Tag Archives: Ilaiyaraja

அறுபது ஆண்டுகள் பாடிய நதி – என்றும் ஒலிக்கும் தாய்மொழி

எஸ். ஜானகியை எனக்கு எப்படித் தெரியும்?
விவித்பாரதியில் “கண்ணா நீ எங்கே? வா வா நீ இங்கே!” வழியாக மிமிக்ரி கலைஞர் மாதிரி என அறிமுகமானார்.

ஆனால், அதற்கு முன்னேலேயே தெற்கு மாட வீதி வன்னியர் மண்டபத்தில் அமர்க்களமாய் “மச்சானப் பார்த்தீங்களா!” பாடினவர் என்றறியேன்.
இந்தக் கதையை அம்மாவிடம் சொல்ல, அவர் கொஞ்சும் சலங்கை “சிங்கார வேலனே தேவா”விற்கு அழைத்துச் சென்றார்.
அக்காவோ அவருக்குப் பிடித்த, நெஞ்சத்தைக் கிள்ளாதே, “உறவெனும் புதிய வானில்” மூழ்கச் செய்தார்.

அம்மாவிற்கு குங்குமம் படத்தின் காட்சியமைப்பான “சின்னஞ்சிறிய வண்ணப் பறவை” பிடிக்கும். அதில் சாரதா பதைபதைப்பார். அந்தக் குரலும் ஜானகி.
எனக்கு ஸ்ரீதேவி. “செந்தூரப் பூவே” முதல் தர்மயுத்தம் “ஆகாய கங்கை பூந்தேன் மலர்” என நடிகை மட்டுமே தெரிவார். எத்தனை ஆலாபனை! என்ன ஹம்மிங்!
அக்கா நிச்சயமாய் “காற்றுக்கென்ன வேலி” சொல்லி சுஜாதாவின் பாய்ச்சல் கலந்த துள்ளல் குரலை உணர்த்தியிருப்பார்.
பாரதியார், “கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்” சொல்வார்.

குரலை வைத்து ஆளை எடை போடக் கூடாது.
அன்றில் இருந்து எஸ்.பி.பி.யை ‘பொம்பள ஜானகி’ என்றழைக்க ஆரம்பித்தேன்.
அவருக்கு “கடவுள் அமைத்து வைத்த மேடை” என்றால், ஜானகிக்கு “சிப்பியிருக்குது முத்துமிருக்குது! திறந்து பார்க்க நேரமில்லடி ராசாத்தி!” கதை.

வேலையில் ஒன்றிப் போய் ஊறிக் கிடக்கும் ப்ளேலிஸ்ட் பட்டியலில் அவர் நிரந்தர முதல்வி:
– உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் (அவளுக்கென ஒரு மனம்)
– சொல்லத்தான் நினைக்கிறேன்
– தேன் சிந்துதே வானம் (பொண்ணுக்குத் தங்க மனசு)
– அந்தப்புரத்தில் ஒரு மகராஜன் (தீபம்)
– ஒரு வானவில் போலே (காற்றினிலே வரும் கீதம்)
– அழகிய கண்ணே (உதிரிப்பூக்கள்)
– காற்றில் எந்தன் கீதம் (ஜானி)
– பொன்வானம் பன்னீர் தூவுது (இன்று நீ நாளை நான்)

மேலே சொன்னதெல்லாம் “தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி” என்றால் அடுத்து வருவது “குயிலே கவிக்குயிலே” என நினைவேக்க நனவோடை:
* அடி ஆத்தாடி (கடலோரக் கவிதைகள்)
* நல்ல நேரம் நாளும் யோகம் (ஜெயமாலினி!)
* நாதம் என் ஜீவனே (காதல் ஓவியம்)
* புத்தம் புது காலை (அலைகள் ஓய்வதில்லை)
* வெட்டி வேரு வாசம் (முதல் மரியாதை)
* தூங்காத விழிகள் ரெண்டு (அக்னி நட்சட்திரம்)
* இந்த மல்லிக மனச (டி ராஜேந்தர்)

அடுத்த தலைமுறையையும் அவர் விடவில்லை!
– சுந்தரி கண்ணால் ஒரு சேதி
– கண்மணி அன்போட காதலன்
– தென்றல் வந்து தீண்டும் போது
– மார்கழித் திங்கள் அல்லவா

மனம் அலைபாயும் போது “தூரத்தில் நான் கண்ட உன் முகம்” என நிழல்கள் ஓடும்.
சாந்தோம் பள்ளியில் ஒலித்த ஒரே சினிமாப் பாடல் “மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்!”.
அதைக் கேட்டு மதம் மாறலாம் என்ற எண்ணம் எழுமளவு மெய்யுருக்கம்.
அதன் பின் “அலைகள் ஒய்வதில்லை” படத்தைப் பார்த்து முடிவை மாற்றி விட்டேன்.

நடுவே எம்.பி3 யுகம். அப்பொழுது எஸ் ஜானகி ஹிட்ஸ் எனப் போட்டு ~170 சொச்சம் பாடல் சிடி கிடைத்தது.
96 போன்ற படங்களில் அவருக்கு மரியாதை செய்தபோது ஜானு என்னும் பெயர் சந்தோஷம் தந்தது.

பக்திப் பாடலோ… பஜனோ… கஜலோ!

உங்களுக்கு என்ன ஜானகி நினைவு?
எஸ்.ஜே. என்றால் எந்தப் பாடல்?

பெயர்த்திரிசொல்

சாட்ஜிபிடி இடம் சில கேள்விகள் எழுப்பினேன்:

1. சினிமாவில் எவ்வாறு செவ்வியல் இசை இடம் பிடிக்கிறது?
அருமையான பதில் வந்தது. கூடவே…
அது பதில் கேள்வி போட்டு தொக்கி நின்றது:

உங்களுக்குப் பிடித்த படத்தின் பின்னணி இசை, எவ்வாறு செவ்வியல் தாக்கத்துக்கு உள்பட்டது?

2. புகழ் பெற்ற ஹாலிவுட் படங்களையும் அதில் வரும் பாரம்பரிய இசையையும் சொல்லுக:
மீண்டும் தகவல்களும் துல்லியமும் கொண்ட விடை.
அதன் கேள்வி:

மீளொலி (Leitmotifs) எவ்வாறு திரைப்படங்களில் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரியுமா?

3. இல்லை. சொல்லேன்…
சொன்னது. என்னிடம் சற்றே கடுப்பு எட்டிப் பார்க்கிறது.
அதன் மறுவினா:

எளிமையியின் உச்சம் (மினிமலிசம்) எவ்வாறு கதாமாந்தர்களோடும் காட்சியோடும் ஒன்ற வைக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறீரா?

பிரமிக்க வைக்கும் பிரவாகம்! அசரடிக்கும் அறியாவினாக்கள். எனக்கு ‘கற்றது விரலளவு’ என்று உணரும் தருணம். சாட்ஜிபிடி-யை பார்த்து நகையாட வைத்தது…
அது வரை ஆங்கிலம். இனி… கேட்டேன் பார் கேள்வியை – தமிழில்.

4. எனக்கு ராஜாவின் இசையில் தனித்துவம் தெரியும். அவரின் ராஜ்ஜியத்தில் சக்திவாய்ந்த அணுகுமுறை சாத்தியம். அதற்கு உதாரணங்கள் தர வேண்டுகிறேன்

ரொம்ப நேரம் யோசித்தது:

“மூன்றாம் பிறை” படத்தில் “வாழ்வே மாயம்” பாடல் இதற்கு ஒரு உதாரணம்.

அஞ்சனக்காரன்

விஜய்காந்த்தை முதன் முதலில் பார்த்தது விவித் பாரதியில். இளையராஜா என்று நினைத்த ‘உள்ளம் எல்லாம் தள்ளாடுதே’ பாடலில். இப்பொழுது பார்த்தால் சலீல் சௌத்ரி!

அசல் ரஜினி இருக்கும்போது இன்னொரு புரட்சியாளரும் ஏழைப் பங்காளரும் எனக்கெதற்கு என்று அவரின் ‘நூறாவது நாள்’ கூட தள்ளிப் போட்டு வந்த எனக்கு, தீபாவளி வந்தது. கூடவே, ‘வைதேகி காத்திருந்தாள்’ படமும் வந்தது.

ராத்திரி ஆனால் பாட்டு பாடுவதை நிறுத்திவிட்டு ரேவதியை கல்யாணம் செய்வானா!? அதை விட்டுவிட்டு வெறுமனே ‘ராசாத்தி… ஒன்ன காணாத நெஞ்சு’னு எவராவது புலம்புவானா? கதாபாத்திரம் நம்பமுடியவில்லை. எனினும், தமிழ் சினிமா. திகிலடையவோ அதிர்ச்சியடையவோ ஏதாவது செய்வார்கள். பத்து வருடத்திற்கு மேல் குடித்தனம் நடத்தி குழந்தைகள் பெற்ற மனைவியை எரியூட்டி விட்டு வரும்போதே, ‘எந்த வீட்டில் எவ வயசுக்கு வந்திருக்கா?’ என்பதை நேரடியாகக் கேட்டும் பார்த்தும் வளர்ந்த எனக்கு இயக்குநர் ஆர். சுந்தர்ராஜனும் மோசமான படைப்பாளி பட்டியலில் இணைந்து கொண்டார்.

அதன் பின்பும் ‘ஒலியும் ஒளியும்’ பாடல்கள் மூலமே விஜய்காந்த் ஈர்த்தார்.

ராதா படங்களைத் தேடித் தேடி பார்த்தபோது, ‘அம்மன் கோவில் கிழக்காலே’ அகப்பட்டது.
’முத்துமணி மாலை… என்னத் தொட்டுத் தொட்டு தாலாட்ட..’விற்காக ”சின்ன கவுண்டர்” கண்ணில் விழுந்தது.
அன்றைய (இன்றைக்கும் தான்) தேவதையான பானுப்ரியாவிற்காக ‘சத்ரியன்’ + ‘பரதன்’. இதில், ‘புன்னகையில் மின்சாரம்’ பாடலில் சுவர்களே தெரியாதவாறும் வெறும் வண்ணம் மட்டும் பின்னணியில் வருமாறு உழைத்ததாக சாந்தோம் மாணவர், அந்த நாள் நடன இயக்குநர் பிரபு தேவா சொல்ல, பாட்டின் சிறப்பு சற்றே புலப்பட்டது.
’சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு’ அர்த்தம் புரிந்ததா என்று பொறிப்புரை கொடுத்த விடலை பள்ளித் தோழர்களுக்காக ”பூந்தோட்ட காவல்காரன்”.
’மயங்கினேன்… சொல்லத் தயங்கினேன்!’ குறித்து தமிழ்த்திரை சுப்புடு சுரேஷ் கண்ணன் முதல் மரவண்டு வரை பலரும் மரத்தடி முதல் முகநூல் வரை எழுதி விட்டார்கள்.

விஜய்காந்த் நடித்த முதல் படம் – ‘ஊமை விழிகள்’.
விஜய்காந்த் கொடுத்த முதல் ஏ+பி+சி செண்டர் ஹிட் படம் – ‘அம்மன் கோயில் கிழக்காலே’; அவரின் பிற படங்களில் இதே கதாபாத்திரத்தை ஷோபனா, ரேகா என வாந்தியெடுத்தார்,

பிற்காலத்தில், ‘வல்லரசு’, ‘சிம்மாசனம்’, ‘பேரரசு’, ‘தர்மபுரி’ போன்ற படங்கள் இவரை தெலுங்கு மண்ணில் கொடி கட்டி — தம்பி பாலகிருஷ்ணாவுக்கு டஃப் கொடுக்க வேண்டியவர் தமிழ் மண்ணில் பிறந்த நம்மை இன்னும் கொடுமை செய்கிறாரே என மிரள வைத்தது.

எனினும், இன்றும் என் மனதில் நிற்பது, “தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை! மன்னிப்பு!!”.

விஜயகாந்த் உருவாக்கிய நம்பிக்கைகள் எனக்கு நிஜம்.
’இளைய தளபதி” ஆக விஜய் போன்றோர் உருவாக துணை நின்றது நிஜம்.
சினிமா கல்லூரியில் படித்து விட்டு, வெளியே வந்த புதியவர்களுக்கு துணை நின்றது நிஜம்.
யேசுவோ, மாரியம்மனோ, ஓரங்க நாடகத்தை ஒளியோவியராக்கிய விசுவோ எவருக்கும் கரிசனம் பார்க்காமல் நடித்து குவித்தது நிஜம்.
நடிகர் சங்கமோ, கேப்டன் தொலைக்காட்சியோ, சொந்த கட்சியோ நடத்தி, ஜெயித்தது நிஜம். (இது டி ஆர். ராஜேந்தர், பாக்யராஜ் போன்ற ஆளுமைகள் வழுக்கிய இடம்).
அவருக்கு என் நெஞ்சில் ஒரு பெக் அடிக்க நினைக்கும் போது, ‘ஒரு மூணு முடிச்சால முட்டாளா போனேன்… கேளு! கேளு!! தம்பீ!!!’ நினைவிற்கு வருவதோ, ’சாமிகளே… சாமிகளே… சொந்தக் கதக் கேளுங்க!!’ என தன் பாட்டுக்கு பாடும்போது என்னுள் ஒளிந்திருக்கும் அந்தக் கருப்புத் தங்கம் வெளிவருவதும் நிஜம்.

அஞ்சலிகள்!

Classical Carnatic Ragas in Tamil Film Music

யூ டியுப் தளத்தின் சிறப்பம்சமே, “உனக்கு இது பிடிக்கலாம்!” என்று தெரியாத எவரோ ஒருவர் – எனக்குத் தெரிந்த தலைப்பில் உரையாடுவதை –> உங்களின் ஓடையில் காண்பிப்பது.

அப்படி தென்பட்டவர் தமிழ்ச்செல்வன் பாரதி.

குரங்கிற்கு எப்படி வாழைப்பழம் விருப்பமோ இளையராஜாவின் பாடல்கள் அப்படி எனக்குப் பிடிக்கும். தமிழ்செல்வன் பாரதி.மாதிரி கர்னாடக சங்கீதம் அறிந்தவர்கள் அதை வேறொரு விதத்தில் ரசிக்கக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

அதாவது ஓவியங்களை எண்ணெய் ஓவியம், வண்ணக்கோல், செயற்கை வண்ணக் கூழ்மங்கள், நீர்வர்ணம், மை ஓவியம், பூச்சு ஓவியம் என்றெல்லாம் வகைப்படுத்துவது போல், இசையையும் ஒழுங்காகக் கற்றுக் கொண்டிருந்தால் இதை இந்த முறையில் தொகுத்திருக்கிறார்கள் என்று அறியலாம். ஏன் அந்த வடிவத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்? எப்படி அந்தப் பூச்சு இந்தத் தருணத்திற்கு பொருந்துகிறது? இதுவரை எவரும் செய்யாத புதுமையை எவ்வாறு புகுத்தியிருக்கிறார்? ஏன் வெறுமனே சாஸ்திரீய முறைப்படி பாடுவது அலுப்பையும் ; அதையே ராஜாவின் எண்ணத்தில் உருவாகும் பாடல் — பிரவாகத்தையும் கொடுக்கிறது?

ஃபாரம் ஹப் (The Forum Hub) என்னும் தளத்தில் பேசியது… தமிழ் ஃபிலிம் மியூசிக், டி.எஃப்.எம் பேஜ் (இப்பொழுது newtfmpage) என்றெல்லாம் கதைத்தது… அங்கே நாற்பது பக்கங்கள் இருக்கும். ஒவ்வொரு பக்கத்திலும் நூறு பதில்களும், பதிவுகளும் இருக்கும். இடையிடையே சில வைரங்கள் ஜ்வலிக்கும். தேடுவது கடினம். சட்டென்று புரியாத சதுஸ்ருதி தைவதம், அந்தர காந்தாரம், பிரமாண ஏகஸ்ருதி என்றெல்லாம் மிரட்டும். சல்லடை போட்டு சலித்து, அந்தப் பகிர்வுகளைக் கோர்வையாகத் தொகுத்து, ஒரேயொரு சினிமாப் பாடலையோ, ஒரு ராகத்தையோ, ஒரு விஷயத்தையோ பற்றி முழுமையாகக் கதை போல் சொல்ல எவராவது கிடைப்பாரா என்று ஏங்க வைத்தாலும் சோளப்பொரி கிடைத்தது.

திரள் சந்தைக்கான புகழ் பெற்ற முயற்சியாக சிக்கில் குருச்சரண் அதை பரவலாகப் பதிவாக்கி எல்லோருக்கும் கொண்டு சென்றார். அவரைப் போல் பலரும் ஏற்கனவே இது மாதிரி நிறைய முயற்சிகளும் எழுத்துகளும் பகிர்வுகளும் தந்திருந்தாலும், எல்லோரும் அறிந்த நபர் – எல்லோருக்குமான பதிவாக ஆக்கியதில் சிக்கில் குருச்சரணுக்கு முக்கிய இடம் உண்டு. ஜனரஞ்சகமாக இருக்கும். சுவாரசியமாக இருக்கும். நன்றாக எடிட் செய்து தொகுக்கப்பட்டிருக்கும். ரொம்ப தொழில்நுட்ப சங்கதிகள் சொல்லி அலுப்பு தட்டாமல், அதே சமயம் டெக்னிகலாக வேண்டும் என்பவர்களுக்கு நிறைய இடம் இருக்கும்.

அவர் வழியில் தமிழ்ச்செல்வன் பாரதி முக்கியமானவர். சிக்கிலார் போல் மேளகர்த்தா ராகம் என்று வகைப்பாடுகளைச் சொன்னாலும், மெட்டுக்கு ஏற்ற வார்த்தைகள், அந்தப் பாடலின் கூட்டிசையில் வீணையும் வயலினும் எவ்வாறு முக்கியமாகிறது என்பதில் மேற்கத்திய சங்கீத நுட்பங்கள், என்று உணர்த்துகிறார். நிரோஷா தாங்க எனக்குத் தெரியும் என்பவருக்கு சரிகமபதநி என்பதில் கடைசியில் வரும் நி என்னும் நிஷாதம் எவ்வாறு இசைஞானியின் பாடல்களில் கையாளப்பட்டிருக்கிறது என்கிறார். எல்லாவற்றையும் காலை நடை, பக்கத்தில் உறங்கும் செல்லப்பிராணிகள் என வித்தியாசமான, நேரடியான, பாசங்கற்ற விதத்தில் தயார் செய்து பரிமாறுகிறார்.

இந்த மாதிரி விஷயமெல்லாம் கேட்க குருகுலத்தில் காலந்தோறும் பணிவிடை செய்யவேண்டும். குருவிற்கு எப்போது உத்வேகம் வருகிறது என்று காத்திருக்க வேண்டும். ஒட்டுக் கேட்க வேண்டும். கேட்டதை இன்னொருவரிடம் சொன்னால், அந்த சீடன் நம்மை விட பிராபல்யம் ஆகி விடுவான் என்று விரித்துரைத்து, சந்தேக நிவர்த்தி செய்து, தெளிவாக்கிக் கொள்ளக் கூட முடியாத சூழலில் இருந்து சுதந்திரமாக எல்லோருக்கும் எல்லாவற்றையும் அள்ளித் தரும் அளவில்லா தகவல் கிடைக்கும் காலத்தில் வாழும் நாம் – கொடுத்து வைத்தவர்கள்.

அதற்கு முன்பே இவற்றையெல்லாம் தமிழிசையில் பாமரனுக்கும் கொண்டு சென்ற பாவலர் ராஜா ஆளுமையைப் புரிந்தவர்கள் பாக்கியசாலிகள்.

மணிரத்னம் + கமல் + பாலகுமாரன்: “நாயகன்”

ஏதோவொரு காரணத்தால் “நாயகன்” படத்தை மீண்டும் பார்த்தேன். சில குறிப்புகள்

  1. பிசி ஸ்ரீராம்: விடி ஸ்டேஷனில் எங்கோ துவங்கும் கேமிரா அந்தச் சின்ன பையனில் போய் நிற்கும் துவக்கத்தில் இன்றும் பிரமிக்கிறேன்.
  2. தீம் மியுசிக்: படம் நெடுக குறிப்பிட்ட காட்சிகளுக்கு ஒரே பின்னணி இசை. அதனாலேயே எல்லாத் தப்பும் கண்ணை மறைக்கிறது
  3. கார்த்திகா: படத்தின் பலமே, பாத்திரத்திற்கு ஏற்ற பொருத்தமான நடிகர் தேர்வு. அதுவும் இவர்
  4. நாசர்: எம்புட்டு ஒல்லியாக, இளமையாக இருக்கிறார்!
  5. அஞ்சலிக்கு முன்பே இத்தனை குழந்தைகளை வைத்து படம் எடுக்கிறார் மணி.
  6. நம்மாளு ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி கூட இருக்கிறாரே!
  7. விஜயனை உங்களுக்குத் தெரியும். ஆர்.ஜே. ரத்னாகரை இன்னொரு விஷயத்திற்காக பார்த்திருக்கிறேன். இவரைப் போன்ற அதிகாரிகளையும் மேலாளர்களையும் எப்படித்தான் ஒரே படத்தில் நடிக்க வைத்தாரோ!
  8. ஏ,ஆர்.எஸ்., ஜனகராஜ் என்று அதிகம் நடித்துவிடும் அபார நடிகர்கள் இருந்தாலும் எல்லோரையும் கட்டுக்குள் வைத்திருந்தவர், கமலிடம் கோட்டை விட்டார்.
  9. படத்தின் வன்முறையை இப்போது பார்த்தால் கூட அதிர்கிறது.
  10. கள்ளக் கடத்தலையும் பாலியல் தொழிலையும் இவ்வளவு கவர்ச்சிகரமாகக் காட்ட முடியுமா?

இளையராஜா கச்சேரிகள்: விடாயாற்றி உற்சவம்

இளையராஜாவை இரண்டு மூன்று தடவை பார்த்திருப்பேன். கங்கை அமரன் போல் எல்லா வருடமும் ராஜா வந்ததில்லை.

கபாலீஸ்வரர் கோவில் கச்சேரிகள் மூன்று வகைப்பட்டவை. ஐந்து மணிக்கு சொற்பொழிவு + உபன்யாசம். கிருபானந்த வாரியார்கள், கீரன், திருத்தணி சுவாமிநாதன் என்று பெரியோர் பாடலுடன் உரை கொடுப்பார்கள். ஏழு மணிக்கு மெல்லிசை + பக்தி பாடல்கள். ஐயப்பன் வீரமணி, சூலமங்கலம் சகோதரிகள் போன்றோர் குரல் கொடுப்பார்கள். அதன் பிறகு இரவுக் காட்சிதான் நான் பார்த்தது.

எம்.எஸ். விஸ்வநாதனும் உண்டு. எட்டு மணி கச்சேரியை அவர் கறாராக ஒன்பது மணிக்கெல்லாம் தொடங்கிவிடுவார். பாவலர் பிரதர்ஸுக்கு கெத்து ரொம்ப ஜாஸ்தி. நிகழ்ச்சியைத் துவங்குவதற்கு பத்து மணி கூட ஆகிவிடும். பின்னிரவு ஒரு மணி வரை பேச்சும் அரட்டையும் நக்கலும் கலந்து பாடல் மிக்ஸ்களும் வந்து கொண்டேயிருக்கும்.

விநாயகர் மட்டும்தான் கச்சேரி கேட்பது போல் சன்னிதியை திறந்து வைத்திருப்பார். மற்ற தெய்வங்கள் எல்லாம் நகை நட்டுடன் பத்திரமாக உறங்க சென்றுவிடும்.

ஆர்க்கெஸ்ட்ரா எல்லாம் பிரும்மாண்டமாக இருந்ததில்லை. அந்தப் பக்கம் எட்டடி; இந்தப் பக்கம் பத்தடி என்று இருக்கும் குட்டி மேடைக்குள் கோரஸ், டிரம்ஸ், ஹம்மிங்ஸ் எல்லாம் அடைக்கணும். ஒவ்வொரு வருடமும் சுவாரசியமாக செய்வார்கள். கிளாசிக்ஸ் முதற்கொண்டு அப்பொழுது வந்த புதுப்பாடல் வரை எல்லாமும் கொடுப்பார்கள்.

கோவில் என்பதற்காக சமரசம் செய்து கொள்ளாமல், ‘வாடீ என் கப்பங்கிழங்கே’ என்று கூத்துப்பாடலும் வாழ்வே மாயத்தின் ‘தேவி’ கிண்டல்களும் கிட்டத்தட்ட கற்பகாம்பாள்களைக் குறி வைத்தே அரங்கேறும்.

ஆனால், அந்தக் காலத்தில் இவ்வளவு கற்பழிப்புகள் ஊடகங்களில் பாடல் பெறவில்லை. தனிமனித அக்னிப் பரீட்சையாகவே முடங்கிவிட்டது.

ஒலியும் ஒளியும்

நாற்பது வயதை எட்டிப்பார்ப்பவரின் ஞாபகத்தின் படி எந்தப் பாடல்கள் கொசுவர்த்தியை மீட்டும்? சிதறலாய் ஒரு பத்து

1. ராக்கம்மா கையத் தட்டு: தளபதி

மணி ரத்னம் இரண்டாம் பட்சம்; ரஜினி மூன்றாம் பட்சம்; இளையராஜா #1

2. டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா: இந்தியன்

ரஜினிகாந்த் முதலாம் இடத்தில் வந்தால், கமல்ஹாசன் கூடவே வரவேண்டுமே!

3. மலர்களே மலர்களே: லவ் பேர்ட்ஸ்

மாற்றிய சட்டை அனைத்தும் பிரபு தேவாவிற்கா அல்லது அடுத்த படத்திற்கா என்னும் உண்மை தெரிஞ்சாகணும்.

4. ராஜ ராஜ சோழன் நான்: ரெட்டை வால் குருவி

அர்ச்சனாவின் ரவிக் புடைவையின் அன்னியோன்யமோ; ராதிகாவின் ஆரத்தழுவலோ!

5. மன்றம் வந்த தென்றலுக்கு: மௌன ராகம்

நிச்சயிக்கப்பட்ட திருமணங்களின் வண்டவாளங்களை இரண்டு சரணங்களில் சுருக்கும் அழகு.

6. இந்த வாழ்வே மாயம்: வாழ்வே மாயம்

கமலுக்கென்று நிறைய பாடல்கள் இருக்கின்றன; ‘அந்தி மழை’, ‘உனக்கென்ன மேலே நின்றாய்’, அண்ணாத்தே ஆடுறார்…

7. தோல்வி நிலையென நினைத்தால்: ஜெய்சங்கர்

பாடலுக்கேற்ற காட்சியமைப்பு; கடவுளை தரிசித்தது போன்ற உத்வேக எழுப்புதல்.

8. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்: திருடா திருடா

வைரமுத்து மாயாஜாலம்; ரெஹ்மானின் இளமை; திரைப்படத்தின் பசுமை

9. தெய்வம் தந்த வீடு, வீதி இருக்கு: அவள் ஒரு தொடர்கதை

கண்ணதாசன் அருமை தெரியாத காலம்; பாலச்சந்தர் குன்சாக புரிந்த நேரம்; பெண்ணுரிமை புரிந்ததாக மயங்கிய சமயம்.

10. டேக் இட் ஈசி ஊர்வசி: காதலன்

சென்னையைப் பார்த்து இப்படி ஜொள்ளு விட வைக்கமுடியுமா! – சாங்கர்

கொசுறு: கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்: ஒரு தலை ராகம்

நியாயமாக ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’வோ, ’விழிகள் மேடையாம்; இமைகள் திரைகளாம்’ கிளிஞ்சல்களோ பிடித்திருக்க வேண்டும்; ஆனால், கல்லூரி காதல் என்றால் டி ராஜேந்தர் முதல் படம்.

இசை – ராஜத்துவம்

முந்தைய ட்வீட்ஸ்: விச்வரூபம் – ஆஸ்கருத்துவம்

http://twitter.com/#!/snapjudge/status/105723512320299008
http://twitter.com/#!/snapjudge/status/108609994697613312
http://twitter.com/#!/snapjudge/status/134671573792722945
http://twitter.com/#!/snapjudge/status/116582204699721728
http://twitter.com/#!/snapjudge/status/76704664632033280
http://twitter.com/#!/snapjudge/status/76767474774835200
http://twitter.com/#!/snapjudge/status/76767888136077312
http://twitter.com/#!/snapjudge/status/21315335340687360
http://twitter.com/#!/snapjudge/status/26338528015159296
http://twitter.com/#!/snapjudge/status/76768136317239296

2012 Boston Events: Film Music Performance by New England Thamil Sangam for Pongal

நாள்: சனி, ஜனவரி 14
நேரம்: மதியம் 4:30
இடம்: ஆஷ்லாண்ட் உயர்நிலைப் பள்ளி

Boston Events - Thamil Pongal special: 2012 Happy New Year to USA

சலங்கை ஒலி: கமல், பஞ்சு அருணாச்சலம், கே விஸ்வநாத், இளையராஜா

தமிழ்ப்பதிவுகளில் சலங்கை ஒலி திரைப்பட விமர்சனங்கள்

திரைப்படம்:

இந்தப் படம் இன்றும் ஏன் பிடித்திருக்கிறது?

படம் முழுக்க புடைவை மட்டுமே கட்டி வரும் ஜெயப்பிரதாவில் ஆரம்பிக்கலாம். வெற்றியடைந்த ஒவ்வொரு மனிதனுக்குப் பின்னாலும் ஒருத்தி இருப்பாள். ஜெயலலிதா பின்னால் கூட சசிகலா இருக்கிறார். ராசாவிற்கு பின் கனிமொழி. ஜயப்பிரதா பிறிதொருவருடன் சென்று விட்டதால் – கமல், (படத்தில் நடன மேதை பாலு) வாழ்வில் தோல்வி அடைகிறார்.

எண்பதுகளை பிரதிபலிக்கும் படம். இன்றும் சுப்பிரமணியபுரத்தைக் கொஞ்சுகிறோம். இந்தப் படம் 83ல் வந்ததால், அந்த ஆண்டு தோட்டா தரணி சாமான் செட் கலாச்சாரங்களை முகர வைக்கிறது.

இயக்குநர் விஸ்வநாத்தின் சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் போன்ற பிற படங்களை மீண்டும் பார்த்தால் கவரலாம். ஆனால், இதில் சின்ன விஷயங்களில் நகாசு செய்திருக்கிறார். விமர்சனங்களைப் படபடப்பாக நகம் வெட்டியுடன் பார்க்கும் ஷைலஜா, பாலுவின் எழுத்தைப் பார்த்தவுடன் கடிக்க ஆரம்பிப்பது அந்த மாதிரி ஒரு ரகம். மாதவியின் புருஷன் (பாஸ்கர் – லஷ்மியின் முதல் கணவர்?) காபி கொடுக்கும்போது தர்மசங்கடமாய் நிலம் பார்க்கும் தருணம் இன்னொரு சாம்பிள். சரத்பாபுவின் பாடல்வரி, கமலின் இசை + நடன கோர்ப்பு, ஜெயப்பிரதாவின் ஒருங்கிணைப்பு என சொல்ல நினைக்கும்போது கையை வாய்க்கு கொண்டுபோகும் தற்செயலாக மற்றொரு இயல்புத்தனம்.

கதாநாயகியைப் பற்றி எழுதாவிட்டால் அடுக்காது. (ஏற்கனவே எழுதிட்டேனோ?) தெலுங்குப் படங்களில் ஹீரோயின்களை எப்பொழுதுமே அழகாக்கி இருக்கிறார்கள். காதில் ஜிமிக்கி, மைக்கேல் ஃபெல்ப்ஸ் தங்கம் வெல்ல நீஞ்சுவது போல் அகல விரியும் ஐடெக்ஸ் மை போட்ட இமை, கேசவர்த்தினி கூந்தல், அந்தக் கறுப்பை நிறைத்து டிவியில் இருந்தும் வாசம் வரவைக்கும் மல்லிகைப்பூ, காதின் முன் எட்டிப் பார்க்கும் இரண்டே இரண்டு சுருள்முடி, தரையைப் பெருக்குமோ என வியக்க வைக்கும் ஆளுமை தரும் டிசைனர் சாரியை மிஞ்சும் பாந்தம் – அமர் சிங் சும்மாவா கவுந்தார் என்று ஆச்சரியப்பட வைக்காத நிவாஸின் கேமிரா.

டப்பிங் மாந்தர்களின் பெயர்களைப் போடாதது பெருங்குறை. மூன்றாம் கட்ட நடிகர் எல்லோருக்கும் மைக் மோகனின் பினாமி சுரேந்தர் குரல் கொடுத்திருக்கிறார். ஜெயப்பிரதாவிற்கு? ஸ்ரீதேவி மாதிரி படுது.

தமிழ்ப்படம் என உணரவைக்கும் பஞ்சு அருணாச்சலம் வசனங்கள்.

  • ‘ஆலோசனைய வச்சுகிட்டு என்ன செய்யறது? அத அப்படியே செயல்படுத்த வாய்ப்பு வேணும்!’
  • ‘பைத்தியத்துக்கும் வெறிக்கும் அளவு இருக்கணும்டா’
  • ‘அந்தப் பையனும் நீங்களும் கேமிராவோட சர்க்கஸ் செஞ்சப்ப எடுத்தேன்’.
  • ‘நாட்டியம் கத்துக்கவே இவனுக்கு நேரம் சரியாப் போயிடும். நாம இங்கே சமையற்கட்டிலயும், கல்யாண சமையல்லயும் எண்ணெய்ப் புகையிலயும் நம்ம காலம் முடிஞ்சுடும்.  இன்னொரு ஜென்மம் எடுத்து, அவன் நாட்டியத்துல கரை கண்டு, அவன் ஆடுவான்… நாம பார்க்கலாம்.’
  • ‘இந்த உறவுக்காரங்கள்னாலே இதான் தொந்தரவு. அடுத்தவங்க கஷ்டத்தப் பத்தி கவலப்பட மாட்டாங்க. எப்ப குத்தம் சொல்லலாம்னு காத்திருப்பாங்க!’

இவர்களெல்லாம் உபதெய்வங்கள். இன்னும் மூணு பேர் இருக்கிறார்கள். அவர்கள் மும்மூர்த்திகள்.

1. இளையராஜா

கண்ணை மூடிக் கொண்டு ஒரு தடவை படம் பாருங்களேன்.

2. கமலஹாசன்

நண்பனைப் பாடி அழைக்கிறார். உக்கிரமாக நடனம் ஆடுகிறார். நாயகன் மாதிரி அழத் தெரியாமல் அழாமல், கே விச்வநாத் சொன்ன பேச்சைக் கேட்டு அடக்கி வாசித்திருக்கிறார்.

3. எஸ் பி ஷைலஜா

அண்ணன் பாடினாலும், இவங்கதானே sole வில்லி?

ஆனாக்க… எல்லாத்துக்கும் கில்லாடி திரைக்கதையாளர் விஸ்வநாத். ஒவ்வொரு சீனும் உங்களுக்கு நினைவிருக்கும்.

  • இது ரகு (சரத்பாபு) & பாலு (கமல்) நட்புக்கான கற்பைப் பற்றிய படமா?
  • When Harry met Sallyஆக ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆன உறவை ஆராய்கிற படமா?
  • கணவனை இழந்த தாய்க்கும் பதின்ம வயதுக் குழப்பத்தில் இருக்கும் மகளுக்கும் இடையேயான சிக்கல்களைப் பேசுகிற படமா?
  • அம்மாவை அண்ணியிடமும் காதலியிடமும் சிஷ்யையிடமும் தேடுபவனைப் பற்றிய படமா?
  • நடனத்தையும் ஆடுகலைஞர்களின் வாழ்வையும் அலசும் படமா?
  • பாலுவின் சமரசமற்ற ஐடியலிசத்தையும் மாதவியின் வாழ்க்கை ரியலிசத்திற்குமான போராட்டத்தை சொல்லும் படமா?
  • தலையெழுத்து விதிக்கும் தன்முனைப்பு செயல்பாட்டிற்கும் இடையே இருக்கும் தத்துவ சிக்கலா?