Monthly Archives: ஒக்ரோபர் 2023

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை – முதலாமாண்டு விழா

வெர்னர் ஹெர்சாக் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் 11வது பிராயத்தில் தான் தன் முதன் முதல் சினிமாவைப் பார்க்கிறார். அதன் பிறகு பின் வரும் காலத்தில் உலகம் மெச்சும் இயக்குநர் ஆகிறார். குட்டிப் பயலாக இருக்கும்போதே மண்டைக்குள் விதைகளை ஊன்றிவிட வேண்டும்.

அந்த மாதிரி சொர்ணம் சங்கரபாண்டி Sornam Valavan Sankar சின்னஞ்சிறிய வயதிலேயே பள்ளிகளில் திருக்குறளின் முழுப் பதிப்பையும் குறள்நெறிக் கதைகளையும் அந்தந்த வகுப்பிற்கேற்ப அறிமுகம் செய்யும் நூல்களை இல்லந்தோறும், கிராமமெங்கும் ஊராட்சி ஊராட்சியாக ஒவ்வொரு ஒன்றியத்திலும் விலையில்லாமல் கொடுக்கிறார். தருவதுடன் நிற்காமல், முற்றோதல் போட்டிகளை முன்னெடுக்கிறார். குழந்தைகளின் வாழ்வில் மந்திரமாக, நினைவில் ஊறி நிற்கும் அறநெறிச்சாரமாக வள்ளுவரின் குறள்களை ஊன்றுகிறார்.

இந்த சந்திப்பு அதற்கானதல்ல. இது ஹார்வார்டு தமிழ் இருக்கையை உருவாக்கியதற்கான விழா. அதன் பின் பல்வேறு அமெரிக்க, கனடா பல்கலைக்கழகங்களில் வெறுமனே தமிழ்மொழியை மட்டும் பயிற்றுவிக்கும் தமிழ்த்துறையாக மட்டும் இயங்காமல், நாற்காலி போட்டு தீவிரமாக தமிழாக்கங்களை புதினங்களை உலகெங்கும் உள்ள அயநாடுகளில் பல்வேறு பாஷைகளுக்கும் ”தமிழ் இருக்கை” முயற்சிகளைத் தொடரும் விழா.

அமெரிக்க பல்கலை எங்கும், பேராசிரியர்கள் மூலம் பல ஆராய்ச்சி மாணவர்களை கொண்டு ஆய்வுகளும், கருத்தரங்குகளும், மொழிசார்ந்த நிகழ்வுகளும் நடத்தப்படும் தமிழ் இருக்கைகள் உருவாகிக் கொண்டே வருகின்றன (“துறைத்தலைவரையும், அவர்களின் கீழ் பணியாற்றும் பேராசிரியர்கள், துணைப்பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை கொண்டு தமிழில் இளநிலை, முதுகலை பட்டப்படிப்புகளும், ஆராய்ச்சி படிப்பும் வழங்கப்பட்டால் அதுவே தமிழ்த் துறையாகும்” – எழுத்தாளர் அ. முத்துலிங்கம்.)

ஹார்வார்டில் வெற்றிகரமாக தமிழுக்கு சிம்மாசனத்தை உருவாக்கி ஓராண்டு நிறைவடைந்ததைக் கொண்டாடும் எளிய விழா. மார்த்தா செல்பி (Martha Ann Selby) சிறப்புரை ஆற்றினார். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் இன்ன பிற மொழிகளுக்கும் தற்காலப் படைப்புகளையும் செவ்வியல் இலக்கியங்களையும் மொழிமாற்றம் செய்யும் முன்னெடுப்புகளைக் குறிப்பிட்டார். இரு மொழியிலும் ஆற்றல் பெற்றவர்களை மூன்று நான்கு மாதம் தங்கவைத்து மொழியாக்கம் செய்வது, ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு தமிழ் எழுத்தாளர்களை விருந்தினராக அழைத்து அவரின் நாவல்களைக் குவிமையமாக பார்வைக்கு உள்ளாக்கி விமர்சன விழாக்களை நடத்துவது, இலக்கியப் பயிற்சி முகாம் வழியாக மொழியாக்கங்களைப் பரவலாக பல எழுத்தாளர்களிடம் கொண்டு செல்வது, படைப்பாளிகள் பட்டறைகள் – என பல எண்ணங்களையும் திட்டங்களையும் அதற்கான வழிமுறைகளையும் தொலைநோக்கு பார்வையையும் பகிர்ந்தார்.

இந்த விழாவில் பழைய நண்பர்களான ஃபெட்னா சிவா, சொர்ணம். சங்கர் போன்றவர்களை மீண்டும் பார்க்க முடிந்தது. இது வரை வாசித்து மட்டுமே அறிந்திருந்த சிவகாமி ஐ.ஏ.எஸ். போன்றவர்களை சந்தித்து மனம் விட்டு பேச முடிந்தது. அடிக்கடி பார்க்கும் ப்ராவிடென்ஸ், ரோட் ஐலண்ட், கனெக்டிகட், மாஸாசூஸெட்ஸ் தமிழ் மக்கள் மன்றம், நியு இங்கிலாந்து தமிழ் சங்கம் போன்ற பாஸ்டன் வட்டார உறவுகளை புதுப்பிக்க முடிந்தது.

ஹார்வர்டு இருக்கைக்கு அஸ்திவாரம் போட்டு நடத்தி முடித்து அதன் பின்னும் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் மருத்துவர் ஜானகிராமன் அவர்களையும், மருத்துவர் சம்பந்தம் அவர்களையும், நேரில் வாழ்த்த முடிந்தது.

இனிய மாலைப் பொழுதில் விருந்தில் பங்கெடுக்க அழைப்பு விடுத்த பமீலாவிற்கு Saroj Bamiela Sankaran நன்றி!

மத்தகம் (ஜெயமோகனின் நாவல் அல்ல) – டிவி சீரிஸ்

ஹாலிவுட்டில் சமீபத்தில் எழுத்தாளர்கள் போராட்டம் நடைபெற்று சமாதானம் ஆகி முடிவுக்கு வந்தது. அதற்கு பல மூல காரணங்கள் இருந்தாலும், என் கவனத்தை ஈர்த்த காரணம்:

புஷ்கர் – காய்த்ரி” போன்று சுழல், வதந்தி போன்ற குறுந்தொடர்களைத் துவக்குபவர்கள், அந்தத் தொடரின் கடைசி பாகம் வரை, உறுதுணையாக கவனம் செலுத்தி, திரைக்கதைக்கு பக்கபலமாக நின்று; இறுதியாக வெளியிடப்படும் பிரதியிலும் — தங்களின் முத்திரை பங்களிப்பை நல்குவார்கள்.

இந்திய தொலைக்காட்சி தொடர்களுக்கு இந்த சிக்கல் இல்லை. எனினும் பல்வேறு குழப்பங்கள் இருக்கிறது.

துவக்கம் அமர்க்களமாக இருக்கும். அதன் பிறகு, அடுத்தடுத்து சில பளிச். பின்… எப்படி தொடர்வது என்று குழம்பி நிற்போர் உண்டு. – இது “பாதாள் லோக்” (Paatal Lok – அமேசான் ப்ரைம்)
எப்படி முடிப்பது என்று குழம்பி நிற்போர் உண்டு. – இது “ஹ்யுமன்” (Human – டிஸ்னி+ / ஹாட்ஸ்டார்)

எனினும், பெரும்பாலானவை முதல் பகுதியை ஒட்டியே செல்லும். சடாரென்று திசை திரும்பாது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு இயக்குநரால் கொணரப்பட்டாலும் அந்தத் தொடரிழை அறாது தொடரும்.

இதற்கு சிறந்த உதாரணம் – பஞ்சாயத் (Panchayat – அமேசான் ப்ரைம்)

உங்கள் மனதில் ”சேக்ரெட் கேம்ஸ்” (Sacred Games – நெட்ஃப்ளிக்ஸ்) நிழலாடுவதை உணர்கிறேன். அது எல்லாத் தொடருக்கும் பாட்டி. அதைக் கணக்கில் சேர்க்க வேண்டாம். அந்தத் தொடர் ஒரு தனித்துவமான முயற்சி. அது இந்திய மக்களை, பெருங்கூட்டத்தை, பார்வையாளர்களைச் சென்றடடைந்ததா என்பதில் எனக்கு பெரும் சந்தேகம் உண்டு. அந்தத் தொடருக்குப் பிறகு செட்ஃப்ளிக்ஸும் விழித்துக் கொண்டுவிட்டது.

இப்பொழுது நெட்ஃப்ளிக்ஸ் டிவியில் வரும் நெடுந்தொடர் எல்லாமே ஒரே வார்ப்புரு — பழைய சோற்றில் ஒரே மாதிரியான சோடையான வடகறி சம்பவங்களைக் கொண்டு காய்கறியாக நடிகர்களை மட்டும் மாற்றி மாற்றி எவ்விதச் சுவையும் ரசனையும் இல்லாமல் உவ்வேக் என ஓட வைக்கிறார்கள்.

ஆனால், அமேசான் ப்ரைம் ஒவ்வொரு சீரியலிலும் “அட… பேஷ்!” போட வைக்கிறார்கள். காதல், இந்துஸ்தானி, நிஜ நாடக ரியாலிடி டிவி என அரைத்த மாவாகும் அபாயம் இருந்தாலும் ”பேண்டிஷ் பண்டிட்ஸ்” (Bandish Bandits) எட்டிப் பார்த்த போதெல்லாம் புன்முறுவலையும் துருபத் ஆலாபனையையும் கவனிக்க வைத்தது.

இவ்வளவு பீடிகை எதற்கு?

பிரசாத் முருகேசன் இயக்கத்தில் அதர்வா, ‘குட்நைட்’ மணிகண்டன் நிகிலா விமல் நடித்து டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில், “மத்தகம்” – நெட்ஃப்ளிக்ஸ் தொடர் போன்று பல்லிளிக்கும் பித்தளையாகாமல், பிரைம் டிவி தொடர் போல் ஜொலிக்கிறது.

இதில் வரும் கதாபாத்திரங்களை ரொம்ப நாளாக பார்த்து வருகிறோம். கவுதம் வாசுதேவ் மேனன் படங்களில் வில்லன்களாக. பா. ரஞ்சித் படங்களில் கதாபாத்திரங்களாக. மேலும் வடசென்னை மண்ணின் மணம் கமழும் படங்களில் நாயகர்களாக. மத்தகம் தொடரில் இவ்வளவு அதிகமாக தேய்வழக்காகி விட்டவர்களை புத்தம்புதிய முலாம் பூசி ஒவ்வொருவருக்கும் முன் கதை சுருக்கம் கொடுத்து, பொருத்தமான முகவெட்டும் உடல்மொழியும் ஆடை அணிகலனும் போட்டு நம்ப வைக்கும் திருப்பங்களில் உபயோகிக்கிறார்கள்.

இளவரசு, வடிவுக்கரசி, டிடி திவ்யதர்ஷினி, நந்தினி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் என பல தெரிந்த முகங்கள். பொருந்தி நடிக்கிறார்கள். இனி இவர்களில் சிலரை, ‘மத்தக’த்தில் நடித்தாரே என்று சொல்லும் அளவு இயல்பாக வந்து போகிறார்கள்.

வெப் சீரீஸுக்கேயுரிய இழுவைகள் உண்டு. தமிழ் சினிமாவுக்கேயுரிய மாறா குணச்சித்திரங்கள் உண்டு. இருந்தாலும், இவர்களின் இருளுலுக்கிற்குள் எழுத்தின் வழியாக சென்றவர்கள் குறைவு. பா. ராகவனின் ஓரிரண்டு நாவல்களில் சற்றே உள்நுழையலாம். அதன் பிறகு இந்தத் தொடர்.

சரி… ‘விக்ரம் – வேதா’வை எதற்கு இதில் இழித்தேன்?
அந்தப் படத்தின் பாணியில் இரண்டு முக்கிய நபர்கள். இருரையும் நேர் எதிராக நிறுத்தி அவர்களுக்கிடையிலான திருடன் – போலீஸ் கதை அமைத்து, இருவருக்கும் சரியான போட்டியாக அமைத்தது இந்த ‘மத்தக’த்தை ரசிக்க வைக்கிறது.

நாயகர் காவல்துறை அதிகாரிக்கு மனைவி மேல் பெரிதாக பாசம் இல்லை. அல்லது, மனைவியாகி விட்டார் என்பதால் குடும்பத்தில் ஏற்படும் அசுவாரசியம் எனலாம்.
இன்னொரு பக்கம் வில்லனுக்கு காதலி மட்டுமே இலட்சியம். அவளுடன் அமைதியாக வாழ்வதிலே நாட்டம். உருகோ உருகு என்று பாசமழையைக் கொட்டுகிறார்.

இந்த மாதிரி முரண்கள் நிறைந்த நிழலுலகத் தொடர். பாரதிராஜா முடிவிற்குள் அகப்படாமல் இருப்பாராக என எல்லாம்வல்ல பாடிகாட் முனியை வேண்டுகிறேன்.

Mayanti Langer – Indian Cricket Commentators

இந்த உலகக் கோப்பையில் நான் ரசித்த முதல் அம்சம் மயந்தி லங்கர்.

வெறுமனே கவர்ச்சிக்கும், ஊறுகாயாகத் தொட்டுக் கொள்ள பெண் தொகுப்பாளினியும் இருந்த காலகட்டம் காணாமல் போயிருக்கிறது. இவர், “நீயா… நானா?” கோபிநாத் ரகம். தரமான கேள்விகள்; சுனில் கவாஸ்கார் போல் ஒயிலான மிடுக்கு; காதில் வருவதையும் எதிராளி பேசுவதையும் நேரமும் இடமும் அறிந்து முன்னெடுக்கிறார்.

நான் மந்திரா பேடி காலத்தவன். அவர் டி.டி.எல்.ஜே (தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே) படத்தில் நடித்த ஒரே குற்றத்திற்காக, கிரிக்கெட் போட்டிகளிலும் நடுவே வந்து போனார்.

அதற்கும் முந்தைய ஹிந்தி மட்டுமே அரசாண்ட பிஷன் சிங் பேடி, லாலா அமர்நாத், கிஷோர் பேமானி, சுஷில் ஜோஷி போன்றவர்கள் பேச்சைக் கேட்டால், குளக்கரையில் கரையும் காகங்களின் இனிமை புரியவரும். ஹிந்தி தெரிந்திருந்தால் அந்த மொழியை இப்படியாக உபயோகிக்கக் கூடாது என்பதும் தெரியவரும். டிவியின் ஒலியை மொத்தமாகக் குறைத்துவிட்டு, வெறுமனே காட்சியை மட்டும் பார்க்கலாம். அதாவது, இளையராஜா பாடலை ரேடியோவில் ஒலிக்க விடுங்கள். தொலைக்காட்சியில் ஒரு நாள் போட்டி ஓடும்.

ஆங்கில காமெண்டரி எப்பொழுதுமே தேவலாம். நரோத்தம் பூரி போன்றவர்கள் ஜமாய்ப்பார்கள். எனினும், பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய வர்ணனையாளர்களை எந்த இங்கிலீஷ்காரராலும் தொட இயலவில்லை. ரிச்சி பெனாட், டோனி கிரெக் – இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் சரிந்தால் கூட மென்மையாகச் சொல்வார்கள். ஸ்டீவ் வாக் வெளுத்து வாங்கினால் கூட குறைகளைச் சுட்டுவார்கள்.

அதன் பிறகு நிறைய பேர் வந்ததாகக் கேள்விப்பட்டேன். ஹர்ஷா போக்ளே, சித்து – இவர்கள் மைக்கை பிடித்த போது எனக்கு கிரிக்கெட் எட்டாத கனியாகி விட்டிருந்தது.

மீண்டும் ஐ.பி.எல். மூலமாக வந்த போது அறிமுகமான பெண் வர்ணனையாளர் மாயாந்தி. லட்சணமாக இருந்தார். இன்னொரு மந்திராவோ என மிரட்சியுடன் அலட்சியமாகக் கேட்டேன். சுனில் கவாஸ்கரின் ஒய்யாரமும் ரவி சாஸ்திரியின் ஆங்கிலப் புலமையும் கவனிக்க வைத்தது. ஆனால், அவரை பின் தொடர வைத்தது — அந்த ஆஸ்திரேலியாக்காரர்களின் வாக்கு வன்மை.

கொஞ்சம் தேடினால், என்னென்னவோ சாதித்து இருக்கிறார் மாயந்தி. எப்பொழுது இருந்தோ அளவளாவுகிறார் லங்கார். எதெதற்கோ நேரடி ஒலிபரப்பாளர் ஆக இருந்திருக்கிறார் லங்கர். கணவன் கூட புகழ் பெற்றவராம். நம்ம 83 ரோஜர் பின்னியின் மகனை மணமுடித்திருக்கிறார்.

சந்தோஷமாக இருந்தது. கிளப் ஆட்டம் போல் இறக்கிவிடப்பட்ட மசாலா பதார்த்தங்கள் இன்று லியோ சிங்கமாக முழுமுதல் திரையையும் காத்திரமாக ஆக்கிரமித்து விவரணையை விவரமாகத் தருவது – புதிய தலைமுறையின் சாதனை.