Tag Archives: cricket

சென்னை வீரர்களும் சி.எஸ்.கே.வும்

சென்னை சூப்பர் கிங்ஸ் என்று பெயர்.
ஆனால், தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு வீரர் கூட இல்லை.

சோனு யாதவ் – ஆர்.சி.பி – பெங்களூர்
சாய் சுதர்சன் – குஜராத் டைட்டன்ஸ்
முருகன் அச்வின் – ராஜஸ்தான் ராயல்ஸ்
என் ஜெகதீசன் – கல்கத்தா க்நைட் ரைடர்ஸ்
விஜய் ஷங்கர் – குஜராத் டைட்டன்ஸ்
ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர் – குஜராத் டைட்டன்ஸ்
டி நட்ராஜன் – சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்
ரவிச்சந்திரன் அச்வின் – ராஜஸ்தான் ராயல்ஸ்
தினேஷ் கார்த்திக் – ஆர்.சி.பி – பெங்களூர்
வருண் சக்கரவர்த்தி – கல்கத்தா க்நைட் ரைடர்ஸ்
வாஷிங்டன் சுந்தர் – சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்
ஷாருக் கான் – பஞ்சாப் கிங்ஸ்

பிசாத்து இருபது லட்சம் கொடுத்து, ஒருவரைக் கூடவா ஏலத்தில் எடுக்கவில்லை?

புரிகிறது…

இதே போல்தானே கால்பந்து கிளப்புகள் நடக்கின்றன!?
அமெரிக்க ஃபுட்பால், கூடைப்பந்து எல்லாம் கூட இப்படித்தானே…
பாஸ்டன் நகரத்தில் பிறந்த வீரர் –> சிகாகோ அணிக்காக ஆடுவாரே!?

இருந்தாலும்…

துலீப் கோப்பையிலும், ரஞ்சி டிராபியிலும் நம்ம உள்ளூரு பசங்க ஜெயிக்க வேண்டும் என்னும் நினைப்பு வரும்.
இப்பொழுது ராஜஸ்தான் ராயல் ஜெயிக்கணும்னு நெனப்பு வருது.

எது எப்படியோ…

இருபது ஓவர் பந்தயத்தில் கடைசி பந்து வரை இருக்கை நுனியில் இருபத்தைந்து பேர் உட்கார்த்தி வைக்கிறார்கள்.
அதற்கு தனி மேலாண்மை நிர்வாகமும் நடுங்காத அமரிக்கையும் சூது தகிடுதத்தங்களும் வேண்டும்.
அத்தனையும் ஒருங்கிணைக்கிறார்கள். அரங்கேற்றுகிறார்கள்.

லலித் மோடி இல்லாவிட்டால் என்ன? எத்தனையோ எத்தர்கள்!

Million Dollar Arm

மில்லியன் டாலர் புஜம்

லாரி ஓட்டுபவரின் மகன், பல்லாயிரம் கோடி இரசிகர்களின் கனவு நாயகனாக மிளிர முடியுமா? கான்பூரின் அருகே உள்ள கிராமத்தில் இருப்பவரும்; லக்னௌவில் இருந்து காத தூரம் இருக்கும் குக்கிராமத்தில் இருப்பவரும்; அமெரிக்கா வந்து அங்கே பேஸ்பால் பந்து வீசும் நட்சத்திரங்கள் ஆவார்களா? ஒன்பது குழந்தைகள் உள்ள வீட்டில் ஒற்றை அறையில் வளர்பவர், அமெரிக்கர்களுக்கு சொந்தமான அவர்களுடைய விளையாட்டில், அவர்களுக்கு எதிராக மிளிர்வது சாத்தியமா?

இந்த மாதிரி சம்பவங்களைக் கோர்த்து எவராவது புனைவு அமைத்திருந்தால், இதெல்லாம் கதையிலும் சினிமாவிலும் மட்டுமே நடக்கும் என்றிருப்பேன். ஆனால், நிஜத்தில் நடந்திருக்கிறது. வாரநாசிக்கு அருகில் இருக்கும் ஊரில் பிறந்து வளர்ந்த தினேஷ் படேலும், ’கம்பள நகரம்’ என்றழைக்கப்படும் பாதோஹி நகரத்தில் ஒன்பதில் ஒருவராக பிறந்த ரிங்கு சிங்கும் – அமெரிக்கா வருகிறார்கள். பிட்ஸ்பர்க் நகர அணியில் பந்து போடுகிறார்கள்.

இந்த உண்மைக் கதையைப் பின்னணியாக வைத்து ”மில்லியன் டாலர் புஜம்” (Million Dollar Arm) வெளிவந்திருக்கிறது. இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரெஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்திற்கு இசையமைக்க ஒத்துக் கொண்டேபோது கொடுத்த பேட்டியில் ரெகுமான் இவ்வாறு சொல்கிறார்: ”ஸ்லம் டாக் மில்லியனரு’க்குப் பிறகு ஆங்கிலப் படங்களுக்கு இசையமைக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. ‘கப்பிள்ஸ் ரிட்ரீட்’, ’வாரியர்ஸ் ஆஃப் ஹெவன்’, ‘127 அவர்ஸ்’, ’எர்த்’, ‘பீப்பிள் லைக் அஸ்’னு இப்படி நிறைய நிறைய! அதில் நான் விரும்பித் தேர்ந்தெடுத்தது ‘127 அவர்ஸ்’ மட்டும்தான். அது ஆஸ்கர் பரிந்துரை வரை போனது. ஆனால், அடுத்த மூன்று வருடங்களுக்கு இந்தியாவை அடிப்படையாக வைத்து வரும் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்க நான் ஒப்புக்கொள்ளவில்லை. அப்படி, ஒத்துக் கொண்டால், ’ரெஹ்மானை – தெற்காசியா களத்தில் நடக்கும் கதைகளுக்குத்தான் பயன்படுத்தலாம்’ எனத் தேங்கிப் போயிருப்பேன். மேலும், இந்தியச் சூழலில் இசையமைக்க, எனக்கு தமிழும் ஹிந்தியும் இருக்கின்றன. அவற்றிலும் நான் தொடர்ந்து படங்கள் செய்து கொண்டுதானே இருக்கிறேன். நாலு வருடங்களுக்குப் பின்னால் மறுபடியும் ஒரு இங்கிலீஷ் படம் பண்ணலாம்னு நினைச்சேன். அந்த சமயத்தில் ‘மில்லியன் டாலர் ஆர்ம்’ படத்தின் இயக்குநர் கிரெய்க் கில்லஸ்ப்பியும் என்னை அணுகினார். இது இந்தியாவில் நடக்கும் கதை, வால்ட் டிஸ்னி தயாரிப்புனு நிறைய ஊக்கப்படுத்தும் விஷயங்கள் இந்தப் படைப்பில் இருந்தன. இது விளையாட்டு குறித்த திரைப்படம்தான். ஆனால், உள்ளுக்குள்ள ரொம்ப அற்புதமான இன்னொரு கதையும் மனித மனங்களின் ஊசலாட்டங்களும் ஓடுகிறது. ‘லகான்’ மாதிரினு சொல்லலாம்.”

படத்தில் எல்லா மொழிகளிலும் பாடல்கள் வருகிறது. படத்தின் இறுதியில் ‘என் சுவாசக் காற்றே’ படத்தில் இடம்பெற்ற சித்ராவும் உன்னிகிருஷ்ணனும் பாடிய ‘திறக்காதக் காட்டுக்குள்ளே’ பாடல் உணர்ச்சிப்பிழம்பான கணத்தில் ஒலிக்கிறது. படத்தின் நடுவே பாங்ரா பஞ்சாபி, டிஸ்கொத்தே ஹிந்தி, ஆங்கில ராப் என கலவையாக – எல்லா மொழிகளும் ரசனைகளும் இசைப்பிரிவுகளும் வருகின்றன.

இந்தப் படம் ஆஸ்கார் விருதுகளுக்கான நெடும் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், மூன்று/நான்கு பேர் மட்டுமே சொல்லப்படும் இறுதிப் பரிந்துரையில் இடம்பிடிக்கப் போவதில்லை என வல்லுநர்கள் கருதுகிறார்கள். ஸ்டீஃபன் ஹாகிங் வாழ்க்கையை சொல்லிய ‘தியரி ஆஃப் எவரிதிங்’ திரைப்படத்திற்கு இசையமைத்த யோஹான் ஜோஹான்ஸன், அல்லது இண்டெர்ஸ்டெல்லார் படத்தின் ஹான்ஸ் ஜிம்மர் அல்லது ஆலன் டூரிங் வாழ்க்கையை திரையாக்கிய ’தி இமிடேஷன் கேம்’ படத்தின் அலெக்ஸாண்டர் என முன்னிறுத்துகிறார்கள்.

ஆஸ்கார் விருதுகளுக்கு வாக்களிப்பவர்களுக்கு மறதி அதிகம். டிசம்பர் மாதத்தில் திரைப்படம் வெளியானால் மட்டுமே நினைவில் நிற்கும். ”மில்லியன் டாலர் புஜம்” திரைப்படமோ மே மாதமே வெளியாகி, இப்பொழுது திரையரங்குகளை விட்டு வெளியேறி விட்டது. இந்த நிலையில், அந்தப் படத்திற்கு எந்தப் பரிந்துரையும் கிடைப்பது சந்தேகமே. கோச்சடையான், ஐ போன்ற திரைப்படங்களுக்காகவும் ஏ ஆர் ரெஹ்மானின் பெயர் ஆஸ்கார் நீள்பட்டியல் பரிந்துரையில் இடம் பெற்றிருப்பதால், ‘மில்லியன் டாலர் ஆர்ம்’ பரிந்துரையையும் பத்தோடு பதினொன்றாகக் கருதி விட்டுவிடலாம்.

அது ஆஸ்கார் விருதிற்கான சாஸ்திரோப்தமான பட்டியல். இனி ஏ ஆர் ரெஹ்மானின் கோலோச்சல் குறித்த பாமரனின் பார்வை.

துவக்கத்தில் டிஸ்னியின் கோட்டை வரும்போதே பட்டாசு கிளம்பி விடுகிறது. இராணிகளும் மஹாராஜாக்களும் துள்ளலாக வெடி வெடிப்பது போல் ஐரோப்பிய பவனங்களுக்கு இந்திய ‘ஸ…ஸா… ஸரி’ வரும்போதே ”இது நம்ம இசை” என்று தோன்றவைத்து விடுகிறது. சிக்கன் டிக்கா மசாலாவில் இருக்கும் மணம் போல், பாரதத்திற்கேயுரிய வாசம்.

பதினான்காவது நிமிடத்தில் அந்த டிக்கா மசாலாவில் கொஞ்சம் சாம்பாரும் நிறைய தஹியும் கொத்து பரோட்டாவும் ஒருங்கே ஓங்கி ஒலிக்கிறது. சத்தமான இந்தியா. கசகச இந்தியா. சல்பேட்டா வாசனையான இந்தியா. கொண்டாட்ட இந்தியா. பரபர ஓட்டத்தின் நடுவே சாந்தமான இந்தியா. இப்படியெல்லாம் எழுத முடிகிறது… இதையெல்லாம் ஒலியில் கொண்டு வாருங்கள் என்று இயக்குநர் சொன்னாரா அல்லது இந்தியா என்றால் இதுதான் நாதம் என்று ஏ ஆர் ரெஹ்மான் சொன்னாரா? தெரியவில்லை. கேட்டுப் பார்த்தால் இந்தியா ஒலிக்கிறது. ஒளி கண்ணில் படாவிட்டால், மொழி புரியாவிட்ட்டால் கூட, அந்த லயம் காட்டிக் கொடுக்குமாறு அமைக்கப்பட்ட துள்ளலோசை.

அடுத்த ஓட்டம் இருபத்தி இரண்டாம் நிமிடம். ’சைய்யா சையா’ பாடிய சுக்விந்தர் சிங் ஒலிக்கிறார். அதே ஆட்டம்; பாட்டம். நிஜ நாடகம் தோன்றுவதற்கான ஒத்திகை நடக்கும் இடத்தை அறிமுகம் செய்யும் உறுமும் இசை.

அங்கே விட்டதை இருபத்தைந்தாம் நிமிடத்தில் சுக்வீந்த சிங் தொடர்கிறார். அவரை அப்படியே மாற்றி மேற்கத்திய இசைக்குத் தாவி விடுகிறார். இக்கி (Iggy Azalea) இங்கு வருகிறார்.

முப்பத்தி மூன்றில் ரெஹ்மானின் அமைதியான பாலட் ஒலிக்கிறது. பம்பாய் திரைப்படத்தில் ‘கண்ணாளனே’ துவக்கத்தில் வரும் இஸ்லாமிய சங்கீதம் போல்.

இனிமேல் திரைப்படத்தில் உற்சாகம் பிறக்க வேண்டும். ஏழைச் சிறுவர்கள் பந்து வீசும்போது அவர்களை ஒட்டி பாசமும், ஒட்டுதலும், ஜெயிக்க வேண்டுமே என்னும் ஏக்கமும் உண்டாக வேண்டும். டிஸ்னிக் கோட்டை வந்ததே… அதே இசை இப்பொழுது.

நாற்பதாவது நிமிடத்தில் நிஜப் போட்டி. இது ஏ ஆர் ரெஹ்மானின் சொந்த வீடு. முதல் படத்தில் ‘ஒட்டகத்தைக் கட்டிக்கோ’வில் ஆரம்பித்து மணி ரத்னத்திற்கு ’ருக்குமணி ருக்மிணி’ அயிட்டம் பாட்டு போட்டது போல் இலா அர்ஜுனும் அல்கா யாக்னிக்கும் குத்துகிறார்கள். அவர்கள் குத்துப்பாட்டு எப்பொழுது முடிகிறது, எப்பொழுது லகான் திரைப்படத்தில் வரும் “பார் பார் ஹோ…!! ஹஜார் பார் ஹோ!!!” வருகிறது என உணர முடியாத உருமாற்றம். அப்படியே, அந்த வீரர்களுக்காக கரகோஷமிடுகிறோம்.

நாற்பத்தியெட்டாம் நிமிடத்தில் வீடு திரும்புதல். அயல்நாடு செல்வதற்கு முன் வீட்டில் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டு விடை பெறும் தருணத்திற்கான முன்னுரையாக கொண்டாட்ட பாங்ரா. அது அப்படியே, உருக்கமான பிரிவுபசார பாந்தமாக மாறுகிறது. அங்கிருந்து அமெரிக்காவின் ராப், கெண்ட்ரிக் லமார் குரலில் தோன்றுகிறது.

இதன் பிறகு கிட்டத்தட்ட படம் முழுமையாக ஆட்கொள்கிறது. இசை தனியாக, பாடல் தனியாக, பாடகர் தனியாக துருத்திக் கொண்டு தெரிவதில்லை.

இசை ஒலிக்காமல் மௌனமாக இருக்க வேண்டிய நேரம். தோல்வியுறும் போது சந்திக்கும் நிசப்தம். அதிர்ச்சியும் பிரிவும் சொல்லும் குரல் எல்லாமே இருக்கிறது. ஆனால், இந்தியப் பகுதிகள் போல் “நான் ரெஹ்மான். நான் இங்கே இருக்கிறேன்” என்பது தெரிவதில்லை.

படத்தின் இறுதியில் இருவருக்கும் கடைசி வாய்ப்பு. இதில் வென்றால்தான் அமெரிக்கா கனவு பலிக்கும். தோற்றால் கூனிக் குறுக நேரிடும். இசை மெதுவாகவே ஆரம்பிக்கிறது. கொஞ்சம் ஹம்மிங். கொஞ்சம் ‘அ…ஆ…’. அப்படியே சட்டென்று ரிங்குவின் பந்து வேகமாகப் பாய்வது போல், தினேஷின் இதயம் துடிப்பது போல் துள்ளுகிறது. கையிலிருந்து ஏவப்பட்ட வில்லாக பாய்கிறது.

இந்தியர்கள் வெற்றிக்கான முதல் படியில் கால் வைத்ததை ஒலியிலும் திரையிலும் கலந்துருகிய உச்சகட்ட தருணமான படத்தின் இறுதியில் நிஜக்கதையிலும் வல்லவர்கள் வெற்றி கண்டார்கள் என்பதால் கண்கள் கலங்கியதா… அல்லது ரெஹ்மானின் இசையில் மனம் உருகியதா… தெரியவில்லை. ஆனால், ரெஹ்மான் தெரிந்தார். ஆஸ்கார் தெரியவில்லை. ஆனால், மீண்டும் மீண்டும் கேட்க வைத்து மயங்க வைக்கும் இசை தெரிந்தது. என்ன சுருதி, என்ன ராகம், என்ன தாளம், என்ன ஜானர் என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், இதயத்தைத் தொடும் இசை தெரிந்தது.

Pain vs. Hope: Fears vs. Dreams: Public Elections x Personal Decisions

பயத்திற்கும் நம்பிக்கைக்கும் நடுவே தேர்தல் நடக்கிறது.

அச்சமூட்டுவது எப்படி?

‘அன்னியர் இத்தாலியர் இந்தியப் பிரதமர் ஆகலாமா?’ – சோனியா காந்தியை பாரதீய ஜனதா கட்சி எதிர்க்கிறது. ‘மோடி மட்டும் பி.எம். ஆனால், மொத்த பாரதமும் பாகிஸ்தான் மாதிரி ஆகிவிடும்!’ – சந்தேகப் புகையை கிளப்பி துன்பப் பாதையை காட்டுகிறார் ஷிண்டே.

நம்பிக்கையை விற்பது எப்படி?

நான்காண்டுகளுக்கு முந்தைய அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஒபாமா எல்லோருக்கும் தெரிந்த உதாரணம். வாஜ்பேயி ‘இந்தியா ஓளிர்கிறது’ என்றார்; தோற்றார். ‘நிலையான அரசாங்கம்’ என்பதை இந்திரா காங்கிரஸ் முன்வைத்து வி.பி. சிங் + தேவி லால் – சந்திரசேகர் ஜனதாவை வென்றது.

உலகின் எல்லா தேர்தல்களிலும் பீதிக்கு எதிராக ஆசை வார்த்தை போட்டியிடுகிறது.

என்னிடம் சிக்ஸர் அடிக்க விருப்பமா அல்லது விக்கெட் விழாமல் இருக்க விருப்பமா என்று கேட்டால், எளிதாக விடை சொல்லி விடுவேன். ஒவ்வொரு பந்தையும் தூக்கி அடிப்பேன். ஆனால், விக்கெட்டிற்கு பதில் விரை என்று மாற்றினால், சிக்சர் பக்கமே செல்ல மாட்டேன்.

சூதாட்டம் – இருபதுத்துவம்

முந்தைய ட்வீட்ஸ் தொகுப்பு: ட்விட்டரும் நானும் (2)

நானும் ராம் கோபால் வர்மாவும்

நீங்களும் இவ்வாறு ஒப்பிட: Twitterize Yourself: How To Create A Visualization Of Your Twitter Profile [INFOGRAPHIC] – AllTwitter

உங்களுடன் ஒப்பிட சிலர்:

  1. ஏ ஆர் ரெஹ்மான்
  2. சுருதி ஹாஸன்
  3. பிரிட்டிஷ் நந்தி
  4. பர்க்கா தத்
  5. கரன் ஜோஹர்
  6. ஷாரூக் கான்
  7. சசி தரூர்
  8. சேகர் கபூர்
  9. சுசித்ரா
  10. சச்சின் டெண்டுல்கர்

சென்னை இராஜாங்கம்: V

அவ்வப்போது அமெரிக்காவில் விழும் ஒரு இன்ச் snow, ஒன்றரை மில்லிமீட்டர் பனியை, வீட்டு வாயிலில் இருந்து தெருவுக்குத் தள்ளிவிடுவதற்கே கண்களாலும் மூக்காலும் அழுபவன் நான். மிக மிக எளிமையாக வாசலைத் தெளித்துக் கோலம் போடுவது போன்ற கைங்கர்யம் அது.

குட்டி எவரெஸ்ட் மாதிரி இருக்கும் மணற்குவியலை, தலைக்கு மேல் இருக்கும் குப்பை வண்டியில் shovel செய்தவரைப் பார்த்தவுடன் மனம் நாணிக் கோணியது. சர்வ சாதாரணமாக, பகல் 41 டிகிரி வெயிலில் தூக்கிப் போட்டார். நீல்மெட்டல் சென்னையை சுத்தமாக மாற்றியுள்ளது.

முப்பது வருடம் முன்பு ரூபவாஹினிக்காக இலங்கை ஆண்டெனாக்கள் மொட்டை மாடிகளை நிறைத்திருக்கும். காக்கைகளும் அவற்றை ஆசையாகத் திருப்பி வைக்கும். ராஜபக்ஸே தமிழ்த் தொலைக்காட்சியை நிறுத்தி விட்டாரா என்று நாராயணனை விட்டு விசாரிக்க சொல்லவேண்டும். இன்றைய மாடிகள் முழுக்க சாடிலைட் டிஷ் ஆக்கிரமிப்பு. காக்கைகளும் காணாமல் போய்விட்டது. வேடந்தாங்கலிலாவது இருக்கிறதா என்று ப்ளாஸ்டிக் பைகளில் சோறு கட்டி சென்று பார்த்துவர வேண்டும்.

ஆட்டோக்காரர்கள் மெமரி கார்ட் கொண்டு பாட்டு போடுகிறார்கள். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கிளம்பிய இடத்தில் இருந்து சேரும் இடத்திற்கே கேட்கும் அலறலுடன் கூடிய எம்பி3 ஒலி. வேண்டிய பாடல்களை ஐபாட் shuffle ஆக மாற்றும் வசதி. பண்பலை என்னாச்சு என்னும் கேள்விக்கு ‘போயே போச்சு‘ங்கிறார்.

‘ஏன்’?

கேள்விக்கு பத்ரி மொட்டை மாடியில் பதில் சொன்னார்.

‘எஃப்.எம். ரேடியோக்கள் செய்திகளை ஒலிபரப்ப முடியவில்லை. ஆல் இந்தியா ரேடியா தவிர எவரும் நேரடி நிகழ்வுகளை உடனுக்குடன் சொல்லமுடியாது! ஐ.பி.எல் மாதிரி எத்தனையோ லைவ் விஷயங்கள் வானொலிக்கு வரவேண்டும்’.

மோகம் முப்பது தபா; ஆசை அறுபது ராவு என்பது போல் சிட்டி சென்டரும், எக்ஸ்டென்ஷன்களில் உலவும் ஸ்பென்சரும் பல்கிப் பெருத்தபின் சென்னை யுவன்களுக்கும் காரிகைகளுக்கும் மால் அலுத்துப் போய்விட்டது. அல்லது ஜாகையை மாற்றிக் கொண்டுவிட்டார்கள்.

இன்றளவிலும் ‘சூடிதாரில் நான் வருவேன். சல்வார் கமீஸை நான் மறவேன்’ என்று மதுரை சோமுவாகிறார்கள். லுங்கியைப் போன்ற வண்ணமயமான காற்றோட்டமான ஸ்கர்ட், அதிர்ச்சி மதிப்பீடாக தாவணி, நாகரிகமும் குறையாமல் கற்பும் காக்கும் முக்கால் பேன்ட் எதுவும் காணோம். அதெல்லாம் வந்தால் ‘ராம சேனா’வும் பாரதிய ஜனதாவும் வந்துவிடும் என்னும் பயமோ!

‘கடந்த 48 மணி நேரமாக பெண்களுடன் கலந்துரையாடி, பின்தொடர்ந்து “What women wantனு புரிந்து கொள்வதிலேயே நேரம் போவதாக’ சலித்துக்கொண்டவரிடம்தான் விசாரிக்கவேண்டும்.

Bhajji – Sreesanth row: How to market sports to Men?

ஆணுக்கு என்ன பிடிக்கும்? ஆக்ரோஷமான குத்துச்சண்டை பிடிக்கும். குத்துச்சண்டை விளையாட்டா என்பது விவாதத்துக்குரிய விஷயம். ஆனால், விளையாட்டில் போட்டி மட்டும் பார்வையாளனுக்கு போதாது.

போர்முனைக்கு செல்லும் பயம், கத்தி கிழித்த ரத்தம், கொலைவெறி பகைமை எல்லாம் இருக்க வேண்டும். அப்பொழுது கிடைக்கும் மாமிசத் துண்டுகளில் கேளிக்கைத்தனம் பூர்த்தியடையும்.

அமெரிக்காவில் இதை கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள். நியு யார்க் யாங்கீஸுக்கும் பாஸ்டன் ரெட் சாக்ஸுக்கும் ஆகவே ஆகாது.

நியூ யார்க் தோற்க வேண்டும் என்பதற்காக ‘செய்வினை’ வைப்பார்கள். பாஸ்டன் பேஸ்பால் வீரரின் சட்டையை விளையாட்டு அரங்கத்துக்குள் புதைத்து வைப்பார்கள். சென்ற வருடம் யாங்க்கீஸ் தோற்றதற்கு காரணம் தேடுபவர்கள் அந்த ‘மந்திரித்த டி-சர்ட்’டை தோண்டி கண்டுபிடித்து வழக்கு தொடுக்கும் நாடகம் எல்லாம் நடக்கும்.

(கடைசியாக அந்த சட்டை $175,100 டாலருக்கு நன்கொடை அமைப்புக்காக ஏலத்தில் விலை போனது நல்ல விசயம்).

இன்று பாஸ்டனுக்கு விளையாடும் வீரர், நாளை நடக்கும் ஏல பேரத்தில் நியூ யார்க்கிற்கு செல்வது சகஜமாக நிகழ்ந்தேறினாலும், இதே மாதிரி அண்டை நகரங்களுக்குள் தீராப்பகை இருப்பது போல் பாவ்லா காட்டி ரசிகர்களை முறுக்கேற்றுவார்கள்.

கபில் தேவுக்கு அழத் தெரியவில்லை என்றால், ஹர்பஜன் சிங்குக்கு அறையத் தெரியவில்லை.

இணையத்தில் பதினாலு தடவை ஃபார்வர்ட் மடலாக படித்த நகைச்சுவையை சொல்லும் ‘அசத்த/கலக்கப் போவது யாரு‘ நபருக்கு ‘டைமிங்’ முக்கியம். இந்த மாதிரி உணர்ச்சிகரமான உச்சகட்டத்திற்கும் ‘டைமிங்’ அதி முக்கியம்.

ஸ்ரீசாந்த் பவுன்சர் போட்டவுடன் ‘திமிரு’ தருண் கோபி எழுதிய இலக்கியத்தரமான டயலாக் ஆன ‘டேஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்’ என்று கோபமாக அறைந்தால், அதற்கு பெயர் டைமிங். தொலைக்காட்சிகளும் நேரடியாக ஒளிபரப்பும்.

செய்தி:

மொஹாலி போட்டி முடிந்ததும் வரிசையாக பஞ்சாப் அணி வீரர்கள் ஒவ்வொருவரிடமும் கைகொடுத்து வாழ்த்து தெரிவித்து வந்துள்ளார் ஹர்பஜன் சிங். 3-வது வீரராக ஸ்ரீசாந்த் நின்றுள்ளார். அவரிடம் கைகொடுப்பதற்குப் பதிலாக ஓங்கி அறைந்துள்ளார். ஹர்பஜனைத் தொடர்ந்து வந்துகொண்டி ருந்த அணியின் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத், அதைக் கண்டு கொள் ளாமல் மற்ற வீரர்களிடம் கைகொடுப்பதில் கவனம் செலுத்தி யுள்ளார்.

மும்பை அணியின் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத்துக்கு, போட்டிக்கான சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹர்பஜன் சிங்கை தடுக்கத் தவறியதால் அவருக்குத் இந்தத் தண்டனை.

நேற்றைய கூடைப்பந்தாட்ட நிகழ்ச்சியில் கூட கைகலப்பு அரங்கேறியது. ஒரு தலை பட்சமாக பாஸ்டன் செல்டிக்ஸ்‘ அணியே வென்று கொண்டிருக்க ஆட்டத்தை விறுவிறுப்பாக்க என்.பி.ஏ. (நேஷனல் பாஸ்கெட்பால் அஸோசியேஷன்) நினைத்தது.

முதலில் நடுவர்கள் பாரபட்சமாக செயல்பட்டனர். எதிரணியின் அராஜகமான செயல்களுக்கு விசிலடித்து குற்றங்கண்டு பிடிக்க வேண்டிய தருணங்களில் கண்டுங்காணாமல் விட்டுக் கொடுத்தும், ‘மாமியார் கை பட்டா குத்தம்’ என்பது போல் பாஸ்டன் லேசாக எதிரணியினர் மேல் உரசினாலும், ‘ஃபவுல்’ என்று ஊக்கப்படுத்தி, பார்வையாளர்களை உசுப்பேத்தினர்.

‘அதாவது நாலு பேருக்கு நல்லதுன்னா’ என்பது போல் நாற்பது பார்வையாளர்களுக்கு கோபம் பொங்கி வர வேண்டும். வந்தது.

அடுத்தது, சண்டக்கோழியாக வளர்த்துவிடப்பட்டிருக்கும் ஒருவர் மேல் ‘Foul’ முழங்கியவுடன், ‘அவன்தான் தவறு செய்தான்’ என்பது அப்பட்டமாக தெரிகிறதே என்று சிலுப்பிக் கொண்டு எழ ஆட்டம் சூடு பிடித்தது.

இதைத்தான் லால்சந்த் ராஜ்புத் + ஹர்பஜன் சிங் + ச்ரீசாந்த் (& நடுவர்(கள்)) செய்யத்தவறி விட்டனர்.

ஆட்டம் ஆரம்பத்தில் ‘முக அழகிரி + தயாநிதி மாறன்’ மாதிரி நட்போடு உரசவேண்டும். நடுவே கருத்துக்கணிப்பு மாதிரி பொறி பறக்க வேண்டும். கடைசியில் அப்பாவியாக மூன்று பேரைப் போட்டுத் தள்ளிவிட்டு நாடகத்தை முழுமையாக்க வேண்டும்.

இதற்காகத்தான் நடிகர்களை கிரிக்கெட் அணிகளின் தூதுவர்களாக நியமிப்பது வசதிப்படும். பெங்களூர் அணிக்கு த்ரிஷாவை தூதுவராக ஆக்கியிருந்தால் ‘சபாஷ்! சரியானப் போட்டி’ என்று எல்லாரும் உற்சாகமடைந்திருப்பார்கள்.

நிஜ களவீரர்களுக்கு பதில் ‘த்ரிஷா – நயந்தாரா இடையே சௌரிப்பிடி சண்டை’ என்று காண கண்கோடி வேண்டும் காட்சிக்காக முந்தின நாளே நுழைவதற்கு க்யூ வரிசையில் காத்திருப்பார்கள்.

ஆனால், ஹர்பஜன்/ஸ்ரீசாந்த் என்று நாடகத்தனமாக, கொல்கத்தாவின் ஷாரூக் கானுக்கும் மும்பை அம்பானிக்கும் வாள் சண்டை என்றால் எவர் நம்புவார்கள்?

தொடர்புள்ள நகைச்சுவைகள்