Tag Archives: Kodambakkam

மந்திரவாதியும் மணி ரத்தினமும் – பொன்னியின் செல்வன் இரண்டு

மணி ரத்னம் ஏன் பொன்னியின் செல்வன் எடுக்கிறார்?

ஏற்கனவே பத்து காரணங்களைப் பார்த்து அலுத்து இருப்பீர்கள்.

இருந்தாலும் #PS2 வந்த பிறகு 11வது காரணம்:

டைரக்டர் ஷங்கர் தியாகராஜன் மகன் நடிகர் பிரசாந்த்தை வைத்து ஜீன்ஸ் இயக்குகிறார்.
அது மதுராந்தாகன்.
தகுதி இல்லாதவர்.
பணத்தினால் பதவியை அடைபவர்.
இதுவே மாந்திரீக யதார்த்தம்.

டைரக்டர் மணி ரத்தினம் புகழ்பெற்ற விஜய் சேதுபதியையும் பணம் படைத்த அருண் விஜய்யையும் வைத்து செக்கச் சிவந்த வானம் இயக்குகிறார்.
இது பொன்னியின் செல்வன் – அருண் மொழி – ராஜராஜன்.
இது பணம் படைத்த தயாரிப்பாளர் மகன் ‘ஜெயம்’ ரவி.
இது குறிப்பால் பொருளுணுர்த்துவது.

இத்தனை காலமாய் நான் ஏன் இதை புரிந்து கொண்டு உணரவில்லை… என் போதாமைதான்!

இசையமைப்பாளர் ஏ ஆர் ரெஹ்மான் தன் மச்சான் ரகுமானுக்காக “சங்கமம்” கொடுக்கிறார்.
உறவினரால் வாய்ப்பளிக்கப் படுகிறார் ஒருவர்.
அது மதுராந்தாகன்.
தகுதி இல்லாதவர்.
இதுவே ஒன்றைக் கொண்டு இன்னொன்றைச் சொல்வது.
அதற்கு பெயர் மாந்திரிகம்; எதார்த்தம்.

இது போன்ற சமரசங்களை மேஜிக்கல் ரியலிசமாகக் கொடுப்பதுதான் #பொசெ2 திரைப்படம்.

கொலைவெறியில் உண்மையான ஆதிக்க அரசர் அரக்கராக – ஆதித்த கரிகாலன் உதாரண இயக்குநர்.
அவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா போன்றவர்.
அவரிடம் கொடுத்தால் ‘ஓரம் போ’, அல்லது ‘மாடர்ன் லவ்: சென்னை’ போன்ற அசல் பதார்த்தம் வரும்.

உண்மையான சூத்திரதாரி என்பவர் திறைமறைவில் எக்சியூடிவ் ப்ரொடியூசர் ஆக இயங்குபவர்.
அவர் அசல் வாழ்வில் தோல்வியுற்றவர்.
அவர் தனியாக படையெடுத்து போரிட்டால் வெற்றி பெற மாட்டார்.
அந்த ஆள் தன் சொந்தக் காலில் சுய முயற்சியாக படம் எடுத்து படுதோல்வி கண்டிருப்பார்,
அது ‘சிவா’ – “ஓகே காதல் கண்மணி” படத்தின் அண்ணனாக வருவாரே… அவர்.
பொ.செ. கதையில் வல்லவரையன் வந்தியத் தேவன்.

நந்தினி என்பார் ‘ஐஷ்வர்யா ராய்’ என்பாரே தான்.
அவர் அசல் நடிகையாக மதிக்கப் பெறாதவர்.
ஒரு ராதிகா ஆப்தே-விற்கோ. கொன்கொனா சென்-னிற்கோ… அவ்வளவு ஏன் தற்போதைய என்னுடைய நாயகி ‘தேவி’ தபூ-விற்கோ கிடைக்கும் அந்தஸ்து கிடைக்கப் பெறாதவர்.
அதே போல் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அரசியாகக் கொண்டாடப் படாதவர்.
அவரை குறித்துணர்த்தத் தான் நந்தினிக்கு அய்ஷ்வர்யா ராயே நடிக்கிறார்.

அவரின் வயதை நேரடியாக மந்தாகினியாக மேக்கப் இல்லாமல், பூச்சுகள் இல்லாமல் உலா வருகிறார்.
டிம்பிள் கபாடியாவிற்கும் கனவுக்கன்னி ஹேமமாலினிக்கும் வயதாகும்.
இருந்தாலும் இளமையாக நினைப்போம். நடிக்கிறோம்.
நாடக மேடை.
அரச சபை.
அரசி என்பவள் நடிகை
அரசன் என்பவன் தந்தையை ரவுடியாகக் கொண்டவன்.
இயக்குநர் என்பவர் ராஜகுரு.
அனிருத்த பிரும்மராயர்.
காதில் ஒதுவார்.
ஒதுவது புரிந்தத்தா?

PS1 | Snap Judgment (snapjudge.blog)

அரசகட்டளையாக பார்த்து வைக்க வேண்டிய பத்து படங்கள் என்ன?

தமிழில் ஒவ்வொரு காலகட்டத்திலும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படங்கள் உண்டு.

எழுதப்படாத விதியாக அறிவிக்கப்படாத அரசாணையாக, “அரங்கிற்கு சென்று விட்டீர்களா?” என விசாரிப்பதற்கான முகாந்திரம் கொண்ட பட்டியல் இது.

இந்தப் பட்டியலில் நுழையத்தான் #PS1 எடுத்திருக்கிறார் மணி ரத்தினம். – இது ஐந்தாவது காரணம்.

எனக்கு இவ்வாறு புகட்டப்பட்ட இந்தப் பட்டியலைப் பார்ப்பதற்கு முன் உங்களுக்கு இந்த மாதிரி விதிக்கப்பட்ட இராசநீதி என்ன படங்கள்?

(பட்டியல் எந்த வரிசையிலும் இல்லை)

  1. ஔவையார் / சந்திரலேகா
  2. சம்சாரம் அது மின்சாரம்
  3. கல்யாணப் பரிசு
  4. சிவகவி
  5. சிந்து பைரவி
  6. மனோகரா
  7. உருவங்கள் மாறலாம் / சரணம் ஐயப்பா
  8. திருவிளையாடல் / ஆதிபராசக்தி
  9. திரிசூலம் / ஊட்டி வரை உறவு
  10. பொன்னியின் செல்வன் 1

அவ்வையார் – சாமி படம் என்பதால் ஒரு சாராரும் இலக்கியப் பெருமை என்பதால் தமிழ்ப் பற்றாளர்களும் உதாரண பெண்டிர் என்பதற்காக மற்றொரு குழுவும் அதை குழந்தைகளுக்கு காண்பித்தார்கள். அந்த மாதிரி கட்டாயக் கருத்துத் திணிப்பு என்பதால் சேர்த்துக் கொண்டேன்

திருவிளையாடல் – குறை என்றில்லை. இந்தப் படம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். இந்தப் படம் உம்மாச்சி படம். இந்தப் படம் எளிமையாக (புராணங்களை) தத்துவங்களைச் சொல்கிறது. இது போன்ற வலுக்கட்டாயங்கள் கலந்த உத்தமத்தோங்களை விதந்தோந்து பீடத்தில் அமர்த்தி விட்டதால் விமர்சிக்கவும் மேற்

உங்களுக்கு வலிந்து திணிக்கப்பட்ட சினிமாக்களை, ஆறாவடு ஆக மனதில் தோன்றிய படங்களைப் பகிருங்கள்.

சூது கவ்வும் x எதிர் நீச்சல்

மூன்று படங்கள் பார்க்கக் கிடைத்தது. எக்கச்சக்கமாக எல்லோராலும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய ‘சூது கவ்வும்’ ஏமாற்றியது. ‘நாளைய இயக்குநரில்’ குறும்படம் நிறைய எடுத்திருந்ததால், முதல் பகுதி இயல்பாக அமைந்திருந்தது. இண்டர்வலோடு படத்தை முடித்து அனுப்பி இருக்கலாம். அதன் பிறகு குழப்பமும் சொதப்பலும் திணிப்புகளும் “படத்தை ஏண்டா ஃப்ரீயா போட்டோம்” என்று மனைவியைக் கேட்கவைத்தது.

காரை வேகமாக ஓட்டுவது என்பது குறித்த இலக்கை சுருக்கமான நேரத்தில் கடப்பது. ஆரம்பமும், முடிவும் ஒன்றே என்பதற்காக, அங்கேயே நின்று கொண்டிருந்துவிட்டு, வெற்றியடைந்து விட முடியாது. நம்ப இயலாத கதாபாத்திரங்கள் பிரச்சினையில்லை. நடக்க இயலாத சம்பவங்கள் பிரச்சினையில்லை. லோ பட்ஜெட் பிரச்சினையில்லை. விறிவிறுப்பு என்னும் பேரில் யு டர்ன் மட்டுமே அடித்துக் கொண்டு ஜெர்க் மட்டுமே தருகிறது இரண்டாம் பகுதி.

இதற்கு வசனத்தாலேயே கொன்ற ‘மூன்று பேர்; மூன்று காதல்’ கொஞ்சம் தேவலாம். எதிர்பார்த்த பாதையில் பயணித்து, பாடலுடன் ஊடலும் கொடுத்த ‘எதிர் நீச்சல்’ எவ்வளவோ தேவலாம். வசந்த்திற்கு விஷுவல் மொழி கைகூடாமல் போயிருக்கலாம். தனுஷ் தயாரிப்பு மசாலாவாக இருந்திருக்கலாம். சிவ கார்த்திகேயனுக்கு ஆட்டம் வராமல் இருந்திருக்கலாம். அர்ஜூனுக்கு ஜோதிகாவின் டூப் தேவையாக இருந்திருக்கலாம். ஆனாலும், இரண்டரை மணி நேரத்திற்கு அலுக்காமல் பார்வையாளனை உட்கார வைக்கும் கர்ம்சுத்தத்தைப் பாராட்டலாம்.

நலனின் அடுத்த பிராஜெக்டாவது டெமொ பிராடக்ட் போல் புறத்தே மட்டும் மினுக்காமல், prototype போல் டிரெய்லர் மட்டும் ருசிக்காமல், முழுக்க வேகணும்.

வித்தியாசமாக முயன்றிருக்கிறார். ஒரு மணி நேரத்திற்கு சரக்கு வைத்திருக்கிறார். தமிழ் சினிமா நகைச்சுவையில் இருந்து விலகிச் சென்றிருக்கிறார். எனக்கும் இதெல்லாம் பிடித்திருக்கிறது.

எனக்கு கவுதம் மேனன் படங்கள் மிகவும் பிடிக்கும். ஆனால், ”நடுநிசி நாய்”களை மீண்டும் முழுவதுமாகப் பார் என்றால் வதை கலந்த சலிப்பு எழும். பலாப் பழத்தை வெட்டி உண்பது போல் சூது கவ்வும் சில பகுதிகள் மிக நன்று; சில பகுதிகள் பலாப்பழச்சுளை புதுசு. சிம்பு தேவனின் இம்சை அரசனை நினைவுறுத்தும் பாடல் எல்லாம் கூட போனால் போகிறது, பலாக் கொட்டை என்று சாம்பாராக்கி விட்டு விடலாம். ஆனால், இரண்டாம் பாதியில் ஒட்டிக் கொண்டிருக்கும் சகுனிகளும் குப்பைகளும் களைய மட்டுமே கோருகின்றன.

”மதுபானக் கடை” போல் நேர்மையும் இல்லை. பேசுபொருளை மட்டும் சொல்லிய படம். பாடல் வேண்டும், துரத்தல் காட்சி வேண்டும், இரண்டரை மணி நேரம் வேண்டும், நாயகியின் அரையாடை வேண்டும் என்று எதையும் திணிக்கவில்லை. சூது கவ்வும் புத்திசாலித்தனமான உப்புமா.

State of Tamil Cinema Reviewers: Movies vs Books

கடந்த பதினைந்து வருடங்களாக பட அறிமுகங்களை எழுதுபவன் + இணையத்திலும் பத்திரிகைகளிலும் விமர்சனங்களை அவ்வப்போது வாசித்தும் வருபவன் என்ற முறையில் எனக்குப் பட்டது….

* பெரும்பலான சமயம் படம் வெளியானவுடன் டாரெண்ட் தரவிறக்கத்தில் படம் பார்ப்பதால், திரையரங்கின் மன ஒருமை கிடைப்பதில்லை. அதை விடக் கொடுமை, ஆங்கிலப் படத்திற்கு ப்ளூ ரே ப்ரிண்ட்டும் தமிழ்ப்படங்களுக்கு திருட்டு விசிடியும் பார்க்க வேண்டும் என்னும் மனப்பான்மை.

* விகடன் விமர்சனம் போல் மார்க் போட்டு வாடிக்கை. எல்லாப் படத்திற்கும் மதிப்பெண் மட்டுமே வழங்கத் தெரியும்.

* திக்குவாய், குருடி போன்ற குறைபாடுகளை நல்ல நடிப்பு என்றும் ரஜினி, விஜய் படங்களை மசாலா என்றும் வகைப்படுத்துவோம்.

* கேமிராவில் ஒளிப்படம் எடுப்பதாலும், நாலைந்து முறை குழந்தைகள் நிகழ்ச்சியை வீடியோ எடுத்ததாலும் சினிமா எடுக்கும் அனைத்து வித்தையும் தெரிந்ததாக நினைக்கிறோம்.

* தொலைக்காட்சி சீரியல் (என்னைப் போல் ஆசாமிகள் தூர்தர்ஷன் நாடகம்) பார்த்தே பழக்கம். திரைப்படங்களிலும் அதே வாசனை எதிர்பார்க்கிறோம்.

* புத்தகத்திற்கு அறிமுகம் எழுதுவதை விட சினிமாவிற்கு அறிமுகம் கொடுப்பது எளிதானது. உதாரணமாக இயக்குநர் பாலா போன்ற புகழ்பெற்ற எழுத்துலக ஜாம்பவானை விமர்சிக்க நிறைய திராணி வேண்டும். ஆனால், ‘பாலா’ போன்றவரை விமர்சிப்பதால் சாதாரண மனுஷனாக அடையாளம் காட்டிக் கொள்ளலாம். இன்னும் விரிவாகச் சொன்னால் ஆயிரம் பக்க புத்தகத்தை தாக்கி எழுதினால் இலக்கியவாதியாக ஆகிவிடும் அபாயம் இருக்கிறது. ‘கடல்’ படத்தையும் பரதேசியையும் விமர்சித்தால் humble ஆளாகி விடலாம்.

* மோசமான படத்தைப் பாராட்டியும், சுவாரசியமான படைப்பை மட்டம் தட்டியும் எழுதினால் மட்டுமே கவனம் கிடைக்கிறது.

* சென்ற கால சினிமாவில் இருந்து வித்தியாசமாய் நின்று தமிழ்த் திரைப்படங்களை எது முன்னகர்த்துகிறது என்று கவனித்து பகிர்வதை விட, அந்தத் திரைப்படங்களின் கதையை வைத்து மன்றாடுவது எளிது.

என்னுடைய ஆண்டிராய்ட் போனிற்கு புதிதாக ஏதாவது நிரலியை நிறுவிக் கொண்டே இருப்பேன். சில சமயம் அதைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவேன். சில சமயம் உடனடியாக நீக்கிவிடுவேன். அது எனக்கு எப்படி உபயோகமாகிறது, ஏற்கனவே இருக்கும் மற்ற அப்ளிகேஷன்களில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது என்பதைப் பொறுத்து என் முடிவு அமைகிறது. வைரஸ் போன்ற தாக்குதல் கொடுத்தால் மட்டுமே, கூகுள் கடை சென்று மட்டகரமான தரமதிப்பீடு தருகிறேன்.

சினிமாவிற்கும் அதே அளவீடு பயன்படுத்தலாம். நோய்க்கிருமி போல் கலையை கீழே இழுக்கிறதா? அல்லது தனிப்பட்ட முறையில் உபயோகமான விதத்தில் முன்னேற்றுகிறதா?

கனடாவில் கதாசிரியர் ஜெயமோகன் உரை: தமிழ் சினிமாவும் ஹாலிவுட் திரைப்படங்களும்

பேசியவரின் பதிவு: திரைப்பட விழா » எழுத்தாளர் ஜெயமோகன்

உரையில் சொன்ன நான்கு மையக்கருத்துக்கள்.

1. தமிழ் வணிகசினிமா பற்றிய ஒரு இளக்காரமான பார்வை பொதுவாக அறிவுஜீவிகளிடம் உள்ளது. என்னிடமும் இருந்தது. ஆனால் உலகமெங்கும் உள்ள வட்டாரசினிமாக்களை ஹாலிவுட் சினிமா முற்றாக அழித்து அம்மக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வெகுஜன ஊடகமாக சினிமா அமையாமல் ஆக்கிவிட்டிருக்கிறது. அந்த அபாயத்தை சமாளித்து இங்கே தமிழ் வணிகச்சினிமா வெற்றிகரமாக இருப்பதே ஒரு பண்பாட்டுச்சாதனை. அது,தொடர்ச்சியான ஃபீட் பேக் மெக்கானிசம் மூலம் உருவாக்கப்பட்டது. ஆகவே தமிழ்ச்சமூகத்தின் சராசரியால் உருவாக்கப்பட்டது அதன் தரம்.

2 இக்காரணத்தால் தமிழில் சராசரிக்கு மேலான ஒரு தளத்தில் படங்கள் வரமுடியவில்லை. அப்படி ஒரு படத்தை உருவாக்கும் முயற்சிகள் பல நடக்கின்றன. அதன்விளைவாக உருவான ஒன்றே குறும்பட இயக்கம். அதற்குப் பொருளியல் சுமை இல்லை என்பதனால் அது சுதந்திரமாக இயங்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் நடைமுறையில் அது வெற்றியா என்ற தயக்கம் இருக்கிறது. ஆரம்பத்தில் குறும்படங்கள் மீது இருந்த எதிர்பார்ப்பு இல்லை இப்போது.

3 . காரணங்கள் இரண்டு. இந்தப் படங்களிலேயே அவை தெரிகின்றன. ஒன்று இலக்கியவாசிப்போ, அறிமுகமோ இல்லாதவர்களால் இப்படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆகவே கதைக்கருவிலும் வாழ்க்கை அவதானிப்புகளிலும் ஒரு முதிர்ச்சி இல்லை மிகச் சாதாரணமான கதைகளைச் சாதாரணமாக எடுக்கிறாகள். இந்தக்குறும்படங்களின் கதைகளைக் குமுதம் கூட வெளியிடுமா என்பது சந்தேகமே. பெரும் சிறுகதைச்சாதனைகள் நிகழ்ந்த ஒரு மொழியில் இத்தகைய படங்கள் வருவதை நாம் ஒரு சரிவு என்றே நினைக்கவேண்டும். இரண்டாவதாக இப்படங்கள் குறைந்த நேர அளவுள்ள, சிறிய சட்டகம் கொண்ட படங்கள். இதற்கான ஒரு திரைமொழி , திரைக்கதை வடிவம் உருவாக்கப்படவேண்டும். ஆனால் பெரிய படங்களின் அதே திரைமொழி, அதே திரைக்கதை உத்தியில் இவை எடுக்கப்படும்போது பார்வையனுபவம் சிறப்பாக அமைவதில்லை.


ஏறத்தாழ முப்பது பேர் பார்வையாளர்கள். மூன்று நபர்கள் கொண்ட ஜூரி.

தமிழ் வணிக சினிமாவை நிராகரித்துப் பேச முடியாது. தமிழ்ப்படங்கள் என்பது ஒரு பண்பாட்டு உரையாடல். அவை சராசரி மனிதர்களுடன் பேசக்கூடியவை. ஆவரேஜ் ஆளுக்காகத்தான் படமெடுக்க முடியும். எதிர்காலத்தில் கலைப்படங்கள் காலூன்றலாம். ஆனால், இன்றைக்கு அந்த நிலை கிடையாது.

பகுதி ஒன்று

* உணவு: பெரிய சாப்பாட்டு மேஜை. அயிரம் பேர் உண்ணக் கூடிய விருந்து போன்ற அயிட்டங்கள் காட்டப்பட வேண்டும். பார்வையாளனுக்கு பசியாக இருக்கலாம். கல்யாண சாப்பாடு தேவையிருக்கலாம். அதைத் தீர்க்க வேண்டும்.

* ஆடை, அணிகலன்: நாயகி தன்னுடைய டிரெஸரைத் திறந்து நூற்றுக்கணக்கான புடைவையை அலசுவாள். அவற்றில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுப்பாள். சினிமா பார்ப்பவனுக்கு அத்தனை புடவை எடுத்து தர முடியாது. பார்ப்பவளுக்கு இந்த மாதிரி சாய்ஸ் இருப்பது போல் கற்பனை தருவதற்கு சரோஜாதேவியும் ஜெயலலிதாவும் இவ்வ்வாறு செலக்சன் செய்ய வேண்டும்.

* இடம், லொக்கேஷன்: ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு கலாச்சாரம். அனைத்து ஊர்களிலும் பிடிக்குமாறு புரியுமாறு எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. சென்னையில், சின்னாளப்பட்டியில், சிகாகோவில், ஸ்கார்பரோவில் என்று எல்லா இடத்திற்கான சராசரி விருப்பங்களை உள்ளடக்கி எடுக்கிறார்கள்.

* ரிலாக்ஸேஷன்: இரண்டே கால் மணி நேரம் படம் ஓட வேண்டும். சினிமாவிற்கு கிளம்புவதற்கு பெரிய விஷயம். அந்தளவு சிரமப்பட்டு வருபவர்கள், டக்கென்று எண்பது மணித்துளிகளில் முடித்து அனுப்ப முடியாது.

* வணிக சினிமா: காதல் இல்லாத தமிழ் சினிமா எடுபடாது; எடுக்கணும்னு அவசியம் இல்ல. தமிழகச் சூழலில் காதல் செய்யும் வாய்ப்பு இல்லாததால் ஈடேற்றம் செய்வதற்கு இளமையும் காதலும் சினிமாவில் நிறைவேற்றுகிறது.

பகுதி இரண்டு

* சிறு பத்திரிகைக்காரன்: நா பார்த்தசாரதி, அகிலன், கல்கி எல்லாம் வணிக எழுத்தாளர்கள். அவர்கள் மட்டுமே புகழ் பெற்று விளங்கிய காலம் உண்டு. இன்று வெகுசன இலக்கியம் அல்லாதவர்கள்தான் புகழ் பெற்றவர்களாக இருக்கிறார்கள். நான் சிறுபத்திரிகைக்காரன். இன்று மைய எழுத்தாக விளங்குகிறேன். அது போல் குறும்படக்காரர்களும் மெயின் நீரோட்டத்தை நிர்ணயிப்பவர்களாக ஆகலாம்.

* இலக்கிய வாசிப்பு: கதைகளை தேர்தெடுக்கும்போது எண்ணங்களை மையமாக வைக்காமல், சிறப்பான சிறுகதைகளை எடுத்துக் கொள்ளலாம்.

தொடர்புள்ள தற்கால செய்தி: Manushyaputhiran vs Arivumathy on S Ramakrishnan vs Kamalahasan: Marketing Kaliyugam Movie Songs

கலியுகம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முதலில் பேசிய கவிஞர் அறிவுமதி, மனுஷ்யபுத்திரன் குங்குமத்தில் வழக்கு எண் படத்தை துவைத்து காயப்போட்டுவிட்டதாக குறைபட்டுக் கொண்டார். இதுபோல் மனுஷ் போன்ற இலக்கியவாதிகளே செய்தால், அடுத்து வரும் தயாரிப்பாளர்களும் வர மாட்டார்கள்.. இது தமிழ்ச் சினிமா துறையின் வளர்ச்சியையே பாதிக்கும். அது மிக அருமையான படம் என்று சொன்னார்.

இசை – ராஜத்துவம்

முந்தைய ட்வீட்ஸ்: விச்வரூபம் – ஆஸ்கருத்துவம்

Power Star: Dr. Srinivasan

சன் தொலைக்காட்சி: பின்னணி, பிசினஸ், பாபா

செபாஸ்டியன் – பொங்கல் நிகழ்ச்சி: தேசிய நெடுஞ்சாலை

சபாஸ்டியன்: 17ஆம் அறிவு: ஆனந்தத் தொல்லை

காப்டன் டிவி: மன்னவன்

கேப்டன் டிவி: தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி

கலக்கல் சினிமா: லத்திகா

புதிய தலைமுறை: மலை போன்ற மனதைரியம்

விஜய் டிவி

சினிமா – கோடம்பாக்குவம்

முந்தைய ட்வீட்ஸ்: மேனேஜ்மெண்ட் – பாட்டாளித்துவம்