Monthly Archives: ஏப்ரல் 2015

Geese – வாத்துகள்

முந்தைய இடுகை: Rabbit – முயல் :: சசவிசாடம்

ஹம்ஸகமனம்

அகராதி: ஹம்ஸகமனம் hamsa-kamaṉam, n. < haṃsagamana. Gait of a swan or goose; அன்னநடை.

Geese

பேரவை அரங்கு நிரம்பி இருந்தது. வருடா வருடம் ஒவ்வொரு நகரமாகத் தேர்ந்தெடுத்து, அந்த நகரத்தில் கூட்டம் போடுவது வழக்கம் ஆகும். 2014ல் வாஷிங்டன் டிசி தலைநகரில் கூடினோம். 2015ல் டல்லாஸ் மாநகரத்தில் கூட்டம் போட்டோம். இந்த வருடம் முதல் முறையாக எல்லோரையும் வைய விரிவு வலை மூலமாக இணையம் கொண்டு ஒன்று சேர்க்கிறோம்.

எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. விமானச் செலவு அதிகம் என்று ஏமாற்றம் கொள்ளத் தேவையில்லை. விடுமுறை கிடைக்கவில்லை என்று ஒத்திப் போட வேண்டியதில்லை.

இந்த தடவை வைஜெயந்திமாலா பாலி நடனம் ஆடுகிறார். நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. அதெப்படி எழுபத்தியெட்டு வயதில் அவரால் நாட்டியம் புரிய இயலும்? தள்ளாத வயதில் விமானம் ஏறி பேரவை மேடை ஏறினாலும், எப்படி அவரால் ஆட்டம் கட்ட முடியும்? அங்கேதான் நான் நுழைகிறேன்.

‘ஜீன்ஸ்’ படத்தில் பிரபு தேவாவின் தம்பி ராஜு சுந்தரம் செய்வாரே… அந்த மாதிரி விஷயத்தை நிஜமாகவே அரங்கில் செய்யப் போகிறேன். அந்தக் கால ‘யாரடி நீ மோகினி’ பாடலில் வரும் வைஜயந்தி மாலா முகத்தை வைத்து, இந்தக் கால ‘மெர்சலாயிட்டேன்’ பாடலுக்கு ஆட வைக்கப் போகிறேன். நேயர் விருப்பமாக, எந்தப் பாடலுக்கு வேண்டுமானாலும் ஆட வைக்கலாம். சொல்லப் போனால் கேட்டி பெர்ரியின் ‘baby, you’re a firework’ பாடலுக்குக் கூட வைஜெயந்தி ஆடுகிறார்.

நீங்கள் குழம்புவது புரிகிறது. கூடுவதோ, ‘தமிழ்ப் பேரவை’. ஆனால், அதில் எப்படி காத்தி பெர்ரி என்னும் ஆங்கிலச்சியின் பாடல் என்று சிந்தை தடுமாறுகிறீர்கள். ஜூலை நான்கிற்கு அமெரிக்காவில், தமிழர்கள் பலரும் ஒன்று கூடி வெடி வெடிப்போம். இந்த தடவை, அந்த வெடிகள் எல்லாம், சிவகாசியில் இருந்து இறக்குமதியானவை. சென்ற ஆண்டில் சீனத் தயாரிப்புகள் வாங்கிவிட்டோம் என்று சிலர் பிரச்சினை செய்தார்கள். அதனால் இந்த தடவை வாத்து மார்க் பட்டாசுகள் வாங்கி இருக்கிறோம்.

(வாத்து கருத்து: கதையின் தலைப்பு மேலே இருக்கும் வாசகத்தில் வெளிவந்துவிட்டது)

நடிகர் தனுஷ் எழுதும் பாடல்களை விட, கவிஞர் வாலி எழுதிய திரைகானங்களை விட கேத்தி பெர்ரியின் பாடலில் நிறைய தமிழ் வார்த்தைகள் இருக்கின்றன என்று தற்போதைய தமிழ்ச் சங்கத் தலைவர் தெரிவித்தார். ஃபீலு, பிளாஸ்டிக், ஸ்டார்ட்டு, பேப்பர், சிக்ஸு, லைட்டு, ஜூலை, நைட்டு, கலரு, அரிகேன், ஹேர்ட்டு (வாத்து கருத்து: இவர் பேர்க்லி தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அல்ல) என பல உன்னத தமிழ்ச் சொற்களை காத்தி பெர்ரி தன் பாடலில் பயன்படுத்தி இருப்பதாக தற்போதைய தமிழ்ச் சங்கத் தலைவர் யூடியுப் விழியத்தில் பேட்டியாக விளக்கி இருக்கிறார்.

”தற்போதைய தமிழ்ச் சங்கம்” எவ்வாறு உருவானது என்பதையும் அந்தப் பேட்டியில் அவர் சொல்கிறார். முதலில் தமிழ்ச் சங்கம் மட்டும் இருந்ததாம். அது இன்னொருவர் வந்தவுடன் ‘ஒரு தமிழ்ச் சங்கம்’ என ஆனதாம். மூவர் நுழைந்தவுடன் ‘புது தமிழ்ச் சங்கம்’ வந்ததாம். இது பலுக்கல் பிழை என்பதால் நான்காவதாக ‘புதுத்தமிழ்ச் சங்கம்’ உருவானதாம். அதற்குப் போட்டியாக ‘பழையத் தமிழ்ச் சங்கம்’ தோன்றி இருக்கிறது. இவை எல்லாம் போதை இல்லாததால் ”தற்போதைய தமிழ்ச் சங்கம்” உருவானது.

வைஜெயந்திமாலாவின் ஆடலை அமெரிக்காவிற்குக் கொணர ‘புதுத்தமிழ்ச் சங்கம்’ முன்னெடுத்திருக்கிறது. காத்தி பெர்ரியின் ஃபையர் வொர்க் பாடலை அதற்கு வைத்துக் கொள்ள எல்லோரும் ஒருமித்த கருத்தொற்றுமையில் இருக்கிறார்கள். ஹோலாகிராம் மூலம் வைஜெய்ந்தியை உங்களின் வீட்டில் தோன்ற வைப்பது என் வேலை.

ஏற்கனவே வாத்து கதாபத்திரத்தை நான் பல முறை இந்தப் புனைவில் உலவ விட்டிருக்கிறேன். என்றாலும், தமிழ்ப் பேரவைக்கும் வாத்துகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதை உங்களுக்குச் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

’பூப்பூக்கும் மாசம்… தை மாசம்’ என்று குஷ்பூ பாடினாலும், அமெரிக்காவில் வசந்த காலமாக, ஏப்ரலும் மே மாதமும் விளங்குகிறது. அந்த நேரத்தில், ஒவ்வொரு ஏரிக்கரையிலும் இரு வாத்துகள் குடிபுகும். இப்படித்தான் பன்னெடுங்காலமாக என் வீட்டின் வாயிலில் இருக்கும் ஏரியிலும் வாத்துகள் வந்து கொண்டிருந்தன.

என்னுடைய வீடு கட்டப்படும்வரை எனக்கொரு பிரச்சினையும் இல்லை. அந்தப் பிரதேசம் முழுக்கக் காடாகக் கிடந்தது. அங்கே நரியும், மான்களும், வான்கோழிகளும், வாத்துகளும், ஆமைகளும், பாம்புகளும் சகஜமாகக் கொஞ்சிக் குலாவித் திரிந்தன. அந்தக் காட்டை சீர்திருத்தி (வாத்து கருத்து: இங்கே சீர்திருத்தம் என்பது கம்யூனிஸம் போல் பொலிடிகலி கரெக்ட் ஆகத் தெரிகிறது. அதற்கு பதிலாக ‘அழித்து’ என்னும் வார்த்தையை உபயோகிக்கவும்.), என் வீட்டைக் கட்டிக் கொண்டேன். வீடு வந்தவுடன் ஓநாய்களும், நரிகளும் ஓடி விட்டன.

ஆனால், வருடந்தோறும் இரு வாத்துகள் ஏப்ரல் மாதத்தில் வரும். மே மாதத்தில் முட்டை இடும். ஜூன் மாதத்தில் குஞ்சு பொறிக்கும். ஜூலை மாதத்தில் குட்டிகள் எல்லாம் அப்பா, அம்மாவை விடப் பெரியதாகி இருக்கும். ஆகஸ்ட் மாதத்தில் என் தோட்டத்தையும் என்னுடைய புல்வெளியையும் கபளீகரம் செய்யும். சாப்பிட்டதை, என் வீட்டு முற்றத்தில் பீ பொழியும். வீடு, கிட்டத்தட்ட காடாகி விடும்.

இந்த வாத்துக்களை பயமுறுத்துவதற்காகவே, ஹாலோகிராம் நுட்பத்தை சுய ஆர்வலராகக் கற்றுக் கொண்டேன். எழுத்தாளர் சுஜாதாவைப் படித்து விட்டு, இந்த வார்த்தையைத் தெரிந்து வைத்திருந்தாலும், நிஜத்தில் முப்பரிமாணமாக்கி ஒரு நரியை உலவ விடுவதுதான் என் நோக்கம். பழங்காலத்தில் காக்கா வந்து வயல்வெளியை மேயாமல் இருக்க சோளக் கொல்லை பொம்மை வைத்திருப்பார்கள். அது போல், நரியின் உருவம், என்னுடைய புல்வெளியில் உலவ வேண்டும். வாத்துகள் தெரிந்தால், அவற்றில் இருந்து ஊளையிடும் சத்தம் வர வேண்டும். அவர்கள் நெருங்குவதற்கு முன், நரியின் திண்மத் தோற்றங்காட்டி, அவர்களைத் துரத்த வேண்டும். நரியைப் பார்த்தால், வாத்துகள், தங்களுடைய இல்லத்தை என்னுடைய கொல்லைப்புறத்தில் அமைத்துக் கொள்ளாது. இதற்கு ’நிம்பி’ என்று பெயர் சூட்டினேன்.

நிம்பி என்பது நம்பி என்பதன் மரூஊ. “Not In My Back Yard” என்பதன் சுருக்கம்.

வாத்துக்களைத் துரத்துவது தமிழ்ப் பேரவையின் கவனத்தை ஈர்த்தது. அப்படித்தான் வைஜெயந்தி ப்ராஜெக்ட் எனக்குக் கிடைத்தது. நரியின் பருநோக்கியை உலவவிட்டது போல் வைஜெயந்தியை உலவவிடச் சொல்லி இருக்கிறார்கள்.

வைஜெயந்தி மாலா என்னும் பெயருக்குத்தான் என்ன ஒரு சக்தி? அந்தப் பெயரைக் கேட்டவுடனேயே நுழைவுச்சீட்டுகள் எல்லாம் விற்றுவிட்டன. ஆனால், எவராலும் நேரில் வர இயலாது. அவர்களுக்காகத்தான் ’வாஸ்து’ என்று பெயரிட்ட இந்த app நிரலி தயாரித்து இருக்கிறேன். (வாத்து கருத்து: என் பெயருக்கு பங்கம் விளைவிக்குமாறு, வாத்து என்பதில் ஒரேழுத்தை மாற்றி, வாஸ்து என்று விற்பதற்காக காப்புரிமை வழக்குப் போடப் போகிறேன்.)

’வாஸ்து’ ஆப்பு மட்டுமே இந்த வருடப் பேரவை. அதாவது உங்களின் இல்லத்தின் புழைக்கடையிலேயே வைஜெயந்திமாலாவைத் தோற்றுவிக்கலாம். நான் நரிகளைக் கொண்டு வாத்துகளைத் துரத்தினேன். வைஜெயந்திமாலாவை வைத்து பேரவை வாத்துகளைத் துரத்துகிறது.

Jeyaganthan – ஜெயகாந்தன்

https://sway.com/s/uS8ywb6wbCH8hTSK/embed

Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage – Book Reviews

இன்னொருத்தருடன் உங்களுடைய இதயம் இணக்கமாக இருக்க ஒத்திசைவு மட்டும் காரணம் அல்ல. இரண்டு பேருக்கும் இடையே பொதுவாக நடந்த ரணங்களால்தான் இதயங்கள் இணைகின்றன. – சுகுரு டசாகி

ஜப்பானிய பழமொழியில் சொல்கிறார்கள்: ‘தலையைத் துருத்திக் கொண்டு தெரியும் ஆணியை, அடித்து உள்ளே தள்ளு!’

ஜப்பானில் சுற்றம் என்பது குடும்பத்தையும் தாண்டியது. வாழ்க்கையின் ஒவ்வொரு பாதையிலும் அந்த ஐக்கியமாகும் எண்ணம் பாய்கிறது. நீங்கள் தனித்துத் தெரிந்தால், பத்தோடு பதினொன்றாக ஆக்கப்படுவீர்கள். ஆமே (甘え) என்னும் சித்தாந்தம் இந்தக் குழுமப் பண்பாட்டை புரிந்து கொள்ள உதவும். ஆமே (甘え) என்பதன் அர்த்தம் ’அடுத்தவரிடம் அன்பைத் தேடு’. குழந்தைப்பருவத்திலேயே இது மூளையில் ஏற்றப்படுகிறது. இன்னொருவரிடம் பரிபூரண விசுவாசம் கொண்டிருப்பதற்கும் சமூகக் கூட்டமைப்பாக வாழ்வதற்கும் இந்த உணர்வு முக்கியம் என்று கற்றுத் தருகிறார்கள். சொல்லப் போனால், ஜப்பானிய மொழியில் சுய ஆளுமையைச் சொல்லும் கொஜின் ஷுகி (こじん-しゅぎ) என்றால் அது சுயநலம்/பேராசை போன்ற மோசமான அர்த்தத்திலேயே பயன்பாட்டில் இருக்கிறது.

ஆமே (甘え) என்பது குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே உள்ள உறவு போன்றது. அது எழுதப்படாத சமூக விதி. உங்களின் சக தொழிலாளரை, உங்களுடன் கூடப் படிக்கும் மாணவரை, உங்களுடன் கூட்டத்தில் வரும் பயணியை – ஒவ்வொருவருக்கும் நீங்கள் வாக்கு கொடுக்கிறீர்கள். நின்ஜோ (にんじょ) என்றால் உள்ளார்ந்து எழும் அனிச்சையான செயல்பாடு. அதாவது, ’நான் என்னுடைய கடமையாக, உங்களுக்கு பரிபூரண அன்பையும் எதிர்பார்ப்பற்ற அர்ப்பணிப்பையும் நல்குவேன்.’ அனைவரும் அனைவருடன் கைகோர்த்து வாழ்வோம் என்பதை பாலபாடமாக பதித்துக் கொள்கிறார்கள். இவ்வாறான சமூகக் குழுமங்களை கிரி (ぎり) என்கிறார்கள்.

இந்த மாதிரி உள்வட்டத்தில் இல்லாதவர்களை டனின் (たにん) என அழைக்கின்றனர். நின்ஜோ (にんじょ) உள்வட்டத்திலோ, கிரி (ぎり) குழுமத்திலோ இல்லாதவர்களை டனின் (たにん) எனக் கருதுகின்றனர். அதாவது, குடும்பமோ, பள்ளித் தோழமையோ, அலுவல் சகாக்களோ, அல்லாதவர்கள். டனின் (たにん)களுடன் எந்தப் பற்றுதலும் கிடையாது.

கடைசியாக வா (わ) என்னும் பதம். வா (わ) என்றால் ஒத்திசைவு; இணக்கம். இதுதான் ஜப்பானிய அறம். பழங்காலத்தில், நெல் விளைவிக்க தேவைப்படும் நதிநீரைப் பகிர வேண்டும். நெல்விளைச்சலைப் பாதுகாக்க வேண்டும். இந்த சமயத்தில்தான் குடியானவ சமூகத்தில் அமைதி நிலவ, வா (わ) சட்டத்தை அரசர் ஷொடொகு டைஷி முன்வைக்கிறார். விளையாட்டில், வர்த்தகத்தில் என்று எந்தத் துறையிலும் வா (わ) சித்தாந்தத்தைக் காணலாம். பரஸ்பர நம்பிக்கை, விட்டுக் கொடுத்து வாழ்தல், ஒத்துழைப்பு, மேலதிகாரியிடம் அசைக்கவியலா பற்றுறுதி, ஆகியவையே வா (わ)கருத்தியல். தனிமனித விளையாட்டான டென்னிஸ் போன்றவற்றில் ஜப்பானியர்கள் ஓரளவிற்கு மேல் எழும்ப முடியாததற்கும் இந்த அடிப்படைக்கும் பெரும் தொடர்பு உண்டு.

ஜப்பானில் தனித்துவம் தழைத்தோங்க, ஒரு சில துறைகளே இருக்கிறது: மலர் அலங்காரங்களைச் செய்யும் பணி, கவிதை புனைதல், கலை வெளிப்பாடு மற்றும் இசை.

உசாத்துணை: Phyllis Kepler, Brook S. Royse and John Kepler. Windows to the World: Themes for Cross-Cultural Understanding. Glenview, IL: GoodYearBooks, 1996

Haruki_Murakami_Colorless_Tsukuru_Tazaki_Novel_NYT

oOo

ஹருகி முரகமி எழுதிய ”நிறமற்ற சுகுரு டஸாகியும் அவன் யாத்திரை மேற்கொண்ட வருடங்களும் (Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage) படித்து முடித்தேன். ’மனிதரில் இத்தனை நிறங்களா’ என படம் வந்திருந்தது. இந்தக் கதையில் ஐந்து இளைஞர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறம். ஒருத்திக்கு கருப்பு, இன்னொருத்திக்கு வெள்ளை; ஒருவனுக்கு சிவப்பு; இன்னொருவனுக்கு நீலம். கடைசியாக இருக்கும் ஐந்தாமவன் கதாநாயகன் – நிறமற்றவன்.

ஹருகி முரகமி எல்லா இடங்களிலும் ரசிகர்களை வைத்திருக்கிறார். அவருடைய புத்தகங்கள் பரபரவென்று விற்றுத் தள்ளுகின்றன. மகாரஷ்டிரா அளவில் இருக்கும் ஜப்பானில் மட்டுமே ஒரு மில்லியன் புத்தகங்கள் விற்கிறது! அதன் பிறகு, அதே புத்தகம் ஐம்பது மொழிகளில் மொழியாக்கம் காணப்பட்டு மேலும் ரசிகர்களைக் கவர்கிறது. இத்தனைக்கும் சிட்னி ஷெல்டன் போல், கென் ஃபாலெட் போல் பரபரப்பான துப்பறியும் மசாலா நாவல்களை முரகமி படைக்கவில்லை. நோபல் பரிசுக்கான ஓட்டத்தில் நெடுங்காலமாக இருக்கிறார். ஜேகே ரவுலிங் எழுதிய ஹாரி பாட்டார் போல் ஹருகி முரகமியின் நூல் நாயகர்களும் தங்களுக்கென்று உலகை சிருஷ்டித்துக் கொள்கிறார்கள். அவருடைய நூல்களின் கதாபாத்திரங்களின் அக மனது அபிலாஷைகள், யாரும் எதிர்பார்க்காத திசைகளில் பயணித்து, நமக்கு அறிமுகமான எண்ணங்களை பரிச்சயம் செய்வித்து, திக்கற்ற முக்குகளுக்கு இட்டுச் சென்று நம்முடைய சிந்தனையில் நீண்ட நாள் நிலைக்கும் பாதைகளை உருவாக்கவல்லது.

நாகர்கோவில் போன்ற குறுநகரத்தில் இருந்து டோக்கியோ நகரத்துக்கு வருகிறான் சுகுரு டஸாகி. அவனுக்கு கலைகளில் நாட்டம் கிடையாது. எந்தவிதமான பொழுதுபோக்கும் கிடையாது. எந்த கைவினைத் தொழிலும் தெரியாது. எளிதாக புன்னகைப்பான். சட்டென்று யாரோடும் பழக மாட்டான். புதியதாக எவராவது அறிமுகமானால், அவருடன் நட்பு பயில சிரமப்படுவான். வெளிப்படையாக பட்டெனப் பேசுவதில் சிரமம். தனியாகவே உலா வருகிறான். எவருடைய துணையும் இன்றி வாழ்க்கையை நடத்துகிறான். பேச்சுத் துணை கிடையாது. செல்பேசி அரட்டை கிடையாது. அலுவலில் நண்பர் கிடையாது. உண்ணும்போது சம்பவங்களைப் பகிர எவரும் கிடையாது. டிவி மாந்தர்களைக் கூட தொலைக்காட்சியில் பார்ப்பது கிடையாது.

சுகுரு என்பது அவனுடைய அப்பா, அவனுக்கு இட்ட பெயர். அந்தப் பெயருக்கு அர்த்தம் ‘பொருள்களைச் செய்பவன்’. இதனால், அவனுக்கு ஸ்திரமான விஷயங்கள் பிடித்துப் போகிறது. சின்ன வயதில் இருந்து தொடர்வண்டிகள் மேல் காதல். நாள் முழுக்க ரயில் நிலையத்தில் உட்கார்ந்திருக்கிறான். பயணிகளின் அவசரத்தைப் பார்க்கிறான். விற்கப்படும் பொருள்களை கவனிக்கிறான். தண்டவாளங்களில் தாண்டவமாடும் சுருதியை ரசிக்கிறான். இம்மி பிசகாமால், மாறி மாறிப் போகும் புகைவண்டிகளைப் பார்ப்பதோடு நில்லாமல், அந்தத் துறையிலேயே வேலை தேடவும் நாட்டம் கொள்கிறான்.

kuro_pottery

சுகுரு டஸாகியினுடைய குறுநகரத்தில் அவனுக்கு நான்கு நண்பர்கள் இருக்கிறார்கள். எப்பொழுதும் ஒன்றாகவே வளைய வருகிறார்கள். சுகுரு டஸாகி மட்டும் டோக்கியோவிற்கு கல்லூரியில் சேருகிறான். அதன் பிறகு நண்பர்களை இழக்கிறான். நண்பியைக் காமத்துடன் பார்க்கிறான். மூக்கு அரிப்பெடுத்தால் சொறிந்துகொள்வது போல், தன்னியல்பாக தினசரி பல மைல் தூரம் நீந்துகிறான். தற்பால் விருப்பமோ என கனவுறுகிறான்.

உங்களின் அத்யந்த சிநேகிதர்கள், சடாரென்று ஒரு நாள் – உங்களை ஒதுக்கி வைத்து விட்டால் என்ன செய்வீர்கள்? நிராகரிப்பை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? காதல் தோல்வி என்பது போல் தோழர்களின் தோல்வி என்று இந்த நிலையைச் சொல்லலாம். அவர்களிடம் சென்று ‘ஏன் என்னுடன் பேச மாட்டேன் என்கிறீர்கள்?’ என விசாரிப்போம். அவர்கள், நம்மை புறந்தள்ளும் காரணத்தை அறிய முயற்சிப்போம். நட்பை மீண்டும் உயிர்ப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று முயல்வோம். சுகுரு டஸாகி அவ்வாறெல்லாம் எதுவும் செய்வதில்லை. டஸாகிக்கு அந்த மாதிரி ஆராய இயலாத உள்ளுக்குள்ளேயே மருகும் மனம். தானாகவேப் புழுங்கி தனக்குள்ளேயே குற்றங்களை உருவாக்கி அதற்கான தண்டனைகளை ஏற்றுக் கொண்டு நிர்க்கதியாக அலையும் சிந்தையைக் கொண்டிருக்கிறான் டஸாகி.

துப்பறியும் கதை போல் வேகமாக விரைகிறது இந்த நாவல். ஏன் அவனை வெறுத்து ஒதுக்கினார்கள் என்பது முதல் முடிச்சு. அப்படி வெறுத்து ஒதுக்கிய, பதின்ம வயது தோழமை எல்லோரையும் எதிர் கொள்வானா என்பது இரண்டாம் முடிச்சு. ஒவ்வொருவரையும் சந்திக்கும் போது, அவர்கள் சொல்லும் மனப்பதிவுகளும் அதன் தொடர்ச்சியான தகவல்களும் ‘அடுத்து என்ன… அடுத்து என்ன?’ என்று ஆர்வமூட்டுகிறது.

ஒவ்வொரு நண்பரும், பிறரை அவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை வெளிக்கொணர்ந்தது நன்றாக இருந்தது. பியானோ இசைக் குறிப்புகளும் அதன் தொடர்ச்சியான ஆபரா, சிம்பொனி விமர்சனங்களும் வாழ்க்கையைச் சொல்கிறாரா, இசையைச் சொல்கிறாரா என எண்ண வைத்தது. ஃபிரான்ஸ் லிஸ்ட் என்பவரின் பியானோ இசைத்தட்டு ஆன Années de pèlerinage நாவல் நெடுக இடம்பெறுகிறது. கதையின் தலைப்பான ’யாத்திரை மேற்கொண்ட வருடங்களும்’ என்பதற்கும் பொருந்துகிறது.

tsukuru_overboard

கதைக்குள்ளேயே பல உபகதைகளும், கிளைக்கதைகளும், சிறுகதைகளும் உண்டு. நாவலின் நடுவே பியானோ வாசிப்பவர் குறித்த அத்தியாயம் வருகிறது. இது இந்த நாவலின் மிக சுவாரசியமான இடம். பியானோ கலைஞருக்கு சிறப்பு சக்தி வந்து இருக்கிறது. அவர் சாத்தானை சந்தித்து இருக்கிறார். அதனிடம் இருந்து, ஒருவரைப் பார்த்தவுடன் அவருடைய நிறம் என்ன என்பது அவருக்குத் தெரிந்து விடும் சக்தியைப் பெறுகிறார். தன்னுடைய நிறம் போலவே இருப்போருடன் அவருக்கு ஒத்துப் போகும், என்பதையும் அறிகிறார். இந்த ஞானமும், பிறரைப் பார்த்தவுடன் உணர்ந்து கொள்ளும் உள்ளுணர்வும் வந்ததால், அவரது நெடுநாள் ஆயுள், மாதங்களாகச் சுருங்கிவிட்டது. இந்த சிறப்புப் பார்வை கிடைக்கும் சூட்சுமத்தை அவர் யாருக்கு வேண்டுமானாலும் தாரை வார்க்கலாம். ஆனால், யாருக்குக் கொடுக்கிறாரோ, அவருடைய ஆயுள்காலமும் எண்ணப்படும் நாள்களாகிக் குறைந்து விடும். அவர் எப்பொழுது பியானோ வாசித்தாலும், தன்னுடைய ஜாடியை, பியானோ மேல் வைத்து விட்டு வாசித்தால்தான், பியானோ வாசிப்பு களை கட்டும். அவருக்கு ஆறாம் விரல் இருந்திருக்கிறது. ஆனால், ஆறாம் விரலோ, பியானோ வாசிப்பிற்கு இடையூறாக இருந்திருக்கும். அதை வெட்டி எடுக்கச் சொல்லி இருப்பார்கள். அந்த ஆறாம் விரல்தான் ஜாடியில் இருந்ததா? ரொம்ப நாளைக்கு, இந்த இடம் மனதிலே சிந்தையைக் கிளறிக் கொண்டே இருக்கும்.

நியு யார்க் டைம்ஸில் சொல்லி இருந்தார்கள். கனவை சிலர் நன்றாக எழுதுவார்கள். அற்புதமாக விவரிப்பார்கள். நிஜம் போலவே இருக்கிறமாதிரி கதையில் உருவாக்கி விடுவார்கள். ஆனால், முரகாமியோ, எது கனவு, எங்கே நிஜம் என சிந்தை திகைக்கும் அளவு கொண்டு செல்கிறார். இதை மீ எதார்த்தம் (surrealism) எனலாம். குழந்தைகளுக்கான கற்பனை உலகம் என்றும் எளிமையாக்கலாம்.

முரகாமியிடம் என்னவெல்லாம் எதிர்பார்த்தேனோ, அவை எல்லாமும் இந்தப் புத்தகத்திலும் கிடைத்தது: கொஞ்சம் போல் பாலுறவு வர்ணனை; இசையும் அதன் தாளங்களையும் வாழ்க்கையோடு சங்கமிக்கும் லயம்; அமானுஷ்யமான உணர்வுகளை காற்றோடு உலவவிடுதல்; அர்த்தமற்ற வாழ்க்கையை தேடல் நிறைந்ததாக ஆக்கிக் கொள்ளும் முட்டாள்தனம்; பிறரோடு ஒட்டாமல், குழுவாகத் திரிய விரும்பும் விசித்திரம்; ஓட்டப்பந்தயம் போல் முடிவைத் தொடும் பயணமாக இல்லாமல், 4×100 தொடர் பந்தயமாக மாரத்தான் ஓடும் உயிர் வித்தை – எல்லாம் போதிய அளவில் கலந்திருக்கிறது.

டிரெயின் ஸ்டேஷன் போல் வாழ்க்கை. போக நினைக்கும் ஊரை மனதில் வைத்து அவசரமும் ஆர்வமும் பதற்றமும் கொண்டு தொடர்வண்டியில் ஏறுகிறோம்; இறங்குகிறோம். பயணங்களில் நிறைய பேரை சந்திக்கிறோம். சிலருடன் அதே இடங்களில் வசிக்கிறோம். சில சமயம் வழியனுப்ப மட்டும் ரெயில்வே ஸ்டேஷனுக்குச் செல்கிறோம். மேலிருந்து ஒருத்தன், இந்த கால அட்டவணையை உருவாக்கி, மின்வண்டியைப் போல் எல்லோரையும் இயந்திர கதியில் செலுத்துகிறான்.

tsukuru_train

பிறரின் இறப்பிற்கு நாம் காரணமாக இருக்கும்போது எப்படி உணர்கிறோம்? எதை உருவாக்குகிறோம்? யாரை திருப்தி செய்ய வாழ்கிறோம்? காதல் என்றால் என்ன? வெற்றி பெறுவது எப்போது? நிறைய யோசிக்க வைக்கிறது.

“நினைவுகளை மறைத்து விடலாம். ஆனால், அந்த நினைவை உருவாக்கிய சம்பவங்களை அழித்துவிட இயலாது.” – சுகுரு டசாகியிடம் சாரா சொல்வது