Tag Archives: Twitter

பார்லர் மூடுவிழா – ஏன்? எதற்கு? எப்படி?

பேச்சுரிமை

அது சடாரென்றுதான் எனக்கு நிகழ்ந்தது. ஒரு வார காலம் அவகாசம் கொடுத்திருப்பார்கள். சொல்வனம் இயங்கும் வோர்ட்பிரெஸ் தளத்தில் என் வலைப்பதிவை வைத்திருந்தேன். அந்த வலைப்பதிவில், ஆங்கிலத்தில் பல இடங்களில் வரும் விஷயங்களை சுட்டு, மறுபதிப்பாக என் தனி வலையாக சேமிப்பது வழக்கம். ஹார்வார்டு பிஸினெஸ் ரிவ்யூ போன்ற புகழ் பெற்ற பத்திரிகைகள், மெக்கின்ஸி போன்ற செல்வாக்கான மேலாண்மை நிறுவன ஆராய்ச்சிகள், நியூ யார்க்கர் போன்ற வெகுஜன பத்திரிகைகளில் வந்த முக்கிய கட்டுரைகள், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற தினசரிகளின் தலையங்கங்கள் – இது போன்று காசு கொடுத்து படிக்க வேண்டிய விஷயங்களை, இலவசமாக விநியோகித்தேன். சும்மா கொடுப்பது போதும்; இனிமேல் எல்லாமே காசு கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் என்று காப்புரிமை குறித்து அப்போது கெடிபிடி அதிகமான காலம். ஆலன் ஷ்வார்ஸ் தற்கொலைக்கு ஓரிரு வருடங்கள் முன்பான நேரம். ஒரே வாரம் கெடு தந்தார்கள். அதன் முடிவில் என் வலையகத்தை முடக்கி, நொடியில் வலையில் இருந்து காணாமல் போக்கிவிட்டார்கள். சிலிக்கான் வேலி நிறுவனங்கள் எல்லாம் எதுவும் செய்யத் துணிந்தவை என்பதை நேரடியாக பாதிப்பின் அடிப்படையில் உணர்ந்தேன். என்னுடன் வாருங்கள் என்று 8சான் (8chan) மாதிரி க்யூஅனான் (QAnon) மாதிரி தனது பைநாகப்பையை சுருட்டிக் கொண்டு கிளம்பும் திருமழிசைப் பெருமாள் போன்ற டொனால்டு டிரம்ப்பும் கிடையாது. நானும் ஆழ்வார் கிடையாது.

கணிகண்ணன் போகின்றான் காமருபூ கச்சி மணிவண்ணா
நீ கிடக்க வேண்டாம் துணிவுடைய செந்நாப்புலவனும்
போகின்றேன் நீயும் உன் பைநாகப் பாயை சுருட்டிக்கொள்

கணிகண்ணன் போக்கொழிந்தான்
காமருபூகச்சி மணிவண்ணா நீ
நிற்க வேண்டாம் துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தான்
நீயும் உன் பைநாகப் பாயில் படுத்துக்கொள்

பார்லர் நிறுவனத்தை முடக்கிய கதை

ஜன.6. – பெரும்பாலோரின் முதல் எதிர்வினை நிம்மதி பெருமூச்சாக இருந்தது. ஜனவரி மாதத்தின் ஆறாம் நாள் அந்த அதிரடிகள் துவங்கின. தன்னுடைய பதவிக்காலத்தில் பதினான்கே பதினான்கு நாள்கள் மட்டுமே டொனால்ட் டிரம்ப் பாக்கி வைத்திருந்தார், ஜனவரி 6 – ஜனாதிபதியின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. எண்ணற்ற துஷ்பிரயோகங்கள், பொய்கள் மற்றும் முட்டாள்தனங்களை இனிமேல் அவரால் டிவிட்ட முடியாது. அதன் தொடர்ச்சியாக அவருடைய அடிவருடிகள் கணக்கும் நிறுத்தி நீக்கப்பட்டது. ட்ரம்ப்பின் பல நண்பர்களும் ஆதரவாளர் கணக்குகளும் மூடப்பட்டது. அவர்களின் அவச்சத்தத்தின் முடிவு ஆனந்தமாக இருந்தது. சமாதானத்திற்கான விலை என்பது சுதந்திரப் பேச்சைக் கட்டுப்படுத்துவது என்பது – ஜனநாயக நாடுகளுக்கு தலைகுனிவு.

பேச்சுரிமையின் காவலராக தொழில்நுட்ப நிறுவனங்கள்

ஜனவரி ஏழாம் தேதி ஃபேஸ்புக் நிறுவனம் டொனால்ட் டிரம்ப்பின் கணக்கை காலவரையற்ற நிலுவையில் வைப்பதாக அறிவிக்கிறது. அதற்கு மறுநாள் டிவிட்டர் அவரின் கணக்கை நிரந்தரமாக மூடுகிறது. ஸ்னாப்சாட் சமூக ஊடகமும் வீடியோக்கள் போடும் கூகுள் நிறுவனத்தின் யூடியுப் தளமும் இதே போன்ற தடைகளை ஜனாதிபதி டிரம்ப் மேல் போடுகிறது. டிரம்ப்பை போன்றே செல்வாக்குடன் திகழ்ந்த பல தீவிர வலதுசாரி சார்பாளர்களுக்கும் இதே கதி. அவர்களின் கணக்குகளும் முடக்கப்படுகின்றன.

கூகுள் நிறுவனத்தின் ப்ளே ஸ்டோர் கடையும் ஆப்பிள் நிறுவனத்தில் ஐஃபோன் கடையிலும் இருந்து “பார்லர்” (Parler) நீக்கப்படுகிறது. பார்லர் – வலதுசாரிகளிடம் புகழ்பெற்றது. டிவிட்டர் மாதிரி பார்லரும் ஒரு சமூக ஊடகம். ஆனால், ட்விட்டரை விட அளவில் மிகச் சிறியது. டிவிட்டர் பயனர்கள் மொத்தம் 32 கோடி; பார்லர் மூடியபோது, அதன் பயனர்கள் எண்ணிக்கை மொத்தம் 23 லட்சம். ட்விட்டரை விட்டு நீக்கப்பட்டவர்கள் பார்லருக்கு சென்று கடையைத் துவங்கினர். வலதுசாரிகளுக்கு தங்களின் கருத்துகளையும் சித்தாந்தங்களையும் ஆக்ரோஷமாக முன்வைக்க பார்லர் உதவியது. கூகிள் கடையும் ஆப்பிள் செல்பேசி கடையும் நீக்குவதனால் – இனிமேல் எந்தப் புதிய நபராலும் பார்லர் நிரலியை தரவிறக்க முடியாது. எனினும், இதற்கு சந்து பொந்து ஓட்டைகள் இருந்தன.

A screenshot included in Amazon’s letter to Parler

இந்த நிலையில் அமேசான் நிறுவனம் பார்லருக்கு மரண அடி கொடுத்தது. பார்லர் செயலி இயங்குவதற்கு ஆதாரமாக இருப்பது அமேசான் வெப் செர்வீசஸ் எனப்படும் ஏ.டபிள்யு.எஸ் (AWS). அந்த வசதிகள் நிறுத்தப்படும் என்று அமெசான் ஒரு நாள் கெடு கொடுத்து, அடுத்த நாளே பார்லரை செயலிழக்க வைக்கிறது.

வெறியாட்டத்தைத் தூண்டிய மந்தை கும்பல் இவர்கள், என்று பார்த்தால் நிச்சயமாக இது ஏற்றுக்கொள்ளத்தக்கது. அமேசானும் கூகுளும் ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் தனியார் நிறுவனங்கள்; எனவே, தங்களின் வசதிக்கேற்ப, தங்களின் சுயவிருப்பத்திற்கேற்ப – என்ன வேண்டுமோ அதைச் செய்யும். நாம் எல்லோரும், ஒரு நிரலியையோ செயலியையோ தரவிறக்கும்போதும், உபயோகிக்கும் போதும், “உரிமைதுறப்பு” என்பதை ஒப்புகொண்டு, அந்தந்த பெருநிறுவனங்களின் விருப்பத்திற்கேற்ப கட்டுப்படுவோம் என்பதை ஒப்புக் கொள்கிறோம். அதிபர் டிரம்ப் கொஞ்சம் எசகுபிசகாக டிவிட்டுகிறார். அவரின் நிலைத்தகவலைக் கேட்டோர் கொதித்தெழுகின்றனர். கிளர்ச்சியில் ஈடுபடுகின்றனர். எனவே, பார்லர் நிரலியை நாங்கள் வழங்கமாட்டோம் என முடிவெடுத்ததாக அமேசான் கடிதம் போடுகிறது.

ஆனால், இன்றைய அளவிலும் அயொத்தொல்லா அலி கொமேனி டிவிட்டரில் இயங்குகிறார். டொனால்டு டிரம்ப்பை போல் அறச்சீற்றம் எல்லாம் கொள்ள தன் ஆதரவாளர்களை அவர் தூண்டவில்லை. 8,815,000த்துக்கும் மேற்பட்ட தன் சீடர்களுக்கு, ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி நேரடியாக “இன்னாரை தீர்த்துக் கட்டு” என்று ஃபாத்வா கொலை உத்தரவை இன்றளவும் விடுத்துக் கொண்டே இருக்கிறார். அவர் ட்விட்டரில் தான் இன்னும் இருக்கிறார். அந்த மாதிரி வெளிப்படையான வெறித்தாக்குதல் அழைப்புக்கும் மறைமுகமாகத் தூண்டி விடுவதற்கும் உள்ள வேறுபாடு கூட சமூக மிடையக் காவலர்களுக்குத் தெரியவில்லையா?

Supporters listen as President Trump speaks during a Save America Rally near the White House on January 6—not long before a pro-Trump mob stormed the Capitol Building

இணையம் எவ்வாறு இயங்குகிறது?

இதற்கு வலை எவ்வாறு, எவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுதல் அவசியம்.

உங்களின் வலை செயல்பாட்டிற்கும், வலையகம் இயக்குவதற்கும் “ஏற்றுக்கொள்ளக்கூடிய பயன்பாட்டுக் கொள்கை” (acceptable use policy) என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். சேவை விதிமுறைகள் (terms of service) என்பது கட்டுப்பாடுகளும் சட்ட திட்டங்களும் கொண்டவை. அவை தேசங்களுக்கேற்ப மாறும். ஆனால், “ஏற்றுக்கொள்ளக்கூடிய பயன்பாட்டுக் கொள்கை” என்பது நிறுவனங்களுக்கு நடுவே நிலவும் பரஸ்பர புரிதல்.

இது எப்பொழுது, எப்படி நடைமுறைக்கு வந்தது?

தொண்ணூறுகளில் எரிதம் (spam) அஞ்சல்கள் தலைவிரித்தாடியது. சாதரண மக்களால் அனுப்பப்படும் மின்னஞ்சல்கள், மொத்த வலையையும் ஸ்தம்பிக்க வைத்தது. வணிக நிறுவனங்களால் தங்களின் குறைந்த பட்ச சேவையைக் கூட வழங்க இயலாதவாறு எரிதங்கள் ஆக்கிரமித்தன. அப்பொழுது இந்த அடாவடியை அடக்க அடாவடியான அணுகுமுறை, பல்வேறு சேவை வழங்குநர்களால் (ISPs) ஒப்புக்கொள்ளப்பட்டன.

இதற்கெல்லாம் கண்ணாமூச்சி காட்டி மாற்றுப் பாதையில் பயணிக்க பிறிதொரு மார்க்கம் இல்லையா?

இருக்கிறது. அது ருஷிய வழி. டி-டாஸ் காவலர் (DDoS-Guard) என்னும் பேரில் தீவிரவாத ஹமாஸ் முதற்கொண்டு எல்லா பாதகர்களுக்கும் வலைச்சேவை வழங்குகிறார்கள். மற்ற நாடுகளின் சட்டங்களையும் சாதாரண தயவு தாட்சண்யங்களும் பாராமல் வெறுப்பையும் வன்மத்தையும் பஞ்சமா பாதகத்தையும் பரப்புவதற்கு பாதை அமைத்துக் கொடுக்கிறார்கள்.

அதிருக்கட்டும். இந்தியாவில் ஒரு இணையம். சீனாவில் இன்னொரு இணையம். இதெல்லாம் எப்படி சாத்தியம்?

இணையம் என்பது கூட்டாட்சி. இந்தியாவில் அது ஜியோ, பி.எஸ்.என்.எல்., ஏர்டெல். அமெரிக்காவில் அது ஏடி அண்ட் டி, வெரைசான், ஸ்ப்ரிண்ட், டி – மொபைல். ஜெர்மனியில் டாயிச் டெலிகாம்.

People associated with far-right online movements such as QAnon breached the Capitol on Wednesday

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முதலாளிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டு இயங்குகிறார்களா?

கிளவுட்-கம்ப்யூட்டிங் சேவைகள் உட்பட இணையத்தின் உள்கட்டமைப்பு நடுநிலையாக இருக்க வேண்டும். பிளவுபடுத்தும் பாகுபாடான போர்களில் இழுக்கப்பட்டாலும் நாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரே மாதிரியான முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த முடிவுகளை எவர் எடுக்கிறார்கள்? தொழில்நுட்ப நிறுவனங்களின் கையில் இந்த சாவி இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்படாத மற்றும் கணக்கிட முடியாத சில நிர்வாகிகள் கட்டுப்பாட்டில் இவை இருக்கின்றன.

தங்களை மேய்க்கப்போகும் எல்லா செயற்குழுக்களையும் டெமோகிராட் கட்சி கையில் எடுத்து விட்டது என்பதை FAAMG எனப்படும் ஃபேஸ்புக், ஆப்பிள், அமேசான், மைக்ரோசாஃப்ட், கூகிள் உணர்கிறது. ஜியார்ஜியா மாகாண தேர்தல் முடிவுகளும் வந்துவிட்டன. இனிமேல் தங்களின் குடுமி ரிபப்ளிகன் கட்சியிடம் இல்லை. டொனால்ட் டிரம்ப்பும் அவரின் ரிபப்ளிகன் கட்சியும் எந்த முடிவும் எடுக்கப் போவதில்லை என்பதைப் புரிந்து கொள்கிறார்கள்.

டெமோகிரட் பெரும்பான்மை. ஜனாதிபதி ஜோ பைடன்; செனேட் பெரும்பான்மைக்கு துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்; ஹவுஸ் ஆஃப் ரெப்ரசெண்டேடிவ்ஸ் எனப்படும் காங்கிரசிலும் ஜனநாயகக் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை செய்து நிறைவேற்றி விட்டார்கள். இந்த சிலிகான் வாலி பெருநிறுவனங்களில் வேலை பார்ப்போரின் 95% தேர்தல் காணிக்கைகள் ஜோ பைடனுக்கு சென்றுள்ளது. (பார்க்க: Silicon Valley Opens Its Wallet for Joe Biden | WIRED). பார்லர் பெரு முதலையாக இருந்தால், இந்த மாதிரி, “எடுத்தோமா… கவிழ்த்தோமா” என்னும் மூடுவேலை சாத்தியமேயில்லை.

கீழேக் காணும் ட்விட்டை போட்டவர் ஜெனிஃபர் பால்மியெரி (Jennifer Palmieri). இவர் க்ளிண்டன் ஆதரவாளர்.

இதனால் கூகிள் நிறுவனம், சில பல சில்லறையாக சிதற வேண்டாம். ஆப்பிள் எத்தனை காசுக்கு வேண்டுமானாலும் ஐஃபோனை விற்றுக் கொள்ளலாம். அமேசான் வருமான வரியை அதிக அளவில் கட்ட வேண்டாம்.

இன்று ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் சிலிகான் வேலி நிறுவனங்கள், நாளைக்கே குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெற்றால், அவர்களின் துதி பாடி, இன்னொரு ஆட்சி சொல்வதை சிரமேற்கொண்டு இரும்புக்கரத்தினால் இன்னொருவரை அடக்கும் என்பதில் எவருக்கும் துளிக் கூட ஐயமிருக்கக் கூடாது. ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், “தனியார் நிறுவனங்கள் பேச்சு விதிகளை தீர்மானிக்கக்கூடாது.” என்றார். ருஷியாவைல் வெளியேறிய அதிருப்தியாளரான அலெக்ஸீ நவல்னி (Alexei Navalny), “இந்தத் தணிக்கை ஏற்றுக்கொள்ள முடியாத செயல்” என்று தன் கண்டனத்தைப் பதிவு செய்தார். இவ்வளவு ஏன்!? ட்விட்டர் நிறுவனத் தலைவரான, ஜாக் டார்சி கூட “ஆபத்தான முன்மாதிரி” என வருந்தியிருக்கிறார்.

List of most-downloaded apps on Apple Store, Jan. 8, 2021

வருங்காலத்திற்கான சில தீர்வுகள்

  1. ஒரு சில நிறுவனங்களே இப்போது எவர் பேசலாம், எதைப் பேசலாம், எவ்வளவு பேசலாம், எப்படி பேசலாம் என்பதை முடிவு செய்கின்றன. இந்த நிலை மாற விதவிதமான விளம்பரம் சார்ந்த, விளம்பரங்கள் சாராத வணிக அமைப்புகள் வரவேண்டும்.
  2. வைரல் ஆவது என்பது இன்றைய நிலையில் எல்லோருக்கும் முக்கியமாக அமைந்திருக்கிறது. விற்கிறதோ இல்லையோ – எல்லாவிதமான நூல்களும் அச்சிடப்பட்டது ஒரு காலம். அது போல், பரவலாக பல்லாயிரம் பேரைச் சென்றடையாவிட்டாலும் முக்கியமான விஷயங்களை முன்னிறுத்துவது எப்படி என்று யோசிக்க வேண்டும்.
  3. எதை தணிக்கை செய்வது என்பது குறித்து பல்வேறு சிந்தனையாளர்களிடமிருந்து கருத்துக்களைப் பெறவேண்டும்.
  4. சில ஸ்டேட்டஸ் தகவலுக்கு அடியில் “இது உண்மை அல்ல.” என்பது போன்ற எச்சரிகைகள், கொட்டை எழுத்தில் போட வேண்டும்.
  5. எந்த விதமான நடவடிக்கை எடுக்கப் படுகிறதோ, அது வெளிப்படையாகவும் கணிக்கக்கூடியதாகவும் அமையவேண்டும்.
  6. கடினமான தீர்ப்புகளை பாதிக்கப்பட்ட மக்கள், மறு முறையீடு செய்வதற்கான உரிமையை வழங்கும் சுயாதீனமான சட்டரீதியான வாரியங்கள் அமைய வேண்டும்.
  7. உகாண்டாவில் தன் நிரலி கிடைக்காது என்பதற்காக, நாட்டிற்கேற்ப வளைந்து கொடுக்காத சுதந்திர செயலிகள் இயங்க வேண்டும்.
  8. இன்றைக்கு சரியெனப் படுவது நாளைக்கு தவறாக இருக்கும். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் பனிரெண்டு வயதில் மணமுடித்து, 13ல் குழந்தை பெறுவது சகஜமாக இருந்தது. அது போல், காலத்திற்கேற்பவும் வளர்ச்சிக்கேற்பவும் மாறும் சட்டதிட்டங்களை சமூகங்களும் பிரஜைகளும் உருவாக்க வேண்டும். விற்பனையைக் குறிக்கோள் வைக்கும் நிறுவனங்கள் கையில் இந்த முடிவுகள் இருக்கக் கூடாது.
  9. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு சட்டதிட்டங்கள் இருக்கின்றன. இழிமொழியை கதையில் வரும் கதாபாத்திரம், அந்தச் சூழலுக்கேற்ப பயன்படுத்தலாம். அது ஒப்புக்கொள்ளக் கூடியதே. அதே வெறுப்பு மொழியை டிவிட்டரில் பயன்படுத்த முடியாது. இது சுதந்திர நாட்டிற்கும் கொடுங்கோல் ஆட்சி நடக்கும் பிரதேசத்திற்கும் இடையே வேறுபடும். சீனர்களுக்கு ஒரு சட்டம், அமெரிக்கர்களுக்கு ஒரு சட்டம் என்று பிரிவுபடுத்தாத உலகளாவிய ஒரு நோக்கு வரவேண்டும்.
படத்தொகுப்பு

Cartoons: Last Week News

This gallery contains 9 photos.

டிஜிட்டல் கொலையாளிகள்: 66A – ITAct

இன்றைய தேதியில் கசாப்களை விட இணையத்தில் கொலை செய்பவர்கள்தான் அதிகம்.

சின்மயிக்கு @ போட்டு ராகிங் செய்பவர்கள், கார்த்தி சிதம்பரத்தை கிண்டல் அடித்து வெறுப்பேற்றுபவர்கள், பெங்களூர் பிகாரி வன்முறை, ரோஜா செல்வமணி கருத்து காவலர்கள், பால் தாக்கரே என்று யாரை விமர்சித்தாலும் காவல்துறையும் சட்டம்+ஒழுங்கும் துள்ளி எழுகிறதே… ஏன்?

இந்த மாதிரி கோபக்கார புரபசர்களுக்கும் பகிடி புரொகிராமர்களுக்கும் யார் முன்னோடி?

கென்னடியை சுட்டது யார் என்று தெரியும். ஆனால், எதற்காக என்பது அமெரிக்கர்களுக்கு புரியாத புதிர். மூன்று திரைப்படங்கள், பதினேழு புத்தகங்களாவது ஜே.எஃப்.கே. கொலைவழக்கு குறித்து அலசி ஆராய்ந்திருக்கிறது. இதெல்லாம் நடந்து முடிந்த மே 2005, நாஷ்வில் நகரத்தில் இருந்து விக்கிப்பீடியாவில் ஒருவன் எழுதுகிறான்:

1960களில் அட்டர்னி ஜெனரலாக இருந்த கென்னடியின் உதவியளாராக ஜான் செய்காந்தளர் பணியாற்றினார். ஜான் எஃப் கென்னடியும் அவரின் சகோதரர் பாபி கென்னடியும் கொலை செய்யப்பட்டதில் அவருக்கு நேரடி தொடர்பு இருந்ததாக அவர் மேல் சில காலம் சந்தேகம் இருந்தது. ஆனால், அவை நிரூபிக்கப்படவில்லை. 1971ல் ஜான் செய்காந்தார் சோவியத் ருசியாவிற்கு இடம் மாறினார். 1984ல் மீண்டும் அமெரிக்கா திரும்பினார்.

உண்மையில் ஜான் செய்காந்தளர் மார்ட்டின் லூதர் கிங்குடன் போராடியவர். கென்னடிக்காக ஊழியம் செய்தவர். கருப்பின போராட்டத்தில் பங்கு பெற்றவர்.

அவரிடம் இந்த விஷயம் பற்றி விசாரித்தபோது, “என்னப் பற்றி எதற்கு தவறாக எழுதணும்? அதில் எள்ளளவு மட்டுமே உண்மை இருக்கிறது. அவருடைய செயலாளராக இருந்திருக்கிறேன். கென்னடியின் இறுதி ஊர்வலத்தில் அவரை தூக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். இந்த எழுபத்தெட்டு வயதில் விக்கிப்பிடியாவைக் கற்றுக் கொண்டு, இந்த அவதூறை நீக்குவது எப்படி?” என்று சோர்வும் வருத்தமும் சேறடித்தவர் எவர் என்று கூட தெரியாத அச்சமும் கலந்து பேசியிருக்கிறார்.

கென்னடி குறித்த விக்கி பக்கத்தில் இந்த வடிகட்டின பொய் நூற்றி முப்பத்திரண்டு நாள்கள் நிலைத்து லட்சக்கணக்கானோர் பார்வைக்கு சென்றுள்ளது. வழக்கம் போல் இதை ஆதாரமாகக் கொண்டு ஆன்ஸ்வர்ஸ்.காம், கூகில், ரெபரன்ஸ்.கொம் போன்ற கல்லூரி மாணவர்களும் பள்ளிச் சிறுவர்களும் பயன்படுத்தும் தளங்களும் ததாஸ்து சொல்லி திக்கெட்டும் தகவலைப் பரப்பி இருக்கிறது.

நீங்கள் சுடப்பட்டால் உங்களுக்கே தெரியாது. உங்களின் கேரக்டர் கொலையுண்டதை ஊரார் அறிந்திருப்பார்கள். நம் குணச்சித்திரம் சின்னாபின்னமானது நோர்வே முதல் நமீபியா வரை பரவியிருக்க நமக்கு ரொம்பவே பொறுமையாக அறிவிக்கப்படும். அதுவும் நாமே கண்டுபிடித்தால் மட்டுமே சாத்தியம்.

இந்த மாதிரி இழுக்குகளில் இருந்து சாமானியர்களைக் காப்பாற்றவே சட்டமும் ஒழுங்கும் செகஷன் அறுப்பத்தி ஆறு ஏ-வை உண்டாக்கி இருக்கிறது.

ஆனால், 66ஏ நியாயமாக உபயோகமாகிறதா என்றால், இந்தியாவின் எல்லா சட்டமீறல்கள் போலவே அதுவும் மக்களுக்கு பிரயோசனமின்றி போகும் உபத்திரவ பட்டியலில் +1

Idly Vadai 9 Year Greetings

இட்லி வடை ஆரம்பித்து பத்தாவது ஆண்டு துவங்கப் போகிறது.

பத்தாண்டுகளாக தமிழ்ப்பதிவுகள் எப்படி இருக்கிறது என்று ரிப்போர்ட் கார்ட் போடலாம். பேருந்து விபத்தில் சென்னை நகரத்தின் பள்ளி சிறுவர்கள் இறப்பது போல் அது அடிக்கடி நடப்பது.

பத்தாண்டுகளில் இட்லி வடை எழுதியதில் பெஸ்ட் எது என்று பார்க்கலாம். டெண்டுல்கர் சதம் அடிப்பது போல் ஆயிரக்கணக்கான பதிவுகளில் நூறு திக்கி திணறி தேறலாம்.

சமகால ஜாம்பவான்களான பேயோன், மனுஷ்யபுத்திரன் போன்ற புனைப்பெயர்களோடு ஒப்பிட்டு அலசலாம். கோகுலாஷ்டமிக்கு கிருஷ்ணர் வேடம் அணிவது பொருத்தம் என்பது போல் இட்லி வடையில் அசுரர்களுக்கு இடம் இல்லை.

அப்படியானால் என்ன செய்யலாம்?

நீங்களும் இட்லி வடையாக ஒன்பது யோசனைகள் கொடுக்கலாம்:

1. தற்பெருமை, சுய அங்கீகாரத்தின் வெளிப்பாடாக அகங்காரம், தவறு செய்தாலும் மன்னிப்பு கேட்காத தன்மை, காதல் மன்னர்களின் வசீகரம் என்று அரசியல்வாதிக்கும் வலைப்பதிவருக்கும் உள்ள ஒற்றுமைகள் நிறைய. ஆனால், அரசியலில் வாக்கு கேட்டு வெற்றி பெற்றால்தான் மதிப்பு. வலையில் எழுதினாலே குவியும் வாக்கு.

2. இட்லி-வடை என்பது வாரிசு அரசியல் மாதிரி. முன்னுமொரு மூதாதையர் காலத்தில் இருந்து தியாகி பென்சன் பெற தகுதி பெற்றவர். நேற்றைய பினாமி பாலிடிக்சில் மில்லியனரானது போல் புதிதாக முளைத்தவர் இந்த பூமியில் காலூன்றுவது எப்படி? திண்ணை, சொல்வனம், உயிரோசை எதையும் விட வேண்டாம். ட்விட்டர், பேஸ்புக், பிண்டெரஸ்ட் எங்கும் தோன்றவும்.

3. எனக்கு ரொம்ப பிடித்தமான வினா: ‘எல்லோரும் இப்படி செஞ்சா என்ன ஆகும்?’ – அஞ்சு பைசா அன்னியன் ஆகட்டும்; எனக்கு காரியம் ஆனால் போதும் என்று கூடங்குளத்தை மூடச்சொல்லும் உதயகுமார் ஆகட்டும். உலகில் உள்ள அனைவரும் எனக்கு மட்டும் இது நடந்தால் போதும் என்று நம்பும் மனநிலையை உடைக்கலாம்.

4. எனக்கு நிரலி எழுதத் தெரியும். ஆனால், கணினி ப்ரொகிராமிங் குறித்து எழுதியது ரொம்பக் குறைவு. மொத்தம் ஏழெட்டு பதிவுகளில் இரண்டாயிரம் வார்த்தைகளை தாண்டாது. இந்த மாதிரி நம் துறை சார்ந்து எழுதலாம்.

5. சுவைக்காக தண்ணியடிப்பது ஒரு ரகம். பழக்கத்திற்காக சரக்கடிப்பது ஒரு ரகம். தூக்கத்திற்காக குவார்ட்டர் அடிப்பது இன்னொரு ரகம். எப்பொழுதாவது கம்பெனிக்காக குடிப்பது என் ரகம். நீங்கள் பதிவதில் எந்த ரகம்?

6. சண்டைக் காட்சிகளில் வாத்தியார் மூன்று அடி வாங்கிய பிறகுதான் நிமிர்ந்து திரும்பக் கொடுப்பார். பாவப்பட்ட ஹீரோவிற்கு மவுசு அதிகம். சிண்ட்ரெல்லாவிற்குத்தான் அனுதாப அலை அடிக்கும். எனவே, அவ்வப்போது உங்களை மனிதராக காட்டிக் கொள்ளுங்கள். அடக்கம் அமரருள் உய்க்கும்

7. ஒரே விஷயத்தையே கட்டி அழாதீர்கள். சங்க இலக்கியமாக இருக்கட்டும்; அரசியல் குழாயடிகளாக இருக்கட்டும். கொஞ்சம் உலகம்; நிறைய உள்நாடு; அப்படியே உங்களால் மட்டுமே எழுதக்கூடிய தனியாள் அனுபவங்கள். எல்லாம் கலந்து கட்டி அவியல் மணக்கட்டும்.

8. நாய் என்றால் கரண்ட் கம்பம் பார்த்து ஒன்றுக்கிருக்கும். வலைப்பதிவர் என்றால் மூக்கை நுழைத்து சண்டை போடுவார்.

9. என் மூளை ஔவையார் மூளை. இடது சாரியாக எல்லாவற்றையும் ஒன்று, இரண்டு, மூன்று என பட்டியல் போட்டு அழகு பார்க்கும். ஆனால், இலக்கியவாதிகளுக்கு வலப்பக்க மூளை புனைந்து கவி பாடும். வைரமுத்துவாக இரண்டையும் நன்றாக குழைத்து கருப்பு மை போட்டு வாழ்க! வளர்க!!

சமூக வலைப்பின்னல் தளங்களில் தனிமனிதர்கள் தங்கள் பொறுப்பினை உணர்ந்து செயல்படுவதற்கான வழிகாட்டுதல்கள்

புதிய தலைமுறை இதழுக்காக எழுதியது:

விவகாரம் இல்லாமல் விவகாரத்தை முன்னிறுத்துவது எப்படி?

தமிழில் மிகவும் புகழ்பெற்ற பழமொழி இருக்கிறது. ‘அரசன் எவ்வழி; மக்கள் அவ்வழி!’ இது பாஸ்டனுக்கும் பொருந்தும். பம்பாய்க்கும் பொருந்தும்.

வேகமாக வண்டியை ஓட்டினால் மாட்டிக்குவோம். அரை அங்குலாம் அதிகமாக வீட்டைக் கட்டினால் தரைமட்டமாக்கப் படுவோம் என்று பயந்து வாழ்க்கையை சட்டதிட்டத்திற்கு உட்பட்டு அமெரிக்காவில் வாழ்கிறேன். அஞ்சி அஞ்சி வாழும் வாழ்வு இந்தியாவில் கிடையாது. இணையத்தில் அந்த அச்சம் சுத்தமாக நீங்கி, டார்ஜான் போல் சுதந்திரமாக சுற்றித் திரிய முடிகிறது.

என்னுடைய வாழ்க்கையே இணையத்தில் என்றாகி விட்டது. உன் நண்பர்களைச் சொல்… உன்னைப் பற்றி சொல்கிறேன் என்பது அந்தக் காலம். உன் மின்னஞ்சல் முகவரியைச் சொல்… உன் சரித்திரத்தை அப்பட்டமாக்குகிறேன் என்பது இந்தக் காலம்.

இப்பொழுதெல்லாம் நேர்காணலுக்குச் சென்றால், ‘உங்கள் பொழுதுபோக்கு என்ன?’ என்றெல்லாம் கேட்பதில்லை. நமது ஃபேஸ்புக், டுவிட்டர் பழக்க வழக்கத்தை உளவு கண்டு அவர்களே அறிந்து வைத்திருக்கிறார்கள். ரொம்ப நேர்மையாக ‘நமக்கு அந்த மாதிரி சமூகத்தளங்களில் எல்லாம் ஐடி கிடையாதுங்க’ என்றால் அதை விட மிகப் பெரிய பிரச்சினை. எல்லாக் குரங்கும் நான்கு கால் கொண்டு தாவும்பொழுது, நாம் மட்டும் இரண்டு கால் கொண்டு நடந்தால்… பிரச்சினைதான். எனவே, சமூக வலைத்தளங்களில் நம் முகவரியும் இருக்க வேண்டும். இயங்கவும் வேண்டும். அதே சமயம் உங்களின் உண்மையான விருப்பங்களில் ஈடுபாட்டோடு செயல்பட வேண்டும்.

ஹிண்டுவில் ‘லெட்டர்ஸ் டு தி எடிட்டர்’ எழுதி நான்கு நாள் தேவுடு காத்து, அதன் பின் அது வெளியாகாத கோபத்தில் ஹிந்து மீது கோபம் கொண்டு திட்டுவது எல்லாம் மலையேறிப் போயாச்சு. சன் டிவியிலோ, குமுதத்திலோ தவறான தகவல் வந்தால், அதை உடனுக்குடன் கிழித்துத் தொங்க விட்டு, நண்பர்களைக் கொண்டு பரபரப்பாக்கி, அந்தந்த மீடியாவின் போட்டியாளர்களின் பார்வைக்கு கொண்டு செல்கிறார்கள். நாளடைவில் இந்தப் பிழை அப்படியே அமுங்கிப் போகாமல், கவனத்தில் இருக்குமாறு வைத்திருக்கிறார்கள்.

இதே போன்ற சுமைதாங்கியை எந்த வலைப்பதிவர் மீதும் சாத்தலாம். இது நம் பக்கமும் வரலாம். ஒரு விஷயத்தை வலையில் பகிருமுன் சரி பாருங்கள். இதை நம் அப்பா படித்தால்… நம் மகள் படித்தால்… எப்படி இருக்கும் என்று யோசியுங்கள். அவர்களுக்கு தகுந்த மொழியில் எழுதுங்கள்.

நம் மகளோ மனைவியோ படித்தால் நம்மை எளிதில் தொடர்பு கொண்டு அவர்கள் தரப்பு கருத்தை சொல்லலாம். மற்றவர்களுக்கு என்ன வழி? உங்களைத் தொடர்பு கொள்ளும் முகவரியை பிரதானமாகப் போடுங்கள். மறுமொழிப் பெட்டியை வைத்திருங்கள். பதில் போட பல வழிகள் கொடுங்கள்.

அதற்காக, அனாமதேயமாக வருபவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். முகங்காட்டாமல் வருபவர்கள், உங்களின் இடத்தை உபயோகப்படுத்தி பிறரை தூற்றலாம். அதற்கு இடம் கொடுக்க வேண்டாம். என் வீட்டில் நடக்கும் விருந்தில் அனைவருக்கும் இடமுண்டு. அதற்காக என் முகத்தில் குத்துபவருக்கும் இலவச இடம் தரமாட்டேன். முக்கியமாக சாப்பிட வந்திருக்கும் சக விருந்தினரை குத்த நிச்சயம் அனுமதி கிடையாது.

நீங்களும் முகமூடி போட்டு போலி மின்னஞ்சல் கொண்டு எங்காவது கருத்து சொல்லும்போது கவனமாக இருக்கவும். எந்த மாதிரி முகத்திரை போட்டாலும் அது அழுந்து தொங்கும். அது விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சேயாகவே இருந்தாலும் சரி. நிச்சயம் பல நாள் போலி ஒரு நாள் அகப்படுவான்.

தகவலை பகிரும் ஆசையில் எங்கிருந்து இந்தத் தகவல் கிடைத்தது என்பதை போட மறந்து விடுவோம். இன்னாரைப் பற்றி இன்னார் என்னா சொன்ன்னார் என்று தெளிவாக இடஞ்சுட்டி விடுங்கள். இது காப்பிரைட் தகராறுகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். நாளைக்கே எவறாவது அவதூறு என்று கிளம்பினாலும், ‘அந்த உடுப்பி பவன் சாம்பார்தான் இங்கே ஊற்றப்பட்டது. இது நான் சொந்தமாக சமைத்தது அல்ல!’ என்று கைகாட்டி தப்பித்து விடலாம்.

ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் யூடியூபிலும் கருத்து வந்து விழுந்தவுடன் வேகமாக எதிர்வினை செய்வது அவசியம். என்னைப் பற்றி பேசுகிறார் என்றால் சும்மா ஒட்டு மட்டும் கேட்டால் போதும். என்னைக் குறித்து தப்பான பிரச்சாரம் நடக்கிறது என்றால் அதை நிச்சயம் தட்டிக் கேட்க வேண்டும். தவறு நம் பக்கம் இருந்தால் மன்னிப்பு கேட்டு விடுங்கள். இல்லாவிட்டால், எதிராளி மன்னிப்பு கேட்கும்வரை விடாதீர்கள்.

சட்டென்று செயல்படுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

பத்து பேரை கேட்காமல், புத்தகங்களை நாலு மணி நேரம் புரட்டாமல் கீபோர்ட் துணையோடு கூகிள் வேகம் பிடித்திருக்கிறது. கால்பந்தாட்டத்தின் கடைசி நிமிடத்தில் குறுக்கே பாய்ந்து கோல் போடும் விறுவிறுப்பான ஆட்டம் ரசிக்கிறது. திறமைக்கும் இளமைக்கும் அடையாளமாக வேகம் திகழ்கிறது. ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பது போல் நான் ஈயாக இருந்தாலும் இக்கட்டான சூழ்நிலையிலும் உடனடி பாய்ச்சல் அனைவரையும் வசீகரிக்கிறது.

இந்த அபார வேகம் சமூக வலைப்பின்னல் தளங்களில் இயங்க மிகவும் தேவை. இந்த வேகத்தை நிதானம் இழக்காமல் இயக்க அசுர நிதானம் அதைவிட அத்தியாவசியமான தேவை.

டென்னிஸ் வீரரையே எடுத்துக் கொள்வோம். எதிராளி பந்து போட்டவுடன் அவசரப்படுபவரை விட அனுமானித்து ஆடுபவரே வெற்றி அடைகிறார். பந்து எங்கே விழும், எப்படி சுழலும், பந்தை எங்கே இருந்து எப்படி போடுகிறார், என்றெல்லாம் கணித்து ஆடுபவரால் மட்டுமே வேகமான பந்தை சரியாக ஆட முடிகிறது. சொல்லப்போனால் விரைவாக அடிப்பதை விட பந்தைக் குறித்த தகவல்களை சேமிப்பதே முக்கியமாகி விடுகிறது.

ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் யூடியூபிலும் கருத்து வந்து விழுந்தவுடன் வேகமாக எதிர்வினை செய்வது அவசியம். நாம் சார்ந்திருக்கும் நிறுவனம் குறித்த அவதூறையோ, நம்முடைய உயரிய விழுமியத்திரற்கு எதிரான பிரச்சாரத்தையோ தோன்றிய புதிதில் தடுத்தாட்கொள்ளுதல் மிகவும் முக்கியம்.

ஆனால், டென்னிஸ் வீரரின் கணிப்பு போல் இந்தக் விவாதம் எவ்வாறு மாறும், எங்ஙனம் உருப்பெறும் என்று யோசிக்கவும் வேண்டும்.

இதற்கு மூன்று கட்டமாக திட்டம் வகுக்கலாம்.

1) பத்தியம் – சாதாரணமாகச் சொன்னால் கவனமாக இருத்தல்; பத்தியமாக இருப்பது என்றால் பாதுகாப்பாக இருத்தல். தகவல்களையும் நண்பர்களையும் உசாத்துணைகளையும் சேர்த்தல்.

2) செயற்பாங்கு – திரும்ப திரும்ப ஒன்றை செய்வதன் மூலமே நம் வேகம் அதிகரிக்கிறது. ’எனக்கு பத்தாயிரம் வித்தை தெரிந்தவனைக் குறித்து கவலையில்லை; ஆனால், ஒரே வித்தையை பத்தாயிரம் தடவை பயிற்சி செய்தவனை நினைத்துதான் அஞ்சுகிறேன்’ என்று ப்ரூஸ்லீ சொன்ன மாதிரி பயின்ற செயல்முறையில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தல்.

3) கூத்து – நடவடிக்கையை செவ்வனே நிறைவேற்றுவது.

வாரத்திற்கு ஒரு முறை என்பதற்கு பதில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என்றோ, ஒரு மணி நேரத்திற்கு ஐந்து நிமிடம் என்றோ தொடர்ந்த கவனிப்பில் இருக்க வேண்டும். கெட்ட பழக்கங்களை நீக்க கடும் பிரயத்தனத்தில் இறங்க வேண்டாம்; சிறப்பான நடவடிக்கைகளை அன்றாட செயல்பாடாக ஆக்கவும். அன்றாட செயல்களை தொடர்பயிற்சியின் மூலம் கூராக்கவும்.

தோட்டக்காரனைப் போல் யோசித்து, தச்சனைப் போல் செயல்படவும்.

அன்றாட செய்திகளுக்கு விமர்சனம், சமூக அவலங்களுக்கு எதிராக ஆமீர் கான் போல் அரட்டை கோஷம் என இவை எல்லாவற்றையும் விட உங்களுக்கு லட்சியமான ஒரு விஷயத்தை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அது கனடாவின் கரடிகளைக் காப்பாற்றும் பிரச்சாரமாக இருக்கலாம்; போபால் விஷவாயுவிற்கான நஷ்டஈடாக இருக்கலாம். உங்கள் பெயரைச் சொன்னால், அனைவருக்கும் அந்த சிக்கல்தான் நினைவிற்கு வரவேண்டும்.

சிக்கல் இல்லாமல் வலையில் உலா வாருங்கள்.

இறுதியாக புத்தகத்தைப் பயில வேண்டுமானால், படித்த புத்தகத்தை மூட வேண்டும். அதே போல் சமூக நட்புகளை நிஜமாக்க வேண்டுமானால், அவர்களோடு சமூக வலைப்பின்னல் தளம் தாண்டியும் நட்பு பயில வேண்டும். அவ்வாறு தோழமைக்கு உருவமும் உயிரும் இருந்தால்தான் நம்மைக் குறித்து அவர்களுக்கு அக்கறையும் அவர்களைக் குறித்து நமக்கு பொறுப்பும் இயல்பாக உருவாகும்.

குடுகுடுவென்று காரியத்தில் இறங்காதே! காலத்தே பயிர் செய்யாமலும் இராதே!!

தொடர்புள்ள பதிவு: BBC News – Need a job? Learn to impress the robots

Nanjil Nadan meet at New Jersey: Live Report & Commentary by sharpshooting critic Dyno

Thanks: @dynobuoy

http://twitter.com/dynobuoy/status/209440304162545664

140த்துவம் – நவீனத்துவம்

முந்தைய ட்வீட்ஸ்: தொலைக்காட்சி – சீரியத்துவம்

தொலைக்காட்சி – சீரியத்துவம்

முந்தைய ட்வீட்ஸ்: நியு யார்க் நகரத்துவம்

நியு யார்க் நகரத்துவம்

முந்தைய ட்வீட்ஸ்: கச்சேரி – பட்டுத்துவம்

கச்சேரி – பட்டுத்துவம்

முந்தைய ட்வீட்ஸ்:இசை – ராஜத்துவம்