Tag Archives: People

எழுத்தாளர் ரா கிரிதரன் உடன் பேட்டி – சொல்வனம் நேர்காணல்கள்

ஒவ்வொருவரைப் பற்றியும் அறிமுகக் குறிப்பு வேண்டும். ஒவ்வொரு படைப்பாளியுடனும் உசாவ வேண்டும். அனைத்து சமகால இலக்கியகர்த்தாக்களுடனும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

அருங்காட்சியகங்கள் சென்றிருப்பீர்கள். அதில் ஒவ்வொரு ஓவியத்தின் பக்கத்திலும் ஒரு குறிப்பு இருக்கும். எந்த வருடம் வரையப்பட்டது; எவர் வரைந்தார்; எந்த மாதிரிச் சூழலில் வரைந்தார்; அதற்கு முன் அவருடைய முக்கிய படைப்புகள் என்னென்ன? அதற்குப் பின் அவருடைய ஆக்கங்கள் எவ்வாறு உருமாறின? யாரைப் பற்றி அல்லது எதைப் பற்றி இந்த ஓவியத்தைப் படைத்தார்?

இன்னும் கொஞ்சம் ஆராய்ந்தால், அந்தத் தளத்தின் ஈசானிய மூலையில், அந்தத் தளத்தில் இடம் பெற்ற ஓவியர்களைக் குறித்தும் கண்டெடுக்கப்பட்ட காலகட்டங்களைக் குறித்தும் அரும்பொருட்களைக் குறித்தும் விரிவான வெளியீடு இருக்கும். அதில் ஓவியரின் பேட்டிகள், தற்கால ஆய்வாளர்களின் விமர்சனங்கள், முந்தைய ஆய்வுகள் குறித்த மேற்கோள்கள் – இன்ன பிற தாங்கிய நூலோ புத்தகமோக் காணக்கிடைக்கும்.

பேட்டிகளும் நேர்காணல்களும் முக்கியமானவை. முன்னுமொரு காலத்தில் காலச்சுவட்டின் ஒவ்வொரு இதழிலும் பாரிஸ் ரிவ்யூ போல் விரிவான சந்திப்புகள் காணக்கிடைத்தன. இன்றையச் சூழலில் படைப்பாளிகளும் இலக்கிய ஆளுமைகளும் பெருகி விட்ட காலத்தில் இந்த மாதிரி ஆழமான உரையாடல்கள் பன்மடங்கு அதிகரித்திருக்க வேண்டும். இதை இக்காலத்தில் அருண்பிரசாத் சற்றே சமரசங்களுடன் செய்கிறார். ஹிந்து நாளிதழின் தமிழ்ப் பதிப்பில் வெளியாவதால், அச்சுப் பதிப்புகளுக்கே உரித்தான இட நெருக்கடியுடன் அவர் செயல்படுகிறார்.

நேர்காணல்கள் வரலாறு – வாசிப்பு – அறிவியல்

ஆனால், இப்பொழுது இந்த மாதிரி தீவிர வாசிப்பும் அதன் தொடர்ச்சியான விரிவான பேச்சும், அதன் இறுதியில் அவற்றை வரிவடிவத்தில் பதிவாக்குவதும் அருகியேக் காணப்படுகிறது.

இருபதாண்டுகள் முன்பு நண்பர் பா ராகவனும் நேசமுடன் / கல்கி ஆர் வெங்கடேஷும் எனக்கொரு ஆலோசனையை முன்வைத்தார்கள். ஒருவரின் எல்லாப் புத்தகங்களையும் எடுங்கள். தி ஜானகிராமனோ அகிலனோ ஃபிலிப் ராத்தோ – அவரின் ஆக்கங்கள் அனைத்தையும் வாசியுங்கள். எதையும் விடாதீர்கள். கட்டுரைகள், துணுக்குகள், வாழ்க்கை வரலாறுகள், நினைவுக் குறிப்புகள், சண்டைகள், சச்சரவுக் கடிதங்கள், அறிவியல் புனைவுகள், துப்பறியும் கதைகள், சமூகக் கதைகள், அபுனைவுகள், ஓவியங்கள், கிறுக்கல்கள், கவிதைகள், மொழியாக்கங்கள், புனைப்பெயரில் எழுதியவை, அவர் எழுதியிருக்கக் கூடியதாக நம்பப்படும் கர்ண பரம்பரைக் கட்டுக்கதைகள் – எல்லாமும், எதையும் வாசியுங்கள்.

ஒரு வாரமோ / ஒரு மாதமோ கெடு வைத்துக் கொள்ளவும். அதன் பின் அவற்றைப் பற்றி நீங்கள் எடுத்தக் குறிப்புகளைத் தொகுங்கள். அவரிடம் என்ன கேள்வி கேட்க வேண்டுமோ, அவரின் படைப்பு குறித்த சந்தேகங்களைப் பற்றியோ, அவர் எழுத்து குறித்த விமர்சனங்களை முன் வையுங்கள். சும்மா, ஒரேயொரு சிறுகதையையோ, ஓரிரு நாவலையோ வாசித்துவிட்டு – எந்தக் கேள்வியையும் முன்வைக்காதீர்கள்.

நான் வி எஸ் நைபாலை கையில் எடுத்தேன். நான் கேள்விகளைத் தொகுப்பதற்குள் அவர் போய் சேர்ந்துவிட்டார்.

எனவே, இனிமேலும் இவ்வாறு முழுக்கக் காத்திருக்கப் போவதில்லை. ஒருவரின் அனைத்துப் படைப்புகளையும் முழுக்க வாசித்து, ஜீரணமான பின்பே – அவரிடம் கேள்விகளைக் கேட்கப் போவதில்லை. அந்த முடிவின் தொடக்கமாக கிரிதரன் அவர்களை #சொல்வனம் இதழுக்காக பேட்டி கண்டேன்.

அதை #solvanam இதழில் வாசிக்கலாம்.

க.நா.சு.தான் வென்றார் – தமிழவன்

திராவிடம் – தமிழ்த் தேசம் – கதையாடல்: ஒரு நூற்றாண்டுத் தமிழ்ச் சிந்தனை வரலாறு – நூலில் இருந்து ஒரு நறுக்

நான் கேரளத்தில் எம்.ஏ. முதலாண்டுக்குச் சேர்ந்த போதுதான் இலக்கியம் என்பது கதை, நாவல், கவிதை இவற்றைத் தாண்டிய ஒன்று என்பது விளங்கியது. ஆனால், அதற்குப் பிறகு எவ்வளவோ வாசித்தாலும் இன்றும் ‘இதுதான்’ என்று ஒரு வாக்கியத்தில் இலக்கியம் பற்றிச் சொல்ல என்னால் முடியவில்லை.

அதனால்தான் இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வியோடு மல்லாடியவர்களைப் பற்றி கேள்விப்படும் போது அவர்களைச் சந்திக்க விரும்பியிருக்கிறேன். இலக்கியம் என்றால் என்ன என்ற தலைப்பில் ழான் பவுல் சார்த்தர் எழுதிய நூலை என் அலமாரியில் எப்போதும் வைத்திருக்கிறேன்.

இன்றுவரை தமிழில் இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வியோடு வாழ்ந்தவர்களில் முக்கியமானவர் க.நா.சு. என்பது என் கருத்து. வேறு ஏதாவது வேலை செய்தால் இந்தக் கேள்வி மனசிலிருந்து மறைந்துவிடும் என்று பயந்து எந்த வேலையும் செய்யவில்லை க.நா.சு.

க.நா.சு.வை முதன்முதலில் நான் சந்தித்தது பெங்களூரில் நண்பர் ப.கிருஷ்ணசாமியின் வீட்டில். க.நா.சு. ஒரு வாரத்துக்கு மேல் வந்து தங்கினார். கையோடு ஒரு சிறிய போர்ட்டபிள் டைப்ரைட்டர் கொண்டு வந்திருந்தார். ஓய்வு நேரத்தில் அதில் ஆங்கிலத்தில் டைப் செய்தது தவிர எப்போதும் பேசிக் கொண்டேயிருந்தார் என்பது என் நினைவு. இன்னுமொரு நினைவு வெள்ளைக் கதராடையில் எப்போதும் காட்சி தந்தார்.

இந்தக் காலத்துக்குச் சற்று முந்தி நான் அப்போது தமிழகத்தில் இருந்த நக்சலைட்டுகள் ஓரிருவரைப் பார்த்திருக்கிறேன். அதாவது எமர்ஜென்சி நடைமுறையில் இருந்த காலகட்டம். அவர்கள் ரொம்பவும் கோபமாக இருந்தார்கள் என்பது என் கருத்து.

இந்த இரண்டு ரக மனிதர்களும் மற்ற தமிழர்களைவிட தனிமைப்பட்டு ஒரு வகையான இரகசிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மற்ற தமிழர்கள் தமிழ்சினிமாவில் தங்கள் தங்கள் கனவுகள் நிறைவேறியதைக் கண்டார்கள். இன்னும் சொல்லப்போனால் கனவை நிறைவேற்றியவர்களுக்கு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஓட்டு போடக் கற்றிருந்தார்கள்.

ஆனால், க.நா.சு. அப்படிப்பட்டவர் அல்லர் என்பது அவரைப் பார்த்தவுடன் தெரிந்தது. அவருடைய வெள்ளைக் கதர் ஜிப்பாவும் (அவர் காலத்தில் எழுத்தாளர்கள் ஜிப்பா போட வேண்டும். புதுமைப்பித்தன் புகைப்படம் ஜிப்பாவோடுதான் எப்போதும் பிரசுரிக்கப்பட்டது), அவருடைய கறுப்புக் கண்ணாடியும் என்னை அவர் வேறுபட்டவர், வேறொரு காலத்திலிருந்தும் வேறொரு இடத்திலிருந்தும் வந்தவர் என்று நினைக்க வைத்தது. அதுபோல் அவருடைய ஆங்கிலம்.

Thamizahvan_Books_Dravidam_Tamil_Desam+Kadhai_Aadal

நன்றி: திராவிடம் – தமிழ்த் தேசம் – கதையாடல்: ஒரு நூற்றாண்டுத் தமிழ்ச் சிந்தனை வரலாறு
எழுதியவர் தமிழவன்
முதல் பதிப்பு: 2014
வெளியீடு: அடையாளம்
விலை: ₹ 180
பக்கங்கள்: 237

சனி காலையில் நடுத்தர வர்க்கத்தின் பதுங்கியிருக்கை

Theater_Cinema_Waiting_Cars_TV_Series_Reality_Television_New_Yorker_Cartoons_3D_Projection

“This one’s just like being at a real theatre.”

கார் ரிப்பேருக்காக காத்திருக்கும் உணவகத்தில் பார்த்தவை.

1. கணினியோடு வருபவர்கள் ஒதுக்குப்புறமாக, தனியறையில் பதுங்குகின்றனர்

2. பார்ப்பதற்கு பசுமையான இல்லத்தரசிகள் வந்தால் கவுண்ட்டருக்கு பக்கத்தில் எல்லோரும் புழங்கும் காபி மெஷின் பக்கத்திலேயே நடுநாயகமாக அமர்கின்றனர்.

3. தினசரியும் அச்சுப் புத்தகமும் வைத்திருப்போர், ஜன்னலோரமாக, புறமுதுகிட்டு உட்கார்கின்றனர்.

4. சிறுவயதினருடன் வருவோர் சோபாவில் பக்கவாட்டில் உட்கார்ந்தாலும், ருஷியாவும் அமெரிக்காவும் போல் ஒரு உரையாடல் கூட இல்லாமல், ஒருவர் கைபேசியிலும், இன்னொருவர் விட்டத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

5. மடிக்கணினிகள் காலாவதியானவை. எல்லோருக்கும் கைக்கு அடக்கமாக சிலேட்டுடன் திரிகின்றார்கள்.

6. அற்பத்திற்கு பவுசு வந்தால் அ.ரா.கு.பி. என்பது போல், தலையில் தொப்பியுடன் ஏன் உலாவருகின்றனர்?

எல்லாரையும் வேடிக்கை பார்க்க வருபவர்கள் எங்கு உட்காருகிறார்கள்?

பூதாகாரமான 17 இன்ச் கம்ப்யூட்டரை தங்கள் முன் மறைத்துக் கொண்டு, ஃபேஸ்புக்கில் புரட்சி செய்துகொண்டு, சி.என்.என்.னில் கத்தும் டிவி செய்திகளைப் புறக்கணித்து – பதிவெழுதுகிறார்கள்.

அனுராகமாலை எடுத்தேற்றம்

மேலாளர் கனவில் வருவது அவ்வளவு சிலாக்கியமில்லை. எனினும் வந்திருந்தார்.

“போன ப்ராஜெக்ட் நன்றாக செய்திருக்கிறாய்!”

“இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் கலக்கிறீர்கள். இலவசகொத்தனார் பார்த்தால் பிலுபிலுவென்று ஆடி மாச சாமியாடுவார் சார்!”

”உனக்கு அடுத்த வேலை தயார். நம் தலைநகரமாம் வாஷிங்டன் டிசி செல்கிறாய். அங்கே படு ரகசியமான அடுத்தகட்ட ஆளில்லா விமானத்திற்கு நீதான் பொறுப்பு.”

காட்சி அப்படியே கட் ஆகிறது. நாலு பேர் தீவிரமான கலந்தாலோசனையில் இருக்கிறோம். ஒருத்தரைப் பார்த்தால் திருவள்ளுவர் போல் குருலட்சணம். இன்னும் இருவர் சிவகார்த்திகேயனின் நாயகிக்கான தேர்ந்தெடுப்பிற்காக வந்தவர்கள் போல் துள்ளலாக விளம்பர அழகி போல் காணப்படுகிறார்கள். கிட்டத்தட்ட வடிவமைப்பை முடித்து விட்டோம். பரிசோதனைக்குத் தயார்நிலையில் இருக்கிறோம்.

பணிகளைத்தான் எவ்வளவு சீக்கிரமாக கனவு முடித்துக் காட்டுகிறது. இதைத்தான் ’கனவு காணச்சொனார்!’ கலாம்.

செய்தவற்றை சொல்லிக்காட்ட மேலிடத்திடம் செல்கிறோம். அவர்களோ, சோதனை மாந்தர்களாக எங்களையேத் தேர்ந்தெடுத்து தானியங்கி விமானிகளை ஏவுகிறார்கள். சைதாப்பேட்டை கொசுவிடமிருந்தும் மந்தைவெளி மாடுகளிடமிருந்தும் ஓடி ஒளிந்தவனுக்கு drone எம்மாத்திரம். விமானியில்லா விமானத்திற்கு மாற்றாக ஏவுகணைகளை அனுப்புகிறேன். பயனில்லை. திடீரென்று எட்வர்டு ஸ்னோடென் கூட பறந்து பறந்து தாக்குகிறார். பின்னர் அவரும் எங்கோ ஓடி ஒளிந்துவிட்டார்.

“நியாயமாப் பார்த்தா என்னை பார்த்துதான் இந்த டிரோன் அனுப்பிவைக்கப்பட்டிருக்கணும்!” என்று சாரு நிவேதிதா சொல்கிறார். “நீங்க லத்தீன் அமெரிக்க கதைதானே மொழிபெயர்க்கறீங்க! இனிமேல் இரானிய கட்டுரைகளை கொண்டாங்கனு” சொல்லிட்டு அவரிடமிருந்து தப்பிக்கிறேன்.

“நீங்க இப்போ கண்விழிக்கலாம்! உங்க சாதனம் ஒழுங்கா வேலை செய்யுது. எல்லாவிதமான இடர்களிடமிருந்தும் அதற்கு தப்பிக்கத் தெரிஞ்சிருக்கு! ஆனா”.

”தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை… ’ஆனா’”.

“சரி… அபப்டினா, But போட்டுக்கறேன். உங்களுக்கு உடற்பயிற்சி போதாது. உங்க விமானம் ஓடற மாதிரி நீங்க ஓட மாட்டேங்கறீங்க. உங்களுக்கு இந்த காண்டிராக்ட் கிடையாது.”

இதைத்தான் Rice Ceiling என்கிறார்களா!?

நேற்றைய கதைக்கு செம வரவேற்பு.

சொல்புதிது குழுமத்தினர் Show, don’t tell என்றார்கள். இதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த யுவகிருஷ்ணா “அப்படியானால், உங்க கூட வேலை செஞ்ச அந்த இளம்பெண்களின் கவர்ச்சிப் படங்களை ப்ளோ-அப் ஆக போட்டிருக்கணும்.” என்றார்.

“மழையில் நனையலாம். அணைக்கட்டில் தண்ணீர் தேக்கி வைப்பதை போல் காட்ட முடியாத சொல்லில் வடிக்க முடியாத அனுபவம். அது போல் கனவு தேவதை ஸ்டரக்சரா ஆப்ஜெக்டா என்பதை C# தான் சொல்லணும்.”

நக்கீரர் எட்டிப் பார்த்தார். “உமக்கு நேர்ந்த அனுபவத்தை மட்டுமே நீங்கள் எழுத முடியும். அது மட்டுமே அகத்திறப்பை தரும். உங்களுக்கு டிரோன் உண்டா? அது துரத்தியதா? எப்படி பிழைத்தீர்கள்? என்பது இல்லாத பதிவு பொருட்குற்றம் கொண்டது!”

“ஏன்யா… உம்மை கொசு கடிச்சதே இல்லியா? எண்பது கோடி ஆண்டுகள் முன்பே கல் தோன்றி முன் தோன்றா தமிழகத்தில் டிரோன் கொண்டு சோழனும் பாண்டியனும் சண்டையிட்டது சரித்திரம்!”

இப்பொழுது ஹரிகிருஷ்ணன் முறை. “என்ன ஹரியண்ணான்னு சொன்னால் போதும். ’இலங்கு வெஞ்சினத்து அம்சிறை எறுழ்வலிக் கலுழன் உலங்கின் மேல் உருத்தன்ன நீ குரங்கின் மேல் உருத்தால்’ என்கிறான் கம்பன். இதன் தாத்பர்யமாவது என்னவென்றால், பட்டாம்பூச்சி விளைவைக் கண்டு பயப்பட்டு தோட்டத்தையே உருவாக்காமல் விடக்கூடாது. மைரோசாஃப்ட் முதல் அப்பிள் வரை பிழை இல்லாத மென்பொருளை உருவாக்குவதில்லை. உலங்கைக் கண்டு அஞ்சேல்!”

“இதுதான் இன்றைய தமிழ் உலகமா?” என்றபடி இராம.கி அய்யா புகுகிறார். “Malinga என்பதில் இருந்து வந்ததுதான் உலங்கு. மளிங்கா தலைமுடியில் கொசு மாட்டிக் கொண்டுவிடும். உள்ளங்கையில் அடிப்பதால் உலங்கு என்றும் ஆனதாக சொல்வோர் உண்டு. அது பிழையான கருத்து. எல்லோரும் கொசு வந்தால் ’மளிங்க’ என விளித்தனர். இது மளிங்க > அடிங்க் > உலங்கு என்றானது.”

தமிழ் என்றவுடன் ஃபெட்னா நச்சுநிரல் விழித்து தானியங்கியாக பதிலிடத் துவங்கியது. ”அமெரிக்காவில் தமிழ் உலகம் என்றால் ஃபெட்னா. நாங்கள் கோத்திரம் பார்த்து செவ்வாய் தோஷம் நீக்கி ஒரே சாதியில் ஜாதகக பரிவர்த்தனத்தை வருடா வருடம் ஜூலை நான்கு நடத்துகிறோம். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. ‘நாம் தமிழர்’. நியு யார்க்கில் கொசுத் தொல்லை அதிகம். பிரகாஷ் எம் சுவாமி என்னும் கொசு எங்களைக் கடித்ததுண்டு.”

ஆட்டத்தை தவறவிடாத மனுஷ்யபுத்திரன், “அமெரிக்கரின் காதல் என்பது சிற்றோடை போன்றது. சமயத்திற்கேற்ப, தேவைக்கேற்ப, பருவத்திற்கேற்ப, முக்கியத்துவத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். தமிழனின் காதல் என்பது காவிரி போல… கர்னாடகா திறந்தால் மட்டுமே வளரும். தமிழச்சியின் காதல் என்பது பாக்கெட் தண்ணீர் போல் காசு கொடுத்தால் மட்டுமே கிடைக்கும்.”

சொம்படி சித்தர் விடுவாரா… “அமெரிக்கரின் காதல் என்பது RAM போன்றது. சமயத்திற்கேற்ப, தேவைக்கேற்ப, பருவத்திற்கேற்ப, முக்கியத்துவத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். தமிழனின் காதல் என்பது hard disk போல. சூடாகும்… தமிழச்சியின் காதல் என்பது cloud storage போல் எவருக்கு வேண்டுமானாலும் திறக்கும்.”

நொந்து போன வேல்முருகன் சொன்னார். “இதற்கு பெயரிலி சமஸ்தானமே பெட்டர் அப்பா!”

Kutti Revathi: குட்டி ரேவதி

Kutti_Revathi

சித்த மருத்துவராய்ப் பணியாற்றும் இவர், சென்னையில் வசிக்கிறார். சில செய்திப் படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். 15-6-1974-இல் திருவெறும்பூரில் பிறந்தவர். இனவரை மருந்தியல் துறையில் (சித்த மருத்துவத் துறையில்) முனைவர் பட்ட ஆராய்ச்சி. இவர் 90களில் எழுதத் தொடங்கினார். ‘பனிக்குடம்’ எனும் இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்தார், பெண்சார் திரைப்படங்கள் குறித்துத் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். பெண்சார் திரைப்பட இயக்கமான ‘கண்ணாடி’யில் முனைப்பாகப் பங்கு கொண்டுள்ளார். சில செய்திப் படங்களின் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். தற்போது துணை இயக்குநராக இருக்கிறார். ஆங்கிலக் கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார்.

அவர் சிறந்ததொரு புகைப்படக் கலைஞர். காந்திக்கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையும் பாரதியார் ஆய்வகமும் நடத்திய “பாரதிக்குப் பின் : பெண்ணும் கவிதையும்” கருத்தரங்கில் “பெண்ணியக் கவிதை : அதன் கலைச்செயல்பாடும் சமூகப் பயன்பாடும்” தலைப்பில் பேசினார். இடிந்தகரை அணு உலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். 2011ல் Audi Ritz Icon விருது பெற்றார். சிவகாமியின், ‘கதவடைப்பு’ கவிதை நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கிறார்.

இவர் கவிதைகளில் பிரமிளை நினைவூட்டும் உணர்வுத் தீவிரம் தெரிகிறது. தேவதேவனின் இயற்கை ஈடுபாடு ஆகிய பாதிப்பும் உண்டு. இருவரும் இவருக்கு ஆதர்சங்கள். K.M. இசை நிறுவனத்தின், ‘பெண் எழுச்சியை’ மையமாகக் கொண்ட “இரசாயன ரோஜாக்கள்” ஆல்பத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இஷ்ரத், ரிஹானாவின் குரல்களில் ‘என்னிலே மகா ஒளியோ!’ என்றொரு பாடல் எழுதியிருக்கிறார். இவருடைய கவிதைகளை கல்யாணராமனும் லஷ்மி ஹோம்ஸ்ட்ரமும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

பரதவர்களின் வாழ்வியலை ‘ஆழி சூழ் உலகு’ புதினத்தில் பதிவு செய்த ஜோ.டி. குரூஸ் வசனகர்த்தாவாகப் பணியாற்றியுள்ள ‘மரியான்’ திரைப்படத்தில், இரண்டாண்டுகளுக்கு மேலாக கவிஞர் குட்டி ரேவதியும் இணை இயக்குநராகப் பணியாற்றியதோடு ஒரு பாடலையும் எழுதியுள்ளார். இயக்குநர்களுக்கு திரைக்கதையை எழுதும் பணியைச் செய்து வருகிறார். சில திரைப்படங்களுக்கும், ஆல்பங்களுக்கும் பாடல்கள் எழுதுகிறார். மெல்ல, தான் இயக்கவிரும்பும் திரைப்படத்திற்கான பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வேன் என்கிறார்.

பெண் இயக்குநர்களுடன் இணைத்து, ‘விறலி விடு தூது’ என்னும் திரைத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். மூலக்கதை ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர், திரை இயக்குநர், திரைத் தயாரிப்பாளர் இவர்களை ஒருங்கிணைத்துத் திரைப் படைப்புகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவதுதான் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் முதன்மையான நோக்கம். ’விறலி’ என்றால் கலைகளை வளர்ப்பவள் என்பது பொருள்.

கடவுள் நம்பிக்கை இல்லாத இவர், கௌதம புத்தரின் ‘விபாஸனா’ என்ற யோகக்கலையின் மீது விருப்பம்கொண்டு அதைக் கடைப்பிடித்து வருகிறார்.

Aan_Kuri_Maiya_Punaivai_Sithaitha_Pradhigal_kutti revathi

அவரின் குரலில், அவரைப் பற்றி:

” மலைகள் சூழ்ந்த இயற்கை சூழலில்தான் நான் வளர்ந்தேன். பதினைந்து வயது வரையில் எனக்கு திருவெறும்பூர் தவிர்த்து வேறு எந்த ஊருடனும் பெரிதாகத் தொடர்பு இல்லை. என்னுடைய அந்தக் காலகட்டங்களை முழுக்க முழுக்க திருவெறும்பூர்தான் ஆக்கிரமித்து இருந்தது. அங்குதான் நான் எட்டாம் வகுப்புவரை ஒய்.டபிள்யூ.சி.ஏ. எனும் தமிழ்ப் பயிற்றுப் பள்ளியில் படித்தேன். என்னுடைய இளமைப் பருவத்தில் எனக்குத் தேவையான நம்பிக்கையையும் தெம்பையும் அந்தப் பள்ளிதான் வழங்கியது. அங்கு இருந்த ஆசிரியர்கள் பள்ளிக் குழந்தைகளை தங்கள் குழந்தைகளாகப் பாவித்துக் கல்வி கற்பித்தனர். எங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே அப்படி ஓர் இணக்கமான சூழல் நிலவியது. கட்டுரை, பேச்சு என அனைத்து போட்டிகளிலுமே நான் பங்கெடுத்துப் பரிசுகள் பெற்றிருக்கிறேன். இன்றுகூட என்னால் 1,330 திருக்குறளையும் முழுதாகச் சொல்ல முடியும். இதற்கெல்லாம் காரணம், என் பள்ளி ஆசிரியர்கள்தான்.

திருவெறும்பூரில் எறும்பீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஆதிச்சசோழன் காலத்தில் அவன் பெற்ற வெற்றிகளைத் தொடர்ந்து காவிரிக் கரையோரம் வரிசையாகக் கட்டிய பல கோயில்களில் இதுவும் ஒன்று. மாலை நேரங்களில் பள்ளி முடித்துவந்து உடை மாற்றிவிட்டு எறும்பீஸ்வரர் கோயில் வளாகத்தில் எங்கள் அப்பாவோடு நானும் என் தம்பி தங்கையும் நடப்பதை வழக்கமாகவே வைத்து இருந்தோம். அப்போது என் தந்தை எனக்கு சொல்லிக்கொடுத்த தேவாரமும் திருவாசகமும் அப்படியே என் மனதில் பதிந்துள்ளது. பொதுவாக எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், அந்த இலக்கியங்களில் இருந்த மொழிநடை என்னை மிகவும் ஈர்த்தது. எறும்பீஸ்வரர் கோயில் பற்றிப் பேசும் இந்த நேரம் எனக்குக் கோயில் பிரகாரத்தில் வீசும் காற்றின் சுகந்தம் நினைவுக்கு வருகிறது.

பி.ஹெச்.எல். டவுன்ஷிப்பில் இருந்த நூலகம் எனக்கு இன்றியமையாத ஒன்று. பள்ளியில் படிக்கும்போது பேச்சு, கட்டுரை போட்டிகளுக்குத் தேவையான தகவல்களைச் சேகரிக்கச் சென்றபோதுதான் அந்த நூலகம் அறிமுகம் ஆனது. கூடவே எழுத்தின் வழி சுஜாதாவும் பாலகுமாரனும் அறிமுகமானார்கள். சங்க இலக்கியங்களைத் தேடித்தேடி படிக்க ஆரம்பித்தேன்.

பி.ஹெச்.எல். போகும் அந்தப் பிரதான சாலையை என்னால் மறக்கவே முடியாது. ஏனெனில், அங்குதான் நான் முதன்முதலாக சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டேன். இன்றும் அந்த இடத்தைப் பார்க்கும்போது என்னால் அந்த நினைவுகளை மீட்க முடிகிறது.

எனக்கு அப்போது வசந்தி, ஜோதி, மீனா என மூன்று நெருங்கிய தோழிகள் இருந்தனர். நாங்கள் மூவரும் திருச்சியின் அழகை முழுதாக ரசித்தோம். 80-களின் இறுதியில் அப்படி எல்லாம் பெண் பிள்ளைகள் சுதந்திரமாக இருப்பது சாதாரண விஷயம் இல்லை. அந்த விஷயத்தில் என் அப்பா எனக்கு முழு சுதந்திரத்தை அளித்திருந்தார்.

என் அப்பா சுயம்புலிங்கம் பி.ஹெச்.எல். நிறுவனத்தில் ஒரு சாதாரண கடைநிலை ஊழியராகப் பணியாற்றியவர். இருப்பினும் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க மிகவும் பாடுபட்டவர். அப்படிப்பட்ட என் தந்தையை நான் கடைசியாகப் பார்த்தது திருவெறும்பூர் ரயில் நிலையத்தில்தான். நான் சென்னையில் இருந்தபோது அவர் மாரடைப்பால் இறந்துபோனார். அதன் பிறகு நான்கு வருடங்கள் திருவெறும்பூருக்கு வரவே இல்லை. ஏனெனில், அவருடைய ஞாபகங்கள் என்னை மிகவும் பாதித்து இருந்தது. நான் மிகவும் நேசித்த திருவெறும்பூரை அந்தக் காலகட்டத்தில் கொஞ்சம் வெறுத்திருந்தேன் எனச் சொல்லலாம்.

இன்றும் திருவெறும்பூர் திருவேங்கட நகரில் எங்களுடைய சொந்த வீடு இருக்கிறது. வேலை காரணமாக அடிக்கடி ஊருக்கு வரமுடியவில்லை என்றாலும், வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் தவறாமல் இங்குவந்து திருவெறும்பூரின் அழகை ரசிக்க நான் மறப்பதில்லை!”

150256_525948294105568_268739038_n

2012 புத்தகக் கண்காட்சி

1. மாமத யானை – புதிய கவிதைத் தொகுப்பு (வம்சி வெளியீடு)
இது என்னுடைய ஆறாவது கவிதைத் தொகுப்பு! எத்தனை நூல்கள் வந்தாலும் கவிதை நூல் தரும் களிப்பை வேறு ஏதும் தர முடிவதில்லை!
கவிதைக்குள் தான், நான் என் முழு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் நிறைத்துத் தரமுடிகிறது! பல சமயங்களில், நான் கவிஞரின்றி வேறு யாருமல்ல என்று கூடத் தோன்றுகிறது! மற்ற எனது ஆளுமைகள் எல்லாம் அதை ஒட்டியிருக்கும் பிசிறுகள் தாம்! அடுத்தடுத்தக் கட்டத்திற்கான முந்தைய கட்டமாக ஒரு கவிதை நூல் மாறி, என் அகவெளியை உறுதிசெய்கிறது! உரமூட்டுகிறது! சகப் படைப்பாளிகளினும், வாசகர்கள் தாம் என்றும் என் ஊக்கமாயிருந்திருக்கிறார்கள்! எனக்கு நிழலாயிருந்திருக்கிறார்கள்! இந்தப் படைப்பும் அவர்களால் தான் சாத்தியமாயிற்று என்று நம்புகிறேன்!

2. ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப்பிரதிகள் – தம் உடலரசியலால் தமிழ் எழுத்தின் மரபை மாற்றியமைத்த தமிழ்ப்பெண் கவிதைகள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு (நாதன் வெளியீடு)

3. இந்தக் கோடைக்காலத்தை உனக்காகவே அழைத்துவந்தேன் – காதல் கவிதைகள் தொகுப்பு (ஆழி பப்ளிஷர்ஸ்)

4. முதல் காதல் அனுபவங்கள் – வெவ்வேறு படைப்பாளிகளின் உணர்ச்சிப்பூர்வமான முதல் காதல் அனுபவங்களின் தொகுப்பு (ஆழி பப்ளிஷர்ஸ்)

5. நிழல் வலைக்கண்ணிகள் – பெண்ணிய அரசியல் கட்டுரைகள் (வம்சி வெளியீடு)
– Book of feminist essays, predominantly discuss caste, gender and body.
பெண்ணியக் கட்டுரைகளளின் பெருந்தொகுப்பு. தமிழகத்தில் பெண் உரிமை கோரும் இயக்கங்கள், நிறுவனங்கள், தளங்கள், உரையாடல்கள் பலமுறை எழுந்தும் அவை முழுமையான வடிவம் எடுக்காதபடிக்கு, தனி நபர் அல்லது குழுவினரின் ஆதிக்கத்தால் தீவிரமாக ஒடுக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் அது சுயநலம், சுயலாபம் பொருட்டாகவே இருந்திருக்கிறது. இன்று அதற்கான விளைவுகளைப் பெருவாரியாக நாம் அனுபவித்தும் இறுக்கமான மெளனம் கடைபிடிக்கப்படுகிறது. அந்நிழல் வலைக்கண்ணிகளை எழுத்தின் வழியாக என் இடத்திலிருந்து பார்த்திருக்கிறேன். அவ்வலைக்கண்ணிகளை நாம் இனம் காண இந்நூல் ஒரு கையேடாக இருப்பின் மகிழ்வேன்!

புத்தகத்திற்கான முன்னுரை

Idintha_Karai_Kutty_Revathy_Kadal_Penngal_Kavidhaigal

6. யானுமிட்ட தீ – கவிதைத் தொகுப்பு (அடையாளம் வெளியீடு) (2010)
சாதியப்படுத்தப்பட்ட மூடுண்ட மனித உடலை இக்கவிதைகள் இயல்பூக்கத்துடன் திறக்கின்றன. உடலையே இயக்கமாக்கி அதை அதன் ஆதி நிலைக்குத் திருப்புகின்றன. தொல் அறத்தை மீட்டெடுக்கின்றன. வரலாற்றிலிருந்து உடலின் விடுதலை என்பது மோதலில் மட்டுமே நிகழ முடியும். அத்தகைய மோதலின் உக்கிரமான ஒரு புள்ளியில் இக்கவிதைகள் பீறிடுகின்றன. இதுவே இக்கவிதைகளை உயிர்த்துடிப்புடன் இயங்க வைக்கிறது.

7. ‘பூனையைப் போல அலையும் வெளிச்சம்’ (2000)
தொண்ணூறுகளில் கவனம் பெற்ற முக்கியமான கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இக்கவிதைகள் கோபம் கொள்கின்றன; காதல் வயப்படுகின்றன; காமம் துய்க்கின்றன.. வாழ்வின் வெம்மை பொறுக்க முடியாமல் போகும்போது நிழலைத் தேடும் மன நிலை, ஜீவிதத்தின் உயிர்த்துடிப்பு, பேரனுபவத்தை சுட்டிக் காட்டும் தன்மை; இருமை எதிர்வுகளை வெகு இயல்பாகப் படிமமாக்கிக் காட்டும் அழகியல் ஆகியவற்றுடன் இயங்கும் இக்கவிதைகள் தங்கள் அளவில் தனித்து நிற்கின்றன. ஆணால் வடிவமைக்கப்பட்டு பெண்ணுக்கு வழங்கப்பட்ட பெண் சிந்தனையைப் பார்த்து கெக்கலி கொட்டிச் சிரிக்கின்றன. புதிய சொல்லாட்சிகளும், புதுப்புது சொல்லிணைகளும், மின் தெறிப்பாய் தெரிந்து மறையும் படிமங்களும் இக்கவிதைகளை நினைவுகூறுமாறு செய்கின்றன.

8. ‘முலைகள்‘ (2002)
பெண்ணின் உடலரசியலைப் பேசும் இந்தப் பிரதி முலைகள் துடைத்தகற்ற முடியாத இரு கண்ணீர்த்துளிகள் என்று அறிவித்து பெண்ணை நுகரும் உடலாகப் பார்க்கும் ஆணாதிக்கப் பொதுப்புத்தியைத் தகர்க்கிறது. இத்தொகுப்பில் இயங்கும் கவிதை மனம் வாழ்க்கையின் முட்களில் சிராய்த்துக் கொண்டு கண்ணீர் வடிக்கிறது. அதே சமயத்தில் வாழ்வின் அதீதமான தருணங்களை போகிற போக்கில் தரிசிக்கவும் செய்கிறது. உத்வேகத்துடன் அலைவுறும் கவிதை மனம் விடுதலை வேட்கையுடன் இயங்கும் இக்கவிதைகளில் படிமங்கள் அழகாகக் கைகோர்க்கின்றன. இயல்பான தன்மையுடன் நடனமாடுகின்றன.

9. ‘தனிமையின் ஆயிரம் இறக்கைகள்’
நவீன தமிழ்க்கவிதை வெளியில் பெண் குரல், பெண் உடல், உடலரசியல் போன்ற தளங்களில் ஒலிக்கும் ஒரு குரலை இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பதிவு செய்திருக்கின்றன. ஏக்கம், நிராசை,காமம், மரணம் போன்ற அனுபூதிகள் இக்கவிதை வரிகளில் சாகாவரம் பெற்று இயங்குகின்றன. இயற்கையின் மீதான அவதானிப்பு இக்கவிதைகளில் பெண்ணியத்தின் குறியீடுகளாக மிளிர்கிறது. பெண்ணிடமிருந்து விலக்கப்பட்ட சொற்களை இவை துணிந்து உச்சரிக்கின்றன. அந்தச் சொற்கள் ஆணாதிக்க மனத்தின் செவிப்பறைகளில் போய் மோதி அதிர்கின்றன. இதுவே இத்தொகுப்பை பிற கவிதைத் தொகுப்புகளிலிருந்து வித்தியாசப்படுத்திக்காட்டுகிறது.

10. ‘உடலின் கதவு’ கவிதை நூல் அடையாளம் பதிப்பகத்தால் மறு பதிப்பும் பெற்றுள்ளன.
ஆணாதிக்கச் சமூகத்துக்கெதிரான ஒரு பெண் மனத்தின் சீற்றம் இக்கவிதைகளில் தெறிக்கிறது.காமம், புணர்ச்சி,கருவுறுதல் என்று விரியும் குறியீடுகள் இந்தப் பிரபஞ்சத்தையே ஒரு பெண்ணின் உடலாகவும், ஒரு பெண்ணின் உடலையே பிரபஞ்சமாகவும் உருவகித்துக் காட்டுகின்றன. கவிதை வரிகள் தோறும் படிமங்களும், தொடர் உருவகங்களும் காட்டாற்று வெள்ளம் போல் பிரவகித்துப் பாய்கின்றன. சில தருணங்களில் வெள்ளம் வடிந்த பின் படியும் நுரையாய் மனத்தில் ஒட்டிக் கொள்கின்றன. கவிதையில் உற்பவிக்கும் உணர்ச்சிப் பெருக்கு கவிஞரிடமிருந்து வாசகனையும் தொற்றிக் கொள்ளும் அதிசயம் இந்தத் தொகுப்பில் சாத்தியப்பட்டிருக்கிறது.

11. கட்டுரை நூல் – காலத்தைச் செரிக்கும் வித்தை (2009)

12. முத்தத்தின் அலகு

ஆழி பதிப்பகத்தின் செந்தில்நாதன், என் காதல் கவிதைகளை நூலாக வெளியிட தொகுத்துத் தரக் கேட்டபோது, உண்மையில் அது ஒரு விநோதமான அனுபவமாகவே இருந்தது. ‘காதல்’ பற்றிய நமது சமூகத்தின் குரல்களும் தனிமனிதக் குரல்களும் எப்போதுமே முரண்பட்டிருக்கின்றன. நுணுகிப் பார்த்தால், ஒடுக்குமுறையை ஆதரிக்குமொரு மனம் தான் காதலை எதிர்க்கிறது! அல்லது, தன்னளவில் உருவான ‘காதல் உணர்வை’ எதிர் நபருக்குச் சரியான முறையில் தெரிவித்து, அதைச் சாத்தியப்படுத்திக் கொள்ள முடியாமல் போனவர்கள் தாம் காதலை எதிர்த்திருக்கிறார்கள்! இன்னொரு மனிதருடன் என்றால், அம்மனிதரின் குடும்பம், வர்க்கம், சாதி, மதம், மனம், உடல், நிறம் என எல்லா பேதங்களுடனும் மோத வேண்டியிருக்கிறது, இல்லையா! ஆனால், இதையெல்லாம் தாண்டி காதல் என்பது தனிமனித அளவில் மிகவும் தூய்மையா கவும் நேர்மையுடனும் உணர்ச்சிப்பூர்வமாகவும் இருக்கிறது!

என்னளவில் காதல் இன்னும் இன்றும் அழகானதாகவே இருக்கிறது! என் காதல் கவிதைத் தொகுப்பிற்கு, ‘முத்தத்தின் அலகு’ என்று பெயரிட்டிருக்கிறேன்.

13. ‘இடிந்த கரை’ நூல் – கடல், பெண்கள், கவிதைகள்

14. ‘முள்ளிவாய்க்காலுக்குப் பின்’ என்ற பெயரில் ஈழத்து இனப்படுகொலையை வைத்து புலம்பெயர்ந்த ஈழப் படைப்பாளிகள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Tamil_poetess_Little_Revathy

 

காதல் குறித்து:

நான் எப்பொழுதும் காதலின் பக்கம்.

எல்லா ஆண்களும் ஒரே மாதிரி தான் என்பதே என்னுடைய கருத்து என்றாலும், பெண்ணிடம் காதலை வெளிப்படுத்துவதில் மட்டும் தான் ஒருவரிடமிருந்து மற்றவர் வேறுபடுகிறார் என்பது என் முடிந்த முடிபு.

வீட்டில் ‘தந்தை அன்பின்’ போதாமையால், ‘சகோதர அன்பின்’ போதாமையால், ‘ஆண் அன்பின்’ போதாமையால் மகளின் காதல் வேகம் பெறுகிறது, வீர்யம் பெறுகிறது. காதல் வழியாக எல்லா ஆண்களிடமும், மகள் தந்தையைத் தான் தேடுகிறாள். தவறாகி, பிழையாகி, பின் ஏதோ ஒரு மட்டில் காதல் நிறைவாகும் வழிகளைத் தேடிக் கொள்கிறாள். தந்தையின் முழுமையான அன்பைப் பெறும் மகளும் காதலில் தன் தந்தையைத் தான் தேடிக் கொண்டிருப்பாள், ஆண்களில் காதலைத் தேடுவதற்குப் பதிலாக.

நான் எப்பொழுதும் காதலின் பக்கம். இன்னும் மானுடம் வெல்ல நம்மிடம் இருக்கும் ஒரே அறிவு காதலே. இதே வார்த்தைகளில் அம்பேத்கர் சொல்லவில்லை என்றாலும், சாதியை வெல்லவும் நம்மிடம் இருக்கும் ஒரே வெளிப்பாடு காதலே.

Kutty_Revathy

அ) நேர்காணல்: கவிஞர் குட்டி ரேவதி-பகுதி-1
http://tamilnathy.blogspot.com/2007/03/blog-post_959.html
– இந்த நேர்காணல் இலங்கையில் வீரகேசரியின் வார வெளியீட்டில் தொடராக வந்தது.

பகுதி-2
http://tamilnathy.blogspot.com/2007/03/blog-post_05.html
– ”’நல்ல எழுத்துத்தான் கடைசிவரை நிக்கும்… அக்கப்போர்களைக் கண்டுகொள்ளாதீர்கள்’”

மறுமொழிகளில் இருந்து:

///ஆண்கள் எப்படி பெண்களைக் கொச்சைப்படுத்துகிறார்களோ பாலியல் உறுப்புகள் குறித்து எழுதுகிறார்களோ அதைப் போலத்தானே இவர்களும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்… இவர்கள் எப்படிப் பெண்ணியவாதிகளாக இருக்க முடியும் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். அதற்கு என்னுடைய பதில் என்னவென்றால் ‘நாங்கள் முன்வைக்கும் அரசியல் வேறு’என்பதாகும்.///

இதற்கு கவிஞர் சரியான பதிலை சொல்ல வில்லையோ என்று தோன்றுகிறது.

நிறைவுப்பகுதி
http://tamilnathy.blogspot.com/2007/03/blog-post_06.html
– திராவிட இயக்கங்கள் வந்த பிறகு இந்த அழகியல் என்பது அற்றுப்போய்விட்டது என்று சொல்லலாம்

ஆ) எஸ்.ஆர்.எம். எம்.ஏ. பாடப் புத்தகம்

http://www.srmuniv.ac.in/tamilperayam/tamil_courses/Lessons/MA_Tamil/I_Year/matt01/html/mat01007pp2b.htm
‘ஒளி சொட்டச் சொட்டக் குளித்து வந்தாய், பாதங்களில் வழிந்து பாதையெல்லாம் தீக்காயங்கள்’, ‘சுண்ணாம்பு வெயில்.. தன் ஒற்றைக் காலால் என் முகத்தின் மீது நடந்து சென்றது வெயில்’ என்பனபோன்ற அழகும் தீவிரமும் கொண்ட படிமங்களை இவர் கவிதைகளில் காணலாம். காலவெளி, பிரபஞ்ச ஓவியம், பாழ்விண், உட்குகை இருள், இருட்சுவர், காலாதீதம், உதிரநதி, புவனம் போன்ற சொல்லாட்சிகளும் படிமங்களும் பிரமிளின் செல்வாக்கைத் தெளிவாகக் காட்டுவன.

‘ஆண்டாள் தன் காதல்நோய் பற்றிப் பேசியதன் உணர்வுத் தொடர்ச்சியைப் பல நூற்றாண்டுகள் கழித்து ரேவதியிடம் கேட்கிறோம்’ என்கிறார் க.மோகனரங்கன். கவிதை சொல்லியின் பாலியல் அடையாளங்களுடன் தனித்துவமும் தீவிரமும் கூடிய பெண்குரலாக வருவது குட்டி ரேவதி கவிதை என்கிறார். சமூகத் தணிக்கைக்கு உட்படாத சுதந்திரமான ரேவதியின் மொழி, விமர்சனத்திற்கு உள்ளாகலாம் எனவும் அவர் குறிப்பிடுகிறார் (சொல் பொருள் மௌனம், ப.187)

இ) பிறவழிப் பாதைகள் : அன்புள்ள குட்டி ரேவதி
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20601202&edition_id=20060120&format=html
– கோபால் ராஜாராம்

ஈ) பெண்கவிகள் சந்திப்பு – 2002 இடம்-புதுவை நாள்-11.9.02
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60209171&edition_id=20020917&format=html
– இச்சந்திப்பில் பேசப்பட்ட பகிர்வுகளில் மிக முக்கியமாக கருதுகின்ற சில விவாதங்கள் அல்லது கேள்விகள்

உ) உடலின் மொழியும் மொழியின் உடலும் – குட்டி ரேவதியின் கவிதைகள் குறித்து
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60308224&edition_id=20030822&format=html
– எச் பீர்முகம்மது

ஊ) தலித்துகளைக் காப்பாற்றும் பொறுப்பு – கண்ணன்
http://www.kalachuvadu.com/issue-91/kannottam.asp
உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பெரும் பான்மை ஆட்சி, தலித்-உயர்சாதிச் சமூகக் கூட்டணியால் ஏற்பட்டுள்ள பின்னணியில் ‘அவுட்லுக்’ ஜூன் 24, 2007 இதழ், தெற்கில் மேற்படி நிகழ்வு ஏற்படுத்தியுள்ள எதிர்வினைகளைச் செய்திக் கட்டுரையாக வெளியிட்டுள்ளது. இக்கட்டுரையில் கவிஞர் குட்டி ரேவதி மேற்கோள்காட்டப்பட்டுள்ளார். அவரது கருத்து இது:
”பிராமணர்கள் உத்தரப் பிரதேசத்தில் ஆதிக்கம் செய்யத் தொடங்கிவிடுவார்கள். அவர்கள் தலித்துகளை விழுங்கிவிடுவார்கள் . . . இது பற்றி கருத்துக் கூறும் நேரம் வரவில்லை.”

எ) SEA, OH SEA YOU ARE MY BODY – documentary PMANE

in the background of the evocative song Kadale, Kadale by famous Tamil Poetess Kutti Revathi set to tune by S. Sreekumar of M.B.S.Youth Choir.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்கு மக்களின் குரலாய் எழுதிய பாடல் இது. கேரளத்து நண்பர்கள் சதீஷ், அனிதா மற்றும் நண்பர்கள் இணைந்து இதற்கு பாடல் வடிவம் கொடுத்துள்ளனர். இசையமைப்பாளர் எஸ். ஶ்ரீகுமார் அவர்கள் இசை அமைத்துள்ளார்

ஏ) interview to Vani Viswanathan of the Spark magazine:
http://www.sparkthemagazine.com/?p=4399
Language is the One Tool that can Liberate Women’s Bodies: Kutti Revathi

ஐ) உதிர்த்த வார்த்தைகளைத் திரும்பப் பெற இயலாது! சிவகாமி அவர்கள் கருத்தின் மீதான விவாதத்தை முன்வைத்து….
http://www.kuttyrevathy.blogspot.in/2013/09/blog-post_15.html

ஒ) பிடித்த புத்தகம்
http://www.amazon.com/dp/0571172865/ref=cm_sw_r_fa_dp_P20zpb0GH377Q/187-8838555-9646736
A graphic novel. The story can differ with each reader and each reading. The central imagery deals with winged dream-people, whose wings are opened books rather than feather and flesh.

Neraiya_Araigal_Ulla_Veedu

ஓ) ஒரு மேற்கோள்
“In writing about a woman’s body and its sexuality, one is also writing about the political history of the human body!”.

கொசுறு:

எழுத்தாளர் நிலையிலிருந்து, கட்சி அரசியல் நிலைக்கு நகர்ந்தது என்பது பெரும்பாலும் பெண் எழுத்தாளர்களுக்குத் தான் நடந்திருக்கிறது! சமூக அசைவின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படவேண்டும்! ஆனால், சமூகத்தின் அரசியல் ஊக்கத்தை மதிக்காத அப்பெண்கள், தன் சுயநிலைகளை மட்டுமே பொருட்படுத்தியவர்களாக இருந்த நிலை உள்ளங்கை நெல்லிக்கனி போல இன்று! எல்லா அரசியல் ஆதாயங்களையும் தன் தனிமனித கோபுரங்களை எழுப்பிக் கொள்ளவே பயன்படுத்தினர்! தி.மு. க. அரசியலின் அடித்தளம் ஆட்டம் கண்டிருக்கும் இந்நேரத்தில், அதில் ஈடுபட்டு முதுகெலும்பு இழந்தவர்கள், சமூகத்தின் பிற ஒடுக்கப்பட்டப் பெண்களின் குரலாய் மாறாத இந்த அரசியல் பெண்கள் இனி எப்படி தம் சமூகக் குரலை அடையாளப்படுத்துவார்கள்? ’அவர்கள் அறச்சீற்றம் கொண்டால் எத்தகையதொரு கேலிக்கூத்தாகிறது என்று சொல்லத்தேவையில்லை!”

கொசுறுக்கு கொசுறு:

‘தனித்த’ தமிழ்த்தேசியம் பேசுவோர் கொஞ்சம் எல்லாவற்றிலும் மிகையான உணர்ச்சிகளுடன் கொந்தளிப்பது, நடக்க இருப்பதையும் நடக்கவிடாமல் செய்துவிடுகிறது என்பதைப் பலமுறைப் பார்த்திருக்கிறேன். ‘தலித்தியம்’, அல்லது ‘சாதி மறுப்பியம்’ என்பதே தமிழ்த்தேசியம் என்று ஆகிவிடக்கூடாதே என்ற பதற்றம் தான் இந்தக் கொந்தளிப்பின் ரகசியம் என்பதையும் பலமுறைகள் உணரமுடிந்திருக்கிறது.

‘காமம் தாண்டி காதல்’ என்பதே கடுமையானதொரு சாதிய மனப்பான்மை. உடலை அவமதிக்கும் செயல். எப்படி தீண்டாமை உடலை அவமதிக்கிறதோ அதையே பின்பற்றும் ஒரு சாதிய மனநிலை தான் இது. காலங்காலமாக நம்மில் ஊறிய சாதிய மனநிலையே, ‘காமம் தாண்டிய காதல்’ என்ற கண்டுபிடிப்புகளை நிகழ்த்தத்தூண்டுகிறது.

தமிழ் இனம் – சாதி மறுப்பு = தமிழ்த்தேசியம், என்பதை பலரும் பல சமயங்களில் வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றனர்.

யாருக்கு இதனால் நட்டம்? நம்மைப் பிளவு படுத்திக் குளிர்காயும் சனாதனிகளுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியையும், கொண்டாட்டத்தையும் கொடுக்கும். தமிழகம் என்று தனியே ஒரு நாடு உருவானால் கூட, பின் இருக்கப்போகும் ஒரே பிரச்சனை நீங்கள் தாம்: தீண்டாமையின் புதிய வடிவமைப்பை, பெண் பாலியல் ஒடுக்குமுறையின் புதிய வழிமுறையை நீங்கள் செயல்படுத்துவீர்கள்!

இந்தியா சுதந்திரமடைந்து 67 ஆண்டுகளுக்குப்பின்னும் சாதிய வன்முறை பகிரங்கமாக, காட்டுமிராண்டித்தனத்தின் அடையாளமாக நடக்கிறது. தொடர்கிறது. சக மனிதனை மலம் அள்ள வைக்கிறோம். இசுலாமியர்கள் மீதான வன்முறைகளும் பாரபட்சமும் தொடர்கின்றன. பெண்கள் மீதான பாலியல் வன்முறை முன்னெப்பொழுதையும் விட தற்பொழுது அதிகமாயிருக்கிறது.

6400 சாதிப்பிரிவுகளையும் அதற்கான ஏற்றத்தாழ்வுகளையும் அது ஏற்படுத்தும் ஊழலையும் வைத்துக் கொண்டு ஒருமித்த இந்தியா என்று போற்றுவதும் பாராட்டுவதும் உணர்ச்சிப் பெருக்கெடுப்பதும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது இல்லையா? இது கண்டிப்பாக சுதந்திர இந்தியா இல்லை. இன்னொரு சுதந்திரத்திற்காக நாம் எல்லோரும் போராடவேண்டியிருக்கும் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்கிறேன்.

Nizhal_Valai_Kannigal_Book

ஔ) குட்டி ரேவதி – தீராநதி நேர்காணல்
http://ntmani.wordpress.com/2006/02/22/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF8/

க) கோவில்கள், சிற்பங்கள், ஓவியங்கள் – ஸ்ரீனிவாசனுடன் உரையாடல்
http://www.yaavarum.com/archives/2590

ங) ’இந்தியா டுடே’யின் ரஜினி சிறப்பிதழ் கட்டுரை
http://kuttyrevathy.blogspot.com/2011/12/blog-post.html
– ‘நான் நம்பர் ஒன், என் புருஷன் நம்பர் டூ’ என்ற வசனமும் ரஜினி என்ற கதாநாயகனும்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை, ரஜினி என்ற கதாநாயகனின் ஆணாதிக்க வசனங்களைப் பற்றிய சிறிய அலசல்!

Breasts: (original ‘Mulaigal’ by Kutti Revathi), translated by N. Kalyan Raman

Breasts are bubbles, rising
In wet marshlands
I wondrously watched- and guarded-
Their gradual swell and blooming
At the edges of my youth’s season
Saying nothing to anyone else,
They sing along
With me alone, always:
Of Love,
Rapture,
Heartbreak
To the nurseries of my turning seasons,
They never once failed or forgot
To bring arousal
During penance, they swell, as if
straining
To break free; and in the fierce tug of
lust,
They soar, recalling the ecstasy of music
From the crush of embrace, they distil
The essence of love; and in the shock
Of childbirth, milk from coursing blood
Like two teardrops from an unfulfilled
love
That cannot ever be wiped away,
They well up, as if in grief, and spill over

Ref: Literery review, The Hindu, January 1st 2006

Wild_Girls_Wicked_Words_Lakshmi_Holmstrom

ச) ‘புறனடை’ இதழில் வெளியான என் நேர்காணல்

இத்தகைய நிதானமான நேர்காணலை எடுக்கும் பணிக்கு நண்பர்கள் ரவிச்சந்திரன், பிரவீண், ராஜ், கஜேந்திரன், ஜே. ஜெய்கணேஷ் தங்களின் நிறைய நேரத்தைச் செலவழித்தார்கள். நான் முன்வைக்கும் அரசியல் நிலைப்பாடு குறித்தும், அதை நோக்கிய என் எழுத்துப் பயணம் குறித்துமான நேரடியான பதிலை திருத்தமானதோர் உரையாடல் வழியாக என்னிடமிருந்து பெற்றார்கள்! வழக்கத்திற்கு மாறாக, நிறைய நண்பர்கள் இந்நேர்காணலை வாசித்துவிட்டு தங்கள் வாழ்த்துகளையும் கருத்துக்களையும் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வழியாகப் பகிர்ந்து கொண்டார்கள்.

என்னை ஒரு தனிமனிதராகப் பார்க்காமல், எழுத்து இயக்கத்தின் ஒரு பகுதியாகவே என்னைப்புரிந்து கொண்டு, இதைத் தன் இணையத்தளத்தில் பதிப்பித்த, ‘தமிழ் ஸ்டுடியோ’ அருண் அவர்களுக்கும் என் நன்றி!

குட்டி ரேவதி (Kutti Revathi) கவிதை படைப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
http://eluthu.com/kavignar/Kutti-Revathi.php

அவரின் வலைப்பதிவு: http://www.kuttyrevathy.blogspot.com/

 

 

நண்பர்களும் தொடர்புகளும்: அந்தக் கால அந்தரங்கம்

தெருவில் நடக்கிறப்ப, சோபி காலே-க்கு யாரோ தவறவிட்ட டயரி கிடைக்கிறது. தெரிந்தவர் டயரியை புரட்டக் கூடாது என்றுதான் எழுதப்படாத விதி இருக்கிறது. தெரியாதவரின் டயரியை படிக்கலாம். தெரியாதவரின் பெயர் பியர் டி.

டயரியைப் புரட்டிப் பார்க்கிறார். நிறைய முகவரி இருக்கிறது. கூடவே முகவரியில் வசிப்பவர்களின் தொலைபேசிகளும். இதெல்லாம் நடந்த காலம் ஜூன் 1983. எனவே, செல்பேசியில் முகப்புத்தகம் பார்க்காத காலம். கையில் குறிப்பேடு வைத்து எழுதி சேமித்த காலம்.

கிடைத்த டயரியை தொலைத்தவரிடம் சேர்க்கிறார். சேர்ப்பதற்கு முன்பாக, தனக்கும் ஒரு ஜெராக்ஸ் போட்டு வைத்துக் கொள்கிறார்.

பியர் டி பார்த்து பார்த்து சேகரித்த முகவரிகளின் உரிமையாளர்கள் அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள சோபி-க்கு ஆர்வம். பியர் டி-யின் தொடர்புகளை தொலைபேசியில் அழைக்கிறார். அவர்களிடம் சென்று டயரிக்கான சொந்தக்காரரைப் பற்றி பேசுகிறார். அதை பத்திரிகையில் வெளியிடுகிறார்.

சோபி காலே சேர்கரித்த வம்புகள் இப்பொழுது பிரென்சு வழியாக ஆங்கிலத்திற்கு வந்தடைந்திருக்கிறது.

The Address Book | Harper’s Magazine

என் ஃபேஸ்புக் பக்கத்து தோழரையோ, டிவிட்டர் பின்பற்றியையோ சோபி காலே தொடர்பு கொண்டால் புத்தகம் எழுதும் அளவு சங்கதி கிடைத்திருக்காது. ஆனால், சமூக வலைப்பின்னல் 2.0ன் தாத்பரியம் புரிந்திருக்கும்.

அ) குடும்ப விவரங்கள், தேடல் விருப்பங்கள், சிந்தனை ஓட்டம் எல்லாம் மின்மடலை குடைந்தால்தான் கிடைக்கும்.

ஆ) நாலாயிரம் நண்பர்களில் நாலு பேரை நேரில் சந்தித்திருக்கிறேன்.

இ) தொழில்நுட்பத்தில் அர்ச்சுனர்; வாசிப்பில் பெஞ்சமின் பிராங்கிளின்; தலைமைப் பண்பில் ஜார்ஜ் வாஷிங்டன். மொத்தத்தில் காந்தியும் ஹிட்லரும் கலந்த மாண்புடன் பழகுபவர் என்று அறியலாம்.

லாரென்ஸ் கீயாட் (1939-2012)

Lawrence_Guyot_Civil_Rights_Activist_Leaders_Voting_Rights_Mississippi_MS_Citizens_USA_Obamaஇன்றைக்கு ஒபாமாவை நினைத்தால் நிறைவாக இருக்கிறது. நிற ஒற்றுமையை எண்ணி மகிழ இயலுகிறது. சமத்துவத்தை இயல்பாக கொண்டாட முடிகிறது.

ஐம்பதாண்டுகள் முன்பு வரை இந்த நிலையா? அமெரிக்காவில் கறுப்பு நிறத் தோல் கொண்டவர்களும் வெள்ளையர்களும் சரிசமமாக புழங்கினார்களா?

நாம் பிறப்பதற்கு முன் நமக்காக போராடினவர்களில் லாரன்ஸ் கீயாட் முக்கியமானவர். கடந்த வாரம் இயற்கை எய்தினார். நிற வெறி மிக மோசமாக இருந்த மிஸிசிப்பி மாநிலத்தில் சமூக நீதிக்காக கொடி உயர்த்தியவர். கருப்பர்களுக்கு வாக்குரிமை கிடைப்பதற்காக உழைத்தவர். தற்போது பராக் ஒபாமா தலைவராக இருக்கும் டெமொகிராடிக் கட்சியில் விளங்கிய இன வேறுபாடுகளை நீக்குவதற்காக முனைந்து செயல்பட்டவர்.

லாரன்சின் துணிச்சலுக்கும் கறுப்பின விடுதலைக்கான செயல்பாட்டுக்கும் பல நிகழ்வுகளையும் போராட்டங்களையும் உதாரணமாக சொல்லலாம். ஃபேனி லூ ஹேமரும் ஹேமரின் இரண்டு கூட்டாளிகளும் கைதானவுடன் நடந்த நிகழ்ச்சியை நியு யார்க் டைம்ஸ் ஆவணப்படுத்தி இருக்கிறது.

Lawrence_Young_Mississippi_MS_Deep_South_MLK_guyot

1963ஆம் ஆண்டின் ஜூன் மாதம். வெள்ளையர்களுக்கு ஒரு வாயில்; கறுப்பர்களுக்கு எந்த நுழைவாயிலும் இல்லை என்னும் நிலை. அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் மிகக் கடுமையான இனப் பாகுபாடு விளங்கிய காலகட்டம். மிசிசிப்பி பேருந்து நிலையத்தை வெள்ளைத் தோல் நிறத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தலாம். அப்போது ஹேமரும் அவரது நண்பர்களும் தடையை மீறி, பிரவேசம் செய்ய முயல்கிறார்கள். கைதாகிறார்கள்.

அவர்களை ஜாமீனில் எடுக்க கீயாட் செல்கிறார். ஹேமரும் அவர் கூட வந்தவர்களும் மோசமாக கையாளப் பட்டிருந்தார்கள். கைது செய்வதே சட்டமீறல் எனினும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நடத்திய விதம் கொடூரமாக இருந்ததைக் குறித்து தட்டிக் கேட்கிறார் கீயாட்.

‘நீ யாருடா சொல்ல வந்துட்டே’ என்னும் தொனியில் அபிமன்யு கீயாட்டை ஒன்பது காவலர்கள் சூழ்கிறார்கள். தங்கள் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்துகிறார்கள். கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு சராமாரியாகத் தாக்குகிறார்கள். துளி ஆடை கூட இல்லாமல் அம்மணமாக்கி அசிங்கப்படுத்தியதாகக் கொக்கரிகிறார்கள். அவரின் ஆண்குறியை நசுக்கி விட எத்தனிக்கிறார்கள்.

குற்றுயிரும் கொலையுயிருமாக கீயாட் இருப்பதைப் பார்த்து அஞ்சிய மருத்துவர்கள், சித்திரவதையை நிறுத்துமாறு இறைஞ்சினார்கள். சித்திரவதையைத் தொடர கீயாட்டையும் கைது செய்து ஜெயிலில் அடைக்கிறார்கள். காவலர்களின் உடல்வதை நீடிக்கிறது.

பெயில் எடுக்க வந்த கீயாட்டை முட்டிக்கு முட்டி தட்டுகிறார்கள். அப்படியானால் அவருக்கு யார் பிணை கொடுப்பார்கள்? எப்படி வெளியே வர முடியும்? எவ்வாறு ஹேமரும் கீயாட்டும் தங்கள் அனுபவங்களை பிறருக்கு சொல்ல முடியும்?

இந்த நிலையில் வேண்டுமென்றே ஜெயில் கதவை பூட்டாமல் திறந்து வைத்து, கூடவே கத்தியையும் போட்டு வைக்கிறார்கள். தூண்டிலில் மீன் மாட்டினால், குரல்வளையை அழுத்து துண்டம் போட்டு, உலகிற்கு தங்கள் பக்க கட்டுக்கதையை விற்று விடலாம். ஆனால், கீயாட் மாட்டவில்லை.

ஹோவெல் ரெயின்ஸ் எழுதிய My Soul Is Rested: The Story of the Civil Rights Movement in the Deep South (1977) புத்தகத்தில் இந்த கொடூரத்தை பகிர்ந்து இருக்கிறார் கீயாட்.

மிஸிஸிப்பியின் ஜாக்ஸன் நகரத்தில் கீயாட்டின் தோழரான மெட்கர் எவர்ஸ் கொலை செய்யப்படுகிறார். அதன் பின், கீயாட்டும் உடனடியாக மரணமடைந்தால், கலவரம் மூளும் என்று அஞ்சிய காவல்துறை கீயாட்டை விடுவித்தது.

அடுத்த வருடமே கீயாட் மீண்டும் சிறைக் கைதியாகிறார். காவல்துறையினர் கருப்பினருக்கு நிகழ்த்தும் அட்டூழியங்களை நடுவண் அரசான வாஷிங்டன் பார்வைக்கு கொண்டு செல்ல பதினேழு நாள் உண்ணாவிரத நோன்பு மேற்கொள்கிறார். ஐம்பது கிலோ எடை இழந்தாலும் உணர்வும் எழுச்சியும் உறுதியும் இழக்காமல், சக கறுப்பர்களையும் மீட்கிறார்.

”அடுத்தவர் உன் மீது ஆக்கிரமிப்பு செய்யலாம். ஆனால், நாம் அடங்கிப் போவது நம் கையில் இருக்கிறது” என்று அந்த சத்தியாகிரகத்தை நினைவு கூர்கிறார்.

1939ஆம் ஆண்டு ஜூலை பதினேழாம் தேதி மிஸிஸிப்பியில் பிறந்தார் கியாட். அவருடைய அப்பா கூலித் தொழிலாளியாக வேலை பார்த்தார். டூகலூ கல்லூரியில் இருந்து 1963ல் வேதியியலிலும் உயிரியலிலும் பட்டம் பெற்றார். அகிம்சாவழி மாணவர்களின் குழு சார்பாக பல்கலைக்கழகத்தில் படித்த காலத்திலேயே மிசிசிப்பி முழுக்க பயணம் மேற்கொண்டு சமூகநீதி பட்டறைகளை முனைப்போடு ஒருங்கிணத்தார்.

அமெரிக்க குடிமகன்கள் எல்லோரும் ஓட்டளிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். இனப்பிரிவிற்கு எதிராக போராடிய மார்ட்டின் லூதர் கிங் போன்றோர் எங்கும் எதிலும் வெள்ளையர்களுக்கு சமமான உரிமைக்காக குரலெழுப்பிய தருணங்களில், கீயாட் வாக்குப்பெட்டியை மட்டும் குறிவைத்து இயங்கினார். கருப்பர்கள் வாக்கு போட்டு தங்களுக்கு உவப்பானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் மூலம் அமெரிக்கா முழுக்க கருப்பின சமத்துவ உரிமையை அடையலாம் என்று நம்பினார். வெள்ளையரிடம் இருந்து இன உரிமை பெறுவதற்கு பதில், ஜனநாயகத்தின் பேரிலும் தேர்தல் வெற்றி மூலமாகவும் சட்டதிருத்தங்களையும் சமூக சீர்திருத்தங்களையும் அடையும் வழிக்காக விழிப்புணர்வை புகட்டினார்.

1971இல் சட்டப் படிப்பில் முதுகலை பட்டத்தை முடித்தார். அதன் பின் வாஷிங்டன் நகரத்தில் பணியாற்றினார்.

தற்பால்விரும்பிகளுக்கான போராட்டத்தை ஆதரிக்கும்போது அவர் சொன்ன மேற்கோள் நமக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும்: “நமக்கு முக்கியம்னு படறதுக்காக உயிரைப் பணயம் வைத்து போராடறதுக்கு ஈடா இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது. லிங்கன் சொன்னது போல் சுடறவன் கிட்ட இருந்து தப்பிச்சுட்டு அவன் முன்னாடி சாதிக்கறது தனி சுகம்!”

அஞ்சலிகள்.

வாழ்க்கைக் குறிப்பு

Separated at Birth: Muttlingam x Subbarao

Earlier Post

Most Competitive Cities in India: Top places to live, earn and have a Metro lifestyle

Separated at Birth: Saibaba, Rehman & Vivegananthar

Earlier Post