Tag Archives: Dinamalar

Dinamalar Essay – TN Politics 2026: Rural Voters Analysis

*மௌன வாக்காளர்கள்: கிராமப்புறத் தமிழகம் உண்மையில் விரும்புவது என்ன?*

இந்திய அரசியலில் மிக எளிதாகச் செய்யக்கூடிய தவறு என்னவென்றால், கிராமப்புற தமிழ்நாட்டை பீகார், ராஜஸ்தான் அல்லது கர்நாடகாவில் காணப்படும் அதே வகையான கிராமப்புறமாகக் கற்பனை செய்வதுதான். 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாடு ஏற்கனவே 49% நகர்ப்புறம்; எஞ்சிய சுமார் 51% மட்டுமே கிராமப்புறமாக இருந்தது. ஒட்டுமொத்த இந்தியாவில் 31% மட்டுமே நகரம்; கர்நாடகா 38.7%, பீகார் வெறும் 11% நகர்ப்புறமாக இருக்கிறது. அதே நேரத்தில், தமிழகத்தின் ஒவ்வொரு தேர்தல் முடிவையும் தீர்மானிக்கும் மூணே முக்கால் கோடி கிராமத்தினரை அனைத்து அரசியல் கட்சியும் வட்டம், ஊராட்சி ஒன்றியம், குடியிருப்பு, வார்டு என பஞ்சாயத்து கேட்கும். இங்கு கிராமப்புற வாக்காளர் மறையவில்லை; “கிராமப்புறம்” என்பதன் பொருள் தேய்பிறையாக மாறிக்கொண்டேயிருக்கிறது.

தமிழ்நாட்டில் 154 இடங்கள் கிராமப்பகுதிகளைச் சார்ந்தவை. நகரங்களுக்கு 50. பாக்கி 30 இடைநிலைத் தொகுதிகள். கரூரில் 84% வாக்குப் பதிவு என்றால் சென்னையில் வெறும் 59% வாக்காளர்களே வாக்களிக்கிறார்கள். தங்கள் பதிவு தொகுதிக்கு வெளியே வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக நகர்ப்புற வாக்காளர்கள் நடைமுறைச் சிக்கல்களை சந்திக்கின்றனர். கிராம வாக்காளர்களிடம் சமூக திரட்டலும், சாதி அமைப்புகளும், உள்ளூர் என்னும் சொந்த உரிமை கொண்டாடும் பொறுப்புணர்வும் காரணிகளாக வலுவாகச் செயல்படுகின்றன.

2021ல் திமுக கூட்டணியின் வெற்றி விகிதம் நகர்ப்புற தொகுதிகளில் 80% ஆக இருந்தது; கிராமப்புற தொகுதிகளில் 62% மட்டுமே. அதேசமயம், அதிமுக கூட்டணி வென்ற 75 தொகுதிகளில் 58 இடங்கள் கிராமப்புறங்களிலிருந்தே வந்தன.

ஒப்பீட்டைக் கவனியுங்கள். பீகார், அசாம் (85.9%) அல்லது ஒடிசா (83.3%) போன்ற மாநிலங்களில், கிராமப்புற மக்கள்தொகை பெரும்பான்மையாக இருக்கிறது, தேர்தல்கள் கிட்டத்தட்ட முழுக்க முழுக்க கிராமப்புற உரையாடல்களாகவே இருக்கின்றன. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட சரி பாதிக்கு சற்றே அதிகமான கிராமப்புற மக்கள் சக்திவாய்ந்த நகர்ப்புற வாக்காளர் தளத்துடன் அரசியல் மேடையைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், கிராமப்புற தமிழ்நாடு வெறுமனே இருந்தால் போதாது; கவனத்திற்காகப் போட்டியிட வேண்டும். இந்தப் போட்டிதான் இந்தியாவிலேயே மிகவும் அரசியல் எழுச்சியுள்ள கிராமப்புற மக்களில் ஒன்றை உருவாக்கியிருக்கிறது.

இந்த வாக்காளர் உண்மையில் என்ன விரும்புகிறார்? “இலவச அரசியல்” என்ற கதையாடல் சொல்வதை விட பதில் மிகவும் நுட்பமானது.

அது தண்ணீர். தமிழ்நாட்டில் உள்ள 385 நிலத்தடி நீர் தொகுதிகளில் 142 அதிகமாக சுரண்டப்பட்டவை. மேலும் 33 கவலைக்கிடமான நிலையிலும் 57 நீர் தொகுதிகள் குற்றுயிராக உள்ளன. இது தார் பாலைவன ராஜஸ்தானை விட இந்தியாவின் மிகவும் நீர் நெருக்கடியுள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழகத்தை நிறுத்துகிறது. காவிரி டெல்டா: முன்னுமொரு காலத்தில் மாநிலத்தின் நெல் கிண்ணம் என்று கொண்டாடி பல மில்லியன் டன் நெல் விளைவித்தோம்! இப்போது விவசாயிகள் குளிர்காலப் பயிர்களை இரண்டு மூன்று முறை விதைப்பதைக் காண்கிறோம். வரவே வராத மழையை எதிர்நோக்கி ஏக்கத்துடன் காத்திருக்கின்றோம். தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மையின் பங்கு வெறும் 13% மட்டுமே. ஆனால் கிராமப்புற பகுதியில் முதன்மை வேலையளிப்பாளராக இது தொடர்கிறது. பொருளாதாரப் பங்களிப்புக்கும் மனித சார்புக்கும் இடையிலான இந்த இடைவெளியில்தான் உண்மையான நெருக்கடி வாழ்கிறது.

தமிழ்நாட்டின் நெருக்கடி என்பது கட்டமைப்புரீதியான பற்றாக்குறை. தமிழ்நாட்டின் தனிநபர் நீர் கிடைப்பு வெறும் 750 கன மீட்டர்; தேசிய சராசரியான 1,544 கன மீட்டரில் கிட்டத்தட்ட பாதி. நகரமயமாக்கலினால் விவசாயப் போட்டி கடும் நெருக்கடிக்குள்ளாகிறது. 2010-ல் தமிழ்நாட்டின் நீரில் 90% பாசனத்திற்குப் உபயோகமானது; 2020-க்குள் அது 60%-ஆகக் குறைந்தது! தொழிலகம் 26%-ஐயும், வீட்டு உபயோகம் 14%-ஐயும் எடுத்துக்கொண்டன. சென்னையின் வேகமான வளர்ச்சி விவசாயத்திலிருந்து நீரை இழுக்கிறது.

நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகள் இப்போது சூழலியல் நிலைத்தன்மையையும் இயற்கை வேளாண்மையையும் பிரச்சாரம் செய்கின்றன. கிராமப்புற வாக்காளர்களின் பெரும் பிரிவினர் வீட்டு உபயோகப் பொருட்கள் விநியோக திராவிட மாடலில் சலிப்படைந்து, நீண்டகால வாழ்வாதாரப் பாதுகாப்பு பற்றிய கடினமான கேள்விகளை எழுப்புகின்றனர்.

கிராம வாழ்க்கை இன்றளவும் ஆழமாக நிலம் சார்ந்த உடல் உழைப்பைச் சார்ந்துள்ளது. கிட்டத்தட்ட 70% தொழிலாளர்கள் விவசாயம் செய்தனர். குறைந்த தினசரி ஊதியங்கள் இன்றும் அவர்களின் அன்றாடம். விவசாய வேலையில் பெண்கள் ஆண்களை விட மிகவும் குறைவாக சம்பாதிப்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. செய்தி எளிமையானது: வேலையே பருவகாலத்திற்கேற்ப கிடைத்தும் கிடைக்காமலும்; கிடைக்கும் வேலையும் குறைந்த ஊதியத்துடன் சமத்துவமற்றதாகவும் இருக்கும்போது, “தன்னிறைவு” பற்றிய பேச்சுக்களை மக்கள் விரும்பவில்லை.

கிராமப்புற வாக்காளர் அருகிலுள்ள நகரங்களுக்கான பேருந்துகள், மாவட்டத் தலைமையகங்கள் அருகிலான தொழிற்சாலை வேலைகள், பால் கொள்முதல், மீன்பிடி, சேமிப்புக் கிடங்குகள், சிறு தொழில் கடன் ஆகியவற்றைப் பற்றி விளைபொருள் விலையைப் போலவே அக்கறை கொள்கிறார். தமிழகத்தின் அமைதியான கிராம வாக்காளர் நுட்பமான ஆனால் சக்திவாய்ந்த ஒன்றைச் சொல்கிறார்: எங்களை “காப்பாற்ற” வேண்டிய பின்தங்கிய கிராமங்களாக நடத்தாதீர்கள். அவர்கள் விரும்புவது கடைக்கண் மட்டும் வீசும் அரசு அல்ல, முடிவில்லாத அடையாள அரசியலும் அல்ல; ஆனால் தங்களை சரிசமமாக மதிக்கும் திறமையான அரசு; கிராமச் சாலைகளோடும் வேலைவாய்ப்போடும் தண்ணீர் கொட்டும் குழாய்களோடும் இல்லம் என்றழைக்கத்தக்க வீடுகளோடும் பெண்களைக்கான உரிமைக் கடனோடும், நலத்திட்டங்களை மேல்நோக்கிய சமூக நகர்வோடும் இணைக்கக்கூடிய வித்தியாசமான அரசு.

கிராமப்புற தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதம் 73.5%, தேசிய கிராமப்புற சராசரியை விட அதிகம். இது திறன்பேசி பயன்படுத்தும், சமூக ஊடகங்களில் அரசியலைப் பின்தொடரும், அரசாங்கத்தின் பாதை எங்கும் பயனின்றி முடிவடைவதை அறிந்த அறிவார்ந்த மக்கள்தொகை. மாநிலம் மூன்று அடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் மூலம் 12,500க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளை நிர்வகிக்கிறது! இந்தியாவிலேயே மிகவும் விரிவான கிராமப்புற ஆட்சி கட்டமைப்புகளில் ஒன்று. ஆனாலும், நிறுவனக் கட்டமைப்புக்கும் உண்மையான சேவை வழங்கலுக்கும் இடையிலான இடைவெளியானது, எந்தத் தேர்தல் அறிக்கையும் போதுமான அளவு பேசாத மௌன விரக்தியாக நீடிக்கிறது.

நகரங்களைக் கணக்கில் கொண்டு சராசரி என கணக்குக் காட்டி கடினமான கிராம யதார்த்தங்களை மறைக்கலாம்: படிக்கும் குழந்தை பள்ளியில் தொடர்கிறதா? நோய்வாயுற்ற சேயை தக்க நேரத்தில் தாய் மருத்துவமனையில் சேர்க்கிறாளா? திறமையான இளைஞர் தகுதியான வேலைக்குச் செல்கிறானா என்பதை இறுதிக் கட்டமே தீர்மானிக்கிறது. கிராமப்புற வாக்காளருக்குத் தெரியும்: வளர்ச்சி என்பது கவர்ச்சியான விளம்பரப் பலகை அல்ல; அது நம்பகமான 24×7 பேருந்து நிறுத்தம், சரியாகச் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம், தரமான அங்கன்வாடி, தேர்தல் அரசியலுக்கு முன்பே வரும் குடிநீர்.

தமிழகத்தின் தனித்துவமான கோணம் இதுதான்: எழுத்தறிவு விகிதமும், பன்முகப் பொருளாதார வெளிப்பாடும் கொண்ட நம் தமிழ்நாட்டுக் கிராமம் — ஜவுளி, வாகன உதிரிபாகங்கள், தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஆகியவை எளிய பேருந்துப் பயணத் தொலைவில் இருக்கும் இடம் ; அடிப்படையிலேயே வேறு வகையான வாக்காளரை உருவாக்குகிறது. இந்த வாக்காளர் எந்தக் கட்சி சிறந்த ஃப்ரிட்ஜோ, அதிக கூப்பனோ தருகிறது என்பதை வைத்து கட்சிகளைத் தேர்வு செய்வதில்லை. இந்த வாக்காளர் கணக்குப் போடுகிறார். எந்த அரசாங்கம் பாசனக் கால்வாயைச் சரிசெய்யும், எந்த அரசாங்கம் அருகிலுள்ள சுகாதார மையத்தில் நல்ல மருத்துவர் இருப்பதை உறுதிசெய்யும், எந்த அரசாங்கம் தங்கள் குழந்தைகள் வேலை செய்யும் அருகிலுள்ள நகரத்திற்கான பேருந்து சேவையை இயக்கும் என்று சீர்தூக்கிப் பார்க்கிறார்.

கிராமப்புற தமிழ்நாட்டின் மௌன வாக்காளர், உண்மையில், மிகவும் உரக்கவே பேசுகிறார். ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒருமுறை, வாக்குச்சாவடியில், 1967 முதல் ஒவ்வொரு ஆளும் அரசாங்கத்தையும் கவிழ்த்த நிலைத்தன்மையுடன். உண்மையான கேள்வி அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது அல்ல! அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரேனும் உண்மையாகவே காது கொடுத்துக் கேட்கிறார்களா என்பதுதான்.

Kids book writer R Ponnammal’s Interview in Dinamalar

நன்றி: குழந்தை இலக்கியங்களுக்கு நூலகங்களில் இடம் கிடைக்குமா? – தினமலர்

R_Ponnammal_Interview_Dinamalar_Children_Books_Author_Writers

ஆன்மிகம், வரலாறு, அறிவியல், கணிதம் என, எல்லாவற்றையும், கதைகள் மூலம், குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கியமானவர், குழந்தை இலக்கிய எழுத்தாளர் ஆர்.பொன்னம்மாள்.

கடவுளின் கருணை, மகாபாரதம், மரியாதைராமன், தெனாலிராமன் கதைகள், ராஜராஜ சோழன் வரலாறு, திருக்குறள், மூதுரை, நன்னெறி கதைகள், பறவைகள் பலவிதம், எண்கள் எனும் பொக்கிஷம் என, இவரின் குழந்தை நுால்கள் நுாற்றுக்கும் மேல் உள்ளன. தற்போது, சிறுவர்களுக்கான தொடர்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி வரும் இவர், குழந்தை இலக்கியம் குறித்து கூறியதாவது:

இங்கு, தற்போது, எல்லா துறைகளுக்கும், நிறைய பருவ இதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், குழந்தைகளுக்கான இதழ்கள் விரல்விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளன.

குழந்தைகளிடம், கதைகள் மூலமாகவே, நன்னெறிகளையும், ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் கொண்டு செல்ல முடியும். நீதிக்கதைகள்,புராண கதைகள் மூலம், வாழ்வின் நோக்கத்தையும், தீமைகளின் முடிவையும் சொல்ல முடியும். அரச கதைகள் மூலம், அரசியல் குறித்த எண்ணங்களை சொல்ல முடியும். அறிவியலையும், கணிதத்தையும், கதைகள் மூலம் சொல்லி, எளிதாக புரிய வைக்க முடியும்.

ஆனால், கதை கேட்கும் ஆர்வத்தையும், கதை சொல்லும் ஆர்வத்தையும், குழந்தைகளிடம் நாம் தான் உண்டாக்க வேண்டும். அதற்கு, பள்ளிகளில், நீதிநெறி சார்ந்த தலைப்புகளில், பேச்சு, எழுத்து போட்டிகளை நடத்த வேண்டும். அப்போது தான், குழந்தைகள், வித்தியாசமான புத்தகங்களை தேடுவர். நுாலகங்களுக்கு செல்லும் பழக்கம் ஏற்படும். அதனால், தேடுதலும், திறனறிதலும் மேம்படும். ஆனால், இங்கு உள்ள நிலைமை வேறு. பாடப்புத்தகங்களை தவிர மற்ற புத்தகங்களை வாங்க, பள்ளிகள் ஊக்குவிப்பதில்லை. அரசு நுாலகங்களில், குழந்தை இலக்கியங்களை, வாங்குவதில்லை. அப்படி இருக்கும் போது, எப்படி, பதிப்பாளர்கள், குழந்தை இலக்கியங் களை பதிப்பிக்க முன்வருவர்? எழுத்தாளர்கள், எழுத முன்வருவர்?

குழந்தைகளிடம், படிக்கும் ஆர்வமும், படைக்கும் ஆர்வமும் அதிகமாக உள்ளது என்பதற்கு, பருவ இதழ்களுக்கு வரும் கடிதங்களும், படைப்பு களுமே சான்றுகளாக இருக்கின்றன.

கடந்த 15 ஆண்டுகளாக, நான், ஆன்மிகம் மற்றும் குடும்பப்பாங்கான சிறுகதைகளை எழுதி வந்தாலும், குழந்தைகளுக்காக எழுதும் போது தான், மனதில், திருப்தி ஏற்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

அறிவியல் புனைவுகள்: 2014 சிறுகதை சிறப்பிதழ்

தினமலரில் அறிவியல் புனைவுகளை சென்னை தினம் 375 – சிறுகதை சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறார்கள். அது குறித்த பார்வை.

1. “சக்கரம்” – பிரசன்னா

ஒரே கதையில் எக்கச்சக்கமாய் திணித்திருக்கிறார் பிரசன்னா. ஒரு இடத்தில் நிலைக்கும் சூரியன் போல் கதை நகர வேண்டும். இங்கோ மழை போல் மூத்திரம் அடிக்கிறது. தினமலர் என்பதால் இது போதும் என்று முடிவெடுத்து இருப்பார் கதாசிரியர். வாசகனிடம் எந்தவித கருத்துருவாக்கமும் எண்ணவிதைப்பும் உருவாக்காத ஆக்கம். அதைவிட படு பொருத்தமில்லாத ஓவியங்கள் இந்தக் கதையின் நடுவே வருகிறது. கதையில் அறிவியல் என்பதே கிடையாது. வருங்காலத்தில் நடப்பதாக பாவ்லா செய்கிறது. அந்த வருங்காலத்தைக் குறித்தும் கற்பனாசக்தி இல்லாத கதை. புனைவு என்றால் நம்பகத்தன்மை வேண்டும். முக்கிய கதாபாத்திரத்துடன் ஒன்ற வேண்டும். புதியதாக ஏதாச்சும் விஷயம் இருக்க வேண்டும்.

ஒன்றுமே இல்லாமல் அறிபுனை கதை என்கிறார். அதாவது மேஜிகல் ரியலிசமாக வருங்காலமும் இக்காலம் போல்தான் இருக்கும் என்கிறார்.

  1. ஒரு காப்ஸ்யூல் சோறு – சுதாகர் கஸ்தூரி
  2. கால இயந்திரக் கைதி – ஜீவ.கரிகாலன்
  3. சென்னை 2114 – ஆயிஷா இரா.நடராசன்
  4. போகம் தவிர் – இரா.முருகன்
  5. 2047 ஆகஸ்ட் 15 – ராஜேஷ்குமார்
  6. நாளை மற்றுமொரு – தவமணி வசீகரன்
  7. இன்னும் 5 நிமிடங்களில் – ஜி.பி

2012 Thuglaq Events: Political Speech: Photos, Talks. Coverage: Chennai & Cho S Ramasamy

ரிப்போர்ட் இங்கே: http://idlyvadai.blogspot.com/2012/01/42-live.html

வாயில் விரல் பொத்தி ஆச்சரியப்படுபவர்கள் இங்கே:

தினமணி

அதிமுகவுக்குத் தொடர்ந்து தமிழ்நாட்டை ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைத்தால் குஜராத்தைத் தமிழ்நாடு மிஞ்சிவிடும் என்றார் பத்திரிகையாளர் சோ.

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற “துக்ளக்’ ஆண்டு விழாவில் அவர் மேலும் பேசியது:

“எந்த ஊழலிலிருந்தும் காப்பாற்றக் கூடியவராக பிரதமர் மன்மோகன் சிங் மாறியுள்ளார். யார் என்ன தப்பு செய்திருந்தாலும், அவர் நல்லவர்தான் என்று கூறுபவர் அவர்.

இப்படிப்பட்டவரின் தலைமையில் செயல்படும் மத்திய அரசு சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு என்ற ஒரு நல்ல காரியத்தை செய்ய முனைந்து கொண்டிருக்கிறது. சில பொருளாதார நிபுணர்கள் எதிர்க்கின்றபோதும், அது நல்ல விஷயம்.

போட்டி காரணமாக கலப்படம், எடைக் குறைப்புகள் ஒழிய மத்திய அரசின் இந்த முயற்சி முக்கியக் காரணமாக அமையும். ஆனால், இதைத் தவிர வேறு எந்த நல்ல விஷயத்தையும் மத்திய அரசு செய்துவிடவில்லை.
தேர்தலின்போது கறுப்புப் பணத்தை 100 சதவீதம் ஒழிப்போம் என மன்மோகன் சிங் வாக்குறுதி அளித்தார்.

ஆனால், இப்போது வியாபாரம் போய்விடும் என்பதால், வெளிநாட்டில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை வெளியிடத் தயங்குகின்றனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல் என ஊழலுக்கு மேல் ஊழலுக்கு உடந்தையாக மத்திய அரசு இருந்து வருகிறது. இதற்கு மாற்று ஆட்சியை பாஜகவால் மட்டும்தான் கொடுக்க முடியும். அதேநேரம் பாஜகவிலும் சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன.

காங்கிரஸ் என்றால் சோனியாவை நம்பித்தான் கட்சியே உள்ளது. இதுபோல் ஜெயலலிதா இல்லையெனில் அதிமுகவுக்கு ஓட்டு கிடைக்காது.
அவருக்கு முன்னர் எம்.ஜி.ஆர்.தான் அதிமுக என்றிருந்தது. ஆனால் பாஜகவில் நிலைமை வேறு. தகுதியான நபர்கள் முன்னிலைக்கு வந்துகொண்டே இருக்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு தலைவர். இந்த சுதந்திரம் காரணமாக ஒவ்வொருவருக்குள்ளும் போட்டி உள்ளது. இதுதான் பாஜகவின் பிரச்னை.

குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று, தனது திறமையை அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி நிரூபித்துள்ளார்.
அதற்குப் பிறகும் கூட அகில இந்திய அளவில் அவரை அங்கீகரித்துக் கொள்ளவில்லையெனில் அது நமது முட்டாள்தனம். நரேந்திர மோடியை இந்திய அளவில் அங்கீகரிக்க வைக்கும் முயற்சியை மூத்த தலைவர் அத்வானியால்தான் செய்து முடிக்க முடியும். ஏனெனில், அவரால்தான் பாஜகவையும் வழிநடத்த முடியும்.

பிரதமர் வேட்பாளரை முதலில் அறிவிக்க வேண்டும். அதுவே, வாக்காளர்களுக்கு மிகப் பெரிய உத்வேகத்தை அளிக்கும். ஆனால், அதுவே மிகப் பெரிய பிரச்னையையும் பாஜக-வுக்குள் ஏற்படுத்திவிடும்.
இதுபோன்ற காரணங்களால், பாஜக மத்தியில் ஆட்சி அமைக்க முடியாமல், பாஜக ஆதரவு ஆட்சிதான் மத்தியில் அமையும் என்றால், முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்க பாஜக ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
அதற்குத் தேவையான தேசப் பற்றும், அர்ப்பணிப்பும் அவருக்கு உள்ளது.

இலவசங்களைப் பற்றிக் கவலைப்படாத அளவுக்கு மக்களை வளர்க்க வேண்டும்.

ஆனால், இலவசங்கள் அறிவிக்கப்படாவிட்டால், திமுகவை அகற்ற முடியாத நிலை தமிழகத்தில் நிலவியது. அதன் காரணமாகத்தான் அதிமுகவும் இலவசங்களை அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

சசிகலா மற்றும் அவருடைய கூட்டாளிகளைக் கட்சியிலிருந்து நீக்கியது, ஒரு தவறு நடக்கிறது என்றால் அதன்மீது முதல்வர் ஜெயலலிதா எவ்வாறு தெளிவான, தைரியமான நடவடிக்கை எடுக்கிறார் என்பதற்கான சிறந்த உதாரணம்.

குஜராத்தைவிட சிறந்த ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற ஆசை ஜெயலலிதாவிடம் உள்ளது. ஆனால், தொடர்ந்து ஆட்சிசெய்ய வாய்ப்பு கிடைக்காததுதான் தமிழக வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருந்து வருகிறது.

எனவே, தொடர்ச்சியாக 10 ஆண்டு ஆட்சி வாய்ப்பு அதிமுக-வுக்குக் கொடுத்தால், குஜராத்தைத் தமிழகம் மிஞ்சிவிடும்’ என்றார் சோ.

தினமலர்

“”அ.தி.மு.க., எங்கள் இயல்பான கூட்டணிக் கட்சி,” என, பா.ஜ.,வின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான அத்வானி கூறினார். அவரும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் நேற்று சென்னை வந்தனர். அத்வானி, தனியார் விமானம் மூலம் டில்லியிலிருந்து நேற்று மதியம் 2.00 மணிக்கு வந்தார். மோடி, தனி விமானம் மூலம் ஆமதாபாத்திலிருந்து 2.45க்கு வந்தார். அவரை, மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர். சமீபத்தில் காலமான, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுகுமாரன் நம்பியார் வீட்டுக்குச் சென்ற இருவரும், அவரது உறவினர்களிடம் ஆறுதல் கூறினர். அங்கிருந்து கிளம்பி, “துக்ளக்’ ஆண்டு விழாவில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அத்வானி பேசியதாவது: தமிழக முதல்வராக ஜெயலலிதா இருக்கும் நிலையில், சோவுடைய நிகழ்ச்சியில் அத்வானியும், மோடியும் கலந்து கொண்டால், கிசுகிசுக்களுக்குப் பஞ்சமிருக்காது. பார்லிமென்டில் பா.ஜ., பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது. மத்திய அரசின் தவறான செயல்பாடுகளைக் கண்டிக்கும் பிரச்னைகளில், அ.தி.மு.க., எங்களுக்கு எந்தக் குறைவுமற்ற, முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது. இந்த இடத்தில் நான், ஒன்றை தெளிவுபடுத்திட விரும்புகிறேன். அ.தி.மு.க.,வும், நாங்களும் இயல்பான கூட்டணியாக இருக்கிறோம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மத்திய, மாநில அரசுகளின் உறவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில், பா.ஜ.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் பொதுவான கொள்கைகள் நிறைய இருக்கின்றன. மற்றபடி, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை, இப்போதே அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. இவ்வாறு அத்வானி பேசினார்.

நரேந்திர மோடி பேசியதாவது: காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களை, மத்திய அரசு, பழி வாங்கும் போக்கில் நடத்துகிறது. மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆண்டால், அவர்களை சகல வித்தைகளையும் கையாண்டு பழி வாங்குகிறது. சமீபகாலமாக, தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தி, அவர்களை முடக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. அதற்கு முக்கிய சாட்சியமாக நான் திகழ்கிறேன். சி.பி.ஐ., வருமான வரித்துறை, நீதித்துறை என, தங்களின் கட்டுப்பாட்டில் எத்தனை துறைகள், முகமைகள் இருக்கின்றனவோ, அத்தனையையும் பயன்படுத்தி தொந்தரவு கொடுத்துப் பார்க்கிறது. வளர்ச்சிப் பாதையில் செல்லாமல் குறட்டை விட்டுக் கொண்டிருக்கும் மத்திய அரசின் செயல்பாடுகள், நாட்டுக்கே பேராபத்தை விளைவிக்கக் கூடியதாக மாறியிருக்கின்றன. பயங்கரவாதத் தடுப்பு, வளர்ச்சிப் பாதை, பொருளாதார முன்னேற்றம் என, அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்த அரசாக, மத்திய அரசு திகழ்கிறது. இவ்வாறு மோடி பேசினார்.

“துக்ளக்’ ஆசிரியர் சோ பேசுகையில், “”எதிர் வரும் லோக்சபா தேர்தலுக்குப் பின், புதிய மத்திய அரசை அமைப்பதில், அ.தி.மு.க.,வின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும். திறமையான அரசை வழங்கும் தகுதி, பா.ஜ.,வுக்கு மட்டுமே இருக்கிறது. ஒருவேளை, அக்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போய், மதச்சார்பற்ற கட்சிகள் என்ற பெயரில் தடை கிளம்புமானால், ஜெயலலிதாவை பிரதமராக்க பா.ஜ., ஒத்துழைக்க வேண்டும்,” என்றார்.

நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் இல.கணேசன், இந்து முன்னணி ராம.கோபாலன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் பாலசந்தர், எழுத்தாளர் குருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை முடித்துவிட்டு, விமானம் மூலம் அத்வானி டில்லிக்கும், மோடி ஆமதாபாத்துக்கும் சென்றனர். முன்னதாக, இருவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், நடிகர் ரஜினிகாந்தையும் சந்தித்துப் பேசுவர் என செய்திகள் வெளியாகின. ஆனால், அத்தகைய சந்திப்பு எதுவும் நடக்கவில்லை.