Tag Archives: Conversations

ஜூலை 19 – ஆடி மாதத் தமிழ் இலக்கியம்

சென்ற வார இலக்கியம் – சென்ற மாத இலக்கியம் போல் ஆகி விட்டது.
ஜூலை நான்கு அமெரிக்க சுதந்திர தினத்தையொட்டி ஆரம்பித்த பல் வலி பல்கிப் பெருகி ஒடிஸியில் வரும் பிரும்மாண்ட தெய்வங்களாக மிரட்ட ஆரம்பித்தது ஒரு காரணம்.
சொல்வனத்தின் இந்திரா பார்த்தசாரதி சிறப்பிதழ் இன்னொரு காரணம்.
கோடை என்றால் கொண்டாட்டம் என்பது முக்கிய காரணம்.

ஸ்டோரி ஜட்ஜ் நிகழ்விற்காக எழுதிய பேச்சின் சுருக்க வடிவு இங்கே.

சிவா (தமிழோசை ஆன் ஏர்) அவர்களுக்கு நன்றி!

https://www.youtube.com/@tamilosaionair2738/videos

காலச்சுவடு தமிழின் முக்கியமான இதழ்.
நிகழ்வுகளாகட்டும்; விமர்சனங்களாட்டும்; ஆம்லெட்டில் எல்லாவிதமான காய்கறிகளும் போட்டு வண்ணமயமாக வருவது போல் சுட்டுத் தருகிறார்கள்.
எனினும், கதைகளில் மட்டும் நிலைய வித்துவான்களையே ஆதரிக்கிறார்கள்.
அது போகட்டும்.
அச்சிதழ்.
பக்கங்களை தங்கள் பக்கம் ஆதரிப்பவர் பக்கம் கொடுப்பது இயற்கைதானே?

இந்த மாதக் கதைகள்:
1. தீ இனிது : பெருமாள்முருகன்
2. பாடிங்க்டன் கரடி : கோகுலக்கண்ணன்

சச்சிதானந்தன் சுகிர்தராஜா, ”247 தமிழ் எழுத்துக்களும் 2 ஆங்கில ஐயர்களும்” என்னும் பத்தி கட்டுரை எழுதியிருக்கிறார். அவசியம் வாசிக்கவும்.

முன்பெல்லாம் அஞ்சலி என்றால் ஆசான் ஜெயமோகன் என்றிருந்தது.
தமிழ் விக்கியும் யுனைட்டெட் முழுமையறிவு விஸ்டமும் வந்த பிறகு அந்தப் பொறுப்பு முழுக்க முழுக்க கா.சு. மட்டுமே ஏற்றுக் கொண்டிருக்கிறது:
– மு. பரமசிவம் (1934 – 2026) : பாட்டாளிப் படைப்பாளி : ஆ.இரா. வேங்கடாசலபதி
– பல்லடம் மாணிக்கம் (1936 – 2026) புத்தக மாணிக்கம் : கண. குறிஞ்சி
– பாரதிராஜா (1941 – 2026) : மேதைமைக்கு அருகில் சென்ற சாதனையாளர் : ஸ்டாலின் ராஜாங்கம்

சுகுமாரனின் கட்டுரைகளை முன்வைத்து, எம். கோபாலகிருஷ்ணன், “கலையை எழுதுதல்” அலசுகிறார். முக்கியமான விமர்சனப் பார்வை.

#நறுக்: ‘ஜி. நாகராஜனும் வி. மாலாவும்’ என்ற தலைப்பில் வெளியான அவரது முதல் கட்டுரையில் (2004, ஆகஸ்ட்) தொடங்கி இன்றுவரை தொடரும் அவரது கட்டுரைகளின் வரிசை செறிவான மொழி அனுபவத்தையும் அரை நூற்றாண்டுத் தமிழ்த் தீவிர இலக்கியத்தின் போக்கையும் ஒருசேர…

2026 ஜூன் 4ஆம் தேதி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘மருதன்- 50’ நிகழ்வை இஸ்க்ரா விரிவாகப் பகிர்கிறார். “அப்பாதுரையார், மயிலை சீனி. வேங்கடசாமி, சாமிநாத சர்மா என்று நீடித்துவரும் அல்புனைவு மரபில் இடம்பெறும் #மருதன் , பொது வாசக எழுத்தின் மூலம் ஜனநாயகத் தன்மையை வளர்த்தவர்” என்கிறார்

ஏன்?

ராமச்சந்திர #குஹா பத்தியை தமிழில் மருதன் மொழியாக்கியிருக்கிறார்: மெய்யுரைப்பேன் மனமே!
மறைமுகக் கூட்டாளிகள் காந்தி குடும்பமும் பாஜகவின் ஆதிக்கமும்

சோழியன் குடுமி சும்மா ஆடுமா!?

நீளிரா திரைப்படம் குறித்து #சொர்ணவேல் திரைப்பார்வை.
ம. சோனியா, “சிறு தொழிற்கூடங்களில் நசுங்குபவர்களின் வாழ்க்கை” என்னும் தலைப்பில் பரத்ராஜ் ரவிதாஸ் எழுதிய பரிசல் வெளியீடான பட்டறை நாவல் குறித்த அறிமுகப் பார்வை.

நிகழ்வுப்பார்வை: திருவாவடுதுறை ஆதீனம் புதிதாக இந்த ஆண்டு உ.வே.சா.வின் பெயரால் ‘செந்தமிழ் பதிப்புச் செம்மல்’ என்ற விருதை ஏற்படுத்தி, முதல் விருதை முனைவர் ப. சரவணனுக்கு வழங்கியிருக்கிறது.

இது காலச்சுவடு மட்டும்.

வாசகசாலை இதழில் – நாற்பதுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள்.
காலச்சுவடு மாதத்திற்கு ஒரு தடவை வருவது நியாயம். அதற்கு செல்வாகும்.
இணைய இதழ்களும் மாதத்திற்கு ஒரு தடவை வெளியாவது நாம் பழச மறக்க மாட்டோம் என்பதற்கான உதாரணம்.

தினசரி வெளியிடுவதை ஒழுங்காகச் செய்பவர்கள் அகழ்.
அவர்களின் இணையக் கூடுகைகள் முக்கியமான செயல்பாடு.

குவிகம் அமைப்பும் வாரந்தோறும் வலை வழியே சந்திக்கிறார்கள்; உரையாடுகிறார்கள்.
பலரையும் விருந்தினர்களாக அழைக்கிறார்கள். அனைவரையும் பேச வருக வருக எனக் ஜூம் கம்பளம் இட்டு வரவேற்கிறார்கள்.

இது போன்ற சந்திப்புகள் ஒவ்வொரு இதழுக்கும் அவசியம்.

அதை நெடுங்காலமாக செய்து வருபவர் ஜெயமோகன் + விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.

ரஜினி x கமல்
ஜானகி x சுசீலா
ரெஹ்மான் x ராஜா

என்பது போல் கா.சு. வந்தால் ஜெ.மோ. வர வேண்டுமே : )

அவரின் பரிவாரங்களில் அகழ் இதழை ஏற்கனவே கவனித்து விட்டோம்.
அடுத்து வல்லினம்; கவிதைகள்.இன்;

அந்திமழை.

‘தமிழ் இலக்கியத்தில் ஆழங்கால் படாமல் கிறித்தவ இலக்கியத்தைப் படைக்க முடியாது!’ என்னும் தலைப்பில் தமிழ்விக்கி -தூரன் விருது பெறும் யோ. ஞானசந்திர ஜாண்சன் உடன் பேட்டி இடம்பெற்றிருக்கிறது.

இப்பொழுதெல்லாம் பேட்டி என்றால் இணையம் வழியாகக் கேள்விகளை அனுப்பி அந்த பதில்களை அப்படியே வெளியிடுவது.
தட்டச்சும் வேலை கிடையாது!
பலுக்கப் பிழை பார்க்கும் உழைப்பு கோராது!!
முக்கியமாக, ஒலிப்பதிவை வரிவடிவமாக மாற்றும் சுமை இல்லவே இல்லை!!!
பருத்தி புடைவையாகவே காய்க்கும் காலம்.

நல்ல பதில்கள்.

இன்னொரு பேட்டி: வல்லினம் இதழில் சாமிநாதன் முனிசாமி உடன் ஆன “மாற்று வரலாற்றுக்கான தேவையென்பது உலகளவில் இருக்கும் ஒன்று!”. சுவாரசியமான ஆய்வு.

இரண்டையும் வாசித்தால் உத்வேகமும் பெறலாம்; வித்தியாசமான ஆளுமைகள் குறிடததும் அறியலாம்.

இறுதியாக மயிர்.இன் மூன்று படைப்புகளை முன்வைக்கிறேன்:
1. போதி எழுதிய சிறுகதை: “மலர் நீட்டம்” – இனி தான் வாசிக்க வேண்டும்.
2. ஆவுடை எழுத்தில் அப்பாவின் நினைவிடம் – இதையும் நீங்கள் படித்து தேறுமா எனச் சொல்லுங்கள்.
3. செல்வி.சுஜாதா ஆனந்த ராவ் அசோகமித்திரனின் “ஆண்கள் பெண்கள் குழந்தைகள்” என அலசியிருக்கிறார்.

அதில் இருந்து நறுக்:

இனி வேண்டியதில்லை என்கிற சிறுகதை தமிழ் சினிமாவின் ஒரு விளிம்பினைக் கதைக்களமாக கொண்டிருக்கிறது. அதில் பகைப்புலமாக சினிமா உலகம் வந்துபோகிறது. ஆனால் கதையின் மையக் கரு பெண்மை. ஆண் பெண் உறவின் புதிர் தன்மையைப் பேசும் கதை.
எழுத்தாளர்கள் தமிழ் சினிமாவில் பங்கேற்பது தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் இருந்தே உள்ளது. புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா, ஜெயகாந்தன், பூமணி, வெங்கட்சாமிநாதன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன் என்று அதற்கு ஒரு நீண்ட பட்டியல் உண்டு.
அசோகமித்திரன் ஒருவரே தமிழ் சினிமாவின் அசல் வாழ்க்கையை எழுத்தாக்கியவர்.

விடுபட்டதைச் சொல்லுங்கள்.
வாசிப்போம்.

டேய்… அவனா நீ

என்னோட பள்ளித் தோழனை 96 படம் மாதிரி இருபதாண்டு கழித்து பார்த்த போது நடந்த உரையாடல்.

“பொழுதுபோக்கிற்கு என்னடா பண்றே!?”

“எழுத்தாளரா இருக்கேண்டா…”

“அச்சச்சோ… உங்கிட்ட கவனமா இருக்கணுமே! எத எடுத்தாலும் ஆராஞ்சுண்டு, எதிலும் குத்தம் கண்டுபிடிச்சுண்டு, எல்லாவத்தையும் காமாலக் கண்ணோடு பாக்கிறவனா நீயு!”

“அப்படியெல்லாம் பொத்தாம் பொதுவில் சொல்ல முடியாதுடா! அலுவலில் கூட இப்படி பாக்கிறவங்கள QAனு சொல்லி மரியாதையா டெஸ்ட்டர், குவாலிடி அஷுயூரன்ஸ், பிசினஸ் அனலிஸ்ட்னு சொல்லிண்டு இருக்கோமே?”

“என்ன வேணா சொல்லிக்க மச்சீ… நீங்க எல்லாம் கிட்டத்தட்ட சைக்கோ! வாழ்க்கைய எப்படி அனுபவிக்கணும்னு தெரியாம திண்டாடற ஜென்மங்கதான் எழுத்தாளராத் திரியுது!”

”டேய்… ஏண்டா இந்த கொலவெறி?”

“நான் ஃபேஸ்புக்கில் ஆரம்பிச்சு அந்துமணி வர பாத்துட்டேண்டா! எல்லோரும் கோணப் பார்வை பாக்கிறேன்… என்னது கேவலமாப் போகும்னு யோசிக்கிறேனு பைத்தியமா ஆக்கி; சகாக்களை பயமுறுத்தி; பார்க்காத நீலிய பொண்டாட்டியா ஆக்கி; அமாவாசக்கும் அப்துல் காதருக்கும் முடிச்சுப் போட்டு தீவிரவாதம் துவங்கி டைவோர்ஸ் வரை… நம்ம சிக்கலுக்கு சிரிப்புத் திருடன் சிங்காரவேலுவாக சித்தரிக்க வேண்டியவங்க — சாஹித்ய அகாடெமி ஆசையில் சின்னாபின்ன அச்சுபிச்சு சித்தாளாக சீரியசாக்கி வைக்கிறாங்க!”

”அதுதாண்டா… அடையாள நெருக்கடி. உனக்கு என்ன பிரச்சினை என்று அறிந்து கொள்ள உதவ நல்ல கட்டுரைகளையும் கதைகளையும் என்னால் பரிந்துரைக்க முடியும்.”

“வேணாண்டா…”

“வெறுமனே சூப்பர் சிங்கர், பிக் பாஸ், ரீல்ஸ் பார்க்காம, சமூகச் சிக்கல்களையும் குடும்பப் பிரச்சினைகளையும் தனி மனித உரிமைகளையும் உணர, அறிய, புரிந்து கொள்ள… நாங்க வேணும்!”

“வேணாண்டா…”

“பொது புத்தி, திரள் மந்தை, கூட்ட மந்தி அறிவிலித்தனத்தில் இருந்து அறிவார்ந்த தளத்திற்கு மாற்றும் கடமை எனக்குண்டு தோழா! தமிழ்ச் சமூகமே ராம்ஜி யாஹூ ஆக மாறும் போது பத்ரித்தனமாக நாங்கள் தேவை”

பரட்டையை சப்பாணி பளாரென்று அடித்துவிட்டான்.

“அண்ணாத்த… சப்பாணிகளுக்கு மயிலு கிடைக்கிறார்கள். ஆனால், இருபதாண்டு கழித்து இங்கிலீஷ் விங்லிஷ் அஜீத் கிடைப்பார்களா என்னும் இருத்தலிய யதார்த்தவாத மாந்திரீக அகநிலைக் கருத்துமுதல்வாதத்தின் நவீன வடிவமாக நேர்காட்சிவாதம் இது நண்பா”

அவன் அழ ஆரம்பித்து விட்டான்.
லிட்ஃபெஸ்ட்டுக்கு வர ஒப்புக் கொண்டு விட்டான்.

அகவை – உடல்நலமும் தேடல்வயமும்

“அம்மாவிற்கு உடம்பு சரியில்லை.”

“எவ்வளவு வயாதாகிறது?”

வயோதிகத்தை சொல்வதற்கு வயது பயன்படும்.

விருது கிடைத்தால் ‘எத்தனை காக்கா பிடித்தீர்கள்?’ கேட்போம். ஐ-பாட் பழுதடைந்துவிட்டால், ‘எத்தனை ஆண்டுகள் பழையது?’ வினவுவோம். புத்தகத்தின் பக்க எண்ணிக்கை போல், ட்விட்டரின் ஃபாலோயர்ஸ் தொகை போல், சீக்காளிக்கு முடிந்துவிட்ட ஆண்டுத்தொகை, மன அமைதியைத் தருகிறது.

“இன்னாருக்கு மேலுக்கு முடியவில்லை” என்று சொல்லிப் பாருங்கள். மூத்திரக்குழியில் இருந்து விலகிவிட்ட சிறுநீரை அவசர அவசரமாக மீண்டும் குறி பார்த்து அடிக்கும் வேகத்துடன் அடுத்த கேள்வி வந்து விழும்.

“எம்புட்டு வயசு?”

கேள்வியை சாமர்த்தியமாக் திசை திருப்ப முயற்சிக்கலாம். பலனில்லை…

“எங்கப்பாவிற்கு எழுபத்திரண்டாகிறது. தினசரி காலங்கார்த்தாலே ஆறரை மணிக்கு நாகேஸ்வரா பார்க்கில் வாக்கிங். அதுவே மாமனாருக்கு அறுப்பதிஏழுதான். வாயு பிரிவதற்காக நாட்டு மருந்து போட்டுக் கொள்கிறார். ப்ரெஷருக்கு பத்து மணிக்கொண்ணு; சாயங்காலம் ஆறு மணிக்கொண்ணு முழுங்கறார். அதனாலதான் கேட்கிறேன். எவ்வளவு ஆகுது?”

விட மாட்டார். அதுவரைக்கும் எப்பொழுது பிறந்தநாள், எத்தனாவது பிராயத்தில் அமெரிக்க பிரயாணம் எதுவும் எழாது. டெமோ கொடுக்கும்போது சங்கடப்படுத்தும் சாஃப்ட்வேர் போல், நமது சங்கடத்தை சொன்னவுடன் மட்டுமே ஒப்பிடுவதற்காகவோ, ஆற்றுபடுத்துவதற்காகவோ விடாக்கண்ட வினாத் தொடரும்.

சம்பந்தப்பட்டவரின் அகவை, அறுபதைத் தாண்டிவிட்டால் லைஃப் எக்ஸ்பெக்டன்சி அளவுகோலைத் தொட்டு விட்ட திருப்தி கிடைத்து விடுகிறது.

உண்மையை சொல்லும்போதெல்லாம் நம்மை நல்லவர்களாக உணரச்செய்யுமளவுக்குக் கொடூரமானதாக உள்ளது இந்த வாழ்க்கை.
– ஜெயமோகன், வாழ்வினிலே ஒரு முறை

இயக்குநர் கே பாலச்சந்தருக்கு விழா மேடை ஏறுவதற்கு உதவி தேவையா? ‘விக்கியைத் தேடு; பிறந்த வருடம் கண்டுபிடி!’ ஆணையிடுகிறது மனது.

எனக்கு மட்டுமல்ல… தமிழருக்கே உரித்தானதுமல்ல… “Oh, well he lived a long life.” சொல்லி முத்தாய்ப்பு வைப்பதற்கான விருப்பம்.