Invitation: Articles for Solvanam

சொல்வனம் பத்திரிகை இதழ் எப்பொழுதும் புது எழுத்துகளைச் சிறப்பிக்கும் இதழாக அமையும். புதியவர்களையும் இளையவர்களையும் பற்றிய கட்டுரைகளை வரவேற்கிறோம். ஆர்வமுள்ள வாசகர்கள், தங்கள் என்ன தலைப்பில், எதைக் குறித்து எழுதப் போகிறோம் என்பதை எங்களுக்கு solvanam.editor@gmail.com தெரிவியுங்கள்.

அனைத்து இதழிலும் பிரபலமடைந்த எழுத்தாளர்கள் சிலரோடு, அத்தனை பிரபலமாகாத பல எழுத்தாளர்களையும் வாசக கவனத்திற்குக் கொண்டு வர முனைய வேண்டும். என்னவெல்லாம் எழுதலாம் என்று யோசித்தவுடன் தோன்றிய எண்ணங்கள் இவை:

அ) இரண்டு குழுக்களாக வயதையொட்டிப் பிரித்துக் கொண்டு அவர்களின் படைப்புகளை மொத்தமாக அணுகலாம். இருபது வயது முதல் முப்பது வயது வரையிலானவர்கள்; முப்பதில் இருந்து நாற்பது வயதை எட்டியவர் வரை – இந்த இரு தலைமுறையினரில் எவரெவரை நீங்கள் வாசித்து இருக்கிறீர்கள்? அவர்களுக்கு இடையேயான ஒற்றுமைகள் என்ன? அந்தப் புனைவுகளை எவ்வாறு விமர்சனப் பூர்வமாக அணுகுகிறீர்கள்?

ஆ) கடந்த பத்தாண்டுகளில் உங்களைக் கவர்ந்த மூன்று முக்கியமான நூல்கள் என்ன? கட்டுரையில் வித்தியாசமான முறையில் அணுகுகிறார் என்று எவரைச் சொல்வீர்கள்? சிறுகதைத் தொகுப்பில் எதையெல்லாம் விரும்பி வாசித்தீர்கள்?

இ) முகப் புத்தகம் (ஃபேஸ்புக்), உடனடி எழுத்து (ஃப்ளாஷ் ஃபிக்ஷன்), குறுங்கதை என்றெல்லாம் எழுதித் தள்ளுபவர் எவர்? அவற்றில் எது நெஞ்சில் நிற்கின்றன?

ஈ) கவிதைகள்: ஹைக்கூ, திரைப்பாடல், யாப்பு இலக்கணத்திற்கு உட்பட்ட வெண்பா, டிவிட்டர் குறுமொழிகள் என்று பல வகைகளில் ஒவ்வொன்றிலும் உங்களைக் கவர்ந்த ஆக்கங்கள் என்ன? ஏன் அந்தக் கவிதைகள் உங்களுக்கு நெருக்கமாகின?

உ) தினசரி எவரை வாசிக்கிறீர்கள்? எப்பொழுதாவது மட்டுமே ஒருவர் எழுதினாலும், எவர் எழுதியதை தவறவிடாமல் வாசிக்கிறீர்கள்? அத்தி பூத்தது போல் எழுதுபவர்கள் யார்? காட்டுமல்லியாகப் பூத்துக் குலுங்குவது யார்?

ஊ) எந்த முன்னணி எழுத்தாளர்கள் எவரைப் பரிந்துரைக்கிறார்கள்? அவர்களின் முக்கியமானப் படைப்புகள் என்ன? எவர் அச்சுலகில் புத்தகங்கள் நிறைய வெளியிட்டிருக்கிறார்? அவற்றில் எது இலக்கியத் தரமானது?

எ) யுவ புரஸ்கார், இளம் எழுத்தாளர் விருது போன்ற பட்டியல்களில் இருந்து நீங்கள் நாவல்களையும் கதைகளையும் தேர்ந்தெடுத்து வாசித்து, உங்கள் பார்வைகளை முன்வைக்கலாம்.

ஏ) காலச்சுவடு, உயிர்மை, தமிழினி, யாவரும், டிஸ்கவரி, சந்தியா, கிழக்கு, வல்லினம், நற்றிணை, புலம், எதிர், சிக்ஸ்த் சென்ஸ், எழுத்து, ஜீரோ டிகிரி , விடியல், தேநீர், சீர்மை, செங்கனி இன்ன பிற – புதிய எழுத்தாளர்களை எவர்கள் வெளியிடுகிறார்கள்? எந்தப் புனைகதைகளை வாசித்து இருக்கிறீர்கள்?

ஐ) நீங்கள் சிறுகதைகளைப் படிக்கிறீர்களா? கேட்கிறீர்களா? ஒலிப்புத்தக வடிவில் எதை ரசித்து உள்வாங்கினீர்கள்? கிளப்ஹவுஸ், டிவிட்டர் ஸ்பேசஸ் போன்ற தளங்களில் உங்களின் இலக்கிய கருத்துக்களையும் வாசக விமர்சனங்களையும் பதிவிடுவது உண்டா?

ஒ) புனைவு எழுதுவது என்பது செயல்பாடு; ஒரு சார்பு நிலையை எடுப்பது. அதற்கு சமூக ஊடகங்களில் தன் கொள்கை சார்ந்த நிலை எடுத்து பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையைப் பெருக்குதல் அவசியம். இந்த வகையில் பிரபலமாக இரட்டைக் குதிரை சவாரி செய்பவர்கள் யார்? அவர்களின் எழுத்துக்களை எப்படி மதிப்பிடுவீர்கள்?

ஓ) கதை மீறும் கதை, நாடகம், மொழியாக்கம், மாந்திரீக எதார்த்தம், பேய்க்கதை, துப்பறியும் கதை, காதல் கதை, அறிபுனைவுகள், வரலாற்றுப் புனைவு, மர்மக் கதை, தொன்ம மருவுருவாக்கம், திகில் கதை, பதின்ம வய்தினருக்கான ஆக்கம் – இவற்றில் ஒவ்வொரு வகையிலும் எந்தப் புத்தகங்களை பரிந்துரைப்பீர்கள்?

ஔ) கதைகளின் செவ்வியல் மற்றும் நவீன வடிவங்கள், உலக மொழிகளிலும், தமிழிலும் நிகழ்ந்துவரும் பரிசோதனை முயற்சிகள் என்ன?

இணையத்தில் எத்தனை உள்ளடுக்குகள் இருந்தாலும் எதுவொன்று சுழித்து மேலெழுந்து வருகிறதோ, அதுவே பார்வையில் விழுந்து உணர்வைத் தொடுகிறது. ஒரே சமயத்தில் ஒரு பெரும் களஞ்சியமாகவும் பொங்கிப் பெருகும் புதுவெள்ளத்தின் குமிழாகவும் நித்தியத்தையும் நிலையின்மையையும் தன் இயல்பாய்க் கொண்டது இணையம். அச்சுக்கு உரிய நேர்த்தொடர்ச்சி இணையத்தில் இல்லை, அதன் போக்கு சுழன்று விரிவது. உரையாடல்களும் எதிர்வினைகளும் பகிர்தல்களுமே இணையத்தில் உள்ள படைப்புகளுக்கு உயிர் அளிக்கின்றன. எனவே வாசகர்கள் புதிய படைப்புகள் குறித்து தொடர்ந்து பகிர்ந்து உரையாட வேண்டுமென்றும் எழுத்தாள நண்பர்கள் தம் பங்களிப்பை தொடர்ந்து அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

எந்த ஒரு இதழுமே படைப்புகளால்தான் கவனம் பெறுகின்றது. #solvanam அந்தப் படைப்பாளிகளின் மொத்த பங்களிப்பைக் குறித்த அறிமுகத்தையும் விமர்சனத்தையும் வரவேற்கிறது. இந்த இதழுக்குப் பல நண்பர்களும் படைப்பாளிகளும் ஒத்துழைக்க அழைக்கிறோம்.

உங்கள் தொடர்ந்த நல்லாதரவிற்கு மனமார்ந்த நன்றி. உங்கள் எண்ணங்களை எடிட்டருக்கு அனுப்பவும்- அவரது மின் அஞ்சல் முகவரி இது – solvanam.editor@gmail.com

Tamil Podcasts: Novels, Classics and Literature for Listening

சொல்வனம் ஒலிவனம் வழியாக: தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி : ஒவ்வொரு புதன்கிழமையும் கேட்கத் தவறாதீர்கள்!

கூடிய சீக்கிரமே, Saraswathi Thiagarajan சரஸ்வதி தியாகராஜன் ‘தினம் ஒரு தொடர்’ போர்டு போட்டுவிடுவார்.

இப்போதைக்கு இவற்றை ஒலியும் ஒளியுமாகக் கொடுத்து வருகிறார்:
1. இரா. முருகனின் ‘மிளகு’ – #சொல்வனம் தளத்தில் வெளியாகும் பெருங்காப்பியம் (மாதத்தின் இரண்டாம் ஞாயிறு மற்றும் நான்காம் ஞாயிறு)

2. கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம்: செவ்வியல் இலக்கியங்கள்

3. தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் நாவல்: காலச்சுவடு கிளாசிக்

4. இரா. முருகனின் ‘தினை’ – புத்தம் புதிய புதினம்: திண்ணை (வாரந்தோறும்)

5. அதிரியன் நினைவுகள் – #solvanam Series (மாதத்திற்கு இரு முறை)


6. ராக் தர்பாரி – சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் : வெள்ளிதோறும்

இது தவிர சமகாலச் சிறுகதைகள், அஞ்சலிகள், சுவாரசியமான கட்டுரைகள், சொல்வனம் இதழில் வெளியாகும் இடுகைகள் எல்லாமும் சொல்வனம் ஒலி/ஒளிவனத்தில் கிடைக்கிறது.

https://www.youtube.com/@thamils/playlists

அவருடன் ஜமீலா. ஜி என்பவரும், வித்யா அருண் என்பவரும் கூட இணைந்து செயல்படுகிறார்கள். சுகா எழுதிய கட்டுரைகளை வித்யா சுபாஷ் வாசித்து இருந்தார்.

தரையில் இறங்கும் விமானங்கள் இந்துமதியால் 1982-ல் ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதப்பட்டு பின்னர் நூல்வடிவம் பெற்றது. பொதுவாசிப்புக்குரிய படைப்பு எனினும் நாடகத்தன்மை கொண்ட நிகழ்வுகளோ செயற்கையான உணர்வுகளோ இல்லாமல் எளிய உரையாடல்கள், ரசனையின் பரிமாற்றங்கள் வழியாகச் சென்று நிறைவுறுகிறது. எண்பதுகளின் உணர்வுநிலைகளை மிகச்சரியாக வெளிப்படுத்திய பொதுவாசிப்புக்குரிய நூல்களில் ஒன்று என அடையாளப்படுத்தப்படுகிறது (நன்றி: ஜெ. விக்கி)

இந்த நாவல், துரை இயக்கி அஜித் நடித்த திரைப்படமான ‘முகவரி’யை எனக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தது. இசைத்துறையில் ஆர்வமும் திறமையும் கொண்ட ஓர் இளைஞன் சினிமாவில் முட்டி மோதி தோற்றுப் போய் குடும்பச் சூழல் காரணமாக இறுதியில் பணிக்குச் செல்லும் கதை. இந்துமதியின் நாவலில் இருந்து துரை தூண்டுதல் பெற்றிருந்தாலும் ஆச்சரியமில்லை. அண்ணன், அண்ணி பாத்திரம் உட்பட திரைப்படத்திற்கும் நாவலுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இந்த நாவல், தொலைக்காட்சி தொடராக படமாக்கப்பட்ட போது விஸ்வம் பாத்திரத்தில் ரகுவரன் நடித்திருந்தார் என்று நினைவு. ஆனால் ‘முகவரி’யில் நாயகனுக்கு அண்ணனாக, அதாவது பரசு பாத்திரத்தை அவர் ஏற்றிருந்தார். (நன்றி: பிச்சைப்பாத்திரம் சுரேஷ் கண்ணன்)

வலைபரப்பு – உங்களுக்குப் பிடித்த பாட்காஸ்டிங் வலையொலி நிரலி வழியாகக் கேட்கலாம்
காணொளி – யூடியுப் கன்னல் வழியாகப் பார்க்கலாம்.

சொல்வனம் ஒலிவனம் வழியாக: தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி : ஒவ்வொரு புதன்கிழமையும் கேட்கத் தவறாதீர்கள்!

பேட்ட (அ) பட்டினம்

சென்னை என்றால் மதராஸ்.

மதராஸ் என்றால் மதர் ஆசி.

அந்த மதர் உங்கள் அம்மா ஆக இருக்கலாம்!

அல்லது அகில இந்திய அண்ணா திமுக கட்சியின் அம்மா ஆக இருக்கலாம்!

பாண்டிச்சேரி மதர் ஆக இருக்கலாம்!

மதர் தெரஸா ஆக இருக்கலாம்!

அன்னை மேரி ஆக இருக்கலாம்!

அதுதாங்க சென்னை.

இங்கே மதம், கட்சி, எல்லாம் இல்லாததால் –> மதராஸ்.

அது ஒரு மொழி.

பிராமணா பாஷை…

கொங்குத் தமிழ்…

நாகை மலையாளம்…

இதெல்லாம் தமிழென்றால் –> மதராஸில் இருப்பது தொல்காப்பியத் தமிழ். ”வளர்தமிழ்” (வளர்ந்தது, வளர்கிறது, வளரும்)

சோ இதை முதலில் திரையில் விக்கிப்பிடியாத்தனமாகப் பதிந்தார்.

அதன் பின் நாகேஷ், கமல் என்று சினிமாக்காரர்கள் தொடர்ச்சியாக இலக்கண சுத்தமாக இந்த நகரத்தின் உரையாடல்களை உதிர்த்திருக்கிறார்கள்.

பேட்ட ராப், கானா என்று இதற்கு இசை சம்பந்தமான உப பிரிவுகளும் உண்டு.

அவற்றைக் கேட்கும் போது மெரீனா கடைகளின் ஓசையும் தட்டுக்கடைகளின் உணவும் இருந்தால் சுவைக்கும்.

சென்னா பட்டூரா கிடையாது. ஆனால், அதுதான் சோளே பட்டூரா ஆக அன்றைய பாலிமர் உணவகத்திலும் தாசா-விலும் பரிமாறப்பட்டது.

திருவொற்றியூரில் சுந்தரர்

திருமயிலையில் ஞானசம்பந்தர்.

நடுவில் செயிண்ட் தாமஸ் மௌண்ட், ஆயிரம் விளக்கு என்பார்கள் சென்னையை.

அந்த சென்னையை வடது, இடது, மத்திமர் என்று செண்ட்ரல் அரசாங்கம் பிரித்து தொகுதியாக்கினார்கள்.

அதன் பிறகு பா. இரஞ்சித் அதைப் படமாகவும் எடுத்தார்.

அந்தத் தலைப்பை வெற்றிமாறனும் கையாண்டார்.

மதராஸி என்றால் வடக்கத்தவருக்கு குறியீடு.

மதாராஸ் என்றால் சென்னை செண்டிரலும் எல்.ஐ.சி. பில்டிங்கும் என்பான் கோடம்பாக்கத் தமிழன்.

மதாராஸ் என்றால் காந்தி சிலையும் வள்ளுவர் சிலையும் என்பான் சென்னைக்காரன். (அம்பேத்கார் இல்லாத இடமெங்கே?!)

சென்னைக்காரன் என்றால் வாழும் வேட்கை உள்ளவன் என்பது தமிழருக்குப் புரிந்த அடையாளம்.

நான் பச்சை சென்னையையிட்.

கல்கி: பொன்னியின் செல்வன் 2

சொல்வனம் தளத்தில் வெளியான “ஜே ஜே சில குறிப்புகள் – புத்தக விமர்சனத்தில்” இருந்து:

*

உண்மையில் மலையாள எழுத்தாளன் என்ற ஒரு கருவியைப் பயன்படுத்தி தமிழ் கலாச்சாரத்தையே கலாய்க்கிறார் சு.ரா. சரித்திர கதைகள் கொண்டு மக்களை titillate செய்து பிழைப்பு நடத்தும் சரித்தர நாவலாசிரியர்களைப் பார்த்து மலையாள எழுத்தாளர்கள் கேட்பது போல ’என்ன சிவகாமி அம்மாள் தன்னுடைய சபதத்தை முடித்துவிட்டாளா?’ என்று கேட்டு அப்பட்டமாக கலாய்த்துவிடுகிறார்.

*

சுந்தர ராமசாமியின் அந்த நறுக்: (ப.38)

“திடீரென்று சத்தம் போட்டுப் பரிகாசமாகச் சிரித்தபடியே, ‘சிவகாமி அம்மாள் அவளுடைய சபதத்தை நிறைவேற்றிவிட்டாளா?’ என்று கேட்டான். இந்தக் கேள்வியின் உட்பொருள் விளங்க எனக்குச் சற்று நேரம் பிடித்தது. தமிழின் கட்டற்ற கற்பனைப் பண்புகளையும் காதல் கதைகளையும் எண்ணியா சிரிக்கிறான் இப்படி?

நான் ஆண்மையற்ற மெல்லிய குரலில் ஜே.ஜேயைப் பார்த்துப் பேச ஆரம்பித்தேன்.

‘புதுமைப் பித்தன் என்றொருவர் எங்கள் பாஷையின் எழுதியிருக்கிறார். நீங்கள் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’

ஜே.ஜே. தலையைக் குனித்து கவனிக்க ஆரம்பித்தான். ஆனால் அதற்குள் அவனுடைய ஆராதகர்கள் அவன் கவனத்தை வேறு பக்கம் திருப்பிவிட்டார்கள்.”

*

அந்த சு.ரா. சிஷ்யன் இன்று சொன்னியின் செல்வன் திரைக்கதையாளர் + வசனகர்த்தா.

காலம்தான் எவ்வளவு பெரிய ஆசான்!?

மயில்சாமி – அஞ்சலி

முதன் முதலாக அந்த கேசட்டை கேட்டபோது “இப்படித்தானே நகைச்சுவை இருக்க வேண்டும்! சுருளிராஜனும் தேங்காய் சீனிவாசனும் உசிலை மணியும் பக்கோடா காதரும் ஏன் இப்படி பாடாய் படுத்துகிறார்கள்?” எனத் தோன்றியது.

அது “சிரிப்போ சிரிப்பு”

மயில்சாமி என்னும் மிமிக்ரி கலைஞரும் லட்சுமணன் என்பவரும் இணைந்து அன்றைய பிரபலங்களை கிண்டல் அடித்து இருப்பார்கள்.

ஆளுங்கட்சி எம்.ஜி.ஆர். எதிர்க்கட்சி கருணாநிதி. ஆன்மீகச் செம்மல் கிருபானந்த வாரியார். சூப்பர் ஸ்டார் ரஜினி – எல்லோரையும் வைத்து ரசனையாக செய்திருப்பார்.

அதில் கடி ஜோக் ஒரு வகை – அது (சுருதி) லட்சுமணன் வகை – அந்த வகை இன்றும், என்றும், எங்கும், எப்பொழுதும் கடிக்கலாம். அவற்றுக்கு ரொம்ப யோசிக்க வேண்டாம். ஆனந்த விகடனில் வெ. சீதாராமன் நகைச்சுவை மாதிரி. கொஞ்சம் பழைய நினைப்பு + நிறைய கேலி + நிச்சயம் உல்டா. ஜாலியாக இருக்கும். மனதில் நிலைக்காது. மறந்து விடும்.

ஆனால், குரல் மாற்றிப் பேசும் மைல்சாமி குரல் – அந்தந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும். புரட்சித் தலைவர் என்றால் அவரின் பாணி. கலைஞர் என்றால் சொற்சிலம்பம், நெடுங்கவிதை புராணம். ரஜினிக்கேற்ற டயலாக், டி ராஜேந்தருக்கு ஏற்ற எதுகை மோனை வசனம்.

குறிப்பாக, ‘நிலா அது வானத்து மேல’ பாட்டிற்கு வாரியார் சொல்லும் சொற்பொழிவு. அது எனக்கு எந்தப் பாடலை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உயர்த்தி வைக்கலாம்; எந்தக் கருத்தையும் நைச்சியமாக விமர்சனமாக உள்ளே வைக்கலாம்; எந்தக் குப்பை சரக்கையும் நம் வசதிக்கேற்ப மாற்றலாம் – என்னும் நுட்பத்தை செய்முறையாக முதன் முறையாக விளக்குவார் மயில்சாமி.

ஸ்டாண்ட்-அப் என்கிறோம்; பகிடி என்கிறோம்; கலாய்த்தல் என்கிறோம்; டிஜே ஒருங்கிணைப்பு; விஜே வர்ணனை; சந்தானம், சிவ கார்த்திகேயன், மா.க.பா, ரோபோ சங்கர் எல்லோருக்கும் முன்னோடி.

ராஹுல் காந்தியை தங்கபாலு அவர்கள் மொழிபெயர்த்ததற்கு முன்னோடியாக இயக்குநர் விசுவும் கிஷ்மு அவர்களும் ஒரு நிகழ்ச்சியில் அன்றே செய்திருப்பார்கள். அதன் தொடர்ச்சியாக கொஞ்சம் காலம் கழித்து ஈழத்து தமிழை மொழிபெயர்ப்பவராக திரைப்படம் ஒன்றில் மயில்சாமியைப் பார்த்தேன்.

அந்த ஒலிப்பேழையை மீண்டும் மீண்டும் கேட்க வைத்தது அவர்(களின்) சாதனை. அதை சாடர்டே நைட் லைவ் போல் ஒரு இயக்கமாக மாற்றியது தற்செயல் பிறவிப்பயன். எங்காவது பாக்கியராஜையோ சந்திரசேகரையோ ஜனகராஜையோ கேட்டால் மயில்சாமி நினைவில் வருவது மெய்க்கீர்த்தி!

மிகவானுள் எரி தோன்றினும் குளமீனொடுந் தாட்புகையினும்

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த உரையாடல்:

Meet C/2022 E3 (ZTF) (her friends call her the green comet for short)

“பீஷ்ம ஏகாதசிக்காக புதன்கிழமையன்று வானில் பெருமாள் தோன்றினார். பார்த்தாயா!?”

“தவறவிட்டுட்டேனே… எப்பொழுது, எப்படி வந்தார்?”

“அது வால் நட்சத்திரம் எனலாம்… பச்சை நிறத்தில் இருக்கிறது. இந்த வால் நட்சத்திரத்தின் மையப்பகுதி இரு கார்பன் அணுக்கள் சேர்ந்த டைகார்பன் (C2) என்ற மூலக்கூறுகளால் நிறைந்துள்ளது. சூரிய ஒளியோடு இந்த டைகார்பன் அணுக்கள்  வினைபுரிவதால் இந்தப் பச்சை நிற ஒளி வருகிறது.”

அருஞ்சொல் தளத்தில் ஜோசப் பிரபாகர் கட்டுரை எழுதுவது போல் பாடம் எடுக்கிறீர்கள். ஆன்மீகமாகச் சொல்லுங்களேன்…”

“மகாவிஷ்ணு மரகத மேனியனாக பச்சை நிறத்தில் பீஷ்மருக்காக விஸ்வரூப தரிசனம் தருகிறார். எனவே இந்த காட்சியை ‘பச்சை வண்ண பெருமாள்’ எனலாம்!”

“ஏதோ ஏகாதசினு சொன்னீங்களே?”

“பீமன் கூட பட்டினி இருப்பதால் நேற்றைக்கு பீம ஏகாதசி என்று பெயர்.”

“எனக்குத்தான் காது ஒழுங்காக் கேக்கலியா! பீஷ்ம ஏகாதசினு சொல்லிட்டு இப்பொழுது சாப்பாட்டு ராமனை உபவாசம் இருப்பதாக சொல்கிறீரே?”

“பீஷ்மர் கதை உங்களுக்குத்தான் தெரியுமே! அவர் அஷ்ட வசுக்களில் ஒருவர். வசு எனும் சொல்லுக்கு வெளி (Space) என்று பொருள். இவர்கள் இயற்கையையும் இயற்கைக் கோட்பாடுகளையும் உருவகிப்பவர்கள்.”

“அதெல்லாம் சரி… பீஷ்மருக்கும் வால் நட்சத்திரத்திற்கும் என்ன சம்பந்தம்?”

“பிரபாசன் எனும் வசு வைகறையை குறிப்பவர். அவருடைய மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, வசிட்டரின் காமதேனு பசுவை கவர்ந்து செல்கையில், வசிட்டரால் சாபம் பெற்று மண்ணுலகில், சாந்தனு – கங்கை தம்பதியர்க்கு பீஷ்மராக பிறந்தார்.”

“பீஷ்ம ஏகாதசி அன்னிக்குத்தான் பீஷ்மர் பரமபதம் அடைந்தார். அன்றைக்கு பச்சை வால் நட்சத்திரம் வருது. சரியா?”

“இல்லை. பீஷ்மர் அஷ்டமியில் மரணமடைந்தார். அதாவது ரத சப்தமி அன்று பரந்தாமத்திற்கு செல்ல நிச்சயித்தார்.”

“அப்படியானால், பச்சை தூமகேது… ஏகாதசி பெருமாள்… பீஷ்ம ஏகாதசி… எல்லாம் எதேச்சைதானே?”

“கோதர்ம: சர்வதர்மாணாம் பவத: பரமோ மத: !

கிம் ஜபன் முச்யதே ஜந்துர் ஜன்மசம்சார பத்தனாத் !

என்ற யுதிஷ்டிரன் வினவியபோது, “அனைத்து தர்மங்களிலும் சிறந்த தர்மம் எது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று கேட்டபோது, “நாராயண நாம ஸ்மரணையே சிறந்த தர்மம்” என்று பதிலளித்தவர். அர்ஜுனனின் ரத சாரதியாக குதிரைகளை வழி நடத்தும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா என் இதயத்தில் எப்போதும் நிலைக்கட்டும் என்று தியானம் செய்கிறார் பீஷ்மர்”

“வானியல் அறிவு அதிகம் வளராத காலகட்டத்தில் இருந்த மனிதர்கள் அவ்வப்போது வானத்தில் திடீரென்று ஒரு பொருள் நட்சத்திரம் போன்றே ஒளிர்ந்துகொண்டே வால் போன்ற தோற்றத்தில் இருந்ததால் இதற்கு வால் நட்சத்திரம் என்ற பெயரிட்டு அழைத்தார்கள். ஆனால், இது உண்மையில் நட்சத்திரம் அல்ல. கோளும் அல்ல. அதற்கு வால் எப்போதும் இருப்பதில்லை. – என்பார் ஜோசப் பிரபாகர்.”

“சரியே… அதனால்தான் விஷ்ணு சஹஸ்ரநாமம் பூராவும் சொல்லி முடித்தபின், ‘ரதாங்கபாணி ரக்ஷோப்ய: சர்வப்ரஹரணாயுத’ என்ற நாமத்தோடு முடிக்கிறார். அதற்கு முன்பே ‘சக்ரீ’ என்கிறார். அந்த சக்கரத்தின் கனற்கொடியை C/2022 E3 (ZTF) எனலாம்.”

“அந்த மாதிரி ஜீரோ டிகிரி ஃபாரென்ஹீட்டில் தேவுடா காத்தால் பச்சை வண்ணப் பெருமாள் தெரிவார் என்கிறீர்கள்?”

“அதே… அதே… சபாபதே!”

பாஸ்டன் பெருமாள் – பார்த்தசாரதி கோலம்

ஜெல்-மன் அம்னீசியா (Gell-Mann Amnesia)

டன்னிங்-க்ரூகர் விளைவு (Dunning-Kruger Effect) உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது சுருக்கமாக:

சராசரிக்கும் மிகக் குறைவான திறமை உள்ளவர்கள் தங்கள் திறமையினை மிகை மதிப்பீடு (over estimated) செய்கின்றனர். இதற்கு காரணம் அவர்களின் அறியாமையே. அறியாமையினால் அவர்களுக்கு தங்கள் குறை தெரிவதில்லை அதனை திருத்தி கொள்ள வேண்டும் என்ற புரிதலும் இல்லை

அதைப் போல் இன்னொரு கருத்தை சில காலமாக பார்த்து வருகிறேன்: ஜெல்-மன் அம்னீசியா (GellMann Amnesia)

காலையில் தினமணியையோ தி ஹிந்துவையோ புரட்ட ஆரம்பிக்கிறீர்கள். அதில் வந்திருக்கும் நடுப்பக்க கட்டுரையிலோ தலையங்கத்திலோ நான் கற்றுத் தேர்ந்து பல்லாண்டுகளாக உழைத்து கரை கண்டவன். எனக்கு கணினி, நிரலி, புத்தக வெளியீடுகள். உங்களுக்கு சரித்திரமோ பூகோளமோ உயிரியலோ இருக்கலாம்.

ஆனால், அந்தக் கட்டுரையின் அச்சு நிர்ப்பந்தங்களினாலோ, எழுதியவரின் அவசரத்தினாலோ, பதிப்பாசிரியரின் கபனக்குறைவினாலோ – கட்டுரையில் போதாமைகளை உணர்கிறீர்கள். அந்த கருத்துப் பத்தியில் தகவல் பிழைகளைக் கண்டுபிடிக்கிறீர்கள். புரிதல்களின் போதாமைகளை உணர்கிறீர்கள். முழு விளக்கத்தையும் சரியான முறையில் விளக்காததைக் கண்டு வெகுண்டெழுகிறீர்கள்.

இந்த மாதிரி கட்டுரை வந்ததால் எந்த லாபமும் இல்லை. சொல்லப் போனால், வாசிப்பவருக்கு குழப்பத்தையும் தவறான சித்திரத்தையும் அது தருகிறது என்று திடமாக நிரூபிக்கக் கூடிய ஆதாரங்களை முன்வைக்கத் தயாராக இருப்பீர்கள்.

“நகரும் காருக்கு கண்ணாடி இருக்கிறது. வீட்டில் கண்ணாடி ஜன்னல் இருந்தாலும் அது நகராது. எனவே, கண்ணாடிக் கதவுகளால் கார் நகரவில்லை!” என்பது போல் எழுதியிருப்பதாக பூரணமாக உங்களுக்குத் தெரிந்திருக்கிறது.

அயர்ச்சியாக இருந்தாலும் நாளிதழின் அடுத்த பக்கத்திற்கு தாவுகிறீர்கள். அதில் வர்த்தகமோ, அரசியலோ, விளையாட்டோ அலசி இருப்பார்கள். பெரு நாட்டின் வன்முறையை கண்டித்து இன்னொரு தலையங்கம் இருக்கும். சூர்யகுமார் யாதவ் எவ்வாறு விளையாட ஆரம்பித்தார் என்பதை நுணுக்கமாக ஆராய்ந்திருப்பார்கள். அதையெல்லாம் வெள்ளந்தியாக நம்புவீர்கள். அவர்கள் சொல்வது எப்படி உண்மை என்பதை ஆராயாமல் ஏற்றுக் கொள்வீர்கள்

– மைக்கேல் கிரிக்டன் (ஜூராஸிக் பார்க் புகழ்)

நம் பத்திரிகைகளும் புத்தகங்களும் அவ்வாறே… சிறிய விவரங்களில் மட்டும் தவறு இருக்காது; அந்த தகவலுக்கான உந்துதல், காரணம், உட்குறிப்பு, அடிப்படை உண்மைகள் … எல்லாவற்றிலும் தவறு இருக்கும். அவரைத் திருத்த நினைப்பீர்கள். பதிவின் அணுகுமுறையையும் பொருளடக்கதையும் சாட எண்ணுவீர்கள். ஆனால், அதே நிறுவனத்தின் பிறிதொரு நூலை எடுத்து விதந்தோதி வாங்கி அடுத்த கடைக்குச் சென்று வீடுவீர்கள்.

இதற்கு பெயர் ஜெல்-மான் அம்னிசியா

இதைப் படித்தவுடன் உங்களுக்குத் தோன்றிய நிறுவனம் / பத்திரிகை / நபர் / புத்தக வெளியீட்டாளர் / வலை சஞ்சிகை என்ன?

ஓவாது கூஉநின் உடற்றியோர் நாடே

அமெரிக்கா அசல் நாட்டாமை. உலகெங்கும் அதன் ஊடகம். அதன் சந்தையாக்கம். அதன் கேளிக்கை. அதன் இன்ஸ்டாகிராம். அதன் டிவிட்டர். அதன் ஃபேஸ்புக்.

மேற்குலகம் சொல்வதை வேதவாக்காக பிரச்சாரம் செய்து பரப்ப தேவதூதர்கள் நிறைய உண்டு. பிபிசி ஒரு பக்கம் ஓதும். இன்னொரு புறம் சி.என்.என்.

கத்தார் நாட்டிற்கு என்று அல்ஜஸீரா. ருஷியா தேசத்திற்கு ஆர்.டி. எல்லாம் கொஞ்சம் போல் ஆங்கிலத்தில் பரப்புரைத்தாலும், ஆப்பிளும், ஆண்டிராயிடும் டைம்ஸ் நாளிதழையும் என்.பி.ஆர். வானொலியையும் மட்டுமே உங்கள் செய்தியோடையில் காட்டும்.

இந்த வித்தையை சைனா சிறப்பாக கற்றுத் தேர்ந்திருக்கிறது. டிக் டாக் துவங்கி கண்ணுக்குத் தெரியாத பிக்ஸல் வரை வியாபித்தது.

சீனா வானொலி தமிழ்ப் பிரிவு நாள்தோறும் ஒலிபரப்புச் சேவையை வழங்குகிறது.
தாய்லாந்து நாட்டின் புகழ்பெற்ற முக்கிய ஊடகமானது, சீன அரசு ஊடகத்திடமிருந்து அவர்களின் செய்தியை விநியோகம் செய்ய ஒப்பந்தம் செய்திருக்கிறது.
மலேசியாவில் கம்யூனிசம் தழைத்தோங்க சீன மொழியில் செய்திகளை வழங்க அந்த நாட்டின் நான்கில் ஒரு குடிமகனைக் கவர சீனா இன்னொரு ஒப்பந்தம் கையெழுத்திட்டிக்கிறது.

கடைசியாக, அமெரிக்க கல்வி ஸ்தாபனங்களைக் குறி வைத்திருக்கிறது. தங்களின் தாய்நாட்டையோ பீஜிங் அரசையோ சற்றேனும் மாற்றுப் பார்வை பார்க்கும் ஆசிரியரோ, பாடத்திட்டமோ இருந்தால் அரிவாளையும் சுத்தியலையும் கையில் எடுத்து அவர்களை பதவி விலக்கி கரும்புள்ளி செம்புள்ளி குத்தி விடுகிறார்கள்.

ஹாங்காங் குறித்தும் சிஞ்சியாங் உய்குர் முஸ்லிம்கள் குறித்தும் சீன நாட்டின் அதிகாரபூர்வ அடக்குமுறையை விதந்தோத இவை உதவும்.

தென் கிழக்கு ஆசியாவில் நிரம்பி வழியும் இந்த கண்கட்டி அந்தகராக்கும் நிலையை அகற்றி பரந்துபட்ட பன்முகப் பார்வையைப் போக்க #சொல்வனம் துவங்கிய காலத்தில் இருந்து முயல்கிறது.

அந்த வகையில் இரு கட்டுரைகள் இந்த இதழில் #solvanam இதழில் வெளியாகி இருக்கின்றன. அவற்றை வாசித்து செய்திகளையும் கொள்கைகளையும் பொதுவுடைமை ஆக்குங்கள்.

கட்டுரை 1 – நேபாளமும் சீனாவும் இந்தியாவை எவ்வாறு அச்சுறுத்துகின்றன?

கட்டுரை 2 – தாய்வானை நோக்கி தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துவதால் போர் பயத்தில் எவ்வாறு இந்த பிரதேசத்தை பதற்றத்தில் வைத்து பொருளாதார வளர்ச்சியை முடக்குகிறார்கள்?

தாயில்  தூவாக்   குழவி   போல –
தாயில்லாத உண்ணாக் குழவி போல;  ஓவாது  கூஉம் ஒழியாது
கூப்பிடும்;  நின்    உடற்றியோர்    நாடு    –    நின்னைச்
சினப்பித்தவருடைய நாடு

புறநானூறு – 4: சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி

சுண்டோகு அல்லது குறையறிவு உணரும் கலை

“இந்தப் புத்தகத்தை படிக்க உங்களுக்கு நேரம் இருக்குமா?”

ஒவ்வொரு புதிய புத்தகத்தை வாங்கும்போதும், நம்மை நோக்கி பிறரால் கேட்கப்படும் கேள்வி. வீட்டில் புத்தக அலமாரி நிரம்பி வழிந்து புத்தக அறையாக வளர்ந்தது. இப்பொழுது புத்தக மாடி என்று புதிய ராட்சஸ உருவம் கொண்டிருக்கிறது. அங்கிருப்பதில் எதெது, எங்கெங்கே இருக்கிறது என்னும் வரைபடம் மனதில் பதிந்திருந்தாலும் செந்நூல்களைப் பெற்று வரும் போதெல்லாம், “இருப்பதைப் படிக்கவே காலம் இல்லை. அது தவிர கிண்டில், அன்றாடச் செய்திகள், பிடிஎஃப் கோப்புகள் என்று எல்லாவிடத்திலும் எதையாவது சேமித்திருக்கிறாய். உனக்கு இது தேவையா?” என்னும் எண்ணம் எழுந்து புது(த்)தகங்களைப் புறக்கணித்து கடையிலேயே விடச் செய்யும்.

அப்பொழுதுதான் சுண்டோகு என்னும் ஜப்பானிய வார்த்தைப் பிரயோகத்தைக் கண்டேன். கட்டு கட்டாக, அடுக்கு அடுக்காக குவிந்திருக்கும் படிக்காத புத்தகங்களை சுண்டோகு என்கிறார்கள்.

“கற்றது கையளவு; கல்லாதது உலகளவு!” என்பாள் சரஸ்வதி. “எதைக் கற்க வேண்டும் என்று தெரியும்; அதை கற்க வேண்டிய விதம் இவ்வாறு!” என்பது சுண்டோகு.

அறியாத விஷயங்கள் என்னென்ன என்று அறிந்திருப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றை எப்படி கற்று அறிய வேண்டும் என்று உணர இந்த மலை போன்ற குவியல் நினைவூட்டி தரையில் இறங்கி புரட்ட வைக்கும்.

The Japanese call this practice tsundoku, and it may provide lasting benefits – Big Think

Maria Popova, whose post at Brain Pickings summarizes Taleb’s argument beautifully, notes that our tendency is to overestimate the value of what we know, while underestimating the value of what we don’t know. Taleb’s antilibrary flips this tendency on its head.

Eco’s library wasn’t voluminous because he had read so much; it was voluminous because he desired to read so much more.

Eco stated as much. Doing a back-of-the-envelope calculation, he found he could only read about 25,200 books if he read one book a day, every day, between the ages of ten and eighty. 

Jessica Stillman calls this realization intellectual humility.

2022- தமிழ் சினிமா தலை பத்து திரைப்படங்கள்

கோவிட் காலத்தில் இருந்து மீண்ட காலமாக சென்ற ஆண்டை பார்க்கலாம். தொலைக்காட்சிக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள், ஏனோ தானோவென்று வீட்டில் இருக்கும் ஓடிடி பார்வையாளருக்கான மேம்பட்ட சீரியல்கள், சரவணா ஸ்டோர்ஸும் திமுக பேரப் பிள்ளைகளும் கருப்பை வெளுப்பாக்கும் சினிமாக்கள் மட்டுமே காணக்கிடைத்த இரண்டாண்டுகளில் இருந்து சற்றே விடுதலை கிடைத்த ஆண்டு.

முதலில் புகழ் பெற்ற பத்தை பார்க்கலாம். இந்தப் படங்கள் வசூலைக் குவித்திருக்கலாம். பரவலான பாராட்டைப் பெற்றிருக்கலாம். விமர்சகளிடமிருந்து உங்களின் ஏகோபித்த கவனத்தைக் கோரியிருக்கலாம். வித்தியாசமான தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கலாம். இந்த மாதிரி ஜிகினாக்களும் முக்கிய நடிகர்களும் பெயர் பெற்ற இயக்குநர்களும் இருந்தாலும் இந்தப் படங்களில் நம்பகத் தன்மை இடிக்கிறது. கலையம்சம் என்பது வலிந்து திணிக்கப் பட்டிருக்கும். எல்லோரும் மெச்சுகிறார்கள் என்பதற்காக இந்தப் படங்களை கும்பலோடு கோவிந்தா ஆக நாமும் விதந்தோதக் கூடாது.

அந்த மாதிரி கொடுமையான படங்கள்: (எந்த வரிசையிலும் இல்லை)

  1. யுத்த காண்டம்: நேர்க்கோட்டில் செல்லாத ஒரேயொரு ஷாட்டில் தயாரான முதல் படம். சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெற்ற படம். வேறொன்றும் சொல்வதற்கில்லை.
  2. இரவின் நிழல்: இரா பார்த்திபன் படம் என்றாலே சற்றே கண் கவசத்துடனும், மூளை கேடயத்துடனும் அணுக வேண்டும். உலகின்  முதல் நான் லீனியர்   சிங்கிள்  ஷாட்  ஃபிலிம் என்பதைத் தவிர முக்கியமானதாக எதுவுமில்லை.
  3. பொன்னியின் செல்வன் – 1பி.எஸ். முதல் பாகம் குறித்து வேண்டிய மட்டும் எழுதியாகி விட்டது. படம் என்றால் உச்சகட்டம் முக்கியம். கட்டுரை என்றால் இறுதி சொற்றொடர் முக்கியம். திரைமேதை என்றால் கடைசிப்படம் கொண்டே நினைவில் வைத்திருப்பார்கள். மணி ரத்தினத்திற்கு  பொ. செ.
  4. பீஸ்ட்: விஜய் படம்: பல கோடிகள் வசூல் செய்திருக்கிறது. ஆங்கிலத்தில் டாப் கன் போன்ற மசாலா படங்களில் இருக்கும் விவரண துல்லியமும் நறுக்கு தெறித்தது போன்ற வசனங்களும் தமிழின் வெகுஜனப் படங்களுக்கு இல்லாதிருப்பது பார்வையாளர்களின் ரசனைக்கான அவமரியாதை.
  5. வலிமை: அஜீத் படம். இன்னும் பார்ப்பதற்கு வலிமையோ துணிவோ இல்லை.
  6. எதற்கும் துணிந்தவன்: நடிகர் சூர்யாவை நம்பி படம் பார்க்க முடியாது என்பதற்கு முன்னுதாரணமாக வந்த படம். அவசர சமையல். இயக்குநர் பாண்டிராஜ் என்று கவனித்திருக்க வேண்டும். ஒரு பிரச்சாரப் படம், ஒரு அடியாள் படம், ஒரு காதல் படம் என்று சுழற்சி முறையில் கதாநாயகர்கள் தங்களின் படங்களை அமைத்துக் கொள்வதையும் கவனத்தில் வைக்க வேண்டும்.
  7. மாறன்: பத்திரிகையாளர் ஓ பக்கங்கள் ஞாநியுடன் உரையாடும்போது இந்த மாதிரி அதீத கற்பனைகள் எல்லாம் எப்படி சாத்தியமேயில்லை என்று பகிர்ந்து கொண்டார். நம்பமுடியாத விஷயங்களை நம்பக்கூடிய மாதிரி சொல்லிச் செல்வது திரைப்படம். அது இங்கே புளுகாக அப்பட்டமாக தோன்றுவது போதாமை. நாயகி மாளவிகா மோகன் லட்சணமாக இருக்கிறார் என்பதைத் தவிர வேறெதுவும் மெச்சத்தக்கதாக இல்லை.
  8. காத்துவாக்கில ரெண்டு காதல்: நெட்ஃப்ளிக்ஸில் வரும் படங்கள் எல்லாம் ஒரு கையில் செல்பேசி; இன்னொரு கண்ணில் அலுவல் வேலை. ஒலிச்சித்திரமாக வெள்ளித்திரை டிவி. இப்படி பார்க்க வேண்டும். அப்படி கண்டும் காணாமல் ஓரக்கண்ணால் கூட பார்க்கத் தேவையில்லா படம்.
  9. விக்ரம்: ரஜினியின் படம் வரும்போது எப்படியாவது ஓட்டிவிட வேண்டும்; ஏதோவொன்று நன்றாக இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவரை வேண்டிக் கொள்வேன். கமல்ஹாசனின் தொடர் தோல்விகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் முதல் பாதி அவ்வாறு அமைந்திருந்தது. திரையில் கமல் தோன்றியபின் அவரின் ஆக்கிரமிப்பு இல்லாவிட்டாலும் நம்பமுடியா காட்சியமைப்புகள், நகைப்புக்குள்ளாக்கும் சம்பவங்கள், நெடுங் கொட்டாவியுடன் குட்டி உறக்கத்தையும் வரவைத்த மனோகரா காலத்து வசனங்கள் – எல்லாம் “எப்படா முடியும்” என எண்ணவைக்கின்றன.
  10. ராகெட்ரி – தி நம்பி எஃபெக்ட்: நம்பி நாராயணன் கதை என்று சொல்லிவிட்டு நம்பகத்தன்மைக்கு விக்ரம் சாராபாய், ஏபிஜே அப்துல் கலாம் என்று நிஜ நாயகர்களை உலாவ விடுகிறார்கள். ஒரு பொய்யில் முப்பது சதவிகிதம் மெய் கலந்திருந்தால் உண்மை என்று நம்பி விடுவோம். அவ்வாறு அசல் நாயகன், ஜேம்ஸ் பாண்ட் மதுரை வீரர் என்றெல்லாம் கட்டியம் கூறும் பிரச்சார விளம்பரம்.

சர்வதேச திரைப்பட விழா கடந்த 2003-ம் ஆண்டு முதல் சென்னையில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 12 தமிழ் திரைப்படங்களும் இந்த திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெறும் படங்கள்:

  1. இரவின் நிழல்
  2. கார்கி
  3. ஓ2
  4. நட்சத்திரம் நகர்கிறது
  5. ஆதார்
  6. மாமனிதன்
  7. கசடதபற
  8. பஃபூன்
  9. இறுதிப்பக்கம்
  10. பிகினிங்
  11. யுத்த காண்டம்
  12. கோட்

ஆகிய 12 தமிழ் திரைப்படங்கள் திரையிட தேர்வாகி உள்ளன. இதுதவிர இந்தியன் பனோரமா பிரிவிலும் ஒவ்வொரு ஆண்டும் 15 இந்திய படங்கள் தேர்வு செய்யப்படும். அதில்,

  1. மாலை நேர மல்லிப்பூ
  2. கடைசி விவசாயி
  3. போத்தனூர் தபால் நிலையம்

ஆகிய 3 தமிழ் படங்கள் தேர்வாகி உள்ளன. இது போன்ற மாற்றுப்படங்களில் கீழ்க்கண்டவற்றில் பெரும்பாலான படங்களை இன்னும் பார்க்கவில்லை. இவை பரவலாகக் கொண்டாடப்பட்டவை. நிஜ மாந்தர்களை முன்னிறுத்துபவை. அதிகம் கவனம் பெறாத கதைக் களன்களைக் கொண்டவை:  (எந்த வரிசையிலும் இல்லை)

  1. சேத்துமான்: எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி என்ற சிறுகதையின் திரைப்பட வடிவம் : ‘சேத்துமான்’ திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’! | Seththumaan Movie Review | Puthiyathalaimurai
  2. கடைசி விவசாயி: காக்க முட்டை எடுத்த மணிகண்டனின் படம். கடைசி விவசாயி – விமர்சனம் – Kadaisi Vivasayi Cinema Review : மண்ணின் காவலன் | Tamil movies (dinamalar.com)
  3. சில நேரங்களில் சில மனிதர்கள்சின்னச் சின்ன மன்னிப்புக்கோரலால் விடுதலை பெறும் மனங்கள். – ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ | sila nerangalil sila manithargal 2022 – Movie Review | Puthiyathalaimurai
  4. முதல் நீ முடிவும் நீ: நியூயார்க் திரைப்பட விருதுகளில் “கௌரவப் பரிசு” பெற்றது. மாசிடோனியாவில் நடந்த கலை திரைப்பட விருதுகளில் “சிறந்த இயக்குனர்” பிரிவில் சிவா வென்றார். முதல் நீ முடிவும் நீ – விமர்சனம் – Mudhal Nee Mudivum Nee Cinema Review : முத்தான முயற்சி | Tamil movies (dinamalar.com)
  5. செம்பி : பிரபு சாலமன் படம். செம்பி விமர்சனம்: எடுத்துக்கொண்ட களமும் மெசேஜும் ஓகே; ஆனால் அதை அணுகிய விதத்தில் இத்தனை சிக்கல்களா? | Sembi Review: Kovai Sarala shines in this travel tale filled with logical issues (vikatan.com)
  6. உடன்பால் : பணம் பத்தும் செய்யும்: உடன்பால் திரைவிமர்சனம்- Dinamani
  7. குதிரைவால் : காஃப்காவின் தி மெட்டாமார்போசிஸ் புதினத்தில் இருந்து இந்த படம் தழுவலாக எடுக்கப்பட்டது. முதல் பார்வை | குதிரைவால் – சமகால தமிழ் சினிமாவின் அட்டகாச அட்டெம்ப்ட்… ஆனால்? | kuthiraivaal movie review – hindutamil.in
  8. சாணிக் காயிதம் : செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் என பெயர் பெற்றவர்கள் நடிக்கிறார்கள். சாணிக் காயிதம்: வன்முறைக்கு ஏது அழகு? | Saani Kaayidham – hindutamil.in
  9. பஃபூன் : பார்க்கத் துவங்கிய கொஞ்ச நேரத்தில் மலையாளப் படத்தில் ஃபாஹத் ஃபாசிலுக்காக எழுதப்பட்டதோ என்று தோன்ற வைக்கும் சம்பவங்கள். பச்சைத் தமிழரின் தெருக்கூத்து. கொஞ்சம் போல் சஸ்பென்ஸ் புதிர். அளவான நடிப்பு. கார்த்திக் சுப்பாராஜ் தயாரிப்பு. ஜோஜு ஜார்ஜ் நடித்த கேரக்டருக்கும், ஜகமே தந்திரம் படத்தில் வரும் கதாபாத்திரத்திற்கும் நிறைய ஒற்றுமைகள். ஈழத் தமிழர் சிக்கல் என பலவற்றையும் நன்றாக கலந்திருக்கிறார்கள்.
  10. யஷோதா : நான்கைந்து வெவ்வேறு திரிகளை சாமர்த்தியமாக ஒன்று சேர்க்கிறார்கள். வாடகைத் தாய்; முகப்பூச்சு புற அழகு, போட்டாக்ஸ் சிகிச்சைகள்; ஷுகர் டேடி போஷகர்; போலீஸ் துப்பறியும் த்ரில்லர்; கொஞ்சம் பாலகோபாலன் கிருஷ்ணரின் யசோதா – எல்லாவற்றையும் சமந்தா முன்னின்று சாரதியாக செலுத்துகிறார்.

அடுத்ததாக டப்பிங் படங்கள். தெலுங்கு எப்பொழுதுமே பெரிய பட்ஜெட் படங்களை கையில் எடுக்கிறது. மலையாளப் படங்கள் வித்தியாசமான களத்தைக் கையில் எடுக்கின்றன. வரலாறு, அதி பிரும்மாண்டம் என்றால் ஆந்திரா. அண்டைத் தெருவில் நடந்திருக்கிற சிக்கல்கள், தெரிந்த மனிதர்களின் தெரியாத பக்கங்கள் என்றால் கேரளா. இவற்றை சம்பிஸ்தானு, அடி பொளி என்று மூல மொழியில் பார்ப்பதே உசிதம். உதாரணமாக அசல் “விக்ருதி”, தமிழில் மறுபதிப்பு கண்ட “பயணிகள் கவனிக்கவும்” படத்தை விடச் சாலச் சிறந்தது. எனினும்…

மொழிமாற்றப் பட்டியல் கீழே:

  1. புஷ்பா – துவக்கம்
  2. ஜன கன மன
  3. ஆர்.ஆர்.ஆர்.
  4. கணம் (ஒகே ஒக்க ஜீவிதம்)
  5. கே.ஜி.எஃப் – அத்தியாயம் இரண்டு
  6. அடடே சுந்தரா (அண்டே சுந்தரினிகி): Ante Sundaraniki: அன்டே சுந்தரினிகி (அடடே சுந்தரா) | Snap Judgment (snapjudge.blog)
  7. ஹிருதயம்
  8. காண்டாரா / காந்தாரா
  9. பத்தொன்பதாம் நூற்றாண்டு
  10. ராதே ஷியாம்

முக்கிய பட்டியலுக்கு போவதற்கு முன் நெடுந்தொடர்கள் அல்லது குறிப்பிடத்தக்க ஆக்கங்களைப் பார்த்து விடலாம்: (எந்த வரிசையிலும் இல்லை)

  1. புத்தம் புதுக்காலை விடியாதா: கொரோனா வீடடங்கு காலத்தை மையமாக்கிய படங்கள். தன்பால் ஈர்ப்பை பாவக்கதைகள் அந்தாலஜியில் சுதா கொங்கரா இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் இன்னும் சிறப்பாக கொணர்ந்திருந்தார். இங்கே சூர்யா கிருஷ்ணன் இயக்கம் சறுக்குகிறது. மதுமிதா இயக்கத்தில் ‘மௌனமே பார்வையாய்’ நம் வீட்டுக் கதையை இதமாய்ச் சொல்கிறது.
  2. சுழல்: முடிவு சொதப்பலாய் உச்சகட்டத்தில் பல்லிளித்தாலும், ஒவ்வொரு அத்தியாயமும் எடுத்த விதத்தில் முக்கியமான தமிழ் படைப்பாக மிளிர்கிறது.
  3. வதந்தி: கன்னியாகுமரி நாஞ்சில் வட்டார மொழி. எஸ்.ஜே.சூர்யா ஒரே மாதிரி வில்லத்தனம் செய்பவர் என்பதை உடைக்குமாறு இதற்கு முன்பு நடித்த பாத்திரங்களின் சாயல் விழாமல் பார்த்துக் கொண்டது. சுழல் வெப் சீரிஸ் ஒருங்கிணைத்த அதே புஷ்கர்-காயத்ரி தயாரிப்பு.
  4. செல்ஃபீ: ஜிவி பிரகாஷ் எப்பொழுதும் ஒரே மாதிரி நடிப்பவர்; ஒரே விதமான கதையும் காதலும் கொண்டு பாடல்களை வைத்து படத்தை ஓட்டுபவர். அதில் இருந்து இந்தப் படம் மாறுபடுவதே நிம்மதி. இயக்குநர்கள் நன்றாக நடிக்கும் வரிசையில் கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார். எல்லோரும் ஒரு வகையில் இந்த கல்விச்சுரண்டலில் ஈடுபட்டிருக்கிறோம் என்பதை உணர்வுபூர்வமாக கடத்தியதற்கு பாராட்டு.
  5. இடியட் : ராகவா லாரன்ஸ் தொடர்ச்சியாக எடுத்து விடும் காஞ்சனா, சுந்தர் சி சுட்டுத் தள்ளும் அரண்மனை போன்று இல்லாமல் கிண்டலும் தமிழ் பட சிவாவின் பிரத்தியேக கேலியும் விட்டலாச்சார்யாவும் இணைந்த ஊற்று.
  6. ஒற்று : திரைப்பட விழாக்களுக்காக எடுக்கப்பட்ட படம். நிறைய விருதுகளைப் பெற்றிருக்கிறது. இனிமேல் தான் பார்க்க வேண்டும்.
  7. நித்தம் ஒரு வானம் : இமய மலைக்கும் இந்தியாவிற்கும் சுற்றுலா விளம்பரப் படம் போல் இருக்கிறது. படம் நெடுக கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களை நினைவூட்டும் காட்சிகள். கே பாலச்சந்தரின் வானமே எல்லை போன்ற முடிவு, புதுப்புது அர்த்தங்கள் போன்ற திரைக்கதை எல்லாம் பழைய வாசனை அடிக்க வைத்தாலும் நடிப்பும் துள்ளலும் மூன்று நான்கு கதைகளை கலந்த விதமும் புதுசு.
  8. கட்டா குஸ்தி : இந்த வருடம் ஐஸ்வர்யா லஷ்மியின் வருடம். இது அவருக்கான மகுடம்.
  9. குற்றம் குற்றமே: இயக்குநர் சுசீந்திரன் படம். துவக்க காலத்தில் “வெண்ணிலா கபடி குழு”, “நான் மகான் அல்ல”, “அழகர்சாமியின் குதிரை” வீரியம் குறைந்திருந்தாலும் இன்னும் சரியான நடிகர்களைத் தேர்வு செய்வதில் வெற்றியடைகிறார். இயக்குநர் பாரதிராஜாவின் நடிப்பு மிகவும் பிடிக்கும். இதில் இனிமேல் தான் பார்க்க வேண்டும்.
  10. அனல் மேலே பனித்துளி: ஆண்ட்ரியா அவர்களுக்கு பாராட்டுகள். இந்த மாதிரி படங்கள் பரவலாக கவனத்தை அடைய வேண்டும். சில வசனங்கள்:  ‘ஆண்கள் என்றாலே அதிகாரம்தான். அதுவும் அதிகாரத்துல இருந்தா?’, ‘நம்மூர் பொண்ணுங்க துப்பாக்கி காட்னா கூட நெஞ்ச நிமிர்த்தி நிப்பாங்க. துணிய அவுத்துட்டா ஒதுங்கி ஒடுங்கி போயிடுவாங்க’, ‘மானம்ங்குறது நம்ம வாழ்ற வாழ்க்கையில இருக்கு’.

அடுத்ததாக தலை பத்தே பத்து படங்கள்:

  1. விட்னெஸ்: “இதுவரை இந்த மாதிரி மலக்குழி மரணங்களுக்கு தண்டனை தரப்படவில்லை” என்ற வரியோடு இந்த படம் முடிகிறது. (கீற்று). எரிச்சலான ஹீரோயிசம், முகம் சுளிக்க வைக்கும் காமெடி, அரைகுறை ஆபாச நடனங்கள், புளித்துப் போன காதல்கள், கேமராவை நோக்கி வீசப்படும் ஹீரோக்களின் பஞ்ச் டயலாக்குகள் என்ற தமிழ் சினிமாக்களின் அலுப்பான கிளிஷேக்கள் எதுவும் இல்லாமல் எடுத்துக் கொண்ட கதை கருவுக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் உழைத்திருக்கும் படக் குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். (அறம்)
  2. டாணாக்காரன்: விக்ரம் பிரபு ஆகச் சிறந்த நடிகர். தாத்தா சிவாஜியின் இடத்தைத் தாண்டி அவர் போவார் என்பதற்கு இந்தப் படத்தேர்வு சிறந்த சான்றிதழ். காவல்துறையின் வன்முறையையும் தங்களின் காரியத்திற்காக அரங்கேற்றும் லாக்கப் கொடூரங்களையும் நிறைய பார்த்திருக்கிறோம். அதற்கான மூல வித்து எங்கே துவங்குகிறது? எவ்வாறு பயிற்சியிலேயே அந்த விதை வேரூன்றப் படுகிறது? படத்தின் இயக்குநர் முன்னாள் போலிஸ் என்பது நம்பகத் தன்மையை கொடுக்கிறது. தவறவிடக்கூடாத மனதில் வெகு நாட்களுக்கு தங்கி இடம்பிடிக்கும் படம்.
  3. நட்சத்திரம் நகர்கிறது : வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகள் உண்டு. என் உறவினர்களிலும் நண்பர் குழாத்திலும் இது போன்றவர்களை சந்தித்திருக்கிறேன். அவர்களுடன் உறவாடும் போது விலகலோடு, அசூயையோடு பத்து நிமிடம் பேசி விட்டு ஓடி விடுவேன். அந்த மாதிரி சிலரை படம் நெடுக வில்லன் போல் உலவ விடுவதால் ஒரே அமர்வாக பார்க்க வைக்காத படம். அதன் உரையாடல்களின் வீரியமும் வீச்சும் கூகுள் துணை கொண்டு அவ்வப்போது விஷயங்களையும் உதவிகளையும் தேட வைத்து பார்க்க வைப்பது அயர்வைத் தந்தாலும் முக்கியமான படம்.
  4. கர்கி: யார் அந்த குற்றவாளி என்று சஸ்பென்ஸ் ஆக வைப்பது ஒரு புறம். திறமையான நடிகையை முழுமையாக உபயோகித்தது இன்னொரு புறம். சாய் பல்லவி வெகு எளிதில் அதிகம் நடித்து அழுது ஆர்ப்பாட்டம் செய்து உங்களை அன்னியமாக்கக் கூடிய நடிகை. அவரைப் போன்றே காளி வெங்கட்டும் ரஜினி போல் தனித்துவம் கொண்ட ஓவர் நடிகர். அவர்களிடமிருந்து சரியான உணர்ச்சிகளை இம்மியளவும் மிகாமல் பெற்ற இயக்குநருக்கு முழுப் பெருமையும் சேரும்.
  5. திருச்சிற்றம்பலம்: இந்த மாதிரிப் படங்களில் நடிப்பதால் மட்டுமே தனுஷ் அவர்களுக்கு நம்பகத்தன்மை வருகிறது. இளையராஜா வெறியர், ஜொமாட்டோ போன்ற உணவு வழங்குநர்; அப்புறம் பிரகாஷ் ராஜை மீண்டும் புத்துயிர் கொடுத்து வேறு பரிமாணம் கொண்ட அப்பா ஆக உலாவ விடுவது. இயக்குநராக மிளிர்ந்த பாரதிராஜாவின் ஆகச்சிறந்த தாத்தா கதாபாத்திரம்; இந்தக் கால காதலை, கல்யாணத்தை சொல்வது கடினம். மித்ரன் ஜவஹர் ஜமாய்த்திருக்கிறார்.
  6. வெந்து தணிந்தது காடு : சிம்புவை எனக்கு அறவே பிடிக்காது. பக்கத்து வீட்டுப் பையனாக வரும் விண்ணைத் தாண்டி வருவாயா கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், “நாயகன்” மாஃபியாவாக? அடியாளாக? அந்த மாதிரி சிலம்பரசன் நடித்த எந்தப் படத்தையும் பார்த்ததில்லை. இது ஜெயமோகன் படம். அதற்கு கௌதம் வசுதேவ் மேனன் வருகிறார். புத்தம் புதிய முகங்கள். எனக்கு நீரஜ் மாதவ் புதியவர். அந்த பம்புளிமாஸ் சித்தி இத்னானி. நன்கு பழகி அறிமுகமான மலையாள சித்திக் கூட புதியதாகத் தெரிகிறார். இரண்டாம் பாகம் எப்படி இருக்குமோ என கவலை கொள்ளுமளவு இந்தப் பகுதியில் மொத்த கற்ற வித்தையையும் சரக்கையும் இறக்கியிருக்கிறார்கள்.
  7. லவ் டுடே : இந்தக் கால பதின் தலைமுறையை அறிந்து கொள்ள நீங்கள் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். ஐயங்காராக வேஷம் வரித்தாலும் துவேஷம் கலக்காது திரையில் கொணர்வது எப்படி என்று சத்யராஜ கலக்குவதற்காக பார்க்க வேண்டும். விவாகரத்தும், மணமுறிவும் ஏன் நடக்கிறது என்று அறிய இதைப் போன்ற யதார்த்தங்கள் தொடர்ந்து வர வேண்டும்.
  8. நானே வருவேன் : வேறு வேறு மாதிரி நடிக்க வேண்டும் என்னும் வெறி நடிகருக்கு அவசியம். ஒரு குடும்பத்தின் வன்முறையை அப்பாவின் ஆதிக்கத்தை அம்மாவின் அன்பெனும் ஓரவஞ்சனையை இரத்தமும் சதையுமாக மனதில் பதியுமாறு கொணர்வது கதாசிரியரின் அவசியம். தனுஷ் என்னும் கலைஞனும் செல்வராகவன் என்னும் இயக்குநரும் கை கோர்த்தால்!?
  9. கலகத் தலைவன் : அடுத்த தமிழக முதல்வர் என்னும்போது அசுவாரசியம் கலந்த சோகம் எட்டிப் பார்க்கும். எனினும், நம் அண்டை வீடான கொந்தர் – ஹாக்கர் குணச்சித்திரம். கடைசியாக, சற்றேனும் உருப்படியாக சர்க்கார் செய்ததை இன்னும் பெரிதாக்கி, உலவ விட்டிருக்கிறார்கள். அசப்பில் ஜூலியன் அசாஞ்சே-வும், எட்வர்ட் ஸ்னோடென்-உம், செல்ஸீ மேனிங்க்-உம் கலந்த நாயகன். எனினும், தமிழுக்கு உரிய அஞ்சாநெஞ்சத்தனமும், அழிச்சாட்டியமும் படத்தை தரைக்குக் கொணர்கிறது. செம எண்டெர்டெயின்மெண்ட்.
  10. மஹான் : இந்தக் காலத்தின் உன்னதமான இயகுனராக கார்த்திக் சுப்பராஜைச் சொல்ல வேண்டும். அதுவும் அப்பாவும் பையனும் நடிக்கும் போது ‘மிருதங்க சக்கரவர்த்தி’ உருவாகாமல், பார்த்துக் கொள்வதில் உள்ள சிரமங்களை கவனிக்க வேண்டும். காந்தி போன்ற மகாத்மாவை தலைப்பில் வைக்க தைரியம் வேண்டும். சிம்ரன் போன்ற அம்மாவை உலாவ வைக்க சாமர்த்தியம் கலந்த பொறுப்பு வேண்டும். கார்த்துக் சுப்பாராஜோடு பார்த்துப் பார்த்து அலுத்துப் போன பாபி சிம்ஹாவை இன்னுமொரு படத்தில் வித்தியாசமாக காண்பிக்க தைரியமும் தலைமையும் வேண்டும். இது அது எல்லாம் வாய்த்த அனாயசம் விக்ரமின் “மகான்’!

கௌரவ வரவு: மன்மத லீலை: தமிழ் சினிமா என்பது சைவம். சூது வாது, வஞ்சகம், பொய், புரட்டு, திருட்டு, விபச்சாரம், குடி, கூத்தி, கொலை, ஜீவ இம்சை முதலிய எந்த கெட்ட தொழிலை எடுத்துக் கொண்டாலும் அவர்களும் தீயவர்கள். அயோக்கியர்கள். கடைசியில் காவல் துறையினராலோ, சட்டத்தினாலோ, நாயகியினாலோ, நாயகர்களாலோ தீர்த்து முடிவுகட்டப் படுவார்கள். இதையெல்லாம் இந்தப் படம் உடைத்தெறிகிறது. “காக்க… காக்க” படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஒரு கட்டத்தில் சொல்லும்: “உன்னிடம் இருக்கும் வீட்டை இழந்துட்ட… உன் பெற்றோரை பறி கொடுத்திட்ட… உன் மனைவியையும் மக்களையும் சாகக் கொடுத்திட்ட… உன் பதவி கூட உன்கிட்ட இல்ல.. நீ சேர்த்த சொத்து சம்பாத்தியம் எல்லாம் போச்சு! இன்னும் என்னடா நீ ஹீரோ?” என்பது போல் செல்லும். அது மாதிரி நாயகர், நல்லவர், உத்தமர் ஜெயிப்பார் என்பது கிளைமாக்ஸ். அதையெல்லாம் தவிடு பொடியாக்கும் அமர்க்களமான நகைச்சுவையும் நிஜமும் அரங்கேறும் நாடகம்!

உங்களின் தலை பத்து தமிழ்ப்படங்கள் என்ன? இந்தப் பட்டியலில் எந்தப் படம் விடுபட்டிருக்கிறது?