Monthly Archives: பிப்ரவரி 2023

மயில்சாமி – அஞ்சலி

முதன் முதலாக அந்த கேசட்டை கேட்டபோது “இப்படித்தானே நகைச்சுவை இருக்க வேண்டும்! சுருளிராஜனும் தேங்காய் சீனிவாசனும் உசிலை மணியும் பக்கோடா காதரும் ஏன் இப்படி பாடாய் படுத்துகிறார்கள்?” எனத் தோன்றியது.

அது “சிரிப்போ சிரிப்பு”

மயில்சாமி என்னும் மிமிக்ரி கலைஞரும் லட்சுமணன் என்பவரும் இணைந்து அன்றைய பிரபலங்களை கிண்டல் அடித்து இருப்பார்கள்.

ஆளுங்கட்சி எம்.ஜி.ஆர். எதிர்க்கட்சி கருணாநிதி. ஆன்மீகச் செம்மல் கிருபானந்த வாரியார். சூப்பர் ஸ்டார் ரஜினி – எல்லோரையும் வைத்து ரசனையாக செய்திருப்பார்.

அதில் கடி ஜோக் ஒரு வகை – அது (சுருதி) லட்சுமணன் வகை – அந்த வகை இன்றும், என்றும், எங்கும், எப்பொழுதும் கடிக்கலாம். அவற்றுக்கு ரொம்ப யோசிக்க வேண்டாம். ஆனந்த விகடனில் வெ. சீதாராமன் நகைச்சுவை மாதிரி. கொஞ்சம் பழைய நினைப்பு + நிறைய கேலி + நிச்சயம் உல்டா. ஜாலியாக இருக்கும். மனதில் நிலைக்காது. மறந்து விடும்.

ஆனால், குரல் மாற்றிப் பேசும் மைல்சாமி குரல் – அந்தந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும். புரட்சித் தலைவர் என்றால் அவரின் பாணி. கலைஞர் என்றால் சொற்சிலம்பம், நெடுங்கவிதை புராணம். ரஜினிக்கேற்ற டயலாக், டி ராஜேந்தருக்கு ஏற்ற எதுகை மோனை வசனம்.

குறிப்பாக, ‘நிலா அது வானத்து மேல’ பாட்டிற்கு வாரியார் சொல்லும் சொற்பொழிவு. அது எனக்கு எந்தப் பாடலை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உயர்த்தி வைக்கலாம்; எந்தக் கருத்தையும் நைச்சியமாக விமர்சனமாக உள்ளே வைக்கலாம்; எந்தக் குப்பை சரக்கையும் நம் வசதிக்கேற்ப மாற்றலாம் – என்னும் நுட்பத்தை செய்முறையாக முதன் முறையாக விளக்குவார் மயில்சாமி.

ஸ்டாண்ட்-அப் என்கிறோம்; பகிடி என்கிறோம்; கலாய்த்தல் என்கிறோம்; டிஜே ஒருங்கிணைப்பு; விஜே வர்ணனை; சந்தானம், சிவ கார்த்திகேயன், மா.க.பா, ரோபோ சங்கர் எல்லோருக்கும் முன்னோடி.

ராஹுல் காந்தியை தங்கபாலு அவர்கள் மொழிபெயர்த்ததற்கு முன்னோடியாக இயக்குநர் விசுவும் கிஷ்மு அவர்களும் ஒரு நிகழ்ச்சியில் அன்றே செய்திருப்பார்கள். அதன் தொடர்ச்சியாக கொஞ்சம் காலம் கழித்து ஈழத்து தமிழை மொழிபெயர்ப்பவராக திரைப்படம் ஒன்றில் மயில்சாமியைப் பார்த்தேன்.

அந்த ஒலிப்பேழையை மீண்டும் மீண்டும் கேட்க வைத்தது அவர்(களின்) சாதனை. அதை சாடர்டே நைட் லைவ் போல் ஒரு இயக்கமாக மாற்றியது தற்செயல் பிறவிப்பயன். எங்காவது பாக்கியராஜையோ சந்திரசேகரையோ ஜனகராஜையோ கேட்டால் மயில்சாமி நினைவில் வருவது மெய்க்கீர்த்தி!

மிகவானுள் எரி தோன்றினும் குளமீனொடுந் தாட்புகையினும்

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த உரையாடல்:

Meet C/2022 E3 (ZTF) (her friends call her the green comet for short)

“பீஷ்ம ஏகாதசிக்காக புதன்கிழமையன்று வானில் பெருமாள் தோன்றினார். பார்த்தாயா!?”

“தவறவிட்டுட்டேனே… எப்பொழுது, எப்படி வந்தார்?”

“அது வால் நட்சத்திரம் எனலாம்… பச்சை நிறத்தில் இருக்கிறது. இந்த வால் நட்சத்திரத்தின் மையப்பகுதி இரு கார்பன் அணுக்கள் சேர்ந்த டைகார்பன் (C2) என்ற மூலக்கூறுகளால் நிறைந்துள்ளது. சூரிய ஒளியோடு இந்த டைகார்பன் அணுக்கள்  வினைபுரிவதால் இந்தப் பச்சை நிற ஒளி வருகிறது.”

அருஞ்சொல் தளத்தில் ஜோசப் பிரபாகர் கட்டுரை எழுதுவது போல் பாடம் எடுக்கிறீர்கள். ஆன்மீகமாகச் சொல்லுங்களேன்…”

“மகாவிஷ்ணு மரகத மேனியனாக பச்சை நிறத்தில் பீஷ்மருக்காக விஸ்வரூப தரிசனம் தருகிறார். எனவே இந்த காட்சியை ‘பச்சை வண்ண பெருமாள்’ எனலாம்!”

“ஏதோ ஏகாதசினு சொன்னீங்களே?”

“பீமன் கூட பட்டினி இருப்பதால் நேற்றைக்கு பீம ஏகாதசி என்று பெயர்.”

“எனக்குத்தான் காது ஒழுங்காக் கேக்கலியா! பீஷ்ம ஏகாதசினு சொல்லிட்டு இப்பொழுது சாப்பாட்டு ராமனை உபவாசம் இருப்பதாக சொல்கிறீரே?”

“பீஷ்மர் கதை உங்களுக்குத்தான் தெரியுமே! அவர் அஷ்ட வசுக்களில் ஒருவர். வசு எனும் சொல்லுக்கு வெளி (Space) என்று பொருள். இவர்கள் இயற்கையையும் இயற்கைக் கோட்பாடுகளையும் உருவகிப்பவர்கள்.”

“அதெல்லாம் சரி… பீஷ்மருக்கும் வால் நட்சத்திரத்திற்கும் என்ன சம்பந்தம்?”

“பிரபாசன் எனும் வசு வைகறையை குறிப்பவர். அவருடைய மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, வசிட்டரின் காமதேனு பசுவை கவர்ந்து செல்கையில், வசிட்டரால் சாபம் பெற்று மண்ணுலகில், சாந்தனு – கங்கை தம்பதியர்க்கு பீஷ்மராக பிறந்தார்.”

“பீஷ்ம ஏகாதசி அன்னிக்குத்தான் பீஷ்மர் பரமபதம் அடைந்தார். அன்றைக்கு பச்சை வால் நட்சத்திரம் வருது. சரியா?”

“இல்லை. பீஷ்மர் அஷ்டமியில் மரணமடைந்தார். அதாவது ரத சப்தமி அன்று பரந்தாமத்திற்கு செல்ல நிச்சயித்தார்.”

“அப்படியானால், பச்சை தூமகேது… ஏகாதசி பெருமாள்… பீஷ்ம ஏகாதசி… எல்லாம் எதேச்சைதானே?”

“கோதர்ம: சர்வதர்மாணாம் பவத: பரமோ மத: !

கிம் ஜபன் முச்யதே ஜந்துர் ஜன்மசம்சார பத்தனாத் !

என்ற யுதிஷ்டிரன் வினவியபோது, “அனைத்து தர்மங்களிலும் சிறந்த தர்மம் எது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று கேட்டபோது, “நாராயண நாம ஸ்மரணையே சிறந்த தர்மம்” என்று பதிலளித்தவர். அர்ஜுனனின் ரத சாரதியாக குதிரைகளை வழி நடத்தும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா என் இதயத்தில் எப்போதும் நிலைக்கட்டும் என்று தியானம் செய்கிறார் பீஷ்மர்”

“வானியல் அறிவு அதிகம் வளராத காலகட்டத்தில் இருந்த மனிதர்கள் அவ்வப்போது வானத்தில் திடீரென்று ஒரு பொருள் நட்சத்திரம் போன்றே ஒளிர்ந்துகொண்டே வால் போன்ற தோற்றத்தில் இருந்ததால் இதற்கு வால் நட்சத்திரம் என்ற பெயரிட்டு அழைத்தார்கள். ஆனால், இது உண்மையில் நட்சத்திரம் அல்ல. கோளும் அல்ல. அதற்கு வால் எப்போதும் இருப்பதில்லை. – என்பார் ஜோசப் பிரபாகர்.”

“சரியே… அதனால்தான் விஷ்ணு சஹஸ்ரநாமம் பூராவும் சொல்லி முடித்தபின், ‘ரதாங்கபாணி ரக்ஷோப்ய: சர்வப்ரஹரணாயுத’ என்ற நாமத்தோடு முடிக்கிறார். அதற்கு முன்பே ‘சக்ரீ’ என்கிறார். அந்த சக்கரத்தின் கனற்கொடியை C/2022 E3 (ZTF) எனலாம்.”

“அந்த மாதிரி ஜீரோ டிகிரி ஃபாரென்ஹீட்டில் தேவுடா காத்தால் பச்சை வண்ணப் பெருமாள் தெரிவார் என்கிறீர்கள்?”

“அதே… அதே… சபாபதே!”

பாஸ்டன் பெருமாள் – பார்த்தசாரதி கோலம்