இந்தியாவில், 2017 ம் ஆண்டிற்கான சிறந்த செயல்திறம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் + கல்லூரிகளின் பட்டியலை (2017 ranking of institutions based on performance) மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதையொட்டி சில எண்ணங்கள்:
- பொறியியல் கல்லூரிகள்:
முதலில் இருக்கும் கல்லூரிகள் எல்லாம் ஏன் தொழில்நுட்பம் அல்லது பொறியியல் அல்லது அறிவியல் கல்லூரிகளாகவே இருக்கின்றன? கலை மற்றும் பொருளாதாரம் மற்றும் நிதி மற்றும் கல்லூரிகளுக்கு இந்தியாவில் மரியாதை கிடையாதா?
- ஆராய்ச்சி மையங்கள்: இந்தக் கல்லூரிகளில் இருந்து எவ்வளவு ஆராய்ச்சிக் கட்டுரைகள் மதிக்கத்தக்க இடங்களில் வெளியாகின்றன? ஒவ்வொரு ஆண்டிலும் உலக அளவில் உரிமைக்காப்புகள் எத்தனை வாங்கப்படுகின்றன? இங்கிருந்து படித்து கரையேறுபவர்கள் எத்தனை நிறுவனங்களைத் தோற்றுவிக்கிறார்கள்? இந்த தலை பத்து பல்கலைக்கழகங்களில் பட்டதாரி பட்டம் பெறுபவர்களில் எத்தனை பேர் கவனிக்கத்தக்க கண்டுபிடிப்புகளைக் கொடுத்திருக்கிறார்கள்?
- மேலாண்மை:
தலை இருபது கல்லூரிகளில் நான்கே நான்கு மட்டுமே மற்றவர்களுக்கு கிட்டியிருக்கிறது. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், அரசுத்துறையின் பட்டியல் என்பதால் அரசாங்கம் நடத்தும் கல்லூரிகளுக்கு முன்னுரிமை தரப்பட்டதா? - களத்தில் பயிற்சி: இந்தியாவில் நிஜ வாழ்க்கைக்கும் கல்லூரிகளில் கற்றுத்தரும் விஷயங்களுக்கும் பெரிய இடைவெளி உண்டு. இன்னும் மதிப்பெண்களில் நம்பிக்கை கொண்ட நாடு இந்தியா. இன்றளவும் தொடர்ச்சியான பரீட்சைகள் வைக்காமல், பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வு, செமஸ்டர் முடிவில் ஒரேயொரு தேர்வு என்று செயல்படும் நாடு. இதில் அசலான நிறுவனங்களில் சுயமான செயல்பாடு என்பதைக் கணக்கிலேயே எடுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று பழமொழி மட்டும் பேசுவார்கள்.
- தமிழகக் கல்லூரிகள்: அண்ணா பல்கலை, 13ம் இடம் பெற்றது. நஷ்டத்தில் இயங்கும் அண்ணாமலை பல்கலை, 92ம் இடம் பெற்றது. நுாற்றாண்டு பழமையான, சென்னைப் பல்கலை, 64ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலைக்கு, 45ம் இடம் கிடைத்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலை, சேலம் பெரியார் பல்கலை போன்றவை, 100க்கும், 150க்கும் இடையிலான, இரண்டாம் கட்ட பட்டியலில் மட்டுமே, இடம் பெற்றுள்ளன.
பல்கலைகளுக்கான தரவரிசை பட்டியலில், பாரதியார் பல்கலை, 28; பாரதிதாசன் பல்கலை, 88ம் இடங்களை பிடித்துள்ளன. திருவள்ளுவர், மனோன்மணியம் சுந்தரனார், சட்ட பல்கலை, இசை பல்கலை, ஆசிரியர் கல்வியியல் பல்கலை போன்றவை, தரவரிசைக்கு விண்ணப்பித்தோர் பட்டியலில் இடம் பெறவில்லை.
கல்லுாரிகளுக்கான தனி தரவரிசை பட்டியலில், முதல், 100 இடங்களிலும், 100 முதல், 150 வரையிலான, இரண்டாம் கட்ட பட்டியலிலும், தமிழக அரசின் கலை, அறிவியல் கல்லுாரிகள் எதுவும் இடம் பெறவில்லை
- சுய சிந்தனை வளர்க்கும் கல்விக்கூடங்கள்: எப்படிப்பட்ட ஆளுமைகளை இந்நிறுவனங்கள் தயார் செய்கின்றன? அவர்களுக்கு வரலாறு, இந்தியத்துவம், சூழலியல் போன்ற பல்துறைகளில் நாட்டம் வரவைக்குமாறு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறதா? குடியியல் கொள்கை இந்திய அரசாண்மை என்று சமூகம் சார்ந்தவற்றில் விருப்பம் தரவைக்கிறார்களா?
- வேலைவாய்ப்பு: இதை மட்டுமே அஸ்திவாரமாகக் கொண்டு பல்கலை தரவரிசையை தயார் செய்திருக்கிறார்களோ என நினைக்க வைக்கும் பட்டியல் இது.
- நிரலிக்கான விதிமுறையை எவ்வாறு திட்டமிட்டார்கள்:
1. கல்விமுறை மற்றும் அடிப்படை வளவசதிகள் – 30%
2. ஆராய்ச்சி மற்றும் சீரிய நடைமுறை – 30%
3. பட்டம் பெற்ற பிறகு கிடைக்கும் பயன்கள் – 20%
4. எல்லோரையும் சேர்த்துக் கொள்ளும் ஏற்றுக்கொள்ளும் தன்மை மற்றும் சமூகப் பிணைப்பு – 10%
5. கல்லூரியைக் குறித்த பொது மனநிலை – 10%
- செய்தி: The Hindu | தி இந்து | கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியல் வெளியீடு
- தொடர்புள்ள பதிவுகள்: 37/100 மட்டும்தானாடா? வோத்தாடாய், எவ்ளோ வொளச்சிர்க்கோம் – மிச்சம் கீர 63ஐயும் எங்க்ளுக்கே கொடுங்கடா! | ஒத்திசைவு…
- பிட்ஸ், பிலானி: எல்லாவற்றையும் சொல்லிவிட்டு நான் படித்த பிர்லா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி & சயின்சஸ் பற்றி சொல்லாவிட்டால் ‘மிஸ்டர் ரோபாட்’ தொலைக்காட்சி சீரியலில் பாதியில் “இதுவரை சொன்னதெல்லாம் கற்பனை!” என்று ஏமாற்றுவது போல் ஆகிவிடும். அசலில் கலக்கும் மாணவர்களை உருவாக்குவதற்கும் பேப்பரில் புலிகளை உரும விடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
பொறியியல் – கல்விக்கு அப்பால்: வாசகர் மறுவினை
பொறியியல் – கல்விக்கு அப்பால் கட்டுரை வாசித்தேன். தமிழ் பதிப்புலகில் அதிகம் பேசப்படும் சினிமாவும் அரசியலும் தவிர்த்த கட்டுரை என்ற அளவிலேயே கட்டுரை எடுத்துக் கொண்ட பேசுபொருளும், அதன் தொடர்பான எண்ணங்களும் முக்கியமானவை. மதிப்பெண்களைத் துரத்தும் கல்விமுறை குறித்தும் அசலான ஆய்வுகளை ஊக்குவிக்கும் வழிமுறைகள் குறித்த ஆசிரியரின் கருத்தோடு பெரும்பாலும் ஒத்துப் போகிறேன்.
எனினும், கட்டுரையில் ஆங்காங்கே தடாலடி பொதுமையாக்கங்கள் இருக்கின்றன. தான் அறிந்த சூழலை வைத்து, அதை இந்தியா முழுக்க நீட்டும் சூத்திரங்களும் இருக்கின்றன. இவை இரண்டும் கட்டுரை சொல்லும் கருவிற்கு பங்கம் உண்டாக்குகின்றன. பின்குறிப்பின் மூலம், இந்த வாதத்தை நிராகரித்து முற்றுப்புள்ளியும் வைக்கிறார்.
இப்பொழுது கேள்விகள்:
1. ஆராய்ச்சியைத் தூண்டும் கல்வியை ஊக்குவிக்க மூன்று காரணிகள் இருக்கின்றன: புதிய கண்டுபிடிப்புகளினால் ’செல்வம்’ சேர்க்கும் வாய்ப்பு; தேடலின் முடிவில் கிடைக்கும் சமூக ’அந்தஸ்து’; நாம் வாழும் உலகை மாற்றியமைக்கும் நாகரிகத்தை முன்னெடுத்தோம் என்னும் ஆத்ம ’திருப்தி’. இவற்றை இந்திய அமைப்புகள் தரும் சூழல் நிலவுகிறதா?
2. டிப்லோமா படிப்புகள் – இவை செயல்முறையை முன்னிறுத்தும் கல்வி. அவற்றை பொறியியல் படிப்போடு ஒப்பிட்டுப் பார்க்க இயலுமா?
3. மேற்குலகில் பொறியியல் படிக்காதவர்களும் பொறியியல் சார்ந்த வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இந்தியச் சூழலில் பொறியியல் பட்டயம் என்பது ”இவர் பொறுப்பானவர்; ஒழுங்காக வேலை செய்வார்; எதைக் கொடுத்தாலும் கற்றுக் கொள்வார்.” என்பதற்கான சான்றாதாரமாக விளங்குகிறதா?
4. கணிமொழியியல் – அமெரிக்காவில் கணித்துறை சார்ந்த வேலைக்கு பொறியியல் படிப்பு தேவையாக இருப்பதில்லை. பத்தாவது படித்தவரை வேலைக்கு அமர்த்துகிறார்கள். கணிவிளையாட்டுகளைக் கொண்டு பரிசோதித்து, அதில் திறம் வாய்ந்தவராக இருந்தால் கணினித்துறையில் நல்ல பதவியில் அமர்த்துகிறார்கள். இந்த நிலை இந்தியாவில் உருவாகுமா? (அதாவது பத்தாம் வகுப்புத் தேர்வு முடிந்து, ஓரளவு பக்குவம் வந்தவுடனேயே, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள், மாணவர்களைப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றுவிடும். மூன்று வருடக் கால வேலை+பயிற்சிக்குப் பின் அசல் வேலையில் அமர்த்திக் கொள்வார்கள்.)
5. ஆராய்ச்சிக் கல்வி – இதற்கான சமூக அந்தஸ்து இந்தியாவில் எப்படி இருக்கிறது? நிறுவனத்தில் டைரக்டர், வைஸ் பிரசிடெண்ட் என்றால் அதிக மதிப்பு கிடைக்கிறதே! அதே சமயம் கண்டுபிடிப்புகளை காசாக்கும் சூழல் இந்தியாவில் எப்படி நிலவுகிறது?
6. மேற்குலகில் mentor எனப்படும் வழிகாட்டியை வாழ்நாள் முழுக்க துணையாக வைத்துக் கொள்கிறார்கள். இந்தியச் சூழலில், இதை மாமா, சித்தப்பா போன்ற குடும்ப உறவுகளும் கிராம சமூகங்களும் நிரப்பின. இன்றைய நகரமயமாக்கப்பட்ட நிலையில் உற்றாரின் ஆலோசனைகளும் கேட்பதில்லை. அண்டை வீட்டாரும் சொந்த விஷயங்களில் கருத்துச் சொல்வதை அந்தரங்கத்தின் குறுக்கீடாகவே எடுத்துக் கொள்கிறோம். இந்த வழித்துணைகளின்ம் உதவி கிடைத்தால் ஒவ்வொருவரின் தனித்தன்மையும் ஆர்வமும் தூண்டப் பெற்று ஆராய்ச்சிப் பாதைகளில் தெளிவு கிடைக்குமோ?
7. இதன் தொடர்ச்சியாக பத்ரி சேஷாத்ரி எழுதிய ”தமிழகத்தின் பல பொறியியல் கல்லூரிகளில் ஐ.டி என்ற பாடப்பிரிவை நீக்கியிருக்கிறார்கள்”, த.நி. ரிஷிகேஷ் ராகவேந்திரன் எழுதிய “தரகர், அலுவலர்,வேலை பெற்றுத் தருபவர் தேவை- ஆசிரியர்கள் தேவையில்லை” வாசிக்கப் பெற்றேன். தங்கள் கட்டுரையைப் போன்றே பெங்களூரூ சாணக்கியன் எழுதிய ‘வேலை’ கடிதம் வாசித்தீர்களா?
8. ஜெயமோகன் தளத்தில் கல்வியைக் குறித்தும் பாடத்திட்டத்தின் தேர்வுமுறைகள் குறித்தும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். அவற்றில் அவர் குழந்தைகளுக்குக் கொடுக்கும் சுதந்திரத்தையும் தான் பழகிய ஆசிரியர்களையும் கல்வி குறித்த செய்திகளையும் அலசுகிறார். அதில் குறிப்பாக பெற்றொரின் பங்கு குறித்து நிறைய எழுதியிருக்கிறார். நம்முடைய பெற்றோர் இட்ட கட்டளைக்குப் பணிந்து நடப்பது போல், பொறியியல் கல்விக்கு அப்புறமும் மேலாளரின் கட்டளைக்கு அடிபணிய விழைகிறோமா?
9. வேலைக்குப் புதியதாகச் சேரும் எவரையும் எந்த நிறுவனமும் உடனடியாக பொறுப்புகளை சுமத்துவதில்லை. அதிலும் கல்லூரியில் இருந்து புத்தம்புதிதாக வருபவரை இரண்டு வாரங்களுக்காவது தனிப் பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். தங்கள் அலுவலில் பயன்படுத்தும் நுட்பங்களையும் வழிமுறைகளையும் விவரமாகக் கற்றுத் தருகிறார்கள். அதன் பிறகு இரண்டு மாதங்களுக்காவது, பரீட்சார்த்தமான வேலைகளில் மட்டுமே ஈடுபடுத்துகிறார்கள். மூன்று மாதம் ஆன் பிற்பாடு, நிஜ வேலைக்குள் நுழையும்போது துணை நிற்க அனுபவசாலி ஒருவரை கூடவே கண்காணிப்பாக வைக்கிறார்கள். இதை முதலீடாகக் கருதுகிறார்கள். இந்தியாவின் ஆய்வுத்துறையில் இவ்வாறு ஒவ்வொரு ஆராய்ச்சியாளருக்கும் தனிப்பட்ட கவனம் வழங்க பொருளும் மனிதவளமும் இருக்கின்றதா?
10. வாழ்க்கை ஆதாரமாக கல்வியும், அந்தக் கல்வியினால் கிடைக்கும் வேலையும் அமைந்திருக்கிறது. மேற்குலகில் இருபதில் இருந்து முப்பது வரை பரீட்சார்த்தமாக வாழ்வதை நடைமுறையாக வைத்திருக்கின்றனர். அதாவது, தனக்குப் பிடித்த விஷயத்தில் இளவயதில் தீவிரமாக இயங்குவது; அதில் வெற்றி பெற்றால் கோடிகளை அள்ளுவது; தோல்வி அடைந்தால் மீண்டும் கல்லூரிக்குச் சென்று வேறொரு பாதையைத் தேர்ந்தெடுப்பது. – ஒரு முறையோ, பல முறையோ கீழே விழுந்தால், அஞ்சாமல், கைதூக்கி ஊக்கமும் மீண்டும் நிதியும் கொடுக்கும் சமூக அமைப்பு இந்தியாவில் வர வேண்டுமா?
பின்னூட்டமொன்றை இடுக
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Analysis, ஆசிரியர், ஆய்வு, ஆராய்ச்சி, கல்வி, சம்பளம், சொல்வனம், ஜெயமோகன், திறமை, படிப்பு, பதில், பொறியியல், மாணவன், வேலை, Colleges, Comments, Compensation, Education, Employment, Engg, Engineering, Feedback, Jobs, Opportunities, Professors, Reply, Research, salary, Students, Study, Teachers, Tech, Technology, Thesis, University