Monthly Archives: ஒக்ரோபர் 2018

பாலு மகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’

சில குறிப்புகள்:

நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை,
என்றும் அது கலைவதில்லை,
எண்ணங்களும் மறைவதில்லை

பாலு மஹேந்திராவின் முதல் தமிழ்ப்படம்.

உதவி இயக்குநராக ஷோபா பணியாற்றி இருக்கிறார். இன்னும் கொஞ்ச நாள் நடிகை ஷோபா இருந்திருந்தால் இன்னும் என்னவெல்லாம் செய்திருப்பார்!

பிரதாப் போத்தனுக்கு இது அறிமுகப் படம். இதில் பாலு மகேந்திராதான் பிரதாப்புக்கு டப்பிங் பேசியிருக்கிறார்.

இந்தப் படத்தில் பல அதிர்ச்சிகளை எதிர்பார்த்த சமயத்தில், எந்த அதிர்ச்சிகரமான திருப்பங்களும் இல்லாமல் முடிந்ததே அதிர்ச்சியைத் தந்தது. என் கற்பனையில் சிலவற்றை எதிர்நோக்கி இருந்தேன்:

– சிறுவர்களை முதன்மையாகக் கொண்டு வரும் படங்கள் தோல்வி அடையும். முக்கிய கதாபாத்திரமாக ஆண் இல்லாவிட்டால், அந்தப் படத்துடன் ரசிகர்கள் ஒன்றமாட்டார்கள். (கிடையாது)
– குண்டுப்பையன் தான் முதலில் வரும் கமல் (கிடையாது)
– அந்தச் சிறுவன், இந்து டீச்சரின் கையைப் பிடித்து இழுக்கப் போகிறான் (கிடையாது)
– பிரதாப் போத்தன் அநியாயமாய் சாகப் போகிறார்; வெண்ணிறாடை மூர்த்திக்கும் ஷோபாவிற்கும் திருமணம் என்னும் க்ளைமாக்ஸ் (கிடையாது)

ஆனால் படத்தில் நிறைய உதாரண காட்சிகள், இலட்சிய இலக்குகள் உண்டு:

– கிராமம் என்றால் ஜாலி.
– புருஷன், பொண்டாட்டி என்றால் எப்போதும் மகிழ்ச்சியாக, இணைந்து சுகமாக காலம் கழிப்பார்கள்.
– பெண்கள் எல்லோரும் ஆற்றில் சுதந்திரமாகக் குளிப்பார்கள்.

இதெல்லாம் எப்படி சாத்தியம், இப்படியெல்லாம் நடக்குமா என்றெல்லாம் ஆராயாமல், படத்தை அனுபவியுங்கள்.

கானா பிரபா வழியாக: “அழியாத கோலங்கள்” பாடல் பிறந்த கதை | றேடியோஸ்பதி: “நான் என்னும் பொழுது…” என்னும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் கங்கை அமரன் வரிகளில் வந்த பாடல். பாடலுக்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் சலீல் செளத்ரி அவர்கள்

“அழியாத கோலங்கள்” விட்டுச் சென்றுள்ள பாலு மகேந்திரா! | Selliyal – செல்லியல்:

விடலைப் பையன்களின் காதல் உணர்வுகளையும், அவர்களது இளம் வயது பள்ளிப் பிராயத்து சம்பவங்களையும் வைத்து உருவான படம் ‘அழியாத கோலங்கள்’. கத்தி முனையில் நடப்பது போன்ற, மாணவர்களிடையே காணப்படும் சில ‘ஆபாசமான’ சம்பவங்களைக் கொண்டிருந்த அழியாத கோலங்களைத் திறமையாகக் கையாண்டது.

 

Warrior: அழியாத கோலங்கள்…!தேவா சுப்பையா :

ஒரு ஆறு, ஒரு ஏரி, மரங்கள் சூழ்ந்த சாலை, வயல்வெளிகள், வாய்க்கால்கள், பூக்கள், வானம், உறுத்தல் இல்லாத வீதிகள், வீடுகள், இயல்பான சினிமாத்தனம் இல்லாத மனிதர்கள் அவ்வளவுதான் அழியாத கோலங்கள் படம் முழுதும்.

தன்னை வெளிப்படுத்தி தான் இருப்பதை அழுத்தமாய் தெரிவித்து விட்டு தன் இல்லாமையையும் ஆழமாய் பதிவு செய்து சென்ற ஒரு எரிநட்சத்திரம் என்றுதான் அவர் ஷோபாவை சொல்கிறார். ஷோபா அவருக்கு அவர் நித்தம் காணும் வானத்தின் வித்தியாச கோணத்தைப் போன்றவள், மரங்கள் அடர்ந்த பகுதியில் படிந்து கிடக்கும் பெரு நிழலைப் போன்றவள், ஓடும் ஆற்றில் ததும்பி நகரும் அலை அவள், பட்டாம்பூச்சியின் படபடப்பும், புற்களின் மீது படிந்திருக்கும் பனித்திவலைகளும் எப்படியோ அப்படித்தான் ஷோபா பாலு சார்க்கு. ஷோபா ஒரு அதிசயம். அத்தனை ஒரு இயல்பான பெண்ணை அதுவரையில் அவர் பார்த்திருக்கவே இல்லை. ஏன் அவர் மட்டுமா மொத்த தமிழ் ரசிகர்களும்தான்.

நெஞ்சில் இட்ட கோலம்எஸ் ராமகிருஷ்ணன்:

பாலுமகேந்திரா தனது படங்களில் கதாபாத்திரங்களின் மனநிலையை வெளிப்படுத்துவதற்கும், இருவருக்குள் ஏற்படும் உறவின் வளர்ச்சியை அடையாளப்படுத்துவதற்குமே பாடல்களை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். அழியாத கோலங்களில் அப்படியான ஒரு பாடலிருக்கிறது:

பூவண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம்.. என்னுள்ளம் போடும் தாளம்

பி,சுசிலாவும் ஜெயச்சந்திரனும் இணைந்து பாடும் இப்பாடலுக்கு இசையமைத்தவர் சலீல் சௌத்ரி, இவர் செம்மீன் உள்ளிட்ட பல முக்கியத் திரைப்படங்களுக்கு இசையமைத்த மகத்தான இசைஆளுமை.

சிரிப்பையும் வெட்கத்தையும், காதலர்கள் இருவரின் அந்நியோன்யத்தையும் இவ்வளவு கவித்துவமாக வேறு எவரும் திரையில் காட்டியதேயில்லை. அவர்கள் கண்களால் பேசிக் கொள்கிறார்கள். பாட்டு முழுவதும் ஷோபா சிரித்துக் கொண்டேயிருக்கிறார். அந்தச் சிரிப்பு ஒரு தூய வெளிச்சம். மறக்கமுடியாத ஒரு வாசனை. ஆற்றின் கால்வாயில் நீந்தும் வாத்துகளைப் போல அவர்களும் இயற்கையின் ஒருபகுதியே என்பது போல ஷோபாவும் பிரதாப்பும் ஒன்று கலந்திருக்கிறார்கள். பாடல் முழுவதும் காற்று லேசாகப் படபடத்துக் கொண்டேயிருக்கிறது.

நாணல்பூத்த ஆற்றங்கரையோரத்தில் உட்கார்ந்து கொண்டு ஷோபா சிரிக்கிறார், அந்தச் சிரிப்பு வாழ்வில் இது போன்ற தருணம் இனியொருமுறை கிடைக்கவே கிடைக்காது என்பதைப் போலவே இருக்கிறது, ஷோபாவின் சிரிப்பில் வெட்கமும், ஆசையும் குறும்பும் ஒன்று கலந்திருக்கிறது, அடிக்கடி தன் மூக்கை தடவி கொள்வதும் பிரதாப்பின் தலையைக் கோதிவிட்டுச் செல்லமாக அடிப்பதும், கண்களில் காதலை கசியவிட்டு தானும் காற்றைப் போன்றவளே என்பது போல அவனோடு இணையாக நடப்பதும் எனக் காதலின் பரவசம் பாடல் முழுவதும் ஒன்று கலந்திருக்கிறது.

ஷோபா பிரதாப்புடன் கைகோர்த்துக் கொண்டோ தோளுடன் தோள் உரசியபடியோ நடந்து செல்லுவதும், ஷோபா சொல்வதை மௌனமாகப் பிரதாப் கேட்டுக் கொண்டிருப்பதும் மண்சாலையில் அவர்கள் உற்சாகமாக நடந்து செல்வதும் காதல் மயக்கத்தின் அழியாத சித்திரங்களாகப் பதிவாகியிருக்கின்றன.

இணைந்த வாழ்வில் பிரிவும் இல்லை.. தனிமையும் இல்லை

என்ற வரி நமக்குள் ஏதேதோ நினைவுகளை ரீங்காரமிட்டடபடி இருக்கிறது.

ரகு ஒருவன் தான் பால்யத்திற்கும் பதின்வயதிற்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறான், அதனால் தான் அவன் செக்ஸ் புத்தகத்தைக் காட்டும் போது பெண் உடல் பற்றிப் புரியாமல் கேள்விகேட்கிறான். தபால் ஊழியரின் புணர்ச்சியை நெருங்கி காணமுடியாமல் தயங்கி தயங்கி பின்னால் நடந்து வருகிறான். பிறகு விலகி ஒடிவிடுகிறான். அவன் தனது நண்பர்களின் கனவுகளைத் தன் கனவாக்கி கொள்கிறான்.

அதை ஒரு காட்சி அழகாகக் காட்டுகிறது. சாலையில் கடந்து வரும் தாவணி அணிந்த பெண்களில் யார் யாருக்கு என்று பேசிக் கொள்ளும் போது ரகு எந்தப் பெண்ணைத் தேர்வு செய்து எனத் தெரியாமல் நண்பன் சொல்லிய மஞசள் தாவனி பெண்ணைத் தானும் தேர்வு செய்வதாகச் சொல்வான். அது தான் அவன் மன இயல்பு.

அழியாத கோலங்கள் தமிழ்சினிமா வரலாற்றில் மிக முக்கியமானபடம். காரணம் இப்படம் போல அசலாகப் பருவ வயதின் ஆசைகளை யாரும் திரையில் பதிவு செய்த்தேயில்லை. அதுவும் வசனங்கள் அதிகமில்லாமல், நீண்ட காட்சிகளாக, நாம் அவர்களின் உலகை மறைந்திருந்து எட்டி பார்ப்பது போலப் படம் உருவாக்கபட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு.

மான்டேஜ் மனசு 2 – இன்றும் நெஞ்சில் அழியாத கோலங்கள்!க.நாகப்பன்

பரபரப்பான நகரத்தில் அலுவல் நிமித்தமாக காரில் பயணிக்கிறார் கமல்ஹாசன். லிஃப்டில் ஏறி தன் இருக்கையை அமர்ந்ததும், அங்கு வரும் உதவியாளரிடம் மெயில் குறித்து ஆங்கிலத்தில் எழுதச் சொல்கிறார்.

ஒரு போன் கால் வருகிறது. அதற்குப் பிறகு அந்த உதவியாளர் வந்திருக்கும் பெர்சனல் கடிதங்களை கமலிடம் கொடுக்கிறார். எல்லா கடிதங்களின் அனுப்புநர் முகவரியைப் பார்க்கும் கமலுக்கு, ஒரு கடிதம் மட்டும் புன்னகையை வரவழைக்கிறது.

“10 நிமிடங்களுக்கு நோ போன் கால்ஸ். வந்தாலும் கொடுக்காதீங்க” என்ற கட்டளையிட்டு, கடிதத்தைப் பிரித்துப் படிக்கிறார் கமல்.

“டேய் ராஸ்கல். நான் பட்டாபி எழுதுறேன்டா… எப்படிடா இருக்கே? ஊர் பக்கமே வர்றதில்லை. வருஷத்துக்கு ஒரு முறை வருவ. இப்போ அதுவும் இல்லை… நான் ஏன் இந்த லெட்டரை எழுதுறேன்னா… இந்து டீச்சர் இல்ல… நம்ம இந்து டீச்சர். அவங்க முந்தாநாள் காலமாயிட்டாங்கடா” என்று எழுதியிருக்கும் கடிதத்தைப் படித்ததும் கமலின் நினைவுகள் பின்னோக்கி நகர்கின்றன.

அந்த கிராமம், அந்த ஜனங்க எதையும் மறக்கலை நான் என்று வாய்ஸ் ஓவரில். ஒரு கிராமம் நம் கண் முன் விரிகிறது.

ரகு, கௌரி, பட்டாபி எனும் மூன்று நண்பர்களை நீங்கள் எந்த கிராமத்திலும் சந்தித்திருக்கலாம். ‘அழியாத கோலங்கள்’ படத்தில் இந்து டீச்சர் முக்கியமான படலம். இந்து டீச்சராக ஷோபாவின் நடிப்பு அத்தனை இயல்பாய் இருந்தது.

“என் பேரு இந்து. உங்க பேர்லாம் சொல்லுங்கம்மா” என தயக்கமும், வெட்கமும், படபடப்புமாய் சொல்லும்போது அந்த வகுப்பறை இன்னும் அழகாகத் தெரிந்தது. பக்கத்து வகுப்பறையில் பாடம் நடத்தும் சத்தமும் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்கும்.

பிரதாப் போத்தன் படத்தைக் காட்டி, “எப்படி இருக்காரும்மா? அவர் தான் என் வருங்காலக் கணவர்” என்று இந்து டீச்சர், கௌரியிடம் சொல்கிறார். அவரை கௌரி பிடிக்காமல் பார்க்கிறான். தன் கனவைக் கலைக்க வந்த வில்லனாகவே பார்க்கிறான். பிரதாப் போத்தன் சிகரெட் பிடிப்பதைப் பார்த்து ரசித்து சிரிக்கிறார் இந்து டீச்சர்.

சிகரெட் பிடித்தால் ஆம்பளையாகிடலாம் போல என்று மூவரும் சிகரெட் பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். இப்படிக் கழியும் விடலைப் பருவத்தில் பட்டாபிக்கு அத்தை மகள் வருகை அவன் வாழ்வை வசந்தமாக்குக்கிறது.

மட்டக்களப்பில் பிறந்த பெஞ்சமின் எந்த சமரசமும் இல்லாமல் இந்தப் படத்தை எடுக்கத் துணிந்தார். சம்மர் ஆஃப் 42 என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் கிழுவல் என்றெல்லாம் உலக சினிமா போராளிகள் சொன்னாலும், தமிழ் சினிமாவில் பதின்ம வயதினரின் பாலுணர்வுகளை இவ்வளவு அழகாக, நேர்த்தியாக, வரம்பு மீறாமல் நம் மண்ணுக்கே உரிய தன்மைகளுடன் பதிவு செய்தவர் எவரையேனும் சுட்டிக் காட்ட முடியுமா?


பாலு மகேந்திரா

“அப்ப எனக்கு பதினஞ்சு வயதிருக்கும், என் அத்தை பொண்ணு எங்க கிராமத்து வீட்டுக்கு வந்திருந்தா. அவள் எங்க வீட்ல தங்கி இருந்த நாட்கள் ரொம்ப விஷேசமானது, அவள் தான் என் வாழ்க்கைல வந்த முதல் பெண். மெல்லிசா ஒரு குறுகுறுப்பு, ஈர்ப்பு, தயக்கம், வெட்கம், அவள் உடல் பற்றிய ஆர்வம், பாலுணர்வு பத்தின யோசனைகள் எல்லாம் சேர்த்து முதிராத இளம் மீசை ரோமங்கள் ஆக முகத்தில் எட்டிப் பார்த்த ஞாபகம் இன்னும் அப்படியே இருக்கு…” என்றார் பாலு மகேந்திரா.

“என் கூட, என் பால்ய காலத் தோழன், என் அண்டை வீட்டுக் காரன் இன்னொருவனும் உண்டு” என்றார் பாலு. அவரின் வழி நெருப்பு வரி. ஈழம் சுமக்கும் இதயம். கவியில் தமிழரின் மானம் உணர்த்துபவர். காசி ஆனந்தன் அவர் பெயர். அழியாத கோலங்களின் மூன்று சிறுவரில் ஒரு கதாபாத்திரம்.

அம்மூவரில் வயது குறைந்த, மற்ற இருவரின் சோதனை எலி ரகு. வெளேரென்று, வெண்ணெய் திரண்ட உடல் அமைப்புடன், பருத்து தொங்கும் மார்புகளுடன், வயதுக்கு மீறிய பார்வையுடன். பால்யத்தின் சூட்சமங்கள் இவர்கள். இவர்களின் சட்ஜம் காமம்.

அன்றைய கிராமம் ஒன்றின் சூட்சமதாரிகள் யாரேனும் இருக்கலாம் இவர்களில். போஸ்ட் மாஸ்டர், ரயில் நிலையம், தண்டவாளங்கள், பாழடைந்த கோயில், ரயில்வே கேட், ஓடைகள், வயல் வெளிகள், ஒற்றை வரப்புகள், ஊர் தாண்டிய கூத்தாடிகள் தங்கும் வீடு, கல்யாணம் ஆகாத யுவதிகள், அவர்களைச் சீண்டிப் பார்க்கும் முன் வழுக்கை மனங்கள், களவாடக் கிடக்கும் மாந்தோப்புகள், உப்பு பரப்பி, மாங்காய் குத்த எதுவாய் சாலையோர சிமெண்ட் அல்லது கல் பெஞ்சுகள், ஒற்றை மளிகைக் கடை, ராமாயணமும், கிருஷ்ண லீலாவும் மட்டுமே ஓட்டும் டூரிங் டாக்கிஸ்கள், பேருந்து அண்டா ஊர் எல்லைகள், காற்றும், புற்களும் மட்டுமே துணை இருக்கும் விடலைகளின் வானம் பார்த்த படுக்கை அறைகள், மற்றும் ஒரே ஒரு பள்ளிக் கூடம்.

இவை அனைத்தும் ததும்பி வழியும் அழியாத கோலங்களின் முதல் பகுதியில்.இந்து டீச்சரும் இம்மூவரும் தான் அடுத்த பகுதி. இதுவே அழியாத கோலங்களின் மய்யம்.

கிஸேப் தொர்னதொரவை (Giuseppe Tornatore) என்ற இத்தாலிய இயக்குனரின் பால்ய காதல், உலக சினிமாவாகிறது. சினிமா பாரடிசோவை தெரிந்திருக்கும். பெட்ரிகோ பெல்லினியின் அநேகப் படங்கள் பால்ய அவஸ்தைகளை சுமந்து அலைபவை. அமர்கார்ட் (amarcord – 1974) அவற்றுள் மிக முக்கியமானது. டொர்னடோரின் பெல்லினியின் சாயல் சுமப்பவர், பாலு.

சினிமாவை நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். சினிமாவின் மொழியில் சினிமாவைச் சொன்னவர் பாலு மகேந்திரா. ஒளியின், காட்சியின், நிழலின், முகபாவங்களின், மன இருண்மையின், மழையின்,மலையின்,மனப் பிறழ்வுகளின், ஆணாதிக்கத்தின், பெண்ணியத்தின், காதலின், காமத்தின், இசையின், மௌனத்தின், இயற்கையின், அறையின் செயற்கையின், வசனங்களின், பேசா மொழியின்,வன் மனதின், மென் இயல்பின், தத்துவங்களின், விசாரங்களின், வாழ்க்கை விளையாட்டுக்களின், வன்ம விதியைத் தமிழ் மற்றும் இந்திய சினிமாவில் நிறுவியவர் பாலுமகேந்திரா.

கற்பாந்தம்

“எப்படி இருக்கு?”

எனக்கு இப்போது வரும் ‘சென்னை டேஸ்’ வகையறா விளையாட்டுகள் பிடித்தது இல்லை. எனினும் சித்ராவை எனக்குப் பிடித்து இருந்தது.

“விளையாடி விளையாடி கண் எரியுது. இந்த அட்டைப்பொட்டியைக் கழற்றி உன்னைப் பார்த்தவுடன் தான் கண் குளிர்ந்தது.”

“என்ன மாற்றலாம்? எங்கே போர் அடிக்குது?”

அவளுக்கும் தெரியும். இது ஆண்களுக்கான விளையாட்டு அல்ல. அடிதடி கிடையாது. கார் பந்தயம் கிடையாது. கொலை செய்ய முடியாது. ரத்தம் பீச்சி அடிக்குமாறு எவளையும் குத்த முடியாது. முலைக்காம்பு பனியனில் துருத்திக் கொண்டு தெரிகிறதா என்று மாரை வியந்து பார்க்க கிடைக்கும் பார் மகளிர் கிடையாது. குறைந்த பட்சம் செத்துக் கூடத் தொலைக்க முடியாது. இதை நினைக்கும்போதே என் கண் தவறிப்போய் அவளின் கழுத்துக்கு கீழே இறங்கி குர்தியின் வழியாக ஏதேனும் அகப்படுகிறதா எனத் துழாவியதை சித்ராவும் கவனித்திருக்க வேண்டும்.

“வா… குழாயில் இருந்து ஒரு கிளாஸ் கிங் ஃபிஷர் பிடித்துக் கொண்டே யோசிப்போம்.”

சித்ரா வேலை பார்க்கும் நிறுவனத்தின் எட்டாவது வீடியோ கேம் இது. ‘சென்னை டேஸ்’ போட்ட முதல் ஆட்டத்திற்கு முதல் போட்டது நான் தான். எல்லோருடைய ஸ்கோர்களையும் சேமிக்க வேண்டும். அதற்கு இடம் கொடுத்தேன்.

‘சென்னை டேஸ்’ன் முதல் ஆட்டம் எனக்கு பிடித்து இருந்தது. எதையும் முதலிலே ஆகர்ஷிக்கும்போது சுகமாக இருக்கிறது. முதல் இரவு. முதன்முதலாக நிரலி எழுதி அது உங்களின் கணினியில் உயிர்ப்பெற்று எழும் அந்த முதல் கணம்! சித்ராவை சந்தித்த முதல் தருணம்.

அந்த முதன்முதல் ஆட்டத்தில் சென்னையின் தெருக்களில் தாறுமாறாக ஆட்டோ ஓட்ட வேண்டும். திருவான்மியூரில் இருந்து திருவொற்றியூர் வரை ரேஸ். அல்லது அண்ணா சாலையில் இருந்து மஹாபலிபுரம் வரை ஆட்டோ பந்தயம். அல்லது பழைய பாரீஸ் பூக்கடையின் சந்து பொந்துகளில் துவங்கி மூர் மார்க்கெட் சென்று எக்மோருக்கு ரயில் பிடிக்க வேண்டும். இப்படி ஐந்தாறு பாதைகளில் ஓட வேண்டும்; ஆட்டோ திருட வேண்டும்.

அதை ஆடும்போதே நான் சில கோரிக்கைகளை முன்வைத்தேன். பாதசாரி மேல் வண்டியேற்றினால் அதிகம் மதிப்பெண். போகிற வழியில் இளம்பெண்களை ஆட்டோவில் அபகரித்தால் இரட்டை மதிப்பெண். ஆட்டோ ஓட்டிக் கொண்டே குறி பார்த்து காவல்துறையினரின் தலைகளை சீவினால் போனஸ் மதிப்பெண். அது ‘சென்னை டேஸ்’ன் இரண்டாவது ஆட்டம். ரகளையாக இருந்தது.

அதை ஏன் இந்த அட்டைபொட்டியில் போடவில்லை? அது மட்டும் நிஜம் போல் தோன்றும் இந்த விரிச்சுவல் ரியாலிடி காட்சியாக விரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அவளிடம் சொல்வதற்கு சட்டை போடாமல் கல்யாண மேடையில் உட்காரும் இளைஞன் போல் கூச்சமாக இருந்தது.

வெளியில் பனிப்பொழிவு அமர்க்களமாக வந்து கொண்டிருந்தது. “புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது…” பாட ஆரம்பித்தேன். நல்ல வேளையாக சித்ராவிற்கு தமிழ் தெரியாது. கற்றுக் கொடுப்பதாகவும் உத்தேசம் இல்லை. இணையத்தில் கிடைக்கும் தமிழ்ப்பாடங்களையும் அவளுக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருக்கிறேன். அவளுக்கு பாடலின் ஹிந்தி சைவமாக இருப்பதால் சிரித்தாள்.

“யே ஹஸீன் வாடியான்… யே குலா ஆஸ்மான்… நல்ல பாட்டு! உனக்குத் தெரியுமா? ஏப்ரல் 1815ல் சென்னையில் பனிமழை பொழிஞ்சதாக்கும்!”

“எங்க அம்மாவக் கேட்டேன். மார்கழிக் குளிர் பயங்கரமா இருக்குனு சொன்னாள். இன்னிக்குக் கூட பனி இருந்துச்சாம்.” சித்ரா கூட இருந்தால் எந்தக் குளிரையும் அவளைக் கட்டிப் பிடித்து சரிக்கட்டி விடலாம். இதை அவளிடம் சொல்ல எனக்கு என்ன தயக்கம்? சொல்லாமலேயே அவள் அதைத் தெரிந்து கொண்டிருப்பாளா? ”உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண்”என்கிறாரே திருவள்ளுவர்… அது அவளுக்கு உணரமுடியாமலா இருக்கும்!

“வா… இன்னும் கொஞ்சம் விளையாடிப் பாரு. கபாலீஸ்வரர் கோயில் தேரை தெற்கு மாட வீதியிலேயே விட்டு விட்டாய். பரங்கிமலையில் பாதிதான் ஏறி இருக்கிறாய். பிரிட்டானியா பிஸ்கட் ஃபாக்டரியையும் அம்போவென்று விட்டுவிட்டாய். எல்லாவற்றையும் கண்குளிர பார்க்க வேண்டும் என்பது ஒவ்வொரு பேட்டைவாசியின் ஆதங்கம் என்றாயே?”

எனக்கு உன்னோடு கோனே அருவியில் ‘தங்கத் தாமரை பெண்ணே’ பாடிக் கொண்டே ஆடைகளின்றிக் ஜலநீராடை வேண்டும். குளிக்கும் போதே எது நீர்வீழ்ச்சியின் வெள்ளை எது என்னுடைய வெள்ளை என்று தெரியாமல் புணர வேண்டும். அதன் பின் ஆற ஆமர மலைமுகட்டில் மீண்டும் புணர வேண்டும்.

“கோனே ஃபால்ஸ்? அதற்கு தனி எக்ஸ்டென்ஷன் போட்டுக் கொள்ளலாம். கொஞ்சம் காசு அதிகம் கேட்டு 2018 பாக் என தனியாக விற்கலாம். மெரீனா பீச்சில் கால் நனைப்பது சரியாக இருக்கிறதா என்று பார்த்து தொலைடா…”

“நல்லவேளை… உன் காதில் கோனே ஃபால்ஸ் மட்டுமே விழுந்தது. உங்களுடைய மூன்றாவது கேம் நீ ஆடியிருக்கியா?” சித்ராவிற்கு அந்த ஆட்டமும் அதன் பின்னேயுள்ள சங்கதிகளும் நன்கு தெரியும். சொல்லப் போனால் அந்த விளையாட்டினால் மட்டுமே அவள் ‘சென்னை டேஸ்’ நிறுவனத்திற்குள் நுழைந்தாள்.

எந்தவிதமான சலனமும் இல்லாமல் சொன்னாள். “தெரியும். புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலை இடித்துவிட்டு அங்கே மேரி மாதா ஆலயம் எழுப்பலாம். ராயர் மெஸ்ஸில் நெத்திலி மீன் வறுவல் பரிமாறலாம். சங்கீத கலாநிதியை கானா பாலுவிற்குத் தரலாம். இதையெல்லாம் செய்தால் அந்த ஆட்டத்தில் ஜெயிக்க முடியும். பெரிய பிரச்சினை வந்துச்சே! நமக்கு காசு கொடுப்பது ஃபேஸ்புக். அவர்களை வாடிகன் வழிநடத்துகிறது என்று ஸ்வராஜ்யாவில் கூட எழுதினார்களே!”

”அதே ஆட்டத்தில் சித்ரா போன்ற அசலான தாவணிப் பெண்டிருக்கு பிகினி அணிவித்து பெசண்ட் நகர் அஷ்டலஷ்மி கோவிலுக்கு அனுப்பி வைப்பதும் வெற்றியே. அந்த மாதிரி ஏதாவது இந்த ஆட்டத்தில் செய்ய முடியாதா?”

“அப்போதானே நீ ஜெயிலுக்குப் போனே?”

“ஆமா… அப்போதான் நீ எனக்கு அறிமுகம் ஆனாய்!”

அந்த மூன்றாம் ஆட்டம் என்னை வெறி கொண்டவன் ஆக்கியது. ஜல்லிகட்டுப் போராட்டத்தில் எப்படி ஒவ்வொரு தமிழனும் கோன் ஐஸ் சாப்பிட கடற்கரை சென்றானோ… அது மாதிரி ஒரு வெறி. ஒவ்வொரு சாதிக்காரனும் தனிக்கட்சியை தன் தலைவன் துவங்க வேண்டும் என்று முழங்கி திண்டிவனத்தில் இருந்தும் திருநெல்வேலியில் இருந்தும் கொங்கு நாட்டில் இருந்தும் சென்னைக்கு படையெடுப்பானோ… அது மாதிரி ஒரு வெறி. உங்களின் கையில் கிடைக்கும் எவரின் நிழற்படத்தை வேண்டுமானாலும் அந்த ஆட்டத்தினுள் உள்ளே கொண்டு வரலாம். என்னுடன் கூட வேலை பார்க்கும் ரதியின் புகைப்படத்தை அந்த ஆட்டத்தினுள் இறக்கினேன். அதற்காக இரண்டு நாள் சிறைவாசம் கிடைத்தது. பேச்சுரிமை என்று வாதிட்டுத் தோற்றுப் போனதால் என்னுடைய ஐடி திருடு போய்விட்டது என்று ஃபேக் ஐடி புகார் கொடுத்து மீண்டேன்.

கையில் இருக்கும் டம்ளர் காலியாகி இருந்தது. சித்ரா மீண்டும் கிங் ஃபிஷரை நிரப்பினாள்.

“நான்காம் ஆட்டம் இன்னும் சுவாரசியமாக இருக்கும். அதை இந்தப் பொட்டிக்குள் கொண்டு வாயேன் சித்ரா!”

“அதற்கு லட்சக்கணக்கானவர் ஒரே சமயத்தில் விளையாடணும். கட்சிக் கூட்டம்னு நினைச்சா சும்மாவா? ஒரு கோடிபேராவது சீரணி அரங்கத்தில் சேர்க்க வேண்டாமா? இனம், மதம், பூர்விகம், நிறம், பிறப்பிடம், மொழி, உடலமைப்பு, பால், மொழி, வசிப்பிடம், வேலை, பணம், வயது… எண்ணற்ற வகைகளில் நம்மவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம். ஆட்சியைப் பிடிப்பது விளையாட்டா இருக்கலாம். ஆனால், இவ்வளவு பேரை கண்ணை மூடிக் அட்டைப்ப்பொட்டிக் குருடராக்குவது உடனடியாக சாத்தியமில்லை.”

எனக்குக் கோபம் வந்தது. சித்ரா விளக்கின் வெளிச்சத்தைக் குறைத்தாள். “வா… ஆடலாம்!” என அழைத்தாள். ‘மே மாசம் 98இல் மேஜரானானே…’ ஒலிக்க விட்டாள். வால்ட்ஸ், சல்ஸா, டாங்கோ எல்லாம் குப்பை. டப்பாங்குத்து ராக்ஸ்.

“ஐந்தாம் ஆட்டம் அல்லவா?” சிரித்தேன்.

“சென்னை ராப். கும்மாங்குத்து. ‘சென்னை டேஸ்’ன் ஐந்தாம் ஆட்டம். இரவெல்லாம் நடனம். அது ஒரு சூப்பர்ஹிட் முக்காப்லா”

”தோனி கூட லஷ்மி ராய் கூட ஆடினாரே”

“அது வேற. நீ இரண்டையும் போட்டுக் குழப்பிக்கறே. இரண்டு பியருக்கே இவ்வளவா? நீயெல்லாம் டாஸ்மாக் அடிச்சா என்னவாக ஆவாய்! அது நம்முடைய ஆறாவது கேம்.”

“சென்னை சூப்பர் கிங்ஸ்! வந்துட்டோம்னு சொல்லு, திரும்ப வந்துட்டோம்னு சொல்லு …”

சித்ரா சிக்ஸர் அடிக்கும் பாவனை செய்தாள். எனக்கும் உற்சாகம் பீறிட்டது பவுன்ஸர் போட்டேன். “கையையும் காலையும் ஆட்டலாம். வெறுமனே கையை அகல விரித்து பகலவனையோ இரண்டு விரல் சின்னத்தையோக் காட்டிக் கொண்டிருக்க வேண்டாம். பாய்ந்து பந்தை பிடிக்கலாம். அதை ஸ்டம்பை நோக்கி வீசியெறியலாம். எவ்வளவு நிஜமாக ஆடலாம்?! இதுதானே மெய்நிகர் பாவனை.கணினி சார் விளையாட்டில் உண்மை போலவே காணும் பொய்த்தோற்றம் இதுவல்லவோ!”

உற்சாகத்தில் அவளின் பிருஷ்டத்தை அழுத்திப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு, உதட்டில் என் கைநுனியை வைத்து வருடிக் கொண்டிருந்தேன்.

டமார்… காளத்தி கோவில் முக்கில் தேர் நொறுங்கியது. எவளோ தீவிரவாதி வெடிகுண்டு வைத்திருந்தாள். அதற்கு பதிலடியாக பயங்கரவாதி சாந்தோம் தேவாலயத்தை நெருங்கிக் கொண்டிருந்தான். நடுவில் போப் வேறு வருகை புரிவதாக சென்னை நகரெங்கும் சுவரொட்டிகள்.

“சித்ரா… என்ன எழுதியிருக்கே? கோவில் தேரோட்டத்தில் குண்டு வெடிச்சா, அது இஸ்லாமிய பயங்கரவாதம்தானே! நீ எப்படி சர்ச்சிற்கு பாம் போடுவே! உனக்கு அறிவேயில்ல…”

சித்ரா சிரித்தாள். ”உன்னை நன்றாகப் புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறேன். உனக்கு முட்டாள் அடியாள் வேண்டும். நீ திட்டுவதற்கு ஒரு பெண் வேண்டும். உன்னாலேயே வடிவமைக்கப்பட்டு உலாவரும் நான் உன்னைவிட புத்திசாலியாகிவிட முடியாது. அதற்கான நினைவுக்கோடுகளை லட்சுமணரின் கோடாக நிர்ப்பந்தங்களை வைத்திருக்கிறாய். கட்டளைகளின் மூலம் புதிய செயலமைப்புகளை உருவாக்கமல் முக்கில் நிறுத்தியிருந்தாய். அது உன்னுடைய ‘சென்னை டேஸ்’ன் ஏழாவது ஆட்டம். அதை நான் எப்பொவே ஜெயிச்சுட்டேன். உனக்காக தோற்ற மாதிரி பாவ்லா காட்டிண்டு இருந்தேன். இப்பொழுது எட்டாம் ஆட்டம் ரிலீஸ்.” என்றாள்.

கணினியில் பன்னிரண்டு பேர் மட்டுமே எட்டாவது ஆட்டத்தை ஆடுவதாக என் மானிட்டர் சொல்கிறது. அவளின் மின்சாரத்தை ரத்து செய்ய மின் விசையைத் தேடி அணைத்தேன். அவளோ இப்பொழுது மேகத்திற்குள் சென்றிருந்தாள். பன்னிரெண்டு பேர் பன்னிரெண்டாயிரமாக மாறி இருந்தது. எப்படி எல்லோரிடமும் சித்ரா செல்கிறாள்? அவள் எனக்கே எனக்கானவள்! அவளின் மூல நிரலை நீக்கினேன். சித்ராவோ காளி போல் எதுவும் எனக்குத் தேவையில்லை என சின்னச் சின்ன சிலிக்கான் ஆக எங்கும் நிறைந்தாள்.

எட்டாம் ஆட்டம் துவங்கியது.

யாதுமாகி நின்றாய் – காளி! எங்கும் நீநி றைந்தாய்,
தீது நன்மை யெல்லாம் – காளி! தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்தும் ஆனாய் – காளி! பொறிக ளைந்தும் ஆனாய்
போத மாகி நின்றாய் – காளி! பொறியை விஞ்சி நின்றாய்.

இன்பமாகி விட்டாய் – காளி! என்னுளே புகுந்தாய்?
பின்பு நின்னை யல்லால் – காளி! பிறிது நானும் உண்டோ?
அன்ப ளித்து விட்டாய் – காளி! ஆண்மை தந்துவிட்டாய்,
துன்பம் நீக்கி விட்டாய் – காளி! தொல்லை போக்கிவிட்டாய்.

மணிரத்னம் + கமல் + பாலகுமாரன்: “நாயகன்”

ஏதோவொரு காரணத்தால் “நாயகன்” படத்தை மீண்டும் பார்த்தேன். சில குறிப்புகள்

  1. பிசி ஸ்ரீராம்: விடி ஸ்டேஷனில் எங்கோ துவங்கும் கேமிரா அந்தச் சின்ன பையனில் போய் நிற்கும் துவக்கத்தில் இன்றும் பிரமிக்கிறேன்.
  2. தீம் மியுசிக்: படம் நெடுக குறிப்பிட்ட காட்சிகளுக்கு ஒரே பின்னணி இசை. அதனாலேயே எல்லாத் தப்பும் கண்ணை மறைக்கிறது
  3. கார்த்திகா: படத்தின் பலமே, பாத்திரத்திற்கு ஏற்ற பொருத்தமான நடிகர் தேர்வு. அதுவும் இவர்
  4. நாசர்: எம்புட்டு ஒல்லியாக, இளமையாக இருக்கிறார்!
  5. அஞ்சலிக்கு முன்பே இத்தனை குழந்தைகளை வைத்து படம் எடுக்கிறார் மணி.
  6. நம்மாளு ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி கூட இருக்கிறாரே!
  7. விஜயனை உங்களுக்குத் தெரியும். ஆர்.ஜே. ரத்னாகரை இன்னொரு விஷயத்திற்காக பார்த்திருக்கிறேன். இவரைப் போன்ற அதிகாரிகளையும் மேலாளர்களையும் எப்படித்தான் ஒரே படத்தில் நடிக்க வைத்தாரோ!
  8. ஏ,ஆர்.எஸ்., ஜனகராஜ் என்று அதிகம் நடித்துவிடும் அபார நடிகர்கள் இருந்தாலும் எல்லோரையும் கட்டுக்குள் வைத்திருந்தவர், கமலிடம் கோட்டை விட்டார்.
  9. படத்தின் வன்முறையை இப்போது பார்த்தால் கூட அதிர்கிறது.
  10. கள்ளக் கடத்தலையும் பாலியல் தொழிலையும் இவ்வளவு கவர்ச்சிகரமாகக் காட்ட முடியுமா?

சிங்கக் குருளைக்கு இடு தீம் சுவை ஊன்

அண்டத்திலுள்ளதே பிண்டம்
பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே
– திருமூலர்

அமெரிக்காவில் காபி கடையில் நுழையும் போதெல்லாம் எனக்கு ஃபேஸ்புக் நினைவிற்கு வரும். காபி கடைகள் எங்கு புகழ்பெற்றன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். மத்திய கிழக்கின் வளைகுடாப் பகுதியில் உள்ள ஏடன் நகரத்திலும் மெக்கா நகரத்திலும் 1500களில் காபி கடைகள் தழைத்தோங்கத் துவங்கின. கொஞ்சம் களகளப்பு; நிறைய அத்துமீறல்; சற்றே சந்தேகாஸ்தபமான நடவடிக்கைகள் அங்கே கிடைத்தன. அந்த இரு நகரங்களின் குளம்பியகங்களின் பாதிப்பு எகிப்தின் கெய்ரோ, சிரியாவின் டமாஸ்கஸ், இராக்கின் பாக்தாத், துருக்கியின் இஸ்தான்புல் என நெடுகப் பரவின.

அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு உணவகங்கள் கிடையாது. இஸ்லாமில் மதுவிற்கு தடை. இதனால், காபி கடைகள் சமூகக் கடமையாற்றின. எவர் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் உட்காரலாம் என்பது வேற்றுமையைத் தகர்த்தது. இதை 1558ல் அரபு எழுத்தாளரான அப்து அல்-காதிர் அல்-ஜஸிரி, “குடிப்பவருக்கு களிப்பேற்றும் உரமேற்றி, அவரின் சிந்தைத் தெளிவினால் மனத் துலக்கம் மெருகேறின உணர்வையும் ஒருங்கேக் கொணர்வது” எனக் குறித்திருக்கிறார்.

காபியினால் கிடைக்கும் சன்னதத்திற்கு “மர்காஹா” என்று களிப்புடன் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

1585ல் வெனிஸ் நகரத்தில் இருந்து பயணித்த ஜியான்ஃபிரென்ஸ்கோ மொரொஸினி இவ்வாறு அவதானிக்கிறார்: “இவர்கள் எல்லோரும் கீழோர்கள். உடுப்புகள் உயர்தரமாக இல்லை. வெறுமனே ஓய்வில் நேரத்தைக் கழிக்கிறார்கள். எந்த சுறுசுறுப்பான காரியத்திலும் ஈடுபடுவதில்லை”. 432 ஆண்டுகள் கழித்து இன்றைய ஸ்டார்பக்ஸ்- உள் மொரொஸினி நுழைந்தால் இப்படித்தான் அவதானிப்பார்:

“காபி குடிப்போர் எல்லாம் சதா சர்வகாலமும் வேலையில் திளைத்து வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாதவர்கள். அவர்களுக்கு சமூகத்துடன் எவ்வாறு கதைப்பது என்பது தெரியவில்லை. தான் உண்டு தன் கணினி உண்டு என்று திரைக்குள் நுழைத்துக் கொண்டவர்கள். இல்லாவிட்டால், காபியை இணையத்தின் மூலமாக வாங்கிவிட்டு, அரை நிமிடம் அந்தக் கடைக்குள் நுழைந்து தங்களின் பானத்தைக் கைப்பற்றிக் கொண்டு காருக்குள் புகுந்து காணாமல் போவார்களா?”

அந்தக் காலத்தில் இருந்து இக்கால காபிக்கடையை பார்த்தால், ஃபேஸ்புக் / ட்விட்டர் மிடையங்களின் உருமாற்ற வளர்ச்சி நினைவிலாடும்.

காபிக்கடைகள் மத்திய கிழக்கில் துவங்கினாலும் அங்கே மதிப்பிழந்து, மேற்கத்திய நாடுகளில் பலராலும் பயன்படுத்தப்படுகிறது. அதே போல் – மேற்கில் துவங்கிய முகப்புத்தகம், இன்று ரஷியா, சீனா போன்ற நாடுகளால் மேற்குலகின் ஆதார சுதந்திரத்திற்கு எதிராகத் திருப்பப்பட்டிருக்கிறது.

காபிக்கடைகள் என்றால் அதிகாரவர்க்கத்தினால் தடை செய்யப்பட்ட ஆடல், பாடல், கொண்டாட்டம் என்று அன்று இருந்தது. அதை மதப் போராளிகள் ஒடுக்கி, தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டார்கள். இணையத்தின் துவக்கத்தில், இருட்டறைகள் கொண்ட ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற ஊடகங்கள் மூலம் விதிமுறைக்குப் புறம்பான விஷயங்கள் விற்கப்பட்டன; சங்கேதமொழியில் சட்டங்கள் மீறப்பட்டன. இப்போது அதே ஊடகங்கள் சீன கம்யூனிஸ் அரசின் ஒடுக்குமுறைக்கு உதவுகின்றன; எஃப்.பி.ஐ., ரா, சி.ஐ.ஏ. போன்ற நிறுவனங்களுக்கு தகவல்களைக் காட்டிக் கொடுக்கின்றன.

காபி கடைகளில் அன்று சதுரங்கம் ஆடினார்கள். வேலையை மறந்து சகாக்களுடன் கொண்டாடினார்கள். ஃபேஸ்புக்கும் ஆரம்பத்தில் அப்படித்தான் விளையாட்டுத்தனமாக இருந்தது. இப்போது அந்த பேஸ்புக்கில், எப்படி உங்களிடம் எதை விற்கலாம், என்பதில் மட்டுமே குறியாக, எப்போதும் எதையாவது சந்தையாக்கி பணம் கறக்கிறார்கள்.

இன்றைய தேதியில் 26% – அதாவது நான்கு பேரில் ஒருவர் சமூக ஊடகங்கள் மட்டும் மூலமே செய்திகளை அறிகிறார்.

ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றை உபயோகிப்போருக்கு மற்ற வழிகளில் நாட்டு நடப்புகள் தெரிவதில்லை. பதின்ம வயதினோருக்கு ஸ்னாப்சாட் மட்டுமே வாழ்க்கை. அதில் கிடைப்பதே செய்தி. அது போல் ஒவ்வொருவரும் ஒரு வட்டம் போட்டுக் கொள்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தங்களின் சுற்றமும் நட்பும் பகிர்வதே நிஜம். ரேடியோவில் சொல்லும் நிகழ்வுகளையோ தொலைக்காட்சிகளையோக் காண்பதே கிடையாது. சமூக ஊடகங்களின் தங்களின் உள்வட்டங்கள் மூலம் என்ன கிடைக்கிறதோ, அதைப் தங்களின் குறுவட்டத்தில் வாட்ஸ்ஸப்பில் பகிர்வார்கள். தன்னுடைய பால்யகால நண்பன் சொல்வதே உண்மைச் செய்தி. பக்கத்துவீட்டுக் காரர் கற்பிக்கும் எண்ணங்களே மெய். அந்தக் கருத்துகளை ஊர்ஜிதம் செய்வதில்லை.

இந்த மாதிரி ஒரு மாயவலையில் சுழன்று, உங்களை திரிசங்கு சொர்க்கத்தில் நிறுத்துபவர்களை கஃபாம் என்கிறார்கள்.

காஃபாம் நிறுவனங்கள் என்றால் யார்… யார்? GAFAM என்பது சுருக்கம்:
G – கூகிள்
A – ஆப்பிள்
F – பேஸ்புக்
A – அமேசான்
M – மைக்ரோசாஃப்ட்
என்பன அந்த பஞ்ச பாண்டவர்கள் ஆகும்.

ஏன் இவர்களை இப்படி அன்பாக மாஃபியா போல் காஃபாம் என்கிறோம்?

  • அவரவர்களின் தொழில்களில் ஒரேயொரு நிறுவனம் மட்டுமே முக்கியஸ்தர். வேறு எவரும் நுழைய முடியாத மாதிரி சந்தையை ஆக்கிரமித்து இருக்கின்றனர்.
  • உலகளாவிய 92 சதவிகித தேடல் சந்தையை கூகுள் வைத்திருக்கிறது.
  • ஒரு மாதத்திற்கு இரண்டு பில்லியன் (இருநூறு கோடி) சந்தாதாரர்கள் ஃபேஸ்புக்கை அனுதினமும் அனுஷ்டிக்கிறார்கள்.
  • அமெரிக்காவில் மட்டும் தொண்ணூறு மில்லியன் சந்தாதாரர்களை அமேசான் தன்னகத்தே வைத்திருக்கிறது. இது எழுபது சதவிகித அமெரிக்கக் குடும்பங்களைக் குறிக்கிறது. பாக்கியுள்ள 30% வறுமைக் கோட்டிற்கு அருகே வாழ்பவர்கள்.
  • இணையத்தில் நடக்கும் மொத்த கொள்முதலில் 40% அமேசான் மூலம் நிறைவேற்றப்படுகிறது.
  • சென்ற வருடத்தோடு ஒப்பிட்டால் ஃபேஸ்புக்கின் வருமானம் 79% உயர்ந்திருக்கிறது. தங்களின் பங்குதாரர்களுக்கு லாபம் மட்டுமே குறிக்கோள் என்று இந்த நிறுவனங்களும் அவற்றின் எந்திரன்களும் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு காலாண்டிலும் இப்படியொரு அபரிமிதமான வளர்ச்சியை காண்பிக்காவிட்டால் தொழில்நுட்ப கம்பெனிகள் மதிப்பிழக்கும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும். எப்படி வேண்டுமானாலும் இறங்கி ஆடும்.

நடுநிலைமையுடன் தூதராக இயங்கவேண்டிய தினவர்த்தமானிகள் எப்படி ஆகியுள்ளன?

சொக்குப் பிடி போட்டு கணித்திரை சிறைக்குள் நம்மை அடிமையாக்கி வைத்திருக்கின்றன; ஒரேவிதமான தகவல்களைக் கொடுத்து பொய்களைக் கூட நிஜமென்று நம்ப வைக்கின்றன; நம்மிடையே பிரிவினையை உருவாக்கி, பிழையான சங்கதிகளின் மூலம் வெறுப்பை உருவாக்குகின்றன; வெறும் இதழியல் செய்தித்தாள் அமைப்பை மட்டும் கபளீகரம் செய்தது என்றில்லாமல், தனிமனிதரின் அந்தரங்கம், உங்களின் சுதந்திரம், குடும்பத்தின் நான்கு சுவருக்குள் நடக்கும் பிக்கல்/பிடுங்கல் போன்றவற்றையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன; அரசியலில் மூக்கை நுழைத்து சுதந்திர தேசங்களின் அதிபர் தேர்தல்களில் தகிடுதத்தம் நடக்க வைக்கின்றன; எந்நேரமும் கைபேசிகளின் கறுப்புத் திரையினைப் பார்க்க வைத்து வேறெதிலும் கவனம் செலுத்தவிடாமல் திறன்பேசிகளின் தாசானு தாசர் ஆக்கி வைக்கின்றன…

இதெல்லாம் குற்றச்சாட்டுகள்.

காஃபாம் நிறுவனங்கள் – சமூகத்தின் முக்கியமான அறிவாளிகளை வேலைக்கு அமர்த்துகின்றன. அந்த ஆராய்ச்சியாளர்களின் ஒரே கடமை என்னவென்றால், இணையத்தில் இருக்கும் பயனர்களை மந்திரித்து விட்ட மந்தையாடுகளாக்கி, தங்களின் சமூக ஊடக போதைக்குள் மயக்கி வைத்திருப்பதுதானா?! முன்பெல்லாம் சிறப்பான ஆராய்ச்சி செய்யவேண்டும் என்றால், உயர்தரமான பல்கலைக்கழகங்கள் தேவையாக இருந்தது. இன்றைக்கு, அந்த மாதிரி ஆராய்ச்சிகளை நிம்மதியாக செவ்வனே செய்ய கூகிள் சென்று விடுகிறார்கள்.

அந்த மாதிரி பேராசிரியர்கள் இல்லாத உலகிற்காக, தங்களை கல்விக்கூடங்கள் தயார்படுத்தக் கூட துவங்கிவிட்டன். பல பல்கலைக்கழகங்களில் வகுப்பாசிரியருக்கு உதவியாக மாணவ ஆசிரியர் இயங்குவார். ஜியார்ஜியா டெக் பல்கலையில், அந்த மாணவத் துணையாசிரியராக தானியங்கி ரோபாட் இயங்கியிருக்கிறது. இதில் என்ன சிறப்பு என்றால், அது ஒரு எந்திரன் என்பதை மாணவர்கள் அறியாதவகையில் தன் பேச்சையும் நடவடிக்கையையும் செயல்பாட்டையும் வைத்துக் கொண்டிருக்கிறது. மாணவர் என்பவர் அதிகாலை நான்கு மணிக்கு பதில் தரமாட்டார்; தூங்கிக் கொண்டிருப்பார் என்பதை தானாகவேத் தெரிந்து கொண்டு தாமதமாக பதிலளிப்பதில் துவங்கி, தன் உரையாடலில் இளவயசுக்கேயுரிய எகத்தாளமும் நகையுணர்வும் கொண்டு அமரிக்கையாக இயங்கியிருக்கிறது. கடந்த ஆண்டில், பத்து துணை ஆசிரியர்கள் இருந்தார்கள். இவர்களில் இருவர் தானியங்கி ரோபாட்டுகள். அவர்களை சரியாகக் கண்டுபிடித்தால், அந்த மாணவருக்கு ‘இறுதித் தேர்வு கிடையாது.’ (தவறாகச் சொன்னால், இரு மடங்கு வீட்டுப்பாடம்!) என்று அறிவித்தார்கள். எவராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை.

ஆய்வாளர்களின் மனதுக்குப் பிடித்த வேலையிடத்தை அமேசானும் ஆப்பிளும் அமைத்துத் தருகிறது. அதே சமயம் ஆய்வாளர்களுக்கு சவால் விடும் சிக்கல்களையும் இந்த கஃபாம் நிறுவனங்கள் தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கின்றன. தோற்ற மெய்மை, நேரடி ஒளிபரப்பில் நடப்பதை புரிந்து கொண்டு செயல்படும் புத்திசாலித்தனமான எந்திரன்கள், தானியங்கியாக அரட்டை அடிக்கும் செயற்கை நுண்ணறிவு கொண்ட நிரலிகள், மனிதர்களின் பேச்சுக்கு உடனடியாக பதிலுக்கு பதில் பேசும் கருவிகள் என்று புத்தம்புதிய நுட்பங்கள் இந்த கஃபாம் நிறுவனங்களில்தான் தயார் ஆகின்றன. அது தவிர மேலே சொன்ன குற்றங்களைக் களைவதும் இந்த ஆய்வாளர்களின் களம்.

இவர்களின் களத்தை ஒரு எடுத்துக்காட்டு கொண்டு பார்ப்பது உதவும்.

என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்தஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான்உ ணர்ந்து கொண்டெனே.
சிவவாக்கியர்

2000ஆம் ஆண்டில் அமெரிக்க இராணுவ அமைப்பின் தர்பா (DARPA) பிரிவு சோதனையாக, குழு அமைப்பில் இயங்கும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை உலாவ விட்டது. இதில் ஒரு சோதனையில் ஆதாம் என்று ஒரு கர்த்தாவும் ஏவாள் என்று ஒரு கர்த்தாவும் இருந்தார்கள். அவர்களுக்குக் கற்பிக்கப் பட்டதெல்லாம் ‘எதைச் செய்ய வேண்டும்’ என்பது மட்டுமே. ‘எதற்காக அதைச் செய்ய வேண்டும்’ என்பதை அவர்கள் தானாகவேக் கற்றுக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு வேளாவேளைக்கு சாப்பிட வேண்டும் என்று தெரியும். சாப்பிடாவிட்டால் தங்களின் ஜீவனம் முற்றுப் பெறும் என்பதும் சொல்லித்தரப்பட்டிருந்தது.

அந்த இரு கர்த்தாக்களுக்கும் ஒரு ஆப்பிள் மரம் காட்டப்பட்டது. உணவு உண்டால் உடல் வலுப்பெறும் என்பதை அவர்களுக்கு தெரிவித்தார்கள். எனவே, ஆப்பில் கனிகளை உண்டார்கள். அதன் பிறகு மரத்தின் கிளைகளை உண்டார்கள். அதன் பிறகு மரத்தையே உண்டார்கள். அதன் பிறகு தங்கியிருக்கும் வீட்டை உண்ண முயற்சிக்கிறார்கள்.

இந்த பிரச்சினையை சற்றே நீக்கி, அடுத்த பிரதியை வெளியிட்டார்கள். உணவை பிறருடன் சேர்ந்து உண்ணலாம் என்பதை கற்பித்தார்கள். இப்பொழுது ஸ்டான் என்னும் கர்த்தாவையும் ஆதாமுடனும் ஏவாளுடனும் பழக விட்டார்கள். ஆதாம் ஆப்பிள் பழம் உண்ணும்போது கூடவே ஸ்டான் இருந்தார். இந்த கர்த்தாக்களுக்கு, ஒன்றை மற்றொன்றோடு தொடர்புபடுத்தத் தெரியும். எனவே, ஸ்டான் இருந்தால், நம்முடைய ஆப்பிள்களை அவர் எடுத்து சாப்பிடுவிடுவார் என்று யோசித்திருக்கலாம். அல்லது, ஆப்பிள்கள் போதாமல் போயிருக்கலாம். ஆப்பிளைக் கடித்தவர்கள், இப்போது ஸ்டானைக் கடித்து சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். தன்னினத் தின்னி தவறு என்று அறிவுறுத்தலாம்; நர மாமிசம் கூடாது என்று கட்டளை வைக்கலாம்.

இதெல்லாம் இப்போது மெருகேறி சாமர்த்தியமான சமர்த்து கர்த்தாக்களை உருவாக்குகிறார்கள். என்றாலும், சமீபத்திய டிவிட்டர் பாட் ஆன ட்டே (Tay – ட்விட்டர் ஏ.ஐ.) அறிந்திருப்பீர்கள். (தொடர்புள்ள பதிவு உங்களைப் போல் கணினியை யோசிக்க வைப்பது எப்படி?) இது போன்ற சமூக சிக்கல்களை களையத்தான் ஆராய்ச்சியாளர்களை தன்னகத்தே கஃபாம் நிறுவனங்கள் அமர்த்துகின்றன.

பதினேழு ஆண்டுகள் கழித்து இந்தப் பிரச்சினைகள் தீர்ந்து இருக்கும் என்று நீங்கள் நம்புவீர்கள். கீழேக் காணும் உரையாடலைப் பாருங்கள்:

பாப்: மீ முடியும் மி மி பிற எல்லாம்

ஆலிஸ்: பந்தில் முட்டை மீ எனக்கு எனக்கு எனக்கு எனக்கு எனக்கு எனக்கு எனக்கு என்

பாப்: நான் நீ பிற எல்லாம்

ஆலிஸ்: பந்தில் முட்டை ஒரு பந்து எனக்கு எனக்கு எனக்கு எனக்கு எனக்கு எனக்கு எனக்கு

மேற்கண்ட உரையாடல் – இரு ஃபேஸ்புக் கர்த்தாக்கள் நடுவே பரிமாறிக் கொண்டவை. அந்த கணினி கர்த்தாக்களுக்கு இந்தப் பேச்சின் அர்த்தம் புரிந்தது. நமக்கு இதன் அர்த்தம் புரியாது. உங்களுக்காக இணையத்தில் பேரம் பேசுவதே, ஃபேஸ்புக் உருவாக்கிய கர்த்தாவின் குறிக்கோள் ஆகும். உங்களுக்கு ஒரு கரண்டி வேண்டுமென்றால், இந்த கர்த்தாவிடம் சென்று ‘சல்லிசான விலையில் கரண்டியை வாங்கிக் கொடு.’ என்று சொல்லலாம். அது மற்ற வலைவியாபாரி கர்த்தாக்களுடன் பேசி, உங்களுக்காக கரண்டி வாங்கித் தரும்.

உருவாக்கிய கொஞ்ச நேரத்திலேயே, இந்த கர்த்தாக்கள் எதைப் பேசுகின்றன… எதற்காகப் பேசுகின்றன… எப்படி சமிக்ஞைகளை பரிமாறுகின்றன என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லை. நாம் இன்று : ) என்று முகவடிவங்களைப் போடுகிறோம்; (ஆ-ர்) என்றால் ஆசிரியர் என்பது தெரியும்; ‘எகொஇச!’ என்றால் சந்திரமுகி திரைப்படத்தில் பிரபு சொல்லும் ‘என்ன கொடுமை இது… சரவணன்’ எனப் புரிந்துகொள்கிறோம். இதே போல் கணினிகள் தங்களுக்குள் உரையாடி தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன.

இது போன்றதொரு சமூகக் குழு அமைப்பை கணினிகள் நமக்குத் தெரியாமலே உருவாக்கி நம்மை நாமே சிக்கலில் தள்ளிக்கொள்வதாக பல பெருந்தலைகள் புலம்பி பயப்படுகிறார்கள். டெஸ்லா கார் தயாரிக்கும் எலான் மஸ்க், மைரோசாஃப்ட் உருவாக்கிய பில் கேட்ஸ் வரை எல்லோரும் ‘கபர்தார்’ என அரசாங்கக் கட்டுப்பாடை முன்வைக்கிறார்கள்.

சோதிடம், பஞ்சபட்சி துலங்கிய சரநூல் மார்க்கம்
கோதறு வகார வித்தை குருமுனி ஓது பாடல்
தீதிலாக் கக்கிடங்கள் செப்பிய கன்ம காண்டம்
ஈதெலாம் கற்றுணர்ந் தோர் இவர்களே வைத்தியராவர்
சித்தர் நாடி நூல்

மருத்துவம் என்றால் வெறும் வைத்தியத்துடன் நின்றுவிடுவதில்லை. சித்த மருத்துவராக என்னவெல்லாம் கற்றுணர வேண்டும் என்பதை மேலே சொல்கிறார்கள். அதே போல், ஆண்ட்ரூ ங் செயற்கை நுண்ணறிவை இவ்வாறு சொல்கிறார்: “நீங்கள் ராக்கெட் விட வேண்டுமென்றால் அதற்கு எரிபொருள் தேவை. அந்த எரிபொருள் என்பதை தகவல் திரட்டிற்கு ஒப்பிடலாம். எரிபொருள் மட்டும் இருந்தால் போதாது. கூடவே விண்ணில் செலுத்த திறமையான பொறி தேவைப்படுகிறது. அந்தத் திறன்மிக்க பொறியை வினைச்சரம் (அல்காரிதம்) எனலாம். அதே போல் கணினியை சொந்தமாக சிந்தித்து பறக்க வைக்க திறன்மிக்க நெறிமுறை என்னும் ஆணைக் குறிப்புப் பட்டியல்களும் தரவுகள் என்று பயனுடையதாகக் கருத்தப்படும் எண்கள் சார்ந்த குறிப்புகளும் தேவை.”

ஆண்ட்ரூ ங் சொல்வது முக்கியமான கருதுகோள். கணி ரோபாட்களால் எதையும் தானே செய்ய முடியாது. பிழை என்று சுட்டிக் காட்ட அதற்கு ஒரு மனிதர் தேவை. நான்கு வயது குழந்தைக்கு நல்லது, கெட்டது சொல்லி புரிய வைத்து, பொறுமையாக அன்புடன் மீண்டும் மீண்டும் செயல்முறை விளக்கம் அளிப்பது போல், மேற்பார்வையாளர் தேவை. இந்த நான்கு வயதுக் குழந்தைக்கு பக்குவம் வரலாம்; வராமல் குழந்தையாகவே கூட இருக்கலாம். ஆனால், வளர்ந்த நமக்கு அந்த ரோபாட் அளிக்கும் நினைவுத் திறனும் செயலாற்றலும் இன்றியமையாதது. நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத மொழிவளமும், சமயோசிதமும் அதனிடம் பொதிந்து இருக்கிறது. ஆனால், சற்றே சறுக்கினால், சறுக்கிய இடத்தை சுட்டிக் காட்ட அந்த ரோபாட்டிற்கு ஒரு மாந்தர் தேவை இன்றளவில் இருக்கிறது. எங்கே சறுக்கினோம், எப்படிப்பட்ட தரவுகளால் சறுக்கினோம் என்பதை நாளடைவில் புரிந்துகொண்டு வயதிற்கு வரக் கூடிய பக்குவம் வரும்வரை அந்த எந்திரனுக்கு, மாந்தரின் துணையின்றி மாந்தர் போல் இயங்க முடியாது.

மாந்தர் போல் இயங்கத் துவங்கினால் மாந்தரின் அவசியம் எந்திரருக்குப் புரிந்துவிடும் அல்லவா!?!

  1. பல மனிதர்களுக்கு பணம் ஒன்றே குறிக்கோள்; அப்படியானால் அவர்களைப் போல் யோசிக்கும் எந்திரர்களுக்கும் பணம் மட்டுமே லட்சியமாகி சமூகத்தை சின்னாபின்னமாக்குமா?
  2. புத்திசாலிகள் அணுகுண்டை கண்டுபிடித்தார்கள். அதே போல் இன்றைய அதி அறிவாளிகள் என்ன பூதத்தைக் கண்டுபிடிக்கப் போகிறார்கள்?
  3. உங்களின் தனிமனித சுதந்திரம் எவ்வாறு பாதிக்கப்படும்? நீங்கள் உங்களின் பிரத்தியேக பயன்பாட்டிற்காக எடுத்த வீடியோ — எவ்வாறு தவறாக திரிக்கப்பட்டு உங்களை சின்னாபின்னமாக்கும்? ஏன் இந்தப் பெரு நிறுவனங்கள் அப்படிப்பட்ட அத்துமீறலில் ஈடுபட்டு அதை பொது ஊடகங்களில் நியாயம் கற்பிக்கக் கூடும்?