Tag Archives: எழுத்தாளர்கள்

ஜூலை 19 – ஆடி மாதத் தமிழ் இலக்கியம்

சென்ற வார இலக்கியம் – சென்ற மாத இலக்கியம் போல் ஆகி விட்டது.
ஜூலை நான்கு அமெரிக்க சுதந்திர தினத்தையொட்டி ஆரம்பித்த பல் வலி பல்கிப் பெருகி ஒடிஸியில் வரும் பிரும்மாண்ட தெய்வங்களாக மிரட்ட ஆரம்பித்தது ஒரு காரணம்.
சொல்வனத்தின் இந்திரா பார்த்தசாரதி சிறப்பிதழ் இன்னொரு காரணம்.
கோடை என்றால் கொண்டாட்டம் என்பது முக்கிய காரணம்.

ஸ்டோரி ஜட்ஜ் நிகழ்விற்காக எழுதிய பேச்சின் சுருக்க வடிவு இங்கே.

சிவா (தமிழோசை ஆன் ஏர்) அவர்களுக்கு நன்றி!

https://www.youtube.com/@tamilosaionair2738/videos

காலச்சுவடு தமிழின் முக்கியமான இதழ்.
நிகழ்வுகளாகட்டும்; விமர்சனங்களாட்டும்; ஆம்லெட்டில் எல்லாவிதமான காய்கறிகளும் போட்டு வண்ணமயமாக வருவது போல் சுட்டுத் தருகிறார்கள்.
எனினும், கதைகளில் மட்டும் நிலைய வித்துவான்களையே ஆதரிக்கிறார்கள்.
அது போகட்டும்.
அச்சிதழ்.
பக்கங்களை தங்கள் பக்கம் ஆதரிப்பவர் பக்கம் கொடுப்பது இயற்கைதானே?

இந்த மாதக் கதைகள்:
1. தீ இனிது : பெருமாள்முருகன்
2. பாடிங்க்டன் கரடி : கோகுலக்கண்ணன்

சச்சிதானந்தன் சுகிர்தராஜா, ”247 தமிழ் எழுத்துக்களும் 2 ஆங்கில ஐயர்களும்” என்னும் பத்தி கட்டுரை எழுதியிருக்கிறார். அவசியம் வாசிக்கவும்.

முன்பெல்லாம் அஞ்சலி என்றால் ஆசான் ஜெயமோகன் என்றிருந்தது.
தமிழ் விக்கியும் யுனைட்டெட் முழுமையறிவு விஸ்டமும் வந்த பிறகு அந்தப் பொறுப்பு முழுக்க முழுக்க கா.சு. மட்டுமே ஏற்றுக் கொண்டிருக்கிறது:
– மு. பரமசிவம் (1934 – 2026) : பாட்டாளிப் படைப்பாளி : ஆ.இரா. வேங்கடாசலபதி
– பல்லடம் மாணிக்கம் (1936 – 2026) புத்தக மாணிக்கம் : கண. குறிஞ்சி
– பாரதிராஜா (1941 – 2026) : மேதைமைக்கு அருகில் சென்ற சாதனையாளர் : ஸ்டாலின் ராஜாங்கம்

சுகுமாரனின் கட்டுரைகளை முன்வைத்து, எம். கோபாலகிருஷ்ணன், “கலையை எழுதுதல்” அலசுகிறார். முக்கியமான விமர்சனப் பார்வை.

#நறுக்: ‘ஜி. நாகராஜனும் வி. மாலாவும்’ என்ற தலைப்பில் வெளியான அவரது முதல் கட்டுரையில் (2004, ஆகஸ்ட்) தொடங்கி இன்றுவரை தொடரும் அவரது கட்டுரைகளின் வரிசை செறிவான மொழி அனுபவத்தையும் அரை நூற்றாண்டுத் தமிழ்த் தீவிர இலக்கியத்தின் போக்கையும் ஒருசேர…

2026 ஜூன் 4ஆம் தேதி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘மருதன்- 50’ நிகழ்வை இஸ்க்ரா விரிவாகப் பகிர்கிறார். “அப்பாதுரையார், மயிலை சீனி. வேங்கடசாமி, சாமிநாத சர்மா என்று நீடித்துவரும் அல்புனைவு மரபில் இடம்பெறும் #மருதன் , பொது வாசக எழுத்தின் மூலம் ஜனநாயகத் தன்மையை வளர்த்தவர்” என்கிறார்

ஏன்?

ராமச்சந்திர #குஹா பத்தியை தமிழில் மருதன் மொழியாக்கியிருக்கிறார்: மெய்யுரைப்பேன் மனமே!
மறைமுகக் கூட்டாளிகள் காந்தி குடும்பமும் பாஜகவின் ஆதிக்கமும்

சோழியன் குடுமி சும்மா ஆடுமா!?

நீளிரா திரைப்படம் குறித்து #சொர்ணவேல் திரைப்பார்வை.
ம. சோனியா, “சிறு தொழிற்கூடங்களில் நசுங்குபவர்களின் வாழ்க்கை” என்னும் தலைப்பில் பரத்ராஜ் ரவிதாஸ் எழுதிய பரிசல் வெளியீடான பட்டறை நாவல் குறித்த அறிமுகப் பார்வை.

நிகழ்வுப்பார்வை: திருவாவடுதுறை ஆதீனம் புதிதாக இந்த ஆண்டு உ.வே.சா.வின் பெயரால் ‘செந்தமிழ் பதிப்புச் செம்மல்’ என்ற விருதை ஏற்படுத்தி, முதல் விருதை முனைவர் ப. சரவணனுக்கு வழங்கியிருக்கிறது.

இது காலச்சுவடு மட்டும்.

வாசகசாலை இதழில் – நாற்பதுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள்.
காலச்சுவடு மாதத்திற்கு ஒரு தடவை வருவது நியாயம். அதற்கு செல்வாகும்.
இணைய இதழ்களும் மாதத்திற்கு ஒரு தடவை வெளியாவது நாம் பழச மறக்க மாட்டோம் என்பதற்கான உதாரணம்.

தினசரி வெளியிடுவதை ஒழுங்காகச் செய்பவர்கள் அகழ்.
அவர்களின் இணையக் கூடுகைகள் முக்கியமான செயல்பாடு.

குவிகம் அமைப்பும் வாரந்தோறும் வலை வழியே சந்திக்கிறார்கள்; உரையாடுகிறார்கள்.
பலரையும் விருந்தினர்களாக அழைக்கிறார்கள். அனைவரையும் பேச வருக வருக எனக் ஜூம் கம்பளம் இட்டு வரவேற்கிறார்கள்.

இது போன்ற சந்திப்புகள் ஒவ்வொரு இதழுக்கும் அவசியம்.

அதை நெடுங்காலமாக செய்து வருபவர் ஜெயமோகன் + விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.

ரஜினி x கமல்
ஜானகி x சுசீலா
ரெஹ்மான் x ராஜா

என்பது போல் கா.சு. வந்தால் ஜெ.மோ. வர வேண்டுமே : )

அவரின் பரிவாரங்களில் அகழ் இதழை ஏற்கனவே கவனித்து விட்டோம்.
அடுத்து வல்லினம்; கவிதைகள்.இன்;

அந்திமழை.

‘தமிழ் இலக்கியத்தில் ஆழங்கால் படாமல் கிறித்தவ இலக்கியத்தைப் படைக்க முடியாது!’ என்னும் தலைப்பில் தமிழ்விக்கி -தூரன் விருது பெறும் யோ. ஞானசந்திர ஜாண்சன் உடன் பேட்டி இடம்பெற்றிருக்கிறது.

இப்பொழுதெல்லாம் பேட்டி என்றால் இணையம் வழியாகக் கேள்விகளை அனுப்பி அந்த பதில்களை அப்படியே வெளியிடுவது.
தட்டச்சும் வேலை கிடையாது!
பலுக்கப் பிழை பார்க்கும் உழைப்பு கோராது!!
முக்கியமாக, ஒலிப்பதிவை வரிவடிவமாக மாற்றும் சுமை இல்லவே இல்லை!!!
பருத்தி புடைவையாகவே காய்க்கும் காலம்.

நல்ல பதில்கள்.

இன்னொரு பேட்டி: வல்லினம் இதழில் சாமிநாதன் முனிசாமி உடன் ஆன “மாற்று வரலாற்றுக்கான தேவையென்பது உலகளவில் இருக்கும் ஒன்று!”. சுவாரசியமான ஆய்வு.

இரண்டையும் வாசித்தால் உத்வேகமும் பெறலாம்; வித்தியாசமான ஆளுமைகள் குறிடததும் அறியலாம்.

இறுதியாக மயிர்.இன் மூன்று படைப்புகளை முன்வைக்கிறேன்:
1. போதி எழுதிய சிறுகதை: “மலர் நீட்டம்” – இனி தான் வாசிக்க வேண்டும்.
2. ஆவுடை எழுத்தில் அப்பாவின் நினைவிடம் – இதையும் நீங்கள் படித்து தேறுமா எனச் சொல்லுங்கள்.
3. செல்வி.சுஜாதா ஆனந்த ராவ் அசோகமித்திரனின் “ஆண்கள் பெண்கள் குழந்தைகள்” என அலசியிருக்கிறார்.

அதில் இருந்து நறுக்:

இனி வேண்டியதில்லை என்கிற சிறுகதை தமிழ் சினிமாவின் ஒரு விளிம்பினைக் கதைக்களமாக கொண்டிருக்கிறது. அதில் பகைப்புலமாக சினிமா உலகம் வந்துபோகிறது. ஆனால் கதையின் மையக் கரு பெண்மை. ஆண் பெண் உறவின் புதிர் தன்மையைப் பேசும் கதை.
எழுத்தாளர்கள் தமிழ் சினிமாவில் பங்கேற்பது தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் இருந்தே உள்ளது. புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா, ஜெயகாந்தன், பூமணி, வெங்கட்சாமிநாதன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன் என்று அதற்கு ஒரு நீண்ட பட்டியல் உண்டு.
அசோகமித்திரன் ஒருவரே தமிழ் சினிமாவின் அசல் வாழ்க்கையை எழுத்தாக்கியவர்.

விடுபட்டதைச் சொல்லுங்கள்.
வாசிப்போம்.

பூமணி அஞ்சலி

நாதி

ஆனானப்பட்ட கறீம் பாய் கண்ணை மூடிவிட்டார். தாலுகா ஆபீஸ் தடிவீரன் சொன்னான்.

ஏட்டையாவுக்கு நெஞ்சில் துப்பாக்கியால் இடித்த வலி. அந்த மைக்கண்ணும் மருதாணிக் கையும் மனசுக்குள் நிழலாடியது. மண்டை கிறுகிறுத்து ஸ்டேஷன் வாசலில் உட்கார்ந்துவிட்டார்.

போனவாரம் போய்ப் பார்த்தபோது தெளுச்சியாக இருந்தாரே. படுத்த படுக்கையிலும் தெம்பாகப் பேசினார். ரிடையரான நினைப்பே இல்லை. அதே இன்ஸ்பெக்டர் கெத்து, எல்லாப் போலீஸ்காரர்களைப் பற்றியும் கேட்டார். கேடிகளின் நடவடிக்கைகளை விசாரித்தார்.

இடையில் “பாத்துமா” என்று குரல் கொடுத்தார். அவர் சம்சாரம் வந்து கட்டிலுக்கடியில் காத்திருந்த மூத்திரக் குடுவையை எடுத்துப் போனாள். அவர் கண்ணைச் சிமிட்டினார்.

“பாத்தயாவே வீட்டுக்குள்ளயே சாராய வடிப்பு நடக்குது. கேஸ்போட்டு உள்ள தள்ளீறாத.”

நோய் அண்டாத சிரிப்பு. கடைசிவரைக்கும் கிண்டல் போகாது.

பாத்துமா காலிக் குடுவையை வைத்துவிட்டுப் போகும்போது மறக்காமல் கேட்டாள்.

“வீட்ல எல்லாரும் நல்லாருக்காகளாண்ணன்.

அவள் முகத்தில் கரிப்பூச்சாகக் கவலை அப்பியிருந்தது.

“இருக்காகம்மா. புள்ளீகள எங்க.”

“ரெண்டு பேரும் பீடிக் கம்பெனிக்குப் போயிருக்காக. வீட்ல கெடங்கன்னாக் கேட்டாத்தான.”

பெட்டை

கம்மாக் கலிங்கலோரம் குருவன் துணிவெளுக்கும் சத்தம் நாலாபக்கமும் தெளிவாகக் கேட்டது. கல்லடித்தாளத்துக்குத் தக்கபடி அவன் சொகமாகப் பாடினான்.

“காடத்தட்டு 
கக்கத்துல 
கருத்தப்புள்ள 
பக்கத்துல 
காடத்தட்டு 
காடத்தட்டு 
சோ 
சோ 
சோவீவி
சோவீவி…”

துணியைத் துப்புரவாகத் துவைத்து அடித்தொண்டைக்குள் ராகத்தை முனங்கிக்கொண்டே பிழிந்து பக்கத்தில் விரித்திருக்கும் சீலைமேல் விட்டெறிந்தான். அடுத்த உருப்படியை எடுக்கும் போது இன்னொரு பாட்டு துவங்கியது.

புருசனின் பாட்டைக் கேட்டபடி துவைத்துப் போட்ட துணிகளை நீலத்தில் முக்கிப் பிழிந்து காயப்போட்டாள் பொன்னாத்தா. நீலத்தாழிக்குள் கைச்சுழட்டல் மறுபடியும் வேகப்பட்டது.

கம்மாயில் தண்ணீர் மேடேறி கெத்கெத்தென்று கிடந்தது. மேட்டுத்தரையில் சம்பும் நீர்க்கோரையும் நெரிசலாக வளர்ந்த பசுமை. மெட்டான இடங்களில் கொக்குகள் அடம்பிடித்து ஒத்தைக்காலில் நின்றுகொண்டிருந்தன. ஓடைக்கரைப் பனையில் நிற்கும் மீன்கொத்தி அடிக்கொரு தடவை எறிந்த பந்தாக நீர்மட்டத்தில் விழுந்து உயரப்போய் உட்கார்ந்து கொண்டது.

கோடை மறைந்தால் இன்பம் வரும்

நியூ ஜெர்சி ஸ்டோரீஸ் ஆஃப் தி ட்ரூ விழா அமர்க்களமாக நடந்தது. பழனி ஜோதி சிறப்பான அறிமுகம் செய்து துவங்கி வைத்தார். நான் சற்றே தாமதமாக வந்ததால் (ஐந்தாறு நிமிடங்கள்) ஜெயமோகன் உடன் அமர்ந்திருந்தவர் யார் என்று நிகழ்ச்சி நடக்கும் போது தெரியவில்லை. அதன் பின்னர் அவருடன் அறிமுகம் செய்து கொண்டேன். நிகழ்ச்சியில் முழுவதும் இளைஞர்களும் இளைஞிகளும் ஜெயமோகனின் அறம் சிறுகதைத் தொகுப்பின் ஆங்கில மொழியாக்கத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

பல்வேறு கதைகள்… பல்வேறு பார்வைகள் … சுருக்கமாக, வித்தியாசமாக, அதேசமயம் பொருத்தமாக இருந்தது. ஜெயமோகன் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் கேள்வி பதில்களை நடத்தினார். வழக்கமான திரள் புத்தி கேள்விகள் பெரியோரிடம் இருந்து வந்தன. இளைய தலைமுறையினரிடம் இருந்து அப்படிப்பட்ட வினாக்கள் எதுவும் இல்லாமல், ஆழமாக புத்தகம் தொடர்பாக அந்த கதா மாந்தர்களில் அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டு, சிந்தனையில் எழுந்த நேர்மையான வினாக்கள் – எளிமையாக பகிரப்பட்டன

மிக நிறைவான நிகழ்வு. இதை கச்சிதமாக நடத்தியதற்கு பழனி ஜோதி மற்றும் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் குழுவிற்கு பாராட்டுக்கள். இது எளிமையான காரியம் அல்ல… எவ்வளவு பேர் வந்தார்கள் என்று எண்ணவில்லை. 100+ பேர் இருப்பார்களோ!? அரங்கம் நிறைந்து வழிந்தது. பலரும் இழுத்துப் போட்டு வேலை செய்து கொண்டிருந்தனர். மாயா வழக்கம் போல் அமைதியாக ஒளிப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தார். இளா கொஞ்சம் விவகாரமான கோணங்களில் சுட்டுக் கொண்டிருந்தார்.

நெல்லை விஜய், வேல் முருகன், பாஸ்டன் நவீன் என்று நியு இங்கிலாந்து மக்கள் சூழ சென்றது பயணத்தை சுவாரசியமாக்கியது. அங்கே பல அறிந்த முகங்கள். புதிய அறிமுகங்கள். நெடுங்காலமாக இணையத்தில் மட்டுமே பேசி வந்த தமிழ் சசி. விவசாயி இளா. காரைக்குடி சுபா. காண்ட்ராரியன் ஏகே அரவிந்தன் கன்னையன். டாக்ஜட்ஜ் துவங்கி அமர்க்களமாய் வீடியோக்கள் நடத்தும் தினேஷ் ஜெயபாலன். திண்ணை துக்காராம் அம்மா கிச்சனுக்கு வந்திருந்தார். நெடுங்கால சொந்தமான பிரபு சின்னத்தம்பி கலகலப்பாக்கி பழைய சிகாகோ நினைவுகளை மீட்டெடுத்தார்.

ஜெயமோகன் 20 ஆண்டுகள் முன்பு பார்த்தபடியே இருக்கிறார் என்று என் மனைவி சொல்லிக் கொண்டிருந்தார் … புகைப்படங்களில் பார்த்ததை வைத்து! நேரிலும் அவ்வாறே… மிக இயல்பாக ஆதுரத்துடன் கட்டித்தழுவி வரவேற்று அன்போடு பழகினார்

அதன் பின்னர் நாங்களே எங்கள் அனைவரையும் மஹேஸ் பழனிஜோதி இல்லத்திற்கு அழைத்துக் கொண்டோம். கிட்டத்தட்ட அங்கேயும் ஒரு 30 /40 பேர் குழுமியிருப்போம். சபை களை கட்டியது. சூடான பருப்பு வடை அல்லது அதற்குப் பேர் மெதுவடையா . கரக்… மொறுக் உள்ளே தள்ளினோம். தேநீர். ஆளுக்கு முருக்கு பாக்கெட் வேறு.

நியுயார்க் லிட் ஃபெஸ்ட் களப்பணிக்கு முன்னோட்டம். மிக சிறப்பாக செயல்பட்டு உதவினார்கள். கதவுக்குப் பக்கத்தில் சத்தம் வராமல் பார்த்துக் கொண்டது முதல் அனைத்தையும் பார்த்துப் பார்த்து பம்பரமாக இயங்கிய செயல்வீரர்கள்!!

வழக்கம்போல் ஆசான் என்ன கேள்வி கேட்டாலும் அநயாசமாக விடையளித்துக் கொண்டிருந்தார். இதில் என்ன அதிசயம்!? எப்பொழுதும் போல் முன்னரே அறிந்தது தான் … என்றாலும் என்னால் சற்றும் நம்ப முடியவில்லை. மதியம் ஒரு மணியிலிருந்து முக்கியமான விழா . அது நான்கு மணி அளவில் நிறைவுகிறது. அதன் பின் இன்னொரு இரண்டரை மணி நேரம்… பல்வேறு தலைப்புகள்… சுவாரசியங்கள் … நெருக்கமான தகவல்கள்… இலக்கிய அலைதல்கள் என்று எல்லா இடங்களுக்கும் எப்பொழுதும் இவரால் அட்சய பாத்திரம் போல் காமதேனு போல் தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்க முடிகிறது!

தத்துவ முகாமை தவறவிட்டதை நினைத்து இப்பொழுதும் வருந்தி பொறாமை கொள்ளும் தருணம்

Happy Birthday – Nambi Krishnan

G.O.A.T என்றால் ஆடு
அப்புறம் ஃபெடரரா? நடாலா??

எனக்கு நம்பி கிருஷ்ணன்.
எஸ். ராமகிருஷ்ணனால் பாடல் பெற்றவர்.
பி.ஏ. கிருஷ்ணன் மூலமாக அறிமுகம் ஆனவர்.
பாண்டியாட்டம், அவதரிக்கும் சொல், நரி முள்ளெலி டூயட் போன்ற நூல்களை எழுதியவர்.
சொல்வனம் என்றில்லாமல் பதாகை, தமிழினி, கனலி, வனம் என்று எல்லாவிடங்களிலும் விஷயதானம் வழங்குபவர்.

கோட் என்றால் ?

—> கோட்டம் – நம்பி தனக்கென நாடு வைத்திருக்கிறார். நாட்டம் பிடித்தவர்களை வாசிக்கிறார். விலாவாரியாக அனுபவிக்கிறார். நமக்கும் தருகிறார்.

—> கோட்டை – நம்பி அறிமுகப் படுத்திய டாவன்போர்ட் பற்றி இப்படிச் சொல்வார்கள். எட்கர் ஆலன் போ-வின் இறுதி ஊர்வலத்தில் கவிஞர் வால்ட் விட்மான் வருவார் குகையோவியங்களில் பிகாஸோ நடமாடுவார். எமர்சனும் தொரோவும் உரையாடுவார்கள்.

நம்பியின் அபுனைவுகளில் அந்தப் பாய்ச்சல் இருக்கும். ஒவ்வொரு பத்திக்கும் சில பல கூகுள் தேடல் தேவை. வார்த்தைகளுக்கு அகரமுதலியில் அர்த்தம் போதாது. பிரிட்டானிக்கா வேண்டும். முழு அனுபவமும் கிடைக்க மூல நூலையும் படித்து, அசல் இடங்களையும் சுற்றிப் பார்த்து, நம்பியுடனும் நான்கைந்து முறை பேசிவிட வேண்டும்.

அவருக்கு பிறந்த நாள்.
’கோட்’ நம்பிக்கு வாழ்த்துகள்.

அவரின் புத்தம் புதிய கதையை சொல்வனத்தில் வாசித்து விட்டீர்களா?

Solvanam #297

புத்தம்புதிய சொல்வனம் இதழ் #297 வெளியாகி இருக்கிறது.

நான் இருக்கும் இடத்தில் மூன்று மாதம் வெயில் அடிக்கும். கோடைக் காலங்களில் கொண்டாட்டம், சுற்றங்களோடு ஊர் சுற்றல் என்றிருப்பதால் இதழை ஆற, அமர படிக்கவில்லை.

இதழ்-297 – சொல்வனம் | இதழ் 297 |25 ஜூன் 2023 (solvanam.com)

எனினும், தொடர்களை விடக்கூடாது.

இரா முருகன் எழுதும் மிளகு அத்தியாயம் நாற்பத்தெட்டு வெளியாகி இருக்கிறது.
(48 அம்மாடீ! 24 மாதங்கள்!! இரண்டு வருடங்களுக்கும் மேல்!!!)

நாகரத்தினம் கிருஷ்ணா மொழியாக்கத்தில் அதிரியன் நினைவுகள் – 16ஆம் பாகம் கிடைக்கிறது.
அதே போல் பானுமதி. ந. தமிழாக்கத்தில் ராஜேஷ்குமாருக்கு முன்பே எட்கர் ஆலன் போ எழுதிய துப்பறியும் கதையான மார்க் தெரு கொலைகள்- இறுதிப் பகுதியுடன் முடிகிறது.

இதெல்லாம் இலக்கியம்.

தற்கால உலகத்தை அமெரிக்க மேற்குலகை அற்புதமாக அறிமுகம் செய்து சமீபத்திய வரலாற்றை செவ்வியல் ஆக்கும் அமர்நாத் அவர்களின் உபநதிகள் – ஒன்பது உள்ளது.
அவர் ஜாஜா-வின் தெய்வநல்லூர் கதைகள் – ஐந்தாம் அத்தியாயத்திற்கு சரியான போட்டி.

எழுத்தாளர் அமர்நாத் கதைகளும் சரி…
சிரித்தே சொக்க வைக்கும் ஜா. ராஜகோபாலன் புனைவும் சரி…
எந்தப் பாணியிலும் இல்லாமல், ஏற்கனவே தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகமான எழுத்தாளர்களின் நடையையும் நினைவுறுத்தாமல், அது பாட்டிற்கு செவ்வனே சிறப்புற அமைக்கப் பெற்று “பேஷ்!” போட வைக்கிறது.

இந்த மாதிரி தொடர்கதைகளை வாசிக்கிறீர்களா?
இன்றைய ஆறு நொடி டிக்-டாக் சமூக அவசரத்தில் பொறுமையாக ருசித்து ரசிக்கிறீர்களா?
சமீபத்திய “தொடரும்” போடும் இணையக்கதைகளில் எதை விரும்பீனீர்கள்?

புதிய தமிழ்க் கதைகள் – 293

புத்தம்புதிய சொல்வனம் இதழில் வந்துள்ள கதைகளுக்கான அறிமுகம் + விமர்சனம்:

1. ஜா. ராஜகோபாலன் எழுதிய தெய்வநல்லூர் கதைகள்:
நன்றாக எழுதக் கூடியவர்; கட்டுரைகளில் கவர்ந்தவர் புனைவில் மிளிர்வது கடினம். கட்டுரையாசியராக மிளிர்ந்த ஜாஜா கதாசிரியராகவும் நடத்திக் காட்டுகிறார்.

கதைகளில் அரசியல் சரிநிலை பயங்கள் கூடாது. இன்றைய கதைகளில் உள்ளதை உள்ளபடியே காண்பது அரியதாக உள்ளது. இந்தப் புனைவு சிறப்பான துவக்கம். அந்தக் காலத்திற்கு நம்மை அழைக்கிறது. நீங்கள் பார்த்த, சந்தித்த மனிதர்களைச் சொல்லுகிறது.

எல்லாவற்றையும் விட சுவாரசியமாக இருக்கிறது!


——

2. சாந்தி மாரியப்பன் எழுதிய கொடுக்கு:

முடிவை நோக்கி ஓடும் கதை. “ஆறும் அது ஆழமில்ல…” என, பெண்களுக்குள் இத்தனை விஷயம் இருக்குமா?

நாலு மாதம் கழித்து இந்தப் புனைவின் சமபவங்கள், மனதோரத்தில் கீறலாக நிலைத்திருக்குமா – இல்லை.
படிக்கும்போது திருப்தி கிடைக்கிறதா – ஆம்.

சற்றே சமீபத்திய ‘தப்பட்’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘அம்மு’, ‘ஜெய ஜெய ஜெய ஹே’ – போல் இன்னொரு முடிவு.

கதையின் நடுவே சம்பவங்கள் பலஹீனம். கதையின் உச்சகட்டம் நிறைவு.


——

3. அர்ஸுலா லெ க்வின் எழுதிய உள்ளும் வெளியும்

இதைக் குறித்து தனியாக எழுத வேண்டும். எழுதலாம்


——

4. பத்மகுமாரி எழுதிய அறுவடை

நெகிழ்வான கதை.

இந்த மாதிரி ஆக்கங்களின் ஆகப் பெரிய சிக்கல் என்னவென்றால், ஐம்பதாண்டுகள் முன்பே இதைப் படித்திருக்கிறோமோ என்னும் சந்தேகம் வரவழைக்கும் விஷயங்களைச் சொல்லும்.

இன்றைய காலகட்டத்தில், இக்கால இளைஞர்களுக்கு இந்த மாதிரி செண்டிமெண்ட் பிழிசல்கள் ஒத்து வருமா?


——

5. ந.சிவநேசன் எழுதிய சைக்கிள்

“வானத்தைப் போல”, விக்கிரமன் படம் போல் இன்னும் ஒரு எளிமையான சம்பவம்.

நடக்கக் கூடியதுதான். நல்லா இருக்கிறதுதான்.

இன்னும் நம் தமிழ் சமூகம் தொலைக்காட்சி நெடுந்தொடர் பிடியில் இருந்து வெளிவரவில்லை என்பதை நினைவூட்டிக் கொண்டால், எவ்வாறு இவ்வாறான புனைவுகள் ஹிட் ஆகின்றன என்பது புரியும்.


——

6. ஜாபாலன் எழுதிய இன்வெர்ட்டி-வைரஸ்

Reactance theory கேள்விப் பட்டிருப்பீர்கள். அதனுடன் கொஞ்சம் கோவிட், நிறைய காத்தாடி ராமமூர்த்தி, எஸ்.வி. சேகர், கிரேசி மோகன் நடை.

தத்துவார்த்தமாக “எதனால் ஊக்கம் கொள்கிறோம்?”, ‘எப்படி சொன்ன காரியத்தை, நம் மனம் செய்ய மறுக்கிறது?’ என்று சென்றிருக்கலாம். ஆராய்ச்சி, சிந்தை வளர மனம் மாறும் நிலை போன்றவற்றை உணர்த்தியிருக்கலாம்.

இப்போதைய அளவில் – ஏதோ நகைக்க வைக்க முயல்கிறார்.


——

நன்றி #solvanam

மேற்கத்திய உலகுடன் ஒப்பிட்டால் இந்தக் கதைகள் இன்னும் மூன்று அல்லது நான்கு தலைமுறை பின் தங்கியே இருக்கிறது. தமிழுலகின் தீவிர சிந்தனையாளர்கள் பணத்தைத் துரத்துவதாலோ அல்லது சீரிய முறையில் புனைவுலகை நெறியாண்டு கற்றுத் தரும் ஆசிரியர்களின் போதாமையினாலா?

Solvanam Stories – 292nd Issue

சொல்வனம் இதழின் 292வது வெளியீட்டில் நிறைய கதைகள் வந்திருக்கின்றன.

ஒவ்வொன்றையும் பற்றி எனக்குத் தோன்றியவை:

  1. 1/64, நாராயண முதலி தெரு: சித்ரூபன் எழுதியிருக்கிறார்

அந்தக் கால நினைவுகள். சொல்வனம் என்றாலே நொஸ்டால்ஜியா என்னும் தேய்வழக்கிற்கு பொருத்தமான ஆக்கம். அவ்வப்போது, அந்தக் கால ‘ரெட்டை வால் குருவி’, ‘அழியாத கோலங்கள், ‘கோகிலா’ என்று பழைய படங்களைப் பார்ப்பேன். இதுவும் அது போன்ற ஒண்டுக் குடித்தன பதிவு. இங்கு சென்றிருக்கிறேன். பார்த்திருக்கிறேன். பழகியிருக்கிறேன். அனுபவித்திருக்கிறேன். அதை சிறப்பாக மலரும் நினைவுகள் கொடுக்கிறார்.

  1. இப்படியும் ஒரு நாள், ஒரு கதை: மோஹன் ஹரிஹரன் எழுதியிருக்கிறார்

இது “Everything Everywhere All at Once” போன்று எல்லாமுமாக இருக்கிறது.
அதி புனைவா… உண்டு
அறிவியல் புனைவா… உண்டுங்க அம்மா
நிஜ சம்பவங்கள்… உண்டு ஐயா
கட்டுரை தளத்தில் தகவல்கள்… அதுவும் உண்டு
இதையெல்லாம் கிண்டலடிக்கும் சுய எள்ளல்… எல்லாம் உண்டு

  1. ஒரு குழந்தையும் இரு உலகங்களும்: விக்னேஷ்

இது சிறப்பான ஆக்கம். மனதில் பதியும் சித்திரங்கள். பாத்திரப் படைப்பு. இருண்மையைக் கோரும் விவரிப்பு. நல்ல படைப்பு!
வாழ்த்துகள்!!

  1. Femino 16: சப்னாஸ் ஹாசிம்

இதை விமர்சித்தால் மாட்டிக் கொள்வீர்கள். முதலில் கதை புரிந்ததா என்று கேட்டுக் கொள்ளுங்கள்… அப்புறம் பெண்ணியம், அரசியல் சரிநிலை, இஸ்லாம் மதம் – வேண்டாம்… மாட்டிக்குவேன். விளங்கிக் கொண்டு வருகிறேன்.

நீங்கள் படித்துப் பார்த்து உங்களுக்குப் புரிந்ததை சொல்லுங்கள்

  1. சுத்தமும் ஐரீனும்: பிரதீப் நீலகண்டன்

கோகுலம் படித்த திருப்தி கிடைக்கிறது. குழந்தைகள் பகுதி துவங்கியிருப்பதை அறிவிக்க மறந்து விட்டார்கள் #Solvanam

  1. ஒரு தபலா, சாரங்கி, கே.கே மற்றும் நான்: தேஜூ சிவன்

தமிழ் தொலைக்காட்சிகளின் சீரியல் பார்த்த நிறைவைத் தரும் நெகிழ்வான உருக வைக்கும் கண்ணீர் காட்சிகள் நிறைந்த சிந்து பைரவி. ‘சுந்தரி’, ‘எதிர் நீச்சல்’, ‘மிஸ்டர் மனைவி’, ‘இனியா’, ‘கயல்’, ‘இலக்கியா’, ‘அன்பே வா’, ‘அருவி’ எல்லாம் பார்த்து கொலை வெறியில் உருவாகிய கதை.

  1. பனிக்காலத்தின் பகல்: ராஜேஷ் வைரபாண்டியன்

தேவலாம். முடிவை நோக்கி ஓடும் கதை. Everything Everywhere All at Once பார்த்ததன் மல்டிவெர்ஸ் விளைவு!

தமிழில் இவ்வளவு பேர் தீவிரமாக இலக்கியத்தை பேணுவது ஆரோக்கியமான விஷயம். பல்சுவையும் உண்டு. உட்பொதியும் கிடைக்கிறது.

உங்களுக்கு எந்தக் கதை கவர்ந்தது?

Tamil Podcasts: Novels, Classics and Literature for Listening

சொல்வனம் ஒலிவனம் வழியாக: தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி : ஒவ்வொரு புதன்கிழமையும் கேட்கத் தவறாதீர்கள்!

கூடிய சீக்கிரமே, Saraswathi Thiagarajan சரஸ்வதி தியாகராஜன் ‘தினம் ஒரு தொடர்’ போர்டு போட்டுவிடுவார்.

இப்போதைக்கு இவற்றை ஒலியும் ஒளியுமாகக் கொடுத்து வருகிறார்:
1. இரா. முருகனின் ‘மிளகு’ – #சொல்வனம் தளத்தில் வெளியாகும் பெருங்காப்பியம் (மாதத்தின் இரண்டாம் ஞாயிறு மற்றும் நான்காம் ஞாயிறு)

2. கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம்: செவ்வியல் இலக்கியங்கள்

3. தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் நாவல்: காலச்சுவடு கிளாசிக்

4. இரா. முருகனின் ‘தினை’ – புத்தம் புதிய புதினம்: திண்ணை (வாரந்தோறும்)

5. அதிரியன் நினைவுகள் – #solvanam Series (மாதத்திற்கு இரு முறை)


6. ராக் தர்பாரி – சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் : வெள்ளிதோறும்

இது தவிர சமகாலச் சிறுகதைகள், அஞ்சலிகள், சுவாரசியமான கட்டுரைகள், சொல்வனம் இதழில் வெளியாகும் இடுகைகள் எல்லாமும் சொல்வனம் ஒலி/ஒளிவனத்தில் கிடைக்கிறது.

https://www.youtube.com/@thamils/playlists

அவருடன் ஜமீலா. ஜி என்பவரும், வித்யா அருண் என்பவரும் கூட இணைந்து செயல்படுகிறார்கள். சுகா எழுதிய கட்டுரைகளை வித்யா சுபாஷ் வாசித்து இருந்தார்.

தரையில் இறங்கும் விமானங்கள் இந்துமதியால் 1982-ல் ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதப்பட்டு பின்னர் நூல்வடிவம் பெற்றது. பொதுவாசிப்புக்குரிய படைப்பு எனினும் நாடகத்தன்மை கொண்ட நிகழ்வுகளோ செயற்கையான உணர்வுகளோ இல்லாமல் எளிய உரையாடல்கள், ரசனையின் பரிமாற்றங்கள் வழியாகச் சென்று நிறைவுறுகிறது. எண்பதுகளின் உணர்வுநிலைகளை மிகச்சரியாக வெளிப்படுத்திய பொதுவாசிப்புக்குரிய நூல்களில் ஒன்று என அடையாளப்படுத்தப்படுகிறது (நன்றி: ஜெ. விக்கி)

இந்த நாவல், துரை இயக்கி அஜித் நடித்த திரைப்படமான ‘முகவரி’யை எனக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தது. இசைத்துறையில் ஆர்வமும் திறமையும் கொண்ட ஓர் இளைஞன் சினிமாவில் முட்டி மோதி தோற்றுப் போய் குடும்பச் சூழல் காரணமாக இறுதியில் பணிக்குச் செல்லும் கதை. இந்துமதியின் நாவலில் இருந்து துரை தூண்டுதல் பெற்றிருந்தாலும் ஆச்சரியமில்லை. அண்ணன், அண்ணி பாத்திரம் உட்பட திரைப்படத்திற்கும் நாவலுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இந்த நாவல், தொலைக்காட்சி தொடராக படமாக்கப்பட்ட போது விஸ்வம் பாத்திரத்தில் ரகுவரன் நடித்திருந்தார் என்று நினைவு. ஆனால் ‘முகவரி’யில் நாயகனுக்கு அண்ணனாக, அதாவது பரசு பாத்திரத்தை அவர் ஏற்றிருந்தார். (நன்றி: பிச்சைப்பாத்திரம் சுரேஷ் கண்ணன்)

வலைபரப்பு – உங்களுக்குப் பிடித்த பாட்காஸ்டிங் வலையொலி நிரலி வழியாகக் கேட்கலாம்
காணொளி – யூடியுப் கன்னல் வழியாகப் பார்க்கலாம்.

சொல்வனம் ஒலிவனம் வழியாக: தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி : ஒவ்வொரு புதன்கிழமையும் கேட்கத் தவறாதீர்கள்!

யார் தெரியுமா? நான்தான்!

கேள்வி: “முதலில் கதை எழுதலாமா? கட்டுரை எழுதலாமா?”

கல்கி பதில்: “கதை எழுதுவதை விடக் கட்டுரை எழுதுவதுதான் நல்லது என்பது என்னுடைய அபிப்பிராயம். ஏனென்றால், கதை எழுதுவது கஷ்டம். கதை எழுதுவதற்கு முதலாவது கதை ஒன்று வேண்டும். அது கிடைப்பது லேசல்ல. பிறகு அதை வைத்துக் கொண்டு சுவாரஸ்யமாக எழுத வேண்டும். கொஞ்சம் காது மூக்கு வைக்கலாமே தவிர, கதையின் மத்திய சம்பவத்தை விட்டு அதிக தூரம் போக முடியாது. இன்னொரு பெரிய தொந்தரவு இருக்கிறது. கதையென்றால் ‘நன்றாயிருக்கிறது. இல்லை’ என்பதாகச் சுலபமாய்ப் பத்திரிகையாசிரியர் தீர்மானித்து விடுவார். பத்திரிகாசிரியர் மீது பழி வாங்கும் விருப்பம் உனக்கிருந்தால் கட்டுரை எழுதுவதுதான் நல்லது. அது சுலபமும் கூட…

கட்டுரை எழுதுவதற்கு வரம்பு ஒன்று வைத்துக் கொள்வது அவசியம் இல்லை. எதிலேயோ பிடித்து, எதிலேயோ முடிக்கலாம். கட்டுரையின் தலைப்புக்கும், கட்டுரையின் விஷயத்திற்கும் சம்பந்தம் இருக்கவேண்டிய அவசியமில்லை. இந்தச் சம்பந்தம் எவ்வளவுக்குக் குறைவாயிருக்கிறதோ, அவ்வளவுக்கு நன்றாயிருப்பதாய் ஜனங்கள் எண்ணிக் கொள்வார்கள். அத்தகைய கட்டுரைகளைப் பார்க்கும் பத்திரிகாசிரியர்களும் கொஞ்ச தூரம் படிப்பதற்குள் குழப்பமடைந்து விடுவார்கள். அதைப் படிக்கும் தொல்லையை விடப் பிரசுரித்து விடுவது நல்லதென்று தீர்மானித்து விடுவார்கள்!”

*

தமிழில் சிறு பத்திரிகைகள்: வல்லிக்கண்ணன்

கேள்வி: “பத்திரிகாசிரியர்களுக்கு எவ்வாறு கடிதம் எழுத வேண்டும்?”

கல்கி பதில்: “கீழே சில நகல் கடிதங்கள் கொடுத்திருக்கிறேன். அவைகளில் ஏதேனும் ஒன்றைத் தழுவிக் கடிதம் எழுதலாம்:

* இது என் ஆயுளிலேயே நான் முதன் முதலாக எழுதியது. ஆதலால், இதில் குற்றங்குறைகள் இருந்தாலும் சீர்திருத்தி வெளியிட்டு ஊக்கமளிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

* அன்பீர்! சென்ற முப்பத்திரண்டு வருஷ காலமாய் நான் பல தமிழ்ப் பத்திரிகைகளுக்கும் விஷயதானம் புரிந்து வைத்திருக்கிறேன் என கட்டுரைகள் வெளிவந்த பத்திரிகைகள் எல்லாம் மாண்டு போயின. நான் மட்டும் உயிரோடிருக்கிறேன். ஆகையால், இத்துடன் அனுப்பியுள்ள கட்டுரையைத் தவறாது வெளியிடவும்.

* என் வாழ்நாளில் ஒரு கட்டுரையாவது எழுதிப் பத்திரிகையில் வெளியிட வேண்டுமென்பது என் ஜீவிய மனோரதம். ஆகையால், இந்தக் கட்டுரையை அடுத்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி இதழில் அவசியம் வெளியிட்டு என் மனோரதத்தை நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.

* மானேஜர் அவர்களுக்கு, நான் உங்களுடைய 17,235-வது சந்தாதாரர். இந்தக் கதையை நீங்கள் வெளியிட்டால், எங்கள் சிநேகிதர்களிடம் சொல்லி, அவர்களையும் சந்தாதாரராகச் செய்வேன்.

* ஐயா! நான் ஒரு ஜரிஜனன். உங்கள் பத்திரிகை ஹரிஜனங்களுக்காகப் பாடுபடுவது உண்மையானால், நான் அனுப்பி இருக்கும் இந்தக் கட்டுரையைப் பிரசுரிக்க வேண்டியது. இல்லாவிட்டால், உங்களுடைய குட்டு வெளியாகிவிடும்!

*

– ஆனந்த விகடன்
15.01.1933
‘யார் தெரியுமா? நான்தான்!’ என்னும் தலைப்பில் வெளியானது

பூர்விகரான புலவர்

எழுத்தாளர் அம்பையைக் குறித்த தமிழ்.விக்கி பதிவை பார்த்தேன். அதன் பிறகு கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவையும் பார்த்தேன்.

இரண்டுமே திருப்தி தரவில்லை. இரண்டிலுமே கணக்கு இருக்கிறது. மாற்றங்களைச் செய்யலாம். அதன் பிறகு அந்தப் பரிந்துரைகளை திருத்துவோரும் ஒப்பளிப்பவரும் சான்றுரைஞரும் தாண்டி வர வேண்டும். வந்தாலும் நிலைக்க வேண்டும்.

அம்பை என்றால் புயல்.

அம்பை என்றால் ஸ்பாரோ.

அம்பை என்றால் காலச்சுவடு பேட்டி.

அம்பை என்றால் இயக்கம், செயல்பாடு, வேகம், பூரணம்.

இதையெல்லாம் முழுமையாக அம்பை ஈடுபடுவது போல் கச்சிதமாக, முழுமையாக எழுதவேண்டும். இதையெல்லாம் நினைத்தால் கூகிளே சிறப்பென தோன்றுகிறது.

தொடர்புள்ள செய்தி: Google and the Internet Archive are the first customers to gain commercial access to Wikipedia content

இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம்.

என். ஆர். தாசன் என்பவரைத் தேடுகிறீர்கள். இவருக்கு பெரிய இலக்கிய இடம் இல்லை. கண்ணதாசன் பத்திரிகையில் எழுதிக் குவித்தவர். கே.என்,சிவராமன், பாவை சந்திரன், கோலப்பன், மணா, நா.கதிர்வேலன், கடற்கரய் போல் அந்த நாளில் பரவலாக அறியப்பட்டவர். சிறுபத்திரிகை ஆசிரியர். புத்தக, பத்திரிகை உலகில் தெரிந்திருந்தவர்.

இந்த இதழாளர்களை, எழுதிக் குவிப்பவர்களை, அன்றைய பா. ராகவர்களை நினைக்கும்போது தாமரை மணாளன் நினைவிற்கு வந்தார். அவருக்கும் எந்த விக்கியிலும் இடமில்லை. அசல் விக்கிபிடியாவைத் தேடினேன். அங்குமில்லை; புதிய ஜெயமோகன் விக்கியிலும் இடமில்லை. தாமரைமணாளன் – பொன். பாஸ்கர மார்த்தாண்டன் என்று பக்தி சொட்ட பரணீதரன் ஆக மாறுவார். சுஜாதா மாதிரி ‘கல்கி’ இதழில் சில்லுக்கருப்பட்டி தொடர் எழுதுவார்.

இதெல்லாம் போகட்டும்.

எந்த விக்கியிலும் என் பெயரும் இல்லை சார்.

உன் கத எனக்கெதுக்கு மாமா…

என் சோகக் கதயக் கேளு தாய்க்குலமே!