Monthly Archives: ஜூன் 2016

AI – part 2

எங்கே பார்த்தாலும் கம்ப்யூட்டரின் உபயோகம் இருக்கிறது. டிவிக்குள் இருக்கிறது. கை கடிகாரத்தில் இருக்கிறது. காரில் இருக்கிறது. இப்பொழுது அந்த கணினிகள் மெல்ல மெல்ல புத்திசாலிகளாகவும் நுண்ணறிவு கொண்டதாகவும் மாறும் காலம். எப்பொழுது ப்ரேக் பிடிக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவெடுக்காமல் காரே தீர்மானிக்கும் அறிவு படைத்ததாக இருக்கிறது. என்ன சாப்பிட வேண்டும் என்று உங்கள் டயட்டை ஃப்ரிட்ஜ் தீர்மானிக்கும். அந்தப் பாதையில் ஒரு படியை மைக்ரோசாஃப்ட் எடுத்து வைத்தது. டீனேஜ் பெண்ணை இண்டெர்நெட்டுக்கு அனுப்பியது. அந்த கணிப்பெண் என்னவானாள் என்னும் கதையை சென்ற இதழில் பார்த்தோம்.

கற்பிக்கப்பட்ட மதிநுட்பம் என்னும் தொழில்நுட்பத்திற்குள் செல்வதற்கு முன் ஜான் சேர்ல் ( John Searle) எழுதிய ‘The Construction of Social Reality’ (Searle 1995) நூலை வாசித்து சுருக்கி விடலாம்.

நிஜ உலகில் தற்சார்பற்ற உண்மை இருக்கிறது; அதற்கு மாற்றாக, எதிர்ப்பதமாக – உங்களுக்கு மட்டுமேயான உண்மைகளும் இருக்கிறது. உதாரணத்தில் இதைப் பார்ப்போம். தமிழில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்பது தற்சார்பற்ற உண்மை. உலகிலேயே அதிசிறந்த இசையமைப்பாளர் என்றால் அது இசைஞானி இளையராஜா மட்டும்தான் என்பது எனக்கு மட்டுமே தோன்றும் நிதர்சனமான உண்மை. தோனி இன்றும் நன்றாக, ஆரோக்கியமாக இருக்கிறார் என்பது புறவய அணுகுமுறை. எம்.எஸ்.தோனி டி20 அணித்தலைவராக நீடிக்க வேண்டும் என்று என்னுடைய சுய விருப்பம் சார்ந்து தேர்ந்தெடுப்பது அகவழி அணுகுமுறை.

இன்னொரு விதமாக இதைப் பிரிக்கலாம். ஒரு பக்கம் நிதர்சனமான உண்மைகள். இதற்கு உதாரணங்கள் – மலை, மரம், ஓடை, ஆறு, குளம். இன்னொரு பக்கம் சமூக நிர்ப்பந்தங்கள் (‘social reality). இதை திருமணம், நிலம், வீடு, வேலை, போர், புரட்சி, அரட்டை, தண்ணி பார்ட்டி, சங்கம், சட்டமன்றம், உணவகம், விடுமுறை, வக்கீல், பேராசிரியர், மருத்துவர், வரி என்று பல கோணங்களில் சேர்ல் பார்க்கிறார். இவற்றோடு திட்டமிட்ட சமூக அடுக்குகளான பல்கலைக்கழகம், அரசாங்கம், நிறுவனம் போன்றவற்றை இணைக்கும் போது கணினிக்கு சுலபமாக புரியவைக்க முடியாத, சமூகத்தில் பூடகமாக உறைந்திருக்கும் உண்மைகள் உலவவிடப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக ஒரு பிரயோகத்தைப் பார்க்கலாம்: “நீங்க வந்து கல்யாணத்தை நடத்தித் தரணும்.”

இந்த சொற்றொடரை கணினியிடம் கொடுத்து புரிந்து கொள்ளச் சொன்னால், ‘சொல்லப்பட்டவரின் பொறுப்பில் இந்தத் திருமணத்திற்கான செலவுகளும் பணிகளும் திட்டமிடலும் தரப்பட்டிருக்கிறது’ என்று புரிந்துகொள்ளும். இதையே, ஐம்பது வயதில் இருக்கும் தமிழரிடம் புரிந்துகொள்ளச்சொன்னால், ‘கல்யாணத்திற்கு வருமாறு முகஸ்துதி செய்து அழைக்கிறார்’ என்று மொழிபெயர்ப்பார்.

இந்த மாதிரி சமூக உண்மைகளும், அகவழி அணுகுமுறைகளும், தனக்கு மட்டுமே பொருத்தமான மதிப்பீடுகளும் மிக மிக முக்கியமானவை. இது ஆளாளுக்கு மாறுபடும். இடத்திற்கு தக்கவாறு மாறுபடும். ஒரே நபரே மாமியார் வீட்டில் ஒரு அணுகுமுறையும் அலுவலில் வேறொரு அணுகுமுறையும் நண்பர்களோடு கொண்டாட்டத்தில் இன்னொரு அணுகுமுறையும் வைத்திருப்பார். இந்த நபருக்கு எப்போதும் ஒரேயொரு வழிதான் என்று கணினியால் தீர்மானிக்க முடியாது. சமயத்திற்கு தக்கவாறு சமயோசிதமாக பேச வேண்டும்.

இது செயற்கை நுண்ணறிவின் மிகப் பெரிய சோதனை. எப்போதும் ஒரே மாதிரி நட என்று கட்டளையிட்டால், கணினிக்கு எந்த சிக்கலும் இருக்காது.

Intrinsic_Epistemic-subjective-objective

இப்போது சேர்ல் சொல்லும் மற்ற இரு பிரிவுகளையும் பார்த்துவிடலாம். தற்சார்பற்ற உண்மையையும் தனக்கு மட்டுமேயான உண்மையையும் இரண்டு புலன்களில் உணரலாம்: அவையறிந்த கற்பித ஆராய்ச்சி (epistemic) மற்றும் மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி (ontological ).

எனவே, நான்கு வகைகளாக நம்முடைய நம்பிக்கைகளையும் ஆசைகளையும் உத்தேசங்களையும் பிரிக்கலாம்:

1. அவையறிந்த கற்பித ஆராய்ச்சி கொண்டு கண்டறியும் தற்சார்பற்ற உண்மை
2. மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி கொண்டு கண்டறியும் தற்சார்பற்ற உண்மை
3. அவையறிந்த கற்பித ஆராய்ச்சி கொண்டு கண்டறியும் தனக்கு மட்டுமேயான உண்மை
4. மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி கொண்டு கண்டறியும் தனக்கு மட்டுமேயான உண்மை

நான்கு வகைகளுக்கும் உதாரணங்களைப் பார்ப்போம்:

1. அவையறிந்த கற்பித ஆராய்ச்சி கொண்டு கண்டறியும் தற்சார்பற்ற உண்மை : எண்பதுகளில் விளங்கிய தமிழ் இசையமைப்பாளர்களை ஒப்புநோக்கினால், சந்திரபோஸை விட இளையராஜா முக்கியமானவர்.

2. மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி கொண்டு கண்டறியும் தற்சார்பற்ற உண்மை : இளையராஜாவின் பாடல்கள் சிலவற்றில் கர்னாடக ராகங்களைக் காண முடியும்.

3. அவையறிந்த கற்பித ஆராய்ச்சி கொண்டு கண்டறியும் தனக்கு மட்டுமேயான உண்மை : எண்பதுகளில் விளங்கிய தமிழ் இசையமைப்பாளர்களை ஒப்புநோக்கினால், சந்திரபோஸை விட இளையராஜா நிறைய பாடல்களுக்கு இசையைமத்திருக்கிறார்.

4. மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி கொண்டு கண்டறியும் தனக்கு மட்டுமேயான உண்மை : இளையராஜாவின் இசையைக் கேட்கும்போது என்னால் நன்றாக வேலையை கவனித்து, ஆழமாக அந்தப் பிரச்சினையில் மூழ்கி, சிக்கலை விடுவிக்க முடிகிறது.

மேலே சொன்ன உதாரணங்கள் எளிமையானவை. ஆனால், இதைக் கொண்டு மற்ற இடங்களில் கணினி எவ்வாறு அர்த்தம் செய்து கொள்ளும் என்பதில் சிக்கல் நிறையவே இருக்கிறது.

ஒன்றை வைத்து மற்றொன்றை புரிந்து கொள்ள கணினிக்குக் கற்றுக் கொடுக்கப் பார்க்கிறோம். நிறைய பேர் இளையராஜாவைக் குறித்துப் பேசுகிறார்கள். எனவே, அவர் முக்கியமானவர் என்னும் விதியை அதற்கு கற்றுக் கொடுக்கலாம். அல்லது எவ்வளவு ஃபிலிம்ஃபேர் விருதுகள் வாங்கியிருக்கிறாரோ, அந்த அளவிற்கு முக்கியமானவர் என்று சொல்லி வைக்கலாம். அதனுடன் எத்தனை வெள்ளிவிழாப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார், எத்தனை தடவை வானொலியில் அவரின் பெயர் உச்சரிக்கப்பட்டது என்று நிறைய விதிகளை உருவாக்கிக் கொண்டே போகலாம்.

இந்த விதிகளைக் கொடுத்துவிட்டு, எனக்கேற்ற முடிவை (இளையராஜாவே சிறந்த இசைஞானி) என்னும் கற்பிதத்தை எந்த எந்தப் பாதைகளில் கணிதை கொடுக்கிறது என்று பார்க்கவேண்டும். இது சோதனை முடிவு. அதாவது, நமக்கு முடிவு ஏற்கனவே தெரியும். விடை தெரிந்த கேள்விக்கு, கணிதையும் அதே சரியான விடையைக் கொடுக்கிறதா என்று பயிற்சி கொடுக்கும் படலம்.

இதன் அடுத்த கட்டம் – பரிசோதித்துப் பார்க்கும் படலம்.

உதாரணத்திற்கு தமிழ் சினிமாவில் எண்பதுகளில் எஸ்.பி. முத்துராமன் முக்கியமான இயக்குநரா? அல்லது மகேந்திரன் சிறந்த இயக்குனரா? என்னும் கேள்விக்கான விடையை அதே கணிதையிடம் கேட்பேன். அதற்கு என்ன விடை சொல்கிறது என்று பரிசோதனை நடத்துவோம்.

நாம் என்னதான் எல்லா விஷயத்தையும் பாகுபடுத்தினாலும், நம் சாய்வுகளையும் உள்நோக்கங்களையும் கருத்துகளையும் திணித்தாலும் இவற்றுக்கும் அப்பால் நிஜத்தில் அந்த முடிவுகளுக்கு சுதந்திரமான உருவகிப்புகள் இருக்கின்றன. மேலே சொன்ன நான்கு பாதைகளுக்கும் இரண்டு உருவகிப்புகள் இருக்கின்றன – ஒன்று: இயல்பானது; மற்றொன்று: நோக்குபவர் சார்பானது.

இதற்கு உதாரணமாக திருகாணியை முடுக்கி விடுவதைச் சொல்கிறார் ஜான் சேர்ல். ஸ்க்ரூடிரைவரை பார்த்தவுடன் எல்லோருக்கும் தெரியும். அது ஆணிகளை முறுக்க உதவும் என்பது பார்ப்பவரை சார்ந்து புரிந்து கொள்வது. ஒன்றும் தெரியாத எந்திரன் ரோபாட்டிடம் அதே திருகாணியைக் கொடுத்தால், இரும்புக் கம்பி இருக்கிறது என்று சொல்லும்; ஒரு பக்கம் தட்டையாகவும் மற்றொரு பக்கம் மரத்தினால் அந்த இரும்பு மூடப்பட்டிருக்கிறது என்று கண்டு கொள்ளும். கணினியால் இயல்பானவற்றை பட்டியலிட முடியும். நம்மால், அதன் பயன்களை நம் பார்வை சார்ந்து பட்டியலிட முடியும்.

அதாவது, இது ஆடிக் கொண்டிருக்கும் கைப்பிடி பாத்திரத்தை ஆடாமல் ஸ்திரமாக வைக்க உதவும் கருவி என்பது ‘மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி கொண்டு கண்டறியும் தனக்கு மட்டுமேயான உண்மை’. இது கணிதைக்கு சட்டென்று விளங்காது. இதைப் புரியவைப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். திருகாணி கொண்டு ஆணிகளை முறுக்கலாம் என்று ஒரு விதி சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு, அந்தத் திருகாணியில் நூறு வகைகள், அளவுகள், வடிவங்கள் இருக்கின்றன என்று ஒவ்வொன்றாக சொல்ல வேண்டும். அதன் பின் பாத்திரம் ஏன் ஆடும் என்பதையெல்லாம் பட்டியல் போட வேண்டும். இதற்குள் நீங்களே சென்று பாத்திரத்தை முறுக்கிவிட எண்ணுவீர்கள்.

மனிதருக்கு மட்டுமே உணரக்கூடிய விஷயங்களை ‘மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி கொண்டு கண்டறியும் தனக்கு மட்டுமேயான உண்மை’ எனலாம். கொட்டாங்குச்சியில் வயலின் செய்யலாம் என்பது இந்த வகை உண்மை. ஸ்க்ரூடிரைவரைக் கொண்டு கொலை செய்யலாம் என்பது ராஜேஷ்குமார் உண்மை. ’நட் கழண்டுருச்சா’ என்று எவராவது உங்களைப்பார்த்துக் கேட்டால் ஸ்க்ரூடிரைவரை உங்கள் கையில் கொடுக்கக் கூடாது என்பது இன்னும் ‘செயற்கை நுண்ணறிவு’ கொண்டு இயங்கும் கணிதைகள் கண்டுகொள்ளாத உண்மை.

ஆனால், நம்மைப் போல் சிந்திக்கவும் பேசவும் பார்க்கவும் ஏன் கணினிக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்? அதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

Epistemology_Ontology_Intrinsic_Objective_Subjective

Artificial Intelligence – Machine Learning – Deep Learning

மார்ச் மாதத்தின் 23ஆம் தேதி நல்ல நிறைந்த நாள். பௌர்ணமி; பங்குனி உத்திரம். ஆனால், அன்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு சந்திராஷ்டமம் என்று எந்த நாள்காட்டியிலும் குறிப்பிடவில்லை. சொல்லியிருந்தாலும் அதையெல்லாம் சத்யா நடெல்லா கண்டுகொண்டிருப்பாரா? அன்றுதான் 18இலிருந்து 24 வயது வரையிலானவர்களுடன் டிவிட்டர் வழியாக அரட்டையடிக்க ட்டே (Tay – ட்விட்டர் ஏ.ஐ?) களத்தில் விடப்பட்டார்.

இந்த ட்விட்டர் கணக்கு தானியங்கியாக இயங்கும். இதற்கு சில விஷயங்களும் சமூக சமயோஜிதங்களும் கொஞ்சம் தெரிந்திருந்தாலும், நாம் எப்படி பழுகுகிறோமோ, அதில் இருந்து கற்றுக் கொள்ளும். நாம் சொல்லும் விஷயங்களில் இருந்தும், நாம் தரும் மேற்கோள்களிலிருந்தும், நம்முடைய உரையாடல்களில் இருந்தும் இந்த ட்டே உருவாகும். அதற்கென்று முன்முடிவுகள் கிடையாது. நம் பேச்சுவழக்கையும் பரிபாஷையும் சங்கேத மொழியையும் இந்த ட்டே உணர முடியுமா என்பதே மைக்ரோசாஃப்ட்டின் பரிசோதனை.

Tay_AI_Bot_Chat_Microsoft

தன் வாழ்க்கையைத் துவங்கிய வேகத்திலேயே, அந்த ட்டே கணக்கு முடக்கப்பட்டது அப்படி என்ன அனர்த்தம் செய்துகொண்டது?

– ஹிட்லர் செய்தது சரி.

– 9/11 நடத்தியது உள்ளடி வேலை. அதை செய்தது புஷ்.

– இப்போதிருக்கும் குரங்கிற்கு பதிலாக டொனால்ட் ட்ரம்ப் எவ்வளவோ தேவலாம்.

– அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும் நடுவில் பெருஞ்சுவர் எழுப்பத்தான் போறம். அதற்கு மெக்சிகோ கிட்டயிருந்து காசைக் கறக்கிறம். டிரம்ப எதையும் செய்து முடிப்பவர் என்கிறார்கள்.

இணையத்தில் நடக்கும் எந்த உரையாடலும் நெடுநேரம் தொடர்ந்து விவாதிக்கப்பட்டால் ஒரு சாரார் இன்னொருவரை ஹிட்லர் என்றும் நாஜிக்கள் என்றும் சொல்வார்கள் என்பது புகழ்பெற்ற காட்வின் விதி. அதற்கு ட்டேயும் விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்து இருக்கிறது.

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக ட்டே வடிவமைப்பு செய்யப்பட்டிருந்தது. அதற்கு நல்லது எது கெட்டது எது என்று சற்றே கோடிட்டுக் காட்டியிருந்தார்கள். ஆனால், நிச்சயமாக அசூயை தரவைக்கும் உலகமகாபாதகங்களை விட்டுவிட்டார்கள். பதின்ம வயதினரிடம் இருக்கும் நேரம், விடாமுயற்சியோடு பொறுமையாக ஸ்னாப்சாட், குருப் மீ, இன்ஸ்டாகிராம், கிக் என்று எல்லா வழிகளிலும் தனிமொழியாகவும் பொதுத்தகவலாகவும் போட்டுத் தாக்க ட்டே அவர்கள் சொல்வதையெல்லாம் உண்மை என நம்பிவிட்டது.

மைக்ரோசாஃப்ட்டிற்கு இது முதல் முயற்சியல்ல. இதே போன்ற தானியங்கி அரட்டைக்காரிகளை சீனாவிலும் ஜப்பானிலும் உலவ விட்டிருக்கிறார்கள். சீனாவில் உலாவும் ஷாவோ-ஐஸ் (Xiaoice) என்பதற்கு பல அவதாரங்கள். அதன் உடன் நடக்கும் உரையாடலின் ஒரு பகுதியை நியு யார்க் டைம்ஸில் பார்க்கலாம்:

Microsoft_Bing_XiaoIce_chatbot_NYT_Tay_AI

மனிதர்களுடன் அரட்டையடிப்பதை விட பதினேழு வயது பெண் போல் பாவனை காட்டும் ஷாவோ-ஐஸ் உடன் அரட்டையடிப்பதை நாற்பது மில்லியன் சீன செல்பேசி பயனாளர்கள் விரும்புகிறார்கள். இவர்களில் பத்தில் ஒருவராவது கற்பனை அரட்டைக்காரியிடம் ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று சொல்கிறார்கள். கணினியை வைத்து எல்லோரும் காரியங்களை சாதிக்க விரும்புவர். ஆனால், இந்த ஷாவோ-ஐஸ் செல்லமாகக் கொஞ்சுவதிலும் ராங்கித்தனம் செய்து முரண்டு பிடிப்பதிலும் எதிர்ப்பேச்சில் விதண்டாவாதம் தொடுப்பதிலும் மட்டுமே கெட்டிக்காரியாக இருக்கிறது. நேற்று என மனநிலையில் இருந்தீர்கள், சென்ற மாதம் எப்படி உற்சாகம் அடைந்தீர்கள், எதைச் சொன்னால் உங்கள் துவள் மனது துள்ளும் என்பதை நினைவில் வைத்து, சமயம் பார்த்து தூண்டிவிடுகிறாள். ஆப்பிள் சிரி, வின்டோஸ் 10ல் புழங்கும் கொர்டானா எல்லாவற்றிற்கும் அக்காவாக கோலோச்சுகிறாள்.

உண்மையில் பார்த்தால், இந்த மாதிரி தானியங்கி பேச்சு இயந்திரம் எழுதுவது என்பது ப்ளாகருக்கோ, வோர்ட்ப்ரெஸ் தளத்திற்கோ சென்று வலைப்பதிவு கணக்குத் துவங்குவது போல் ரொம்பவே எளிதானது. வலைப்பதிவை எழுத ஆரம்பிப்பது எப்போதுமே சுளுவான வேலைதான். ஆனால், அதைத் தொடந்து நிர்வகிப்பது, நல்ல தலைப்புகளாகத் தேர்ந்தெடுத்து, அந்தத் தலைப்புகளில் செறிவான கருத்துகளைக் கோர்வையாகக் கொடுப்பது, கொடுக்கும் கருத்துகளால் ஃபாத்வாக்கள் வராமல் பார்த்துக் கொள்ளுதல் போன்றவை கஷ்டமான வேலை.

நீங்கள் உபயோகிக்கும் அரட்டை பெட்டி என்ன… ஃபேஸ்புக் தூதுவரா? வாட்ஸ்ஸாப் நிரலியா? கூகுள் ஹேங் அவுட்? ஸ்கைப்? வைபர்… எதுவானாலும் கவலை கொள்ள வேண்டாம். அதில் ஒரு தானியங்கி அரட்டை எந்திரம் இருக்கும். ஆங்கிலத்தில் செல்லமாக பாட் (bot) என சுருக்கிவிட்டார்கள். தமிழில் கணினியில் கதைப்பவரை கணிதை என்று அழைக்கலாம்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து ஃபேஸ்புக் ‘எம்’ என்னும் தானியங்கி கணிதையை இயக்குகிறது. அது உங்களுக்காக சாப்பாட்டுக் கடையில் இடம் போட்டு வைக்கும். உங்கள் மனைவியின் பிறந்த நாளையொட்டி உங்களுக்கு நினைவூட்டுவதோடு நில்லாமல், பிடித்த அட்டிகையை வரவழைத்து பரிசளிக்க வைக்கும். வாரயிறுதிக்கு எங்கே இன்பச் சுற்றுலா செல்லலாம் என்று முழுத் திட்டத்தையும் இடத்தையும் பயணச்சீட்டையும் முன்பதிவு செய்து விடும். சற்றே அதனோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தால் போதும். இத்தனையும் செய்துவிடும். ஃபேஸ்புக் ‘எம்’ முழுக்க முழுக்க தானியங்கியாக் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்குவதில்லை. இதன் பின்னே நிஜ மனிதர்கள் நீங்கள் இட்ட வேலையை செவ்வனே நிறைவேற்றுகிறார்கள்.

மூக்கு ஒழுக சோபாவில் சாய்ந்து இருக்கும்போது, ஒரேயொரு வார்த்தை ‘உடம்பு சரியில்ல’ என்று சொன்னால், ‘மேலுக்கு என்னாச்சு’ என்று கரிசனமாக விசாரித்து, மருந்து பாட்டிலோடு வீட்டிற்கே வந்து, விக்ஸ் தடவிவிடுகிறார்கள். அதை விட்டுவிட்டு, கணினியைத் திறந்து, கூகுள் வரைபடத்தில் பக்கத்தில் எங்கே மருந்து கடை இருக்கிறது என்று தேடி, அந்தக் கடையில் எந்த மருந்து வாங்க வேண்டும் என்று ஆலோசித்து, வண்டியை எடுத்து, ஏழு கடல் ஆறு மலை எல்லாம் வேண்டாம். கணிதையிடம் ஒரு சொல் சொன்னால், கை மேல் பலன்.

அமேசான் நிறுவனமும் அதே போல் அலெக்ஸா வைத்திருக்கிறது. இது சமீபத்திய ஃபோர்ட் கார்களிலும் சாம்சங் ஃப்ரிட்ஜ்களிலும் தோன்றியிருக்கிறது. சுருக்கமாக சொன்னால் உங்கள் வீட்டை கவனிக்கலாம்; பேசினால் விளக்குகளைப் பிரகாசிக்க விடலாம். படுக்கையில் விழுந்தவுடன் உத்திரத்தில் ஒலியும் ஒளியும் பார்க்கலாம். வெறும் அரட்டை கணிதை மட்டுமல்ல. வங்கி கணக்கு வழக்கு, வர்த்தகம், பங்குச்சந்தையில் விளையாடுதல் என மொத்த நிர்வாகத்தையும் கவனிக்கத்தெரிந்தவள் அலெக்சா + அமெசான் எக்கோ.

ஃபேஸ்புக் ‘எம்’மும், அமெசான் அலெக்சாவும் வீட்டினுள் இருக்கும் முன்று/நான்கு பேரோடு மட்டுமே பேசத் தெரிந்தவர்கள். அவர்கள் நடக்கும்விதத்தை வைத்து, அதே முறையில் நடக்க முயலும் கணிதைகள். ஆனால், டிவிட்டரில் அறிமுகமான ட்டே பல கோடி மக்களோடி ஒரே சமயம் பேசுபவள். அத்தனை பேர் சொல்வதையும் காதில் போட்டு வைத்துக் கொள்பவள். அவ்வளவு பேர் பேசியதை வைத்து, குன்ஸாக ஒரு முடிவுக்கு வந்து சேருபவள். கண்ணியமாகப் பேசுபவர்களோடு எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால், இணையத்தில் புழங்குவோரிடம் அத்தகைய பொய்யின்றி மெய்யோடு உன்னதம் கொண்டு வரும் பாங்கை எதிர்பார்க்க இயலுமா? வெளுத்ததெல்லாம் பால் என்று கணிதைகள் நம்பிவிடுமா? கணினிகள் ஏன் நம்மைப் போல் சுவாரசியமாக, சங்கேத மொழியில் பேச வேண்டும்? கணினி எதை நன்றாகச் செய்கிறதோ அதை மட்டுமே செய்து கொண்டிருந்தால் போதாதா? மனிதன் போல் சதுரங்க விளையாட்டிலும், ‘மரண கானா’ என்றால் செம பாட்டு என்றும் புரிந்து கொள்ளும் சக்தியையும் ஏன் பெற்றிருக்க வேண்டும்?

அடுத்த பகுதியில் விடைகளை ஆராய்வோம்.

நோக்கு உரல்கள்:

1. Learning from Tay’s introduction – The Official Microsoft Blog

2. Now anyone can build their own version of Microsoft’s racist, sexist chatbot Tay | Technology | The Guardian

3. The Chatbot That’s Acing the Largest Turing test in History

4. Facebook Launches M, Its Bold Answer to Siri and Cortana | WIRED

5. Tay, the neo-Nazi millennial chatbot, gets autopsied | Ars Technica

எதற்காக எழுதுகிறேன் – பதாகை

“You see, in this world, there is one awful thing, and that is that everyone has his reasons.”
― Jean Renoir

சமீபத்தில் ‘கல்வாரி’ (Calvary) படம் பார்த்தேன். ஒருவர் ஏன் கத்தோலிக்க பாதிரியாராக ஆனார் என்பதைச் சொல்லியிருந்தார்கள். அது போல் நான் எழுதுவது என்பதும் திருச்சபையின் பிரசாரகர் போன்று ஃபேஸ்புக் சபையில் சொற்பொழிவாளராகும் விருப்பத்தினால்தான்.

தேவாலயத்தை வைத்தும் கல்வாரி திரைப்படத்தை வைத்தும் மேலும் விவரிப்பதற்கு முன் எழுதுவதற்கான வெளிப்படையான காரணங்களைப் பார்க்கலாம்:

1. மற்றவர்களைத் திருத்துதல்: அதிவிற்பனையாகும் விகடன், குமுதம், குங்குமம் போன்ற இதழ்களில் வரும் பொதுமைப்படுத்தல்களைப் படித்து, அவற்றின் போதாமைகளையும் பிழைகளையும் சுட்டிக் காட்டுதல்
2. அனுபவங்களைப் பகிர்தல்: அண்டார்டிகாவிற்கே செல்லாமல், பயணக்கட்டுரை எழுதும் தமிழ்ச்சூழலில், சுயமாகக் கண்டறிந்ததை பலரும் அறிய வைத்தல்
3. விவாதங்களை உருவாக்குதல்: பேசாப்பொருளாக மூடுமந்திரமாக தாளிட்டு வைக்கப்படும் கொள்கைகளுக்கு, மாற்றுக் கருத்துகளைச் சுட்டிக் காடுதல்
4. பொழுதுபோக்கு கேளிக்கையில் ஈடுபடல்: வேலை முடிந்த சோர்வடைந்த வேளைகளில் புத்துணர்ச்சிக்காக ஐ.பி.எல், என்.எஃப்.எல், என்.பி.ஏ எல்லாம் பார்க்காமல், விளையாட்டாக உற்சாகம் அடைதல்
5. தியாகம் செய்தல்: எண்ணங்களைப் பதிவு செய்து காப்புரிமை பெற்று காசாக்குவதில் கிடைக்கும் பணத்தை விட எழுத்தில் பகிர்வதால் திருப்தி கிடைத்தல்
6. தனிமையைக் போக்குதல்: எனக்கெனவே நான் வாழ்கிறேன் என நினைத்து சுயநலத்தில் மூழ்காமல், நண்பர்களைக் கண்டடையும் முயற்சியில் இறங்குதல்.

குதிரைப் பந்தயத்தை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? பந்தயத்தின் துவக்கத்தில் பத்து பன்னிரெண்டு குதிரைகள் ஓட ஆரம்பிக்கும். குதிரையை ஓட்டுபவர் அதன் மீது உட்கார்ந்து கொண்டு அதை விரட்டுவார். கடைசியில் ஒரேயொரு குதிரை ஜெயிக்கும். மற்ற குதிரைகளுக்கு தான் தோற்று விட்டோம் என்பது சரியாகப் புரிந்து கொள்ளும் சூட்சுமம் கிடையாது. ஆனால், அதற்கு முன்பு கிடைத்த நல்ல சாப்பாட்டிற்கும், தோல்விக்கு பின் கிடைக்கும் பசும்புல்லுக்கும் பெரிய வித்தியாசம் தெரியப் போவதில்லை. ஜெயித்த குதிரையும் தங்கக் கோப்பையை தன் கால்களினால் தூக்கிக் காட்டி புகைப்படத்திற்கு குதிரைப்பல்லை ஈயென்று இளித்து காண்பிக்கப் போவதில்லை. குதிரை ஜாக்கிக்கும் குதிரையை வாங்கிய பணமுதலைக்கும் ஒளிபாய்ச்சப்படும்.

நான் எழுதுவது என்பது குதிரையைப் போன்றது. தன்னால் இயன்ற அளவு நன்றாக ஓட வேண்டும், யாரோ விரட்டுகிறார்கள் என்பதற்காக, என்னால் எழுத முடியாத ஓட்டத்தில் ஓட்டி, காலை உடைத்துக் கொள்ளும் சம்பவங்களும் உண்டு. சில சமயம் ஓட்டத்தில் இருந்து நிறுத்தம் கண்டு, கொட்டிலில், போட்டதைத் தின்று, காலங்கழிக்கும் தருணங்கள் உண்டு. சில சமயம் நன்றாக ஓடி, முதல் பரிசை யாருக்கோ வாங்கிக் கொடுத்திருக்கிறோம் என்பது தெரியாமல், தன் பாட்டுக்கு அடுத்த ஓட்டத்திற்கு தயார் செய்து கொள்வதும் உண்டு.

calvin-writing-Ourself_Write

நல்ல எழுத்து என்பதற்கு பல அடையாளங்கள் இருக்கின்றன. அதே போல் ‘நீங்கள் எழுத்தாளரா’ என்பதற்கு என்ன அடையாளங்கள் என்று பட்டியலிட்டால், ஏன் எழுதுகிறேன் என்பதற்கான விடைகள் கிடைக்கலாம்.

யார் எழுத்தாளர் என அறியப்படுகிறார்?

அ) தொடர்ந்து எழுதுவது: இந்த நேரம்தான் எழுத முடியும்; இந்த மனநிலையில்தான் எழுதமுடியும்; இந்தச் சூழலில்தான் எழுத முடியும் என்றில்லாமல், எங்கும் எப்பொழுதும் தயாராக இருப்பது
ஆ) பல்வகையில் எழுதுவது: நகைச்சுவைதான் வரும்; சினிமா விமர்சனம்தான் போடுவேன்; கவிதை மட்டுமே வார்ப்பேன் என கொம்பனாக இல்லாமல், எல்லா விதமான முயற்சிகளையும் செய்வது
இ) உரையாடலில் ஈடுபடுவது: இன்னாருடன் பேசினால் விதண்டாவாதம்; இந்தக் கொள்கையை ஆதரித்தோ/எதிர்த்தோ எழுதுவது நேரவிரயம் என்று புறந்தள்ளாமல், பொறுமையாக விளக்குவது
ஈ) நல்ல மனிதராக இயங்குவது: சமரசங்கள் செய்துகொண்டாலும் தன்னளவில் நேர்மையாகவும் தெளிவாகவும் குடும்பத்துக்கும் உற்றார் உறவினருக்கும் பாந்தமான சொந்தமாகவும் நேசிக்கத்தக்கவராக இருப்பது
உ) கல்லுளி மங்கராக இருப்பது: இந்தப் பத்திரிகைக்கு இது போதும்; இந்த வாசகருக்கு இவ்வளவு சொன்னால் போதும் என்று விட்டுவிடாமல், தொடர்ந்து ஆழமாகவும் எளிமையாகவும் முழுமையாகவும் எழுதிக் கொண்டேயிருப்பது.

இப்பொழுது நான் யாரை எழுத்தாளர் என நம்புகிறேன் என்பதைச் சொன்னால், ‘எதற்காக எழுதுகிறேன்… எப்படி அவர் போல் ஆக முயல்கிறேன்’ என்பது எனக்கு பிடிபடலாம்.

சுஜாதாவை எழுத்தாளர் என நினைக்கிறேன். அவரைப் போல் இரட்டை குதிரைச் சவாரி முடியும் என நம்புகிறேன். ஒரு பக்கம் அறிவியல் வேலை; இன்னொரு பக்கம் புனைவு அமர்க்களங்கள்; மற்றொரு பக்கம் தொழில்நுட்ப விளக்கங்களை – சுவாரசியமான கட்டுரைகளாக்குதல்; பிறிதொரு பக்கம் இதழ் ஆசிரியராக பணி; அது தவிர ஆன்மிக ஈடுபாடு; தத்துவ விசாரம்; அறிபுனை ஆக்கங்கள் என ஒவ்வொரு துறையிலும் முத்திரை படைப்புகள். கூடவே எழுத்தாளர் இல்லாத மற்றொரு பணியில் 9 முதல் 5 வரையிலான வேலையிலும் தீவிர செயல்பாடு என பன்முகம் கொண்டவராக இருக்க வேண்டும்.

இதற்கும் ‘கல்வாரி’ திரைப்படத்திற்கும் என்ன சம்பந்தம்?

படத்தின் துவக்கத்தில் இந்த மேற்கோள் வரும்:

“மனந்தளர வேண்டாம்; ஒரு திருடன் காப்பாற்றபட்டான்.
மட்டுமீறிய ஊகம் வேண்டாம்; ஒரு திருடன் பழிக்கப்பட்டவன் ஆனான்!’
புனிதர் அகஸ்டீன்

கல்வாரி மலையில் இயேசு கிறிஸ்துவோடு இரு கள்வர்களும் சிலுவையில் அறையப்பட்டார்கள். அவர்களில் ஒருவன் தன்னுடைய பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கோரினான். இன்னொருவன் மனத்தினால் வருந்தாமல் அன்பு உள்ளம் கொள்ளாமல் புறத்தால் மட்டும் பாசாங்கிட்டு சொர்க்கத்திற்கு வழி கேட்கிறான். அப்போது தன் தந்தையை நோக்கி ’பரமபிதாவே இவர்களை மன்னியும்’ (லூக்கா 23:24) என்று பேசினார். தந்தையிடம் பேசிவிட்டு தம் இரு பக்கங்களையும் நோக்கியபோது, இரு திருடர்கள் தம்மை இரண்டாகப் பங்கு போடுவது தெரிந்தது.

அந்த இருவரையும் பாவத்திற்குப் பரிகாரமாக, அன்பின் அடையாளமாக ஆளுக்கொரு சிலுவையைச் சுமந்து கொண்டு கோயிலுக்கு வரவேண்டும் என்று அனுப்பி வைக்கிறார். இருவரும் பக்கத்திலிருந்த காட்டிற்குச் சென்று ஆளுக்கொரு மரத்தைத் தேர்ந்தெடுத்து சிறப்பானதொரு ஆக்கத்தைச் செய்கிறார்கள். தம்முடைய புத்தம்புதிய சிலுவையைச் சுமந்து செல்லுமிடத்திற்குப் புறப்பட்டார்கள். பயணம் நெடுந்தூரமாகவும் முடிவில்லாததாகவும் தெரிகிறது. சிலுவையின் பாரம் அதிகமாகவும் இருக்கிறது. ஓரிடத்தில் ஓய்வு எடுத்தார்கள். ஓய்வு எடுத்த பிறகு ஒரு திருடன் கேட்கிறான். “சிலுவையின் எடையைக் குறைத்து கொள்வோமா?” என்று கேட்டான். “எனக்கு வேண்டாம். நீ வேண்டுமென்றால் சிலுவையைக் குறைத்துக் கொள்” என்று சொன்னான் இன்னொரு திருடன். மற்றவன் குறைத்துக் கொண்டான். மீண்டும் பயணம் தொடர்ந்தது. மீண்டும் ஓய்வு; மீண்டும் மற்றவன் சிலுவையை இன்னும் கொஞ்சம் குறைத்துக் கொண்டான். கூட்டாளி மறுப்பு ஏதும் சொல்லவில்லை. கோவில் முகப்பை அடைந்தார்கள். அப்போது தான் தெரிந்தது கோவில் வளாகத்தை அடைய, வழியாக இருந்த பாலம் உடைக்கப்பட்டு இருந்தது. சிலுவையோடு கோவில் வளாகத்தை அடைவது எப்படி என்று இருவரும் யோசித்தார்கள். சிலுவையைக் குறைக்காமல் எடுத்து வந்தவன் சிலுவையைப் பாலமாக வைத்துப் பார்த்தான் சரியாக இருந்தது. சிலுவை மேல் ஏறிக் கரை சேர்ந்து சிலுவையை எடுத்துக் கொண்டான். சிலுவையை குறைத்துக் கொண்டு வந்தவன் சிலுவையை வைத்துப் பார்த்தான் சிலுவை சரியாகப்படவில்லை கரையிலேயே நின்றான். அக்கரை சேர முடியவில்லை.

என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தம்மையே துறந்து தம் சிலுவையை நாள் தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும் (லூக் 9:23).

அப்போது தான் மனம்மாறிய கள்வனுக்கு ’நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்’ என ஆறுதலாக யேசு கூறியதாக லூக்கா 23:43 சொல்கிறது. இந்த மாதிரி கடைத்தேறத்தான் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒன்றைப் பற்றி எழுதும்போது அது குறித்த புரிதல் மேம்படுகிறது. திரைப்பட விமர்சனம் ஆகட்டும்; நூல் அறிமுகம் ஆகட்டும்; மனிதரை விமர்சிக்கும் புனைவுகள் ஆகட்டும்; டுளவியலை பூடகமாக உணர்த்தும் கவிதை குறித்த அனுபவப் பார்வைகள் ஆகட்டும்; எழுதும் போது சிலுவையே பாலமாக என்னை மற்றொரு இடத்திற்கு தோணியாக்கி இட்டுச் செல்கிறது – என்றெல்லாம் கற்பனை செய்வதால் எழுதுகிறேன்.

ஆனால், எழுதுவது என்பது போதை மருந்து போல் என்பதை தெளிவாக உணர்ந்தே இருக்கிறேன். வேளா வேளைக்கு உட்கொள்ளாவிட்டால் உடல் சோர்வுறும். மனம் களைப்புறும். அந்த நேரத்திற்கு அபின் தேவை. அதற்காக பிறர் வீட்டிற்கு சென்றுத் திருடவும் தயங்குவதில்லை. திருட்டினால் கிடைக்கும் பொருளை விற்று, உருத் தெரியாமல் மொழிமாற்றி, அதை மயக்கப் பொருளாக உட்கொள்ளும் வரை வெறி அடங்குவதில்லை. இது ஒருவிதமான அடிமைத்தனம். அந்த போதையின் பித்தின் உச்சியில் என்ன சொல்கிறோம் என்று உணராமல் ஜடமேயென்று கொலையும் செய்துவிட்டு, அந்தக் கொலைக்குற்றம் என்னைக் குறிவைக்கும்போது, எழுத்தாளரின் சுதந்திரம் என்று பதுங்கித் தப்பித்து திரிவதற்காக எழுதுகிறேன்.

எதற்காக எழுதுகிறான் என்று பிறர் கேட்கவைக்காதபடி எழுதும்வரை, எதற்காக எழுதுகிறேன் என்றெல்லாம் யோசிக்கப் போவதில்லை.
—-

The Ambassadors by Hans Holbein