Tag Archives: தமிழ்

சொல்வனம் – இ.பா. சிறப்பிதழ்

இ.பா. சிறப்பிதழ் அமர்க்களமாக வெளியாகி விட்டது.
புத்தம்புது சொல்வனம் இதழை வாசியுங்கள்.
உங்கள் வாழ்த்தும் விமர்சனங்களும் தேவை.

இதழ்-370 – சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026

கனடா வெங்கட் இதழின் சிறப்பாசிரியர்.
அவர் தனிப்பட்ட நெருக்கடிகளில் இருந்தாலும் துவக்கிய விஷயத்தை செவ்வனே முடித்துக் கொடுத்தார்.

சொல்வனம் சிறப்பிதழ் போட வேண்டும் என்று பல்வேறு தலைப்புகளில் பேசிக் கொண்டே இருந்தோம்.
– திருநெல்வேலி சிறப்பிதழ்
– இந்திய மொழிகளுக்கான தமிழாக்க சிறப்பிதழ்
– ஆல்பர்ட் காம்யூ
– ஹிந்தி மொழி
…இன்னும் பல விவாதித்தோம்; பொறுப்பை ஒப்படைத்தோம்; சற்றே முஷிந்தோம்.
எனினும், எதுவும் கைகூடவில்லை.

எனக்கு இந்திரா பார்த்தசாரதியை தொலைபேசி மூலமாக அறிமுகம் செய்தவர் வார்த்தை பி.கே சிவக்குமார்.
அழைத்தவுடன் தொலைபேசி மூலமாக நேர்காணல் பேட்டிக்கு ஒத்துக் கொண்ட இளைஞர் இ.பா.
அப்போது தமிழோவியம். இன்று சொல்வனம்.
பேட்டி மறு பிரசுரம் கண்டிருக்கிறது.

நான் ஏ.ஐ., காணொலி, ஊர் சுற்றல், தொலைக்காட்சி, தூக்கம் என்று மந்தகதியில் வாழ்க்கையைக் கொண்டாடி இருந்தேன்.
வாரம் ஒரு முறையாவது அழைத்து, தமிழின் எல்லா விமர்சகர்களையும் பட்டியலிட்டு, அவர்களையும் ஒருங்கிணைத்து முழு மூச்சாக இதழை நடத்திக் காட்டியவர் வெங்கட்ரமணன்.
அவரின் எழுத்துமுறை ஆகட்டும்; செயல்பாடு ஆகட்டும் – எளிமையும் கறார்தன்மையும் கலந்த இராணுவ ஒழுங்கு.
வெங்கட் இவ்வளவு சிரத்தை எடுக்காவிட்டால் சிறப்பிதழ் சிறப்பான இதழாகி இருக்காது.

இதுவரை வந்த எல்லா சிறப்பிதழுக்கும் பதாகை வடிவமைத்தவர் அனுகிரஹா.
அவருக்கு(ம்) உடல்நலம் சரியில்லை.
எனக்கும் சரியான பல்வலி.
கடைசி நேரத்தில் அருண் அருணாச்சலம் கை கொடுத்தார்.
இந்தியாவில் இருந்தாலும் பயணத்தின் நடுவிலும் பேனர் கொடுத்தார்.
நல்ல வேளை – ஏ.ஐ. உபத்திரவத்தில் இருந்து உங்களுக்கு விடுதலை.

ஏ.ஐ. முழுக்க முழுக்க விமர்சன ஆய்வு கட்டுரையை அடிக்குறிப்புகளுடன் மொழியாக்கம் செய்து தந்துள்ளது.
அந்த ஆய்வறிக்கையின் பேராசிரியரை நம் சிறப்பிதழ் பேராசிரியர் தொடர்பு கொண்டு ஒப்புதல் பெற்றது, நிரந்தர ஆசிரியர் மைத்ரேயனின் கண்களைக் குளமாக்கி கண்ணீர் மல்கச் செய்தது.
“இதைத்தானே செய்யச் சொன்னே பாலா!” என்று அவர் இடித்து, வெங்கட் வழி அனைத்திற்கும் உரிமமும் மரியாதையும் செய்யப் பணித்தார்.

ஆனால், கோகுல் சால்வாடியின் ‘பைரசி’ போன்ற தொடர்களை கேட்டு வாங்கி அலசி ஆராய்ந்து பதிப்பித்தாலும் காப்புரிமையை வாழையிலை விருந்தில் உப்பாக கவனிப்பவன் நான்.
இதழில் தொடர்களும் வந்திருக்கிறது.
இந்தத் தொடர் ஆசிரியர்கள் இல்லாவிட்டால் இவ்வளவு நாள் சொல்வனம் தாக்குப் பிடித்திருக்காது.
ஜூலை நான்கு – அமெரிக்க சுதந்திர தினம் – அதை ஒட்டிய லதா குப்பா கட்டுரை.
அருணாச்சலம் ரமணன் அலாஸ்கா சென்றிருக்கிறார் – அவரின் பயணத்திலும் வேதியியலும் இரசாயனவியலும் கலக்கிறது.
ஆசாத் ஹைக்கூ-வில் கரைக்கிறார்.
ரவி நடராஜன் கனடியன் – நம் தகவலை விற்று – எனக்குத் தரவு, அவர்களுக்கு வரவு என்பதை சுட்டுகிறார்.
சொர்ணவேல் ஈஸ்வரன் – கரணம் தப்பினால் மரணம் என்னும் மீடூ விஷயத்தில் மாட்டிய இயக்குநரின் படைப்பை ஆராய்கிறார்.
ஜெகதீஷ் எழுத்தை மூன்று முறையாவது வாசிக்க வேண்டும் – தத்துவம் + வாழ்க்கை + ஆன்மிகம்
லோகமாதேவி முக்கியமான தொடரில் கொலம்பஸ் உடன் கப்பலில் அழைத்துச் செல்கிறார்.
ரகு ராமன் எழுத்து என்றும் என் மனதிற்கு இனிமை. நான் பேட்டி கண்ட முதல் எழுத்தாளர் இ.பா. என்றால், வீடியோவில் நேர்கண்ட முதல் நபர் இவர்.

மீண்டும் இ.பா. சிறப்பிதழ் நன்றிகளுக்கு வந்து விடுவோம்.

என் நலம் விரும்பி சரஸ்வதி தியாகராஜன்.
பல விஷயங்களைக் கொணர்ந்து சேர்த்தார்.
இ.பா. மகள் பத்மா உடன் உரையாடி அரிய புகைப்படங்களைப் பெற்றுத் தந்தார்.

மாலன் கட்டுரை ‘அசல் ஆசான்’ யார் என்று எண்ண வைக்கும்.
அழகியசிங்கர் எனக்குப் போட்டியாக பட்டியல் போட்டு இருக்கிறார்.

நான் ஃபேஸ்புக்கில் இட்ட பதிவைப் பார்த்து இரு விமர்சகர்கள் தங்கள் ஆக்கங்களைப் பகிர்ந்தார்கள்
– ராஜா ராமஸ்வாமி
– அன்பழகன்

வெங்கட் துறை வாரியாக விமர்சகர்களைப் பிடித்தார்.
நாடகம்
ஒவ்வொரு நாவலுக்கும் ஒருவர்
நட்பு
ஆசிரியர் – தமிழ்ப் பேராசிரியர்
சிறுகதை
விமர்சனம்
வைணவம் – இந்து மதம்
சரித்திரம் – வரலாறு
சமகாலத்தவர்
புது தில்லி வாசம்

அது அனைத்தும் இதழில் இடம் பிடித்திருக்கிறது.

என் துரித வாசிப்பில்
1. சுனில் கிருஷ்ணன் கட்டுரையை சிறப்பிடத்தில் வைப்பேன்
2. கிரிதரன் எழுத்தில் இருக்கும் நேர்மையும் மதிப்பீடும் முழுமையான அலசலும் பிரமிக்க வைக்கிறது.
3. காளி பிரசாத் தற்காலத் தமிழில் இருக்கும் மிகச் சிறந்த விமர்சகர்.

ஸ்ரீதர் நாராயணன் காளிக்கு சரியான போட்டி. ஆனால், காளி சுறுசுறுப்பானவர்; உரிய நேரத்தில் தந்து விடுவதால் முதன்மையானவர் 🙂

அம்பை பகிர்வு எனக்கு படு சுவாரசியம்.
என்னவாக இருந்தாலும் அவர் இன்னும் கொஞ்சம் இ.பா.வைப் பற்றி சொந்தமாக எழுதி இருக்கலாம்.

நான் கூட இ.பா. குறித்து விரிவாக எழுதத் திட்டமிட்டு இருந்தேன்.
இ.பா. (அல்லது ஜெ.மோ) போன்றோர் சிறப்பான பேச்சுக்காரர்கள்.
நிறையச் சொன்னா(ல்வா)ர்கள்.
சொன்னதை எழுத்தில் கொணர்(கிறா)ந்தார்கள்.
நூல் பட்டியலையும் செயல்பாட்டையும் பணியையும் பார்த்தால் குறிப்பிடத்தக்க சாதனையாளராக, ரகரகமாக உருவாக்கி இருக்கிறார்கள்.

கைசிக நாடகம் பார்க்க இ.பா. அழைத்துச் சென்றிருக்கிறார்.
அவர் எப்பொழுதும் மின்னஞ்சலுக்கு உடனடியாக பதில் இடுவார்.
~22 ஆண்டுகள் முன்பு அழைத்த அழைப்புக்கு உடனடியாக நேரம் ஒதுக்கி நான்கு மணி நேரத்திற்கு மேல் உரையாடினார்.
அவருக்கு எங்களின் சிறிய பிறந்த நாள் அன்பளிப்பு.

பூமணி அஞ்சலி

நாதி

ஆனானப்பட்ட கறீம் பாய் கண்ணை மூடிவிட்டார். தாலுகா ஆபீஸ் தடிவீரன் சொன்னான்.

ஏட்டையாவுக்கு நெஞ்சில் துப்பாக்கியால் இடித்த வலி. அந்த மைக்கண்ணும் மருதாணிக் கையும் மனசுக்குள் நிழலாடியது. மண்டை கிறுகிறுத்து ஸ்டேஷன் வாசலில் உட்கார்ந்துவிட்டார்.

போனவாரம் போய்ப் பார்த்தபோது தெளுச்சியாக இருந்தாரே. படுத்த படுக்கையிலும் தெம்பாகப் பேசினார். ரிடையரான நினைப்பே இல்லை. அதே இன்ஸ்பெக்டர் கெத்து, எல்லாப் போலீஸ்காரர்களைப் பற்றியும் கேட்டார். கேடிகளின் நடவடிக்கைகளை விசாரித்தார்.

இடையில் “பாத்துமா” என்று குரல் கொடுத்தார். அவர் சம்சாரம் வந்து கட்டிலுக்கடியில் காத்திருந்த மூத்திரக் குடுவையை எடுத்துப் போனாள். அவர் கண்ணைச் சிமிட்டினார்.

“பாத்தயாவே வீட்டுக்குள்ளயே சாராய வடிப்பு நடக்குது. கேஸ்போட்டு உள்ள தள்ளீறாத.”

நோய் அண்டாத சிரிப்பு. கடைசிவரைக்கும் கிண்டல் போகாது.

பாத்துமா காலிக் குடுவையை வைத்துவிட்டுப் போகும்போது மறக்காமல் கேட்டாள்.

“வீட்ல எல்லாரும் நல்லாருக்காகளாண்ணன்.

அவள் முகத்தில் கரிப்பூச்சாகக் கவலை அப்பியிருந்தது.

“இருக்காகம்மா. புள்ளீகள எங்க.”

“ரெண்டு பேரும் பீடிக் கம்பெனிக்குப் போயிருக்காக. வீட்ல கெடங்கன்னாக் கேட்டாத்தான.”

பெட்டை

கம்மாக் கலிங்கலோரம் குருவன் துணிவெளுக்கும் சத்தம் நாலாபக்கமும் தெளிவாகக் கேட்டது. கல்லடித்தாளத்துக்குத் தக்கபடி அவன் சொகமாகப் பாடினான்.

“காடத்தட்டு 
கக்கத்துல 
கருத்தப்புள்ள 
பக்கத்துல 
காடத்தட்டு 
காடத்தட்டு 
சோ 
சோ 
சோவீவி
சோவீவி…”

துணியைத் துப்புரவாகத் துவைத்து அடித்தொண்டைக்குள் ராகத்தை முனங்கிக்கொண்டே பிழிந்து பக்கத்தில் விரித்திருக்கும் சீலைமேல் விட்டெறிந்தான். அடுத்த உருப்படியை எடுக்கும் போது இன்னொரு பாட்டு துவங்கியது.

புருசனின் பாட்டைக் கேட்டபடி துவைத்துப் போட்ட துணிகளை நீலத்தில் முக்கிப் பிழிந்து காயப்போட்டாள் பொன்னாத்தா. நீலத்தாழிக்குள் கைச்சுழட்டல் மறுபடியும் வேகப்பட்டது.

கம்மாயில் தண்ணீர் மேடேறி கெத்கெத்தென்று கிடந்தது. மேட்டுத்தரையில் சம்பும் நீர்க்கோரையும் நெரிசலாக வளர்ந்த பசுமை. மெட்டான இடங்களில் கொக்குகள் அடம்பிடித்து ஒத்தைக்காலில் நின்றுகொண்டிருந்தன. ஓடைக்கரைப் பனையில் நிற்கும் மீன்கொத்தி அடிக்கொரு தடவை எறிந்த பந்தாக நீர்மட்டத்தில் விழுந்து உயரப்போய் உட்கார்ந்து கொண்டது.

குண்டியில் ஓக்கப் பார்க்கும் உலகில் ஒரு ரூபாய் அவமானம்

சாரு நிவேதிதா கதைகளைப் படிக்கும் போது ‘மா பெஹன்’ படடததில் மாதுரி தீட்சீத் “தக் தக் கர்னே லகா” ஒலிக்க விடுவது போல் இருக்கிறது.
பழய நெனப்புடா பேராண்டி என்று அவரும் ஜீரோ டிகிரியை எக்காலத்திலும் அரை பாகை கூட ஏற்றாமல் நம்மை அரைக் கிறுக்காக்கி திரும்பத் திரும்ப ரீல் சுற்றுகிறார்.

அவரின் புதிய ஆக்கம் “விபரீத ராஜயோகமும் அகத்திக்கீரை தண்ணிச்சாறும்”.

படைப்பு கட்டமைப்பு

எந்த மதிப்பீட்டுக்கும் முன்பு, நாம் கையில் வைத்திருப்பது என்னவென்று துல்லியமாகப் புரிந்துகொள்வது அவசியம். இந்தப் படைப்பு “கண்ணாயிரம் பெருமாளை” — சாருவின் நீண்டகால சுயரூபத்தை — மார்ச் 2026-இல் தொடர்ச்சியற்ற சம்பவங்களின் வழியாகப் பின்தொடர்கிறது: நிதி உதவி நிறுத்திய சடையப்பர், காஃபி டேயில் மக்கியாட்டோவிற்குக் கூட பிரயோசனப்படாத வெறும் ஆயிரம் ரூபாய் சன்மானம் தரும் ஊடக நிறுவனம், வைரமுத்துவின் ஞானபீட விருது ஏற்படுத்தும் ஆத்திரம், விபரீத ராஜயோகத்தின் வாக்குறுதி, நந்தினி-விநோதினி-சாந்த்னி-ரோஷ்னி என்று பெண் தோழிகளுடன் உரையாடல்கள், நிர்குண் கவிஞரின் சந்திப்பு, இறுதியில் அகத்திக்கீரை தண்ணிச்சாற்றின் நினைவு. இரண்டு எண்ணிடப்பட்ட பிரிவுகள். யாதொரு வில்வளைவும் இல்லை. தொலைபேசி அழைப்பின் நடுவில் கதை முடிகிறது.


ஆட்டோஃபிக்‌ஷனா?

தொழில்நுட்ப ரீதியில் ஆம். கலை ரீதியில் கங்கை அமரனின் சினிமாப் பாடல் போல்

டுப்ரோவ்ஸ்கி-லெஜூன் (Doubrovsky-Lejeune) பாஷையில் ஆட்டோஃபிக்‌ஷன் என்பதற்கு சுயசரிதை ஒப்பந்தத்துக்கும் கதைசொல்லல் ஒப்பந்தத்துக்கும் இடையே செறிவான இழுவிசை தேவை — உண்மையும் கற்பனையும் ஊசலாடி வாசகன் கற்பனா உற்பத்தி குழப்பத்தில் தொங்கவேண்டும். சாரு பெருமாள் உருவத்தை முன்பெல்லாம் திறமையாகப் பயன்படுத்தியிருக்கிறார், ஏனென்றால் அந்தக் குழப்பம் கவனமாகப் பேணப்பட்டது.

இங்கே கதை-சட்டகம் பல திசைகளில் இடிந்து விழுகிறது.

கதாசிரியர் வெளிப்படையாக நுழைந்து விடுகிறார். “துர்ப்பாக்கியசாலியான நானோ” என்று எழுதும்போது, பெருமாளிடமிருந்து தன்னை வேறுபடுத்திக்கொண்டே அதே நேரத்தில் அந்த வேறுபாட்டை கரைத்துவிடுகிறார். இது னௌஸ்கார்ரையோ (Knausgård) எர்னோவையோ (Ernaux) கையாளும் அதிநுட்பமான கதையாடல் இரட்டிப்பு அல்ல — எம்.என். நம்பியார் காட்சி முடிந்தும் சரோஜாதேவி மீது கை போட்டது போல் கதாசிரியர் தாம் கட்டிய பிரிவினையை காக்க மறந்துவிடுகிறார்.

கதைசொல்லல் சட்டகம் கலைக்காக அல்ல, ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. வைரமுத்துவைப் பற்றிய தாக்குதல், நோபல் விருது குறித்த சொற்பொழிவு, பெயர் தெரியாத ஆய்வாளர்கள் மீதான குத்திக்காட்டல் — அனைத்தும் பெருமாள் வழியாக வழங்கப்படுகின்றன, சாரு என்னும் கதாசிரியர் உரிமை மறுப்பை கைவசம் வைத்திருப்பதற்காக. உள்ளுணர்வைத் தோண்டுவதற்காக ஆட்டோஃபிக்‌ஷன் வடிவத்தை பயன்படுத்தவில்லை — இதுவோ திரையரசியல்; மீடூ செய்யலாமோ என்று நடிகனாக கலை ஆடையணிவது.

நன்கொடை வேண்டுகோள் கதைக்கட்டுமானத்தை முழுவதுமாக தகர்க்கிறது. கதை GPay எண்களிலும் IFSC குறியீடுகளிலும் முடிகிறது. அந்த நொடியில், பின்னோக்கித் திரும்பிப் பார்க்கும்போது, அதற்கு முன்னால் இருந்தவை அனைத்தும் — கலை அல்ல, நிதிசேகரிப்பு ஆவணம் என்று உணர்கிறோம். வாசகருக்கு இது எப்போது வரும் என்று தெரியும் தான்; விமர்சித்தாலும் வன்சொல் விழும் என்று எதிர்பார்ப்பதுதான்: இது படைப்பிலக்கியம் என்னும் பேரில் ரீல்ஸ் போடுவதை ஒத்தது; பணம் கொடுக்க தயார்படுத்தப்பட்டோம். இது வடிவப் புதுமை அல்ல — இது வகைப்பாட்டின் சரிவு. அசௌகரியமான வெளிப்படைத்தன்மையிலும் ஆட்டோஃபிக்‌ஷன் உயிரோடிருக்கும். நிதிசேகரிப்பு ஆவணமாகும்போது உயிரற்றுவிடும்.


கதை ஏன் சலிப்பூட்டும்?

சாருவின் அழகியல் எப்போதும் திசைதிரிவான சாதாரணத்தனத்தை உள்ளடக்கியது — ஆனால் இங்கே அந்தத் வேறொன்றை வழிவிலகி விரிக்கிற எந்த குவிவிளைவையும் இக்கதை உருவாக்கவில்லை.

உண்மையான கதைசார்ந்த ஆசையே இல்லை. பெருமாளின் பொருளாதார நெருக்கடி கூறப்படுகிறதே தவிர உணரப்படவில்லை. 220 ரூபாய் கொடுக்கிறான், முறையிடுகிறான், தொடர்கிறான். சடையப்பர் உதவி நிறுத்துவது சில வரிகளில் முடிந்து உடனே மறக்கப்படுகிறது. வாசகன் கதாபாத்திரத்தோடு பொருளாதார கவலையை அனுபவிக்க வேண்டுமென்றால், எழுத்தாளன் அந்தக் கவலையில் வாழவேண்டும் — வெறுமே அறிவிக்கக்கூடாது. இது அறிவிக்கப்பட்ட வறுமை, அனுபவிக்கப்படும் வறுமையிலிருந்து வேறுபட்டது.

அஸ்திவாரம் இல்லாத பொய்யான ஜோதிடக் கட்டமைப்பு. விபரீத ராஜயோகம் ஒருங்கிணைக்கும் வாக்குறுதியாக அறிவிக்கப்படுகிறது — மார்ச் மாதம் பெண்ணால் பெருமாளுக்கு ஏதோ நடக்கும். ஆனால் கதை இந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஒன்றும் நடக்கவில்லை. கட்டமைப்பு தீர்வை விளம்பரப்படுத்தி சுழல்கிறது. தலைப்பே தவறான பொருத்தம் — சாறு கவர்ச்சியாகத் தலைப்பில் தோன்றுகிறது, கருவாக அல்ல, விருப்பமாக, பொம்மையாக.

படைப்பில் மீள் அசதி நகைச்சுவை கமல் “பதினாறு வயதினிலே” வசனம் ஒருமுறை, இருமுறை, நான்குமுறை என்று திரும்பத்திரும்ப வருகிறது. முதல் முறை ஏதோ நகைக்கலாம். நான்காவது முறை ஏ.ஐ. கூட கட்டுப்படுத்தி அழித்துவிடும்.

மின்னோட்டம் பரிமாறாத தொடர் சம்பவங்கள் சிறந்த சம்பவரீதி ஆட்டோஃபிக்‌ஷனில் (மொண்டேய்ன் (Montaigne), செபால்ட் (Sebald), சாருவின் சொந்த சிறந்த படைப்புகளிலேயே கூட), ஒவ்வொரு நிகழ்வும் மற்றவற்றின் எதிரே எதிரொலிக்கும். இங்கே நோபல் பரிசு புள்ளிவிவரங்களும் நந்தினி-பூனை கதையும் நிர்குண் மோதிர நிகழ்வும் விநோதினி தொலைபேசி அழைப்பும் — இவை அருகருகே வைக்கப்படுகின்றன ஆனால் ஒளிரவோ உரசவோ வைக்கவில்லை. அவை வெறுமே இணைந்திருக்கின்றன.


நஸ்டால்ஜியா சுரண்டல்

எம்ஜியார் படங்கள் (அன்பே வா, எங்க வீட்டுப் பிள்ளை), 560 ரூபாய் சம்பளத்தில் பருப்புச்சோறு கூட வாங்க முடியாத தில்லி நாட்கள், இருபத்தேழு வயதில் நைனாவுக்கு எழுதிய போஸ்ட்கார்டு பதில், ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய அகத்திக்கீரை தண்ணிச்சாறு — இவை யாவும் ஏற்கனவே சாரு பிரியஸ்தர்கள் என்ற வாசகக் குழுவுக்கான உணர்ச்சி சுருக்கெழுத்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

உண்மையான இலக்கிய நனவிழப்பை கைவசம் வாழவைக்கும் — நீங்கள் அதை நிகழ்கால இல்லாமையாக உணர்வீர்கள். இங்கே நனவோடை வணிக சமிக்ஞையாக செயல்படுகிறது. இதுதான் உங்களுக்குத் தெரிந்த சாரு. கச்சோடி தின்று வாழ்ந்த இளம் சாரு. போஸ்ட்கார்டில் தங்கையை கடாக்ஷித்த அகங்கார சாரு. இந்த குறிப்புகள் நம்பிக்கையான வாசகர்களிடம் அன்பை உருவாக்குகின்றன — ஏனென்றால் அவை உணர்ச்சியால் உருவாக்கப்பட்டவை அல்ல; அவை இலச்சினை விலாசத்தைத் தூண்டுகின்றன. அடையாளம் உணர்ச்சியைவிட மலிவானது. இந்தப் படைப்பு தொடர்ந்து கறைகளை வாணிகம் செய்கிறது.

தில்லி போஸ்ட்கார்டு நிகழ்வு மிகவும் தெளிவான உதாரணம் — இது சாருவின் பல்வேறு உரைகளில் முன்பே கூறப்பட்டது. இதை இங்கே புதிய கோணம் இல்லாமல், ஆழமான ஒளியிடல் இல்லாமல் மீண்டும் பயன்படுத்துவது வெறும் அக்மார்க் பொறிப்பு நுகர்வே. இது இலக்கிய ரீதியில் ஒரேயொரு ஹிட் கொடுத்தவர் அந்த Greatest Hits Album-ஐ திரும்பவும் வாயசைப்பது.


காலம் தாண்டிய தருணங்கள் உண்டா?

இருக்கின்றன — இந்தப் படைப்பை முழுமையாக நிராகரிக்க முடியாமல் செய்வன இவையே.

சடையப்பர் நிகழ்வுக்கு உண்மையான எடை இருக்கிறது. இருபது ஆண்டுகால நிபந்தனையற்ற உதவி, “மன்னிக்க வேண்டும். வியாபாரம் சரியாக இல்லை” என்ற அமைதியான தொலைபேசி அழைப்பில் முடிகிறது. பெருமாளின் எதிர்வினை — கிட்டத்தட்ட அலட்சியம், ஏனென்றால் பணம் என்பது அவன் உலகில் இருந்தே இல்லை — நீண்டகால பாதுகாப்பிலிருந்து வேரறுக்கப்பட்ட கலைஞர்களின் கம்பகால உண்மையை கைப்பற்றுகிறது. துயரம் மறைமுகமாக, குறைவான சொல்லாட்சியுடன் உள்ளது — இது கஸ்தூரிரங்க கணையாழி தரம்.

ஸ்கூட்டர்-பிறந்தநாள்-பணம் காட்சி அதிர்ச்சியூட்டும் நேர்மையோடு இருக்கிறது. மறுப்பு சொல்லத்தெரியாத ஒருவனிடமிருந்து 220 ரூபாயை ஒரு அந்நியன் பிடுங்குகிறான். சாரு பயன்படுத்தும் உவமை வேண்டுமென்றே, அதிர்ச்சியூட்டும்படியாக அசிங்கமானது — ஆனால் அது தனது கேடுகெட்டத்தனத்தை ஈட்டுகிறது, ஏனென்றால் அது இயல்பிலேயே மறுக்க முடியாதவனின் குறிப்பிட்ட உரிமைமீறலை பற்றிப் பிடிக்கிறது. அந்த உளவியல் உண்மை உண்மையானது.

நந்தினியின் பத்துலட்சம் + ஒரு ரூபாய் முரண்நகை செயல்படுகிறது. ஒருவர் பத்துலட்சம் கடன் வாங்கி, ஒரு வருடம் வட்டியில்லாமல் வைத்திருந்து, பத்துலட்சத்து ஒரு ரூபாயைத் திரும்ப அனுப்புகிறார் — அந்த ஒரு ரூபாய் ஒன்பது லட்சம் திரும்பியிருந்தால் இருந்திருப்பதைவிட அதிகமாக அவமானப்படுத்துகிறது. இது மனிதகுலத்தின் நுட்பமான கீழ்மையையும் கடமையின் இலக்கணத்தையும் பற்றிய உண்மையிலேயே கூர்மையான கவனிப்பு. இது கதையின் உணர்ச்சி மையமாக இருந்திருக்கவேண்டும்; அதற்கு பதில் இது ஒன்பதோடு பத்தாவது நிகழ்வுகளில் ஒன்றாகியிருக்கிறது.

நிர்குண் மோதிர நிகழ்வுக்கு தொன்ம சடங்கின் தரம் உண்டு. 72 மணி நேரம் தூங்கி எழுந்த ஒருவன், தன் குலக்குறி பொறிக்கப்பட்ட இரண்டு பவுன் தங்க மோதிரத்தை கழற்றி, முதல் சந்திப்பிலேயே பெருமாளின் விரலில் மாட்டுகிறான் — இந்த உருவம் மட்டுமே முழுமையான கதையை தாங்கியிருக்கக்கூடியது. இங்கே அது வெறும் தாவும் பற்றுக்கோடாக பதிவாகிறது.

இந்த தருணங்கள் ஒருபோதும் எழுதப்படாத வலிமையான படைப்பின் நிழலை காட்டுகின்றன — ஏனென்றால் இந்த நிகழ்வுகள் வளர்க்கப்படாமல் வெறுமே பதிவாகி கடக்கப்பட்டிருக்கின்றன.


அந்தப் பண்டமே இல்லை

1. வலிந்து புணரப்பட்ட சுய-இரக்கம் . பெருமாள் எப்போதும் உன்னதமான துன்பவாதியாகவே இருக்கிறான் — பிறந்தநாள் அந்நியனுக்கு கடைசி 220 ரூபாயையும் கொடுக்கிறான், வாடிய ஜீவன்களுக்காக நிற்கும் ஜீவகாருண்யன், வெறும் ஆயிரம் ரூபாயை கண்ணியமாக நிராகரித்த எழுத்தாளன். மற்றவர்கள் எல்லாரும் ஒட்டுண்ணிகள், நன்றிகெட்டவர்கள், சுரண்டுபவர்கள், அல்லது முட்டாள்கள். தன் சுயரூபத்தை விமர்சிக்க இயலாத ஆட்டோஃபிக்‌ஷன் வெறும் கலைகட்டமைப்புடன் கூடிய நர்சிஸிஸம்.

2. பெண்கள் கதாபாத்திரங்கள் அல்ல — அரங்கக் கருவிகள். வைதேகி, நந்தினி, விநோதினி, சாந்த்னி, ரோஷ்னி, சஞ்ஜனா — இவர்களில் யாருக்கும் உள்ளுணர்வு இல்லை. அவர்கள் பெருமாளின் தேவைகளுக்கான கண்ணாடிகளாகவும் தடைகளாகவும் நகைச்சுவைத் தூண்டில்களாகவும் மட்டுமே இருக்கின்றனர். படைப்பு இதைப்பற்றி சுய-விழிப்புணர்வு கொண்டதுபோல் காட்டிக்கொள்கிறது (“பெண்களிடம் பேசாதே” என்ற வைதேகி வசனம், திரும்பும் கமல் வசனம்) — ஆனால் கட்டமைப்பு சிக்கலைப் பற்றிய சுய-விழிப்புணர்வு அந்தச் சிக்கலை திருத்துவதற்கு சமம் அல்ல.

3. வைரமுத்து-ஞானபீட கோபம் உணர்வு ரீதியில் நியாயமானது, ஆனால் செயல்பாடு ரீதியில் வலிதற்றது. ஆத்திரம் நியாயமானதே — இது தமிழ் இலக்கிய வட்டங்களில் நடந்த ஆக்ரோஷமான போர். ஆனால் கதை இதை வெறும் வெடிப்பாக வழங்குகிறது: புள்ளிவிவரங்கள், ஒப்பீடுகள், நோபல் பெற்றிருக்கவேண்டிய தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல். இந்த இழப்பை வடிவமைக்கும் எந்த நாடகமும் இல்லை. ஒ.வி. விஜயன் அல்லது சிறந்த காலங்களில் சாரு நிவேதிதா இம்மாதிரி கோபத்தை கதை-சதையில் எப்படி புதைத்திருப்பார்கள் என்று ஏங்கி நாஸ்டால்ஜியாவில் நாம் வேண்டுமானால் ஏங்கலாம். இங்கே இது கதாபாத்திரத்தின் பெயரில் அணிந்த ஏ.ஐ. Facebook பதிவாகிறது.

4. க்ளாடியேட்டர் 2 வர்ஜில் மேற்கோள் மிகவும் வெளிப்படையான கலாச்சார நேம் ட்ராப்பிங். கதாபாத்திரம் க்ளாடியேட்டர் 2 பார்க்கிறான், நரகத்தின் வாயில்களைப் பற்றிய மேற்கோளைக் கேட்கிறான், இது வைரமுத்து விருதால் ஏற்பட்ட தற்கொலை உணர்வை “குணப்படுத்துகிறது”. வர்ஜிலின் வரிகள் உண்மையானவை, எதிரொலிக்கக்கூடியவை — ஆனால் அவற்றின் பயன்பாடு யந்திரத்தனமானது. கடன் வாங்கும் மாண்பை கதை ஈட்டவில்லை.

5. இந்தப் படைப்பு முதல் வரைவு, முடிந்த படைப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. வேகம், தீர்க்கப்படாத கட்டமைப்பு, தலைப்பில் இரண்டாவது உறுப்பான அகத்திக்கீரை தண்ணிச்சாறு எந்த ஆயத்தமும் இல்லாமல் வந்து எந்த எடையும் இல்லாமல் போவது — இவை அனைத்தும் வேகமாக எழுதி அதே மாலையில் வெளியிடப்பட்ட படைப்பை சுட்டுகின்றன. சாருவின் வலைப்பூ அபரிமிதமான வேகத்தில் இயங்குகிறது (ஜூலை 2025-ல் 83 பதிவுகள், ஆகஸ்டில் 87). அந்த உற்பத்தித்திறன் இலக்கிய படைப்புகளுக்கு தேவையான பொறுமைக்கு எதிராக செயல்படுகிறது. இது ஒரே இரவில் எழுதப்பட்ட, அதே மாலையில் வெளியிடப்பட்ட படைப்பாக வாசிக்கிறது.


பணம் என்ற பண்டமே இல்லாத மனிதன் === இலக்கியம் என்ற பிரக்ஞையே இல்லாத சாரு

இது தன் திறன்களுக்கு மிகவும் கீழே சாரு நிவேதிதா எழுதியிருக்கிறார் — தன் அ-இலக்கியமான பழக்கமான தன்மையை இலக்கியமாக ஏற்றுக்கொள்ளும் வாசகர்களுக்காக. பெருமாள் உருவம், குறைகள், கலாச்சார குறிப்புகள், பிராணிகள், பொருளாதார நெருக்கடி — அனைத்தும் சாரு பிராண்ட், நம்பகமாக வழங்கப்படுகிறது. பிராண்ட் வழங்கல் கலை அல்ல.

இந்தப் படைப்பு மதிப்பே இல்லாதது என்று சொல்ல முடியாது. சடையப்பர் நிகழ்வு, பத்து லட்சம் + ஒரு ரூபாய் நுண்ணுணர்வு, நிர்குண் மோதிர உருவகம் — இவை உண்மையான இலக்கிய தருணங்கள். ஆனால் அவை ஃபேஸ்புக் பதிவாகி அவசர கொலாஜ் கோலமாக — இலக்கியம் என்ற பெயரை ஈட்டிய கதையாக வெளியாகாமல் அரைகுறை பிரசவம் கண்டிருக்கின்றது. நகைச்சுவையான-அண்டவெளியான கட்டமைப்பை தலைப்பு வாக்குறுதியளிக்கிறது: கொடும்பசியில் வருபவருக்கு கஞ்சியும் தேவாமிர்தமாக பெரும் திசை மாற்றம் தரும்; இந்தக் கதை சாதாரண பழைய சோற்றின் ஓசையற்ற கொந்தளிப்பை விரும்புகிறது. கதை இரண்டையும் வழங்கவில்லை — திசைமாற்றத்தையும் இல்லை, சாறும் இல்லை. அது காத்திருப்பை வழங்குகிறது. இது பெருமாளின் வாழ்வைப் பற்றிய மிகவும் உண்மையான விஷயமாக இருக்கலாம் — ஆனால் காத்திருப்பு, தீர்க்கப்படாமல், வடிவமிடப்படாமல், இறுதியில் எஞ்சுவது வெறும் காத்திருப்பே.

யானையின் உஞ்சவிருத்தி இந்தப் படைப்பின் நேர்மையான தருணம். அதுவே மாலை ஏற்காத பூனையாக முடிவது சோகம்.

What is the Best Word and Tamil Term for the “Prompt Engineering” – Translations and Coining Fresh words

ப்ராம்ப்ட் எஞ்ஜினியரிங்-கில் தோற்றவர் யார்?

அ) கும்பகர்ணன் – நித்தியத்துவம்

ஆ) பஸ்மாசுரன்

இ) பலராமன்

ஈ) ஹிரண்யகசிபு

எல்லாமே சரி.

என்னையும் சேர்க்கலாம்.

நண்பர்களை சந்திக்கும் எவருமே கணி-அரட்டை பொறியியலில் இருந்து தப்பித்தவர்கள்.

சென்ற வாரம் தோழர்களை அழைக்கும் காலம்.

நல்விருந்துகளில் பிராம்ப்ட் என்பதை எவ்வாறு தமிழில் வார்த்தையாக்கலாம் என்னும் வினா எழுந்தது.

Prompt Engineering எனப்படுவது

1. வல்லே வார்த்தை

(நாலடியார்: நின்றன நின்றன நில்லா எனவுணர்ந்

தொன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;

சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்

வந்தது வந்தது கூற்று.)

2. வீச்சுக்குறிப்பு (பரோட்டா அல்ல; சொல்லும் பொருளும் ஒலியும் ஒளியும்)

3. நெருக்கனல் (நெருப்புடா… நெருங்குடா பார்ப்பம்)

4. கிண்டு (கிண்டக் கிண்டக் கிடைக்கும்)

5. ஒல்லைப்பாடம் (விரைவில் ஒப்பிக்கும் பாடம்)

போஸ்டர்தான் நட்பும் கொண்டாட்டமும்.

உங்கள் ஆதரவு என்றும் தேவை!

பெட்னா = தி.மு.க + பணம் + சினிமா

த்ரிஷாவையும் நயன் தாரா போன்றோரை அழைப்பதை கிண்டல் செய்தது அந்தக் காலம்.
துரை முருகனாரையும் நக்கீரன் கோபாலையும் அழைப்பதை எண்ணிக் கூனிக் குறுகுவது இக்காலம்.

நடிகைகளைக் கொண்டாடுவதில் நேர்மை இருக்கிறது.
பதவியில் இருக்கும் தலைவரை வரவழைப்பதில் டிரம்ப் தனம் இருக்கிறது.

இது டிரம்ப்பிஸ்தான்.
உண்டியலும் அதிகாரமும் அமெரிக்கா.
இலாவணமும் அரசியலும் தமிழர் தேசி?

இன்றைய தேதியில் மாற்று சந்திப்புகள், மாபெரும் ஒருங்கிணைப்புகள், இந்திய கருத்தரங்குகள் நிறைய நடக்கின்றன.
வருடந்தோறும் நடக்கும் தமிழ்நாடு ஃபவுண்டேஷன் ஒரு புறம்.
அடுத்த ஆண்டு நடக்கப் போகும் ஜெயமோகனின் அமெரிக்க இலக்கிய விழா மாநாடு இன்னொரு புறம்.
செவ்வியல் நடனம், கர்னாடக சங்கீதம் என பாரம்பரியக் கலைகளுக்கென்றே க்ளீவ்லாண்டில் நடக்கும் தியாகராஜர் ஆராதனை.

இந்தியாவில் த.க.இ.பெ அழைக்கும் பேச்சாளர்கள் கூட தமிழர் சந்திப்புக்குப் பொருத்தமானவர்கள்.

அமெரிக்க இந்தியர்/தமிழர் என்று இன்னொரு பட்டியல் போட்டால்…
செந்தில் ராமமூர்த்தி
கால் பென்
பூர்ணா ஜெகன்னாதன்
மிண்டி காலிங்
கார்த்திக் முரளீதரன்
அனுக் அருட்பிரகாசம்
வி.வி. கணேசநாதன்
எழுத்தாளர் எஸ் சங்கர்

எத்தனை பொருளியல் வல்லுநர்கள்!
எம்புட்டு அசல் பேராசியர்கள்!!
ரகரகமான சிந்தனையார்கள்!!!
புனைவு எழுத்தாளர்கள்…
கருத்தாளர்களை விட்டு கிரீடதாரிகளைக் கொண்டு வருவது ஆப்பிள் ஃபோன் இருக்கும் போது ஓப்போ நாடுவது.

சொல்வனம் #329 – அக். 2024 இதழ்

சொல்வனம் இதழின் தீபாவளி இதழ் வெளியாகி இருக்கிறது.

இந்த தீபாவளி சிறப்பிதழை அறிவியலுக்கான இதழ் எனச் சொல்லலாம்.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-329/

அறிவியல் பகுதிக்கான ஆலோசகர் அருணாச்சாலம் ரமணன் – புத்தம்புதிய பகுதியை ஆரம்பிக்கிறார்.

முக்கியமான ஆராய்ச்சிகள். நேற்றைய ஆய்வுத்தாள்கள்; சுருக், நறுக் அறிமுகம்.

சொல்வனத்தில் மகரந்தம் என்றும் நிரந்தரம்.

தீபா ராம்பிரசாத் தன்னுடைய சிறப்பான தேர்வை மீண்டும் நிரூபிக்கிறார். அவர் எடுத்த கதை சுவாரசியம் + புதுமை. அவசியம் தவற விடாதீர்கள்.

‘அதிரியன் நினைவுகள்’ மஹா காவ்யம். அதை முழுக்க முழுக்கத் தமிழுக்குக் கொணர்ந்து விட்டார் நாகரத்தினம் கிருஷ்ணா. தமிழில் என்றுமே அசல் இலக்கியவாதிகள் எக்கச்சக்கம் ஆக அமைதியாக செயல்பட்டு செழுமையாக்குகிறார்கள் என்பதற்கு இந்த மொழியாக்கமும் பிரெஞ்சுத் தமிழரும் உதாரணம் + இலட்சியம்.

வெங்கட் ரமணின் பத்திகள் தமிழுக்குக் கிடைத்த கொடை. அவரின் ‘காலம் எரித்ததும், கணினி மீட்டதும்’ நியு யார்க்கர் போன்ற இதழ்களில் வரும் அசல் கருத்து + பிரத்தியேக ஆராய்ச்சி கொண்ட ஆக்கங்களுக்கு சற்றும் சளைத்ததல்ல. அவரைப் பார்த்து எழுத வந்தவன் நான். டொரொண்டோ வெங்கட்டிற்கு நன்றி.

நானும் ‘சகுனங்களும் சம்பவங்களும்’ நான்காம் பகுதி தந்திருக்கிறேன். வாசித்து உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்கள்.

மற்ற ஆக்கங்களை வாசித்து முடிப்பதற்குள் அடுத்த இதழைக் கொணர்ந்து விடுகிறார்கள்.

எதை எடுப்பது!? எதை வாசிப்பது!? எதைப் பகிர்வது!!!

நீங்களே பதில் போடுங்க… வாசகர் கடிதங்களும் உண்டு : )

  • 1. ஆராயும் தேடலில் – அறிவியல் சிந்தனை அருணாச்சலம் ரமணன்
  • 2. கிருஷ்ண லீலை – சார்பினோ டாலி
  • 3. காலம் எரித்ததும், கணினி மீட்டதும் – வெங்கட்
  • 4. 1941 ஆண்டின் குளிர்காலம் – அமர்நாத்
  • 5. நிற(ப்)பிரிகை – பானுமதி ந
  • 6. விதைகளின் பயணம் – பெத் கோடர் – தீபா ராம்பிரசாத்
  • 7. மழைக்காலம் – ஆமிரா
  • 8. அதிரியன் நினைவுகள்-46 யூர்செனார்
  • 9. நேர்கோணல் – மர்ஸல் துஷா (Marcel Duchamp) – ஆர் சீனிவாசன்
  • 10. வாழ்க தலைவரே! – ஜெகதீஷ் குமார்
  • 11. ஆக்கன் ஊற்றுப்பட்டை – விவேக் சுப்ரமணியன்
  • 12. மிளகு-81 – இரா. முருகன்
  • 13. பெருங் கூத்தின் நெடுந்துயர். – ரவி அல்லது.
  • 14. ஆரன்யக் நாவலை நாம் 21ம் நூற்றாண்டில் ஏன் வாசிக்க வேண்டும்? – நிர்மல்
  • 15. டால்ஸ்டாய் புக் ஷாப் – தமிழ் கணேசன்
  • 16. சகுனங்களும் சம்பவங்களும் – 4 பாஸ்டன் பாலா
  • 17. ராகவேனியம் 2024 – நூருத்தீன்
  • 18. தாமஸ் செக்கின் ‘தி கேடலிஸ்ட்’: ஆர்என்ஏ-வும் அதன் அதிதிறன்களும் – அருணாச்சலம் ரமணன்
  • 19. பட்டியலில் 12வது நபர் – தேஜு சிவன்
  • 20. ஜப்பானியப் பழங்குறுநூறு 95-96 – கமலக்கண்ணன்
  • 21. கருப்பு எஜமானி – இ. ஹரிகுமார் – தி.இரா.மீனா
  • 22. கவிதைகள் – அரா
  • 23. குமார சம்பவம்-13 – ஜானகி க்ருஷ்ணன்
  • 24. சகுனியாட்டம் – ஆர் வத்ஸலா கவிதைகள்
  • 25. யாதேவி – பானுமதி ந
  • 26. வாசகர் கடிதங்கள்

புனைவுப் புதைவும் அகவெழுச்சி ஆக்கங்களும்

சிறுகதைக் களஞ்சியம் ஆக சொல்வனம் மாறிக் கொண்டிருக்கிறதோ என்னும் பயம் உங்களுக்கு வந்திருக்கும்.

வருகிற எல்லா புனைவுகளையும், பொறுமையாகப் படித்து, ஒவ்வொன்றுக்கும் கருத்தும், எதற்காக மறுதலிக்கிறோம், எப்படி தேர்ந்தெடுப்பில் வைக்கிறோம் என்று ஒவ்வொரு நாளும் (பதினைந்து நாளுக்கு ஒரு முறைதான் என்றாலும்… தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தால் மட்டுமே வீட்டுப்பாடத்தின் பளு) குறையும், நிறையும் சொல்லும் அனைத்து பதிப்பாசிரியர்களுக்கும் நன்றி.

முக்கியமாக லண்டன் சிவா.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-318/

சரி… சுய புராணம் போதும்.

இந்த 318ஆம் இதழைப் பார்த்தால்
ஏழு கதைகள்
ஏழு மொழியாக்கங்கள்

மொழிபெயர்ப்புகள் எல்லாவற்றையும் கடகடவென்று ஓட்டியதில்:
1. நம்பி – சுய முன்னேற்ற கட்டுரையைத் தந்திருக்கிறார். அமெரிக்காவில் உழைத்துத் தள்ளுவோருக்கான ஊக்க விட்டமின்

2. மயக்கமா… கலக்கமா… என்பது போல் டொடரொண்டோ வெங்கட் ஆக்கம் – இன்னும் ஆழமாக வாசிக்க வேண்டும். ஓவியம், மதம், புத்தம் என்று காக்டெயில் போட்டிருக்கிறார்.

3. ரேமண்ட் வில்லியம்ஸ் – நம்பிக்கைக்கான ஆதாரங்கள் : இப்பொழுது உங்களுக்கு இந்த இதழ் தினுசாக மன ஊக்கத்திற்க்காக, உள் உற்சாகத்திற்காக உருவானதோ என்னும் சந்தேகம் வர வேண்டும்.

4. நாம் அனைவரும் அர்ஸுலா லெ க்வினை அதிகம் படிக்க வேண்டும் – விபி வெங்கட் பிரசாத்தின் தமிழாக்கம். லெ குவின் எழுதிய ‘Sea Road’ போன்ற அதிகம கவனம் பெறாத ஆக்கங்களை அடுத்துக் கையில் எடுக்க வேண்டும். இது தெரிந்த விஷயங்களை அர்சுலா மூலமாகத் தொட்டுச் செல்கிறது.

5. எல்லா நேரத்திலும் அதிகபட்ச முயற்சியைக் கொடுங்கள் – பால் ஆஸ்டர் : நியு யார்க் நகரமும் நகரத்தின் எழுத்தாளர்களும் நியு யார்க்கை சுற்றி நடக்கும் எந்தக் கதையும் திரைப்படமும் எனக்கு ரசிக்கும். பால் ஆஸ்டர் இதெல்லாம் ஒருங்கேக் கொடுத்தவர். கூடவே ஃப்ரெஞ்சு வாசிப்பு + வளர்ப்பு வேறு உண்டு.

கூடவே…
யூதர்களைப் பற்றி, மார்கெரித் யூர்செனார் என்ன சொல்லியிருக்கிறார்?

இவ்வளவு சொல்லிவிட்டு அந்த ஏழு கதைகளைப் பற்றி ஒன்றுமே சொல்லாவிட்டால்…
நவீன உணவுமுறையில் பாரம்பரிய சோற்றை விரும்பும் தற்கால ஆண்களைச் சாடும் ’அறிவுப்புருசன் ‘ வாசித்தேன்.

சிறுகதை என்றால்
அ) முடிவுக்கு அருகில் துவங்க வேண்டும்
ஆ) சம்பவங்கள் நிறையவும் தாவல்கள் குறைவாகவும் இருக்க வேண்டும்
இ) போதனை வேண்டாம்; புரிதல் கொடுக்க வேண்டும்.

இது எதுவுமே அந்தக் கதையில் இல்லை. தமிழில் ஒரு பக்கம் காமம் + சுயம் குறித்து எழுதி அலுக்க வைக்கிறார்கள். இன்னொரு பக்கம் எண்பதுகளில் இருந்தே மீளாமல் புரளுகிறார்கள்.

நன்றாக எழுதுபவர்கள் எல்லாம் சினிமாவில் வாசம் செய்கிறார்களோ!?

போக்குவாக்கு

சென்ற சில இதழ்களாக சொல்வனம் வழக்கமான பிரசுர நாட்களில் பிரசுரமாகவில்லை. இந்த இதழும் (307) தாமதமாக இன்று பிரசுரமாகியது.

அடுத்த இதழ் (308) டிசம்பர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று பிரசுரமாகும்.

இதழ் எண் 309 டிசம்பர் 31, 2023, மாதத்தின் ஐந்தாம் ஞாயிறன்று பிரசுரமாகும். 2024 இலிருந்து வழக்கமான இரண்டாம் ஞாயிறு மற்றும் நான்காம் ஞாயிறுகளில் இதழ்கள் பிரசுரமாகும்.

நவம்பர் 27ஆம் தேதியிட்ட ‘தி நியு யார்க்கர்’ – தனிப்பட்ட வரலாறு (Personal History) என்னும் தலைப்பில் பல ஆக்கங்களை வெளியிட்டுள்ளது.

சொல்வனம் தளத்திலும் அவ்வாறு ஒவ்வொரு இதழுக்கும் ஒரு குவிமையம் இருக்கவேண்டும்.

உங்களுக்கு மட்டுமே உரித்தான பிரத்தியேகமான அடிப்பாடுகளை எழுதி அனுப்புங்களேன்.

அப்படியே அடுத்தடுத்த இதழ்களுக்கான தலைப்புகளையும் பரிந்துரையுங்களேன்.

solvanam.editor@gmail.com

பேட்ட (அ) பட்டினம்

சென்னை என்றால் மதராஸ்.

மதராஸ் என்றால் மதர் ஆசி.

அந்த மதர் உங்கள் அம்மா ஆக இருக்கலாம்!

அல்லது அகில இந்திய அண்ணா திமுக கட்சியின் அம்மா ஆக இருக்கலாம்!

பாண்டிச்சேரி மதர் ஆக இருக்கலாம்!

மதர் தெரஸா ஆக இருக்கலாம்!

அன்னை மேரி ஆக இருக்கலாம்!

அதுதாங்க சென்னை.

இங்கே மதம், கட்சி, எல்லாம் இல்லாததால் –> மதராஸ்.

அது ஒரு மொழி.

பிராமணா பாஷை…

கொங்குத் தமிழ்…

நாகை மலையாளம்…

இதெல்லாம் தமிழென்றால் –> மதராஸில் இருப்பது தொல்காப்பியத் தமிழ். ”வளர்தமிழ்” (வளர்ந்தது, வளர்கிறது, வளரும்)

சோ இதை முதலில் திரையில் விக்கிப்பிடியாத்தனமாகப் பதிந்தார்.

அதன் பின் நாகேஷ், கமல் என்று சினிமாக்காரர்கள் தொடர்ச்சியாக இலக்கண சுத்தமாக இந்த நகரத்தின் உரையாடல்களை உதிர்த்திருக்கிறார்கள்.

பேட்ட ராப், கானா என்று இதற்கு இசை சம்பந்தமான உப பிரிவுகளும் உண்டு.

அவற்றைக் கேட்கும் போது மெரீனா கடைகளின் ஓசையும் தட்டுக்கடைகளின் உணவும் இருந்தால் சுவைக்கும்.

சென்னா பட்டூரா கிடையாது. ஆனால், அதுதான் சோளே பட்டூரா ஆக அன்றைய பாலிமர் உணவகத்திலும் தாசா-விலும் பரிமாறப்பட்டது.

திருவொற்றியூரில் சுந்தரர்

திருமயிலையில் ஞானசம்பந்தர்.

நடுவில் செயிண்ட் தாமஸ் மௌண்ட், ஆயிரம் விளக்கு என்பார்கள் சென்னையை.

அந்த சென்னையை வடது, இடது, மத்திமர் என்று செண்ட்ரல் அரசாங்கம் பிரித்து தொகுதியாக்கினார்கள்.

அதன் பிறகு பா. இரஞ்சித் அதைப் படமாகவும் எடுத்தார்.

அந்தத் தலைப்பை வெற்றிமாறனும் கையாண்டார்.

மதராஸி என்றால் வடக்கத்தவருக்கு குறியீடு.

மதாராஸ் என்றால் சென்னை செண்டிரலும் எல்.ஐ.சி. பில்டிங்கும் என்பான் கோடம்பாக்கத் தமிழன்.

மதாராஸ் என்றால் காந்தி சிலையும் வள்ளுவர் சிலையும் என்பான் சென்னைக்காரன். (அம்பேத்கார் இல்லாத இடமெங்கே?!)

சென்னைக்காரன் என்றால் வாழும் வேட்கை உள்ளவன் என்பது தமிழருக்குப் புரிந்த அடையாளம்.

நான் பச்சை சென்னையையிட்.

ஜெயமோகனின் “குமிழிகள்” சிறுகதை

எழுத்தாளரைப் பற்றி சற்றே தெரிந்திருப்பது சிறுகதை வாசிப்பிற்கு சற்றே இடைஞ்சல். சுஜாதாவைக் குறித்தும் புதுமைப்பித்தன் குறித்தும் எதுவும் தெரியாது. என்ன ஜாதி, எந்த ஊர், எவ்வளவு வயது, இருக்காரா, போயிட்டாரா, ஆணா, பெண்ணா, நாலைந்து பேர் ஒரே பேரில் எழுதுகிறார்களா, நாலைந்து பேரில் எழுதுகிறாரா…

எதுவும் தெரியாது. எனவே, இந்தக் கதை பிடித்திருந்தது; இந்தக் கதை எரிச்சலூட்டுகிறது; இந்த கதையை கால்வாசியோடு நிறுத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுப்பதில் தர்மசங்கடங்களோ முன்முடிவுகளோ எதிர்பார்ப்புகளோ கிடையாது.

சௌகரியமாக வாசித்த காலம். மீண்டும் அவ்வாறு கண்ணைக் கட்டிக் கொண்டு வாசிக்க வேண்டும்.

ஒரு கதையை எதற்காக நான் வாசிக்கிறேன்? அதில் இருந்து புதிய வாசல்கள் ஏதேனும் திறக்கிறதா என்னும் சுயநலம்; புரியாத விஷயங்கள், அறியாத மனிதர்கள், புலப்படாத தீர்மானங்கள் என்று விடை கிடைக்காத புதிர்கள் அவிழ்கிறதா என்னும் ஆர்வம்; சுவாரசியம், வாசிப்பின்பம், மகிழ்ச்சி போன்ற வேற்றுலகப் பிரவேசத்திற்கான சந்தோஷம்.

இந்தக் கதையில் அப்படி எதுவும் கிடைக்கவில்லை.

அறிந்த மனிதர்கள்; தேய்வழக்கான உரையாடல்கள்; போரடிக்கும் வாக்குவாதங்கள்; நானே இதை அறிவார்ந்து எழுதியிருந்தால் கூட கொஞ்சம் தர்க்கபூர்வமாக எழுதியிருப்பேனோ என்னும் அலட்சியம் கலந்த ஊக்கத்தைக் கொடுக்கும் நகர்வுகள்.

எடுத்த களம் – பாலச்சந்தர் காலத்து பெண்ணியம். சொல்லிய விதமாவது பாலு மகேந்திரா பாணியில் கவர்ச்சியாக இருந்ததா என்றால் அதுவும் இல்லை.

சரி… வாசகர் கடிதங்களைப் பார்ப்போம்…

கதையை விட கடிதங்கள் மோசம். இந்தப் படைப்பில் எந்த விஷயங்களை ஆசிரியர் கையில் எடுத்திருக்கலாம்? நிஜ வாழ்வில் இந்த மாதிரி சம்பாஷணைகள் எத்தனை நாள் நீடிக்கும்? சுயம்புவாக ஒருவர் மட்டுமே முடிவெடுத்தால் அது எத்தகைய எதிர்வினைகளை உருவாக்கும்? இந்த மாதிரி பெரும்பாலும் அமைவதில்லை.

இதில் “விக்னேஷ் ஹரிஹரன்” கடிதம் தேவலாம். ஓரளவிற்கு மேல் சர்க்கரை திகட்டிப் போகிறது. அதையேத் தொடர்ந்து வாசகர் எதிர்வினையாகப் படித்துக் கொண்டிருந்தால்… அயர்ச்சி ஏற்பட்டு, கடிதங்கள் பிரிவையே ஒதுக்க நேரிடுகிறது.

கதை விமர்சனத்திற்கே வந்து விடுகிறேன்: https://www.jeyamohan.in/142864/

கதையை வாசித்துவிடுங்கள்.

தமிழில் இவ்வாறு ஆங்கில்ப் பேச்சுகளை பாவனைகளை இயல்பாக எழுதும் பலரை இப்போதைய காலகட்டத்தில் நான் அதிகம் பார்க்க / படிக்கவில்லை. எனவே, அது “பேஷ்”.

இந்த மாதிரி விஷயங்களைக் கையிலெடுக்க அனேகர் கூசுவார்கள். சாரு நிவேதிதா இந்தக் கதையை வேறு மாதிரி பலான பாதையில் கொண்டு சென்று ஜிகினாத் தோரணமாக்கியிருப்பார். எடுத்த சப்ஜெக்ட் மற்றும் சொல்ல நினைத்த விதம் – “பேஷ்”.

விவாதங்கள், உரையாடல்கள், வாதங்கள் – விடலைத்தனமாக முதிர்ச்சியடையாமல் வந்திருக்கிறது. போர்ட் ஆஃப் டைரக்டரில் இருப்பவர்கள் இவ்வளவு சின்னபிள்ளைத்தனமாக விவாதிக்க மாட்டார்கள். நம்பகத்தன்மை இல்லாததால் – ”அழுகல்”.

கடைசியில் வரும் ஒயின் அருந்தல் இன்னும் சோகமானது. ஒரு குடிகாரன் இதை எழுதியிருந்தால் அமர்க்களமாகி இருக்கும். இங்கே நீர்த்துப் போன காக்டெயிலாகவும் இல்லாமல், காத்திரமான விஸ்கி போல் குடலையும் எரிக்காமல் உப்பு சப்பற்ற பார்லி தண்ணீராக – “உவ்வே”.

கையடித்தல், முஷ்டிகைமைதுத்தனம் என்று பலவகையில் இன்னும் உள்ளே சென்று உளவியல் சிக்கலையும் ஆராயவில்லை. அவர்களின் வாழ்க்கைத் தேர்வுகளுக்கான காரணங்களையும் மேலோட்டமாகவே பார்க்கிறது “குமிழிகள்”. அரைகுறைப் படமாகவே முடிந்தும் விடுகிறது.

ஒரு நாட்குறிப்பில் நாலு வார்த்தை எழுதும்போது பாதி சித்திரத்தைத் தீட்டி விட்டு ஓய்ந்து விடலாம். ஒரு சிறுகதைக்கு தன்னளவில் முழுமை தேவை. ஒரு படைப்பு அதன் கர்த்தாக்களின் காரியங்களுக்கான நியாயத்தை ஆராய வேண்டும். அவர்களின் முடிவுகளுக்கான பாதையை வரைபடமாக்க வேண்டும். புதிர் போல் ஒருங்கிணைந்து பூர்த்தியாக வேண்டும்.

தகவல்களும் வித்துகளும் புனைவிற்கு முக்கியம். ஆனால், புனைவாக நினைவில் தங்க அது மட்டும் போதாது.