Tag Archives: இந்திரா பார்த்தசாரதி

சொல்வனம் – இ.பா. சிறப்பிதழ்

இ.பா. சிறப்பிதழ் அமர்க்களமாக வெளியாகி விட்டது.
புத்தம்புது சொல்வனம் இதழை வாசியுங்கள்.
உங்கள் வாழ்த்தும் விமர்சனங்களும் தேவை.

இதழ்-370 – சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026

கனடா வெங்கட் இதழின் சிறப்பாசிரியர்.
அவர் தனிப்பட்ட நெருக்கடிகளில் இருந்தாலும் துவக்கிய விஷயத்தை செவ்வனே முடித்துக் கொடுத்தார்.

சொல்வனம் சிறப்பிதழ் போட வேண்டும் என்று பல்வேறு தலைப்புகளில் பேசிக் கொண்டே இருந்தோம்.
– திருநெல்வேலி சிறப்பிதழ்
– இந்திய மொழிகளுக்கான தமிழாக்க சிறப்பிதழ்
– ஆல்பர்ட் காம்யூ
– ஹிந்தி மொழி
…இன்னும் பல விவாதித்தோம்; பொறுப்பை ஒப்படைத்தோம்; சற்றே முஷிந்தோம்.
எனினும், எதுவும் கைகூடவில்லை.

எனக்கு இந்திரா பார்த்தசாரதியை தொலைபேசி மூலமாக அறிமுகம் செய்தவர் வார்த்தை பி.கே சிவக்குமார்.
அழைத்தவுடன் தொலைபேசி மூலமாக நேர்காணல் பேட்டிக்கு ஒத்துக் கொண்ட இளைஞர் இ.பா.
அப்போது தமிழோவியம். இன்று சொல்வனம்.
பேட்டி மறு பிரசுரம் கண்டிருக்கிறது.

நான் ஏ.ஐ., காணொலி, ஊர் சுற்றல், தொலைக்காட்சி, தூக்கம் என்று மந்தகதியில் வாழ்க்கையைக் கொண்டாடி இருந்தேன்.
வாரம் ஒரு முறையாவது அழைத்து, தமிழின் எல்லா விமர்சகர்களையும் பட்டியலிட்டு, அவர்களையும் ஒருங்கிணைத்து முழு மூச்சாக இதழை நடத்திக் காட்டியவர் வெங்கட்ரமணன்.
அவரின் எழுத்துமுறை ஆகட்டும்; செயல்பாடு ஆகட்டும் – எளிமையும் கறார்தன்மையும் கலந்த இராணுவ ஒழுங்கு.
வெங்கட் இவ்வளவு சிரத்தை எடுக்காவிட்டால் சிறப்பிதழ் சிறப்பான இதழாகி இருக்காது.

இதுவரை வந்த எல்லா சிறப்பிதழுக்கும் பதாகை வடிவமைத்தவர் அனுகிரஹா.
அவருக்கு(ம்) உடல்நலம் சரியில்லை.
எனக்கும் சரியான பல்வலி.
கடைசி நேரத்தில் அருண் அருணாச்சலம் கை கொடுத்தார்.
இந்தியாவில் இருந்தாலும் பயணத்தின் நடுவிலும் பேனர் கொடுத்தார்.
நல்ல வேளை – ஏ.ஐ. உபத்திரவத்தில் இருந்து உங்களுக்கு விடுதலை.

ஏ.ஐ. முழுக்க முழுக்க விமர்சன ஆய்வு கட்டுரையை அடிக்குறிப்புகளுடன் மொழியாக்கம் செய்து தந்துள்ளது.
அந்த ஆய்வறிக்கையின் பேராசிரியரை நம் சிறப்பிதழ் பேராசிரியர் தொடர்பு கொண்டு ஒப்புதல் பெற்றது, நிரந்தர ஆசிரியர் மைத்ரேயனின் கண்களைக் குளமாக்கி கண்ணீர் மல்கச் செய்தது.
“இதைத்தானே செய்யச் சொன்னே பாலா!” என்று அவர் இடித்து, வெங்கட் வழி அனைத்திற்கும் உரிமமும் மரியாதையும் செய்யப் பணித்தார்.

ஆனால், கோகுல் சால்வாடியின் ‘பைரசி’ போன்ற தொடர்களை கேட்டு வாங்கி அலசி ஆராய்ந்து பதிப்பித்தாலும் காப்புரிமையை வாழையிலை விருந்தில் உப்பாக கவனிப்பவன் நான்.
இதழில் தொடர்களும் வந்திருக்கிறது.
இந்தத் தொடர் ஆசிரியர்கள் இல்லாவிட்டால் இவ்வளவு நாள் சொல்வனம் தாக்குப் பிடித்திருக்காது.
ஜூலை நான்கு – அமெரிக்க சுதந்திர தினம் – அதை ஒட்டிய லதா குப்பா கட்டுரை.
அருணாச்சலம் ரமணன் அலாஸ்கா சென்றிருக்கிறார் – அவரின் பயணத்திலும் வேதியியலும் இரசாயனவியலும் கலக்கிறது.
ஆசாத் ஹைக்கூ-வில் கரைக்கிறார்.
ரவி நடராஜன் கனடியன் – நம் தகவலை விற்று – எனக்குத் தரவு, அவர்களுக்கு வரவு என்பதை சுட்டுகிறார்.
சொர்ணவேல் ஈஸ்வரன் – கரணம் தப்பினால் மரணம் என்னும் மீடூ விஷயத்தில் மாட்டிய இயக்குநரின் படைப்பை ஆராய்கிறார்.
ஜெகதீஷ் எழுத்தை மூன்று முறையாவது வாசிக்க வேண்டும் – தத்துவம் + வாழ்க்கை + ஆன்மிகம்
லோகமாதேவி முக்கியமான தொடரில் கொலம்பஸ் உடன் கப்பலில் அழைத்துச் செல்கிறார்.
ரகு ராமன் எழுத்து என்றும் என் மனதிற்கு இனிமை. நான் பேட்டி கண்ட முதல் எழுத்தாளர் இ.பா. என்றால், வீடியோவில் நேர்கண்ட முதல் நபர் இவர்.

மீண்டும் இ.பா. சிறப்பிதழ் நன்றிகளுக்கு வந்து விடுவோம்.

என் நலம் விரும்பி சரஸ்வதி தியாகராஜன்.
பல விஷயங்களைக் கொணர்ந்து சேர்த்தார்.
இ.பா. மகள் பத்மா உடன் உரையாடி அரிய புகைப்படங்களைப் பெற்றுத் தந்தார்.

மாலன் கட்டுரை ‘அசல் ஆசான்’ யார் என்று எண்ண வைக்கும்.
அழகியசிங்கர் எனக்குப் போட்டியாக பட்டியல் போட்டு இருக்கிறார்.

நான் ஃபேஸ்புக்கில் இட்ட பதிவைப் பார்த்து இரு விமர்சகர்கள் தங்கள் ஆக்கங்களைப் பகிர்ந்தார்கள்
– ராஜா ராமஸ்வாமி
– அன்பழகன்

வெங்கட் துறை வாரியாக விமர்சகர்களைப் பிடித்தார்.
நாடகம்
ஒவ்வொரு நாவலுக்கும் ஒருவர்
நட்பு
ஆசிரியர் – தமிழ்ப் பேராசிரியர்
சிறுகதை
விமர்சனம்
வைணவம் – இந்து மதம்
சரித்திரம் – வரலாறு
சமகாலத்தவர்
புது தில்லி வாசம்

அது அனைத்தும் இதழில் இடம் பிடித்திருக்கிறது.

என் துரித வாசிப்பில்
1. சுனில் கிருஷ்ணன் கட்டுரையை சிறப்பிடத்தில் வைப்பேன்
2. கிரிதரன் எழுத்தில் இருக்கும் நேர்மையும் மதிப்பீடும் முழுமையான அலசலும் பிரமிக்க வைக்கிறது.
3. காளி பிரசாத் தற்காலத் தமிழில் இருக்கும் மிகச் சிறந்த விமர்சகர்.

ஸ்ரீதர் நாராயணன் காளிக்கு சரியான போட்டி. ஆனால், காளி சுறுசுறுப்பானவர்; உரிய நேரத்தில் தந்து விடுவதால் முதன்மையானவர் 🙂

அம்பை பகிர்வு எனக்கு படு சுவாரசியம்.
என்னவாக இருந்தாலும் அவர் இன்னும் கொஞ்சம் இ.பா.வைப் பற்றி சொந்தமாக எழுதி இருக்கலாம்.

நான் கூட இ.பா. குறித்து விரிவாக எழுதத் திட்டமிட்டு இருந்தேன்.
இ.பா. (அல்லது ஜெ.மோ) போன்றோர் சிறப்பான பேச்சுக்காரர்கள்.
நிறையச் சொன்னா(ல்வா)ர்கள்.
சொன்னதை எழுத்தில் கொணர்(கிறா)ந்தார்கள்.
நூல் பட்டியலையும் செயல்பாட்டையும் பணியையும் பார்த்தால் குறிப்பிடத்தக்க சாதனையாளராக, ரகரகமாக உருவாக்கி இருக்கிறார்கள்.

கைசிக நாடகம் பார்க்க இ.பா. அழைத்துச் சென்றிருக்கிறார்.
அவர் எப்பொழுதும் மின்னஞ்சலுக்கு உடனடியாக பதில் இடுவார்.
~22 ஆண்டுகள் முன்பு அழைத்த அழைப்புக்கு உடனடியாக நேரம் ஒதுக்கி நான்கு மணி நேரத்திற்கு மேல் உரையாடினார்.
அவருக்கு எங்களின் சிறிய பிறந்த நாள் அன்பளிப்பு.

இந்திரா பார்த்தசாரதி என்னும் புலியும் விமர்சக குடிகளும்

முந்தைய பதிவுகள்

1. குருதிப்புனல் (நாவல்)

2. இந்திரா பார்த்தசாரதி: ஆறாம்திணை

3. Interview with Indira Parthasarathy – Balaji Srinivasan

4. முரண்பாடுகள் – தமிழ் சிஃபி சமாச்சார் பத்திகளின் தொகுப்பு ::எதிர்வினை

5. ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன – இந்திரா பார்த்தசாரதி

விமர்சக மொழி

இந்திரா பார்த்தசாரதி என்னுடைய விருப்பமான எழுத்தாளர். அவருடைய நாவல்கள் வாசித்திருக்கிறேன். சிற்சில கட்டுரைகள் வாசித்த அளவில் சுவாரசியம் நிறைந்தவை. படிப்பதற்கு சுவையாக இருந்தாலும், மீண்டும் படிக்கத் தூண்டுபவை. மீண்டும் படித்தாலும் அனுபவ முதிற்ச்சிற்கேற்ப பொருள் கூட்டுபவை.

அன்னியப்படுத்தாத மொழி சுஜாதா வாகர்களைக் கவரும். இன்றைக்கும் பொருத்தமான சமூகக் களங்களும், குடும்பச் சூழல்களும் ரமணி சந்திரன் நேசர்களையும் இழுக்கும். ஆண் மனதின் உளவியலை விரிவாக வெளிக் கொணர்வதால் பெண் சினேகிதிகளிடம் இரவல் கொடுத்தால் பிரச்சினை வரலாம்.

உருவக விமர்சகம்

ஆர்வி-க்கு மகாபாரதம் உவப்பு என்பதால் ஒரு பாரதக் கதை.

அழகிய குட்டி கிராமம். குடியானவனின் வீட்டு கொல்லைப்புறத்தில் மாடு புல் மேய்கிறது. திடீரென்று புலி உறுமல் சத்தம். விவசாயி அழ ஆரம்பிக்கிறான். புலிக்கு ஒன்றும் புரியவில்லை. அழுவதற்கான காரணத்தை வினவுகிறது.

“காட்டின் அரசரே! எனக்கு திருமண வயதில் அழகும் அறிவுமுள்ள மகள் இருக்கிறாள். அவளுக்கு சரியான வரன் அமையவில்லை.”

“எந்த மாதிரி பையனாக பார்க்கிறாய்?” என்கிறது புலி.

“உன்னைப் போல் பலமும் புத்தியும் பராக்கிரமும் நிறைந்தவனாக இருக்கவேண்டும்.”

“அப்படியென்றால், நானே அவளை மணமுடிக்கட்டுமா?”

“இதேதான்… இதைத்தான் நானும் யோசித்தேன். ஆனால், நாமிருவரும் வேறு வேறு வர்க்கம். எனக்கு சரியென்றாலும் இஷ்டமித்திர பந்துக்கள் ஒப்புக் கொள்ளணும். அதற்காக ஊருக்குள் போய் உற்றார் உறவினரிடம் கேட்டு வருகிறேன்.”

சென்று வருகிறான். “என் தலைவரே! அவர்களுக்கும் பேருவகைதான். ஆனால், என் மகளிடம் ஒரு வார்த்தை கேட்டு விடுகிறேன்.”

புலி மீண்டும் விடை தர, வீட்டினுள் சென்று திரும்புகிறான். “ஓ ராஜாவே! என் மகளுக்கு முழு சம்மதம். ஆனால், அவளுக்கு உன் கூரிய நகத்தையும் கோரப் பற்களையும் பார்த்தால் குலை நடுங்குகிறது. அவளை ஆரத் தழுவும்போது அவை பதம் பார்க்குமோ என்று அச்சம் எழுகிறது.”

”ப்பூ… அவ்வளவுதானே. அவற்றை வெட்டி எறிந்து விடலாம்.”

கிராமத்தானும் புலியின் ஆயுதங்களை அதன் ஆணைப்படியே நீக்குகிறான். நீக்கிய அடுத்த கணமே குச்சி கொண்டு புலியை ஓட ஓட விரட்டி அடிக்கிறான்.


லக்ஷ்மி

’ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன’

இ.பாவின் கதைகளின் சிறப்பே அவரது கதாபாத்திரங்களின் தோல்விதான். தோல்வியென்றால் தாடி வளர்த்து, போதையோடு அருவெறுப்பை கூட்ட ஒரு நாயையும் இழுத்துக்கொண்டு திரியும் ரொமான்டிக் காதல் தோல்வியல்ல. தன் இயலாமையின் உச்சங்களை கண்ணாரக்கண்டு பின் சராசரி வாழ்க்கைக்குள் போய் தன்னை திணித்துக்கொள்ளும் தோல்வி – தன்னை பற்றி தானே வளர்த்துக்கொள்ளும் அறிவுஜீவி பிம்பம் கிழிந்து தொங்க தன்னுள் இருந்து வெளிவரும் தன் உண்மை உருவை உணர்ந்து தளர்ந்து போய்த்திரும்பும் கதாநாயகர்கள் இவரது கதைகளில் மட்டுமே சாத்தியம். எப்படியும் க்ளைமாக்சில் தான் ஹீரோவாய் இருக்கும் ஒரே காரணத்தாலேயே ஜெயித்துவிடும் ரக ஆட்களில்லை இவர்கள். அமிர்தத்தை போன்றவர்களின் கதையை எழுத அபார துணிச்சல் வேண்டும் – இவர்களைத்தான் தினசரி வாழ்வில் நாம் அதிகம் சந்திக்கிறோம் (சில சமயங்களில் கண்ணாடியில் கூட சந்திக்க நேரிடலாம்.)

யோசித்து பாருங்கள், இதே கதையை சிந்து பைரவி எப்படி சொன்னது என்று – கதாநாயகனின் சறுக்கல்களை கூட அறிவுஜீவித்தன ஜிகினாத்தூவி அழகாக்கி விற்கும் சராசரி கதைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இ.பாவின் துணிவு நமக்கு வியப்பையளிக்கிறது.


பாவண்ணன்

தாவியலையும் மனம் (எனக்குப் பிடித்த கதைகள் – 71 ) இந்திரா பார்த்தசாரதியின் ‘நாசகாரக்கும்பல்’

குற்ற உணர்ச்சி இல்லாமல் இருப்பதே பெரிய மன நிம்மதி. நிம்மதியைத் தேடிய வாழ்க்கை என்பது வாய்ப்பு வசதிகளைப் பெருக்கிக்கொள்வதிலோ அல்லது கூடுதலாகக் கிட்டுகிற சில லட்சங்களுக்காகப் பிடிக்காத வேலையைச் செய்வதிலோ அல்ல என்பதுவும் புரிந்தது. தாவி அலைகிற மனத்தைக் கட்டிப்போடும் சக்தி இந்த உணர்ச்சிக்கு இருக்கிறது. இந்த எண்ணம் மனத்தில் நிழலாடும்போதெல்லாம் இந்திரா பார்த்தசாரியின் ‘நாசகாரக் கும்பல் ‘ என்னும் சிறுகதையும் நிழலாடும்.


ராஜ் சந்திரா

ஒரே தராசை எல்லா எழுத்தாளர்களுக்கும் உபயோகப்படுத்துவதில் வரும் விபரீதம் இது. இ.பா. கதைகள் நேரடியாக வாசகனிடம் பேசுபவை. அதன் நோக்கம் ‘இது போன்ற விளையாட்டுகள் உன் முன்னால் நடப்பவை’ என்று கூறுவதுடன் முடிந்துவிடும். இதில் ‘தரிசனம்’ பார்ப்பது உங்கள் பிழை. இவ்வகைக் கதைகளும் நமக்குத் தேவை என்று நான் நினைக்கிறேன். இவ்வகையான அரசியல் அங்கதங்கள் investigative journalism தரும் திருப்தி.

இ.பா எதை நினைத்து ‘குருதிப்புனல்’ கதையை நகர்த்தினாரோ அது சரியாக எடுபடவில்லை. பலரும் நாயுடுவின் ஆண்மை குறையைத்தான் கண்டார்கள். ஆனால் நாயுடுவின் சாதி வெறி (உ-ம். ‘பறையன் என்னை அடிக்கிறான்’ என்று கத்தும் முக்கியமான காட்சி) அவர்களுக்குத் தெரியவில்லை. Characterization-ல் இ.பா-வின் தோல்வி இது.

அவரின் கதை மாந்தர்களின் உரையாடலில் இ.பா. பிரகாசிக்கிறார் என்று சொல்லலாம். உதாரணமாக ‘மாயமான் வேட்டை’, ‘ஆகாயத் தாமரை’, ‘குருதிப் புனல்’

நாவல்களில் அவர்கள் வைக்கும் வாதங்கள் நிச்சயம் revisit செய்யும் தகுதி பெற்றவை. ஆனால் அ.மி-யின் தீவிர வாசகனாகிய எனக்கு இ.பா-வின் மாந்தர்கள் தரையில் கால் பாவாமல் நடக்க முயன்று கீழே விழுபவர்கள். ஆனால் கீழே விழுவதையும் இ.பா-வே நிகழ்த்துகிறார், as a part of the story.

இ.பா-வின் பாணியில் குறியீடுகளுக்கு இடம் கிடையாது. ‘கொஞ்சமாகக் கொடுங்க ஐயா’ என்றாலும் எல்லாவறையும் கொட்டுவார். அவரின் கதைகளைப் படிக்கும்போது வரும் களைப்புக்கு இதுவும் ஒரு காரணம். ‘ஆகாயத் தாமரை’-யில் கதை நாயகன் தன் frequency-க்கு யாரும் இல்லை என்ற வெறுப்பில் இறுதியில் ஒரு விவசாயியாக/கூலித் தொழிலாளியாக மாறி விடுவான். அதை கதாநாயகி மற்றவர்கள் அடைந்த தோல்வியாக நினைப்பாள். அந்த நினைப்பையும் அவர் வரிகளாக எழுதி நம்மை சிரமப் படுத்துவார். வாசகர்கள் புத்திசாலிகள் என்பதை இ.பா ஒப்புக் கொண்டதில்லை.

அவரின் சிஷ்யரான ஆதவன் கதைகளுக்கும் மேற்சொன்னவை பொருந்தும்.


அ.ராமசாமி

இன்னும் சில நாசகாரக்கும்பல்கள் :இந்திரா பார்த்தசாரதியின் கதை

இ.பா., சிறுகதைக்கான இலக்கணங்களையோ வரையறைகளையோ குறித்துக் கவலைப் படுபவரல்ல. விசாரணைக்குட்படுத்த விரும்பும் மனப்பாங்கு மட்டுமே அவருக்கு முக்கியம்.. அவரது சிறுகதைகள் ஒரு மையப்புள்ளியில் தொடங்கித் தனி மனிதப் பிரச்சினைக்குள் செல்வது போல் தோன்றினாலும், கதை முடியும் போது சமூகத்தின் பொதுவியாதிகளில் ஒன்றை விசாரணைக்குட் படுத்தும் நோக்கத்தை நிறைவேற்றும் தன்மை கொண்டவைகளாகவே விளங்குகின்றன.


Videos and Interviews

Indra Parthasarathy Documentary Part 1

Kaisika Purana Nadagam: Nambaduvaan Sarithiram by Prof. Ramanujam

கைசிக நாடகம் – நம்படுவான் சரித்திரம்