழ்த்திக் காட்டும் கச்சேரி அரங்கேறுகிறது. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்.

அவள் வாழ்வில் வந்த அந்த மூவரும் திருடர்களே. அவளின் அப்பா அவளுக்கு மணமுடிக்கவில்லை. தன் கடைசிக் காலத்தில் தன்னைப் பாத்துக் கொள்ள அவருக்கு ஒரு தாதி தேவைப்பட்டு இருக்கிறது. அதற்காக மகளை வீட்டோடு வைத்துக் கொண்டார்.

அதே போல் அவளின் இளமை அந்தக் காதலருக்குத் தேவைப்பட்டு இருக்கிறது. அவளின் அழகைத் திருடி இருக்கிறார்.

ஒன்றை இழந்தால்தான் இன்னொன்று கிட்டுகிறது. அவளுக்கு காதல் வார்த்தைகள் தேவைப்பட்டது. அதற்காக திருட்டுக் காதலை வைத்துக் கொண்டாள். அந்தக் கூடாவொழுக்கத்திற்கு விலையாக தன் இளமையை இழக்கிறாள். ஆசிரியையின் காதலனின் முதல் மனைவியின் நிலை என்ன? அந்த மனைவியின் அன்பை அவள் கவர்ந்ததற்கு மாற்றுப் பண்டமாக தன் மணவாழ்க்கையை அர்ப்பணிக்கிறாள். அந்த இரு பெண்மணிகளில் யார் பெருந்தன்மையானவர் என்று முடிவெடுப்பதை நம்மிடமே விட்டிருக்கிறார்.

இறுதியாக ஆசிரியரின் மாணவன் விலை மதிப்பில்லாத சங்கீத சதிராட்டம் கொடுக்கிறான். அதற்கு பதிலாக தன் வாத்தியாரின் இசைவைக் கோருகிறான். அவனுடைய அந்த இசைக் கச்சேரியில் சுயநலம் இல்லை. தன் ஆசிரியருக்கான அந்த அரங்கேற்றத்தில் அங்கீகாரத்தை மட்டுமே விலையாகக் கேட்கிறான். நம் குழந்தைகள் நம்மிடம் அதைத்தானே எதிர்பார்க்கின்றன… நம்முடைய கௌரவம் என்பது நம் வழித்தோன்றலின் மதிப்பில் அமைந்திருக்கிறதா? கதையை மீள்வாசித்தால் விடை கிட்டும்.

இந்தக் கதையை வாசித்தபோது ஜானி கேஷ் (Johnny Cash) நினைவிற்கு வருகிறார். அமெரிக்காவில் புகழ் பெற்ற பாடகராக ஜானி காஷ் விளங்கினார். அவரின் குழந்தைப் பருவத்தில் குரல் மேம்படுவதற்கு பாட்டு வாத்தியாரிடம் அனுப்பினார்கள். மூன்றே வகுப்புகளுக்குப் பின் அவருடைய ஆசிரியர் “உன்னுடைய பாடும் வித்தையை எந்தப் பொழுதிலும் எவர் சொன்னாலும் மாற்றிக் கொள்ளாதே! இயற்கையாக அமைந்த குரலை விட்டு விடாதே!” என்று சொல்லி உச்சிமுகர்ந்து ஜானியின் பாடல் வகுப்பை பூர்த்தியாக்கிவிட்டார். (ஆதாரம்: biography.com)

வில்லியம் ட்ரெவரின் கதை நாயகர்கள் ஜானி காஷ் போல் புகழ்பெற்றவர்களை அடிப்படையாகக் கொண்டவர்கள் கிடையாது. அவருடன் ஆன ‘கார்டியன்’ நேர்காணலில் இவ்வாறு சொல்கிறார்:

”என்னுடைய கதைகளில் கொள்ளை கொள்ளையாக உணர்வுகள் வரும். எல்லாவித உணர்ச்சிகளும் சத்தியாமனவை. ஒவ்வொரு விநோதமாக ஆராய்ந்து விதந்து கூறுகிறேன். மற்ற நிஜங்களுக்கு கதையில் ரொம்ப இடம் தர மாட்டேன். உண்மை சம்பவங்களை விட விசித்திரங்களை குடைந்து எழுத்தில் கொணர்கிறேன். அதனால்தான் பெண்களைக் குறித்து எழுதுகிறேன். நான் பெண் இல்லை. அவர்கள் எண்ணங்கள் எப்படிப்பட்டவை என்பது தெரியாது. இது என்னை உற்சாகம் கொள்ளவைக்கிறது. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சிந்திக்கிறேன். என்னால் அவர்களாக முடியாது. அதனால் ஆர்வத்துடன் அந்த அனுபவத்திற்குள் நுழைந்து ஆராய்கிறேன்.

தினசரி காரியங்களை செய்யும்போது மனம் தாவிச் சென்று என்றோ நடந்ததை அசை போடுகிறது. ஏதோவொரு வார்த்தையைக் கேட்கும்போது அந்த வார்த்தை வரும் பாடலை வாய் தானாகப் பாடத் துவங்கி, அதன் வழியே நினைவு நம் வாழ்வின் பழைய சம்பவத்தில் சென்று நிலைக்கிறது. பழசை திணித்து மூலையில் ஒதுக்கி வைக்கலாம். ஆனால், நீக்க முடிவதில்லை. அந்த மாணவனின் நினைவுச் சின்ன வேட்டைகளை பியானோ ஆசிரியை கண்டுகொள்வதில்லை. ஏன் அவள் அதை அவனிடம் கேட்கவில்லை? அவளே அந்தப் பொருள்களின் நினைவுகளை மறக்க நினைக்கிறாளா? தன்னால் கலையில் சாதிக்க இயலாததை தன் மாணவன் சாதிக்கிறான் என்னும் சந்தோஷமா? தன் கள்ளக் காதல் செய்கைகளுக்கான பிராயச்சித்தமா? தன்னுடைய குற்றவுணர்வை தவிர்க்கமுடியாதது போல், அந்த மாணவனிடமும் இந்த சில்லறைத் திருட்டு அவமானத்தை பிற்காலத்தில் தேக்கும் என்னும் தூரதிருஷ்டியா? அவனில் புதிய ஒளியைப் பார்ப்பதால் நம்பிக்கைக் கீற்றின் வெளிப்பாடா? இவ்வளவையும் யோசிக்க வைப்பதில் வில்லியம் ட்ரெவர் நிலைக்கிறார்.

The Wisest One in the Room: How You Can Benefit from Social Psychology’s Most Powerful Insights

Books_The Wisest One in the Room

நாலைந்து பேர் கூடியிருக்கும் சந்திப்புகளில் காரசாரமாக விவாதம் நடக்கும். அரசியலோ… சினிமாவோ… விளையாட்டோ… கலையோ… வேலை நிமித்தமோ… இறுதியாக “நீங்க என்ன நினைக்கறீங்க?” என்று ஒருவரைப் பார்த்து பலரும் கேட்போம். அவரின் அபிப்ராயம் மற்றவர்களின் சிந்தனைகளை விட முக்கியமானதாக நினைக்கவைப்பது எது?

அதைத்தான் இந்தப் புத்தகத்தில் ஆராய்கிறார்கள்.

மரியாதை ராமன் கதைகளைப் படித்திருப்போம். அதே போல் சாலமன் அரசரின் முன் வந்த வழக்கை கவனிப்போம்.

சாலமன் ராஜாவின் முன் இரு அன்னையர்கள் நியாயம் கேட்டு வருகிறார்கள். இருவரும் ஒரே சமயத்தில் குழந்தைப் பெற்றிருக்கிறார்கள். பிறந்த குழந்தைகளில் ஒன்று இறந்துவிட்டது. பிழைத்த குழந்தையை, ‘தன்னுடையது’ என்று இருவருமே கோருகிறார்கள். மரபணுச் சோதனை இல்லாத காலகட்டம். அரசன எப்படி தீர்ப்பு வழங்குவார்? யாருடைய குழந்தை என்று எங்ஙனம் கண்டுபிடிப்பார்? ’குழந்தையை இரண்டாக வகுங்கள். தலைப் பாதியை ஒருவரிடமும், இடுப்பிற்கு கீழ் இன்னொருவரிடமும் கொடுங்கள்’ எனத் தீர்ப்பளிக்கிறார். இதைக் கேட்ட ஒருத்தி, இந்தத் தீர்ப்பில் தனக்கு முழு சம்மதம் என்கிறார். இன்னொரு தாயாரோ கலங்கிப் போய், ‘குழந்தை எனக்கு வேண்டாம். முழுவதுமாக எங்கேயோ நல்லபடியாக வளர்ந்தாலே போதும்!’ என நடுநடுங்குகிறார்.

நீதிபதி சாலமன், எவரிடம் குழந்தையை ஒப்படைத்தார் என்பது இப்போது புரிந்திருக்கும்.

அங்கிருந்து காந்திக்கு வரலாம். சமீபத்திய நெல்சன் மண்டேலாவை எடுத்துக் கொள்ளலாம். கோடிக்கணக்கானோர் ரத்தம் சிந்தாமல், களபலிகளில் அப்பாவி உயிர்கள் பறிபோகாமல், வெற்றிகளை எப்படிப் பெற்றார்கள்?

தங்களின் ‘விவேக’த்தினால்

விவேகம் என்பதை அகரமுதலியில் மூன்று விதமாகப் பிரிக்கிறார்கள்:

1. அறிவு: அறிவியல் பூர்வமாகவோ தத்துவார்த்தமாகவோ கற்றறிந்த கலை
2. ஞானம்: உள்ளார்ந்து ஆராய்ந்து அறிவது; தொடர்புகளையும் சிக்கல்களையும் புரிந்து கொண்ட ஒருவர் தன் தனிப்பட்ட இயல்பால் உண்மை அறியும் திறன்
3. மதிநுட்பம்: குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி தீர்வைத் தெளிவாக உணர்த்தும் நுட்பம்

புத்திசாலி என்றால் மிக அதிகமாக மதிப்பெண் பெறுபவரல்ல. வேகவேகமாக புதிர்களை விடுவிப்பவர் அல்ல. விக்கிப்பிடியாவை விட நிறைய விஷயங்களை விரல்நுனியில் வைத்திருப்பவர் அல்ல. அந்த மாதிரி அறிவாளி எனப்படுபவர், ஊழலை எவ்வாறு திறன்பட செய்வது என்பதை அரசியல்வாதிகளுக்கும் பதவியாளர்களுக்கும் கற்றுக் கொடுத்து மோசடியில் கூட ஈடுபடுவார். மனிதர்களுக்கு நன்மை பயப்பது எது என்பதை கருத்தில் கொள்ளாமல் தன் மதியை அவமதிப்பான விஷயங்களில் வெளிக்காட்டுவார். பேராசையும் தொலைநோக்கு பார்வையின்மையும் கர்வமும் தலைக்கேறி பயனற்ற வாழ்வில் திளைக்கலாம். அது புத்திசாலித்தனமல்ல.

அறப்பார்வை என்பதை விட்டுவிடுவோம். எதற்காக உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறோம் என்னும் அர்த்தமும் எந்த லட்சியங்களுக்காகப் போராட வேண்டும் என்னும் மதியூகமும் எவ்வகையில் அந்த வெற்றிகளை அடைய வேண்டும் என்னும் சரியான பாதையும் தெரிந்து கொள்ளாதவர்களை எப்படி அறிவாளி என்று கருத முடியும்!

அறிவாற்றலுக்கும் விவேகத்திற்கும் என்ன வித்தியாசம்?

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது பழமொழி. அறிவாற்றல் நிறைந்தவர் மக்களை நன்கு புரிந்துகொண்டு அவர்களின் அபிலாஷகளை அறிந்தவராக இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. பொதுசனங்களுக்கு எது உத்வேகம் தரும், எவ்வாறு நம்பிக்கை ஊட்டலாம், எந்த சமாச்சாரங்கள் அவர்களின் நிம்மதியைக் குலைக்கிறது, எப்படி அவர்களை துடிப்பாக இயங்க வைக்கலாம் என்று புரிந்துகொள்வதே விவேகம்.

நீங்கள் மிகப் பெரிய நிறுவனத்தின் அதிகாரியாக இருக்கலாம்; உங்களின் ஊழியர்களின் நாடித்துடிப்பையும் பயனாளர்களின் பற்றுகளையும் அறிந்திருக்க வேண்டும். தேர்தலில் வாக்குகோரும் அரசியல்வாதியாக இருக்கலாம்; வாக்காளர்களின் விருப்பங்களை உணர்ந்திருக்க வேண்டும். சீரிய கலைப் படைப்புகளை உருவாக்குபவராக இருக்கலாம்; காலாகாலத்திற்கும் சாஸ்வதமாக நிலைத்திருக்கும் கலாரசிகர்களை ஒன்றிணையவைக்கும் பற்றுதலை தெரிந்திருக்க வேண்டும். சராசரி குடும்பத் தலைவியாக இருக்கலாம்; குழந்தைகளின் நாடித்துடிப்பையும் எங்கே அழுத்தினால் எவ்வாறு விளைவு வரும் என்பதையும் புரிந்திருப்பவராக இருக்க வேண்டும். இவ்வளவு ஏன்… என்னைப் போல் ஒரு மூலையில் கணினி பாஷையில் பொட்டி தட்டி நிரலி உருவாக்குபவராகவே இருக்க்கட்டும்; அந்த செயலி எவ்வாறு வெகுசனத்தை ஈர்க்கும் என்பதையும் எவ்விதம் பயனடும் என்பதையும் சிந்தையில் நிறைத்திருக்க வேண்டும்.

அவ்வாறு மக்களை எப்படி புரிந்துகொள்வது என்பதை இந்தப் புத்தகம் ஆய்வு அடிப்படையில் உண்டான முடிவுகளைக் கொண்டு சமூக மனவியல் துறை துணை கொண்டு விளக்குகிறது.

புத்திசாலி என்பவர் ‘எவ்வாறு’ ஒரு செயலை செய்வது என்பதை அறிந்திருப்பார். ’எந்தச் செயலை செய்யவேண்டும் என்பதைக் கூட அறிந்திருப்பார். ஆனால், விவேகமுள்ளவர், ‘ஏன்’ அந்தச் செயலை செய்யவேண்டும் என்பதை உணர்த்தக் கூடியவராக இருப்பார். ஏன் அந்தச் செயல் செய்யப்படாமல் இருக்கிறது என்பதையும், ஏன் நம்முடைய குண்டுச்சட்டியில் மட்டுமே குதிரையோட்ட விரும்புகிறோம் என்பதையும் அரிஸ்டாடில் போன்ற அறிஞர்களே வலியுறுத்தி இருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தில் நம்முடைய முடிவுகளின் போதாமையைப் புரிந்து கொள்ளவும் சம்மட்டியால் அடிக்கவைத்து நினைவில் நிறுத்துகிறார்கள்.

இந்தப் புத்தகத்தின் குறிக்கோள்கள் என்ன?

அ) எது மக்களை மனமகிழ்ச்சிக்கான பாதையில் இட்டுச் செல்கிறது? எவ்வாறு அவர்களின் சிந்தையை அலைக்கழிப்பில் இருந்து மீட்கலாம்?

ஆ) மனிதர்களுக்கிடையேயான சச்சரவுகளை எது நீட்டிக்கிறது?

இ) ஆபத்தில் இருக்கும் குடியாளர்களை எவ்வாறு படிப்பறிவு பெற வைத்து சமுகச் சிந்தனையை மேம்படுத்துவது?

ஈ) வளர்ந்த நாடுகளின் தொலைநோக்கு கவலையான உலகவெம்மையாக்கம் போன்ற ஆபத்துகளை எல்லோரும் உணர்வைப்பது எப்படி?

இவ்வாறு எல்லாம் சிந்திப்பது எப்படி?

தோற்றமயக்கங்களில் சிக்காமல் பார்ப்பது என்பதை குறிக்கோளாக வைத்திருக்க வேண்டும். மேனாமினுக்கல்களில் மயங்காமல், அதன் மேற்சென்று தீர்வுகளை யோசிக்க வேண்டும். அதற்கு விவேகத்தின் ஐந்து தூண்கள் உதவும்:

1. பாரபட்சமின்மை என்னும் மாயை: என்னை எவ்வாறு பிறர் நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறேனோ, அவ்வாறுதான் நான் பிறரை நடத்துகிறேன் என்பது பொதுபுத்தி. பாரபட்சமற்ற மதீப்பீடு, நேர்மையான தீர்ப்பு என்பதில் உள்ள அனர்த்தங்களை இந்தப் பகுதியில் ஆசிரியர்கள் கவனிக்கிறார்கள்.

முதல் அத்தியாயத்தில் இந்தப் புத்தகத்தின் வாசகரைக் குறித்து, கீழ்க்கண்ட அவதானிப்பை முன்வைக்கிறார்கள்:

உங்கள் கொள்கை தாராளமயமானது; அதே சமயம் எக்கச்சக்கமாக இல்லாமல், கட்டுப்பெட்டியாகவும் இல்லாமல், மிகமிகச் சரியாக எவ்வளவு வேண்டுமோ… அவ்வளவுக்கு அவ்வளவு தாராள சிந்தை கொண்டவர் நீங்கள். பெரும்பாலான விஷயங்களில் உங்கள் கொள்கைக்கு இடதுசாரியாக இருப்பவர்களை வெகுளிகளாகவும், அரசியல் சரிநிலைக்காக நிலைப்பாடு எடுப்பவர்களாகவும், எதார்த்தத்தை உணராதவர்களாகவும் கருதுவீர்கள். உங்கள் கொள்கைக்கு வலதுசாரியாக இருப்பவர்களை சுயநலக்காரர்களாகவும், மற்றவர்களுக்கான அக்கறை அற்றவர்களாகவும், இந்த உலகத்தைச் சூழ்ந்திருக்கும் இன்னல்களைப் பற்றி புரிதல் அற்றவர்களாகவும் மதிப்பிடுவீர்கள்.

இந்தக் கட்டுரையை வாசிக்கும் உங்களுக்கும் இந்தப் பத்தி பொருந்துகிறதா? அப்படியானால், அவசியம் இந்த நூலை நீங்கள் வாசிக்கவேண்டும்.

2. சிறு துரும்பும் பல் குத்த உதவும்: சந்தர்ப்பவசத்தால் அதிசயிக்கவைக்கும் வகையில் செல்வாக்கை எப்படி உயர்த்திக் கொள்வது என்பதை இங்கே விவரிக்கிறார்கள். ஒரு எடுத்துக்காட்டு:

பல மேற்கத்திய நாடுகளில் உடல் உறுப்புகளை தானம் செய்பவர் என்பதை உங்களுடைய ஓட்டுனர் உரிமத்தில் குறிப்பிடலாம். உடல் உறுப்புகளை தானம் செய்பவர் என்று டென்மார்க்கில் வெறும் நான்கே நான்கு சதவிகிதத்தினர் மட்டுமே இருக்கிறார்கள். அதன் அருகிலேயே உள்ள ஸ்வீடனிலோ கிட்டத்தட்ட 95% பேர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்திருக்கிறார்கள். ஏன் இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வு? அண்டை நாடுகளுக்கு நடுவே இவ்வளவு பெரிய வித்தியாசம்?

டென்மார்க் நாட்டு ஓட்டுநர் உரிமத்தின் பின்புறத்தில் ’உடல் உறுப்பு தானம் செய்வேன்’ என்று உரிமக்காரரின் கையெழுத்து வேண்டும். ஸ்வீடனிலோ, உடல் உறுப்பை தானம் செய்ய விருப்பமில்லை என்றால் மட்டுமே பின்பக்கத்தில் ‘நான் தானம் செய்யமாட்டேன்’ என்று உரிமக்காரர் கையெழுத்து இட வேண்டும்.

காலையில் சுப்ரபாதம் போட்டால் விழித்துக்கொள்வது மாதிரி, எல்லோருக்கும் சிற்சில உந்துதல்கள் தேவையாக இருக்கின்றன. நல்ல விஷயங்களில் நாட்டம் ஏற்பட வேண்டுமானால், இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களில் தற்செயலான தேர்வுகளை உலகத்தின் நன்மைக்கேற்ப அமைத்துக் கொடுத்தல் அவசியமாகிறது. சம்பளத்தில் பத்து சதவிகிதத்தை தானியங்கியாக சேமிப்புக் கணக்கில் மாற்றிவைப்பது, கழிவுகளை மக்கும் குப்பையாக மாற்றத் தூண்டுவது என எல்லாவற்றிலும் இதே போன்ற பாதைகளைப் போட்டு வைக்கலாம்.

3. பேரில் என்ன இருக்கு? : நம்முடைய திட்டங்களுக்கு என்ன பெயர் கொடுக்கிறோமோ, அந்த நாமகரணங்களும் அவற்றின் தொடர்புகளும் நம்மின் சிந்தையில் எப்போதும் நிழலாடிக் கொண்டேயிருக்கும்.

அமெரிக்காவில் அந்தக் கல்லூரிக்கு பெரிய மதிப்பு கிடையாது. ஃபிலடெல்பியாவிற்கு அருகே இருக்கும் அர்சினஸ் கல்லூரியை (Ursinus College) உள்ளூர்க்காரர்களே மதித்தது இல்லை. இத்தனைக்கும் The Catcher in the Rye எழுதிய ஜே.டி. சாலிங்கர் (J. D. Salinger) போல் பல புகழ்பெற்றவர்களை உருவாக்கிய கல்லூரி. அவர்கள் ஒரு உபாத்தியாயம் செய்தார்கள். தங்களுடைய கல்விகட்டணத்தை தடாலடியாக ஐந்தில் ஒரு பங்கு உயர்த்தினார்கள். உடனடியாக மாணவர்களின் கவனம் இந்தக் கல்லூரியின் பக்கம் திரும்பியது. ‘அது நல்ல கல்லூரியாக இருக்கும்… அதனால்தான் அத்தனை பணம் வசூலிக்கிறார்கள்!’ என்னும் பேச்சு பலப்பட்டு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை எகிறியது.

4. எண்ணம் போல் வாழ்வு: நாம் எப்படி நடக்கிறோமோ, அதுவே நம்முடைய நம்பிக்கையாகி விடுகின்றது. உற்சாகமின்றி உழைக்கும் வேலை நேரத்தில், சீட்டியடித்து துடிப்பை வரவைத்துக் கொள்வது, நம்மை மேலும் திறன் வாய்ந்த பணியாளராக மாற்றுகிறது. மந்தையில் எல்லோரும் ஒரே மாதிரி நடந்தாலும், விவேகிகள் தங்கள் நம்பிக்கையில் மாறாப்பற்றுக் கொண்டு, ‘என் வழி… தனி வழி’யாக புதுப்பாதை அமைக்கிறார்கள்.

5. சேணம் கட்டிவிட்ட குதிரை: நம்முடைய சித்தாந்தம் எதுவோ, அந்த சித்தாந்தத்தை எவை நிலை நாட்டுகிறதோ, அந்த ஆதாரங்களையே நம் மனம் நாடும். முழுமையானத் தகவல்களை நாம் உள்வாங்க நம் புத்தியை அனுமதிப்பதில்லை. நமக்குத் தேவையான தரவுகளைப் பெற்றுக் கொண்டபின் தேடலை முடித்துவிடுகிறோம். அந்தத் தரவுகளின் மேற்சென்று பிற கருத்துகளை கவனத்திலேயே கொள்வதில்லை. எளிதான விடைகள் தவறான விடைகளாக இருக்கக் கூடும். நம்முடைய முடிவுக்கு எதிரான விடைகளைத் தேடித் தெளிய வேண்டும்.

இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் பல விஷயங்கள் நமக்கு ஏற்கனவே அறிமுகமானதுதான். மற்றவர்களைப் பற்றியும் நம்மைப் பற்றியும் நாம் நன்கு அறிந்தே இருக்கிறோம். அதுவும் உளவியலும் மனவியலும் பாடமாகப் படிப்பவர்களும், சந்தையாக்கத்தையும் விற்பனை நுட்பத்தையும் மேலாண்மைப் பாடமாகப் படிப்பவர்களும் இதையேத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களும் இந்த நுணுக்கங்களை அனுபவமாகக் கொண்டிருப்பார்கள். நம்மைப் பற்றி பிறர் பாராட்ட நினைக்கிறோம்; நம்மை மற்றவர்கள் விரும்ப நினைக்கிறோம்; சந்தோஷத்தை அதிகமாக்கி, சுணங்கல்களை நீக்க விழைகிறோம். நம்முடைய முடிவுகள் (அல்லது பிறருடைய தேர்வுகள்) சுயநலத்தையும் மதநம்பிக்கை சார்ந்த கலக்கங்களையும் முன் அனுபவத்தையொட்டியும் அமைந்திருப்பதை தெரிந்தே வைத்திருக்கிறோம்.

ஆனால், இவை எதுவுமே, ‘இவர் இப்படித்தான் முடிவெடுப்பார்!’ என்று அறுதியிட்டுச் சொல்லவைப்பதில்லை. நாம் நினைப்பது ஒன்று; பிறர் முடிவெடுப்பது பிறிதொன்று. ஔவையார் பாஷையில் சொன்னால்:

ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்.

ஈசன் செயல் என்று எங்கோ பழி போடாமல், அல்லது ஈசன் திருவிளையாடல்களை முன்கூட்டியே அறிவதற்கு, இந்த நூல் உதவும்.

உசாத்துணை:
1. The Wisest One in the Room: How You Can Benefit from Social Psychology’s Most Powerful Insights Hardcover by Thomas Gilovich, Lee Ross

2. அமேசான்.காம்

Wisest_One_In_Room_Book1