Tag Archives: Cinema

ரெட்டை வால் குருவி – திரைப்படம்

Titles_Arivumathy_Balu_Magendhira_director_Rettai-Vaal-Kuruvi_Movie_Films_Cinema

அந்தக் கால திரைப்படம், அக்கால வாழ்க்கை, எண்பதுகளின் உடைகளும் பாவனைகளும் என்று நொஸ்டால்ஜியாவில் மூழ்கினால், கைகொடுப்பதற்கு எப்பொழுதுமே பாலு மகேந்திரா இருக்கிறார்.

பள்ளிப்பருவத்தை திரும்பி பார்த்தால் ‘அழியாத கோலங்கள்’ கிடைக்கும். அந்தக் காலத்தில் ஸ்கூல் டீச்சரை நினைத்து ஏங்காத ஆண்கள், ரத்தம் உறிஞ்சாத கொசுக்கள் போல் காணக் கிடைக்க மாட்டார்கள்.

மூடுபனி’ இன்னொரு விதமான பழைமை நினைவுகளைக் கிளறும் கதை. அம்மா கோந்து; தாய்மையை மனைவியிடம் தேடும் குழந்தை மனதுடன் சிக்கல்களும் நிறைந்த பிரதாப் போத்தன் கிடைத்தார்.

இந்த trilogyஇன் மூன்றாம் வடிவமாக ‘மூன்றாம் பிறை’. வளர்ந்த, நாகரிகமான பெண், தன்னுடைய பால்ய கால, சிறுவயதிற்கு திரும்ப நேரிடுகிறது. அதை அப்படியே கொண்டாடி, குட்டிப்பாப்பாவாகவே வைத்திருக்கும், ரசிக்கும் கமல் கிடைத்தார்.

இதன் முழுமையான இறுதி வடிவமாக ‘ரெட்டை வால் குருவி’ திரைப்படத்தைப் பார்க்கிறேன்.

Rettai-Vaal-Kuruvi_Movie_Films_Cinema

இந்தப் படத்தின் துவக்கத்தில் வரும் ‘சுதந்திரத்தை வாங்கிப்புட்டோம்; அதை வாங்கி சுக்குநூறா உடைச்சுப்புட்டோம்’ பாடலில், பாலு மஹேந்திராவின் பிற்கால மனைவி மௌனிகா அறிமுகமாகிறார். இன்னொரு காட்சியில், ’மகராஜனோடு ராணி வந்து சேரும்’ என்று சதி லீலாவதியில் நாயகியான ஹீரா, ராதிகாவின் தோழியாக, ஹோட்டலில் உடன் சாப்பிடுபவராக எட்டிப் பார்க்கிறார். அந்தக் காலப் படங்களில், அந்தக் காலத்தில் பிரபலமாகாத பிரபலங்களின் அந்தக் கால தோற்றங்களை மேக்கப்பும் க்ளோசப்பும் இல்லாமல் பார்ப்பது, பாதி வெந்தும் வேகாத உருண்டோடும் மைசூர்பாகை சுடச்சுட வாயில் போட்டுக் கொள்வது போல் சுவையானது.

உதவி இயக்குநராக அறிவுமதி பணியாற்றி இருக்கிறார். பாஸ்டன் பக்கம் வந்தபோது விசாரித்து இருக்கலாம். தவறவிட்டுவிட்டேன்.

’தேவர் மகன்’ திரைப்படத்தில் “காத்துதாங்க வருது” என்று ரேவதி, திக்கித் திணறிப் பாடும் ‘இஞ்சி இடுப்பழகா’ பாடலுக்கு முன்னோடி போல் ‘திங்கார வேலனே… தேவா’ என்று காமெடி செய்கிறார்கள். எண்பதுகளில் வந்த படத்தில் கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் பற்றிய அசத்தலான டயலாக் வருகிறது. இனி யாராவது, “நீங்க எப்படி பிரொகிரமரா ஆனீங்க ப்ரோ?” எனக் கேட்டால், “ரெட்டை வால் குருவி படத்தில் ஓப்பனிங் சாங் முடிந்தவுடன் ஒரு விடலைப் பய சொல்வான். அதைக் கேட்டுத்தான்!” என்று தயங்காமல் பதில் சொல்லலாம்.

படம் முழுக்க எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள். பல் தெரிய, முகம் மலர்ந்து சிரிக்கிறார்கள். தானாகவே நடனமாடுகிறார்கள். பாடலைக் கேட்டால் உற்சாகம் அடைகிறார்கள். சாந்தமான துள்ளல் என்பதை குழந்தையின் கை கால் உதைத்து பொக்கைவாய் புன்னகையாகச் சொல்லத் தோன்றுகிறது.

படத்தில் இரு வீடுகள். பெரிய வீடு, அர்ச்சனாவின் வீடு. அந்த வீடு அந்தக் காலத்தில் மட்டுமல்ல, இந்தக் காலத்தில் கூட கனவு இல்லம். ’அஞ்சலி’ ரகுவரன் வருவதற்கு பன்னெடுங்காலம் முன்பே பந்தாவான, ஆனால் நடுத்தர வர்க்கத்தையும் பிரதிபலிக்கும் இல்லம். மினிமலிஸ்டிக் பொருள்கள். பார்த்து பார்த்து இருக்கும் அலங்காரம். ஐந்தாவது மாடியில் விசாலமான அறையும், திறந்த சமையல் வெளியும் கொண்ட அந்தப்புரம். வீட்டில் இருந்து பார்த்தால் தூய நதி (கூவம் தான்; அடையாறு அழுக்குதான்; ஆனால், தெளிவாக இருந்தது போல் கண்ணுக்குத் தெரியும் சென்னை). செக்ஸ் முடிந்தபிறகு பசிக்கு ஃப்ரிட்ஜைத் திறக்கும் தம்பதியினர். ’டூயட்’ பாட கதரி கோபால்நாத் சாக்ஸஃபோனில் ஜாஸ் இசைக்கிறார்.

அந்த வீட்டிற்கே பாந்தம் சேர்ப்பது ‘அர்ச்சனா’ கதாபத்திரம். “ஏன்யா…” என அவர் குழையும்போது பாதாம் அல்வாவை ஃபிரான்ஸில் கிண்டுவது போல் சுண்டியிழுக்கிறது. இந்த கதாபாத்திரம் ”மூன்றாம் பிறை”யின் சில்க் ஸ்மிதா போல் கவர்ச்சி கொண்டவள். ஆனால், ”மூடுபனி”யின் ஷோபா போல் இல்லத்தரசி பக்குவத்தில் இருப்பவள். பெஸ்ட் ஆஃப் எல்லா பாலு மகேந்திரா ஹீரோயின்ஸ்.

நான் பார்த்ததிலே இந்த துளசி கதாநாயகியைத்தான் ஏன் சிறந்தது என்று இப்படி சொல்கிறேன்?

Rettai_Vaal_Kuruvi_Archana_Mohan_Films_Balu_Mahendra_Songs_Cinema

இந்தக் கால மாந்தர் அணியும் பேண்டோரா போன்ற மரகதமும் மாணிக்கமும் பதித்த கல் வளையங்களை அன்றே அணிந்தவர் துளசி. அழகாக, நீட்டமாக, ‘இரண்டு குடங்களைக் கொண்ட தம்பூராவை மீட்டிச் செல்வதற்கான’ நாத தும்பிகளாக பின்னி, கருங்கூந்தல் கொண்டவர் துளசி. எப்பொழுதும் புடைவையிலே வலம் வருபவர். (அதற்காக, “அப்பொழுது கூடவா?” என்றால், அதற்கு பதில் இல்லைதான்) தலை நிறைய மல்லிகைப் பூ வைத்திருப்பவர் துளசி. தாயுமானவனாக கணவன் பின்னி விட தலை தருபவர் துளசி. பசியில் இருக்கும் கணவனுக்கு டைனிங் டேபிள் அமர்ந்து ஊட்டி விடுபவர் துளசி.

அதான்… சொல்லிவிட்டேனே… நொஸ்டால்ஜியாவிற்கு கை, கால், புருவம், இமை, பொட்டு, உதடு எல்லாம் வைத்தால் துளசி = அர்ச்சனா.

இரண்டாம் வீடு, சின்ன வீடு. அந்த வீட்டிற்கு, ராதிகா தலைவி. கள்ளக் காதலி. அம்மா இல்லாதவர். அப்பாவும் மைக்ரோ பருந்தாக கண்காணிக்கப் படாதவர். செக்ஸ் எஜுகேஷன் தேவையா என்னும் கேள்விக்கு பதில் சொல்லும் திராணி கொண்டவர் ’ராதா’ என்னும் ராதிகா கதாபாத்திரம். இன்றைய காலகட்டத்தில், பலான படம் பார்க்கத் தடை வரும் காலகட்டத்தில், இவ்வளவு தைரியமாக தொலைக்காட்சியில் முகம்காட்டி கருத்து சொல்லும் பெண்மணி என்பது மார்கழியில் மாம்பழம் கிடைப்பது போல் அரிய சீஸன்.

Rettai-Vaal-Kuruvi_Movie_Films_Cinema_Radhika_Mohan_Baalu_Mahendira

சில படங்களுக்கு பாடல்கள் பலம். சில படங்களுக்கு நாயகரோ, நாயகியோ பலம். சில படங்களுக்கு க்ளைமேக்ஸ் பலம். சில படங்களுக்கு சண்டைக்காட்சிகள் பலம். சில படங்களுக்கு மசாலா பலம். இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் – வசனம்.

’விஷயம் முடிஞ்சாப் போதுமே… அப்புறம் தொட வுடமாட்டியே…’ (துளசி)
’மூக்கும் முழியுமா… இல்ல! முழியும் முழியுமா!!’ (ராதா)
– ’ஒட்டிக்கறதுக்கு மட்டும் வர…’ (யாரா இருந்தால் என்ன… நிதர்சனம் : )
’நான் பார்க்காத வியாழக்கெழமையா கண்ணு!’ (பூக்காரி – பாட்டி)

இந்தப் படத்தில் விகே ராமசாமி பாடும் டைம்லியான பாடல்களை தனியாகப் பட்டியல் போட வேண்டும்:

குற்றம் புரிந்தவன்… வாழ்க்கையில் நிம்மதி கொள்வது என்பது ஏது!?
மன்மத லீலையை வென்றார் உண்டோ?
சட்டி சுட்டதடா…

இதில் கிடைத்த மற்றொரு விநோதமான பாடல் ‘பூனைக் கண்ணை மூடிக் கொண்டால் இருண்டு போகுமோ… மியாவ்… மியாவ்!’

பல மணிரத்னம் படங்களுக்கு இந்தப் படம் முன்னோடியாக இருந்திருக்கிறது. ”அக்னி நட்சத்திரம்” படத்தில் ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா’ ஜனகராஜ் + வி கே ராமசாமி நகைச்சுவைக்கு, இந்தப் படம் கால்கோள் இட்டிருக்கிறது. ”ஓகே கண்மணி” படத்தில் லிவிங் டுகெதர், என்று கல்யாணம் ஆவதற்கு முன் சேர்ந்து வாழ்வதற்கான அஸ்திவாரங்கள், 1987ல் போடப்பட்டிருக்கிறது. கமல்ஹாசனின் எண்ணற்ற படங்களில் வந்த கிரேசி மோகன் ஸ்டைல் ஆள் மாறாட்ட பிரச்சினை நகைச்சுவை இங்கே வெள்ளித்திரை கண்டிருக்கிறது. காத்தாடி ராமமூர்த்தி போட்ட ‘அய்யா… அம்மா… அம்மம்மா’ நடை ஜோக்குகள் சரளமாக உருவப்பட்டு உலாவுகின்றன. நேற்றைய ஷங்கர் படமான ரஜினியின் ‘சிவாஜி’ படத்தில் டாக்ஸிக்குள் வேட்டி மாற்றும் நகைச்சுவை, இந்தப் படத்தில் தோன்றி இருக்கிறது.

காதலன்’ திரைப்படத்தில் எஸ்பிபி பாடியே கரைக்கும் “ஞாயிறு என்பது கண்ணாக” கூட இங்கே விகே ராமசாமியின் வெண்கலக் குரலில் “ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்க வந்தாள்” என்று ஒலிக்கிறது. அவரின் பாடல்கள் படம் நெடுக வருகின்றன.

மேலேயுள்ள பாட்டில் ‘சங்கர சங்கர சம்போ… இந்த சம்சாரி விஷயத்தில் ஏன் இந்த வம்போ?!’ என அவர் குத்தும்போது ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ சிந்து நிழலாடுகிறது.

அந்தக் காலத்தில் தமிழ் நன்றாகப் பேசினார்கள். சேரியில் தமிழ் நன்றாக புழங்கியது. குடிசை வாழ் மக்களுக்கு ‘செக்ஸ்’ என்னும் வார்த்தைக்கு அர்த்தமே தெரியவில்லை. பாலுறவு என்றாலும் புரியவில்லை. கலவி என்றாலும் தெரியவில்லை. அந்தக் காலத்தில் தமிழ் கொச்சைப்படுத்தவில்லை. எல்லோரும் டிரேட் ஃபேர் சென்றார்கள். வீட்டிற்கு ஒரு சாலிடேர் டிவி வைத்திருந்தார்கள்.

கிடைக்காததை எண்ணி ஏங்குவது என்பது நொஸ்டால்ஜியா எனப்படும். திருமணம் ஆனபின் இன்னொரு பெண்ணுக்கு ஆசைப்படுவது என்பது ‘கோபி’த்தனம் எனப்படும். சைக்கிளில் டபுள்ஸ் போகலாம். ரங்கராட்டினம் சுற்றலாம். பாடகியுடன் ஊர் சுற்றலாம். தட்டிக் கேட்பார் கிடையாது. அதிகாரபூர்வ மனைவியின் ஒப்புதலும் உண்டு. குழந்தை ஒன்றுக்கிருந்தால் டயாப்பர் மாற்றும் சிக்கலும் கிடையாது. வேலையில் அரட்டையும் உண்டு. இப்படி எல்லாம் கற்பனையில் வாழ்வதுதானே சினிமா? அந்தக் செல்லுலாயிட் கற்பனையை தமிழ் முலாம் பூசி கலைப்படைப்பாகத் தருவதற்காகத்தானே பாலு மகேந்திரா!

ஐ மிஸ் நொஸ்டால்ஜியா அண்ட் அன்கரப்டட் வுமன். ஐ மீன்… ஐ மிஸ் பாலு.

Million Dollar Arm

மில்லியன் டாலர் புஜம்

லாரி ஓட்டுபவரின் மகன், பல்லாயிரம் கோடி இரசிகர்களின் கனவு நாயகனாக மிளிர முடியுமா? கான்பூரின் அருகே உள்ள கிராமத்தில் இருப்பவரும்; லக்னௌவில் இருந்து காத தூரம் இருக்கும் குக்கிராமத்தில் இருப்பவரும்; அமெரிக்கா வந்து அங்கே பேஸ்பால் பந்து வீசும் நட்சத்திரங்கள் ஆவார்களா? ஒன்பது குழந்தைகள் உள்ள வீட்டில் ஒற்றை அறையில் வளர்பவர், அமெரிக்கர்களுக்கு சொந்தமான அவர்களுடைய விளையாட்டில், அவர்களுக்கு எதிராக மிளிர்வது சாத்தியமா?

இந்த மாதிரி சம்பவங்களைக் கோர்த்து எவராவது புனைவு அமைத்திருந்தால், இதெல்லாம் கதையிலும் சினிமாவிலும் மட்டுமே நடக்கும் என்றிருப்பேன். ஆனால், நிஜத்தில் நடந்திருக்கிறது. வாரநாசிக்கு அருகில் இருக்கும் ஊரில் பிறந்து வளர்ந்த தினேஷ் படேலும், ’கம்பள நகரம்’ என்றழைக்கப்படும் பாதோஹி நகரத்தில் ஒன்பதில் ஒருவராக பிறந்த ரிங்கு சிங்கும் – அமெரிக்கா வருகிறார்கள். பிட்ஸ்பர்க் நகர அணியில் பந்து போடுகிறார்கள்.

இந்த உண்மைக் கதையைப் பின்னணியாக வைத்து ”மில்லியன் டாலர் புஜம்” (Million Dollar Arm) வெளிவந்திருக்கிறது. இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரெஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்திற்கு இசையமைக்க ஒத்துக் கொண்டேபோது கொடுத்த பேட்டியில் ரெகுமான் இவ்வாறு சொல்கிறார்: ”ஸ்லம் டாக் மில்லியனரு’க்குப் பிறகு ஆங்கிலப் படங்களுக்கு இசையமைக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. ‘கப்பிள்ஸ் ரிட்ரீட்’, ’வாரியர்ஸ் ஆஃப் ஹெவன்’, ‘127 அவர்ஸ்’, ’எர்த்’, ‘பீப்பிள் லைக் அஸ்’னு இப்படி நிறைய நிறைய! அதில் நான் விரும்பித் தேர்ந்தெடுத்தது ‘127 அவர்ஸ்’ மட்டும்தான். அது ஆஸ்கர் பரிந்துரை வரை போனது. ஆனால், அடுத்த மூன்று வருடங்களுக்கு இந்தியாவை அடிப்படையாக வைத்து வரும் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்க நான் ஒப்புக்கொள்ளவில்லை. அப்படி, ஒத்துக் கொண்டால், ’ரெஹ்மானை – தெற்காசியா களத்தில் நடக்கும் கதைகளுக்குத்தான் பயன்படுத்தலாம்’ எனத் தேங்கிப் போயிருப்பேன். மேலும், இந்தியச் சூழலில் இசையமைக்க, எனக்கு தமிழும் ஹிந்தியும் இருக்கின்றன. அவற்றிலும் நான் தொடர்ந்து படங்கள் செய்து கொண்டுதானே இருக்கிறேன். நாலு வருடங்களுக்குப் பின்னால் மறுபடியும் ஒரு இங்கிலீஷ் படம் பண்ணலாம்னு நினைச்சேன். அந்த சமயத்தில் ‘மில்லியன் டாலர் ஆர்ம்’ படத்தின் இயக்குநர் கிரெய்க் கில்லஸ்ப்பியும் என்னை அணுகினார். இது இந்தியாவில் நடக்கும் கதை, வால்ட் டிஸ்னி தயாரிப்புனு நிறைய ஊக்கப்படுத்தும் விஷயங்கள் இந்தப் படைப்பில் இருந்தன. இது விளையாட்டு குறித்த திரைப்படம்தான். ஆனால், உள்ளுக்குள்ள ரொம்ப அற்புதமான இன்னொரு கதையும் மனித மனங்களின் ஊசலாட்டங்களும் ஓடுகிறது. ‘லகான்’ மாதிரினு சொல்லலாம்.”

படத்தில் எல்லா மொழிகளிலும் பாடல்கள் வருகிறது. படத்தின் இறுதியில் ‘என் சுவாசக் காற்றே’ படத்தில் இடம்பெற்ற சித்ராவும் உன்னிகிருஷ்ணனும் பாடிய ‘திறக்காதக் காட்டுக்குள்ளே’ பாடல் உணர்ச்சிப்பிழம்பான கணத்தில் ஒலிக்கிறது. படத்தின் நடுவே பாங்ரா பஞ்சாபி, டிஸ்கொத்தே ஹிந்தி, ஆங்கில ராப் என கலவையாக – எல்லா மொழிகளும் ரசனைகளும் இசைப்பிரிவுகளும் வருகின்றன.

இந்தப் படம் ஆஸ்கார் விருதுகளுக்கான நெடும் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், மூன்று/நான்கு பேர் மட்டுமே சொல்லப்படும் இறுதிப் பரிந்துரையில் இடம்பிடிக்கப் போவதில்லை என வல்லுநர்கள் கருதுகிறார்கள். ஸ்டீஃபன் ஹாகிங் வாழ்க்கையை சொல்லிய ‘தியரி ஆஃப் எவரிதிங்’ திரைப்படத்திற்கு இசையமைத்த யோஹான் ஜோஹான்ஸன், அல்லது இண்டெர்ஸ்டெல்லார் படத்தின் ஹான்ஸ் ஜிம்மர் அல்லது ஆலன் டூரிங் வாழ்க்கையை திரையாக்கிய ’தி இமிடேஷன் கேம்’ படத்தின் அலெக்ஸாண்டர் என முன்னிறுத்துகிறார்கள்.

ஆஸ்கார் விருதுகளுக்கு வாக்களிப்பவர்களுக்கு மறதி அதிகம். டிசம்பர் மாதத்தில் திரைப்படம் வெளியானால் மட்டுமே நினைவில் நிற்கும். ”மில்லியன் டாலர் புஜம்” திரைப்படமோ மே மாதமே வெளியாகி, இப்பொழுது திரையரங்குகளை விட்டு வெளியேறி விட்டது. இந்த நிலையில், அந்தப் படத்திற்கு எந்தப் பரிந்துரையும் கிடைப்பது சந்தேகமே. கோச்சடையான், ஐ போன்ற திரைப்படங்களுக்காகவும் ஏ ஆர் ரெஹ்மானின் பெயர் ஆஸ்கார் நீள்பட்டியல் பரிந்துரையில் இடம் பெற்றிருப்பதால், ‘மில்லியன் டாலர் ஆர்ம்’ பரிந்துரையையும் பத்தோடு பதினொன்றாகக் கருதி விட்டுவிடலாம்.

அது ஆஸ்கார் விருதிற்கான சாஸ்திரோப்தமான பட்டியல். இனி ஏ ஆர் ரெஹ்மானின் கோலோச்சல் குறித்த பாமரனின் பார்வை.

துவக்கத்தில் டிஸ்னியின் கோட்டை வரும்போதே பட்டாசு கிளம்பி விடுகிறது. இராணிகளும் மஹாராஜாக்களும் துள்ளலாக வெடி வெடிப்பது போல் ஐரோப்பிய பவனங்களுக்கு இந்திய ‘ஸ…ஸா… ஸரி’ வரும்போதே ”இது நம்ம இசை” என்று தோன்றவைத்து விடுகிறது. சிக்கன் டிக்கா மசாலாவில் இருக்கும் மணம் போல், பாரதத்திற்கேயுரிய வாசம்.

பதினான்காவது நிமிடத்தில் அந்த டிக்கா மசாலாவில் கொஞ்சம் சாம்பாரும் நிறைய தஹியும் கொத்து பரோட்டாவும் ஒருங்கே ஓங்கி ஒலிக்கிறது. சத்தமான இந்தியா. கசகச இந்தியா. சல்பேட்டா வாசனையான இந்தியா. கொண்டாட்ட இந்தியா. பரபர ஓட்டத்தின் நடுவே சாந்தமான இந்தியா. இப்படியெல்லாம் எழுத முடிகிறது… இதையெல்லாம் ஒலியில் கொண்டு வாருங்கள் என்று இயக்குநர் சொன்னாரா அல்லது இந்தியா என்றால் இதுதான் நாதம் என்று ஏ ஆர் ரெஹ்மான் சொன்னாரா? தெரியவில்லை. கேட்டுப் பார்த்தால் இந்தியா ஒலிக்கிறது. ஒளி கண்ணில் படாவிட்டால், மொழி புரியாவிட்ட்டால் கூட, அந்த லயம் காட்டிக் கொடுக்குமாறு அமைக்கப்பட்ட துள்ளலோசை.

அடுத்த ஓட்டம் இருபத்தி இரண்டாம் நிமிடம். ’சைய்யா சையா’ பாடிய சுக்விந்தர் சிங் ஒலிக்கிறார். அதே ஆட்டம்; பாட்டம். நிஜ நாடகம் தோன்றுவதற்கான ஒத்திகை நடக்கும் இடத்தை அறிமுகம் செய்யும் உறுமும் இசை.

அங்கே விட்டதை இருபத்தைந்தாம் நிமிடத்தில் சுக்வீந்த சிங் தொடர்கிறார். அவரை அப்படியே மாற்றி மேற்கத்திய இசைக்குத் தாவி விடுகிறார். இக்கி (Iggy Azalea) இங்கு வருகிறார்.

முப்பத்தி மூன்றில் ரெஹ்மானின் அமைதியான பாலட் ஒலிக்கிறது. பம்பாய் திரைப்படத்தில் ‘கண்ணாளனே’ துவக்கத்தில் வரும் இஸ்லாமிய சங்கீதம் போல்.

இனிமேல் திரைப்படத்தில் உற்சாகம் பிறக்க வேண்டும். ஏழைச் சிறுவர்கள் பந்து வீசும்போது அவர்களை ஒட்டி பாசமும், ஒட்டுதலும், ஜெயிக்க வேண்டுமே என்னும் ஏக்கமும் உண்டாக வேண்டும். டிஸ்னிக் கோட்டை வந்ததே… அதே இசை இப்பொழுது.

நாற்பதாவது நிமிடத்தில் நிஜப் போட்டி. இது ஏ ஆர் ரெஹ்மானின் சொந்த வீடு. முதல் படத்தில் ‘ஒட்டகத்தைக் கட்டிக்கோ’வில் ஆரம்பித்து மணி ரத்னத்திற்கு ’ருக்குமணி ருக்மிணி’ அயிட்டம் பாட்டு போட்டது போல் இலா அர்ஜுனும் அல்கா யாக்னிக்கும் குத்துகிறார்கள். அவர்கள் குத்துப்பாட்டு எப்பொழுது முடிகிறது, எப்பொழுது லகான் திரைப்படத்தில் வரும் “பார் பார் ஹோ…!! ஹஜார் பார் ஹோ!!!” வருகிறது என உணர முடியாத உருமாற்றம். அப்படியே, அந்த வீரர்களுக்காக கரகோஷமிடுகிறோம்.

நாற்பத்தியெட்டாம் நிமிடத்தில் வீடு திரும்புதல். அயல்நாடு செல்வதற்கு முன் வீட்டில் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டு விடை பெறும் தருணத்திற்கான முன்னுரையாக கொண்டாட்ட பாங்ரா. அது அப்படியே, உருக்கமான பிரிவுபசார பாந்தமாக மாறுகிறது. அங்கிருந்து அமெரிக்காவின் ராப், கெண்ட்ரிக் லமார் குரலில் தோன்றுகிறது.

இதன் பிறகு கிட்டத்தட்ட படம் முழுமையாக ஆட்கொள்கிறது. இசை தனியாக, பாடல் தனியாக, பாடகர் தனியாக துருத்திக் கொண்டு தெரிவதில்லை.

இசை ஒலிக்காமல் மௌனமாக இருக்க வேண்டிய நேரம். தோல்வியுறும் போது சந்திக்கும் நிசப்தம். அதிர்ச்சியும் பிரிவும் சொல்லும் குரல் எல்லாமே இருக்கிறது. ஆனால், இந்தியப் பகுதிகள் போல் “நான் ரெஹ்மான். நான் இங்கே இருக்கிறேன்” என்பது தெரிவதில்லை.

படத்தின் இறுதியில் இருவருக்கும் கடைசி வாய்ப்பு. இதில் வென்றால்தான் அமெரிக்கா கனவு பலிக்கும். தோற்றால் கூனிக் குறுக நேரிடும். இசை மெதுவாகவே ஆரம்பிக்கிறது. கொஞ்சம் ஹம்மிங். கொஞ்சம் ‘அ…ஆ…’. அப்படியே சட்டென்று ரிங்குவின் பந்து வேகமாகப் பாய்வது போல், தினேஷின் இதயம் துடிப்பது போல் துள்ளுகிறது. கையிலிருந்து ஏவப்பட்ட வில்லாக பாய்கிறது.

இந்தியர்கள் வெற்றிக்கான முதல் படியில் கால் வைத்ததை ஒலியிலும் திரையிலும் கலந்துருகிய உச்சகட்ட தருணமான படத்தின் இறுதியில் நிஜக்கதையிலும் வல்லவர்கள் வெற்றி கண்டார்கள் என்பதால் கண்கள் கலங்கியதா… அல்லது ரெஹ்மானின் இசையில் மனம் உருகியதா… தெரியவில்லை. ஆனால், ரெஹ்மான் தெரிந்தார். ஆஸ்கார் தெரியவில்லை. ஆனால், மீண்டும் மீண்டும் கேட்க வைத்து மயங்க வைக்கும் இசை தெரிந்தது. என்ன சுருதி, என்ன ராகம், என்ன தாளம், என்ன ஜானர் என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், இதயத்தைத் தொடும் இசை தெரிந்தது.

That Girl In Yellow Boots: திரைப்பட விமர்சனம்

That Girl In Yellow Boots_Kalki_Anurag_Kashyap_Movies_Films_Cinema
’கற்றது தமிழ் எம்.ஏ.’ இயக்குநர் ராமின் ’தங்க மீன்கள்’ இன்று வரவில்லை. எனவே, அதற்கு மாற்றாக That Girl In Yellow Boots படத்தைப் பார்த்தேன். இதுவும் தந்தைக்கும் மகளுக்குமான கதை.

ஸ்மிதா பட்டீலையும் ஷபனா ஆஸ்மியையும் எண்பதுகளில் கொண்டாடினால், கொன்கொனா சென்னையும் நந்திதா தாஸையும் இப்பொழுது இவர்கள் நடித்த படங்களை, ”இன்னார் இருக்கிறார்கள்… ஏமாற்ற மாட்டார்கள்” என்னும் நம்பிக்கையுடன் பார்க்க முடிகிறது. இருவரையும் அலேக்காக சாப்பிடுகிற மாதிரி வந்திருக்கிறார் கல்கி கோச்லின். அவரே கதை, வசனம் என்று சகல துறைகளிலும் நுழைந்திருக்கிறார்.

இயக்கத்தை மட்டும் Black Friday & தேவ் டி புகழ் புருஷன் அனுராக் கஷ்யபிற்கு விட்டுக் கொடுத்துவிட்டார். சப்பை மேட்டரை எடுத்துக் கொண்டு எப்படி படம் பண்ணுவது என்பதை அறிய வைக்கிறார். கல்கியின் ரூத் தசை பிடித்து விடுபவர். உடலுக்கு மட்டும் ஒத்தடம் கொடுக்காமல் சகலமும் கை வேலையாக செய்கிறார். ”உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி” பாடல் சொல்கிறது. ரூத் முகபாவத்திலேயே அருவறுப்பும் அசிரத்தையும் பதற்றமும் ஏக்கமும் திரைக்கதையை நகர்த்துகிறது.

முடிவை முன்பே யூகிக்க முடிகிறது. ஆனால், அதனூடாக சுவாரசியமான கதாபாத்திரங்களின் போக்கை ஊகிக்க முடியவில்லை. போதைக்கு அடிமையான காதலன் எப்படி எதில் இருந்து மீள்கிறான்? கண்டபடி மிரட்டி பணம் கறக்கும் கன்னட மாஃபியா தாதா-விடம் இருந்து எப்படி தப்பிப்பது?

மும்பையும் முக்கிய நடிகராக ஈடு கொடுத்திருக்கிறது. பணக்காரர்களின் வெர்ஸொவா, கப்பல் உடைக்கும் சேரி துறைமுகம், ஆட்டோவும் டாக்ஸியும் ஓடும் சந்துக்கள், ஆற அமர ஊழியம் செய்யும் அரசாங்கத்தின் முகம் எல்லாம் துணை நடிகர்கள். அன்னிய நகரத்தில் முகம் தெரியாத அப்பாவை தேடும் மகளின் துப்பறிதல் நடுவே ஓஷோ வருகிறார். மகளிரின் நிலை பேசப்படுகிறது. பதின்ம வயதின் குழப்பங்கள் உணர்த்தப்படுகின்றன.

நேர்க்கோட்டில் பிரசங்கம் கலந்த பிரச்சாரம் மட்டும் காணவில்லை.

சூது கவ்வும் x எதிர் நீச்சல்

மூன்று படங்கள் பார்க்கக் கிடைத்தது. எக்கச்சக்கமாக எல்லோராலும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய ‘சூது கவ்வும்’ ஏமாற்றியது. ‘நாளைய இயக்குநரில்’ குறும்படம் நிறைய எடுத்திருந்ததால், முதல் பகுதி இயல்பாக அமைந்திருந்தது. இண்டர்வலோடு படத்தை முடித்து அனுப்பி இருக்கலாம். அதன் பிறகு குழப்பமும் சொதப்பலும் திணிப்புகளும் “படத்தை ஏண்டா ஃப்ரீயா போட்டோம்” என்று மனைவியைக் கேட்கவைத்தது.

காரை வேகமாக ஓட்டுவது என்பது குறித்த இலக்கை சுருக்கமான நேரத்தில் கடப்பது. ஆரம்பமும், முடிவும் ஒன்றே என்பதற்காக, அங்கேயே நின்று கொண்டிருந்துவிட்டு, வெற்றியடைந்து விட முடியாது. நம்ப இயலாத கதாபாத்திரங்கள் பிரச்சினையில்லை. நடக்க இயலாத சம்பவங்கள் பிரச்சினையில்லை. லோ பட்ஜெட் பிரச்சினையில்லை. விறிவிறுப்பு என்னும் பேரில் யு டர்ன் மட்டுமே அடித்துக் கொண்டு ஜெர்க் மட்டுமே தருகிறது இரண்டாம் பகுதி.

இதற்கு வசனத்தாலேயே கொன்ற ‘மூன்று பேர்; மூன்று காதல்’ கொஞ்சம் தேவலாம். எதிர்பார்த்த பாதையில் பயணித்து, பாடலுடன் ஊடலும் கொடுத்த ‘எதிர் நீச்சல்’ எவ்வளவோ தேவலாம். வசந்த்திற்கு விஷுவல் மொழி கைகூடாமல் போயிருக்கலாம். தனுஷ் தயாரிப்பு மசாலாவாக இருந்திருக்கலாம். சிவ கார்த்திகேயனுக்கு ஆட்டம் வராமல் இருந்திருக்கலாம். அர்ஜூனுக்கு ஜோதிகாவின் டூப் தேவையாக இருந்திருக்கலாம். ஆனாலும், இரண்டரை மணி நேரத்திற்கு அலுக்காமல் பார்வையாளனை உட்கார வைக்கும் கர்ம்சுத்தத்தைப் பாராட்டலாம்.

நலனின் அடுத்த பிராஜெக்டாவது டெமொ பிராடக்ட் போல் புறத்தே மட்டும் மினுக்காமல், prototype போல் டிரெய்லர் மட்டும் ருசிக்காமல், முழுக்க வேகணும்.

வித்தியாசமாக முயன்றிருக்கிறார். ஒரு மணி நேரத்திற்கு சரக்கு வைத்திருக்கிறார். தமிழ் சினிமா நகைச்சுவையில் இருந்து விலகிச் சென்றிருக்கிறார். எனக்கும் இதெல்லாம் பிடித்திருக்கிறது.

எனக்கு கவுதம் மேனன் படங்கள் மிகவும் பிடிக்கும். ஆனால், ”நடுநிசி நாய்”களை மீண்டும் முழுவதுமாகப் பார் என்றால் வதை கலந்த சலிப்பு எழும். பலாப் பழத்தை வெட்டி உண்பது போல் சூது கவ்வும் சில பகுதிகள் மிக நன்று; சில பகுதிகள் பலாப்பழச்சுளை புதுசு. சிம்பு தேவனின் இம்சை அரசனை நினைவுறுத்தும் பாடல் எல்லாம் கூட போனால் போகிறது, பலாக் கொட்டை என்று சாம்பாராக்கி விட்டு விடலாம். ஆனால், இரண்டாம் பாதியில் ஒட்டிக் கொண்டிருக்கும் சகுனிகளும் குப்பைகளும் களைய மட்டுமே கோருகின்றன.

”மதுபானக் கடை” போல் நேர்மையும் இல்லை. பேசுபொருளை மட்டும் சொல்லிய படம். பாடல் வேண்டும், துரத்தல் காட்சி வேண்டும், இரண்டரை மணி நேரம் வேண்டும், நாயகியின் அரையாடை வேண்டும் என்று எதையும் திணிக்கவில்லை. சூது கவ்வும் புத்திசாலித்தனமான உப்புமா.

John Abraham’s Madras Cafe – Movie Review

அசல் தலைப்பு: மெட்ராஸ் கஃபே
வைத்திருக்க வேண்டிய தலைப்பு: ராஜீவ் காந்தியைக் கொன்றதை ஏன் இந்தியாவால் தடுக்க முடியவில்லை என்பதற்கான சப்பைக்கட்டு

சான் ஓஸே பக்கம் போனீர்கள் என்றால் மெட்ராஸ் கஃபே நிச்சயம் எட்டிப் பாருங்கள் என்பார்கள் பே ஏரியாவசிகள். இந்தியா – இலங்கை – ஈழ முக்கோண பிரச்சினை அறிவதற்கு மெட்ராஸ் கஃபே உதவும்.

ராஜீவ் காந்தி இறந்ததற்காக நாடே வருத்தப்படுகிறது. ஆனால், எண்ணற்ற தனி மனிதர்களின் சொந்த இழப்புகளை பிரச்சார தொனியின்றி போகிற போக்கில் இந்தப் படம் இயல்பாக முன்வைப்பது பிடித்திருந்தது. அன்னிய நாட்டின் அமைதிக்காக செல்லும் தூதுவர் ஈ.பி.ஆர்.எல்.எஃப்.புக்கும் புலிகளுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு சாவது; துப்பறிபவர்களின் குடும்பம் சீரழிவது போன்றவை போகிற போக்கில் வந்து போகின்றன.

படம் என்றால் வில்லன் இருக்கவேண்டும். இதுவோ கிட்டத்தட்ட ஆவணப்படம். விறுவிறுப்பாக சம்பவங்களைக் கோர்த்து, நடுநடுவே லட்சணமான மனைவியை ஊறுகாய் போல் தொட்டுக் கொண்ட சாகசப்படம். சுட்டுவிரல் நீட்டி தப்பு செய்தவர்கள் இவர்கள்தான் என்று குற்றஞ்சாட்டாமல், என்ன நடந்தது, எப்படி நடந்தது, எப்பொழுது நடந்தது என்பதை மட்டும் விவரிக்கிறார்கள்.

இலங்கையா… அவர்கள் 1983 படுகொலைகளை நிறைவேற்றினார்கள்.
விடுதலைப் புலிகளா… அவர்கள் நிறைய முதுகில் குத்தல்களும் கண்மூடித்தனமான கொள்கைகளும் கொண்டிருந்தார்கள்.
இந்திய ராணுவமா… மேலிடத்து உத்தரவை சிரமேற்கொண்டு பணிந்தார்கள்.
உளவுத்துறையா… எவர் யாருக்கு விசுவாசமாக இருந்தார்கள் என்பது அவர்களே அறியாமல் இயங்கினார்கள்.
இந்தியாவா… எந்த இந்தியர் என்பதைப் பொறுத்து விதவிதமாக மனிதருக்கே உரிய மாபாதகங்களுடன் நடந்துகொண்டார்கள்.
ராஜீவ் காந்தியா… யேசுவிற்குப் பிறகு உலகத்தில் உதித்த மகான். புத்தர் வழியில் அகிம்சையை போதித்து சென்னைக்கு வந்தவர். மகாத்மாவிற்குப் பிறந்த இந்தியாவில் உதயமான உத்தமர்!

படத்தின் குறைகள்? சென்னைத் தமிழுக்கும் ஈழத்தமிழுக்கும் வித்தியாசம் காட்டவில்லை என்று பொங்கலாம். மட்டக்களப்பு பிரதேசங்களையும் யாழ்ப்பாணத்தையும் குழப்புகிறார்கள் எனலாம். ஜான் ஆபிரகாம் படகில் போகும்போது சவரம் செய்த வழவழ முகத்துடன் பயணிக்கிறார் என விசனிக்கலாம். எனினும், அந்த நிருபர் ஜெயா கதாபத்திரத்தை அனிதா பிரதாப் போல் கோர்த்து வைக்காத துரோகத்தை மன்னிக்கவே முடியாது. அந்த ஒரு சங்கதிக்காகவே மேதகு தலைவரின் கட்டை வேகாது!

படத்தில் எல்லா மொழியும் பேசுகிறார்கள். நடுவே தமிழக திராவிட கட்சித் தலைவரை விளித்து, ‘தலைவா… பணம் வந்துடுச்சு! காரியத்த முடிச்சுடலாம்!’ போன்ற பேச்சுகள் பின்னணியில் ஓடுகின்றன. பொருளியல் வரலாற்று அறிவும், திரைமொழியின் நுணுக்கமான பார்வையும், பல்வேறு அரசியல்களை கிரகிக்கும் சக்தியும் கிடைக்கப் பெற்றவர்கள் மட்டுமே இந்தப் புலனாய்வுப் புனைவை புரிந்து கொண்டு பார்க்க இயலும்.

நல்ல வேளை… படம் எல்.டி.டி.ஈ. பிரபாகரன் இறந்த பிறகு வந்திருக்கிறது. இல்லையென்றால், கொஞ்ச நாளில் ஜான் ஆபிரஹாம் போட்டுத் தள்ளப்பட்டிருப்பார்.

State of Tamil Cinema Reviewers: Movies vs Books

கடந்த பதினைந்து வருடங்களாக பட அறிமுகங்களை எழுதுபவன் + இணையத்திலும் பத்திரிகைகளிலும் விமர்சனங்களை அவ்வப்போது வாசித்தும் வருபவன் என்ற முறையில் எனக்குப் பட்டது….

* பெரும்பலான சமயம் படம் வெளியானவுடன் டாரெண்ட் தரவிறக்கத்தில் படம் பார்ப்பதால், திரையரங்கின் மன ஒருமை கிடைப்பதில்லை. அதை விடக் கொடுமை, ஆங்கிலப் படத்திற்கு ப்ளூ ரே ப்ரிண்ட்டும் தமிழ்ப்படங்களுக்கு திருட்டு விசிடியும் பார்க்க வேண்டும் என்னும் மனப்பான்மை.

* விகடன் விமர்சனம் போல் மார்க் போட்டு வாடிக்கை. எல்லாப் படத்திற்கும் மதிப்பெண் மட்டுமே வழங்கத் தெரியும்.

* திக்குவாய், குருடி போன்ற குறைபாடுகளை நல்ல நடிப்பு என்றும் ரஜினி, விஜய் படங்களை மசாலா என்றும் வகைப்படுத்துவோம்.

* கேமிராவில் ஒளிப்படம் எடுப்பதாலும், நாலைந்து முறை குழந்தைகள் நிகழ்ச்சியை வீடியோ எடுத்ததாலும் சினிமா எடுக்கும் அனைத்து வித்தையும் தெரிந்ததாக நினைக்கிறோம்.

* தொலைக்காட்சி சீரியல் (என்னைப் போல் ஆசாமிகள் தூர்தர்ஷன் நாடகம்) பார்த்தே பழக்கம். திரைப்படங்களிலும் அதே வாசனை எதிர்பார்க்கிறோம்.

* புத்தகத்திற்கு அறிமுகம் எழுதுவதை விட சினிமாவிற்கு அறிமுகம் கொடுப்பது எளிதானது. உதாரணமாக இயக்குநர் பாலா போன்ற புகழ்பெற்ற எழுத்துலக ஜாம்பவானை விமர்சிக்க நிறைய திராணி வேண்டும். ஆனால், ‘பாலா’ போன்றவரை விமர்சிப்பதால் சாதாரண மனுஷனாக அடையாளம் காட்டிக் கொள்ளலாம். இன்னும் விரிவாகச் சொன்னால் ஆயிரம் பக்க புத்தகத்தை தாக்கி எழுதினால் இலக்கியவாதியாக ஆகிவிடும் அபாயம் இருக்கிறது. ‘கடல்’ படத்தையும் பரதேசியையும் விமர்சித்தால் humble ஆளாகி விடலாம்.

* மோசமான படத்தைப் பாராட்டியும், சுவாரசியமான படைப்பை மட்டம் தட்டியும் எழுதினால் மட்டுமே கவனம் கிடைக்கிறது.

* சென்ற கால சினிமாவில் இருந்து வித்தியாசமாய் நின்று தமிழ்த் திரைப்படங்களை எது முன்னகர்த்துகிறது என்று கவனித்து பகிர்வதை விட, அந்தத் திரைப்படங்களின் கதையை வைத்து மன்றாடுவது எளிது.

என்னுடைய ஆண்டிராய்ட் போனிற்கு புதிதாக ஏதாவது நிரலியை நிறுவிக் கொண்டே இருப்பேன். சில சமயம் அதைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவேன். சில சமயம் உடனடியாக நீக்கிவிடுவேன். அது எனக்கு எப்படி உபயோகமாகிறது, ஏற்கனவே இருக்கும் மற்ற அப்ளிகேஷன்களில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது என்பதைப் பொறுத்து என் முடிவு அமைகிறது. வைரஸ் போன்ற தாக்குதல் கொடுத்தால் மட்டுமே, கூகுள் கடை சென்று மட்டகரமான தரமதிப்பீடு தருகிறேன்.

சினிமாவிற்கும் அதே அளவீடு பயன்படுத்தலாம். நோய்க்கிருமி போல் கலையை கீழே இழுக்கிறதா? அல்லது தனிப்பட்ட முறையில் உபயோகமான விதத்தில் முன்னேற்றுகிறதா?

Paradesi – FIR: Quick Review

பரதேசி பாலாவின் படம். டிஸ்னி படம், ஜேம்ஸ் பாண்ட் படம், குவெண்டின் டாரெண்டினோ படம் என்று சொல்வது போல் பாலாவின் படம் பார்த்து கொஞ்ச நாளாச்சு.

ஆறு படம்தான் செய்திருப்பவருக்கு டிரேட்மார்க் இருக்குமா?

கடவுள் நம்பிக்கையை வைத்து ஏமாற்றுபவரை நையாண்டி செய்வது; ஒடுக்கப்படுபவர்களின் பரிதாப நிலையை கதைக்களானாக்குவது; புதிய முகங்களை கதாபாத்திரங்களாக்குவது; இளகிய மனம் படைத்தோரையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் சமரசமில்லா காட்சியாக்குவது… இவை இயக்குநர் பாலா பட முத்திரைகள்.

வலிந்து திணிக்கப்பட்ட நகைச்சுவை; சிம்ரன் போன்ற அயிட்டம் பாடல்; இவை எல்லாம் முந்தையவற்றில் துருத்தி நிற்கும்; இங்கே காணோம். ‘பரதேசி’யின் ஒவ்வொரு பாடலையும் திரையில் காண்பித்த விதத்தில் பாலு மகேந்திராவின் கோர்வையும் மணி ரத்னத்தின் செதுக்கலும் ஒருங்கே கிடைக்கின்றன.

எஸ் ராமகிருஷ்ணன் வசனம் எழுதும் படங்களில் சாதாரண தமிழ்ப்பட எழுத்து மட்டுமே தென்படும். ஜெயமோகன் சம்பந்தப்பட்ட படங்களில் மொழி ஆக்கிரமித்து நிற்கும். இரா முருகன் படங்களில் டைட்டிலில் மட்டுமே காணப்படுகிறார். ’பரதேசி’ நாஞ்சில் நாடனோ, “யாருங்க வசனம்” என்று விசாரிக்க வைக்கிறார்.

சமீபத்திய எதிர்பார்ப்புகளான ‘கடல்’ பல கோணங்களில் சென்று அலைபாய்ந்து மூழ்கடித்தும், ‘விஸ்வரூபம்’ சர்ச்சைகளில் மட்டும் பிரமிக்க வைத்தும் ‘நீதானே என் பொன் வசந்தம்’ சாக்லேட் கல்லூரி காதலை மறுஒளிபரப்பியும் குண்டுசட்டி கோடம்பாக்கத்தினுள் ஆமை ஓட்டிய நேரத்தில், உருப்படியான தமிழ் சினிமாவிற்கான அடி பரதேசி.

சஞ்சலம் நீக்க சிறந்த உபாயம்: ரஜினியா? கமலா?

மன அழுத்தம் நீங்க நான் மூன்று உபாயங்களை பின்பற்றுகிறேன். எல்லோரும் சொல்கிற உடற்பயிற்சியை விட வீட்டை சுத்தம் செய்கிற பராமரிப்பு. அமைதியான இசையின் பின்னணியில் தியானம் என்பதை விட நிசப்தமான புத்தக அறையில் பூனையுடன் தஞ்சம். உளவியலாளரிடம் பகிர்வதை விட நாலு ஃபேஸ்புக் கருத்தாளர்களுக்கு கேள்வியாக பதில் போடுவது.

ரஜினி படம் பிடிக்குமா? கமல் படம் பிடிக்குமா? என்னுடைய இடையீடு சுணக்கங்களை களைவதற்குப் பின்னால் இந்தக் காரணமும் இருக்கிறது.

’நான் சிவப்பு மனிதன்’ அதிரடியாக இறங்குவார். ‘ராமன் ஆண்டாலும்’னு வாழ்க்கையை கொண்டாடுவார். ’நல்லவனுக்கு நல்லவ’னாக நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்துவார். ’பில்லா’ மாதிரி உளவாளியாக சென்றால் கூட ஆக்‌ஷன் இருக்கும்.

அந்த ஜென்மத்திலேயே பழிவாங்காமல் இன்னொருவரை எதிர்நோக்கும் ‘கல்யாணராமன்’. சிம்லா ஸ்பெஷல், உயர்ந்த உள்ளம் எல்லாமே நம்பக்கூடிய முகங்களின் பிரதிபலிப்பு. ’வாழ்வே மாயம்’ போல் உண்மையைப் போட்டு உடைக்க சஞ்சலப்படும் மனிதன். சகல கலா வல்லவன் முதல் விஸ்வரூபம் வரை கமல்ஹாசன் ஒற்றராக செல்வது கூட லாஜிக் நிறைந்ததாக இருக்கும்.

கமல் கதாபாத்திரங்கள் சாதுவானவை. நான் அன்றாடம் எதிர்கொள்கிறவர்கள். தொண்ணூறு சதவிகிதத்தினர் இவ்வாறே தங்கள் குணாதிசயங்கள வைத்திருக்கிறார்கள்.

ரஜினி நட்சத்திரம். கண்டிப்பு நிறைந்தவர். வாட்டத்தைப் போக்க நம்ப இயலாதவற்றை சாதிக்கிறார். என் கலக்கங்களை நீக்க முடியும் என உறுதியான உற்சாகம் தருகிறார்.

நீங்க ரஜினி விசிறியா? கமல் ஃபேனா?

Oscars: Academy awards 2013

“‘Zero Dark Thirty’ is an example of a woman’s innate ability to never let anything go.”

இந்த வருட ஆஸ்கார் விருதுகளில் எந்த ஆச்சரியமும் இல்லை. ‘அய்யோ பாவம்’ அனுதாப அலையில் பென் அஃப்லெக்கின் ’ஆர்கோ’ வென்றது. ஜாம்பவான்கள் நிறைந்த துணை நடிகர் பகுதியில் ’ஜாங்கோ அன்செயிண்ட்’ கிறிஸ் வால்ஸ் வென்றார். ‘தி ஹங்கர் கேம்ஸ்’ ஓடுவதற்காக ஜெனிஃபர் லாரென்ஸ்; கதாபாத்திரமாகவே வாழ்வதற்காக டேனியல் டே லூயிஸ்…

இயக்குநரில் மீண்டும் யார் வெல்வார் என்பதில் ’லைஃப் ஆஃப் பை’ ஆங் லீ வென்றது மட்டும் விதிவிலக்கு.

‘நான் முடி வெட்டிக் கொண்டேனாக்கும்’; ‘நான் இருபது கிலோ எடையை குறைத்தேனாக்கும்’; ‘நான் சரிகமபதநிச பாடக் கற்றுக் கொண்டேனாக்கும்’; ‘நான் அழகை கம்மியாக்கி உங்களுக்காக வாழ்ந்தேனாக்கும்’ என்று IIPM அரிந்தம் சவித்ரி போல் சந்தைப்படுத்தியே வென்ற ஆன் ஹாத்வே ஆட்டத்தில் சேர்த்தியில்லை.

விருது வென்றவர்களில் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் இருக்காது என்பதால், விழாவைத் தொகுத்தவரை அதிர்ச்சிகள் தர வைத்தார்கள்.

முன்னாள் தொகுப்பாளர்களான ஸ்டீவ் மார்ட்டின் போன்றோர் படு சைவம். தாத்தா/பாட்டியினரை ஆஸ்கார் பார்க்க வரவழைப்பார். ஆனால், பழங்கால தலைமுறையினரால் எதையுமே வாங்க வக்கில்லை. அவர்கள் வேஸ்ட்.

நடுவாந்தரமாக பில்லி கிறிஸ்டலும் ஜான் ஸ்டூவர்ட்டும் தொகுத்து வழங்கலாம். அந்தத் தலைமுறையினர் ஸாம்சங் கேலக்சி எஸ்4 எல்லாம் வாங்குவதில்லை.

குழந்தைகளுக்கான ‘ஹாப்’, ’ஆல்வின் அண்ட் தி சிப்மன்க்ஸ்’ போன்ற படங்களிலும் டிஸ்னியின் இனிப்பான சினிமாக்களிலும் அணிலும் கரடியும் மழலை பேசும். அதே போன்ற பொம்மைக் கரடியை டோப் அடிக்க வைத்தால் எப்படி இருக்கும்? பெரியவர்களின் வசை மொழியும் அலுப்பும் நிறைந்த வாழ்க்கையை சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கும் பொம்மைக் கரடிக்கு கொடுத்தால் எப்படி இருக்கும்? அதுதான் Ted.

அந்த ‘டெட்’ படத்தை இயக்கி, கரடி பொம்மைக்கு குரல் கொடுத்தவர்தான் இந்த வருட அகாதெமி விருது தொகுப்பாளர்.

பெண்களைக் கிண்டலடிப்பதும், விடலைத்தனமாக ஜொள்ளு விடுவதும், பேசப்பெறாத விவகாரங்களை முகத்திலறைவதும் திரைப்படத்திற்கு பொருந்தும்; ஸ்டாண்ட அப் காமெடியில் பொருந்தும். சுய எள்ளலும் புனிதங்களே அற்ற தன்மையும் பதின்ம வயதினருக்கு எப்பொழுதும் பொருந்தும். எனவே, யூத்திற்கு சேத் மெக்ஃபார்லேன் நகைச்சுவை பிடித்திருக்கும்.

பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்திருந்த பாம்பே ஜெயஸ்ரீ பாடாததை விட இது ஒன்றும் பெரிய குறை அல்ல.

Vanji Kottai Vaaliban and Braveheart: Historical Fiction in Movies

ராகா.காம் செய்யும் மிக உத்தமமான காரியம் என்பது நான்-ஸ்டாப் கன்னலில் பாடல்களை தொடர் ஒலிபரப்பாக கோர்ப்பதுதான். ஒரு நாள் சந்திரபாபு, இன்னொரு நாள் இசையமைப்பாளர் வேதா, என்னும் வரிசையில் இன்று கிளாசிக்ஸ் ஓடிக் கொண்டிருந்தது.

அப்பொழுது வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தில் கொத்தமங்கலம் சுப்பு எழுதி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ‘வெற்றிவேல்… வீரவேல்’ கிடைத்தது.

பல நல்ல புறநானூறு பாடல்களையும் பரணி பாடிய வரலாற்றையும் எழரை நிமிடத்திற்கான நாடகக் காட்சியாக ஒருங்கிணைத்திருக்கிறார்கள். சட்டென்று ‘பிரேவ் ஹார்ட்’ திரைப்படத்தை நினைவிற்கு கொண்டு வந்தது.

ஸ்காட்லாந்து மக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக ஏன் சண்டை போட்டார்கள்? போர்களுக்காக வில்லியம் வாலஸ் எவ்வாறு மக்களை சேர்த்தார்? Offence is the best defense என்பதை தற்கால விளையாட்டு பயிற்றுநர்களுக்கு, அக்கால வரலாறு கொண்டு விளக்கிய படம். மெல் கிப்சன் நடித்த ’பிரேவ்ஹார்ட்’டில் சிலந்தியைப் பார்த்து விடாமுயற்சியைக் கற்றுக் கொண்ட ராபர்ட் ப்ரூஸும் இருந்தார்.

இரண்டுமே பிரும்மாண்டமான போர்ப்படங்கள். வில்லன்களாக அரசர்களைக் கொண்டவை. காதல் நிறையவே உண்டு. இரண்டு நாயகிகள் கொண்ட கதை. வீரதீரம் நிறைந்த நாயகன். 1958ல் தமிழில் வெளியான ‘வ.கோ.வா.’ சூப்பர் ஹிட். ப்ரேவ்ஹார்ட்டும் நல்ல வசூல் கொடுத்தது.

மீண்டும் இந்த மாதிரி சரித்திரத்தையும் மசாலாவையும் தேசப்பற்றையும் சரியாக மிக்ஸ் செய்யும் மசாலாக்கள் எப்பொழுது வரும்?