ஆரவிந்தன்

காலச்சுவடு

அரவிந்தன்
பிறப்பு: 1964

அரவிந்தன் (பி.1964) இதழாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். இதழியல் துறையில் முப்பதாண்டுக் கால அனுபவம்கொண்டவர். இந்தியா டுடே, காலச்சுவடு, சென்னை நம்ம சென்னை, நம் தோழி ஆகிய இதழ்களில் பணியாற்றியுள்ளார். தி இந்து தமிழ் நாளிதழின் இணைப்பிதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார். இலக்கியம், தத்துவம், பெண்ணுரிமை, அரசியல், மொழி, திரைப்படம், கிரிக்கெட் ஆகியவற்றைக் குறித்த கட்டுரைகளை எழுதிவருகிறார். சிறுகதைகள், நாவல், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், அரசியல் விமர்சனம், மொழிபெயர்ப்பு, மகாபாரதச் சுருக்கம், திரைப்படம், கிரிக்கெட் குறித்தவையென இதுவரை பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன. தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தின் ‘சமயம் தமிழ்’ என்னும் இணையதளத்தின் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இதழியல் பயிற்சி வகுப்பு நடத்திய அனுபவமும் இவருக்குண்டு. தற்போது லயோலா கல்லூரியில் வருகைதரு விரிவுரையாளராக இதழியல் மாணவர்களுக்குப் பாடம் எடுத்துவருகிறார். விருதுகள் · தமிழ்ப் புத்தக நண்பர்கள் நடத்தும் மாதாந்தர விமர்சனக் கூட்டத்தில் இமையத்தின் படைப்புகள் குறித்து ஆற்றிய உரைக்கு 2016-17ஆம் ஆண்டுக்கான ‘ஆண்டின் சிறந்த உரை’ விருது. · பால சரஸ்வதி மொழியாக்க நூலுக்கு ‘கனடா இலக்கியத் தோட்டம்’ வழங்கும் ‘சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருது (2017).’

இணைப்புகள்

1. அரவிந்தன் | அருஞ்சொல்

https://www.arunchol.com/author/aravindan

2. அரவிந்தன் – Tamil Wiki

https://tamil.wiki/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D

காலச்சுவடு நிறுவனத்தில் பதிப்பாசிரியராகப் பணியாற்றி வந்த டி.இ.அரவிந்தன் இன்று (03-04-2026) முற்பகல் நாகர்கோவிலில் இயற்கை எய்தினார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகவியலாளராகப் பணிபுரிந்து வந்தவர். 1990களில் இந்தியா டுடே இதழில் பணியாற்றிய அவர் பிறகு காலச்சுவடு பொறுப்பாசிரியராக இருந்தார். இந்து தமிழ் திசை, மின்னம்பலம், சமயம்.காம், நம் தோழி, நம்ம சென்னை முதலிய இதழ்களிலும் பணியாற்றினர். கடந்த சில ஆண்டுகளாகக் காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் பொறுப்பில் இருந்து வந்தார். இந்து தமிழ் திசை நாளிதழ் இணைப்பிதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றிய போது இலக்கியம் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டவர்.  நாவல், சிறுகதை ஆகிய படைப்பிலக்கியத் துறைகளிலும் தொடர்ந்து இயங்கி வந்தார். சென்னையைக் களமாகக் கொண்டு அவர் எழுதிய ‘பொன்னகரம்’ நாவல் மிகுந்த கவனம் பெற்றது. ’பயணம்’ நாவலும் வேறுபட்ட களத்தைக் கொண்டது. சிறுகதை எழுதுவதில் தனித்த ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் வெளியான ‘வெல்கம் டூ மில்லெனியம்’ தொகுப்பு அதன் நவீனக் கருப்பொருள்களுக்காக போற்றப்பட்டது.  நவீன இலக்கிய விமர்சனத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஜெயகாந்தன் படைப்புகள் பற்றி அவர் எழுதிய நீண்ட கட்டுரை பல்வேறு விவாதங்களை எழுப்பியது. கிட்டத்தட்ட பத்துக் கட்டுரை நூல்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட் விளையாட்டில் தீவிர ஆர்வம் உடையவர். அது தொடர்பாக அவர் எழுதிய கட்டுரைகள் தனிநூலாகவும் வந்துள்ளன. பாலசரஸ்வதி தேவி வாழ்க்கை வரலாறு, டி.எம்.கிருஷ்ணாவின் நூல்கள் உள்ளிடப் பத்துக்கும் மேற்பட்டவற்றை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார். செம்மையாக்கத்தில் நல்ல அனுபவம் உள்ளவர். அவரது அகால  மரணம் பெரும் அதிர்ச்சி தருகிறது. காலச்சுவடு நிறுவனம் இப் பெருந்துயரை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறது.

Kannan Sundaram

#kalachuvadubooks #Aravindan #RIP

சோ தர்மன்

2005ம் ஆண்டு என்னுடைய “கூகை”நாவல் காலச்சுவடு வெளியீ டாக வந்து அந்த ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் விருதைப் பெற்றிருந்தது.விருதளிப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.அப்போது அரவிந்தன் காலச்சுவடு பதிப்பகத்தில்தான் பணியாற்றி வந்தார்.


            விருது வாங்க நான் போயிருந்தேன்.விருது பெறும் புத்தகத்தை பதிப்பித்த பதிப்பாளருக்கும்  விருது உண்டு.காலச்சுவடு நிறுவனத்தின் சார்பாக விருது வாங்க அரவிந்தன்  வந்திருந்தார்.மேடையில் முக்கிய மந்திரிகள் அரசு அலுவலர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.


       திடீரென்று ஒரு ஐ.ஏ.எஸ்.அதிகாரி மைக்கில் அறிவிக்கிறார்.
“அரசின் விருது பெற வந்திருக்கும் எழுத்தாளர்கள் அனைவரும் மேடைக்கு வலது புறம் சென்று வரிசையாக நிற்கவும்”
     இந்த அறிவிப்பை கேட்டதும் அரவிந்தன் கோபமாகிவிட்டார்.என்னையும் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு அந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரியிடம் போனார்.
“இங்க என்ன இலவச வேஷ்டி சேலையா கொடுக்கப் போறீங்க.எழுத்தாளர்கள் அனைவரையும் வரிசையில் நிற்கச் சொல்கிறீர்கள் “


அந்த கலெக்டர் அரண்டு போய்விட்டார்.
“,சார் மேடையில் யாரெல்லாம் இருக்கிறார்கள் பாருங்கள்”
“இருக்கட்டுமே நான் இப்போது தமிழ்நாடு அரசின் அழைப்பின் பேரில் கெஸ்ட்டாக வந்திருக்கிறேன்.எங்களை நீங்கள் அவமானப்படுத்துகிறீர்கள்.
“இப்படியெல்லாம் பேசினால் நீங்கள் மேடைக்கு வரமுடியாது”


“மேடையோ ஊடக வெளிச்சமோ எங்களுக்கு தேவையில்லை.இப்போதே எங்கள் செக்கை கொடுத்து விடுங்கள்.இப்படியே வெளியே போய் விடுகிறோம்.அந்தப் பணம் எங்கள் பணம் அதை வாங்காமல் வெளியே போக மாட்டோம். அரங்கத்திற்குள்ளேதானே படைப்பாளிகள் அனைவரும் இருக்கிறோம்.பெயர் சொல்லி அழையுங்கள்.நாங்கள் மேடையில் வந்து வாங்கிக் கொள்கிறோம். “


    நாங்கள் சொன்னது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அந்த கலெக்டர் மேடைக்குப் போய் விட்டார்.முதலில் கவிதை,அடுத்து சிறுகதை,மூன்றாவதாக நாவல்.எங்களை கடைசிவரை மேடைக்கு அழைக்கவில்லை.வரிசையாக நின்ற முப்பத்தியொரு பேருக்கும் கொடுத்த பின்னர் விழா முடிந்த பின்னர் எங்களை அழைத்து செக் கொடுத்தார்கள்.சந்தோஷமாக வாங்கிக் கொண்டு இருவரும் வெளியே வந்தோம்.


     ஒரு சுயமரியாதை உள்ள படைப்பாளியாக அரவிந்தன் அன்று என்னில் ஐக்கியமானார்.அப்புறம் பல தடவை சென்னையில் சந்தித்து பேசியிருக்கிறேன்.


   அவருடைய இழப்பு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு.
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

.

அம்பை

அரவிந்தன், இப்படிச் செய்வது நியாயமா? என் ஒவ்வொரு நூலுக்கும் சலியாது உழைத்து, எந்த வேளையில் நான் தொந்தரவு செய்தாலும் இதமாகப் பேசும் இனிய நண்பர் நீங்கள். இப்போதுதானே என் முழுத் தொகுப்புக்கும் நீங்கள் செய்த வேலைக்கு என் அன்பளிப்பாக டி-ஷர்ட் வாங்கித் தந்தேன்? ‘நாகர்கோவில் வாங்க,  நான் சமைத்துப் போடுகிறேன். சேர்ந்து யோகா செய்யலாம்’ என்று இப்போதுதான் சொன்னீர்கள். இப்படித் திடீரென்று போகலாமா, அரவிந்தன்? பேரிழப்பு எனக்கு. நீங்கள் இல்லாத காலச்சுவடு அலுவலகத்தை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

இமையம்

https://youtu.be/soUMIIVoodE?si=VQShAXpM72rABqDk

https://youtu.be/soUMIIVoodE?si=VQShAXpM72rABqDk

மணா

காலச்சுவடு அரவிந்தன் மறைவு: எளிய அஞ்சலி!

யாரும் எதிர்பாராத வகையில் உயிரிழந்திருக்கிற காலச்சுவடு ஆசிரியப் பொறுப்பில் பங்கேற்று வந்த அரவிந்தனின் மறைவு, அவரை நன்கு உணர்ந்த நண்பர்களுக்கும் அவருடைய எழுத்தை வாசித்து வந்த வாசகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கும்.

திடீரென்று உயிரிழந்த அரவிந்தனுக்கு எளிய அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.

பத்திரிகையாளராக தமது எழுத்து வாழ்வை ஆரம்பிப்பதற்கு முன்பே, தீவிர இலக்கிய பரிட்சயம் கொண்டவராக இருந்த அரவிந்தன், ‘இந்தியா டுடே’ பத்திரிகையில் முக்கிய பொறுப்பில் இருந்தபோது பல முக்கியமான பங்களிப்பைச் செய்தவர்.

‘இந்தியா டுடே’ நிறுவனம் இலக்கிய இதழ்கள் தயாரிப்பை நடைமுறைப்படுத்தியபோது அதை முன்னின்று செய்து பெரும் கவனிப்பைப் பெற்றவர்.

இதைத் தொடர்ந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதலும் மிக முக்கிய பொறுப்பை ஏற்று, தனது பங்களிப்பைச் சிறப்புற செய்தவர். அவர் எழுதிய பல்வேறு கட்டுரைகள் பரவலான வாசகர்களின் கவனத்தைப் பெற்றவைகளாக அமைந்திருந்தன.

அரசியல், இலக்கியம் என்று மட்டுமல்லாமல், ஜே.கிருஷ்ணமூர்த்தி போன்ற பல்வேறு விதமான தத்துவார்த்தப் பின்புலம் கொண்ட பலரைப் பற்றி மிக எளிமையான விதத்தில், சாதாரண வாசகர்களிடம் கொண்டு சென்றவர்.

சிறுகதைகளிலும் கவனம் செலுத்தி இருக்கிற அரவிந்தன் கொண்டு வந்த புதைமணல் உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகள் பெரும் வாசகர் கவனத்தைக் கொண்டிருந்தன.

இந்து தமிழ் திசை, மின்னம்பலம், சமயம்.காம், நம் தோழி, நம்ம சென்னை முதலிய இதழ்களிலும் பணியாற்றினர்.

நாவல், சிறுகதை ஆகிய படைப்பிலக்கியத் துறைகளிலும் தொடர்ந்து இயங்கி வந்தார். சென்னையைக் களமாகக் கொண்டு அவர் எழுதிய ‘பொன்னகரம்’ நாவல் மிகுந்த கவனம் பெற்றது.

’பயணம்’ நாவலும் வேறுபட்ட களத்தைக் கொண்டது.

சிறுகதை எழுதுவதில் தனித்த ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் வெளியான ‘வெல்கம் டூ மில்லெனியம்’ தொகுப்பு அதன் நவீனக் கருப்பொருள்களுக்காக போற்றப்பட்டது.

நவீன இலக்கிய விமர்சனத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஜெயகாந்தன் படைப்புகள் பற்றி அவர் எழுதிய நீண்ட கட்டுரை பல்வேறு விவாதங்களை எழுப்பியது. கிட்டத்தட்ட பத்துக் கட்டுரை நூல்கள் வெளியாகியுள்ளன.

கிரிக்கெட் விளையாட்டில் தீவிர ஆர்வம் உடையவர். அது தொடர்பாக அவர் எழுதிய கட்டுரைகள் தனிநூலாகவும் வந்துள்ளன.

பாலசரஸ்வதி தேவி வாழ்க்கை வரலாறு, டி.எம்.கிருஷ்ணாவின் நூல்கள் உள்ளிடப் பத்துக்கும் மேற்பட்டவற்றை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார். செம்மையாக்கத்தில் நல்ல அனுபவம் உள்ளவர்.

இலக்கியத் தளத்திலும் தொடர்ந்து இயங்கி கொண்டிருந்த அரவிந்தன், கடைசியாக காலச்சுவடு இதழின் ஆசிரியக் குழுவில் பங்கேற்று காலச்சுவடு தயாரித்து வந்த புத்தகங்களின் உருவாக்கத்திலும் சிறப்பான பங்களிப்பை செய்து வந்தார்.

எழுத்துலகில் இயங்கி வந்தபோதும், சுந்தர ராமசாமி உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளுமைகளுடன் நெருங்கிய நட்பில் தொடர்ந்து அரவிந்தன் இருந்து வந்தார் என்பது முக்கியமானது.

மிக சமீபத்தில் புதிய தலைமுறையின் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியிலும் பங்கேற்று அரசியல் குறித்த தன்னுடைய பார்வையை மிக சமீபத்தில் முன்வைத்து வந்தவர்.

அரசியல், சமூகம், இலக்கியம், மொழிபெயர்ப்பு என்று பல்வேறு தளத்தில் தொடர்ந்து இயங்கி வந்தவரான அரவிந்தனின் இழப்புக்கு அவருடன் நீண்ட காலமாகப் பழகியவன் என்கிற முறையில், ஆத்மார்த்தமான எளிய அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று அதிகாலை தூக்கத்திலேயே மாரடைப்பினால் உயிரிழந்த அரவிந்தனின் உடல் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு, பள்ளிக்கரணையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, நாளை பிற்பகலுக்குப் பிறகு நல்லடக்கம் நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

#அரவிந்தன் #அரவிந்தன்மறைவு #அரவிந்தன்அஞ்சலி #பத்திரிகையாளர்அரவிந்தன் #எழுத்தாளர்அரவிந்தன் #காலச்சுவடுஅரவிந்தன் #இந்தியாடுடே #அரசியல் #சமூகம் #சிந்தனை #விமர்சனம் #தமிழ்சிந்தனை #தமிழ்எழுத்தாளர் #நினைவஞ்சலி #அஞ்சலி #Sundararamasamy #Writing #Literature #Translation #Politics #Society #JournalistAravindan #AravindanTribute #AravindansDeath #IndiaToday #Kalachuvadu #TamilWriter  #WriterAravindan #LiteraryTribute #சுந்தரராமசாமி #SundaraRamaswamy#kalachuvaduaravindanpassedaway #எழுத்து #எழுத்தாளுமை #இலக்கியம் #தமிழ்இலக்கியம் #நவீனஇலக்கியம் #மொழிபெயர்ப்பு

ஷோபா சக்தி

எழுத்தாளர் அரவிந்தனை அவர் ‘உலகத் தமிழ்’ இணைய இதழில் பணியாற்றிய காலம் தொட்டு அறிவேன்.  பின்பு அவர் பணியாற்றிய ‘காலச்சுவடு’ பதிப்பகம் குறித்து நான் கடுமையான விமர்சனங்களை எழுத்துகளில் முன்வைத்திருந்த போதும், என்னைக் காணும்போதெல்லாம் கசப்பின் நிழலே இல்லாமல் அன்புடன் உரையாடுவார்.  அரவிந்தனின் மரணச் செய்தி மனதைக் கலங்கடிக்கிறது. இன்னும் ஓர் நண்பரை இழந்தேன். நண்பர் அரவிந்தனுக்கு என் இறுதி வணக்கங்கள்.

போகன் சங்கர்

அஞ்சலி

அரவிந்தனின் பயணம்.

மரணம் எப்போதும் உயிரோடு இருப்பவர்களின் மனதில் குற்ற உணர்வை விட்டுச் செல்கிறது. தெரிவிக்காத அன்பு. தெரிவிக்காத மரியாதை. எடுக்காத அழைப்புகள். பதில் அளிக்காத செய்திகள் எல்லாம் சேர்ந்து ஒரு பரிதவிப்பை நம்மில் விட்டுச் செல்கின்றன.

குற்ற உணர்வு ஒரு சிறிய மரணம்.

எழுத்தாளர்களைச் சந்தித்தல் பற்றி முன்பொரு பதிவு எழுதி இருந்தேன். மிகச் சில எழுத்தாளர்களையே நான் என் வீட்டுக்கு அழைத்திருக்கிறேன். என் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். என் வீடு அதில் நீண்ட நாட்களாக வசிக்கும் ஒரு எழுத்தாளனுக்கே இன்னமும் தயாராகிக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மையான காரணம். அரவிந்தன் என் வீட்டுக்கு வந்த  மிகச்சில எழுத்தாளர்களில் ஒருவர். நாகர்கோவிலில் எனது வலது தோள் உறைந்து  கடும் வலியினால் நான் அவதிப்பட்டபோது  என் வீட்டுக்கே வந்து மருத்துவமனைக்கு தொடர்ந்து பத்து நாட்கள் அழைத்துச் சென்றவர். அவருடைய கடுமையான வேலை நெருக்கடியிலும் அதை அவர் செய்தார்.

அவருடைய ‘பயணம்’ எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் ஒன்று. அதற்கு ஒரு குறிப்பு எழுதி இருக்கிறேன். அவருடைய கடைசி சிறுகதை தொகுப்புக்கு( மில்லேனியம் கதைகள் ) நான்தான் முன்னுரை எழுதினேன். ( இந்த பதிவில் ‘நான்’ நிறைய வருகிறது. மன்னித்துக் கொள்ளுங்கள். இப்போது இங்கே ‘நான்’ மட்டுமே இருப்பதால் இப்படி எழுத வேண்டி இருக்கிறது )

இறுதியாக அவரை சென்னை புத்தகக் கண்காட்சியில் சந்தித்தேன். ( இந்த பதிவில் கடைசியாக, இறுதியாக போன்ற வார்த்தைகளும்  அடிக்கடி வருகிறது. அதையும் தவிர்க்க முடியவில்லை ). அவர் சமீபத்தில் மொழி பெயர்த்த  ‘உன் கதை என் கதை’ நூலை கையெழுத்திட்டு என்னிடம் தந்தார்.

அந்தப் புத்தகம் நான் சமீபத்தில் படித்த மிகச் சிறந்த புத்தகங்களில் ஒன்று. பத்து நாட்களுக்குள் படித்துவிட்டு அவருக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகளாக அனுப்பிக் கொண்டிருந்தேன். அழைத்துப் பேசவும் முயன்றேன். பொதுவாக நான் இப்படி அதிகம் செய்வதில்லை. அவர் பெங்களூரில் ஏதோ ஒரு கூட்டத்தில் இருந்தார். உடனே பதில் அளிக்க முடியவில்லை வந்து பேசுகிறேன் என்று சொன்னார்.

எனக்கு அது ஏனோ ஒரு கோபத்தை அளித்தது. செய்திகளை அழித்து விட்டேன். ஒருவரின் புத்தகத்தைப் படித்துவிட்டு நாம் அபிப்பிராயம் அதுவும் நல்ல அபிப்பிராயம் சொல்கிறோம், அதற்கு உடனே பதில் அளிக்க வேண்டாமா? என்று நினைத்துக் கொண்டேன்.பிறகு ஒரு வாரம் கழித்து எனக்கு ‘ அதை ஏன் அழித்து விட்டீர்கள்?’என்று செய்தி அனுப்பினார். நான் பதில் அனுப்பவில்லை. நான் இன்னமும் கோபமாய் இருந்தேன்.

அவர் மேல் நான் கொள்ளப் போகும் கடைசிக் கோபம்  அது என்று எனக்கு எப்படி தெரியும்?

அவர் எனக்கு அனுப்ப போகும் கடைசி செய்தி அது என்று அவருக்கும் தெரிந்திருக்காது என்று தான் நினைக்கிறேன்.

எழுத்தாளர்களுக்கு அவரவர் குடும்பங்களைத் தாண்டி உறவுகளைத் தாண்டி  எழுத்தாளர்கள் மட்டுமே இருக்கக்கூடிய  அரூபக் குடும்பங்கள் உண்டு. குடும்பமாய் உணரக்கூடிய நட்புகள் உண்டு. அரவிந்தனை நான் அப்படி உணர்ந்ததுண்டு. அரவிந்தனும் அப்படித்தான் என்னை உணர்ந்தார் என்றே நினைக்கிறேன்.

பக்கத்தில் நீண்ட காலமாக நல்ல பசுமையுடன்   நின்று  கொண்டிருந்த மரம் ஒரே இரவில் சட்டென்று பட்டுப்போனால் அருகில் நின்று கொண்டிருக்கும்  மரம் அடையக்கூடிய அதே பதற்றத்தை  உணர்கிறேன்.

இருவர் கதை.

நூலாசிரியர்: கோனி பால்மன் |
மொழிபெயர்ப்பாளர்: அரவிந்தன் |
வகைமைகள்: புதிய வெளியீடுகள் மொழிபெயர்ப்பு நாவல் டச்சு நாவல்

கவிஞர்கள் சில்வியா பிளாத்-டெட் ஹியூஸ் இணையரின் திருமண வாழ்வு நவீன இலக்கியத்தின் மிகவும் பேசப்பட்ட, சோகமயமான நிகழ்வுகளில் ஒன்று.

இளம் வயதில் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோன சில்வியா பிளாத்தின் மீதான அனுதாபம் சில்வியா-டெட் ஹியூஸ் இணையரின் திருமண வாழ்வைப் பற்றிய பல புனைவுகளுக்கும் ஊகங்களுக்கும் இடமளித்தது. டச்சு எழுத்தாளரான கோனி பால்மன் புனைவுகள், ஊகங்கள், அவதூறுகள் ஆகியவற்றை விலக்கிவிட்டு, பல்வேறு ஆதாரங்களை ஆழமாக ஆராய்ந்து அவர்களது வாழ்வைப் புனைகதையாகப் படைத்துள்ளார்.

ஹியூஸின் பார்வையில் விரியும் இந்தக் கதை சில்வியாவைப் பற்றியும் இவர்களுக்கிடையே இருந்த உறவின் பல்வேறு பரிமாணங்களையும் சிடுக்குகளையும் புரிந்துகொள்ள உதவுகிறது. படைப்பூக்கத்தின் பரவசத்தையும் வேதனையையும் உணரச் செய்கிறது. எந்தக் குற்றச்சாட்டுக்கும் பதில் சொல்லாமல் இருந்த டெட் ஹியூஸின் குரலில் வெளிப்படும் இந்த நாவல் மிக நெருக்க மான ஒரு காதலின் வெளியில் தெரியாத சில பக்கங்களைக் காட்டுகிறது.

(அரவிந்தன் மொழிபெயர்த்த ‘உன் கதை என் கதை ‘ நூலை படித்துவிட்டு நான் அவருக்கு வாட்ஸ் அப்பில் எழுதிய குறுஞ்செய்திகள். அவர் உடனடியாக பதிலளிக்காததால் ஒரு கோபத்தில் அதை வேறொரு இடத்தில் சேமித்து விட்டு நீக்கிவிட்டேன்.

இப்போது இதை யாருக்கு அனுப்புவது என்று தெரியாததால் இங்கே பதிவிடுகிறேன்.)

[25/02, 8:08 am] boganath: புத்தகத்தை படித்து முடித்து விட்டேன். மிகவும் தொந்தரவு அளித்த சொல்லப்போனால் அச்சத்தைக் கொடுத்த புத்தகம். நான் பிளாத்தின் மரணம் குறித்த அல்வாரிஸ் எழுதிய the savage god புத்தகம் படித்தது பற்றி ஒரு சிறு குறிப்பும் எங்கோ எழுதி இருக்கிறேன். ஆனால் அது தற்கொலை பற்றி மிகவும் தத்துவார்த்தமாக எழுதப்பட்ட ஒரு புத்தகம்
[25/02, 8:08 am] boganath: இந்த நாவல் கொண்டு சேர்க்கும் அச்சமூட்டும் அருகாமைக்கு மிக தள்ளி நின்று பேசுவது
[25/02, 8:09 am] boganath: நான் பொதுவாக ஒரு புத்தகம் ஆங்கிலத்தில் கிடைத்தால் மொழிபெயர்ப்பில் வாசிப்பதில்லை


[25/02, 8:10 am] boganath: ஆனால் இந்த புத்தகத்தின் மொழிபெயர்ப்பு ஒரு சாதனை என்றே சொல்வேன். மிகக் கவனமாக எந்த ஒரு நுண்ணிய உணர்வையும் விட்டுவிடாமல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
[25/02, 8:11 am] boganath: கலைஞர்களுக்குள் நிகழும் உறவுகள் குறித்த புத்தகங்கள் குறைவு( அல்லது அதிகமா? )


[25/02, 8:13 am] boganath: அவர்களைச் செலுத்தும் விசைகள் அது அவர்களைக் கொண்டு சேர்க்கும் திசைகள் இவை பற்றி எல்லாம் தமிழில் இன்னமும் பேசப்பட வேண்டும் என்றே நினைக்கிறேன்
[25/02, 8:14 am] boganath: விட்டல் ராவின் சில புத்தகங்கள் சமீபத்தில் விமலாதித்த மன்னனின் ஆபீஸ் வந்திருக்கிறது. அதைப் படிக்க வேண்டும். ஆனால் படித்த வரை அது புறவயமாகவே கலைஞர்களை அணுகுவது போல் தோன்றுகிறது


[25/02, 8:16 am] boganath: கலைஞர்கள் அல்லது எழுத்தாளர்கள் ஏதோ ஒரு வகையில் குடிநோய் போன்ற ஒரு தீவிரத்திற்கு ஆட்பட்டவர்கள் தானா என்பது போன்ற கேள்விகளை இது எழுப்புகிறது
[25/02, 8:16 am] boganath: ஆண் பெண் உறவுகள் ஏற்கனவே அடைந்திருக்கும் சிக்கல்கள் சிடுக்குகள் அவர்கள் கலைஞர்களாகவும் இருக்கும்போது பன்மடங்கு பெருகி விடுகிறது என்று தோன்றுகிறது
[25/02, 8:17 am] boganath: அவர்கள் பல நேரங்களில் ஒரே தெய்வத்தால் பல்வேறு திசைகளை நோக்கி அழைக்கப்படுகிறவர்கள் போல் ஆகி விடுகிறார்கள்
[25/02, 8:20 am] boganath: பெண்ணியம் பெண்களுக்கு கொண்டு வந்திருக்கிற விடுதலையோடு சேர்த்து வந்திருக்கிற புதிய விலங்குகளையும் பற்றி இந்த நாவல் பேசுகிறது
[25/02, 8:24 am] boganath: இன்னொரு புறம் அதிகரித்து வருகிற மன நோய்களையும் அதற்கான மருத்துவத்தையும் அதன் போதாமைகளையும் அது உறவுகளில் செலுத்தக்கூடிய பாதிப்புகளையும் பற்றி நாம் பேச வேண்டி இருக்கிறது என்பதை இந்த நாவல் உணர்த்துகிறது. பெண்களின் உடல் அமைப்பினாலும் புறத்திலிருந்து அவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற சமூக அழுத்தங்களினாலும் அவர்கள் மிக எளிதாக ஆண்களை விட ஒப்பிட அதிக மன நோய்களுக்கு ஆளாகி விடுகின்றார்கள்


[25/02, 8:27 am] boganath: அவர்களோடு வாழ நேரும் ஆண்கள் அடையக்கூடிய அடையாளச் சிக்கல்கள் பொதுவாகவே உணர்வுகளைக் கையாள்வதில் ஆண்களுக்கு இருக்கும் போதாமை அலட்சியம் , காதல் என்ற விஷயத்தின் மீது ஏற்றி வைத்திருக்கின்ற லட்சிய சுமை அது கொடுக்கக்கூடிய ஏமாற்றம் மன உடைவு எல்லாம் பற்றி இந்த நாவல் பேசுகிறது.


[25/02, 8:31 am] boganath: சமகால பெண்களின் மீது அவர்களது தாயார்கள் தாயார்கள் போன்றவர்கள் செலுத்தும் பாதிப்பு பெண் எழுத்தாளர்கள் மீது கடந்த கால பெண் எழுத்தாளர்கள் பெண்ணியர்கள் அவர்களது கருத்துக்கள் செலுத்தும் பாதிப்பு அந்த வரைபடத்தின் படி ஒரு பெண் வாழ முயலும் போது அவள் அடைகிற மன உடைவு பொருட்காட்சியில் நன்றாக வேலை செய்த ஒரு பொருள் வீட்டில் வந்ததும் வேலை செய்ய மறுக்கிறது போன்ற தனிப்பட்ட வாழ்வில் செயல்பட மறுக்கிற அறிவுரைகள் காலாவதியான தத்துவங்கள் போன்றவற்றையெல்லாம் இந்த நாவல் ஏறக்குறைய அதிர்ச்சியும் மனத்தளர்ச்சியும் ஏற்படும் அளவுக்கு மிகவும் நுட்பமாக விவரிக்கிறது.


[25/02, 8:32 am] boganath: நீங்கள் இந்த புத்தகத்தை எப்படி அடைந்தீர்கள் என்று தெரியவில்லை
[25/02, 8:32 am] boganath: ஆனால் நிச்சயமாக இது ஒரு மிகச் சிறந்த புத்தகம். மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு

அ ராமசாமி

அரவிந்தன்: நினைவுகள்

‘காலச்சுவடு கட்டுரைகள்’ என்ற முகநூல் பதிவை எழுதியபோது நள்ளிரவு ஆகியிருக்கவில்லை. அந்தப் பதிவில் அவரது பெயரையும் தொடுப்பாக (tag)ச் சேர்த்துவிட்டுப்படுத்தபோது மழை தூறிக்கொண்டிருந்தது. ஒருவேளை காலையில் குறுஞ்செய்தி அனுப்புவார் அல்லது அழைத்துப் பேசுவார் என்று நினைத்துக்கொண்டு படுத்துவிட்டேன். கனடாவின் ஒட்டாவா நகரில் கடந்த சில நாட்களாகவே இப்படித்தான் இரவுத் தட்பவெப்பம் இருக்கின்றது. அதற்கு முன்பு பனிப்பொழிவாக இருந்தது. சாரலும் தூறலுமாக இருந்த மழை பேரிரைச்சலுடன் சாளரங்களைத் தட்டியபோது விழிப்பு வந்துவிட்டது.
திரும்பவும் தூங்காமல் முகநூலைத் திறந்தால் அவரது குறுஞ்செய்திக்குப் பதிலாக அவருக்கான அஞ்சலிக்குறிப்புகளும் அதிர்ச்சியும் ஓலமும் நிரம்பிய பதிவுகளால் நிரம்பியிருக்கின்றது ‘நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்து இவ்வுலகு’ என்னும் வள்ளுவனின் குறளுக்கு எடுத்துக்காட்டாய் மாறியிருக்கின்றார் நண்பர் அரவிந்தன். நினைத்திரங்குவதைத் தவறி வேறொன்றும் செய்வதற்கில்லை.


அரவிந்தன் என்ற பெயரை இந்தியாடுடே தமிழில் வரத்தொடங்கியபோது அறிமுகம். அதில் அச்சாகும் சிறப்பான கதைகளைக் கேட்டுப் பெற்று அச்சிடும் பொறுப்பில் அவரது பங்கு இருந்தது என்று கேள்விப்பட்டுள்ளேன். அப்போது நான் புதுச்சேரியில் இருந்தேன். கி.ரா.வின் ‘காய்ச்ச மரம்’ கதை அச்சான இதழை வைத்துக்கொண்டு அவரோடு பேசியபோது அவர் தான் அந்தப் பெயரைச் சொன்னார். அவரைத் தொடர்புகொண்டவர் அரவிந்தன். அப்போது இதழின் ஆசிரியர் வாசந்தி. அவரது முன்னெடுப்பில் சிறப்பிதழ்கள் கொண்டுவரப்பட்டபோது அரவிந்தனின் பங்கும் பெரும்பங்காக இருந்தது. ரஜினிகாந்த் சிறப்பிதழில் எனது ரஜினியின் மூன்று முகங்கள் கட்டுரை அச்சாகி வந்தபின் ஒருமுறை சென்னை புத்தகக் கண்காட்சியில் சந்தித்துப் பேசியதுதான் முதல் சந்திப்பு.
இந்தியா டுடேயிலிருந்து காலச்சுவடுவின் ஆசிரியராக மாறியபின் அரவிந்தன் அடிக்கடி தொலைபேசியில் பேசுவார். அவரது ஆசிரியப் பொறுப்பில் இருந்த காலச்சுவடுவில் தான் நான் அதிகம் எழுதினேன். பத்தித்தொடர் எழுதச்சொன்னவர் அவர் தான். ஊடகவெளியும் நாடகவெளியும்(2007) என்று தொடங்கி, ஊடகவெளியில் நடப்பனவற்றைக் குறித்து 7 மாதங்களோடு நிறுத்திக் கொண்டேன்.அவருடைய விருப்பமான கிரிக்கெட் விளையாட்டு எனக்கும் பிடித்தமான ஒன்று. சந்திக்கும்போது அவரோடு கிரிக்கெட் பற்றியும் பேசிக்கொள்வோம். அவரது பொறுப்பில் வந்த காலச்சுவடு கிரிக்கெட் சிறப்பிதழில் ‘தேசந்தழுவிய கொண்டாட்டங்கள்’ என்றொரு கட்டுரையை எழுத வைத்தார். சினிமா தொடர்பில் எழுதிய கட்டுரைகள் பலவும் அவர் காலத்திலும் தேவிபாரதி ஆசிரியராக இருந்தபோதும் தான் காலச்சுவடில் அச்சிடப்பட்டன. பின்னர் ஒளிநிழல் உலகம், தமிழ்ச் சினிமா அகவெளியும் புறவெளியும் என்ற தொகுப்புகளாகக் காலச்சுவடு பதிப்பகம் வழியாக நூல்களாகவும் வந்தன.
காலச்சுவடு சார்பில் சு.ரா. 75 கருத்தரங்கம் கன்யாகுமரி விவேகானந்தா இல்லத்தில் நடந்தபோது பசுவய்யாவின் கவிதைகள் குறித்த கட்டுரை வாசிக்கப்போனதின் தொடர்ச்சியில் காலச்சுவடு ஆசிரியர் குழுவோடு விலகல் ஏற்பட்டு விட்டது. அதன் பிறகு காலச்சுவடுவில் எழுதுவதை நிறுத்திவிட்டேன். கடைசியாக எழுதியது பெங்களூரில் நடந்த பிரசன்னா ராமசாமியின் நாடகம் பற்றிய கட்டுரைதான். அதைக்கூட நான் அனுப்பவில்லை. பிரசன்னா ராமசாமி தான் வாங்கிக் காலச்சுவடுவுக்கு அனுப்பி வைத்தார்.
இந்தக் கருத்து வேறுபாட்டிற்குப் பின்னும் அரவிந்தனின் நட்பில் மாற்றம் இல்லை. காலச்சுவடுவிலிருந்து அரவிந்தன் இந்து தமிழ் நாளிதழுக்கு மாறிய பின்னும் எனது எழுத்துகளுக்கு இடமளித்துக் கொண்டே இருந்தார். நூல் மதிப்புரை, கட்டுரைகள், அஞ்சலிக் குறிப்புகள் என அதில் எழுதியதெல்லாம் அவரது ஆசிரியப்பொறுப்பின் போதுதான். சென்னைக்குப் போகும்போது காலச்சுவடு அலுவலகத்திலும், இந்து தமிழ் அலுவலகத்திலும் சந்திக்கப்போவதுண்டு. அவரது அரசியல் பார்வை இதுதான் என்பதை எங்கும் எழுதியதில்லை. ஆனால் அவரது நாவல்களில் -பொன்னகரம், பயணம் போன்றவற்றில் வாசித்துப் புரிந்துகொள்ளலாம். மொழிபெயர்ப்பு, மொழிச்செப்பம், எழுத்துப்படிகளைச் சீரமைத்தல் போன்றவற்றில் புலமை மிக்கவர். ஒரு கல்லூரியில் மொழி சார்ந்த வகுப்பில் எடுக்கும் திறன் உள்ளவர் என்று அவரிடம் சொல்லியிருக்கின்றேன்.
என்னைப் போலவே இமையத்தின் நாவல்களை உடனுக்குடன் வாசித்துவிடும் நண்பராக இருந்தார். இமையம் நாவல்கள் குறித்தும் விவாதித்துக் கொள்வோம். இருவரும் இமையம் நாவல்கள் குறித்த ஒரு தன்மையான கருத்துகளும் வேறுபட்ட பார்வைகளும் இருந்தன.. பல்கலைக்கழகத்தில் இமையத்திற்கு இயல் விருது வழங்கியதை ஒட்டி நடத்தப்பட்ட கருத்தரங்கில் விரிவான கட்டுரையை அரவிந்தன் எழுதி வாசிக்கத் திருநெல்வேலிக்கு அழைத்தேன்; வந்தார்.
அண்மைக்காலங்களில் நிறைய சிறுகதைகள் எழுதினார். அவர் எழுதிய சிறுகதைகள் இதழ்களில் வரும்போது குறுஞ்செய்தியாகத் தகவல் தெரிவிப்பார். வாசித்துக் கருத்தைத் தொலைபேசியில் சொல்வேன். நவீன காலத்து மனிதர்களின் அகங்களை அந்தக் கதைகளில் நுட்பமாக எழுதியிருக்கின்றார். சில நேரங்களில் எனது வலைப்பக்கத்தில் விரிவாக எழுதவும் செய்துள்ளேன். அப்படி எழுதியவற்றின் தொகுப்பைப் பின்னூட்ட இணைப்பில் வாசிக்கலாம்.

லதா அருணாச்சலம்

டி ஐ அரவிந்தன் சார் மறைந்து விட்டதை நம்பவே மறுக்கிறது மனம். கடந்த மாதம் , (இன்னும் ஒரு மாதம் கூட நிறையவில்லை) புரவி இலக்கியக் கூடுகையின் போதுதான் அவருடன் நீண்ட நேரம் பேசவும் விவாதிக்கவும் வாய்ப்புக் கிடைத்தது. நிகழ்வில் மிகக் காத்திரமான இலக்கிய விவாதமும் செறிவான உரையும் நிகழ்த்தினார். எதன் பொருட்டும் இலக்கியத்தையும் அதன் தீவிரமான கோட்பாடுகளையும் விட்டுத்தரக்கூடாது என்பதோடு அதற்கான நியாயங்களையும் வற்புறுத்தி அவர் பேசியது மிகச் சிறப்பாக இருந்தது. அதோடு , நாளின் முடிவில் மிக இலகுத்தன்மையோடு உற்சாகமாக அவர் பாடிய பாடல்கள் அரவிந்தனின் மறுபக்கம் என்றே கூறலாம். உதித் நாரயண் குரலில் அவர் பாடியது இன்றும் நீங்காமல் நினைவில் உள்ளது. மொழிபெயர்ப்பு சார்ந்து அவர் தொகுத்த புத்தகம் ஒரு மொழிபெயர்ப்பாளராக எனக்குக் கையேடு போன்று உதவியது என்பேன்.

இன்னுமின்னும் எத்தனை படைப்புகளை அளித்திருக்க வேண்டியவரை காலம் இரக்கமின்றி எடுத்துச் சென்று விட்டது. ஒரு எழுத்தாளர் மரணிக்கும்போது அவருடன் எத்தனை கதைகளும் கலைகளும் மறைந்து போகின்றன 😞😞

அஞ்சலிகள். ஆழ்ந்த இரங்கல்கள் 🙏🙏

வெ சுரேஷ்

காலச்சுவடு பப்ளிகேஷன்ஸின் ஆசிரியர், திரு.D.I.அரவிந்தன் அவர்கள் காலமாகிவிட்டதாக செய்தி.61 வயதுதான் இருக்கும் அவருக்கு.அவரது பயணம்,பொன்னகரம் ஆகிய நாவல்களையும் சிறுகதைகளையும் படித்திருக்கிறேன்.அவை பெற்றிருக்க வேண்டிய கவனத்தைப் பெறவில்லை என்பது என் எண்ணம்.

படைப்பாளி என்பதை விட ,பதிப்பாசிரியர் எனும் பிம்பம் அவர் மீது அழுத்தமாக விழுந்துவிட்டது என நினைக்கிறேன். இன்னும் அதிகமாகக் கவனம் பெற்றிருக்க வேண்டிய படைப்பாளி அவர்.

காலச்சுவடின் ஸ்டால்களில் சில முறை அவருடன் பேசியுமிருக்கிறேன்.மிக மென்மையாகப் பேசுவார்.அந்த மென்மைக்குரல் மாறாமல் தொலைக்காட்சி விவாதங்களிலும் அண்மைக்கலமாகக் கலந்து கொண்டிருந்தார்.இப்போது திடீரென இந்தத் துயரச் செய்தி.

அரவிந்தனுக்கு அஞ்சலிகள்.

Zero degree publishing – ஆர். காயத்ரி – எழுத்து பிரசுரம்

நாம் பலமுறை வாட்ஸப்பில் professional-ஆக பேசியிருந்தாலும், புரவி நிகழ்ச்சியில்தான் முதன்முதலாக நேரில் சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டோம். இன்னும் ஒரு மாதம்கூட முடியவில்லை.

உதித் நாராயண் போல நீங்கள் பாடிய அந்தச் சிரிப்பு கலந்த தருணம்… என் முழங்கால் வலிக்கு நீங்கள் சொன்ன எக்சர்சைஸ்கள்… இருவரும் அருகருகே உட்கார்ந்து சாப்பிட்டபோது, பரிமாறுபவர் என் தட்டில் ஏதோ வைக்க வர, நான் பதறி கையை நீட்டியதும், “பாயசத்துல பூண்டு இல்ல… சாப்பிடலாம்” என்று நீங்கள் சாதாரணமாகச் சொன்னது, இவை எல்லாம் இன்னும் கண்முன்னே தெளிவாக நிற்கின்றன.

உங்களுடன் நடந்த உரையாடல்கள் வெறும் பேச்சுகள் அல்ல. சிந்திக்க வைக்கும் தருணங்கள். பதிப்புலகைப் பற்றியும், எழுதுவதின் பொறுப்பைப் பற்றியும் சொல்லிக் கொடுத்தீர்கள்.

உங்களுடைய இரண்டு கதைகளை அனுப்பி, “எப்போது படிக்கப் போகிறாய்?” என்று கேட்டீர்கள். “இதோ படிக்கிறேன்” என்று சொன்ன நான்… இன்னும் படிக்காமல் இருக்கிறேன். அந்தச் சிறிய பாக்கி இப்போது ஒரு பெரிய குறையாகத் தோன்றுகிறது.

Life is so fragile, இல்லையா? ஒவ்வொரு இழப்பும் யாரையும் எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று ஒரு கணம் நம்மை விழித்தெழச் செய்கிறது. ஆனால் பிரசவ வைராக்கியம்போல் அந்த உணர்வும் சில நாட்களில் வேலைச் சூழலால் மங்கி விடுகிறது.

போய் வாருங்கள், அரவிந்தன்!
உங்களுடன் செலவிட்ட அந்த இரண்டு நாட்கள், பெரிய நினைவுகளாக தங்கி விட்டன.

Cheers!

கனவு சுப்ரபாரதி மணியன்

காலச்சுவடுஅரவிந்தன் அவர்கள் மறைவு..
இந்தியா டுடே பத்திரிகையில் அவர் இருந்த போதுபடைப்புகள் சார்ந்து பல சமயங்களில் பேசியிருக்கிறார் .திருப்பத்தூரில் ஜெயமோகன் அவர்கள் வசித்தபோது அவரைப் பார்க்க சிலமுறை வந்திருக்கிறார் .பக்கத்து வீட்டிலிருந்த என்னையும் வீட்டில் இருந்து சந்தித்திருக்கிறார்.

கனவு இதழ் ஒன்றை அசோக மித்திரன் சிறப்பு இதழாக ஜெயமோகன் தொகுத்துவெளியிட்டபோது அவருடைய நீண்ட கட்டுரையும் இடம்பெற்றது அப்போது உரையாடினோம்
பின்னால் அது திலகவதி ஐபிஎஸ் அவர்கள் அசோக மித்திரன் 77 என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தொகுப்பாக வெளியிட்டார் அமிர்தா பதிப்பகம் மூலம்.அப்போதும் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தேன்
நிறைய சந்திப்புகளில் நலம் குறித்து சரியாக விசாரிப்பார்
சின்னசாமி ஐ பி எஸ் அவர்கள் கோவையில் நடத்திய இரண்டு நாள் இலக்கிய மாநாட்டில் நானும் அவரும் ஒரே அமர்வில் உரையாற்றினோம் அவர்களுடைய உரையை நான் பாராட்ட என்னுடைய உரையில் எழுத்தாளனுடைய பொறுப்புணர்வு பற்றி நான் குறிப்பிட்ட விஷயங்களை சிலாகித்துகச்சொன்னார்

பார்க்கும்போதெல்லாம் அன்பாக விசாரிப்பார் கடைசியாக அவருக்கு நான் அனுப்பிய மின்னஞ்சலில் அவருடைய கதைகளை.. சிறுகதைகளை சமீபமாய் தொடர்ந்து வாசித்து வருவதாகவும் அவையெல்லாம் வெகு நீளமாக இருப்பதாகவும் சொன்னேன். அவற்றுக்கு எதிர்மறையாக அவர் மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்தார்

ஏ.டி. பாலா

D.i. Aravindan மறைவு பேரதிர்ச்சி. அவரது நண்பர்களுக்கு, ஆழ்ந்த இரங்கல்.

நான் டெல்லியில் பிபிசி வேலையைவிட்டுவிட்டு, முழு நேரம் மொழிபெயர்ப்பையே தொழிலாகத் தேர்ந்தெடுத்து, திருவண்ணாமலையில் மீண்டும் குடிபெயர்ந்திருந்த நேரம். நண்பர் Gopalakrishnan Sankaranarayanan அறிமுகம் செய்துவைத்ததின் அடிப்படையில், காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் ஒரு நூலை மொழிபெயர்க்கும் வாய்ப்பை எனக்கு அளித்தார் அரவிந்தன்.

நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் வாழ்க்கை வரலாற்று நூல் அது.

இதுவரை நேரில் பார்த்திராத, பிரபலமில்லாத ஒருவரை நம்பி, தொலைபேசி வழியில் மட்டுமே பேசியதன் அடிப்படையில் அந்த வேலையைத் தந்தார். முதல் அத்தியாயத்தை முடித்து அனுப்பும்படியும், அதைப் பார்த்துவிட்டு நூலைத் தொடர்வதைப் பற்றிக் கூறுவதாகவும் தெரிவித்தார்.

முதல் அத்தியாயத்தைப் படித்துவிட்டு மிகவும் பாராட்டினார். மிக நுட்பமாக வந்திருப்பதாக சான்றளித்தார். நூலைத் தொடர்ந்து விரைந்து முடிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

என் தன்னம்பிக்கைக்கு கிடைத்த மிகச்சிறந்த ஊக்கம் அது.

செய்தி என்று வரும்போது ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் சொற்கள் வரைகூட மொழிபெயர்ப்பது என் வேகம். ஆனால், ஆழமான அகத்தாய்வுகளையும், பிரதிபலிப்புகளையும், பண்பாட்டு சுழிப்புகளையும் உள்ளடக்கிய, மிகப்பெரிய ஆளுமையின் வாழ்க்கை வரலாற்று நூல் என்று வந்தபோது, சில நேரங்களில் ஒரு பக்கத்தை முடிக்கவே எனக்கு ஒரு நாள் தேவைப்பட்டது.

பொருளாதாரத் தேவையின் வேகத்துக்கு இந்த மொழிபெயர்ப்பின் வேகம் ஈடுகொடுக்குமா என்ற தடுமாற்றம் ஒரு பக்கம், வாழ்க்கையின் அலைக்கழிப்புகள் ஒருபக்கம். வேறு நிரந்தர வேலையில் சேர்ந்த நிலையில், பதிப்பகத்தின் எதிர்பார்ப்புக்கு உரிய வேகத்தில் என்னால், அதில் வேலை செய்ய முடியவில்லை. கடைசியாக மூன்று அத்தியாயங்கள் முடித்தபிறகு. அந்த திட்டத்தில் இருந்து பின்வாங்கிக் கொண்டேன்.

அவர் முகம் சுளிக்கவில்லை. நிலைமையைப் புரிந்துகொண்டார்.

செய்தவரை அந்த நூல் மொழிபெயர்ப்புப் பணியாக மட்டுமல்ல. அற்பமான எனது வரலாற்றுப் புரிதலை செப்பமிடுகிற ஒரு நூலாகவும் இருந்தது.

அதற்காகவும், என் மீது வைத்த நம்பிக்கைக்காகவும், பின்வாங்கியதால் ஏற்பட்ட இடர்ப்பாடுகளை மன்னிக்கக்கூடியவராக இருந்ததாலும் அவர் மீது எனக்கு மதிப்பு ஏற்பட்டது.

இதுவரை அவரை பார்த்ததே இல்லை. சென்னை வந்தபிறகு அவரை நேரில் சென்று பார்க்கவேண்டும் என்று அவ்வப்போது தோன்றும். ஆனால், நான் பார்த்த வேலையால் சங்கோஜப்பட்டு, அவரை அழைக்கத் துணியவில்லை. இறுதியாக, அவரைப் பார்க்க முடியாமலே போகும் என்று நினைக்கவில்லை.

காலப்பேராற்றில் துயில் கொள்ளுங்கள் அரவிந்தன். ஆழ்ந்த இரங்கல்கள்.

கணேஷ் வெங்கட்ராமன்

காலச்சுவடு ஆசிரியர் அரவிந்தன் மறைவு பற்றிய செய்தி ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. அவரை சந்தித்ததில்லை. அவரைப் பற்றிய விவரங்களை குறைந்தது அவருடைய பத்து நண்பர்களிடமிருந்தாவது நான் கேட்டிருப்பேன்.  சமீபத்தில் இலங்கை சென்ற போது கூட சந்தித்த ஒருவர் அரவிந்தன் குறித்து பேசிக் கொண்டிருந்தார். பிப்ரவரி மாதம் ஓர் அயல் நாட்டுப் பயணத்தில் இருந்தேன். அறியாத எண்ணிலிருந்து ஓர் அழைப்பு. எடுத்தேன். “நான் அரவிந்தன் பேசுகிறேன்.” என்ற குரல். “பயணத்தில் இருக்கிறேன். நாடு திரும்பியவுடன் அழைக்கட்டுமா?” என்று கேட்டேன். “நல்லது” என்றார். இன்று கேட்ட மரணச்செய்தி என்னை உலுக்கியதன் முக்கிய காரணம் – நான் சொன்ன படி இந்தியா திரும்பியதும் அரவிந்தன் அவர்களைத் திரும்ப அழைக்கவில்லை என்பதுதான்.

விகடன்

“மொழிபெயர்ப்பில் உணர்வை கடத்த வேண்டும்.!” – மொழிபெயர்பாளர் அரவிந்தன்

ஜெ.பிரீத்தி & பிரேம் குமார் எஸ்.கே.

“ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு, வார்த்தைகளை மட்டும் மொழிபெயர்ப்பது போதாது. அவன் சொல்லின் உண்மையான அர்த்தத்தையும், அதன் தொனியையும், வாசகருக்கு புரியக் கூடிய வகையிலும் எடுத்துச் செல்ல வேண்டும்.”

சென்னை 49-வது புத்தக திருவிழாவில் பல எழுத்தாளர்களும் வாசகர்களும் குவிந்து வருகின்றனர். அவ்வகையில் பிரபல மொழிப்பெயர்பாளர் அரவிந்தன் அவர்களை சந்தித்து மொழிபெயர்ப்பின் நுணுக்கங்கள் குறித்து பேசினோம்.

அப்போது அவர், “மொழிபெயர்ப்பு என்றால், வெறும் வார்த்தைகளை மாற்றி எழுதுவது அல்ல. ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு தகவலை கொண்டு வர, நமக்கு போதுமானது ஒரு டிக்ஷ்னரி மட்டுமே என்று நினைக்கலாம். ஆனால் உண்மையில், வார்த்தைகள் மட்டும் பொருள் சொல்லாது. ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு இடத்தில், தனித்தனியான அர்த்தத்துடன் வருகிறது.

உதாரணமாக, “Thanks” என்றால் உடனே “நன்றி” என்று மொழிபெயர்க்க முடியாது. அது ஒரு எக்ஸ்பிரஷன், உணர்வு. அதை லிட்டரல் வழியில் மொழிபெயர்த்தால், அர்த்தம் பூரணமாக தவறிவிடும்.

அதேபோல், “I go to shop” என்றால் “நான் கடைக்கு போகிறேன்” என்று நம்மால் சொல்ல முடியும். ஆனால் “I go to shopping” என்றால் அதில் வேறொரு நுணுக்கம் வரும். ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு இடத்தில், தனது நோக்கத்தோடு பொருள் மாறுகிறது. இதே காரணத்தால்தான் மொழிபெயர்ப்பில் மனிதர்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார்கள்

ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு, வார்த்தைகளை மட்டும் மொழிபெயர்ப்பது போதாது. அவன் சொல்லின் உண்மையான அர்த்தத்தையும், அதன் தொனியையும், வாசகருக்கு புரியக் கூடிய வகையிலும் எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு இரு மொழிகளிலும் ஆழமான புரிதல் தேவை. வார்த்தைகளின் பின்னணி, கதை, கலாச்சாரம் எல்லாம் கவனிக்க வேண்டும்” என்றார்.

அவரின் முக்கியமான  மொழிபெயர்ப்புகளாக அவர் பரிந்துரைத்தவை,

1. பாலசரஸ்வதி: அவர் கலையும் வாழ்வும்

டக்ளஸ் எம்.நைட் எழுதியது, இது வாழ்க்கை வரலாறு தான் ஆனால் வாசிக்கும்போது அது ஒரு புனைவு கதையைப் போல உணர்ச்சிகரமா இருக்கும்.

2. ஆத்துதோஷ் பாரதவர் எழுதிய மரணத்தின் கதை

சத்தீஸ்கரிலுள்ள வனப்பகுதிகள், நக்ஸலைட்ஸ், ராணுவ படைகள் நடுவில் இருந்த மோதல்கள் குறித்த புத்தகம் மொழிபெயர்ப்பு செய்யும் போது, ஒவ்வொரு ஷேட் (shade) டைமென்ஷன் கவனிக்கப்பட வேண்டியது இருந்தது

https://youtu.be/4ypWnqs5C2c?si=HkuFebLSBZGM7dJK

விவேகானந்தரின் குரல்

-டி.ஐ.அரவிந்தன்

பத்திரிகையாளர்  திரு. டி.ஐ.அரவிந்தன்,  ‘தி இந்து தமிழ்’ நாளிதழில் 2014-இல் எழுதிய பதிவு, இங்கு மீள்பதிவாகிறது.

ஓர் ஆளுமை என்னும் அளவில் எப்போதும் வியப்புக்குரியவர் விவேகானந்தர். 39 வயதிற்குள் அவர் வாசித்த நூல்கள், ஆற்றிய உரைகள், எழுதிய பக்கங்கள், கையாண்ட விஷயங்கள், மேற்கொண்ட பயணங்கள், நிறுவிய அமைப்புகள் என ஒவ்வொன்றும் பிரமிப்பூட்டுபவை. இதில் ஏதாவது ஒன்றை ஒருவர் 40 வயதிற்குள் செய்திருந்தாலே அவரைச் சாதனையாளர் என்று சொல்லிவிடலாம். எல்லாவற்றையும் செய்திருக்கும் விவேகானந்தரை என்னவென்று சொல்வது?

இந்தியாவின் மரபின் மீது பெருமிதமும் கறாரான விமர்சன நோக்கும் அவரிடம் இருந்தன. நவீன வாழ்வின் அனைத்து விதமான சலனங்களுக்கும் இந்தியாவைத் தயார்ப்படுத்தியவர் அவர். மரபின் சட்டகத்துக்குள் நின்று சீர்திருத்தம் பேசியவர்களின் முன்னோடி. பலதரப்பட்ட கோணங்களிலிருந்தும் உலகைப் பார்க்க முற்பட்டவர்.

ஆழ்ந்த அக்கறையின் விளைவாக உண்மையாகவும் இயல்பாகவும் வெளிப்பட்ட அவரது கருத்துகள் அனைத்தும் ஒருவருக்கு உவப்பானவையாக இராது. அவரது எழுத்துகளை முழுமையாக வாசிக்கும் ஒருவர் பரவசம் கொள்ளும் இடங்களும் கூர்மையான வலியை உணரும் இடங்களும் கணிசமாக இருக்கும். இந்தியாவை ஆன்மிக நாடு என்றும் சமயம்தான் அதன் ஆதாரம் என்றும் அவர் அறிவிக்கும்போது சிலருக்கு உவப்பாக இருக்கும். இந்நாட்டின் ஆதிக்கச் சாதியினரை இறந்த காலத்தின் எலும்புக்கூடுகள் என அவர் வர்ணிக்கும்போது வலிக்கும். இந்தியா உலகுக்கு வழிகாட்டும் என்று சொல்லும்போது உவகை கொள்ளும் ஒருவரது மனம் சேரிகளின் குடிசைகளிலிருந்து மீனவக் குப்பங்களிலிருந்தும் புதிய பாரதம் எழுச்சி பெறும் என்று சொல்லும்போது சுணக்கம் கொள்ளலாம்.

ஒரே தரப்பில் நின்று ஒன்றையே திரும்பத் திரும்பப் பேசும் ஒற்றைக் குரல் அல்ல விவேகானந்தரின் குரல். அது பன்முகத்தன்மை கொண்டது. அதனாலேயே அது இந்தியாவின் ஆன்மாவைப் பிரதிபலிக்கிறது.

சமூக மாற்றம் குறித்தும் சமயம் குறித்தும் அவரது குரலை இங்கே கேட்கலாம்

தேசியப் பெரும்பாவம்!

சாதாரண மக்களைப் புறக்கணித்ததே நமது தேசியப் பெரும்பாவம் என்று கருதுகிறேன். நமது வீழ்ச்சிக்கு அதுவும் ஒரு காரணம்.

ஏழைக்கோ, தாழ்ந்தவனுக்கோ, பாவிக்கோ நண்பர்கள் இல்லை, உதவுபவர்கள் இல்லை. என்ன தான் முயன்றாலும் அவர்களால் முன்னேற முடிய வில்லை. நாளுக்கு நாள் அவர்கள் அதோகதியில் ஆழ்ந்துவருகின்றனர். கொடிய சமுதாயம் தங்கள் மீது பொழிகின்ற அடிகளை அவர்கள் உணர்கிறார்கள். ஆனாலும், அந்த அடிகள் எங்கிருந்து வருகின்றன என்பது அவர்களுக்குத் தெரியாது.

இந்தியாவில் உள்ள தீமைகள் அனைத்துக்கும் வேராக இருக்கின்ற ஒரே விஷயம், ஏழைகளின் நிலைமை. புரோகித ஆதிக்கமும், அந்நியரின் ஆக்கி ரமிப்பும் நூற்றாண்டுகளாக அவர்களைக் கீழே தள்ளி மிதித்துவந்துள்ளன. இறுதியில், தாங்கள் மனிதப் பிறவிகள் என்பதையே இந்தியாவின் ஏழைகள் மறந்துவிட்டனர்.

மக்கள் ஏமாற்றப்பட்டனர்

நாடு மூழ்கிக்கொண்டே இருக்கிறது. கோடிக் கணக் கான தாழ்த்தப்பட்ட மக்களின் சாபம் நம் தலை மீது இருக்கிறது… அவர்களிடம் நாம் அத்வைதத்தை வாயளவில் பேசி, அதே வேளையில் முடிந்த அளவு அவர்களை வெறுக்கிறோம். உலக வழக்கு என்ற கொடுமையை அவர்களுக்காக ஏற்படுத்தியிருக்கிறோம்.  நாம் எல்லோரும் சமம், பரம்பொருளுடன் ஒன்றுபட்டிருக் கிறோம் என்றெல்லாம் வாய் கிழியப் பேசுகிறோம், அதில் அணுவளவுகூடச் செயல்முறையில் இல்லை.

மதத்தின் பெயரில் மக்கள்மீது அடக்குமுறை

மனிதனின் மகிமையை இந்து மதத்தைப் போல் உலகின் வேறு எந்த மதமும் இவ்வளவு உயர்வாகக் கூறவில்லை; அதே வேளையில், உலகிலுள்ள எந்த மதமும் இந்து மதம் செய்வதுபோல், ஏழைகள் மற்றும் தாழ்ந்தவர்களின் கழுத்தை நெரிப்பதும் இல்லை.

மதத்தால் மட்டும் இயலாது

சோஷலிசம், அது இது என்று எந்தப் பெயரிலாவது அழையுங்கள். மக்களால் ஆளப்படுகின்ற ஏதோ ஒன்று நடைமுறையில் இருப்பதை ஒவ்வொன்றும் காட்டுகிறது. பொருட் தேவைகளைப் பெறுதல், குறைந்த நேர வேலை, எதிர்ப்பின்மை, போரின்மை, அதிக உணவு முதலியவற்றை மக்கள் அதிகம் விரும்புவார்கள். மதத்தின் மீது, மனிதனின் நல்லியல்பின் மீது நிறுவப்படாத இந்த நாகரிகமோ, எந்த நாகரிகமோ நிலைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது?

கல்வி – முதல் தேவை

கல்வி, கல்வி, கல்வி ஒன்றே காரணம். ஐரோப்பாவில் பல நகரங்களின் வழியே யாத்திரை செய்தபோது, அங்கு வாழ்கின்ற ஏழைகளுக்கு உள்ள வசதிகளையும் கல்வியையும் கண்டேன். அப்போதெல்லாம் நம் ஏழைகளை நினைத்துப் பார்த்து நான் கண்ணீர்விட்டு அழுதிருக்கிறேன். இந்த வேறுபாட்டுக்குக் காரணம் என்ன? கல்வி என்ற விடையே நான் கண்டது. கல்வியால் தன்னம்பிக்கை வருகிறது, தன்னம்பிக்கையின் வலிமையால் உள்ளிருக்கும் ஆன்மா விழித்தெழுகிறது. நம்முள் இருக்கும் ஆன்மாவோ மெல்ல மெல்ல செயலிழந்துகொண்டிருக்கிறது.

குறிப்பிட்ட சிலருக்குக் கல்வி

ஆணவம், அரச ஆணை இவற்றின் துணையுடன், விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரிடம் எல்லா கல்வியும் புத்தி நுட்பமும் உடமையாக்கப்பட்டது தான் இந்தியாவின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம். உழைக்கும் வர்க்கத்தினர்கள் எழுவார்கள்.

ஒரு காலம் வரும். அப்போது சூத்திரர்கள் தங்கள் சூத்திரத்தன்மையுடனேயே முக்கியத்துவம் பெறுவார்கள். அதாவது, அவர்கள் வைசிய, சத்திரிய இயல்புகளைப் பெற்று வலிமையை வெளிப்படுத்துகிறார்களே,  அதுபோல் அல்ல;  சூத்திர இயல்பு மற்றும் வழக்கங்களுடனேயே எல்லா நாடுகளிலும் சமுதாயத்தில் ஆதிக்கத்தை அடைவார்கள். அந்த உதயத்தின் முதல் கிரணம் மேற்கு உலகில் இப்போதே மெல்லமெல்லத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. அதன் விளைவு என்ன ஆகுமோ என்று எல்லோரும் திகைத்து நிற்கிறார்கள்.
  • நன்றி: தி இந்து தமிழ் (14.01.2014)

முகங்கள் | அரவிந்தன்

 முகங்கள் | அரவிந்தன்

ஓவியம்சைமன் ஹோல்டன்

ஹாய் மாலினி!”

“ஹாய் ஷங்கர்! வி.பி. உங்கள கூப்டார்.”

“ஓ.கே.”

ஷங்கர் நாற்காலியில் உட்கார்ந்து மடிக்கணினியைத் திறக்க ஆரம்பித்தான்.

“ஸிஸ்டம்லாம் அப்றமா ஆன் பண்ணிக்கலாம். மொதல்ல வி.பி.ய பாத்துட்டு வந்துடுங்க ஷங்கர். ஏதோ அர்ஜன்ட் போலருக்கு. மூணு வாட்டி இன்டர்காம்ல கூப்டுட்டாரு!”

“அவ்ளோ என்ன அவசரம்?”

“யாருக்குத் தெரியும்?” என்று தோள்களைக் குலுக்கிவிட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தாள் மாலினி. ஷங்கர் பத்து நிமிடங்கள்தான் தாமதமாக வந்திருந்தான். உட்காரவும் கூடாத அளவுக்கு என்ன அவசரம் என்று குழம்பியவனாக எழுந்து சென்றான்.

கதவை மெதுவாகத் தட்டிவிட்டு நழைவதற்குள் உள்ளேயிருந்து “கம், கம்…” என்று சத்தமாகக் குரல் கேட்டது. உள்ளே போனால் வி.பி. ராமச்சந்திரனுக்கு எதிரில் ஜே.எம்.டி. கருணாகரன் நாயர் உட்கார்ந்திருந்தார். இருவருக்கும் தனித்தனியாக “குட்மார்னிங் சார்” என்றான். “லேப்டாப் எங்க?” என்றார் ராமச்சந்திரன்.

“சார் நீங்க அவசரமா வரச் சொன்னதா மாலினி சொன்னாங்க…”

“யெஸ் ஷங்கர். அசவரம்தான். அதுக்காக வெறுங்கையோட வந்தா என்ன பேசறது? எல்லா ஃபிகர்ஸ் அண்ட் பேக்ட்ஸ் ஃபிங்கர் டிப்ஸ்ல வெச்சிருக்கீங்களா?”

“ஜஸ்ட் எ மினிட் சார். இதோ கொண்டுவந்துர்றேன் சார்.”

“ஹரியப் ஷங்கர். டயமாச்சு. டென் தர்ட்டிக்கு நாங்க ரஹேஜா டவர்ஸ்ல இருக்கணும். இந்த ட்ராஃபிக்ல எப்படி போறதுன்னு கொஞ்சம் யோசிச்சி பாருங்க.”

“தோ சார்…” என்று வெளியே ஒடினான். ‘சென்னைல டிராஃபிக் அதிகமா இருந்தா அதுக்கு நா என்னடா பண்றது வெண்ண’ என்று மனதுக்குள் புலம்பியபடி ஓடினான்.

அவசரமாக ஓடி வந்தவனைப் பார்த்து மாலினி, “ஹே… என்ன இந்த ஒட்டம்?” என்றாள்.

“ஸ்போர்ட்ஸ் டே ஈவன்டுக்காக ப்ராக்டீஸ் பண்றன்” என்று சொல்லிவிட்டு லேப்டாப்பை எடுத்துக்கொண்டு விரைந்தான். ‘குட் ஜோக்’ என்று அவள் பதில் சொன்னது அவனுக்குப் பின்னால் மங்கலாகக் கேட்டது. லேப்டாப்பில் எவ்வளவு சார்ஜ் இருக்கிறது என்று தெரியவில்லை. பத்தரை மணிக்கு ரஹேஜா டவரில் இருக்க வேண்டுமென்றால் இங்கே 15 நிமிடங்களுக்கு மேல் பேச வாய்ப்பில்லை. 15 நிமிடங்கள் லேப்டாப் தாக்குப் பிடிக்கும்.

“கமான், ஸிட், ஸிட்…” என்றார் வி.பி. ராமச்சந்திரன். ஜே.எம்.டி. அமைதியாக உட்கார்ந்திருந்தார். மேஜை மீது லேப்டாப்பை வைத்து அதைத் திறக்கப் போனான்.

“இங்க பாருங்க ஷங்கர்” என்று ராமச்சந்திரன் தன்னுடைய லேப்டாப்பை அவர்களை நோக்கித் திருப்பினார். தானும் பார்க்க வசதியாகச் சற்றே தன் நாற்காலியை நகர்த்திக்கொண்டார். விசைப் பலகையைத் தன் மடி மீது வைத்துக்கொண்டு மவுசை வைத்து இயக்கினார். இரண்டும் தொலையுணர் கருவிகள் என்பதால் தூரத்திலிருந்தே இயக்கினார்.

திரையில் ஒரு பிபிடி பிரசன்டேஷன் ஓடியது. ஷங்கர் செய்ததுதான் அது. 100 கோடி மதிப்புள்ள புதிய திட்டத்திற்கான வரைவு அது. போன மாதமே அதைச் சமர்ப்பித்துவிட்டான். வாடிக்கையாளரிடமிருந்து பதில் எதுவும் வந்ததாகத் தெரியவில்லை. பதினைந்தாவது ஸ்லைடில் நிறுத்தினார். “படிங்க” என்றார். படித்தான்.

“இந்த எடத்துல கிளாரிட்டி இல்லன்னு கிளையன்ட் ஃபீல் பண்றாங்க” என்றார்.

“உங்க கிட்ட கேட்டுதானே சார் போட்டேன்…”

“நா சொன்னத நீங்க ஃபுல்லா அப்சர்வ் பண்ணிக்கல ஷங்கர். நானும் அவசரத்துல டச் பண்ணாம அனுப்பிட்டேன். இப்படி ஒரு ஸில்லி மிஸ்டேக் பண்ணியிருப்பீங்கன்னு நான் எப்படி எதிர்பார்க்க முடியும்? நீங்க என்ன ஃபிரஷ்ஷரா?” என்றார் குரலைச் சற்றே உயர்த்தியபடி.

“சார்…” என்றான் தயக்கத்துடன்…

“நோ எக்ஸ்ப்ளனேஷன் ஷங்கர். ஐ ஆம் நாட் இன்ட்ரெஸ்டட் இன் எக்ஸ்க்யூஸஸ் அன்ட் எக்ஸ்ப்லனேஷன்ஸ். ஐ வான்ட் டெலிவரி. ஐ வான்ட் எஃப்லாலஸ் ட்ராஃப்ட். காட் மை பாயின்ட்?” என வெடித்தார்.

“சார்….”

“எதுவும் பேசாதீங்க. எம் மண்டையே வெடிச்சிடும்போல இருக்கு” என்று இரண்டு கைகளையும் காதுகளுக்கு மேல் வைத்து அழுத்திக்கொண்டார்.

அப்போது அவர் மடியிலிருந்து விசைப்பலகை கீழே விழுந்தது. எடுத்துக்கொண்டு நிமிரும்போது அவர் முகம் இன்னும் சிவந்திருந்தது. நல்லவேளை குனியும்போது கண்ணாடி கீழே விழவில்லை என்று ஷங்கர் நினைத்துக்கொண்டான்.

அந்த இடத்தில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்று விளக்கினார். முற்றிலும் புதிய அம்சங்களைச் சொன்னார். போன முறை இதைப் பற்றியெல்லாம் பேசவே இல்லை. ஆனால், “இந்த முறையாவது கரெக்டா பண்ணி ஈவினிங் எவ்வளோ நேரமானாலும் அனுப்பிட்டு போங்க” என்ற சொல்லும்போது ஷங்கரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. வி.பி. இன்று வழக்கத்துக்கு அதிகமாக விறைப்பும் முறைப்பும் காட்டுவதைப் பார்த்தால் நாயரிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டிருப்பான் என்று தோன்றியது.

“நோட் த பாயின்ட்ஸ்” என்று ஒரு பேப்பரை எடுத்துக் கொடுத்தார். ஷங்கர் குறித்துக்கொண்டான்.

“சீக்கிரமா போய் வேலய ஆரம்பிங்க” என்றார். ஷங்கர் எழுந்துகொண்டான். அப்போது கருணாகரன் நாயர் அவனை நிமிர்ந்து பார்த்தார்.

“இது எவ்ளோ இம்போர்டெண்டுன்னு நிங்ஙள்க்கு மனசிலாகுதா?” என்று கேட்டார்.

“யெஸ் ஸார். ஷ்யூர் ஸார்” என்றான் படபடப்புடன்.

“பீ கேர்ஃபுள்” என்று சொல்லிவிட்டு எழுந்தார்.

“ராம், இத ஷங்கர் பண்றாரா அவங்க தாத்தா பண்றாரான்றதெல்லாம் எனக்குத் தெரியாது. ஈவ்னிங் ஐ நீட் திஸ். இட் ஈஸ் யுவர் ரென்பான்ஸிபிலிட்டி” என்று வி.பி.யைப் பார்த்துச் சொல்லிவிட்டு ஜே.எம்.டி. வேகமாக வெளியேறினார்.

ஷங்கர் பம்பியபடி இருக்கைக்கு வரும்போது மணி 10.45. ரஹேஜா டவர்ஸ் என்ன ஆயிற்று. என்ன எழவுக்காக லேப்டாப்பைக் கொண்டு வரச் சொல்லி மிரட்டினான். போனமுறை இதையெல்லாம் சொல்லாதது அவன் தப்பு. ஆனால், இப்போது என்னிடம் எகிறுகிறான். மாலைக்குள் எல்லாக் கணக்குகளையும் போட்டு அறிக்கையை முடிப்பது சாத்தியமே இல்லை. ஆனால், முடிக்காவிட்டால் கொட்டையை நசுக்கிவிடுவான். ஷங்கர் மனதுக்குள் புலம்பிக்கொண்டே வேலையைத் தொடங்கினான்.

“என்ன ஷங்கர், ஏதாவது ப்ராப்ளமா?” என்றாள் மாலினி.

“ப்ராப்ளம் இல்லாம நமக்கு என்னிக்கு விடிஞ்சிருக்கு?”

ந்தப் பையனும் பெண்ணும் ஒடுங்கியபடி நின்றிருந்தார்கள். சாலையோரத்தில் ஒரு காரும் அதன் பின்னால் ஒரு பைக்கும் நின்றிருந்தன. காரை பைக் இடித்திருப்பதற்கான அடையாளம் தெரிந்தது. வாட்டசாட்டமாக ஒரு ஆள் அந்தப் பையனைப் பார்த்து முறைத்துக்கொண்டும் திட்டிக்கொண்டும் இருந்தான். அனேகமாக அவன் அந்தக் காரை ஓட்டி வந்தவனாக இருக்கலாம். அவன் அந்தப் பையனை அடித்திருப்பான் என்பது தெளிவாகத் தெரிந்தது. சிவாவுக்குக் கோபம் வந்தது. அவர்களைச் சுற்றிலும் சிறு கூட்டம் நின்றிருந்தது. காரை ஓட்டி வந்தவனின் பேச்சு ஆணித்தரமாக இருந்தது. யாரும் அவன் பேச்சில் குறுக்கிடவில்லை.

சிவா தன்னுடைய பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு நான்கைந்து பேருக்கு போன் செய்தான். போனை பத்திரமாகப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு அந்தக் கூட்டத்தை நெருங்கினான். அந்தப் பையன் அருகே சென்று, “என்னப்பா பிரச்சினை” என்றான். போக்குவரத்து நெரிசலில் முன்னால் போன கார் திடீரென்று நின்றதில் தன்னால் கட்டுப்படுத்த முடியாமல் லேசாக இடித்துவிட்டதாகச் சொன்னான். அவர் முகவரி கொடுத்தால் நாளைக்கு வந்து பழுது பார்ப்பதற்கான பணத்தைத் தந்துவிடுவதாகச் சொன்னான். அதுவரை தன்னுடைய மொபைலை அவரிடம் தந்துவைப்பதாகவும் போலீஸ், பெற்றோர் என்ற விஷயத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் சொன்னான்.

“அடிச்சாரா?” என்று கேட்டான் சிவா. அந்தப் பையன் பரிதாபமாகத் தலையசைத்தான். அந்தப் பெண்ணும் கண்ணீர் கசியும் கண்களுடன் அதை உறுதிப்படுத்தினாள்.

சிவா கார் ஒட்டி வந்தவனைப் பார்த்துத் திரும்பினான். அவன் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்துவான் என்று அவன் எதிர்பார்த்திருந்தான். சிவா அவன் கண்களை நேராகப் பார்த்து, “பையனை எதுக்காக அடிச்சீங்க?” என்று கேட்டான். தெளிவான உறுதியான குரலில் கேட்டான். அந்தக் கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை. “உன் வண்டிய இடிச்சிருந்தா சும்மா வுட்ருப்பியா?” என்றான். “எதுக்காக அடிச்சீங்க?” என்று மறுபடியும் கேட்டான். “வண்டிய ரிப்பேர் பண்ணாம இங்கேருந்து ஒரு இஞ்ச் நகர மாட்டேன்” என்றான் அவன். இளைஞனின் பைக் சாவி அந்த ஆளிடம் இருந்தது. “ஏன் அடிச்சீங்க?” என்றான் சிவா.

“நீ என்ன கேட்டதையே கேட்டுக்கிட்டு இருக்க? வண்டிய இடிச்சா அடிக்கத்தான் செய்வாங்க” என்றான் அந்த ஆள்.

“இடிச்சதுக்கும் அடிச்சதுக்கும் சரியா போச்சு. அந்த வண்டிய எப்படி ஸ்டார்ட் பண்றதுன்னு எனக்குத் தெரியும். உங்களுக்கு நயா பைசா கிடைக்காது” என்றான் சிவா.

“நீ என்ன பெரிய ரவுடியா இல்ல போலீஸா பஞ்சாயத்து பண்ண வந்துட்ட? இங்கேர்ந்து ஒரு அடி அந்தப் பையன் நகர முடியாது. நான் யார் தெரியுமா?” என்றான்.

“கொஞ்ச நேரத்துல அஸிட்டென்ட் கமிஷனர் பேசுவாரு. அவர் கிட்ட நீ யாருன்னு சொல்லு” என்றான் சிவா. பிறகு நிதானமாக ஒரு சிகரெட் பற்றவைத்தான். “உனக்காச்சு, எனக்காச்சு. பாத்துரலாம்” என்றான். அதற்குள் அவன் அழைத்திருந்த நண்பர்கள் வந்தார்கள். கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. காவலர்கள் வந்தார்கள். பஞ்சாயத்து நடந்தது. பையனுடைய முகவரி, தொலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டார்கள். வண்டியைப் பழுதுபார்க்க நியாயமாக என்ன செலவு உண்டோ அதற்கு நான் உத்தரவாதம் என்றான் சிவா. அவனுடைய நண்பரும் காவல்துறை அதிகாரியுமான துரைசாமி காவலர் மூலம் அந்த ஆளிடம் தொலைபேசியில் பேசினார். இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்றார். அரை மணிநேரத்தில் விவகாரம் முடிந்து கூட்டம் கலைந்தது.

ன்னிக்கு என்ன டிஃபன்?”

“இட்லி”

“நேத்துதான இட்லி பண்ணின? தினமும் எப்டி இட்லி சாப்புட்றது?”

“மாவு இருக்கு. இன்னிக்கு பண்ணலன்னா புளிச்சிபோயிடும்.”

“மாவு புளிச்சா தோச ஊத்திருவியே, அப்புறம் என்ன?”

“இன்னிக்கு ஒரு நாள்தான?”

“என்னால முடியாது. நீங்கல்லாம் சாப்டுங்க. எனக்கு ரெண்டு சப்பாத்தி போட்டுக் குடு.”

“உங்களுக்கு மட்டும் சப்பாத்தின்னா பசங்க கேக்க மாட்டாங்களா?”

“கேட்டா சுட்டு குடு.”

“அப்ப இட்லி மாவ என்ன பண்றது?”

“கூடக்கூட பேசாத. எனக்கு இட்லி வேணாம். பசங்கள சமாளிக்கறது உன் தலவலி. நா ஏற்கனவே ஏகப்பட்ட டென்ஷன்ல இருக்கேன். கடுப்பேத்தாத.”

“…. ….. …..”

“என்னா முணுமுணுப்பு?”

“ஒண்ணுமில்ல”

டேட்டிங் சர்வீஸ் வேண்டுமா? தொடர்புகொள்ளுங்கள்’ என்ற செய்தி வந்திருந்தது. கூடவே ஒரு எண். நீண்ட யோசனைக்கும் தயக்கத்துக்கும் பிறகு பிரசாத் அந்த எண்ணை அழைத்தான். சிறிது நேரம் மணியடித்தது. பிறகு அழைப்பு துண்டிக்கப்பட்டது. ஐந்து நிமிடங்களில் அதே எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. “சொல்லுங்க சார், உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று ஒரு பெண் குரல் இந்தியில் கேட்டது. ஆங்கிலத்தில் பேச முடியுமா என்று இவன் ஆங்கிலத்தில் கேட்டான். சற்றே தடுமாற்றம் நிறைந்த ஆங்கிலத்தில் அந்தப் பெண் தொடர்ந்தாள்.

“உங்களுக்கு என்ன வேண்டும்?”

“இந்த எண்ணிலிருந்து ஒரு செய்தி வந்திருந்தது. டேட்டிங் சேவை தருவதாகச் சொன்னது.”

“ஆமாம் சார். நாங்கள் டேட்டிங் சேவை நிறுவனம் நடத்துகிறோம்.”

“என்ன சேவை வழங்குகிறீர்கள்?”

“எங்கள் நிறுவனத்தில் பதிவு செய்தால் நாங்கள் உங்கள் விருப்பத்திற்கேற்ற பெண்களின் தொடர்புகளைக் கொடுப்போம். நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்களோ அந்த ஊரில் இந்தச் சேவையைப் பெறலாம்.”

“சேவை என்றால்”

“உங்கள் விருப்பத்திற்கேற்ற பெண்ணைச் சந்திக்கலம். பேசலாம். வெளியில் போகலாம்.”

“அவ்வளவுதானா?”

“உடல் உறவும் வைத்துக்கொள்ளலாம்.”

பிரசாத்துக்கு மனம் பொங்கியது.

“எவ்வளவு செலவாகும்?”

“நாங்கள் உங்களுக்கு மேடம்களின் தொடர்பைக் கொடுப்போம். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். பணம் தர வேண்டாம்.”

“இலவசமாகவா?”

“பதிவுக் கட்டணம் உண்டு சார். மேடமுக்குப் பணம் தர வேண்டாம். அவர்கள் யாரும் பாலியல் தொழிலாளி கிடையாது. உங்களைப் போலத்தான்.”

“ஓ… அப்படியானால் எங்களுக்குத் தொடர்பு ஏற்படுத்தித் தருவதுதான் உங்கள் சேவையா?”

“ஆமாம் சார். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?”

“சென்னை.”

“சென்னையில் எங்களுக்கு நிறைய மேடம்ஸ் இருக்கிறார்கள். கல்லூரி மாணவிகள், திருமணமானவர்கள், விவாகரத்து ஆனவர்கள், விதவைகள் என்று பலர் இருக்கிறார்கள்.”

“நான் அடுத்த வாரம் ஹைதராபாத் போவேன். அங்கே இந்தச் சேவை கிடைக்குமா?”

“இந்தியா முழுவதும் கிடைக்கும் சார்.”

“பெண்களை நான் எப்படித் தேர்ந்தெடுப்பது?”

“இரண்டு மாதங்களுக்கு 2100 ரூபாய். வாரத்திற்கு இரண்டு மீட்டிங். பணம் கட்டினீர்கள் என்றால் உங்களுக்கு வாட்ஸப்பில் மேடம்ஸ் புகைப்படங்கள், விவரங்களை அனுப்புவோம். உங்கள் வாட்ஸப் எண் இதுதானே?”

“ஆமாம்.”

“அதில் வங்கிக் கணக்கு விவரங்களை அனுப்புகிறோம்.”

“மற்ற தகவல்களையும் சேர்த்து அனுப்புங்கள்.”

தொலைபேசியில் சொன்ன விவரங்களுடன் கூடுதலாகச் சில விவரங்களும் வந்தன. கணக்கு விவரமும் வந்தது. வாட்ஸப் செய்தியில் பணம் சம்பாதிக்கவும் வாய்ப்பு உண்டு என்று ஒரு வரி இருந்தது. அந்த எண்ணை மீண்டும் அழைத்தான்.

“சொல்லுங்க சார்?”

பிரசாத் தன்னுடைய சந்தேகத்தைக் கேட்டான்.

“எங்கள் தொடர்பில் சில மேடம்கள் இருக்கிறார்கள். அவர்களை நீங்கள் திருப்திப்படுத்தினால் பணம் தருவார்கள்.”

“எவ்வளவு?”

“5000, 10000….”

“ஓஹோ…..”

“சார், எப்போது பதிவு செய்கிறீர்கள்?”

“யோசித்துச் சொல்கிறேன்.”

“இவ்வளவு தூரம் விசாரித்துவிட்டு இப்போது இப்படிச் சொன்னால் எப்படி?”

“விவரம் தெரியாமல் முடிவெடுக்க முடியாது. விவரம் தெரிந்தாலும் உடனடியாக முடிவெடுக்க முடியாது. யோசிக்க வேண்டும்.”

“எவ்வளவு நாள் ஆகும் சார்?”

“இரண்டு வாரங்கள்.”

“இரண்டு வாரங்களா?”

“ஆமாம்.”

“சரி சார்.”

பிரசாரத்தின் மனம் பரபரக்க ஆரம்பித்தது. கல்லூரி மாணவிகள், இல்லதரசிகள், விதவைகள், விவாகரத்து ஆனவர்கள். அவனால் தான் கேட்டதையும் படித்ததையும் நம்ப முடியவில்லை. பெரிய இடத்துப் பெண்கள் சிலர் இதற்குப் பணமும் தருவார்கள். யார் கண்டது. இதுபோன்ற தொடர்புகள் ஆழமாகவும் உருவாகலாம். முயற்சி செய்து பார்த்தால் என்ன என்று அவனுக்குத் தோன்றியது.

ஆனால், கைப்பேசி, இணையம் ஆகியவை வழியாகப் பாலுறவு ஆசைகாட்டிப் பணம் பிடுங்கும் கும்பலைப் பற்றி அவன் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறான். பணம் கட்டுவதன் மூலம் தன்னுடைய வங்கிக் கணக்கு விவரம் அவர்களிடம் போய்விடும். வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் வித்தையும் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். சந்திக்க வரும் பெண்கள் நம்மைப் போல இல்லாமல் இந்த நிறுவனத்தின் ஆட்களாக இருக்கலாம். அவர்கள் ஏதாவது படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டலாம். உறவு வைத்துக்கொள்ளலாம் என்று கூட்டிப்போய் அந்த இடத்தில் நான்கைந்து பேர் சூழ்ந்துகொண்டு மிரட்டிப் பணம் பிடுங்கலாம். யூடியூப், இணையம் என்று மானத்தை வாங்கிவிடுவேன் என்று கூறி மிரட்டலாம். எப்படி நம்புவது?

இத்தனை சந்தேகங்களையும் தாண்டிப் பிரசாத்துக்குச் சபலம் எழுந்தது. என்னதான் ஆகிறது என்று பார்த்துவிடலாம் என்று நினைத்தான். ஆனாலும் பயம் நீங்கவில்லை. மாட்டிக்கொண்டால் பணம் போகும் என்பதோடு மானம் போகும். வீட்டிலும் மற்ற இடங்களிலும் அசிங்கப்பட வேண்டியிருக்கும்.

சபலமும் அச்சமும் அலைக்கழித்ததில் பிரசாத் குழம்பினான். தேவநாதனிடம் பேசலாம் என்று முடிவு செய்தான். தேவநாதன் முன்னணி ஊடகம் ஒன்றில் குற்றவியல் செய்திகளைக் கையாள்பவன். அவனிடம் யோசனை கேட்கலாம். ஆனால், தனக்கு என்று சொல்லி எப்படிக் கேட்பது?

நெடுநேரம் யோசித்த பிறகு ஒரு முடிவோடு தேவநாதனை அழைத்தான். “அர்ஜென்டா பேசணுமா?” என்றான் அவன். “இல்ல. எப்ப கூப்படலாம்?” “நானே எட்டு மணிக்கு மேல கூப்பட்றேன்.”

தேவநாதன் ஒன்பது மணிக்குக் கூப்பிட்டான். கைப்பேசித் திரையில் அவன் எண்ணைப் பார்த்ததும் பிரசாத் எழுந்து வெளியில் வந்தான்.

“சொல்லு ப்ரோ” என்றான் தேவநாதன்.

“என்னோட டிஸ்டன்ட் ரிலேட்டிவ் ஒருத்தர். மிடில் ஏஜ். அவருக்கு ஒரு ப்ராப்ளம்” என்றான் பிரசாத்.

பிரசாத்தின் உறவினர் செந்தில்நாதனுக்கு விவாகரத்து ஆகிவிட்டது. மனைவி வேறொருவருடன் தொடர்பு வைத்திருந்தார். விவாகரத்துக்குப் பின் அவரையே கல்யாணம் செய்துகொண்டுவிட்டார். செந்தில்நாதனுக்கு வசதி இருக்கிறது. குழந்தைகள் இல்லை. மனதில் ஆசை இருக்கிறது. ஆனால், இன்னொரு திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை. அப்போதுதான் தற்செயலாக டேட்டிங் சேவை நிறுவனம் பற்றித் தெரியவந்தது. ஆனால், நேரடியாகப் பணம் கட்டிச் சேர்ந்துகொள்ள பயமாக இருக்கிறது. ஏதாவது வம்பில் மாட்டிக்கொள்ளக் கூடாதே என்று பயப்படுகிறார். என்ன செய்யலாம்?

“அவருக்குதான் வசதி இருக்குல்ல? செக்ஸ் ஒர்க்கர்கிட்ட போக வேண்டியதுதானே?” என்றான் தேவநாதன்.

பாலியல் தொழிலாளியிடம் போவதென்றால் செலவு அதிகம் ஆகும். இவர்களோ இரண்டு மாதத்திற்கு 2100. அதில் 12 சேவைகள் என்கிறார்கள். அதில் சில பெண்கள் நமக்கே பணம் தருவார்களாம். இதைவிட்டுவிட்டுப் பாலியல் தொழிலாளியிடம் ஏன் பணம் செலவு செய்ய வேண்டும்?

“அதில்ல தேவா. அவருக்கு வேண்டியது செக்ஸ் மட்டுமல்ல. துணை. கம்பேனியன்ஷிப்.”

“அப்படீன்னா கல்யாணம் பண்ணிக்க சொல்லு.”

“அதுதான் வேண்டாம்னு முடிவோட இருக்காரே. இதோ பார் தேவா. அவர் கிட்ட நான் எல்லா ஆங்கிள்லயும் பேசிப் பாத்துட்டேன். அவரு இந்த ஆப்ஷன் பெட்டர்னு ஃபீல் பண்றாரு. நீ க்ரைம் ரிப்போர்ட்டரா இருக்கறதால உங்கிட்ட கேட்டு செய்யலாம்னு பாக்கறேன்.”

“க்ரைம் ரிப்போர்ட்டரா இருக்கறதாலதான் இவ்ளோ கேள்வி கேக்கறேன். இன்னிக்கு செக்ஸ் இண்டஸ்ட்ரி மாதிரி பணம் பிடுங்கற இண்ட்ஸ்ட்ரி வேற எதுவும் இல்ல. டீன் ஏஜ் பசங்கள்லேந்து பல்லுபோன கெழவன்வரைக்கும் இதுல சிக்கி சின்னாபின்னமாயிருக்காங்க. லேடீஸும் இந்த மாதிரி முயற்சில இறங்கி மாட்டிட்டு முழிக்காறங்க. போன மாசம்கூட என் பழைய ஃப்ரெண்டு ஒருத்தி இதுமாதிரி சிக்கல்ல மாட்டிக்கிட்டா. சொசைட்டில நல்ல பொசிஷன்ல இருக்கா. எப்படியாவது இதுலேந்து காப்பாத்து தேவ்னு கெஞ்சினா. எப்படியோ பிரச்சினைய முடிச்சி குடுத்தேன்.”

“அதுனாலதான் உங்கிட்ட வந்துருக்கேன்.”

“உட மாட்டியே…. நீ நம்பர், மெசேஜ் எல்லாத்தையும் ஃபார்வேர்ட் பண்ணு.”

எல்லாவற்றையும் அனுப்பிய பிரசாத் இந்த நிறுவனத்தின் மூலம் சந்திக்கக்கூடிய பெண்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். கல்லூரி மாணவிகள் வேண்டாம் என்று முடிவு செய்தான். 35 வயதான பெண்களில் இல்லத்தரசிகள், விதவைகள், விவாகரத்தானவர்கள் ஆகிய வகைமைகளிலிருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தான்.

தேவா ஒரு வாரம் கழித்து அழைத்தான்.

“சொல்லு தேவா.”

“இந்த பர்டிகுலர் கம்பெனிய பத்தி பெரிசா யாருக்கும் தெரியல. நம்பர போட்டா தகவல் எல்லாம் கரெக்டா வருது. ட்ரூ காலர் ஐடிய பாத்துட்டு அந்த நம்பரை செக் பண்ணிட்டுதான் கால் பண்றாங்கபோல. இதுவரைக்கும் இவங்கள பத்தி ரிப்போர்ட் எதுவும் வந்தா மாதிரி தெரியல. ஆனா அவங்க இவ்ளோ சீப்பா ஆஃபர் பண்றத பாத்தா சந்தேகம் வருது. அடுத்தடுத்த கட்டத்துல வேற வேற காரணம் சொல்லி கூடுதலா பணம் டிமாண்ட் பண்ணுவாங்கன்னும் சிலர் சொல்றாங்க. பண விஷயத்துல ரிஸ்க் எடுக்கத் தயாரா இருந்தா உங்க ரிலேட்டிவ எக்ஸ்பெரிமென்ட் பண்ண சொல்லு. அவர் நம்பர், ஆல்டர்னேட்டிவ் நம்பர் எல்லாம் எங்கிட்ட குடு. எதுனா பிரச்சின வந்தா பாத்துக்கலாம். டேட்டிங்ன்றது இல்லீகல் இல்லன்றதுனால போலீஸ்கிட்ட போறதுக்கு பிரச்சன எதுவும் இருக்காதுன்னு நெனைக்கறேன்.”

“தேங்ஸ் தேவா. நான் அவர் கிட்ட சொல்லிடறேன்.”

இன்னமும் பிரசாத்துக்கு முழு தைரியம் வரவில்லை. எல்லாம் சரியாக அமைந்தால் அதிருஷ்டம்தான். தவறாகிப் போனால் என்ன செய்வது? பிரச்சினை வந்தால் தேவாவிடம் என்ன சொல்வது? பதிவுசெய்த பிறகு வேறொரு காரணம் சொல்லிப் பணம் கேட்டால் என்ன செய்வது?

பிரசாத் நெடுநேரம் யோசித்தான். ராத்திரிக்கு என்ன டிபன் வேண்டும் என்ற கேட்ட மனைவியிடம் எரிந்து விழுந்தான். தொலைக்காட்சியை சத்தமாக வைத்து மேட்ச் பார்த்துக்கொண்டிருந்த மகனைத் திட்டினான். பிறகு ஒரு திட்டம் தீட்டினான்.

செந்தில் பயப்படுகிறார். அவருக்காக நானே அந்த நிறுவனத்தைத் தொடர்புகொண்டு பதிவுசெய்துகொள்ளப்போகிறேன். முழுமையாக விவரம் அறிந்துகொண்டு அவருக்குச் சொல்லப்போகிறேன். இதில் எனக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தேவாவுக்கு இது பிடிக்கவில்லை. “தேவையில்லாத வேலைல எறங்கற. வார்ன் பண்ணிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்.”

“செந்தில்நாதன் எனக்கு ரொம்ப வேண்டியவர் தேவா. அவருக்காக இந்த உதவிய நான் செஞ்சிதான் ஆகணும்.”

ன்ன ஆச்சு மாலினி, இன்னிக்கு ரொம்ப நேரமா உக்காந்துருக்கீங்க?”

“அத ஏன் கேக்கறீங்க ஷங்கர்…. ஒரு அசைன்மென்ட் முடிக்கணும். அது முடியாம ஜவ்வு மாதிரி இழுக்குது. என்ன பண்றதுன்னு தெரியல.”

“கட்டைய எடுத்து சட்டுனு மாட்டி ஸ்க்ரூ பண்றா மாதிரிதானே உங்க அசைன்மென்ட் எல்லாம் இருக்கும். கட்ட எப்படி ஜவ்வா மாறிச்சி?”

“அட போங்கப்பா. ஜோக்கெல்லாம் கேக்கற மூட்ல இல்ல. அடுத்த மாசம் எம் பையனுக்கு டென்த் எக்ஸாம் ஆரம்பிக்குது. அவனோட ஒக்காரணும். இந்த அசைன்மென்ட் முடிச்சிட்டா ரெண்டு வாரம் லீவு போடலாம்னு இருக்கேன்.”

“அதுல என்ன பிரச்சனன்னுதான் கேக்கறேன்.”

“ட்ரெய்னீ ரெக்டூட்மென்ட் ஸ்கீம் ஒண்ணு போயிட்டு இருக்குல்ல? அதுக்கான ஸ்ட்ராட்டஜி பிளானிங் பண்ணணும்னு வி.பி. குடுத்தாரு. போன வருஷம் பண்ணினா மாதிரி பண்ணி குடுத்தேன். இந்த வருஷம் பார்ட்னர்ஸ் அதிகமா சேந்துருக்காங்க, ட்ரெய்னிங் மாட்யூலும் மாறுது, ட்ரெய்னீஸ அப்சார்ப் பண்ற பாலிசிலயும் சேஞ்ச் இருக்குன்னு சொல்லி ரீவொர்க் பண்ண சொல்லிட்டான். இந்த எழவையெல்லாம் முன்னாலயே சொல்லியிருக்கக் கூடாதா சனியன் புடிச்சவன். டீடெய்ல்ஸ் கேட்டேன். பார்ட்னர்ஸ் கிட்டேந்து வந்த மெய்ல்ஸ், ஹெச்.ஆர். கம்யூனிகேஷன்ஸ் எல்லாத்தையும் அனுப்பிட்டான். இப்ப அதையெல்லாம் பாத்து டீட்டெய்ல்ஸ் எடுக்கணும். அதுதான் பேசிக் டேட்டா. அப்புறம் அதை ப்ராசஸ் பண்ணணும். அதுக்கப்புறம் ஸ்ட்ராட்டஜி அவுட்லைன் குடுக்கணும்.”

“சிக்கல்தான். நீங்கள் ஒண்ணு பண்ணுங்க. டீட்டெய்ல்ஸ் எடுத்து பென்ட்ரைவ்ல எங்ககிட்ட குடத்துருங்க. மெயில்ல அனுப்பினா ரெக்கார்ட் ஆயிடும். பென்ட்ரைவ்ல குடுங்க. நான் வீட்டுக்கு எடுத்துட்டு போய் ப்ராசஸ் பண்றேன். எடுக்க எடுக்க குடுத்துடுங்க. நான் டக்குனு முடிச்சிடுவேன். நீங்க அப்புறமா ஒரு வாரத்துல ஸ்ட்ராட்டஜி அவுட்லைன் போட்டுரலாம்.”

“நெஜமாவா சொல்றீங்க ஷங்கர்? உங்களுக்கு டயம் இருக்குமா?”

“நைட்லதான் பண்ணபோறேன். ஒருவாரம் ஓடிடி பக்கம் போகாம இருந்தா போச்சு. அப்புறம் சேத்துவெச்சு பாத்துக்கலாம்.”

“தேங்ஸ் ஷங்கர்.”

“இட்ஸ் ஓகே. டீட்டெய்ல்ஸ் எடுங்க மொதல்ல.”

ஷங்கர் கிளம்பினான். “டயமாயிடிச்சே மாலினி, உங்களை டி.நகர்ல ட்ராப் பண்ணட்டுமா?”

“அஞ்சு நிமிஷம் வெயிட் பண்றீங்களா?”

“நான் வண்டிய எடுத்துட்டு மெயின் கேட் பக்கத்துல நிக்கறேன். வந்துடுங்க.”

மாலினி தனசேகரை அழைத்தாள். “நீ நேரா வீட்டுக்கு வந்துரு. என்னை என் கலீக் ட்ராப் பண்ணிடுவாரு.”

“யாரு? மாதவனா?”

“இல்ல. அவர் எப்பவோ ரிசைன் பண்ணிட்டாரு. இது ஷங்கர். நைஸ் கய்.”

“ஓ… ஃபைன்… சரி, பை….”

“வெயிட், வெயிட். லீவு போட முடியாதுன்னு சென்னேன்ல, இப்ப போட முடியும்னு தோணுது. தேங்ஸ் டு ஷங்கர். ட்ரெய்னீ ஸ்கீம்ல அவர்தான் ஹெல்ப் பண்றாரு. சீக்கிரம் முடிச்சிடலாம்னு நெனைக்கறேன்.”

“ஓ… பரவால்லியே…”

“யா. நைஸ் கய். லேடீஸ்க்கு ஹெல்ப் பண்ணிட்டு ஏதாவது ஒரு விதத்துல அட்வான்டேஜ் எடுக்கற டைப் இல்ல. ஸோ, நோ வொரீஸ்…”

“சூப்பர் சூப்பர்… சரி வா, வீட்ல பேசிக்கலாம்… பை…”

“பை…”

மூர்த்தி, ஃப்ரீயா இருக்கியா?”

“ஒர்க் போயிட்ருக்கு சார். பரவாயில்ல சொல்லுங்க.”

“காஃபி சாப்படலாமா?”

“ஷ்யூர் சார். கான்டீனுக்கு வந்துரவா?”

“கான்டீன் வாணாம். அங்க நம்ல கம்பெனி ஆளுங்க எதிர்ல எதுவும் பேச முடியாது. நீ எதிர்க்க இருக்கற டீக்கடைக்கு வந்துரு.”

“சரி சார்.”

ஷங்கர் கிளம்பினான். அந்த டீக்கடையில் மாலை அருமையான சட்னியுடன் சுடச்சுட போண்டா பஜ்ஜி வகையறாக்கள் கிடைக்கும். ஆளுக்கு ஒரு தட்டு போண்டா வாங்கிக்கொண்டு ஓரமாக வந்தார்கள். அக்கம்பக்கத்து அலுவலகங்களில் பணிபுரியும் பலரும் தத்தமது அலுவலகங்களில் டீ, காபி, நொறுக்குத் தீனி வகையறாக்கள் கிடைத்தாலும் இந்த டீக்கடைக்கு வந்து போண்டா, பஜ்ஜி, வடை என்று எதையாவது சாப்பிட்டு டீ குடிப்பது வழக்கம். ஷங்கர் ஐந்து ஆண்டுகளாக இந்தக் கடையின் வாடிக்கையாளர். நாளுக்கு நாள் கடையின் வியாபாரம் வளர்வதைப் பார்த்துவருகிறான். ‘டீயும் பஜ்ஜியும் வித்தே கோடீஸ்வரனாயிருப்பான். எதையெதையோ படிச்சி கிழிச்சி நாம என்ன சம்பாரிச்சிட்டோம்’ என்று நினைத்துக்கொள்வான்.

“சொல்லுங்க சார்…” என்றான் கிருஷ்ணமூர்த்தி.

“போன வாரம் கம்பெனி விஷயமா பேங்ளூர் போயிருந்தல்ல?”

“ஆமா சார். ட்ராவல் ரிப்போர்ட், அக்கவுண்ட்ஸ் எல்லாம் சப்மிட் பண்ணிட்டேன்.”

“பாத்தேன். ரிப்போர்ட்டை மேல அனுப்பிட்டேன். அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட்ல இன்னும் சைன் பண்ணல.”

மூர்த்தியின் முகம் மாறியது. “ஏன் சார், ஏதாவது ப்ராப்ளமா? கணக்கெல்லாம் கரெக்டாதானே குடுத்துருந்தேன்…”

“அதுதான் ப்ராப்ளம்.”

மூர்த்தி குழம்பினான். ஷங்கர் தொடர்ந்தான்.

“டூர் போயிட்டு வந்த பிறகு உன் கைல எவ்ளோ நின்னுது?”

“புரியல சார். எங் கையலயா… ஒண்ணுமில்ல சார்.”

“மூர்த்தி, நீ இந்த கம்பெனில சேந்து எவ்ளோ நாள் ஆகுது?”

“ரெண்டு வருஷம் ஆகப்போகுது சார்.”

“நான் வந்து ஆறு வருஷம் ஆகுது. இந்த கம்பெனிய பத்தி உன்னவிட எனக்கு நல்லா தெரியும்.”

“ஆமா சார். நீங்க சீனியர்…”

“என்ன மயிறு சீனியர்…. எப்பவும் சீட்டுல ரெண்டு ஊசிய சொருகி வெச்சிருக்கான் அந்த வி.பி. பாத்து பாத்து ஒக்கார வேண்டியிருக்கு. கொஞ்சம் அஜாக்ரதயா இருந்தாலும் குண்டி பழுத்துரும்.”

மூர்த்தி ஒன்றும் பேசவில்லை.

“இவனுங்க கோடிக்கணக்கா சம்பாரிக்க எத்தனையோ டகால்டி வேல பண்றாங்க. பல டுபாகூர் வேலைகளுக்கு நானும் என்னப்போல நெறய சீனியர்ஸும் உடந்தை. எங்களுக்கு என்ன குடுக்கறான்? எல்லாத்தையும் அவனே உட்டுக்குறான். நமக்கு சீட்டுல ஊசிய சொருவி எப்பவும் டென்ஷன்ல வெக்கறான். இவனா எதுவும் குடுக்க மாட்டான். நாமாதான் எடுக்கணும்.”

“புரியல சார்…”

காலியான தட்டை எடுத்துக்கொண்டு ஷங்கர் நடந்தான். அதைத் தொட்டியில் போட்டுவிட்டுக் கை கழுவிக்கொண்டு டீ போடும் இடத்துக்குப் போனான். மூர்த்தியும் பின்தொடர்ந்தான்.

டீ வாங்கிக்கொண்டு மறுபடியும் ஓரமாக வந்து நின்றார்கள். மூர்த்தி அடிக்கடி கண்ணாடியைச் சரிசெய்துகொண்டே ஷங்கரின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“கணக்கெல்லாம் கரெக்டா குடுக்க கூடாது. கம்பெனிக்காக ரெண்டு நாள் டூர் போனா நம்ம கைல ரெண்டாயிரம், மூவாயிரம் நிக்கணும். எப்டி கணக்க எழுதறதுன்னு நான் சொல்லித்தரேன். வேற ஸ்டேட்மென்ட் குடு.”

“சார்… இது தப்பில்லயா சார்…”

“ஒரு மயிறும் தப்பில்ல. அவன் நம்பள தினமும் சூத்தடிக்கறான். நாம என்னிக்கோ ஒருநாள் திருப்பி அடிக்கறோம். இவுனுக்கெல்லாம் இதுதான் சரி. இன்னும் கொஞ்ச நாள் போனா நீயே தெரிஞ்சிப்ப. போனவாட்டி அப்ரைசல்ல உனக்கு எவ்ளோ குடுத்தான்?”

“ஒண்ணுமேயில்ல சார். ரொம்ப கம்மி.”

“பாத்தியா. நீ மாடு மாடு மாரி உழைக்கற. அவன் உன்ன குப்புற படுக்கவெச்சி சூத்தடிக்கறான். நீயும் காட்டிகினே இருப்ப. ஒருநாள் சூத்து புண்ணாயிடுச்சின்னு அழுவ. மருந்து போடறதுக்காவது பணம் வேணாமா?”

மூர்த்தி பரிதாபமாகப் பார்த்தான்.

“ரொம்ப யோசிக்காத. இந்த ஆபீஸ்ல எம்.டி. வெரிக்கும் இததான் பண்றானுங்க. எல்லாத்தையும் பாத்துட்டுதான் நான் இந்த முடிவுக்கு வந்தேன். மூவாயிரம் ரூபா உனக்கும் எனக்கும் பெருசு. கம்பெனிக்கு அது பிச்சக்காசு. நமக்கு தர வேண்டியத அவன் நியாயமா தர்ரதில்ல. நம்ம இப்டி எட்த்துக்க வேண்டித்தான். நீ ஏழு மணிக்கு மேல சீட்டுக்கு வா. எப்டி கணக்கு எழுதறதுன்னு சொல்லித்தரேன்.

மூர்த்தி தயக்கத்துடன் தலையாட்டினான். ஷங்கர் பணம் கொடுப்பதற்காகக் கல்லாவுக்குச் சென்றான்.

சிவா எலியட்ஸ் கடற்கரை அருகே உள்ள சிறிய பழரசக் கடைக்குப் போய்ச் சேர்ந்தபோது இரவு மணி பத்து இருக்கும். கடை மூடியிருந்தாலும் கடையின் பெயர்ப் பலகை பளிச்சென்று தெரியுமளவுக்குப் பலகைமீது ஒரு விளக்கு ஒளிர்ந்துகொண்டிருந்தது. பைக்கை நிறுத்திவிட்டுக் கைப்பேசியின் கூகிள் வரைபடத்தை மூடிவிட்டு சிவா அந்தக் கடைவாசலை நெருங்கினான். மகேஷும் அவன் காதலி ஆஷாவும் கையைக் கட்டியபடி ஓரமாக நின்றிருந்தார்க்ள. மகேஷ் ‘ஏண்டா லேட்டு” என்பதுபோல ஒரு பார்வை பார்த்தான். காவல் அதிகாரியைப் பார்த்து சிவா, “ஸாரி சார், இவங்க வீட்டுக்குப் போய் டாகுமெண்ட்ஸ் கலெக்ட் பண்ணிட்டு வர லேட்டாயிடிச்சு” என்று மகேஷுக்கும் சேர்த்து பதில் சொன்னான். ஆஷா கையில்லாத டி- ஷர்ட்டும் கணுக்காலுக்கு மேல் ஏறிய இறுக்கமான ஜீன்ஸும் போட்டிருந்தாள். மருட்சியோடு சிவாவின் கண்களை ஒருமுறை பார்த்துவிட்டுக் கண்களைத் தாழ்த்திக்கொண்டாள்.

சிவா காவல்துறை அதிகாரியிடம் அமைதியாகவும் நிதானமாகவும் பேசினான். அதிகாரி மகேஷின் வண்டிக்கான ஆவணங்கள், அவனுடைய அடையாள அட்டை ஆகியவற்றைப் பார்வையிட்டார். சிவா அங்கே வருவதற்கு முன்பே சிவாவின் நண்பரான காவல்துறை அதிகாரி இந்த அதிகாரியை அழைத்துப் பேசிவிட்டதால் பிரச்சினை எதுவும் ஆகவில்லை.

“உங்க ஃப்ரெண்ட கூப்டுங்க” என்றார் அதிகாரி.

சிவா, மகேஷை அழைத்தான். ஆஷாவும் உடன் வந்தாள்.

“இவ்வளோ நேரத்துக்கு மேல இந்த மாதிரி எடத்துக்கு ரெண்டு பேர் மட்டும் தனியா வர்ரது சேஃப் கிடயாது. பெரிய ஆபீஸ்ல வேல பாக்கறீங்க. படிச்சிருக்கீங்க. இந்த சிம்பிள் மேட்டர் உங்களக்குத் தெரியாதா? இங்க ஒரு மாசத்துக்கு எவ்ளோ சம்பவம் நடக்குது தெரிமா? லவர்ஸ் தனியா இருக்கணும்னு இங்க வராங்க. அவங்க தனியா வருவாங்கன்னு தெரிஞ்சே ரவுடீஸ் அவங்கள டார்கெட் பண்றாங்க. ஏதாவது ஆகியிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க? ஏம்மா, உனக்காவது தெரிய வாணாம்? அதுல வேற இவரு எந்த டாகுமென்ட்டும் இல்லாம ட்ராவல் பண்றாரு. லைசன்ஸ் இல்லாம வண்டியே எடுக்கக் கூடாது. உங்க பேக்ரவுண்ட பாத்துதான் உடறேன். இனி இந்த மாதிரி பண்ணாதீங்க” என்றார்.

மகேஷும் ஆஷாவும் நன்றியோடு தலையசைத்தார்கள். மகேஷ் அதிகாரியிடம் “தேங்க் யூ சார்” என்று கை கொடுத்தான். அவர் மிடுக்கோடு கை குலுக்கிவிட்டு, “பத்ரமா போங்க” என்றார். சிவா, “தேங்க்யூ சார்” என்று கை குலுக்க முன்வந்தபோது, “நீங்க லைசன்ஸ் வெச்சிருக்கீங்களா?” என்று அதிகாரி கேட்டார். அவர் பக்கத்தில் நின்றிருந்த காவலர் மெலிதாக முறுவலிப்பதை சிவாவால் பார்க்க முடிந்தது. சிரித்துக்கொண்டே தன் பர்ஸை எடுத்து ஓட்டுநர் உரிமம், நிறுவன அடையாள அட்டை ஆகியவற்றைக் காட்டினான்.

உரிமத்தைப் பார்வையிட்டவாறே, “துரைசாமி சாரை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றார்.

“சின்ன வயசிலிருந்தே பழக்கம். நானும் அவரும் காலேஜ் ஃபுட்பால் டீம்ல ஒண்ணா விளையாடியிருக்கோம்.”

“ஓ… இப்பவும் வௌயாடுவீங்களா?”

“ப்ச…. இல்ல சார். ஐ.டி. இண்டஸ்ட்ரி என்னைப் போல ஸ்போர்ட்ஸ் பர்சன்ஸையெல்லாம் காயடிச்சிடிச்சி.”

அதிகாரி புன்னகை புரிந்தார். “உங்க பேர் என்ன?” என்றார்.

“சிவா.”

“இதுல வேறமாரி போட்ருக்கு?”

“சிவஷங்கர்.”

“இல்லியே…”

சிவா சிரித்தபடி, “சிவ ஷங்கர் பிரசாத்னு போட்டிருக்கும் சார்” என்றான்.

“போலீஸ்ல, கவர்ன்மென்ட் டிபார்ட்மென்ட்ல எல்லாம் பேர கேட்டா முழுசா அஃபிஷியல் பேர சொல்லுங்க. அதுதான் முறை” என்றார் அதிகாரி.

“சரி சார்.”

“கௌம்புங்க. உங்க ஃப்ரெண்டை சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க.”

“தேங்க்யூ சார்.”

StoryJudge: TamilOsai on Air with Siva Durai: இந்த வார இலக்கியம்

லிட்ஃபெஸ்ட் செல்லும் முன் நடந்தது:
இந்தியாவின் பிரபலமான இலக்கிய முகவர்: “இந்த மாதிரியான கதை இந்தியாவில் வேலை செய்யாது.”
ஆனால் என் முகவர்: “உங்களிடம் திறன் இருக்கிறது. இதை நான் வெற்றி பெறச் செய்கிறேன்.”
என்ன நடந்தது… அது இறுதியில்

நான்கு வாரமாக “சென்ற வார இலக்கியம்” குறித்த அறிமுகப் பதிவு இடவில்லை.

டாக்-ஜட்ஜ் தினேஷ் என்றால் பாஸ்டன் வந்து வட்டியும் முதலுமாக வசூலித்திருப்பார்.
ஸ்டோரி-ஜட்ஜ் சிவா சாந்த சொரூபி.

அதனால் தான் இந்த வாரம் பெருமாள், தேசாந்திரி, ஆசான் என எல்லோருக்கும் 33.33%.

அவர் உன்னதம்.
நான் என்றும் ஞானபீடம்.

அவர் இலக்கிய கோளாறு.
நான் அசல் கோலார்.

அதிருக்கட்டும்.

5 இல் பேசியது:

1. நல்லக்கண்ணு x சோ.தர்மன்: த.மு.க.எ.ச x இயக்கம் சாரா எழுத்து - இலக்கியத்திற்குள் இருக்கும் இடது/மார்க்சிஸ்ட் அரசியல்
2. அகழ் & வல்லினம் இதழ்
3. வண்ணநிலவன், போகன் சங்கர், சுரேஷ் வெங்கடாத்ரி இன்ன பிறர் விவாதத்தில்: ஜெயகாந்தன் வெகுசனமும் x தி. ஜானகிராமனின் காமத்துப்பாலும்

6 இல் பேசியது:

1. வரலாற்றாய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய களப்பிரர் ஆட்சியில் தமிழகம் நூலை : களப்பிரர் காலத்து இலங்கை - பாலா கருப்பசாமி
2. வாசகசாலை : ஆலிவ் விதைகளைச் சுமந்த அகதி – ஷாராஜ் குறுநாவல்
3. ஞானபீடம் : ஜெயமோகன் ஏன் பொங்கினார்? - வைரமுத்து, கங்கை அமரன், பஞ்சு அருணாச்சலம் என நீளும் பாடல் நோபல்

7 இல் பேசியது:

1. எஸ். ராமகிருஷ்ணன் - அமைதிப் புயல்: அட்சரம் முதல் அகிலம்!
2. ஆனந்த சந்திரிகை & இயல் | சிறார் மின்னிதழ்
3. 2026 - எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருது - க. மோகனரங்கன்.

8 இல் பேசியது:

1. விபரீத ராஜயோகமும் அகத்திக்கீரை தண்ணிச்சாறும் - சாரு நிவேதிதா கதை
2. விமலாதித்த மாமல்லனின் சிபிஐ கதைகள் தொகுப்பு - நியாயங்களின் திரிசங்கு: காளிப்பிரசாத்
3. இலக்கியம் பற்றிய தவறான புரிதல்கள் : சுரேஷ் ப்ரதீப்

மேலும்:
வல்லினம்
அ) டோன் கனவில் கண்ட இல்லறம் by ஷஃபிக் கசாலி : தமிழில்: சல்மா தினேசுவரி
‘Bahagia di Dalam Balang Kaca’ சிறுகதை தொகுப்பில் வெளியிடப்பட்டது. (மலேசிய புத்தக மற்றும் மொழிபெயர்ப்பு நிறுவனம், 2016); ‘Cerpen Syafiq Ghazali’ (Buku Fixi, 2024) இல் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

ஆ) பனிக்குடில் by ரோஸ்லான் ஜொமெல் : தமிழில்: பிருத்விராஜூ
‘செரங்கா டீ டாலாம் கெப்பாலா’ (Serangga di Dalam Kepala) எனும் சிறுகதை தொகுப்பில் இடம்பெற்றது.

இ) அப்பா தற்கொலை செய்து இறந்தார் by நூர் அடிலா : தமிழில்: ஆசிர் லாவண்யா
ஸ்வரா இதழ் 5இல் (ஜனவரி-மார்ச் 2021) இல் வெளியிடப்பட்டது. தும்பொ மென்ஜாடி போஹோன் சகுரா (Tumbuh Menjadi Pohon Sakura) (கவா புத்தகம், 2024) என்ற சிறுகதைத் தொகுப்பில் சேர்க்கப்பட்டது.

ஈ) பெண்களின் நாட்டியம் by ஃபஸ்லீனா ஹிஷாமுடின் : தமிழில்: கி. இளம்பூரணன்
‘வனித்தா’ இதழில் (செப்.2017) வெளியிடப்பட்டது. ‘தாரி பசார் பெரெம்புவான்’ சிறுகதை தொகுப்பில் (Roman Buku, 2018) இடம்பெற்றது

உ) மூன்று பெண்களின் உரையாடல் by ரெஜினா இப்ராஹிம் : தமிழில்: விஜயலட்சுமி
சிறுகதைத் தொகுப்பில் (புக்கு ஃபிக்ஸி, 2015) வெளியிடப்பட்டது. இந்தச் சிறுகதை, புக்கு ஃபிக்ஸி மற்றும் புத்ரஜெயா சர்வதேச புத்தகக் கண்காட்சியின் ஏற்பாட்டில், 2015ஆம் ஆண்டின் சிறந்த இருபது சிறுகதைகளுள் (புக்கு ஃபிக்ஸி, 2016) ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஊ) சிறுகதை → பேங்கோ → by சுனில் கிருஷ்ணன்
எ) சிறுகதை → சுழலும் ஆழி → by கமலதேவி
ஏ) சிறுகதை → நச்சுப்புன்னகை → by கெளதம் நாராயணன்
ஐ) சிறுகதை → பெருமுலை → by பிரபு முருகானந்தம்
ஒ) கட்டுரை → மொழியும் சொல்லும் → by அ.பாண்டியன்
ஓ) மலாய் சிறுகதைகளை தமிழுக்கு மொழிபெயர்க்கும் பணி
ஔ) கட்டுரை → கலை பண்பாடு ஆவணமாக்கல் → by ரம்யா
ஃ) புத்தகப்பார்வை → நாடு விட்டு நாடு: தனிமனிதக் கதையில் சமூக ஆவணம் → by இன்பா
க) பதிவு → முன்னோடிகளின் வரிசையில் → by அரவின் குமார்

வாசகசாலை

  1. எழுத்தாளர் சுபியின் யாறு, பன்னிரண்டு சிறுகதைகளைக் கொண்ட யாறு – சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து : —> ஆழ்மனத் திசைகள் – ராஜேஷ் வைரபாண்டியன்
  2. செங்காட்டுப் பூ :: சிறுகதைத் தொகுப்பு ::முகிலன் பாரதி ::தமிழ் வெளி வெளியீடு —> தடமற்ற வாழ்வில் தடயமற்ற வாக்குறுதிகளின் நகரதலில்… – இளையவன் சிவா
  3. கவிஞர் நரனின் கவிதைத் தொகுப்பின் தலைப்பு ‘மிளகு-பருத்தி- மற்றும் யானைகள்’. சால்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். 2020ஆம் ஆண்டில் வெளிவந்த புத்தகம். :: -தயாஜி, மலேசியா
  4. பழைய கணக்கு (வாத்தியார்)…..! – கே.ரவிஷங்கர் சிறுகதை
  5. முத்தத்தின் வாசனை! – ராம் சங்கர் சிறுகதை
  6. வேரல் புக்ஸ் வெளியிட்டுள்ள எழுத்தாளர், கவிஞர் கண்ணன் விஸ்வகாந்தி அவர்களின் தாழ்வரை நாவல் பற்றிய கண்ணோட்டம் – கமலா முரளி
  7. குணுக்கம் – சுதர்சன் சிறுகதை
  8. எடுபிடி – கனகா பாலன் சிறுகதை
  9. அந்த இரண்டாயிரம் ரூபாய் சிறுகதை —> ந. அருண் பிரகாஷ் ராஜ்

அகழ்
அ) நேர்காணல் · மம்மர் அறுக்கும் மருந்து (1) – “நமது பல்கலைக்கழகங்கள் வெறும் வகுப்பறைகளாகச் சுருங்கிவிட்டன!” : பெருமாள்முருகன் – விஜயகுமார்
ஆ) ஈழ இலக்கியம்·சிறுகதைகள் · கட்டுச் சோறு : சு. தவச்செல்வன்
இ) நகுலனின் “நினைவுப் பாதை” நாவல் குறித்த “அஹம் மந்திராஸ்மி” கட்டுரை : விஷால் ராஜா

கனலி

  1. நீலவியாபகம் By சு. வெங்கட்
  2. சுருட்டை By கிரிசாந்
  3. நூல் விமர்சனம் : ராஜம் கிருஷ்ணன் கட்டியெழுப்பியமணலூர் மணியம்மையின் வரலாற்றுச் சித்திரம் By சுப்பிரமணி இரமேஷ்

எஸ்.ரா

https://www.sramakrishnan.com/category/cat-60/

அ) தங்கள் பொறுப்பு
ஆ) நிழலானை
இ) நீரறியா அன்னங்கள்
ஈ) காற்றில் மிதக்கிறோம்
உ) கிளி சொல்லாதது
ஊ) தொடுவிரல்
எ) மன்னிப்பு : EMI வசதி உண்டு
ஏ) ஐந்தாவது எம்.ஏ.
ஐ) பறக்கத் தெரிந்த யானை

நிற்க…
துவக்கத்தில் சொன்ன சம்பவம்?

இரு வழிகள்:

  1. என்ன நடந்தது என்றால்…
    கதை இந்தியாவில் வேலை செய்யவில்லை.
    ஆனால் கொரியாவில் நூறாயிரம் பிரதிகள் விற்றது.
    “இந்திய ஆன்மா, யுனிவர்சல் வலி” என்று அவர்கள் சொன்னார்கள்.
  2. கதை published ஆனது.
    Reviews வந்தது — “derivative, over-written, tries too hard.”
    வெளிநாட்டிற்காக இன்னொரு பிரத்தியேக பார்சல் தயார்.

தொல்சொல் வேர் தேடும் அகவுநர் திரள்

உலக எழுத்தாளர்கள் நியூயார்க் நகரில் ஒன்றுகூடுவது நம் வாழ்நாளின் முக்கியமான கலாச்சார நிகழ்வாக இருக்கக்கூடும் — நம் நாகரிகம் ஏழு கடல் தாண்டித் தன்னோடு தானே பேசிக்கொள்ள முடிவெடுக்கும்போது என்ன நடக்கும்!?

கிட்டத்தட்ட எல்லா பெரிய இலக்கிய இயக்கங்களின் நினைவுக் குறிப்புகளிலும் வெவ்வேறு வடிவங்களில் திரும்பத் திரும்ப வருகிற காட்சி: தற்செயலான நடைபாதை. பிளூம்ஸ்பரி விருந்தொன்றில் வூல்ஃப்பும் ஃபோர்ஸ்டரும் ஒருவரையொருவர் தவறவிட்டு, தற்செயலான படிக்கட்டின் அடியில் தனிமையாகக் கண்டுகொண்டு, வேறு வழியின்றிப் பேசத் தொடங்குகிறார்கள். மெக்சிகோ நகரின் வாசிப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு நெரூடா, கார்சியா மார்க்வேஸை தூக்கம் வருமுன் பிடித்தாட்டுகிறார். ஹார்லெமின் விடுதியின் நடைபாதையில் டு பாயிஸும் லாங்க்ஸ்டன் ஹியூஸும் — வேறெவரும் நினைவில் வைக்காத அந்த செவ்வாய் இரவின் சிறு நேரங்கள் வரை அவர்களின் உரையாடல் நீண்டது.

நடைபாதை எந்த நிகழ்ச்சி நிரலிலும் இடம்பெறுவதில்லை. எந்தவொரு திட்டத்திலும் அது தோன்றுவதில்லை. ஆனால், ஏறக்குறைய எப்போதும், அங்கேதான் அதி முக்கியமானது சிந்தையேறுகிறது.

இதுதான் இலக்கிய மாநாட்டின் மறைமுகத் தர்க்கம் — வெளியிலிருந்து பார்க்க ஒழுங்கமைக்கப்பட்ட சமூகப் பழக்கவழக்கம் போலத் தோன்றுகிற வடிவம், ஆனால் அதன் சிறந்த தருணங்களில் அது அறிவுசார் தன்னெழுச்சியின் கட்டுப்படுத்தப்பட்ட சோதனையாக இயங்குகிறது. கலந்தாய்வுகளும் முக்கிய உரைகளும் புலப்படும் சட்டகம். உண்மையான கட்டமைப்பு விளிம்புகளில் உருவாகிறது: காலை உணவின் போது, காபி வாங்கும் வரிசையில், பத்து நிமிட இடைவெளியில் — அது, சுவாரஸ்யமான இடைவெளிகள் எப்போதும் விரிவடைவதுபோல், பல்லாண்டு சிந்தனையாக, செயலாக நீண்டு நிறைகிறது.

அதனால்தான் நியூயார்க் நகரில் புலம்பெயர் எழுத்தாளர்களுக்கான இலக்கியக் கூட்டம் என்பது — இனிய கலாச்சார வசதியாக அல்ல, பொழுதுபோக்குத் தொழில் வகையில் விழாவாக அல்ல — உலக நாகரிகச் சீரிய செயலாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். கணக்கெடுக்கலாம்; கூட்டலாம்; கூடி எண்ணிப் பார்க்க எடுக்கப்பட்ட முடிவு.

சங்கப் புலவர்கள் — காதல், தத்துவம், இயற்கை — என்ற நுட்பத்துடன் எழுதினார்கள்; ஐரோப்பிய இலக்கியத்தில் இது போன்ற நுட்பம் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்தே தோன்றியது. திருவள்ளுவரின் குறள் — அடர்த்தியான நெறிமுறை தத்துவத்தின் படைப்பு, கவிதையாகவும் படிக்கலாம், ஆட்சிக்கும் பயன்படுத்தலாம் — எழுபது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும் இன்றும் வியப்பூட்டுகிறது. இது ஒருபோதும் மேதைமை குறைந்திராத மரபு. சில நேரங்களில் இந்தத் தொடர்ச்சிக்கு சற்றே சறுக்கலுண்டு — குறிப்பாக அதன் புலம்பெயர் வடிவில் — சந்திப்பின் உள்கட்டமைப்பு: நிறுவனங்கள், மேடைகள், எழுத்தாளர்கள் ஒருவரையொருவர் நேரில் பார்த்துப் பேசக்கூடிய ரத்தமும் சதையுமான அறைகள்.

நியூயார்க் நகர், எல்லா இடங்களிலும் சிறந்த இடமாக, இதை நன்கு புரிந்துகொண்டுள்ளது. அது நூற்றாண்டுகளாக இதைச் செய்து வருகிறது. இந்த நகரம் உண்மையில் தேடலின் முடிவில்லாத இலக்கிய மாநாடு — வேட்கைகளும் மொழி வடிவங்களும் கற்பனைச் சட்டகங்களும் நிரந்தரமாக ஒன்றுடன் ஒன்று மோதி, ஒவ்வொன்றும் மற்றதால் மேலும் கூர்மையடைகின்ற நகரம். நம் எழுத்தாளர்களை இந்த நகரில், இந்த மறுமலர்ச்சி (renaissance) உரசல் சூழலில் கொண்டுவருவது — உரசல் எதை உருவாக்குகிறது என்பதில் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அந்த நம்பிக்கை சரியானது.


எழுத்தாளர்கள் கூடும்போது உண்மையில் என்ன நடக்கிறது என்பதை யோசியுங்கள். முறையான நிகழ்ச்சி நிரல் — கலந்தாய்வு, விரிவுரை, குழு விவாதம் — அலட்சியமானது அல்ல. ஆண்டுகளாக தனிமையில் தேங்கிக் கிடந்த வாதங்கள் அங்கே வெளியே வருகின்றன. பிரிவினையையும் நினைவையும் பத்தாண்டுகளாக சிந்தித்துக் கொண்டிருக்கும் சென்னையின் நாவலாசிரியர், நகர நடுவில் ஒரு கலந்தாய்வு அறையில், தன் முழு அழகியலையும் அதே நினைவுக்கு எதிர்ப்பில் கட்டியெழுப்பியிருக்கும் டொரண்டோவின் கவிஞரை எதிர்கொள்கிறார். விளையும் விவாதம் சங்கடமாக இருக்கலாம். நிச்சயமாகப் பயனுள்ளதாக இருக்கும். எவ்வளவு சிறந்த கட்டுரையும், ஒரு மேஜையின் குறுக்கே நேரில் பிரலாபிக்கும் முகம் தரும் விளைவை தர இயலாது.

விரிவுரை வேறொரு பணியை ஆற்றுகிறது. அது வெறும் போதனை மட்டுமல்ல. சிறந்த நிலையில் — கொலம்பியாவில் எட்வர்ட் சையீது நினைவிற்கு வருகிறார்… எந்தவொரு பிற்பகலிலும் ஹோமி பாபா — விரிவுரை என்பது ஒற்றை மனமாக பன்மக்கள் முன் முழு ஆற்றலில் இயங்குவதன் நிகழ்ச்சி. பார்வையாளர்கள் செயலற்றவர்கள் அல்ல. ஒருவர் சிந்திப்பதைப் பார்க்கவும், அவருடன் சேர்ந்து சிந்திக்கவும் அழைக்கப்படுகிறோம். எழுத்தாளர்களுக்கு குறிப்பாக — தங்கள் தொழில் வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தை தனிமையில் கழிக்கும் அவர்களுக்கு — இது கிட்டத்தட்ட அதிர்ச்சியளிக்கும் வளர்ச்சியளிப்பதாக இருக்கிறது. நீங்கள் புதிய கருத்துக்களோடு மட்டுமல்ல, கருத்துக்கள் சாத்தியம் என்ற புதுப்பிக்கப்பட்ட உணர்வுடன் திரும்புவீர்கள்.

இன்னும் மொழிபெயர்ப்பு என்ற கேள்வி உள்ளது. போர்க்கேஸ் முரண்பாட்டை தமிழ் இலக்கியம் தலைகீழாக வைத்திருக்கிறது என்று சொல்லலாம்: அர்ஜென்டினா நாட்டின் கலாச்சாரத்தை தன் இலக்கிய வலிமையால் போர்க்கேஸ் உலகளாவியதாக மாற்றியபோது, தமிழ் எழுத்து ஆங்கில மொழி வாசகர்களுக்கு, இன்று வரை, கிட்டத்தட்டக் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளது; அவர்கள் படிப்பதை விட மிகவும் வளமானதாக இருந்தும். காரணங்கள் கட்டமைப்பு சார்ந்தவை. நல்ல இலக்கிய மொழிபெயர்ப்புக்கு இருமொழி தேர்ச்சி மட்டுமல்ல, இரண்டு கற்பனைகளிலும் ஒரே நேரத்தில் வாழும் விருப்பம் தேவை — மொழிபெயர்ப்பாளர் அருணவ சின்ஹா சொல்வதுபோல், இரண்டு முறை எழுத்தாளராக இருக்க வேண்டும். மாநாடுகள் மொழிபெயர்ப்பாளர்கள் ஆசிரியர்களைச் சந்திக்கவும், ஆசிரியர்கள் முகவர்களைச் சந்திக்கவும், முகவர்கள் இலக்கியப் பத்திரிகைகளுக்கு நிதியளிப்பவர்களைச் சந்திக்கவும் வழிவகை செய்கின்றன — கலாச்சாரப் பரிமாற்றத்தின் இந்த முழு அசாத்தியமான இயந்திரம் மெல்ல மெல்ல அசைந்து தேர் முனை திரும்பத் தொடங்குகிறது.

இது குறுக்கு மகரந்தச் சேர்க்கை. பத்தாண்டுகளாக ஆங்கிலத்தில் எழுதுவதை ஒருபோதும் யோசிக்காத தமிழ் சிறுகதை எழுத்தாளர், இதே வகையான படைப்புகளை நேர்மையாகத் தேடி வந்த பெரிய பதிப்பகத்தின் ஆசிரியரை சந்திக்கிறார். ஒரு மலையாள நாவலாசிரியர், தன் காலத்தைக் கையாளும் கட்டமைப்பு முறை ஒரு உருது கவிஞரின் தொடரியல் சோதனைகளுடன் எதிரொலிக்கிறது என்று கண்டுகொள்கிறார். சங்க இயற்கைக் கவிதையியல் பற்றிய தமிழ்-அமெரிக்க கல்வியாளர் — அவரது படைப்பு ஆண்டுகளாக சக-மதிப்பாய்வு பத்திரிகைகளில் மட்டுமே சுழல்கிறது — கடைசிக் கலந்தாய்வுக்குப் பிறகான இரவு உணவில், அறையில் இருக்கும் ஒரு திரைப்பட இயக்குனர் தான் முடிக்க இயலாமல் கைவிட்டுக் கொண்டிருக்கும் திட்டத்திற்குச் சரியாக அந்தக் கருத்தமைப்பு சட்டகத்தையே தேடி வந்திருக்கிறார் என்று கண்டுகொள்கிறார். இதில் எதுவும் உறுதியாக நடக்கும் என்ற வாக்குறுதி இல்லை. இதில் எல்லாம் சாத்தியம் — யாத்திரை இல்லாமல் இதில் எதுவும் நடக்காது.


இன்னொரி பெரிய வாதம், அது அடக்கமான வாதமில்லை. கடந்த கால மாபெரும் கலாச்சார மறுமலர்ச்சிகளை உருவாக்கிய நிலைமைகளைக் கட்டமைப்பு ரீதியில் ஒத்திருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் — நாம் முந்தைய தலைமுறைகளை விட அறிவாளிகள் அல்லது திறமையானவர்கள் என்பதால் அல்ல, ஆனால் பரிமாற்றத்திற்கான நிலைமைகள் மிக வேகமாக மாறியிருக்கின்றன, கலாச்சாரத்தின் உள்ளடக்கம் அதன் விநியோக வழிகளோடு இன்னும் ஈடுகொடுக்கவில்லை என்பதால். இத்தாலிய மறுமலர்ச்சி, என்பது, உள்கட்டமைப்பு நெருக்கடியாகவும் இருந்தது: அச்சு இயந்திரம், மனிதவியல் கல்வி மன்றங்கள், பழைய ஆதரவுக் கட்டமைப்புகளின் சரிவு, திடீரென கிடைக்கப்பெற்ற சாஸ்திரீய நூல்கள் — இவை அனைத்தும் சேர்ந்து, நீங்கள் என்ன தெரிந்திருக்கிறீர்கள், யாருடன் பகிர்ந்துகொள்ள முடியும் என்பது மிகவும் முக்கியமான நிலைமையை உருவாக்கியது. அதனால் விளைந்தது திட்டமிடப்பட்ட விளைவு அல்ல. அது சிந்தை அடர்த்தியின் — அறிவுசார்ந்த, சமூகசார்ந்த, புவியியல் சார்ந்த ஞான அடர்த்தியின் — விளைவு.

இப்போது இதுவே நடக்கிறது, தமிழ் மற்றும் இந்திய புலம்பெயர்ந்த சமூகம் — படித்தவர்கள், பன்மொழியாளர்கள், வாரத்திற்கொரு கோளமாகக் கண்டங்களைத் தாண்டி நிற்பவர்கள், தங்கள் மனசில் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று இலக்கிய மரபுகளைச் சுமந்தவர்கள் — இதில் பங்கெடுக்க மிகவும் ஆயத்தமாகி வருகிறார்கள்.

கேள்வி என்னவென்றால், பொருள் இருக்கிறதா என்பது அல்ல. இருக்கிறது.

கேள்வி: சபை இருக்கிறதா என்பது. சந்திப்பிற்கான நிலைமைகள் வேண்டுமென்றே உருவாக்கப்படுமா, இல்லையா? இல்லாவிட்டால் மரபு தன் சக்திகளை தொலைவில் சிதறடித்துக் கொண்டே இருக்கும் — பிரகாசமாகவும் சிதைந்தும், ஒருபோதும் தான் ஆகக்கூடிய இயக்கமாக முழுமையடையாமல்.

ஒரு மாநாடு, இந்த அர்த்தத்தில், ஒரு நம்பிக்கை வினை. அது சொல்கிறது: நாம் ஒருவரோடு ஒருவர் பேச வேண்டியது விமான டிக்கெட்டின், ஓட்டல் அறையின், பெயர் பட்டியின், சங்கடமான காபியின் விலைக்கு மதிப்புள்ளது என்று நம்புகிறோம். உரையாடல் பேசுபவர்களின் கூட்டைத் தாண்டி விரிவடையும் என்று நம்புகிறோம். சபையில் நம்புகிறோம்.

லிவிங் தமிழ் லிட்ஃபெஸ்ட்டில் நம்புகிறோம்.

* * *

நியூயார்க்கில் என்ன நடக்கும்?

நேர்மையான பதில்: நமக்குத் தெரியாது — இதுவே விஷயத்தின் சாரம். எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துப் பிரதிகளுடனும் கருத்துக்களுடனும் வருவார்கள். விமர்சகர்கள் தங்கள் சட்டகங்களுடன் வருவார்கள். மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் அகராதிகளுடனும் உள்ளுணர்வுகளுடனும் வருவார்கள். யாரோ ஒருவர் ஒரு விரிவுரை தருவார், அது மூன்று ஆண்டுகளாக தீர்க்க முடியாத ஒரு சிக்கலை வேறொருவர் சிந்திக்கும் விதத்தை மாற்றிவிடும். பத்தாண்டுகளாக ஒருவருடைய படைப்புகளைப் படித்துவந்த இருவர் இறுதியாகக் கைகுலுக்குவார்கள். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டிய நூல் கடைசியாகத் தன் வக்கீலை கண்டடையும். ஒரு நட்பு தொடங்கும் — அது காலப்போக்கில் ஒரு கூட்டுப் படைப்பை உருவாக்கும், யாரும் முன்னறிவிக்க முடியாத ஒன்றை.

நடைபாதைகளில் — எப்போதும் நடைபாதைகளில் — உண்மையான வேலை நடக்கும். நள்ளிரவைத் தாண்டித் தொடரும் வாதம். ஆறு மாதங்கள் கழித்து ஒரு கட்டுரையின் முதல் வாக்கியமாக மாறும் சாதாரண குறிப்பு. திடீரென, தெளிவாக, வேறொரு நபர் முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் இதே விஷயத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்ற உணர்வு — மேலும் அந்தக் கோணம் தீர்க்கப்பட வேண்டிய சிக்கல் அல்ல, பயன்படுத்தப்பட வேண்டிய கொடை என்ற உணர்தல்.

இதற்காகவே இலக்கிய மாநாடுகள் இருக்கின்றன. இதனால்தான் அவை முக்கியம். கொண்டாட்டங்களாக மட்டுமல்ல — அதுவும் உண்டு — ஆனால் சாத்தியத்தின் இயந்திரங்களாக, இதே நேரத்தில் இதே அறையில் இருக்க வேண்டும் என்ற முடிவிலிருந்தும், மற்றவர் சொல்வதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவிலிருந்தும் உருவாகி.

தமிழில் ஒரு வார்த்தை உண்டு — சபை — அதற்கு அர்த்தம் கூடுதல்; இன்னொரு அர்த்தம் சேர்தல் . சொற்பிறப்பு தற்செயலானது அல்ல. கூடுவது என்பது சேர்வது. ஒன்றுசேர்வதே, ஏற்கனவே, நீங்கள் முன்பு இல்லாத ஒன்றாக ஆவது.

நியூயார்க் காத்திருக்கிறது. சபை தயாராக இருக்கிறது. வாருங்கள்.

ஏ.ஐ. உதவியுடன் எழுதியது.

Oru Oorla Oru Rajakumari

தமிழில் முதன் முதலில் ஏ. ஐ. தலைப்பு வைத்த திரைப்படம் எது?

ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி

பி.கு. : சாட்ஜிபிடி | ஜெமினி | கிளாட் போன்ற செயற்கை நுண்ணறிவு கொண்டு தயாரித்த பதிவுகளில் இவை சகஜம்

  1. ஒரு என்னும் பிரயோகம் எக்கச்சக்கமாக இருக்கும்.
  2. நீண்ட டாஷ் : em dash (—): இடைக்கோடு (-) இணைப்புக் குறி (—); கீற்று அல்லது ஹைபன் குறிகள்
  3. மற்றும் என And (&) உபயோகம்
  4. படுத்தல் : செயல்படுத்தல்; பயன்படுத்தல்; உருவாக்கப்படுத்தல் (“உருவாக்குதல்” தான் இயல்பு)…
    நடைமுறைப்படுத்தல்
    எளிமைப்படுத்தல்
    விரிவுபடுத்தல்

தானியங்கியாக மொழிபெயர்த்தால், இதையெல்லாம் கவனத்தில் கொள்வீராக

-இலக்கிய ஜென் ஏ ஐ முகவர்

    பக்கம் திரும்பு, தீப்பொறி உணர்

    “பீல் தி ஸ்பார்க்” (Feel the Spark) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் பாடல், ‘லிவிங் தமிழ்’ (Living Tamil) இலக்கியத் திருவிழாவிற்காக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (USA) தயாரிப்பில் உருவான பிரம்மாண்டமான கலைப்படைப்பு.

    குறிப்பாக, ஜெயமோகனின் காவியப் படைப்பான ‘விஷ்ணுபுரம்’ நாவல் இதில் முன்னிலைப்படுத்தப்படுவது இலக்கிய ரசிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். பழைய இலக்கியங்கள் வெறும் புத்தகங்கள் மட்டுமல்ல, அவை இன்றும் “சுடர்விடும் நெருப்பு” என்பதை இந்தப் பாடல் அழகாகச் சித்தரிக்கிறது.

    ராஜன் சோமசுந்தரத்தின் இசையமைப்பில் உருவான இந்தப் பாடல், நவீன தாளங்களால் இதயத்தை ஈர்க்கிறது:

    வசீகரம்: “Modern exotic, modern thoughts are hypnotic” என்ற வரிகள் கேட்ட உடனே மனதில் ஒட்டிக்கொள்ளும் ரகம்.

    இளமைத் துடிப்பு: நியான் விளக்குகளின் ஒளி மற்றும் வேகமான படத்தொகுப்புடன், இளைய தலைமுறையைத் தமிழ் இலக்கியத்தோடு இணைக்கும் ஒரு நவீன மனப்போக்கை (Modern mindset) இந்தப் பாடல் பிரதிபலிக்கிறது.

    தாள லயம்: தாளக்கட்டுகள் (Rhythmic beats) பாடலை மிக வேகமாகவும் துடிப்பாகவும் நகர்த்திச் செல்கின்றன. “நடனமாடும் தீப்பிழம்புகள்” (flaming frames) போன்ற வரிகளுக்கு ஏற்ப, இசையும் நம்மை ஆட வைக்கிறது.

    21-ஆம் நூற்றாண்டின் புதிய மையோடும் இனிய தாளங்களோடும் தமிழ் இலக்கியம் இன்றும் உயிர்ப்புடன் இருப்பதை இது உலகிற்குப் பறைசாற்றுகிறது. ஜெயமோகனின் வாசகர்களுக்கும், நவீன இசையை விரும்புபவர்களுக்கும் இப்பாடல் மாபெரும் விருந்தாகும்!

    (ஏ.ஐ. உதவியுடன் எழுதியது)

    பாடலின் மொழியாக்கம்

    பக்கம் திரும்பு, தீப்பொறி உணர்
    மேதையின் நெஞ்சத் தீயைத் தொடு
    தென்றலிலிருந்து கதைகள் கர்ஜிக்கின்றன
    கவிதையின் கைகளால் விதிகள் உடைகின்றன

    தமிழில் கனவுகள், துணிவுடன் சுதந்திரமாய்
    நம் நூற்றாண்டை வடிக்கும் குரல்கள்
    புதிய மை, புதிய தாளம், நியான் வெளிச்சம்
    இன்றிரவு ஒவ்வொரு வார்த்தையும் நெருப்பு

    கிராமங்களிலிருந்து நகர இரவு வரை
    நம் உலகை எழுதுகிறோம், உரிமை கோருகிறோம்
    ஒவ்வொரு எண்ணமும் ஒரு புரட்சியின் அலை —
    ஆம், நாம் நவீன இலக்கியத்தின் சிருஷ்டி!


    அபூர்வம், கனவாளம்
    நவீன சிந்தனை, நவீன இலக்கியம்!
    தாளமயம், மயக்கமயம்
    ஒவ்வொரு பக்கமும் ஒரு கவிதை!
    அபூர்வம், கனவாளம்
    ஒருபோதும் நிற்காத நவீன மனங்கள்!
    மின்னல்போல், கலவரமாய் —
    நவீன சிந்தனை, நவீன இலக்கியம்!


    வரிகள் தீப்பிழம்புகளாய் ஆடுகின்றன
    மௌனத்தை உடைக்கின்றன, பெயர்களை அழைக்கின்றன
    காதல் முதல் இழப்பு, அரசியல் வரை
    மொழியியலில் சுருட்டிய உண்மைகள்

    கனவாளர்கள் ஒவ்வொரு எழுத்தாணியிலும் எழுகிறார்கள்
    கதைகள் மீண்டும் மீண்டும் மறுபிறப்பெடுக்கின்றன
    காலமற்ற தோலில் டிஜிட்டல் மை
    எதிர்காலம் நாம் தொடங்கும் இடம்

    கதைகளை சுழற்று, தாளத்தை மறுகலைக்கு
    பழமை புதுமையுடன் காலம் கடந்து சந்திக்கிறது
    மரபு பிரபஞ்ச நகைச்சுவையாய் மாறுகிறது —
    ஆமாம், அதுதான் நம் நவீன இலக்கியம்!


    அபூர்வம், கனவாளம்
    நவீன சிந்தனை, நவீன இலக்கியம்!
    தாளமயம், மயக்கமயம்
    ஒவ்வொரு வார்த்தையும் சரியான தாக்கம்!
    அபூர்வம், கனவாளம்
    ஒருபோதும் தலைவணங்காத நவீன ஆன்மாக்கள்!
    மின்னல்போல், கவிதையாய் —
    நவீன சிந்தனை, நவீன இலக்கியம்!


    தமிழ் வார்த்தைகள், உலகின் ஒலி
    ஒவ்வொரு பெயர்ச்சொல்லிலும் புதிய உலகங்கள்
    நாம் வாழ்க்கையை எழுதுகிறோம், துண்டு துண்டாய்
    அபூர்வம், கனவாளம், நவீன இலக்கியம்.


    A few translation notes:

    • Exotic, Quixotic → அபூர்வம், கனவாளம் — “அபூர்வம்” captures the sense of the rare and wondrous; “கனவாளம்” renders the Quixotic spirit of bold, impractical dreaming — without needing to borrow the English word.
    • Modern Lit → நவீன இலக்கியம் — kept formal and resonant, as the phrase carries weight throughout.
    • “Cosmic wit” → பிரபஞ்ச நகைச்சுவை — a slightly grand rendering, but fits the lyrical register.
    • “Digital ink on timeless skin” → காலமற்ற தோலில் டிஜிட்டல் மை — kept close to the original image; “தோல்” here works both as skin and as the surface of a page.

    “எப்போதும் நிரபராதியை குற்றஞ்சாட்டு”

    தத்துவார்த்த, கல்வியியல் ஆய்வு


    I. முன்னோட்டத் தெளிவுரை

    “எப்போதும் நிரபராதியை குற்றஞ்சாட்டு” என்னும் சொற்றொடர் அரசியல், சமூக, சொல்லாடல் உத்தியைக் குறிக்கிறது — அறத்திற்கான ஆணையை அல்ல. தத்துவ விசாரணையின் பொருளாக, → ▷ ➔ இது தார்மீக தத்துவம், → ▷ ➔ அரசியல் கோட்பாடு, சாட்சியமொழியின் அறிவுத்தத்துவம், சமூக உளவியல் ஆகியவற்றின் குறுக்கே அமைகிறது. இங்கு நோக்கம் அதை ஆழமாக பகுத்தாய்வது: அதன் அமைப்பை, அதன் சாத்தியக்கூறுகளின் நிலைமைகளை, அதன் உட்கட்டமைப்பு தர்க்கத்தை, மற்றும் அது அதிகாரம், உண்மை, சமூக இருப்புநிலை பற்றி என்ன வெளிப்படுத்துகிறது என்பதில் அது தத்துவார்த்தமாக ஏன் முக்கியமானது என்பதையும் புரிந்துகொள்வதாகும்.


    S bears actual responsibility for outcome A but suppresses that link, redirecting attribution toward the wholly unconnected innocent party I. The × marks the structural void at the strategy’s core.

    II. கட்டமைப்பு வரையறை

    இந்த உத்தியை முறையாக வரையறுப்போம்:

    • கு = அதிகாரம் வைத்திருக்கும் அல்லது பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள முயலும் தனிநபர் அல்லது குழு
    • வி = காரண காரியமும் தார்மீக பொறுப்பும் சுமந்த செயல் அல்லது விளைவு
    • பே (பேதை) = குழு விஷயத்தில் காரணரீதியாக நிரபராதியான தரப்பு (அதாவது, “A”குழு” உடன் எந்த தார்மீகமாக பொருத்தமான காரண உறவும் இல்லாதவர்)

    “எப்போதும் நிரபராதியை குற்றஞ்சாட்டு” (எ.நி.கு. Always Blame the InnocentABI) உத்தி என்பது குழுவிற்கான பொறுப்பை பேதைக்கு முறையாக கூறுவதாகும், இதன் நோக்கங்கள்:

    1. குழுவை பொறுப்பிலிருந்து காப்பாற்றுவது,
    2. பேதைக்கு எதிராக கூட்டு உணர்ச்சியை (கோபம், அச்சம், வெறுப்பு) திரட்டுவது,
    3. சமூக சக்தியை வெளிப்புறமாக திசைதிருப்புவதன் மூலம் குழுவின் அதிகாரத்தை உறுதிப்படுத்துவது.

    எப்போதும்” என்ற சொல் முக்கியமானது — அது எதிர்பாராத தவறு அல்லது சார்புநிலை அல்ல; அரசியல் அல்லது சமூக அமைப்பின் அமைப்புரீதியான அம்சத்தை குறிப்பிடுகிறது. இது தற்செயலானது அல்ல — கட்டமைப்பு ரீதியான அம்சம்.


       நலிதரு சிறிய தெய்வமென் றையோ
              நாட்டிலே பலபெயர் நாட்டிப்
         பலிதர ஆடு பன்றிக் குடங்கள்
              பலிக்கடா
    முதலிய உயிரைப்
         பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே
              புந்திநொந் துளநடுக் குற்றேன்
         கலியுறு சிறிய தெய்வவெங் கோயில்
              கண்டகா லத்திலும் பயந்தேன்.

    திருவருட்பா – திருவருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்க அடிகள்

    III. தத்துவ முன்னோடிகள்

    1. பலிக்கடா வழிமுறை (ரெனே ஜிரார்ட்)

    எ.நி.கு. – வின் மிகத் தீவிரமான தத்துவ ஆய்வு ரெனே ஜிரார்டின் (René Girard) அனுகரண கோட்பாட்டிலிருந்து வருகிறது — வன்முறையும் புனிதமும் (1972) மற்றும் பலிக்கடா (1982) ஆகியவற்றில் விவரிக்கப்பட்டது. ஜிரார்ட் வாதிடுகிறார்: மனித சமூகங்கள் இயல்பாகவே காப்பியடிக்கும் விருப்பத்திற்கு ஆட்பட்டுள்ளன — நாம் மற்றவர்கள் விரும்புவதை விரும்புகிறோம் — இது போட்டியையும், அவர் பலி நெருக்கடி என்று அழைக்கும் நிலையில் சமூக கலைவின் அச்சுறுத்தலையும் உருவாக்குகிறது.

    இந்த நெருக்கடியின் தீர்வு உண்மையால் அல்ல, மாற்று பாதிக்கப்பட்டவர் மீதான ஏகமனதான வன்முறை கருத்தொற்றுமையால் — பலிக்கடா மூலம் — அடையப்படுகிறது. பலியிடுதற் கென்று கொழுக்க வளர்க்கப்படும் ஆட்டுக்கடா, எருமைக்கடா, முதலியனவாகும்:

    • சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்த போதுமான அளவு ஒத்திருக்க வேண்டும்,
    • ஆனால் போதுமான அளவு வேறுபட்டிருக்க வேண்டும் (சிறுபான்மையினர், அன்னியர், ஊனமுற்றோர், வெளிநாட்டினர்) — செலவழிக்கக்கூடியவராக இருக்க.

    ஜிரார்டிற்கு மிக முக்கியமான விஷயம்: பாதிக்கப்பட்டவர் எந்த அர்த்தமுள்ள காரண வகையிலும் எப்போதும் நிரபராதியாவார். வன்முறை ஒருமித்ததாக இருக்க வேண்டும் என்பதால் ஒட்டு மொத்த சமூகமும் இதை ஒரே நிலையில் அறிந்துணர்கிறது — ஒட்டுமொத்த ஒருமைப்பாடு இல்லாமல் தூய்மைப்படுத்துதல் உண்டாகாது. பாதிக்கப்பட்டவரின் நிரபராதித்தன்மை தற்செயலானது அல்ல; அது கட்டமைப்பு ரீதியாக அவசியமானது. உண்மையிலேயே குற்றமுள்ளவர், தவறிழைத்தபோதும் தன் வாதத்தை முன்வைக்கலாம்; ஆனால், நிரபராதியோ, திக்கித்து நின்று, அவ்வாறு நியாயங்கற்பிக்க இயலாது.

    தத்துவார்த்த தாக்கம்: எ.நி.கு.பகுத்தறிவற்றது அல்ல. இது சமூகத்தின் பகுத்தறிவு என்பதே — பகிர்ந்த விலக்கலின் மூலம் ஒற்றுமையை உற்பத்தி செய்வதற்கான வழிமுறை.

    Girard’s mimetic mechanism is the oldest theoretical account of ABI as a social technology. The cycle unfolds in two phases: an escalation driven by rivalry and social disintegration, resolved through unanimous violence against a surrogate victim — which temporarily reconstitutes social cohesion before generating the conditions for a new cycle.

    2. தீய நம்பிக்கை மற்றும் பொறுப்பிலிருந்து தப்பிப்பு (சார்த்ர்)

    இருத்தல் மற்றும் இல்லாமை (1943) இல் ஜான்-பால் சார்த்ரின் (Jean-Paul Sartre) mauvaise foi (தீய நம்பிக்கை) கருத்தாக்கம் இரண்டாவது கோட்பாட்டு கண்ணோட்டத்தை வழங்குகிறது. தீய நம்பிக்கை என்பது ஒருவரின் அடிப்படை சுதந்திரத்தையும் பொறுப்பையும் மறுப்பது — ஒருவரின் நிலைமையை வெளிப்புற காரணங்களுக்கு கூறுவதன் மூலம், கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சக்திகளால் தீர்மானிக்கப்படும் பொருளாக தன்னை நடத்துவது.

    எ.நி.கு., கூட்டு மட்டத்தில், தீய நம்பிக்கையின் அரசியல்: சமூகமோ அதிகார அமைப்போ, விளைவை உருவாக்குவதில் தன்னுடைய சொந்த காரண செயலாண்மையை ஒப்புக்கொள்ள மறுத்து, அதற்கு பதிலாக “நிரபராதி அன்னியரை” ஆதாரமாக கட்டமைக்கிறது. மற்றொருவர் நிரந்தரத்தன்மையாக மாற்றப்படுகிறார் — நிலையான, தீர்மானிக்கும் சாரம் (“அவர்கள் ஊழல்வாதிகள்,” “அவர்கள் வங்கிகளை கட்டுப்படுத்துகிறார்கள்,” “அவர்கள் நம் மதிப்புகளை சிதைக்கிறார்கள்”) — ஏதோ சுதந்திர பொருளாக அங்கீகரிக்கப்படாமல்.

    சார்த்ரின் பகுப்பாய்வு எ.நி.கு. என்பது வெறும் பொய் மட்டுமல்ல என்று கூறுகிறது — இது இருப்புமுறை — சுதந்திரம் மற்றும் பொறுப்பை மறுப்பதைச் சுற்றி கூட்டு இருப்பை ஒழுங்கமைக்கும் வழி.


    3. கொள்கையும் இடைமறி வினாக்களும் (அல்துஸ்ஸர்)

    “கொள்கையும் கொள்கை அரசுக் கருவிகளும்” (1970) என்ற கட்டுரையில் லூயி அல்துஸ்ஸரின் (Louis Althusser) கொள்கை அரசுக் கருவிகள் (Ideological State Apparatuses – ISAs) கட்டமைப்பு, எ.நி.கு. எவ்வாறு நிறுவனமயமாக்கப்படலாம் என்பதை விளக்குகிறது. கொள்கை இடைமறி வினா மூலம் செயல்படுகிறது — இயற்கையாகவும் விளக்கம் தேவையில்லாததாகவும் உணர்ந்த பாத்திரங்களில் தனிநபர்களை அழைப்பது. அந்த அரசோ, மத நிறுவனமோ ஊடகமோ – நிரபராதி குழுவை முறையாக குற்றஞ்சாட்டும்போது, அந்தக் குழுவை மீண்டும் மீண்டும் குற்றவாளியாக உருவாக்குகிறது. குற்றச்சாட்டு “குற்றத்திற்கு” முந்தி அதை கட்டமைக்கிறது.

    இதனால் எ.நி.கு. தன்னைத்தானே தாங்கிக்கொள்கிறது: இந்த நிரபராதி குழு எவ்வளவு அதிகமாக குற்றஞ்சாட்டப்படுகிறதோ, அவ்வளவு அதிகமாக சமூக உள்கட்டமைப்பு (சட்டம், கல்வி, ஊடகம்) அவர்கள் குற்றத்தைச் சுற்றி ஒழுங்கமைக்கப்படுகிறது — மூல குற்றச்சாட்டை பின்னோக்கி நியாயப்படுத்துவதாக தோன்றுகிறது.


    4. சாட்சியமொழியின் அறிவுத்தத்துவம் மற்றும் அறிவாற்றல் அநீதி (மிரண்டா ஃபிரிக்கர்)

    மிரண்டா ஃபிரிக்கரின் (Miranda Fricker) அறிவாற்றல் அநீதி: அதிகாரம் மற்றும் அறிவின் நெறிமுறைகள் (2007) இன்னொரு முக்கியமான அறிவுத்தத்துவ பரிமாணத்தை வழங்குகிறது. ஃபிரிக்கர் இரண்டை வேறுபடுத்துகிறார்:

    • சாட்சியமொழி அநீதி: அடையாள தப்பெண்ணத்தால் பேசுபவரின் நம்பகத்தன்மையை குறைப்பது,
    • விளக்கவியல் அநீதி: ஒருவரின் சொந்த அனுபவத்தை புரிந்துகொள்ள கருத்தியல் வளங்களின் இல்லாமை.

    எ.நி.கு. கூட்டு அறிவாற்றல் அநீதி மூலம் செயல்படுகிறது: நிரபராதி தரப்பு குற்றஞ்சாட்டப்படுவது மட்டுமல்ல, அதேவேளையில் அவரின் சொந்த நிரபராதித்தன்மைக்கு நம்பகமற்றவராகவும் ஆக்கப்படுகிறார். அவர்களின் மறுப்புகள் குற்றத்தின் ஆதாரமாக மறுவிளக்கம் செய்யப்படுகின்றன; அவர்களின் எதிர்ப்புகள் சிறப்பு மன்றாட்டமாக சித்தரிக்கப்படுகின்றன. ஃபிரிக்கர் இதை நம்பகத்தன்மைப் பற்றாக்குறை என்று அழைக்கிறார் — அது கட்டமைப்பு ரீதியாக ஆயுதமாக்கப்படுகிறது.

    இது உருவாக்கும் தர்க்க மூடல் திகிலூட்டுகிறது: நிரபராதியால் தங்கள் நிரபராதித்தன்மையை நிரூபிக்க முடியாது, ஏனென்றால் செயல்பாட்டு அறிவுகட்டமைப்பில் நிரபராதித்தன்மையை கோருவது குற்றத்தின் ஆதாரமாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது.


    IV. செயல்திட்டத்தின் தர்க்கம்: ஏன் நிரபராதி?

    இது தத்துவார்த்தமாக மிகவும் ஆர்வமூட்டும் கேள்வி. பகுதியளவு குற்றமுள்ள ஒருவரை ஏன் குற்றஞ்சாட்டக்கூடாது? முழுமையான நிரபராதியுடன் இந்த உத்தி ஏன் சிறப்பாக செயல்படுகிறது்?

    பல்வேறு ஒன்றுக்கொன்று இணைந்த காரணங்களைப் பார்ப்போம்:

    அ) நிரபராதியால் நம்பகமான காரண எதிர்-கதையை வழங்க முடியாது பகுதி குற்றமுள்ள தரப்பு கூறலாம்: “ஆம், ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்று பாருங்கள்.” முழுமையான நிரபராதி தரப்பிற்கு இதுபோன்ற எதிர்-கதை இல்லை, ஏனென்றால் அவர்கள் நிகழ்வில் பங்கில்லாதவர்கள். அவர்களின் பதில் தூய மறுப்பு மட்டுமே — இது விரோதமான அறிவுத்தத்துவ சூழலில் நம்பிக்கையூட்டாதது.

    ஆ) நிரபராதி அதன் வித்தியாசத்தினாலேயே தார்மீக பீதியை உருவாக்குகிறது நிரபராதி தரப்பின் திகைப்பு, ஆத்திரம் மற்றும் “தன்னை விளக்கிக்கொள்ள” இயலாமை, தூண்டிவிடப்பட்ட பார்வையாளர்களுக்கு சந்தேகமாகத் தெரிகிறது. இது துன்புறுத்தலின் பரிகாசமான நிகழ்வியல்: பாதிக்கப்பட்டவரின் நிரபராதித்தன்மை குற்றம் போல் தோன்றுகிறது.

    இ) நிரபராதி புதிய குற்றச்சாட்டுகளுடன் எல்லையற்ற முறையில் மீண்டும் திணிக்கப்படலாம் குற்றச்சாட்டுகளுக்கு உண்மையியல் அடிப்படை இல்லாததால், அவை உண்மையால் கட்டுப்படுத்தப்படுவதில்லை. புதிய குற்றச்சாட்டுகளை எப்போதும் கண்டுபிடிக்கலாம். குற்றமுள்ளவர்கள், மாறாக, அவர்களின் உண்மையான குற்றத்தின் குறிப்பிட்ட துறைக்கு மட்டுப்படுத்தப்படுகிறார்கள். நிரபராதி — அவர்களின் “குற்றம்” கட்டமைக்கப்பட்டதால் — எல்லாவற்றிற்கும் குற்றஞ்சாட்டப்படலாம்.

    ஈ) நிரபராதியை பலிக்கடாவாக்குவது சமூக ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது தொழிலின் பிரிவு (1893) இல் எமிலி டுர்க்ஹீம் (Emile Durkheim) குறிப்பிட்டது போல், தண்டனைச் சடங்குகள் முதன்மையாக தண்டிக்கப்பட்டவர்களைப் பற்றியவை அல்ல — அவை தண்டிக்கும் சமூகத்தைப் பற்றியவை. நிரபராதியை குற்றஞ்சாட்டுவதால் பகிர்ந்த எதிரியைச் சுற்றி உள்குழு ஒற்றுமையை ஒருங்கிணைக்கிறது. குறி நிரபராதியாக இருக்கும்போது, குற்றச்சாட்டை நிலைநிறுத்த தேவையான ஒற்றுமை மிகவும் முழுமையானதாக இருக்கும் — எனவே சமூகப் பிணைப்பு செயல்பாடு மிகவும் சக்திவாய்ந்ததாக ஆகும்.


    V. முறையான பயன்பாட்டின் முரண்பாடுகள்

    செயல்திட்டத்தில் உள்ள “எப்போதும்” என்ற வார்த்தை தத்துவார்த்த கவனத்திற்கு தகுதியானது. எப்போதும் பயன்படுத்தப்படும் இந்த உத்தி சில நேரங்களில் பயன்படுத்தப்படுவதை விட வேறு இருத்தலியல் நிலையை பெறுகிறது. பல முரண்பாடுகள் தோன்றுகின்றன:

    தன்னை சிதைக்கும் முரண்பாடு சமூகஅமைப்பு எப்போதும் நிரபராதியை குற்றஞ்சாட்டினால், அது சமூக சிக்கல்களின் உண்மையான காரணங்களை முறையாக தவறாக அடையாளம் காட்டுகிறது. குற்றமுள்ள தரப்புகள் — அடையாளம் காணப்படாமல், தண்டிக்கப்படாமல் — அமைப்பு தீர்க்கப்போகிறது என்று கூறும் அதே தீங்குகளை தொடர்ந்து உற்பத்தி செய்கின்றன. எனவே அமைப்பு புதிய பலிக்கடாக்களை தேவைப்படுத்தும் புதிய சிக்கல்களை நிலையாக உருவாக்குகிறது. எ.நி.கு., முழுமையாக நிறுவனமயமாக்கப்படும்போது, அது தீர்க்கிறேன் என்று கூறும் சமூக நெருக்கடிகளையே உற்பத்தி செய்கிறது.

    உண்மை-ஆட்சி முரண்பாடு தொலைதூர நாடுகளில் தோற்றம் (1951) மற்றும் “உண்மையும் அரசியலும்” (1967) ஆகியவற்றில் ஹன்னா ஆரென்ட் (Hannah Arendt) வாதிடுகிறார்: ஒட்டுமொத்தவாத அமைப்புகள் வெறுமனே பொய் சொல்வதில்லை — அவை உண்மையை பொய்யிலிருந்து வேறுபடுத்தக்கூடிய நிலைமைகளையே அழிக்கின்றன. முறையாக பயன்படுத்தப்படும் எ.நி.கு. இதை அடைகிறது: நிரபராதி வெறுமனே குற்றவாளி என்று அழைக்கப்படுவதில்லை — குற்றம் அல்லது நிரபராதித்தன்மையை நிறுவுவதற்கான சமூக உள்கட்டமைப்பே கலைக்கப்படுகிறது. திட்டமுறை தனிப்பட்ட பொய்யைத் தாண்டி ஒளிர்வுக் கோட்பாடு (epistemological) அறிவுத்தத்துவ ஆட்சியாக ஆகிறது.

    சட்டப்பூர்வ அதிகார முரண்பாடு மேக்ஸ் வேபரின் (Max Weber) நியாயத்தன்மையின் சமூகவியல் (பொருளாதாரம் மற்றும் சமூகம், 1922) அரசியல் அதிகாரத்திற்கு நம்பகமான ஒழுக்க அடிப்படை தேவை என்று கூறுகிறது. எ.நி.கு. காலப்போக்கில் இதை அரிக்கிறது: மக்கள் இறுதியில் வடிவத்தை பதிவு செய்கிறார்கள், குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள். எனவே ஜனநாயக அல்லது பன்மைச் சூழல்களில் செயல்திட்டம் தன் சுயக்கட்டுப்பாட்டை இழக்கிறது, ஆனால் வடிவத்தை வெளிப்படுத்த முடியாத ஏகபோக தகவல் சூழல்களில் சுயவலுப்படுத்தும்.


    VI. தார்மீக-தத்துவார்த்த கண்டனம்: ஆதாரங்கள்

    செயல்திட்டத்தை கட்டமைப்பு ரீதியாக பகுப்பாய்ந்த பின்னர், அதன் தார்மீக மதிப்பீட்டிற்கு திரும்புகிறோம். கண்டனம் குறைந்தது நான்கு சுயாதீன தத்துவ மரபுகளில் ஆணூன்றியது:

    மரபுகண்டனத்தின் ஆதாரம்
    கான்ட்டியன் (Kantian) கடமை நெறியியல்நிரபராதியை வெறும் வழிமுறையாக நடத்துகிறது; மனிதத்துவ சூத்திரத்தின் வகைப்பட்ட கட்டளையை மீறுகிறது
    பரிணாமவாதம்காரணியை முறையாக தவறாக கூறுகிறது, காலப்போக்கில் மோசமான கூட்டு விளைவுகளை உருவாக்குகிறது
    நல்லொழுக்க நெறியியல்நீதியுடன் (dikaiosyne) கட்டமைப்பு ரீதியாக பொருந்தாதது — ஒவ்வொருவருக்கும் தகுதியானதை வழங்கும் நல்லொழுக்கம்
    ஒப்பந்தவாதம் (ஸ்கேன்லன் – Scanlon)அதன் செலவுகளை சுமப்பவர்களுக்கு நியாயப்படுத்த முடியாது; நியாயமான மறுப்பின் சோதனையில் தோல்வியடைகிறது

    தத்துவார்த்தமாக குறிப்பிடத்தக்கது என்னவென்றால், எ.நி.கு. ஒவ்வொரு முக்கிய நெறிமுறை மரபிலிருந்தும் கண்டிக்கப்படுகிறது — ஒன்றிலிருந்து மட்டுமல்ல. இந்த மரபு-வழி ஒருமைப்பாடு, அரசியல் தத்துவத்தில் அநீதியின் கட்டமைப்பு ரீதியாக மிகத் தெளிவான வழக்குகளில் இது ஒன்று என்று கூறுகிறது.


    VII. வரலாற்று நிகழ்வுகள்

    செயல்திட்டத்திற்கு ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்று நிகழ்வியல், கோட்பாட்டு பகுப்பாய்வை உறுதிப்படுத்துகிறது:

    • கலவரங்களும் யூத எதிர்ப்பும் (இடைக்கால ஐரோப்பா முதல் நவீன காலம் வரை): வெகுஜன மரணங்கள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மைக்கு — எந்த காரண தொடர்பும் இல்லாமல் — யூதர்கள் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
    • மெக்கார்த்திசம் (1950 களில் அமெரிக்கா): “மறுப்பு = குற்றத்தின் ஆதாரம்” என்ற அறிவுத்தத்துவ தர்க்கத்தை பயன்படுத்தி, நிரபராதி நபர்களை கம்யூனிஸ்ட் முகவர்களாக முறையாக குற்றஞ்சாட்டுதல்.
    • மந்திரவித்தை விசாரணைகள் (ஆரம்பகால நவீன ஐரோப்பா): ஜிரார்டின் முன்மாதிரி வழக்கு — பாதிக்கப்படக்கூடிய நபர்கள் (முக்கியமாக பெண்கள், ஏழைகள், சமூக விளிம்பினர்) பயிர் தோல்வி, நோய் மற்றும் சமூகக் கலக்கத்திற்கு குற்றஞ்சாட்டப்பட்டனர்.
    • காலனிய காலத்திற்கு பிந்தைய பலிக்கடாவாக்குதல்: பெரும்பான்மை குழு அரசியல் தேர்வுகளால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு பொருளாதார தோல்விகளுக்கு குடிவரவு மற்றும் சிறுபான்மை சமூகங்கள் குற்றஞ்சாட்டப்பட்டன.

    ஒவ்வொரு வழக்கிலும், கோட்பாட்டு கணிப்புகள் பொருந்துகின்றன: நிரபராதி, அறிவுத்தத்துவ ரீதியாக அதிகாரமற்றவர்கள், “போதுமான அளவு வேறுபட்டவர்கள்” குறிகளாக ஆகிறார்கள்; செயல்திட்டம் நீண்டகால நிறுவன சிதைவின் விலையில் குறுகியகால சமூக ஒற்றுமையை உருவாக்குகிறது.


    VIII. முடிவுரை: செயல்திட்டம் என்ன வெளிப்படுத்துகிறது

    “எப்போதும் நிரபராதியை குற்றஞ்சாட்டு” செயல்திட்டம் அதன் வெளிப்படையான தார்மீக தவறான தன்மையைத் தாண்டி தத்துவார்த்தமாக முக்கியமானது, ஏனென்றால் அது சமூக யதார்த்தம் பற்றிய பல உண்மைகளை வெளிக்கொணருகிறது:

    1. உண்மை தன்னால் செயல்படுத்தப்படுவதில்லை. சமூக அறிவுத்தத்துவம் அதிகார அமைப்புகளால் வடிவமைக்கப்படுகிறது; நிரபராதிக்கு தன்னை சித்தரிப்பவர்களை விட தானாக அறிவுத்தத்துவ நன்மை கிட்டுவதில்லை.
    2. சமூக ஒற்றுமையை விலக்கலின் மூலம் சேர்க்கலைப் போலவே உற்பத்தி செய்யலாம். சமூகங்கள் இயல்பாகவே உண்மையை கண்டறிவதில்லை — அவை உணர்ச்சியைக் கண்டறிகின்றன.
    3. அரசியல் அதிகாரத்திற்கு நீதி தேவையில்லை — நீதிக்கு நம்பகமான கதை தேவை, அது பொய்யாக இருந்தாலும், அதன் பணியை செய்ய போதுமான காலம் நிலைத்திருக்கும்.
    4. குற்றத்தின் கட்டமைப்பு பகுப்பாய்வு — “யார் குற்றவாளி?” என்று மட்டும் கேட்காமல், “குற்றத்தை கூறுவதால் யாருக்கு பயன் கிடைக்கிறது, என்ன நிறுவன நிலைமைகளில்?” என்று கேட்பது — அரசியல் தத்துவம் மற்றும் சமூக விமர்சனத்திற்கு இன்றியமையாதது.

    இந்த அர்த்தத்தில், கடுமையாக ஆய்வு செய்யப்பட்ட மூலோபாயம் (strategy), அதன் பயிற்சியாளர்களுக்கு மட்டுமான குற்றச்சாட்டு அல்ல. இது ஒவ்வொரு அறிவுத் தோற்றவியல் சமூகத்திற்கும் எப்போதிருக்கும் நிலையான சவால்: நாம் இதை அங்கீகரிக்காமல் இதே கட்டமைப்பை செயல்படுத்துவதற்கான நிலைமைகள் என்ன?


    உதவிய முதன்மை ஆதாரங்கள்:

    • ஜிரார்ட், ரெனே — வன்முறையும் புனிதமும் (1972), பலிக்கடா (1982);
    • சார்த்ர், ஜான்-பால் — இருத்தல் மற்றும் இல்லாமை (1943);
    • அல்துஸ்ஸர், லூயி — “கொள்கை மற்றும் ISAகள்” (1970);
    • ஃபிரிக்கர், மிரண்டா — அறிவாற்றல் அநீதி (2007);
    • ஆரென்ட், ஹன்னா — தொலைதூர நாடுகளில் தோற்றம் (1951),
    • “உண்மையும் அரசியலும்” (1967);
    • டுர்க்ஹீம், எமிலி — தொழிலின் பிரிவு (1893);
    • வேபர், மேக்ஸ் — பொருளாதாரம் மற்றும் சமூகம் (1922);
    • ஸ்கேன்லன், T.M. — நாம் ஒருவருக்கொருவர் என்ன கடமைப்பட்டிருக்கிறோம் (1998).

    கிளாட் ஏ.ஐ. உதவியுடன் எழுதியது

    ஞானபீட இதிகாசம்: ஆழ்ந்த ஞானங்கள்

    ஆண் : உன் சைட்ல ஃபால்ட் வெச்சின்னு என்ன பாத்து முறைக்கிற! நான் ஃபுல் ஸ்பீட்ல பேச வந்தா –> ஏண்டா ஓடி ஒளியுர

    ஆண் : போடே…

    ஆண் : அதே தான் அதே தான்

    ஆண் : அப்படியேயா புடிச்சிக்கோ

    ஆண் : உன் சைட்ல ஃபால்ட் வெச்சின்னு –> என்ன பாத்து முறைக்கிற!? நான் ஃபுல் ஸ்பீட்ல பேச வந்தா ஏண்டா ஓடி ஒளியுர

    ஆண் : 4-வால்ஸ்ஸுக்குள்ள மட்டும் ரூல்ஸ் பேசி நடிக்கிற… நான் அதே ரூல்ஸ, ரோட்ல பேசினா –> ஏண்டா வந்து கொலைக்கிற!?

    பல்லவி : சிக்கன் சிக்கன்! ஆச்சிக்கு சக்கன் சக்கன் சக்கன் சக்கன்…

    ஆண் : நான் முட்டா ஊதிய!? எனக்கு ரத்தம் வந்தா… உனக்கு என்ன தக்காளி சட்டுனியா… என்னோட ரைம்ஸ் ஸ்கீம் பாத்து என்ன கிண்டல் பண்றியா…. இன்னடா சுண்டல் தரியா

    ஆண் : ஏய்..ஆட்டு தொட்டியுல; ரோட் முக்குல; ஒளிஞ்சு நிக்குற வைட் கய்; ஜோபீல வெச்சிருந்த டைம் லிமிட்ல காசு அடிச்சது… நைஸ் ட்ரை!? நைஸ் ட்ரை… நைஸ் ட்ரை

    பல்லவி : {மக்கமிஷி.. பிரச்சனிய லெஃப்ட் ஹேண்ட்ல ஹேண்டில் பண்ற மைக் லஸ்சி!? நம்ம ஊரு பூமர் டாக்ஸ்!? என்ன ஸ்டாரு!? ரொம்ப பிஸி!? பஸ்-ஸ்டாப்ல பால்மெய்ன் டி ஷர்ட் போட்ட கூட அஸ்சி!? இப்போ ரொம்ப குஷி}

    ஆண் : இன்ஸ்டால்மெண்ட் ஹெட்ஃபோன் வாங்க கூட உனக்கு காசு இல்ல!? இன்ஸ்டாகிராம்ல எக்சைட்மெண்ட் பாக்க ஓடி வரன் மாப்பிள

    ஆண் : நான் ஸம்மர் டைம்ல, வூலன் கோட் போட்டு சுத்துற புலி!? யப்பா… லேட் நைட்ல வாக்கிங் போய் நாய் கடிச்சு வலி!?

    ஆண் : வீட்ல ரொம்ப கண்டிஷன்!? என் பேருல நெரிய பெட்டிஷன்!? நான் ரூல்ஸ ஆ மதிக்கும் மனிஷன்!? நீ பண்ற தப்பெல்லாம் மனிச்சேன்!? நம்ம சிட்டி ஃபுல்ல பாலுஷன்!? செய்யுற வேலைக்கு ஏத்துக்கு கமிஷன்!? நான் கேப்பேன் –> ஏன்னா சிட்டிஸன்!? நம்ம விரல்ல இருக்கு சொல்யூஷன்!?

    ஆண் : உள்ளூர் வெயில் ஊறுகாயை நக்கினு… ஆட்டம் பாம்ப சேர்ந்து குடிச்சினு… ஷார்ப்பு புள்ளைங்க… காடிய தட்டிக்கின்னு… வைபுக்கேத்த பாட்ட பாடினு… டாடி காசுல பாடி வெச்சுனு… மாடி மேல லைலா மஜ்னு… நைட் ஃபுல்லா கொசுவ அடிச்சுனு!? லூப்பு மோட்ல லைஃப் ஓடினு

    ஆண் : யெப்பா டா டை….குந்துற யெப்பா

    ஆண் : மச்சான் இட்ஸ் அ லாங் வே டு கோ… அடிச்சு தூக்கு…

    Song Name : Makkamishi
    Movie : Brother
    Composed, Arranged & Music Programmed by Harris Jayaraj
    Singers : Paal Dabba & Dacalty
    Lyrics : Paal Dabba

    மணல், மழை, பச்சை

    மற்ற சங்கங்களைப் பார்த்தால் பொறாமையாகவே இருக்கிறது.

    இது இன்று, நேற்று அல்ல… பள்ளிக் காலத்தில் துவங்கியது.
    கல்ச்சுரல்ஸ் நடக்கும்போது ராய்/சென்-களும், நாயர்களும், ரெட்டிகளும், ராவ்களும் எல்லா க்விஸ் போட்டிகளிலும் கடைசி நான்கில் வந்தார்கள்.
    வந்தாரை வாழவைக்கும் தமிழகத்து வந்தேறியாகிய நான் இருக்கும் குழு தேறவில்லை.

    கல்லூரியில் எல்லாப் போட்டிகளிலும் முதலிடம் கேரளத்தவர்கள்.
    மழையையும் ரசிப்பார்கள்;
    டெல்லிக்கே நேநீரையும் கற்றுத் தருவார்கள்.

    மீண்டும் அவர்களின் நிகழ்வுக்கு நடுவராகப் போகும் வாய்ப்பு.
    எத்தனை சிறப்பாக மாணவர்கள் பேசுகிறார்கள்!

    தமிழுக்கென்று நான்கைந்து சங்கங்கள் உண்டு.
    டெக்கா (DECA), மாடி (MADI), பீ (bee), என்று கண்டதிற்கும் கேட்டதிற்கும் கற்றும் பெற்றும் செல்வார்கள்.
    எனினும், நீமா எனப்படும் NEMA (New England Malayalam Association) விழா பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.

    1. நீமா அமைப்பின் மிலிட்டரி நிர்ணயம்: ஜெர்மானிய நேரக் கட்டுப்பாடு என்பது ஐம்பதாண்டு முன்பு உன்னதம்: இன்று நீமா-வின் கால துல்லியம் இன்றைய தங்கப் பதக்கம்.
    2. நடுவர் குழுவில் பன்முகமை: பாலினம், வயது, இனக்குழு, மொழி, மதம், உடல் திறன், பிராந்தியம், குடியேற்ற நிலை
    3. சினேகம் – அன்பிற்கு நான் அடிமை; சேச்சிகளின் பண்பிற்கு நான் அடிமை. தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை.

    இன்று அற்புதமான மாலை.
    பழகிய முகங்கள்.
    பாசமான நட்புகள்.
    பாந்தமான உரையாடல்கள்.

    நிறைவான நிகழ்வு.

    படத்தில் உள்ள நடிகைகள் யார் என்று கண்டுபிடிப்போருக்கு சிறப்பு பரிசு உண்டு!

    அரசியல்-தத்துவ விளக்கம்

    அமெரிக்க அரசியலமைப்பின் சில திருத்தச் சட்டங்கள் (Amendments) தொடர்ச்சியான சுதந்திர அமைப்பாக எப்படி செயல்படுகின்றன? அதாவது முதல் (First), நான்காம் (Fourth), இரண்டாம் (Second) திருத்தங்கள் சேர்ந்து சிந்தனை → வெளிப்பாடு → பாதுகாப்பு என்ற சுதந்திர சங்கிலியை எவ்வாறு உருவாக்குகின்றன?

    1. முதல் திருத்தச் சட்டம் (First Amendment): சிந்திக்கவும் பேசவும் உரிமை

    இந்த சட்டம் கீழ்கண்ட சுதந்திரங்களை பாதுகாக்கிறது:

    • – பேச்சுச் சுதந்திரம்
    • – ஊடகச் சுதந்திரம்
    • – மதச் சுதந்திரம்
    • – அமைதியாக கூட்டம் நடத்தும் உரிமை
    • – அரசாங்கத்திடம் மனு அளிக்கும் உரிமை

    இதன் அடிப்படை கருத்து: தனி மனிதன் தன் கருத்தை சுதந்திரமாக சிந்தித்து அதை வெளிப்படுத்தும் உரிமை.

    அமெரிக்க நீதிபதி ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ் ஜூனியர்:

    “அரசாங்கத்தை விமர்சிப்பதாக இருந்தாலும் கூட, அந்தக் கருத்துகளை சிந்தித்து, அவற்றை பொதுவெளியில் வெளிப்படுத்த சுதந்திரமாக இருக்கிறீர்கள்.”

    அதாவது:

    படி 1:
    நீங்கள் நினைப்பதை பொதுவாக வெளிப்படையாக சொல்லும் உரிமை இருக்க வேண்டும்.
    —-

    2. நான்காம் திருத்தச் சட்டம் (Fourth Amendment): அரசின் அத்துமீறலிலிருந்து பாதுகாப்பு

    இந்த சட்டம் மக்களை கீழ்கண்டவற்றிலிருந்து பாதுகாக்கிறது:

    • – காரணமில்லாத வீடு சோதனை ரோதனை
    • – சட்டவிரோத கைதுகள்
    • – அரசின் அத்துமீறிய கண்காணிப்பு

    இதன் முக்கியத்துவம்:

    அரசாங்கம் எப்போது வேண்டுமானாலும் வீட்டை சோதிக்கலாம் அல்லது கண்காணிக்கலாம் என்றால் மக்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்த பயப்படுவார்கள்.

    அதனால்:

    படி 2:
    நீங்கள் பேசும் உரிமையை பயன்படுத்த அரசின் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பு இருக்க வேண்டும்.
    —-

    3. இரண்டாம் திருத்தச் சட்டம் (Second Amendment): இறுதி பாதுகாப்பு

    இந்த சட்டம் ஆயுதம் வைத்திருக்கும் உரிமையை பாதுகாக்கிறது.

    அரசியல் தத்துவவாதிகள் கூறுவது:

    • – அரசு அடக்குமுறையாக மாறினால்
    • – மக்களின் உரிமைகள் ஒடுக்கப்பட்டால்

    அப்பொழுது மக்களிடம் எதிர்க்கும் திறன் இருக்க வேண்டும்.

    அதாவது:

    படி 3:
    பேச்சு சுதந்திரமும் சட்டப் பாதுகாப்பும் தோல்வியடைந்தால், மக்களுக்கு தங்கள் சுதந்திரத்தை காக்கும் கடைசி வழி இருக்க வேண்டும்.

    சுருக்கினால்:

    “முதல் திருத்தத்தைப் பாதுகாப்பதற்காகவே இரண்டாம் திருத்தம் இருக்கிறது”

    4. அமெரிக்க ஸ்தாபகர் பார்வை

    அமெரிக்காவின் நிறுவனத் தலைவர்கள் — குறிப்பாக
    ஜேம்ஸ் மாடிசன் மற்றும்
    தாமஸ் ஜெஃபர்சன் — நம்பிய கருத்து:

    – உரிமைகள் அரசாங்கம் கொடுப்பவை அல்ல
    – மனிதர்களுக்கு இயற்கையாகவே உள்ளவை
    – அரசியலமைப்பு அவற்றை அரசின் துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாக்கும்.

    இந்தக் கருத்தின் மொத்த அமைப்பு

    நிலைஅர்த்தம்
    சிந்தனைமனிதனின் சுதந்திரமான மனம்
    First Amendmentகருத்தை வெளிப்படுத்தும் உரிமை
    Fourth Amendmentஅரசின் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பு
    Second Amendmentஅடக்குமுறைக்கு எதிரான இறுதி பாதுகாப்பு

    சிந்தனை சுதந்திரம் (First Amendment), அரசின் அத்துமீறலிலிருந்து பாதுகாப்பு (Fourth Amendment), மற்றும் சுதந்திரத்தை காக்கும் இறுதி திறன் (Second Amendment) ஆகியவை சேர்ந்து அமெரிக்க சுதந்திர அமைப்பை உருவாக்குகின்றன.

    எண்ணம்: பாலா / எழுத்து: ஏ.ஐ.

    அளவுகோலின் அபத்தம்

    “சட்டைப்பைக்குள்ளேயே கொள்ளுமாறு வரைபடம் என்பது எவ்வளவு பயனுள்ள பொருள்!” என்று நான் கூறினேன்.

    “அதுவும் உங்கள் நாட்டிடமிருந்து நாங்கள் கற்றுக்கொண்ட ஒன்றுதான்,” என்றார் மைன் ஹர், “வரைபடம் வரைதல். ஆனால் நாங்கள் அதை உங்களைவிட மிக அதிக தூரம் கொண்டு சென்றிருக்கிறோம். உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கக்கூடிய மிகப் பெரிய வரைபடம் எது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?”

    “ஒரு மைலுக்கு ஏறக்குறைய ஆறு இஞ்சுகள்.”

    “ஆறு இஞ்சுகள் மட்டுமா!” என்று வியப்புடன் கூறினார் மைன் ஹர். “நாங்கள் விரைவிலேயே ஒரு மைலுக்கு ஆறு யார்டுகள் என்ற அளவை எட்டினோம். பிறகு ஒரு மைலுக்கு நூறு யார்டுகள் என்று முயன்றோம். அப்போதுதான் எல்லாவற்றிலும் மிகப் பிரம்மாண்டமான எண்ணம் உதித்தது! நாங்கள் உண்மையிலேயே நாட்டின் வரைபடத்தை, ஒரு மைலுக்கு ஒரு மைல் என்ற விகிதத்தில் உருவாக்கினோம்!”

    “நீங்கள் அதை அதிகமாகப் பயன்படுத்தினீர்களா?” என்று நான் கேட்டேன்.

    “அது இன்னும் விரிக்கப்பட்டதே இல்லை,” என்றார் மைன் ஹர்: “விவசாயிகள் ஆட்சேபித்தார்கள் — அது முழு நாட்டையும் மூடிவிடும், சூரிய ஒளியை அடைத்துவிடும் என்று சொன்னார்கள்! எனவே நாங்கள் இப்போது நாட்டையே அதன் சொந்த வரைபடமாகப் பயன்படுத்துகிறோம்; அது கிட்டத்தட்ட அதே அளவு நன்றாக உதவுகிறது என்று உங்களுக்கு உறுதிபட சொல்கிறேன்.”


    சில மொழிபெயர்ப்பு குறிப்புகள்: “Mein Herr” என்பது ஜெர்மன் மரியாதை வார்த்தை (“என் ஐயா” என்று பொருள்), அதை மைன் ஹர் என்று ஒலிப்பெயர்த்தேன் — தமிழில் “மாண்புமிகு ஐயா” என்று மொழிபெயர்க்கலாம் என்றாலும், கேரல் உரைநடையின் கதாபாத்திர அந்நியத்தன்மையை தக்கவைக்க ஒலிப்பெயர்வே சரியானது என்று தோன்றியது. அலகுகள் (இஞ்சு, யார்டு, மைல்) அப்படியே வைத்தேன்.

    கிளாட் செயற்கை நுண்ணறிவின் மொழிபெயர்ப்பு

    from Lewis Carroll, Sylvie and Bruno Concluded, Chapter XI, London, 1893, acquired from a Wikipedia article about a Jorge Luis Borge short story.