வாழ்க்கை என்பது அபத்தமானதா? இது இந்தக் கதையின் தொடர்பு.
நான் இந்த வாழ்க்கை அபத்தம் என்பேன். ஏன்? இரு காரணங்கள். ஒன்று அண்டவெளி; மற்றொன்று காலம். இந்தத் திரண்ட அகிலத்தில், நாம் வெறும் நகத்துணுக்கு. அதே போல், நம் ஆயுள் காலமும், யுகம் யுகமாக, டிரையாசிக், ஜுராசிக் என நீளும் இடையூழி காலத்தின் மிகச் சிறிய தொடர்ச்சியின் துகளாகும்.
வால்டேரின் தத்துவ புனைவான “மைக்ரோமேகாஸ்” ஞாபகமிருக்கிறதா? சிரியஸ் நட்சத்திரத்தில் இருந்து இராட்சஸ் உருக் கொண்ட பூதம், பூமிக்கு சுற்றுலா வருகிறது. தன் பூதக் கண்ணாடியினால், நம்முலகைப் பார்க்கிறது. எதுவும் தெரியவில்லை. ஒன்றும் கண்ணுக்கு புலப்படவில்லை. கட்டாங்கடைசியில் மாபெரும் கடலில் ஒரு சிறிய கப்பலில் நிறைய மனிதர்களை கண்டுபிடிக்கிறது.
“அட… பார்வைக்கு புலனாகாத பூச்சிகள்!” என ஆச்சரியப்பட்டு, அந்த ஜந்துக்களுக்குக் கூட இதயம் இருப்பதை கண்டுகொள்கிறது. அதன் பிறகு, மானுடர்களின் அற்ப உடல் அளவு, அவர்களை அற்ப பதர் என்றே அழைக்க வைக்க வேண்டுமோ என எண்ணுகிறது.
“ஏ, புத்திசாலி அணுக்களே! நீங்கள் இவ்வுலகின் சுகங்களை ரசித்து மகிழ்கிறீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. உங்கள் வாழ்க்கையை ஆரோக்கியமான சிந்தையிலும், சந்தோஷமான காதலிலும் திளைத்து உற்சாகத்தில் திளைக்கிறீர்கள்… இல்லையா?”
இதற்கு பதிலாக அந்த மானுடர்கள் அரிஸ்டாடிலின் தத்துவத்தையும் டெஸ்கார்தேயின் மெய்யியல் அனர்த்தங்களையும் படு தீவிரமாக விளக்க ஆரம்பிக்கின்றன. இப்போது, பூதத்தால் தன் நகைப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.
அந்த சிறிய மனிதனை மாற்று கிரகபூதம் பார்த்தது போல் இந்தச் சிறுகதையை நான் பார்ப்பேன். இதில் நிறைய பகுதிகள் இருக்கின்றன; நிறைய துகள்கள் இருக்கின்றன; நம்முடைய புற+அக உலகம் இதில் நிறைந்து காணப்படுகிறது.
மேலும்: Devotions Upon Emergent Occasions, by John Donne
Man consists of more pieces, more parts, than the world. And if those pieces were extended, and stretched out in man as they are in the world, man would be the giant, and the world the dwarf; the world but the map, and the man the world. சிறுகதை » மீர்ச்சா கர்த்தரெஸ்கோ — காலத்துகள்
மேலாளர் கனவில் வருவது அவ்வளவு சிலாக்கியமில்லை. எனினும் வந்திருந்தார்.
“போன ப்ராஜெக்ட் நன்றாக செய்திருக்கிறாய்!”
“இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் கலக்கிறீர்கள். இலவசகொத்தனார் பார்த்தால் பிலுபிலுவென்று ஆடி மாச சாமியாடுவார் சார்!”
”உனக்கு அடுத்த வேலை தயார். நம் தலைநகரமாம் வாஷிங்டன் டிசி செல்கிறாய். அங்கே படு ரகசியமான அடுத்தகட்ட ஆளில்லா விமானத்திற்கு நீதான் பொறுப்பு.”
காட்சி அப்படியே கட் ஆகிறது. நாலு பேர் தீவிரமான கலந்தாலோசனையில் இருக்கிறோம். ஒருத்தரைப் பார்த்தால் திருவள்ளுவர் போல் குருலட்சணம். இன்னும் இருவர் சிவகார்த்திகேயனின் நாயகிக்கான தேர்ந்தெடுப்பிற்காக வந்தவர்கள் போல் துள்ளலாக விளம்பர அழகி போல் காணப்படுகிறார்கள். கிட்டத்தட்ட வடிவமைப்பை முடித்து விட்டோம். பரிசோதனைக்குத் தயார்நிலையில் இருக்கிறோம்.
பணிகளைத்தான் எவ்வளவு சீக்கிரமாக கனவு முடித்துக் காட்டுகிறது. இதைத்தான் ’கனவு காணச்சொனார்!’ கலாம்.
செய்தவற்றை சொல்லிக்காட்ட மேலிடத்திடம் செல்கிறோம். அவர்களோ, சோதனை மாந்தர்களாக எங்களையேத் தேர்ந்தெடுத்து தானியங்கி விமானிகளை ஏவுகிறார்கள். சைதாப்பேட்டை கொசுவிடமிருந்தும் மந்தைவெளி மாடுகளிடமிருந்தும் ஓடி ஒளிந்தவனுக்கு drone எம்மாத்திரம். விமானியில்லா விமானத்திற்கு மாற்றாக ஏவுகணைகளை அனுப்புகிறேன். பயனில்லை. திடீரென்று எட்வர்டு ஸ்னோடென் கூட பறந்து பறந்து தாக்குகிறார். பின்னர் அவரும் எங்கோ ஓடி ஒளிந்துவிட்டார்.
“நியாயமாப் பார்த்தா என்னை பார்த்துதான் இந்த டிரோன் அனுப்பிவைக்கப்பட்டிருக்கணும்!” என்று சாரு நிவேதிதா சொல்கிறார். “நீங்க லத்தீன் அமெரிக்க கதைதானே மொழிபெயர்க்கறீங்க! இனிமேல் இரானிய கட்டுரைகளை கொண்டாங்கனு” சொல்லிட்டு அவரிடமிருந்து தப்பிக்கிறேன்.
“நீங்க இப்போ கண்விழிக்கலாம்! உங்க சாதனம் ஒழுங்கா வேலை செய்யுது. எல்லாவிதமான இடர்களிடமிருந்தும் அதற்கு தப்பிக்கத் தெரிஞ்சிருக்கு! ஆனா”.
”தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை… ’ஆனா’”.
“சரி… அபப்டினா, But போட்டுக்கறேன். உங்களுக்கு உடற்பயிற்சி போதாது. உங்க விமானம் ஓடற மாதிரி நீங்க ஓட மாட்டேங்கறீங்க. உங்களுக்கு இந்த காண்டிராக்ட் கிடையாது.”
இதைத்தான் Rice Ceiling என்கிறார்களா!?
நேற்றைய கதைக்கு செம வரவேற்பு.
சொல்புதிது குழுமத்தினர் Show, don’t tell என்றார்கள். இதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த யுவகிருஷ்ணா “அப்படியானால், உங்க கூட வேலை செஞ்ச அந்த இளம்பெண்களின் கவர்ச்சிப் படங்களை ப்ளோ-அப் ஆக போட்டிருக்கணும்.” என்றார்.
“மழையில் நனையலாம். அணைக்கட்டில் தண்ணீர் தேக்கி வைப்பதை போல் காட்ட முடியாத சொல்லில் வடிக்க முடியாத அனுபவம். அது போல் கனவு தேவதை ஸ்டரக்சரா ஆப்ஜெக்டா என்பதை C# தான் சொல்லணும்.”
நக்கீரர் எட்டிப் பார்த்தார். “உமக்கு நேர்ந்த அனுபவத்தை மட்டுமே நீங்கள் எழுத முடியும். அது மட்டுமே அகத்திறப்பை தரும். உங்களுக்கு டிரோன் உண்டா? அது துரத்தியதா? எப்படி பிழைத்தீர்கள்? என்பது இல்லாத பதிவு பொருட்குற்றம் கொண்டது!”
“ஏன்யா… உம்மை கொசு கடிச்சதே இல்லியா? எண்பது கோடி ஆண்டுகள் முன்பே கல் தோன்றி முன் தோன்றா தமிழகத்தில் டிரோன் கொண்டு சோழனும் பாண்டியனும் சண்டையிட்டது சரித்திரம்!”
இப்பொழுது ஹரிகிருஷ்ணன் முறை. “என்ன ஹரியண்ணான்னு சொன்னால் போதும். ’இலங்கு வெஞ்சினத்து அம்சிறை எறுழ்வலிக் கலுழன் உலங்கின் மேல் உருத்தன்ன நீ குரங்கின் மேல் உருத்தால்’ என்கிறான் கம்பன். இதன் தாத்பர்யமாவது என்னவென்றால், பட்டாம்பூச்சி விளைவைக் கண்டு பயப்பட்டு தோட்டத்தையே உருவாக்காமல் விடக்கூடாது. மைரோசாஃப்ட் முதல் அப்பிள் வரை பிழை இல்லாத மென்பொருளை உருவாக்குவதில்லை. உலங்கைக் கண்டு அஞ்சேல்!”
“இதுதான் இன்றைய தமிழ் உலகமா?” என்றபடி இராம.கி அய்யா புகுகிறார். “Malinga என்பதில் இருந்து வந்ததுதான் உலங்கு. மளிங்கா தலைமுடியில் கொசு மாட்டிக் கொண்டுவிடும். உள்ளங்கையில் அடிப்பதால் உலங்கு என்றும் ஆனதாக சொல்வோர் உண்டு. அது பிழையான கருத்து. எல்லோரும் கொசு வந்தால் ’மளிங்க’ என விளித்தனர். இது மளிங்க > அடிங்க் > உலங்கு என்றானது.”
தமிழ் என்றவுடன் ஃபெட்னா நச்சுநிரல் விழித்து தானியங்கியாக பதிலிடத் துவங்கியது. ”அமெரிக்காவில் தமிழ் உலகம் என்றால் ஃபெட்னா. நாங்கள் கோத்திரம் பார்த்து செவ்வாய் தோஷம் நீக்கி ஒரே சாதியில் ஜாதகக பரிவர்த்தனத்தை வருடா வருடம் ஜூலை நான்கு நடத்துகிறோம். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. ‘நாம் தமிழர்’. நியு யார்க்கில் கொசுத் தொல்லை அதிகம். பிரகாஷ் எம் சுவாமி என்னும் கொசு எங்களைக் கடித்ததுண்டு.”
ஆட்டத்தை தவறவிடாத மனுஷ்யபுத்திரன், “அமெரிக்கரின் காதல் என்பது சிற்றோடை போன்றது. சமயத்திற்கேற்ப, தேவைக்கேற்ப, பருவத்திற்கேற்ப, முக்கியத்துவத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். தமிழனின் காதல் என்பது காவிரி போல… கர்னாடகா திறந்தால் மட்டுமே வளரும். தமிழச்சியின் காதல் என்பது பாக்கெட் தண்ணீர் போல் காசு கொடுத்தால் மட்டுமே கிடைக்கும்.”
சொம்படி சித்தர் விடுவாரா… “அமெரிக்கரின் காதல் என்பது RAM போன்றது. சமயத்திற்கேற்ப, தேவைக்கேற்ப, பருவத்திற்கேற்ப, முக்கியத்துவத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். தமிழனின் காதல் என்பது hard disk போல. சூடாகும்… தமிழச்சியின் காதல் என்பது cloud storage போல் எவருக்கு வேண்டுமானாலும் திறக்கும்.”
நொந்து போன வேல்முருகன் சொன்னார். “இதற்கு பெயரிலி சமஸ்தானமே பெட்டர் அப்பா!”
ஃபேஸ்புக் தலைவி ஷெரில் சாண்ட்பெர்கு (Sheryl Sandberg) புத்தகம் எழுதியிருக்கிறார். அடுத்த மாதம் நான்காம் தேதி ப்ரூக்ளின் புக்ஸ்மித்தில் வாசகர்களை சந்திக்கிறார். புத்தகத்தின் பெயர் சாய்ந்து கொள் – (‘Lean In: Women, Work, and the Will to Lead’)
அமெரிக்காவில் எல்லோரும் புத்தகம் எழுதுகிறார்கள். நிறுவனத்தின் தலைவர், வக்கீலாக இருந்து நீதிபதியாக விரும்புபவர், நீதிபதியாக இருந்து அரசியல்வாதியாகப் போகிறவர், வழிப்போக்கர், ஆசிரியர், கணினி நிரலி எழுதுபவர், நிரலி எழுதத் தெரியாதவர்… சொந்த வாழ்க்கையை கொஞ்சம் வெளிப்படையாக எழுதத் தெரிந்தால் போதுமானது.
அதைப் புத்தகமாக எடிட் செய்து, கோர்வையாகத் தொகுத்து, உன்னத கோட்பாடுகளை வெளிக் கொணர்ந்து, வாசிப்பவருக்கு சுவாரசியமும் லட்சியப் பாதை வகுப்பதில் புத்துணர்ச்சியும் சாதனைகளுக்கான வழியும் கிடைக்குமாறு அமைத்து நியு யார்க் டைம்ஸ் பெஸ்ட்செல்லர் ஆக்கிவிடுகின்றனர்.
பேஸ்புக் அம்மணி எழுதியது அந்த வகை புத்தகம்.
‘பெண்களே… வீறு கொண்டு எழுக!’
‘நிற்காதே… ஓடிக் கொண்டே இரு’
‘தேங்கி விடாதே… தளும்பினாலும் கொட்டினாலும் பொங்குவது முக்கியம்!’
’சிறப்பாக செய்வதை விட, செய்து முடிப்பதே வீரருக்கு அழகு!’
’நீங்கள் எதற்கும் கவலைப்படாமல் இருந்தால், என்ன செய்து கொண்டிருப்பீர்கள்?’
இந்த மாதிரி ஆலோசனை + ஊக்க பூஸ்ட் எல்லாம் பில்லியன் டாலர் ஐ.பி.ஓ. கண்டு செட்டில் ஆனவர்கள் சௌகரியமாக சொல்லலாம்.
காந்திஜி சேஃப்டி பின் எடுத்து வைத்துக் கொண்ட நிகழ்வு போல் இந்தப் புத்தகத்திலும் எனக்கு ஒரு மேட்டர் கிடைத்தது. ஒன்பது பக்கத்திற்கு நன்றிகள் போட்டு இருக்கிறார். அது தவிர முன்னுரை, முகவுரை, பின்னுரை என்று தமிழ்ப் புத்தகங்களை மிஞ்சும் அளவு தெரிந்தவர்களையும் விமர்சகர்களையும் நெஞ்சு நக்கியிருக்கிறார்.
என்னுடைய நூலில் நிச்சயம் பத்து பக்கத்திற்காவது வந்தனம், வணக்கம், தோத்திரம், துதி பாடல் இருக்கும்.
இன்றைய தேதியில் கசாப்களை விட இணையத்தில் கொலை செய்பவர்கள்தான் அதிகம்.
சின்மயிக்கு @ போட்டு ராகிங் செய்பவர்கள், கார்த்தி சிதம்பரத்தை கிண்டல் அடித்து வெறுப்பேற்றுபவர்கள், பெங்களூர் பிகாரி வன்முறை, ரோஜா செல்வமணி கருத்து காவலர்கள், பால் தாக்கரே என்று யாரை விமர்சித்தாலும் காவல்துறையும் சட்டம்+ஒழுங்கும் துள்ளி எழுகிறதே… ஏன்?
இந்த மாதிரி கோபக்கார புரபசர்களுக்கும் பகிடி புரொகிராமர்களுக்கும் யார் முன்னோடி?
கென்னடியை சுட்டது யார் என்று தெரியும். ஆனால், எதற்காக என்பது அமெரிக்கர்களுக்கு புரியாத புதிர். மூன்று திரைப்படங்கள், பதினேழு புத்தகங்களாவது ஜே.எஃப்.கே. கொலைவழக்கு குறித்து அலசி ஆராய்ந்திருக்கிறது. இதெல்லாம் நடந்து முடிந்த மே 2005, நாஷ்வில் நகரத்தில் இருந்து விக்கிப்பீடியாவில் ஒருவன் எழுதுகிறான்:
1960களில் அட்டர்னி ஜெனரலாக இருந்த கென்னடியின் உதவியளாராக ஜான் செய்காந்தளர் பணியாற்றினார். ஜான் எஃப் கென்னடியும் அவரின் சகோதரர் பாபி கென்னடியும் கொலை செய்யப்பட்டதில் அவருக்கு நேரடி தொடர்பு இருந்ததாக அவர் மேல் சில காலம் சந்தேகம் இருந்தது. ஆனால், அவை நிரூபிக்கப்படவில்லை. 1971ல் ஜான் செய்காந்தார் சோவியத் ருசியாவிற்கு இடம் மாறினார். 1984ல் மீண்டும் அமெரிக்கா திரும்பினார்.
உண்மையில் ஜான் செய்காந்தளர் மார்ட்டின் லூதர் கிங்குடன் போராடியவர். கென்னடிக்காக ஊழியம் செய்தவர். கருப்பின போராட்டத்தில் பங்கு பெற்றவர்.
அவரிடம் இந்த விஷயம் பற்றி விசாரித்தபோது, “என்னப் பற்றி எதற்கு தவறாக எழுதணும்? அதில் எள்ளளவு மட்டுமே உண்மை இருக்கிறது. அவருடைய செயலாளராக இருந்திருக்கிறேன். கென்னடியின் இறுதி ஊர்வலத்தில் அவரை தூக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். இந்த எழுபத்தெட்டு வயதில் விக்கிப்பிடியாவைக் கற்றுக் கொண்டு, இந்த அவதூறை நீக்குவது எப்படி?” என்று சோர்வும் வருத்தமும் சேறடித்தவர் எவர் என்று கூட தெரியாத அச்சமும் கலந்து பேசியிருக்கிறார்.
கென்னடி குறித்த விக்கி பக்கத்தில் இந்த வடிகட்டின பொய் நூற்றி முப்பத்திரண்டு நாள்கள் நிலைத்து லட்சக்கணக்கானோர் பார்வைக்கு சென்றுள்ளது. வழக்கம் போல் இதை ஆதாரமாகக் கொண்டு ஆன்ஸ்வர்ஸ்.காம், கூகில், ரெபரன்ஸ்.கொம் போன்ற கல்லூரி மாணவர்களும் பள்ளிச் சிறுவர்களும் பயன்படுத்தும் தளங்களும் ததாஸ்து சொல்லி திக்கெட்டும் தகவலைப் பரப்பி இருக்கிறது.
நீங்கள் சுடப்பட்டால் உங்களுக்கே தெரியாது. உங்களின் கேரக்டர் கொலையுண்டதை ஊரார் அறிந்திருப்பார்கள். நம் குணச்சித்திரம் சின்னாபின்னமானது நோர்வே முதல் நமீபியா வரை பரவியிருக்க நமக்கு ரொம்பவே பொறுமையாக அறிவிக்கப்படும். அதுவும் நாமே கண்டுபிடித்தால் மட்டுமே சாத்தியம்.
இந்த மாதிரி இழுக்குகளில் இருந்து சாமானியர்களைக் காப்பாற்றவே சட்டமும் ஒழுங்கும் செகஷன் அறுப்பத்தி ஆறு ஏ-வை உண்டாக்கி இருக்கிறது.
ஆனால், 66ஏ நியாயமாக உபயோகமாகிறதா என்றால், இந்தியாவின் எல்லா சட்டமீறல்கள் போலவே அதுவும் மக்களுக்கு பிரயோசனமின்றி போகும் உபத்திரவ பட்டியலில் +1
இட்லி வடை ஆரம்பித்து பத்தாவது ஆண்டு துவங்கப் போகிறது.
பத்தாண்டுகளாக தமிழ்ப்பதிவுகள் எப்படி இருக்கிறது என்று ரிப்போர்ட் கார்ட் போடலாம். பேருந்து விபத்தில் சென்னை நகரத்தின் பள்ளி சிறுவர்கள் இறப்பது போல் அது அடிக்கடி நடப்பது.
பத்தாண்டுகளில் இட்லி வடை எழுதியதில் பெஸ்ட் எது என்று பார்க்கலாம். டெண்டுல்கர் சதம் அடிப்பது போல் ஆயிரக்கணக்கான பதிவுகளில் நூறு திக்கி திணறி தேறலாம்.
சமகால ஜாம்பவான்களான பேயோன், மனுஷ்யபுத்திரன் போன்ற புனைப்பெயர்களோடு ஒப்பிட்டு அலசலாம். கோகுலாஷ்டமிக்கு கிருஷ்ணர் வேடம் அணிவது பொருத்தம் என்பது போல் இட்லி வடையில் அசுரர்களுக்கு இடம் இல்லை.
அப்படியானால் என்ன செய்யலாம்?
நீங்களும் இட்லி வடையாக ஒன்பது யோசனைகள் கொடுக்கலாம்:
1. தற்பெருமை, சுய அங்கீகாரத்தின் வெளிப்பாடாக அகங்காரம், தவறு செய்தாலும் மன்னிப்பு கேட்காத தன்மை, காதல் மன்னர்களின் வசீகரம் என்று அரசியல்வாதிக்கும் வலைப்பதிவருக்கும் உள்ள ஒற்றுமைகள் நிறைய. ஆனால், அரசியலில் வாக்கு கேட்டு வெற்றி பெற்றால்தான் மதிப்பு. வலையில் எழுதினாலே குவியும் வாக்கு.
2. இட்லி-வடை என்பது வாரிசு அரசியல் மாதிரி. முன்னுமொரு மூதாதையர் காலத்தில் இருந்து தியாகி பென்சன் பெற தகுதி பெற்றவர். நேற்றைய பினாமி பாலிடிக்சில் மில்லியனரானது போல் புதிதாக முளைத்தவர் இந்த பூமியில் காலூன்றுவது எப்படி? திண்ணை, சொல்வனம், உயிரோசை எதையும் விட வேண்டாம். ட்விட்டர், பேஸ்புக், பிண்டெரஸ்ட் எங்கும் தோன்றவும்.
3. எனக்கு ரொம்ப பிடித்தமான வினா: ‘எல்லோரும் இப்படி செஞ்சா என்ன ஆகும்?’ – அஞ்சு பைசா அன்னியன் ஆகட்டும்; எனக்கு காரியம் ஆனால் போதும் என்று கூடங்குளத்தை மூடச்சொல்லும் உதயகுமார் ஆகட்டும். உலகில் உள்ள அனைவரும் எனக்கு மட்டும் இது நடந்தால் போதும் என்று நம்பும் மனநிலையை உடைக்கலாம்.
4. எனக்கு நிரலி எழுதத் தெரியும். ஆனால், கணினி ப்ரொகிராமிங் குறித்து எழுதியது ரொம்பக் குறைவு. மொத்தம் ஏழெட்டு பதிவுகளில் இரண்டாயிரம் வார்த்தைகளை தாண்டாது. இந்த மாதிரி நம் துறை சார்ந்து எழுதலாம்.
5. சுவைக்காக தண்ணியடிப்பது ஒரு ரகம். பழக்கத்திற்காக சரக்கடிப்பது ஒரு ரகம். தூக்கத்திற்காக குவார்ட்டர் அடிப்பது இன்னொரு ரகம். எப்பொழுதாவது கம்பெனிக்காக குடிப்பது என் ரகம். நீங்கள் பதிவதில் எந்த ரகம்?
6. சண்டைக் காட்சிகளில் வாத்தியார் மூன்று அடி வாங்கிய பிறகுதான் நிமிர்ந்து திரும்பக் கொடுப்பார். பாவப்பட்ட ஹீரோவிற்கு மவுசு அதிகம். சிண்ட்ரெல்லாவிற்குத்தான் அனுதாப அலை அடிக்கும். எனவே, அவ்வப்போது உங்களை மனிதராக காட்டிக் கொள்ளுங்கள். அடக்கம் அமரருள் உய்க்கும்
7. ஒரே விஷயத்தையே கட்டி அழாதீர்கள். சங்க இலக்கியமாக இருக்கட்டும்; அரசியல் குழாயடிகளாக இருக்கட்டும். கொஞ்சம் உலகம்; நிறைய உள்நாடு; அப்படியே உங்களால் மட்டுமே எழுதக்கூடிய தனியாள் அனுபவங்கள். எல்லாம் கலந்து கட்டி அவியல் மணக்கட்டும்.
8. நாய் என்றால் கரண்ட் கம்பம் பார்த்து ஒன்றுக்கிருக்கும். வலைப்பதிவர் என்றால் மூக்கை நுழைத்து சண்டை போடுவார்.
9. என் மூளை ஔவையார் மூளை. இடது சாரியாக எல்லாவற்றையும் ஒன்று, இரண்டு, மூன்று என பட்டியல் போட்டு அழகு பார்க்கும். ஆனால், இலக்கியவாதிகளுக்கு வலப்பக்க மூளை புனைந்து கவி பாடும். வைரமுத்துவாக இரண்டையும் நன்றாக குழைத்து கருப்பு மை போட்டு வாழ்க! வளர்க!!
கட்டுரை அசலாக வெளிவந்த சொல்வனம்.காம் தளத்திற்கு நன்றிகளுடன்
ஐஐடியிலும் ஐஐஎம்மிலும் நான்கு வருடம் படித்து தேறி வருபவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்வது ஒரு ரகம். பிளஸ் டூ முடித்தவர்களை அப்படியே அள்ளிக் கொண்டு போய், தனக்கு வேண்டியதை மட்டும் சொல்லிக் கொடுத்து, வியாபர நுணுக்கத்தின் தேவைக்கு ஏற்றவாறு பாடங்களை வடிவமைத்து, அனுபவமும் இரண்டு சொட்டு சேர்த்து, தன் நிறுவனத்தின் நெளிவு சுளிவுக்கேற்ப வளைய வைத்து வார்ப்பெடுப்பது இன்னொரு கலை.
ஐபிஎம் (IBM), எச்.பி. (HP), டெல் எல்லாம் முதல் ரகம். அமேசானும் ஃபேஸ்புக்கும் முன்னேறும் இரண்டாவது ரகம்.
முதல் ரகத்தில் நம்பகத்தன்மை இருக்கும். கடுமையான பரீட்சைகளுக்குப் பிறகு தேர்வாகி வெளியில் வந்தவற்றையே நாம் வாங்குகிறோம். ஃபேஸ்புக்கிலோ ஒரு தடவை ஸ்டேட்டஸ் அப்டேட் போட்டுப் பார்ப்போம். இரண்டு நிமிடம் கழித்தும் அது தோன்றாவிட்டால், அதையே மீண்டும் போடுவோம். இரண்டு தடவை வந்தால் கூட பரவாயில்லை.
ஆனால், எச்.பி.க்களை பெருவிலை கொடுத்து வாங்கிப் போடும் வங்கிகளில் இந்த மாதிரி இரண்டு தடவை வரவு கழித்தலோ பற்று கூட்டலோ கூடவே கூடாது. தரம் இங்கே அதிமுக்கியம்.
முதலாம் ரக ஐபிஎம்-களில் முஸ்தீபுகள் அதிகம். முதலீட்டு செலவு நிறைய ஆகும். பரிசோதனை எல்லாம் செய்யாமல், முன் வைத்த காலை பின் வைக்காமல் நுழைய வேண்டும். நேற்று ஆர்குட்; இன்றைக்கு கூகிள் பிளஸ்; நாளைக்கு கிரோம் என்று மாறும் தட்பவெப்பத்திற்கேற்ப ஆய்வகமாக, இரண்டாவது ரகம் இயங்குகிறது.
அயலாக்கம் x கிளைத் துவக்கம்
1990களின் இறுதியில் அமெரிக்க நிறுவனங்கள் அவுட்சோர்சிங்கைக் கண்டு பயப்படாமல் களத்தில் குதித்த காலம். அதுவரை “இந்தா பிடிச்சுக்கோ! இருநூறு டாலரோ… முன்னூறு டாலரோ!” என்று கணக்கு பார்க்காமல் இன்ஃபோசிஸ்களுக்கும் விப்ரோகளுக்கும் டி.சி.எஸ்.களுக்கும் அள்ளி விட்டுக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச காலம் சென்றபின் “இதே வேலையை உங்க நாட்டில் போய் செய்தால், இரண்டு சதவீதம் தள்ளுபடி கிடைக்குமா?” என்று பேரம் பேசினார்கள்.
புது நூற்றாண்டு பிறப்பதற்கு முன் பழைய உத்தி, தூசி தட்டப்பட்டு மறு வாழ்வு கண்டது. அன்று பருத்தி ஆலை ஏற்றுமதி; காலணித் தொழிற்சாலைகளை சீனாவிலும் தெற்காசியாவிலும் துவங்குதல்.
இப்பொழுது கணினி நிபுணர்களுக்காக இந்தியாவிலேயே கிளை தொடங்குதல். பெரு நிறுவனங்கள், தொழில் நுட்ப முதலாளிகள் என்று எந்த வட்டத்திற்குள்ளும் அடங்காமல், அனைத்து மேற்கத்திய பிரகிருதிகளும், இந்தியாவில் கணினி நிபுணர்களைக் கொண்டிருக்கிறார்கள்.
இடைத்தரகர் வேண்டாம்; காண்ட்ராக்டர்களை, மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்த வேண்டாம்; பொட்டி தட்டுபவர்களும் விட்டேத்தியாக இல்லாமல், பொறுப்பாக இருப்பார்கள்.
நிரலி எழுதுபவர்களிடமே இந்தப் பரிவு என்றால்…
இப்பொழுது அந்த நிரலிகளை இயக்கும் சர்வர் என்றழைக்கப்படும் அளிப்பான்கள்களுக்கும் – முழு வடிவமைப்பும் உள்கட்டுமானமும் கொண்டு இயங்க நினைக்கிறார்கள்.
முதலீடு முடக்கம் x சில்லறை வணிகம்
ஆயிரம் ஹெக்டேருக்கு அரிசியும் பணப்பயிரும் விதைப்பார்கள். இப்பொழுது ஆப்பிள் போடுகிறார்கள். ஐபோன், ஐபேட் பயனர்களுக்கு ஐக்ளௌட் (மேலும் வாசிக்க: http://solvanam.com/?p=14812) தருகிறது ஆப்பிள். நமது புகைப்படங்கள், விழியங்கள், டாரெண்ட்டில் தரவிறக்கிய திரைப்படங்கள் எல்லாவற்றையும் இணையத்தில் சேமித்து வைக்கலாம்.
ஆப்பிள் மட்டுமல்ல… மைக்ரோசாப்ட், அமேசான், கூகிள் போன்றோர், என்னைப் போன்ற நுகர்வோருக்கு இந்த வசதியை செய்து தருகிறது. என்னை வேலைக்கு வைத்திருக்கும் பெரு நிறுவனங்களுக்கு இதே வசதியை அதே நிறுவனங்களும் ராக்ஸ்பேஸ், சேல்ஸ்ஃபோர்ஸ் போன்றோரும் சினிமாஸ்கோப் முப்பரிமாண பிரும்மாண்டமாக இயக்குகிறார்கள்.
இதில் என்ன வசதி?
அ) ‘வை திஸ் கொலவெறி டீ’ வெளியாகும் சமயத்தில் திடீரென்று அளிப்பான்களின் தேவை அதிகமாகிறது. உடனடியாக, விநாடிகளில் அளிப்பான்களைக் கூட்டலாம்; குறைக்கலாம்.
ஆ) புதிதாக வெளியிடும் நிரலிகளை, சோதித்துப் பார்க்கலாம்.
இ) பத்தாயிரக் கணக்கில் செலவு செய்யும் முதலீடு கிடையாது. பத்து டாலர் தள்ளினால் போதுமானது. அதிவிரைவு அளிப்பான்கள், ஆயிரம் கொடுப்பார்கள். சிறுவணிகர்களுக்கு கந்து வட்டியில் கணினிகள் வாங்கும் நிலையை விட்டு விடுதலை.
மேகம் – கிளவுட்
2000-ம் ஆண்டு வருகிறது… y2k என்று ஓடினார்கள்; அவுட்சோர்சிங் செய்தால் மட்டுமே சேமிக்க முடியும் என்று ஓடினார்கள்; எல்லோரும் செல்பேசி கொண்டே இயங்குகிறார்கள் என்று ஐபோன் அப்ளிகேஷனுக்கு ஓடினார்கள்.
இன்றைய தாரக மந்திரம் – கிளவுட்.
விண்டோஸ் கொண்ட கணினி வேண்டுமா? எத்தனை வேண்டும்? எவ்வளவு நாளுக்கு வேண்டும் – மேகத்திற்கு செல்லுக.
என்னது… விண்டோஸ் எல்லாம் வேண்டாம். நூறு இண்டெல் சில்லு கொண்ட சக்தி மட்டுமே வேண்டுமா? – மேகத்திற்கு வருக.
எனக்கு தேவதர்ஷினி நாயகியாகக் கொண்ட சீரியல் பிடிக்கும். கே பாலச்சந்தர் இயக்கினால் நல்லது. ஜெயமோகனின் காடு நாவலை கதையாகக் கொண்டிருக்க வேண்டும்; ஆனால், அவரின் வசனம் இயல்பாக இருக்காது; பா ராகவனை வசனம் எழுத வையுங்கள். என்னால் இந்த வாரம் மட்டும்தான் பார்க்க முடியும். என்னிடம் கேபிள் கிடையாது. எனவே, ஐந்து நாளைக்கு மட்டும் தூர்தர்ஷனில் ஒளிபரப்புங்கள் என்று கேட்பது போல் எதை வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும், எப்பொழுது தேவையோ அப்பொழுது வாங்கிக் கொள்ள விழைகிறீர்களா – கிளவுடுக்கு வாங்க.
நீங்கள் மாதத்திற்கொருமுறை மதுரையில் இருந்து சென்னை சென்று வருகிறீர்கள். அதற்காக பேருந்தை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனால், தினசரி திண்டுக்கல் வரை போய் வந்தால், டூ வீலராவது சொந்தமாக வைத்துக் கொள்வோம்.
அன்றாடம் ஏதாவது பயன் இருக்குமா? – வாங்கிப் போடு.
என்றாவது எதற்காவது மட்டுமே உபயோகமா? – வாடகைக்கு எடு.
எச்.பி.யிடத்திலும் ஐ.பி.எம்.மிடத்திலும் எங்களுக்கு இந்த மாதிரி தேவை. இதற்கு ஏற்ற மாதிரி வண்டி செய்து கொடு என்று கேட்டு கேட்டு, அலுத்துப் போன ஃபேஸ்புக், அமேசான்கள், தாங்களே டாட்டா நானோக்களை வடிவமைத்ததுடன், அவற்றை வாடகைக்கும் விடுகிறார்கள்.
கலிபோர்னியா பக்கம் அளிப்பான்களின் பலு அதிகரிக்கிறதா? பலு அதிகரித்தால் அளிப்பான்களின் உஷ்ணம் உச்சத்தை அடையும். உஷ்ணம் அதிகரித்தால், குளிரூட்டிகளின் வேலையும் அதிகரிக்கும். குளிரூட்டிகளினால், மின்கட்டணமும் எகிறும்.
அளிப்பான் அறையில் கிட்டத்தட்ட ஒரு டிகிரி பாரன்ஹீட் ஏறினால், மின்கட்டணத்தில் நான்கு சதவிகிதம் ஜாஸ்தி கட்டவேண்டிய நிலை. அதற்கு பதிலாக, அளிப்பான்களின் வேலையை இன்னொரு ஊருக்கு திசை திருப்பி அனுப்பி வைக்கும் நுட்பத்தை கூகிள் கையாள்கிறது.
சாதாரணமாக பக்கத்து ஊருக்குப் போ; அங்கே இருக்கும் அளிப்பான்கள் மூலமாக தகவல் அனுப்பு. ஆனால், பக்கத்து ஊர் அளிப்பான் அறையில் வெப்பம் ஏறி விட்டதா? கொஞ்சம் தள்ளிப் போய், அடுத்த கட்ட அளிப்பானிடமிருந்து தகவல் பெற்றுக் கொள்.
இரண்டு லட்சம் வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை கூகிள் மட்டுமே பயன்படுத்துகிறது. இந்த நுட்பத்தினால் மட்டும் பில்லியன் கணக்கில் மின்கட்டணம் குறைகிறது.
அதற்குள்ளே இண்டெல் அல்லது ஏ.எம்.டி. (AMD) சில்லுகள்; அவற்றிற்கு ஊட்டம் கொடுக்க கிராஃபிக்ஸ் கார்டுகள்; அதை இயக்க, சக்தி கொடுக்கும் மின்விசை அளிப்பு; இவற்றை எல்லாம் காற்றோட்டமான பெட்டியில் அடைக்கும் அடிச்சட்டம்; அதை அடுக்கு அடுக்காக கட்டு கட்டாக வரிசைப்படுத்தும் வடிவமைப்பு; இதற்கான மின்சார திட்டம்; குளிர்காலத்தில் வெப்பமும், கோடை காலத்தில் குளிரூட்டமும் தரும் சூழல்; மின்கட்டணம் எகிறாத கட்டிடக் கலை ஆக்கம்.
இவையனைத்தும் தொலைதூரத்தில் இருந்து நிர்வகிக்கும் வல்லமை; தொல்லை தராமல் கூட்டவும் குறைக்கவும் மாற்றவும் முடியும் திறமை.
இவ்வளவு நுட்பங்களையும் பொதுவில் வைத்திருக்கிறது ஃபேஸ்புக். (மேலும்: http://opencompute.org/)
சரவண பவனுக்கு சென்றால் சகலமும் கிடைக்கும். கொஞ்சமாய் பசிக்கிறதா? மதியம் இரண்டு மணிக்குக் கூட இட்லி சாப்பிடலாம். இன்னும் கொஞ்சம் பசியா? மினி மீல்ஸ் கிடைக்கும். அகோறப் பசியா? அன்லிமிட்டட் சாப்பாடு உண்ணலாம்.
ஆனால், பக்கத்து சந்தில் மாமி மெஸ் இருக்கிறது. திங்கள் கிழமை என்றால் தோசையும் சட்னியும் சாம்பாரும் மட்டுமே கிடைக்கும்; செவ்வாய் போனால் சப்பாத்தி + தால். வெரைட்டி இல்லாவிட்டாலும், மாமி மெஸ் ருசியே தனி.
முதல் பாணியில், சரவண பவன் போல் சகல வசதிகளுடனும் எச்.பி., டெல் போன்ற வணிகர்கள் சர்வர் கொடுக்கிறார்கள். இட்லிக்கும் அதே சாம்பார்; சாதத்திற்கும் அதே சாம்பார் என்பது மாதிரி விண்டோஸ் ஆஃபீஸ் இயக்குவதற்கும் அதே சர்வர்; ஆரக்கிள் டேட்டாபேஸ் இயக்குவதற்கும் அதே சர்வர்; ஆங்ரி பேர்ட்ஸ் விளையாடுவதற்கும் அதே சர்வர்.
வீட்டு சாப்பாடு மாதிரி தினம் தினம் மாறும் வேண்டுதலுக்கேற்ப, ஒரே ஒரு விஷயத்தை மட்டும் ஸ்பெஷலாக செய்து தரும் சர்வர் நுட்பத்தை ஃபேஸ்புக் விரும்புகிறது.
என்னுடைய நண்பர்களின் ஸ்டேட்டஸ் எனக்குத் தெரிய வேண்டும். கடைசியாகப் பார்த்த இடத்தில் இருந்து பார்க்கக் கிடைத்தால் போதுமானது. பத்து மாதங்களுக்கு முன்பு ஜூலையில் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதை பெரும்பாலும் தினசரி தேடிக் கொண்டிருக்க மாட்டேன். நேற்று என்ன நடந்தது என்பது க்விக்காக திரையில் தோன்ற வேண்டும். பழையதைத் தேடி வினவினால், பொறுமையாகக் காத்திருக்கும் தயார் நிலையில் இருப்பேன்.
எச்.பி., டெல் ஆகியோர் நேற்றைய விஷயத்தைத் தேடினாலும் அதே நேரம்; பத்து வருஷம் ஆகிப் போனதை விசாரித்தாலும் ஒரே நேரம் என்று கட் அண்ட் ரைட்டாக பேசுகிறார்கள். ஃபேஸ்புக்கிற்கும் கூகிளுக்கும் இது தோதுப்படவில்லை. தாங்களே சமைத்து, அதற்கான ரெசிப்பியையும் உலகுக்கு ஓதுகிறார்கள்.
பங்குச்சந்தையில் ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்கிற்கு இது ஐ.பி.ஓ. எனப்படும் (மேலும்: http://online.wsj.com/article/SB10001424052970203935604577066773790883672.html) பங்குச்சந்தையை நாடும் காலம். அதற்காக பல அஸ்திரங்கள். ஒரு புறம் வாடிக்கையாளர் எண்ணிக்கை பலத்தைக் காட்டுகிறது. இன்னொரு புறம் அந்த வாடிக்கையாளர், எத்தனை மணி நேரம் ஃபேஸ்புக்கிலேயே கட்டுண்டு கிடக்கிறார் என்று புள்ளிவிவரம் திரட்டுகிறது. அதே சமயம், இது தவிர எங்களிடம் நில புலம் போன்ற அளிப்பான் – கடல் போல் அசையா சொத்தாக குவிந்து கிடக்கிறது என்பதையும் முன்வைத்து, முதலீடு கோருகிறது.
அது சரி… இத்தனை அளிப்பான்கள் எதற்கு தேவை?
இன்றைக்கு எல்லோரும் பேஸ்புக்கை நாடுகிறோம். பாமாயில் கொடுக்கும் ரேஷன் கடை க்யூவாக, பேஸ்புக்கில் புதிதாக என்ன கருத்து வந்திருக்கிறது, எங்கே குழு அமைகிறது என்று பழியாய் கிடக்கிறோம். ஆனால், நாளைக்கே கூகிள் பிளஸ் என்று வேறு எங்காவது சென்று விட்டால்?
அந்தக் காலத்தில், உங்களில் பழைய தகவல், அப்பொழுது வலையேற்றிய நிழற்படங்கள், உளறிய கருத்துகள், விரும்பிய லைக் தொகுப்புகள் எல்லாவற்றையும் பத்திரமாக சேமித்து வைத்து, விளம்பரதாரர்களிடம் விற்க நினைக்கிறது ஃபேஸ்புக்.
750 மில்லியன் வாடிக்கையாளர்களின் நுணுக்கமான விவரங்கள், காலங்காலமாக ஒருங்கிணைக்கத்தான் இத்தனை அளிப்பான்கள்.
ரகசிய அளிப்பான் x திறமூல கணினி
ஃபேஸ்புக்கிற்கு தேவையான மென்பொருளை ஃபேஸ்புக் எழுதிக்கொள்கிறது. அப்படியானால், பேஸ்புக்கிற்கு தேவையான வன்பொருளை மட்டும், ஏன் ஐ.பி.எம்.மும், ஆரக்கிளும், எச்.பி.யும், டெல்லும் செய்துதர வேண்டும்?
தாங்கள் எழுதும் மென்பொருளுக்கு ஏற்ற வன்பொருள் வழங்கியை வடிவமைக்க விரும்புகிறார்கள். வன்பொருள் நிறுவனங்களான டெல், எச்.பி. போன்றோர், பொதுவான வழங்கிகளையே தயார் செய்கிறார்கள்.
ஒரே அளவில் அனைத்து உள்ளாடைகளையும் தயார் செய்து, சீனாக்காரரிடமும் கொடுக்கிறார்கள்; அமெரிக்காவின் போஷாக்கானவர்களிடமும் கொடுக்கிறார்கள். எப்படி பொருந்தும்?
2004களிலேயே இந்தப் பிரச்சினைகளை கூகிள் எதிர்கொண்டது. வண்ணமயமாக, விருப்பத்திற்கேற்ப, பயன்பாட்டுகேற்ப, வன்பொருள் வளைந்து கொடுக்க வடிவமைக்க ஆள் போட்டார்கள். தாய்வானுக்கும் தாய்லாந்துக்கும் ஆளனுப்பி சி.பி.யூ முதல் மதர்போர்டு வரை கொள்முதல் விலையில் சல்லிசாக வாங்கினார்கள்.
அமெரிக்காவில் ஆயிரமாயிரம் ஏக்கர் நிலம் வாங்கி, வழங்கிப்பண்ணைகளுக்கு கூகிள் கால்கோள் இட்டது.
அண்ணன் எவ்வழி; பேஸ்புக் அவ்வழி என்று அளிப்பான்-பண்ணைகளை, இப்பொழுது ஃபேஸ்புக்கும் துவங்கி இருக்கிறது.
தங்களின் சிட்டிவில், ஃபார்ம்வில், ஜாம்பிலாண்ட் போன்ற விளையாட்டுகளுக்கான நுட்பத்திற்கேற்ற கணினி வடிவமைப்பு; ஐபோனில் முகப்புத்தகம் தெரிவதற்கான சிற்ப்பு வழங்கி வடிவமைப்பு; செய்தியோடை மற்றும் மாற்றுத் தளங்களில் பகிர்வதற்கான அளிப்பான் வடிவமைப்பு என்று செயல்பாட்டுகேற்ப மாற்றியமைத்து தெரிவு செய்கிறார்கள்.
இவற்றையெல்லாம் கூகிள் போல் கமுக்கமாக வைக்காமல், பகிரங்கமாக படம் போட்டு விளக்குகிறார்கள். எழும் பிரச்சினைகளை பிரசங்கம் செய்கிறார்கள். நாலு பேர் எட்டு விதமாக தீர்வு கொடுக்கிறார்கள். எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, அடுத்த தலைமுறைக்கான வழங்கிநுட்பத்தை மேம்படுத்துகிறார்கள்.
அப்படியானால், எச்.பி., டெல் போன்ற கணினி வன்பொருள் நிறுவனங்களின் கதி? அவர்களும் இதே போன்ற வழங்கி நுட்பத்திற்கு மாறலாம்; மேகதூதராக கிளவுட் கம்ப்யூட்டிங்கில் இறங்கலாம்.
ஃபேஸ்புக் அடிபற்றி, ஈ-பே, நெட்ஃப்ளிக்ஸ், சீனாவின் பைடூ, மொசில்லா எல்லாரும் இந்தப் பாதையில் காலடி வைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.
இன்னும் கூட உங்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லையா?
அமெரிக்க வீட்டுச்சந்தை வீழும் என்றும் மனை விற்பகத்திற்கான கடன் ஏமாற்றப்படும் என்றும் ஆருடம் சொல்லி, அந்த ஆருடத்தின் மீது ஊகச் சந்தையில் பந்தயம் கட்டிச் சூதாடி பெரும்பணமும் ஈட்டிய கோல்ட்மன் சாக்ஸ் இந்த ஓபன் கம்ப்யூட் – திறமூல வழங்கி நுட்பத்தில் பிரதான இயக்குநராக சேர்ந்துள்ளது போதாதா?
இணையத்தில் திருடுவதும் அதைத் தடுப்பதற்குமான சட்டம் குறித்து சமீபத்தில் வாசித்த சுவாரசியமான கட்டுரை: சங்கைப் பிடிக்கும் சோபா (SOPA)
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde