Monthly Archives: ஜனவரி 2009

ஈழப் படுகொலை: முத்துக்குமார் பத்திரிகை ஊழியர் தீக்குளித்து தற்கொலை: பதிவுத் தொகுப்பு

-/பெயரிலி.
அவர்களின் நல்லெண்ணத்துக்கு மதிப்பளித்தாலும், தம்மைத்தாமே கொளுத்திக்கொள்வது பயங்கரமான மடமைத்தனம்.

தம்மைத்தாமே கொன்று கொல்வது ஒரு பரபரப்பை ஏற்படுத்தும். அதற்குப் பின்னால், எல்லாப்பரபரப்பும் மடிந்தபின்னால், சார்ந்திருக்கும் குடும்பத்தினை ஒரு நாயும் அணுகிப் பார்க்காது.

ஈழத்திலே எத்தனையோ இவர்களின் வயதினை ஒத்தவர்கள் உயிர்வாழ இன்னொரு வழிமுறை கிட்டாதா என்று எறிகணைவீச்சிலே செத்துப்போக, இத்தனை வழிமுறைகளிருக்கும் இவர்கள் இப்படியாக இங்கே செத்துப்போவது அநியாயம்.

தமிழகத்திலே கொளுத்திக்கொள்ளவேண்டியவர்களும் முத்துக்குமாரர்களல்ல; கொளுத்திக்கொல்லவேண்டியவர்களும் முத்துக்குமாரர்களல்ல.

நடைவண்டி: ‍‍இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக‌ இன்னொரு இளைஞர் தீக்குளிப்பு.: ஆழியூரான்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி என்ற 30 வயது கூலித் தொழிலாளி இன்று காலை இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக தீக்குளித்துள்ளார். அவர் விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்றும், தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும் இருவிதமாகவும் சொல்லப்படுகின்றன.


தீக்குளிக்கும் முன்னர் முத்துகுமாரின் இறுதி அறிக்கை!
வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது.
:::
பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே… உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.
:::
ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…


நர்சிம்
என்ன எழுதுவது?
நெகிழ்ச்சியாக இருக்கிறது என்று எழுதினால் நான் கோழை.. ஏனெனில் நான் நெகிழும் நிகழ்வில் உடன்கட்டை ஏறியிருக்க வேண்டும்
மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்றால்.. நான் ஒரு சாடிஸ்ட்.. உன் முடிவில் என்ன மகிழ்ச்சி?
:::
14 பக்க கடிதம் எழுதும் அளவு அவகாசம் இருந்த உனக்கு ஒரு நிமிடம் சிந்திக்க கிடைக்காததை எண்ணித்தான் வருத்தமாக இருக்கிறது.
யார் யாது சொன்னாலும் இது வீரம் அல்ல முத்துக்குமார்.
:::
உன் மரணச்செய்திகள் இன்னும் 3 நாட்களுக்கு உன் உடலை எரித்த தீயை விட பலமடங்கு எரியும்..அதற்கு பிறகு உன் அஸ்தியை போல இந்த நிகழ்வும் கரைந்து மறைந்து மறந்து போகும். என்ன பலன்?
யாவரும் கேளிர்!!…


இட்லிவடை
இவ்வளவு வாய்கிழிய பேசும் தமிழக தலைவர்கள் திருமங்கலம் இடைத்தேர்தலில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு பற்றி ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ?
:::
இலங்கையில் விடுதலைப்புலிகள் வீழ்ச்சி அடைந்தால் தான் இவர்களுக்கு ஈழ தமிழர்கள் மீது பரிவு ஏற்படுமா ? இரண்டு வருஷம் முன்பு எங்கே போனது இந்த பாசம் ?

நடிகர் சத்யராஜ், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, போன்றவர்கள் செங்கல்பட்டு மணவர்களின் உண்ணாவிரத பந்தலில் மாணவர்களை உசுப்பிவிடுகிறார்கள். ஏன் இவர் பையன் “ஸ்டுடண்ட் நம்பர் ஒன்” சிபி இதில் கலந்துக்கொள்ள கூடாது ?
முத்துக்குமரன் தீக்குளிக்க யார் காரணம்?


உண்மைத் தமிழன்
“செத்தாவது தொலைவோம்.. அப்போதாவது இந்தப் பிரச்சினை விஸ்வரூபமெடுக்கிறதா என்று பார்ப்போம்..” என்று அவர் நினைத்து அதனையே செயல்படுத்தியிருக்கிறார்.
:::
இதில் அசிங்கப்படுத்தும்விதமாக சரத்குமார் ஏதோ ஒரு கல்யாண வீட்டில் கையெடுத்துக் கும்பிடுவதைப் போன்ற போஸில் ஒரு தட்டியை அவரது கட்சிக்காரர்கள் வைத்து கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்.
:::
அஞ்சலி செலுத்த வந்தவர்கள் அனைவருமே அந்த இடத்தில் அங்கிருப்பவர்களிடம் “முத்துக்குமார் செய்தது சரியானது அல்ல.” என்று சொன்னால் திரும்பி உயிருடன் போவார்களா என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு கூடியிருக்கும் இளையோர் பட்டாளம் கொதிப்புடன் காட்சியளிக்கிறது.
:::
மதியம்வரைக்கும் இது தமிழ் உணர்வாளர்களுக்கான போராட்டமாக சென்று கொண்டிருந்தது. மதியத்திற்குப் பிறகு முழுக்க, முழுக்க அரசியலாக மாறிவிட்டது. மாலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவுக் கூட்டமாக மாறிவிட்டது. மாலையில் வைகோ தனது பேச்சை முடித்தபோது “பிரபாகரன் வாழ்க..” என்று முழுக்கமிட..
:::
ஜெயா டிவி செய்திகளில் மதியம்வரை முதல் விளம்பரம் முடிந்து அடுத்த segment-ல் முத்துக்குமார் விஷயத்தைச் சொன்னார்கள். மதியத்திற்கு மேல் சட்டமன்ற உறுப்பினர் பாபு தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின்பு இது ஒன்றையே திரும்பத் திரும்ப இப்போதுவரையிலும் காட்டி வருகிறார்கள்.

மதுரையில் தங்களது அலுவலகம் தாக்கப்பட்டபோது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு ரவுடி பட்டம் சூட்டி பரபரப்பை ஏற்படுத்திய சன் டிவி போனால் போகிறதென்று நினைத்து பத்தோடு பதினோறாவது செய்தியாக இதனைச் சொன்னார்கள்.

கலைஞர் டிவியில் நேற்றே ஒரு கொடுமை நடந்தது. பத்திரிகையாளர் என்ற செய்தியைக்கூட போடாமல் “ஈழப் பிரச்சினைக்காக சென்னையில் ஒருவர் தீக்குளிப்பு..” என்று ஒரு வரி செய்தியை மட்டுமே ஓடவிட்டார்கள். பத்திரிகையாளர் என்பதையும், ஈழப் பிரச்சினைக்காக என்பதையும் செய்திகளில் அதிகம் இடம் பெறாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள் இதன் செய்திப் பிரிவு ஆசிரியர்கள்.

மக்கள் டிவியில் ராமதாஸ் மாலை போடுவதை மட்டுமே திரும்பத் திரும்ப காட்டி அதனை சாதாரணமான ஒரு அஞ்சலி செய்தியாக்கி தன்னைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டார்.
முத்துக்குமார் எதிர்பார்த்தது நடக்கிறதா..?


கொழுவி
எத்தனை ஈழத் தமிழருக்கு 95 இல் யாழ்பாண இடப்பெயர்வின் போது தீக்குளித்து மாண்ட தமிழக உறவின் பெயர் தெரியும்?
முத்துகுமரன்கள் வேண்டாம்


superlinks
த‌ற்கொலைகள் செய்துகொள்வது கோழைத்தனமான முடிவா ?
ஈழ‌த்தில் இந்திய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ அர‌சு ந‌ட‌த்தும் இன‌ப்ப‌டுகொலை போர்


அசுரன்:
“என்னைவிட புத்திசாலியான குழந்தைகள், சிறுவர்கள், வாலிபர்கள், பெண்கள் அனைவரும் இலங்கையில் கொல்லப்படுகிறார்கள். போர் முனையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திதான் நான் தீக்குளித்தேன்” என முத்துக்குமரன் தெரிவித்தார்.
நக்கீரன்: உயிரை கொடுத்து உணர்வை வளர்த்தாய், நீ இட்ட தீ எரிந்து சமைக்கும் முத்துக்குமரா!!


நாக.இளங்கோவன்
வெறுமனே, “எனக்கு இதில் உடன்பாடு இல்லை, நான் தற்கொலையை வெறுக்கிறேன் – இது கோழைத்தனம்…” என்றெல்லாம் நினைப்பதை விட்டு விட்டு, அவன் உணர்வினைப் போற்றவேண்டும். அதனை மதிக்க வேண்டும். நாமும் உணர்வு கொள்ள வேண்டும். அதுவே அந்த ஆன்மாவுக்கு நாம் செய்ய வேண்டிய மரியாதை.
நயனம் – nayanam: முத்துக்குமரனின் தீக்குளிப்பும் சில கருத்துகளும்!


வினவு
வேலைக்காக தட்டச்சு செய்து வாழும் முத்துக்குமாரின் கைகள் தனது 2000 வார்த்தைகள் அடங்கிய மரண சாசனத்தை ஒரு அரசியல்
கட்டுரையாக நிதானம் தவறாமல் அடித்திருக்கிறது. முத்துக்குமாருக்கு பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தாலும் அவர் இந்த தலைவர்களின் மோசடி நாடகத்தை புரிந்தே எழுதுகிறார். குறிப்பாக தி.மு.கவின் உணர்ச்சிப் பசப்பல்கள் வடிவேலு காமடியைவிட கீழாக இருப்பதாக கேலி செய்கிறார்
ஈழமும் முத்துக்குமாரின் தியாகமும் – நமது கடமை என்ன?


வினவு
முத்துக்குமார் எனும் வீரனின் உயிரைத் துறக்கத் துணிந்த தியாகம் கொழும்பில் இந்திய- இலங்கை கிரிக்கெட் ஆட்டத்தை ரசிக்கும் அற்பங்களின் இழிவை எள்ளி நகையாடட்டும். முத்துக்குமார் எனும் இளைஞனின் தியாகம் ஈழத்தில் கொத்துக் கொத்தாய் செத்து விழும் ஈழத்தமிழனின் பிணங்களைக் கண்டு உவகை கொள்ளும் சுப்பிரமணிய சுவாமி, ஜெயலலிதா, இந்து ராம், தமிழக காங்கிரசு நரிகள் முதலான ஒநாய்களின் வெறியை தமிழக மக்கள் அறுப்பதற்கு உதவட்டும். முத்துக்குமார் எனும் அந்தத் தொழிலாளியின் மரணம் புலம்பெயர்ந்த நாடுகளில் வில்லு படத்தை ரசித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழனின் மரத்துப் போன சுரணையை மீட்டுக் கொண்டு வரட்டும். முத்துக்குமாரின் தீக்குளிப்பு பதிவுலகில் அக்கப்போரையும், அரட்டையையும், வாடிக்கையாகக் கொண்டிருக்கும் சில பதிவர்களுக்கு சமூக அக்கறை என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொடுக்கட்டும். முத்துக்குமார் எனும் அந்த வார்த்தை இதுவரை ஈழத்திற்காக இது வரை ஒரு துரும்பையும் எடுத்துப் போடாதவர்களின் மனச்சாட்சியை கிளறி எழுப்பட்டும்.
ஈழம்: முத்துக்குமாரை கொன்ற தீ சுரணையற்ற மனங்களை சுடட்டும்!


வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன்
குடியரசு தினத்தன்று, இந்திய அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டம் என்பதால் பரபரப்புடன் வந்திருந்த காவல்துறையினர், தோழர் கோவனின் இனஉணர்வுமிகுந்த, கணீரென்ற பாடல்களுக்கு மெய்மறந்து நின்றதைக் காணமுடிந்தது.
அங்கூ…. அங்கூ…: ஈழத்திற்காக ஓர் ஆர்ப்பாட்டம்…


பி.இரயாகரன்
புலிப்பாசிசம் எப்படி தனிநபர் பயங்கரவாதத்தை அடிப்படையாக கொண்டு, சமூகத்தை தனக்கு எதிராக நிறுத்தி சீரழிந்து அரசியல் ரீதியாக தற்கொலை செய்கின்றதோ, அப்படித்தான் தனிநபர் தற்கொலையும்;. இந்த வகையில் முத்துக்குமாரனின் தற்கொலையும், புலியிச அரசியல் எல்லைக்கு உட்பட்டதுடன், அதுஎதான் வழிகாட்டியுள்ளது. மக்கள் விடுதலைக்கு வழிகாட்டாத புலிப்போராட்டமோ, தற்கொலையை தேர்ந்தெடுத்தது. அதையே தன் தோல்வியிலும் மற்றவர்களுக்கும் வழிகாட்டுகின்றது.

சமூகத்தின் மீது நம்பிக்கை இழந்து, அவர்களைச் சார்ந்து போராட முடியாது போன நிலையில் தான், புலியிசம் மனித அவலத்தை தன் அரசியலாக உற்பத்தி செய்கின்றது.
முத்துக்குமாரன் தற்கொலையும், தனிநபர் பயங்கரவாதமும்


கலகம் / தமிழ் அரங்கம்
உண்ணாவிரதங்களும் ஆர்ப்பாட்டங்களும் தொடர்கின்றன, இவற்றுக்கு சளைக்காமல் திரையரங்குகளில் படங்களோ வெற்றிகளை குவித்து ஓடிக்கொண்டிருக்கின்றன. டாஸ்மாக்கில் கூட்டம் அலை மோதுகிறது,மெரினாவில் சுற்றிபார்க்க வருபவர்களும், தீம் பார்க்கில் கூத்தடிக்க போவோரின் எண்ணிக்கையும் குறையவில்லை. தங்க கடற்கரையில் சிலு சிலு காத்து வாங்க கூட்டமோ முண்டியடிக்கிறது.
சுடாத நெருப்பும்,சுடுகிற கண்ணீரும்


வாசு
நிஜமாகவே இலங்கை தமிழருக்காக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது பணம் கொடுத்து அரசியல் கட்சிகள் எதாவது இதை செய்ய சொன்னதா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் முத்துக்குமார் எடுத்த முடிவு பைத்தியக்காரத்தனமானது.
Our Thoughts: உயிர் இத்தனை மலிவா?


சக்கடத்தார் சக்(ங்)கடத்தார்
எங்கட பாசத்திற்குரிய உறவுகளே! உங்கள் உள்ளத்தில் இருக்கும் ஆதரவு எங்களுக்கு நன்றாகத் தெரியும். உங்கள் ஆட்சியாளர்கள் எலும்புத் துண்டுக்காக வாலாட்டுவதற்கு நீங்கள் ஏன் இப்படியான வழியில் உங்கள் உயிரை மாய்க்க வேண்டும்?? உங்கள் ஆதரவை, உங்கள் உணர்வைப் புரிந்து கொண்டவராய்த் தானே நாங்கள் இருக்கின்றோம்.. பிறகு ஏன் உறவுகளே இப்படியான வழி முறைகளைக் கைக் கொள்ள வேண்டும்?? இனிமேல் இப்படியான உயிரை மாய்க்கின்ற வேலைகளில் ஈடுபட வேண்டாம் எம் அன்புக்குரிய உறவுகளே??
கிழவனின் கிறுக்கல்கள்…: தீ கொழுத்தத் தணல் கொடுக்கும் நாட்டில் தீக் குளிப்பா???


சுபானு
நாள்தோறும் வருகின்ற வன்னிச் செய்திகளின் கனதி இங்கே மனங்களில் உறுத்தலைக் கூட்டிக் கொண்டிருக்கின்றது. அதைவிடவும் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் இருக்கின்றதே அது அதைவிடக் கொடுமை. ஒரு இரும்புக் கூட்டுக்குள் விலங்கிடப்பட்டு உணர்வுகளைக் கூட சுதந்திரமாக வெளியிடக் கூட முடியாத மனித மனங்களைக் கொண்டு வாழ வேண்டிய கட்டாயம்.

அதைவிட வருத்தம் என்னவென்றால் எனக்கேன் இந்த வேண்டாப் பொல்லாப்பு என்று என் பல்கலைக்கழக நண்பர்கள் சிலபேர் மனம் விட்டுக் கதைக்கூட பயப்பட்டு ஓடுகின்றார்களே அவர்களை என்னவென்று சொல்வது. வெறுமனே நண்பர் வட்டாரங்களுக்கிடையில் தமது வீரவசனம் பேசிக்கொண்டும், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் காதல் கதைகளில் தம்மை ஈடுபடுத்திக் கதைத்துக் கொண்டும், நாம் உண்டு எம் வேலையுண்டு என்னும் என இருக்கும் நாம் எங்கே, ஈழத்தமிழர்க்காக தன் இன்னுயிரை தமிழர்க்காக அர்ப்பணித்த அந்த முத்துக்குமார் எனும் இளைஞர் எங்கே.

சின்னத் தீச் சுடர் ஒன்று கையில் பட்டாலே வலியில் துடித்துப் போய்விடுவோம். ஆனால் முத்துக்குமார் தன் உடலையே மண்ணெண்னையூற்றித் ஈழத் தழிழர்களுக்காக தீக்கிரையாக்கினான்
ஊஞ்சல் – Unchal: கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்


யுவகிருஷ்ணா
கடந்த வாரம் பெண்ணே நீ அலுவலகத்துக்கு சென்றபோது கூட முத்துக்குமாரை சந்திக்க நேர்ந்தது. அவர் கூகிளில் தேடிப்பார்க்கும் விஷயங்கள் வித்தியாசமானதாக இருக்கும். நான் சென்றபோது..
மடிப்பாக்கம் லக்கிலுக்: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு


Stop the Vanni Genocide / படுகொலைகளை நிறுத்து
எனது பெயர் முத்துக்குமார், எனது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகில் உள்ள ஆத்தூர் கொழுவை நல்லூர் ஆகும். எனது தந்தை தாம்பரத்தில் பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். எனக்கும் அவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது.
முத்துக்குமாருக்கு அஞ்சலிகள்


மணிகண்டன்
முத்துகுமரனின் இந்த செயல் அசாதாரணமானது. மக்களின் மெத்தனபோக்கை சற்றே மாற்றும் அளவிற்கு சக்தி வாய்ந்தது. இந்த சூழ்நிலையில் அவரின் மையக்கருத்தான “ஈழ மக்களின் துயர் துடைப்போம்” என்பதே முன்னிறுத்த படவேண்டும். அவரது முழு அறிக்கை தமிழகத்தில் உள்ள ஒருமித்த கருத்துள்ள கட்சிகளையும் ஒன்று சேரவிடாது. முத்துகுமரன் உணர்ச்சி கொந்தளிப்பில் எழுதப்பட்ட / பேசப்பட்ட கருத்தை எல்லாம் நம்பிய நல்ல மனிதர்.

பான் கி மூன் சீனர் என்றும், ராஜிவ் காந்தியின் கொலை இன்டெர்போல் விசாரணைக்கு செல்ல வேண்டும் என்று அவர் கூறிய கருத்தை முன்னிறுத்த வேண்டிய அவசியம் இல்லை.


தமிழ் சசி / Tamil SASI

தீக்குளிப்பு போன்றவற்றை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழகத்தில் இது போன்ற செயல்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை. இன்று பேசி விட்டு நாளை எல்லோரும் அவரவர் வேலைகளை பார்க்க சென்று விடுவார்கள். ஆனால் “நீண்ட” துன்பத்தில் சிக்க போவது அந்த இளைஞரை நம்பி இருக்கும் குடும்பம் தான்.

இத்தகைய போராட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும்

இனி பல முத்துகுமரன்கள் உருவாகுவார்கள் போன்ற அரசியல்வாதிகளின் பேச்சு பொறுப்பில்லதது. ஒரு முத்துகுமார் போதும்.

ஹிந்தி திணிப்பிற்காக இது போன்று பல இளைஞர்கள் தீக்குளித்த சாம்பலில் இருந்து தான் திமுக ஆட்சியை பிடித்தது. அப்படி ஆட்சியை பிடித்த திமுகவின் இன்றைய தலைவர் திருக்குவளை முத்துவேல் கருணாநிதி தன்னுடைய வாரிசுகளை தான் ஆட்சியில் அமர்த்த முயலுகிறார். நடுவண் அரசில் அவர் கட்சியின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தமிழக நெடுஞ்சாலைகளில் ஹிந்தி எழுத்துக்களை நிறுவிய பொழுது அதனை அவரால் தடுக்க முடியாமல் போனது. இது தான் வரலாற்று நிகழ்வு. இதனை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தீக்குளிப்பு போன்ற அர்த்தமற்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.


முத்து தமிழினி
கருணாநிதி இலங்கை பிரச்சினையினால் ஆட்சியை இழந்ததே இல்லை என்று லேட்டஸ்ட்டாக வரும் தகவல்கள் நல்ல காமெடி.1989 ஆட்சி எதனால் போச்சு என்று யாராவது சொன்னால் தேவலை.எனக்கு தெரிந்த அரைகுறை அரசியலும் மறந்து விட்டது.

நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. இருக்கவே இருக்கார் கலைஞர் என்று நாமெல்லாம் அவரை கும்முவதாக சில காலம் முன்பு சொல்லியிருந்தேன்.அதே தான் இப்பவும். கலைஞர் ராஜினாமா செய்தால் ஈழம் மலருமா? கருணாநிதியும் இதை நாசூக்காக கேட்டார். யாரும் கண்டுக்கலை.
ஒரு தமிழனின் பார்வை:ஈழ பிரச்சினை – கருணாநிதியை கும்முவது தீர்வாகாது


வெற்றி

அது தெற்காசிய பேட்டை தாதா என்ற கோதாவில் இந்தியா எடுத்துள்ள நிலை. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நடக்கும்

முத்து, நீங்கள் மேற்கூறியுள்ள கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. காரணம், பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியில் இருந்த போது காங்கிரசுக் கட்சி போல கண்மூடித்தனமாக தமிழின அழிப்புக்குத் துணை போகவில்லை.

2000ம் ஆண்டில் நோர்வே மூலம் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளில் பாரதிய ஜனாதாக் கட்சி மறைமுகமாக பெரும் பங்காற்றி இருந்தது என நான் அறிந்தேன்.

அதுமட்டுமல்ல, அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் ஈழ விடயத்தில் தமிழக மக்களினதும் தமிழகத் தலைவர்களினதும் கருத்துக்கும் உணர்வுகளுக்கும் ஓரளவுக்கேனும் மதிப்பளித்துச் செயற்பட்டார்.

பா.ஜ.க தனித் தமிழீழத்தை ஆதரிக்கவில்லையெனினும், ஈழத்தமிழர்களின் சிக்கல் பேச்சுவார்த்தை மூலம் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை நோக்கியே இருந்தது.

ஆனால் காங்கிரசுக் கட்சி, தமிழின அழிப்புக்கு சிங்கள அரசுக்கு உதவியளித்து வருகிறது.


We The People

நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. இருக்கவே இருக்கார் கலைஞர் என்று நாமெல்லாம் அவரை கும்முவதாக சில காலம் முன்பு சொல்லியிருந்தேன்.அதே தான் இப்பவும். கலைஞர் ராஜினாமா செய்தால் ஈழம் மலருமா? கருணாநிதியும் இதை நாசூக்காக கேட்டார்.யாரும் கண்டுக்கலை.

அப்புறம் எதுக்கு உண்ணாவிரதம், மனிதசங்கிலி, எம்.பிக்கள் ராஜினாமா என்று டெய்லி நாடகம் போட்டார் என்று அவரிடமோ! இல்லை நீங்களாவோ சொன்னால் தேவலை??!!

1989 தி.மு.க ஆட்சி போனதுக்கு காரணம் ஜெ-ராஜீவ் கூட்டணியே தான் அது தான் அரசியல், நீங்க சொல்லறத பார்த்தா 1980 எம்.ஜி.ஆர் ஆட்சி கலைப்பு ஈழப்பிரச்சனைக்காக என்று சொல்லுவீங்க போல… என்னங்க உங்கள ஒரு அரசியல் புலின்னு நினைச்சா, இப்படி காமெடி பண்ணறீங்க!!?


ராஜ நடராஜன்
கருணா, அனந்தசங்கரி, பிள்ளையான் போன்றவர்கள் இடம் மாறியும் கூட உங்களை புதுப்பித்துக் காட்டும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நிகழ்வுகளை நீங்கள் உருவாக்காததே தமிழக தமிழர்களின் நம்பிக்கையின்மைக்கான காரணமும், இருப்பதை உறுதியாகப் பற்றிக் கொண்டாவது சுய கவுரவத்துடன் வாழலாம் என்ற நம்பிக்கைதான் ஈழத்தமிழனுக்கு இத்தனை அவலங்களுக்கும் மத்தியிலும் இன்னும் மக்களை விடுதலைப்புலிகளின் பக்கம் இழுக்கிறதெனலாம்.

இலங்கை அரசு புலம் பெயர்ந்த தமிழனை மீண்டும் சம உரிமையோடு அணைத்துக்கொள்வதும், அல்லது இரண்டாம்தரக் குடிமகனாக வரவேற்பதும்,அல்லது அகதியாக உலகம் முழுவதும் ஊர்சுற்றவிடுவதும் போன்ற முக்கியமான நிகழ்வுகள் எதிர்காலத்தில் காத்துக் கிடக்கின்றன.மண்வாசனை காரணமாகவோ இயலாமையினாலேயோ தன் மண்ணை விட்டு நகராத உயிரோடிக்கும் உண்மை தமிழர்களின் எதிர்காலம் நிலைக்கவேண்டும்.
பார்வையில்: தமிழகம்,ஈழம், இலங்கை-ஓர் பார்வை


பத்ரி சேஷாத்ரி
விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவத்தால் அழித்தொழிக்க முடியும் என்று நான் நம்பவில்லை. அப்படியே அது நடந்தாலும், அதையொட்டி, ராஜபக்‌ஷேவும் இலங்கை அரசும் தமிழர்களுக்கு எதையும் அள்ளிக்கொடுத்துவிடப் போவதில்லை. தமிழர்களின் நிலை இப்போது இருப்பதைவிட மிக மோசமாகத்தான் போகும்.

விடுதலைப் புலிகள் அமைப்பால் இலங்கையைத் துண்டாக்கி, தனி ஈழத்தைப் பெறுவது சாத்தியம் என்றும் எனக்குத் தோன்றவில்லை.
எண்ணங்கள்: இலங்கைப் பிரச்னையும் தீக்குளித்தலும்


யட்சன்
தமிழுணர்வாளர்களின் வெறும் வாய்க்கு அவலாய் போனதை தவிர அந்த இளைஞனால் எதை சாதிக்கமுடிந்ததென தெரியவில்லை. இயலாமையின் உச்சத்தில் கவன ஈர்ப்பாய் செய்ததை தியாகமென சொல்வதை காட்டிலும் தற்கொலையென்றே வரையறுக்கலாம்.
:::
விடுதலைப்புலிகளின் செயல்களையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நியாயப்படுத்தும் போக்கினை யார் துவங்கினார்களென தெரியவில்லை.
:::
விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் பக்குவமில்லாதவர்களின் எதிர்வினைக்கு பயந்து முப்பது வருடங்களுக்கு மேலாய் புனிதபதாகையினை புலிகளுக்கு தந்த என் தமிழினமும் குற்றவாளிதான்.
முட்டாள் குமரனும் சில முழு பூசனிக்காய்களும்….


மாலன்
இந்த நெருப்பை மீண்டும் ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கி அது இன்னும் பல தற்கொலைகளுக்கு இட்டுச் செல்லக் கூடாதே என்பதுதான். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்பதாக வெளியான அறிவிப்பை அடுத்து ராஜீவ் கோஸ்வாமி தீக்குளித்த போது ஊடகங்கள் அதைப் பற்றி எழுதி விசிறிவிட விளம்பர வெளிச்சத்திற்கு ஆசைப்பட்டு 18லிருந்து 24 வயதுள்ள 159 இளைஞர்கள் தீக்குளித்தார்கள்.(அன்று தொலைகாட்சி இந்தளவிற்கு பரவியிருக்கவில்லை, கடவுளுக்கு நன்றி )
:::
விடுதலைப் புலிகள், சிங்கள அரசு இரண்டுமே தங்களது அதிகார எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ள, விரிவுபடுத்திக் கொண்ட எல்லைகளைத் தக்க வைத்துக் கொள்ள மோதுகின்றன. இதற்கான வழி போர் என அவை தேர்ந்தெடுத்திருக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரில் இந்த இரண்டு தரப்புமே நிரந்தரமான வெற்றிகளைப் பெற்றதில்லை என்று அறிந்தும் அவை இந்த வழியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றன.
:::
இலங்கைத் தமிழர்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதுதான் அவர்களது இலட்சியமாக இருந்திருக்குமானால், அவர்கள் ராஜீவ் – ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். (அது உறுதியளித்த மாநிலக் கவுன்சில்களின் அதிகாரத்தைப் பின், இந்தப் 18 ஆண்டுகளில், மாநில சுயாட்சிப் போராட்டங்கள் போன்ற அரசியல் விவாதங்கள் (political discourse) நடவடிக்கைகள் (political processes) மூலம் விரிவுபடுத்தியிருக்கமுடியும்.அதை அவர்கள் ஏற்க மறுத்ததற்குக் காரணம் ராஜீவ் – ஜெயவர்த்தன திட்டத்தில் (scheme) தங்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்பதே. பின்னர் ரணில் விக்ரமசிங்கேயோடு ‘தேனிலவு’ கொண்டாடிய நாட்களில் கூட அவர்கள் ஓர் அதிகாரப் பகிர்வினை எட்டியிருக்க முடியும். ஆனால் விடுதலைப் புலிகளின் இலட்சியம் தமிழர்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பது அல்ல;

தாங்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதே.
என் ஜன்னலுக்கு வெளியே…: முத்துக்குமார்

‘Nenu Devudni’ – Naan Kadavul: Feb Updates

1. நான் கடவுள்: விமர்சனம் & கதை

2. படம் பெப்ரவரி ஆறாம் தேதி வருகிறது.

3. தெலுங்கு டிவி உரிமைக்கு மட்டும் இரண்டு கோடி கிடைத்திருக்கிறது.

4. முதல் நாயகன் அஜித். முதலில் முதல்போட தயாரானவர் தேனப்பன்.

‘நான் கடவுள்’ எதிர்க்க தயாராகும் அஜித் ரசிகர்கள்
ajith-b-studio-thenappan-original-nan_kadavul1

2006 – ஆண்டு தொடக்கத்தில் நான் கடவுள் படம் அஜித் தடிப்பில் உருவாக இருந்தது. ‘அஜித் – பாலா’ காம்பினஷன் கோலிவுட் – இல் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த படத்திற்காக அஜித் நீண்ட தலை முடி வளர்த்து வந்தார். (அந்த முடியுடன் தான் வரலாறு, பரமசிவன், திருப்பதி போன்ற படங்களிலும் நடித்தார்.

பரமசிவன் படத்தை தாயரித்தது பாலாவின் நிறுவனம்தான். அந்த படித்தில் நடித்ததுகூட பாலவின் நிர்பந்தத்தில்தான்.)

மே மாதம் தொடங்கவேண்டிய படபிடிப்பு தொடங்கவில்லை. ரொம்ப நாள் வெயிட் பண்ணி பார்த்த அஜித்; இனி இது ஒத்து வராது என எண்ணி பாலா-விடம் பேசி விட்டு படத்திலிருந்து விலகி கொண்டார்.

இதன் பிறகு தான் பிரச்சினை ஆரம்பமானது.

அஜித்தை ஒரு ஹோட்டலுக்கு அழைத்தார் பாலா. பாலா, தன்னுடன் சில தயாரிப்பு நிர்வாகிகள் , விநியோகஸ்தர்கள் புடை சூழ வந்து, அஜித்திடம் அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் இப்பவே கட்ட சொல்லி காட்டமாக நடந்துகொண்டனர்; பணம் கட்டினால் தான் வெளியே போக முடியும் என எச்சரித்தனர் பாலா கோஷ்டியினர்; இதை முற்றிலும் எதிபார்க்காத அஜித் மிகவும் அதிர்த்து போனார்.

இதை கேள்வி பட்ட அஜித் ரசிகர்கள் கொந்தளித்தனர். சென்னையில் பாலா அலுவலகம் முன் ஆர்பாட்டம் நடத்தினர்; போலீஸ் வந்தும் இவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை; பின்னர் அஜித்தின் வேண்டுகோளுக்கு இணங்க அப்போது சமாதானமாயினர். ஆனால் பாலா-வின் ‘நான் கடவுள்’ ரிலீஸ் ஆகும் போது பார்த்துகொள்ளலாம் என நினைத்து ரசிகர்கள் சமாதானமாயினர் என்பதே உண்மை.

இப்போது ‘நான் கடவுள்’ ரிலீஸ் ஆக உள்ளதால்; Revenge எடுக்க ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.

5. உச்சகட்டம்: ஆர்யா நரமாமிசம் சாப்பிடும் க்ளைமாக்ஸ்

அவன் – அது = அவள் :: யெஸ் பாலபாரதி

தோழமை வெளியீடு
9444302967
பக்கங்கள் 184
விலை : 120

வாசித்தோர் பார்வை:

லக்ஷ்மி
மலர்வனம்: “யெஸ். பாலபாரதியின்“:: ‘அவன்-அது= அவள்’ விமர்சனம்

கதை என்று எடுத்துக் கொண்டால் என் பார்வையில் இது பிரச்சாரக் கதைதான். அதாவது பாலபாரதியின் பாஷையில் சொல்வதானால் கதை சொல்ல வேண்டிய அரசியலை முடிவு செய்து விட்டு எழுதிய கதை. சொல்ல வேண்டிய விஷயத்தை முடிவு செய்த பின் பலரிடம் பேசி சேகரித்த தகவல்களை சம்பவமாக மாற்றி அவற்றைக் கோர்த்து பின்னப்பட்ட கதை. ஆனால் அதிகம் அறியப்பட்டிராத ஒரு தரப்பாரின் பிரச்சனைகளைப் பற்றிப் பேசும் ஆரம்பகாலப் படைப்புகள் இப்படித்தான் இருந்தாக முடியும் என்பதால் அது ஒரு பெரிய குறையாகத் தோன்றுவதில்லை.
:::
வட்டார வழக்கு, திருநங்கையருக்கென இருக்கும் பிரத்யேக மொழி, அங்கங்கு குறுக்கிடும் மும்பையின் பேச்சு மொழியான ஹிந்தி என பல வேறுபாடுகளிருப்பினும் கூட அதிக பின் குறிப்புகள் தேவைப் படாத அளவு மொழி நடையை எளிமையாகத் தந்திருப்பதாலேயே கதையின் மிகக் கனமான ஆதாரப் பிரச்சனையை மட்டும் கவனிக்க முடிகிறது.
:::
முதல் அத்தியாயத்தின் இறுதியில் கோமதி/கோபிக்கு நேரும் கொடுமை முதலாக கடைசி அத்தியாயத்தின் கடைசி வரி வரை அடுக்கடுக்காக திருநங்கைகளின் பல பிரச்சனைகளை வரிசைப் படுத்தியிருந்தாலும் ஒரேடியாக அழுகாச்சி காவியமாகவும் போய்விடவில்லை கதை.
:::
பல விஷயங்கள் விலாவாரியாக நுணுக்கமான தகவல்களைக் கூட விட்டுவிடாது சித்தரிக்கப் பட்டிருக்கிறது.


சேவியர்

கவிதைச் சாலை :: Xavier – யெஸ். பாலபாரதியின் “அவன் – அது = அவள்: எளிமையான தெளிவான நடையும், சொல்லும் விஷயங்களை வரிசைப்படுத்திய நேர்த்தியும் நூலின் தரத்தை உயர்த்தியிருக்கிறது. பல இடங்களில் நூலை மூடி வைத்துவிட்டு சற்று இடைவெளி கொடுத்து, கனத்த இதயத்தை எடையிழக்க வைத்து, வாசிப்பைத் தொடர வேண்டியிருந்தது என்பது கலப்படம் இல்லாத உண்மை.
:::
அட்டையில் திருநங்கை நெல்லை. முத்து மீனாட்சி யின் முகம், படம் எடுத்தவர் தஞ்சை பாரதி.


லக்கிலுக்

புத்தக அட்டை நன்றாக வந்திருப்பதாக பட்டது. இந்த நாவலுக்கு பொருத்தமான அட்டை.
:::
தமிழில் வாடாமல்லிக்கு அடுத்து அரவாணிகள் குறித்து வந்த பிக்‌ஷன் நாவல் இதுதான் என்று நினைக்கிறேன். எனவே தற்கால தமிழிலக்கிய சூழலில் இந்நாவல் மிக மிக முக்கியமானது என்று நினைக்கிறேன்.


கோவி.கண்ணன்
காலம்: எஸ்.பாலபாரதியின் அவன்-அது: திருநங்கைகளுக்கும் நடக்கும் ரவுடிகள் மற்றும் போலிஸ் கொடுமைகளை சிறப்பாகச் சொல்லி இருக்கிறார்.
:::
ராமேஷ்வரத்தில் நடந்தவைகளைச் சொல்லும் போது அங்கு பேசும் வட்டாரவழக்குகள் வசனங்களிலும், கூவாகம் பகுதியில் கதை செல்லும் போது அங்கு பேசுபவர்கள் பன்ருட்டி வட்டார வழக்குகளில் பேசுவது இயல்பாக இருக்கிறது.
:::
ஓரின புணர்ச்சியாளரான அன்பு ஏன் கோமதியை நிர்வாணம் செய்துக் கொள்ள வற்புறுத்துகிறார் என்பது புரியவில்லை. ஓரின புணர்ச்சியாளார்களுக்கு ஆண்குறி தடையே அல்ல என்றே நினைக்கிறேன்.


Asksen Ashok:

அன்பு என்ற கதாபாத்திரம் முதலில் ஒரு முற்போக்கு எண்ணம் உள்ளவனாகவும், திருநங்கைகள் பற்றிய அக்கரை உள்ளவனாகவும் அறிமுகப்படுத்திவிட்டு பின்னர் அவனே ஒரு சராசரி மனிதனாக, ஒரு குடிகாரனாக சித்தரிக்கபட்டுருப்பதாக கூறியுள்ளீர்..
:::
ஒரு வேளை, இந்த சமூகத்தில் முற்போக்கு சிந்தணாவாதிகளின் லட்சணம் இது தான் என்று தோலுரித்துகாட்டவே பாலா அப்படி சொல்லி இருப்பாரோ?? இன்று முற்போக்கு சிந்தணாவாதி என்று சொல்லிக்கொள்ளும் வியாதிகள் ஊருக்கு உபதேசம் செய்யும் வீரர்கள் தானே..


விக்னேஷ்வரன்
வாழ்க்கைப் பயணம்
பிள்ளைக்கு பேய் பிடித்ததாய் தாய் கருதி பூசாரியை அழைத்து பேய் ஓட்டும் போதும் கதை விவரிப்புகள் இலகுவாக மனதில் பதிகிறது. போலி பூசாரியின் காட்சி விவரிப்புகள் நகைச்சுவையாகவே இருக்கிறது.


புதுகைத் தென்றல்:
நானே நானா?
மும்பையில் என் மாமா வீட்டில் இருந்த பொழுது எதிர் பிளாக்கில் பேரம் மடியாததால் குழந்தையையே தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். கேட்டதை விட பெரியத் தொகை கொடுத்துதான் குழந்தையை மீட்டுக்கொண்டு வந்தார்கள்.

போலிசும் ஒன்றும் செய்ய இயலாது.

திருநங்கையாக இருப்பாதால் ஆண்களிடம் பெரிதாக வம்பு செய்ய மாட்டார்கள். பெண்களிடம் நடந்து கொள்ளும் விதமே வேறு.


முத்துலெட்சுமி-கயல்விழி

உங்கள் அனுபவம் போல தான் எனக்கும்.. தில்லியில் குழந்தை பிறந்தால் பணம் வாங்க வருவார்கள். முதல் முறை எனக்கு பெரிய ப்ரச்சனை இருக்கவில்லை ..சமாளித்துவிட்டேன்.. ஆனால் இரண்டாம் முறை ஆண்குழந்தை என்பதைக்காரணம் காட்டி .. தங்கத்தில் எதையாவது தந்தே ஆகவேண்டுமென்று உள்ளேயே வந்து உட்கார்ந்து கொண்டு மோசமாக நடந்து கொண்டார்கள்.. இத்தனைக்கும் நான் மிக மெதுவாக மதிப்பாகத்தான் பேசினேன். ஆப்பரேசன் ஆகி நிற்க இயலாமல் குளிர்க்காற்று (கதவைத்திறந்து வைத்திருந்ததால்) வேறு..இயலாமையில் எனக்கு வந்த அழுகையைக்கூட பொருட்படுத்தவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.. 😦 கடைசியில் பேரம் 2500 க்கு முடிந்தது.


தொடர்புள்ள பதிவு:
Chennai Saimira :: அவன் – அது = அவள் | நான் சரவணன் வித்யா


என் வாசக அனுபவம்:
ரொம்ப சென்சிடிவான சப்ஜெக்ட். நான் அரவாணி குறித்து சொல்லவில்லை. மூலஸ்தானத்தில் கருங்கல் உள்ளே உறைந்து அருள்பாலிக்கும் லிங்கோத்பவரையும் அரங்கநாதரையும், ‘ஹரே ராம; ஹரே கிருஷ்ணா’வையும் சொல்கிறேன்.

பளிங்குக்கல், பாறாங்கல், என்று காடுகளிலும் மலைகளிலும் சாதாரணமாக இருப்பவை சிற்பியின் உளியில் செதுக்கினால் கடவுள் சிலையாக கைகூப்பித் தொழ மட்டுமே மனம் செல்லும். அவை எவ்வாறு உயிர் பெறுகின்றன, செய்பவரின் சிரத்தை போன்றவற்றை, வெண்கல சிலைகள் முதல் கற்சிலைகள் வரை அனைத்தின் செய்முறைகளின் பின்னணியில் கொஞ்சம் ஆற அமர பார்க்க இயலுமா?

திருநங்கை இவ்வாறு வேறு சக்தி பொருந்தியவர்.

எல்லா கற்களும் வீடு கட்டவும் துணி தோய்ப்பதற்கும் போய்க் கொண்டிருக்கும் வார்ப்புரு நிலையில் இருந்து மாறுபட்டு ஸ்தபதியாக தன்னைத் தானே பாவித்து பின்னமாக்கி முழுமை பெற்றுக் கொள்பவர். சுயம்பு லிங்கத்திற்கும், சிற்பத்திற்கும் தெய்வாம்சம் எவ்வாறு உண்டாகிறது? எங்கே அந்த மாற்றம், தூணில் இருந்து வெடித்துக் கிளம்பும் நரசிம்ம ஆக்ரோஷம் உண்டாகிறது?

புனைவில் மட்டுமே காட்டக்கூடிய இவ்வகையான சௌந்தர்ய சிருஷ்டியை ‘அவன்-அது=அவள்’ மூலமாக ஆணாகப் பிறந்து பெண்ணாக நிலைகொள்ளும் திருநங்கையின் நிஜத்தைக் கொண்டு வாசகனில் நிலைநிறுத்துகிறார் பாலபாரதி.

-oOo-

ராஜ் என்னுடைய நெருங்கிய நண்பர். தொண்ணூறில் மணமான அவருக்கு குழந்தைப் பேறு வாய்க்கவில்லை. மாதம் ஒரு தடவையாவது ஏதாவது விருந்து; சந்திப்பு; அரட்டை.

அடிக்கடி அளவளாவுவோம். நிறைய பேசுவோம். கோபிகாவை ஏன் எனக்கு பிடித்திருக்கிறது? உடற்பயிற்சிக்கு Wii மட்டும் விளையாடினால் போதுமா? அலுவலில் எவ்வளவு போனஸ் வரும்? எல்லாம் ஆலோசித்து அலசப்படும்.

ஆனால், இன்றுவரை செயற்கை கருத்தரிப்பு முயல்வீரா? வாடகைத் தாய் செய்து பார்க்கலாமே? தத்து எடுத்துவிடுங்களேன்! – ஒன்று கூட ஆரம்பித்ததில்லை. அவரும் இயல்பாக உரையாடலில் புகுத்தியதில்லை.

அரவாணி குறித்த இந்தப் புனைவில் பாலபாரதிக்கு இதே பிரச்சினை. ‘அவன் – அது = அவள்’ பொலிடிகலி கரெக்டாக எழுதப்பட்ட கதை.

-oOo-

நாவல் என்பது கற்பனைக்கும் அனுபவத்திற்கும் சம பாதி இடம் கொடுத்து உருவாக்குவது. படைப்பு என்னும் பகுதியில் ‘நிஜத்தில் இப்படி எல்லாம் நடக்குமா?’ என்று வியக்கவைக்கும் நிகழ்வுகளை நம்புமாறு படைத்து; வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட சம்பவங்களின் உணர்ச்சி வெளிப்பாட்டை போதிய அளவில் ரீமிக்ஸ் செய்தால் சுவாரசியம் + இலக்கியம் தயார்.

இந்த நாவலில் தகவல் கொட்டிக் கிடக்கின்றது. ஆனால், உப்புசப்பற்ற பாணியில் அல்லாமல் உரையாடலாக வெளியாவதால் உறுத்தாமல் மனதில் பதிகிறது. கூவாகம், ஆணுறுப்பு நீக்குதல், மலஜலம் கழித்தல் போன்ற அனுதின காலைக்கடன் சங்கதி, செக்ஸ் ஆகிய எல்லாமே உண்டு. அவை எழுதுவதற்கு தனி லாவகம் தேவை. பல ஆக்கங்கள் எழுதிய அனுபவமிக்க எழுத்தாளரின் நடை இங்கேயும் கதையெங்கும் விரவி இருப்பது, ‘இதுதான் முதல் நாவலா!’ என்று அதிசயிக்க வைக்கிறது. (முன்னுரையிலோ, ஆசிரியர் உரையிலோ இது பாலபாரதியின் முதல் கதை என்று குறிப்பு எதுவுமில்லை).

லிவிங் ஸ்மைல் வித்யாவின் சுயசரிதையைப் படித்தவுடன் இதை உடனடியாக படிக்க எடுத்தேன். இருப்பினும், வாசிப்பு சுவைக்கு எந்தவிதக் குறையும் இல்லாத விறுவிறுப்பான நடை கிடைத்தது. வித்யாவின் விவரிப்பில் சில நடைமுறைகள், விஷயங்கள் தெரிய வந்தால், கிட்டத்தட்ட அதனில் இருந்து மாறுபட்ட தகவல்களும் செயல்பாடுகளும் பாலபாரதியின் கதையில் கிடைக்கிறது.

வித்யாவின் வாழ்க்கை வரலாற்றுக்கும் இந்தப் புனைவுக்கும் ஒற்றுமை நிறைய உண்டு. பம்பாய் செல்வது, கடை கேட்பது (பிச்சை எடுப்பது), கல்லூரி படித்தவர்கள், ஆணாக வளர்ந்து திருநங்கை ஆனவர்கள் என்று நிறைய சொல்லலாம்.

இரண்டு புத்தகத்தையும் ஒருங்கே வாசித்தால், திருநங்கை குறித்த குத்துமதிப்பான பரிமாணம் கிடைக்கும்.

-oOo-

ஏன் குத்துமதிப்பு மட்டும்தான்?

ஏன் ஒருவர் திருநங்கை என்று உணரப்படுகிறார்? அறிவியல் பார்வை தந்திருக்கலாம். புனைவு என்பதற்குரிய உரிமம் எடுத்துக் கொண்டு, ஆண் மகவு மட்டுமே நிறைந்த குடும்பத்தில் கடைக்குட்டியாக பிறந்ததாலோ என்னும் சந்தேகம் தெளித்து, அத்தைகள் சீராட்டா, அடி உதையா என்று குழப்பி, இறுதியாக (ஆசிரியர் விருப்பப்பட்டால்) ‘இவை எதுவுமே இல்லையாக்கும்’ என்று சுயம் அறிதலை விரிவாக தந்திருக்க வேண்டும்.

கோமதியுடன் கூட வசிப்பவரில் பலர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, அதிகம் பள்ளிப்படிப்பு முடிக்காதவர்களாக சொல்லப்படுகிறார்கள். அவர்களில் எவரோ ஒருவரையோ, தனம் போன்ற மூத்த தலைமுறை உறுப்பினர்களையோ, விவரித்து, சம்பவங்களை இரத்தமும் சதையுமாக ஆசிரியர் கொணர்ந்திருக்கலாம். இதன் மூலம், மாறுபட்ட இரு சூழல் கிடைத்திருக்கும்.

-oOo-

திருநங்கையின் பல்வேறு சங்கடங்களையும் மனக்குமுறல்களையும் ‘அவன்-அது = அவள்’ முழுவதுமாக கொடுத்துவிடும் என்று எதிர்பார்க்க இயலாது. இவ்வாறு யோசிக்க வைப்பது பாலாபாரதிக்கு கிடைத்த மிகப்பெரிய உச்சம். ஆசிரியனுக்குக் கிடைத்த வெற்றி!

திருநங்கை, தற்பால் நாட்டம் கொண்டோர் படைப்புகளில் தமிழில் பாலபாரதியின் இந்தப் படைப்புதான் சமகால முதல் முயற்சியாக முன்னோடியாக இருக்கிறது. தலித் இலக்கியத்திற்கு ஒப்பான தீவிரமான களத்தில் இயங்கும் அதே சமயத்தில் — உப்புசப்பற்ற விவரணைகளை மட்டும் கொண்டு வாசகனை அயர்வுற வைக்காமல், விறுவிறுப்புடன் ரசனை குன்றாமலும் இருக்கிறது.

-oOo-

எனினும், சங்கர் (பக். 29) என்று அறிமுகமாகும் சகோதரன் சேகர் (பக். 71) ஆகிவிடுகிறான். சொல்லப் போனால், கோமதியின் குடும்பம் குறித்த அறிமுகமாக விளங்கும் அத்தியாயமே அவசரகதியில் விவரணப்படம் போல் சுறுக்கென முடிகிறது. இது கோமதியின் கதை என்றாலும், ‘ஏன் அவர் இவ்வாறு உணர்ந்து கொண்டார்’ என்பதற்கு உடலியல் கூறுகள் தவிர சமூகவியல் பிரச்சினைகளும் காரணமாக இருந்திருக்கலாம் என்னும் சங்கேதத்தை ஆசிரியர் இங்கு உருவாக்கி இருக்க வேண்டும்.

இதே போல் ஆறாம் வயதில் இருந்து கூடப் படிக்கும் சரவணணும் அதிரடியாக கல்லூரியில்தான் (பக். 74) அறிமுகம் ஆகிறார். பால்ய வயதில் இருந்தே கோபியை தெரிந்தவர் என்னும் அழுத்தம் தேவைக்குரிய வலிமையுடன் வெளியாகவில்லை.

தற்பால் நாட்டம் கொண்டவனாக சித்தரிக்கப்படும் அன்பு, ஆண்குறி கண்டவுடன் சுருங்குகிறான் (பக். 157) என்பது நம்ப இயலவில்லை. உறவின் போது பயன்படுத்தபடும் செக்ஸ் பொம்மைகள், கட்டிப்போடுதல், அடிமைப்படுத்தல் போன்ற பல்வேறு முறைகளில் ஏதேனும் ஒன்றைக் காட்டிக் கூட அன்பை வில்லனாக மாற்றி இருக்கலாம். அல்லது, அவனின் மனக்கிடக்கைக்கு வேறு ஏதாவது இடைநிகழ்வையாவது புகுத்தி நம்பகத்தன்மையை கூட்டியிருக்கலாம். ஓரினப் புணர்ச்சியாளர்களுக்கு ஆணுறுப்பு மிகவும் மகிழ்வளிக்கக் கூடியதாக இருப்பதால்தான் தற்பால் நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

சில இடத்தில் பொதுமையாக்கலில் விவரிப்பு துவங்குவதையும் தவிர்க்கலாம். (பக். 74)

பேராசிரியர்களை சமாளிப்பது இன்னும் கஷ்டம். ஒரு பேராசிரியர் இவனைக் கண்டாலே அசடு வழிவதும்… அன்பாக நடந்து கொள்கிறேன் என்று இவனை இடித்தபடி நிற்பது, தடவுவது போன்ற தொல்லைகளைக் கொடுத்து வந்தார்.

இதே போல் காவல்துறையினர் மோசமாக நடந்துகொள்ளும் இடத்திலும், அந்த இடத்தின் போலிசின் அசிங்கத்தை வீரியத்துடன் வெளிப்படுத்தி இருக்கலாம். நிர்வாணம் செய்து கொள்ளும்போது வாசகனுக்கு பயம் கலந்த மரியாதை கிடைக்கிறது. ஆனால், காவல்நிலையத்தில் அத்துமீறல் நிகழும்போது அசிங்கம் உண்டாக்கும் வேதனைக்கு பதில் சினிமா காட்சி போல் பற்றற்ற விவரிப்பாக முடிகிறது.

-oOo-

பால்குழப்பத்திற்கு உள்ளானோர் குறித்தும், தற்பால் விருப்பமுடையவர் குறித்தும், திருநங்கை குறித்தும் இதுவரை எத்தனையோ விதவிதமான திரைப்படம் பார்த்திருக்கிறேன். அவற்றைப் பார்க்கும்போது இணையத்தில் மேய்வது போன்ற மகிழ்வு கிடைக்கும். தகவல் கிடைக்கும். பச்சாதாபம் வரும். பரிதாபம் தோன்றும். பதிவுக்கு மேட்டர் கூட கிடைக்கும். இதைவிட மோசம்: அவர்கள் உலகம் முழுமையாகப் புரிந்தது போன்ற அதிநம்பிக்கை உண்டாகும்.

இந்த நாவல் ஒரு வாசகனை அவர்களின் உண்மையான உலகுக்குள் அழைத்துச் செல்கிறது. ‘உனக்கு ஒன்றுமே தெரியாதே ஐயா!’ என்பதை உணர்த்தியது. திருநங்கையின் செய்கைக்கு பின்னுள்ள முஸ்தீபுகளை புலப்படுத்தியது. அரவாணிகளின் செயல்பாட்டுக்குப் பின்னேயுள்ள அர்த்தங்களை உறைக்க வைத்தது. அதற்காக பாலபாரதிக்கு நன்றி.

பாலபாரதிக்கு இது முதல் நாவல். அடுத்த முறை இது போன்ற சிறிய தடுக்கல்களை நீக்கி, புதிய களத்தில் தமிழிலக்கியத்தின் மைனாரிட்டிகளை தாழ்த்தப்பட்டவர்களை கண்டுகொள்ளப் படாத சமூகத்தை அறிமுகமும் ஆழ்பரிணாமமும் தருவார்.

நாவலைக் கொணர்ந்தளித்த வெட்டிப்பயலுக்கு சிறப்பு நன்றி.

சுஜாதா – தமிழ் பாலின்ட்ரோம்

பாலிண்ட்ரோம் (Palindrome) என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இடம்வலம் வலம் இடமாகப் படித்தால் மாறாத வார்த்தைகள் வாக்கியங்கள்.

தமிழில்

  • மோருபோருமோ
  • தேருவருதே
  • விகடகவி

இவை மூன்றைத் தவிர வேறு உதாரணங்களை நான் பார்த்ததில்லை.

ஆங்கிலத்தில் இவைகளை அமைப்பது சுலபம். New American Writing பத்திரிகையில் ஒரு கவிதை வரிகள் அனைத்தும் ‘பேலின்ட்ரோம்’ வடிவத்தில் இருந்தன. உதாரண வரி:

But no repaid diaper on tub!

தமிழில் இவ்வாறு நீண்ட சொற்றொடர்கள் அமைப்பது எழுத்தாளனாகிய எனக்கு சவாலாக, ஒரு நல்ல பயிற்சியாக அமைந்தது.

  1. வா தாத்தா வா!
  2. மாவடு போடுவமா?
  3. மாலா போலாமா?
  4. யானை பூனையா?
  5. யானையா பூ யானையா?
  6. போ வாருவா போ.

கொஞ்சம் சந்திப்பிழைகளை அனுமதித்தால்:

  1. மாமர சில சிரமமா?

முழுசாக அர்த்தம் வேண்டும் என்று கட்டாயமில்லாவிட்டால் மிக நீண்ட வாக்கியங்கள் அமைக்க இயலும்

  1. ஓர் பாயை தின வானதியை பார் ஓ!
  2. துவள் கொடி மரவுரி பரிவிர மடிகொள்வது!

வாசகர்கள் முயற்சி பண்ணி எனக்கு எழுதினால் இந்தப் பகுதியில் வெளியிடுகிறேன்

மே 1990

முந்தைய கணையாழி கடைசிப் பக்கங்கள் (நன்றி: உயிர்மை பதிப்பக வெளியீடு)

The following poem, which Lydia presented in class, was based on an assignment to create your own form. Maxine Chernoff and I (Paul Hoover's Poetry Blog: Lydia Tomkiw) published it in one of the first issues of New American Writing, and it was also included in the first edition of The Best American Poetry [1988], ed. David Lehman and John Ashbery. The poem consists entirely of palindromes, some of which she must have created to suit the poem, for instance the next to last line:

Six of Ox Is

O, no iron, o Rio, no
red rum murder;
in moon: no omni
devil-lived
derision; no I sired
Otto,
a
drab bard,
Bob,
but no repaid diaper on tub.
O grab me, ala embargo
emit time,
Re-Wop me, empower
Eros’ Sore
sinus and DNA sun is
fine, drags as garden if
sad as samara, ruff of fur, a ram; as sad as
Warsaw was raw.

நான் கடவுள்: சென்சார் விமர்சனம் + கதை

இந்து மதத்திற்கு எதிரான படமா?

முந்தைய நான் கடவுள் பதிவு

இளையராஜாவின் இசைக்கூடம். திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது நான் கடவுள். படத்தை ராஜா பார்க்க, ராஜாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார் பாலா. டென்ஷன்…டென்ஷன்… ஒவ்வொரு விரல் நகமாக கடித்துத் துப்பிக் கொண்டிருக்கிறார் பாலா! படம் முடிந்ததும் விருட்டென்று எழுந்து தனது அறைக்குள் போய்விடுகிறார் இசைஞானி. அவ்வளவுதான், பல மணி நேரங்கள் யாரையுமே அவர் சந்திக்கவில்லை பாலா உட்பட!
bala-arya-movies-ilaiyaraja-films-reviews-naan-kadavul-stills-029
படத்தை பார்த்து பிரமித்து போயிருக்கும் சென்சார் போர்டு உறுப்பினர் ஒருவரிடம் பேசினோம். “சண்டைக்காட்சிகள் மிகவும் அச்சமூட்டும் படியாக இருந்ததால் யு/ஏ சர்டிபிகேட் கொடுத்தோம்.”

“காஞ்சிபுரம் அருகில் குடியிருக்கும் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. இந்த குழந்தை உங்களிடம் வளர்ந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்று ஜோதிடர் சொல்ல, குழந்தையை காசியில் விட்டு விட்டு வருகிறார்கள். அவன் அங்குள்ள சாமியார்களிடம் வளர ஆரம்பிக்கிறான். பாஷையிலிருந்து அனைத்து பழக்க வழக்கங்களையும் சாமியார்களிடம் கற்றுக் கொள்கிறான் சிறுவன். அவனை வாலிப வயதில் மீண்டும் சந்திக்கிறார் அவனது அப்பா. பிள்ளை இப்படி இருக்கிறானே என்ற அதிர்ச்சியில் மறுபடியும் சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். இங்கு வருபவன், குழந்தைகளை கடத்தி முடமாக்கி பிச்சையெடுக்க வைக்கிற வில்லன்களுக்கு தானே கடவுளாகி தண்டனை கொடுக்கிறான். இதில் பூஜாவும் குழந்தை பருவத்தில் கடத்தி வரப்பட்டு வில்லன்களால் கண்கள் குருடாக்கப்பட்ட பெண். அவளையும் அந்த கூட்டத்திலிருந்து மீட்கிறான் என்று முடிகிறது கதை. இதில் வருகிற க்ளைமாக்சை நான் சொல்வது தர்மமில்லை” என்று முடித்துக் கொண்டார் அந்த சென்சார் போர்டு உறுப்பினர்.

bala-arya-movies-kasi-varanasi-reviews-naan-kadavul-stills-009
நர மாமிசம் சாப்பிடுபவர்களை கொடூரி என்பார்களாம். இந்த கொடூரியாகவும் ஒரு காட்சியில் வருகிறாராம் ஆர்யா. பல்லாயிரக்கணக்கான சாமியார்கள் ஓரிடத்தில் கூடும் கும்பமேளா நிகழ்ச்சியில், எவ்வித ஆர்ப்பாட்டமும் செய்யாமல் கேமிராவோடு ஊடுருவி பல காட்சிகளை எடுத்திருக்கிறார்களாம்.

கடந்த மூன்று வருடங்களாக நான் கடவுளை உருவாக்கி வருகிறார் பாலா. ஆனாலும், படப்பிடிப்பு நடந்தது மொத்தம் 369 நாட்கள்தானாம். பாலா, பூஜா தவிர்த்து படத்தில் 50க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இவர்களில் பலர் நிஜமான மன நோயாளிகள். ஊடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்கள். இவர்களை நடிக்க வைப்பதற்கு பெரும் பிரயத்தனம் எடுத்துக் கொண்டாராம் பாலா. இதன் காரணமாகவும், பெரிய குளம் ஏரியாவில் எப்போதாவது தலை காட்டும் வெயிலாலும்தான் படப்பிடிப்பு தாமதமானது என்கிறார்கள் யூனிட்டில்.
bala-arya-movies-previews-films-reviews-naan-kadavul-stills-018
சரி, முதல் பாரா சஸ்பென்சுக்கு வருவோம். இளையராஜா பாலாவிடம் என்னதான் சொன்னார்? ஒரு முழு நாள் அமைதிக்கு பிறகு அவர் சொன்னது இதுதான். “என்னாலே பேசவே முடியலே. இந்த படத்தை உலகமே கொண்டாட போவுது பாரு…!”
bala-arya-movies-watch-downloads-reviews-naan-kadavul-stills-020
நன்றி: தணிக்கை துறையின் விமர்சனம்

மறுமொழிவதில் எத்தனை வகை உண்டு?

நன்றி: In a Word – The Atlantic (January/February 2009)

முதலில் ‘Get A Life’ () ‘போங்கடா! போய் பிள்ளகுட்டிங்கள படிக்க வைங்கடா’ பதிலடிக்காரர் அறிமுகம்:

  • இணையத்தில் தங்களுக்கு உவப்பில்லாத இடங்களில் வலம்வருவது வாடிக்கை.
  • வித்தியாசமான கிண்டல் கூடிய உவமை நிறைய கைவசம் வைத்திருக்கவும். உதாரணம்: ஊசி நுனியில் யானையைக் கூட நுழைத்துவிடலாம். ஆனால், உங்களுக்கு புத்தியை புகட்ட முடியாது.

gotcha-get-a-life-internet-debates-comments-atlantic-word-fugitives-wide

அடுத்து ‘Gotcha‘ () ‘புரியல; தயவு செய்து விளக்கவும்’ கண்டுபிடிப்பாளர் குணாதிசயம்:

  • அடுத்த பிறவியிலும் இலக்கண ஆசிரியராக மறுஜென்மம் கிடைக்காத இவருக்கு சந்தி, பால் பொருத்தம், பன்மை ஒழுங்கமைவு மட்டுமே முக்கியம்.
  • ‘ஈழம் பிண்ணனி சரித்திரம்’ கட்டுரையில் தமிழீழம் குறித்த தகவலை விட்டுவிட்டு, “பிண்ணனி சரியில்லையே; பின்னணிதானே வரும் என்று கூட அறியாத தாங்கள்…” என்று தன்னுடைய மொத்த மறுப்பையும் முடித்துவிடுவார்.

போய் வா பிள்ளையாண்டானே – புஷ் வருடங்கள்

நன்றி: Then and Now – The Atlantic (January/February 2009)

bush-map

நான் வித்யா: புத்தகம்

ஏற்கனவே நிறைய விமர்சனம் படித்து இருந்தாலும், பால் மாற்றிக்கொண்ட சிலரோடு பழகி இருந்தாலும், நான் சரவணன் வித்யா, எடுத்தவுடன் கீழே வைக்க முடியாத அளவு பதைபதைப்பான நடையுடனும் வீரியத்துடனும் எழுதப்பட்டிருக்கிறது.

அவசியம் வாசிக்கவும்.


ஆசிப் மீரான்

‘கோத்தி’யாக உலாவரும் சரவணன் தனது ‘நிர்வாணத்து’க்காக ஆந்திரா செல்லும் பகுதியிலிருந்து துவங்கும் அவரது சுயசரிதையில் அவருக்கேற்பட்ட அவமரியாதைகள், துணிச்சலோடு செயல்பட்ட தருணங்கள், அதையும் மீறி காரணமின்றி மிதிக்கப்பட்ட தருணங்கள், எதிர்கொண்ட சவால்கள், உதவிய நண்பர்களின் மீதிருக்கும் அன்பு, தங்களில் ஒருத்தியாக ஏற்றுக்கொண்ட திருநங்கை தோழிகள், திருநங்கைகளின் எழுதப்படாத சட்டம், திருநங்கைகளின் நானிகள், திருச்சி, சென்னை, பூனா, ஆந்திரா, மதுரை சென்னை என்று அலைக்கழித்த வாழ்க்கையில் கடந்து போன சம்பவங்கள், சந்தித்த அவலங்கள் என்று உயிர்வலியைச் சொல்லும் புத்தகம் இது.

“சாத்தான்”குளத்து வேதம்


இகாரஸ்

வாசித்ததும் மனசு கனத்துப் போனது என்று சொன்னால் அது க்ளிஷே ஆகப் பார்க்கப் படுமோ என்று தோன்றுகிறது.

கணிப்பொறி அறிவியலில் இளநிலைப் பட்டமும், மொழியியல் பாடத்தில் முதுகலையும் படித்துவிட்டு, நாடகத்துறையில் ஈடுபாடு கொண்ட ஒருவர், தன்னுடைய ஆண் என்கிற அடையாளத்தைத் துறக்க மேற் கொண்ட முயற்சிகளையும், துறந்த பின்னர் சமூகம் அவரை எதிர் கொண்ட முறைகளையும், சந்தித்த வன்முறைகளையும், நிராகரிப்புகளையும் உள்ளடக்கி எழுதியிருக்கும் இந்த தொகுப்பு, தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் ஒரு மைல்கல்.

Prakash’s Chronicle 2.0


கிருத்திகா

மிகவும் சுயம் சார்ந்த உணர்ச்சிகளையும் அதற்கான ஜீவ மரணப்போராட்டத்தையும் எந்த வித சுய பச்சாதாபமும் இன்றி மிகத்தெளிவாக அதே சமயம் புனைவுகளின் சாயல்களின்றி ஓர் கம்பீரமான் எழுத்து நடையில் படைத்துள்ளார். “Non fiction/Autobiography” என்ற பிரிவின் கீழ் இந்தப்புத்தகம் தொகுக்கபட்டிருந்தாலும், இது அவரது சொந்த வாழ்க்கையாக மட்டும் கருதப்படாமல் மொத்த திருநங்கைகளின் ஒரு வாழ்வியல் போராட்டத்தை விளக்கும் விதமாக அமைந்திருப்பது இந்த புத்தகத்தின் வெற்றிக்கு ஒரு வித்து.

வடிகால்


பத்ரி

இதை எழுதும்போது வித்யா எத்தனை மனச்சங்கடங்களை அனுபவித்திருப்பார் என்பதை வாசிக்கும்போது என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

திருநங்கைகள் குறித்து நமக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றுமே இல்லை என்று நிராகரித்துவிடுகிறது இந்தப் புத்தகம். கஷ்டம் என்றும் துன்பம் என்றும் துயரங்கள் என்றும் ஆண்களும் பெண்களும் சொல்வதெல்லாம் உண்மையில் கஷ்டங்கள்தானா, துன்பங்கள்தானா என்று வாசித்ததும் நம்மைக் கேட்கவைக்கிற தன்மை இந்நூலின் முக்கிய அம்சம்.

எண்ணங்கள்


சுரேஷ் கண்ணன்

சு.சமுத்திரத்தின் ‘வாடாமல்லி’ என்கிற நாவல். ‘பெரும்பாலும் ஒரு ஆணுக்குள் சிறைப்பட்டிருக்கிற பெண்மைதான் ஒரு காலகட்டத்தில் விழித்தெழுந்து ஆண்மையை மறுதலித்து உச்சநிலையில் திருநங்கையாக உருமாற வைக்கிறது’ என்கிற அரைகுறையான புரிதலே அப்போதுதான் ஏற்பட்டது.
:::

‘என்னைத் தவிர எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்களோ’ என்கிற தாழ்வுணர்ச்சி பெரும்பாலோருக்கு தோன்றுவதைப் போலவே எனக்கும் அவ்வப்போது தோன்றுவதுண்டு. துக்ககரமான மனநிலையில் ‘எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறேன்” என்று வாழ்க்கையை திரும்பிப்பார்க்கும் போது சுயபரிதாபம் மனமெங்கும் நிறைந்து வழியும்.

பிச்சைப்பாத்திரம்


புத்தகப்பார்வை

நான்கு பேர் வரிசையாக ஓரிடத்தில் அமர்ந்திருந்தார்கள். அவர்களுள் மூன்று பேர் வாட்டசாட்டமாக, விறைப்பாக இருந்தார்கள். ஒருவன் மட்டும் கொஞ்சம் சாது போல் தெரிந்தான். பொதுவாக முரடாகத் தோற்றமளிக்கும் ஆள்களைத் தவிர்ப்பது என் வழக்கம். எனவே, அந்த மூவரைத் தவிர்த்துவிட்டு நான்காவதாக இருந்த அந்தச் சாது நபரிடம் போய்ப் பிச்சை கேட்டேன்.

தந்தார். இரண்டு ரூபாய். அவர் தமிழர்தான். எனவே, இயல்பாக ஓர் உரிமை எடுத்து ‘என்ன தமிழ்க்காரரே, ஒரு அஞ்சு ரூபா தரக்கூடாதா?’ என்று கேட்டேன்.

நான் வாக்கியத்தை முடித்திருக்கவில்லை. சற்றும் எதிர்பாரா விதத்தில் பளாரென்று கன்னத்தில் ஓர் அறை விழுந்தது. நிலை குலைந்து போனேன்.


இறுதிப் பகுதி

எனக்குத் தெரிந்து இந்தியாவில் இயங்கும் ஒரு தொண்டு நிறுவனமும் திருநங்கைகள் பிச்சை எடுப்பதிலிருந்தோ பாலியல் தொழில் புரிவதில் இருந்தோ மீள்வதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுத்ததில்லை. ‘நீ பாலியல் தொழிலே செய்; ஆனால் பாதுகாப்பாகச் செய்’ என்கிற போதனை ஒருவர் வாழ்வில் என்ன மறுமலர்ச்சியை உண்டாக்கும் என நினைக்கிறீர்கள்? வெறும் அபத்தம்.
:::
திருநங்கைகளில் பலர் விநோதமாக நடந்துகொள்வதும், உரக்கப் பேசி நடுவீதியில் தர்ம சங்கடம் உண்டாக்குவதும், பாலியல் தொழிலுக்கு வலிய அழைப்பதும், ஆபாசமாக பேசி அருவருப்பூட்டுவதும், முற்றிலும் அவர்களின் தற்காப்புக்காக மட்டுமே என்று நான் சொன்னால், தயவு செய்து நம்புங்கள். அதுதான் உண்மை.

பாதுகாப்பற்ற சமூகத்தில், எங்களுக்கான குறைந்தபட்ச பாதுகாப்பை நாங்கள் இவ்வாறெல்லாம் செய்துதான் உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. உடல் வலிமை மிக்க முரட்டு ஆண்கள் வம்புக்கு வந்தால், எங்களால் எதிர்த்து நிற்க முடியாது. பணிந்துபோகவும் விருப்பமில்லாவிட்டால், அருவருப்புணர்வை உருவாக்கி அவர்களை விலகிச் செல்ல வைப்பதே எங்களுக்குத் தெரிந்த வழி.
:::

விளிம்புநிலை பிரதிநிதி ஒருவரின் நூலை பதிப்பிக்க முன்வந்ததற்காக கிழக்கை நாம் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.


பேட்டி

மனதால் ஏற்றுக் கொண்டாலும், வெளிப்படையாக ஏற்றுக்கொள்வதற்கு சமூகமும், சமூக நியதிகளுமே காரணமாக உள்ளது. முதலில் வீட்டில் ஒரு திருநங்கை இருப்பது அவ்வீட்டிற்கான அவமானசின்னமாக கருதப்படுகிறது. இது உறவுகள் மத்தியில் தலைகுனிவை ஏற்படுத்துகிறது. சகோதர/சகோதரிகளின் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு தடையாகிறது. உதாரனத்திற்கு சொல்வதென்றால், ஒரு குடும்பத்தில் திருடன், கொலைகாரன் போன்ற குற்றவாளி இருந்தால் எத்தகைய இருக்கமான சூழல் நிலவுமோ அதைவிட மோசமான விளைவுகளை எங்கள் குடும்பம் சந்திக்க நேர்கிறது. மட்டுமன்றி தன்னால் தன் குடும்பத்திற்கு எந்த லாபமும் இல்லை ஆனால், அவமானம் மட்டும் நேர்கிறது என்ற குற்றவுணர்வும் எங்களை வெளியேற்றுகிறது.

சட்டமும், சமூகமும் ஏற்றுக் கொண்டால் குடும்பம் தானாகவே எங்களை ஏற்றுக் கொள்ளும்.

பார்வைகள்: கேப்பங்கஞ்சி with கவிதா


ஆழியூரான்

26 வயதென்பது வாழ்வை தொடங்க வேண்டிய வயது. சுய சரிதை எழுத வேண்டிய வயதல்ல. ஆனால், இதற்குள் லிவிங் ஸ்மைல் கடந்து வந்திருக்கும் வலி மிகுந்த பாதை, ரணங்களை மட்டுமே அவருக்கு வழங்கியிருக்கிறது.
:::
‘கண்ணாடி எல்லோருக்கும் அவரவர் ஸ்தூல உருவத்தை மட்டுமே பிரதிபலிக்க, திருநங்கைகளுக்கு மட்டும் அவர்களின் மனத்தை, உள்ளே கொந்தளிக்கும் உணர்வுகளை, உள்ளார்ந்த அவர்களுடைய பெண்மையை ஒரு சித்திரமாக மாற்றி கண்ணெதிரே காட்டும். இதை மற்றவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது. உங்களுக்கு முகத்தையும், எனக்கு முகத்துக்குப் பின்னால் உள்ள மனதையும் காட்டும் கருவி அது. எனக்கு என்றால் எங்களுக்கு.. எங்கள் எல்லாருக்கும்.!’

நடைவண்டி


லிவிங் ஸ்மைல் சுயசரிதையில் என்னை மிகவும் பாதித்த சில வாழ்க்கைச் சிதறல்:

எல்லாவிதமான கஷ்டங்களையும் சகித்துக் கொண்டு விடலாம். எப்போதாவது நாம் ஓர் அனாதை என்று தோன்றிவிடுமானால் பெரிய பிரச்னை. சுய இரக்கம் ஒரு வலுவான விஷம். [பக். 135]

திருநங்கைகளிடம் வியாபாரம் செய்தால் என்ன? பொருள் முக்கியமா? விற்போர் முக்கியமா? இது என்ன மனோபாவம் என்று எனக்குப் புரியவே இல்லை.

கைதட்டிப் பிச்சை எடுத்தபோது கூடக் காசு தர முன் வந்தவர்கள், வியாபாரம் என்று வந்தபோது, வேறுபக்கம் திரும்பிக் கொண்டார்கள். ஒரு நாளைக்கு ஒரு முரையாவது ‘உழைச்சு திங்க வேண்டியதுதானே! போங்க போங்க’ என்று விரட்டிய மகராசன் யாரும் அந்த ரயில்களில் ஏனோ வரவில்லை. [பக். 153]

யோசித்துப் பார்த்தால் என் பிரச்னைகள் எல்லாவற்றுக்கும் நானேதான் காரணமாக இருந்துவந்திருக்கிறேன். நானே விரும்பித் தேடிக் கொண்டவைதான் எல்லாம். இன்னொருத்தரைக் குறை சொல்ல முடியாது.

ஆனால், என் தேவைகள், என் இருப்பு, என் வாழ்க்கை அடுத்தவர்களுக்குப் பிரச்னை தரக்கூடியவையாக அமைவதற்கு நானா காரணம்? புனே எனக்குப் பிடித்திருந்தது. முக்கியமாக அங்கு எனக்கு கிடைத்த சுதந்திரம். ஒரு பெண்ணாக சுதந்தரமாக வலையவர முடிந்ததில் இருந்த ஆனந்தம். ஆனால் அங்கு நான் பிச்சை எடுக்கவோ, விபசாரம் செய்யவோ மட்டும்தான் முடியும். இரண்டுமே எனக்குப் பிடிக்காதபோதுதான் புனேவை விட்டு வெளியேற முடிவு செய்தேன். [பக். 164]

அவரது பழைய சிறு லெண்டிங் லைப்ரரி இப்போது அதிநவீனமாகிவிட்டிருந்தது. உலகம் ரொம்பத்தான் வேகமாக முன்னேறுகிறது என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அவரால்தான் என் முடிவை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. [பக். 168]

இது என்ன வாழ்க்கை என்று புரியவேயில்லை. எல்லாமே நிச்சயமற்றதாக இருந்தது. வேலை கிடைக்கலாம். கிடைக்காமல் போகலாம். தங்க ஓரிடம் கிடைக்கலாம். அதுவும் கிடைக்காமல் போகலாம். ஊர் உறவுகள், சொந்தங்கள் அனைவரும் இருந்தாலும் இல்லாதது போலவே சமயத்தில் தோன்றுகிறது. [பக். 179]

“போற வர்ற வழியில யாராவது உங்களைக் கிண்டல் பண்ணா எப்படி எடுத்துக்குவீங்க?”
சிறிய புன்னகையோடு ஆரம்பித்தேன். “ஒண்ணும் பிரச்னை இல்லை சார். அதெல்லாம் பழக்கமானதுதான். இப்பக்கூட வர்ற வழியில ஆட்டோ ஸ்டாண்ட்லேருந்து கிண்டல் சத்தம் கேட்டுது. நான் நேரா அவங்ககிட்டயே போயி ஆட்டோ வருமான்னு கேட்டேன். உடனே சைலண்ட் ஆயிட்டாங்க. ‘எங்க மேடம் போகணும்’னு மரியாதையாத்தான் கேட்டாங்க. எந்தப் பிரச்சினையும் இல்லாமப் பத்திரமா கொண்டுவந்து இறக்கி விட்டுட்டான். நாம நடந்துக்கற விதத்துலதான் சார் இருக்கு. அதையும் மீறி கிண்டல் பண்றவங்க எல்லா இடத்துலயும் இருக்கத்தான் செய்வாங்க. அதுக்கெல்லாம் கவலைப்பட்டுக்கிட்டிருக்க முடியாதே சார்? சமாளிச்சித்தான் ஆகணும்.” [பக். 190]

எனது உரிமை. என் பெயரை நான் மாற்றிக்கொள்வதற்கான உரிமை. அதற்காக த.எ.அ. துறையிலிருந்து, → தாலுகா அலுவலகம், → வழக்கறிஞர் அலுவலகம், → மதுரை அரசு மருத்துவமனை என்று அலைந்து அலைந்து அதிகபட்ச அலுவலக விடுமுறையும் எடுத்தாயிற்று. நியுமராலஜி, மதமாற்றம், பெயர் ராசிக் காரணங்களுக்காக ஒரே மாதத்தில் இந்த தேசத்தில் ஒருவர் தம் பெயரை மாற்றிக் கொண்டுவிடலாம்.எத்தனையோ அரசியல் தலைவர்களே மாற்றிக் கொள்ளவில்லையா? ஆனால் என் தேவைக்காக என் உரிமைக்காக என் பெயரை நான் மாற்றிக்கொள்ள விரும்பியபோது அதற்காக ஒன்றரை வருடங்கள் அலைக்கழிக்கப் பட்டேன். [பக். 208]

பெண்களை இழிவாகக் கருதும் சமூக அமைப்பில், ஆணாகப் பிறந்த நபர் பெண்ணாக மாறுவதென்பது ஆண்வர்க்கத்துக்கும், ஒட்டுமொத்த ஆண்மைக்குமான அவமானம் என்ற தட்டையான ஆணாதிக்க சிந்தனையே திருநங்கைகளைப் பெண்ணாக ஏற்கமுடியாமைக்குக் காரணமோ? ஆணிடம் அடிமைப்பட்டே வாழ்ந்து பழகிவிட்ட சில பெண்களும் இதே சிந்தனைக்குப் பழகிவிடுகிறார்கள். [பக். 212]


வாசக அனுபவம்:

  • ‘நான் யார்?’ என்னும் தேடலை அப்படியே பகிர்ந்து கொள்வதில் அனைத்து தமிழ் எழுத்தாளர்களுக்கும் பிரச்சினை உண்டு. லிவிங் ஸ்மைல் விதிவிலக்காக தன் உள்ளத்தை அப்படியே சொல்கிறார்.
  • வறுமையில் வாடுவோர் படும் கஷ்டமும் உண்டு. படிப்பிற்கு பெரும் முக்கியத்துவம் தரும் நடுத்தர வர்க்க ஆசையின் பிரதிபலிப்பும் கிடைக்கிறது. இதை எல்லாம் புனைவில் படித்து சுரணை மங்கிப் போன சமயத்தில் சுயசரிதை என்பதே சுளீர் என்று உறைக்கிறது.
  • விதி‘ திரைப்படத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததற்காக பூர்ணிமா (ஜெயராம்) பாக்யராஜிடம் தர்மசங்கடமான கேள்வி விழுவதற்கு — பார்வையாளர் வருத்தப்பட்டு கொஞ்சம் போல் முன்னேறியும் ஆகிவிட்டது. எப்போது அந்த சினிமா, அன்றாட வாழ்க்கையில் அரவாணிகளை நோக்கி ஈவிரக்கமற்ற வினாக்களைத் தொடுப்பதை எல்லாம் திரைக்கதை ஆக்கும்?
  • இன வரைவியல் என்று ஆவணப் படம் போல் மூன்றாம் மனித ஆய்வுப் பார்வை அல்லாத, நிசமாகவே நாமறிந்த ஒருவரின் துன்பங்களையும் மனவோட்டத்தையும், ஆசாபசங்களையும் ஒருங்கே பதியவைக்கிறது.
  • She pulled herself out of the abyss and found her way to stability, but the redemptive narrative isn′t what carries the book. It is Living Smile’s brutal honesty in evaluating her life, introspective dual identity and at times painfully direct memoir of the relationships. Her refreshing penchant for straight talk keeps you reading, even when you are dreading the consequences of her choices.
  • Things I’ve Been Silent About போல் குடும்ப விஷயங்களை ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக பேசுவதற்கு தைரியமும் மனப்பாங்கும் பக்குவமும் வேண்டும். வித்யாவிற்கு எல்லாம் இருக்கிறது. வாழ்த்துகள்!

ஸ்மைல் பக்கம்

ஆதவன்

நன்றி: சந்தோஷ் குரு :: கசாகூளம்

எழுத்து விமர்சகர்:

  • என்னைத் தள்ளுபடி செய்துதான் சிலருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதென்றால் அதை நான் கொடுப்பானேனென்று. பல சமயங்களில் இவர்களுடன் சேர்ந்து நானும் சிரிக்கிறேன்.
  • என் சிருஷ்டி அவருடைய பார்வைக்கு வந்ததும், அவரால் படிக்கப்பட்டதும் விமரிசிக்கப்பட்டதுமே என் அதிர்ஷ்டந்தானே? பாக்கியந்தானே?
  • முத்திரைக்காக ஏதோ ஃபார்முலா இருப்பது போலவும், அந்த ஃபார்முலாவை நான் சாமர்த்தியமாகக் கையாண்டிருப்பது போலவும் ஒரு அர்த்தம் அவர் பேச்சில் தொனித்தது.
  • ஒரு கதையின் சதையும் உயிரும் போன்ற தொனிகளையும் நிறங்களையும் பாவங்களையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்தெடுத்து, உள்ளேயிருக்கும் எலும்புக் கூட்டின் ஜாயிண்ட்டுகளை எண்ணுமளவுக்கு – சங்கேதங்களும் குறியீடுகளும் இல்லாத இடங்களிலெல்லாம் இவை இருப்பதாக நினைத்து மிரளும் அளவுக்கு – இலக்கிய ஞானம் அபரிமிதமாகச் செழித்து வளர்ந்திருப்பது பாராட்டுக்குரிய விஷயந்தான். ஆனால், இத்தகைய ஞானஸ்தானம் பெறாத சராசரி மக்களுக்காகத்தான் நான் கதைகள் எழுதுகிறேன்.

வாசகர்: அபிமானி

  • பல நாட்களாக என் எழுத்துக்களைப் படித்து வந்து, பிறகு திடீரென்று ஒருநாள் என்னை நேரில் கண்டதும் உணர்ச்சிவசப்பட்டவர்களாய் என் கையைப் பிடித்துக் குலுக்கி, சந்தோஷ மிகுதியால் என்ன சொல்வதென்று தெரியாமல் திணறி, விலையுயர்ந்த முத்துக்கள் என் வாயிலிருந்து உதிரப் போகின்றனவென்ற எதிர்பார்ப்பிலும் நம்பிக்கையிலும் என் முகத்தைப் பக்தி பரவசத்துடன் பார்த்து, என்னைத் தவிப்பிலும் சங்கடத்திலும் ஆழ்த்தியவர்கள் இருக்கிறார்கள்.
  • எந்தச் சம்பாஷணையையும்போல இந்தச் சம்பாஷணைக்கும் ஒரு மறுபக்கம் உண்டு. நீங்கள்தான் அந்த மறுபக்கம்; உங்கள் எதிரொலிகளே இச்சம்பாஷணைக்கு முழுமை தரவேண்டும். எத்தனைக்கெத்தனை இந்த எதிரொலிகள் முதிர்ச்சியும் நுட்பமும் மிக்கனவாயிருக்கின்றனவோ, அத்தனைக்கத்தனை நம்மிருவருக்குமே மகிழ்ச்சியும் பயனும் தரக்கூடியதாக இந்த முழுமையின் தேடல் அமையும்.

சகா: அறிந்தவர்களும் தெரிந்தவர்களும்

  • ‘ஓ! சிலர் எவ்வளவு வயதானாலும் முதிர்ச்சி பெறுவதில்லை!’ என்று அவன் என்னைப் பற்றி நினைத்திருக்க வேண்டும். நானும் அவனைப் பற்றி அதையேதான் நினைத்தேன் என்பது அவனுக்குத் தெரியுமோ என்னவோ?

அங்கீகாரம்: வெகுசன ரசனை: பிரபல ஊடகமும் சிறுபத்திரிகையும்

  • பெரிய பத்திரிகைகளுக்கு எழுதுவதால் ஒரு டிஸிப்லின் வருகிறது. ஒரு பொறுப்புணர்ச்சி வருகிறது. ஒரு கட்டத்தில் இந்த டிஸிப்ளின் எழுத்தாளனுக்கு அவசியமென்று நான் நினைக்கிறேன். வரையரையற்ற சுதந்திரம், அளவுக்கு மீறிய செல்லத்தைப் போலத்தான் ஒரு எழுத்தாளனைக் கெடுத்து விடுகிறது.

புனைவு எழுத்தாளர்: கதைசொல்லி

  • என்னிடம் கதையெழுத எளிய ஃபார்முலாக்கள் எதுவும் இல்லை. ஒவ்வொரு கதையையும் மிகவும் யோசித்து, மிகவும் கஷ்டப்பட்டுத்தான் எழுதுகிறேன்.
  • ஒருவிதத்தில் என் எழுத்துக்கள் யாவுமே நுட்பமான, நேர்மையான சம்பாஷணை முயற்சிகளென்றுதான் சொல்லவேண்டும். சாதாரண face to face சம்பாஷணையின் கெடுபிடி, பெளதிக நிர்ப்பந்தங்கள், பரஸ்பர தாட்சண்யங்கள், வேஷங்கள், நமக்கே புரியாத சில குரோத அலைகள் ஆகியவற்றினூடே என் எண்ணங்களைக் கோர்வைப் படுத்த முடியாத ஒரு தாபம் தான் என்னை மீண்டும் மீண்டும் எழுத்துக்கு விரட்டுகிறது.
  • இலக்கியப் பரிணாமம், புதிய மோஸ்தர் என்ற பிரக்ஞை மட்டுமே ஓர் எழுத்தாளனிடம் தூக்கலாக அமைவது எழுத்தாளனுடைய ‘தான்’ அல்லது அகங்காரத்தின் பிரதிபலிப்பே அல்லவா?
  • எனக்கு லேபிள்கள் முக்கியமில்லை. மனிதர்கள்தான் முக்கியம். அவர்களுக்குள்ளே ஆதாரமாக, அடிப்படையாக இருக்கும் சில உணர்வுகளையும் ஞாபகங்களையும் வருடுவதிலும் மீட்டுவதிலும்தான் எனக்கு அக்கறை.

சமூக சித்திரம்: நடுத்தர வர்க்கம்

  • பிறர் மீதும், அவர்கள் சார்பாகத் தன்மீதும், பெரிதுபடுத்தப்பட்ட பிம்பங்களை ஏற்றி, இந்தப் பிம்பங்களே சிறைகளாக மாறுகிற அவஸ்தைக்கு, என் பாத்திரங்கள் போலவே நானும் விதி விலக்கல்ல என்று இதன் மூலம் உணர்ந்து நான் சிரித்துக் கொள்கிறேன்.
  • ஒருவிதத்தில் கீறல்களும், அவற்றின் விளைவுகளுமே வாழ்க்கை என்றுகூடச் சொல்லலாம்.
  • ‘நடக்கிறபடி நடக்கட்டும், நமக்கேன் வம்பு?’ என்கிற play safe மனப்பாங்கின் கைதிகள். அறிவுஜீவிகள், அந்தந்த நேரத்தில் நாகரிகமாக, அதிகச் செலாவணி உள்ளதாக உள்ள சில சார்புகளை அபிநயித்துக் கொண்டு, சில ‘தியரி’ களை உச்சாடனம் செய்துகொண்டு, ‘உஞ்ச விருத்தி’ செய்கிற ஒரு பிராமண பிம்பத்தின் கைதிகள்

ஏன் எழுதுகிறேன்? எப்பொழுது வரை ஆக்கங்கள் தோன்றும்?

  • ஏதோ ஒரு கட்டத்தில் நான் திசை திரும்பும்போது, இரண்டு பேர் முகத்தைச் சுளிக்கிறார்கள் என்பதற்காக நான் திசையை மாற்றிக் கொள்ளத் தயாராயில்லை. குறிப்பிட்ட ஒரு குழுவினருக்கும் மட்டத்தினருக்கும் இணக்கமான ஒரு வேஷத்தை அணிந்துகொண்டு, அவர்களுடைய தர்பாரில் ஆஸ்தான எழுத்தாளனாகக் கொலுவிருப்பதில் எனக்குச் சிரத்தையில்லை. எழுத்து எனக்கு ஒரு அழகிய மீட்சி. அதை ஒரு பந்தமாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை.

எழுத்தினால் ஆய பயன்? கதை என்ன கிழிக்கப் போகிறது? ஏன் படிக்கிறீர்கள்?

  • நாமிருவருமே பங்குதாரர்களாக உள்ள இந்த அமைப்பைப் பற்றி நான் உங்கள்முன் சமர்ப்பிக்கும் ஒரு நுண்ணிய கருத்துச் சித்திரமாகவே இந்த நாவலை நீங்கள் – அதிக பட்சமாக – கொள்ளவேண்டும்.

காகித மலர்கள்

  • இந்தச் சித்திரத்தில் வாழ்வின் இயல்பு பற்றிய ஒரு தவிப்பும் சோகமும் இருக்கிறது; கூடவே வாழ்வின் சாத்தியக்கூறுகள் பற்றிய ஓர் ஆர்வமும் பரபரப்பும் இருக்கிறது. ஒப்பாரி அல்லது வெறும் அங்கதச் சிரிப்பைக் கடந்த நிலையில் – வாழ்வின் பிரும்மாண்டத்தையும் ‘வெல்ல முடியாத தன்மை’ யையும் உணர்ந்த ஒரு பணிவுடனும் தன்னடக்கத்துடனும் – இது எழுதப்பட்டிருக்கிறது.

ஆதவனாகிய நான்

  • இலக்கியக் கூட்டங்கள், குழுக்கள், சர்ச்சைகள் இவையெல்லாம் எனக்குச் சலிப்பைத்தான் ஏற்படுத்துகின்றன. ஒரு சிறையிலிருந்து மீளும் முயற்சியில் இன்னொரு சிறையில் போய்ச் சிக்கிக் கொண்ட உணர்வு ஏற்படுகிறது. இலக்கியச் சிறையில் சமர்த்தாக ஒடுங்கிக் கொண்டு, சூப்பிரண்டுகளிடமும் வார்டர்களிடமும் நல்ல பெயர் வாங்கிக் கொள்ளும் பொறுமையும் சாதுரியமும் சிலருக்கு இருக்கிறது.
  • எழுத்து எனக்கு ஒரு அலங்காரச் சேர்க்கையல்ல. யாரையும் பிரமிக்கச் செய்வதற்காகவோ, யாராலும் ஒப்புக் கொள்ளப் படுவதற்காகவோ நான் எழுதவில்லை. இது பொழுதுபோகாத பணக்காரன் வளர்க்கும் நாயைப் போல் அல்ல.

திசைகள் இதழ், தீபம் கட்டுரைகள், படைப்பாளிகள் உலகம்

Separated at Birth

தேவதர்ஷினி & Erinn Hayes

முந்தைய பதிவு: தமிழ் சினிமா | நடிகைகள் | வலைப்பதிவு