Monthly Archives: மே 2015

IBM Layoffs

அது 1787ஆம் ஆண்டு. ருஷியாவின் ராணியாக இருந்த பேரரசி காதரின், போர் நடந்திருந்த பிரச்சினை பூமிகளைப் பார்வையிடச் சென்றார். கிரைமியாவில் அப்பொழுதுதான் சண்டை முடிந்து சமாதானம் அரும்ப ஆரம்பித்திருந்தது. தன்னுடைய தூதர்களுடனும் அமைச்சர்களுடனும் புடை சூழ இரண்டாம் காதரின் திக்விஜயம் துவங்கினார். கிரைமியாவில் ருஷியர்களை குடியமர்த்துவதில் ஏற்படும் முன்னேற்றங்களை அறிவது இந்தப் பயணத்தின் முதல் நோக்கம். அமைதி தவழ்ந்து எல்லாம் சொர்க்கமாக மாறுகிறது என்பதை உலகிற்கு பறை சாற்றுவது உப நோக்கம்.

பேரரசியாருடன் கிரெகரி பொட்டம்கின் என்பவரும் உடன் உறுதுணையாக வந்திருந்தார். இந்தப் பகுதியின் அறிவிக்கப்படாத ராஜாவாக இருந்த பொட்டம்கினுக்கு சில சிக்கல்கள் இருந்தன. போர் முடிந்தவுடன் எந்தவித ஆதாரமும் இல்லாத பகுதியில் புதிதாக குடிபுக ருஷியர்கள் தயாராக இல்லை. அந்தப் பகுதிகள் பாலைவனம் போல் காட்சி தந்தன. ஆனால், அரசியாருக்கோ புறக்காட்சி முக்கியம். அரசி பவனி வரும்போது அந்தப் பகுதிகள் மினுக்க வேண்டும். மக்கள் நிறைந்து புழங்க வேண்டும். குட்டி நகரங்கள் வேண்டும்.

என்ன செய்வது?

தன்னுடைய ஆட்களை அழைத்து அடுத்து செல்ல இருக்கும் இடத்தை முன்பே ஓதி விடுவார். அவர்களும் அந்தப் பகுதிக்கு சென்று காலனி அமைத்து, நல்லதொரு கண்கவர் காட்சியை காதரின் அரசியாருக்கு தந்து விடுவார்கள். இரவில் பொட்டம்கின் உடன் அரசியார் சல்லாபிக்கும்போது அவர்கள் போக இருக்கும் அடுத்த ஊருக்கு அதே குழுவினர் மாறுவேடம் தரித்து, தங்களின் குடிசைகளையும் குடில்களையும் போட்டு ஏமாற்றும் வித்தையைத் தொடர்ந்தார்கள்.

பொட்டம்கின் மீது அரசியாருக்கு பெருமகிழ்ச்சி உண்டானது. செல்ல்மும் இடமெல்லாம் கிராமங்களும் உள்கட்டமைப்புகளும் நிறைந்திருப்பதை செய்து காட்டிய பொட்டம்கின் கல்லா நிரம்பி வழிந்தது. ஆனால், ரஷியாவின் வீழ்ச்சி இங்கேதான் துவங்கியது.

Oil on canvas portrait of Empress Catherine the Great by Russian painter Fyodor Rokotov_Wiki

ஐ.பி.எம் நிறுவனமும் கடந்த பல்லாண்டுகளாக இலாபத்தை தங்களுடைய கணக்குப் புத்தகத்தில் காட்டி வருகிறது.

பங்குச்சந்தையில் இயங்கும் ஒவ்வொரு நிறுவனமும் வருடத்திற்கு நான்கு முறை தங்களுடைய வரவு-செலவு பொதுமக்கள் முன்னும், முதலீட்டாளர்கள் முன்னும் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறே ஐ.பி.எம்.மும் வெளிப்படையாக தங்களுடைய இலாபம் ஈட்டும் பிரிவுகளையும், அதிக வளர்ச்சி அடைந்த துறைகளையும் விரிவாக சொல்லி வருகிறார்கள்.

150 பில்லியன் டாலர்களுக்கு மதிப்பிடப்படும் கம்பெனி, அதில் 25 பில்லியனை தன்னுடைய பங்குகளை வாங்கவோ, ஈவுத்தொகை (டிவிடெண்ட்) விநியோகிக்கவோ செலவழிக்கிறது. இருபதாண்டுகளுக்கு மேலாக இதே வித்தையை பயன்படுத்தி தன்னுடைய பங்கு மதிப்பீட்டை, ஒவ்வொரு காலாண்டு அறிக்கையின்போதும் உயர்த்திக் காட்டி வருகிறது.

IBM_Shares_Buyback_Stocks_Markets_Wall_Street_Prices_EPS

எடுத்துக்காட்டாக ஒரு சிறிய கணக்கைப் பார்க்கலாம்.

ஐ.பி.எம்.மின் பங்குகள் 1,100 பங்குகள் சந்தையில் உலவுகின்றன. இந்தக் காலாண்டில் 55 டாலர்களை நிகர இலாபமாக ஈட்டி இருக்கிறார்கள். அதன்படி, ஒரு பங்கிற்கு ஐந்து பைசா இலாபம் என கணக்கிடலாம்.

அதாவது, 55 / 1100 = 0.05

ஆனால், ஐந்து பைசாவிற்கு பதில், ஆறு பைசா இலாபல் காட்ட வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? இருநூறு பங்குகளை திரும்பப் பெற்றுக் கொண்டு விடுவார்கள். இப்பொழுது 1,100 பங்குகளுக்குப் பதிலாக 900 பங்குகளே சந்தையில் இருக்கும்.

அதாவது 1,100 – 200 = 900

இப்பொழுது அதே 55 இலாபம் ஈட்டினால் ஒவ்வொரு பங்கிற்கும் அதிக இலாபத்தைக் கணக்காக காட்டலாம்: 55 / 900 = 0.061 = 6.1 பைசா.

இலாபம் அதிகரிக்கவில்லை. ஆனால், வெளியே உலவும் பங்குகளின் படி பார்த்தால், ஒவ்வொரு பங்கிற்கும் அதிக மதிப்பு என கணக்கு வித்தை மூலம் காட்டலாம். இதே நுட்பத்தை 1994 முதல் ஐ.பி.எம். செய்கிறது.

கூகுள் நிறுவனம் தன்னுடைய பங்கு உரிமையாளருக்கு நயா பைசா கூட ஈவுத்தொகையாக விநியோகிப்பதில்லை. டிவிட்டர் போல், அமேசான்.காம் போல் நஷடத்தில் இயங்காவிட்டாலும், தன்னுடைய இலாபம் அனைத்தையும் ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் மீண்டும் முதலீடாக தங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்கிறது.

பங்குதாரரிடம் கொடுத்து, அவர் செலவழிப்பதை விட, தாங்களே சேமிப்பில் வைத்திருந்து, தானியங்கியாக ஓட்டும் கூகிள் கார் போன்ற நவீன கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துவதால், அதே பணம் பன்மடங்காகப் பல்கிப் பெருகும் என்பது இதன் தாத்பர்யம். ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் கூட வெகு சமீபம் வரை ஈவுத்தொகையை எப்பொழுதும் தன்னுடைய பங்குதாரர்களுக்கு விநியோகித்ததில்லை. அடுத்த தலைமுறை எக்ஸ்-பாக்ஸ், புத்தம் புதிய ஐ-வாட்ச் போன்றவை உருவாக்கி, தங்களைத் தாங்களே உருமாற்றிக் கொள்வதால், அதற்கான அவசியமும் ஏற்பட்டதில்லை.

தன் மீது தனக்கே நம்பிக்கை இல்லாத நிறுவனங்களும், பங்குதாரரை சுண்டி இழுக்கும் கவர்ச்சியாக பணத்தைத் தூண்டில் போடும் நிறுவனங்களும், பாரம்பரியமான அந்தக் கால பழக்கவழக்கங்களைக் கொண்ட வட்டி போடும் நிதி நிறுவனங்களும் காலாண்டு தோறும் ஈவுத்தொகை கொடுக்கிறது. அந்த வர்க்கத்தில், தொழில் நுட்பம் போன்ற நொடிக்கு நொடிக்கு புது அரிதாரம் கோரும் துறையில் இயங்கும் ஐ.பி.எம். அங்கம் வகிப்பது ஆச்சரியமளிக்கும் விஷயம்.

ஆண்டுக்கணக்காக, இவ்வாறு கணக்குப்பதிவில் ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு, மாட்டைத் தூக்கி மந்தையில் போட்டு ஒருவாறாக இலாபக் கணக்கைப் பதிந்தாலும், தொலைநோக்கில் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த செய்முறைகள் அவநம்பிக்கையை உருவாக்கியது. அவர்கள் மெல்ல ஐ.பி.எம். பங்குகளை விற்றுவிட்டு, புதிய தலைமுறையான ஃபேஸ்புக், சேல்ஸ்ஃபோர்ஸ் என மாறத் துவங்கினர்.

Bllomberg_Business_Week_IBM_Blue_Bloods_CEOs_Rometty_Leaders_Presidents_Management_Faces_Timeline

இப்பொழுது கத்திரி போடும் தருணம். பட்ஜெட்டில் மட்டும் அல்ல. அளவுக்கதிமாக விஞ்சி குவிந்து நிற்கும் ஐபிஎம் பணியார்களையும் கத்திரி போட்டுக் குறைக்கும் படலம். இந்தியாவில் டி.சி.எஸ். செய்தது போல், மிகப் பெரிய அளவில் ஆள்குறைப்பு துவங்கி இருக்கிறது. நாலே கால் இலட்சம் ஊழியர்களைக் கொண்ட உலகளாவிய படையில் இருந்து ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோரை துரத்துகிறார்கள். நால்வரில் ஒருவர் நீக்கப்படுகிறார்.

இது ஐ.பி.எம் ஊழியர், அவர்களுடைய அரட்டைத் தளத்தில் எழுதிய பதிவு:

பதினான்கு வருடமாக ஐ.பி.எம்.மில் வேலை பார்க்கிறேன். என்னுடைய கடைசி நாள் ஃபெப்ரவரி 27. என் வயது 58. சட்டப் பிரிவில் இருக்கிறேன். தலைசிறந்த பணியாள் என்பதில் இருந்து கடுமையான பணியாள் என்று கடந்த சுற்றில்தான் கீழிறக்கப்பட்டேன். கடந்த காலாண்டில் மட்டும் நூறு மில்லியன் டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள ஒப்பந்தங்களை முடித்துக் கொடுத்தேன். ஒரே ஒரு பட்டுவாடா. ஆறு மாதம் பணியில் இருந்தால், அதற்கு ஒப்பாக ஒரு வார சம்பளம் தந்து அனுப்புகிறார்கள். அதிகபட்சமாக 26 வார சம்பளம்தான் தருகிறார்கள். வேலையில் இருந்து துரத்தப்பட்ட நாள் முதலாக ஆறு மாதம் வரை உடல்நல காப்பீடு கொடுக்கிறார்கள்.

இவருக்குக் கிட்டத்தட்ட ஆறு மாத/அரை வருட சம்பளம் கிடைத்திருக்கும். அதாவது, அடுத்த ஆறு மாதத்திற்கு அவர் எந்தப் பணியும் செய்யவேண்டாம். வெறுமனே, புதிய வேலையைத் தேடிக் கொண்டால் போதுமானது.

திருமலை படத்தில் விஜய் பேசும் “வாழ்க்கை ஒரு வட்டம்டா! இங்க ஜெயிக்கிறவன் தோப்பான்; தோக்கிறவன் ஜெயிப்பான்!” பன்ச் வசனம் உங்களுக்கு நினைவுக்கு வரலாம். அமெரிக்காவில் ஐந்தாண்டிற்கு ஒரு சுழற்சி எப்பொழுதும் இருக்கிறது. அது சிறிய புயல் மட்டுமே. பத்தாண்டிற்கு ஒரு முறை சுனாமிப் பேரலையே அடிக்கிறது. அந்த சமயத்தில் கணக்குப் புத்தகங்களில் பெரும் நஷ்டங்களைப் போட்டு, நிறுவனத்தையே புரட்டிப் போட்டு, அரசியலில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தி, மொத்தமாக சாதாரணர் முதல் பெருந்தலைகள் வரை மாற்றங்களை உணர வைத்து போகி கொண்டாடுகிறார்கள்.

ஆனால், இது மட்டுமா இப்போதைய இந்த ஐ.பி.எம். வீழ்ச்சிக்கு மூலகாரணம்?

அது 2012ஆம் ஆண்டு. அமெரிக்காவின் சி.ஐ.ஏ.விடம் எக்கச்சக்கமாக தகவல்கள் குவிந்த சமயம். எட்வர்ட் ஸ்னோடென் சொல்லிய மாதிரி இணையத்தின் மூலை முடுக்கில் இருந்து எல்லா விஷயங்களையும் துருவிய சமயம் அது. அவர்களின் கணினிகளில் இடம் போதவில்லை. தேவைக்கேற்ப கூட்ட வேண்டும்; அலசி ஆராய்ந்து கடாசிய பிறகு கணினிகளைக் குறைக்க வேண்டும். உங்களில் யாரல் செய்ய முடியும் என எல்லோரிடமும் கேட்டார்கள்.

முதல் சுற்றில் ஐந்து பேர் தேர்வானார்கள். இன்றளவிலும் கூகுள் நிறுவனத்திடம் சொல்லிக் கொள்ளும்படியான, நம்பகமான, ஸ்திரமான மேகக் கணி அமைப்பு கிடையாது. அவர்கள் நிராகரிக்கப் பட்டார்கள். இறுதிச் சுற்றில் இரண்டே நிறுவனங்கள். ஒன்று பழம் பெருச்சாளியான அமேசான். இன்னொன்று நேற்றைய 2011 மழையில் 2012ஆம் ஆண்டில் முளைத்திருந்த ஐ.பி.எம். அப்படித்தான் சிஐஏ அவர்களை நோக்கியது. ஐந்தாண்டுகளுக்கு மேலாக உலகெங்கும் பல்வேறு கணினிகளை திறம்பட மேய்க்கும் அமேசானா? அல்லது இப்பொழுதுதான் களத்தில் குதித்திருக்கும் அனுபவமில்லாத ஐ.பி.எம்.மா?

பத்தாண்டுகளுக்கான காண்டிராக்ட். அறுநூறு மில்லியன் டாலர்கள் பெறுமான ஒப்பந்தம் அமேசானுக்குக் கிடைத்தது. ஏற்கனவே நோக்கியாவும் ஃபைஸர் (Pfizer) மருந்து நிறுவனமும் உபயோகிக்கும் அமேசான்.காம் மேகக்கணினியத்திற்கும் எவருமே பயன்படுத்தி நிரூபிக்காத ஐ.பி.எம்மின் மேகக் கணினியத்திற்கும் நடந்த போட்டியில், ஐ.பி.எம். சல்லிசான விலையில் முடித்துக் கொடுப்பதாக ஒப்பந்தப்புள்ளி கொடுத்திருந்தும், அதிக விலை கேட்ட அமேசான்.காம் வென்றது.

பாதி விலைக்கு தாங்கள் கொடுத்த டெண்டரை சி.ஐ.ஏ. நிராகரித்ததை எதிர்த்து, ஐ.பி.எம். வழக்குத் தொடுத்தது. எழுபதுகளில் ஒரு முதுமொழி உலவியது: “என்னவாக இருந்தாலும் ஐ.பி.எம் நிறுவனத்தின் கணினியை வாங்கு. உன்னை முதலாளிகள் வாழ்த்துவார்கள். காரியம் கைகூடும்!” அந்தப் பழமொழி இப்போது ஐ.பி.எம். நிறுவனத்திடம் கொடுத்தால் காரியம் குட்டிச்சுவராகும் என்று மாறிப் போய் இருக்கிறது.

ஏன்?

– எங்கே சிக்கனமாக இருக்க வேண்டும் என்று ஆராயாமல் எல்லாவற்றிலும் கஞ்சத்தனம் பார்த்தது
– வேலை பார்ப்பவர்களிடம் உண்டாக்க வேண்டிய உத்வேகத்தை ஊட்டாத நிலை
– எவரை எதற்காக நீக்குகிறோம் என்று தெரியாமல், அரசியல் காரணங்களால் பணிநீக்கம்
– தொழில் நுட்ப வளர்ச்சியில் அக்கறையின்மை
– பூதாகரமான நிறுவனம்
– பிற புகழடையும் கண்டுபிடிப்புகளையும் நிறுவனங்களையும் வாங்குவதன் மூலமே வளர்ச்சி காண்பிப்போம் என்னும் கொள்கை
– கணக்கு காட்டி, பணத்தை சேமிப்பதன் மூலம் தாற்காலிக இலாபம் காண்பிக்கும் நோக்கம்

இவை ஒவ்வொன்றையும் விரிவாகப் பார்ப்போம்.

Cloud_Bluemix_CIA_AWS_EC2_Azure_SForce_SAP_Google_Storage_Costs_amazon_versus_ibm

Million Dollar Arm

மில்லியன் டாலர் புஜம்

லாரி ஓட்டுபவரின் மகன், பல்லாயிரம் கோடி இரசிகர்களின் கனவு நாயகனாக மிளிர முடியுமா? கான்பூரின் அருகே உள்ள கிராமத்தில் இருப்பவரும்; லக்னௌவில் இருந்து காத தூரம் இருக்கும் குக்கிராமத்தில் இருப்பவரும்; அமெரிக்கா வந்து அங்கே பேஸ்பால் பந்து வீசும் நட்சத்திரங்கள் ஆவார்களா? ஒன்பது குழந்தைகள் உள்ள வீட்டில் ஒற்றை அறையில் வளர்பவர், அமெரிக்கர்களுக்கு சொந்தமான அவர்களுடைய விளையாட்டில், அவர்களுக்கு எதிராக மிளிர்வது சாத்தியமா?

இந்த மாதிரி சம்பவங்களைக் கோர்த்து எவராவது புனைவு அமைத்திருந்தால், இதெல்லாம் கதையிலும் சினிமாவிலும் மட்டுமே நடக்கும் என்றிருப்பேன். ஆனால், நிஜத்தில் நடந்திருக்கிறது. வாரநாசிக்கு அருகில் இருக்கும் ஊரில் பிறந்து வளர்ந்த தினேஷ் படேலும், ’கம்பள நகரம்’ என்றழைக்கப்படும் பாதோஹி நகரத்தில் ஒன்பதில் ஒருவராக பிறந்த ரிங்கு சிங்கும் – அமெரிக்கா வருகிறார்கள். பிட்ஸ்பர்க் நகர அணியில் பந்து போடுகிறார்கள்.

இந்த உண்மைக் கதையைப் பின்னணியாக வைத்து ”மில்லியன் டாலர் புஜம்” (Million Dollar Arm) வெளிவந்திருக்கிறது. இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரெஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்திற்கு இசையமைக்க ஒத்துக் கொண்டேபோது கொடுத்த பேட்டியில் ரெகுமான் இவ்வாறு சொல்கிறார்: ”ஸ்லம் டாக் மில்லியனரு’க்குப் பிறகு ஆங்கிலப் படங்களுக்கு இசையமைக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. ‘கப்பிள்ஸ் ரிட்ரீட்’, ’வாரியர்ஸ் ஆஃப் ஹெவன்’, ‘127 அவர்ஸ்’, ’எர்த்’, ‘பீப்பிள் லைக் அஸ்’னு இப்படி நிறைய நிறைய! அதில் நான் விரும்பித் தேர்ந்தெடுத்தது ‘127 அவர்ஸ்’ மட்டும்தான். அது ஆஸ்கர் பரிந்துரை வரை போனது. ஆனால், அடுத்த மூன்று வருடங்களுக்கு இந்தியாவை அடிப்படையாக வைத்து வரும் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்க நான் ஒப்புக்கொள்ளவில்லை. அப்படி, ஒத்துக் கொண்டால், ’ரெஹ்மானை – தெற்காசியா களத்தில் நடக்கும் கதைகளுக்குத்தான் பயன்படுத்தலாம்’ எனத் தேங்கிப் போயிருப்பேன். மேலும், இந்தியச் சூழலில் இசையமைக்க, எனக்கு தமிழும் ஹிந்தியும் இருக்கின்றன. அவற்றிலும் நான் தொடர்ந்து படங்கள் செய்து கொண்டுதானே இருக்கிறேன். நாலு வருடங்களுக்குப் பின்னால் மறுபடியும் ஒரு இங்கிலீஷ் படம் பண்ணலாம்னு நினைச்சேன். அந்த சமயத்தில் ‘மில்லியன் டாலர் ஆர்ம்’ படத்தின் இயக்குநர் கிரெய்க் கில்லஸ்ப்பியும் என்னை அணுகினார். இது இந்தியாவில் நடக்கும் கதை, வால்ட் டிஸ்னி தயாரிப்புனு நிறைய ஊக்கப்படுத்தும் விஷயங்கள் இந்தப் படைப்பில் இருந்தன. இது விளையாட்டு குறித்த திரைப்படம்தான். ஆனால், உள்ளுக்குள்ள ரொம்ப அற்புதமான இன்னொரு கதையும் மனித மனங்களின் ஊசலாட்டங்களும் ஓடுகிறது. ‘லகான்’ மாதிரினு சொல்லலாம்.”

படத்தில் எல்லா மொழிகளிலும் பாடல்கள் வருகிறது. படத்தின் இறுதியில் ‘என் சுவாசக் காற்றே’ படத்தில் இடம்பெற்ற சித்ராவும் உன்னிகிருஷ்ணனும் பாடிய ‘திறக்காதக் காட்டுக்குள்ளே’ பாடல் உணர்ச்சிப்பிழம்பான கணத்தில் ஒலிக்கிறது. படத்தின் நடுவே பாங்ரா பஞ்சாபி, டிஸ்கொத்தே ஹிந்தி, ஆங்கில ராப் என கலவையாக – எல்லா மொழிகளும் ரசனைகளும் இசைப்பிரிவுகளும் வருகின்றன.

இந்தப் படம் ஆஸ்கார் விருதுகளுக்கான நெடும் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், மூன்று/நான்கு பேர் மட்டுமே சொல்லப்படும் இறுதிப் பரிந்துரையில் இடம்பிடிக்கப் போவதில்லை என வல்லுநர்கள் கருதுகிறார்கள். ஸ்டீஃபன் ஹாகிங் வாழ்க்கையை சொல்லிய ‘தியரி ஆஃப் எவரிதிங்’ திரைப்படத்திற்கு இசையமைத்த யோஹான் ஜோஹான்ஸன், அல்லது இண்டெர்ஸ்டெல்லார் படத்தின் ஹான்ஸ் ஜிம்மர் அல்லது ஆலன் டூரிங் வாழ்க்கையை திரையாக்கிய ’தி இமிடேஷன் கேம்’ படத்தின் அலெக்ஸாண்டர் என முன்னிறுத்துகிறார்கள்.

ஆஸ்கார் விருதுகளுக்கு வாக்களிப்பவர்களுக்கு மறதி அதிகம். டிசம்பர் மாதத்தில் திரைப்படம் வெளியானால் மட்டுமே நினைவில் நிற்கும். ”மில்லியன் டாலர் புஜம்” திரைப்படமோ மே மாதமே வெளியாகி, இப்பொழுது திரையரங்குகளை விட்டு வெளியேறி விட்டது. இந்த நிலையில், அந்தப் படத்திற்கு எந்தப் பரிந்துரையும் கிடைப்பது சந்தேகமே. கோச்சடையான், ஐ போன்ற திரைப்படங்களுக்காகவும் ஏ ஆர் ரெஹ்மானின் பெயர் ஆஸ்கார் நீள்பட்டியல் பரிந்துரையில் இடம் பெற்றிருப்பதால், ‘மில்லியன் டாலர் ஆர்ம்’ பரிந்துரையையும் பத்தோடு பதினொன்றாகக் கருதி விட்டுவிடலாம்.

அது ஆஸ்கார் விருதிற்கான சாஸ்திரோப்தமான பட்டியல். இனி ஏ ஆர் ரெஹ்மானின் கோலோச்சல் குறித்த பாமரனின் பார்வை.

துவக்கத்தில் டிஸ்னியின் கோட்டை வரும்போதே பட்டாசு கிளம்பி விடுகிறது. இராணிகளும் மஹாராஜாக்களும் துள்ளலாக வெடி வெடிப்பது போல் ஐரோப்பிய பவனங்களுக்கு இந்திய ‘ஸ…ஸா… ஸரி’ வரும்போதே ”இது நம்ம இசை” என்று தோன்றவைத்து விடுகிறது. சிக்கன் டிக்கா மசாலாவில் இருக்கும் மணம் போல், பாரதத்திற்கேயுரிய வாசம்.

பதினான்காவது நிமிடத்தில் அந்த டிக்கா மசாலாவில் கொஞ்சம் சாம்பாரும் நிறைய தஹியும் கொத்து பரோட்டாவும் ஒருங்கே ஓங்கி ஒலிக்கிறது. சத்தமான இந்தியா. கசகச இந்தியா. சல்பேட்டா வாசனையான இந்தியா. கொண்டாட்ட இந்தியா. பரபர ஓட்டத்தின் நடுவே சாந்தமான இந்தியா. இப்படியெல்லாம் எழுத முடிகிறது… இதையெல்லாம் ஒலியில் கொண்டு வாருங்கள் என்று இயக்குநர் சொன்னாரா அல்லது இந்தியா என்றால் இதுதான் நாதம் என்று ஏ ஆர் ரெஹ்மான் சொன்னாரா? தெரியவில்லை. கேட்டுப் பார்த்தால் இந்தியா ஒலிக்கிறது. ஒளி கண்ணில் படாவிட்டால், மொழி புரியாவிட்ட்டால் கூட, அந்த லயம் காட்டிக் கொடுக்குமாறு அமைக்கப்பட்ட துள்ளலோசை.

அடுத்த ஓட்டம் இருபத்தி இரண்டாம் நிமிடம். ’சைய்யா சையா’ பாடிய சுக்விந்தர் சிங் ஒலிக்கிறார். அதே ஆட்டம்; பாட்டம். நிஜ நாடகம் தோன்றுவதற்கான ஒத்திகை நடக்கும் இடத்தை அறிமுகம் செய்யும் உறுமும் இசை.

அங்கே விட்டதை இருபத்தைந்தாம் நிமிடத்தில் சுக்வீந்த சிங் தொடர்கிறார். அவரை அப்படியே மாற்றி மேற்கத்திய இசைக்குத் தாவி விடுகிறார். இக்கி (Iggy Azalea) இங்கு வருகிறார்.

முப்பத்தி மூன்றில் ரெஹ்மானின் அமைதியான பாலட் ஒலிக்கிறது. பம்பாய் திரைப்படத்தில் ‘கண்ணாளனே’ துவக்கத்தில் வரும் இஸ்லாமிய சங்கீதம் போல்.

இனிமேல் திரைப்படத்தில் உற்சாகம் பிறக்க வேண்டும். ஏழைச் சிறுவர்கள் பந்து வீசும்போது அவர்களை ஒட்டி பாசமும், ஒட்டுதலும், ஜெயிக்க வேண்டுமே என்னும் ஏக்கமும் உண்டாக வேண்டும். டிஸ்னிக் கோட்டை வந்ததே… அதே இசை இப்பொழுது.

நாற்பதாவது நிமிடத்தில் நிஜப் போட்டி. இது ஏ ஆர் ரெஹ்மானின் சொந்த வீடு. முதல் படத்தில் ‘ஒட்டகத்தைக் கட்டிக்கோ’வில் ஆரம்பித்து மணி ரத்னத்திற்கு ’ருக்குமணி ருக்மிணி’ அயிட்டம் பாட்டு போட்டது போல் இலா அர்ஜுனும் அல்கா யாக்னிக்கும் குத்துகிறார்கள். அவர்கள் குத்துப்பாட்டு எப்பொழுது முடிகிறது, எப்பொழுது லகான் திரைப்படத்தில் வரும் “பார் பார் ஹோ…!! ஹஜார் பார் ஹோ!!!” வருகிறது என உணர முடியாத உருமாற்றம். அப்படியே, அந்த வீரர்களுக்காக கரகோஷமிடுகிறோம்.

நாற்பத்தியெட்டாம் நிமிடத்தில் வீடு திரும்புதல். அயல்நாடு செல்வதற்கு முன் வீட்டில் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டு விடை பெறும் தருணத்திற்கான முன்னுரையாக கொண்டாட்ட பாங்ரா. அது அப்படியே, உருக்கமான பிரிவுபசார பாந்தமாக மாறுகிறது. அங்கிருந்து அமெரிக்காவின் ராப், கெண்ட்ரிக் லமார் குரலில் தோன்றுகிறது.

இதன் பிறகு கிட்டத்தட்ட படம் முழுமையாக ஆட்கொள்கிறது. இசை தனியாக, பாடல் தனியாக, பாடகர் தனியாக துருத்திக் கொண்டு தெரிவதில்லை.

இசை ஒலிக்காமல் மௌனமாக இருக்க வேண்டிய நேரம். தோல்வியுறும் போது சந்திக்கும் நிசப்தம். அதிர்ச்சியும் பிரிவும் சொல்லும் குரல் எல்லாமே இருக்கிறது. ஆனால், இந்தியப் பகுதிகள் போல் “நான் ரெஹ்மான். நான் இங்கே இருக்கிறேன்” என்பது தெரிவதில்லை.

படத்தின் இறுதியில் இருவருக்கும் கடைசி வாய்ப்பு. இதில் வென்றால்தான் அமெரிக்கா கனவு பலிக்கும். தோற்றால் கூனிக் குறுக நேரிடும். இசை மெதுவாகவே ஆரம்பிக்கிறது. கொஞ்சம் ஹம்மிங். கொஞ்சம் ‘அ…ஆ…’. அப்படியே சட்டென்று ரிங்குவின் பந்து வேகமாகப் பாய்வது போல், தினேஷின் இதயம் துடிப்பது போல் துள்ளுகிறது. கையிலிருந்து ஏவப்பட்ட வில்லாக பாய்கிறது.

இந்தியர்கள் வெற்றிக்கான முதல் படியில் கால் வைத்ததை ஒலியிலும் திரையிலும் கலந்துருகிய உச்சகட்ட தருணமான படத்தின் இறுதியில் நிஜக்கதையிலும் வல்லவர்கள் வெற்றி கண்டார்கள் என்பதால் கண்கள் கலங்கியதா… அல்லது ரெஹ்மானின் இசையில் மனம் உருகியதா… தெரியவில்லை. ஆனால், ரெஹ்மான் தெரிந்தார். ஆஸ்கார் தெரியவில்லை. ஆனால், மீண்டும் மீண்டும் கேட்க வைத்து மயங்க வைக்கும் இசை தெரிந்தது. என்ன சுருதி, என்ன ராகம், என்ன தாளம், என்ன ஜானர் என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், இதயத்தைத் தொடும் இசை தெரிந்தது.

Oscars 2015

Oscars
அக்டோபர் மாதம். முதல் தேதி. 2009ஆம் வருடம். சீனாவின் தலைநகரில் தேசிய தினம் கொண்டாடுகிறார்கள். என்னுடைய கல்லூரித் தோழன் பீஜிங் நகரத்து அடுக்கு மாடி விடுதியில் செப்டம்பர் மாதக் கடைசியில் இருந்தான். அப்பொழுதே ஒத்திகைகளை ஆரம்பித்து விட்டார்கள். விடுதியின் உப்பரிகையில் இருந்து ’வீடியோ அரட்டை செய்யலாமா’ எனக் கேட்டேன். அவன் பதிலோ, அதிர்ச்சி கலந்த பயத்துடன் ‘வேண்டாம்டா… சுட்டாலும் சுட்டுடுவாங்க!’ என்பதாக இருந்தது.

பீஜிங் நகரத்தில் இருந்த புறாக்கள் எல்லாவற்றையும், ஒன்று கூட விடாமல் கூண்டில் அடைத்து வைத்து இருந்தார்கள். பட்டம் பறப்பதற்கு அதிகாரபூர்வமாகத் தடை விதித்து இருந்தார்கள். தேசிய தினத்தன்று இந்தப் பக்கம் இரண்டு ஃபர்லாங்; அந்தப் பக்கம் இரண்டு ஃபர்லாங்கும் மூடி இருந்தது.

இந்த விழாவும் பவனியும் இன்றோ நேற்றோ உண்டானதல்ல. சிங் (Qing) வம்சாவழியினர் ஆண்ட 1644 முதல் 1912 வரை போர்களில் பெற்ற வெற்றி விழா ஊர்வலமாக இருந்தது. அதன் பிறகு கம்யூனிஸப் புரட்சியின் புண்ணியத்தில் தொலைக்காட்சிக்கு ஏற்றவாறு உலா நடத்துகிறார்கள்.

விழாவிற்கென்றே பிரத்தியேகமாக அழைக்கப்பட்டிருந்த, விவிஐபிக்களும், நிருபர்களும் மட்டுமே அணிவகுப்பை நேரடியாகப் பார்க்க முடியும். உள்ளுர்வாசிகள் எவரும் திருவிழா தேரோட்டத்தைப் பார்க்க இயலாது. தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பாகும். சீன டிவி என்ன காட்ட விரும்புகிறதோ, அதை மட்டுமே பார்க்க இயலும். 1984ல் நடந்த விழாவில் ‘ஹலோ டங் ஷாவ்பிங் (Deng Xiaoping)’ என்னும் பதாகையை படம் பிடிக்குமாறு அறிவுறுத்தப் படாததால், தொலைக்காட்சிக் குழுவினர் தவிர்த்துவிட்டனர். கட்சித்தலைமை, அந்தப் பதாகையை வைத்திருந்தவர்களை வெட்டி ஒட்டி சேர்த்துக் கொள்ளுங்கள் என்றவுடன், தனியாக படம் பிடித்து, நடுவே கோர்த்து ஒளிபரப்பிவிட்டார்கள்.

2009ல் நடந்த தேசிய விழாவின் சிறப்பசம் என்னவென்றால் ’பீஜிங் பெண்கள் படை’ நடத்திய நேர்த்தியான அணிவகுப்பு ஆகும். முட்டியைத் தொடாத சிக்கென்ற சிவப்பு குட்டிப் பாவாடைகள்; முட்டி வரை நீளும் வெள்ளை சப்பாத்துகள். ”இராணுவத்தில் இத்தனை பதின்ம வயது பதுமைகளா!” என சீனாவிற்கு குடிபெயர நினைக்க வைக்கும் வார்ப்புருத் தோற்றம் கொண்டவர்கள். கொஞ்சம் நாள் தீவிரமாக ஆராய்ந்ததில் அத்தனை பேரும் மாடல் நடிகர்கள் எனத் தெரிய வந்தது.

இவ்வளவு கோலாகலத்திற்கும் நடுவே கோட்டு சூட்டு போட்ட ஜூ ஜின்டாவ் (Hu Jintao) பந்தாவான படகுக் காரில் வந்தார்.

ஆஸ்காரும் இதே போல்தான். கோட்டு சூட்டு போட்டு நீல் பாட்ரிக் ஹாரிஸ் வந்தார். நிறைய பேர் நடனம் ஆடினார்கள். பாடினார்கள். கௌரவிக்கப்பட்டார்கள். நான் டால்பி தியேட்டருக்கு செல்லவில்லை. லாஸ் ஏஞ்சலீஸ் பக்கத்தில் கூட வசிக்கவில்லை. தொலைக்காட்சியில் என்ன காண்பிக்கப்பட்டதோ அதைப் பார்த்தேன். அந்த ஆஸ்கார் நிகழ்வுகள் எல்லாமே கடும் ஒத்திகைக்கு உட்பட்டது. சொதப்பல்கள் கூட நேர்த்தியான நடிப்புகளோ என எண்ணவைக்குமளவு இயல்பாக அரங்கேறும் நிகழ்வைப் பற்றிய குறிப்புகள்:

”எப்பொருள் யார் யார் வாய் எங்கெங்குக் கேட்பினும் அப்பொருளை தரவாக்கி ஆராய்வது அறிவு” என்னும் வள்ளுவப் பெருந்தகையின் குறளுக்கேற்ப, ஹார்வார்டு மாணவன் பென் (@BensOscarMath) யார் வெற்றி பெறுவார்கள் என்பதை ஆருடம் சொல்லியிருந்தார். அவர் சொன்னதற்கேற்பவே அனைத்து விருதுகளும் (ஓரிரண்டைத் தவிர) அமைந்தும் இருந்தன.

எனவே, ஆஸ்கார் பரிசை வென்றவர்களில் பெரிய ஆச்சரியங்கள் காத்திருக்கவில்லை.

ஆஸ்கார் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறுவதெற்கென்று சில சாமுத்ரிகா இலட்சணங்கள் இருக்கின்றன. முதலாவது அமெரிக்க பாசம். நீங்கள் எடுக்கும் படம் அமெரிக்கரின் நேர்மையையும் தேசத்தையும் அறத்தையும் பாட வேண்டும். இரண்டாவது நகைச்சுவை கேளிக்கைப் படமாக இருக்கக் கூடாது. சொல்லும் விஷயத்தை உருக்கமாக, சோகமாக, கோபமாக சொல்ல வேண்டும். கடைசியாக நிஜத்தில் நடந்ததைத் தழுவி, உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால் இன்னும் அதிக வாய்ப்பு.

இது பரிந்துரைப் பட்டியலில் வருவதற்கான முஸ்தீபுகள். பரிந்துரையில் ஐந்து அல்லது ஆறு பேர் இடம்பிடிக்கிறார்கள். அவர்களில் இருந்து விருது பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

முதலில் வாக்களிக்கும் அகாடெமி உறுப்பினர்களை நன்கு கவனிக்க வேண்டும். அவர்களுக்கு, உங்கள் படத்தின் அருமை பெருமைகளை விளக்கமாகச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு காட்சிக்கும் எவ்வளவு உழைப்பு தேவைப்பட்டது என்பதை விலாவாரியாக ஊடகங்களில் பேட்டியாகத் தர வேண்டும். எல்லா பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் அலசல்களும், ஆராய்ச்சிகளும் இடம்பெற வைக்க வேண்டும். பிரச்சாரமும் அன்பளிப்பும் எவ்வளவு வலுவாக இருக்கிறதோ, எத்தனைக்கு எத்தனை பரவலாக கொடுக்கப்படுகிறதோ, அத்தனைக்கு அத்தனை வெற்றி வாய்ப்பு அதிகரிக்கிறது. (மேலும் வாசிக்க: The Average Oscar Campaign Costs $10 Million, And Other Oscar Facts)

இரண்டாவதாக உங்களின் வயது. சாகப்போகிற வயதில் உங்களுக்கு பரிந்துரை கிடைத்தால், ஆஸ்கார் விருது நிச்சயமாகக் கிடைத்துவிடும். இனிமேல், உங்களுக்கு இன்னொரு நல்ல படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமோ என்னும் பயம் ஒரு பக்கம் இருக்கும்; இன்னொரு பக்கம், இத்தனை ஆண்டுகளாக நடித்தும் ஆஸ்கார் வாங்காமல் இறந்துபோனாரே என்னும் பழி வரும் என்னும் நாணமும் அகாதெமி வாக்காளருக்குத் தோன்றும். எனவே, உங்களுக்கு அறுபதைத் தாண்டிவிட்டால், வெற்றி வாய்ப்பு பிரகாசம் ஆகும்.

கடைசியாக உங்களுக்கு ஏற்கனவே விருது தராமல் தவறவிட்டதற்கான பிராயசித்தம். ’மூன்றாம் பிறை’ எடுத்தபொழுது ”சிறந்த இயக்குந”ராக பாலு மஹேந்திராவைச் சொல்ல முடியவில்லையா? அதனால் என்ன… ”நீங்கள் கேட்டவை” எடுக்கும்போது கொடுத்துவிடுவோம் என்று முன்பு செய்த பிழைகளை நீக்கிக் கொள்வதற்கான பரிசாக சில சமயம் அமையும்.

heros_journey_cambell

Hero’s journey chart from Wikipedia

பார்த்தவுடன் அனுபவித்து ரசித்த பாய்ஹுட் திரைப்படத்திற்கு ஒரேயொரு விருது மட்டுமே கிடைத்தது. நமக்குத் தெரிந்த தூரத்து மாமா பையனுக்கு ஐஐடியில் இடம் கிடைக்காதது போல் லேசாக வருத்தமாக இருந்தது.

இந்த மாதிரி விருதுகளைத் தவறவிட்டவர்களுக்கு சிறந்த இயக்குநருக்காக ஆஸ்காரை வென்ற அலெக்ஸாண்ட்ரோ (Alejandro González Iñárritu) பேச்சு மருந்தாக அமைந்திருக்கும். “இன்று நீங்கள் விருதுகளாகக் கொடுத்து என்னையும் என் படத்தையும் கௌரவித்தீர்கள். நன்றி. உங்கள் அன்பிற்கு தலைவணங்குகிறேன். இன்று நிறைய விருதுகளைப் பெறும் படம் புகழ்பெறலாம்… பெறாமலும் போகலாம். காலம் மட்டுமே ஒரு படைப்பின் நீதிபதி. எந்தப் படம் செல்வாக்குடன் இருக்கிறது என்பதை இருபதாண்டுகள் கழித்து, கொஞ்சம் நாள் கழித்துப் பார்த்தால் மட்டுமே தெரிகிறது.”

இண்டெர்ஸ்டெல்லார் திரைப்படத்திற்கு ஆஸ்காரில் இடம் கிடைக்காத வருத்தத்தை, ‘பர்ட் மேன்’ (Bird Man) படப் பேச்சு நிவர்த்தி செய்தது. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த படத்தொகுப்பு என எந்த முக்கிய விருதுக்கான ஓட்டத்திலும் இன்டெர்ஸ்டெல்லர் இடம்பெறவில்லை. தந்திரக் காட்சிகள், அரங்க அமைப்பு, இசை, இசைக்கலவை என ஆறுதல் பரிசு போல் சிலவற்றில் தூவி இருந்தார்கள். (சொல்வனம் இதழில் ஜாவா குமார் இந்தப் படத்தைக் குறித்து எழுதிய கட்டுரை)

ஆஸ்கார் பட்டியலில் இடம் பெறாவிட்டால் என்ன… டிசம்பர் மாதத்திற்கான ’வயர்ட்’ (Wired) இதழ் இன்டெர்ஸ்டெல்லர் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனை வைத்து தங்கள் இதழைத் தயாரித்து இருந்தார்கள். நோலன் இடது கைக்காரர். எல்லாப் பத்திரிகையையும் கடைசியில் இருந்துதான் படிக்க ஆரம்பிப்பார். அப்பொழுதுதான் சடசடெவென்று பக்கங்களை இடது கை கொண்டு புரட்ட முடியும். அந்த எண்ணத்தின் நீட்சியாகத்தான் ‘மெமண்டோ’ திரைப்படத்தை இறுதியில் இருந்து துவக்கினேன் என்பதில் பத்திரிகையைத் துவங்கி இருந்தார்.

இண்டெர்ஸ்டெல்லர் திரைப்படத்தை எடுக்க எட்வின் ஏ ஆபட் (Edwin A Abbott) எழுதிய தட்டையுலகம் (Flatland) நாவல் உந்துதலாக அமைந்து இருக்கிறது. அந்தக் கதையில் முப்பரிமாணத்தில் இயங்கும் விலங்கு ஒன்று இரட்டைப் பரிமாண உலகிற்குள் நுழைகிறது. டிவியில் பார்ப்பது இரட்டைப் பரிமாணம். முக்கோணம், வட்டம், சதுரம், மனித உடல் போன்ற அமைப்பு என்னும் வடிவங்கள் உண்டு. ஆனால், அந்த உலகில் இருப்பவருக்கு எப்படி முப்பரிமாணத்தை, கனசதுரத்தையும் உருளை உலகையும் விளக்குவீர்கள்? இதே போன்ற சிக்கலை நான்கு/ஐந்து பரிமாணமாக யோசிக்க வைப்பதே இண்டெர்ஸ்டெல்லர் கரு.

திரைப்படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அந்த புத்தக அலமாரியில் ஒவ்வொரு புத்தகமும் கவனமாக பொறுக்கி எடுக்கப்பட்டிருக்கிறது. அவர் விரும்பிய நூல்கள்:

1. The Wasp Factory – Iain Banks
2. Selected Poems – TS Eliot
3. The Stand – Stephen King
4. Gravity’s Rainbow – Thomas Pynchon
5. Emma – Jane Austen
6. A Wrinkle in Time – Madeleine L’Engle
7. Labyrinths – Jorge Luis Borges

நிஜ மனிதர்களைக் கூட கணினி மூலமாக வரைபடமாக அசைவூட்டம் கொடுத்து கோச்சடையான் ஆக்கி விடும் தொழில்நுட்ப பிரும்மாண்டத்தின் நடுவில் இண்டெர்ஸ்டெல்லர் வந்து இருக்கிறது. இந்தப் படத்தில் வரும் ரோபாட்டுகள், விண்கலன்கள், ஆராய்ச்சி மையங்களின் ராட்சஸ எந்திரங்கள் போன்றவற்றை கணினி கொண்டு வரையாமல், மெய்யாக உருவாக்கி இருக்கிறார்கள். ரோபாட் இருப்பதாக நினைத்துக் கொண்டு பேசுவதை விட, இயந்திர மனிதன் உள்ள அறையில் அதனுடன் உரையாடுவது மேலும் நடிகரை மெருகேற்றும் என்கிறார் நோலன். திரைப்படத்தில் பிரளயம் வரும். கடுமையான பனிப் பிரதேசம் வரும். செங்குத்தான அதல பாதாளம் கூட தெரியாத வேற்றுகிரகங்கள் தோன்றும். அவை எல்லாம் கண்டுபிடிக்க எரிமலை வெடிக்கும் இடங்களையும் கண்டு அஞ்சாமல் பயணித்த கதையும் சுவாரசியமானது. ஆய்லரின் தேற்றம் என்று தீவிரமான அறிவியலும் உண்டு; இறந்தவர்களுடன் உரையாடல் என்று அமானுஷ்யங்களும் உண்டு.

அதெல்லாம் இருக்கட்டும். ஆஸ்கார் விருதுகள் குறித்து பேச வந்துவிட்டு இண்டெர்ஸ்டெல்லர் குறித்து ஏன் கதை அளக்க வேண்டும்? சிறந்த படத்திற்கான பட்டியலில் இண்டெர்ஸ்டெல்லர் இல்லை. இங்காவது கவனிப்போமே என்னும் நல்லெண்ணம் மட்டுமே காரணம் ஆகும்.

இண்டெர்ஸ்டெல்லர் படத்தைக் குறித்து கருந்தேள் ராஜேஷ் சிறப்பான கட்டுரைகள் எழுதி இருக்கிறார்.

அப்படியானால் யார் எல்லாம் சிறந்த ஹாலிவுட் படத்திற்கான போட்டியில் இருந்தார்கள்?

அ) அமெரிக்கன் ஸ்னைப்பர் – இது க்ளிண்ட் ஈஸ்ட்வுட் எடுத்த படம். தியேட்டர்களில் சக்கை போடு போட்டு மிகப் பெரிய வெற்றியும், மற்ற எல்லா ஆஸ்கார் படங்களும் சேர்த்தால் கிடைத்த லாபத்தை விட இரு மடங்கு பண வரவுக் கொழிப்பும், அவை எல்லாவற்றையும் விட சர்ச்சைகளையும் பெற்று இருக்கிறது. அப்படி என்ன சர்ச்சை? தொலைதூரத்தில் இருந்து, நூற்றி அறுபது இராக்கியர்களை, புறமுதுகில் சுட்டுக் கொன்றவரின் நிஜக்கதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் இது.

ஆ) பர்ட்மேன் – பல ஆஸ்கார்களை வென்று குவித்த படம். சூப்பர் ஸ்டாராக உலா வந்த ஒரு புகழ்பெற்ற நடிகன், தன்னுடைய மதிப்பு வீழ்ந்த பிறகு எப்படி நடக்கிறான் என்பதை உளவியல் ரீதியாக ஆராய்கிறது.

இ) பாய்ஹுட் – இந்தப் படம் குறித்து நான் எழுதிய விமர்சனம்.

ஈ) தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் – வித்தியாசமான படம். இரண்டாம் உலகப் போர் காலத்து விநோத பழக்கவழக்கங்களும், விடுதி சிப்பந்திகளின் குணாதிசயங்களும், கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர்களின் நேர்மையும் – துப்பறியும் த்ரில்லராக வந்திருக்கிறது.

உ) தி இமிடேஷன் கேம் – இரண்டாம் உலகப் போரில் ஆலன் டூரிங் ஆற்றிய பங்கை இந்தப் படம் சொல்கிறது. கூடவே, அவருக்கு இருந்த தற்பால் விழைவை முன்னிலையாக்கி, அதனால் அவர் சந்தித்த இடர்களைப் பேசுகிறது. ஒருவரின் வாழ்க்கையைச் சொல்லும் திரைப்படங்கள், அந்த நபரின் சம்பவங்களை நேர்மையாகச் சொல்ல வேண்டும். ஆனால், இந்தப் படம் கற்பனையாக ஜோடிக்கிறது என்று கடுமையான விமர்சனத்திற்குள்ளானது. (மேலும் வாசிக்க: Saving Alan Turing from His Friends by Christian Caryl | The New York Review of Books)

ஊ) செல்மா – கொஞ்சமே கொஞ்சம் லிண்டன் ஜான்ஸனை மனிதத்தன்மையுள்ள சாதாரணராகக் காட்டிவிட்டார்கள் என்பதற்காக மற்ற எல்லா விருதுகளிலும் இருந்து ஓரங்கட்டப் பட்ட படம். வெள்ளையர் வழிநடத்தல் இல்லாமல், மார்டின் லூதர் கிங் மட்டுமே முன்னிறுத்தப்படுவதால் சிறந்த இயக்குனர்/நடிகர் என எதிலுமே இடம் கிடைக்கவில்லை. ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை இரத்தம் வழிய அடித்ததை எல்லாம் அப்படியே காட்டுவதால் அசூயை வேறு எழுகிறது என விமர்சனத்திற்குள்ளானது.

எ) தி தியரி ஆஃப் எவரிதிங் – அறிவியலாளர் ஸ்டீஃபன் ஹாகிங் குறித்த படம். அமெரிக்கர்களுக்கு இது போன்ற எழுச்சிப் படங்கள் எப்பொழுதுமே பிடிக்கும். ஒரு மாமாங்கம் முன்பு நாஷ் என்னும் பொருளாதார மேதையையும் அவரின் உடலியல் சிக்கல்களையும் மீறி நோபல் பரிசு வென்றதையும் படமாக்கிய ‘A Beautiful Mind’ நிறைய பரிசுகளை வென்றது. அதே போல் இரண்டு வருடமே வாழ முடியும் என சொல்லப்பட்ட பின் ஐம்பதாண்டுகளாக ஆராய்ச்சியில் திளைக்கும் ஹாக்கிங் குறித்த திரைப்படம். அறிவியல் விஷயங்களைப் பற்றி இரண்டே இரண்டு காட்சிகளில் பேசிவிட்டு, அவரின் குடும்ப வாழ்க்கையை நிறையப் பேசி இருந்தார்கள். அவருக்கு எத்தனை குழந்தை பிறந்தது, உடல் ஊனமான பிறகும் எவ்வாறு குழந்தை பிறந்தது, அவரின் மனைவி இப்பொழுது எவருடன் வாழ்கிறார் என்பதை விலாவாரியாக காண்பித்து இருந்தார்கள். சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் பரிசை வென்றது.

ஏ) விப்லாஷ் – குறும்படத்தில் இருந்து உருவான படம். மூன்று பரிசுகளை தட்டிச் சென்றது.

சாதாரணமாக இத்தனை பேரின் சரித்திரங்கள் திரைப்படமாக வெளியானால், அந்த ஆஸ்கார் விழாவின் துவக்கம் சிறப்பாக இருக்கும். அத்தனை படங்களையும் ஒருங்கிணைத்து ஆடலும் பாடலுமாகத் துவங்கும். விழாவைத் தொகுப்பவரே ஆலன் ட்யூரிங் ஆக வருவார்; அடுத்த நிமிடம் ஸ்டீஃபன் ஹாக்கிங் போல் சக்கரவண்டியில் தோன்றுவார்; துள்ளி எழுந்து மார்ட்டின் லூதர் கிங் போல் சொற்பொழிவாற்றுவார். இந்த தடவை விழாவை ஒருங்கிணைத்த நீல் பாட்ரிக் ஹாரிஸ் அவ்வாறெல்லாம் வித்தியாசப்படுத்தவில்லை. தனக்கு இடப்பட்ட காரியத்தை செவ்வனே நிறைவேற்றினார். மொத்தமாக சொன்ன நாற்பத்தியெட்டு ஜோக்குகளில் ஓரிரண்டுக்கு சிரிப்பு கூட எட்டிப் பார்த்தது.

சிரிப்பை விட கண்ணீர் அதிகம் தென்பட்ட ஆஸ்கார் ஆக 2015 விழா அமைந்து இருந்தது. ‘செல்மா’ படத்தின் பாடலை ஜான் லெஜண்ட் (John Legend) என்பாரும் காமன் (Common) என்பவரும் பாடியது உருக்கமாக இருந்தது. தற்கால நிகழ்வுகளான ஃபெர்கூஸன் போன்ற செய்திகளையும் ஒருங்கிணைத்து பாடினார்கள். (மேலும் வாசிக்க: தொடரும் பன்னிரண்டாண்டுகள் – 12 Years a Slave, திரைக்கு அப்பால்)

இந்தப் பாடலின் போது க்ரிஸ் பைன் (Chris Pine) அழுததை வைத்துக் கொண்டு வெள்ளையினத்தவரின் இரக்கத்தையும் நல்லுள்ளத்தையும் ஊடகங்கள் பெரிதுபடுத்தியதா அல்லது செல்மாவில் மார்டின் லூதர் கிங் ஆக நடித்த டேவிட் (David Oyelowo) கண்களில் இருந்து கண்ணீர் கசிந்ததை தொலைக்காட்சி அதிக நேரம் காட்டியதா என்பதை ஸ்டார் விஜய் டிவியில் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் தலைமையில் பட்டிமன்றம் நடக்கும் என விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அசைவூட்ட புகைப்படங்களுக்கு The 27 Most Important Moments From The Oscars
மேற்பட்ட வருணணைகளுக்குOscars 2015: All the winners, speeches, and best moments – Vox

தழற்சொல் – சிறுகதை பரிந்துரை

Thomas_Pierce_This_is_an_alert_New_Yorker

இந்தக் கதையை நியு யார்க்கர் இதழில் வாசிக்கலாம்: This Is an Alert – The New Yorker

இந்தக் கதையைப் படித்தால் அறிபுனை கதையைப் படிப்பது போல் இருக்கிறது. வருங்காலத்தில் எங்கெங்கும் பீடித்திருக்கும் போர் மற்றும் போர்ச்சூழலினால் தோன்றும் அச்சத்தையும் பிரதிபலிக்கிறது. அறிவியலின் வளர்ச்சியான ஆளில்லாமல் பறக்கும் தூரயியங்கி விமானங்களின் ஆபத்துகள் நிறைந்த அவநம்பிக்கையான சமூகத்தைச் சுட்டுகிறது. அறிவியல் குறைவாகவும், புனைவு அதிகமாகவும் காணப்படுவதால் அறிபுனை என்னும் வகையில் இந்தக் கதையை வைக்கிறேன்.

பதினான்கு வயது மகளுடனும் மனைவியுடனும் மாமியார் வீட்டிற்கு விருந்துண்ணச் செல்பவனின் நிகழ்வுகளை தாமஸ் பியர்ஸ் எழுதி இருக்கிறார். கதையின் தலைப்பில் சொல்வது போல், ‘இது ஒரு எச்சரிக்கை’ என்னும் அறிவிப்பு, அவர்களை அன்றாடம் துரத்துகிறது. எப்போது அந்த அபாய அசரீரி ஒலிக்கும், எதற்காக அதற்கு அடிபணிகிறோம், எவ்வளவு நேரம் அந்த எச்சரிப்பு நீடிக்கும் என்று தெரியாது.

பதின்ம வயதில் மகளுக்கு நிகழும் மாற்றங்களும் குழப்பங்களும் இயல்பாக வந்து போகின்றன. மார்பகப் புற்றுநோஇல் இருந்து மீண்ட மாமியாரின் செய்கைகள், வயதானோரின் பாதுகாப்புணர்வை சொல்கின்றன. கணவன் உடன்பிறந்தான் பார்க்கும் காமப் பார்வைகள் வருங்காலக் கதைக்கு உயிரூட்டுகின்றன. சொட்டைத் தலையை நினைத்து வருந்தும் நடுத்தர வயதினன் கதையோடு ஒன்ற வைக்கின்றன.

ரொம்பவே போரடித்து விடக் கூடிய களம். அதை எப்படி கதாசிரியர் சுவாரசியமாக்குகிறார்? கொஞ்சம் போல் பாலுணர்வு உலவ விடுகிறார். துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை குறித்த விவாதத்தை எழுப்புகிறார். இதுதான் இறுதி முடிவு என்று சொல்லாமல் விட்டு வைக்கிறார். ஆறு கதாபாத்திரங்கள் இருந்தாலும் நாய்க்குக் கூட போதிய அளவு விவரிப்புகளும் குறியீடுகளும் கொடுக்கிறார்.

ஐஸிஸ் வளராமல் இருக்க எங்கோ இருக்கும் சிரியாவில் குண்டு போடுகிறார்கள். ஹௌத்திகள் வளராமல் இருக்க யேமனில் பறந்து பறந்து தாக்குகிறது சவுதி அரேபியா. தலைக்கு மேலே எங்கோ நடக்கும் சண்டைகள். அமெரிக்காவில் நிலத்தில் வாழ்வோருக்கும் இந்தப் போர்களுக்கும் சம்பந்தமே இல்லை. அந்தச் செய்திகளை, தொலைக்காட்சியிலும், தினசரிகளிலும், இணையத்திலும் மட்டுமே பார்க்கிறோம். அவர்கள் கெட்டவர்கள் என்பதால் தாக்குகிறோம். இந்தக் கதையில் வான்வெளியில் நடப்பதாகச் சொல்லப்படும் டிரோன் போர்கள் அதை நினைவுக்குக் கொணர்ந்தது. ”இந்த நாட்டிற்குச் செல்லாதே” என்னும் கபர்தார் அறிக்கைகள், அவ்வப்போது வரும் அசரீரிகள் உணர்த்தின.

தாமஸ் உடன் ஆன நேர்காணலை இங்குப் படிக்கலாம்: » INTERVIEW: Thomas Pierce, author of Hall of Small Mammals

சிறுகதைத் தொகுப்பு புத்தகத்திற்கான விமர்சனம்: ‘Hall of Small Mammals,’ Short Stories by Thomas Pierce – NYTimes.com

Uttama Villain – Movie Review: உத்தம் வில்லன் விமர்சனம்

Kamal_Movies_UthamaVillan_uttama-villain

சினிமாவில் வாழ்க்கையைத் தேடுபவர்கள் தமிழர். திரையில் நாயகர் நியாயத்தைத் தட்டிக் கேட்டால், நிஜத்திலும் அவ்வாறே இருப்பார் என நினைப்பர் தமிழர். சமீப காலத் தமிழ்ப்படங்களில் அந்த வகை கதாநாயகர்களை உரித்துக் கொடுக்கும் படங்கள் வர ஆரம்பித்தன. சித்தார்த் நடித்த ‘ஜிகர்தண்டா’ அவ்வகையில் வந்த படம். கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’, அதே ரகத்தில் இன்னொரு படம்.

கமலுக்கு எந்த மாதிரி திரைப்படங்கள் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுக்கும்? நடனத்தில் பரிமளித்த சலங்கை ஒலி, கடைசியில் இறந்து போகும் குணா, இரு வேடத்தில் தோன்றிய ஆளவந்தான் போன்றவை நினைவுக்கு வருகின்றன. ”உத்தமவில்லன்” திரைப்படத்தில் இவை அனைத்தும் காணக் கிடைக்கின்றன. பழங்கால வேடத்தில் உத்தமனாகவும் நிகழ்கால கதாநாயகன் மனோரஞ்சன் ஆகவும் இரு வேடத்தில் கமல் வருகிறார். வித்தியாசமான நடனத்தை அபிநயம் செய்பவராக நடிக்கிறார்.

கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும்போது கட்டுரை எழுதச் சொல்வார்கள். அந்தக் கட்டுரையில் சொந்த விஷயங்களும், தனிப்பட்ட அனுபவங்களும் நிறைந்து இருக்க வேண்டும். அந்த மாதிரி நேர்மையாகவும் உண்மையாகவும் எழுத்தில் இருந்தால் மட்டுமே, அந்தக் கட்டுரையோ அல்லது கதையோ வாசகரின் மனதில் தங்கி நிலைத்திருக்கும். வேறொருவருக்கு நிகழ்ந்ததை புனைவாக்கினாலும் கூட அதில் கொஞ்சமேனும் சொந்த ஆசாபாசங்களை உணர்வுகளாக வடிக்க வேண்டும். அதில் கொஞ்சம் கற்பனையும் கலந்தால், புனைவுக்குரிய சுவாரசியத்தையும் உருவாக்கி விடலாம்.

’உத்தம வில்லன்’ படத்தில் நாயகன் மனோரஞ்சனுக்கு நடிகன் கதாபாத்திரம். அறுபது வயது ஆகிவிட்டாலும், தொந்தியும் தொப்பையும் குலுங்கினாலும் கூட, இருபது வயது நாயகிகளோடு ஆட்டம் போடும் கதாபாத்திரம். நாலு சண்டை, ஐந்து பாட்டு, ஏ / பி / சி வர்த்தகத்திற்கான வியாபார வித்தகங்கள் கொண்ட திரைப்படத்தில் நடித்து தள்ளுகிறார். திடீரென்று ஒரு நாள், தன்னுடைய பெயர் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்னும் வினா எழுகிறது. தனக்கு துவக்க காலத்தில் நல்ல படங்களைக் கொடுத்து சிறப்பான நடிகன் என்று பலரும் பேச வைத்த 83 வயதான இயக்குநர் மார்க்கதரிசியிடம் செல்கிறார்.

மார்க்கதரிசியோடு இணைந்து ‘உத்தம வில்லன்’ படத்தைத் துவங்குகிறார். இதற்கு நடுவில் மூன்று காதல்கள். முதல் காதல் நிறைவேறவில்லை. இரண்டாவது மனைவி மட்டும் காதலிக்கும் இல்லத்தரசி காதல். மூன்றாவது மூத்த வயதில் இளவயதினரை பாசத்துடனும் காமத்துடனும் பற்றும் ஒவ்வாக் காதல்.

திரைப்படத்தில் வரும் மூன்று காதல் போல் மூன்று தந்தையர்களும் உண்டு. முதல் தந்தை மாமனார் பூர்ணசந்திர ராவ் ஆக வரும் கே விஷ்வநாத். இரண்டாவது தந்தை நாயகன் மனோரஞ்சன். மூன்றாவது தந்தை ஜேகப் ஜக்கரியா ஆக வரும் ஜெயராம்.

மாமனார் வருங்காலத்தைப் பற்றிக் கவலைப்படுபவர். தன் மகள் நலத்தை எண்ணி சிந்தித்து செயல்படுபவர். மகளுக்காக மாப்பிள்ளையை உருவாக்கியவர். ஒன்றுமில்லாத ஏழை ஆறுமுகத்தை காதல் இளவரசன் மனோரஞ்சன் ஆக்கியவர்.

மனோரஞ்சனுக்கு இரண்டு குழந்தைகள். முதல் குழந்தை மனோன்மணி. கல்லூரிப் படிப்பை முடிக்கும்வரை மனோன்மணி என்று தனக்கு ஒரு மகள் இருப்பதையே அறியாதவர். காதலில் பிறந்த குழந்தையை சூழ்நிலை நிர்ப்பந்தத்தால் கைவிட்டவர். இன்னொரு குழந்தை முறையாகப் பிறந்த குழந்தை. ஆனால், அந்த மகனுடனும் பெரியதாக அன்னியோன்யம் எதுவும் வளர்க்காதவர். தான் உண்டு, தன் நடிப்பு உண்டு, தன் முதிய காதலிகள் உண்டு என்று சுயலவாதியாக வாழ்க்கையைக் கொண்டாடுபவர்.

மூன்றாமவர் ஜேகப் சக்கரியா. ஜெயராம் இந்த கதாபாத்திரத்தில் அமரிக்கையாக வந்து போகிறார்.

திரைப்படத்தில் மூன்று பேரைக் குறிப்பிட்டு பாராட்ட வேண்டும்.

முதலாமவர் எம் கிப்ரான். படத்தின் பாடல்களில் பாரம்பரியமும் இருக்க வேண்டும். தற்காலத்திற்கு ஏற்ப கேட்கக் கூடிய துள்ளலாகவும் பாய வேண்டும். கதையோடும் இழைந்தோட வேண்டும். அவை எல்லாம் சாத்தியமாக்கி உள்ளார்.

தாலி கட்டிய மனைவியாக ஊர்வசி வருகிறார். ஆஸ்பத்திரி காட்சி மட்டுமே அவருடைய உயிர் ஊட்டத்திற்கு அத்தாட்சி. மைக்கேல் மதன காமரஜனில் பழக்கமான ஜோடி. கமலின் நிஜ வாழ்வில் சரிகா அவரை விட்டுப் பிரிந்ததை நினைவுறுத்தும் குணச்சித்திரம்.

மூன்றாவதாக சொக்கு செட்டியாராக வரும் மேனேஜர் எம் எஸ் பாஸ்கர். இவருக்குக் கொடுக்கப்பட்டதை ஒழுங்காகச் செய்யாவிட்டால்தான் செய்தி. கிரேசி மோகன் தனமான மொழிமாற்ற வசனங்களை சர்தார்ஜியுடன் சேர்ந்து கலகலக்கிறார். ‘அழுதா உங்களுக்கு நல்லாயில்ல!’ என்று மனோரஞ்சன் சொன்னாலும் அந்தக் காட்சியிலும் இயல்பான உடல்மொழியும் அவருக்கே பிரத்தியேகமான அன்றாட இயல்புகளின் பிரதிபலிப்பாலும் ”சொக்கு” நிலைத்திருப்பார்.

திரைப்படத்தின் மிகப் பெரிய பலவீனம் ‘உத்தமன்’ கதாபாத்திரம் வந்து போகும் நாடகீய தருணங்கள். அந்தப் பழங்காலக் கதையில் நிறைய சாத்தியங்கள் இருந்திருக்கின்றன. ராஜா – ராணிகளை கேம் ஆஃப் த்ரோன்ஸ் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் கூட தத்ரூபமாகக் காட்டுகிறார்கள். ஆனால், தமிழ்த் திரைப்படத்தில் கிரீடம் வைத்து, கவசம் தைத்து, உத்தரீயணம் தரித்து, பஞ்சகச்சம் கட்டி சினிமா எடுப்பதாகச் சொல்கிறார்கள். இந்த மாதிரி பாவ்லா அரசர்களைக் கிண்டல் செய்வதில் பாடலில் ‘புலியை முறத்தால் விரட்டிய தமிழச்சி!’ என்று கோடிட்டு கிண்டலும் செய்கிறார்கள்.

அந்த மாதிரி நுண்ணிய நகைச்சுவை புரிகிறது. ஆனால், ‘ஜிகர்தண்டா’ போல் தமிழ் சினிமாவிற்குள் இருந்து கொண்டு தமிழ் சினிமாவை நக்கல் அடித்த காட்சியமைப்போ, வசனங்களோ எதுவுமே இடம்பெறவில்லை. “நான் புத்திசாலி!” என்று கமல் சொல்லிக் கொண்டே, “எனக்கு நடனம் தெரியும் பார்!”, “நான் தெய்யம் ஆடுகிறேன் பார்!”, “என்னுடைய நகைச்சுவையைப் பார்!” என்று காதில் வந்து கத்துவது போல் படம் மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து அன்னநடை இடுகிறது.

குறுநில மன்னர்களைப் பற்றியும் சேர, சோழ, பாண்டிய பேரரசுகளின் இலட்சணங்களை தோலுரித்து, அதே சமயம் காமெடியும் கலந்து கொடுத்த ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ போல் வெளிப்படையாக அரசியலும் பேசவில்லை. அந்தப் படத்தில் உக்கிரபுத்தன் என்னும் வீரன் ஒருவனும் புலிகேசி என்னும் கோழை மன்னனும் இருந்தார்கள். உத்தம வில்லனில், அந்த இருவரும் ஒருவராகவே வருகிறார்கள். ஆனாலும், இந்த நாடகத்தை இவ்வளவு நீட்டி முழக்கியதற்கு, சன் தொலைக்காட்சி படத்தொகுப்பாளரிடம் கொடுத்தால், அரை மணி நேரமாக வடிவேலுவின் காட்சிகளை சுருக்கித் தந்திருப்பார். அது இந்தப் படத்தை விட சுவாரசியமாக இருந்திருக்கும்.

கமலுக்கு இந்தப் படம் இன்னொரு மணிமகுடம். நிரலி எழுதுபவர் எனக்கு ஜாவா தெரியும், ஆரக்கிள் தெரியும், ரூபி தெரியும் என்று அடுக்கி, தன்னுடைய பயோ டேட்டா சொல்லிக் கொள்வார். அது போல் நான் நடிகனாக நடித்து இருக்கிறேன். தந்தையாக வந்திருக்கிறேன். கதக்களி ஆடி இருக்கிறேன். ஆண்ட்ரியாவோடு கொஞ்சி இருக்கிறேன். பூஜாவை கண்ட இடங்களில் தொட்டு இருக்கிறேன். மூளைக்கட்டி வந்தவனின் வேதனையைக் காட்டி இருக்கிறேன். – இப்படி பட்டியல் போட்டு, தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார்.

திரையரங்கில் இருந்தவர்கள் சிரித்த இடங்களில் எல்லாம் எனக்கு தமிழ் வசனம் புரியவில்லையோ என்று சந்தேகப்பட்டு ஆங்கிலத் துணையெழுத்துக்களைப் படித்தால், அப்பொழுதும் சிரிப்பு உண்டாகவில்லை. ஆனால், ஆங்கிலத்தில் மொழிமாற்றாமல், சூழலுக்குத் தக்கவாறு மொழிபெயர்க்கிறோம் என்று சம்பந்தமே இல்லாமல் இஷடத்திற்கு தங்களுடைய காவியத்தை உருவாக்கி இருக்கிறார்கள். தமிழ் வசனங்கள் நிஜமாகவேத் தேவலாம். நன்றாக இருக்கிறது. நிறைய இருக்கிறது. அதுதான் பிரச்சினை. படத்தின் முக்கிய பிரச்சினையும் கூட.

நான் கூட எனக்குத் தெரிந்த கிரேக்கத் தொன்மம், சமீபத்தில் ஹார்ப்பர்ஸ் இதழில் படித்த சிறுகதை என எல்லாவற்றையும் இங்கே நுழைக்கலாம். ஆனால், அதற்கெல்லாம் இந்தப் பதிவில் இடமில்லை. மணி ரத்னம் எடுத்த ஓகே கண்மணி போல் சுருக்க சொல்ல வேண்டாம். ஆனால், நிறைய வெட்டி எறிந்திருக்கலாம். வளவளா வசனத்தைப் பாதியாகக் குறைத்து, கொட்டாவியை தடுத்திருக்கலாம்.

இவ்வளவு சொல்லி விட்டு, திரைப்படத்தில் தேவையில்லாமல் வரும் ”அல்லா” வசன விளிப்பையும், மனோன்மணியின் கழுத்தில் தொங்கும் சிலுவையும், ‘நாங்க கிறிஸ்டியன்ஸ்! எனவே பெருந்தன்மையோடு நடந்து கொள்வோம்!” என்னும் பொதுமைப்படுத்தல்களையும் சொல்லாமல் செல்வது இழுக்கு. தொந்தி பெருத்த பிராமணர்கள் சாப்பிடுவதைக் காட்டுவது ஃபோர்டு பவுண்டேஷன் பாட்டாளிகளுக்கு உழைக்கிறது என்று நிறுவுவது போல் துருத்திக் கொண்டெல்லாம் இல்லை. கமல் படமென்றால் காமம் இருக்கும். நாராயண தூஷணையும் பார்ப்பான் பாஷிங்கும் இருக்கும் என்பது “அவர்கள்” எழுதிய விதி.

படத்தின் முதல் பலவீனம் ‘அகோ வாரும் பிள்ளாய்’ என பியூ சின்னப்பா ரக வசனங்கள் என்றால், கே பாலச்சந்தர் இன்னொரு முட்டுக்கட்டை. அவரை இந்த வயதில் இப்படி படுத்தி இருக்க வேண்டாம். எனக்கு லீலா சம்சனைத் தெரியும் என்று மணி ரத்னம் அவரை உபயோகித்தால், கொஞ்சமாவது பொருந்துகிறது. கான்ஸ்டபிள் வேடத்தில் நடிக்க கான்ஸ்டபிள் ஆகத்தான் இருக்க வேண்டுமா?

குண்டு கமலையும் அவருடைய மடியில் உட்கார்ந்து கொள்ளும் ஆண்ட்ரியாவையும் பார்த்தால் லஷ்மி நரசிம்மரைப் பார்த்த மாதிரி இருக்கிறது. ஆனால், இந்தத் திரைப்படத்தில் நரசிம்மர் செத்து விடுகிறார். தூணைப் பிளந்துகொண்டு நரசிம்மர் வருவார்… வருவார்… என பிரகலாதன் போல் நானும் அஷ்டாவதானி என்னும் வித்தகாதி வித்தக கமலுக்காக படம் நெடுகக் காத்திருந்தேன்.

இப்பொழுது அடுத்த கமல் படத்தில் ஆவது மீள்வார் எனக் காத்திருப்பேன்.