Monthly Archives: ஜூலை 2026

ஜூலை 19 – ஆடி மாதத் தமிழ் இலக்கியம்

சென்ற வார இலக்கியம் – சென்ற மாத இலக்கியம் போல் ஆகி விட்டது.
ஜூலை நான்கு அமெரிக்க சுதந்திர தினத்தையொட்டி ஆரம்பித்த பல் வலி பல்கிப் பெருகி ஒடிஸியில் வரும் பிரும்மாண்ட தெய்வங்களாக மிரட்ட ஆரம்பித்தது ஒரு காரணம்.
சொல்வனத்தின் இந்திரா பார்த்தசாரதி சிறப்பிதழ் இன்னொரு காரணம்.
கோடை என்றால் கொண்டாட்டம் என்பது முக்கிய காரணம்.

ஸ்டோரி ஜட்ஜ் நிகழ்விற்காக எழுதிய பேச்சின் சுருக்க வடிவு இங்கே.

சிவா (தமிழோசை ஆன் ஏர்) அவர்களுக்கு நன்றி!

https://www.youtube.com/@tamilosaionair2738/videos

காலச்சுவடு தமிழின் முக்கியமான இதழ்.
நிகழ்வுகளாகட்டும்; விமர்சனங்களாட்டும்; ஆம்லெட்டில் எல்லாவிதமான காய்கறிகளும் போட்டு வண்ணமயமாக வருவது போல் சுட்டுத் தருகிறார்கள்.
எனினும், கதைகளில் மட்டும் நிலைய வித்துவான்களையே ஆதரிக்கிறார்கள்.
அது போகட்டும்.
அச்சிதழ்.
பக்கங்களை தங்கள் பக்கம் ஆதரிப்பவர் பக்கம் கொடுப்பது இயற்கைதானே?

இந்த மாதக் கதைகள்:
1. தீ இனிது : பெருமாள்முருகன்
2. பாடிங்க்டன் கரடி : கோகுலக்கண்ணன்

சச்சிதானந்தன் சுகிர்தராஜா, ”247 தமிழ் எழுத்துக்களும் 2 ஆங்கில ஐயர்களும்” என்னும் பத்தி கட்டுரை எழுதியிருக்கிறார். அவசியம் வாசிக்கவும்.

முன்பெல்லாம் அஞ்சலி என்றால் ஆசான் ஜெயமோகன் என்றிருந்தது.
தமிழ் விக்கியும் யுனைட்டெட் முழுமையறிவு விஸ்டமும் வந்த பிறகு அந்தப் பொறுப்பு முழுக்க முழுக்க கா.சு. மட்டுமே ஏற்றுக் கொண்டிருக்கிறது:
– மு. பரமசிவம் (1934 – 2026) : பாட்டாளிப் படைப்பாளி : ஆ.இரா. வேங்கடாசலபதி
– பல்லடம் மாணிக்கம் (1936 – 2026) புத்தக மாணிக்கம் : கண. குறிஞ்சி
– பாரதிராஜா (1941 – 2026) : மேதைமைக்கு அருகில் சென்ற சாதனையாளர் : ஸ்டாலின் ராஜாங்கம்

சுகுமாரனின் கட்டுரைகளை முன்வைத்து, எம். கோபாலகிருஷ்ணன், “கலையை எழுதுதல்” அலசுகிறார். முக்கியமான விமர்சனப் பார்வை.

#நறுக்: ‘ஜி. நாகராஜனும் வி. மாலாவும்’ என்ற தலைப்பில் வெளியான அவரது முதல் கட்டுரையில் (2004, ஆகஸ்ட்) தொடங்கி இன்றுவரை தொடரும் அவரது கட்டுரைகளின் வரிசை செறிவான மொழி அனுபவத்தையும் அரை நூற்றாண்டுத் தமிழ்த் தீவிர இலக்கியத்தின் போக்கையும் ஒருசேர…

2026 ஜூன் 4ஆம் தேதி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘மருதன்- 50’ நிகழ்வை இஸ்க்ரா விரிவாகப் பகிர்கிறார். “அப்பாதுரையார், மயிலை சீனி. வேங்கடசாமி, சாமிநாத சர்மா என்று நீடித்துவரும் அல்புனைவு மரபில் இடம்பெறும் #மருதன் , பொது வாசக எழுத்தின் மூலம் ஜனநாயகத் தன்மையை வளர்த்தவர்” என்கிறார்

ஏன்?

ராமச்சந்திர #குஹா பத்தியை தமிழில் மருதன் மொழியாக்கியிருக்கிறார்: மெய்யுரைப்பேன் மனமே!
மறைமுகக் கூட்டாளிகள் காந்தி குடும்பமும் பாஜகவின் ஆதிக்கமும்

சோழியன் குடுமி சும்மா ஆடுமா!?

நீளிரா திரைப்படம் குறித்து #சொர்ணவேல் திரைப்பார்வை.
ம. சோனியா, “சிறு தொழிற்கூடங்களில் நசுங்குபவர்களின் வாழ்க்கை” என்னும் தலைப்பில் பரத்ராஜ் ரவிதாஸ் எழுதிய பரிசல் வெளியீடான பட்டறை நாவல் குறித்த அறிமுகப் பார்வை.

நிகழ்வுப்பார்வை: திருவாவடுதுறை ஆதீனம் புதிதாக இந்த ஆண்டு உ.வே.சா.வின் பெயரால் ‘செந்தமிழ் பதிப்புச் செம்மல்’ என்ற விருதை ஏற்படுத்தி, முதல் விருதை முனைவர் ப. சரவணனுக்கு வழங்கியிருக்கிறது.

இது காலச்சுவடு மட்டும்.

வாசகசாலை இதழில் – நாற்பதுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள்.
காலச்சுவடு மாதத்திற்கு ஒரு தடவை வருவது நியாயம். அதற்கு செல்வாகும்.
இணைய இதழ்களும் மாதத்திற்கு ஒரு தடவை வெளியாவது நாம் பழச மறக்க மாட்டோம் என்பதற்கான உதாரணம்.

தினசரி வெளியிடுவதை ஒழுங்காகச் செய்பவர்கள் அகழ்.
அவர்களின் இணையக் கூடுகைகள் முக்கியமான செயல்பாடு.

குவிகம் அமைப்பும் வாரந்தோறும் வலை வழியே சந்திக்கிறார்கள்; உரையாடுகிறார்கள்.
பலரையும் விருந்தினர்களாக அழைக்கிறார்கள். அனைவரையும் பேச வருக வருக எனக் ஜூம் கம்பளம் இட்டு வரவேற்கிறார்கள்.

இது போன்ற சந்திப்புகள் ஒவ்வொரு இதழுக்கும் அவசியம்.

அதை நெடுங்காலமாக செய்து வருபவர் ஜெயமோகன் + விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.

ரஜினி x கமல்
ஜானகி x சுசீலா
ரெஹ்மான் x ராஜா

என்பது போல் கா.சு. வந்தால் ஜெ.மோ. வர வேண்டுமே : )

அவரின் பரிவாரங்களில் அகழ் இதழை ஏற்கனவே கவனித்து விட்டோம்.
அடுத்து வல்லினம்; கவிதைகள்.இன்;

அந்திமழை.

‘தமிழ் இலக்கியத்தில் ஆழங்கால் படாமல் கிறித்தவ இலக்கியத்தைப் படைக்க முடியாது!’ என்னும் தலைப்பில் தமிழ்விக்கி -தூரன் விருது பெறும் யோ. ஞானசந்திர ஜாண்சன் உடன் பேட்டி இடம்பெற்றிருக்கிறது.

இப்பொழுதெல்லாம் பேட்டி என்றால் இணையம் வழியாகக் கேள்விகளை அனுப்பி அந்த பதில்களை அப்படியே வெளியிடுவது.
தட்டச்சும் வேலை கிடையாது!
பலுக்கப் பிழை பார்க்கும் உழைப்பு கோராது!!
முக்கியமாக, ஒலிப்பதிவை வரிவடிவமாக மாற்றும் சுமை இல்லவே இல்லை!!!
பருத்தி புடைவையாகவே காய்க்கும் காலம்.

நல்ல பதில்கள்.

இன்னொரு பேட்டி: வல்லினம் இதழில் சாமிநாதன் முனிசாமி உடன் ஆன “மாற்று வரலாற்றுக்கான தேவையென்பது உலகளவில் இருக்கும் ஒன்று!”. சுவாரசியமான ஆய்வு.

இரண்டையும் வாசித்தால் உத்வேகமும் பெறலாம்; வித்தியாசமான ஆளுமைகள் குறிடததும் அறியலாம்.

இறுதியாக மயிர்.இன் மூன்று படைப்புகளை முன்வைக்கிறேன்:
1. போதி எழுதிய சிறுகதை: “மலர் நீட்டம்” – இனி தான் வாசிக்க வேண்டும்.
2. ஆவுடை எழுத்தில் அப்பாவின் நினைவிடம் – இதையும் நீங்கள் படித்து தேறுமா எனச் சொல்லுங்கள்.
3. செல்வி.சுஜாதா ஆனந்த ராவ் அசோகமித்திரனின் “ஆண்கள் பெண்கள் குழந்தைகள்” என அலசியிருக்கிறார்.

அதில் இருந்து நறுக்:

இனி வேண்டியதில்லை என்கிற சிறுகதை தமிழ் சினிமாவின் ஒரு விளிம்பினைக் கதைக்களமாக கொண்டிருக்கிறது. அதில் பகைப்புலமாக சினிமா உலகம் வந்துபோகிறது. ஆனால் கதையின் மையக் கரு பெண்மை. ஆண் பெண் உறவின் புதிர் தன்மையைப் பேசும் கதை.
எழுத்தாளர்கள் தமிழ் சினிமாவில் பங்கேற்பது தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் இருந்தே உள்ளது. புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா, ஜெயகாந்தன், பூமணி, வெங்கட்சாமிநாதன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன் என்று அதற்கு ஒரு நீண்ட பட்டியல் உண்டு.
அசோகமித்திரன் ஒருவரே தமிழ் சினிமாவின் அசல் வாழ்க்கையை எழுத்தாக்கியவர்.

விடுபட்டதைச் சொல்லுங்கள்.
வாசிப்போம்.

அறுபது ஆண்டுகள் பாடிய நதி – என்றும் ஒலிக்கும் தாய்மொழி

எஸ். ஜானகியை எனக்கு எப்படித் தெரியும்?
விவித்பாரதியில் “கண்ணா நீ எங்கே? வா வா நீ இங்கே!” வழியாக மிமிக்ரி கலைஞர் மாதிரி என அறிமுகமானார்.

ஆனால், அதற்கு முன்னேலேயே தெற்கு மாட வீதி வன்னியர் மண்டபத்தில் அமர்க்களமாய் “மச்சானப் பார்த்தீங்களா!” பாடினவர் என்றறியேன்.
இந்தக் கதையை அம்மாவிடம் சொல்ல, அவர் கொஞ்சும் சலங்கை “சிங்கார வேலனே தேவா”விற்கு அழைத்துச் சென்றார்.
அக்காவோ அவருக்குப் பிடித்த, நெஞ்சத்தைக் கிள்ளாதே, “உறவெனும் புதிய வானில்” மூழ்கச் செய்தார்.

அம்மாவிற்கு குங்குமம் படத்தின் காட்சியமைப்பான “சின்னஞ்சிறிய வண்ணப் பறவை” பிடிக்கும். அதில் சாரதா பதைபதைப்பார். அந்தக் குரலும் ஜானகி.
எனக்கு ஸ்ரீதேவி. “செந்தூரப் பூவே” முதல் தர்மயுத்தம் “ஆகாய கங்கை பூந்தேன் மலர்” என நடிகை மட்டுமே தெரிவார். எத்தனை ஆலாபனை! என்ன ஹம்மிங்!
அக்கா நிச்சயமாய் “காற்றுக்கென்ன வேலி” சொல்லி சுஜாதாவின் பாய்ச்சல் கலந்த துள்ளல் குரலை உணர்த்தியிருப்பார்.
பாரதியார், “கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்” சொல்வார்.

குரலை வைத்து ஆளை எடை போடக் கூடாது.
அன்றில் இருந்து எஸ்.பி.பி.யை ‘பொம்பள ஜானகி’ என்றழைக்க ஆரம்பித்தேன்.
அவருக்கு “கடவுள் அமைத்து வைத்த மேடை” என்றால், ஜானகிக்கு “சிப்பியிருக்குது முத்துமிருக்குது! திறந்து பார்க்க நேரமில்லடி ராசாத்தி!” கதை.

வேலையில் ஒன்றிப் போய் ஊறிக் கிடக்கும் ப்ளேலிஸ்ட் பட்டியலில் அவர் நிரந்தர முதல்வி:
– உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் (அவளுக்கென ஒரு மனம்)
– சொல்லத்தான் நினைக்கிறேன்
– தேன் சிந்துதே வானம் (பொண்ணுக்குத் தங்க மனசு)
– அந்தப்புரத்தில் ஒரு மகராஜன் (தீபம்)
– ஒரு வானவில் போலே (காற்றினிலே வரும் கீதம்)
– அழகிய கண்ணே (உதிரிப்பூக்கள்)
– காற்றில் எந்தன் கீதம் (ஜானி)
– பொன்வானம் பன்னீர் தூவுது (இன்று நீ நாளை நான்)

மேலே சொன்னதெல்லாம் “தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி” என்றால் அடுத்து வருவது “குயிலே கவிக்குயிலே” என நினைவேக்க நனவோடை:
* அடி ஆத்தாடி (கடலோரக் கவிதைகள்)
* நல்ல நேரம் நாளும் யோகம் (ஜெயமாலினி!)
* நாதம் என் ஜீவனே (காதல் ஓவியம்)
* புத்தம் புது காலை (அலைகள் ஓய்வதில்லை)
* வெட்டி வேரு வாசம் (முதல் மரியாதை)
* தூங்காத விழிகள் ரெண்டு (அக்னி நட்சட்திரம்)
* இந்த மல்லிக மனச (டி ராஜேந்தர்)

அடுத்த தலைமுறையையும் அவர் விடவில்லை!
– சுந்தரி கண்ணால் ஒரு சேதி
– கண்மணி அன்போட காதலன்
– தென்றல் வந்து தீண்டும் போது
– மார்கழித் திங்கள் அல்லவா

மனம் அலைபாயும் போது “தூரத்தில் நான் கண்ட உன் முகம்” என நிழல்கள் ஓடும்.
சாந்தோம் பள்ளியில் ஒலித்த ஒரே சினிமாப் பாடல் “மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்!”.
அதைக் கேட்டு மதம் மாறலாம் என்ற எண்ணம் எழுமளவு மெய்யுருக்கம்.
அதன் பின் “அலைகள் ஒய்வதில்லை” படத்தைப் பார்த்து முடிவை மாற்றி விட்டேன்.

நடுவே எம்.பி3 யுகம். அப்பொழுது எஸ் ஜானகி ஹிட்ஸ் எனப் போட்டு ~170 சொச்சம் பாடல் சிடி கிடைத்தது.
96 போன்ற படங்களில் அவருக்கு மரியாதை செய்தபோது ஜானு என்னும் பெயர் சந்தோஷம் தந்தது.

பக்திப் பாடலோ… பஜனோ… கஜலோ!

உங்களுக்கு என்ன ஜானகி நினைவு?
எஸ்.ஜே. என்றால் எந்தப் பாடல்?

சொல்வனம் – இ.பா. சிறப்பிதழ்

இ.பா. சிறப்பிதழ் அமர்க்களமாக வெளியாகி விட்டது.
புத்தம்புது சொல்வனம் இதழை வாசியுங்கள்.
உங்கள் வாழ்த்தும் விமர்சனங்களும் தேவை.

இதழ்-370 – சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026

கனடா வெங்கட் இதழின் சிறப்பாசிரியர்.
அவர் தனிப்பட்ட நெருக்கடிகளில் இருந்தாலும் துவக்கிய விஷயத்தை செவ்வனே முடித்துக் கொடுத்தார்.

சொல்வனம் சிறப்பிதழ் போட வேண்டும் என்று பல்வேறு தலைப்புகளில் பேசிக் கொண்டே இருந்தோம்.
– திருநெல்வேலி சிறப்பிதழ்
– இந்திய மொழிகளுக்கான தமிழாக்க சிறப்பிதழ்
– ஆல்பர்ட் காம்யூ
– ஹிந்தி மொழி
…இன்னும் பல விவாதித்தோம்; பொறுப்பை ஒப்படைத்தோம்; சற்றே முஷிந்தோம்.
எனினும், எதுவும் கைகூடவில்லை.

எனக்கு இந்திரா பார்த்தசாரதியை தொலைபேசி மூலமாக அறிமுகம் செய்தவர் வார்த்தை பி.கே சிவக்குமார்.
அழைத்தவுடன் தொலைபேசி மூலமாக நேர்காணல் பேட்டிக்கு ஒத்துக் கொண்ட இளைஞர் இ.பா.
அப்போது தமிழோவியம். இன்று சொல்வனம்.
பேட்டி மறு பிரசுரம் கண்டிருக்கிறது.

நான் ஏ.ஐ., காணொலி, ஊர் சுற்றல், தொலைக்காட்சி, தூக்கம் என்று மந்தகதியில் வாழ்க்கையைக் கொண்டாடி இருந்தேன்.
வாரம் ஒரு முறையாவது அழைத்து, தமிழின் எல்லா விமர்சகர்களையும் பட்டியலிட்டு, அவர்களையும் ஒருங்கிணைத்து முழு மூச்சாக இதழை நடத்திக் காட்டியவர் வெங்கட்ரமணன்.
அவரின் எழுத்துமுறை ஆகட்டும்; செயல்பாடு ஆகட்டும் – எளிமையும் கறார்தன்மையும் கலந்த இராணுவ ஒழுங்கு.
வெங்கட் இவ்வளவு சிரத்தை எடுக்காவிட்டால் சிறப்பிதழ் சிறப்பான இதழாகி இருக்காது.

இதுவரை வந்த எல்லா சிறப்பிதழுக்கும் பதாகை வடிவமைத்தவர் அனுகிரஹா.
அவருக்கு(ம்) உடல்நலம் சரியில்லை.
எனக்கும் சரியான பல்வலி.
கடைசி நேரத்தில் அருண் அருணாச்சலம் கை கொடுத்தார்.
இந்தியாவில் இருந்தாலும் பயணத்தின் நடுவிலும் பேனர் கொடுத்தார்.
நல்ல வேளை – ஏ.ஐ. உபத்திரவத்தில் இருந்து உங்களுக்கு விடுதலை.

ஏ.ஐ. முழுக்க முழுக்க விமர்சன ஆய்வு கட்டுரையை அடிக்குறிப்புகளுடன் மொழியாக்கம் செய்து தந்துள்ளது.
அந்த ஆய்வறிக்கையின் பேராசிரியரை நம் சிறப்பிதழ் பேராசிரியர் தொடர்பு கொண்டு ஒப்புதல் பெற்றது, நிரந்தர ஆசிரியர் மைத்ரேயனின் கண்களைக் குளமாக்கி கண்ணீர் மல்கச் செய்தது.
“இதைத்தானே செய்யச் சொன்னே பாலா!” என்று அவர் இடித்து, வெங்கட் வழி அனைத்திற்கும் உரிமமும் மரியாதையும் செய்யப் பணித்தார்.

ஆனால், கோகுல் சால்வாடியின் ‘பைரசி’ போன்ற தொடர்களை கேட்டு வாங்கி அலசி ஆராய்ந்து பதிப்பித்தாலும் காப்புரிமையை வாழையிலை விருந்தில் உப்பாக கவனிப்பவன் நான்.
இதழில் தொடர்களும் வந்திருக்கிறது.
இந்தத் தொடர் ஆசிரியர்கள் இல்லாவிட்டால் இவ்வளவு நாள் சொல்வனம் தாக்குப் பிடித்திருக்காது.
ஜூலை நான்கு – அமெரிக்க சுதந்திர தினம் – அதை ஒட்டிய லதா குப்பா கட்டுரை.
அருணாச்சலம் ரமணன் அலாஸ்கா சென்றிருக்கிறார் – அவரின் பயணத்திலும் வேதியியலும் இரசாயனவியலும் கலக்கிறது.
ஆசாத் ஹைக்கூ-வில் கரைக்கிறார்.
ரவி நடராஜன் கனடியன் – நம் தகவலை விற்று – எனக்குத் தரவு, அவர்களுக்கு வரவு என்பதை சுட்டுகிறார்.
சொர்ணவேல் ஈஸ்வரன் – கரணம் தப்பினால் மரணம் என்னும் மீடூ விஷயத்தில் மாட்டிய இயக்குநரின் படைப்பை ஆராய்கிறார்.
ஜெகதீஷ் எழுத்தை மூன்று முறையாவது வாசிக்க வேண்டும் – தத்துவம் + வாழ்க்கை + ஆன்மிகம்
லோகமாதேவி முக்கியமான தொடரில் கொலம்பஸ் உடன் கப்பலில் அழைத்துச் செல்கிறார்.
ரகு ராமன் எழுத்து என்றும் என் மனதிற்கு இனிமை. நான் பேட்டி கண்ட முதல் எழுத்தாளர் இ.பா. என்றால், வீடியோவில் நேர்கண்ட முதல் நபர் இவர்.

மீண்டும் இ.பா. சிறப்பிதழ் நன்றிகளுக்கு வந்து விடுவோம்.

என் நலம் விரும்பி சரஸ்வதி தியாகராஜன்.
பல விஷயங்களைக் கொணர்ந்து சேர்த்தார்.
இ.பா. மகள் பத்மா உடன் உரையாடி அரிய புகைப்படங்களைப் பெற்றுத் தந்தார்.

மாலன் கட்டுரை ‘அசல் ஆசான்’ யார் என்று எண்ண வைக்கும்.
அழகியசிங்கர் எனக்குப் போட்டியாக பட்டியல் போட்டு இருக்கிறார்.

நான் ஃபேஸ்புக்கில் இட்ட பதிவைப் பார்த்து இரு விமர்சகர்கள் தங்கள் ஆக்கங்களைப் பகிர்ந்தார்கள்
– ராஜா ராமஸ்வாமி
– அன்பழகன்

வெங்கட் துறை வாரியாக விமர்சகர்களைப் பிடித்தார்.
நாடகம்
ஒவ்வொரு நாவலுக்கும் ஒருவர்
நட்பு
ஆசிரியர் – தமிழ்ப் பேராசிரியர்
சிறுகதை
விமர்சனம்
வைணவம் – இந்து மதம்
சரித்திரம் – வரலாறு
சமகாலத்தவர்
புது தில்லி வாசம்

அது அனைத்தும் இதழில் இடம் பிடித்திருக்கிறது.

என் துரித வாசிப்பில்
1. சுனில் கிருஷ்ணன் கட்டுரையை சிறப்பிடத்தில் வைப்பேன்
2. கிரிதரன் எழுத்தில் இருக்கும் நேர்மையும் மதிப்பீடும் முழுமையான அலசலும் பிரமிக்க வைக்கிறது.
3. காளி பிரசாத் தற்காலத் தமிழில் இருக்கும் மிகச் சிறந்த விமர்சகர்.

ஸ்ரீதர் நாராயணன் காளிக்கு சரியான போட்டி. ஆனால், காளி சுறுசுறுப்பானவர்; உரிய நேரத்தில் தந்து விடுவதால் முதன்மையானவர் 🙂

அம்பை பகிர்வு எனக்கு படு சுவாரசியம்.
என்னவாக இருந்தாலும் அவர் இன்னும் கொஞ்சம் இ.பா.வைப் பற்றி சொந்தமாக எழுதி இருக்கலாம்.

நான் கூட இ.பா. குறித்து விரிவாக எழுதத் திட்டமிட்டு இருந்தேன்.
இ.பா. (அல்லது ஜெ.மோ) போன்றோர் சிறப்பான பேச்சுக்காரர்கள்.
நிறையச் சொன்னா(ல்வா)ர்கள்.
சொன்னதை எழுத்தில் கொணர்(கிறா)ந்தார்கள்.
நூல் பட்டியலையும் செயல்பாட்டையும் பணியையும் பார்த்தால் குறிப்பிடத்தக்க சாதனையாளராக, ரகரகமாக உருவாக்கி இருக்கிறார்கள்.

கைசிக நாடகம் பார்க்க இ.பா. அழைத்துச் சென்றிருக்கிறார்.
அவர் எப்பொழுதும் மின்னஞ்சலுக்கு உடனடியாக பதில் இடுவார்.
~22 ஆண்டுகள் முன்பு அழைத்த அழைப்புக்கு உடனடியாக நேரம் ஒதுக்கி நான்கு மணி நேரத்திற்கு மேல் உரையாடினார்.
அவருக்கு எங்களின் சிறிய பிறந்த நாள் அன்பளிப்பு.

பூமணி அஞ்சலி

நாதி

ஆனானப்பட்ட கறீம் பாய் கண்ணை மூடிவிட்டார். தாலுகா ஆபீஸ் தடிவீரன் சொன்னான்.

ஏட்டையாவுக்கு நெஞ்சில் துப்பாக்கியால் இடித்த வலி. அந்த மைக்கண்ணும் மருதாணிக் கையும் மனசுக்குள் நிழலாடியது. மண்டை கிறுகிறுத்து ஸ்டேஷன் வாசலில் உட்கார்ந்துவிட்டார்.

போனவாரம் போய்ப் பார்த்தபோது தெளுச்சியாக இருந்தாரே. படுத்த படுக்கையிலும் தெம்பாகப் பேசினார். ரிடையரான நினைப்பே இல்லை. அதே இன்ஸ்பெக்டர் கெத்து, எல்லாப் போலீஸ்காரர்களைப் பற்றியும் கேட்டார். கேடிகளின் நடவடிக்கைகளை விசாரித்தார்.

இடையில் “பாத்துமா” என்று குரல் கொடுத்தார். அவர் சம்சாரம் வந்து கட்டிலுக்கடியில் காத்திருந்த மூத்திரக் குடுவையை எடுத்துப் போனாள். அவர் கண்ணைச் சிமிட்டினார்.

“பாத்தயாவே வீட்டுக்குள்ளயே சாராய வடிப்பு நடக்குது. கேஸ்போட்டு உள்ள தள்ளீறாத.”

நோய் அண்டாத சிரிப்பு. கடைசிவரைக்கும் கிண்டல் போகாது.

பாத்துமா காலிக் குடுவையை வைத்துவிட்டுப் போகும்போது மறக்காமல் கேட்டாள்.

“வீட்ல எல்லாரும் நல்லாருக்காகளாண்ணன்.

அவள் முகத்தில் கரிப்பூச்சாகக் கவலை அப்பியிருந்தது.

“இருக்காகம்மா. புள்ளீகள எங்க.”

“ரெண்டு பேரும் பீடிக் கம்பெனிக்குப் போயிருக்காக. வீட்ல கெடங்கன்னாக் கேட்டாத்தான.”

பெட்டை

கம்மாக் கலிங்கலோரம் குருவன் துணிவெளுக்கும் சத்தம் நாலாபக்கமும் தெளிவாகக் கேட்டது. கல்லடித்தாளத்துக்குத் தக்கபடி அவன் சொகமாகப் பாடினான்.

“காடத்தட்டு 
கக்கத்துல 
கருத்தப்புள்ள 
பக்கத்துல 
காடத்தட்டு 
காடத்தட்டு 
சோ 
சோ 
சோவீவி
சோவீவி…”

துணியைத் துப்புரவாகத் துவைத்து அடித்தொண்டைக்குள் ராகத்தை முனங்கிக்கொண்டே பிழிந்து பக்கத்தில் விரித்திருக்கும் சீலைமேல் விட்டெறிந்தான். அடுத்த உருப்படியை எடுக்கும் போது இன்னொரு பாட்டு துவங்கியது.

புருசனின் பாட்டைக் கேட்டபடி துவைத்துப் போட்ட துணிகளை நீலத்தில் முக்கிப் பிழிந்து காயப்போட்டாள் பொன்னாத்தா. நீலத்தாழிக்குள் கைச்சுழட்டல் மறுபடியும் வேகப்பட்டது.

கம்மாயில் தண்ணீர் மேடேறி கெத்கெத்தென்று கிடந்தது. மேட்டுத்தரையில் சம்பும் நீர்க்கோரையும் நெரிசலாக வளர்ந்த பசுமை. மெட்டான இடங்களில் கொக்குகள் அடம்பிடித்து ஒத்தைக்காலில் நின்றுகொண்டிருந்தன. ஓடைக்கரைப் பனையில் நிற்கும் மீன்கொத்தி அடிக்கொரு தடவை எறிந்த பந்தாக நீர்மட்டத்தில் விழுந்து உயரப்போய் உட்கார்ந்து கொண்டது.