நான் அமெரிக்காவில் கால் பதித்த பிறகுதான், இந்த நாள், மார்ட்டின் லூதர் கிங் நாளாகக் கொண்டாடப்படுகிறது. 1983இலேயே கால்கோள் இடப்பட்டு, 1986இல் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பரவினாலும், அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களும் 2000ஆவது ஆண்டில்தான் ஜனவரி மாதத்தின் மூன்றாவது திங்கள்கிழமையை எம்.எல்.கே. தினம் என்று அனுசரிக்கத் துவங்கினார்கள்.
இந்தியாவில் எங்கு திரும்பினாலும் மகாத்மா காந்தி சாலை. தமிழகத்தில் அண்ணா தெரு. அமெரிக்காவில் 730 நகரங்களில் இவர் பெயரைத் தாங்கிய தெருக்கள் இருக்கின்றன.
கடந்த வருடம் வெளியாகிய ‘செல்மா’ படத்தின் இயக்குநருடன் உரையாடும் பகுதியை கீழே பார்க்கலாம்:
வாக்குரிமைக்காக போராட்டம். சம உரிமைக்காக குரல் எழுப்புதல். காவல்துறையின் அத்துமீறல்கள் குறித்த விழிப்புணர்வு முழக்கங்கள். பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்டவர்களை ஒருங்கிணைத்தல். வன்முறையில் இறங்க விரும்புவோரை வலியுறுத்தி சத்தியாகிரகத்தில் ஈடுபட வைத்தல். கிறித்துவ மதத்தின் அடிப்படையிலான சமூக அறத்தையும் புதிய ஏற்பாட்டில் இருந்து அன்பையும் எடுத்துக் கொண்டாலும், அதை கிழக்கத்திய சித்தாந்தங்களான காந்தியின் அரசியல் எழுத்தையும் புத்தரின் ஒவ்வொரு உயிரும் மற்றொரு உயிரினத்தோடு ஒன்றி ஒருங்கிணைந்து வாழும் மதக் கோட்பாடுகளையும் தன் சொற்பொழிவுகளில் முன்வைத்தல்.
மார்டின் லூதர் கிங்கின் அஹிம்சை கொள்கை என்றால் என்ன என்பதை ஆறு வகையாகப் பிரித்து முன் வைக்கிறார்:
1. அகிம்சை என்பது கோழைத்தனம் அல்ல: கோழைகளால் தைரியமாக இயங்க முடியாது. நீங்கள் தைரியமானவராக இருந்தால் மட்டுமே, சத்தியாகிரகத்தில் ஈடுபடவும். வெறும் பயத்தினாலோ, ஆயுதம் கிடைக்காததாலோ, வன்முறையின்மையை நீங்கள் கடைபிடிக்கக் கூடாது.
2. எதிரியை தாழ்வாகக் காட்ட நினைப்பதோ தோற்கடிப்பதோ அகிம்சையின் நோக்கம் அல்ல: எதிரியை நட்புறவு பேணவைத்து, எதிரியாக நினைக்கவைக்காமல், நம்முடைய நிலையைப் புரிய வைப்பதுதான் வன்முறையின்மையின் நோக்கம் ஆகும். பகிஷ்கரிப்பதும் ஒத்துறையாமை இயக்கமும் நம்முடைய வழிமுறை ஆகும். ஆனால், அந்தப் பாதையில் நம் நோக்கம் நிறைவேறியவுடன் எதிரியின் அகம் திறந்தவுடன் அவருடன் கைகோர்த்து வாழ்வதற்குப் பழக வேண்டும். அகிம்சாமுறை சத்தியாகிரகத்தின் இறுதியில் அன்பார்ந்த சமூகம் உருவாகி இருக்கும். துப்பாக்கி எடுத்து நடக்கும் வன்முறையின் முடிவில் பழிவாங்கும் வெறுப்பு மேலோங்கியிருக்கும்.
3. நம்முடைய எதிரி — தீவினைகளின் ஏவுகணைகள் அல்ல; அந்தப் பொல்லாத்தனமான வழிமுறை மட்டுமே நம் எதிரியாகும்: எய்தவன் எங்கோ இருக்க அம்பை நோவானேன்? எங்கோ, எவரோ தீங்கான செய்கைகளை வழிவகுத்து, அந்தத் தீவினைகளுக்கு காரியகர்த்தாவாக களத்தில் வேறொருவரை ஏவுகிறார்கள். நம்முடைய குறிக்கோள் அந்தப் பொல்லாத சித்தாந்தத்தை முறியடிப்பது மட்டுமே. இனவெறி என்பதைத் தாண்டி, இந்தப் பிரச்சினை அக்கிரமத்திற்கும் தர்மநீதிக்கும் நடுவே நடக்கும் போராட்டமாக அகிம்சாவாதி உணர்வான். வெள்ளைக்காரனை வீழ்த்துவது அல்ல குறிக்கோள். வெளிச்சத்தின் பாதையில் அனைவரையும் இட்டுச்செல்வதே நம் குறிக்கோள்.
4. தப்பித்துச் செல்லாமல் இருப்பது: ஜெயில் தண்டனையோ… லத்தியடியோ… அதைத் தாங்கும் மனோதிடம் வாய்த்தவரே அகிம்சாவாதி. எப்படி திருப்பி அடிக்கலாம் என்று எண்ணாதே!
5. அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை: குண்டு வீசி எதிரியை அழிக்க நினைப்பது புறவயமான வன்முறை. அதே சமயம், மனத்தினுள்ளே வன்மமும் குரோதமும் கொழுந்துவிட்டெரிவது அகவயமான வன்முறை. வெறுப்பைக் கக்கும் பிரச்சாரங்களையும் அடுத்தவரை அழிக்கத் தூண்டும் கோபதாபங்களையும் அகிம்சாவாதி தூண்டமாட்டான். அவன் வழி அன்புமயமானது. குறள்மொழியில் சொல்வதானால்
அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈ.னும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.பொருள் : அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.
காதலியிடம் அன்பு பாராட்டுவது போல், தோழமையிடம் நட்பு பாராட்டுவது போல், நம்மை வெறுத்து ஒதுக்குபவரிடம் எவ்வாறு பாசமாகப் பழகுவது? அது இயலாத செயல் அல்லவா?
இங்கு Agape எனப்படும் கிரேக்கத் தத்துவத்தை மார்டின் லூதர் கிங் ஜூனியர் முன்வைக்கிறார். இவ்வாறு விரும்புவதற்கு எவ்விதமான லாபநோக்கங்களும் கிடையாது. எதிரியின் மீதான விருப்பம் கொள்வதற்கு அவர் மீதான பற்றோ, அல்லது அவரின் பொருள் மீதான வாஞ்சையோ காரணம் கிடையாது. இது பற்றற்ற பாசம். அவரின் மீது பரிதாபம் கலந்த பாசம். அடுத்தவரின் நன்மைக்காகவே நாம் உருவாக்கி கொள்ளும் பாசம். பாசம் வைப்பதால் நமக்கு நயா பைசா நன்மை கிடைக்காது. எனினும், அந்தத் தருவாயிலும் பாசம் மட்டுமே தோன்ற வைக்கும் அகவயமான அகிம்சையை நீங்கள் உங்கள் எதிரியின் மீது பாய்ச்ச வேண்டும்.
பௌத்தத்தைப் பொறுத்தளவில் அதன் மையக் கோட்பாடாக அன்பும் கருணையும் உள்ளன. மெத்தா(அன்பு), கருணா (கருணை), முதிதா (கருணை அன்பின் விளைவாகத் தோன்றும் மகிழ்வும் களிப்பும்) , உபேகா (அமைதி, சாந்தி) என்பன மிக அழுத்தமாக அதில் வலியுறுத்தப்படுகின்றன. இங்கு உபேகா எனக் குறிப்பிடப்படுவது, வெறுப்பு, பகைமையைப் போக்கி உள்ளம் அமைதியும் நிம்மதியும் அடைவதாகும். உள்ளமானது கோபம், வெறுப்பு, பகைமை உணர்விலிருந்து மீட்சிபெற்ற நிலையிலேயே அன்பும் கருணையும் உருவாக முடியும் என பௌத்தர் கூறுகின்றார். உள்ளத்தில் நல்ல சிந்தனைகளைக் கொண்டிருப்பது வெறுப்பை நீக்குவது, அன்பு, கருணை என்பன உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும். கோபமும் வெறுப்பும் பகைமை உணர்வும்- மன உளைச்சல், மோதலுக்கு இட்டுச் செல்கின்றன என்பது புத்தரின் கோட்பாடாகும்.
6. நீதி சார்ந்தே இந்த உலகம் இயங்குகிறது: உங்களுக்கு வருங்காலத்தின் மீது நம்பிக்கை இருந்தால் அறவழியில் போராடுவீர்கள். இப்போது அடிவாங்கினாலும், நாளை நமதே என்னும் விசுவாசம் இருந்தால் மட்டுமே உடனடியாக தடியெடுத்து எதிராளியை அடிக்காமல் இருக்க முடியும். உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். மதநம்பிக்கை வேண்டாம். ஆனால், நல்லது மட்டுமே வாழ்வாங்கு வாழும்; அகிலத்தில் தீயது அழிந்து பொசுங்கும் என்று உணர்வீர்களானால் அகிம்சையின் பக்கம் நிற்பீர்கள். அதற்கு என்ன பெயராக வேண்டுமானாலும் இருக்கலாம். பிரம்மம் என்றுகூடச் சொல்லலாம்.
அமெரிக்கத் தேர்தலும் தமிழ்த் தொலைக்காட்சிகளும்
எதிர்பார்க்காமல் அது நிகழ்ந்தது. மாலன் சார் பாரிந்துரைத்ததாக சிங்கை மீடியாகார்ப் அணுகினார்கள்.
ஒரு சவுண்ட் பைட் வேண்டும் என்றார்கள். முன்பின்னே கொடுத்ததில்லை. அனுபவம் கிடையாது என்றேன்.
சரி… அழைத்துப் பேசுகிறோம். அதன் பின் வெட்டி எடுத்துக் கொள்கிறோம் என்று சம்மதித்தார்கள்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினோம்.
– சமூக ஊடகங்களில் எவ்வாறு இளைஞர்கள் வீழ்ந்து, அமிழ்ந்து, கலந்திருக்கிறார்கள் என்றும்
– அமெரிக்கத் தேர்தலில் ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் இன்ஸ்டாகிராமும் யூடியூபும் ஆக்கிரமித்திருக்கிறது என்றும்
– தேர்தலுக்கு முன் நடந்த ஆர்ப்பாட்ட ஒத்திகைகள் எவ்வாறு அரங்கேறின என்றும்
அது கொஞ்சம் தன்னம்பிக்கையை அதிகரித்து, பாட்காஸ்டிங் துவங்கலாமா, நாமும் பொக்கிஷம் டிவி விக்கி ஆகிவிடலாமா என்று ஆசை கொடுத்தது.
அதன்பின் வழக்கம் போல் காலை எழுந்ததும் கட்டஞ்சாயா, அதன் பின் நாள் முழுதும் அலுவல் சந்திப்பில் கேமிராவைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே பேசுவது என்று பழைய வழக்கமான வாழ்க்கைத் தொடர்ந்தது.
தேர்தல் நாளில் திடீரென்று வாட்ஸப் அழைப்புகள் பறக்க ஆரம்பித்தன. எல்லாமே சடாரென்று நடந்தது. நியூஸ் 18 நேரலையில் டொனால்டு டிரம்ப் குறித்தும், வாக்களிப்பு குறித்தும், ஜோ பைடன் குறித்தும், கமலா ஹாரிஸ் குறித்தும், அமெரிக்காவின் இந்தியக் கொள்கை குறித்தும் நிறையப் பேசினேன். ஆசைதீருமளவு வாய் வலிக்குமளவு கருத்துகளை அள்ளிக் கொட்டினேன்.
பின் இரவு ஒரு மணி அளவில் உத்தரவு வாங்கிக் கொண்டேன். தீபாவளிக்கு முந்தின இரவு வெடி வெடிப்போம். எல்லாரும் தூங்கிய பிறகு… அனைத்து வெடிச்சத்தமும் அடங்கிய பிறகு… கடைசி வெடியைப் போடுவோம். சொல்லப் போனால் தூங்காமலேயே, முன்றரை மணிக்கு மீண்டும் வெடியைத் துவங்கி விடுவோம்.
அன்றும் அப்படித்தான். news18 முடிந்ததும் சன் தொலைக்காட்சியில் துவங்கினார்கள். சிவராத்திரியே தான்!
அரைத்த மாவையே அரைத்தேன். காட்டமான எண்ணங்களைச் சொல்வது; அதன் பின் எதிர்த் தரப்பிற்கும் சற்றே வக்காலத்து வாங்குவது. வழவழா கொழகொழா ஆக முத்தாய்ப்பு வைத்து முடிப்பது – இப்படியே த் தொடர்ந்தேன்.
அந்த உலகம் அவசரமும் சுவாரசியமும் பரபரப்பும் நிறைந்த உலகம். எவரோ நுழைகிறார்கள். ஸ்கைப் அழைப்பில் நேரடி ஒலிபரப்பைப் பார்க்கும் போதே, “சற்றுமுன்” என்று மாறிவிடுகிறார்கள். அந்தத் தொலைக்காட்சியில் ஆளுங்கட்சிக்கு ப்ரேக்கிங் நியுஸ்; இந்தத் தொலைக்காட்சியில் கொரோனா நோய் பீடிப்பில் இறந்தவர்களின் கணக்கு – நடுவில் நானும் ஃபாக்ஸ் டிவி (ரிபப்ளிகன் சார்பு), எம் எஸ் என்பிசி (டெமொகிராட்ஸ் ஆதரவு), பி.பி.எஸ். (தூர்தர்ஷன் மாதிரி) எல்லாம் மாற்றி மாற்றி பார்க்கிறேன்.
காபி துளிக் கூட அருந்தாமலே மூளை சுறுசுறுப்பாக இருந்தது. சாந்தோம் பள்ளி மாணவர்கள் எனக்கு செய்திச் சுருக்கங்களை நறுக் நறுக்கெனக் கொடுத்துக் கொண்டிருந்தது வெகு உதவியாக இருந்தது.
நியூஸ் பதினெட்டு கன்னலில் எட்வர்ட் சார் கூடவும் ஜூனியர் விகடன் காலத்தில் இருந்து வாசித்தும் எஸ். ராமகிருஷ்ணன் வந்திருந்தபோது நியூ ஜெர்சியில் வைத்து சந்திக்கவும் செய்த பிரகாஷ் எம் ஸ்வாமி கூடவும் நேரலையில் பேசியது அளவொண்ணா மகிழ்ச்சியைத் தந்தது.
அமெரிக்காவில் அடிக்கடி தேர்தலும் வாக்குப் பதிவும் நடந்தால் எனக்கு வாழ்க்கை விறுவிறுப்பாக இருக்கும். மிட்ச் மெக்கானல் உடனோ ஜான் ராபர்ட்ஸ் கூடவோ பேசி நடத்தி விட வேண்டும்.
போதையில் இருந்து மீண்டு கொண்டிருக்கும்,
பாபா
பின்னூட்டமொன்றை இடுக
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது America, அமெரிக்கா, சன் செய்திகள், ஜனாதிபதி, டிவிட்டர், தொலைக்காட்சி, நியுஸ், பிடன், பைடன், வாக்கு, வோட்டு, Commentary, Elections, Experience, Live, News, News18, Opinion, Polls, Sun News, TV, USA, Votes