Tag Archives: படிப்பு

நனவூஞ்சல்

கல்லூரியை முடித்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது.

அதற்காக எல்லோரையும் ஒன்று சேர்க்கும் வைபவம் நடக்கிறது. ஏற்கனவே 96 பார்த்து, அந்தக் கடுப்பில் இருந்தவனை இந்த விழா சுணங்க வைத்தது. 96 மாதிரி, கபீர் சிங் (நீங்கள் தெலுங்கர் என்றால் அர்ஜுன் ரெட்டி) மாதிரி எல்லாம் இனக் கவர்ச்சி என்றவன், இன்றும் பாலுணர்வு என்பவன் நான். நாளைக்கு என்ன நடக்கும் என்பது ரஜினிக்கேத் தெரியாது… எனக்கு என்ன நினைப்பு இருக்கும் என்பதை குணாவே உணர்வார்.

ரீயுனியன் சபலம் இருந்தாலும் விடவில்லை. இணைய எழுத்தாளன்; கௌரவமான உத்தியோகம்; யாருக்குத் தெரியும் சொல்வனம்.காம் பத்திரிகைக்கு எழுதுவதற்குக் கூட பிலானியில் ஆள் கிடைக்கலாம்! போக வேண்டும் என்னும் எண்ணம் எழுந்தது.

அப்பொழுது வாட்ஸப் குழுவில் இணைத்தார்கள். அந்தக் கால புகைப்படங்களைப் போட்டார்கள். எல்லோரும் சேர்ந்து எடுத்துக் கொண்டது; கொண்டாட்டங்களில் திளைத்த தருணங்களில் க்ளிக்கியது… அதையெல்லாம் பார்த்தால் அப்படியே நினைவோடையும் நனவூஞ்சலும் கொஞ்ச வேண்டுமே!?

இல்லை.

சற்றே வயிற்றைப் பிசைந்தது. எதை மதித்திருக்கிறோம்?

பணம்… செல்வாக்கு… ஸ்டைல்… பெண்களை அலட்சியப்படுத்தி மயக்கும் வித்தை… தற்பாலுணர்வு போன்ற சிறுபான்மையை கூனிக் குறுக வைக்கும் நடத்தை. தலித்தை பார்ப்பானும் பார்ப்பனனை மற்ற சாதியினரும் சாதிக் கண்ணோட்டம் மட்டுமே கொண்டு கணிக்கும் குறுகிய பார்வை.

எதைக் குறித்து பேசிக் கொண்டோம்? எப்படி மற்றவர்களை மதிப்பிட்டோம்? #மீடு இயக்கமோ, அறச்சீற்றமோ — எவ்வளவு அக்கறையையும் புரிதலையும் விவாதிக்கும் தன்மையும் இன்றாவது கொண்டிருக்கிறோம்?

பசுமையான நினைவுகள் என்று மனதில் ஏதோ மூளையின் மூலையில் எங்கோ தங்கி இருக்கிறது. அது அப்படியே பாசி பிடித்து இருக்கட்டும். இன்று போய் கருத்து சொன்னால், “உன் டெசிக்னெஷன் என்ன? என் பெஸ்ட் செல்லர் என்ன? உன் வால்யூவேஷன் என்ன?” என்று மட்டுமே சீர் தூக்கும் சமூகம் போதனையை விரும்பாது. உன்னால் என்ன காரியம் ஆகும், என்ன ஆதாயம் கிடைக்கும், எவ்வாறு வருமானம் பெருகும், எங்ஙனம் நெட்வொர்க் விரிவடையும் என்றே உன்னை கணிப்பிடும்.

உனக்கு அன்று அது முக்கியமானது என்பதை உணர்த்தினார்கள். இன்று எது உனக்கு முக்கியம் என்பதைப் புரிந்த பிறகும் நண்பர்களின் அருகாமைக்கும் தோழிகளின் தோற்றக் கவர்ச்சி எட்டிப் போன செல்ஃபீக்கும் என்ன வாத பரிபாலனம் கிட்டப்போகிறது?

போகாமல் இருப்பது – விட்டுப் போனதை எண்ணி நெஞ்சம் நிறைந்தது.

கல்வியின் தரமும் இளைஞர்களின் ஆற்றலும்

இந்தியாவில், 2017 ம் ஆண்டிற்கான சிறந்த செயல்திறம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் + கல்லூரிகளின்  பட்டியலை (2017 ranking of institutions based on performance) மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதையொட்டி சில எண்ணங்கள்:

  1. பொறியியல் கல்லூரிகள்:

    முதலில் இருக்கும் கல்லூரிகள் எல்லாம் ஏன் தொழில்நுட்பம் அல்லது பொறியியல் அல்லது அறிவியல் கல்லூரிகளாகவே இருக்கின்றன? கலை மற்றும் பொருளாதாரம் மற்றும் நிதி மற்றும் கல்லூரிகளுக்கு இந்தியாவில் மரியாதை கிடையாதா?

  2. ஆராய்ச்சி மையங்கள்: இந்தக் கல்லூரிகளில் இருந்து எவ்வளவு ஆராய்ச்சிக் கட்டுரைகள் மதிக்கத்தக்க இடங்களில் வெளியாகின்றன? ஒவ்வொரு ஆண்டிலும் உலக அளவில் உரிமைக்காப்புகள் எத்தனை வாங்கப்படுகின்றன? இங்கிருந்து படித்து கரையேறுபவர்கள் எத்தனை நிறுவனங்களைத் தோற்றுவிக்கிறார்கள்? இந்த தலை பத்து பல்கலைக்கழகங்களில் பட்டதாரி பட்டம் பெறுபவர்களில் எத்தனை பேர் கவனிக்கத்தக்க கண்டுபிடிப்புகளைக் கொடுத்திருக்கிறார்கள்?
  3. மேலாண்மை:

    தலை இருபது கல்லூரிகளில் நான்கே நான்கு மட்டுமே மற்றவர்களுக்கு கிட்டியிருக்கிறது. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், அரசுத்துறையின் பட்டியல் என்பதால் அரசாங்கம் நடத்தும் கல்லூரிகளுக்கு முன்னுரிமை தரப்பட்டதா?
  4. களத்தில் பயிற்சி: இந்தியாவில் நிஜ வாழ்க்கைக்கும் கல்லூரிகளில் கற்றுத்தரும் விஷயங்களுக்கும் பெரிய இடைவெளி உண்டு. இன்னும் மதிப்பெண்களில் நம்பிக்கை கொண்ட நாடு இந்தியா. இன்றளவும் தொடர்ச்சியான பரீட்சைகள் வைக்காமல், பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வு, செமஸ்டர் முடிவில் ஒரேயொரு தேர்வு என்று செயல்படும் நாடு. இதில் அசலான நிறுவனங்களில் சுயமான செயல்பாடு என்பதைக் கணக்கிலேயே எடுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று பழமொழி மட்டும் பேசுவார்கள்.
  5. தமிழகக் கல்லூரிகள்: அண்ணா பல்கலை, 13ம் இடம் பெற்றது. நஷ்டத்தில் இயங்கும் அண்ணாமலை பல்கலை, 92ம் இடம் பெற்றது. நுாற்றாண்டு பழமையான, சென்னைப் பல்கலை, 64ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலைக்கு, 45ம் இடம் கிடைத்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலை, சேலம் பெரியார் பல்கலை போன்றவை, 100க்கும், 150க்கும் இடையிலான, இரண்டாம் கட்ட பட்டியலில் மட்டுமே, இடம் பெற்றுள்ளன.

    பல்கலைகளுக்கான தரவரிசை பட்டியலில், பாரதியார் பல்கலை, 28; பாரதிதாசன் பல்கலை, 88ம் இடங்களை பிடித்துள்ளன. திருவள்ளுவர், மனோன்மணியம் சுந்தரனார், சட்ட பல்கலை, இசை பல்கலை, ஆசிரியர் கல்வியியல் பல்கலை போன்றவை, தரவரிசைக்கு விண்ணப்பித்தோர் பட்டியலில் இடம் பெறவில்லை.

    கல்லுாரிகளுக்கான தனி தரவரிசை பட்டியலில், முதல், 100 இடங்களிலும், 100 முதல், 150 வரையிலான, இரண்டாம் கட்ட பட்டியலிலும், தமிழக அரசின் கலை, அறிவியல் கல்லுாரிகள் எதுவும் இடம் பெறவில்லை

  6. சுய சிந்தனை வளர்க்கும் கல்விக்கூடங்கள்: எப்படிப்பட்ட ஆளுமைகளை இந்நிறுவனங்கள் தயார் செய்கின்றன? அவர்களுக்கு வரலாறு, இந்தியத்துவம், சூழலியல் போன்ற பல்துறைகளில் நாட்டம் வரவைக்குமாறு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறதா? குடியியல் கொள்கை இந்திய அரசாண்மை என்று சமூகம் சார்ந்தவற்றில் விருப்பம் தரவைக்கிறார்களா?
  7. வேலைவாய்ப்பு: இதை மட்டுமே அஸ்திவாரமாகக் கொண்டு பல்கலை தரவரிசையை தயார் செய்திருக்கிறார்களோ என நினைக்க வைக்கும் பட்டியல் இது.
  8. நிரலிக்கான விதிமுறையை எவ்வாறு திட்டமிட்டார்கள்:
    1. கல்விமுறை மற்றும் அடிப்படை வளவசதிகள் – 30%
    2. ஆராய்ச்சி மற்றும் சீரிய நடைமுறை – 30%
    3. பட்டம் பெற்ற பிறகு கிடைக்கும் பயன்கள் – 20%
    4. எல்லோரையும் சேர்த்துக் கொள்ளும் ஏற்றுக்கொள்ளும் தன்மை மற்றும் சமூகப் பிணைப்பு – 10%
    5. கல்லூரியைக் குறித்த பொது மனநிலை – 10%
  9. செய்தி: The Hindu | தி இந்து | கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியல் வெளியீடு
  10. தொடர்புள்ள பதிவுகள்: 37/100 மட்டும்தானாடா? வோத்தாடாய், எவ்ளோ வொளச்சிர்க்கோம் – மிச்சம் கீர 63ஐயும் எங்க்ளுக்கே கொடுங்கடா! | ஒத்திசைவு
  11. பிட்ஸ், பிலானி: எல்லாவற்றையும் சொல்லிவிட்டு நான் படித்த பிர்லா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி & சயின்சஸ் பற்றி சொல்லாவிட்டால் ‘மிஸ்டர் ரோபாட்’ தொலைக்காட்சி சீரியலில் பாதியில் “இதுவரை சொன்னதெல்லாம் கற்பனை!” என்று ஏமாற்றுவது போல் ஆகிவிடும். அசலில் கலக்கும் மாணவர்களை உருவாக்குவதற்கும் பேப்பரில் புலிகளை உரும விடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

தமிழ் மின் இதழ்: ஒரு பார்வை

தமிழ் மின்னிதழ் பிடிஎஃப் வடிவில் வருகிறது. இது போன்ற முயற்சிகளுக்கு 2003ல் தமிழோவியம் தீபாவளி, பொங்கல், ஆண்டு விழா சிறப்பிதழ் மலர்களையும் ஸ்ரீதர் நாராயணன் தயாரித்த பண்புடன் மடலாடற் குழும சிறப்பிதழ்களையும் முன்னோடியாகப் பார்க்கிறேன்.

Tamil_Magazine_Specials_issues

எழுத்தாளர்களுக்கு சிறப்பிதழ் கொண்டு வருவது நல்ல விஷயம். ஆனால், கருப்பொருள் சார்ந்து, ஒரே ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு இரு பக்க எண்ணங்களையும் மாற்றுக் கருத்துக்களையும் ஆழமாக அலசுவது அதனினும் சாலச் சிறந்தது.

அந்த மாதிரி ஏன் — தமிழ் மேகசின், பதாகை போன்ற தமிழில் வரும் சிற்றிதழ்கள் செய்வதில்லை?

இதழை வெளியிட்ட ‘காலச்சுவடு’ கண்ணன் இவ்வாறு சொல்லி இருக்கிறார்:

பெருமாள் முருகன் சிறப்பிதழாக, அவர் படைப்புகளை விவாதித்து இந்த இதழ் வெளிவருவது பெரு மகிழ்ச்சி.

நிஜமாகவே பெருமாள் முருகனை அலசி ஆராய்ந்து இருக்கிறார்களா அல்லது

  • புத்தக அறிமுகம்,
  • அவர் எழுதிய நாவலை விதந்தோதுதல்,
  • ஏற்கனவே இணையத்தில் கிடைப்பதை வைத்து வாந்தியெடுத்தல்,
  • கதைச் சுருக்கத்தை மட்டும் சொல்லி விமர்சனம் என்று பஜனை செய்யுதல்,

போன்றவை மட்டுமே செய்துவிட்டு

  • சம காலத்தின் மற்ற ஒப்புமையான படைப்புகளுடன் சீர்தூக்கி அலசுதல்,
  • எழுத்தாளனின் வளர்ச்சி: துவக்க காலப் படைப்புகளுக்கும் பிற்கால ஆக்கங்களுக்கும் இடையே உள்ள ஒப்பீடு,
  • எழுத்தாளரின் சிறுகதைகளுக்கும் நெடுங்கதைகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் / ஒற்றுமைகள்,
  • எழுதியவரின் நடை, கதைக்கரு, களன், உத்தி போன்றவை சார்ந்த குறுக்குவெட்டுத் தோற்றம்,

போன்றவையும் அலசப்பட்டிருக்கிறதா என்று இனிதான் ஆராய வேண்டும்.

இப்போதைக்கு புறத்தோற்றம் பற்றிய குறிப்புகள். புறத்தோற்றம் ஏன் முக்கியம் ஆகிறது?

மத நம்பிக்கையாளருக்கு அந்த மதத்தின் சின்னங்கள் முக்கியம். இஸ்லாமியருக்கு தொப்பியும் தாடியும். வைணவருக்கு திருமண். பௌத்தருக்கு அவர்களின் சிவப்பும் ஆரஞ்சும் கலந்த வஸ்திரம். இறைவரை பின்பற்றுவர்களுக்கும் இலக்கியத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று விட்டுவிட்டாலும், கல்யாணம் / காட்சி என்றால் ஒவ்வொருவருக்கும் ஒரு உடை பாவனை இருக்கிறது. மோதிரம் மாற்றிக் கொள்வது, வேட்டி கட்டுவது என்று ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அலங்காரம் தேவைப்படுகிறது.

இவ்வளவு ஏன்? கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு கோடைகாலத்தில் கடற்கரைக்கு சென்றால், எப்படி எடுத்துக் கொள்ளப்படும்? ஒன்று அங்கிருக்கும் பிகினி அழகர்களை தரிசிக்க வந்த பரதேசி என நினைத்து தர்ம அடி வழங்கப்படும். இரண்டாவது, அத்தனை வெயில் அடிக்கும் அந்தச் சூழலுக்கு, அவ்வளவு தடிமனான மேலாடை தேவை கிடையாது.

“தமிழ் பத்திரிகை”யின் வடிவமைப்பும் சோபையாக இருக்கிறது. அட்டைப்படம் எடுப்பாக இருப்பது போல், பிடிஎஃப் கோப்பின் உள்ளே, சுவாரசியமான, கவர்ச்சியான, பக்க அமைப்பு கிடைக்கவில்லை.

Layout_woes_Thamizh_Magazine_Pages_Titles_Headings_Headers

– தலைப்புகளுக்கு சிறிய எழுத்துரு, அதே தடிமனில் எழுத்தாளரின் எழுத்துரு என்று ஏனோ தானோ என்று அவசரகதியில் போட்டிருக்கிறார்கள்.

– ஒவ்வொரு கட்டுரையும் தனித் தனிப் பக்கங்களில் துவங்காமல், முந்தைய கட்டுரை முடிந்த சடுதியில், அடுத்த கட்டுரை, முக்கால் பக்கத்தின் இறுதியில் உட்கார்ந்து இருக்கிறது.

– கவிதா முரளிதரனுக்கு பெருமாள் முருகனை விட மிகப் பெரிய புகைப்படம் போட்டு இருக்கிறார்கள். சுரேஷ்கண்ணன் போன்ற ஆண்களுக்கு தபால்தலை அளவு ஒளிப்படம் கூட கிடையாது.

– திடீரென்று @iAgarshana எல்லாம் வருகிறது. அது ஃபேஸ்புக் முகவரியா, எல்லோருக்கும் இது போல் சுட்டல் உண்டா, எந்த வலையகத்தின் உரல் இது என்று எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை. இந்த மாதிரி இடங்களில் இந்தப் படைப்பு குறித்த சிறு முன்னோட்டத்தையும் அது எந்த மாதிரி ஆக்கம் (புனைவு, கட்டுரை, டிவிட் தொகுப்பு) என்பது குறித்த அறிமுகமும் அவசியம். அவை போன்ற எதுவும் இல்லாமல், அந்தப் படைப்பும் மேலெழுந்தவாரியாக சேமிக்கப்பட்டிருக்கிறது. கண்டதையும் கண்ட மேனிக்குத் தொகுக்க, இது நோட்டு புத்தகம் அல்ல. காலாண்டுக்கு ஒரு முறை வரும் அச்சிதழ். அதற்குரிய சிரத்தையும் பொறுப்புமில்லாமல் வெளியாவது உள்ளடக்கத்தையே ஏளனம் செய்கிறது.

No_Author_Notes_Who_Is_This

– மேலே இருக்கும் பக்கத்தின் இறுதியில் ஒருவரின் ஒளிப்படம் இருக்கிறது. அவர் யார்? அவரின் கதையை எப்படி இந்த இதழுக்குத் தேர்ந்தெடுத்தார்கள்? எழுதியவரே அந்தக் கதையை ‘தமிழ்’ மின்னிதழுக்காக மொழிபெயர்த்தாரா? ஏன் இந்தப் புனைவை மொழிபெயர்த்தார்? இப்படி எதுவும் இல்லாமல், ‘எடுத்தோமா… சிரைத்தோமா!’ என்பதற்கும் வலைப்பதிவில் கண்டதையும் கிறுக்குவதற்கும் என்ன வித்தியாசம்?

How_was_This_Created

– அதே போல் இந்தப் படத்தையும் எடுத்துக் கொள்ளலாம். நாகராஜ் இதை எவ்வாறு உருவாக்கினார்? அவரே வரைந்தததா? எந்த வகை உத்திகளை வைத்து எத்தனை கால அவகாசத்தில் இந்தப் படத்தை உருவாக்கினார்? ஃபோட்டோஷாப் போன்ற கருவிகளை உபயோகித்தாரா? தாளில் வரைந்தாரா? நாகராஜின் மற்ற படைப்புகள் எங்கே கிடைக்கும்?

– சுதந்திரம் என்று பக்கத்திற்கு பக்கம் அடிக்குறிப்பு இட்டிருக்கிறார்களே… எது சுதந்திரம், எப்பொழுது சுதந்திரம், யாருக்கு சுதந்திரம், எதற்கு சுதந்திரம் என்று ஒரு குவிமையம் கிடைக்காமல், தமிழ் சினிமாவிற்கு தமிழில் தலைப்பு வைப்பது போல், இந்த இதழுக்கும் ஏதோவொரு தலைப்பு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டாவது இதழை வெளியிட்டிருக்கும் மனுஷ்யபுத்திரன் இவ்வாறு சொல்கிறார்:

சமீபத்தில் ஒரு நேர்காணலில் தமிழில் சிற்றிதழ் இயக்கதிற்கு எதிர்காலம் இருக்கிறதா? என்று என்னிடம் கேட்டார்கள். நான் அதற்கு ‘நிச்சயம் இருக்கிறது. ஆனால் அச்சு வடிவிலான சிற்றிதககள் பெருமளவு மறைந்து அவை இணைய இதழ்களாக நீடித்திருக்கும்’ என்று சொன்னேன். இந்த இதழை பார்க்கும்போது அந்த எண்ணம் வலுப்படுகிறது. பத்திரிகை நடத்துவதன் லெளகீக கஷ்டங்கள் இல்லாமல் படைப்பு சார்ந்து மட்டும் ஒரு இதழாளன் முக்கிய கவனம் செலுத்த இந்த தளம் பெரிதும் பயன்படும்.

ஞாநி இவ்வாறு எழுதுகிறார்:

மின்னிதழ்களையும் படைப்பாளிக்கும் வாசகருக்கும் இடையே இருக்கக்கூடிய அச்சிடுபவர், விநியோகஸ்தர், கடைக்காரர் என்ற சக்திகளைத் தவிர்த்து நேரடியாக உறவு கொள்ள உதவும் முக்கிய வடிவமாகவே நான் பார்க்கிறேன். இந்த முயற்சியில் எந்த வணிக சமரசமும் ஊடுருவாமல் இயங்கும் வசதி படைப்பாளிகளுக்குக் கிட்டுவது என்பது மிக முக்கியமான மாற்றமாகும். நவீன தொழில்நுட்பம் என்பது வணிக நுகர்வுக் கலாசாரத்துக்குத்தான் பயன்படும் என்ற புரிதலையும் இது மாற்றியமைக்கிறது. இதழ் நடத்துதல், படம் எடுத்தல் ஆக்கியவற்றையெல்லாம் மேலும் ஜனநாயகப்படுத்துகிறது. எனவே இதை நாம் எல்லாரும் வரவேற்கவேண்டும்.

– எல்லாமே தெரிந்த, புழக்கமான பெயர்கள், இணையப் பிரமுகர்கள். இந்த மாதிரி பிரபலங்களை மட்டும் வைத்து மின்னிதழ் எதற்காக நடத்த வேண்டும்? அறியாத எழுத்துக்களை, புகழ் பெறாத எழுத்தாளர்களை, தெரியாத ஆக்கங்களை முன்னிறுத்துவதற்கு சிற்றிதழ் வாயிலாக இருக்க வேண்டும். அச்சிதழ்கள் போல், நாலாயிரம் ஃபாலோயர்ஸும் நாற்பது வலைப்பக்க வாயிலும் கொண்டவர்களை வைத்து வாந்தி எடுக்கக் கூடாது.

சம காலத்தில் ஆங்கிலத்தில் வெளிவரும் சில பத்திரிகைகளை இங்கு ஒப்பிட்டு பார்க்கலாம். கீழே ஆறு பத்திரிகைகளின் சமீபத்திய இதழ்களின் முகப்பும் அமைப்பும் பார்க்கலாம்:

PN_Review_Literary_Quarterly_Essay_Weekly_Issues_Magz_Magazines

தமிழ் மின்னதழின் ஆசிரியர் சரவணகார்த்திகேயன் இவ்வாறு சொல்கிறார்:

அச்சிதழில் ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்டித்தான் குறிப்பிட்ட படைப்பை அடைவோம். ஒருவேளை உள்ளடக்கம் கொடுக்கப்பட்டிருந்தால் அதன் மூலம் பக்க எண்ணை அறிந்து கொண்டு குறிப்பிட்ட படைப்புக்குத் தாவலாம். இது வரை தமிழ் இதழிலும் சாத்தியம். உள்ளடக்கம் கண்டு, பக்க எண் அறிந்து, நீங்கள் பயன்படுத்தும் PDF reader-ல் பக்க எண் கொடுத்தால் அழைத்துச் சென்று விடும். ஹைப்பர்லிங்க் கிடையாது! (சேர்ப்பது சுலபமெனினும் தவிர்த்தேன்.)

சுருங்கச் சொன்னால் ஓர் அச்சு இதழை நீங்கள் எப்படிக் கையாள முடியுமோ அப்படியே இதையும் கையாள வேண்டும்.

இந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. ஓலைச்சுவடியில் ஒற்றெழுத்து இல்லாமல் எழுதினோம், நாலு வரி மட்டுமே எழுதினோம் என்று இன்றும் தொங்கிக் கொண்டிருக்கவில்லை. நவீன சாதனங்களை, புதிய நுட்பங்களை, வசதியான வடிவங்களை கையாள்கிறோம். கியாஸ் அடுப்பு வந்தபிறகும் கரி அடுப்பில்தான் சமைப்பேன் என்று அடம்பிடிப்பது முட்டாள்தனமானது.

எழுதுபவர்களுக்கு காசும் தரமாட்டேன்; எழுதியவற்றை வெளியிடுவதிலும் புதுமை செய்ய மாட்டேன்; எழுதுபவர்களிலும் புதியவர்களை அடையாளம் காட்ட மாட்டேன்; எழுதப்படும் கருத்திலும் சிதறலாக, கிடைப்பதை வைத்து ஒப்பேற்றுவேன் – என்ற முன்முடிபை இதன் தயாரிப்பாளர்கள் கைவிட வேண்டும்.

அன்பர்களுக்கு நான் மீண்டும் நினைவூட்ட விரும்புவது ஒன்றைத் தான். தற்போதைக்கு தமிழ் தீவிர இலக்கிய இதழ் அல்ல; போலவே வெகுஜன இதழும் அல்ல. இடைப்பட்டது. ஆனால் இதன் எதிர்காலப் பயணம் தீவிர இலக்கிய இதழ் என்பதை நோக்கியதாகவே இருக்கும். அதுவரை கசியவிருக்கும் சுஜாதாத்தனங்களை தீவிரர்கள் பொறுத்தருளலாம்.

இந்த இதழில் எழுதியவர்களில் பார்த்தவுடன் பரிச்சயமான வலை / அச்சுப் பத்திரிகைப் பெயர்கள் சிலவற்றை இங்கு சொல்லிப் பார்க்கிறேன்
– கவிதா முரளிதரன்
– சுரேஷ் கண்ணன்
– கிருஷ்ண பிரபு
– லேகா
– கவின் மலர்
– நர்சிம்
– யுவகிருஷ்ணா
– அதிஷா
– என் சொக்கன்
– முரளிகண்ணன்
– எஸ்.கே.பி. கருணா
– ஜிரா

இதழ் பெரும்பாலும் என் உழைப்பில் மட்டுமே வெளியாகப் போகிறது என்பதால் லேஅவுட் எளிமையானதாகவே அமையும். படைப்பிற்குப் பொருத்தமான‌ ஓவியம், புகைப்படம் சேர்த்திருக்கலாம் எனக் குறைப்பட வேண்டாம்.

‘செய்வன திருந்தச் செய்’ என்பது ஆத்திச்சூடி. வேலையை எடுத்துக் கொண்டால் அதில் நம்முடைய 100% மின்ன வேண்டும். சால்ஜாப்பு சொல்வதை விட்டுவிட்டு, பொருத்தமான நபர்களிடம் பொறுப்புகளை பகிர்ந்தளித்தல், ஆக்கங்களில் மேலும் செப்பனிடுதலை — அதே இதழில் வெளியாகும் சக படைப்பாளிகளிடம் கருத்து கேட்டு செதுக்குதல் என்று இந்த விஷயம் மேன்மையுற வேண்டும்.

ஜெயமோகன் இவ்வாறு எழுதுகிறார்:

இணையத்தில் உதிரி குறிப்புகளாக வெளியாகிக்கொண்டிருக்கும் எழுத்துக்களை ஒரே இடத்தில் பிரசுரிப்பது இதன் நோக்கம். பொதுவாக இணையதளம் என்பதே இணையஇதழாக இங்கே கொள்ளப்படுகிறது. ஆனால் இவ்விதழ் இணையம் மூலம் வாசிக்கக் கிடைக்கும் இதழ். தரவிறக்கம் செய்தோ நேராகவோ வாசிக்கலாம்.

இணையத்தில் கிடைக்கும் வலைப்பதிவு ஒருங்கிணைப்பாளர்களையும் திரட்டிகளையும் இணையப் பத்திரிகைகளையும் பார்க்கலாம்:

இவை எல்லாம் விகடன் மாதிரி ஒரே தரத்தில், கொள்கையோடு இயங்காவிட்டாலும், அட்டையில் ஏமி ஜாக்ஸனின் கவர்ச்சிப்படம் போட்டுவிட்டு, நடிகையின் பாகங்களை மறைக்குமாறு ‘மதுவருந்தி சீரழியும் தமிழன்’ என்று போலி பம்மாத்துகளில் ஈடுபடுவதில்லை.

கீழே விகடனின் ஃபேஸ்புக் பக்க உரையாடலும் சாம்பிள் அட்டைப்படமும்:

AV_Tamil_Magazine_Porn_Anandha_Vikadan_Timepass_Online_Vikatan_Com

ஆனந்த விகடன் மாதிரி இதழ்களுக்கு அகம் போன்ற மின்னிதழ்கள் நல்ல மாற்று என்பதில் விகடன் குழுமத்திற்கே சந்தேகம் இருக்காது. ’தமிழ்’ இதழை விட, வடிவமைப்பில் ‘அகம்’ போன்ற மின்னிதழ்கள் மிளிர்கின்றன என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது

மீண்டும் பெருமாள் முருகன் + சுதந்திரம் + தமிழ் மின்னிதழ் விமர்சனத்திற்கே வருவோம்.

தமிழில் வரும் சிற்றிதழ்கள் என்று தமிழ் ஸ்டூடியோ பக்கத்தில் இவற்றைச் சொல்லி இருக்கிறார்கள்:

  1. அணங்கு
  2. அணி
  3. அதிர்வு
  4. அநிச்ச
  5. அம்ருதா
  6. ஆக்காட்டி | aakkaddi.com
  7. ஆயுத எழுத்து
  8. இனிய நந்தவனம்
  9. இனிய ஹைக்கூ
  10. உங்கள் நூலகம்
  11. உயிர்மை
  12. உழைப்பவர் ஆயுதம்
  13. உன்னதம்
  14. கணையாழி
  15. கதை சொல்லி
  16. கலை
  17. கல்வெட்டு பேசுகிறது
  18. கவிதாசரண்
  19. கனவு
  20. காலச்சுவடு
  21. காலம்
  22. கிழக்குவாசல்
  23. குழலோசை
  24. கூட்டாஞ்சோறு
  25. சமரசம்
  26. சோலைக்குயில்
  27. சௌந்தரசுகன்
  28. தச்சன்
  29. தமிழ் நேயம்
  30. தமிழ் பணி
  31. தலித்முரசு
  32. தாமரை
  33. தாய்மண்
  34. திரை
  35. தீராநதி
  36. தை
  37. நடவு
  38. நம் உரத்த சிந்தனை
  39. நவீன விருட்சம்
  40. நறுமுகை
  41. நிழல்
  42. படப்பெட்டி
  43. பன்முகம்
  44. புதிய பார்வை
  45. புதிய புத்தகம் பேசுது
  46. புதுகைத் தென்றல்
  47. புதுவிசை
  48. பெண்ணியம்
  49. மண்மொழி
  50. மலர்
  51. மீண்டும் கவிக்கொண்டல்
  52. முகம்
  53. மெய்யறிவு
  54. யாதும் ஊரேமது
  55. வடக்கு வாசல்
  56. வல்லினம்
  57. விழிப்புணர்வு

இவற்றில் பல – இன்று வெளியாகவில்லை. இவற்றில் சில பெரும் குழுமங்களான குமுதம் போன்றவற்றில் இருந்து அதற்கான நிதியாதாரங்களுடன் வெளியாகின்றன. இவற்றில் – மனுஷ்யபுத்திரன் வெளியிடும் உயிர்மை போல் சில பத்திரிகைகள் அரசியல் கட்சி சார்பானவை. அவற்றின் கொள்கைகளை, தலைவர்களை, சித்தாந்தங்களை – விமர்சன நோக்கு இல்லாமல் முன்னிறுத்தி வெளியிடப்படுபவை.

ஆனால், பலவும் தனி மனிதரின் விருப்பத்தால் உண்டாகுபவை. அவற்றில் காணக் கிடைக்காத நேர்த்தியும் வெரைட்டியும் இணைய இதழ்களில் கிடைக்க வேண்டும். அச்சுக்குரிய நிர்ப்பந்தந்தங்களும் பொருட்செலவும், வலைவெளியில் கிடையாது.

No_Images_where_they_are_required_No_Notes_All_Caps_Wiki_Style_Entry

– விக்கிப்பிடியா போன்ற இந்தப் பக்கத்தின் அவசியம் என்ன? ஆங்கில எழுத்துக்களை எல்லாம் பெரிய அப்பர்கேஸ் எழுத்துக்களாகவே போடுதல் போன்றவை சிறிய பிழைகள். காலச்சுவடு ஆசிரியர் குழுவில் எப்போது இணைந்தார் போன்ற தகவல் விடுபடுதல்கள் இன்னும் ஆபத்தானவை. எளிதில் தவிர்க்கக்கூடியவை.

– மோசமான புற உருவத்தை வைத்து அகத்தை மதிப்பிட முடியாது. முழுக்க படித்துவிட்டு, உள்ளடக்கத்தின் செறிவை தனியாக எழுத முயல்கிறேன்.

நான் எழுத நினைப்பதை எல்லாம், ஜெயமோகன் எண்ணியும் எழுதியும் வைத்திருக்கிறார்:

பெரும்பாலான இணைய இதழ்களில் எதுவும் வெளியாகும் என்ற நிலை உள்ளது. அதை அதன் ஆசிரியர்களே வாசிப்பதில்லை. அதில் ஒரு தேர்வு இல்லை. விளைவாக ஏராளமான தரமற்ற பக்கங்கள் முன்வைக்கப்படும்போது வாசகன் காலப்போக்கில் சலித்து விலகிவிடுகிறான்

சமீபத்தில் வாசித்த ஆங்கில சிறு பத்திரிகைகள், குறுகிய வட்டத்திற்குள் வெளியாகும் சஞ்சிகைகள் குறித்த என்னுடைய பதிவு: நூலகம் – 2015 புத்தகங்கள்

நூலகம் – 2015 புத்தகங்கள்

தந்தையர் தினத்திற்காக பரிசு என்ன தரலாம் என்று மகள் கேட்டாள். புத்தகக் கடையில் கொஞ்ச நேரம் என்னை தனியே விட்டு வைக்குமாறு சொன்னேன். சனிக்கிழமை மாலை அன்று அத்தனை பேரை பார்ன்ஸ் அண்ட் நோபிள் கடையில் பார்த்ததில் மழையைக் கண்ட கலிஃபோர்னியா போல் மகிழ்ச்சி ஏற்பட்டது. இலக்கின்றி மேய ஆரம்பித்தேன்.

முதலில் புத்தம் புதிய அதிவிற்பனை நூல்களைப் பார்த்தேன்.

”Make Something Up: Stories You Can’t Unread By Chuck Palahniuk”Make-Something-Up அட்டைப்படம் கவர்ந்தது. ‘ஃபைட் கிளப்’ (Fight Club) எழுதியவரின் கதைத் தொகுப்பு. புகழ்பெற்ற பள்ளியில் படிக்கும் பிரகாசமான பதின்ம வயது மாணவர்கள் புத்தம்புது போதை மருந்தின் தாக்கத்தில் வீழ்ந்து கிடப்பதை ‘Zombies’ சொல்கிறது என்கிறார்கள். தந்தையின் அந்திமக் காலத்தின் கடைசி நிமிடங்களில் சொல்லக்கூடாத நகைச்சுவையை ஜோக்கடிக்க விரும்புவதை ‘Knock, Knock’ல் எழுதுகிறார். தன்னிடம் தசைப்பிடிப்பை நீக்க வரும் சாகக்கிடப்பவர்களுக்கு ‘விடுதலை’ அளிக்கும் ‘Tunnel of Love’ என பலதரப் பட்ட கதை இருப்பதாக உள் அட்டை சொல்லியது.

ronda-rousey-when_things_Get_Bad_Back_Cover_Motivation_Inspiration

அடுத்தது “My Fight / Your Fight by Ronda Rousey”. கருப்பு வெள்ளைப் படம் கவர்ந்தது. பெண்களுக்கான சுய முன்னேற்ற நூல். எனக்கு எப்போதுமே ரஜினிகாந்த் பிடித்தேயிருக்கும் என்பது போல், இது மாதிரி உற்சாகப்படுத்தி, ஊக்கமூட்டும் வார்த்தைகளைச் சொல்லும் வாழ்கை அனுபவப் புத்தகங்களும் பிடித்தே இருக்கிறது. இரண்டு மூன்று அத்தியாயங்கள் வாசித்தேன். ‘ஏதாவது சாதிக்கணும்ப்பா…’ என்னும் எண்ணம் கரைபுரண்டோட வைக்கிறது. சகட்டு மேனிக்கு ஃபக் உபயோகிக்கிறார். அதை விட சரளமாகத் தோல்விகளைத் தாங்கிக் கொண்டு வெற்றிப் படிக்கட்டுகளை ஏறி இருக்கிறார்.

கதைப் புத்தகம் ஆச்சு; டானிக் பூஸ்ட் ஆச்சு; கடைசியாக கொஞ்சம் இலக்கிய அரட்டை + வம்பு.

Harold Bloom delivers the chosen ones unto the multitudes. (From left: Willa Cather, Edith Wharton, Edgar Allan Poe, Philip Roth, Ernest Hemingway, and James Baldwin.)

Harold Bloom delivers the chosen ones unto the multitudes. (From left: Willa Cather, Edith Wharton, Edgar Allan Poe, Philip Roth, Ernest Hemingway, and James Baldwin.)

Harold Bloom எழுதிய “The Daemon Knows: Literary Greatness and the American Sublime”. ப்ளூம் – இந்தப் பெயர் எப்படி எனக்கு அறிமுகம் ஆனது?

வழக்கம் போல் செய்திகளில் அடிபட்டுதான் அறிந்துகொண்டேன். 2004ஆம் வருடம். நவோமி வொல்ஃப் (Naomi Wolf) உடைய உள்தொடயில் கைவைத்து பல்லிளித்து அத்துமூறிய இன்னொரு பேராசிரியர் என்ற வகையில்தான் தெரிய வந்தார். பெண்களைக் கருதுவது போல்தான் இலக்கிய மதிப்பீடுகளையும் முன்வைக்கிறாரோ என்னும் சர்ச்சை தொடர்ந்தது. 1994ல் இனம், நிறம், பால் அடிப்படையில் புத்தகங்களை வகைப்படுத்தி, பல தரப்பட்ட நூல்களை வாசிக்க வேண்டும் என்னும் கருத்தை ‘அழுகுணிக்காரர்களின் போதனாசாலை’ என்று இவர் கருதினார். அது இப்போது மாறி இருக்கிறதா என்பதை இந்த நூலை வாசித்தால் தெரியும்.

நூல்கள் ஆச்சு. அடுத்தது சஞ்சிகைகள்.

ஆங்கிலத்தில் வெளியாகும் பத்திரிகைகளைப் பார்த்தால், தமிழ் எழுத்துக்களைப் போல் எக்கச்சக்கம். தமிழில் வெறும் 26 எழுத்துக்கள் மட்டும் இருந்துவிட்டு, இத்துணை நூல்களும் காத்திரமான மாதாந்தரிகளும் வெளியாகிக் கொண்டிருந்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்!

பார்டர்ஸ் சென்றால் மட்டுமே வழக்கமாகப் புரட்டும், மெண்டல் ஃப்ளாஸ், நி.வொய்.ஆர்.பி., எல்லாம் இப்போது நூலகத்திலேயேக் கிடைப்பதால், அதை அப்படியே விட்டு வைத்தேன்.

லஃபாம்ஸ் குவார்ட்டர்லி மனிதநேயம், அருளுடைமை (philanthropy) குறித்து, சிறப்பிதழ் வெளியிட்டு இருக்கிறார்கள்.

Lapahams_Quartterly_Philanthropy

காரல் மார்க்ஸ், பில் கேட்ஸ், கர்ட் வானகட் என்று பல முக்கியமான எழுத்தாளர்கள். ஏதன்ஸ், எகிப்து, பாரிஸ் என்று முக்கியமான நகரங்கள். தற்கால கருத்துருவாக்கிகள் – என பலதரப்பட்ட விஷயங்களைக் கோர்வையாக ஒரே நூலில் அடக்கி இருக்கிறார்கள்.

ப்ரமத்தீயஸ் (Prometheus) பற்றிய குறிப்பு கூட கவர்ந்தது. இந்த உலகின் முதல் பரோபகாரி. கிரேக்கத் தொன்மத்தில் மிகவும் புகழ்பெற்றவர். தேவர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த தொழில்நுட்பமான ‘நெருப்பு செய்யும் கலை’யை உலகெங்கும் எடுத்துக் கொடுத்தவர். சாதாரண மனிதர்களுக்கும் தீ வளர்க்கும் வித்தையைக் கற்றுக் கொடுத்தக் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டார். பாறையில் கட்டப்பட்டு வைத்திருக்கப்பட்டார். ஒவ்வொரு நாளும் கொஞ்ச கொஞ்சமாக அவருடைய ஈரற்குலையை, கழுகுகள் உண்டு வரும். இந்தக் கதை கூட நமது ஊர் வேதங்களின் ’ப்ரா மத்’ (திருடுவது) என்னும் சொல்லில் இருந்து வந்திருக்கிறது. பிரா மத் செய்தவன் பிரமாத்தியஸ், என்னும் நாடகமும் இந்தக் கருப்பொருள் சார்ந்த வெளியீட்டில் இடம் பெற்று இருக்கிறது.

Monkey_business_Mag_Stanford_Creative

ஜப்பானில் வெளியாகும் ’குரங்குத் தொழில்’ (Monkey Business International) முழுக்க முழுக்க ஜப்பானிய மொழி எழுத்தாளர்களை மொழிபெயர்க்கிறது. தற்கால சப்பானிய இலக்கியத்தை அமெரிக்காவிற்கும் மேற்குலகிறகும் அறிமுகம் செய்கிறது. ஜப்பானிய எழுத்தாளர்களை அமெரிக்காவிற்கு அழைக்கிறது. வாசகர் சந்திப்புகளை ஏற்பாடு செய்கிறது. புனைவிலக்கிய கர்த்தாக்களையும், அவர்களின் மொழிபெயர்ப்பாளர்களையும், இவற்றை ஒருங்கிணைக்கும் வர்த்தகர்களையும், எல்லாவற்றையும் வெட்டி, ஒட்டி, கருத்துச் சொல்லும் எடிட்டர்களையும் ஒருங்கிணைக்கிறது. ஐந்து இதழ்கள் வெளியாகி இருக்கின்றன.

Makeshift_Magazines_Covers_Law_Order

”நீங்க எப்படி வாழ வேண்டுமென்று போதிக்காமல், நான் ஆலோசனைகளை சொல்லித் தருவதை விட, உங்க வாழ்க்கை எப்படி நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற தீர்வுகளைத் தருவது முக்கியமானது” என்னும் கொள்கைப்படி மேக்‌ஷிஃப்ட் (Makeshift) நடக்கிறது. நைஜீரியாவின் குக்கிராமங்களில் வீட்டிலேயே தயாராகும் விமானங்களைச் சொல்கிறார்கள். மெக்சிகோவின் போதைக் கடத்தல்காரர்களோடு உலாவி, அதையும் பதிகிறார்கள். சீனாவின் கொந்தர்கள், எவ்வாறு சீனப் பெருஞ்சுவரை உடைத்து கணினி சுதந்திரத்தை நாடுகிறார்கள் என்பதையும் செய்திக் கட்டுரை ஆக்குகிறார்கள். பன்னிரெண்டு இதழ்கள் வெளியாகி இருக்கிறது.

Esopus_22

இலக்கியம் படித்து களைத்துப் போனது மூளை. கொஞ்சம் கலை வெளியீடுகள் பக்கம் ஒதுங்கினேன்.

கலையும் மருத்துவமும் ஒருங்கிணையும் புள்ளியை ஈஸோப்பஸ் (Esopus) சிறப்பிதழாகக் கொணர்ந்து இருக்கிறது. செம தடிமனான பத்திரிகை. ஐநூறு பக்கங்களுக்கு மேல் இருக்கும். எல்லாத் தாள்களும் கெட்டித் தாள். நடு நடுவே இடைச் செருகலாக பதாகைகள், அந்தக் கால மருத்துவக் குறிப்புகள், வெளியீடுகள். இந்த இதழுக்குப் பங்களிப்போர் பட்டியல் மேலும் மலைக்க வைக்கிறது: ஓவியக் கலைஞர்கள், அறுவை மருத்துவர்கள் போல் விதவிதமான வைத்தியர்கள், எழுத்தாளர்கள், மனநோய் வைத்தியர்கள், மனநலக் காப்பகக்காரர்கள், மனநல சிகிச்சை தருபவர்கள், சினிமாக்காரர்கள், பல் வைத்தியர்கள், செவிலிகள், கவிஞர்கள், பொறியாளர்கள், மருத்துவ கலன் தயாரிப்பவர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள், வைத்தியசாலை நிர்வாகிகள், மருத்துவமனை சிப்பந்திகள், இசை விற்பன்னர்கள், புகைப்பட நிபுணர்கள், உள்ளரங்கு வடிவமைப்பாளர்கள், இரத்தம் எடுப்பவர்கள், வரைபுத்தகம் எழுதுபவர்கள், பேராசிரியர்கள்…

புரட்ட புரட்ட சரித்திரமும், சிற்பமும், உருவாக்குதலும், இறப்பும், கருவியாக்கமும், உயிரும் நிறைந்து இருக்கிறது.

BR-MayJune2015_cover-medium

சபீல் ரஹ்மான் பெயரைப் பார்த்துதான் பாஸ்டன் ரிவ்யூ பத்திரிகையை எடுத்தேன். தற்கால செய்தியை அலசி இருந்தார்கள். ஒரு பிரச்சினை. அதைக் குறித்து ஒரு முக்கிய கட்டுரை. அதற்கு பத்து விதமான எதிர்வினைகளையும் மாற்றுக் கருத்துகளையும் வெளியிட்டு இருந்தார்கள்.

இன்றைய பொழுதில் வேலைக்காரர் இன்றி கொள்ளை இலாபம் சம்பாதிப்பதே இலட்சியம். கார்களே வைத்துக் கொள்ளாமல், கார் ஓட்டுனர்களையும் பணிக்கு அமர்த்தாமல், பில்லியன் பில்லியனாகப் புரட்டும் ஊபர் (Uber); ஹோட்டல்களை வைத்துக் கொள்ளாமல், தங்குமிடங்களையும் வாடகைக்கு எடுக்காமல், உலகெங்கும் விடுதிகளை நடத்தும் ஏர் பி அண்ட் பி (Airbnb); செய்தியார்களே இல்லை என்றாலும் உலகின் அனைத்து மக்களும் நொடிக்கு நொடி செய்தி அறிந்து கொள்ளும் தளமாக இயங்கும் ஃபேஸ்புக்; இதே போல் அலிபாபா, அமேசான், பே-பால் (Paypal) என பல நிறுவனங்கள் அசையாச் சொத்து வைத்துக் கொள்வதில்லை; ஊழியர்களையும் நியமிப்பதில்லை; அதனால், மிகக் குறைந்த விலையில் தங்கள் சேவையை, வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறார்கள்.

அரசாங்கம் எப்பொழுது மூக்கை நுழைக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்? மக்கள் நலன் பாதிக்கும் போது, அதற்கேற்ற சட்டதிட்டங்களை அரசு நிறைவேற்ற வேண்டும் எனக் கோருகிறோம். நாம் அதிகம் பணம் செலவழித்து, பொருள்களை வாங்கும்போது, நம்முடைய ஆதாயத்திற்காக அரசு, அந்த அநியாயக் கொள்ளைக்கார நிறுவனத்தைக் கட்டுப்படுத்தப் போராடுகிறோம்.

ஒரு பொருளின் விலையை மட்டும் பார்த்து, அந்தத் துறையில் போதிய அளவு போட்டி நிலவுகிறதா என்பதையும் கணித்துப் பார்த்து, முடிவெடுத்தது அந்தக் காலம். இன்றோ, அந்த நிறுவனம் எவ்வாறு தன் அசுரபலத்தை பிரயோகிக்கிறது, எவ்வாறு தன் வீச்சை பயன்படுத்துகிறது என்பதை ஆராய்ந்து, அதன் படி முடிவெடுப்பது அவசியம் என சபீர் வாதிடுகிறார். அமேசானுக்குப் போட்டியாக கூகுள் இருக்கலாம். ஆனால், அவர்களின் அரசியல் என்ன? தூரயியங்கி முதல் பிட் காயின் வரை எப்படி அவர்கள் தங்களுடைய நுகர்வோருக்கும், சிப்பந்திகளுக்கும், பொருள் விற்போருக்கும் ஆக்கபூர்வமான வகையில் இயங்குகிறார்கள் என்பதை ஆய்ந்தறிந்து, புரிந்து கொண்டு, அதற்கேற்ப சட்டவரையறைகளை உருவாக்க வேண்டும் என்கிறார்.

இணையம் என்றால் என்ன என்றே ரெஹ்மானுக்கு புரியவில்லை என்பது முதல் அனைவரும் தொழிலாளிகளாவும், உற்பத்தியாளராகவும், வர்த்தகராகவும் இருக்கும் திறமூல சமூகம் எவ்வாறு வருங்காலத்தில் இயங்கும் என்பது வரை பலதரப்பட்ட விமர்சனக் கட்டுரைகள் தொடர்கின்றன.

இப்பொழுது மண்டை மெல்ல ‘போதும்’ என்றது. இருந்தாலும் Trans/lation என்று சொன்னதால் விட்னெஸ் எடுத்தேன்.

Witness_Lit_Magz_Online_Issues_Translation

வாசியுங்கள்.

Kids book writer R Ponnammal’s Interview in Dinamalar

நன்றி: குழந்தை இலக்கியங்களுக்கு நூலகங்களில் இடம் கிடைக்குமா? – தினமலர்

R_Ponnammal_Interview_Dinamalar_Children_Books_Author_Writers

ஆன்மிகம், வரலாறு, அறிவியல், கணிதம் என, எல்லாவற்றையும், கதைகள் மூலம், குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கியமானவர், குழந்தை இலக்கிய எழுத்தாளர் ஆர்.பொன்னம்மாள்.

கடவுளின் கருணை, மகாபாரதம், மரியாதைராமன், தெனாலிராமன் கதைகள், ராஜராஜ சோழன் வரலாறு, திருக்குறள், மூதுரை, நன்னெறி கதைகள், பறவைகள் பலவிதம், எண்கள் எனும் பொக்கிஷம் என, இவரின் குழந்தை நுால்கள் நுாற்றுக்கும் மேல் உள்ளன. தற்போது, சிறுவர்களுக்கான தொடர்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி வரும் இவர், குழந்தை இலக்கியம் குறித்து கூறியதாவது:

இங்கு, தற்போது, எல்லா துறைகளுக்கும், நிறைய பருவ இதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், குழந்தைகளுக்கான இதழ்கள் விரல்விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளன.

குழந்தைகளிடம், கதைகள் மூலமாகவே, நன்னெறிகளையும், ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் கொண்டு செல்ல முடியும். நீதிக்கதைகள்,புராண கதைகள் மூலம், வாழ்வின் நோக்கத்தையும், தீமைகளின் முடிவையும் சொல்ல முடியும். அரச கதைகள் மூலம், அரசியல் குறித்த எண்ணங்களை சொல்ல முடியும். அறிவியலையும், கணிதத்தையும், கதைகள் மூலம் சொல்லி, எளிதாக புரிய வைக்க முடியும்.

ஆனால், கதை கேட்கும் ஆர்வத்தையும், கதை சொல்லும் ஆர்வத்தையும், குழந்தைகளிடம் நாம் தான் உண்டாக்க வேண்டும். அதற்கு, பள்ளிகளில், நீதிநெறி சார்ந்த தலைப்புகளில், பேச்சு, எழுத்து போட்டிகளை நடத்த வேண்டும். அப்போது தான், குழந்தைகள், வித்தியாசமான புத்தகங்களை தேடுவர். நுாலகங்களுக்கு செல்லும் பழக்கம் ஏற்படும். அதனால், தேடுதலும், திறனறிதலும் மேம்படும். ஆனால், இங்கு உள்ள நிலைமை வேறு. பாடப்புத்தகங்களை தவிர மற்ற புத்தகங்களை வாங்க, பள்ளிகள் ஊக்குவிப்பதில்லை. அரசு நுாலகங்களில், குழந்தை இலக்கியங்களை, வாங்குவதில்லை. அப்படி இருக்கும் போது, எப்படி, பதிப்பாளர்கள், குழந்தை இலக்கியங் களை பதிப்பிக்க முன்வருவர்? எழுத்தாளர்கள், எழுத முன்வருவர்?

குழந்தைகளிடம், படிக்கும் ஆர்வமும், படைக்கும் ஆர்வமும் அதிகமாக உள்ளது என்பதற்கு, பருவ இதழ்களுக்கு வரும் கடிதங்களும், படைப்பு களுமே சான்றுகளாக இருக்கின்றன.

கடந்த 15 ஆண்டுகளாக, நான், ஆன்மிகம் மற்றும் குடும்பப்பாங்கான சிறுகதைகளை எழுதி வந்தாலும், குழந்தைகளுக்காக எழுதும் போது தான், மனதில், திருப்தி ஏற்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

பொறியியல் – கல்விக்கு அப்பால்: வாசகர் மறுவினை

Jobs_lost_Employment_Gained_Sectors_Industries_Work_Compensation_Industry_Salary_WSJ_Graphics

பொறியியல் – கல்விக்கு அப்பால் கட்டுரை வாசித்தேன். தமிழ் பதிப்புலகில் அதிகம் பேசப்படும் சினிமாவும் அரசியலும் தவிர்த்த கட்டுரை என்ற அளவிலேயே கட்டுரை எடுத்துக் கொண்ட பேசுபொருளும், அதன் தொடர்பான எண்ணங்களும் முக்கியமானவை. மதிப்பெண்களைத் துரத்தும் கல்விமுறை குறித்தும் அசலான ஆய்வுகளை ஊக்குவிக்கும் வழிமுறைகள் குறித்த ஆசிரியரின் கருத்தோடு பெரும்பாலும் ஒத்துப் போகிறேன்.

எனினும், கட்டுரையில் ஆங்காங்கே தடாலடி பொதுமையாக்கங்கள் இருக்கின்றன. தான் அறிந்த சூழலை வைத்து, அதை இந்தியா முழுக்க நீட்டும் சூத்திரங்களும் இருக்கின்றன. இவை இரண்டும் கட்டுரை சொல்லும் கருவிற்கு பங்கம் உண்டாக்குகின்றன. பின்குறிப்பின் மூலம், இந்த வாதத்தை நிராகரித்து முற்றுப்புள்ளியும் வைக்கிறார்.

இப்பொழுது கேள்விகள்:

1. ஆராய்ச்சியைத் தூண்டும் கல்வியை ஊக்குவிக்க மூன்று காரணிகள் இருக்கின்றன: புதிய கண்டுபிடிப்புகளினால் ’செல்வம்’ சேர்க்கும் வாய்ப்பு; தேடலின் முடிவில் கிடைக்கும் சமூக ’அந்தஸ்து’; நாம் வாழும் உலகை மாற்றியமைக்கும் நாகரிகத்தை முன்னெடுத்தோம் என்னும் ஆத்ம ’திருப்தி’. இவற்றை இந்திய அமைப்புகள் தரும் சூழல் நிலவுகிறதா?

2. டிப்லோமா படிப்புகள் – இவை செயல்முறையை முன்னிறுத்தும் கல்வி. அவற்றை பொறியியல் படிப்போடு ஒப்பிட்டுப் பார்க்க இயலுமா?

3. மேற்குலகில் பொறியியல் படிக்காதவர்களும் பொறியியல் சார்ந்த வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இந்தியச் சூழலில் பொறியியல் பட்டயம் என்பது ”இவர் பொறுப்பானவர்; ஒழுங்காக வேலை செய்வார்; எதைக் கொடுத்தாலும் கற்றுக் கொள்வார்.” என்பதற்கான சான்றாதாரமாக விளங்குகிறதா?

4. கணிமொழியியல் – அமெரிக்காவில் கணித்துறை சார்ந்த வேலைக்கு பொறியியல் படிப்பு தேவையாக இருப்பதில்லை. பத்தாவது படித்தவரை வேலைக்கு அமர்த்துகிறார்கள். கணிவிளையாட்டுகளைக் கொண்டு பரிசோதித்து, அதில் திறம் வாய்ந்தவராக இருந்தால் கணினித்துறையில் நல்ல பதவியில் அமர்த்துகிறார்கள். இந்த நிலை இந்தியாவில் உருவாகுமா? (அதாவது பத்தாம் வகுப்புத் தேர்வு முடிந்து, ஓரளவு பக்குவம் வந்தவுடனேயே, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள், மாணவர்களைப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றுவிடும். மூன்று வருடக் கால வேலை+பயிற்சிக்குப் பின் அசல் வேலையில் அமர்த்திக் கொள்வார்கள்.)

5. ஆராய்ச்சிக் கல்வி – இதற்கான சமூக அந்தஸ்து இந்தியாவில் எப்படி இருக்கிறது? நிறுவனத்தில் டைரக்டர், வைஸ் பிரசிடெண்ட் என்றால் அதிக மதிப்பு கிடைக்கிறதே! அதே சமயம் கண்டுபிடிப்புகளை காசாக்கும் சூழல் இந்தியாவில் எப்படி நிலவுகிறது?

6. மேற்குலகில் mentor எனப்படும் வழிகாட்டியை வாழ்நாள் முழுக்க துணையாக வைத்துக் கொள்கிறார்கள். இந்தியச் சூழலில், இதை மாமா, சித்தப்பா போன்ற குடும்ப உறவுகளும் கிராம சமூகங்களும் நிரப்பின. இன்றைய நகரமயமாக்கப்பட்ட நிலையில் உற்றாரின் ஆலோசனைகளும் கேட்பதில்லை. அண்டை வீட்டாரும் சொந்த விஷயங்களில் கருத்துச் சொல்வதை அந்தரங்கத்தின் குறுக்கீடாகவே எடுத்துக் கொள்கிறோம். இந்த வழித்துணைகளின்ம் உதவி கிடைத்தால் ஒவ்வொருவரின் தனித்தன்மையும் ஆர்வமும் தூண்டப் பெற்று ஆராய்ச்சிப் பாதைகளில் தெளிவு கிடைக்குமோ?

7. இதன் தொடர்ச்சியாக பத்ரி சேஷாத்ரி எழுதிய ”தமிழகத்தின் பல பொறியியல் கல்லூரிகளில் ஐ.டி என்ற பாடப்பிரிவை நீக்கியிருக்கிறார்கள்”, த.நி. ரிஷிகேஷ் ராகவேந்திரன் எழுதிய “தரகர், அலுவலர்,வேலை பெற்றுத் தருபவர் தேவை- ஆசிரியர்கள் தேவையில்லை” வாசிக்கப் பெற்றேன். தங்கள் கட்டுரையைப் போன்றே பெங்களூரூ சாணக்கியன் எழுதிய ‘வேலை’ கடிதம் வாசித்தீர்களா?

8. ஜெயமோகன் தளத்தில் கல்வியைக் குறித்தும் பாடத்திட்டத்தின் தேர்வுமுறைகள் குறித்தும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். அவற்றில் அவர் குழந்தைகளுக்குக் கொடுக்கும் சுதந்திரத்தையும் தான் பழகிய ஆசிரியர்களையும் கல்வி குறித்த செய்திகளையும் அலசுகிறார். அதில் குறிப்பாக பெற்றொரின் பங்கு குறித்து நிறைய எழுதியிருக்கிறார். நம்முடைய பெற்றோர் இட்ட கட்டளைக்குப் பணிந்து நடப்பது போல், பொறியியல் கல்விக்கு அப்புறமும் மேலாளரின் கட்டளைக்கு அடிபணிய விழைகிறோமா?

9. வேலைக்குப் புதியதாகச் சேரும் எவரையும் எந்த நிறுவனமும் உடனடியாக பொறுப்புகளை சுமத்துவதில்லை. அதிலும் கல்லூரியில் இருந்து புத்தம்புதிதாக வருபவரை இரண்டு வாரங்களுக்காவது தனிப் பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். தங்கள் அலுவலில் பயன்படுத்தும் நுட்பங்களையும் வழிமுறைகளையும் விவரமாகக் கற்றுத் தருகிறார்கள். அதன் பிறகு இரண்டு மாதங்களுக்காவது, பரீட்சார்த்தமான வேலைகளில் மட்டுமே ஈடுபடுத்துகிறார்கள். மூன்று மாதம் ஆன் பிற்பாடு, நிஜ வேலைக்குள் நுழையும்போது துணை நிற்க அனுபவசாலி ஒருவரை கூடவே கண்காணிப்பாக வைக்கிறார்கள். இதை முதலீடாகக் கருதுகிறார்கள். இந்தியாவின் ஆய்வுத்துறையில் இவ்வாறு ஒவ்வொரு ஆராய்ச்சியாளருக்கும் தனிப்பட்ட கவனம் வழங்க பொருளும் மனிதவளமும் இருக்கின்றதா?

10. வாழ்க்கை ஆதாரமாக கல்வியும், அந்தக் கல்வியினால் கிடைக்கும் வேலையும் அமைந்திருக்கிறது. மேற்குலகில் இருபதில் இருந்து முப்பது வரை பரீட்சார்த்தமாக வாழ்வதை நடைமுறையாக வைத்திருக்கின்றனர். அதாவது, தனக்குப் பிடித்த விஷயத்தில் இளவயதில் தீவிரமாக இயங்குவது; அதில் வெற்றி பெற்றால் கோடிகளை அள்ளுவது; தோல்வி அடைந்தால் மீண்டும் கல்லூரிக்குச் சென்று வேறொரு பாதையைத் தேர்ந்தெடுப்பது. – ஒரு முறையோ, பல முறையோ கீழே விழுந்தால், அஞ்சாமல், கைதூக்கி ஊக்கமும் மீண்டும் நிதியும் கொடுக்கும் சமூக அமைப்பு இந்தியாவில் வர வேண்டுமா?

destroying.jobs_.chart_Decoupling_Productivity_Unemployment_Manufacturing_Economhy_Income_GDP_USA_America_Automation

STEM: Ratio of female workers in Software: India vs US

உடன் பணியாற்றுபவர்களில் ஒன்றிரண்டு மகளிர் மட்டுமே இருப்பது, மேற்கத்திய உலகின் கணினியில் குப்பை கொட்டுபவர்களின் குறைபாடுகளில் முக்கியமான ஒன்று.

சென்னை சாஃப்ட்வேர் நிறுவனங்களில் ஐம்பது சதவிகிதமாவது பெண் பொறியாளர்கள் இருப்பார்கள். இந்திய கல்லூரிகளில் பெண்களுக்கும் ஆண்களுக்குமான விகிதாசாரம் கிட்டத்தட்ட சம அளவில் இருக்கிறது. அந்த சமன்பாடு அலுவல் வேலைகளிலும் வெளிப்படுகிறது.

அமெரிக்க கல்லூரிகளிலும் சம விகிதங்களில் இரு பாலினரும் படிக்கிறார்கள். ஆனால், பெண்கள் பெரும்பாலும் கணிதம் / கம்ப்யூட்டர் / தொழில் நுட்பம் போன்ற அறிவியல் துறைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை. இதற்கு பள்ளிப் பருவத்தில் படிப்பை விட அழகில் கவனம் செலுத்துவதற்கான நிர்ப்பந்த சூழலை குற்றஞ்சாட்டலாம்.

அலுவலில் வெரைட்டியான மனிதர்கள் இருப்பது நிறுவனத்திற்கு முக்கியம். வெள்ளை, கறுப்பு, தாத்தா, இளநரை, கல்லூரி மணம் மாறாத பாலகன், ரூபவதி எல்லோரும் இருந்தால் குழுவில் கலந்து கட்டி வேலை நடக்கும். ஆனால், சௌந்தரிகளுக்கு மனிதவளமும் மார்க்கெடிங்கும் சிறந்த தொழிற்துறையாக அடையாளப்படுத்தி இருக்கும் அமெரிக்காவில் மெலிஸா மேயர்கள் சீ.ஈ.ஓ.க்களாகி விடுகிறார்கள்.

Harvard Education vs Pondycherry Congress: Politicians Cheat

பல ஜனாதிபதிகளையும் செனேட்டர்களையும் ஹார்வார்ட் பல்கலைக்கழகம் உருவாக்குகிறது. டெல்லி ஜே.என்.யூ.வில் படித்தால் இந்தி(ரா)யா கம்யூனிஸ்ட் காங்கிரசில் தஞ்சமடையலாம் என்பார்கள்; ஹார்வார்டில் படித்தால் அமெரிக்க காங்கிரஸில் நுழையலாம்.

அவ்வளவு புகழ்பெற்ற ஹார்வார்டு ‘காங்கிரஸ் 101’க்கு இறுதி பரீட்சை எழுதிய எழுபது மாணவர்களை இடைநீக்கம் செய்திருக்கிறது. அரசாங்கம் குறித்தும் சட்டசபை குறித்தும் அறிமுகம் செய்யும் வகுப்பில் காப்பியடித்த குற்றத்திற்காக அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது.

பாண்டிச்சேரி போல் புத்தகம் பார்க்காமல் எழுதும் தேர்வு அல்ல. வீட்டிற்கே கேள்வித்தாளைக் கொடுத்தனுப்பி விட்டார்கள். இணையத்தைப் பார்த்து எழுதலாம். புத்தகத்தைத் திறந்து வைத்து விடை அளிக்கலாம். நண்பர்களிடம் கலந்தாலோசித்து, சொந்த நடையில் பதில் போடலாம். ஆனால், ஒரே விடைத்தாளை அனைத்து மாணவர்களும் காப்பி பேஸ்ட் செய்ததால் மாட்டிக் கொண்டார்கள்.

புதுச்சேரி அமைச்சர் கல்யாணசுந்தரம் போல் நமது ஊர் காங்கிரஸ்காரர்கள் நிலைமை இன்னும் மோசம். பொதுத் தேர்வு மோசடிக்கு எவ்வளவு முஸ்தீபுகள் தேவையாக இருக்கிறது? பிட் வேண்டும்; ஆள் மாற்றாட்டத்திற்கு சூட்டிகையானவர் வேண்டும்; பள்ளி ஆசிரியர் முதல் பியூன் வரை கவனிக்க வேண்டும்.

என்னவாக இருந்தாலும் அமெரிக்க ஐவி லீக் பல்கலை படிப்பு போல் ஆகாது!

புதிய தலைமுறை: தாய் மண்ணே வணக்கம்

புதிய தலைமுறையின் சுதந்திர தின ஸ்பெஷல் (1)

புதிய தலைமுறை: தாய் மண்ணே வணக்கம்: விடுதலை நாள் வெளியீடு (2)

”இந்தியா காலேஜில் போட்டா, இவ்ளோ ஆகாது இல்ல? சீட்டும் ஈஸியா கெடச்சிடும்!”

குளிர்கால கிறிஸ்துமஸ் பார்ட்டி ஆகட்டும்; கோடைகால பிக்னிக் ஆகட்டும். அமெரிக்காவில் வாழும் எங்களிடையே இதுதான் இன்றைய பேச்சு.

’தாய் மண்ணே வணக்கம்’ என்று வணங்க மட்டும் செய்யாமல், தாங்கள் கற்ற மண்ணிலேயே தங்கள் மகவுகளும் கல்வி கற்க அனுப்புவதுதான் தற்போதைய தேசி ட்ரெண்ட்.

பள்ளிக்காலம் வரை குடும்பச்சூழலில் ஹிட்லர்தனமான கெடுபிடிகளுடன் வளர்ந்த பையன், பதின்ம வயதில் கல்லூரியில் நுழையும் சமயத்தில்தான் கட்டுப்பாடுகளற்ற முழு சுதந்திரத்தையும் அதற்கு ஈடு கொடுக்கும் பணப்ப்புழக்கத்தையும் காண்கிறான். பெண்களுக்கு நேரும் நிர்ப்பந்த குழப்பங்களும் இருபாலார் இணைந்து தங்கும் விடுதிகளில் சேர்த்துவிட வேண்டிய விருப்பத்தேர்வின்மையும் பெற்றோரை அலைக்கழிக்கிறது.

இதற்கான குறுகிய கால தீர்வாக இந்தியாவிற்கு மூட்டை கட்டி அனுப்பி விடுகிறோம்.

‘லேட்டாக வரீங்க… குழந்தைகள கவனிக்கிறதேயில்ல!’ குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை கிடைக்கிறது. நம்மை நன்றாக வளர்த்து முதலீட்டுக்குரிய விருப்ப வஸ்துவாக்கிய தாத்தா, பாட்டியின் கைகளில் பேத்தி, பேரன்கள் ஒழுங்காக வளர்வார்கள் என்னும் நம்பிக்கையும் உண்டு.

மொத்தத்தில் பணங்காச்சி இயந்திரங்களை உருவாக்கும் புனிதத்தலம். காந்தியும் விவேகாந்தரும் பின்பற்றும் நிலையான ஆன்மிக மணம் கவழும் அமுதமனம். பக்கத்து வீட்டு மாமாவும் ஒன்றுவிட்ட ஊர்க்கார சொந்தமும் எப்பொழுதும் கண்காணித்திருக்கும் கோள்மூட்டும் விழிப்புணர்வு கேந்திரம்.

‘உன் வாழ்க்கை உன் கையில்’ என்று முடிவெடுக்கும் உரிமையை இந்திய நடுத்தரவர்க்கம் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. ஆனால், தாங்கள் புலம்பெயர்ந்தபோது எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருந்தோமோ, அப்படியான விழுமியங்களையே தொடர்ந்து தேங்கிப் போய்விட்டிருக்கிறோம்.

‘தினமும் கோவிலுக்குப் போய் வருவாள். சிவ சேனா மாதிரி நிறைய பேர் இருக்கிறார்கள். குட்டைப் பாவாடை எல்லாம் போட்டுக் கொள்ள மாட்டாள்.’ – இது பெண்ணைப் பெற்றவர்.

‘இங்கே படிப்பதையே பசங்க ரொம்ப கேவலமா நெனக்கிறாங்க. சிரத்தையா பரீட்சை எழுதறவன கீக்னு சொல்லி அந்நியமாக்கி ஒதுக்கிடறாங்க. அவன் கே ஆயிடுவானோன்னு பயமா இருக்கு. அவனுக்கு ஃப்ரெண்ட்ஸே இல்லியே!’

இந்தியாவில் ஆண் குழந்தையைப் பெற்றவர் இப்படியெல்லாம் கவலை கொள்வதில்லை. தற்பால்விரும்பியாக இருப்பது அவரவர் விருப்பமென்று இந்தியப் பெருநகரங்கள் ஒப்புக் கொண்டுவிடலாம். ஆனால், அமெரிக்க வாழ் இந்தியருக்கு ஒவ்வாமை கலந்த அதிர்ச்சி தருவதாகவே ஒரினச்சேர்க்கை அமைந்துள்ளது.

இந்தியர்கள் காலப்போக்கிற்கு ஏற்ப மாற்றிக் கொள்வதில் வல்லுநர்கள். டார்வின் சொன்ன பரிணாம வளர்ச்சியில் முழு நம்பிக்கை கொண்ட அறிவியலாளர்கள். சிவன் தலையில் கங்கை இருப்பதை கும்பிட்டுக் கொண்டே அணை கட்டுவார்கள். அப்படியே மூன்றாம் பிறையை அரோகரா போட்டுக் கொண்டே சந்திரனில் நீர் இருப்பதை உலகெலாம் ஓதுவார்கள்.

இந்த விஞ்ஞானமும் மெய்ஞானமும் கலந்துருகும் கலயம் எனக்கு ரொம்பவேப் பிடித்திருக்கிறது. அந்த மாய யதார்த்தத்தைத் தேடித்தான் மக்கட்செல்வங்களை இந்தியாவைத் திரும்ப அனுப்புகிறோமோ?!

தசாப்தம்

“Our incomes are like our shoes; if too small, they gall and pinch us; but if too large, they cause us to stumble and to trip.”
Philosopher John Locke

கடந்த பத்தாண்டுகள் எப்படி இருந்தது?

இன்டர்வ்யூக்களில் கேள்வி கேட்கத் தெரியாதவரிடம் மாட்டிக் கொண்டால் ‘Where do you see yourself 5 years from now?’னு பட்டவர்த்தனமாய்க் கேட்பார். ரொம்பவே லட்சியவாதியாக பொய் சொல்லாமல், அதே சமயம் உண்மை விளம்பியாக ‘உங்க சீட்டுதான் மேடம்’ என்று உளறாமல் அரை விண்டோவில் ட்விட்டர் பக்கம் திறந்து படிக்கும் சர்க்கஸ் சாகசமாய் பதில் சொல்லவேண்டும்.

சொல்லியிருப்பீர்கள். அப்பொழுது சொல்ல நினைத்த இடத்தை இப்பொழுது நீங்கள் பிடித்தாகி விட்டதா?

சுயநலம்

எனக்காக யோசித்தேன்.

2000த்தில் எங்கே மட்டிக் கொண்டிருந்தேனோ, 10லும் அதே கதவிடுக்கில் சிக்கிய நிலை. ‘வேலயில்லாதவன்தான்; வேல தெரிஞ்சவன்தான்’ என்பதாக ரஜினி பாடிய அளவு மோசமில்லை. டாக்டர் பட்டம் பெறுவதற்காக ‘எட்டாண்டுகளுக்குப் பிறகு இரண்டாண்டுகள் சரியும் பொருளாதாரம்’ தலைப்பை தேர்ந்தெடுத்து விளக்கும் சூட்சுமம் அறிந்திருந்தும், பட்டமும் பெறாமல், தெரிந்த சூத்திரத்தை வருமுன் காப்போனாக விலக்கவும் அறியாத நிலை.

க்ளின்டன் ஆட்சியின் கடைசி ஆண்டில் துவங்கிய சரிவு, ஆல் கோருக்கு ஆப்படித்து, ஆப்கானிஸ்தானில் ஆப்படித் துவங்கியபின் நிமிர்ந்தது. புஷ் இறுதியாண்டில் அடுத்த கட்ட பொருளாதார பொலபொல; ஒபாமாவும் இரானிலோ யேமனிலோ போர் தொடுக்காமல் நிற்காது போலிருக்கிறது.

இக்கரைக்கு அக்கரை பச்சை

இதற்கு இந்தியா நேர்மார். ஆட்சி கைமாறினாலும் நடுத்தர மக்களின் வளர்ச்சியில் தொய்வில்லை. குட்டி கார், பெரிய டிவி, அடுக்கு மாடியில் ஒரு வீடு, ஆளுக்கொரு செல்போன். சாய்நாத் போல் வறியோர் – வட்டிகொண்டோர் இடையே உள்ள ஏற்றத்தாழ்வை புள்ளிவிவரமாக்கா விட்டால், அபார பாய்ச்சல். மேல்தட்டு இமாலயத்தைத் தொட்டுப் பார்க்கிறது. மிடில் கிளாஸ் ஆனைமுடியைத் தாண்டிவிட்டது.

கல்லூரி முடிந்தவுடன் தொடரும் பருவமும் இலக்கும் எளிமையானவை. கை நிறைய சம்பளம் கொடுக்கும் வேலை; வேளாவேளைக்கு வடித்துக் கொட்ட மனைவி; அவளின் என்டெர்டெயின்மென்டுக்கு குழந்தை; பெற்றோரை விட்டு போதிய தூரம்; கோல்ஃப் ஆடி தண்ணியடிக்கவோ, தண்ணியடித்து பௌலிங் போடவோ நான்கு நண்பர்கள்.

எளிமையான கனவு கண்டால், கனிவாக சித்திக்கும் பத்தாண்டுக் காலம். அதற்கு அடுத்த பத்தாண்டுகள்?

நாற்பது வயதில் நாய்க்குணம்

Peer pressureஐ வெளிக்காட்டாத ஆசாமியானால், ஐபிஓ பார்த்த கல்லூரித் தோழனையோ, சிக்யூஓ ஆகிவிட்ட நண்பனின் மனைவியையோ, இந்தியா திரும்பி ஆஃப்ஷோரிங்கை நிரூபித்த நபரையோ உதாரண புருஷராக நினைக்காமல், 9 டு 5 சாகரத்தில் சங்கமமே விருப்பமாக சொல்லிவிடுவார்.

கொஞ்சம் ஹைப்பர் பேர்வழியானால், தலை 5 (இப்ப மீந்திருப்பது நான்கா/மூன்றா) கான்ட்ராக்ட் வேலையில் மூழ்கி பார்ட்னராகும் பாதை பக்கம் பேபி ஸ்டெப்ஸ் வைத்திருப்பார்.

Contractors as Prostitutes vs Marriage as Full Time Employment

நிரந்தர வேலைக்காரரை மனைவி எனவும், குந்துரத்தரை வரைவின் மகளிர் எனவும் ஒப்புநோக்கலாம்.

மனைவிக்கு விவாகரத்து தர ஜீவனாம்சம் அழவேண்டும். முழு நேர உழைப்பாளியை நீக்கினால் severance pay தரவேண்டும். சிஎன்என் தலைப்புச் செய்தி போல் நிமிடந்தோறும் மாறும் தொழில்நுட்பங்களை குந்துரத்தர் கரைத்துக் குடித்திருக்க வேண்டும். கீப் எனப்படுபவள் அதே போல் தன் தோற்றத்தை சிக்கென்று வைத்திருக்க வேண்டும்.

இன்ஷூரன்ஸ், பென்சன் மாதந்தோறும் பற்றுக் கணக்கு போல், மனைவியோடு இலவச இணைப்பாக மாமனார், மாமியார் தொகையறா செலவுகள் எக்கச்சக்கம். ரேட்டு நிறைய என்றாலும், குந்துரத்தரோடு ஒரு மணி நேரத்திற்கு ‘இத்தினி ரேட்டு’ என்று பேசிவிட்டால், முடிந்தது காரியம்.

மத்தியமரில் இத்தனை வகையா?

தாலி கட்டிய பத்தாண்டுகளுக்குப் பிறகு வாழ்க்கைப் பாதை எவ்விதம் அமைக்க விருப்பம்?

1. காலாகாலத்திற்கும் சம்பளம்; கவர்ன்மென்ட்டு உத்தியோகம் போல் வால் ஸ்ட்ரீட் இருக்கை.
2. கான்ட்ராக்டர் -> கன்சல்டன்ட் -> பார்ட்னர் -> சொந்த நிறுவனம்
3. புத்தம்புது ஐடியா + ஏமாந்த முதலீட்டாளர் = மாறிக் கொண்டேயிருக்கும் நிறுவன ஸ்தாபனர்

அமெரிக்கரை மேற்கண்ட மூன்று வட்டத்துள் சுருக்கினால், இந்தியரை எவ்விதம் அடக்கலாம்?

வளர்ச்சியை மட்டுமே கண்டிருக்கும் தலைமுறையை இப்படி பாகுபடுத்துவது இயலாது. கடந்த இருபதாண்டுகளாக பொருளாதாரத்தில் தேக்க நிலையைக் கண்டிராத சமூகம்.

பொறியிழந்த விழியினாய் போ போ போ

அமெரிக்காவைப் போல் போரை நம்பி பிழைக்காத நிதிநிலை. ரஷியாவைப் போல் அரசாங்க செலவை மட்டுமே நம்பியிராத நிலை. எமிரேட்ஸைப் போல் எண்ணெயைத் தலைக்கோசரம் வைத்து உறங்காத வளம்.

இத்தகைய நாட்டின் இளைய தலைமுறையையும், கொஞ்சம் தலை நரைத்த தலைமுறையும் பொருளாதாரச் சரிவை எதிர்கொள்ளுமா? அப்படி மாபெரும் வீழ்ச்சி வந்தால் எப்படி சமாளிக்கும்?

சத்யம் தந்த சாம்பிள் போல் தற்கொலையும், அமெரிக்க இந்தியர் சிலர் மேற்கொண்ட மரணங்களும் அன்றாட பெட்டிச் செய்திகளாகி விடும்.

Call center ஆப்பிரிக்காவிற்கும் தென்கிழக்காசியாவிற்கும் இடம்பெயர்ந்தால் transferable skill ஆக எதைக் கொண்ட ஜெனரேஷன் இந்தியாவில் இருக்கிறது?

லட்சக்கணக்கில் இளநிலைப் பொறியாளரை உருவாக்கிவிடும் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும், பட்டதாரிகளை தொழில் முனைவோராகவும், சுயசிந்தனையாளர்களாகவும், வாக்குஜால வித்தர்களாகவும் மாற்றுவது எக்காலம்?

நகரத்தில் எல்லோரும் பேராசைக்காரர்; கிராமத்தோர் நிறைமனதுக்காரர்; போன்ற வார்ப்புரு தேய்ந்தாலும், பொன் செய்யும் மருந்து மனத்திற்கும் எதிர்நீச்சல் வெறிக்கும் பேலன்ஸ் கிடைப்பது எங்ஙனம்?

அடுத்த தசாப்தத்திலும் பொங்கும் மங்களம் எங்கும் தங்க, காங்கிரஸ் + பாஜக அரசியல்வாதிகளிடம் திட்டம் இருக்க எல்லாம் வல்ல இறைவரை வேண்டுகிறேன்.