Tag Archives: Reviews

Solvanam Stories – 292nd Issue

சொல்வனம் இதழின் 292வது வெளியீட்டில் நிறைய கதைகள் வந்திருக்கின்றன.

ஒவ்வொன்றையும் பற்றி எனக்குத் தோன்றியவை:

  1. 1/64, நாராயண முதலி தெரு: சித்ரூபன் எழுதியிருக்கிறார்

அந்தக் கால நினைவுகள். சொல்வனம் என்றாலே நொஸ்டால்ஜியா என்னும் தேய்வழக்கிற்கு பொருத்தமான ஆக்கம். அவ்வப்போது, அந்தக் கால ‘ரெட்டை வால் குருவி’, ‘அழியாத கோலங்கள், ‘கோகிலா’ என்று பழைய படங்களைப் பார்ப்பேன். இதுவும் அது போன்ற ஒண்டுக் குடித்தன பதிவு. இங்கு சென்றிருக்கிறேன். பார்த்திருக்கிறேன். பழகியிருக்கிறேன். அனுபவித்திருக்கிறேன். அதை சிறப்பாக மலரும் நினைவுகள் கொடுக்கிறார்.

  1. இப்படியும் ஒரு நாள், ஒரு கதை: மோஹன் ஹரிஹரன் எழுதியிருக்கிறார்

இது “Everything Everywhere All at Once” போன்று எல்லாமுமாக இருக்கிறது.
அதி புனைவா… உண்டு
அறிவியல் புனைவா… உண்டுங்க அம்மா
நிஜ சம்பவங்கள்… உண்டு ஐயா
கட்டுரை தளத்தில் தகவல்கள்… அதுவும் உண்டு
இதையெல்லாம் கிண்டலடிக்கும் சுய எள்ளல்… எல்லாம் உண்டு

  1. ஒரு குழந்தையும் இரு உலகங்களும்: விக்னேஷ்

இது சிறப்பான ஆக்கம். மனதில் பதியும் சித்திரங்கள். பாத்திரப் படைப்பு. இருண்மையைக் கோரும் விவரிப்பு. நல்ல படைப்பு!
வாழ்த்துகள்!!

  1. Femino 16: சப்னாஸ் ஹாசிம்

இதை விமர்சித்தால் மாட்டிக் கொள்வீர்கள். முதலில் கதை புரிந்ததா என்று கேட்டுக் கொள்ளுங்கள்… அப்புறம் பெண்ணியம், அரசியல் சரிநிலை, இஸ்லாம் மதம் – வேண்டாம்… மாட்டிக்குவேன். விளங்கிக் கொண்டு வருகிறேன்.

நீங்கள் படித்துப் பார்த்து உங்களுக்குப் புரிந்ததை சொல்லுங்கள்

  1. சுத்தமும் ஐரீனும்: பிரதீப் நீலகண்டன்

கோகுலம் படித்த திருப்தி கிடைக்கிறது. குழந்தைகள் பகுதி துவங்கியிருப்பதை அறிவிக்க மறந்து விட்டார்கள் #Solvanam

  1. ஒரு தபலா, சாரங்கி, கே.கே மற்றும் நான்: தேஜூ சிவன்

தமிழ் தொலைக்காட்சிகளின் சீரியல் பார்த்த நிறைவைத் தரும் நெகிழ்வான உருக வைக்கும் கண்ணீர் காட்சிகள் நிறைந்த சிந்து பைரவி. ‘சுந்தரி’, ‘எதிர் நீச்சல்’, ‘மிஸ்டர் மனைவி’, ‘இனியா’, ‘கயல்’, ‘இலக்கியா’, ‘அன்பே வா’, ‘அருவி’ எல்லாம் பார்த்து கொலை வெறியில் உருவாகிய கதை.

  1. பனிக்காலத்தின் பகல்: ராஜேஷ் வைரபாண்டியன்

தேவலாம். முடிவை நோக்கி ஓடும் கதை. Everything Everywhere All at Once பார்த்ததன் மல்டிவெர்ஸ் விளைவு!

தமிழில் இவ்வளவு பேர் தீவிரமாக இலக்கியத்தை பேணுவது ஆரோக்கியமான விஷயம். பல்சுவையும் உண்டு. உட்பொதியும் கிடைக்கிறது.

உங்களுக்கு எந்தக் கதை கவர்ந்தது?

Review of Vikramadithyan Documentary | Vishnupuram Awards 2021

Vikramadithyan Documentary | Vishnupuram Awards 2021: ‘வீடும் வீதிகளும்’, 2021ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களைப் பற்றிய ஆவணப்படம் பார்த்தேன்.

சில எண்ணங்கள்:

1. துணையெழுத்து இல்லாமை: தமிழ்க் கவிஞரைப் பற்றிய அறிமுகப் படத்தில் வரும் உரையாடலை, உரையாடற் மொழியிலோ பிற வேற்று மொழியிலோ எழுத்து வடிவில் காட்டப்படும் உரை; ஆங்கிலத்தில் துணையுரை இல்லாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

2. அரை மணி நேரத்தில் முடிக்க வேண்டும் என்று அவசர கதியில் மிச்சம் மீதியைப் போட்டு செய்யும் வடகறி கொத்து பரோட்டா போல் வந்திருக்கிறது. வடகறி சுவையாக இருக்கும். ஆனால், இங்கே சாஸ்திரோப்தமான சூப், சிற்றுண்டி பலகாரம், தலைவாழை இலை சாப்பாடு, பீடா எல்லாம் எதிர்பார்க்கிறேன்.

3. இந்தப் படங்கள் எவரைக் குறிவைத்து எடுக்கப்படுகின்றன?

அ) தமிழ்க் கவிஞர்களை அதிகம் அறியாத தமிழ் தெரிந்தோர்

ஆ) விக்கிரமாதித்தனை நன்கு அறிந்தோர்

இ) தமிழ் இலக்கியத்தில் நிறைய பரிச்சயம் இருந்தாலும் விக்கிரமாதித்தனை அறியாதோர்

ஈ) தமிழ் புரிந்தாலும் எழுத/வாசிக்கத் தெரியாத தலைமுறை

உ) விஷ்ணுபுரம் வாசகர் வட்டம்

என்னை (இ) பிரிவில் வைத்திருக்கிறேன். என் மனைவியை (அ) பிரிவில் வைக்கிறேன். எங்கள் குழந்தைகளை (ஈ) பிரிவில் வைக்கலாம். இந்த மூவருக்குமே இந்தப் படம் எதையும் கொண்டு சேர்க்கவில்லை.

4. நான் எதை எதிர்பார்த்தேன் – இந்தப் படத்தில்?

i) தமிழ்க் கவிஞர்கள் – சுருக்கமான பாரம்பரியம்; எந்த இடத்தில் விக்கிரமாதித்தன் வருகிறார்?

ii) விக்கிரமாதித்தன் தோற்றமும் வளர்ச்சியும் – எவ்வாறு அந்தக் கவியாளுமை உருவானது?

iii) சமகால கவிஞர்களை எவ்வாறு அவர் ஊடுருவுகிறார்? அவரின் நெடிய இலக்கிய பயணத்தில் என்னென்ன மாற்றங்கள் தோன்றின?

iv) கவிஞரை வாசித்ததால் அவரவருக்கு என்ன கிடைத்தது? போகன் சங்கர், லஷ்மி மணிவண்ணன், வண்ணதாசன் – சுய அனுபவம் / நேர்மையான தன்மை நிலைப் பார்வை / அகப் பகிர்வு – இது இல்லாமல் பீடத்தில் இருந்து கொண்டு சொற்பொழிவாற்றுவது ‘ராஜாதி ராஜ ராஜ கவிராய ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர விக்கிரமாதித்தாய நமஹ!’ என அலறுகிறது.

5. அறிமுகமாக அந்த வீணை இசை மெல்லிய அபாரம். படம் முழுக்கவே சத்தமாக, “நான் இருக்கிறேன்!” என்று கத்தாமல், படத்தோடு இயைபான இசை.

6. ஏன் பேசுபவர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் போடுகிறார்கள்? பேசுபவர் யார், எங்கிருக்கிறார், என்ன எழுதியிருக்கிறார், ஏன் பேசத் தகுதியானவர் என்றெல்லாம் போட வேண்டும்.

7. கவிஞரைக் குறித்த ஜெயமோகனின் அறிமுகம் முகஞ்சுளிக்க வைத்தது. இன்னாரைப் பாராட்டி சீராட்டும் தருணத்தில் “சட்டையில்லாமல் வந்தார்! சண்டைக்காரராக முன்வந்தார்!!” என்று சொல்லிவிட்டு, “நான் எழுதியதுதான் அவரைப் பற்றிய முதல் கட்டுரை!” என்று ஜம்பமும் தட்டிக் கொள்வது உவ்வேக். கொஞ்சம் தன்னடக்கத்தோடு உரையாடியிருக்கலாம்.

8. இறுதியில் போடப்படும் பெயர் பட்டியல் – அகர வரிசைப்படி இருக்க வேண்டும். இது ஏதோ இலக்கிய அந்தஸ்து பீடம் போல் வயதை வைத்து போடப்பட்டிருக்கிறது.

9. ஒரே ஒரு பெண்ணாக சுபஸ்ரீ வந்து போகிறார். நன்றாகப் பேசினார்.

10. விக்கிரமாதித்தன் உரையாடலை இன்னும் தீவிரமாக ஆழமாக நடத்தியிருக்க வேண்டும். குடியோடு என்றால் குடியோடு. ஏழெட்டு நாள்கள் என்றால் அத்தனை பொறுமையோடு. அதன் பின் கத்திரி போட்டு ஆங்காங்கே கிடைத்த நறுக்குகளைக் கொண்டு அவரின் பேச்சு வந்திருக்க வேண்டும். இப்பொழுது ஏதோ தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த்தை வைத்து பொம்மை கோச்சடையான் எடுத்த மாதிரி தீட்டியிருக்கிறார்கள்.

Climbers by Helen DeWitt

”உங்களுக்கு பொருட்டில்லாததை விற்கிறீர்கள். தேவடியாத்தனம் செய்யும்போது அது உடம்பு. பதிப்பிக்கும்போது, அது மூளை. மூளையை வைத்துதானே புத்தகம் எழுதுகிறோம்…”

ஆஃபீஸ் ஸ்பேஸ் (Office Space) படம் பார்த்திருப்பீர்கள். அந்தப் படத்தை இன்னும் கொஞ்சம் இலக்கியத்தரமாக எழுதினால், வாசகனை கொஞ்சம் யோசிக்க வைக்குமாறு புத்தகமாக உருவாக்கினால் எப்படி இருக்கும்? ஹெலன் டூயிவிட் எழுதிய மின்னல் தடிகள் (Lightning Rods) போல் இருக்கும். அந்தப் புத்தகம் குறித்த அறிமுக விமர்சனங்கள்தான் எனக்கு ஹெலன் என்னும் எழுத்தாளரை அறிமுகம் செய்தது.

அந்தப் புத்தகத்தின் கதை என்ன?

சந்தையிலே செல்லுபடியாகாத விற்பனையாளர் அறிமுகம் ஆகிறான். எதையும் சாமர்த்தியமாகப் பேசி ஒழுங்காக விற்கத் தெரியாதவன். வெட்டிப் பேச்சும் அழையா ஆலோசனைகளுமாக காலத்தைப் போக்குபவன். அனைத்து நிறுவனங்களிலும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக மனிதவள மேலாளர்கள் கெடுபிடியான நடைமுறைகளை வைத்திருக்கிறார்கள். அதற்கு மாற்றாக புத்தம்புதிய சாதனத்தை அறிமுகம் செய்கிறான். அலுவலில், பாலியல் தொல்லைகளை அதிகரிக்கும் சாதனம் – அனைத்து கழிப்பறைகளிலும் பொருத்தி விட வேண்டும். இந்தப் பொருளை நிறுவி விட்டால் உடன் பணிபுரியும் பெண்களைப் புணரலாம். யார் புணர்கிறார்கள் என்று தெரியாது. அலுவல் அழுத்தங்களும் அடக்கி வைத்த ஆசைகளும் இந்த மாதிரி சாதனத்தை நிறுவுவதால் நீங்கும் என்று அந்த விற்பனையாளன் அமோகமாக சந்தையில் சொல்லி, ஜாம்ஜாமென்று பணம் புரட்டுகிறான்.

இந்தக் கதையின் நாயகன் குறித்த பேட்டியில் ஹெலன் இவ்வாறு சொல்கிறார்:

“நான் பெண்ணாக இருந்தாலும், ஆண் பார்வையில் இந்தக் கதையை எழுதினேன். சொல்லப் போனால் பெண்களை முக்கிய பாத்திரமாக வைத்து எழுதுவதை விட ஆண்களை கதாநாயகனாகப் போடுவது எளிதாகவே இருக்கிறது.

என்னுடைய சின்ன வயதில் கை பாட்டுக்கு தானாக எதையாவது வரையும். ஆனால், பெண்களைத்தான் வரைய முடியும். என்னால் பசங்களை வரையவே முடியவில்லை. அந்த உருமாற்றம் எப்பொழுது நடந்தது என்று தெரியவில்லை. ஆண்களுடன் பழகும்போது கவனித்தேன்; அவர்களால் தங்களைப் பற்றியே பேச முடிந்தது. ஒரு ஆண் கதாபத்திரத்திற்குள் சென்று, அந்த பாத்திரம் மாதிரி யோசிக்க வேண்டுமானால், ரொம்ப சிரமப் பட வேண்டாம். அந்த ’ஆணுக்கு’ ஒருவிதமான மனப்பிடிப்பைக் கொடுக்க வேண்டும். அந்தப் பிடிப்பின் மேற்சென்று மிகைவிருப்பமாக்க வேண்டும். அது எப்படி அவனை ஆட்டிப்படைக்கிறது என்று எழுதினால் போதுமானது.

பெண்களை கதாபாத்திரங்களாக்குவது அவ்வளவு நேர்ப்படையானதல்ல. அவர்கள், அவ்வளவு சீக்கிரம் உணர்வு வசம் சிக்கி மாற்ற இயலா எண்ணத்திற்குள் சுழல்வதில்லை.

மின்னல் தடிகள் (Lightning Rods) நாவல் செக்ஸைப் பற்றியது. சாப்பிடும்போது கூட செக்ஸை குறித்து சகஜமாகப் பேச ஆடவர்களால் முடிகிறது. எந்த ஆணுடன் பேசினாலும் சரி… அவர்கள் இந்த மாதிரி ஏதாவது ஒன்றை உதிர்க்கிறார்கள்: ‘பருத்த மார்புகள் எல்லாருக்கும் பிடிக்கும்!’ உடனே எனக்கு நூறு கேள்விகள் தோன்றும். உனக்கு எப்படி இது தெரியும்? உனக்கு உன்னைப் பற்றித் தெரியும்… எல்லா ஆண்களும் இப்படித்தான் என்று எப்படி உன்னால் சொல்ல முடிகிறது? கருத்துக்கணிப்பு எடுத்தாயா? இதே ரீதியில்தான் என்னுடைய நாயகனும் இருக்கிறான். நம்பிக்கையாகப் பேசுவான். அவனுடைய இச்சையை வைத்து அனைவரைக் குறித்தும் அடித்துப் பேசுகிறான்.

இதே மாதிரி மக்களை பதிப்புத்துறையிலும் தொடர்ச்சியாக சந்தித்தேன். புத்தக வெளியீட்டிற்காக அவர்களுடன் உரையாடும்போது… மன்னிக்கவும்… பின்னாலிருந்து முகந்தெரியாத எவனோ ஒருத்தன் புணருவது போல் உணர்ந்தேன். தேவையில்லாத அறிவுரைகளைக் கேட்டு காது புளித்துப் போனபோது, இந்த நாவல் உருவானது.”

சரி… இப்பொழுது நவம்பர் ஹார்ப்பர்ஸ் இதழில் வெளியான ஏறுபவர்கள் (Climbers) கதைக்கே வந்து விடுவோம்.

ஹார்பர்ஸ் பத்திரிகையில் ஹெலன் (Helen DeWitt) எழுதிய ஏறுபவர்கள் (Climbers) கதை இங்கே கிடைக்கிறது: http://harpers.org/archive/2014/11/climbers/ (சந்தாதாரர்களுக்கு மட்டும் படிக்க இயலும்)

கதையில் நான்கு கதாபாத்திரங்கள். முதலாவதாக நமக்கு கில் அறிமுகமாகிறான். துடிப்பானவன். சுவாரசியமாகப் பேசுகிறான். நியு யார்க்கில் வசிக்கிறான். நிறைய படம் பார்த்து, புத்தகம் படித்து, இசை கேட்டு, கணினி மேய்ந்து, விளையாட்டுகள் களித்து வாழ்பவன். அவனுடைய உபசரிப்பு விழாவில் நமக்கு சக எழுத்தாளினியான ரேச்சல் அறிமுகமாகிறாள். பரபரப்பான கல்யாண ரிசப்ஷனில் தனியே போய் பஃபே சாப்பாடு எடுத்துக் கொள்வது போல், கில் வசிக்கும் வீட்டில் நடக்கும் இலக்கிய கூட்டத்தின் நடுவே விடப்பட்டிருக்கிறாள்.

இரண்டாவதாக சிஸ்ஸி தோன்றுகிறாள். (நீங்கள் என்னை முறைப்பது தெரிகிறது. ரேச்சல் என்பவள் இரண்டாம் எண்ணுக்குரியவள் அல்லவா என்று மறுமொழியில் கேட்காதீர்கள். பெயரில் என்ன இருக்கிறது? சிஸ்ஸியாக இருந்தால் என்ன… ரேச்சல் ஆக இருந்தால் என்ன போச்சு… அல்லது இருவருமே ஒருவர்தான் என்றாலும் உங்களுக்கு என்ன? நீங்கள் தொடருங்கள்) அவள் ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரத்தில் பீட்டர் டிஜிக்ஸ்டிரா என்னும் எழுத்தாளரை அகஸ்மாத்தாக சந்திக்கிறார். இந்த எழுத்தாளர்தான் கதையின் மையக் கரு. இவரைச் சுற்றித்தான் எல்லாம் நகர்கிறது.

எழுத்தாளர் என்று ஒருவர் இருந்தால் நாவல் என்று ஒன்று உருவாகும். நாவல் என்று ஒன்று உருவானால், அதைப் பதிப்பிக்க பதிப்பாளர் என்று ஒருவர் வேண்டும். பதிப்பாளரிடம் பத்திரமாக எழுத்தாளரையும், அவ்வளவு பத்திரமில்லாமல் அவருடைய நாவலையும் கொண்டு சேர்க்க ஏஜெண்ட் என்று ஒருவர் வேண்டும். அவர் ரால்ஃப்.

கால்ஃப் ஆடுவது போல் நல்ல பெயர் ரால்ஃப். பெயருக்கேற்ப நல்ல ஆடைகளையும், கவின்மிகு பழரசங்களையும், திடகாத்திரமான கண்கவர் வழக்கங்களையும், கொண்டவன். கொஞ்சம் போல் படாடோபம். நேர்த்தியான விற்பனையாளனைப் போல் எழுத்துக்களை அற்புதமாக பிரபலமாக்குபவன். சன்னமான எழுத்துக்களையும் கோட்டையில் கோலோச்ச வைப்பவன். அவனுடைய கைபட்டு நூல் வெளியானால், ஆப்பிரிக்காவில் இருந்து எபோலா பரவுவது போல் உலகெங்கும் அந்தப் புத்தகம் நோபல் பரிசுக்காக பேசப்படும்.

இந்த நாலு பேருக்கு நடுவில் ராபர்ட்டோ பொலானோ (Roberto Bolaño) எழுதிய 2666 உருளுகிறது. எழுத்தாளர் பீட்டர் டிஜிக்ஸ்டிராவைப் அசப்பில் பார்த்தால் ராபர்ட்டோ பொலானோ கூட நினைவிற்கு வரலாம். எழுத்தாளர் பீட்டருக்கு சீக்கிரம் பணம் புரட்ட வேண்டும். சிகரெட் பிடிக்க பணம் வேண்டும். நாலு சுவற்றுக்குள் அடைந்து கிடக்க வாடகைப் பணம் கட்ட வேண்டும். காலாற நடக்க பணம் வேண்டும். அதற்காகவாது எழுத வேண்டும். பணத்திற்காக எழுத வேண்டும்.

ராபர்ட்டோ பொலானோவின் 2666 குறித்து இரண்டு விதமான விமர்சனங்களை ரேச்சலும் சிஸ்ஸியும் சொல்கிறார்கள். ஒருவரால் இரண்டு பக்கத்திற்கு மேல் படிக்க முடியவில்லை. ’இந்த வாழ்க்கையில் ஒரே ஒரு புத்தகம் மட்டும் படித்தால் போதும் என்றால் அது ரொபார்ட்டோ போலானோ எழுதிய 2666 மட்டும்தான்’ என்னும் வகையில், இன்னொருவரால் 2666ன் சில பகுதிகளைப் படித்தாலே ஜென்ம சாபல்யம் கிட்டுகிறது.

பொலானோ எழுதிய பிரும்மராட்சஸ துப்பாறிவாளர்கள் (The Savage Detectives) நாவலை நீங்கள் படித்ததுண்டா? அதில் நாற்பதுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் பார்வையில் கதை விரியும். புலவர்களுடன் உரையாடல், புலமைக் காய்ச்சல்கள், கவிஞர்களின் வாழ்விலே ஒரு நாள் என்று கலவையாகச் சொல்லப்பட்டிருக்கும். இந்த ஏறுபவர்கள் (Climbers) கதையும் இவ்வாறே நாலு எழுத்தாளர்களின் வாழ்வியல் சித்திரங்களுடன், பேச்சுக்களுடனும், விமர்சனங்களுடனும், எழுதவியலா தருணங்களின் தவிப்புகளுமாக விரிகிறது.

ஏறுபவர்கள் (Climbers) கதையில் – நிஜ எழுத்தாளர் ராபர்ட்டோ பொலானோ போல் உடனடியாக பணம் தேவைப்படும் கதாநாயகனாக பீட்டர் டிஜிக்ஸ்டிரா; ஆனால் ஏறுபவர்கள் (Climbers) கதையோ பொலானோவின் தி சாவேஜ் டிடெக்டிவ்ஸ் நாவலைப் போல் கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது.

எழுத்தாளர்களைப் பற்றி எழுதுவது சிக்கலானது. இவரைப் போல் இருக்கிறது, அவரைத்தான் குறிப்பிடுகிறார் என்று குற்றச்சாட்டுகள் எழாமல் பொதுப்படையாக, அதே சமயம் சம்பவங்களும் + விஷயங்களும் கலந்து எழுத வேண்டும். குறியீடுகள் சொல்லப் போய், கதையே புரியாமலும் போக விடாமல், நேரடியாகவும் பூடகமாகவும் புரிய வைக்க வேண்டும். எழுத்தாளர் என்றாலே இப்படித்தான் இருப்பார் என்னும் அரைத்த + புளித்த மாவான வார்ப்புருவிற்குள் சிக்காமல் கதை வளர வேண்டும். அவற்றை இந்த ஏறுபவர்கள் (Climbers) கதையில் ஹெலன் இயல்பாகக் கொண்டு வருகிறார்.

அந்த நாலு ஏறுபவர்களையும் கொஞ்சம் பார்ப்போம்.

பீட்டர் டிஜிக்ஸ்டிரா மனநல மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டவர். சிறிது சரிந்தாலும், மீண்டும் மனநல காப்பகத்திற்கே அனுப்பி வைக்கப்படுவார். அவருக்கு ஆங்கிலம் இரண்டாம் மொழி. தாய்மொழியில் எழுதி பணம் சம்பாதிக்க முடியவில்லை. ஷிவாஸ் ரீகல் வேண்டாம். நல்ல பியர் கூட வாய்க்கப் பெறுவதில்லை. எனவே, ஆங்கிலத்தில் எழுத முயல்கிறார். முதலில் வார்த்தைகள்; தேர்ந்தெடுத்த வார்த்தைகளாகப் பொறுக்க வேண்டும். வார்த்தைகள் கிடைத்த பின் வாக்கியங்கள். வாக்கியங்களை எப்பொழுது நேரம் கிடைக்குமோ, அப்பொழுது மனிதர்களிடம் ஏற்றிவிடப் பார்க்கும் எழுத்தாளர்.

கில் ஒரளவு புகழடைந்துவிட்ட எழுத்தாளன். விளக்கு வைப்பதற்குள் வோட்கா ஏற்றிக் கொள்பவன். இலக்கியவாதி பீட்டர் டிஜிக்ஸ்டிராவிற்கு மாடியறையைக் கொடுப்பதால் சமூக அந்தஸ்திலும் ஏற நினைப்பவன். உண்மையை எழுத்தில் ஏற்ற எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தேடியலைபவன்.

ரேச்சல் புத்தகம் எழுதி அச்சில் கண்டவள். பீட்டர் டிஜிக்ஸ்டிராவை ஏற்றிவிடத் துடிப்பவள். வான் கோ வரைந்த ஓவியம் பிடிக்கும் என்பதால் வான் கோ வரைந்த ஊருக்கே சென்று, அவருடைய வீட்டினுள்ளே வசித்துப் பார்க்க விழையும் ஜாதி. எழுத்தாளருடன் அளவளாவினால், என்ன சங்கதி கிடைக்கும் என்று அளந்து பார்க்காமல், எழுத்தாளனின் எழுத்தை அடித்தல் திருத்தலோடு, முதல் பிரதியை வாசிக்க விழையும் ஜாதி. எழுத்தாளரின் ஒரு கதை பிடித்துப் போனதால், மொழி புரியாத அயல்நாட்டுப் புத்தகங்களை அள்ளிக் கொண்டு வீட்டின் புத்தக அலமாரியில் கொலு வைத்து அழகு பார்க்கும் ஜாதி. ஒரேயொரு புரிதல் கலந்த ஆற்றுப்படுத்தும் சிணுங்கலில் எவரையும் ஆசுவாசப்படுத்தி தரைக்கு இறக்கும் ஜாதி.

இறுதியாக முகவர் ரால்ஃப். பாரிஸ் என்றால் சாக்லேட் காதல்; லத்தீன் அமெரிக்கா என்றால் மாந்திரீகம் தூவிய எதார்த்தம்; ஜப்பான் என்றால் தனிமைத் துயரின் விரக்தி; என்ற பாசறையில் டட்ச்சு மொழிக்கான இலக்கணமாக எழுத்தாளர் பீட்டர் டிஜிக்ஸ்டிராவை கணிப்பவர். அமெரிக்காவின் அமெரிக்கர்களின் எடுத்துக்காட்டாக கதையில் வருகிறார். கண் துஞ்சாமல், கருமமே கண்ணென இலக்கியத்தை செய்து முடிப்பவர். இவர் போன்றோர் ஏவுவதனாலேயே, எழுத்தாளர்கள் தங்கள் காவியங்களுக்கு இறுதி வடிவைத் தருகிறார்கள்; விமர்சகர்கள் பயபக்தியோடு அந்த இலக்கியபீடத்தை அணுகுகிறார்கள்; நூல் வெளியீட்டாளர்களும் லாபம் சம்பாதித்து பங்குச்சந்தையில் ஏறுகிறார்கள்.

கதையின் அமைப்பு மிகவும் சிக்கலான அமைப்பு. சிறுகதையில் இத்தனை கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு நாட்டில் உலாவுகிறது. முடிவிற்கு வெகு அருகில் கதை துவங்குகிறது. அந்த முடிவிற்கு சற்றே முன்பாக கதை முடிகிறது. முன்னும் பின்னுமாக கதை உலாவினாலும் குலுக்கிக் குலுக்கிக் கதையை விட்டு தூரப் போடாமல், சுவாரசியமாக முன்னேறுகிறது. அந்த அமைப்பிற்காகவே இன்னொரு முறை படித்தேன். மீண்டும் படிக்கும்போதுதான், வார்த்தைகளின் தேர்வும், கதாபத்திரங்களின் குணாதிசய அறிமுகங்களும், சொல்லாட்சியும் பிடிபட்டது. அந்தச் சுவைக்காக மீண்டும் மூன்றாம் முறை படித்தேன். அப்பொழுதுதான் மற்ற புத்தகங்களின் விமர்சனமும், வேற்று மொழி கற்றுக் கொள்வதை சொல்லும் நேர்த்தியும், சுற்றுலா தலங்களை விவரிக்கும் வர்ணனையும் ஈர்த்தது. அதற்காக இன்னொரு முறை படிக்க வேண்டும்.

http://en.wikipedia.org/wiki/Theodor_W._Adorno

சித்ரலஹரி (தெலுகுப் படம்)

  • சாய் தரம் தேஜ். சிரஞ்சீவி குடும்பத்தவர். சிரஞ்சீவியின் சகோதரியான விஜய் துர்காவின் புதல்வர். நன்றாகவே நடிக்கிறார்.
  • இன்னொரு பக்கம் கண்ணுக்கு பசுமையான கல்யாணி ப்ரியதர்ஷன். எத்தனை படம் பார்த்தாலும் இன்னும் டெல்லி பக்கத்து கல்லூரியின் மாணவிகளை நினவுறுத்தும் நிதானமும் குளிர்ச்சியும் அகங்காரமும் கலந்த பாந்தம். அம்மா லிஸியைக் கூட இதே போல் கண் குளிர பார்த்த நினைப்பு.
  • துணை நடிகர்கள் பிரும்மாண்டமாக இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அற்புதமான கதாபாத்திரங்களாக உலவுகிறார்கள். நன்றாக சித்தரிக்கப்பட்டு, சிறப்பாக பொருந்தியிருக்கிறார்கள்.
  • மெகாதீரா + மொம்மரில்லு “சுனில்” ஆகட்டும்; தூகுடு + ஆலா வைந்தபுரமுலு + ஜானு “வெண்ணிலா கிஷோர்” ஆகட்டும்; அத்தடு “போஸனி கிருஷ்ண முரளி” ஆகட்டும்; கஸ்துரிபா காந்தி “ரோஹினி ஹட்டாங்கடி” ஆகட்டும்; ஈசன் “ராவ் ரமேஷ்” ஆகட்டும் – ஒவ்வொன்றுக்கும் பொறுக்கி எடுத்துப் போட்டு இருக்கிறார்கள்.
  • இசை டி.எஸ்.பி. – தேவி ஸ்ரீபிரசாத். ஆனால், ஆச்சரியம். கத்தல் இல்லை; அலறல் இல்லை. மென்மையாகவே கேட்கும்படி இருக்கிறது.
  • இப்பொழுது பார்க்கும் படங்களில் எல்லாம் எப்படியோ மெட்ரோ வருகிறது. கதையோடு ஒன்றி பயணிக்கிறது. “ஞான் ப்ரகாஷன்” இப்பொழுதுதான் பார்த்தேன். அப்புறம் “விக்ருதி” படத்தின் மூலஸ்தானத்திலும்… காதலிலும் ட்ரெயின்; சோகத்திலும் ரயில்; பிரிவோம்; சந்திப்போம் எனச் சொல்வதற்கு வசதியான தொடர்வண்டி.
  • படத்தில் கல்யாணிக்கு அப்புறம் பிடித்தது வசனங்கள்:
  • ஸ்விக்கியில் சொன்னால் வரிசைப்படி வீட்டில் உட்கார்ந்தபடி எல்லாமும் வரும் என்பதைப் போல் எல்லாவற்றையும் எதிர்பார்க்காதே. வெற்றி நேரம் எடுக்கும்!
  • என் வாழ்க்கையில் நான்கு திசைகளிலும் விடியல் காலத்தில் சூரியனின் திசையில் ஒளி பிரகாசிக்கிறது. ஏனென்றால் நான் இருளின் முகவரி.
  • வாழ்வது என்பது பிழைப்பது என்று அர்த்தமல்ல. வாழ்க்கையை விட அதிகமாக நேசித்த ஒரு பெண்ணுடன் இருப்பது.
  • நீங்கள் விரும்பும் போது உங்களைப் பார்ப்பதை விட, உங்களைப் பார்க்கும்போது உங்களை நன்றாக உணர வைக்கும் ஒரே விஷயம் காதல்.
  • உங்கள் தவறை அறிந்து கொள்வதை விட பெரிய சாதனை எதுவுமில்லை
  • ஒரு காலத்தில், நூறு பேர் இருந்தால், சீனு என்று அழைத்தால், இருபது பேர் திரும்பிப் பார்ப்பார்கள். இப்போது நாம் பொறியியலாளர் (எஞ்சினியர்) என்று அழைக்கும்போது, ​​ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் திரும்பிப் பார்க்கிறோம்.
  • அம்மா, அப்பா, பணம், சாதி, மதம் என்று பிரியக் கூடியதற்கு காரணங்களை யோசியாமல் ஒரு முறை இருவரும் காதலிப்போம். நீங்களே அதில் ஈடுபடுங்கள். துன்பத்தின் மகிழ்ச்சி உங்கள் கைகளில் உள்ளது.
  • (தோழியிடம் காதலைச் சொல்லாமல் சொல்வது) பவன் கல்யாண் படத்தில் அவரால் தன் மனதில் உள்ள உண்மையான உணர்வுகளை ஏன் சொல்ல முடியவில்லை என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, ஆனால் அது விரைவில் வருமா என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
  • நான் உங்களை தொந்தரவு செய்ய விடாதே.
  • காதலி: நான் செல்கிறேன். காதலன்: நீங்கள் போய்விட்டீர்கள்.
  • அவர் கலாம் அல்ல என்று கலாம் நினைத்தால், அவரும் ஒரு சாதாரண மனிதர். சோற்றுக்கனவு பிழைப்போடு கலாம் போல் ஆக கனவு காண முடியாது.
  • வாழ்வது என்பது பிழைப்பாக இருக்கக்கூடாது.
  • தோல்வியடைவது ஒரு அதிர்ஷ்டம். தோல்வி சிறந்த ஆசிரியர். தோல்வி என்பது நமக்குத் தெரிந்த விஷயம். தோல்வி என்பது எதையும் கொண்டு வரத் துணிந்த ஒரே விஷயம்.
  • வெற்றியாளர் வெற்றிபெறும் போதெல்லாம் அது தலைவலி. தோல்வியுற்றவர் வெற்றி பெறும்போது, ​​அது வரலாறு.

கனலி – சில எண்ணங்கள்

சுனீல் கிருஷ்ணன் பதிவில் (சொல்வனம் ரொபர்டோ போலான்யோ இதழுக்கு வாழ்த்து | ஒரு துளி பிரபஞ்சம் …) இந்தப் பட்டியல் கண்ணைக் கவர்ந்தது:

 தமிழினி, கனலி, வல்லினம், யாவரும், உயிர்மை,  வாசகசாலை என சொல்வனத்திற்கு வெகுகாலம் பின்னர் உருவாகி வந்த எல்லா இதழ்களுக்கும் ஃபேஸ்புக்கில் / சமூக ஊடகத்தில் வலுவான தளம் உள்ளது.

இந்த இதழ்கள் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு என் எண்ணங்களைப் பகிர உத்தேசம். முதலில் கலை இலக்கிய இணையதளம் | கனலி

உரிமைத்துறப்பு

இந்தப் பதிவின் நோக்கங்கள்:

  1. என்னை எரிச்சலூட்டும் விஷயங்களைப் பகிர்வது
  2. வசதிக்குறைவான விஷயங்களை சுட்டுவது
  3. பிற தளங்களில் இருக்கும் நடைமுறையை அனுசரிக்க வேண்டுவது
  4. இந்தப் பதிவு கனலி வலைத்தளத்திற்கான பரிந்துரைகள் மட்டுமே என்றாலும் சொல்வனம் உட்பட அனைத்து வலைத்தளங்களுக்கும் சுட்டுவது

பொறுப்புத் துறப்பு

  • சொல்வனம் போன்ற தளங்களிலும் இதே போல் பல குறைகள் இருக்கின்றன. அவற்றில் சில்வற்றையாவது பொதுவெளியில் உரையாடலுக்கு நேரம் கிடைக்கும்போது முன்வைக்கிறேன்.
  • சொல்வனம் போன்ற தளங்களில் இருக்கும் குறைகளையும், அந்தத் தளங்களை மேம்படுத்தும் ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். வெப் அட்மின் ஆக இருப்பதால், நம் குறைகள், நமக்கேத் தெரியாமல் போகின்றன.
  • இந்தப் பதிவில், கனலி தளைத்தில் வெளியான மொழியாக்கத்தின் தரம், புனைவுகளின் முக்கியத்துவம், கட்டுரைகளின் செறிவு போன்றவற்றை கவனிக்கவில்லை. அதற்கு இன்னொரு தடவை அனைத்து விஷயங்களையும் மீண்டும் கனலியில் வாசித்து விட்டு வருகிறேன்.

மேம்படுத்த வேண்டியவை

1. வலது பக்க மவுஸ் பொத்தான் இயங்கவில்லை

ரைட் க்ளிக்கை கனலி அனுமதிப்பதில்லை. நான் ஒரே சமயத்தில் நாலைந்து டாப்-களைத் திறந்து படிப்பவன். வலது பக்க சொடுக்கை நீக்குவதால் எந்த வித லாபமும் கிடையாது. இதனால் காப்புரிமையை பாதுகாக்க முடியாது. திருட நினைப்பவர்கள் எப்படி இருந்தாலும் மேட்டரை உருவி விடுவார்கள்.

இது ஒரு மோசமான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.

தேடுவதில் கூட பிறிதொரு இடத்தில் எழுதியதை, வெட்டி எடுத்து, ரைட் பொத்தானை சொடுக்கி ஒட்டுவது பலரின் வழக்கம். இன்றைக்கு கணினியில் இப்படியெல்லாம் எழுத்தைப் பாதுகாக்க முடியாது. உங்களின் எழுத்து அதிகம் வாசிக்கப் பட வேண்டும்; அதன் மூலம் வருவாய் வர வேண்டும் என எண்ணுவது நியாயமே. அதற்கான வழிகள் பல உள்ளன. அதையெல்லாம் நாடாமல், ரைட் க்ளிக்கை நீக்குவது முடக்கும் செயல்பாடு.

நமக்குப் பிடித்த விஷயங்களை மேற்கோள் காட்ட இந்த காபி + பேஸ்ட் நுட்பத்தை பயன்படுத்துகிறோம். நறுக்குகளை சேமிப்பது என்பது காலந்தோறும் நாம் படிக்கும் வழக்கம். புத்தகத்தின் வெள்ளையோரங்களில் குறிப்பு எழுதி வைப்போம். அவ்வாறு ரசித்த சொற்றொடர்களை பிரதியெடுக்கும் வசதி கொடுக்காமல் இருப்பது அக்கிரமம்.

இவ்வளவு சொல்லிவிட்டு எப்படி சரக்கை சுடுவது என்று சொல்லாமல் இருப்பது உகந்ததல்ல. கனலியில் இருந்து கோப்பை எடுப்பது மிக எளிது:

  1. கண்ட்ரோல் + எஸ் பொத்தானை அமுக்குங்கள். அதன் மூலம் உங்கள் கணினியில் மேட்டர் இறங்கும்.
  2. அதை உங்களின் நோட்பேட் போன்ற எடிட்டரில் திறக்கவும்
  3. இப்பொழுது வேண்டிய விஷயங்களை வெட்டி எடுத்துக் கொள்ளலாம்
  4. இதற்கென்றே பிரத்தியேகமான நிரலிகள் எக்கச்சக்கமாய் இருக்கின்றன – அவற்றையும் பயன்படுத்தி, மொத்த தளத்தையும் கூகிள்/யாஹூ/மைக்ரோசாஃப்ட் பிங் போன்ற தேடுபொறிகள் உருவுகின்றன
  5. கனலியில் இந்த மாதிரி சுடுவது எளிது. பிரதிலிபி போன்ற தளங்கள் இந்த மாதிரி மோசமான கெடுபிடிகளின் அடுத்த கட்டம். அவர்களிடமிருந்தும் ஸ்க்ரீன் ஸ்க்ரேப் செய்யும் வித்தைகள் எளிதே.
  6. கள்ளன் எப்பவுமே பெருசு; காப்பான் எப்பவுமே சிறுசு.

2. பார்த்தவர்களின் எண்ணிக்கை – Post Views

பார்வையாளர் வருகை என்பது இலக்கிய இதழ்களில் அப்பட்டமான பொய். இது மாயத் தோற்றத்தை உருவாக்கும். இணைய இதழுக்கு வருபவர்களில் தேடுபொறி யார், உண்மையான மனிதர் யார் என்று பிரித்தறிவது இயலவே இயலாத காரியம். முகமூடி போட்டுக் கொண்டு வருபவர்கள், ப்ராக்ஸி மூலம் வருபவர்கள், தங்களில் தளம் இயங்குகிறதா என பரிசோதிக்க வருபவர்கள், வலையகத்தை சீக்கிரமாகத் தருவதற்காக உள்ளூர் சி.டி.என். மூலமாக இறக்கிக் கொள்பவர்கள், அது தவிர சமூக மிடையங்கள் (ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவை), சுட்டிகளை சோதிக்க வரும் பாட்-கள் என எல்லோரும் இந்தக் கணக்கில் சேர்வார்கள்.

இது தவிர பேஜ் ஹிட்ஸ் என்னும் மாயமானைத் துரத்துவதற்கென்றே நிரலிகள் கூட எழுதலாம். (எ.கா.: Explained: How auto-refresh on your website affects your audience data).

இந்த வருகையாளர் எண்ணிக்கையை பகிரங்கமாகச் சொல்வதால் எந்த இலாபமும் கிடையாது. நான் நூற்றுக்கு 82 மதிப்பெண்… நீ எவ்வளவு என்று கேட்பது போல் சின்னபிள்ளைத் தனமாக இருக்கிறது. எத்தனை பேர் வந்தார்கள் என்று கணக்கிடுவது அரதப் பழசு. எத்தனை பேர் எங்கே கண்ணை செலுத்தினார்கள்; எவ்வளவு நேரம் வாசித்தார்கள்; எப்படி எந்தப் பத்திகளில் ஆழ்ந்து ஊன்றி கவனித்தார்கள்; எப்படி ஸ்க்ரால் செய்தார்கள்; எங்கே கவனம் தப்பியது என்றெல்லாம் கூட கணக்கிட கூகிள் அனலிடிக்ஸ் போன்ற பல தளங்கள் இருக்கின்றன.

எத்தனை பேர் க்ளிக்கினார்கள் என்பதை விட எவர் படிக்கிறார்கள் என்பதும் எப்படி உள்வாங்கினார்கள் என்பதுமே முக்கியம் என்பதை இலக்கிய இதழ்களாவது வலியுறுத்த வேண்டும். ஃபேஸ்புக் மூலமாக ஆயிரக்கணக்கான நண்பர்களைப் பெற்றிருப்பவர்களுக்கு இந்த எண்கள் முக்கியமாகத் தெரியலாம். ஆனால், கனலி போன்ற தீவிர இதழ்கள் இந்த எண்ணை நிராகரிக்க வேண்டும்.

வெறும் வாசகர் எண்ணிக்கை முக்கியமென்றால், பத்திரிகை.காம் வைக்கும் தலைப்புகள் போல் சுண்டியிழுத்து விடலாம்; ஒன் இந்தியா போடும் கவர்ச்சிகரமான துணுக்குகள் மூலம் க்ளிக்க வைக்கலாம். வாசகர் எண்ணிக்கையை கூட்டிக் காட்டுவது வியாபாரிகளின் நோக்கம். பரபரப்பு என்பது விளம்பரதாரர்களுக்குத் தேவை. வாசகர் எண்ணிக்கை என்பது விளம்பரத்தை நாடுவோருக்கான தேவை.

3. எழுத்தாளர் பெயர்

எழுதியவர் பெயர் எப்பொழுதுமே கனலி என்றே இருக்கிறது. எனக்குப் பிடித்த எழுத்தாளர் “சித்துராஜ் பொன்ராஜ்” என வைத்துக் கொள்வோம். அவர் எழுதிய எல்லாம் மட்டும் வாசிக்க விழைகிறேன். இப்பொழுது அப்படி என்னால் பருந்துப் பார்வை பார்க்க முடிவதில்லை. தேடினாலும் கிடைப்பதில்லை.

4. நிலை நிற்றல் – இயைபு

ஆசிரியரின் பெயரை தலைப்பின் அடியில் போடுவது மரபு. ஆசிரியரின் புகைப்படத்தைப் போடுவது சற்றே முகத்திலடித்தது போல் இருக்கிறது. சில எழுத்தாளர்களுக்கு நிழற்படம் போடுவதும் சிலருக்கும் போடாமல் இருப்பதும் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.

ஒரே மாதிரி வடிவமைப்பை எல்லாருக்கும் பின்பற்ற வேண்டும். நர்மி எழுதும் தொடர் ஒவ்வொன்றுக்கும் அவரின் ஒவ்வொரு புகைப்படங்கள் போடுவது; பாலா கருப்பசாமிக்கும் கமலக்கண்ணனுக்கும் அவ்வப்போது அவர்களின் படங்கள்; அவ்வப்போது வேறு பொருத்தமான படங்கள் என்று முரன்பாடாக இருக்கக் கூடாது.

  • ஒவ்வொரு பதிவுக்கும் எழுத்தாளரின் பெயர்
  • ஒவ்வொரு பதிவின் முடிவில் (கட்டாங்கடைசியாக) அந்த எழுத்தாளரைக் குறிக்கும் ஒளிப்படம் அல்லது அவதாரப் படம் (சிறிய ஸ்டாம்ப் அளவில்)
  • ஒவ்வொரு பதிவின் துவக்கத்தில் – அந்தப் பதிவை, எழுத்தை, கதையை ஒட்டிய பெரிய ஓவியம் அல்லது ஒளிப்படம் (எடுத்தவர் (அ) வரைந்தவர் யார், காப்புரிமை எவருக்கு போன்ற விவரங்களை படத்தின் அடியில் சொல்ல வேண்டும்)

5. தொடர்கள்

தொடர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரே ஒரு சுட்டி கொடுத்தால் போதுமானது. ஒரு தொடருக்கு ஒரு உரல். அந்த உரலுக்குள் சென்றால், அந்தத் தொடரின் அனைத்து பகுதிகளுக்குள்ளும் செல்லும் வசதி என அமைக்கலாம்.

இப்போதைய நிலையில் தொடர் என்று பட்டியலிடப்பட்ட அனைத்தும் கூட்டமாக ஒரே இடத்தில் கொத்தாக தேதி வாரியாக இருக்கின்றன. ஒரு தொடரின் முந்தைய பகுதிக்கும் அடுத்த பகுதிக்கும் நடுவே முன்பின்னாக எளிமையாக சென்று வர முடிவதில்லை.

கீழே பாருங்கள். இது தொடரின் ஆறாம் பகுதி. நான் ஐந்தாம் பகுதிக்கு செல்ல விரும்புகிறேன். இது எளிதாக வேண்டும். மூன்றாம் பகுதியில் இருந்து அடுத்த பகுதியான நான்காம் பகுதிக்குச் செல்ல “ஏழு கடல், ஆறு மலை” தாண்டக் கூடாது.

6. ஆங்கிலம்

எங்கேயும் தமிழிலேயே தளம் அமைய வேண்டும். மறுமொழி சொல்வதற்கான பெட்டிகள் ஆங்கிலத்தில் அமைந்துள்ளன. ”Home” போன்ற சொற்றொடர்களை தமிழில் “முகப்பு” என்றோ “இல்லம்” என்றோ “வாயில்” என்றோ அழைக்குமாறு மாற்றலாம்.

7. தொடர்புடைய பதிவுகள்

கவிதைகளுக்கான பதிவில் (சார்லஸ் சிமிக் கவிதைகள் | கனலி) கீழே காணும் தொடர்பான பதிவுகள் காணக் கிடைக்கின்றன. மொழிபெயர்ப்பு கவிதையை வாசிப்பவர், அப்படியே சிறுகதைக்குச் செல்லலாம் என்பது உண்மையே. இருந்தாலும் கவிதைகளையோ மொழியாக்கங்களையோக் கொடுத்தால் பொருத்தமாக இருக்கும்.

இதை வகைப்படுத்தல் மூலமாகவோ, குறிச்சொற்கள் கொடுப்பது மூலமாகவோ செய்யலாம். கணினி நிரலியே தானியங்கியாக இதைத் தேர்ந்தெடுப்பது சாலச் சிறந்தது. நாமே இங்கேத் தொடுப்பு கொடுப்பது எப்போதும் ஒரே விஷயத்தையே முன்னிறுத்தும். புதிய + பழைய + வித்தியாசமான என்று சரக்கை மாற்றி மாற்றிக் கலந்து கொடுக்கும் வித்தை நிரலிக்கு எளிது. மனித மூளைக்கு அப்படிக் கலைத்துப் போட்டு தேர்ந்தெடுப்பது முடியாத விஷயம்.

8. குவிமையம் & சித்தாந்தம்

வலையகம் என்பது ஒரு விஷயத்தை முக்கியமெனக் கருத வேண்டும். கனலி அவ்வாறு எதை – தன்னுடைய கவனத்தைக் கோரும் ஏக சிந்தையாய்க் கொண்டுள்ளது என்பது இப்பொழுது தெளிவாகவில்லை. இது காலப்போக்கில் தெளிவாகாலம்.

உதாரணத்திற்கு சமீபத்திய வரவான The Juggernaut பாருங்கள்.

ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒவ்வொரு குறிக்கோள் வேண்டும்.

  • நகரத்திற்கு புலம்பெயர்ந்த மாந்தர்களின் அனுபவங்களைப் பகிருதல்
  • இளைய படைப்பாளிகளின் புனைவுகளை சீர் செய்து ஒழுங்குபடுத்தி தர மேம்படுத்தல்
  • கவனம் கிடைக்காத அரிய கலைகளை அறிமுகம் செய்தல்
  • குழந்தைகளுக்கான இலக்கியம்

இப்பொழுது அகல உழல்கிறார்கள். ஆழ உழல்வது அவசியம்.

9. புகழ் பெற்ற ஆக்கங்கள்

நியு யார்க்கருக்கும் அறிமுகம் தேவையில்லை. ஹருகி முரகாமிக்கும் அறிமுகம் தேவையில்லை. ஒரு ஷினகாவா குரங்கின் ஒப்புதல் வாக்குமூலம் | கனலி போன்ற படைப்புகளை விட அதிகம் அறிமுகமாகாத உலக எழுத்தாளர்களை முன்வைக்கலாம்.

அதே நியு யார்க்கரில் முதன்முறையாக வெளியாகிறவர்கள் இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் சிறுபத்திரிகைகள் எக்கச்சக்கம். அவற்றில் எழுதுபவர்களில் இருந்து அதிகம் புழங்காத பெயர்களை மொழிபெயர்க்கலாம். அல்லது பெரிய பத்திரிகைகளே சிறந்தது என்றால் கிரந்தா, அக்னி, ஹார்ப்பர்ஸ் என்று சிறகை விரிக்கலாம்.

இடைவேளை

“நவீனத்துவத்திற்குப் பிந்திய இலக்கியப் போக்குகளைப் பற்றிய பேச்சு, அமைப்பியல், பின்னமைப்பியல், பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம் போன்றவை இந்திய மொழிகளிலேயே தமிழில் அதிகமாக இருக்கலாம். அல்லது அதிகமாக இருக்கும் மொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்கலாம்”

சுந்தர ராமசாமி

பாராட்டுகள்

இவ்வளவு ஆலோசனைகள் சொல்லியாகி விட்டது. இப்பொழுது சௌகரியமான விஷயங்களைப் பார்ப்போம்

  1. நான்கு சமூக மிடையங்களில் இயங்குவது வெகு வெகு ஆரோக்கியமானது. இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியுப் – இரண்டுமே மாறுபட்ட தளம். ஃபேஸ்புக், டிவிட்டர் போல் இல்லாமல் வேறு விதமான பயனர்களைப் பெற்றுத்தரும். நான்கிலும் தொடர்ந்து செயலூக்கத்துடன், தொலைநோக்குத் திட்டத்துடன் அந்த ஊடகங்களின் அனைத்து பயன்களையும் முழுமையாக உபயோகித்து செயல்பட்டால், கனலி தவிர்க்க முடியாத சக்தியாக ஆகும்.
  2. கனலி இலக்கிய நேரம் – இது போன்ற சந்திப்புகளும் சொற்பொழிவுகளும்தான் ஒரு அமைப்பை உருவாக்குகின்றன. தொடர்ச்சியாக நிகழ்வுகளை நடத்துவதன் மூலமும் அந்த நிகழ்வுகளில் பரந்துபட்ட தலைப்புகளில் நன்றாகப் பேசுவோரை உரையாட அழைப்பதும் புதிய வாசகர்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கும்.
  3. Content is King – எவ்வளவு நேர்காணல்கள்! எத்தனையெத்தனை தமிழாக்கங்கள்!! எம்புட்டு சிறுகதைகள்!!! சரக்கு அதிகமாக இருப்பதினாலேயே தளம் மேம்படுகிறது என்பதை நான் உறுதியாக நம்புபவன். சரக்கு உயர்தரமாக இருப்பது இரண்டாம் பட்சம். சரக்கு வடிவுற அமைப்பது மூன்றாம் பட்சம்.
  4. போட்டிகள் – தமிழில் இதற்கு நெடிய பாரம்பரியம் இருக்கிறது. குறுங்கதை ஆட்டம் மாதிரி, இன்னும் நிறைய பந்தயங்களை நடத்த வேண்டும். பயணக் கட்டுரை, அறிவியல் அறிமுகம், அனுபவப் பதிவு, என்று பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து நடத்த வேண்டும்.
  5. ஆசிரியரின் உரிய அனுமதி – அழியாச்சுடர்கள் தளம் என்றும் பிடித்தமானது. பெட்டகம் பகுதி அது போல் மிகச் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது. அதுவும், பிறிதொரு இடத்தில் வெளியானதாக இல்லாமல், புதிய விஷயங்களாகப் பழைய ஆக்கங்களை இணையத்தில் ஏற்றுவது போற்றுதலுக்குரியது.
  6. ஃபேஸ்புக்கில் தட்டி வைப்பது – இதை க. விக்னேஷ்வரன் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அதுவும் ஒரே வார்ப்புருவில் போடாமல் அலுப்பு தட்டாத வகையில் விதவிதமாகப் பரிமாறுகிறார். ஒரு நாள் பார்த்தால் உலக இலக்கியகர்த்தா; மற்றொரு நாள் புத்தம் புதிய படைப்பாளியின் ஆக்கம்; இன்னொரு நாள் வேறொரு சுவாரசியமான போஸ்டர். இதை இவர்கள் ஃபேஸ்புக் விளம்பரமாகவும் செய்யத் துவங்கலாம். இன்னும் பலரைச் சென்றடையலாம்.

ஆலோசனைகள்

  1. பாட்காஸ்ட் – ஒலிப்பதிவை துவக்குவது. அன்றாடம் கிடைக்கும் இலக்கியப் பதிவுகள், படித்தவை, கிடைத்தவை என எல்லாவற்றையும் பேச்சில், ஒலிவடிவில் அறிமுகம் செய்யவேண்டும். இந்தக் காலத்தில் சவுண்ட்கிளவுட் இருந்தால்தான் எவரும் மதிக்கிறார்கள்.
  2. குவிமையம் / சிறப்பிதழ் – ஆங்கில இதழ்கள் இதை மாதா மாதம், இதழ்தோறும் செய்கிறார்கள். ஏதாவது ஒரு தலைப்பு, விவாதப் பொருள், மூலக் கரு – எடுத்துக் கொள்கிறார்கள். பணிவு, தந்தை, அரங்கு என்று ஏதோ ஒரு விஷயத்தைச் சுற்றி பல பேர் எழுதுகிறார்கள். வலையகத்துக்கென்று பிரத்தியேகமாக தொலைநோக்கு பார்வை இருப்பது நெடுநாளைக்கான வேண்டுகோள் (மிஷன் / விஷன்). ஒவ்வொரு இதழுக்கும் ஒரு ஒருமிப்பு (ஃபோகஸ்) இருப்பது உடனடி வேண்டுகோள். உதாரணத்திற்கு லஃபாம்ஸ் இதழின் மையங்கள்:
    • பழிப்பு
    • நினைவு
    • காலநிலை
    • மகிழ்ச்சி
    • வர்த்தகம்
    • இரவு
    • போட்டி
    • நீர்
    • சட்டம்
    • இசை
    • பயம்
    • மனநிலை
    • வீடு
    • அதிர்ஷ்டம்
    • சதை
  3. இ-புக் – கிண்டில் புத்தகங்களும் கூகுள் ப்ளே நூலகத்தில் தொகுப்புகளும் கிடைக்குமாறு செய்ய வேண்டும். இணைய அங்காடிகளில் ஈபுக் விற்க வேண்டும்.
  4. ஆடியோ புக் – எக்கச்சக்கமான விஷயங்கள் கனலி தளத்தில் இருக்கிறது. அதையெல்லாம் ஒலிபுத்தகங்களாக மாற்ற வேண்டும். ஒரு பதிவை ஒருவர் வாசிக்கலாம். வாசிப்புக்கு ஒருவரே ஏற்ற இறக்கங்களோடு ஒலிநூலாக்கலாம்.

முந்தைய மின்னிதழ் பார்வைகள் / விமர்சனங்கள் / அறிமுகங்கள்

  1. தமிழ் மின் இதழ்: ஒரு பார்வை | Snap Judgment
  2. நூலகம் – 2015 புத்தகங்கள் | Snap Judgment
  3. Tamil Literary Magazines: Internet Publications | Snap Judgment
  4. தமிழ் சிறுபத்திரிகைகள் | Snap Judgment
  5. என்னைக் கவர்ந்த தலை 10 தமிழ் சிறுபத்திரிகைகள் | Snap Judgment
  6. சிறு சரித்திரக்குறிப்புகள்: சிறுபத்திரிகை மகாத்மியம் | Snap Judgment

குன்றின் மீது அமர்ந்த குமரன்

அரூ: கனவுருப்புனைவு காலாண்டிதழ் – அறிவியல் சிறுகதைப் போட்டி முடிவுகளை முன்வைத்து சில அறிமுகக் குறிப்புகள

இன்று அடுத்த கதை: நகுல்வசன் எழுதிய கடவுளும் கேண்டியும்

“பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள்; உங்களிடமுள்ள முத்துக்களைப் பன்றிகளுக்கு முன்னால் போடாதீர்கள்” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 7:6)

“பூமிக்கு நீங்கள் உப்பாக இருக்கிறீர்கள். தன் சுவையை உப்பு இழந்தால் மீண்டும் அதை உப்பாக மாற்றவோ, வேறு எதற்கும் பயன்படுத்தவோ முடியாது. அது தெருவில் எறியப்பட்டு மக்களால் மிதிக்கப்படும்.

“உலகுக்கு ஒளித்தரும் விளக்கு நீங்களே. ஒரு குன்றின் மேல் அமைந்த பட்டணம் மறைந்திருக்க முடியாது. மக்கள் எரிகின்ற விளக்கைக் குடத்தின் கீழ் வைத்து மறைப்பதில்லை. மாறாக, அதை மக்கள் விளக்குத் தண்டின் மீது வைக்கிறார்கள். அப்பொழுது தான் விளக்கு வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் தருகிறது. ( மத்தேயு 5 )

“நான் சொன்ன இந்த விஷயங்களைக் கேட்டு, இவற்றின்படி நடக்கிறவன் பாறைமேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியுள்ள மனுஷனைப் போல் இருக்கிறான். கனமழை பெய்து, வெள்ளம் வந்து, பயங்கர காற்றடித்து, அந்த வீட்டின் மேல் மோதியபோதும், அது இடிந்து விழவில்லை. ஏனென்றால், அது பாறைமேல் அஸ்திவாரம் போடப்பட்டிருந்தது” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 7:24, 25) இந்த வீடு ஏன் இடிந்து விழவில்லை? ஏனென்றால் அந்த மனுஷன், ‘ஆழமாகத் தோண்டி, பாறைமேல் அஸ்திவாரம் போட்டிருந்தான்.’ (லூக்கா 6:48) இதிலிருந்து, இயேசுவின் வார்த்தைகளை வெறுமனே கேட்டால் மட்டும் போதாது, அவற்றின்படி ‘நடக்க’ நாம் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்கிறோம்.

பிரச்சாரம் போதும். பிரசங்கத்தை நிறுத்திக் கொள்கிறேன். கிறித்துவின் மலைப் பிரசங்கத்தை ஏன் இந்தக் கதைக்கு எடுத்துக் கொள்கிறேன்?

  1. யேசு ஒன்றும் புதிய விஷயத்தைச் சொல்லிவிடவில்லை. கிறித்துவ கடவுள் அபவாதம் பேசவில்லை. அது முழுக்க முழுக்க கிறித்துவ கடவுளின் வார்த்தை. ஒத்துக் கொள்கிறேன். யூதர்களைப் பொருத்தவரை யேசு ஒரு தேவதூதர். அரூ போட்டியைப் பொருத்தவரை நகுல்வசன் எழுதியது அறிவியல் கற்பனை. அதே சமயம் சாமானியரை பொருத்தவரை, கடவுளும் கேண்டியும் இலக்கிய பாரம்பரியத்தின் தொடர்ச்சி. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் என்று புதுமைப்பித்தன் எழுதினார். அதை நகுல்வசன் சற்றே தொட்டுக் கொண்டு நவீனமாக்கி புதுமையாகத் தந்திருக்கிறார்.
  2. கடவுள் நேரில் வருவாரா? யேசு எப்படி தன்னிடம் கடவுள் சொன்னதை மலைமேல் பிரசங்கமாகப் பொழிந்தார்? யேசு இந்தியாவுக்கு வந்து புத்தமதத்தின் தத்துவங்களைக் கற்றுக் கொண்டு, அதன் பின் வளைகுடா நாட்டிற்குச் சென்று கிறித்துவமாக மாற்றிச் சொன்னாரா? இந்த மாதிரி வித விதமாக இந்தப் புனைவையும் அணுகலாம்.
  3. கிறிஸ்து சொன்ன கருத்தில் தெளிவு இருந்தது; குரலில் தீர்க்கம் இருந்தது; சொற்பொழிவில் கோர்வையான சிந்தனை தெரிந்தது; அதே சமயம் சுவாரசியமாகவும் கவர்ந்திழுக்கும் தன்மையுடனும் நம்பிக்கையும் அன்பும் கொடுக்கும் கருத்துக்களை முன்வைக்கிறார். அதெல்லாம் இந்தக் கதையில் கிடைக்கிறது.

கதையில் இருந்து…

கடவுள் ஹெட்செட்டைப் பொருத்திக்கொண்டார். திரையில் தெரிந்த நினைவுப் பட்டியலிலிருந்து அவர் நினைவுகளிலேயே மிகப் புராதன ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்.

இருப்பு இல்லாமை இரண்டுமற்ற இருளை இருள் சூழ்ந்திருந்த வெளி.

இரவு பகல்கள் அற்று திசைகளின்றி வேறுபடுத்தலில்லாத வெறுமையால் போர்த்தப்பட்டிருக்கும் வெளி!. அப்படிப்பட்ட ஒரு வெளியில் வெப்பத்தின் திண்மையிலிருந்து அவர் உயர்த்தெழுகிறார். ஒருமையின் தனிமையால் அவருள் விழைவு ஊடுறுவுவதை அவரால் உணர முடிந்தது, அவ்விழைவின் அதிகரிப்பில் ஒர் உச்சம். அதன் தகிப்பில் பீஜம். அதன்பின், அதன்பின்… திரையில் இருள் கவிந்தது.

“End of selected memory” என்ற அறிவுப்பு திரையில் ஓடியது

கதையின் சவால்கள்

  1. துவக்கத்தில் வரும் பாஸ்டன் சமாச்சாரங்கள் பச்சைத்தமிழனை அன்னியமாக்கும்
  2. அந்தத் தத்துவப் பகுதிகள் கனவுகளில் வருவது தெளிவாக வெளிப்பட்டிருந்தாலும், இன்னும் சற்றே தத்வமசியை விவரித்து வாசக இடைவெளியைக் குறைத்திருக்கலாம்
  3. மனதில் பதியும் ஆக்கம் என்றாலும் இவ்வளவு ஜாலியான கதையின் முடிவில் “எல்லாமே நிராவிடம் தானோ?” என்ற எண்ணத்தை நிரப்பியிருக்கலாம்.

சென்ற பதிவு: குக்குரன்

மனுசங்கடா – தமிழ் சினிமா: வணிகமும் விருதுப் படமும்

இன்று மனுசங்கடா திரைப்படம் காணக் கிடைத்தது. கூடவே, ‘திண்ணை’ கோபால் ராஜாராமும் இருந்தது படத்தைக் குறித்த பார்வையை விசாலாமாக்கியது.

படத்தைக் குறித்து சில எண்ணங்கள்:

  1. கோலப்பனாக நடித்தவர் அம்ஷனின் மகனாமே! நன்றாக செய்திருக்கிறார். அழகாகாவும் இருக்கிறார்.
  2. பையனே அப்பாவை ‘பாடி’ என்று சொல்வது சற்றே நெருடியது.
  3. அம்ஷனின் முந்தையப் படம் ‘ஒருத்தி’ சற்றே மறந்து போனது. ‘மனுஷங்கடா’ நிறைய தசாப்தம் நினைவில் நிற்குமாறு இருக்கிறது.

  1. கீழ்வெண்மணி என்றவுடன் நெஞ்சம் படபடக்கும். அதை சொல்லாமல் சொல்லும் காட்சியமைப்பு பதைபதைக்க வைத்தது.
  2. தமிழகத்தில் கூட படம் எடுக்க முடியாமால், மொழி புரியாத ஆந்திராவிற்குச் சென்று காட்சியாக்கமும் ஒளிப்பதிவும் செய்தது, இந்தியாவைக் குறித்த எதிர்மறை எண்ணத்தை அய்ர்வாக எழச் செய்தது.
  3. “அண்ணன்” ஆக நடித்தவருக்கு நல்ல குரல்வளம். ஆனால், நடிப்பு சற்றே சீரியல்தனம்

  1. உணர்ச்சிக் கொந்தளிப்புடன் கதையைக் காட்சியாக்கி இருக்கிறார். கிட்டத்தட்ட ஷங்கர் படம் பார்த்த ஆக்ரோஷத்துடன் படம் முடிகிறது. இந்த மனித உரிமை மீறல் அக்கிரமத்தை படம் பார்த்த திருப்தியோடு கை கழுவாமல் இருக்க வேண்டும்.

 

முந்தைய குறிப்புகள்:

மனுசங்கடா திரைப்படம் குறித்த மற்ற பார்வைகள்:

சுரேஷ் கண்ணன்

வாழும் போது மட்டுமல்ல, வாழாமல் செத்த பிறகும் சாவிலும் கூட விடாமல் துரத்துகிறது சாதியம். சட்டமும் நீதியும் கூட கெட்டி தட்டிப் போன அந்த இறுக்கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. கோலப்பன் தேடுவது தந்தையின் பிணத்தையல்ல, இந்தியாவின் ஜனநாயகத்தை, அதன் அரசியல் அமைப்பு சட்டத்தையே குழிகளில் தேடுகிறான் என்கிற சமிக்ஞையோடு படம் முடிந்ததாக எனக்குப் பட்டது.

எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எளிய அலங்காரத்துடன் படம் நேர்மையாக நகர்கிறது. இதனாலேயே சிலர் சலிப்படையக்கூடும். ஜோடனைகள் இல்லாத உண்மை அத்தனை சுவாரசியமானதாக இருக்காதுதான்.

சமீபத்தில் நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நோ்மையானதொரு தலித் சினிமாவை உருவாக்கியிருக்கிறார் அம்ஷன் குமார். ‘தீண்டாமை என்பது பெருங்குற்றம்’ என்பது பாடப்புத்தகங்களில் அல்ல, மனித மனங்களில் ஆழமாக எழுதப்பட வேண்டியது என்கிற செய்தியை இயல்பாக சொல்லிச் செல்கிறது இந்த திரைப்படம்.

இதில் வரும் நடிகர்கள் இயல்பான நடிப்பைத் தந்துள்ளனர். சினிமா ஆர்வலர்களின் ஆதரவு நிச்சயம் தரப்பட வேண்டிய திரைப்படம் இது.

விரிவான கட்டுரை வரும்.

மனுஷ்யபுத்திரன்

இன்று காலை அம்ஷன் குமாரின் ‘ மனுசங்கடா’ திரைப்படத்தை தியாகராய நகர் ஏஜிஸ் ல் பார்த்தேன். இரண்டு மூன்று வரிசைகளே நிரம்பியிருந்தன. பெரும்பாலான இருக்கைகள் காலியாக கிடந்தன. சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு ஏழாம்தர குப்பைப்படத்தைக் கூட முன்பதிவு செய்யமல் பார்த்துவிடமுடியாது. இன்றைய காலி அரங்கம் எனக்கு மனதை பிசைவதாக இருந்தது. நண்பர்களுக்கான தனிப்பட்ட ஒரு ஷோ போல இருந்தது.

இத்தனைக்கும் ‘ மனுசங்கடா’ தமிழின் மிக முக்கியமான படம். சாதியத்தின் கோரமுகத்தை வெளிப்படுத்தும் படம். தன் தந்தையின் பிணத்தை பொதுவழியில் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல உயர்நீதிமன்றம்வரை சென்றுபோராடும் ஒரு தலித் இளைஞனின் கதை. எந்த வணிக சமரங்களும் இல்லை. அவலத்தின் நடுவே காதல் கிளுகிளுப்புகளின் பூச்சுகள் இல்லை. ஒரு மனிதன் இறந்து அடக்கம் செய்யப்படும் வரையிலான இரண்டு நாளின் கதை. படத்தில் பிண்ணனி இசை என்று தனியாக எதுவும் இல்லை. சுற்றுச் சூழலின் அசலான ஒலிகளே பிண்ணனி இசை. சினிமாவின் அலங்காரங்கள் இல்லாமல் எதார்தத்தை மறுபடைப்பு செய்ய அம்ஷன் குமார் படம் முழுக்க முனைகிறார். அதில் பார்க்கும் கோர்ட் நாம் நிஜத்தில் பார்க்கும் கோர்ட். நாம் பார்க்கும் வருவாய் துறை அதிகாரியும் காவல்துறை அதிகாரியும் நாம் அன்றாடம் காணும் அதிகாரிகள். அதில் வரும் தலித் சமூக தலைவரை நானே நேரில் பலமுறை சந்தித்திருக்கிறேன்.

இந்தப்படம் தெளிவாக சொல்லும் செய்தி ஒன்று உண்டு. இந்த நாட்டில் அரசியல் சாசனமோ நீதிமன்ற உத்தரவுகளோ சாதிய அதிகாரத்தை, அதன் சட்டங்களை வெல்ல முடியாது என்பதுதான். ஒடுக்கப்பட்ட மக்கள் வன்முறையின் மூலமாகவோ போலி சமரசங்கள் வாயிலாகவோ பொய் வாக்குறுதிகள் மூலமாகவோ தங்கள் உரிமைகளை விட்டுத்தர நிர்பந்திக்கப்படுகிறார்கள். தன் தந்தையின் பொதுவழியில் கொண்டு சென்று புதைப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற்றுவரும் இளைஞனால் கடைசியில் தன் தந்தையை காவல்துறையினர் பலவந்தமாக எங்கே புதைத்தார்கள் என்பதைக்கூட அறியமுடியாமல்போவது அவலத்தின் உச்சம்.

நடிகர்கள் தங்கள் பாத்திரத்தின் எல்லைமீறாமல் நடித்திருந்தார்கள். நவீன நாடகபாணியிலான நடிப்புமுறை சில இடங்களில் தூக்கலாக வெளிப்படுவதை தவிர்த்திருக்கலாம். எந்த ஊர் அடையாளமும் சாதி அடையாளமும் வெளிப்பட்டுவிடாமல் கதையை நகர்த்தியிருப்பது இயக்குனரின் வெற்றி என்றாலும் ஒரு முழுமையான எதார்த்த சினிமாவாக அது மாறுவதை பலவீனப்படுத்துகிறது. ஆனால் அத்தகைய அடையாளங்களை சுட்டினால் படம் வெளியே வந்திருக்காது. உயர் சாதிகளை சாதிப்பெருமை பேச மட்டுமே திரைப்படங்களில் வெளிப்படுத்த லைசன்ஸ் உண்டு. அம்ஷன் குமாரின் திரைப்பயணத்தில் நிச்சயம் இப்படம் அவருக்கு மிக முக்கியமான இடத்தைப்பெற்றுத்தரும்.

பல சர்வதேச விழாக்களில் படம் காட்டப்பட்டு கவனமும் பாராட்டும் பெற்றிருக்கிறது. விழாக்களில் மட்டுமல்ல, பொது சமூகத்தின் மனசாட்சியை இதுபோன்ற படங்கள் உலுக்கவேண்டும். பெரும் போராட்டத்திற்குப்பிறகு சென்னையின் சில திரையங்குகளில் சில காட்சிகள் மட்டுமே இந்த மூன்று நாட்களில் இப்படம் திரையிடப்ப்பட்டது
நாளை இருக்குமா என்று தெரியவில்லை. விளம்பரத்திற்கு கோடிகளை கொட்ட முடியாத, தியேட்டர்களை பிடிக்கும் வலிமையற்ற குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கும் ஒரு சமூகமாற்றத்திற்கான இயக்குனர் தமிழ்சினிமாவின் மிருகவிதிகளின் முன் தன் படைப்பை அத்தோடு மறந்துவிட வேண்டியதுதான்.

சினிமா என்பது தமிழர்களின் கலை அல்ல, அபின். இங்குவேண்டப்படுவது மிகையுணர்ச்சிகளின் அதீத நாடகமேயன்றி எதார்த்தத்தின் சித்திரங்கள் அல்ல

பொன் சுதா

இன்குலாப்பின் கனல் தீராத கவிதை வரியை தலைப்பாக்கி வெளியாகி இருக்கும் திரைப்படம்.

நேற்றுப் பார்க்க வாய்த்தது.

சாதியத்தின் கோரமுகத்தை மூக்கு உரசும் தூரத்தில் உணர்ந்த அனுபவம்.

திருநாள்கொண்டசேரி சம்பவம் திரையாக்கமாகி இருக்கிறது.

பிறப்பில் துவங்கி ஒவ்வொரு நொடியிலும் உணரும் சாதிய ஒடுக்கு முறையை இறந்த பின்னாலும் பிணமாய் அனுபவிக்க நேரும் கொடூரமே கதைக் களம்.

பொது வழியில் ஒடுக்கப் பட்டோரின் பிணங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க மறுக்கும் சாதிய திமிர் கொழுத்த கிராமங்களில் ஒன்று அம்மையப்பன் கிராமம்.

ஒடுக்கப் பட்டவர்களின் பிணத்தை எடுத்துச் செல்ல ஒதுக்கப் பட்ட தனிப் பாதை என்பது வெறும் முட்காடு. அதை பாதையாக்க எந்த முயற்சியும் செய்யாத ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள்.

இறந்த தன் தந்தையை பொதுவழியில் எடுத்துச் செல்ல முடிவு செய்து நீதிமன்றத்தை நாடுகிறான் கதாநாயகன் கோலப்பன். அதிசயமாய் நீதி வெல்கிறது. பொதுப்பாதையில் பிணத்தை எடுத்துச் செல்ல உத்தரவிடுகிறார் நீதிபதி. பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கும் அதிகாரிகளுக்கும் ஆணையிடப்படுகிறது.

அந்த தீர்ப்பின் படி, பிணம் பொது வழியில் அனுமதிக்கப் பட்டதா? எப்படி ஆதிக்க சாதியினரும் அதிகாரிகளும் அதற்கு எதிர்வினை ஆற்றினார்கள் என்பதே ஆழமும் அழுத்தமுமான கதை.

உண்மையின் கதையாடல்கள் வலியோடு பதிவாகி இருக்கிறது. எவ்வளவு கேவலமான சமூகத்தில் வாழ்கிறோம் என்கின்ற எதார்தத்தின் சூடு கட்டாயம் உரைக்கும் உணர்வுள்ளவர்களுக்கு.

சிறிய முதலீட்டில் சமூக அக்கறையுள்ள படைப்பை வழக்கிய அம்ஷன் குமார் அவர்களுக்கு மதிப்பு மிகுந்த வாழ்த்துக்கள்.

திரைக்கதையில் உதவிய எழுத்தாளர் அழகிய பெரியவன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

சாதியை வெறுக்கும் முற்போக்கு மனநிலை உள்ளவர்கள், மாற்றுத் திரைப்படங்களை ஆதரிப்பவர்கள், கொஞ்சம் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் திரையரங்களில் மனுசங்கடாவைப் பார்ப்பதை தனது கடமையாக உணர வேண்டும்.

அது அப்படி இருந்திருக்கல்லாம், இது இப்படி இருந்திருக்கலாம் என்கிற சில லாம்கள் உண்டு தான்.

அதையெல்லாம் மீறி உண்மையும் நேர்மையுமான அக்கறையுமான ஒரு திரைப்படம் என்பதை உறுதியாய் உணர முடிகிற படைப்பு மனுசங்கடா ..

R R Srinivasan

அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவிற்குப் பிறகு எழுந்த ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி கலை இலக்கியங்களில் பிரதிபலித்தது. சாதி குறித்த பார்வையும் அழுத்தமும் பல விதங்களில் வெளிப்பட்டன, அப்பார்வையை ஆவணப்படங்கள்
அர்ப்பணிப்போடு முன்னெடுத்துச் சென்றன,,,ஆனால் நம்முடைய புனைவுத் திரைப்படங்களோ 25 வருடங்களுக்கு மேலாகியும் நேரடியாகச் சாதி குறித்துப் பேசவில்லை அல்லது தயங்குகின்றன. எளிமையான ஆவணத்தன்மையுடன் “மனுசங்கடா” அதனைப் பேசுகிறது. 25 வருடங்களாக நடந்த சாதி குறித்த விவாதங்களைப் புறக்கணிக்காமல் சாதி வன்கொடுமையைப் பேசுவது , சாதியை நேரடியாகத் தாக்குவது இக்காலத்தின் தவிர்க்க முடியாத கருப்பொருளாகும்.

வில்லன் -கதாநாயகன் என்ற எதிர்நிலைகளை உருவாக்கி ஒருவொரையொருவர் வெற்றி கொள்வது, தோல்வி அடைவது இது வணிக சினிமா மனோபாவம், மனுசங்கடா படத்தில் எதிரிகளில் குறிப்பிட்ட நபர்கள் என்று யாருமில்லை, வெகு தூரத்தில் அவர்கள் யாரென்று தெரியாமலே படமாக்கப்படுள்ளது, ஏனெனில் எதிரி தனிப்பட்ட ஒருவர் அல்ல,, அமைப்புதான்(System) எதிரி.அதை விவாதிப்பதே முக்கியம்.

சாதிக்கொடுமைகளின் உச்சமான அன்றாடம் நடக்கும் “புதைக்கும் உரிமை” மறுக்கப்பட்ட சமூகத்தின் குரல் திரைப்படத்தில் புனையப்பட்டது வரலாற்று முக்கியத்துவமானது.

மனுசங்கடா: “கோர்ட்டாவது மயிராவது..”   | கருப்பு

திருநாள்கொண்டசேரி. நாகப்பட்டினம் மாவட்டம் , மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள வழுவூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமம். இக்கிராமத்தில் வசிக்கும் தலித் மக்களுக்கு தனியாக வசிப்பதற்கென சேரி ஒதுக்கப்பட்டிருப்பது போல, செத்துப் போனால் புதைப்பதற்கென தனியாக இடுகாடு ஒதுக்கப்படவில்லை. ஒரே இடுகாடு என தப்பர்த்தம் கொள்ள வேண்டாம். இடுகாடே கிடையாது. ஒதுக்கப்படவில்லை.

பிறகு, செத்துப் போகிறவர்களை எப்படித்தான் அடக்கம் செய்வார்களாம் என்றால், அக்கிராமத்திலிருத்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் மதிமலை என்கிற இடத்தின் ஆற்றங்கரையில்தான் புதைக்க வேண்டும். அதுதான் அந்த பகுதியில் காலங்காலமான நடைமுறை. அவ்வளவு தூரம் சுமந்து சென்றுதான் பிணங்களைப் புதைத்து வருகிறார்கள் தலித் மக்கள்.

ஆனால் ஒரு கண்டிஷன். அவர்கள் பிணத்தைத் தூக்கிக் கொண்டு ஊரின் பொதுப் பாதையில் செல்லக் கூடாது, கல்லும் முள்ளும் பாவிக் கிடக்கும் வரப்பின் வழியாகத்தான் பிணத்தை எடுத்துச் செல்ல வேண்டும். எப்பேர்ப்பட்ட நீதிபதிகளும் கூட மீறவியலாத இந்த கண்டிஷனை போட்டு வைத்திருப்பது அக்கிராமத்தின் சாதி இந்துக்கள்.

அவர்களுடைய அடாவடியிலிருந்து விலகியிருக்க நினைக்கும் தலித் மக்கள் , தங்கள் பகுதியிலேயே தங்களுக்கென தனித்த சுடுகாடு வேண்டும் என்கிற கோரிக்கையை வைக்கிறார்கள். ஓராண்டில்லை. ஈராண்டில்லை. சுமார் நாற்பதாண்டு காலமாக எழுப்பப்பட்டு வரும் அந்த கோரிக்கையை அரசாங்கம் கண்டுகொள்ளவேயில்லை. ஆயிரமாயிரம் புகார்கள். ம்ஹூம். நடவடிக்கையே இல்லை. தலித் மக்களில் எவரேனும் இறந்து போகும் ஒவ்வொரு முறையும், சாதி இந்துக்கள் தங்களின் மனநோயை வெளிப்படுத்தத் தவறியதே இல்லை. பொதுப் பாதையில் பிணம் எடுத்துச் செல்ல முயற்சிக்கும் தலித்துகளை கடுமையாகத் தாக்கியும் அவமானப்படுத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில், கடுமையான ஒரு மழை காலத்தில், தலித் மூதாட்டி ஒருவர் இறந்து போகிறார். வழக்கமாகப் பிணம் தூக்கிச் செல்லும் வரப்பில் தண்ணீர் அதிகமும் தேங்கி இருந்ததால் பொதுப்பாதையில் செல்ல காவல் துறையினரிடமும் மாவட்ட ஆட்சி நிர்வாகத்தினரிடமும் அனுமதி கேட்கின்றனர் தலித் மக்கள். அப்படிப்பட்ட தனிமனித உரிமைக்கான சட்டம் இருப்பதையும் எடுத்துச் சொல்லி கெஞ்சுகின்றனர். தலித் மக்கள் பொதுப்பாதையில் சடலத்தைத் தூக்கிச் செல்லலாம் என கோர்ட் ஆணையிட்டுவிட்டது. தலித் மக்களின் கெஞ்சலைக் கண்டும் கோர்ட் ஆணையை நிறைவேற்றும் பொருட்டும் போலிஸ்காரர்கள் சாதி இந்துக்களிடம் செல்கின்றனர். அவர்களிடம் கெஞ்சுகின்றனர். “ஐயா.. போனா போகட்டுங்யா.. எப்படியாவது அவங்களுக்கு வழி உட்ருங்யா ப்ளீஸ்” எந்த கெஞ்சுதல், வேண்டுதல், சாதி இந்துக்களிடத்தில் நிறைவேறியிருக்கிறது?

அவர்கள்தான் மனநோயாளிகளாயிற்றே! கொஞ்சமும் மசியவில்லை. மட்டுமின்றி, காவல் துறையினரையும் கூட மிரட்டுகின்றனர். அவர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்து, அவமானப்பட்ட காவல்துறையினர் அந்த அவமானத்தால் கொண்ட ஆத்திரத்தையும் வெறித்தனத்தையும் தலித் மக்கள் மீது காட்டியுள்ளனர்.

“பொணத்த நீங்க எடுக்குறீங்களா? இல்ல நாங்க எடுக்கட்டுமா?”

“தலித் மக்கள் பொதுப்பாதை வழியாக சடலத்தைக் கொண்டு செல்லலாம்” என்கிற தீர்ப்பை கனம் கோர்ட்டாரே சொல்லிய பிறகும் அதை ஒரு டேஷ்க்கும் மதிக்காமல் ’கோர்ட்டாவது மயிராவது’ எனச் சொல்லி ( நன்றி : பாஜகவின் ஹெச். ராஜா ) போலிசையே எதிர்க்கும் ஆற்றல் சாதி இந்துக்களுக்கு இருக்கிறது என்றால் அந்த ஆற்றல் எங்கிருந்து வருகிறது? ஏன் வருகிறது?

சாதியுணர்வு ஒரு மனநோய் என்று பாபாசாகேப் அம்பேத்கர் சொன்னது எவ்வளவு உண்மை.
அந்த மன நோயாளிகளிடம் மல்லுக்கட்ட முடியாமல் போலீசே பிணத்தைச் சுமந்து சென்று அடக்கம் செய்திருக்கிறது. (இச்சம்பவம் தோழர் எவிடென்ஸ் கதிர் அவர்களின் கட்டுரை ஒன்றிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. அவருக்கு நன்றி. )

இப்படியான கேவலமான ஒரு செயல் உலகில் எந்த நாட்டிலாவது நடக்குமா?
இப்படியான சம்பவங்கள் ஒருமுறை இருமுறை, மும்முறைகளல்ல. காலங்காலமாக நடந்து வருகின்றன. இன்றைய டிஜிட்டல்இந்தியா வரை. இந்த டிஜிட்டல் தேசத்தைக் காறித்துப்ப வைக்கும் இப்படிப்பட்ட நிலைமை ஒவ்வொரு நாளும் ஏதோவொரு சேரியில் நடந்து கொண்டிருந்துதானிருக்கிறது.

அன்னாடம் நடந்துவருகின்ற இப்படியான சாதிய அசிங்கங்கள் குறித்து நம்மூரார் யாரேனும் வாய் திறக்கிறார்களா என்றால் இல்லை. மட்டார்கள். அவர்களுக்கு வேறு பல கேளிக்கைகள் இருக்கின்றன. சமயங்களில் இப்படிப்பட்ட செய்திகள் ஊடகங்களில் இடம் பெறும்தான். மற்ற செய்திகள் ஏதும் கிடைக்காத போது.

செத்தாலும் மறையாத இப்படிப்பட்ட சாதியக் கொடுமைகளை, (வெகுசன) அச்சு ஊடகங்களிலேயே சொல்ல முடியாத போது, திரைப்படங்கள் என்கிற வெகுமக்களுக்குப் பிடித்தமான கலையின் மூலம் காட்டுவது என்பதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்று. ஆனால், அதை சாத்தியப்படுத்தியிருக்கிறது ‘மனுசங்கடா’ திரைப்படம்.

பல்வேறு ஆவணப்படங்கள், ‘ஒருத்தி’ உள்ளிட்ட சுயாதீன படம் ஆகியவற்றின் இயக்குனரும், எழுத்தாளருமான அம்ஷன் குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். பல்வேறு படவிழாக்களில் கலந்து கொண்டு அங்கீகாரத்தைப் பெற்ற இப்படம் இப்போது, வெகுமக்களின் பார்வைக்கு வந்துள்ளது.
திருநாள்கொண்டசேரியில் நடந்தைப் போல பல்லாயிரம் கிராமங்களில் இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் சாதிய அசிங்கத்தை அப்பட்டமாகவும் அதிர்ச்சியுடனும் காட்டியிருக்கிறது இப்படம். மட்டுமின்றி, சமத்துவம் பேசும் திரைப்படங்களைக் கூட பல கோடிகளில்தான் உருவாக்க முடியும் என்கிற மாயையையும் இப்படம் உடைத்திருக்கிறது.

சினிமா என்கிற கலையை எளிய மக்கள் அனைவராலும் உருவாக்க முடியும், (உருவாக்க வேண்டும்) அதில் மக்களின் பாடுகளைச் சொல்ல முடியும் (சொல்ல வேண்டும்) என்கிற வகையிலும், சாதியத்தின் அசிங்கத்தைக் அவ்வளவு வெளிப்படையாகக் காட்டியிருக்கும் வகையிலும் ’மனுசங்கடா’ முக்கியமான அரசியல் படமாகின்றது. படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டுகிறேன்.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ட்ரைபாட் இல்லாமல், காமிராவை கையால் வைத்தபடியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனாலும் நேர்த்தியான படப்பதிவு. டப்பிங்கே இல்லை என்பதை நம்ப முடியவில்லை. துல்லியமான ஒலிப்பதிவு. சபாஷ் அம்ஷன் குமார் & குழுவினர்.

படத்தில் நடித்திருக்கும் அத்தனை நடிகர்களும் (ஓரிரு இடங்களைத் தவிர) நேர்த்தியாக நடித்திருக்கின்றனர். குறிப்பாக மையப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ராஜிவ் ஆனந்த் கவனிக்க வைக்கிறார். படம் தொடங்கியதிலிருந்து இறுதிவரை கொந்தளிப்பான முகத்தை கடைபிடித்திருக்கிறார் அவர். எல்லோரும் நவீன நாடக கலைஞர்கள். ஆகவே, ஒரு தேர்ந்த நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது ( அந்த வழக்கமான மாடுலேஷனை மட்டும் அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்).

நீதிமன்ற காட்சி அதன் சமன் குலையாமல் இருக்கிறது. அக்காட்சி முழுக்க, முழுக்க பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்தியலை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பேன். அவர் உருவாக்கிய சட்டம் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமைகளையும் மனதில் கொண்டு அவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்தில் மட்டுமே இருக்கிறது. அப்படிப்பட்ட சமத்துவ சிந்தனையாளர் அண்ணல் அம்பேத்கர்.
அரசின் சட்ட விதிமுறைகள் யாவும் அனைவருக்கும் சமமாகத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில்தான் பாகுபாடுகளும் தாழ்வுகளும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன என்கிற அவலத்தை சமரசமின்றி சொல்லிச் செல்கிறது இப்படம்.

பெரும்பாலான வழக்குகளில் நீதிமன்றங்கள் நீதியற்ற தீர்ப்புகளைச் சொல்லி தங்களை அம்பலப்படுத்திக் கொள்கின்றன. அரிதாக, எப்போதாவது நீதிமன்றமே நீதியை நிலைநாட்டச் சொன்னாலும் கூட, அந்த தீர்ப்பு சாதியத்தின் மசுருக்குக் கூட சமானமாவதில்லை என்பதாகத்தான் இருக்கிறது.
அப்படிப்பட்ட அவலத்தைத் தான் பேசியிருக்கிறது இப்படம்.

சமூகத்தின் மீது அக்கறை கொண்டியங்கும் ஒவ்வொருவரும் அவசியம் காண வேண்டிய திரைப்படம் இது. இப்படத்தை ஒவ்வொருவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய அக்கறையும் பொறுப்பும் நமக்கிருக்கிறது.

வணிக அடிப்படையில் பார்த்தால் இம்மாதிரியான சுயாதீன திரைப்படங்களுக்கான ஆரோக்கியமான சூழல் இல்லாததால் குறைந்தளவு காட்சிகள் மட்டுமே திரையிடப்படுகின்றன. ஆகவே, உடனடியாக இப்படத்தைப் பார்த்து விடுங்கள் தோழர்களே!

மேலும், இப்படிப்பட்ட அக்கறையான படங்களுக்காகவும் நம் குரல் ஒலிக்க வேண்டும். சமூக வலைதளங்களில் அதற்கான குரல் வலுவாக எழுப்பப்பட வேண்டும். இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலமாக சுயாதீன படங்களுக்கான ஆரோக்கியமான வெளியை உருவாக்க முடியும். அதன் மூலமாக வணிக சினிமா உருவாக்கியிருக்கும் கவர்ச்சியையும் அதுசார்ந்த போலியான பிம்பங்களையும் உடைக்க முடியும்.

இறுதியாக, ஒரு வேண்டுகோள் தலித்துகள் சாதி இந்துக்களைப் பார்த்து, ’நாங்க மனுசங்சடா…’ ’நாங்க மனுசங்கடா..’ என்கிற உண்மையைப் பலகாலமாகச் சொல்லி வருகிறார்கள். இனி கேட்க வேண்டியது, சாதி இந்துக்களைப் பார்த்துத்தான்.

“நீங்க மனுசங்களாடா?”

மனுசங்கடா – வெளி ரங்கராஜன் | malaigal.com

அண்மையில் சென்னையில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டுமே திரையிட வாய்ப்புகள் பெற்ற அம்ஷன்குமாரின்
மனுசங்கடா திரைப்படம் இன்றைய தமிழ் சமூகத்தின் முக்கிய பிரச்னையான சாதிய கட்டுமான இறுக்கத்தை ஒரு நேரிடையான மிகையற்ற யதார்த்த மொழியில் அதற்குரிய தீவிரத்தன்மையுடன் தோலுரித்துக்காட்டிய ஒரு சிறப்பான திரைப்படம்.

அண்மைக்காலங்களில் விளிம்புநிலை வாழ்வியல் பற்றிய சித்தரிப்புகள் குறித்த ஆர்வங்கள் தமிழ் சினிமாவில்பெருகத் துவங்கியிருக்கிற ஒரு சூழலில் தமிழ் சினிமாவின் வழமையான ரொமாண்டிசிஸத்தையும்,குரூரத்தையும் தவிர்த்துதீவிரத்தன்மை கெடாத ஒரு யதார்த்த சூழலை வடிவமைத்திருப்பது ஒரு சிறப்பான உத்தி.

அண்மைக்காலங்களில் தீண்டாமைச் சுவர்களும்,ஆணவக் கொலைகளும்தமிழ் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிக்கொண்டிருக்கிற ஒரு காலகட்டத்தில்தலைநகரத்திலிருந்து நூறு கிலோமீட்டர் தூரமே உள்ள ஒருகிராமத்தில் இன்றும் நிலவிவரும் ஒரு தீண்டாமை நடைமுறையை திரைமொழியின் வீச்சுடன் அம்பலப்படுத்தியிருப்பது ஒரு சமூக நோக்கம்கொண்ட துணிச்சலான முயற்சி.

இன்றைய ஜனநாயக அமைப்பில் தங்களுடைய அடிப்படை உரிமைகளைப் பெற நீதிமன்றம் மற்றும் ஊடகங்களை நாடுவதற்கு வாய்ப்பு பெற்றுள்ள கல்வி அறிவு பெற்ற தலித் இளைஞர்கள் கூட சாதியக் கட்டுமானம் ஆழமாக ஊடுருவியுள்ள கிராமிய அடிமட்ட அமைப்புகளை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாத அவல நிலைதான் இத்திரைப்ப டத்தில் காட்சிகளாக வடிவம் பெறுகிறது.

நகரத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு தலித் இளைஞன் கிராமத்திலுள்ள தன்னுடைய தந்தையின் திடீர் மரணச் செய்தி கேட்டு துக்கத்துடன் கிராமத்துக்கு விரைகிறான்.அங்கு பொதுவழியில் தந்தையை மயானத்துக்கு எடுத்துச் செல்லமுடியாத சூழல் நிலவுகிறது.அவர்களுக்கென்று உள்ள முட்கள் நிறைந்த பாதை உபயோகிக்க பயனற்றதாக இருக்கிறது. பொதுவழியை உபயோகிக்கும் தங்கள் உரிமையை நிலைநாட்ட நீதிமன்றத்தை அணுகி உத்தரவுபெற்ற பிறகும் கூட கிராமிய அதிகாரிகளும் காவல்துறையும் ஆதிக்க சக்திகளுக்கு துணைநின்று பிணத்தைப் பறித்து தாங்களே எடுத்துச்சென்று புதைக்கின்றனர்.தந்தையின் புதைக்கப்பட்ட இடத்தைக்கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாதஅவலத்தையேயே தலித் எதிர்கொள்கிறான். .மரணத்துக்குப்பிறகும்ஒரு தலித் உடல் அவமானத்துக்குரிய பொருளாகவேஇருக்கிறது. மூன்று நாட்களில் நடைபெறும் இச்சம்பவங்களின் மூலமாக இன்றைய கிராமிய
யதார்த்தம் ஒரு வலுவான அழகியல் ஆவணமாக முன்நிறுத்தப்படுகிறது.

எந்தவிதமான செயற்கைத்தன்மையும் அற்று ஒரு இயல்பான உயிரோட்டம் கொண்ட பாத்திரங்களாக நடிகர்கள் இயங்குகின்றனர்.ஹீரோதன்மை அற்ற ஆனால் இயல்பான கோபம் கொண்ட தலித் இளைஞன்,கூட வேலை பார்க்கும் அவன் சுக துக்கங்களில் பங்குகொள்ளும் சகதோழி,நிலைமைகள் குறித்த புரிதலும் அணுகுமுறையும் கொண்ட தலித் தலைவர்,விரைந்து செயலாற்றி நீதிபெற்றுத்தர உறுதிபூணும் வக்கீல்,நிலைமைகளை உணர்ந்து தெளிவான தீர்ப்பு வழங்கும் நீதிபதி,கணவன் இறந்த துக்கத்தை ஒப்பாரிப்பாடல்களால் அரற்றித் தீர்க்கும் வேளையிலும் தன் மகனுக்கு மனைவியாகப் போகிறவளை வாஞ்சையுடன் தடவிப் பார்க்கும் தாய் என பாத்திரங்கள் மிகவும் உயிர்ப்புடன் வெளிப்படுகின்றன. பிணத்தை வீட்டுக்குள் எடுத்துச் சென்று தாழிட்டுக் கொள்வது, காவல்துறை அச்சுறுத்தல்களுக்கிடையிலும் பிணத்தை தர மறுப்பது, இறுதியில் காவல்துறை வன்முறையை பிரயோகித்து பிணத்தை பறித்துப் புதைப்பது என இறுதிக்காட்சிகள் ஒரு அதிகபட்ச நாடக உயிர்ப்புடன் வெளிப்படுகின்றன.

இத்தகைய மிகைத்தன்மையோ குரூரங்களோ அற்ற ஒரு இயல்பான காட்சிமொழி க்கு நம் பொது தமிழ்சினிமா மனநிலை அதிகம் பழக்கப்படாததால் இது ஒரு நவீன நாடகம் போன்றும் ஆவணப்படம் போன்றும் நகர்வதாக நம் சூழலில் தயக்கங்கள் நிலவுகின்றன.ஆனால் மாற்று சினிமா குறித்த அறிவும்,ஆவணப்பட அனுபவமும்,நவீன நாடக நடிகர்களை தன்னுடைய படைப்புகளில் தொடர்ந்து உபயோகப்படுத்தியும்வரும் இயக்குனர் அம்ஷன்குமார் இத்துறைகளின் ஊடாட்டத்தை ஒரு செறிவான காட்சிமொழியாக இத்திரைப்படத்தில் உருமாற்றி இருப்பதை பல காட்சிகளில் காண முடிகிறது.

முக்கியமாக பிணத்தை எடுப்பதற்கு முன்பாக அந்த தலித் இளைஞர்கள் ஆடும்பறையாட்டமும்,தான் குழியில் தள்ளப்பட்டு மண்வீசப்படுவதாக அந்த தலித் இளைஞன் காணும் முடிவற்ற கனவும் காலம்காலமான கூக்குரலின் குறியீடுகளாக உள்ளன.

வெற்று முழக்கங்களோ,உரத்த குரல்களோ இன்றி ஒரு படைப்புக்கலைஞன்செய்யத்துணியும்இத்தகைய ஆதிக்கத்துக்கு எதிரானஅழகியல் பதிவுகள் தான். இப்பிரச்னை குறித்த அதிகபட்ச கவனத்தை வேண்டுவதாக இருக்கின்றன.

அம்ஷன் குமார்

தோழர் ஆர்.நல்லகண்ணு (ஆர்என்கே) தோழர் சி .மகேந்திரன் ஆகியோருக்கு மனுசங்கடா படத்தை போட்டுக்காட்டினேன். 93வயதான பெருமதிப்பிற்குரிய தோழர் ஆர்என்கே அவர்கள் இந்திய கம்னியூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர். மக்கள் நலப்போரட்டங்களும் தியாகங்களும் நிறைந்த நெடிய வரலாறாக அவரது வாழ்க்கை விளங்குகிறது. படத்தை வெகுவாகப் பாராட்டினார். திரையரங்குகளைத் தாண்டி படத்தை மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பள்ளிகளில் திரையிட்டுக் காட்டவேண்டும் என்றார். மனுசங்கடா பாடல் எழுதிய கவிஞர் இன்குலாப் பற்றி பேச்சு எழுந்தது. படத்திற்காக சமீபத்திய சாதி வெறித்தனங்களை அவர் பாடல் வரிகளில் சேர்த்திருப்பதை கூறினேன். அதனால் பழைய பாடல் வரிகளில் இடம் பெற்ற குளப்பாடி சம்பவம் இதில் இடம் பெறவில்லை என்பதை தெரிவித்தேன்.1980 இல் பெரம்பலூரிலுள்ள குளப்பாடி கிராமத்தில் ஜாதி வெறிபிடித்த சிவசாமி தனது கிணற்றில் தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் குளித்தது பொறுக்கமுடியாமல் நீரில் மின்சாரம் பாய்ச்சிக் கொன்ற சம்பவம் இன்குலாபை பின்வருமாறு எழுத வைத்தது.

`குளப்பாடி கிணத்து தண்ணி புள்ளைய சுட்டது
தண்ணியும் தீயாய் சுட்டது `

தோழர் ஆர் என்கே அவர்கள் அச்சமயம் விவசாய சங்கத் தொழிலாளர் தலைவராக இருந்தார்.அவரது முயற்சியின் விளைவாக அப்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரான திரு.அழகர்சாமி சட்டமன்றத்தில் இதுபற்றிய கவனத்தைக் கொண்டுவந்தார்.

தோழர் சி.மகேந்திரன் எனது நெடுநாளைய அன்புத்தோழர். படம் பற்றி நுணுக்கமாக பல கருத்துகளை தெரிவித்தார். இருவர் பேசியதையும் விரைவில் காணொளியாக யூடிபில் பார்க்க முடியும். அவர்களுக்கு படத்தைக் காட்ட முடிந்தது எனக்கு வாய்த்த அரிய சந்தர்ப்பம்.

காலா என்னும் ராமர் – ரஜினியாயணம்

சமீபத்தில் ‘அவெஞ்சர்ஸ்’ படத்தின் இன்னொரு பகுதி வந்தது. அதில் எல்லா வீரர்களும் வந்திருந்தார்கள். வொண்டர் வுமன், ப்ளாக் பாந்தர், எறும்பு மனிதன், ஹல்க் என்று முந்தைய பகுதிகளில் தனித்தனியாக வந்த அனைத்து அடிதடி சூரர்களும் தோன்றினார்கள். அந்தப் படத்தில் கதையும் கிடையாது; லாஜிக்கும் கிடையாது. ஜாலியாக பார்க்கலாம். அந்த மாதிரி ஒரு படம் காலா.

குருவியின் முட்டை பொரித்தவுடன் இருக்கும் சின்னஞ்சிறு குஞ்சுகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கண் திறந்திருக்காது. உடம்பில் வாய் மட்டுமே பிரதானமாக இருக்கும். ஒரு சிறிய கூட்டில் மூன்று/நான்கு குட்டிகள் இருக்கும். எப்பொழுதும் தன் வாயைத் திறந்து வானத்தைப் பார்க்கும். அம்மா குருவி அவ்வப்போது வந்து அதற்கு தீனி போடும். எவ்வளவு தீனி போடவேண்டும், எந்தக் குஞ்சிற்கு போட வேண்டும், எப்படி கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் அந்த அம்மாவிற்குத் தெரியும். ரசிகக் குஞ்சுகளுக்கு ரஜினி அவ்வாறு தீனி போடுகிறார்.

ரஜினி எப்பொழுதும் கருப்பு ஆடை அணிந்து வருவதால் ‘காலா’ என்று பெயர் வைத்திருப்பார்களோ என சந்தேகப்படும் அளவு, கரிகாலனின் குடும்பத்தினர்கள் எல்லோரும் ஃபேர் அண்ட் லவ்லி போட்டு வெள்ளை நிற சருமத்தைப் பாதுகாக்கிறார்கள்.

சமீபத்திய ஹிந்திப்படம் ஏதாவது நீங்கள் பார்த்தீர்களா? மாயாவி என்னும் வித்தியாசமான பெயர் கொண்ட “ஐயாரி”, திக்குவாயையும் தலித் சிறுவர்களையும் மையப் படுத்திய “ஹிச்சிகி”… அவ்வளவு ஏன்? திரையில் பிரும்மாண்டத்தையும் பார்ப்பனீயத்தையும் போட்டுத் தாக்கிய “பத்மாவத்” எனப்படும் பத்மாவதி? அதன் பிறகும் தமிழில் இன்னும் எண்பதுகளிலேயே வாழும் படங்களை ரசிப்பவர்களைக் காலா குறிவைக்கிறது.

“Power is my life” போன்ற தலைவலி வரவழைக்கும் வசனங்களுக்குக் கூட உயிர் கொடுக்கிறார் நானா படேகர். கல்லூரியில் “பரிந்தா” பார்த்த போதில் இருந்து இவரைப் பார்த்து வியந்து வருகிறேன். ரொம்ப வருடமாக இளைய தளபதி விஜய் போன்றோர் இவரை விட்டு வைத்தது தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த வரப்பிரசாதம்.

இராமரையும் இராவாணனையும் வைத்து படத்தின் உச்ச கட்ட காட்சியில் என்னவோ சொல்ல வந்தார்கள். நானா படேகர் என்பவர் ராமருக்கு எதிரில் இருக்கிறார். ராவணன் என்பவர் ராமனுக்கு எதிரில் இருந்தார். எனவே, நானா படேகர் என்பவர் ராவணனின் குறியீடு.

ராமனின் திருமணம் முடிந்து ஊர் திரும்பும்போது ராமனின் தந்தை தசரதர் கொல்லப்படுகிறார். இங்கும் “வேங்கையன்” அவ்வாறே இறக்கிறார். எனவே, தசரதரின் மகன் ராமனாக, ரஜினி வேடம் கட்டுகிறார் என புரிந்து கொள்ள வேண்டுமா?

அல்லது சீதையின் அக்னி பிரவேசம் மாதிரி, கரிகாலன் அக்னி பிரவேசம் செய்து “ஜரீனா” மீது உள்ள காதலை தூயப்படுத்தி, தான் களங்கமற்றவர் என நிரூபிக்க நினைக்கிறாரா?

அனுமன் தோள் மீது சவாரி செய்யும் ராமர் போல், கரிகாலன் காலாவிற்கும் பைக் ஓட்டுகிறார் ஒருவர். அந்த பைக் வானரத்திற்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் வானர சேனையா?

ராமனுடன் எப்போதுமே கூட இருப்பவர் இலஷ்மணர். இங்கே சமுத்திரகனி கூட துணை நிற்கிறார்.

இவ்வளவெல்லாம் யோசிக்க வேண்டாம்… இந்தப் படத்தைப் பாருங்கள்:

இப்போது இதைப் பாருங்கள்:

 

உடன்வந்தி அருநிழல்

தெளிவு, உறுதி, இறுதி, உண்மை போன்றவற்றையும் மையம், நிர்ணயம், முழுமை என்பவற்றையும் ஓயாமல் வலியுறுத்தும் ஆதிக்க கருத்தியல்களுக்கும் கேள்விகள் இன்றி ஒப்படைப்பையும் முழு நம்பிக்கையைம் கொண்டியங்கும் பொதுக்கள மதிப்பீடுகளுக்கும் இடையில் உள்ள நுண் இணைப்புகள் கேள்வி மறுப்பு, ஆய்வு மறுப்பு என்பவற்றின் மூலமே உறுதிப்படுத்தப்படுகின்றன. இந்த நுண் இணைப்புகளைத் துண்டித்து கேள்விகளைப் பெருக்கும் சொல்லாடல், கதையாடல், எடுத்துரைப்பு என்பவற்றை உருவாக்கும் செயல்தான் சமூகத்தை அறம்சார் அரசியல் நோக்கி நகர்த்தக் கூடியது.
: பிரேம் – ரமேஷ்
16-03-2006

அமெரிக்கக்காரி சிறுகதையை முன்வைத்து

புழல் சிறையில் சிறைக்கம்பிகளை எண்ணும்போதுதான் அந்த ஈ அவன் கண்ணில் பட்டது. அதற்கு மெள்ள பயிற்சி தர ஆரம்பித்தான் அந்தக் கைதி. கயிற்றில் மேல் நடப்பது, ஒற்றைச் சக்கர வண்டியை கயிற்றின் மேல் விடுவது, சாதத்தில் கல் பொறுக்குவது போன்றவற்றை அந்த ஈ கற்றுக்கொண்டது. நாளடைவில் இளையராஜாவின் எல்லாப் பாடல்களையும் ஹம்மிங் கொடுக்கவும் தெரிந்துகொண்டது. “நான் இன்னும் ஒரு வாரத்தில் ரிலீஸ் ஆயிடுவேன். நாம் இரண்டு பேரும் இந்த ஜெயிலை விட்டு வெளியே போனப்புறம் உன்னை வைத்து வித்தை காட்டப் போகிறேன். இருவரும் பெரும் புகழடைவோம்.” என்று அதனிடம் சொல்லி வைத்திருந்தான். விடுதலையும் ஆனான். ஈயை ஒரு வத்திப் பெட்டியில் பத்திரமாக வைத்து, சட்டைப்பையில் கீழே விழாதபடிப் பார்த்துக் கொண்டு வெளியுலகை அடைந்தான். டாஸ்மாக் வளாகத்தில் ஈயை திறந்து விட்டு, ‘அந்த நிலாவத்தான் நான் கையிலப் புடிச்சேன்…’ பாடலைப் பாட வைத்தான். “பார்த்தியா அந்த ஈய?!” என்று சக குடிகாரரிடம் சொல்லவும் அவர் தி இந்து நாளிதழை வைத்து அந்த ஈயைப் பட்டென்றுக் கொல்வதற்கும் சரியாக இருந்தது.

இந்த நகைச்சுவை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமென்றால், நான் ஈ + சிறை எனத் துவங்கியவுடனே என்னை அடித்து நிறுத்தி சிரித்துக் கடந்துவிடுவீர்கள். ஏனென்றால், தெரிந்ததை எதற்கு மறுபடி சொல்லிக் கொண்டிருப்பானேன் – என்பது எண்ணமாக இருக்கும். இதற்கு நாளடைவில் ஜோக் #73 என்று எண் கூட கொடுத்து வெறும் எண்ணைச் சொல்லி நாமிருவரும் சிரித்துக் கொண்டிருக்கலாம். அ. முத்துலிங்கம் எழுதும் சிறுகதைகளைக் கூட இப்படி தடாலடியாக தட்டையாக விமர்சிக்கலாம் என கோகுல் பிரசாத் பதிவு மூலம் தோன்றியது.

அ முத்துலிங்கத்தின் எழுத்துகளிடையே ஆறு வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியாது. இலக்கிய உலகில் இந்த மாதிரி நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும். எதனிலிருந்தும் விலகி நிற்க வேண்டும் எனும் தத்துவத்தை அ முத்துலிங்கம் தவறாக புரிந்து கொண்டு விட்டார் என நினைக்கிறேன்.

அமெரிக்கக்காரி சிறுகதையை நான் இங்கே சுருக்கித் தரப் போவதில்லை. அது மே 2009 காலச்சுவடு இதழில் வெளியாகி இருக்கிறது. அங்கேயே வாசிக்கலாம்.

அந்தக் கதை எங்கே என் வாழ்வை உணரவைத்தது என்றும் எவ்வாறு இன்றைய அமெரிக்காவின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை ஓவியமாகத் தீட்டுகிறது என்பதையும் அ. முத்துலிங்கம் என்னும் மனிதர் எவ்வாறு இந்தப் புனைவில் தெரிகிறார் என்றும் பதிந்து வைக்கிறேன்.

~oOo~

காதலில் கூச்சங்கள் கிடையாது

confidence_confession

ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பது ஒரு வகை. உங்களை நம்பகமானவராக நினைத்து என்னுடைய அத்யந்த ரகசியங்களை தனிமையில் சொல்வது என்பது விசுவாசம் கலந்த துறவுநிலை. இந்த இரண்டு நிலைகளும் வெவ்வேறாகத் தோன்றினாலும் சொல்லும் விதத்திலும் நிபந்தனையற்ற விதிகளில்லா திறந்தவெளிகளை உருவாக்கிக் கொடுப்பதிலும் நேரெதிர் நிலைப்பாடுகளை உருவாக்குபவை. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்காகாரி’ கதை இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்த வகை. உங்களிடம் நம்பிக்கை வைத்து சினேக மனோபாவத்தோடு விஷயத்தைச் சொல்கிறார்.

அமெரிக்கா வந்த புதிதில் அந்தச் சிக்கல் என்னிடம் இருப்பதே எனக்குத் தெரியவில்லை. பெரிய பெரிய புலமையான வார்த்தைகளான rationale என்பதில் ஆரம்பித்து Amazon நிறுவனம் வரை எல்லாவற்றையும் அமெரிக்கர்களிடம் சொல்வேன். அவர்களுக்குப் புரியாது. நாலைந்து முறை சொன்னால்தான் விளங்கும். இப்போது இந்த சிக்கல் என் பேச்சோடு இருப்பது என நான் அறிந்திருக்கிறேன். நிறுத்தி நிதானமாகச் சொல்லப் பார்க்கிறேன். இந்த மாதிரி குழப்பங்களை கதைப் போக்கில் சொல்லிச் செல்லும்போது, ‘அட… மதி என்பவளைப் பார்த்தால் என்னைப் பார்ப்பது போலவே இருக்கிறது!’ என்னும் அன்னியோன்யம் எழ வைக்கும் லாவகம் அனாயசமாக வந்து போகிறது.

இந்த மாதிரி விஷயங்களை எழுதும்போது தன்னிரக்கம், தவிப்பு, சலிப்பு, துக்கம் எல்லாம் மேலிட்டு விடலாம். புரிந்து கொள்ளாத சமூகத்தின் மேல் அறச்சீற்றம் கூட எழலாம். இப்படி சிதைவுக்குள்ளாக்குகிறார்களே எனக் கோபம் தோன்ற வைக்கலாம். அது ஒப்புதல் வாக்குமூல எழுத்து. அதில் முத்துலிங்கத்திற்கு நம்பிக்கை கிடையாது. உங்களை கொம்பு சீவி விட்டு, உணர்ச்சிகளைத் தூண்டுவது அவர் நோக்கமல்ல. ”இந்த மாதிரி எனக்கு நடந்தது… ஏன் அப்படி நடந்தது தெரியுமா?’ என்று நமக்கு நன்கு அறிமுகமானவர்களின் ரகசியங்களை கிசுகிசுவாக இல்லாமல் விசுவாசமாகப் பகிர்கிறார். பாவ மன்னிப்பு வேண்டாம்; புரிந்து கொண்டால் போதும் என்பது அவரின் உத்தி.

~oOo~

a-shadow-on-the-cloud-is-the-shadow-of-this-very-same-plane-on-the-picture-taken-on-a-flight-from-4

உடன்வந்தி அருநிழல்

இதே சிறுகதை குறித்த விமர்சன அறிமுகத்தில் ரா. கிரிதரன் இவ்வாறு எழுதுகிறார்:

கதையில் இலங்கைக்காரி தனது அமெரிக்கக்காரியை வென்று எடுக்கும் இடமாக இப்பகுதி அமைந்துள்ளது.

யுத்தம் நடந்து கொண்டிருக்கும் நகரத்தில் பஸ் பிடித்துச் சென்று அமெரிக்காவுக்குத் தொலைபேசும் தாயார் என்ன குழந்தை, பெயர் என்ன எனப் பெரும் இரைச்சலுக்கு நடுவே கேட்கிறாள். இவள் சொல்வதெல்லாம் குழந்தை ஒரு அமெரிக்கக்காரி என்பதுதான். ஆம், இவளைப் போல் இல்லாமல், அமெரிக்கா எதுவோ அதிலெல்லாம் இயல்பாய் பொருந்திப் போகும் அமெரிக்கக்காரியாக அவள் வளர்வாள்.

விமானப் பயணங்களின் போது நீங்கள் அந்த விமானத்தின் கூடவே பயணிக்கும் நிழலை கவனித்து இருக்கலாம். அ முத்துலிங்கத்தின் எழுத்தும் அது போல் நம்முடன் எப்போதும் வரும். அது நம்மைப் பற்றி சொன்னாலும், நாமே அதில் இருந்தாலும் கூட, விண்ணில் நாம் பறந்து திரிந்தாலும் அதை மண்வாசனையோடு தரையில் கொணர்ந்து நம் பயணத்தை பிரதிபலிக்கும். அதில் நம்முடைய வாழ்க்கையின் சாயல் இருக்கும்; ஆனால், அதற்காக கண்ணாடியைப் போல் பிரதிபலிக்காது. உங்கள் வயதிற்கேற்ப, அனுபவத்திற்கேற்ப, பிரபஞ்ச ஞானத்திற்கேற்ப அது சில சமயம் விரிவடையும்; சில சமயம் சுருங்கும்; சில சமயம் காணாமலே கூட போகும். விமானத்தினுள் பெருச்சாளி ஓடுகிறதா என்பதில் அசட்டையாக தூங்கிவிட்டு, அ முத்துலிங்கம் என்னும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தால் புதிய தரிசனங்கள் கிட்டிக் கொண்டேயிருக்கும்.

அமெரிக்காகாரிக்கும் இந்தியக்காரிக்கும் இலங்கைக்காரிக்கும் என்ன வித்தியாசம்?

நிழலைப் பார்த்தால் மனிதர் தெரிவார். நிஜத்தைப் பார்த்தால் என் தலைமுடியின் வண்ணம் தெரியும். அது பிறந்த தேசத்தையும் வயதின் ரேகையையும் உணர்த்தும். தோலின் நிறம் காட்டிக் கொடுக்கும். குரல் எடுத்து பேசினால் இங்கிலாந்தா ஆப்பிரிக்காவா ஆசியாவில் சீனாவா ஜப்பானா என்று அறியலாம். உங்களின் மொழி, உடை எல்லாமே உங்களைக் குறித்த பிம்பங்களை உணர்த்தும். தெற்காசியரா… இப்படித்தான் பேசுவார்; இன்ன தொழில் செய்வார். ஆப்பிரிக்க அமெரிக்கரா… கொண்டாட்டத்தில் திளைப்பவராக இருக்கக் கூடும் என்று முன்முடிவுகளை நீங்கள் ஒரு வார்த்தை சொல்வதற்கு முன் அடுத்தவரை ஒருதலைப்பாடான பாதைக்கு இட்டுச் செல்லும்.

இதில் நிழலைப் பார்த்தால் எப்படி அமெரிக்காகாரி, எவர் இலங்கைக்காரி என்று கண்டறிவோம்? இருவரும் வீடு வாங்க பணம் சேமிக்கிறார்கள். இருசாராரும் தங்களின் கணவர்களைத் தேர்ந்தெடுக்க சில பொதுவான சித்தாந்தங்களை வைத்திருக்கிறார்கள். ஒருவர் வேகமாக முடிமெடுப்பவர், இன்னொருவர் பந்தத்திற்காக எதையும் செய்பவர் என்றெல்லாம் பிரிக்கலாம். அதற்குத் தகுந்த வினா எழுப்பி, ஒவ்வொருவரின் குணாதிசயங்களைக் கண்டடையலாம். அது சாத்தியம். ஆனால், அமெரிக்காகாரி இப்படித்தான் நடந்துப்பாள் என்றும் இலங்கைக்காரி அப்படித்தான் செய்வாள் என்பதும் சொல்லமுடியாது. அதை இப்படி போட்டுடைத்த மாதிரி சொல்லாமல் பூடகமாக உணர்த்துவது எப்படி?

அ முத்துலிங்கத்தின் கதையைப் படியுங்கள். உங்களுக்கும் சூட்சுமமாக விளங்கலாம்.

டால்ஸ்டாயின் அன்னா கரீனினாவின் தொடக்க வாசகம் புகழ்பெற்றது. ‘மகிழ்ச்சியான எல்லா குடும்பங்களும் ஒரேமாதிரியாக இருக்கின்றன, துயரமான குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் துயரப்படுகின்றன’. அதை இந்தக் கதையில் இவ்வாறு வருவதாக சொல்லலாம்: “மனிதர்களின் அடையாளங்கள் எல்லா நாடுகளிலும் ஒரேமாதிரியாக இருக்கின்றன. அவர்களின் குணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் வசப்படுகின்றன.”

~oOo~

உண்மை கலந்த நாட்குறிப்புகள்

‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்னும் முத்துலிங்கம் எழுதிய நாவலின் முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்:

டேவிட் பெனியோவ் என்ற புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஒரு நாவல் எழுதினார். 1942ல் ஜேர்மன் படைகள் ரஸ்யாவின் லெனின்கிராட் நகரத்தை முற்றுகையிடுவதுதான் நாவலின் பின்னணி. பதினெட்டு வயது இளைஞராக அப்போஉது இருந்த அவருடைய தாத்தா, டேவிட்டுக்கு அந்த சம்பவங்களை விவரிக்கிறார். எவ்வளவு விவரித்தாலும் டேவிட்டுக்கு அவை நாவல் எழுதும் அளவுக்கு போதுமானவையாக இருக்கவில்லை. ‘அன்று காலநிலை என்ன? ஆகாயம் எந்த நிறத்தில் இருந்தது? அந்தப் பெண்ணின் தலைமுடி குட்டையானதா, நீளமானதா?’ என்று தாத்தாவை கேள்விகளால் திணறடித்தார். அதற்கு தாத்தா சொன்ன பதில், ‘டேவிட், நீதானே நாவலாசிரியர். இட்டு நிரப்பு. அதுதானே உன் வேலை.’

டேவிட்டுக்கு அவர் தாத்தா சொன்ன புத்திமதிகள், நினைவலைகள் எழுதும் எவருக்கும் தேவை என்றாலும், வாசகருக்கும் தேவை.

உதாரணத்திற்கு லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரேனினா நாவலை எடுத்துக் கொள்வோம். அது லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாயைப் பற்றியது அல்ல. ஆனால், அவரைப் போன்ற மனிதர்களைப் பற்றிய சித்தரிப்பு அந்த நாவல். அல்லது, தான் எப்படிப்பட்ட மனிதராக இருந்திருக்க வேண்டும் என நினைத்தாரோ அதன் பிரதிபலிப்பாக அந்தக் கதைமாந்தர்கள் இருக்கிறார்கள். அந்தக் கதாமாந்தர்கள் சில சமயம் உங்களுக்கு அசூயை தரலாம்; அல்லது உத்வேகம் தரலாம். இரண்டுமே நாவலாசிரியரின் வெற்றியே.

முத்துலிங்கம் குறித்து வாழ்க்கை வரலாறு எழுதுபவர்கள் சீக்கிரமே சலித்துவிடுவார்கள். அன்றாடம் என்ன செய்தார், எந்த ஊரில் தங்கினார், எவருடன் உரையாடினார், என்ன கோப்புகளை முன்னெடுத்தார், எவ்வாறு பழகினார், எதைக் குறித்து கதைத்தார், எப்பொழுது உண்டார் என்பதெல்லாம் வெகு எளிதாக கண்டுபிடிக்கலாம்; பதிவு செய்யலாம். அவர் எதைக் குறித்து யோசித்தார் என்பதும் இருபது புத்தகங்களுக்கு மேல் அச்சில் வெளிவந்து அனைவருக்கும் ஏற்கனவே வாசிக்கக் கிடைக்கிறது. அப்படியானால் விமர்சகரின் கடமை என்பது ’அமெரிக்காகாரி’ சிறுகதையோ, நாவல் விமர்சனமோ, கதாசிரியரின் கருத்தொட்டி, தொக்கி நிற்கும் ஆசிரியரை புனைவில் இருந்து விடுவித்து பொருள்காணுதல் என்பதேயாகும்.

சுதந்திரம் அடையாத சிலோனில் பிறந்தவர். பதின்ம வயதில் இலங்கை விடுதலை அடைவதைப் பார்க்கிறார். மின்சாரம் இல்லாத கிராமத்தில் வாழ்க்கையைத் துவங்கியவர். பெரிய குடும்பம் – ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். அங்கிருந்து உலகெலாம் பயணிக்கிறார். நவீன வசதிகளின் கண்டுபிடிப்பையும் அதன் பயன்பாடையும் பார்க்கிறார். அவருடைய வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால், ‘தென்னம் பொச்சில் நெருப்பை வைத்து மூட்டி ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு நெருப்பை எடுத்துச் சென்று, ஒரு குச்சி நெருப்பு ஒரு கிராமம் முழுவதற்கும் போதுமானதாக இருந்ததில்’ வாழ்க்கையைத் துவங்கி, ஒரு நொடி இணையம் இல்லாவிட்டால் வாழ்க்கை சலித்து அபலையாய்த் தவிக்கும் நகர சமூகத்திற்கு குடிபெயர்ந்தவர்.

roulette-wheel

சூதாட்ட மையங்களில் ரூலே சக்கரத்தைப் பார்த்திருப்பீர்கள். அந்தச் சக்கரத்தில் பல்வேறு எண்கள் தாறுமாறாக கலைந்து கிடக்கும்; சிவப்பு, கருப்பு நிறம் இருக்கும். சக்கரத்தை சுழலவிட்டு பந்தை அதன் தலையில் போடுவார்கள். பந்தோ எங்கும் நிற்காமல் குதித்து, தாவி ஓடும். எந்த எண்ணில் பந்து நில்லாமல் ஓடாமல் இறுதியில் நிலைத்திருக்கிறதோ, அந்த எண்ணில் பந்தயம் கட்டியவருக்கு வெற்றி. அன்றைய சிலோன் இதைப் போன்ற சூதாட்டக் களம் என்றால், சுதந்திரம், விடுதலைப் புலி, டொனால்ட் டிரம்ப் என்று எந்தக் காலகட்டத்தை வேண்டுமானாலும் இதே போன்ற நிலையற்ற சுழல்பந்தின் குதியோட்டத்தோடு தொடர்பாக்கலாம். ஆனால், அ. முத்துலிங்கம் தன் ஒவ்வொரு கதையிலும் சுழலுகிறார். மாணவன், அசட்டைப் பேர்வழி, மோசடி பிரகிருதி, போர்வீரன், வாத்திய வாசிப்பாளர், எல்லாம் தெரிந்தவர், சூதாட்டக்காரர், துப்பறியும் சாம்பு, நிருபர், ஆசிரியர், தந்தை, தாயுமானவன், பண்டிட், இயற்கையை நேசிப்பவர், போராளி, நம்பிக்கைவாதி – உங்களுக்கு இதில் எத்தனை பேர் இந்தக் கதையில் தெரிகிறார்கள்?

பெருநகரங்களின் தனிமை

எனக்கு ஒரு இடத்தை எடுத்துக் கொண்டு, அந்த நகரத்தின் இண்டு இடுக்குகளையும், பிரதேசத்தின் எல்லைகளையும், நாட்டின் குணங்களையும் ஊடே கொடுத்துக் கொண்டு, கதை சொல்லும் பாணி பிடிக்கும். சொல்வனத்தில் வெளியான இந்தக் கதையை வாசித்தவுடன் ZYZZYVA இதழில் Héctor Tobar எழுதிய “Secret Stream” கதை நினைவிற்கு வந்தது.

அந்தக் கதையில் ஒரு இளைஞனும் இளைஞியும் அகஸ்மாத்தாக சந்திக்கிறார்கள். இளைஞனோ லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் சைக்கிளில் பயணித்து விநோத வரைபடங்கள் தயாராக்கி நண்பர்களுடன் நகரின் ஆழங்களைக் கண்டறிபவன். இளைஞியோ ’எல்லே’ (LA) நகரின் நீர்த்தளம் காண்பவர். தொலைந்து போன நதிகளை அறிந்து கொள்ள விழையும் தன்னார்வலர். இருவரும் தனியர்கள். கரணம் தப்பினால் காதல் வந்துவிடும். ஆனால், உருவாகவில்லை. அவர்கள் எல்.ஏ. நகரத்தின் ஹாலிவுட் மலைப்பகுதிகளில் உலா வருகிறார்கள். காடு, மேடு, தனியார் சொத்து, அத்துமீறி உள்நுழைதல் எல்லாம் சாகசமாகச் செய்கிறார்கள்.

என்னுடன் நட்பு கொண்ட, கூட வேலை பார்த்த எவரோ எப்போதாவது என்னுடைய நகரத்திற்கு வருவார்கள். என்னை சந்திக்க இயலுமா என வினவுவார்கள். அவர்களின் பிசி கடமைகளிலும் எனக்காக நேரம் ஒதுக்குவார்கள். கொஞ்ச நேரம் அவர்களுடன் பழங்கதை பேசுவேன்; கொஞ்சம் மது; நிறைய கொண்டாட்டம் நிறைந்த தருணங்கள். அவர்கள் என்னை உதாசீனப்படுத்தி, ஊருக்கு வந்த சுவடே தெரியாமல் போயிருக்கலாம். என்னுடைய அதிகப்பிரசங்கித்தனங்களும் போதாமைகளும் அவர்கள் உள்ளூற அறிந்தே இருக்கிறார்கள். இருந்தாலும் என்னை சந்திப்பதை முக்கியப்படுத்தி, எனக்கு மதிப்பு கொடுத்து, நேரம் ஒதுக்குவார்கள். அது கோடையைப் போல் சுகமானது (“That Summer Feeling”) என்பார் Jonathan Richman.

சொல்வனத்தில் வெளியான இந்தக் கதை அந்த அந்தர்வாகினி ஆற்றுக்கு எதிராக ஓடுகிறது. இந்தக் கதையில் வரும் மூன்று, நான்கு துண்டுச் சம்பவங்களை எது இணைக்கிறது என்று உடனடியாகப் புலப்படாது. இளைஞன், முதியவர், பின் குழந்தை என்று மூன்று பருவத்தில் Protagonist-ஐ தொடர்பவர்கள் உண்டு. என்ன பிராயங்களில் இந்த மூவரைக் கடக்கிறாள் என்பதும் தெளிவாக இராது. சம்பவங்களில் முதல் சம்பவம் சுட்டுகிற சிறு அச்சம் இரண்டாவதில் இல்லை, மூன்றாவதில் அந்த அச்சம் சொல்லப்பட்டாலும் ஏனென்பது தெளிவில்லை.

காலம் ஒரு myth , மாயை என்பதற்கான குறியீடு. இந்தக் கதை வாசகனின் கற்பனையில் பல அடுக்குகளோடு, பல விதமான சாத்தியக்கூறுகளோடு விரிவடையும் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்டிருக்கிறது. எனக்கு இந்த மாதிரி பூடகமான விஷயங்களைச் சொல்ல இன்னும் மெனக்கிட வேண்டும் என்பது சொந்தக் கருத்து. அதாவது முன்னூறு பக்கம் எழுதிவிட்டு, உள்ளடக்கமாக சில விஷயங்களை சொருகியிருக்கிறேன் என்றால் நம்புவேன்; அந்தப் புனைவை சிரத்தையாக வாசிப்பேன். முன்னூறு வார்த்தைகள் எழுதிவிட்டு ’பொருள் தொக்கி நிற்கிற மாதிரி எழுதுகிறேன்’ என்றால் பொறுமையின்மை என்றே சொல்லவேண்டும்.

கதை என்றால், எழுதப்பட்ட இடத்தில் வசிப்பதற்கு மனம் ஏங்க வேண்டும். அல்லது அந்த இடத்திற்கு செல்வதற்கே கூச்சமும் அச்சமும் எழ வேண்டும். கதையில் உலவும் கதாபாத்திரங்களுடன் உரையாட, அந்த உரையாடல் நீங்காமல் தொடர்ந்து கொண்டேயிருக்க பிரியப்பட வேண்டும். புனைவில் சொல்லப்பட்டவர்களிடம் கேட்பதற்கு கேள்விகள் எழ வேண்டும். இந்தக் கதையில் அந்த இலக்கு நிறைவேறுகிறது. எனவே, படிக்கக் கூடிய கதை.

கதையை நீங்களும் வாசித்து உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள்.

clock_brain_human_rock_tree_oil_water_flow_house_home_think_alone_art_painting_imagine