Monthly Archives: ஜூலை 2026

சொல்வனம் – இ.பா. சிறப்பிதழ்

இ.பா. சிறப்பிதழ் அமர்க்களமாக வெளியாகி விட்டது.
புத்தம்புது சொல்வனம் இதழை வாசியுங்கள்.
உங்கள் வாழ்த்தும் விமர்சனங்களும் தேவை.

இதழ்-370 – சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026

கனடா வெங்கட் இதழின் சிறப்பாசிரியர்.
அவர் தனிப்பட்ட நெருக்கடிகளில் இருந்தாலும் துவக்கிய விஷயத்தை செவ்வனே முடித்துக் கொடுத்தார்.

சொல்வனம் சிறப்பிதழ் போட வேண்டும் என்று பல்வேறு தலைப்புகளில் பேசிக் கொண்டே இருந்தோம்.
– திருநெல்வேலி சிறப்பிதழ்
– இந்திய மொழிகளுக்கான தமிழாக்க சிறப்பிதழ்
– ஆல்பர்ட் காம்யூ
– ஹிந்தி மொழி
…இன்னும் பல விவாதித்தோம்; பொறுப்பை ஒப்படைத்தோம்; சற்றே முஷிந்தோம்.
எனினும், எதுவும் கைகூடவில்லை.

எனக்கு இந்திரா பார்த்தசாரதியை தொலைபேசி மூலமாக அறிமுகம் செய்தவர் வார்த்தை பி.கே சிவக்குமார்.
அழைத்தவுடன் தொலைபேசி மூலமாக நேர்காணல் பேட்டிக்கு ஒத்துக் கொண்ட இளைஞர் இ.பா.
அப்போது தமிழோவியம். இன்று சொல்வனம்.
பேட்டி மறு பிரசுரம் கண்டிருக்கிறது.

நான் ஏ.ஐ., காணொலி, ஊர் சுற்றல், தொலைக்காட்சி, தூக்கம் என்று மந்தகதியில் வாழ்க்கையைக் கொண்டாடி இருந்தேன்.
வாரம் ஒரு முறையாவது அழைத்து, தமிழின் எல்லா விமர்சகர்களையும் பட்டியலிட்டு, அவர்களையும் ஒருங்கிணைத்து முழு மூச்சாக இதழை நடத்திக் காட்டியவர் வெங்கட்ரமணன்.
அவரின் எழுத்துமுறை ஆகட்டும்; செயல்பாடு ஆகட்டும் – எளிமையும் கறார்தன்மையும் கலந்த இராணுவ ஒழுங்கு.
வெங்கட் இவ்வளவு சிரத்தை எடுக்காவிட்டால் சிறப்பிதழ் சிறப்பான இதழாகி இருக்காது.

இதுவரை வந்த எல்லா சிறப்பிதழுக்கும் பதாகை வடிவமைத்தவர் அனுகிரஹா.
அவருக்கு(ம்) உடல்நலம் சரியில்லை.
எனக்கும் சரியான பல்வலி.
கடைசி நேரத்தில் அருண் அருணாச்சலம் கை கொடுத்தார்.
இந்தியாவில் இருந்தாலும் பயணத்தின் நடுவிலும் பேனர் கொடுத்தார்.
நல்ல வேளை – ஏ.ஐ. உபத்திரவத்தில் இருந்து உங்களுக்கு விடுதலை.

ஏ.ஐ. முழுக்க முழுக்க விமர்சன ஆய்வு கட்டுரையை அடிக்குறிப்புகளுடன் மொழியாக்கம் செய்து தந்துள்ளது.
அந்த ஆய்வறிக்கையின் பேராசிரியரை நம் சிறப்பிதழ் பேராசிரியர் தொடர்பு கொண்டு ஒப்புதல் பெற்றது, நிரந்தர ஆசிரியர் மைத்ரேயனின் கண்களைக் குளமாக்கி கண்ணீர் மல்கச் செய்தது.
“இதைத்தானே செய்யச் சொன்னே பாலா!” என்று அவர் இடித்து, வெங்கட் வழி அனைத்திற்கும் உரிமமும் மரியாதையும் செய்யப் பணித்தார்.

ஆனால், கோகுல் சால்வாடியின் ‘பைரசி’ போன்ற தொடர்களை கேட்டு வாங்கி அலசி ஆராய்ந்து பதிப்பித்தாலும் காப்புரிமையை வாழையிலை விருந்தில் உப்பாக கவனிப்பவன் நான்.
இதழில் தொடர்களும் வந்திருக்கிறது.
இந்தத் தொடர் ஆசிரியர்கள் இல்லாவிட்டால் இவ்வளவு நாள் சொல்வனம் தாக்குப் பிடித்திருக்காது.
ஜூலை நான்கு – அமெரிக்க சுதந்திர தினம் – அதை ஒட்டிய லதா குப்பா கட்டுரை.
அருணாச்சலம் ரமணன் அலாஸ்கா சென்றிருக்கிறார் – அவரின் பயணத்திலும் வேதியியலும் இரசாயனவியலும் கலக்கிறது.
ஆசாத் ஹைக்கூ-வில் கரைக்கிறார்.
ரவி நடராஜன் கனடியன் – நம் தகவலை விற்று – எனக்குத் தரவு, அவர்களுக்கு வரவு என்பதை சுட்டுகிறார்.
சொர்ணவேல் ஈஸ்வரன் – கரணம் தப்பினால் மரணம் என்னும் மீடூ விஷயத்தில் மாட்டிய இயக்குநரின் படைப்பை ஆராய்கிறார்.
ஜெகதீஷ் எழுத்தை மூன்று முறையாவது வாசிக்க வேண்டும் – தத்துவம் + வாழ்க்கை + ஆன்மிகம்
லோகமாதேவி முக்கியமான தொடரில் கொலம்பஸ் உடன் கப்பலில் அழைத்துச் செல்கிறார்.
ரகு ராமன் எழுத்து என்றும் என் மனதிற்கு இனிமை. நான் பேட்டி கண்ட முதல் எழுத்தாளர் இ.பா. என்றால், வீடியோவில் நேர்கண்ட முதல் நபர் இவர்.

மீண்டும் இ.பா. சிறப்பிதழ் நன்றிகளுக்கு வந்து விடுவோம்.

என் நலம் விரும்பி சரஸ்வதி தியாகராஜன்.
பல விஷயங்களைக் கொணர்ந்து சேர்த்தார்.
இ.பா. மகள் பத்மா உடன் உரையாடி அரிய புகைப்படங்களைப் பெற்றுத் தந்தார்.

மாலன் கட்டுரை ‘அசல் ஆசான்’ யார் என்று எண்ண வைக்கும்.
அழகியசிங்கர் எனக்குப் போட்டியாக பட்டியல் போட்டு இருக்கிறார்.

நான் ஃபேஸ்புக்கில் இட்ட பதிவைப் பார்த்து இரு விமர்சகர்கள் தங்கள் ஆக்கங்களைப் பகிர்ந்தார்கள்
– ராஜா ராமஸ்வாமி
– அன்பழகன்

வெங்கட் துறை வாரியாக விமர்சகர்களைப் பிடித்தார்.
நாடகம்
ஒவ்வொரு நாவலுக்கும் ஒருவர்
நட்பு
ஆசிரியர் – தமிழ்ப் பேராசிரியர்
சிறுகதை
விமர்சனம்
வைணவம் – இந்து மதம்
சரித்திரம் – வரலாறு
சமகாலத்தவர்
புது தில்லி வாசம்

அது அனைத்தும் இதழில் இடம் பிடித்திருக்கிறது.

என் துரித வாசிப்பில்
1. சுனில் கிருஷ்ணன் கட்டுரையை சிறப்பிடத்தில் வைப்பேன்
2. கிரிதரன் எழுத்தில் இருக்கும் நேர்மையும் மதிப்பீடும் முழுமையான அலசலும் பிரமிக்க வைக்கிறது.
3. காளி பிரசாத் தற்காலத் தமிழில் இருக்கும் மிகச் சிறந்த விமர்சகர்.

ஸ்ரீதர் நாராயணன் காளிக்கு சரியான போட்டி. ஆனால், காளி சுறுசுறுப்பானவர்; உரிய நேரத்தில் தந்து விடுவதால் முதன்மையானவர் 🙂

அம்பை பகிர்வு எனக்கு படு சுவாரசியம்.
என்னவாக இருந்தாலும் அவர் இன்னும் கொஞ்சம் இ.பா.வைப் பற்றி சொந்தமாக எழுதி இருக்கலாம்.

நான் கூட இ.பா. குறித்து விரிவாக எழுதத் திட்டமிட்டு இருந்தேன்.
இ.பா. (அல்லது ஜெ.மோ) போன்றோர் சிறப்பான பேச்சுக்காரர்கள்.
நிறையச் சொன்னா(ல்வா)ர்கள்.
சொன்னதை எழுத்தில் கொணர்(கிறா)ந்தார்கள்.
நூல் பட்டியலையும் செயல்பாட்டையும் பணியையும் பார்த்தால் குறிப்பிடத்தக்க சாதனையாளராக, ரகரகமாக உருவாக்கி இருக்கிறார்கள்.

கைசிக நாடகம் பார்க்க இ.பா. அழைத்துச் சென்றிருக்கிறார்.
அவர் எப்பொழுதும் மின்னஞ்சலுக்கு உடனடியாக பதில் இடுவார்.
~22 ஆண்டுகள் முன்பு அழைத்த அழைப்புக்கு உடனடியாக நேரம் ஒதுக்கி நான்கு மணி நேரத்திற்கு மேல் உரையாடினார்.
அவருக்கு எங்களின் சிறிய பிறந்த நாள் அன்பளிப்பு.

பூமணி அஞ்சலி

நாதி

ஆனானப்பட்ட கறீம் பாய் கண்ணை மூடிவிட்டார். தாலுகா ஆபீஸ் தடிவீரன் சொன்னான்.

ஏட்டையாவுக்கு நெஞ்சில் துப்பாக்கியால் இடித்த வலி. அந்த மைக்கண்ணும் மருதாணிக் கையும் மனசுக்குள் நிழலாடியது. மண்டை கிறுகிறுத்து ஸ்டேஷன் வாசலில் உட்கார்ந்துவிட்டார்.

போனவாரம் போய்ப் பார்த்தபோது தெளுச்சியாக இருந்தாரே. படுத்த படுக்கையிலும் தெம்பாகப் பேசினார். ரிடையரான நினைப்பே இல்லை. அதே இன்ஸ்பெக்டர் கெத்து, எல்லாப் போலீஸ்காரர்களைப் பற்றியும் கேட்டார். கேடிகளின் நடவடிக்கைகளை விசாரித்தார்.

இடையில் “பாத்துமா” என்று குரல் கொடுத்தார். அவர் சம்சாரம் வந்து கட்டிலுக்கடியில் காத்திருந்த மூத்திரக் குடுவையை எடுத்துப் போனாள். அவர் கண்ணைச் சிமிட்டினார்.

“பாத்தயாவே வீட்டுக்குள்ளயே சாராய வடிப்பு நடக்குது. கேஸ்போட்டு உள்ள தள்ளீறாத.”

நோய் அண்டாத சிரிப்பு. கடைசிவரைக்கும் கிண்டல் போகாது.

பாத்துமா காலிக் குடுவையை வைத்துவிட்டுப் போகும்போது மறக்காமல் கேட்டாள்.

“வீட்ல எல்லாரும் நல்லாருக்காகளாண்ணன்.

அவள் முகத்தில் கரிப்பூச்சாகக் கவலை அப்பியிருந்தது.

“இருக்காகம்மா. புள்ளீகள எங்க.”

“ரெண்டு பேரும் பீடிக் கம்பெனிக்குப் போயிருக்காக. வீட்ல கெடங்கன்னாக் கேட்டாத்தான.”

பெட்டை

கம்மாக் கலிங்கலோரம் குருவன் துணிவெளுக்கும் சத்தம் நாலாபக்கமும் தெளிவாகக் கேட்டது. கல்லடித்தாளத்துக்குத் தக்கபடி அவன் சொகமாகப் பாடினான்.

“காடத்தட்டு 
கக்கத்துல 
கருத்தப்புள்ள 
பக்கத்துல 
காடத்தட்டு 
காடத்தட்டு 
சோ 
சோ 
சோவீவி
சோவீவி…”

துணியைத் துப்புரவாகத் துவைத்து அடித்தொண்டைக்குள் ராகத்தை முனங்கிக்கொண்டே பிழிந்து பக்கத்தில் விரித்திருக்கும் சீலைமேல் விட்டெறிந்தான். அடுத்த உருப்படியை எடுக்கும் போது இன்னொரு பாட்டு துவங்கியது.

புருசனின் பாட்டைக் கேட்டபடி துவைத்துப் போட்ட துணிகளை நீலத்தில் முக்கிப் பிழிந்து காயப்போட்டாள் பொன்னாத்தா. நீலத்தாழிக்குள் கைச்சுழட்டல் மறுபடியும் வேகப்பட்டது.

கம்மாயில் தண்ணீர் மேடேறி கெத்கெத்தென்று கிடந்தது. மேட்டுத்தரையில் சம்பும் நீர்க்கோரையும் நெரிசலாக வளர்ந்த பசுமை. மெட்டான இடங்களில் கொக்குகள் அடம்பிடித்து ஒத்தைக்காலில் நின்றுகொண்டிருந்தன. ஓடைக்கரைப் பனையில் நிற்கும் மீன்கொத்தி அடிக்கொரு தடவை எறிந்த பந்தாக நீர்மட்டத்தில் விழுந்து உயரப்போய் உட்கார்ந்து கொண்டது.