பாபா – இந்தப் பட்டம் பிடிச்சிருக்கா?
வெட்டிப்பயலிடம் பேசும்போது கிட்டத்தட்ட இதே கேள்வியை அவரிடம் நண்பர் கேட்டார்.
‘உங்களை வெட்டி என்று கூப்பிடும்போது வருத்தமாக இருக்காதா?’
வெட்டி பதில் சொல்வதற்குள் அவசரக்குடுக்கையாக நான்,
இந்தியர்கள் எப்போதுமே சூப்பர் ஸ்டார், தளபதி, லிட்டில் மாஸ்டர், ரோஜா மாமா என்று அடைமொழி சூட்டி மகிழ்பவர்கள். அதே குணம்தான் பதிவுலகுக்கும் நீண்டிருக்கிறது.
எனக்கு பாபா என்றழைப்பது அரசியல்/சினிமா/கிரிக்கெட்டின் தொடர்ச்சியாக பிடித்திருக்கிறது. அழைப்பவருக்கு அன்னியோன்யத்தைக் கொடுக்கிறது. பாலாஜி அவர்களே என்று நீட்டி முழக்காமல், ‘அடேய் பாபா… இது ஓவர்டா’ என்று ரைமிங்காக நட்பாக ஆக்குகிறது
வெட்டி-பாலாஜி வேறுகோணத்தில் ஆராய்ந்தார். வெட்டி என்பது பிராண்ட் நேம். என்னுடைய எழுத்தின் மதிப்பாகத்தான் இந்த விளிப்பை நான் பார்க்கிறேன். சுஜாதா என்றால் அது அவருடைய கதைகளுக்கு கிடைக்கும் உடனடி ரெகக்னிஷன். அதே மாதிரி வெட்டி என்று அழைத்தால், இந்தப் படைப்புக்கு உரிமையானவர்; பதிவின் மூலமாக என்னை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.
இதைப் பட்டம் என்பதை விட எளிமையாக பரிச்சயம் கொள்ள ஒரு புனைப்பெயர்.
அது என்ன E-Tamil, snapjudgement, விளக்கம் சொல்லமுடியுமா?
நான் பதிவு தொடங்கிய காலம் டாட்.காம் அணைய ஆரம்பித்த நேரம். எனினும், எல்லா வார்த்தைக்கும் ஈ(e) அல்லது ஐ (i) முன்னாடிப் போட்டுக் கொள்வது வெப் 1.0-வின் சாமுத்ரிகா லட்சணம். அந்த மாதிரிதான் ஈ-தமிழ்.
தற்போதைய Tamil News-இன் பூர்விகம். தமிழ் இதழ்களில், வலையகங்களில் வருவதில் பிடித்தவற்றை சேமிக்கும் கிடங்கு. எலெக்ட்ரானிக் தமிழாக, பல வலையகங்களில், விதவிதமான எழுத்துருவில் வந்தவற்றை ஒருங்குறியாக்கி, ஒரே இடத்தில் பிட்டு பிட்டாக்கி தொகுக்கும் இடம்.
கொஞ்ச நாள் கழித்து ‘சொந்த சரக்கு கிடையாதா?’, ‘ஏன் நாங்கள் படித்ததையே மீண்டும் மீண்டும் பதிவாக்குகிறீர்கள்?’ போன்ற செல்ல சிணுங்கலினால், நானும் இரண்டு வரி மறுமொழி எழுதி, எழுத்தாளன் ஆகிப் போனேன்.
மறுமொழிகளைத் தொகுத்து தனிப்பதிவாக்குவது இரண்டாண்டுகள் முன்பு ஃபேஷனாக இருந்தது. நொடி நேரத்தில் யோசித்து, பதிவு குறித்த தீர்ப்புகளை சுருக்கமாகத் தருவதால் பின்னூட்டம் என்பது ஸ்னாப் ஜட்ஜ்மெண்ட். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, பின்னூட்டங்கள் எதுவுமே இல்லாமல், படிக்க வேண்டிய/படித்ததில் பிடித்த பதிவுகளை சேமிக்கும் தளமாக Snap Judgement ஆகிப் போனது.
இப்போ எல்லாம் வெறும் பார்வையாளரா மட்டுமே இருக்குறீங்களே என்னக் காரணம்?
இப்பொழுதும் க்விக்கா யோசி; பக்காவானால் பாசி! என்று நினைப்பதை கிறுக்கிக் கொண்டுதான் இருக்கிறேன். பின்னூட்டங்கள் போடுவது, கில்லியில் இணைப்பது போன்றவையும் தொடர்கிறது.
நீண்ட பதிவுகள் எழுதாமல் இருப்பதற்கு பல காரணங்கள். தெரிந்தவர்/நெருங்கியவர் மறைந்தவுடன் தோன்றும் ‘வாழ்க்கை அநித்தியம்’; வருடந்தோறும் ஒரு சில மணித்துளிகளாவது புதிய நுட்பங்களையும் நிரலிகளையும் கற்றுக் கொள்ளும் சுய நிர்ப்பந்தம்; ஹாய்யாக டிவி, அப்பா தேவைப்படும், அப்பாவின் காலை சுற்றும் குழந்தை; போன்ற generic காரணங்களையும் சொல்லி வைக்கலாம்.
வலைப்பதிவது இன்னும் அலுக்கவில்லை 🙂
நான்கு வருடப் பதிவுலக அனுபவம்.. மாற்றங்கள்ன்னு எதாவது நடந்துருக்கா.. ஏற்றமா? இறக்கமா? தனிப்பட்ட மற்றும் பொதுவானப் பார்வை ரெண்டும் சொல்லுங்க பாலா?
ஆரம்பத்தில் இவ்வளவு பேர் கிடையாது. வாசகர்களும் குறைவு. ஆனால், எல்லாப் பதிவுகளையும் கிட்டத்தட்ட எல்லா சக பதிவர்களும் படிப்பார்கள். குழுமம் மாதிரி இருந்தாலும், குழுவிற்குறிய குணங்கள் இல்லாத தனித்துவத்துடன் இயங்கியது. சொந்தக் கதையை நிறைய பேசினார்கள். தனி நபர் வாழ்வியல் சிக்கல்களை மனமுவந்து பகிர்ந்து வாசகனுக்கு செழுமையூட்டினார்கள்.
இப்பொழுது 2000+ பதிவுகள். நிறைய வாசகர்கள். நன்றாக இருந்தால் மனமுவந்து பாராட்டும், பார்வையிடும், பரிந்துரைக்கும் விரிந்த ஊடகம்.
செய்திகள், இடதுசாரி, முதலாளித்துவம், விளையாட்டு, பொருளாதாரம், அறிவியல் என்று ஓரிருவரை மட்டுமே வலம்வந்து, குண்டுச்சட்டியில் குதிரையோட்டிய தமிழ்ப்பதிவுலகம் பரந்துபட்டு, ‘அவர் இல்லாவிட்டால் இன்னொருவர்’ என்று மாற்று ஊடகமாக மிளிர்கிறது.
உலகத்தின் மூலை முடுக்கில் நிகழ்வதை அறிய சற்றுமுன், பல்சுவை கட்டுரைகளை அறிய பூங்கா, பல்வேறு பதிவர்களின் விருப்பத்தை அறிய மாற்று, பெண்பதிவர்களின் வீச்சை அறிய கூகிள் ரீடர் சக்தி என்று புதிய முயற்சிகள் தொடங்கி வீறுநடை போடுகிறது.
‘நான் மட்டுமே வாசகன்’ என்னும் அளவில் வலைப்பதிவை துவங்கினேன். கஷ்டப்பட்டு ஒவ்வொருத்தராக அழைத்து, நண்பர்களைப் படிக்க வைத்து, சுட்டி கொடுத்து வலைவீசி வாசகரைத் தேடி, கூகிளை நம்பி தேடல் வார்த்தைகளை நிரப்பி, கூட்டம் சேர்க்கும் நிர்ப்பந்தம் இன்று கிடையாது.
கை சொடுக்கில் தமிழ்மணம், தேன்கூடு, கில்லி, மாற்று கிடைக்கிறது. பார்வையாளர் வருகையேட்டு எண்ணிக்கையை மின்னல் வேகத்தில் உச்சாணிக் கொம்பில் ஏற்றும் வாய்ப்பு கிடைப்பது, புதிய பதிவர்களுக்கு pressure ஏற்படுத்தி பரபரப்புக்கும் உள்ளாக வைக்கிறது. இதனால் அடுத்தவரின் அனுபவத்தைப் பகிரும் அன்னியோன்யம் குறைந்து நாட்டு நடப்பை உலகியலாக ஆராயும் போக்கு மட்டுமே பெருகி வருவது இறக்கம்.
பதிவுகளில் கிளாஸ் – மாஸ் இருக்கா? தேவையா?
கிளாசுக்கு இங்கே போகவும்: வரவனையான்
மாஸுக்கு: ஞானபீடம்: வீரன்
கொஞ்சம் சேரியமாய் பார்த்தால், ‘பிதாமகன்’ படத்தில் சிம்ரன் ஆடுவது போல், ரோசாவசந்த் பதிவில் ஆண்குறி மாஸ்.
என்னுடைய பதிவில் எப்போதாவது கிளாஸ். நடிகைக்கு கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் வித்தியாசம் தெரியும். உருப்படியான பதிவரும் அதே மாதிரிதான்.
ஆங்கிலப் பதிவுப் போட்டவங்க இன்னைக்கு இதையே ஒரு முழு நேரத் தொழிலாச் செய்யுமளவுக்கு பதிவுகள் அவனுக்கு வளம் கொடுத்திருக்கு… இங்கே நம்மாலே அதெல்லாம் முடியுமா? உங்க கருத்தைச் சொல்லுங்க? CAN BLOGGING BE A FUTURE CARREER?
ஆங்கிலத்தில் சிறு பத்திரிகைகள் சக்கைபோடு போடுகிறது. எல்லா வெரைட்டி எழுத்தாளர்களையும் கொண்டாடுகிறார்கள். தமிழிலும் இதே நிலை இப்போது(தான்) உருவாகிறது. வலைப்பதிவும் கொஞ்ச நாள் கழித்துதான் வேகம் எடுக்கும்.
எடுத்துக்காட்டாக, சினிமாவைப் பற்றி மட்டும் பதிவு எழுதலாம். அந்தப் பதிவர், ‘சித்திரம் பேசுதடி’ போன்ற அதிகம் புகழ் பெறாத படங்கள் வரும்போது, படத்தை சந்தைப்படுத்த உதவலாம். அவருடைய பதிவில் எக்ஸ்க்ளூசிவ் கொடுக்கலாம். அதன் மூலம் நுழைவுச்சீட்டுகளை ஏலம் விட்டு பணம் சம்பாதிக்கலாம். படம் சம்பந்தப்பட்ட விஷயங்களை வணிகத்தளத்தில் விற்கலாம். இலவசமாகக் கொடுக்க தயாரிப்பாளர்களிடம் நிறைய வஸ்து இருக்கும். அவற்றை போட்டி போட்டுக் கொண்டு வாங்க நுகர்வோர் தயாராக இருப்பார்கள். இருவருக்கும் பாலமாக, பதிவர் அமைவார்.
இவ்வாறே இசை, ஓவியம், புத்தகம், விழியம், நாடகம் போன்ற பிற கலைத் துறைகளிலும் நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது.
சம்பந்தப்பட்டோரை தொடர்பு கொள்வது, அவர்களிடம் viral marketing, word of mouth, buzz creation என்று சந்திரபாபு நாயுடு ரேஞ்சுக்கு பவர்பாயிண்ட் காட்டினால் மயங்காதோரும் உண்டோ?
ஆங்கிலப் பதிவுகள் புத்தகங்களாக மாறுகிறது. தமிழ்ப் பதிப்புலகம் ‘சொந்தக் கதை’ அல்லது புகழ் பெற்றவர் அல்லாத தனி மனித வரலாற்றை மதிப்பதில்லை. புனைவுக்கு இடமுண்டு; அதுவும் பெயரெடுத்தவராக இருக்க வேண்டும் அல்லது பின் நவீனத்துவம் எழுதுபவராக இருத்தல் வேண்டும் போன்ற நிர்ப்பந்தங்களில் சிக்கியுள்ளது.
ஆங்கிலத்தில் அவ்வாறு இல்லாமல் புற்றுநோயிலிருந்து மீண்டவர், தொலைதூரம் ஓடியவர் வரலாறுகளும் வெளியாகிறது. பெருவாரியாக விற்பனையாகிறது. தமிழ்ப்பதிவர்களில் வெங்கட் போன்ற சிலர்தான் தொடர்ச்சியாக ஒரே துறையில் சுவாரசியமான கட்டுரைகளை அளிக்கிறார்கள். அனேகருக்கு ஒரு நாள் சினிமா, இன்னொரு நாள் விமர்சனம் என்று பல மரம் கண்ட தச்சனாக புகுந்து புறப்படுவதால், புத்தகமாகத் தொகுக்க இயலாத நிலை.
இந்த நிலையும் காலப்போக்கில் மாறும். துறைசார் பதிவுகளின் லாபத்தன்மை கருதியோ, சொந்த விருப்பத்தின் உந்துதலிலோ, குழுப்பதிவுகளும், தொடர்ச்சியும் அமையப்பெறும். இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் இந்தப் போக்குகளை நிறுவனப்படுத்த ஏதாவது கூகிள் போன்ற பிசினஸோ, தன்னார்வ அமைப்போ, விகடன்/குங்குமம் போன்ற வெளியீட்டாளர்களோ முயற்சிகளை எடுத்து, சரியான பாதையை வகுத்து, வலைப்பதிவதை லாபகரமான பொழுதுபோக்காக மாற்றலாம்.
பதிவு உலகில் வியாபாரம் சாத்தியமா? துட்டுப் பாக்க வழி இருக்கா?நம்ம பிரிண்ட் மீடியா அளவுக்கு நெட் மீடியா வளர சாத்தியங்கள் இருக்கா?
ஆங்கிலப் பதிவுகளிலேயே இன்னும் காசு பெரிய அளவில் புரள்வதில்லை.
பண்டமாற்று முறையில் சில்லறை விற்பனை; காமம் தொடர்பான வியாபாரம்; தேர்ந்தெடுத்த துறையில் நற்பெயர் ஈட்டி, அந்தப் புகழைக் கொண்டு தொழில் முறைப் பேச்சு/புத்தகம்/குந்துரத்தல் என்று வேறு வழிகளில் சம்பாதிப்பது போன்றவை சாத்தியம்.
ரவியின் Top 10 உலக மொழிகள்-இலிருந்து: “திரைப்படம், இலக்கியம், ஆன்மிகம், சமையல், சோதிடம் அப்படின்னு ஒரு மிகச்சிறிய வட்டத்துக்குள்ள தான் தமிழ் இருக்கு.”
இப்போதைக்கு தமிழ் சஞ்சிகைகள் மேற்சொன்னவற்றுள் ஏதோவொன்றை வைத்து பணம் புரள வைக்கிறது. இணைய சஞ்சிகைகளுக்கும் ஆன்மீகம், ஜோதிடம் போன்றவை நிச்சயம் லாபம் தரும் தொழில். இவற்றில் இலக்கியம் என்பது இணையத்தில் சுஜாதா, கிரேசி மோகன், எஸ்வி சேகர் போன்றவர்களோடு நின்று விடும்.
ஒரு பதிவின் வெற்றிக்குப் பெரிதும் உதவுது கருத்தா? இல்லை நல்ல மார்க்கெட்டிங்க்கா?
மேட்டர் முக்கியமில்லை. மார்க்கெடிங் மட்டுமே போதும். மார்க்கெடிங் என்றால்…
எப்போது எழுதுகிறீர்கள், எவருக்கு சுட்டி கொடுக்கிறீர்கள், உங்களின் பழக்கப்பட்ட நிலையில் இருந்து எவ்வளவு தூரம் விலகி அதிர்ச்சி தரும் விகிதத்தில் வழங்குகிறீர்கள் போன்றவை சந்தைக்காக எழுதுவதன் குணாம்சங்கள்.
பதிவின் வெற்றிக்கு நேர்மை முக்கியம். கொண்ட கருத்தில் ஈடுபாடு அவசியம். உணர்ச்சிகரமாகவே எழுதி வருபவர், அவ்வப்போது நடையை வித்தியாசப்படுத்தி நக்கலாக எழுதும் மாறுபாடு என்னும் மார்க்கெடிங்குக்கும் பங்கு உண்டு.
நான் சினிமாப் பைத்தியம். வெகுசன சினிமாப் பைத்தியம்.
‘அன்பே சிவம்’ நல்ல (கருத்துள்ள) படம். போதிய அளவு மார்க்கெடிங்கும் இருந்தது. தேவையான விகிதாசாரத்தில் மாதவன், கிரண், சண்டை எல்லாம் தூவி இருந்தது. இருந்தாலும், ‘போக்கிரி’ பெற்ற வெற்றியை அடைய முடியவில்லை.
கிட்டத்தட்ட அதே மாதிரி தரம், குணம், சுவை உள்ள ஜெகத்தையும் பெயரிலியையும் எடுத்துக் கொள்வோம். இருவருமே பெரிதாக சந்தைப்படுத்தல் எதுவும் செய்வதில்லை. அதே தமிழ்மணம், அதே தேன்கூடு. இருந்தாலும் ஜெகத்தை விட பெயரிலி பதிவுகள் அதிக கவனம் பெறும். பல ஆண்டுகளாக எழுதுவதால் உள்ளர்த்தம் கிடைக்காதா என்று நோண்டும் சுபாவம், தமிழ்மணத்தின் நிர்வாகிகளில் ஒருவர் என்பதால் இருக்கும் விஷய்த்தை விட்டு இல்லாததைத் தேடும் மனோலயம் எல்லாம்தான் பதிவின் வெற்றிக்கு பெரிதும் உதவுவது. இது போன்ற சுவாரசியங்கள் இல்லாவிட்டால், அதே நண்பர் வட்டம், அதே பின்னூட்ட ஃபிகர்கள் என்றென்றும் தொடரும்.
.அலைஞனின் அலைகள்: குவியம்.: இராவணன்வெட்டு பின்னூட்டத்தில் இருந்து: “மொக்கை, மொள்ளை, கொள்ளை, கும்மி பதிவெல்லாம் வருகுது. நாமும் சும்மா பின்னூட்டங்களைக் கணக்குப் பாத்துப் பாத்து, தமிழ்மணம் வலதுமேல்மூலைத்தலைப்பைச் சுத்தி நிக்கிற மாதிரி கொஞ்சம் கொஞ்சமா இழுத்தடிச்சால், கவுண்டு எப்பிடி எகிறிது எண்டு பாக்க விளையாடினதுதான் உந்தப்பின்னூட்டமும் பேனூர்வலமும். சும்மா சொல்லக்கூடாது எகிறெண்ட எகிறு எகிறித்தான் இருக்குது. மினக்கெட்டு மினக்கெட்டு ஆறேழு மணித்தியாலம் இருந்து போட்ட பதிவுகள்கூட இருபது பேரைத் தாண்டாது போயிருக்கேக்க, இப்பிடி உயரத்திலையிருந்து உருட்டிவிட்ட குண்டு போல கையில வந்ததும் வராததுமா அடிச்ச எழுத்துக்கழிசலெல்லாம் நானூறைப் பிடிக்க நிக்கிறத எண்ணிச் சிரிக்கிறதோ அழுகிறதோ? ஷில்பா ஷெட்டி சங்கதிதான் எனக்கும் நடந்திருக்குது. There is nothing called BAD PUBLICITY.”
உங்க கேள்விக்கே வருவோம். பதிவின் வெற்றி என்று எதை நினைக்கிறீர்கள்? சொந்த அனுபவத்தினால் கற்றதும் பெற்றதும் பலரால் படிக்கப் பெறுவதா? பார்க்கப் பெறுவதா? பதியம் போட்டு அசை போடப் பெறுவதா?
பலரால் பார்க்கப் பெற்றால், அவர்களுள் பெரும்பானவர்களால் படிக்கப் பெற்று, அவர்களுள் ஒரு சிலர் மட்டுமாவது பதியம் போட்டு பழுக்கக் காயப்போட்டுக் கொள்வார்கள்.
இலக்கிய ரீதியாப் பதிவுலகம் எதாவது தாக்கம் ஏற்படுத்தியிருக்கா? அதற்கு வாய்ப்புக்கள் இருக்கா? இலக்கியவாதிகள் பதிவுலகம் பக்கம் வராமல் இருப்பதற்கு என்னக் காரணம்? IS IT LACK OF TECHNICAL KNOWLEDGE OR LACK OF RESPECT FOR FELLOW BLOGGERS ABILITIES?
எல்லாமே Logical Fallacy: Loaded Question என்றாலும் இதற்கும் என்னுடைய ரெண்டணாவை வீசிடறேன்.
அ) இலக்கிய ரீதியாகப் பதிவுலகம் எதாவது தாக்கம் ஏற்படுத்தியிருக்கா?
பதிவுலகில் மட்டுமே குப்பை கொட்டிக் கொண்டு, ‘இல்லை’ என்று சொன்னால், நான் செய்வது எல்லாம் குப்பை என்றாகி விடும். அதற்காக பதிலை ‘ஆமாம்’ என்றால், கபடியில் இந்தியா தங்கப் பதக்கம் பெறுவது போல் முதுகில் தட்டிக் கொள்வது எனலாம்.
தாக்கம் என்றால் என்ன? BLANK NOISE PROJECT போன்ற செயல்கள் இலக்கிய ரீதியாக இல்லாமல் செயல்ரீதியாக செய்து காட்டியிருக்கிறது. இலக்கியத்தின் ஆய பயனாக ரசிகரை மகிழ்விப்பது, உற்சாகம் ஊட்டி வாழ்வை மாற்றியமைப்பது எனலாம். பதிவுலகம் அதற்கு மேலும் சிந்தனைகளை வளப்படுத்தி இலக்கியத்தின் பலாபலன்களை நிறைவேற்றுகிறது.
ஆ) இலக்கியவாதிகள் பதிவுலகம் பக்கம் ஏன் வரவில்லை?
மாலன், இரா முருகன் (தினமணிக் கதிர்), சாரு நிவேதிதா (தப்புத் தாளங்கள்), சுஜாதா (க.பெ., ஸ்ரீரங்கத்து எஸ்.ஆர்) போன்றவை பதிவுகள்தான். அவர்களுக்கு தட்டினால் துட்டு. நமக்கு தட்டினால் ஹிட்டு.
இ) ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன் போன்ற இலக்கியவாதிகள் வராமல் இருப்பதற்கு பிற பதிவரின் திறமைகளை மதிக்காதது காரணமா?
நேற்று வரை கர்ம சிரத்தையாய் அனுதினம் கிறுக்கும் வலைப்பதிபவர், நாளை ‘விடைபெறுகிறேன்’ என்று ஓடிப் போகிறார். இந்த மாதிரி பாதியில் கடையை மூடுவதற்கு – சக பதிவர்களின் பின்னூட்ட சிக்கல்; தமிழ்ப்பதிவுகளின் ஜனநாயக அரசியல்; ‘கடைவிரித்தேன், கொள்வாரில்லை’ புலம்பல்; அலுவல் வேலை கெடுபிடி; என்று பல காரணங்கள். They have better things to worry about.
நம்மப் பதிவர்கள் விருப்பப்பட்டு பதிவு படிக்கிறாங்களா வழி இல்லாமப் பதிவு படிக்கிறாங்களா… நீங்க என்னச் சொல்லுறீங்க?
நான் விருப்பப்பட்டுத்தான் பதிவுகளை படிக்கிறேன். என்னுடைய ரசனைக்கு உகந்த, நான் அறிய வேண்டிய விஷயங்களைத் தேடிப் பிடித்து மேய்கிறேன்.
மீண்டும் metaphor-க்கு மன்னிக்கவும். காலை எழுந்ததும் தினசரியை ஏன் புரட்டுகிறேன்?
ராத்திரி ஒன்பது மணிக்கு மேலே ராக்ஸ்பரி (சென்னை தாதாக்கள் போல் பாஸ்டன் வஸ்தாதுகள் உலவும் இடம்) அருகே வீட்டு வாசலில் நின்றவர் கொலை என்பார்கள். ஓ… சரி! அந்தப் பக்கம் வீடு பார்க்காமல், வேறு எங்காவது ஜாகை பார்ப்போம் என்று முடிவெடுப்பேன். சற்றுமுன் அடுத்தவருக்கு நிகழ்வது, எனக்கு நிகழ்ந்து விடக்கூடாது என்னும் தற்காப்பு; பயம்.
கொஞ்ச நாள் போன பிறகு, எல்லா செய்தித் தலைப்புகளையும் மேயப் பொறுமையில்லை. இரவு பத்து மணிக்கு அரை மணி நேர செய்தி வாசிப்பில், எல்லா கொலை, வன்முறைகளையும் படம் பிடித்து ஒளிபரப்புகிறார்கள். பார்க்க ஆரம்பிக்கிறேன். செய்தித்தாள் நிறுத்தி விட்டாயிற்று.
பத்து மணிக்கு வீட்டுக்கு வர முடியாத ராப்பிசாசு வேலை. பக்கத்துவீட்டுக்காரியின் வலைப்பதிவில் செய்திகளைக் கோர்த்துக் கொடுக்கிறாள். என்ன, எங்கே, எப்படி நடந்தது என்பதை சுருக் தைக்கிறாள். விருப்பமான பதிவாக இல்லாவிட்டாலும், வேறு வழி இல்லாமல் படிக்க வேண்டிய தேவையான பதிவாக அமைகிறது.
மக்களுக்கு நேரம் குறைச்சல். அதில் வழி இல்லாமல் படிப்பது என்பதற்கான பேச்சே இல்லை.
பாஸ்டன் பாலா.. எதாவது செய்யணும் என்ற ஆர்வம் உடையவர் ஆனால் எதுவும் செய்யாமல் மெளனமாய் வெறும் வேடிக்கையோடு நிற்பவர்ன்னாச் சொன்னாக் கோபப்படுவீங்களா?
அடுத்த கேள்வியைப் பார்க்கவும்.
நீங்க ஒரு நல்ல விமர்சகர்.. தமிழ்மணம்..அதில் உலாவும் பதிவர்கள்.. தமிழ் மண நிர்வாகம் ஒரு மினி விம்ர்சனம் கொடுங்களேன்?
முந்தின கேள்வியைப் படிக்கவும் என்பதுதான் பதில்.
நிர்வாகத்தில் இல்லாதவர்களால் நிர்வாகிகளின் மண்டையிடி என்ன என்பது தெரியாது. வெளியாள் சுளுவாக விமர்சித்து சென்று விடலாம். தமிழ்மணம் குறித்து போதும் போதுமென்கிற அளவு, ஏற்கனவே அவ்வப்போது எழுதி மாய்ந்தாயிற்று.
தற்போதைய கண்ணீரும் கம்பலையுமான டாபிக் ஆன பூங்கா குறித்து, முன்பு Desipundit plans to close shop என்று தேசிபண்டிட் அலசல் கிட்டத்தட்ட பொருந்தும்.
கடைசியா.. சென்னைக் கச்சேரிக்காக…. ஒரு மெக்ஸிக்கன் ஜோக் ப்ளீஸ்…
ஏற்கனவே சொல்லியாச்சு… ஈ-தமிழ்: கேள்வியும் நானே… பதிலும் நானே!
Thanks Dev!
- Boston Bala said…
- என் பதிவுகளை எவராவது படிக்கிறார்களா என்னும் சந்தேகம் எனக்குண்டு. ஓரளவு தொடர்ந்து படித்ததனால்தான் இப்படி பொருத்தமான கேள்விகளை கேட்க முடிந்திருக்கிறது. அதற்காக மனமார்ந்த வணக்கங்கள்.
சன் டிவியில் நடிகைகளை சந்திக்கும் போது ‘உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?’, ‘உங்களுடையது காதல் கல்யாணமாக அமையுமா’ என்று வார்ப்புரு கேள்விகளைக் கேட்டு பழக்கப்பட்டவனுக்கு, ‘குடைக்குள் மழை’ பார்த்திபனை ருத்ரன் ஆராயும் அளவிற்கு அளந்தாராய்ந்து, வினாத் தொடுத்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
நட்சத்திர வாரத்தில் தன் பதிவுக்கு மட்டும் தமிழ்மணத்தின் சூரிய ஒளியை எடுத்துக் கொள்ளாமல், எனக்கும் என் எண்ணங்களுக்கும் இடம் கொடுத்ததற்காக ஆச்சரியமான சந்தோஷங்கள் 🙂