சொல்வனம் பத்திரிகை இதழ் எப்பொழுதும் புது எழுத்துகளைச் சிறப்பிக்கும் இதழாக அமையும். புதியவர்களையும் இளையவர்களையும் பற்றிய கட்டுரைகளை வரவேற்கிறோம். ஆர்வமுள்ள வாசகர்கள், தங்கள் என்ன தலைப்பில், எதைக் குறித்து எழுதப் போகிறோம் என்பதை எங்களுக்கு solvanam.editor@gmail.com தெரிவியுங்கள்.
அனைத்து இதழிலும் பிரபலமடைந்த எழுத்தாளர்கள் சிலரோடு, அத்தனை பிரபலமாகாத பல எழுத்தாளர்களையும் வாசக கவனத்திற்குக் கொண்டு வர முனைய வேண்டும். என்னவெல்லாம் எழுதலாம் என்று யோசித்தவுடன் தோன்றிய எண்ணங்கள் இவை:
அ) இரண்டு குழுக்களாக வயதையொட்டிப் பிரித்துக் கொண்டு அவர்களின் படைப்புகளை மொத்தமாக அணுகலாம். இருபது வயது முதல் முப்பது வயது வரையிலானவர்கள்; முப்பதில் இருந்து நாற்பது வயதை எட்டியவர் வரை – இந்த இரு தலைமுறையினரில் எவரெவரை நீங்கள் வாசித்து இருக்கிறீர்கள்? அவர்களுக்கு இடையேயான ஒற்றுமைகள் என்ன? அந்தப் புனைவுகளை எவ்வாறு விமர்சனப் பூர்வமாக அணுகுகிறீர்கள்?
ஆ) கடந்த பத்தாண்டுகளில் உங்களைக் கவர்ந்த மூன்று முக்கியமான நூல்கள் என்ன? கட்டுரையில் வித்தியாசமான முறையில் அணுகுகிறார் என்று எவரைச் சொல்வீர்கள்? சிறுகதைத் தொகுப்பில் எதையெல்லாம் விரும்பி வாசித்தீர்கள்?
இ) முகப் புத்தகம் (ஃபேஸ்புக்), உடனடி எழுத்து (ஃப்ளாஷ் ஃபிக்ஷன்), குறுங்கதை என்றெல்லாம் எழுதித் தள்ளுபவர் எவர்? அவற்றில் எது நெஞ்சில் நிற்கின்றன?
ஈ) கவிதைகள்: ஹைக்கூ, திரைப்பாடல், யாப்பு இலக்கணத்திற்கு உட்பட்ட வெண்பா, டிவிட்டர் குறுமொழிகள் என்று பல வகைகளில் ஒவ்வொன்றிலும் உங்களைக் கவர்ந்த ஆக்கங்கள் என்ன? ஏன் அந்தக் கவிதைகள் உங்களுக்கு நெருக்கமாகின?
உ) தினசரி எவரை வாசிக்கிறீர்கள்? எப்பொழுதாவது மட்டுமே ஒருவர் எழுதினாலும், எவர் எழுதியதை தவறவிடாமல் வாசிக்கிறீர்கள்? அத்தி பூத்தது போல் எழுதுபவர்கள் யார்? காட்டுமல்லியாகப் பூத்துக் குலுங்குவது யார்?
ஊ) எந்த முன்னணி எழுத்தாளர்கள் எவரைப் பரிந்துரைக்கிறார்கள்? அவர்களின் முக்கியமானப் படைப்புகள் என்ன? எவர் அச்சுலகில் புத்தகங்கள் நிறைய வெளியிட்டிருக்கிறார்? அவற்றில் எது இலக்கியத் தரமானது?
எ) யுவ புரஸ்கார், இளம் எழுத்தாளர் விருது போன்ற பட்டியல்களில் இருந்து நீங்கள் நாவல்களையும் கதைகளையும் தேர்ந்தெடுத்து வாசித்து, உங்கள் பார்வைகளை முன்வைக்கலாம்.
ஏ) காலச்சுவடு, உயிர்மை, தமிழினி, யாவரும், டிஸ்கவரி, சந்தியா, கிழக்கு, வல்லினம், நற்றிணை, புலம், எதிர், சிக்ஸ்த் சென்ஸ், எழுத்து, ஜீரோ டிகிரி , விடியல், தேநீர், சீர்மை, செங்கனி இன்ன பிற – புதிய எழுத்தாளர்களை எவர்கள் வெளியிடுகிறார்கள்? எந்தப் புனைகதைகளை வாசித்து இருக்கிறீர்கள்?
ஐ) நீங்கள் சிறுகதைகளைப் படிக்கிறீர்களா? கேட்கிறீர்களா? ஒலிப்புத்தக வடிவில் எதை ரசித்து உள்வாங்கினீர்கள்? கிளப்ஹவுஸ், டிவிட்டர் ஸ்பேசஸ் போன்ற தளங்களில் உங்களின் இலக்கிய கருத்துக்களையும் வாசக விமர்சனங்களையும் பதிவிடுவது உண்டா?
ஒ) புனைவு எழுதுவது என்பது செயல்பாடு; ஒரு சார்பு நிலையை எடுப்பது. அதற்கு சமூக ஊடகங்களில் தன் கொள்கை சார்ந்த நிலை எடுத்து பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையைப் பெருக்குதல் அவசியம். இந்த வகையில் பிரபலமாக இரட்டைக் குதிரை சவாரி செய்பவர்கள் யார்? அவர்களின் எழுத்துக்களை எப்படி மதிப்பிடுவீர்கள்?
ஓ) கதை மீறும் கதை, நாடகம், மொழியாக்கம், மாந்திரீக எதார்த்தம், பேய்க்கதை, துப்பறியும் கதை, காதல் கதை, அறிபுனைவுகள், வரலாற்றுப் புனைவு, மர்மக் கதை, தொன்ம மருவுருவாக்கம், திகில் கதை, பதின்ம வய்தினருக்கான ஆக்கம் – இவற்றில் ஒவ்வொரு வகையிலும் எந்தப் புத்தகங்களை பரிந்துரைப்பீர்கள்?
ஔ) கதைகளின் செவ்வியல் மற்றும் நவீன வடிவங்கள், உலக மொழிகளிலும், தமிழிலும் நிகழ்ந்துவரும் பரிசோதனை முயற்சிகள் என்ன?
இணையத்தில் எத்தனை உள்ளடுக்குகள் இருந்தாலும் எதுவொன்று சுழித்து மேலெழுந்து வருகிறதோ, அதுவே பார்வையில் விழுந்து உணர்வைத் தொடுகிறது. ஒரே சமயத்தில் ஒரு பெரும் களஞ்சியமாகவும் பொங்கிப் பெருகும் புதுவெள்ளத்தின் குமிழாகவும் நித்தியத்தையும் நிலையின்மையையும் தன் இயல்பாய்க் கொண்டது இணையம். அச்சுக்கு உரிய நேர்த்தொடர்ச்சி இணையத்தில் இல்லை, அதன் போக்கு சுழன்று விரிவது. உரையாடல்களும் எதிர்வினைகளும் பகிர்தல்களுமே இணையத்தில் உள்ள படைப்புகளுக்கு உயிர் அளிக்கின்றன. எனவே வாசகர்கள் புதிய படைப்புகள் குறித்து தொடர்ந்து பகிர்ந்து உரையாட வேண்டுமென்றும் எழுத்தாள நண்பர்கள் தம் பங்களிப்பை தொடர்ந்து அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
எந்த ஒரு இதழுமே படைப்புகளால்தான் கவனம் பெறுகின்றது. #solvanam அந்தப் படைப்பாளிகளின் மொத்த பங்களிப்பைக் குறித்த அறிமுகத்தையும் விமர்சனத்தையும் வரவேற்கிறது. இந்த இதழுக்குப் பல நண்பர்களும் படைப்பாளிகளும் ஒத்துழைக்க அழைக்கிறோம்.
உங்கள் தொடர்ந்த நல்லாதரவிற்கு மனமார்ந்த நன்றி. உங்கள் எண்ணங்களை எடிட்டருக்கு அனுப்பவும்- அவரது மின் அஞ்சல் முகவரி இது – solvanam.editor@gmail.com
கல்கி பதில்: “கதை எழுதுவதை விடக் கட்டுரை எழுதுவதுதான் நல்லது என்பது என்னுடைய அபிப்பிராயம். ஏனென்றால், கதை எழுதுவது கஷ்டம். கதை எழுதுவதற்கு முதலாவது கதை ஒன்று வேண்டும். அது கிடைப்பது லேசல்ல. பிறகு அதை வைத்துக் கொண்டு சுவாரஸ்யமாக எழுத வேண்டும். கொஞ்சம் காது மூக்கு வைக்கலாமே தவிர, கதையின் மத்திய சம்பவத்தை விட்டு அதிக தூரம் போக முடியாது. இன்னொரு பெரிய தொந்தரவு இருக்கிறது. கதையென்றால் ‘நன்றாயிருக்கிறது. இல்லை’ என்பதாகச் சுலபமாய்ப் பத்திரிகையாசிரியர் தீர்மானித்து விடுவார். பத்திரிகாசிரியர் மீது பழி வாங்கும் விருப்பம் உனக்கிருந்தால் கட்டுரை எழுதுவதுதான் நல்லது. அது சுலபமும் கூட…
கட்டுரை எழுதுவதற்கு வரம்பு ஒன்று வைத்துக் கொள்வது அவசியம் இல்லை. எதிலேயோ பிடித்து, எதிலேயோ முடிக்கலாம். கட்டுரையின் தலைப்புக்கும், கட்டுரையின் விஷயத்திற்கும் சம்பந்தம் இருக்கவேண்டிய அவசியமில்லை. இந்தச் சம்பந்தம் எவ்வளவுக்குக் குறைவாயிருக்கிறதோ, அவ்வளவுக்கு நன்றாயிருப்பதாய் ஜனங்கள் எண்ணிக் கொள்வார்கள். அத்தகைய கட்டுரைகளைப் பார்க்கும் பத்திரிகாசிரியர்களும் கொஞ்ச தூரம் படிப்பதற்குள் குழப்பமடைந்து விடுவார்கள். அதைப் படிக்கும் தொல்லையை விடப் பிரசுரித்து விடுவது நல்லதென்று தீர்மானித்து விடுவார்கள்!”
*
தமிழில் சிறு பத்திரிகைகள்: வல்லிக்கண்ணன்
கேள்வி: “பத்திரிகாசிரியர்களுக்கு எவ்வாறு கடிதம் எழுத வேண்டும்?”
கல்கி பதில்: “கீழே சில நகல் கடிதங்கள் கொடுத்திருக்கிறேன். அவைகளில் ஏதேனும் ஒன்றைத் தழுவிக் கடிதம் எழுதலாம்:
* இது என் ஆயுளிலேயே நான் முதன் முதலாக எழுதியது. ஆதலால், இதில் குற்றங்குறைகள் இருந்தாலும் சீர்திருத்தி வெளியிட்டு ஊக்கமளிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.
* அன்பீர்! சென்ற முப்பத்திரண்டு வருஷ காலமாய் நான் பல தமிழ்ப் பத்திரிகைகளுக்கும் விஷயதானம் புரிந்து வைத்திருக்கிறேன் என கட்டுரைகள் வெளிவந்த பத்திரிகைகள் எல்லாம் மாண்டு போயின. நான் மட்டும் உயிரோடிருக்கிறேன். ஆகையால், இத்துடன் அனுப்பியுள்ள கட்டுரையைத் தவறாது வெளியிடவும்.
* என் வாழ்நாளில் ஒரு கட்டுரையாவது எழுதிப் பத்திரிகையில் வெளியிட வேண்டுமென்பது என் ஜீவிய மனோரதம். ஆகையால், இந்தக் கட்டுரையை அடுத்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி இதழில் அவசியம் வெளியிட்டு என் மனோரதத்தை நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.
* மானேஜர் அவர்களுக்கு, நான் உங்களுடைய 17,235-வது சந்தாதாரர். இந்தக் கதையை நீங்கள் வெளியிட்டால், எங்கள் சிநேகிதர்களிடம் சொல்லி, அவர்களையும் சந்தாதாரராகச் செய்வேன்.
* ஐயா! நான் ஒரு ஜரிஜனன். உங்கள் பத்திரிகை ஹரிஜனங்களுக்காகப் பாடுபடுவது உண்மையானால், நான் அனுப்பி இருக்கும் இந்தக் கட்டுரையைப் பிரசுரிக்க வேண்டியது. இல்லாவிட்டால், உங்களுடைய குட்டு வெளியாகிவிடும்!
*
– ஆனந்த விகடன் 15.01.1933 ‘யார் தெரியுமா? நான்தான்!’ என்னும் தலைப்பில் வெளியானது
I suppose it is submerged memories that give to our dreams their curious air of hyper-reality. But perhaps there is something else as well, something nebulous, gauze-like, through which everything one sees in a dream seems, paradoxically, much clearer. A pond becomes a lake, a breeze becomes a storm, a handful of dust is a desert, a grain of sulfur in the blood is a volcanic inferno. —W. G. Sebald, The Rings of Saturn
செபால்ட் எழுத்துக்களின் அடிநாதம் நினைவுகள். பழைய விஷயங்களை நினைவில் வைத்திருப்பதால் சித்திரவதைக்குள்ளாவோம். அதனால், பழையதை மறக்க எத்தனிக்கிறோம். ஆனால், நடந்ததை மறப்பதால் எவ்வளவு பெரிய கொடூரத்தை அரங்கேற்றுகிறோம்?
அவரின் ஆஸ்டர்லிட்ஸ் நாவல் முழுக்க ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைகிறது. இடங்களும் மனிதர்களும் மனிதர்களின் வாழ்க்கைக் கதைகளும் அவர்களின் அனுபவங்களும் இடறி, அகஸ்மாத்தாகவோ அல்லது வலிந்தோ தட்டுப்பட்டு உரசிக் கொண்டேயிருக்கின்றன. அதுவும் எனக்கு இது நடந்ததாக நான் சொல்லும்போது, அந்த சம்பவத்தின் மாந்தர்கள் கிடைக்கிறார்கள். நான் சொல்லும் வார்த்தை என்னும்போது அந்த நிகழ்வின் உண்மைத்தன்மை உணரப்பட்டு ஆவணப்படம் போல் உரைக்கிறது.
செபால்ட் எழுத்துக்களைக் குறித்த அறிமுகத்தையும் சீபால்ட் குறித்த விமர்சனங்களின் மொழிபெயர்ப்புகளையும் தாங்கி இந்த சொல்வனம் இதழ் வெளியாகி இருக்கிறது.
“It seems to me then as if all the moments of our life occupy the same space, as if future events already existed and were only waiting for us to find our way to them at last, just as when we have accepted an invitation we duly arrive in a certain house at a given time.”
கதைசொல்லி என்பவர் சில சமயம் செபால்ட்; பல சமயங்களில் செபால்டுக்கே கதை சொல்லுபவர்
அந்தக் கதைசொல்லி அலைபாயும் தன்மை கொண்டவர்; மற்றவரின் அந்தரங்கங்களை அனுசரணை கலந்த பரிவுடன் அணுகுபவர்.
நாவலில் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவிக் கொண்டேயிருக்கும் போக்கு
ஸெபால்டின் கதைக்களன் அனைத்தும் ஐரோப்பாவையும் அதன் வரலாற்றையும் மட்டுமே சுற்றி வருபவை.
அவரின் எழுத்தில் பத்திப் பிரிவினைகள் எதிர்பார்க்கக் கூடாது.
ஒப்புமைகள், உருவகங்கள், உவமானங்கள் கிடையாது. வெறும் நேரடி.
புகைப்படங்கள் நிறைந்திருக்கும்; கருப்பு-வெள்ளை நிழற்படங்கள் அவை; அந்தப் படங்களுக்கு எந்த அடிக்குறிப்பும் இராது; அவை தோற்ற மயக்கத்தை ஏற்படுத்தும்.
யோர்ஹே லூயி ஃபோர்ஹே (Jorge Luis Borges) அவரின் ஆதர்சம்
செபால்ட் படிக்கும்போது கோணங்கியின் கல்குதிரை படிப்பது போல் இருக்கலாம். அவரின் வாசகங்கள் சுழல்பவை; ஆரம்பித்த இடத்திற்கு திரும்ப வருபவை; பிரதிபலிக்கும் கண்ணாடி போல் நிகழ்வை சொல்பவை. கதை கொஞ்சம் முன்னே நகர்வது போல் தோன்றினாலும் நடந்த அந்தக் கால விஷயத்திற்கே கவனத்தைக் கோரி திரும்பத் திரும்ப பழைய காலத்திற்கு கொண்டு நிறுத்துபவை.
“We learn from history as much as a rabbit learns from an experiment that’s performed upon it.”
“Now, how about some affirmations to balance all this negativity?”
“Appreciation is a wonderful thing: It makes what is excellent in others belong to us as well.” – Voltaire
சமீபத்தில் ஒரு சர்ச்சை. சர்ச்சையில் சிக்கிய மூன்று தரப்பினருமே விளம்பரப் பிரியர்கள்.
அதில் முதல் தரப்பினர் ஒரு நகரத்தின் மேயர் போன்றவர். தொழிற்சங்கத்திற்கும் அனுதாபி. தொழிலாளிகளை உறிஞ்சும் முதலாளிகளின் ஆதரவும் அவர்க்குத் தேவை.
இரண்டாம் தரப்போ சங்கம் வைத்து தங்கள் சொற்ப ஊதியத்தில் தங்களுக்கு முக்கியமாகப்பட்டதை முன் செலுத்துகிறவர்கள்.
கடைசியாக நம்முடைய பார்வையாளர், வாக்காளர் தரப்பு வருகிறது. அவர் ஓட்டுச்சாவடிக்கு செல்லமாட்டார். எதை எடுத்தாலும் நொட்டை சொல்வார். ஆயிரம் குற்றங்களை அம்பாக திசையெட்டும் எறிந்தால், அவற்றில் பத்தாவது சரியாக குறியை அடிப்பதால் ”நிபுணர்” என்னும் பட்டம் பெற்றிருப்பார். நாளிதழை தினசரி வாசிப்பார். ஆனால், அதை ஆராய மாட்டார். மாதந்தோறும் பத்து புத்தகங்களை நூறு சினிமாக்களை பார்ப்பார். ஆனால், அவற்றைப் புரிந்து கொள்ள முயலமாட்டார்.
மேயருக்கு இந்த இருவருமே முக்கியமானவர்கள். தொழிற்சங்கத்தில் இருந்து சந்தா வர வேண்டும். பார்வையாளரிடமிருந்து வாக்கு வர வேண்டும். முதலாளிகளிடமிருந்து வாழ்க்கை ஆதாரம் வேண்டும். யாராவது ஒருவரின் கை ஓங்கினால் எங்காவது ஒரு mockingbirdஐ போட்டுத்தள்ளுவார்.
mockingbirdஐ கொல்வது என்றால் என்ன? To Kill a Mockingbird நூலில் வருவது போல் mockingbirdஐ கொல்வது என்றால் அப்பாவியாக இருப்பவரை வில்லத்தனம் செய்து மோசமானவராக மாற்றுவது.
“Mockingbirds don’t do one thing but . . . sing their hearts out for us. That’s why it’s a sin to kill a mockingbird.”
விவாதிப்பதற்கான விஷயங்கள் உலகெங்கும் எக்கச்சக்கம். ஒரு பட்டியல்.
அன்னா அசாரே: தேர்தல் சீரமைப்பு – எவர் போட்டியிடலாம்? எவ்வளவு செலவழிக்கலாம்?
ஆப்கானிஸ்தான் போர்
ஆர்க்டிக் பிரதேசத்தில் இருந்து எண்ணெய் எடுக்கலாமா? சவூதி கிணறுகளே போதுமானதா?
கார்பன் குறைவாக கக்கும் நாடுகள் கரிமம் அதிகம் உபயோகிப்பவர்களிடமிருந்து பணம் மட்டும் பெற்றுக் கொள்ளலாமா? உலகமே உமிழ்வுகளை ஒட்டுமொத்தமாக குறைக்கவேண்டுமா?
எச்.ஐ.வி (அ) எயிட்ஸ்
எல்லையில் சுவரெழுப்பி பாதுகாப்பதா? உலகமே இணையத்தாலும் பொருளாதாரத்தாலும் சுருங்கிய நிலையில் திறந்தவெளியாக குடிபுகலை அனுமதிப்பதா?
வங்கிகளை திவாலாக்குவதா? மீட்டெடுப்பதா?
வலைப்பதிவுகள்
லட்சாதிபதிகள் கோடீஸ்வரர்கள் ஆவது: பெரு நிறுவனங்களில் முதன்மையான்வர்களின் சம்பளம் பன்மடங்கு அதிகரிப்பது
துப்பாக்கி தோட்டா கட்டுப்படுத்தல்: நுகர்வோர் சந்தையாக அனைவரும் பாதுகாப்புக்கு வைத்திருக்கலாமா? காவல்துறைக்கு மட்டுமே சொந்தமா?
இஸ்ரேலும் இரானும் பாலஸ்தீனமும்
கல்வியறிவு: வாழ்க்கைக்குத் தேவையான படிப்பும் வருவாய்க்கும் உபயோகமான கல்லூரி வாழ்க்கையும்
உடல்நல காப்பீடு: எகிறும் மருத்துவ செலவும் ஏறும் வயோதிகர் மக்கள்தொகையும்
வட கொரியா: போக்கிரி நாடுகளின் கையில் இராணுவ பலம்
அணு ஆயுதம்: மாற்று சக்தி
உடல் பருமன்: மாறும் உணவு கலாச்சாரம்
கடற்கொள்ளையர்: சோமாலியாவை மேற்கத்திய நாடுகள் ஊக்குவிக்கிறதா?
கலவிக் கல்வி: இந்திய நாகரிகம் காமசூத்ராவை கோவிலிலேயே கொண்டிருந்தாலும், வைய விரிவு வலையெங்கும் மிக அதிகமான பலான தேடல் கொண்டிருப்பதன் சூட்சுமம்
அறிவியல் ஆராய்ச்சி: எவாஞ்சலிகல் கிறித்துவத்தின் கட்டுப்பெட்டித் தன்மைகளை எவ்வாறு தடுத்து, ஸ்டெம் செல் போன்ற துறைகளில் மருத்துவத்தை முன்னேற்றலாம்?
தீவிரவாதம்: போரிட்டு அடக்க முடியுமா?
உலக வெம்மையாக்கம்
பள்ளிக்கூட மாணவர் பிரச்சினைகள்: சோசியல் மீடியா அச்சுற்றுத்தல்
மாற்று எரிசக்தி
பொக்கீடுகள்: வரிச்சுமை, பட்ஜெட்
அரிதாகிப் போன ஜீவராசிகள் குறித்து அஞ்ச வேண்டுமா? டைனோசார் போல் போனால் போட்டுமா?
1. கூடங்குளம் உண்ணாவிரதம் » ஜெயமோகன்: இந்தநிமிடம் வரை நம்முடைய முக்கியமான அதிகார பீடங்கள் எவையும் அவரை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. இதுவரை அவரைநோக்கி ஒப்புக்குக்கூட ஒரு சமாதானக்குரல் வரவில்லை.
ஒசாமா பின் லாடன் மதத்தை முன்னிறுத்தி போராட்டம் நடத்துகிறார். வேலை நிறுத்தத்தில் பங்கு பெறாதவர்களை அமெரிக்காவில் யூனியன் தொழிலாளிகள், மிரட்டி உருட்டுவதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன்; அடி வாங்கி இருக்கிறேன். இந்த மாதிரி கொள்கைக்காக கொண்ட லட்சியத்தில் ஈர்ப்போடும் முனைப்போடும் இருப்பவர்களின் உள்நோக்கங்களை ஆராயாமல் உள்ள உறுதியை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டுமா?
2. இடிந்த கரை.. இடியாத நம்பிக்கை… « திண்ணை – ஞானி: சிறுமியாக நடிக்கப்போன காலத்திலிருந்து செட்டில் கூட புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர் நீங்கள். நூற்றுக்கணக்கில் செருப்புகளை வைத்திருந்தீர்கள் என்ற அவதூறுப் பிரச்சாரத்தின் மூலம் நீங்கள் ஆயிரக்கணக்கில் புத்தகங்களை உடைய நூலகத்தை வீட்டில் வைத்திருந்ததை மறைக்கப் பார்த்தார்கள். வாசிப்பு ருசியும் பழக்கமும் உடைய நீங்களே ஒரே ஒரு நாளை ஒதுக்கி இரு தரப்பு நூல்களையும் வாசியுங்கள்.
நீங்களும் இணையத்தை பரவலாக வாசிப்பீர்கள் என்று அறிந்திருக்கிறேன். மின்ரத்து இல்லாத சில மணித்துளிகளில் கீழ்க்கண்ட உரல்களை படித்து தெளிவடைவீர்கள் என்று நம்புகிறேன்.
3. அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள் ! | வினவு!: ஃபுகுஷிமா விபத்துக்குப் பின் ரசிய அணுஉலைகளைச் சோதித்த அந்நாட்டு விஞ்ஞானிகள், “நிலநடுக்கம், தீ, வெள்ளத்தை எதிர்கொள்ளும் திறன் நமது உலைகளுக்கு இல்லை” என்று அந்நாட்டு அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர்.
தங்கம் வாங்கினால் திருடு போய் விடும். வண்டி ஓட்டினால் விபத்துக்குள்ளாகும். கணினியால் கண் பிரச்சினை வரும்; செக்ஸ் வைத்துக் கொண்டால் எயிட்ஸ் வரும். மின்சாரம் வந்தால் ஆபத்து வருமா?
4. The Koodankulam Struggle and the ‘Foreign Hand’ @ EPW by S P Udayakumar: They promise foreign direct investment (FDI), nuclear power, development, atom bombs, security and superpower status. We demand risk-free electricity, a disease-free life, unpolluted natural resources, sustainable development and a peaceful future.
நிலக்கரி போன்ற நச்சுத்தன்மையற்ற எரிசக்தி கிடைப்பது ஏன் பிடிக்கவில்லை? கேரளா மாநிலம் முழுக்க காற்றாலையால் ரொப்பி வருண பகவான் அருளினால் கூட கூடங்குளம் போன்ற குறுகிய இடத்தில் கிடைக்கும் உற்பத்தி கிடைக்காது. மக்கள் முன்னேற்றத்தை விட, தங்கும் இருப்பிடத்தை விட இராட்சத காத்தாடிகள்தான் தங்கள் குறிக்கோளா?
5. அழிவிற் சிறந்தது :: ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.: அணுக்கழிவுகளை தொடர்ந்து சாமாளிப்பது என்ற வகையில், சுற்று சூழலுக்கு உகந்ததாக அணு மின்சாரத்தை சொல்ல முடியுமா என்று கேள்வியை மண்டையில் இருந்து கழற்றி வைத்து விட்டு பார்த்தால், அணு மின்சாரம் ஒரு விதத்தில் தூய்மையான பச்சை மின்சாரமாகத்தான் தெரிகிறது.
.
.
ஃபாசில் எரிபொருட்களின் வளம் வற்றப்போவது நிச்சயமான எதிர்காலப்பிரச்சனை. அதை அணு மின்சார உற்பத்திக்கு மாறுவதன் மூலமாக மட்டும் சமாளிக்க முடியுமா? எல்லாவித பெட்ரோல், டீசல் தேவைகளையும் நேரடி மின்சாரம் சார்ந்த பயன்பாடாக மாற்ற வேண்டும்.
ஒரு யுரேனியம் குளிகை – அதாவது உங்களின் சுண்டு விரல் கூட அல்ல… சுட்டுவிரலின் நுனி
– (சவுதி எண்ணெய்க் கிணறுகளின் கிடைக்கும்) பதினேழாயிரம் கன சதுர இயற்கை வாயு
– எண்ணூறு கிலோ நிலக்கரி
– ஐநூறு லிட்டர் பெட்ரோல்
இப்படி முழுவதும் தயாரான, தற்கால நுட்பங்களை உள்ளடக்கிய, தொழிற்சாலையை இயக்குவதில் அதன் மூலம் பயனடைவதில் ஏன் சுணக்கம்?
6. Koodankulam: Letter to IAEA, Nuclear Regulators and Human Rights Organisations — DiaNuke.org: The KKNPP reactors from Russia are being set up without sharing the Environmental Impact Assessment (EIA), Site Evaluation Study and Safety Analysis Report with the people, or the people’s representatives and the press. No public hearing has been conducted for the first two reactors either
அமெரிக்கா வரை சு. ப. உதயக்குமாரால் சுற்றுலா வரமுடிகிறது. முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து உரையாட முடிகிறது. உலகெங்கிலும் இருந்து பணம் கொணர முடிகிறது. ஆனால், திருநெல்வேலி வரை வந்தவர்களை சந்திக்க செல்ல முடிய வில்லையா? அரசு ரகசியங்களையும் பாதுகாப்பு ஆவணங்களையும் படிப்பதற்கு நேரம் ஒதுக்க மனமில்லையா?
7. 02 | மார்ச் | 2012 | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்: “உதயகுமாருக்கு வெளிநாடுகளிலிருந்து வந்த பணம்”: ஜெர்மனிய நிறுவனத்திடமிருந்து –
2,15,21,900.00 ரூபாய். INDISKA MAGASINET AB Box 27317,S-102 54,Stockolm, Sweden என்கிற ஸ்வீடிஷ் நிறுவனத்திடமிருந்து 41,91,222.00 ரூபாய்.”
இவ்வளவு சொல்ப வருமானத்தை வைத்துக் கொண்டு பள்ளிச்சிறுவர்களை படிக்க அனுப்பாத பெற்றோர்களுக்கு பஞ்சப்படி தர முடிகிறதா?
கட்டுரை அசலாக வெளிவந்த சொல்வனம்.காம் தளத்திற்கு நன்றிகளுடன்
ஐஐடியிலும் ஐஐஎம்மிலும் நான்கு வருடம் படித்து தேறி வருபவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்வது ஒரு ரகம். பிளஸ் டூ முடித்தவர்களை அப்படியே அள்ளிக் கொண்டு போய், தனக்கு வேண்டியதை மட்டும் சொல்லிக் கொடுத்து, வியாபர நுணுக்கத்தின் தேவைக்கு ஏற்றவாறு பாடங்களை வடிவமைத்து, அனுபவமும் இரண்டு சொட்டு சேர்த்து, தன் நிறுவனத்தின் நெளிவு சுளிவுக்கேற்ப வளைய வைத்து வார்ப்பெடுப்பது இன்னொரு கலை.
ஐபிஎம் (IBM), எச்.பி. (HP), டெல் எல்லாம் முதல் ரகம். அமேசானும் ஃபேஸ்புக்கும் முன்னேறும் இரண்டாவது ரகம்.
முதல் ரகத்தில் நம்பகத்தன்மை இருக்கும். கடுமையான பரீட்சைகளுக்குப் பிறகு தேர்வாகி வெளியில் வந்தவற்றையே நாம் வாங்குகிறோம். ஃபேஸ்புக்கிலோ ஒரு தடவை ஸ்டேட்டஸ் அப்டேட் போட்டுப் பார்ப்போம். இரண்டு நிமிடம் கழித்தும் அது தோன்றாவிட்டால், அதையே மீண்டும் போடுவோம். இரண்டு தடவை வந்தால் கூட பரவாயில்லை.
ஆனால், எச்.பி.க்களை பெருவிலை கொடுத்து வாங்கிப் போடும் வங்கிகளில் இந்த மாதிரி இரண்டு தடவை வரவு கழித்தலோ பற்று கூட்டலோ கூடவே கூடாது. தரம் இங்கே அதிமுக்கியம்.
முதலாம் ரக ஐபிஎம்-களில் முஸ்தீபுகள் அதிகம். முதலீட்டு செலவு நிறைய ஆகும். பரிசோதனை எல்லாம் செய்யாமல், முன் வைத்த காலை பின் வைக்காமல் நுழைய வேண்டும். நேற்று ஆர்குட்; இன்றைக்கு கூகிள் பிளஸ்; நாளைக்கு கிரோம் என்று மாறும் தட்பவெப்பத்திற்கேற்ப ஆய்வகமாக, இரண்டாவது ரகம் இயங்குகிறது.
அயலாக்கம் x கிளைத் துவக்கம்
1990களின் இறுதியில் அமெரிக்க நிறுவனங்கள் அவுட்சோர்சிங்கைக் கண்டு பயப்படாமல் களத்தில் குதித்த காலம். அதுவரை “இந்தா பிடிச்சுக்கோ! இருநூறு டாலரோ… முன்னூறு டாலரோ!” என்று கணக்கு பார்க்காமல் இன்ஃபோசிஸ்களுக்கும் விப்ரோகளுக்கும் டி.சி.எஸ்.களுக்கும் அள்ளி விட்டுக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச காலம் சென்றபின் “இதே வேலையை உங்க நாட்டில் போய் செய்தால், இரண்டு சதவீதம் தள்ளுபடி கிடைக்குமா?” என்று பேரம் பேசினார்கள்.
புது நூற்றாண்டு பிறப்பதற்கு முன் பழைய உத்தி, தூசி தட்டப்பட்டு மறு வாழ்வு கண்டது. அன்று பருத்தி ஆலை ஏற்றுமதி; காலணித் தொழிற்சாலைகளை சீனாவிலும் தெற்காசியாவிலும் துவங்குதல்.
இப்பொழுது கணினி நிபுணர்களுக்காக இந்தியாவிலேயே கிளை தொடங்குதல். பெரு நிறுவனங்கள், தொழில் நுட்ப முதலாளிகள் என்று எந்த வட்டத்திற்குள்ளும் அடங்காமல், அனைத்து மேற்கத்திய பிரகிருதிகளும், இந்தியாவில் கணினி நிபுணர்களைக் கொண்டிருக்கிறார்கள்.
இடைத்தரகர் வேண்டாம்; காண்ட்ராக்டர்களை, மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்த வேண்டாம்; பொட்டி தட்டுபவர்களும் விட்டேத்தியாக இல்லாமல், பொறுப்பாக இருப்பார்கள்.
நிரலி எழுதுபவர்களிடமே இந்தப் பரிவு என்றால்…
இப்பொழுது அந்த நிரலிகளை இயக்கும் சர்வர் என்றழைக்கப்படும் அளிப்பான்கள்களுக்கும் – முழு வடிவமைப்பும் உள்கட்டுமானமும் கொண்டு இயங்க நினைக்கிறார்கள்.
முதலீடு முடக்கம் x சில்லறை வணிகம்
ஆயிரம் ஹெக்டேருக்கு அரிசியும் பணப்பயிரும் விதைப்பார்கள். இப்பொழுது ஆப்பிள் போடுகிறார்கள். ஐபோன், ஐபேட் பயனர்களுக்கு ஐக்ளௌட் (மேலும் வாசிக்க: http://solvanam.com/?p=14812) தருகிறது ஆப்பிள். நமது புகைப்படங்கள், விழியங்கள், டாரெண்ட்டில் தரவிறக்கிய திரைப்படங்கள் எல்லாவற்றையும் இணையத்தில் சேமித்து வைக்கலாம்.
ஆப்பிள் மட்டுமல்ல… மைக்ரோசாப்ட், அமேசான், கூகிள் போன்றோர், என்னைப் போன்ற நுகர்வோருக்கு இந்த வசதியை செய்து தருகிறது. என்னை வேலைக்கு வைத்திருக்கும் பெரு நிறுவனங்களுக்கு இதே வசதியை அதே நிறுவனங்களும் ராக்ஸ்பேஸ், சேல்ஸ்ஃபோர்ஸ் போன்றோரும் சினிமாஸ்கோப் முப்பரிமாண பிரும்மாண்டமாக இயக்குகிறார்கள்.
இதில் என்ன வசதி?
அ) ‘வை திஸ் கொலவெறி டீ’ வெளியாகும் சமயத்தில் திடீரென்று அளிப்பான்களின் தேவை அதிகமாகிறது. உடனடியாக, விநாடிகளில் அளிப்பான்களைக் கூட்டலாம்; குறைக்கலாம்.
ஆ) புதிதாக வெளியிடும் நிரலிகளை, சோதித்துப் பார்க்கலாம்.
இ) பத்தாயிரக் கணக்கில் செலவு செய்யும் முதலீடு கிடையாது. பத்து டாலர் தள்ளினால் போதுமானது. அதிவிரைவு அளிப்பான்கள், ஆயிரம் கொடுப்பார்கள். சிறுவணிகர்களுக்கு கந்து வட்டியில் கணினிகள் வாங்கும் நிலையை விட்டு விடுதலை.
மேகம் – கிளவுட்
2000-ம் ஆண்டு வருகிறது… y2k என்று ஓடினார்கள்; அவுட்சோர்சிங் செய்தால் மட்டுமே சேமிக்க முடியும் என்று ஓடினார்கள்; எல்லோரும் செல்பேசி கொண்டே இயங்குகிறார்கள் என்று ஐபோன் அப்ளிகேஷனுக்கு ஓடினார்கள்.
இன்றைய தாரக மந்திரம் – கிளவுட்.
விண்டோஸ் கொண்ட கணினி வேண்டுமா? எத்தனை வேண்டும்? எவ்வளவு நாளுக்கு வேண்டும் – மேகத்திற்கு செல்லுக.
என்னது… விண்டோஸ் எல்லாம் வேண்டாம். நூறு இண்டெல் சில்லு கொண்ட சக்தி மட்டுமே வேண்டுமா? – மேகத்திற்கு வருக.
எனக்கு தேவதர்ஷினி நாயகியாகக் கொண்ட சீரியல் பிடிக்கும். கே பாலச்சந்தர் இயக்கினால் நல்லது. ஜெயமோகனின் காடு நாவலை கதையாகக் கொண்டிருக்க வேண்டும்; ஆனால், அவரின் வசனம் இயல்பாக இருக்காது; பா ராகவனை வசனம் எழுத வையுங்கள். என்னால் இந்த வாரம் மட்டும்தான் பார்க்க முடியும். என்னிடம் கேபிள் கிடையாது. எனவே, ஐந்து நாளைக்கு மட்டும் தூர்தர்ஷனில் ஒளிபரப்புங்கள் என்று கேட்பது போல் எதை வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும், எப்பொழுது தேவையோ அப்பொழுது வாங்கிக் கொள்ள விழைகிறீர்களா – கிளவுடுக்கு வாங்க.
நீங்கள் மாதத்திற்கொருமுறை மதுரையில் இருந்து சென்னை சென்று வருகிறீர்கள். அதற்காக பேருந்தை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனால், தினசரி திண்டுக்கல் வரை போய் வந்தால், டூ வீலராவது சொந்தமாக வைத்துக் கொள்வோம்.
அன்றாடம் ஏதாவது பயன் இருக்குமா? – வாங்கிப் போடு.
என்றாவது எதற்காவது மட்டுமே உபயோகமா? – வாடகைக்கு எடு.
எச்.பி.யிடத்திலும் ஐ.பி.எம்.மிடத்திலும் எங்களுக்கு இந்த மாதிரி தேவை. இதற்கு ஏற்ற மாதிரி வண்டி செய்து கொடு என்று கேட்டு கேட்டு, அலுத்துப் போன ஃபேஸ்புக், அமேசான்கள், தாங்களே டாட்டா நானோக்களை வடிவமைத்ததுடன், அவற்றை வாடகைக்கும் விடுகிறார்கள்.
கலிபோர்னியா பக்கம் அளிப்பான்களின் பலு அதிகரிக்கிறதா? பலு அதிகரித்தால் அளிப்பான்களின் உஷ்ணம் உச்சத்தை அடையும். உஷ்ணம் அதிகரித்தால், குளிரூட்டிகளின் வேலையும் அதிகரிக்கும். குளிரூட்டிகளினால், மின்கட்டணமும் எகிறும்.
அளிப்பான் அறையில் கிட்டத்தட்ட ஒரு டிகிரி பாரன்ஹீட் ஏறினால், மின்கட்டணத்தில் நான்கு சதவிகிதம் ஜாஸ்தி கட்டவேண்டிய நிலை. அதற்கு பதிலாக, அளிப்பான்களின் வேலையை இன்னொரு ஊருக்கு திசை திருப்பி அனுப்பி வைக்கும் நுட்பத்தை கூகிள் கையாள்கிறது.
சாதாரணமாக பக்கத்து ஊருக்குப் போ; அங்கே இருக்கும் அளிப்பான்கள் மூலமாக தகவல் அனுப்பு. ஆனால், பக்கத்து ஊர் அளிப்பான் அறையில் வெப்பம் ஏறி விட்டதா? கொஞ்சம் தள்ளிப் போய், அடுத்த கட்ட அளிப்பானிடமிருந்து தகவல் பெற்றுக் கொள்.
இரண்டு லட்சம் வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை கூகிள் மட்டுமே பயன்படுத்துகிறது. இந்த நுட்பத்தினால் மட்டும் பில்லியன் கணக்கில் மின்கட்டணம் குறைகிறது.
அதற்குள்ளே இண்டெல் அல்லது ஏ.எம்.டி. (AMD) சில்லுகள்; அவற்றிற்கு ஊட்டம் கொடுக்க கிராஃபிக்ஸ் கார்டுகள்; அதை இயக்க, சக்தி கொடுக்கும் மின்விசை அளிப்பு; இவற்றை எல்லாம் காற்றோட்டமான பெட்டியில் அடைக்கும் அடிச்சட்டம்; அதை அடுக்கு அடுக்காக கட்டு கட்டாக வரிசைப்படுத்தும் வடிவமைப்பு; இதற்கான மின்சார திட்டம்; குளிர்காலத்தில் வெப்பமும், கோடை காலத்தில் குளிரூட்டமும் தரும் சூழல்; மின்கட்டணம் எகிறாத கட்டிடக் கலை ஆக்கம்.
இவையனைத்தும் தொலைதூரத்தில் இருந்து நிர்வகிக்கும் வல்லமை; தொல்லை தராமல் கூட்டவும் குறைக்கவும் மாற்றவும் முடியும் திறமை.
இவ்வளவு நுட்பங்களையும் பொதுவில் வைத்திருக்கிறது ஃபேஸ்புக். (மேலும்: http://opencompute.org/)
சரவண பவனுக்கு சென்றால் சகலமும் கிடைக்கும். கொஞ்சமாய் பசிக்கிறதா? மதியம் இரண்டு மணிக்குக் கூட இட்லி சாப்பிடலாம். இன்னும் கொஞ்சம் பசியா? மினி மீல்ஸ் கிடைக்கும். அகோறப் பசியா? அன்லிமிட்டட் சாப்பாடு உண்ணலாம்.
ஆனால், பக்கத்து சந்தில் மாமி மெஸ் இருக்கிறது. திங்கள் கிழமை என்றால் தோசையும் சட்னியும் சாம்பாரும் மட்டுமே கிடைக்கும்; செவ்வாய் போனால் சப்பாத்தி + தால். வெரைட்டி இல்லாவிட்டாலும், மாமி மெஸ் ருசியே தனி.
முதல் பாணியில், சரவண பவன் போல் சகல வசதிகளுடனும் எச்.பி., டெல் போன்ற வணிகர்கள் சர்வர் கொடுக்கிறார்கள். இட்லிக்கும் அதே சாம்பார்; சாதத்திற்கும் அதே சாம்பார் என்பது மாதிரி விண்டோஸ் ஆஃபீஸ் இயக்குவதற்கும் அதே சர்வர்; ஆரக்கிள் டேட்டாபேஸ் இயக்குவதற்கும் அதே சர்வர்; ஆங்ரி பேர்ட்ஸ் விளையாடுவதற்கும் அதே சர்வர்.
வீட்டு சாப்பாடு மாதிரி தினம் தினம் மாறும் வேண்டுதலுக்கேற்ப, ஒரே ஒரு விஷயத்தை மட்டும் ஸ்பெஷலாக செய்து தரும் சர்வர் நுட்பத்தை ஃபேஸ்புக் விரும்புகிறது.
என்னுடைய நண்பர்களின் ஸ்டேட்டஸ் எனக்குத் தெரிய வேண்டும். கடைசியாகப் பார்த்த இடத்தில் இருந்து பார்க்கக் கிடைத்தால் போதுமானது. பத்து மாதங்களுக்கு முன்பு ஜூலையில் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதை பெரும்பாலும் தினசரி தேடிக் கொண்டிருக்க மாட்டேன். நேற்று என்ன நடந்தது என்பது க்விக்காக திரையில் தோன்ற வேண்டும். பழையதைத் தேடி வினவினால், பொறுமையாகக் காத்திருக்கும் தயார் நிலையில் இருப்பேன்.
எச்.பி., டெல் ஆகியோர் நேற்றைய விஷயத்தைத் தேடினாலும் அதே நேரம்; பத்து வருஷம் ஆகிப் போனதை விசாரித்தாலும் ஒரே நேரம் என்று கட் அண்ட் ரைட்டாக பேசுகிறார்கள். ஃபேஸ்புக்கிற்கும் கூகிளுக்கும் இது தோதுப்படவில்லை. தாங்களே சமைத்து, அதற்கான ரெசிப்பியையும் உலகுக்கு ஓதுகிறார்கள்.
பங்குச்சந்தையில் ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்கிற்கு இது ஐ.பி.ஓ. எனப்படும் (மேலும்: http://online.wsj.com/article/SB10001424052970203935604577066773790883672.html) பங்குச்சந்தையை நாடும் காலம். அதற்காக பல அஸ்திரங்கள். ஒரு புறம் வாடிக்கையாளர் எண்ணிக்கை பலத்தைக் காட்டுகிறது. இன்னொரு புறம் அந்த வாடிக்கையாளர், எத்தனை மணி நேரம் ஃபேஸ்புக்கிலேயே கட்டுண்டு கிடக்கிறார் என்று புள்ளிவிவரம் திரட்டுகிறது. அதே சமயம், இது தவிர எங்களிடம் நில புலம் போன்ற அளிப்பான் – கடல் போல் அசையா சொத்தாக குவிந்து கிடக்கிறது என்பதையும் முன்வைத்து, முதலீடு கோருகிறது.
அது சரி… இத்தனை அளிப்பான்கள் எதற்கு தேவை?
இன்றைக்கு எல்லோரும் பேஸ்புக்கை நாடுகிறோம். பாமாயில் கொடுக்கும் ரேஷன் கடை க்யூவாக, பேஸ்புக்கில் புதிதாக என்ன கருத்து வந்திருக்கிறது, எங்கே குழு அமைகிறது என்று பழியாய் கிடக்கிறோம். ஆனால், நாளைக்கே கூகிள் பிளஸ் என்று வேறு எங்காவது சென்று விட்டால்?
அந்தக் காலத்தில், உங்களில் பழைய தகவல், அப்பொழுது வலையேற்றிய நிழற்படங்கள், உளறிய கருத்துகள், விரும்பிய லைக் தொகுப்புகள் எல்லாவற்றையும் பத்திரமாக சேமித்து வைத்து, விளம்பரதாரர்களிடம் விற்க நினைக்கிறது ஃபேஸ்புக்.
750 மில்லியன் வாடிக்கையாளர்களின் நுணுக்கமான விவரங்கள், காலங்காலமாக ஒருங்கிணைக்கத்தான் இத்தனை அளிப்பான்கள்.
ரகசிய அளிப்பான் x திறமூல கணினி
ஃபேஸ்புக்கிற்கு தேவையான மென்பொருளை ஃபேஸ்புக் எழுதிக்கொள்கிறது. அப்படியானால், பேஸ்புக்கிற்கு தேவையான வன்பொருளை மட்டும், ஏன் ஐ.பி.எம்.மும், ஆரக்கிளும், எச்.பி.யும், டெல்லும் செய்துதர வேண்டும்?
தாங்கள் எழுதும் மென்பொருளுக்கு ஏற்ற வன்பொருள் வழங்கியை வடிவமைக்க விரும்புகிறார்கள். வன்பொருள் நிறுவனங்களான டெல், எச்.பி. போன்றோர், பொதுவான வழங்கிகளையே தயார் செய்கிறார்கள்.
ஒரே அளவில் அனைத்து உள்ளாடைகளையும் தயார் செய்து, சீனாக்காரரிடமும் கொடுக்கிறார்கள்; அமெரிக்காவின் போஷாக்கானவர்களிடமும் கொடுக்கிறார்கள். எப்படி பொருந்தும்?
2004களிலேயே இந்தப் பிரச்சினைகளை கூகிள் எதிர்கொண்டது. வண்ணமயமாக, விருப்பத்திற்கேற்ப, பயன்பாட்டுகேற்ப, வன்பொருள் வளைந்து கொடுக்க வடிவமைக்க ஆள் போட்டார்கள். தாய்வானுக்கும் தாய்லாந்துக்கும் ஆளனுப்பி சி.பி.யூ முதல் மதர்போர்டு வரை கொள்முதல் விலையில் சல்லிசாக வாங்கினார்கள்.
அமெரிக்காவில் ஆயிரமாயிரம் ஏக்கர் நிலம் வாங்கி, வழங்கிப்பண்ணைகளுக்கு கூகிள் கால்கோள் இட்டது.
அண்ணன் எவ்வழி; பேஸ்புக் அவ்வழி என்று அளிப்பான்-பண்ணைகளை, இப்பொழுது ஃபேஸ்புக்கும் துவங்கி இருக்கிறது.
தங்களின் சிட்டிவில், ஃபார்ம்வில், ஜாம்பிலாண்ட் போன்ற விளையாட்டுகளுக்கான நுட்பத்திற்கேற்ற கணினி வடிவமைப்பு; ஐபோனில் முகப்புத்தகம் தெரிவதற்கான சிற்ப்பு வழங்கி வடிவமைப்பு; செய்தியோடை மற்றும் மாற்றுத் தளங்களில் பகிர்வதற்கான அளிப்பான் வடிவமைப்பு என்று செயல்பாட்டுகேற்ப மாற்றியமைத்து தெரிவு செய்கிறார்கள்.
இவற்றையெல்லாம் கூகிள் போல் கமுக்கமாக வைக்காமல், பகிரங்கமாக படம் போட்டு விளக்குகிறார்கள். எழும் பிரச்சினைகளை பிரசங்கம் செய்கிறார்கள். நாலு பேர் எட்டு விதமாக தீர்வு கொடுக்கிறார்கள். எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, அடுத்த தலைமுறைக்கான வழங்கிநுட்பத்தை மேம்படுத்துகிறார்கள்.
அப்படியானால், எச்.பி., டெல் போன்ற கணினி வன்பொருள் நிறுவனங்களின் கதி? அவர்களும் இதே போன்ற வழங்கி நுட்பத்திற்கு மாறலாம்; மேகதூதராக கிளவுட் கம்ப்யூட்டிங்கில் இறங்கலாம்.
ஃபேஸ்புக் அடிபற்றி, ஈ-பே, நெட்ஃப்ளிக்ஸ், சீனாவின் பைடூ, மொசில்லா எல்லாரும் இந்தப் பாதையில் காலடி வைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.
இன்னும் கூட உங்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லையா?
அமெரிக்க வீட்டுச்சந்தை வீழும் என்றும் மனை விற்பகத்திற்கான கடன் ஏமாற்றப்படும் என்றும் ஆருடம் சொல்லி, அந்த ஆருடத்தின் மீது ஊகச் சந்தையில் பந்தயம் கட்டிச் சூதாடி பெரும்பணமும் ஈட்டிய கோல்ட்மன் சாக்ஸ் இந்த ஓபன் கம்ப்யூட் – திறமூல வழங்கி நுட்பத்தில் பிரதான இயக்குநராக சேர்ந்துள்ளது போதாதா?
இணையத்தில் திருடுவதும் அதைத் தடுப்பதற்குமான சட்டம் குறித்து சமீபத்தில் வாசித்த சுவாரசியமான கட்டுரை: சங்கைப் பிடிக்கும் சோபா (SOPA)
ஏதாவது மக்கள் சம்பந்தப்பட்டதாக, அசல் தூலப் பிரச்சினைகளாக யோசிப்போமே?
இன்று நார்வேயில் பெரும் பனிப் பாளங்களின் அடியில் கட்டப்பட்ட ஒரு புதைகுழிப் பெட்டகத்தில் உலகத் தாவரங்களின் வித்துகளைச் சேமித்து வைத்திருப்பதைத் தொலைக் காட்சியில் காட்டினார்கள்.
‘Doomsday’ seed vault opens in Norway – CNN.com:
“# Ultimate safety net for the world’s seed collections has opened in Norway
# The vault received inaugural shipments of 100 million seeds
# Norwegian govt. built vault in glacial mountain between Norway and North Pole”
இத்தனை குளிரில் விதைகள் பல வருடம் வைக்கப்பட்டால் அவை உயிருள்ளவை என்றால் பின்னால் எப்படி மறுபடி உயிர்க்கும்?
இந்த வகை விதைப் பாதுகாப்பு முயற்சிகள் இந்தியாவில் உண்டா?
எங்கு, யார் கையில் உள்ளன அவை?
2. கள்ள நோட்டுகள் ஏராளமாக இந்தியாவில் புழங்குவதாகச் செய்திகள் வருகின்றன.
இவற்றால் இந்தியப் பொருளாதாரத்துக்கு என்ன ஆகும்?
இவை எந்த வகை மனிதரிடம் அதிகம் புழ்ங்குகின்றன?
அந்த வகை மனிதர் கையில் பொருளாதாரக் கட்டுப்பாடு போய்ச் சேர்ந்தால் நாடு என்ன ஆகும்?
Fake currency notes can destabilise our economy: “There was a small news item a few days ago about ink used in printing currency missing in transit. According to the report, a consignment of OVI intaglio ink was sent from the Swiss SICPA unit in Sikkim to the Reserve Bank Note Mudra unit in Mysore and about 5 kg ink was found to be missing on arrival.
Official estimates put the number of FICN in circulation at 61,000 million pieces of different denominations worth Rs 1,69,000 crore till the year 2000. In comparison, the actual seizures amounted to Rs 5.57 crore in 2002, Rs 5.29 crore in 2003 and Rs 6.81 crore in 2004.”
3. துவக்கப் பள்ளி:
நாட்டில் எத்தனை துவக்கப் பள்ளிகள் உண்டு?
அவற்றில் எத்தனை மிலியன் குழந்தைகள் படிக்கிறார்கள்?
ஒவ்வொரு குடும்பமும் தாம் வாங்கும் புத்தகங்களை என்ன செய்கின்றன?
அவை கைமாற்றிக் கொடுக்கப்பட்டு மறு உபயோகிப்புக்கு வருகின்றனவா?
எத்தனை ஆசிரியர்கள் வருடா வருடம் தயாராகிறார்கள்?
அவர்களுக்குக் கொடுக்கப் படும் ஊதியத்தால் அரசுடைய நிதித் திட்டத்துக்கு எத்தனை பளு?
இப்படி எதார்த்தமான விஷயங்களைப் பற்றி அதிகமாகவும், பண்பாட்டு அவலங்களைப் பற்றிக் குறைவாகவும் யோசித்தால் பதிவின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
இறுதியில் மனிதரின் தன்னியல்பு என்பது தலை தூக்கவே செய்கிறது.
My quick takes on his personality, style, discussion topics :: சொல்வனம்
அரிதான இன்னொரு ரகத்தை சேர்ந்தவர் ஜெயமோகன். எடுக்கிறார். முதற் பக்கத்தை நின்று கொண்டே படிக்கிறார். கவனிக்க: வரிக்கு வரி படிக்கிறார். நான் அனேகமாக அமேசானில் கூட ஒரு வரி படித்தால், இரு வரி விட்டு, அடுத்த வரிக்குத் தாவித் தாவி வாசிப்பேன். பொறுமையைப் பார்த்தால் பொறாமையாக இருந்தது. மூன்று பக்கமாவது முழுமையாகப் படிக்கிறார். அதன் பிறகு, வாங்கலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கிறார். நான் மூன்று மணி நேரம் திட்டமிட்டிருந்த புத்தக நிலைய சுற்றுலா, ஒன்பது மணி நேரம் ஆனபிறகும், ஜெமோ அசராமால், அலசிக் கொண்டிருந்தார்.
எழுத்தாளர் ஜெயமோகன் சற்றேறக்குறைய மூன்று வாரங்களை கனடாவில் கழித்துவிட்டு இல்லம் திரும்பியிருக்கிறார். இந்தப் பயணம் அவருக்கு நல்ல அனுபவங்களைத் தந்திருக்கும் என நம்புகின்றேன். அவரது அமெரிக்கப் பயணம் மாடிமோதும் விமானங்கள், மடித்த அஞ்சல்களில் வரும் வியாதிகள் இன்னபிற எதிர்பாராத காரணங்களால் நிகழாமற் போயிற்று. அமெரிக்காவின் இழப்பு; கனடாவின் இலாபம். அவர் நிறைய நாட்களை எங்களுடன் செலவிட்டுச் செல்லமுடிந்தது.
எழுத்தாளர் முத்துலிங்கம்
மகாலிங்கம்
காலம் செல்வம்
இன்னும்பிற ஈழத்து நண்பர்கள் அவரது பயணத்தை ஒருங்கமைத்திருந்தார்கள். கடந்த 21ம் தேதி ஜெயமோகன் வாசகர்களைச் சந்தித்தார்; மழை ஞாயிறு. சந்திப்பு என்னுடை இல்லத்திலிருந்து நடை தொலைவில்தான் (நல்லதாகப் போயிற்று, ஒண்டாரியோவின் கடுமையான வாகன ஓட்டுநர் அனுமதி விதிகளினால் நான் நாள்வரை காரிருந்தும் “கால்நடைதான்”).
காலை 10 மணி முதல் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் காலம் செல்வத்தால் “வாழும் தமிழ்” சார்பாக நிர்வகிக்கப்பட்டது. நம்பமுடியவில்லை; கண்காட்சியில் குறுந்தொகை முதல் நேற்று வந்த புளியமரத்தின் கதை மறுபதிப்பு வரை – கிட்டத்தட்ட 700 – 800 புத்தகங்கள்..
அடியேனுக்கு ஆ.மாதவனின் கிருஷ்ணப் பருந்து போன்ற அருகிவரும் புத்தகங்கள் சில கிட்டின. இன்னும் சொல்புதிது, எக்ஸில், சதங்கை போன்ற எண்ணிலா சிற்றிதழ்கள். நண்பகலில் ஜெயமோகன் வாசக நண்பர்களுடன் விருந்துண்டார். (அடியேன், கரகரத்த தொண்டையுடன் குடைகீழ் இல்லம் வந்து மிளகு ரசம்-சாதம்).
பிற்பகலில் சந்திப்பு களை கட்டியது. ஜெயமோகனைப் பற்றி சம்பிரதாயமான அறிமுகம் எழுத்தாளர் மகாலிங்கம் அவர்களால் (அந்த அறிமுகத்தின் தேவையின்மை விரைவிலேயே தெரியவந்தது). ஜெயமோகன் விமர்சன மரபும் – தொடர்பும் எனும் தலைப்பில் உரையாற்றினார். தமிழ் விமர்சன மரபை மூன்று பெரும் வகைகளாகப் பகுத்து விரித்துரைத்தார்.
மரபுவழி விமர்சனம் (Geneological criticism – உ-ம் தளையசிங்கம்),
எதிர்வினை விமர்சனம் (Dialectical Criticism, உ-ம் கா.நா.சு / கைலாசபதி)
குழப்பநிலை விமர்சனம் (Chaotic criticism, உ.ம் ஜெயமோகன்).
இறுதியில் ஒரு வாசகன் இவையெல்லாம் கடந்து தன் சுய அனுபவத்தினால் மதிப்பீடு செயதலே எல்லாவற்றிலும் காட்டிலும் சிறந்தது என்பதற்கான விளக்கங்கள். ஜெயமோகன் ஒரு நல்ல ஆசிரியர் என்றுதான் கூறவேண்டும். மிகவும் தெளிவான ஆற்றொழுக்கு உரை.
தொடர்ந்து கேள்வி-பதில் என்று அறிவிக்கப்பட வாசகர்கள் மத்தியில் மௌனம். மெதுவாக ஒரு முதிர்ந்த வாசகர் தன்னை இலக்கிய ஆர்வலனில்லை என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஜெயமோகனை ஏன் தமிழ்நாட்டுப் பல்கலைகள் ஆசிரியராகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என வினவினார். மடை திறந்தது; தொடர்ந்து சரமாரியாகக் கேள்விகள்.
அவரது விமர்சனக் கோட்பாடுகள் தொடங்கி, படைப்புகள் குறிந்தவை – மிகவும் வலுவான கேள்விகள்; உறுத்தாத குரல்களில்.
அப்பொழுதான் வாசகர்களின் வீச்சை நான் அறியத்தொடங்கினேன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. அரசியல், தனிநபர் குறித்த கேள்விகள் எவையும் கேட்கப்படவில்லை – முற்றிலும் கலை, இலக்கியம் சார்ந்தனவையே.
“இலக்கியம் சலனத்தைத்தான் உண்டுபண்ணுகின்றது – அது முன்னோக்கிச் செல்வதில்லை”
எனும் அவரது கருதுகோளையும், “மொழி மனிதனின் கருவி” என்ற என்னுடைய புரிதலின் மீதானதுமான கருத்துப் பறிமாறல்களில் அடியேனும். இரண்டு விடயங்களிலும் நாங்கள் ஒருமிக்கப்போவதில்லை என்று ஒருமித்து உணர்ந்துகொள்ள அவற்றிலிருந்து எளிதாக விலகவும் முடிந்தது.
(மொழி – கருவி பற்றி அவர் முன்வைத்த கருத்து தற்கால மொழியியல் கோட்பாடுகளைச் சார்ந்தது என்றும்; அவரது ஆழ்மனத்தில் அதில் குறையிருப்பதாகப் படுவதாகவும் சொன்னார்)
நான் தமிழகத்தில் எந்த இலக்கியக் கூட்டங்களுக்கும் அதிகம் போனதில்லை. (அதிக பட்சம் ஆறு அல்லது ஏழு பேருக்குமேல் தாண்டாதவைதான் என்னுடைய அனுபவங்கள்). எனினும் சிற்றிதழ்களில் படிக்கும் இலக்கியக்கூட்டம் பற்றிய விபரங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.
அதிசயமான உண்மை; ஒரு வடதுருவ மூலையில், மழை வலுத்த ஒரு ஞாயிறு மதியத்தில் ஒரு தீவிர எழுத்தாளர்/விமர்சகருடன் மதிய உணவு அருந்தவும், தொடர்ந்து அவரது உரையைக் கேட்டு விவாதிக்கவும் பதினைந்து கனேடிய டாலர்கள் கட்டணத்தில் அறுபது பேர்கள். – வாழும் தமிழென்னும் நம்பிக்கை என்னுள் இலையுதிர் காலத்தில் துளிர்க்கிறது.
இக்கூட்டத்திற்கு முதல் வாரம் அடியேன், ஜெயமோகனை திரு. முத்துலிங்கம் அவர்களது இல்லத்தில் சந்திக்க முடிந்தது. ஒரு முறையான நேர்காணலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அது – திசை திரும்பிய கருத்துச் சிதறல்களாக முடிந்தது.
சென்ற புதனன்று இரவு திரும்பவும் ஜெயமோகனைச் சந்திக்க முடிந்தது – இம்முறை என்னுடைய இல்லத்தில். என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பொறுமையாக பதிலிறுத்தார். (நான் எப்பொழுது நான்கு ஒலிநாடாக்களை அச்சிலேற்ற முடியும் என்று தெரியவில்லை).
அவருடைய பல பதில்களும் கருத்துக்களும் இன்றைய “பாஷன்”-சார்ந்த இலக்கியவாதிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இறுக்கம் அதிகமில்லாத அவரது நட்பு –
இலக்கியம்,
மரபு,
இவடிவம்,
காவியம்,
புனைகதைகள் விடுத்த இலக்கியங்கள்,
அறிவியல் புனைவுகள்
போன்று இன்றைய இலக்கியவாதிகளால் மறுக்கப்படும் அல்லது ஒதுக்கப்படும் பல விடயங்களைப் பற்றி எளிதாகக் கேள்விகள் கேட்கமுடிந்தது.
எந்த ஒரு போக்கினாலும் பாதிக்கப்படாமல் தன்னுடைய ஆளுமையை முற்றாகத் தனித்துவப்படுத்திச் செதுக்கிக் கொண்டுள்ளார் ஜெயமோகன்.
கிட்டத்தட்ட இரவு பதினொன்றரைக்கு – வற்றல் குழம்பு, சகிதமாக ஒரு நல்ல கும்பகோணம் சமையலை அவருக்கு அளித்து இல்லத்தையும் அவரது துணைவியாரையும் (எங்க ஊர்தாங்க – பட்டுக்கோட்டை) நினைவுபடுத்திவிட்டோம். ஜெயமோகன் வாங்கிவந்த மலர்க்கொத்து இன்னும் என் இல்லத்தின் நடுவில். ஒரு நல்ல நட்பின் தொடக்கம் என ஆழ்மனம் பரவசப்படுகின்றது.
Why Narcissists "Breadcrumb" You
Breadcrumbing is when a person gives someone just enough attention to "string the… twitter.com/i/web/status/1…2 days ago
The 2023 “QS World University Rankings” have been published. These contain rankings by subject matter, including ph… twitter.com/i/web/status/1…2 days ago
British Journal for the History of Philosophy Awards: Michael Kremer (Chicago) “Margaret MacDonald and Gilbert Ryle… twitter.com/i/web/status/1…5 days ago
Godfrey Cheshire of The New York Press prescient essay titled “The Death of Film, the Decay of Cinema.”
NYT Magazi… twitter.com/i/web/status/1…6 days ago
A.O. Scott conducts his own exit interview as he moves to a new post after more than two decades of reviewing films… twitter.com/i/web/status/1…6 days ago
Our Film Critic on Why He’s Done With the Movies
A.O. Scott discusses how American cinema has evolved over his 23… twitter.com/i/web/status/1…6 days ago
These Mushrooms Are Not for Eating
Anthropologist Anna Tsing’s book “The Mushroom at the End of the World,” which… twitter.com/i/web/status/1…6 days ago
Los Angeles’s Metro Is Using Classical Music as a Weapon
The music — described to me as “earplugs-at-a-concert lou… twitter.com/i/web/status/1…1 week ago
American Masters: Roberta Flack follows the music icon from a piano lounge through her rise to stardom. From “First… twitter.com/i/web/status/1…1 week ago
Writers Guild of America WGA Would Allow Artificial Intelligence in Scriptwriting, as Long as Writers Maintain Cred… twitter.com/i/web/status/1…1 week ago
World Poetry Day: What is the best use of poems in cinema?
Interstellar: Dylan Thomas – Do Not Go Gentle Into That… twitter.com/i/web/status/1…1 week ago
The End of ‘Life’ As You Know It
Society’s outdated ideas about what it means to be alive are obstructing progress… twitter.com/i/web/status/1…1 week ago
Vikesh Kapoor is the winner of the 2022 Daylight Photo Awards! Vikesh's project See You At Home is an ongoing perso… twitter.com/i/web/status/1…1 week ago
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde