Tag Archives: City

Dinamalar Essay – TN Politics 2026: Rural Voters Analysis

*மௌன வாக்காளர்கள்: கிராமப்புறத் தமிழகம் உண்மையில் விரும்புவது என்ன?*

இந்திய அரசியலில் மிக எளிதாகச் செய்யக்கூடிய தவறு என்னவென்றால், கிராமப்புற தமிழ்நாட்டை பீகார், ராஜஸ்தான் அல்லது கர்நாடகாவில் காணப்படும் அதே வகையான கிராமப்புறமாகக் கற்பனை செய்வதுதான். 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாடு ஏற்கனவே 49% நகர்ப்புறம்; எஞ்சிய சுமார் 51% மட்டுமே கிராமப்புறமாக இருந்தது. ஒட்டுமொத்த இந்தியாவில் 31% மட்டுமே நகரம்; கர்நாடகா 38.7%, பீகார் வெறும் 11% நகர்ப்புறமாக இருக்கிறது. அதே நேரத்தில், தமிழகத்தின் ஒவ்வொரு தேர்தல் முடிவையும் தீர்மானிக்கும் மூணே முக்கால் கோடி கிராமத்தினரை அனைத்து அரசியல் கட்சியும் வட்டம், ஊராட்சி ஒன்றியம், குடியிருப்பு, வார்டு என பஞ்சாயத்து கேட்கும். இங்கு கிராமப்புற வாக்காளர் மறையவில்லை; “கிராமப்புறம்” என்பதன் பொருள் தேய்பிறையாக மாறிக்கொண்டேயிருக்கிறது.

தமிழ்நாட்டில் 154 இடங்கள் கிராமப்பகுதிகளைச் சார்ந்தவை. நகரங்களுக்கு 50. பாக்கி 30 இடைநிலைத் தொகுதிகள். கரூரில் 84% வாக்குப் பதிவு என்றால் சென்னையில் வெறும் 59% வாக்காளர்களே வாக்களிக்கிறார்கள். தங்கள் பதிவு தொகுதிக்கு வெளியே வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக நகர்ப்புற வாக்காளர்கள் நடைமுறைச் சிக்கல்களை சந்திக்கின்றனர். கிராம வாக்காளர்களிடம் சமூக திரட்டலும், சாதி அமைப்புகளும், உள்ளூர் என்னும் சொந்த உரிமை கொண்டாடும் பொறுப்புணர்வும் காரணிகளாக வலுவாகச் செயல்படுகின்றன.

2021ல் திமுக கூட்டணியின் வெற்றி விகிதம் நகர்ப்புற தொகுதிகளில் 80% ஆக இருந்தது; கிராமப்புற தொகுதிகளில் 62% மட்டுமே. அதேசமயம், அதிமுக கூட்டணி வென்ற 75 தொகுதிகளில் 58 இடங்கள் கிராமப்புறங்களிலிருந்தே வந்தன.

ஒப்பீட்டைக் கவனியுங்கள். பீகார், அசாம் (85.9%) அல்லது ஒடிசா (83.3%) போன்ற மாநிலங்களில், கிராமப்புற மக்கள்தொகை பெரும்பான்மையாக இருக்கிறது, தேர்தல்கள் கிட்டத்தட்ட முழுக்க முழுக்க கிராமப்புற உரையாடல்களாகவே இருக்கின்றன. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட சரி பாதிக்கு சற்றே அதிகமான கிராமப்புற மக்கள் சக்திவாய்ந்த நகர்ப்புற வாக்காளர் தளத்துடன் அரசியல் மேடையைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், கிராமப்புற தமிழ்நாடு வெறுமனே இருந்தால் போதாது; கவனத்திற்காகப் போட்டியிட வேண்டும். இந்தப் போட்டிதான் இந்தியாவிலேயே மிகவும் அரசியல் எழுச்சியுள்ள கிராமப்புற மக்களில் ஒன்றை உருவாக்கியிருக்கிறது.

இந்த வாக்காளர் உண்மையில் என்ன விரும்புகிறார்? “இலவச அரசியல்” என்ற கதையாடல் சொல்வதை விட பதில் மிகவும் நுட்பமானது.

அது தண்ணீர். தமிழ்நாட்டில் உள்ள 385 நிலத்தடி நீர் தொகுதிகளில் 142 அதிகமாக சுரண்டப்பட்டவை. மேலும் 33 கவலைக்கிடமான நிலையிலும் 57 நீர் தொகுதிகள் குற்றுயிராக உள்ளன. இது தார் பாலைவன ராஜஸ்தானை விட இந்தியாவின் மிகவும் நீர் நெருக்கடியுள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழகத்தை நிறுத்துகிறது. காவிரி டெல்டா: முன்னுமொரு காலத்தில் மாநிலத்தின் நெல் கிண்ணம் என்று கொண்டாடி பல மில்லியன் டன் நெல் விளைவித்தோம்! இப்போது விவசாயிகள் குளிர்காலப் பயிர்களை இரண்டு மூன்று முறை விதைப்பதைக் காண்கிறோம். வரவே வராத மழையை எதிர்நோக்கி ஏக்கத்துடன் காத்திருக்கின்றோம். தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மையின் பங்கு வெறும் 13% மட்டுமே. ஆனால் கிராமப்புற பகுதியில் முதன்மை வேலையளிப்பாளராக இது தொடர்கிறது. பொருளாதாரப் பங்களிப்புக்கும் மனித சார்புக்கும் இடையிலான இந்த இடைவெளியில்தான் உண்மையான நெருக்கடி வாழ்கிறது.

தமிழ்நாட்டின் நெருக்கடி என்பது கட்டமைப்புரீதியான பற்றாக்குறை. தமிழ்நாட்டின் தனிநபர் நீர் கிடைப்பு வெறும் 750 கன மீட்டர்; தேசிய சராசரியான 1,544 கன மீட்டரில் கிட்டத்தட்ட பாதி. நகரமயமாக்கலினால் விவசாயப் போட்டி கடும் நெருக்கடிக்குள்ளாகிறது. 2010-ல் தமிழ்நாட்டின் நீரில் 90% பாசனத்திற்குப் உபயோகமானது; 2020-க்குள் அது 60%-ஆகக் குறைந்தது! தொழிலகம் 26%-ஐயும், வீட்டு உபயோகம் 14%-ஐயும் எடுத்துக்கொண்டன. சென்னையின் வேகமான வளர்ச்சி விவசாயத்திலிருந்து நீரை இழுக்கிறது.

நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகள் இப்போது சூழலியல் நிலைத்தன்மையையும் இயற்கை வேளாண்மையையும் பிரச்சாரம் செய்கின்றன. கிராமப்புற வாக்காளர்களின் பெரும் பிரிவினர் வீட்டு உபயோகப் பொருட்கள் விநியோக திராவிட மாடலில் சலிப்படைந்து, நீண்டகால வாழ்வாதாரப் பாதுகாப்பு பற்றிய கடினமான கேள்விகளை எழுப்புகின்றனர்.

கிராம வாழ்க்கை இன்றளவும் ஆழமாக நிலம் சார்ந்த உடல் உழைப்பைச் சார்ந்துள்ளது. கிட்டத்தட்ட 70% தொழிலாளர்கள் விவசாயம் செய்தனர். குறைந்த தினசரி ஊதியங்கள் இன்றும் அவர்களின் அன்றாடம். விவசாய வேலையில் பெண்கள் ஆண்களை விட மிகவும் குறைவாக சம்பாதிப்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. செய்தி எளிமையானது: வேலையே பருவகாலத்திற்கேற்ப கிடைத்தும் கிடைக்காமலும்; கிடைக்கும் வேலையும் குறைந்த ஊதியத்துடன் சமத்துவமற்றதாகவும் இருக்கும்போது, “தன்னிறைவு” பற்றிய பேச்சுக்களை மக்கள் விரும்பவில்லை.

கிராமப்புற வாக்காளர் அருகிலுள்ள நகரங்களுக்கான பேருந்துகள், மாவட்டத் தலைமையகங்கள் அருகிலான தொழிற்சாலை வேலைகள், பால் கொள்முதல், மீன்பிடி, சேமிப்புக் கிடங்குகள், சிறு தொழில் கடன் ஆகியவற்றைப் பற்றி விளைபொருள் விலையைப் போலவே அக்கறை கொள்கிறார். தமிழகத்தின் அமைதியான கிராம வாக்காளர் நுட்பமான ஆனால் சக்திவாய்ந்த ஒன்றைச் சொல்கிறார்: எங்களை “காப்பாற்ற” வேண்டிய பின்தங்கிய கிராமங்களாக நடத்தாதீர்கள். அவர்கள் விரும்புவது கடைக்கண் மட்டும் வீசும் அரசு அல்ல, முடிவில்லாத அடையாள அரசியலும் அல்ல; ஆனால் தங்களை சரிசமமாக மதிக்கும் திறமையான அரசு; கிராமச் சாலைகளோடும் வேலைவாய்ப்போடும் தண்ணீர் கொட்டும் குழாய்களோடும் இல்லம் என்றழைக்கத்தக்க வீடுகளோடும் பெண்களைக்கான உரிமைக் கடனோடும், நலத்திட்டங்களை மேல்நோக்கிய சமூக நகர்வோடும் இணைக்கக்கூடிய வித்தியாசமான அரசு.

கிராமப்புற தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதம் 73.5%, தேசிய கிராமப்புற சராசரியை விட அதிகம். இது திறன்பேசி பயன்படுத்தும், சமூக ஊடகங்களில் அரசியலைப் பின்தொடரும், அரசாங்கத்தின் பாதை எங்கும் பயனின்றி முடிவடைவதை அறிந்த அறிவார்ந்த மக்கள்தொகை. மாநிலம் மூன்று அடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் மூலம் 12,500க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளை நிர்வகிக்கிறது! இந்தியாவிலேயே மிகவும் விரிவான கிராமப்புற ஆட்சி கட்டமைப்புகளில் ஒன்று. ஆனாலும், நிறுவனக் கட்டமைப்புக்கும் உண்மையான சேவை வழங்கலுக்கும் இடையிலான இடைவெளியானது, எந்தத் தேர்தல் அறிக்கையும் போதுமான அளவு பேசாத மௌன விரக்தியாக நீடிக்கிறது.

நகரங்களைக் கணக்கில் கொண்டு சராசரி என கணக்குக் காட்டி கடினமான கிராம யதார்த்தங்களை மறைக்கலாம்: படிக்கும் குழந்தை பள்ளியில் தொடர்கிறதா? நோய்வாயுற்ற சேயை தக்க நேரத்தில் தாய் மருத்துவமனையில் சேர்க்கிறாளா? திறமையான இளைஞர் தகுதியான வேலைக்குச் செல்கிறானா என்பதை இறுதிக் கட்டமே தீர்மானிக்கிறது. கிராமப்புற வாக்காளருக்குத் தெரியும்: வளர்ச்சி என்பது கவர்ச்சியான விளம்பரப் பலகை அல்ல; அது நம்பகமான 24×7 பேருந்து நிறுத்தம், சரியாகச் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம், தரமான அங்கன்வாடி, தேர்தல் அரசியலுக்கு முன்பே வரும் குடிநீர்.

தமிழகத்தின் தனித்துவமான கோணம் இதுதான்: எழுத்தறிவு விகிதமும், பன்முகப் பொருளாதார வெளிப்பாடும் கொண்ட நம் தமிழ்நாட்டுக் கிராமம் — ஜவுளி, வாகன உதிரிபாகங்கள், தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஆகியவை எளிய பேருந்துப் பயணத் தொலைவில் இருக்கும் இடம் ; அடிப்படையிலேயே வேறு வகையான வாக்காளரை உருவாக்குகிறது. இந்த வாக்காளர் எந்தக் கட்சி சிறந்த ஃப்ரிட்ஜோ, அதிக கூப்பனோ தருகிறது என்பதை வைத்து கட்சிகளைத் தேர்வு செய்வதில்லை. இந்த வாக்காளர் கணக்குப் போடுகிறார். எந்த அரசாங்கம் பாசனக் கால்வாயைச் சரிசெய்யும், எந்த அரசாங்கம் அருகிலுள்ள சுகாதார மையத்தில் நல்ல மருத்துவர் இருப்பதை உறுதிசெய்யும், எந்த அரசாங்கம் தங்கள் குழந்தைகள் வேலை செய்யும் அருகிலுள்ள நகரத்திற்கான பேருந்து சேவையை இயக்கும் என்று சீர்தூக்கிப் பார்க்கிறார்.

கிராமப்புற தமிழ்நாட்டின் மௌன வாக்காளர், உண்மையில், மிகவும் உரக்கவே பேசுகிறார். ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒருமுறை, வாக்குச்சாவடியில், 1967 முதல் ஒவ்வொரு ஆளும் அரசாங்கத்தையும் கவிழ்த்த நிலைத்தன்மையுடன். உண்மையான கேள்வி அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது அல்ல! அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரேனும் உண்மையாகவே காது கொடுத்துக் கேட்கிறார்களா என்பதுதான்.

IPL, LPL, LTTE, IPKF – T20 and Team Names

பத்து வயதிருக்கும். வீட்டில் எதையும் படிக்கும் சுதந்திரம். அந்த அட்டை கிழிக்கப்பட்ட நூல் வாசிக்கக் கிடைத்தது. ரஜினியின் படமான ‘தர்ம் யுத்தம்’ போல் அந்த 1983 கொலைகாரர்கள், கறுப்பு ஜூலை அராஜகவாதிகள் எல்லோரையும் தீர்த்துக் கட்ட எவராவது பிறக்க மாட்டார்களாக என மனம் துடிதுடிக்க வைத்த புத்தகம். கற்பனையில் பல்வேறு சண்டைகளை எண்ணிப் பார்த்து சமாதானம் அடைவேன்.

இன்றைய காலகட்டத்தில் இலங்கை பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் நடத்துகிறது. அதற்கான அணிகளின் பெயர்களில் இயக்கங்களின் பெயரைப் போட்டால் எப்படி இருக்கும்!?

இலங்கையில் இருக்கும் தமிழருக்கான சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பல நிலைகளில் பல்வேறு காலகட்டங்களில் இயக்கங்கள் செயல்பட்டன. ஈழ இயக்கங்களில் புகழ்பெற்றவற்றின் பெயர்கள் (அகரவரிசைப்படி):

1. ஈழ தேசிய விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எஃப். – Eelam National Democratic Liberation Front (ENDLF))
2. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) (Eelam People Democratic Party (EPDP))
3. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈ.பிஆர்.எல்.எஃப். – Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF))
4. ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ் – Eelam Revolutionary Organization of Students (EROS) – ஈ.ஆர்.ஓ.எஸ்.)
5. தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ – Liberation Tigers of Tamil Eelam (LTTE) – எல்.ரி.ரி.ஈ.)
6. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (ப்ளாட் (அ) புளொட் – People’s Liberation Organization of Tamil Eelam (PLOTE) – பி.எல்.ஒ.டி.ஈ.)
7. தமிழீழ விடுதலை இயக்கம் (டெலொ (அ) ரெலா – Tamil Eelam Liberation Organization (TELO) – டெலோ)
8. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (டி.எம்.வி.பி. – Tamileela Makkal Viduthalai Pulikal (TMVP))
9. தமிழர் விடுதலைக் கூட்டணி (அரசியல் கட்சி) (டுல்ஃப் (அ) ரி.யு.எல்.எப் – Tamil United Liberation Front (TULF) – டி.யு. எல்.எஃப்)

இலங்கை ப்ரீமியர் லீக் எல்.பி.எல் டி20 அணிகளின் பெயர்கள்:

1. Colombo Strikers – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் என்பதற்கு பதில்: கொழும்பு கொமாண்டோக்க‌ள்
2. Dambulla Aura – டம்புல்லா ஆரா என்பதற்கு பதில்: தம்புள்ளை துள்ளர்கள்
3. Galle Titans – கேலே டைட்டன்ஸ் என்பதற்கு பதில்: கல்லே கெரில்லாக்கள்
4. Jaffna Kings – ஜாஃப்னா கிங்ஸ் என்பதற்கு பதில்: யாழ்ப்பாண புலிகள்
5. B-Love Kandy – கண்டி பி-லவ் என்பதற்கு பதில்: கண்டி கழுகுகள்

இன்னும் ஆர்வமாக இலங்கை டிவெண்டி 20 பார்ப்போமோ?

பேட்ட (அ) பட்டினம்

சென்னை என்றால் மதராஸ்.

மதராஸ் என்றால் மதர் ஆசி.

அந்த மதர் உங்கள் அம்மா ஆக இருக்கலாம்!

அல்லது அகில இந்திய அண்ணா திமுக கட்சியின் அம்மா ஆக இருக்கலாம்!

பாண்டிச்சேரி மதர் ஆக இருக்கலாம்!

மதர் தெரஸா ஆக இருக்கலாம்!

அன்னை மேரி ஆக இருக்கலாம்!

அதுதாங்க சென்னை.

இங்கே மதம், கட்சி, எல்லாம் இல்லாததால் –> மதராஸ்.

அது ஒரு மொழி.

பிராமணா பாஷை…

கொங்குத் தமிழ்…

நாகை மலையாளம்…

இதெல்லாம் தமிழென்றால் –> மதராஸில் இருப்பது தொல்காப்பியத் தமிழ். ”வளர்தமிழ்” (வளர்ந்தது, வளர்கிறது, வளரும்)

சோ இதை முதலில் திரையில் விக்கிப்பிடியாத்தனமாகப் பதிந்தார்.

அதன் பின் நாகேஷ், கமல் என்று சினிமாக்காரர்கள் தொடர்ச்சியாக இலக்கண சுத்தமாக இந்த நகரத்தின் உரையாடல்களை உதிர்த்திருக்கிறார்கள்.

பேட்ட ராப், கானா என்று இதற்கு இசை சம்பந்தமான உப பிரிவுகளும் உண்டு.

அவற்றைக் கேட்கும் போது மெரீனா கடைகளின் ஓசையும் தட்டுக்கடைகளின் உணவும் இருந்தால் சுவைக்கும்.

சென்னா பட்டூரா கிடையாது. ஆனால், அதுதான் சோளே பட்டூரா ஆக அன்றைய பாலிமர் உணவகத்திலும் தாசா-விலும் பரிமாறப்பட்டது.

திருவொற்றியூரில் சுந்தரர்

திருமயிலையில் ஞானசம்பந்தர்.

நடுவில் செயிண்ட் தாமஸ் மௌண்ட், ஆயிரம் விளக்கு என்பார்கள் சென்னையை.

அந்த சென்னையை வடது, இடது, மத்திமர் என்று செண்ட்ரல் அரசாங்கம் பிரித்து தொகுதியாக்கினார்கள்.

அதன் பிறகு பா. இரஞ்சித் அதைப் படமாகவும் எடுத்தார்.

அந்தத் தலைப்பை வெற்றிமாறனும் கையாண்டார்.

மதராஸி என்றால் வடக்கத்தவருக்கு குறியீடு.

மதாராஸ் என்றால் சென்னை செண்டிரலும் எல்.ஐ.சி. பில்டிங்கும் என்பான் கோடம்பாக்கத் தமிழன்.

மதாராஸ் என்றால் காந்தி சிலையும் வள்ளுவர் சிலையும் என்பான் சென்னைக்காரன். (அம்பேத்கார் இல்லாத இடமெங்கே?!)

சென்னைக்காரன் என்றால் வாழும் வேட்கை உள்ளவன் என்பது தமிழருக்குப் புரிந்த அடையாளம்.

நான் பச்சை சென்னையையிட்.

பெருநகரங்களின் தனிமை

எனக்கு ஒரு இடத்தை எடுத்துக் கொண்டு, அந்த நகரத்தின் இண்டு இடுக்குகளையும், பிரதேசத்தின் எல்லைகளையும், நாட்டின் குணங்களையும் ஊடே கொடுத்துக் கொண்டு, கதை சொல்லும் பாணி பிடிக்கும். சொல்வனத்தில் வெளியான இந்தக் கதையை வாசித்தவுடன் ZYZZYVA இதழில் Héctor Tobar எழுதிய “Secret Stream” கதை நினைவிற்கு வந்தது.

அந்தக் கதையில் ஒரு இளைஞனும் இளைஞியும் அகஸ்மாத்தாக சந்திக்கிறார்கள். இளைஞனோ லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் சைக்கிளில் பயணித்து விநோத வரைபடங்கள் தயாராக்கி நண்பர்களுடன் நகரின் ஆழங்களைக் கண்டறிபவன். இளைஞியோ ’எல்லே’ (LA) நகரின் நீர்த்தளம் காண்பவர். தொலைந்து போன நதிகளை அறிந்து கொள்ள விழையும் தன்னார்வலர். இருவரும் தனியர்கள். கரணம் தப்பினால் காதல் வந்துவிடும். ஆனால், உருவாகவில்லை. அவர்கள் எல்.ஏ. நகரத்தின் ஹாலிவுட் மலைப்பகுதிகளில் உலா வருகிறார்கள். காடு, மேடு, தனியார் சொத்து, அத்துமீறி உள்நுழைதல் எல்லாம் சாகசமாகச் செய்கிறார்கள்.

என்னுடன் நட்பு கொண்ட, கூட வேலை பார்த்த எவரோ எப்போதாவது என்னுடைய நகரத்திற்கு வருவார்கள். என்னை சந்திக்க இயலுமா என வினவுவார்கள். அவர்களின் பிசி கடமைகளிலும் எனக்காக நேரம் ஒதுக்குவார்கள். கொஞ்ச நேரம் அவர்களுடன் பழங்கதை பேசுவேன்; கொஞ்சம் மது; நிறைய கொண்டாட்டம் நிறைந்த தருணங்கள். அவர்கள் என்னை உதாசீனப்படுத்தி, ஊருக்கு வந்த சுவடே தெரியாமல் போயிருக்கலாம். என்னுடைய அதிகப்பிரசங்கித்தனங்களும் போதாமைகளும் அவர்கள் உள்ளூற அறிந்தே இருக்கிறார்கள். இருந்தாலும் என்னை சந்திப்பதை முக்கியப்படுத்தி, எனக்கு மதிப்பு கொடுத்து, நேரம் ஒதுக்குவார்கள். அது கோடையைப் போல் சுகமானது (“That Summer Feeling”) என்பார் Jonathan Richman.

சொல்வனத்தில் வெளியான இந்தக் கதை அந்த அந்தர்வாகினி ஆற்றுக்கு எதிராக ஓடுகிறது. இந்தக் கதையில் வரும் மூன்று, நான்கு துண்டுச் சம்பவங்களை எது இணைக்கிறது என்று உடனடியாகப் புலப்படாது. இளைஞன், முதியவர், பின் குழந்தை என்று மூன்று பருவத்தில் Protagonist-ஐ தொடர்பவர்கள் உண்டு. என்ன பிராயங்களில் இந்த மூவரைக் கடக்கிறாள் என்பதும் தெளிவாக இராது. சம்பவங்களில் முதல் சம்பவம் சுட்டுகிற சிறு அச்சம் இரண்டாவதில் இல்லை, மூன்றாவதில் அந்த அச்சம் சொல்லப்பட்டாலும் ஏனென்பது தெளிவில்லை.

காலம் ஒரு myth , மாயை என்பதற்கான குறியீடு. இந்தக் கதை வாசகனின் கற்பனையில் பல அடுக்குகளோடு, பல விதமான சாத்தியக்கூறுகளோடு விரிவடையும் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்டிருக்கிறது. எனக்கு இந்த மாதிரி பூடகமான விஷயங்களைச் சொல்ல இன்னும் மெனக்கிட வேண்டும் என்பது சொந்தக் கருத்து. அதாவது முன்னூறு பக்கம் எழுதிவிட்டு, உள்ளடக்கமாக சில விஷயங்களை சொருகியிருக்கிறேன் என்றால் நம்புவேன்; அந்தப் புனைவை சிரத்தையாக வாசிப்பேன். முன்னூறு வார்த்தைகள் எழுதிவிட்டு ’பொருள் தொக்கி நிற்கிற மாதிரி எழுதுகிறேன்’ என்றால் பொறுமையின்மை என்றே சொல்லவேண்டும்.

கதை என்றால், எழுதப்பட்ட இடத்தில் வசிப்பதற்கு மனம் ஏங்க வேண்டும். அல்லது அந்த இடத்திற்கு செல்வதற்கே கூச்சமும் அச்சமும் எழ வேண்டும். கதையில் உலவும் கதாபாத்திரங்களுடன் உரையாட, அந்த உரையாடல் நீங்காமல் தொடர்ந்து கொண்டேயிருக்க பிரியப்பட வேண்டும். புனைவில் சொல்லப்பட்டவர்களிடம் கேட்பதற்கு கேள்விகள் எழ வேண்டும். இந்தக் கதையில் அந்த இலக்கு நிறைவேறுகிறது. எனவே, படிக்கக் கூடிய கதை.

கதையை நீங்களும் வாசித்து உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள்.

clock_brain_human_rock_tree_oil_water_flow_house_home_think_alone_art_painting_imagine

பாஸ்டன்: பெயர்க் காரணம்

நான் இருக்கும் ஊரின் பெயர் பாஸ்டன். இங்கிலாந்தில் இருந்து இந்தப் பெயர் வந்திருக்கிறது.

அமெரிக்காவில் பரங்கியர்கள் எங்கெல்லாம் குடியேறினார்களோ, அந்த இடத்திற்கெல்லாம், தங்களின் சொந்த ஊரின் பெயரையே நாமகரணமிட்டார்கள். இங்கிலாந்தில் உள்ள லண்டன், யார்க், க்ளூஸ்டர், வூர்ஸ்டர் போல், இந்தப் பகுதியிலும் நியு லண்டன், நியு யார்க் என குக்கிராமங்களை அழைத்துக் கொண்டார்கள். இவற்றில் சில ஊர்கள் மூலகர்த்தாவை விட அதிகப் பெயரும் புகழும் பெற்றது. லண்டனில் இருந்து இரண்டரை மணி நேரம் வடக்கில் இருக்கும் அசலை விட அதிகம் பேர் புழங்கும் இடமாக பாஸ்டன் ஆகி இருக்கிறது.

அந்த அசல் பாஸ்டன் பெயர் எப்படி வந்தது?

செயிண்ட் போடாஃல்ப் நகரம் என்பதுதான் மருவி பாஸ்டன் ஆகி இருக்கிறது. பால்டாஃப் டவுன் (அ) பால்டாஃப் ஸ்டோன் என்பது நாக்கை சுளுக்கெடுக்க, பால் ஸ்டோன் என சுருண்டு, அதுவே… நாளடைவில் பாஸ்தன் என பெயர் பெற்றது.

“ஒரு கல்; ஒரு கண்ணாடி” என்னும் பிரயோகம் கூட இந்த நகரத்தில் இருந்து வந்திருக்கிறது. ஏழாம் நூற்றாண்டில் துறவி பால்டாஃப் வைத்தது ஒரு கல். அதைச் சுற்றி வசித்தவர்களால் பாஸ்டன் நகரம் உருவானது. நடுநடுவே போர்ச்சுகீசியர்கள் குடிபுகுந்தார்கள். அப்படி வந்தேறியவர்களை 21ஆம் நூற்றாண்டில் கால்பந்தில் இங்கிலாந்து தோற்றவுடன் பால்டாஃப் stone (கல்) கொண்டு மண்ணின் மைந்தர்கள் விரட்டினார்கள்.

அமெரிக்காவின் பாஸ்டனில் இருந்த ஆதிகுடி என்ன பெயர் கொண்டு அழைத்தது என்பதை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

நகரம் & கிராமம்: மாறும் வாழ்க்கை

பாஸ்டன் நகரம் பக்கமாக இருக்கும் கிராமப்புறத்தில் வசிக்க வந்தேன். அது மெதுவாக நகர்ப்புறமாக மாறுவதைப் பார்க்கிறேன். அந்த மாற்றத்தை “Coming Soon” என்று ஸ்டீவன் மில்லவுஸர் (Steven Millhauser) சிறுகதையாக படம் பிடித்திருக்கிறார். நியு யார்க்கரில் வெளியான புனைவு. இங்கே, அந்தக் கதைக்கான புகைப்படம் உருவான கதை.

தீஸியஸின் கப்பலைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது போல் கதாநாயகனின் உலகமும் மீளுருவாக்கமாகவே நீள்கிறது. நேற்று வீடு இருந்த இடத்தில், இன்று அடுக்கு மாடி கட்டிடம். சில நாள் முன்பு காபி கடை. சில நாள் கழித்து தொடர் அங்காடி வளாகம். இன்னும் சில நாள் கழித்து நவநாகரிக விற்பனை மையம். மாறிக் கொண்டே இருக்கிறது. கடந்த இருபது வருடங்களாக அமெரிக்காவில் இதை சகஜமாகப் பார்க்கிறேன். தொண்ணூறுகளில் இருந்த கடைகள் இப்பொழுது இல்லை. அவற்றுக்கு பதிலாக அதே இடங்களில் வேறு விஷயங்கள் முளைத்திருக்கும்.

இது அமெரிக்காவிற்கு மட்டும் உரித்தானதும் அல்ல. சீனப் பாம்பும் இப்படி புதுப்புது தோல் உடுத்திக் கொண்டே இருக்கிறது. பெரிய தோட்டம் கொண்ட வீடு; வீட்டில் இருந்து இரண்டு தப்படி நடந்தால் முக்கு கடையில் செய்தித்தாள். அங்கிருந்து பொடிநடையாக சென்றால் நதிக்கரை. நகரத்திற்கு எதிர்ப்பதமாக அமைதியான வாழ்க்கை. நெரிசல் இல்லாத சாலை. மீன் வாசனை இருக்கும்; ஆனால், மூத்திர வாசனை கொண்ட பேருந்து பயணம் இருக்காது. இருபது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே இருப்பதை ரசிப்பதை விட படகில் சென்று பக்கவாட்டில் தூரமாகும் வாழ்க்கையின் அழகை நீரோடையாக பார்க்கச் சொல்லும் நிதானம் கொண்டது.

வெறுமனே விவரிப்புகள் மட்டும் கதை ஆகாது என்பதில் வெகு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதே போல் பழைய கதைகளை மறுபடி தூசி தட்டுவதிலும் ஆர்வம் கிடையாது. இந்த இரண்டையும் இந்தக் கதை கட்டுடைக்கிறது. “விரைவில் வரப்போகிறது” பெரும்பாலும் தன்னுடைய கவனிப்புகளை மட்டுமே முன்வைக்கிறது. அதே சமயம் நல்ல சிறுகதை விட்டுப் போகும் தாக்கங்களையும் மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கும் ஆர்வம் உள்ளடக்கிய நடையும் வைத்திருக்கிறது. பள்ளிக்காலத்தில் படித்த ரிப் வான் விங்கிள் நினைவுக்கு வந்தாலும், இவர் நவீன உலகின் கொசு அசுரன்.

Most Competitive Cities in India: Top places to live, earn and have a Metro lifestyle

Top Polluting Cities in India: Environment & Global Warming: Carbon footprint with Gold

நன்றி: ஹிந்துஸ்தான் டைம்ஸ் :: இ-பேப்பர்

மலையாளம், மலையாளி – ஓர் எச்சரிக்கை: சக்கரியா

நன்றி: பத்தி: அரபிக் கடலோரம் – காலச்சுவடு :: தமிழில்: சுகுமாரன் [இதழ் 98 – பிப்ரவரி 2008]

மலையாள மொழி இன்று அடைந்திருக்கும் நிலைமை விநோதமானது. மலையாளம் என்பது என்ன? மூன்றேகால் கோடி எண்ணிக்கையுள்ள கேரளயர்கள் அன்றாடம் பேசுகிற மொழி. எழுதுகிற மொழி. நிச்சயமாகக் கேரளத்திலுள்ள பெரும்பான்மை மக்களின் பேச்சு மொழியும் எழுத்து மொழியும் மலையாளம் மட்டுமே. உடனடியாக அப்படி இல்லாமல் போய்விடுமென்றும் தோன்றவில்லை.

:::

சட்டபூர்வமான ஆட்சிமொழி மலையாளம். ஆனால், அரசாங்கப் பணிகளில் பெரும்பான்மையும் நடப்பது ஆங்கிலத்தில்தான். எழுத்தறிவு இல்லாத குடிமகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டிய நீதிமன்ற மொழியும் ஆங்கிலந்தான்.

அதே சமயம்

  • நாளிதழ்கள்,
  • தொலைக்காட்சிகள் பயன்படுத்தும் மொழி மலையாளம் மட்டுமே.
  • சட்டமன்ற விவாதங்களின் மொழி மலையாளம்.
  • மதப் புரோகிதர்களும் சாதியமைப்புகளும் மக்களுடன் பேசுவது மலையாளத்தில்தான். சமஸ்கிருதத்திலோ அரபியிலோ லத்தீனிலோ அல்ல.
  • சினிமாவின் மொழியும் சினிமாப் பாட்டுகளின் மொழியும் மலையாளமே.
  • நாடகங்கள் மலையாளம்.
  • கதையும் கவிதையும் நாவலும் மலையாளம்.
  • அரசியல் சொற்பொழிவுகள் மலையாளம்.

ஆனால், பாலவாடி முதல் மலையாளியின் முதல் மொழியாகக் கருதப்படுவது ஆங்கிலமே. மலையாளம் வெறும் ‘செக்கண்ட் லாங்வேஜ்’. இந்த விசித்திரமான இரட்டை முகம் எப்படி உருவானது?

‘பயன்பாடு’ என்ற ஒற்றை வார்த்தையே இதற்குப் பதில். மலையாள மொழி மூலம் பயனடைபவர்களுக்கும் பயனடையாதவர்களுக்குமான வேறுபாடு இங்கே தெளிவாகிறது. ‘பயன்’ என்பது என்ன பொருளைத் தருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். நமது வாழ்க்கையை எந்த வகையிலாவது மேம்படுத்துகிற ஒன்று. வாழ்க்கையைப் பராமரிக்க உதவும் ஒன்று. வாழ்க்கையில் நம்பக்கூடிய ஒன்று. இவைதாம் அந்தப் பயன்கள்.

சராசரி மலையாளியைப் பொறுத்தவரை அன்றாட வாழ்க்கையில் கருத்துப் பரிமாற்றத்துக்கான கருவி மலையாளம் மட்டுமே. வீட்டில், வழியில், கடையில், அலுவலகத்தில் எங்கும். அல்லது செய்திகள் வாசிக்க, தொலைக்காட்சி பார்க்க, புரோகிதனின் சொற்களைக் கேட்க எல்லாவற்றுக்கும். பத்திரிகை வாசிக்கும்போதும் தொலைக்காட்சி பார்க்கும்போதும் அவன் அரசியல் கட்சிகள், எழுத்தாளர்கள் போன்ற கருத்துத் தொடர்பாளர்களின் சொற்களையும் மறைமுகமாகக் கேட்கிறான். தொலைக்காட்சிகளில் வரும் கலை நிகழ்ச்சிகளும் சினிமாவும் அவனை மலையாளம் வழியாகவே உல்லாசப்படுத்துகின்றன.

பத்திரிகைகள், தொலைக்காட்சி, இலக்கியம், அரசியல், மதச் சொற்பொழிவுகள், சினிமா இவற்றைவிட்டால் வேறு என்ன? அவன் இவற்றுக்கு ஒரு சந்தை மட்டுமே.

அவன் மூலம் இவர்களெல்லாம் வாழ்கிறார்கள். அவர்கள் அவனிடம் மலையாளத்தில் அரசியலை விற்கிறார்கள்; மதத்தை விற்கிறார்கள்; இலக்கியத்தை விற்கிறார்கள்; பத்திரிகையை விற்கிறார்கள்; தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விற்கிறார்கள். அவன் கொடுக்கும் சந்தாக்கள், காணிக்கைகள், நன்கொடைகள், விலைகள் ஆகியவற்றால் அவர்கள் கேரளத்தில் வலிமையானவர்களாகவும் செல்வந்தர்களாகவும் செல்வாக்குள்ளவர்களாகவும் மாறுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அவர்கள் அதிகார வர்க்கமாகிறார்கள். சராசரி மலையாளி அதிகாரம் செய்யப்படுபவனாகிறான்.

அரசியல் கட்சிகளும் மதங்களும் ஊடகங்களும் அறிவுஜீவிகளும் அடங்கிய இந்த ஆளும் வர்க்கம் சுதந்திரத்துக்குப் பின் வந்த அரை நூற்றாண்டு கால ஆட்சியில் சராசரி மலையாளியை இந்தியா முழுவதும் அல்லது உலகம் முழுவதும் அப்பத்துக்காக அலையும் ஒரு அகதியாக்கிவிட்டிருக்கிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பிற கட்சிகளின் பங்களிப்பு இதுதான். மதத் தலைவர்கள், சாதியமைப்புகள், அறிவுஜீவிகள், பத்திரிகைகள், தொலைக்காட்சி அலைவரிசைகள் எல்லாவற்றின் பங்களிப்பும் இதுதான். அவர்கள் உண்டு கொழுத்தார்கள்.

:::

மலையாளிக்குக் கேரளத்தில் தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலம் இருண்டது, மலையாளத்தால் தன்னுடைய பிள்ளைகளுக்குப் பயனில்லை என்பது புரிந்துவிட்டது. அவர்களுக்கு ஒரு வேலையோ வருமான மார்க்கமோ கிடைக்க வேண்டுமானால் அவர்கள் கேரளத்தை விட்டு வெளியேற வேண்டுமென்பதும் புரிந்துவிட்டது. அதற்கு மலையாளம் பிரயோஜனமில்லை என்பதும் புரிந்துவிட்டது. மலையாளம் மூலம் பயனடைந்தவர்கள் வரிசையில் தனக்கும் தன்னுடைய பிள்ளை களுக்கும் இடமில்லை என்பதும் புரிந்துவிட்டது. அப்படியாகத்தான் மலையாளம் செகண்ட் லாங்வேஜாகவும் ஆங்கிலம் முதல் மொழியாகவும் மாறியது.

பெரும்பான்மை மக்களுக்குச் சோறுபோடும் மொழியாக இல்லாமற்போயிருக்கிறது என்பதுதான் இன்று மலையாள மொழியின் அவலம். அது சோறுபோடுவது அரசியல் கட்சிகளுக்கும் பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கும் மதத் தலைவர்களுக்கும் சினிமாக்காரர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் மட்டுமே. (இதில் அப்பாவி மலையாள ஆசிரியர்களும் உண்டு). மலையாளம் அவர்களுடைய மொத்தக் குத்தகையாகிவிட்டது. அதனால்தான் நான் பல சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்: ‘மலையாளம் உண்மையைப் பேசத் தெரியாத ஒரு மொழியாக மாறியிருக்கிறது. அதைக் குத்தகையாகக் கொண்டிருப்பவர்கள் எவரும் பொதுவாக உண்மை பேசுபவர்களுமல்ல.’

தமிழின் நிலைமை பற்றி எனக்குத் தெரியாது. அண்டை வீட்டு நிலைமையைத் தமிழ் ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டுமா என்றும் எனக்குத் தெரியாது.

Edward Burtynsky’s photographs

நன்றி: Our Changing World « Experienced Yet?

These images are meant as metaphors to the dilemma of our modern existence; they search for a dialogue between attraction and repulsion, seduction and fear. We are drawn by desire – a chance at good living, yet we are consciously or unconsciously aware that the world is suffering for our success. Our dependence on nature to provide the materials for our consumption and our concern for the health of our planet sets us into an uneasy contradiction.

The captions from where the photos are from:

  1. Nickel Waste River. Ontario, Canada.
  2. Tire Mountains. Oxford, USA.
  3. Flattened City. Three Gorges Dam, China.
  4. Ship breaking Beach. Chittagong, Bangladesh.
  5. Oil Drum Cliff. Ontario, Canada.
  6. Computer Harvest. Guiyu, China.
  7. Concrete Forest. China.
  8. Uranium Waste Desert. Ontario, Canada.