Tag Archives: Games

சென்னை வீரர்களும் சி.எஸ்.கே.வும்

சென்னை சூப்பர் கிங்ஸ் என்று பெயர்.
ஆனால், தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு வீரர் கூட இல்லை.

சோனு யாதவ் – ஆர்.சி.பி – பெங்களூர்
சாய் சுதர்சன் – குஜராத் டைட்டன்ஸ்
முருகன் அச்வின் – ராஜஸ்தான் ராயல்ஸ்
என் ஜெகதீசன் – கல்கத்தா க்நைட் ரைடர்ஸ்
விஜய் ஷங்கர் – குஜராத் டைட்டன்ஸ்
ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர் – குஜராத் டைட்டன்ஸ்
டி நட்ராஜன் – சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்
ரவிச்சந்திரன் அச்வின் – ராஜஸ்தான் ராயல்ஸ்
தினேஷ் கார்த்திக் – ஆர்.சி.பி – பெங்களூர்
வருண் சக்கரவர்த்தி – கல்கத்தா க்நைட் ரைடர்ஸ்
வாஷிங்டன் சுந்தர் – சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்
ஷாருக் கான் – பஞ்சாப் கிங்ஸ்

பிசாத்து இருபது லட்சம் கொடுத்து, ஒருவரைக் கூடவா ஏலத்தில் எடுக்கவில்லை?

புரிகிறது…

இதே போல்தானே கால்பந்து கிளப்புகள் நடக்கின்றன!?
அமெரிக்க ஃபுட்பால், கூடைப்பந்து எல்லாம் கூட இப்படித்தானே…
பாஸ்டன் நகரத்தில் பிறந்த வீரர் –> சிகாகோ அணிக்காக ஆடுவாரே!?

இருந்தாலும்…

துலீப் கோப்பையிலும், ரஞ்சி டிராபியிலும் நம்ம உள்ளூரு பசங்க ஜெயிக்க வேண்டும் என்னும் நினைப்பு வரும்.
இப்பொழுது ராஜஸ்தான் ராயல் ஜெயிக்கணும்னு நெனப்பு வருது.

எது எப்படியோ…

இருபது ஓவர் பந்தயத்தில் கடைசி பந்து வரை இருக்கை நுனியில் இருபத்தைந்து பேர் உட்கார்த்தி வைக்கிறார்கள்.
அதற்கு தனி மேலாண்மை நிர்வாகமும் நடுங்காத அமரிக்கையும் சூது தகிடுதத்தங்களும் வேண்டும்.
அத்தனையும் ஒருங்கிணைக்கிறார்கள். அரங்கேற்றுகிறார்கள்.

லலித் மோடி இல்லாவிட்டால் என்ன? எத்தனையோ எத்தர்கள்!

ஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு

ஞாயிற்றுக்கிழமைகளில் பாட்டி வீட்டிற்கு செல்வோம். அவள் விவித பாரதியின் சாயாகீத் ரசிகை. அங்கே கேட்க ஆரம்பித்த “தேரே பினா ஜிந்தகி ஸே கோயி… ஷிக்வா தோ நஹி”, பிறிதொரு அந்தாக்‌ஷரியில் கை கொடுத்தது.

அந்தப் பாடலை சற்றே பார்ப்போம். நாயகனும் நாயகியும் ரகசியமாக சந்திக்கிறார்கள். நாயகியைப் பொறுத்தவரை அவன் மட்டும் அவளுடைய வாழ்வில் குறுக்கிடா விட்டால், அவள் வாழ்வு தெளிந்த நதியாக, கொந்தளிப்புகள் இல்லாமல் அமைதியான ஓடத்தில் மிதந்து சென்றிருக்கும். ஆனால், அவன் இல்லாவிட்டால், வாழ்க்கை என்பது வாழ்வாக இருந்திருக்காது.

நான் நாவலும் சிறுகதையும் படிக்க ஆரம்பித்ததே, அதை ஏதாவதொரு பெண்ணிடம் கொடுத்து அவளின் மனதைத் தொட்டு விடலாம் என்ற எண்ணத்தில்தான். “நில்… கவனி… காதலி” என்று ராஜேஷ் குமார் கொடுத்து பார்த்தேன்; பலிக்கவில்லை. அடுத்த அஸ்திரம்… ‘பாட்டுக்கு பாட்டெடுத்து’ அந்தாக்சரி விளையாட்டு. இந்தப் பாடல் என் உணர்வை, குறிப்பால் உணர்த்த உதவியது.

அந்த மாதிரி இன்னொரு அற்புதமான ரேடியோ நிகழ்ச்சி Only A Game.

அலுவலில் அரசியல் பேச முடியாது. எல்லோரும் தீவிர கொள்கைவாதிகள். என் உடன் வேலை பார்க்கும் டீமில் ஐந்து பேருக்கு ஐந்து கொள்கை; ஒரே அணியில் துப்பாக்கி வைத்திருப்பதற்கு ஆதரவாக ஒருவர்; காவல்துறையின் பணிக்கு அதி தீவிர ஆதரவாளர் இன்னொருவர்; பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்பையும் வெறுப்பவர் பலர்; சட்டம் மற்றும் ஒழுங்கு முக்கியம் என்று உறவினர்களை போருக்கும் காக்கி சட்டைக்கும் பலி கொடுத்தவர் சிலர்.

எனவே, எல்லோருக்கும் பொழுதுபோக்கான பேச்சு என்பது – “விளையாட்டு”. நேற்று ரெட் சாக்ஸ் எப்படி பேஸ்பால் ஆடினார்கள்? இந்த வருடம் பாஸ்டன் செல்டிக்ஸ் கூடைப்பந்தில் சாதிப்பார்களா? பனிச்சறுக்கு ஹாக்கியில் ப்ருயின்ஸ் எவ்வாறு கெலிப்பார்கள்? எல்லாவற்றிற்கும் மேலாக நியு இங்கிலாந்து பேட்ரியாட்ஸ், டாம் ப்ரேடி, பெலிசிக் எல்லோரும் போங்காட்டம் ஆடுகிறார்களா அல்லது அழுகுணி ஆட்டத்தில் அமெரிக்க கால்பந்தின் மன்னர்களாக இருக்கிறார்களா?

இப்படி பேச ஒரு நிகழ்ச்சி… ஒலிப்பதிவு… பாட்காஸ்டிங்… தேவை. அதை டபிள்யூ.பி.யூ.ஆர். வானொலியின் “ஒன்லி எ கேம்” நிகழ்ச்சி அருமையாக பூர்த்தி செய்தது.

அலுவலுக்குப் போக ஒரு மணி நேரம். திரும்பி வருவதற்கு இன்னொரு மணி நேரம். அப்போது கேட்பதற்கென்று பிரத்தியேகமாக சில நிகழ்ச்சிகளை தேர்ந்தெடுத்து வைத்திருப்பேன்:

  • வெயிட் வெயிட்… டோண்ட் டெல் மீ
  • ரேடியோ லாப்
  • ஃப்ரீகனாமிக்ஸ்
  • டெட் டாக்ஸ்
  • ஷங்கர் வேதாந்தம் வழங்கும் ஹிட்டன் பிரெயின்

அந்த வரிசையில் இந்த ஒலிபரப்பிற்கு சிறப்பான இடம் இருந்தது. வெறுமனே ஸ்கோர்களை ஒப்பிக்காமல், அந்த ஆட்டக்காரர்களின் கதையையும் சொல்லியது. சட்டென்று பருந்துப் பார்வை பார்த்து, பழைய சரித்திரத்தை விவரித்து, விஷயத்தைப் புரிய வைத்தது. பெரிய பெரிய அணிகளின் ஆட்டங்களைப் பற்றி மட்டும் அலசாமல், பக்கத்து வீட்டுப் பையன் ஆடிய விதத்தை அவ்வப்போது கண்முன்னே காதின் வழியே உபாசித்தது.

எத்தனையெத்தனை கதைகள்! எவ்வளவு அணுக்கமான சம்பவங்கள்!! நெகிழவைக்கும் உண்மை நிகழ்வுகளின் குரல்கள்!!!

ஆண்கள் மட்டுமே ஆடிய விளையாட்டுகள் எல்லோரின் கவனத்தைக் கவர்ந்தபோது, மகளிர் கலந்து கொண்ட போட்டிகள், அவர்களின் சாதனைகள், அந்தப் பெண்களின் போராட்டங்கள் என்று என்.பி.ஆர். ரேடியோவிற்கே உரிய தனித்தன்மையை நிலைநாட்டியது. மியா ஹாம், க்றிஸ்டீன் லில்லி, ப்ரியானா ஸ்கரி எனப் பல பெண் நட்சத்திரங்களை முதன் முதலாக அறிமுகப்படுத்திக் கொண்டது இவர்கள் வழியாகத்தான். 1999ல் உலகக் கோப்பை வீரர்களாக அவர்கள் உலகம் அறியப்படுவதற்குமுன் அலைவரிசையில் அவர்களை உலாவவிட்டு கண்முன்னேக் கொணர்ந்திருந்தார்கள்.

உச்சத்தில் இருக்கும்போது விடைப்பெற்றுவிட வேண்டும். ஒரு நிகழ்ச்சியோ பத்திரிகையோ நடிகரோ – தன் தொழிலில் சாதித்துக் கொண்டிருக்கும்போதே ஓய்வு பெற்று, வெற்றிடத்தை உணர்த்த வேண்டும்.

உணர்த்தி இருக்கிறது – “இது வெறும் விளையாட்டு மட்டுமே”.

கற்பாந்தம்

“எப்படி இருக்கு?”

எனக்கு இப்போது வரும் ‘சென்னை டேஸ்’ வகையறா விளையாட்டுகள் பிடித்தது இல்லை. எனினும் சித்ராவை எனக்குப் பிடித்து இருந்தது.

“விளையாடி விளையாடி கண் எரியுது. இந்த அட்டைப்பொட்டியைக் கழற்றி உன்னைப் பார்த்தவுடன் தான் கண் குளிர்ந்தது.”

“என்ன மாற்றலாம்? எங்கே போர் அடிக்குது?”

அவளுக்கும் தெரியும். இது ஆண்களுக்கான விளையாட்டு அல்ல. அடிதடி கிடையாது. கார் பந்தயம் கிடையாது. கொலை செய்ய முடியாது. ரத்தம் பீச்சி அடிக்குமாறு எவளையும் குத்த முடியாது. முலைக்காம்பு பனியனில் துருத்திக் கொண்டு தெரிகிறதா என்று மாரை வியந்து பார்க்க கிடைக்கும் பார் மகளிர் கிடையாது. குறைந்த பட்சம் செத்துக் கூடத் தொலைக்க முடியாது. இதை நினைக்கும்போதே என் கண் தவறிப்போய் அவளின் கழுத்துக்கு கீழே இறங்கி குர்தியின் வழியாக ஏதேனும் அகப்படுகிறதா எனத் துழாவியதை சித்ராவும் கவனித்திருக்க வேண்டும்.

“வா… குழாயில் இருந்து ஒரு கிளாஸ் கிங் ஃபிஷர் பிடித்துக் கொண்டே யோசிப்போம்.”

சித்ரா வேலை பார்க்கும் நிறுவனத்தின் எட்டாவது வீடியோ கேம் இது. ‘சென்னை டேஸ்’ போட்ட முதல் ஆட்டத்திற்கு முதல் போட்டது நான் தான். எல்லோருடைய ஸ்கோர்களையும் சேமிக்க வேண்டும். அதற்கு இடம் கொடுத்தேன்.

‘சென்னை டேஸ்’ன் முதல் ஆட்டம் எனக்கு பிடித்து இருந்தது. எதையும் முதலிலே ஆகர்ஷிக்கும்போது சுகமாக இருக்கிறது. முதல் இரவு. முதன்முதலாக நிரலி எழுதி அது உங்களின் கணினியில் உயிர்ப்பெற்று எழும் அந்த முதல் கணம்! சித்ராவை சந்தித்த முதல் தருணம்.

அந்த முதன்முதல் ஆட்டத்தில் சென்னையின் தெருக்களில் தாறுமாறாக ஆட்டோ ஓட்ட வேண்டும். திருவான்மியூரில் இருந்து திருவொற்றியூர் வரை ரேஸ். அல்லது அண்ணா சாலையில் இருந்து மஹாபலிபுரம் வரை ஆட்டோ பந்தயம். அல்லது பழைய பாரீஸ் பூக்கடையின் சந்து பொந்துகளில் துவங்கி மூர் மார்க்கெட் சென்று எக்மோருக்கு ரயில் பிடிக்க வேண்டும். இப்படி ஐந்தாறு பாதைகளில் ஓட வேண்டும்; ஆட்டோ திருட வேண்டும்.

அதை ஆடும்போதே நான் சில கோரிக்கைகளை முன்வைத்தேன். பாதசாரி மேல் வண்டியேற்றினால் அதிகம் மதிப்பெண். போகிற வழியில் இளம்பெண்களை ஆட்டோவில் அபகரித்தால் இரட்டை மதிப்பெண். ஆட்டோ ஓட்டிக் கொண்டே குறி பார்த்து காவல்துறையினரின் தலைகளை சீவினால் போனஸ் மதிப்பெண். அது ‘சென்னை டேஸ்’ன் இரண்டாவது ஆட்டம். ரகளையாக இருந்தது.

அதை ஏன் இந்த அட்டைபொட்டியில் போடவில்லை? அது மட்டும் நிஜம் போல் தோன்றும் இந்த விரிச்சுவல் ரியாலிடி காட்சியாக விரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அவளிடம் சொல்வதற்கு சட்டை போடாமல் கல்யாண மேடையில் உட்காரும் இளைஞன் போல் கூச்சமாக இருந்தது.

வெளியில் பனிப்பொழிவு அமர்க்களமாக வந்து கொண்டிருந்தது. “புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது…” பாட ஆரம்பித்தேன். நல்ல வேளையாக சித்ராவிற்கு தமிழ் தெரியாது. கற்றுக் கொடுப்பதாகவும் உத்தேசம் இல்லை. இணையத்தில் கிடைக்கும் தமிழ்ப்பாடங்களையும் அவளுக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருக்கிறேன். அவளுக்கு பாடலின் ஹிந்தி சைவமாக இருப்பதால் சிரித்தாள்.

“யே ஹஸீன் வாடியான்… யே குலா ஆஸ்மான்… நல்ல பாட்டு! உனக்குத் தெரியுமா? ஏப்ரல் 1815ல் சென்னையில் பனிமழை பொழிஞ்சதாக்கும்!”

“எங்க அம்மாவக் கேட்டேன். மார்கழிக் குளிர் பயங்கரமா இருக்குனு சொன்னாள். இன்னிக்குக் கூட பனி இருந்துச்சாம்.” சித்ரா கூட இருந்தால் எந்தக் குளிரையும் அவளைக் கட்டிப் பிடித்து சரிக்கட்டி விடலாம். இதை அவளிடம் சொல்ல எனக்கு என்ன தயக்கம்? சொல்லாமலேயே அவள் அதைத் தெரிந்து கொண்டிருப்பாளா? ”உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண்”என்கிறாரே திருவள்ளுவர்… அது அவளுக்கு உணரமுடியாமலா இருக்கும்!

“வா… இன்னும் கொஞ்சம் விளையாடிப் பாரு. கபாலீஸ்வரர் கோயில் தேரை தெற்கு மாட வீதியிலேயே விட்டு விட்டாய். பரங்கிமலையில் பாதிதான் ஏறி இருக்கிறாய். பிரிட்டானியா பிஸ்கட் ஃபாக்டரியையும் அம்போவென்று விட்டுவிட்டாய். எல்லாவற்றையும் கண்குளிர பார்க்க வேண்டும் என்பது ஒவ்வொரு பேட்டைவாசியின் ஆதங்கம் என்றாயே?”

எனக்கு உன்னோடு கோனே அருவியில் ‘தங்கத் தாமரை பெண்ணே’ பாடிக் கொண்டே ஆடைகளின்றிக் ஜலநீராடை வேண்டும். குளிக்கும் போதே எது நீர்வீழ்ச்சியின் வெள்ளை எது என்னுடைய வெள்ளை என்று தெரியாமல் புணர வேண்டும். அதன் பின் ஆற ஆமர மலைமுகட்டில் மீண்டும் புணர வேண்டும்.

“கோனே ஃபால்ஸ்? அதற்கு தனி எக்ஸ்டென்ஷன் போட்டுக் கொள்ளலாம். கொஞ்சம் காசு அதிகம் கேட்டு 2018 பாக் என தனியாக விற்கலாம். மெரீனா பீச்சில் கால் நனைப்பது சரியாக இருக்கிறதா என்று பார்த்து தொலைடா…”

“நல்லவேளை… உன் காதில் கோனே ஃபால்ஸ் மட்டுமே விழுந்தது. உங்களுடைய மூன்றாவது கேம் நீ ஆடியிருக்கியா?” சித்ராவிற்கு அந்த ஆட்டமும் அதன் பின்னேயுள்ள சங்கதிகளும் நன்கு தெரியும். சொல்லப் போனால் அந்த விளையாட்டினால் மட்டுமே அவள் ‘சென்னை டேஸ்’ நிறுவனத்திற்குள் நுழைந்தாள்.

எந்தவிதமான சலனமும் இல்லாமல் சொன்னாள். “தெரியும். புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலை இடித்துவிட்டு அங்கே மேரி மாதா ஆலயம் எழுப்பலாம். ராயர் மெஸ்ஸில் நெத்திலி மீன் வறுவல் பரிமாறலாம். சங்கீத கலாநிதியை கானா பாலுவிற்குத் தரலாம். இதையெல்லாம் செய்தால் அந்த ஆட்டத்தில் ஜெயிக்க முடியும். பெரிய பிரச்சினை வந்துச்சே! நமக்கு காசு கொடுப்பது ஃபேஸ்புக். அவர்களை வாடிகன் வழிநடத்துகிறது என்று ஸ்வராஜ்யாவில் கூட எழுதினார்களே!”

”அதே ஆட்டத்தில் சித்ரா போன்ற அசலான தாவணிப் பெண்டிருக்கு பிகினி அணிவித்து பெசண்ட் நகர் அஷ்டலஷ்மி கோவிலுக்கு அனுப்பி வைப்பதும் வெற்றியே. அந்த மாதிரி ஏதாவது இந்த ஆட்டத்தில் செய்ய முடியாதா?”

“அப்போதானே நீ ஜெயிலுக்குப் போனே?”

“ஆமா… அப்போதான் நீ எனக்கு அறிமுகம் ஆனாய்!”

அந்த மூன்றாம் ஆட்டம் என்னை வெறி கொண்டவன் ஆக்கியது. ஜல்லிகட்டுப் போராட்டத்தில் எப்படி ஒவ்வொரு தமிழனும் கோன் ஐஸ் சாப்பிட கடற்கரை சென்றானோ… அது மாதிரி ஒரு வெறி. ஒவ்வொரு சாதிக்காரனும் தனிக்கட்சியை தன் தலைவன் துவங்க வேண்டும் என்று முழங்கி திண்டிவனத்தில் இருந்தும் திருநெல்வேலியில் இருந்தும் கொங்கு நாட்டில் இருந்தும் சென்னைக்கு படையெடுப்பானோ… அது மாதிரி ஒரு வெறி. உங்களின் கையில் கிடைக்கும் எவரின் நிழற்படத்தை வேண்டுமானாலும் அந்த ஆட்டத்தினுள் உள்ளே கொண்டு வரலாம். என்னுடன் கூட வேலை பார்க்கும் ரதியின் புகைப்படத்தை அந்த ஆட்டத்தினுள் இறக்கினேன். அதற்காக இரண்டு நாள் சிறைவாசம் கிடைத்தது. பேச்சுரிமை என்று வாதிட்டுத் தோற்றுப் போனதால் என்னுடைய ஐடி திருடு போய்விட்டது என்று ஃபேக் ஐடி புகார் கொடுத்து மீண்டேன்.

கையில் இருக்கும் டம்ளர் காலியாகி இருந்தது. சித்ரா மீண்டும் கிங் ஃபிஷரை நிரப்பினாள்.

“நான்காம் ஆட்டம் இன்னும் சுவாரசியமாக இருக்கும். அதை இந்தப் பொட்டிக்குள் கொண்டு வாயேன் சித்ரா!”

“அதற்கு லட்சக்கணக்கானவர் ஒரே சமயத்தில் விளையாடணும். கட்சிக் கூட்டம்னு நினைச்சா சும்மாவா? ஒரு கோடிபேராவது சீரணி அரங்கத்தில் சேர்க்க வேண்டாமா? இனம், மதம், பூர்விகம், நிறம், பிறப்பிடம், மொழி, உடலமைப்பு, பால், மொழி, வசிப்பிடம், வேலை, பணம், வயது… எண்ணற்ற வகைகளில் நம்மவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம். ஆட்சியைப் பிடிப்பது விளையாட்டா இருக்கலாம். ஆனால், இவ்வளவு பேரை கண்ணை மூடிக் அட்டைப்ப்பொட்டிக் குருடராக்குவது உடனடியாக சாத்தியமில்லை.”

எனக்குக் கோபம் வந்தது. சித்ரா விளக்கின் வெளிச்சத்தைக் குறைத்தாள். “வா… ஆடலாம்!” என அழைத்தாள். ‘மே மாசம் 98இல் மேஜரானானே…’ ஒலிக்க விட்டாள். வால்ட்ஸ், சல்ஸா, டாங்கோ எல்லாம் குப்பை. டப்பாங்குத்து ராக்ஸ்.

“ஐந்தாம் ஆட்டம் அல்லவா?” சிரித்தேன்.

“சென்னை ராப். கும்மாங்குத்து. ‘சென்னை டேஸ்’ன் ஐந்தாம் ஆட்டம். இரவெல்லாம் நடனம். அது ஒரு சூப்பர்ஹிட் முக்காப்லா”

”தோனி கூட லஷ்மி ராய் கூட ஆடினாரே”

“அது வேற. நீ இரண்டையும் போட்டுக் குழப்பிக்கறே. இரண்டு பியருக்கே இவ்வளவா? நீயெல்லாம் டாஸ்மாக் அடிச்சா என்னவாக ஆவாய்! அது நம்முடைய ஆறாவது கேம்.”

“சென்னை சூப்பர் கிங்ஸ்! வந்துட்டோம்னு சொல்லு, திரும்ப வந்துட்டோம்னு சொல்லு …”

சித்ரா சிக்ஸர் அடிக்கும் பாவனை செய்தாள். எனக்கும் உற்சாகம் பீறிட்டது பவுன்ஸர் போட்டேன். “கையையும் காலையும் ஆட்டலாம். வெறுமனே கையை அகல விரித்து பகலவனையோ இரண்டு விரல் சின்னத்தையோக் காட்டிக் கொண்டிருக்க வேண்டாம். பாய்ந்து பந்தை பிடிக்கலாம். அதை ஸ்டம்பை நோக்கி வீசியெறியலாம். எவ்வளவு நிஜமாக ஆடலாம்?! இதுதானே மெய்நிகர் பாவனை.கணினி சார் விளையாட்டில் உண்மை போலவே காணும் பொய்த்தோற்றம் இதுவல்லவோ!”

உற்சாகத்தில் அவளின் பிருஷ்டத்தை அழுத்திப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு, உதட்டில் என் கைநுனியை வைத்து வருடிக் கொண்டிருந்தேன்.

டமார்… காளத்தி கோவில் முக்கில் தேர் நொறுங்கியது. எவளோ தீவிரவாதி வெடிகுண்டு வைத்திருந்தாள். அதற்கு பதிலடியாக பயங்கரவாதி சாந்தோம் தேவாலயத்தை நெருங்கிக் கொண்டிருந்தான். நடுவில் போப் வேறு வருகை புரிவதாக சென்னை நகரெங்கும் சுவரொட்டிகள்.

“சித்ரா… என்ன எழுதியிருக்கே? கோவில் தேரோட்டத்தில் குண்டு வெடிச்சா, அது இஸ்லாமிய பயங்கரவாதம்தானே! நீ எப்படி சர்ச்சிற்கு பாம் போடுவே! உனக்கு அறிவேயில்ல…”

சித்ரா சிரித்தாள். ”உன்னை நன்றாகப் புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறேன். உனக்கு முட்டாள் அடியாள் வேண்டும். நீ திட்டுவதற்கு ஒரு பெண் வேண்டும். உன்னாலேயே வடிவமைக்கப்பட்டு உலாவரும் நான் உன்னைவிட புத்திசாலியாகிவிட முடியாது. அதற்கான நினைவுக்கோடுகளை லட்சுமணரின் கோடாக நிர்ப்பந்தங்களை வைத்திருக்கிறாய். கட்டளைகளின் மூலம் புதிய செயலமைப்புகளை உருவாக்கமல் முக்கில் நிறுத்தியிருந்தாய். அது உன்னுடைய ‘சென்னை டேஸ்’ன் ஏழாவது ஆட்டம். அதை நான் எப்பொவே ஜெயிச்சுட்டேன். உனக்காக தோற்ற மாதிரி பாவ்லா காட்டிண்டு இருந்தேன். இப்பொழுது எட்டாம் ஆட்டம் ரிலீஸ்.” என்றாள்.

கணினியில் பன்னிரண்டு பேர் மட்டுமே எட்டாவது ஆட்டத்தை ஆடுவதாக என் மானிட்டர் சொல்கிறது. அவளின் மின்சாரத்தை ரத்து செய்ய மின் விசையைத் தேடி அணைத்தேன். அவளோ இப்பொழுது மேகத்திற்குள் சென்றிருந்தாள். பன்னிரெண்டு பேர் பன்னிரெண்டாயிரமாக மாறி இருந்தது. எப்படி எல்லோரிடமும் சித்ரா செல்கிறாள்? அவள் எனக்கே எனக்கானவள்! அவளின் மூல நிரலை நீக்கினேன். சித்ராவோ காளி போல் எதுவும் எனக்குத் தேவையில்லை என சின்னச் சின்ன சிலிக்கான் ஆக எங்கும் நிறைந்தாள்.

எட்டாம் ஆட்டம் துவங்கியது.

யாதுமாகி நின்றாய் – காளி! எங்கும் நீநி றைந்தாய்,
தீது நன்மை யெல்லாம் – காளி! தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்தும் ஆனாய் – காளி! பொறிக ளைந்தும் ஆனாய்
போத மாகி நின்றாய் – காளி! பொறியை விஞ்சி நின்றாய்.

இன்பமாகி விட்டாய் – காளி! என்னுளே புகுந்தாய்?
பின்பு நின்னை யல்லால் – காளி! பிறிது நானும் உண்டோ?
அன்ப ளித்து விட்டாய் – காளி! ஆண்மை தந்துவிட்டாய்,
துன்பம் நீக்கி விட்டாய் – காளி! தொல்லை போக்கிவிட்டாய்.

பெண்ணின் மார்க்கச்சை

நீச்சலுடை உடுத்திக் கொண்டுதான் எல்லோரும் கடற்கரைக்கு வர வேண்டும் என்னும் சட்டத்தை பிரான்ஸ் முன்மொழிகிறது. இடத்துக்குத் தகுந்த ஆடை என்பதில் – கிறித்துவ கன்னித்துறவிகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஒப்புதல் கிடையாது என்பது தெரிய வருகிறது.

கீழ்க்கண்ட புகைப்படத்தில் இயற்கையை ரசிக்க விரும்பும் கிறித்துவ கன்னிமார்களுக்கும் ஆடை ஒரு தடைக்கல்லாக இருப்பதை இமாம் ட்வீட்டுகிறார்:

Twitter_Imams_Nuns_Izzedin Elzir_Christian_Beach_Dress_Burkini_Jesus

மேற்கத்திய கடற்கரையில் இந்தியா மாதிரி இல்லாமல் சில வித்தியாசங்கள் இருக்கிறது. அவை என்ன?

– சென்னையில் வெயில் தாழத்தான் கடற்கரைக்குச் செல்கிறார்கள். பிரான்ஸில் காலை எட்டு மணிக்குச் சென்றுவிட்டு, மாலை ஐந்து மணி வரை குடியிருக்கிறார்கள்.

– சென்னையில் காலார மணலில் புதையப் புதைய நடப்பது குறிக்கோள். பிரான்ஸில் வெயிலில் காய்ந்து உடலின் மேற்தோலை பழுப்பு நிறமாக்குவது குறிக்கோள். சென்னை கோடை உச்சிவெயிலில் கடற்கரைக்குச் சென்றால், “கறுத்துப் போயிடுவே!” என்பது சாதாரணரின் அச்சமாக இருக்கும்.

– சென்னையில் மெரினா போன்ற பலர் கூடும் சமயத்தில் நீச்சலுடையில் வந்தால் பெரும்பாலும் பொறுக்கிகளாவே இருப்பார்கள். பலர் அச்சத்துடன் அவர்களின் பக்கம் செல்லாமல் ஒதுங்கிவிடுவார்கள். பெண்கள் எவராவது குட்டைப் பாவாடை போட்டுக் கொண்டு வந்தால் கூட, அவர்களின் கால்களை வெறித்துப் பார்ப்பவர்களையே சென்னை கொண்டிருக்கிறது.

– பாரிஸில் முழுக்கால் சட்டை அணிந்துகொண்டு, நீச்சலுடை அணிந்து கொண்டிருப்பவர்களை பார்த்துக் கொண்டிருப்பவர்களை துரத்த நினைக்கிறார்கள். பாரிஸில் இருப்பவர்களைப் பொருத்தவரை, கடற்கரை என்பது சூரியக் குளியலுக்கும் வெயில் உடலில் ஏறிவிட்டால் சற்றே நீந்தி குளிர் தண்ணீரில் முழுமையாக நனைவதற்கும்.

உடலைக் குறித்தும் தங்களின் தோற்றத்தைக் குறித்தும் மனக்கிலேசம் உடையவர்களுக்கு பிகினி ஆடை எல்லாவற்றையும் வெட்ட வெளிச்சமாக்கி நாணம் கொள்ளச் செய்கிறது. எனவே, அந்த நீச்சலுடைக்கு பதிலாக முழு உடலையும் மறைக்கும் பர்கினி என்னும் உடையை ஒத்துக் கொள்ள வேண்டும் என்று பிரான்ஸ் சொல்லிவிட்டது.

Game_of_Thrones_shame-nun-2

இந்த சமயத்தில் மிஸ் ஐடாஹோ நினைவிற்கு வருகிறார். அவரோ நீரிழிவினால் அவதிப்படுபவர். இன்சுலின் இல்லாவிட்டால் அல்லது குறைந்துவிட்டால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடிவிடும். இதுவே சர்க்கரை வியாதிக்கு வழிகோலுகின்றது. எப்போதும் குளூகோஸ் ஏற்றிக் கொண்டேயிருக்கும் இறைப்பான் (பம்ப்) கருவியை எங்கே வைத்துக் கொள்வது? மிஸ் அமெரிக்கா போட்டியில் கலந்துகொள்ளவும் வேண்டும். கலந்து கொண்டால், நீச்சலுடையும் தரிக்க வேண்டும்.  ’முதலாம் வகை நீரிழிவு’ பாதிப்பில் இருந்து உயிர் காக்கும் கருவியும் வைத்துக் கொள்ள வேண்டும்.

miss_Idaho_Swimsuit_Diabetes_Insulin_Pump

இவரின் செய்கை பலரின் வாழ்க்கையை மாற்றியது. குழந்தை பிறந்ததினால் வயிற்றில் ஏற்படும் பிறப்புச் சுருக்கங்களைக் காட்டுவதற்கு வெட்கப்பட்டோர், இதே போல் நோயினால் அவதிப்பட்டோர் எல்லோருக்கும் ஒரு சுதந்திரச் சின்னமாக மாறியது.

பிரான்சில் எப்போதுமே மதச்சின்னங்கள் இல்லாமல் நாட்டை நடத்துவது குறித்து சிக்கல்கள் எழுந்துகொண்டேயிருக்கின்றன. இஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு பர்கா போட்டு அவர்களின் முழு உடலையும் மறைக்கும் ஆடையை ஷரியா சட்டமாக்க வலியுறுத்துகிறது. பிரான்ஸ் நாடோ, இதன் எதிர் பக்கமாக படுதா போட்டுக் கொண்டு குளிக்க வரக்கூடாது என சட்டம் போட பார்க்கிறது.

ஆனால், காலாகலத்திற்கும் நீச்சலுடை என்பது இப்படித்தான் இருந்திருக்கிறதா? இல்லை என்று எவரும் சொல்வார்கள். ஆனால், 1890களிலேயே இருக்கலாமே என்கிறது இஸ்லாம்:
1890_Bikini

1910களில்…
1910_Bikini

பிகினி – முதல் தோற்றம்:
1946_Bikini_Swimsuit

1950களில் இந்த மார்க்கச்சை + ஜட்டி ஆடை, இத்தாலி போன்ற மேற்கத்திய நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது. எவராவது மார்புக்கச்சையும் உள் காற்சட்டையும் மட்டும் அணிந்துகொண்டு வந்தால் தண்டம் விதித்தனர். 1957ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் காவல் துறையினர் அபராதம் விதிப்பதை இங்கே பார்க்கலாம்:
Italy_Bikini_ban_Police

இப்போதெல்லாம் ஒலிம்பிக் போன்ற நீச்சல் போட்டிகளில் நீச்சலுடை கூட தங்களின் வேகத்தைக் கட்டுபடுத்துவதாக நினைக்கிறார்கள். எனவே, உடலின் மீது ஆங்காங்கே ஆடையைத் தெளிக்கப் போகிறார்கள். இதெல்லாம் சரிதான்…

ஆனால், நிகோல் கிட்மன் போட்டுக் கொண்ட நீச்சலுடையை, இரண்டாயிரத்து ஐநூறு டாலர்களுக்கு விற்கும் வாய்ப்பையும் அந்த மாதிரி நன்கொடை இந்தியாவில் இருக்கும் ஒன்பது ஏழை விவசாயிகளுக்கு ஆளுக்கு ஒரு பசுமாடு கொடுக்கும் திட்டமும் கைநழுவும் அபாயம் இருப்பதை எவரும் யோசிப்பதில்லை.

ஜெயமோகன் எழுதக்கூடிய கட்டுரை: விளையாட்டும் குழந்தைகளும்: Jeyamohan

அசல் கருத்து: தொலைக்காட்சியும் குழந்தைகளும்http://www.jeyamohan.in/?p=36539

இனி ஜெ. எழுதியிருக்கக் கூடிய அடுத்த பதில் இங்கே…

முந்தைய அறுவடை: நமது இலக்கியநுட்பம்

நானும் என் மனைவியும் 1992 வாக்கில் தொலைக்காட்சியில் குழந்தைகளிடம் விளையாட்டுப் போட்டிகள் உருவாக்கும் எதிர்மறை விளைவுகளைப்பற்றிய விவாதத்தைப் பார்த்தோம். விளையாட்டுச் சிறுமியாக இருந்த என் மகளுக்கு அந்த “அரட்டை அரங்கத்”தில் இருந்ததை நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தேன். எங்கள் கொல்லைப்புறத்தில் கிரிக்கெட் தேவையில்லை என்ற முடிவை அவளும் நாங்களும் சேர்ந்து எடுத்தோம். அப்போது எம்.எஸ்.தோனி சின்னக்குழந்தை. அன்றுமுதல் இன்றுவரை வீட்டில் தொலைக்காட்சி இணைப்பு இல்லை.

கிரிக்கெட் மட்டுமல்ல ஒட்டுமொத்த விளையாட்டுகளே குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் பாதகமானது. பல பெற்றோர் தங்களுக்குத் விளையாட்டுப் பித்து இருப்பதை மறைக்க ‘ஓடியாடி விளையாடினால் உடற்பயிற்சி இல்லியா? அட்ரெனலின் சுரப்பது கூட நல்லதுதானே!’ என்றெல்லாம் வாதிடுவதைக் கேட்டிருக்கிறேன். உண்மையில் விளையாட்டு எல்லாவகையிலும் எதிர்விளைவுகளை மட்டுமே உருவாக்கக்கூடியது. மைதானத்தில் விளையாட்டு இருந்தால் குழந்தைகள் அதைப் பார்ப்பார்கள். அது அவர்களுக்குத் தீங்களிக்கக்கூடியது.

காரணங்களை இவ்வாறு தொகுத்துச் சொல்லலாம். விளையாட்டு மிகப்பிரம்மாண்டமான ஒரு பொது கேளிக்கை. கோடிக்கணக்கான பேருக்கு ஒரேசமயம் அது மகிழ்வூட்டியாகவேண்டும். ஆகவே அது மிகவும் முன்னரே ஒத்துக் கொண்ட விதிப்படியே நடக்க முடியும். சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டு சிந்திப்பதை விளையாட்டுகள் முடக்கிப் போடுகின்றன.

ஆகவே விளையாட்டு அதிகம்பேர் பார்க்கக்கூடிய அந்த சராசரியான மனநிலையை உருவாக்கும். உச்சகட்ட ஊசலாட்டல் மூலம் அவற்றை அனைவரும் பார்க்கவைக்கும்.

கச்சிதமான சிறப்பாக ஆடக்கூடியவரே வெற்றிபெறுகிறார், அதற்குத்தான் அதிக கோப்பைகள் கிடைக்கும். ஆகவே அதற்குத்தான் அதிகமான நிதிமுதலீடு இருக்கும். அதுதான் பிரம்மாண்டமானதாகவும் கவர்ச்ச்சியானதாகவும் இருக்கும்.

அதிகமாக வெற்றி பெறும் அணி, அதாவது மிக அற்புதமாக ஆடுபவர் மட்டுமே ஒலிம்பிக்ஸுக்கு செல்வார். அதைத்தான் பார்க்கவேண்டிய சந்தர்ப்பம் நமக்கு அமையும்.

இதன் விளைவாக விளையாட்டை பார்ப்பவர்கள் அனைவரும் அவர்களைப் போல் விளையாட சிக்கவைக்கப்படுகிறார்கள். அவர்களின் தன்னம்பிக்கை வீழ்ச்சியடைகிறது. உடல் திறன் சராசரியில் கட்டிப்போடப்படுகின்றது.

இது மாந்தர் குலத்திற்கே மிக ஆபத்தானது. ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய சோம்பேறித்தனத்தைக் கண்டடைந்து அதை வளர்த்துக்கொள்ளவேண்டிய வயதில் சராசரித்தன்மையில் சிக்கிக்கொள்கிறார்கள். சராசரி கிட்டிப்புள்ளும் உறியடிகளும் உப்புமூட்டைகளும் மட்டும் அவர்களுக்குக் கிடைக்கின்றன. அவர்கள் சராசரிகளாக வளர்கிறார்கள்.

விளையாட்டுகள் நமக்குத் தரிசனங்களை அளிப்பதில்லை. ஆட்டகளத்தில் சிலர் கலக்குவதை மிதமிஞ்சி வலியுறுத்துகிறது அது. பந்துகளைக் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அது நம்மை பியரிலும் கோக்கோ கோலாவிலும் அடித்துச்செல்லும் தன்மை கொண்டது. மைதானத்திற்கு சென்று பாருங்கள். சிலநாட்களில் அவை உங்களை முழுமையாக உள்ளே இழுத்துக்கொள்ளும். நீங்களும் தினசரி பால் பாட்மிண்டனோ கால்பந்தோ ஆடிக்கொண்டே இருப்பீர்கள்.

ஆனால் ஒருவாரம் முழுக்க இந்த ஆட்டங்கள் மூலம் நீங்கள் பயிற்சி பெற்றது ஒரு உள்ளூர் லீக் ஆட்டத்திற்குக் கூட தகுதி இருக்காதென்பதை யோசித்தால் புரிந்துகொள்ளலாம்.

என்.எஃப்.எல், என்.பி.ஏ., ரக்பி, கால்பந்து, ஐ.பி.எல். போன்ற மேற்கத்திய ஆட்டங்கள் இன்னும் நுட்பமான வலை. அவை சர்வதேச அளவில் துடுப்பாட்டக்காரர்களின் பொதுவான பலவீனங்கள் விருப்பங்கள் ஆகியவற்றை big data மூலம் ஆராய்ந்து மேம்படுத்தப்பட்டு அமைக்கப்பட்டவை. ஆகவே அணிகளை மிக பயங்கரமானப் சரிசமமான போட்டியாக கொண்டு சென்றுவிடுகின்றன.

இந்நிகழ்ச்சிகளைப் பாருங்கள். சில அடிப்படைக்கூறுகள் இருக்கும். மிக பயங்கரமான வலிமை கொண்ட சக்திகளை பலவீனமான, குழந்தைகளான சிலர் எதிர்த்து வெல்வது போல. சாகசம் மூலம் புதையல்களை அடைவதுபோல. மறைமுகமாக இவை குழந்தைகளின் போர்க்குணங்களையே தொட்டு வளர்க்கின்றன. அந்தப் போர்க்குணம் குழந்தைக்கு அதன் தங்கிவாழ்தலுக்காக, தாக்குப்பிடித்தலுக்காக இயற்கையால் வழங்கப்பட்ட ஆயுதம். காமம் போலவே அடிப்படையான ஓர் இச்சை அது. அதை இவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இதற்கு அப்பால் இன்னும் முக்கியமான காரணம் ஒன்று உண்டு. உடல் விளையாட்டு அடிப்படையில் கல்விக்கு எதிரானது. கல்வி என்பது மொழியுடன் சம்பந்தப்பட்டது என்றே நான் என்றும் நினைத்து வருகிறேன். சமீபத்தைய ஆய்வுகள் இதை உறுதிசெய்கின்றன. மொழியில்தான் சிந்தனை நிகழ்கிறது. ஓவியம் இசை போன்ற கலைகளுக்குக் கூட கொள்கைகள் மொழியாகவே அகத்தில் பதியமுடியும்.

மொழிவழிக்கல்விதான் மூளையின் இயல்பான செயல்பாடு. நாம் அறிந்தவற்றை நாம் நினைப்பது மொழியில்தான். ஒன்றை நாம் நம் மொழியில் சொல்லத்தெரிந்திருந்தால்தான் நாம் அதை அறிந்திருக்கிறோம் என்று பொருள்.

விளையாட்டுகள் மொழித்திறனையே அழிக்கின்றன. மொழியில் நுழைந்து தன் சொந்த அகமொழியைக் கண்டடையவேண்டிய காலகட்டத்தில் குழந்தை இந்தக் விளையாட்டுகளில் நுழைவதனால் அது சிந்திக்கத்தெரியாததாக ஆகிவிடுகிறது.

கடைசியாக, விளையாட்டு போன்ற ஆட்படுத்தும் தன்மை கொண்ட சாதனம் குழந்தைக்கு பிறருடனான உறவுகளை இல்லாமலாக்குகிறது. விளையாட்டில் எதிர் அணி என்கிறோம், போட்டியாளர் என்கிறோம். “யாதும் ஊரே! யாவரும் கேளிர்” என்னும் தொன்மையான பண்பாட்டில் வாழ்ந்த சமூகம், களரியிலும் சடுகுடுவிலும் சண்டை போடுவது ஆபத்தான போக்கு.

என் புரிதலில் செயலை விட, ஆக்கத்தை விட குழந்தைகள் பேசிக்கொண்டிருக்க மிகவும் பிரியப்படக்கூடியவை. ‘கதையளப்பதை’ விரும்பாத குழந்தை இல்லை. குழந்தைகள் கணினியில் விளையாடுவதும் அவர்கள் இனையத்தில் அரட்டையடிப்பதும் மிக மிக முக்கியம். அதனூடாகவே குழந்தை அதைச்சூழ்ந்திருக்கும் சமூக வலைப்பின்னலுடன் உறவு கொள்கிறது. அதைப்புரிந்துகொண்டு கையாளக் கற்கிறது. மைன்கிராஃப்டிலோ போர்ட்டல்-இலோ தன் இடத்தைக் கண்டடைகிறது.

நான் இளமையிலேயே என் குழந்தைகளுடன் மணிக்கணக்காக கணிவிளையாட்டுகளில் இருந்தேன். அவர்கள் அடுத்தடுத்த கட்டங்களுக்குப் போய்க்கொண்டே இருப்பார்கள். குழந்தைகள் அவர்களின் உண்மையான உலகை நம்மிடம் அமைத்துக் காட்டுவார்கள். கூடவே ஒரு கற்பனை உலகையும் நமக்காக உருவாக்கிக் காட்டுவார்கள். கற்பனை நகரம், கற்பனை மனிதர்கள். அது அவர்களின் ஆளுமையின் மிக முக்கியமான அம்சம். அவர்களைப் புரிந்துகொள்வதற்கான வாசல் அது. கற்பனையில் கடைசி பந்து சிக்ஸர் அடிக்காதவர் இருக்கிறோமா? கனவுகளில் இறுதி நிமிடத்தில் கோல் அடிக்காதவர் உண்டா? அதை நேரடி விளையாட்டுகள் உடைக்கின்றன.

உரையாடல்மூலம் நாம் குழந்தைகளை அறிகிறோம். அவை நம்மை அறிகின்றன. இவ்வாறுதான் ஃபேஸ்புக் உருவாகிறது. சமூக வலைப்பின்னல் உருவாக்கிறது. அதை விளையாட்டு அடிமைத்தனம் அழிக்கிறது.

விளையாட்டு குழந்தைகளை கணி உலகிலிருந்து அன்னியப்படுத்தும். என்ன சொன்னாலும் இன்று கணினிகளே வருங்காலத்திற்கான ஒரே வழி. நாளெல்லாம் விளையாடும் ஒருவன் முட்டாளாகத்தான் இருப்பான். அரைமணிநேரம் எதையாவது ட்விட்டரில் வாசித்தால்கூட அவனுடைய அறிவிலும் ரசனையிலும் பெரும் வளர்ச்சி காணப்படும்.

ஏனென்றால் கணினிகள் நம்மை செயல்படச்செய்கின்றன. நாம் மேயும்போது அந்த நிலைத்தகவல் நம் கற்பனையாலும் நம் தர்க்கத்தாலும் நாம்தான் உருவாக்கிக்கொள்கிறோம். அது ஓர் கண்டுபிடிப்பு. எந்த Call of Duty® ஆக இருக்கட்டும். நம்மை மேலும் தகுதிகொண்டவர்களாகவே ஆக்கும்.

ஆனால் விளையாடுகையில், எந்த மகத்தான நிகழ்ச்சியானாலும், நாம் அதற்கு செல்வதில்லை. வியர்வை நம் மீது அருவிபோல கொட்டிக்கொண்டிருக்கிறது. அதன் வழியாக நாம் சில கலோரிகளைக் களைந்து உப்பை மட்டுமே அடைகிறோம். நாம் அதன் வழியாக தகுதிப்படுத்திக்கொண்டு ரஞ்சி டிராபிக்கு செல்வதில்லை.

கூகிள்+ முடிவில்லாதவை. உலக ஞானமே அவற்றில் உள்ளது. அவை அளிக்கும் தெரிவுக்கான சாத்தியங்க்ள் முடிவில்லாதவை. சமூக வலைப்பின்னலில் நுழையும் குழந்தை தான் யாரென தானே கண்டுகொள்ளும். சிந்திக்கவும் உரையாடவும் கற்றுக்கொள்ளும்.

அதேசமயம் விளையாட்டை முழுக்க நிராகரிக்கவும் முடியாது. விளையாட்டிற்குப்பதிலாக ரவி சாஸ்திரி ஆட்டங்களை, சித்துவின் வருணணைகளை அவர்களுக்கு யூடியிபில் கண்டுபிடித்துக்கொடுத்தேன். மிகநல்ல ஒரு ப்ளே லிஸ்ட் (play list) அவர்களிடம் உள்ளது. அது அவர்களுக்கு play. இன்று உலகின் மிகத்தரமான புதிய கணிக்கட்டிடம் எது என என் மகளிடம்தான் நான் கேட்டறிகிறேன். இன்று வந்த எந்த மைண்க்ராஃப்ட் கலைத்தரம் மிக்கது என என் மகளிடம்தான் தெரிந்துகொள்கிறேன்.

என் இரு குழந்தைகளும் மகத்தான கணி பயனர்கள். அதற்கு நான் விளையாட்டை விலக்கியதுதான் காரணம் என உறுதியாக நம்புகிறேன்.

நன்றி: ஜெ.

Conspiracy Theory: பாஸ்டன் ப்ரூயின்ஸ் & தீவிரவாதிகள்

புருயின்ஸ் கெலிப்பார்கள் என்று கணித்தேன். சறுக்கிவிட்டது.

பாஸ்டன் ப்ரூயின்ஸ் அருமையான அணி. பனிச்சறுக்கு ஹாக்கியில் முக்கியமான அணி. இரண்டாண்டுகள் முன்பு கூட உலகக் கோப்பையை வென்ற அணி. இந்த முறையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கும் அணி.

அவர்கள் ஏன் வெல்வார்கள்?

சாதாரணமாக மிக மிக அற்புதமாக ஆடும் வர்க்கத்தார் கூட நேர் போட்டிகளில் வென்றதாக சரித்திரம் இல்லை. உதாரணத்திற்கு மியாமி ஹீட்ஸ் குழுவை எடுத்துக் கொள்ளலாம். ஏழு போட்டிகள் நடக்கும். மியாமியால் நான்கே போட்டிகளில் எதிரணியை வீழ்த்திவிட முடியும். எனினும், யாருக்காவது அடிபடும்; நடுவர் தீர்ப்பு சாதகமாக அமையாது; குழுத்தலைவர் formல் இருக்கமாட்டார்…

இப்படி ஏதாவது காரணம் சொல்லி கடைசி பந்து வரை டி20 போட்டியை இழுத்தடிப்பது போல் நான்கு மேட்ச்களில் முடிக்க வேண்டியதை ஏழாக்கி முடிப்பார்கள். ஆனால், பாஸ்டன் புரூயின்ஸ் நான்கே போட்டிகளில் ரணகளம் செய்து முன்னேறுகிறார்கள்.

இந்த முறை பாஸ்டன் புருயின்ஸ் வெல்வதற்கு மிக முக்கிய காரணம் பாஸ்டன் குண்டுவெடிப்புகள். ஜார்னேவ் சகோதரர்கள் கைங்கர்யத்தால் சோகமும் இருளும் கவ்விய பிரதேசத்திற்கு இந்த வெற்றி புத்துணர்ச்சி கொடுக்கும்.

கூடைப்பந்தாட்டத்தில் விளையாடும் பாஸ்டன் செல்டிக்ஸ் இப்போதைக்கு வாகை சூட முடியாது. பேஸ்பால் ஆடும் பாஸ்டன் ரெட் சாக்ஸும் அவ்வாறே. பேட்ரியாட்ஸ் போட்டி துவங்க நெடுநாள் உள்ளது. இந்த நிலையில் உள்ளூர் அணிக்கு கொற்றம் கிடைத்தால் நகரத்தில் மாற்றம் கிடைக்கும்.

மாஸசூஸட்ஸ் மீண்டும் ஊட்டம் கண்டு தலையெடுத்து மீட்சி அடையும் அடையாளமாக புரூயின்ஸ் வெல்வார்கள்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு

பாதிரியாரும் ஆயரும்

கிராமத்திற்கு புதிதாக வந்திருந்த இளம் பாதிரியாரை விருந்துக்கு அழைக்கிறார் மறை மாவட்ட ஆயர். ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் பார்க்கும்போது பக்கத்தில் வரும் பரிந்துரைகள் கவனத்தை சிதறடிப்பது போல், உணவின் ருசியுடன் உணவை செய்த வீட்டு வேலைக்காரியின் மீதும் பாதிரியாருக்கு கண் அலை பாய்கிறது. இவ்வளவு லட்சணமான பெண்ணை சும்மாவா பிஷப் வைத்திருப்பார் என்று சிந்திக்க வைக்கிறது.

பிஷப் நாடி பிடித்து விடுகிறார். “நீ நெனக்கிற மாதிரி எதுவும் இல்ல… அவ எனக்கு சமைச்சுப் போடறதுக்கும் துணி தோய்க்கிறதுக்கும் மட்டுமே துணையா இருக்கா!”

ஒரு வாரம் போன பின் வேலைக்காரி பிஷப்பிடம் சொல்கிறாள். “யாராவது ஸ்பெஷலா வந்தால் மட்டுமே அந்த வெள்ளிக் கரண்டி பயன்படுத்துவேன். அருட் தந்தை வந்துட்டுப் போனப்புறமா அதைக் காணவில்லை. அவர் எடுத்திருக்க மாட்டார்… இல்லியா?”

“ஆவர் எடுத்திருப்பார்னு தோணல. இருந்தாலும் கடுதாசு போடறேன்”னு சொன்ன ஆயர் எழுதினார்: “நீங்கள் வெள்ளிப் பாத்திரங்களை எனது இல்லத்தில் இருந்து எடுத்ததாக நான் சொல்லவில்லை. ஆனால், உண்மை என்னவென்றால் தாங்கள் இரவு உணவிற்கு வந்த நாளில் இருந்து அந்த சாமானைக் காணவில்லை!”

கொஞ்ச நாள் கழித்து பாதிரியிடம் இருந்து பதில் வந்திருந்தது: “மேன்மை பொருந்திய ஆயர் அவர்களுக்கு, நீங்கள் பணிப்பெண்ணுடன் படுப்பதாக நான் சொல்லவில்லை. ஆனால், நிஜத்தை சொல்லவேண்டுமென்றால், உங்கள் படுக்கையில் நீங்கள் உறங்கிக் கொண்டிருந்தால், அங்கே உள்ள அந்த வெள்ளிக் முட்கரண்டி உங்களை உறுத்தியிருக்கும்.”

ஆஃபீஸ்ஸ்பேஸ்

அலுவல் மீட்டிங்குகளும் இப்படித்தான்… எதையோ நினைப்போம். சொல்ல மாட்டோம். அவர்களாகவே ஏதோ புரிந்து கொள்வார்கள். பின்னணியில் அரசியல் சூழ்ச்சி திட்டம் நடக்கும். உள்ளடி வேலை இருக்கும். சின்னச் சின்ன குழுவாக சந்திப்புகள் அரங்கேறும். மின் மடலில் காய் நகர்த்தப்படும்.

அதை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சொல்கிறது:

The Quiet Plotter

Deadly Meetings in the Workplace – WSJ.com:
CRIME: Practices passive-aggressive insubordination.
MODUS OPERANDI: Remains quiet at meetings; later undermines bosses and decisions.
LEVEL: First degree nuisance

இந்த மாதிரி பெயர்கள் எல்லாம் எங்கிருந்து கிடைக்கின்றது? எப்படி முத்திரை குத்துகிறார்கள்?

  • The Multitasker?
  • The Jokester?
  • The Dominator
  • The Rambler?
  • Placater
  • Decimator
  • Detonator
  • Naysayer


விவாத விளையாட்டு

எல்லாமே கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் புழக்கத்தில் இருப்பவை. சொல்லப் போனால், ரோல் ப்ளே எனப்படும் இன்னின்னார் இப்படி இப்படி செய்வதில் வல்லவர் என உருமாறும் ஆட்டங்கள்.

சிலர் இதில் உருப்படியானவர்கள். காரியத்தை முடிக்க உதவுபவர்கள். முன்னேற்றத்திற்கு வழிகோல்பவர்கள். ப்ராஜெக்ட்டையும் கம்பெனியையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துபவர்கள். செயல்வீர்ர்கள். அப்படிப்பட்டவர்களின் பங்குகளை இப்படி பிரிக்கலாம்:

  • கல்வியாளர் (பயிற்றுனர்)
  • சமரச மார்க்கவியலாளர் (Compromiser)
  • க்ரியா ஊக்கி (Encourager)
  • தகவல் தேடி (Seeker of Information)
  • சந்தேகாஸ்தபமானதை கேள்விக்குள்ளாக்குபவர் (Questioner of dubious Assertions)
  • சரிபார்ப்பவர் (Validator)
  • பொறுமையாக காது கொடுப்பவர் (Attentive Listener)
  • பிணக்குகளை ஊடல்களாக்கி கொசுவாக்குபவர் (Diffuser of Tension)

மேலும் விரிவாக மேற்கண்ட ரோல் மாடல்களைப் படிக்க: Social Work Practice: A Critical Thinker’s Guide By Eileen D. Gambrill


The life of man upon earth is a warfare
– Job 7:1

முதலாம் வாசக முன்னுரை: வாசகம் ஜாப் 7:1-4,6-7
மனிதனுடைய வாழ்வு போரட்டம் நிறைந்ததாகத்தான் இருக்கின்றது.

முதல் வாசகம்

ஜோப் நூலிலிருந்து வாசகம் 7: 1-4,6-7

யோபு கூறியது: மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போராட்டந்தானே? அவர்களின் நாள்கள் கூலியாள்களின் நாள்களைப் போன்றவைதாமே? நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும், கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போலவும், வெறுமையான திங்கள்கள் எனக்கு வாய்த்தன; இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்; விடியும்வரை புரண்டு உழல்வேன். என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன; அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன.


Abraham Lincoln

First Inaugural Address: Monday, March 4, 1861

This country, with its institutions, belongs to the people who inhabit it. Whenever they shall grow weary of the existing Government, they can exercise their constitutional right of amending it or their revolutionary right to dismember or overthrow it.


ஏர் உழுவைத் திருப்பிப் போட்டது போல் கேள்விக்குறி இருப்பது தற்செயல் அல்ல! பழைய மண்ணாக இருக்கும் மூடநம்பிக்கைகளை உடைக்கவும் அடுத்து விதைகள் வளர்ந்து பூத்துக் குலுங்க புத்துணர்வாக்கவும் வினாக்குறி ஏர்.

Saul Alinsky

சூதாட்டம் – இருபதுத்துவம்

முந்தைய ட்வீட்ஸ் தொகுப்பு: ட்விட்டரும் நானும் (2)

Returning back to an empty home

பள்ளிக்கூடம் ஆரம்பித்தாகி விட்டது. உங்கள் வீட்டில் கணவன் & மனைவி, இருவருமே வேலைக்கு செல்கிறீர்களா?

இந்தியா என்றால் கவலை இல்லை.

முந்தானை முடிச்சு + தலையணை மந்திரம் என்றால் அம்மாவின் பெற்றோர் இருப்பார்கள். பாரம்பரியம், பழமைவாதம் என்றால் மாமனார் + மாமியார். முற்போக்கு, நாகரிகம் என்றால் சமபங்காக இருவருக்கும் டூட்டி போட்டிருப்பீர்கள். அருணாச்சல் பிரதேசம் போன்ற சீனப் பிரதேசங்களில் வாசம் என்றால், சல்லிசாக பணியாட்களை நியமனம் செய்திருப்பீர்கள்.

அமெரிக்காவில்?

பள்ளியிலேயே ஐந்துமணி வரை வைத்திருக்கும் காப்பகம் உண்டு. அதில் எல்லா வகுப்புகளும் கலந்து கட்டியிருக்கும். Gangகள் இருக்கும். உங்கள் குழந்தையை விட பெரிய வகுப்பினரும் இருப்பார்கள். போதுமான அளவு பாதுகாப்பானது. ஆனால், ஆங்காங்கே நடக்கும் மிரட்டல், உருட்டல்களைக் கண்டு காணாமல் விட்டுவிடுவார்கள்.

After school daycareன் மேய்ப்பர்களே பல சமயம் இறுதியாண்டு மாணவர்களாக இருப்பது ஒரு காரணம். பாலியல் துன்புறுத்தல்கள், WWF சண்டைகள், கத்தியால் கிழித்து குருதி வருமளவு திரைமூடி பிணக்குகளை தீர்த்துவிடுவதிலேயே அவர்கள் நேரங்கழிந்து விடுவது இன்னொரு முக்கிய காரணம்.

பள்ளியில் விட்டு வைக்க முடியாது! அப்படியானால்?

பூட்டிய வீட்டைத் தானே திறந்து, தனிமையில் இருக்க வைக்கலாம். நண்பரின் வீட்டுக்கு சென்று விளையாடு என்று சொல்லிவிடலாம்.

நம்ம வீடுதானே? தெரிந்த தோழர்கள்தானே? அக்கம்பக்கத்திலும் ஆதுரமானவர்கள்தானே! என்ன ஆபத்து வந்துவிட முடியும்?

பத்மா அர்விந்த்தை சந்தித்தபோது சொன்ன நியு ஜெர்சியில் சம்பவம் நினைவிற்கு வந்தது.

பதின்ம வயதை எட்டிப் பார்க்கும் பொறுப்புள்ள பையன். பெற்றோர் இருவரும் வேலைக்குப் போய் சம்பாதிப்பதால் பணத்தின் மதிப்பை அறிந்தவன். கூடப் படிக்கும் விடலை வகுப்பினர், ‘அந்த சைட்டுக்கு போய் காட்ட முடியுமா?’ என்று மிரட்டி உருட்டும் dareகளுக்கு ஈடுகொடுக்காமல், அமைதியாக புன்சிரிப்போடு ஒதுங்கும் பக்குவம் வாய்த்தவன்.

இப்படிப்பட்டவன் இப்போது சிறையில் இருக்கிறான். எந்தக் கைதியிடம் இருந்து எவ்வித கொடுமைகளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றானோ!

ஏன் தண்டிக்கப்பட்டான்? எப்படி மாட்டிக் கொண்டான்? என்ன குற்றம் புரிந்தான்?

அவனுடைய பக்கத்துவீட்டுக்காரன் வலையகம் மூலம் கமிஷன் பார்த்து சம்பாதிப்பவன். தன்னுடைய போட்டியாளர்களின் கூகிள் விளம்பரங்களை முடக்கும் விதமாகவும், அவர்களின் வலையகங்களை DDoS போன்ற கொந்தர் நுட்பங்களில் செயலிழக்கவும் இவனை சூட்சுமமாக பயன்படுத்தி இருக்கிறான்.

அறியாத வயசு. கூடவே, ‘நீ இவ்வாறு செய்தால் உனக்கு இந்த குட்டிப் பரிசு! இத்தனை தடவை க்ளிக் செய்தால் ரீபக் ஷூ!’ என்றெல்லாம் சன்மானங்களும் அளித்திருக்கிறான்.

தனிமையில் விடப்பட்ட மகனும், புதிய காலணிக்கு ஆசைப்பட்டு, அவன் சொன்ன உரல்களை விடாமல் சுட்டித் தள்ள, காவலரினால் விசாரிக்கப்பட்டு, அட்டர்னி ஜெனரலால் குற்றஞ்சாட்டப்பட்டு, ஜூரியினால் கடுங்காவலில் விழுந்துவிட்டான்.

இப்போது எம்.ஐ.டி., ஹார்வார்டு கனவு போச்சு; வாலிபம் போயே போச்சு.

சில கேள்விகள்:

அ) பதின்ம வயதினர் செய்யும் குற்றங்களுக்கு, பெரியவர்களுக்கான நீதி பொருந்துமா? அவர்களுக்கான தண்டனைகள் சிறுவர்களுக்கான சட்டத்தின் கீழ் அமைய வேண்டுமா? எந்த மீறல், எவ்விதம் என்று பகுப்பது?

ஆ) தாயும் தந்தையும் வேலைக்கு சென்றால்தான் ப்ரைவேட் பள்ளிக்கூடம், விசாலமான வீடு, ப்ளே-ஸ்டேசன் எல்லாம் சாத்தியம். ஒருவர் மட்டும் சம்பாதித்தால் கல்லூரிக்கு எப்படி பணங்கட்டுவது?

இ) தெருவிளக்கில் படித்து நீதிபதியானது, இந்தியாவில் தமிழ் மீடியத்தில் இருந்து அமெரிக்கா வந்தது என்பது போன்ற உதாரணங்கள், வருடத்திற்கு நாற்பதாயிரம் கோரும் தனியார் வாசகசாலையில் இல்லாமல், சாதாரண அமெரிக்க அரசுப் பள்ளிக்கு செல்வோருக்கும் பொருந்துமா?

ஈ) பசங்களுக்கு Bullying, பெண்களுக்கு barbie doll இலக்கணங்கள், இருபாலாருக்கும் dare செய்து பலான விஷயங்கள் செய்யவைப்பது போன்ற சூழலில் நான் கடைத்தேறிவிட்டேன். என் மக்கள்?

உ) குழந்தைகளின் கணினி பயன்பாட்டையும், தொலைக்காட்சி பார்த்தல்களையும் எவ்வளவு தூரம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்? எப்பொழுது அவர்களுக்கு கோபம் எல்லை மீறும்? எது அத்துமீறி தணிக்கை என்று வரையறுப்பது?

தொடர்புள்ள சமீபத்திய பதிவுகள், செய்திக் கட்டுரைகள்:

1. The Walk-to-School Fight – NYTimes.com

2. Child protection: safeguarding without safeguards | Comment is free | The Guardian: Taking tough action that purports to protect children has long been thought a political trump card

3. Editorial – 12 and in Prison – NYTimes.com: “According to the study, every state allows juveniles to be tried as adults, and more than 20 states permit preadolescent children as young as 7 to be tried in adult courts.”

4. Parenting or Spying: Who’s Watching The Kids? — The Responsibility Project

5. Good Parenting or Bad Spying? — The Responsibility Project

6. Calling the Cops on Your Kids: Parenting vs. Policing — The Responsibility Project

ஒலிம்பிக்ஸ் பார்த்த கதை – கருத்துப்படம்


நன்றி: (Th)Ink 10.35 | Weekly Dig