Tag Archives: Films

கல்லுக்குள் ஈரம்: திரைப்பட விமர்சனம்

‘கல்லுக்குள் ஈரம்’ பார்த்த போது ஏழு வயசு. இந்தப் பக்கத்தில் அம்மாவும் அந்தப் பக்கத்தில் அண்ணாவும் அமர்ந்திருப்பார்கள். தேவி காம்ப்ளெக்ஸா, வெலிங்டனா, சித்ராவா என நினைவில் இல்லை. இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு 21ல் உட்கார்ந்திருக்கும் தூக்கக் கலக்கத்தில் இப்படி சேர்த்து வைக்காமல் சாகடிச்சுட்டாங்களே என்பது மட்டுமே தோன்றியது.

சினிமாகாரர்களை கொஞ்சம் சொல்வதால் மனம் இன்றும் ‘க.ஈ.’ படத்தை நினைவில் வைத்திருக்கவைக்கிறதோ? மற்ற பாரதிராஜா எடுத்த, தற்போதைய அமீர் / சசிகுமார் வகையறா எடுக்கும், மதுரைப் பக்கத்தில் உள்ள டவுன் பஸ் மட்டுமே நிற்கும் சந்து பொந்துகளை முதலில் காட்டியதால் நிழலாடுகிறதோ? மனோபாலா, ரங்கராஜன், மணிவண்ணன் போன்ற பிற்கால பிரபலங்களின் கன்னி தொடக்கம் இங்கே இருந்திருக்குமே?

தெரியவில்லை. எனவே, மீண்டும் பார்த்தேன்.

‘முதல் மரியாதை’யின் இளவட்டக் கல் இருக்கிறது. அந்தப் படத்தில் ஜெயிலில் இருந்து திரும்பும் சத்யராஜ் போலவே பாசமிகு மாமன் (சேனாதிபதி?) இருக்கிறார். கவுண்டமணிக்கு மிக விரிவான கதாபாத்திர உருவாக்கம். ’க.ஈ.’ வந்ததற்கு அடுத்த ஆண்டு வந்த பாலைவனச் சோலை கும்பலில் இருந்து இதில் உடல் ஊனமுற்றவராக சந்திரசேகரும், பள்ளி ஆசிரியராக ஜனகராஜும் இருக்கிறார்கள்.

மனதிற்கு நெருக்கமான கதை. திரைப்பட கதாநாயகனை கணவனாக அடைய விரும்பும் சினிமா மோக மனம் கொண்ட விஜயசாந்தியும் டீக்கா டிரெஸ் போட்டிருக்கும் ஆங்கிலம் பேசும் அடாவடி ஆதர்ச இயக்குநரை விரும்பும் அருணாவும் வசிக்கும் கிராமம். நாள் முழுக்க உழைத்து, அரை வயிற்றுக்கு சாப்பிட்டு, கோலமிக்க ஆறும், ஓய்வெடுக்க மலைமுகடுகளும், அடர்த்தியான காடுகளும் கொண்ட கனவு கிராமம். முனிக்கு படையல் போட்டதில் தெய்வ குற்றமும், அடுத்தவர் வாழ்க்கையை மெல்வதில் சுகமும் காணும் நெருக்கமான உறவு வேண்டாமலேயே உங்களைத் துரத்தும் கிராமம்.

படத்தில் உள்ள அத்துணை கதாபாத்திரங்களை ஆழமாக உலவவிடவில்லை. மாடன் வழிபாட்டை விரிவாகக் காட்டவில்லை. உள்ளூர் பெண்ணொடு ”டைரக்டர்” இப்படியெல்லாம் நடந்து கொள்வது சாத்தியமேயில்லை. இதற்கு முந்தைய ஆண்டு வந்த “புதிய வார்ப்புகள்” போல் அசல் தெருக்கூத்தைக் காணமுடியவில்லை, என்றெல்லாம் விமர்சிக்கலாம்.

ஆனால், இரண்டு மணி நேரத்தில் கட் அவுட் மாந்தர்களையும் தோட்டி குடும்பத்தையும் இன்று கூட யாரும் இவ்வளவு இயல்பாக கோர்க்கவில்லை என்பதால் சபாஷ் போட வைக்கிறது. அப்படி கோர்த்தால் என்ன ஆகும் என்பதை நிதர்சனமாக முடிப்பதால் முக்கியமாகவே நிற்கிறது. எல்லாவற்றையும் விட ஊரில் இருப்போர் வாழ்க்கையையும் வருகை தருவோர் இயல்பையும் உணர்த்துவதால் இன்றும் விருப்பத்துடன் ரசிக்க வைக்கிறது.

John Abraham’s Madras Cafe – Movie Review

அசல் தலைப்பு: மெட்ராஸ் கஃபே
வைத்திருக்க வேண்டிய தலைப்பு: ராஜீவ் காந்தியைக் கொன்றதை ஏன் இந்தியாவால் தடுக்க முடியவில்லை என்பதற்கான சப்பைக்கட்டு

சான் ஓஸே பக்கம் போனீர்கள் என்றால் மெட்ராஸ் கஃபே நிச்சயம் எட்டிப் பாருங்கள் என்பார்கள் பே ஏரியாவசிகள். இந்தியா – இலங்கை – ஈழ முக்கோண பிரச்சினை அறிவதற்கு மெட்ராஸ் கஃபே உதவும்.

ராஜீவ் காந்தி இறந்ததற்காக நாடே வருத்தப்படுகிறது. ஆனால், எண்ணற்ற தனி மனிதர்களின் சொந்த இழப்புகளை பிரச்சார தொனியின்றி போகிற போக்கில் இந்தப் படம் இயல்பாக முன்வைப்பது பிடித்திருந்தது. அன்னிய நாட்டின் அமைதிக்காக செல்லும் தூதுவர் ஈ.பி.ஆர்.எல்.எஃப்.புக்கும் புலிகளுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு சாவது; துப்பறிபவர்களின் குடும்பம் சீரழிவது போன்றவை போகிற போக்கில் வந்து போகின்றன.

படம் என்றால் வில்லன் இருக்கவேண்டும். இதுவோ கிட்டத்தட்ட ஆவணப்படம். விறுவிறுப்பாக சம்பவங்களைக் கோர்த்து, நடுநடுவே லட்சணமான மனைவியை ஊறுகாய் போல் தொட்டுக் கொண்ட சாகசப்படம். சுட்டுவிரல் நீட்டி தப்பு செய்தவர்கள் இவர்கள்தான் என்று குற்றஞ்சாட்டாமல், என்ன நடந்தது, எப்படி நடந்தது, எப்பொழுது நடந்தது என்பதை மட்டும் விவரிக்கிறார்கள்.

இலங்கையா… அவர்கள் 1983 படுகொலைகளை நிறைவேற்றினார்கள்.
விடுதலைப் புலிகளா… அவர்கள் நிறைய முதுகில் குத்தல்களும் கண்மூடித்தனமான கொள்கைகளும் கொண்டிருந்தார்கள்.
இந்திய ராணுவமா… மேலிடத்து உத்தரவை சிரமேற்கொண்டு பணிந்தார்கள்.
உளவுத்துறையா… எவர் யாருக்கு விசுவாசமாக இருந்தார்கள் என்பது அவர்களே அறியாமல் இயங்கினார்கள்.
இந்தியாவா… எந்த இந்தியர் என்பதைப் பொறுத்து விதவிதமாக மனிதருக்கே உரிய மாபாதகங்களுடன் நடந்துகொண்டார்கள்.
ராஜீவ் காந்தியா… யேசுவிற்குப் பிறகு உலகத்தில் உதித்த மகான். புத்தர் வழியில் அகிம்சையை போதித்து சென்னைக்கு வந்தவர். மகாத்மாவிற்குப் பிறந்த இந்தியாவில் உதயமான உத்தமர்!

படத்தின் குறைகள்? சென்னைத் தமிழுக்கும் ஈழத்தமிழுக்கும் வித்தியாசம் காட்டவில்லை என்று பொங்கலாம். மட்டக்களப்பு பிரதேசங்களையும் யாழ்ப்பாணத்தையும் குழப்புகிறார்கள் எனலாம். ஜான் ஆபிரகாம் படகில் போகும்போது சவரம் செய்த வழவழ முகத்துடன் பயணிக்கிறார் என விசனிக்கலாம். எனினும், அந்த நிருபர் ஜெயா கதாபத்திரத்தை அனிதா பிரதாப் போல் கோர்த்து வைக்காத துரோகத்தை மன்னிக்கவே முடியாது. அந்த ஒரு சங்கதிக்காகவே மேதகு தலைவரின் கட்டை வேகாது!

படத்தில் எல்லா மொழியும் பேசுகிறார்கள். நடுவே தமிழக திராவிட கட்சித் தலைவரை விளித்து, ‘தலைவா… பணம் வந்துடுச்சு! காரியத்த முடிச்சுடலாம்!’ போன்ற பேச்சுகள் பின்னணியில் ஓடுகின்றன. பொருளியல் வரலாற்று அறிவும், திரைமொழியின் நுணுக்கமான பார்வையும், பல்வேறு அரசியல்களை கிரகிக்கும் சக்தியும் கிடைக்கப் பெற்றவர்கள் மட்டுமே இந்தப் புலனாய்வுப் புனைவை புரிந்து கொண்டு பார்க்க இயலும்.

நல்ல வேளை… படம் எல்.டி.டி.ஈ. பிரபாகரன் இறந்த பிறகு வந்திருக்கிறது. இல்லையென்றால், கொஞ்ச நாளில் ஜான் ஆபிரஹாம் போட்டுத் தள்ளப்பட்டிருப்பார்.

State of Tamil Cinema Reviewers: Movies vs Books

கடந்த பதினைந்து வருடங்களாக பட அறிமுகங்களை எழுதுபவன் + இணையத்திலும் பத்திரிகைகளிலும் விமர்சனங்களை அவ்வப்போது வாசித்தும் வருபவன் என்ற முறையில் எனக்குப் பட்டது….

* பெரும்பலான சமயம் படம் வெளியானவுடன் டாரெண்ட் தரவிறக்கத்தில் படம் பார்ப்பதால், திரையரங்கின் மன ஒருமை கிடைப்பதில்லை. அதை விடக் கொடுமை, ஆங்கிலப் படத்திற்கு ப்ளூ ரே ப்ரிண்ட்டும் தமிழ்ப்படங்களுக்கு திருட்டு விசிடியும் பார்க்க வேண்டும் என்னும் மனப்பான்மை.

* விகடன் விமர்சனம் போல் மார்க் போட்டு வாடிக்கை. எல்லாப் படத்திற்கும் மதிப்பெண் மட்டுமே வழங்கத் தெரியும்.

* திக்குவாய், குருடி போன்ற குறைபாடுகளை நல்ல நடிப்பு என்றும் ரஜினி, விஜய் படங்களை மசாலா என்றும் வகைப்படுத்துவோம்.

* கேமிராவில் ஒளிப்படம் எடுப்பதாலும், நாலைந்து முறை குழந்தைகள் நிகழ்ச்சியை வீடியோ எடுத்ததாலும் சினிமா எடுக்கும் அனைத்து வித்தையும் தெரிந்ததாக நினைக்கிறோம்.

* தொலைக்காட்சி சீரியல் (என்னைப் போல் ஆசாமிகள் தூர்தர்ஷன் நாடகம்) பார்த்தே பழக்கம். திரைப்படங்களிலும் அதே வாசனை எதிர்பார்க்கிறோம்.

* புத்தகத்திற்கு அறிமுகம் எழுதுவதை விட சினிமாவிற்கு அறிமுகம் கொடுப்பது எளிதானது. உதாரணமாக இயக்குநர் பாலா போன்ற புகழ்பெற்ற எழுத்துலக ஜாம்பவானை விமர்சிக்க நிறைய திராணி வேண்டும். ஆனால், ‘பாலா’ போன்றவரை விமர்சிப்பதால் சாதாரண மனுஷனாக அடையாளம் காட்டிக் கொள்ளலாம். இன்னும் விரிவாகச் சொன்னால் ஆயிரம் பக்க புத்தகத்தை தாக்கி எழுதினால் இலக்கியவாதியாக ஆகிவிடும் அபாயம் இருக்கிறது. ‘கடல்’ படத்தையும் பரதேசியையும் விமர்சித்தால் humble ஆளாகி விடலாம்.

* மோசமான படத்தைப் பாராட்டியும், சுவாரசியமான படைப்பை மட்டம் தட்டியும் எழுதினால் மட்டுமே கவனம் கிடைக்கிறது.

* சென்ற கால சினிமாவில் இருந்து வித்தியாசமாய் நின்று தமிழ்த் திரைப்படங்களை எது முன்னகர்த்துகிறது என்று கவனித்து பகிர்வதை விட, அந்தத் திரைப்படங்களின் கதையை வைத்து மன்றாடுவது எளிது.

என்னுடைய ஆண்டிராய்ட் போனிற்கு புதிதாக ஏதாவது நிரலியை நிறுவிக் கொண்டே இருப்பேன். சில சமயம் அதைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவேன். சில சமயம் உடனடியாக நீக்கிவிடுவேன். அது எனக்கு எப்படி உபயோகமாகிறது, ஏற்கனவே இருக்கும் மற்ற அப்ளிகேஷன்களில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது என்பதைப் பொறுத்து என் முடிவு அமைகிறது. வைரஸ் போன்ற தாக்குதல் கொடுத்தால் மட்டுமே, கூகுள் கடை சென்று மட்டகரமான தரமதிப்பீடு தருகிறேன்.

சினிமாவிற்கும் அதே அளவீடு பயன்படுத்தலாம். நோய்க்கிருமி போல் கலையை கீழே இழுக்கிறதா? அல்லது தனிப்பட்ட முறையில் உபயோகமான விதத்தில் முன்னேற்றுகிறதா?

Paradesi – FIR: Quick Review

பரதேசி பாலாவின் படம். டிஸ்னி படம், ஜேம்ஸ் பாண்ட் படம், குவெண்டின் டாரெண்டினோ படம் என்று சொல்வது போல் பாலாவின் படம் பார்த்து கொஞ்ச நாளாச்சு.

ஆறு படம்தான் செய்திருப்பவருக்கு டிரேட்மார்க் இருக்குமா?

கடவுள் நம்பிக்கையை வைத்து ஏமாற்றுபவரை நையாண்டி செய்வது; ஒடுக்கப்படுபவர்களின் பரிதாப நிலையை கதைக்களானாக்குவது; புதிய முகங்களை கதாபாத்திரங்களாக்குவது; இளகிய மனம் படைத்தோரையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் சமரசமில்லா காட்சியாக்குவது… இவை இயக்குநர் பாலா பட முத்திரைகள்.

வலிந்து திணிக்கப்பட்ட நகைச்சுவை; சிம்ரன் போன்ற அயிட்டம் பாடல்; இவை எல்லாம் முந்தையவற்றில் துருத்தி நிற்கும்; இங்கே காணோம். ‘பரதேசி’யின் ஒவ்வொரு பாடலையும் திரையில் காண்பித்த விதத்தில் பாலு மகேந்திராவின் கோர்வையும் மணி ரத்னத்தின் செதுக்கலும் ஒருங்கே கிடைக்கின்றன.

எஸ் ராமகிருஷ்ணன் வசனம் எழுதும் படங்களில் சாதாரண தமிழ்ப்பட எழுத்து மட்டுமே தென்படும். ஜெயமோகன் சம்பந்தப்பட்ட படங்களில் மொழி ஆக்கிரமித்து நிற்கும். இரா முருகன் படங்களில் டைட்டிலில் மட்டுமே காணப்படுகிறார். ’பரதேசி’ நாஞ்சில் நாடனோ, “யாருங்க வசனம்” என்று விசாரிக்க வைக்கிறார்.

சமீபத்திய எதிர்பார்ப்புகளான ‘கடல்’ பல கோணங்களில் சென்று அலைபாய்ந்து மூழ்கடித்தும், ‘விஸ்வரூபம்’ சர்ச்சைகளில் மட்டும் பிரமிக்க வைத்தும் ‘நீதானே என் பொன் வசந்தம்’ சாக்லேட் கல்லூரி காதலை மறுஒளிபரப்பியும் குண்டுசட்டி கோடம்பாக்கத்தினுள் ஆமை ஓட்டிய நேரத்தில், உருப்படியான தமிழ் சினிமாவிற்கான அடி பரதேசி.

சஞ்சலம் நீக்க சிறந்த உபாயம்: ரஜினியா? கமலா?

மன அழுத்தம் நீங்க நான் மூன்று உபாயங்களை பின்பற்றுகிறேன். எல்லோரும் சொல்கிற உடற்பயிற்சியை விட வீட்டை சுத்தம் செய்கிற பராமரிப்பு. அமைதியான இசையின் பின்னணியில் தியானம் என்பதை விட நிசப்தமான புத்தக அறையில் பூனையுடன் தஞ்சம். உளவியலாளரிடம் பகிர்வதை விட நாலு ஃபேஸ்புக் கருத்தாளர்களுக்கு கேள்வியாக பதில் போடுவது.

ரஜினி படம் பிடிக்குமா? கமல் படம் பிடிக்குமா? என்னுடைய இடையீடு சுணக்கங்களை களைவதற்குப் பின்னால் இந்தக் காரணமும் இருக்கிறது.

’நான் சிவப்பு மனிதன்’ அதிரடியாக இறங்குவார். ‘ராமன் ஆண்டாலும்’னு வாழ்க்கையை கொண்டாடுவார். ’நல்லவனுக்கு நல்லவ’னாக நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்துவார். ’பில்லா’ மாதிரி உளவாளியாக சென்றால் கூட ஆக்‌ஷன் இருக்கும்.

அந்த ஜென்மத்திலேயே பழிவாங்காமல் இன்னொருவரை எதிர்நோக்கும் ‘கல்யாணராமன்’. சிம்லா ஸ்பெஷல், உயர்ந்த உள்ளம் எல்லாமே நம்பக்கூடிய முகங்களின் பிரதிபலிப்பு. ’வாழ்வே மாயம்’ போல் உண்மையைப் போட்டு உடைக்க சஞ்சலப்படும் மனிதன். சகல கலா வல்லவன் முதல் விஸ்வரூபம் வரை கமல்ஹாசன் ஒற்றராக செல்வது கூட லாஜிக் நிறைந்ததாக இருக்கும்.

கமல் கதாபாத்திரங்கள் சாதுவானவை. நான் அன்றாடம் எதிர்கொள்கிறவர்கள். தொண்ணூறு சதவிகிதத்தினர் இவ்வாறே தங்கள் குணாதிசயங்கள வைத்திருக்கிறார்கள்.

ரஜினி நட்சத்திரம். கண்டிப்பு நிறைந்தவர். வாட்டத்தைப் போக்க நம்ப இயலாதவற்றை சாதிக்கிறார். என் கலக்கங்களை நீக்க முடியும் என உறுதியான உற்சாகம் தருகிறார்.

நீங்க ரஜினி விசிறியா? கமல் ஃபேனா?

Oscars: Academy awards 2013

“‘Zero Dark Thirty’ is an example of a woman’s innate ability to never let anything go.”

இந்த வருட ஆஸ்கார் விருதுகளில் எந்த ஆச்சரியமும் இல்லை. ‘அய்யோ பாவம்’ அனுதாப அலையில் பென் அஃப்லெக்கின் ’ஆர்கோ’ வென்றது. ஜாம்பவான்கள் நிறைந்த துணை நடிகர் பகுதியில் ’ஜாங்கோ அன்செயிண்ட்’ கிறிஸ் வால்ஸ் வென்றார். ‘தி ஹங்கர் கேம்ஸ்’ ஓடுவதற்காக ஜெனிஃபர் லாரென்ஸ்; கதாபாத்திரமாகவே வாழ்வதற்காக டேனியல் டே லூயிஸ்…

இயக்குநரில் மீண்டும் யார் வெல்வார் என்பதில் ’லைஃப் ஆஃப் பை’ ஆங் லீ வென்றது மட்டும் விதிவிலக்கு.

‘நான் முடி வெட்டிக் கொண்டேனாக்கும்’; ‘நான் இருபது கிலோ எடையை குறைத்தேனாக்கும்’; ‘நான் சரிகமபதநிச பாடக் கற்றுக் கொண்டேனாக்கும்’; ‘நான் அழகை கம்மியாக்கி உங்களுக்காக வாழ்ந்தேனாக்கும்’ என்று IIPM அரிந்தம் சவித்ரி போல் சந்தைப்படுத்தியே வென்ற ஆன் ஹாத்வே ஆட்டத்தில் சேர்த்தியில்லை.

விருது வென்றவர்களில் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் இருக்காது என்பதால், விழாவைத் தொகுத்தவரை அதிர்ச்சிகள் தர வைத்தார்கள்.

முன்னாள் தொகுப்பாளர்களான ஸ்டீவ் மார்ட்டின் போன்றோர் படு சைவம். தாத்தா/பாட்டியினரை ஆஸ்கார் பார்க்க வரவழைப்பார். ஆனால், பழங்கால தலைமுறையினரால் எதையுமே வாங்க வக்கில்லை. அவர்கள் வேஸ்ட்.

நடுவாந்தரமாக பில்லி கிறிஸ்டலும் ஜான் ஸ்டூவர்ட்டும் தொகுத்து வழங்கலாம். அந்தத் தலைமுறையினர் ஸாம்சங் கேலக்சி எஸ்4 எல்லாம் வாங்குவதில்லை.

குழந்தைகளுக்கான ‘ஹாப்’, ’ஆல்வின் அண்ட் தி சிப்மன்க்ஸ்’ போன்ற படங்களிலும் டிஸ்னியின் இனிப்பான சினிமாக்களிலும் அணிலும் கரடியும் மழலை பேசும். அதே போன்ற பொம்மைக் கரடியை டோப் அடிக்க வைத்தால் எப்படி இருக்கும்? பெரியவர்களின் வசை மொழியும் அலுப்பும் நிறைந்த வாழ்க்கையை சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கும் பொம்மைக் கரடிக்கு கொடுத்தால் எப்படி இருக்கும்? அதுதான் Ted.

அந்த ‘டெட்’ படத்தை இயக்கி, கரடி பொம்மைக்கு குரல் கொடுத்தவர்தான் இந்த வருட அகாதெமி விருது தொகுப்பாளர்.

பெண்களைக் கிண்டலடிப்பதும், விடலைத்தனமாக ஜொள்ளு விடுவதும், பேசப்பெறாத விவகாரங்களை முகத்திலறைவதும் திரைப்படத்திற்கு பொருந்தும்; ஸ்டாண்ட அப் காமெடியில் பொருந்தும். சுய எள்ளலும் புனிதங்களே அற்ற தன்மையும் பதின்ம வயதினருக்கு எப்பொழுதும் பொருந்தும். எனவே, யூத்திற்கு சேத் மெக்ஃபார்லேன் நகைச்சுவை பிடித்திருக்கும்.

பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்திருந்த பாம்பே ஜெயஸ்ரீ பாடாததை விட இது ஒன்றும் பெரிய குறை அல்ல.

Vanji Kottai Vaaliban and Braveheart: Historical Fiction in Movies

ராகா.காம் செய்யும் மிக உத்தமமான காரியம் என்பது நான்-ஸ்டாப் கன்னலில் பாடல்களை தொடர் ஒலிபரப்பாக கோர்ப்பதுதான். ஒரு நாள் சந்திரபாபு, இன்னொரு நாள் இசையமைப்பாளர் வேதா, என்னும் வரிசையில் இன்று கிளாசிக்ஸ் ஓடிக் கொண்டிருந்தது.

அப்பொழுது வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தில் கொத்தமங்கலம் சுப்பு எழுதி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ‘வெற்றிவேல்… வீரவேல்’ கிடைத்தது.

பல நல்ல புறநானூறு பாடல்களையும் பரணி பாடிய வரலாற்றையும் எழரை நிமிடத்திற்கான நாடகக் காட்சியாக ஒருங்கிணைத்திருக்கிறார்கள். சட்டென்று ‘பிரேவ் ஹார்ட்’ திரைப்படத்தை நினைவிற்கு கொண்டு வந்தது.

ஸ்காட்லாந்து மக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக ஏன் சண்டை போட்டார்கள்? போர்களுக்காக வில்லியம் வாலஸ் எவ்வாறு மக்களை சேர்த்தார்? Offence is the best defense என்பதை தற்கால விளையாட்டு பயிற்றுநர்களுக்கு, அக்கால வரலாறு கொண்டு விளக்கிய படம். மெல் கிப்சன் நடித்த ’பிரேவ்ஹார்ட்’டில் சிலந்தியைப் பார்த்து விடாமுயற்சியைக் கற்றுக் கொண்ட ராபர்ட் ப்ரூஸும் இருந்தார்.

இரண்டுமே பிரும்மாண்டமான போர்ப்படங்கள். வில்லன்களாக அரசர்களைக் கொண்டவை. காதல் நிறையவே உண்டு. இரண்டு நாயகிகள் கொண்ட கதை. வீரதீரம் நிறைந்த நாயகன். 1958ல் தமிழில் வெளியான ‘வ.கோ.வா.’ சூப்பர் ஹிட். ப்ரேவ்ஹார்ட்டும் நல்ல வசூல் கொடுத்தது.

மீண்டும் இந்த மாதிரி சரித்திரத்தையும் மசாலாவையும் தேசப்பற்றையும் சரியாக மிக்ஸ் செய்யும் மசாலாக்கள் எப்பொழுது வரும்?

கும்கி: பார்க்கலாமா? போரா?

பத்து நிமிடத்தில் எடுக்க வேண்டியதை முழு நீளப் படமாக்கினால் எப்படி எடுக்கக் கூடாது என்பதற்கு ‘கும்கி’ நல்ல உதாரணம்.

ஹிட் ஆன பாடல்கள். ஓவர் ஆக்டிங்கில் சீனியர் சிவாஜியாக மிளிரும் தம்பி ராமையா. முறைப்பும் உடற்பயிற்சியும் ஆகிய இரண்டு பாவங்கள் மட்டுமே அறிந்த ஜூனியர் சிவாஜியாக விக்ரம் பிரபு.

எருமையைக் கண்டு யானை பின்வாங்குவது படத்தின் ஹைலைட். யானைகளுக்கும் லைசன்ஸ் பேப்பர் வேண்டும் என்றறிய வைத்தார்கள். இவ்வளவு மரங்கள் நிறைந்த காடுகளுக்கு தப்பிச் செல்லாமல் போயிட்டோமே என்று வீரப்பன் & கோ வருந்தியிருப்பார்கள்.

என்னதான் செல்லப் பிராணி வளர்த்தாலும், காதலின் முன் அது தூசு என்பது படத்தின் நீதி. அடிதடியை விட பாசமும் ப்ளாக்மெயிலும் காதலை உடைக்க கை கொடுக்கும் என்பது கொசுறு மெஸேஜ்.

ஒரு படமோ, இரண்டு படமோ நன்றாக இயக்கிவிட்டு, அதன் பிறகு, அசிஸ்டெண்ட் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தயாரிப்பில் இறங்கி, பிறரின் படங்களை மெருகேற்றுவதுதான் இப்போதைய டிரெண்ட். பிரபு சாலமனும் அவ்வாறே ஷோ யானையாக மாறி கும்கிகளை அடையாளம் காட்டணும்.

Morals from Children Movie: The Odd Life of Timothy Green

‘தி ஆட் லைஃப் ஆஃப் டிமொத்தி க்ரீன்’ பார்த்தேன். சிறுவர்களுக்கான படம். பெண்களை குறிவைத்து எடுக்கப்பட்ட படம்.

படத்தின் ‘அறமாக’ இவற்றை பட்டியலிடலாம்.

* நம் குழந்தை இப்படித்தான் இருக்கணும்னு நினைத்தால், அவர்களின் வளர்ச்சி அதனுடனேயே நின்றுவிடும்.

* தத்து எடுத்துக் கொள்; குறைகளுடன் வாழ ஏற்றுக் கொள்.

* செட்டில் ஆகாதே; தரையில் இருந்து கொண்டே நட்சத்திரங்களை பறிக்க ஒவ்வொரு நொடியும் முயல்!

என்னுடைய பையன் கிரிக்கெட்டில் நல்லா ஆடணும், சுவாரசியமாப் பேசணும், என்றெல்லாம் புகுத்தாமல், அவனுடைய வாழ்க்கையை அவனே வாழட்டும் என்பது மைய சித்தாந்தம். அப்படி எல்லாம் வாழவிடுகிறோம் என்பது அமெரிக்கர்களின் நோக்க உலகாயதம். சினிமாக்களிலாவது இப்படி நம்பிக்கையும் நல்ல விஷயங்களையும் தொடர்ச்சியாக முன்வைப்பது அவர்களின் கற்பனை வேதாந்தம்.

Kamal’s விஸ்வரூபம் FAQ

அ) படம் எப்படி?
நல்லாருந்துச்சு. சுவாரசியமாப் போகுது.

ஆ) எது பிடிச்சிருந்தது?
பிராமணப் பொண்ணு சிக்கன் சாப்புடறது; முதல் சண்டைக் காட்சி; ஆப்கானிஸ்தான் லொக்கேஷன்

இ) என்ன இருந்திருக்கலாம்?
ஆண்ட்ரியாவுடன் டூயட்; கோடை கால ஆடை அணிந்த ஹீரோயின்; அப்புறமாய் கொஞ்சம் கதை

ஈ) குழந்தைகளைக் கூட்டிப் போலாமா?
செக்ஸ் வச்சுக்கறதுனா என்னன்னு கேப்பாங்க; கை வேறு கால் வேறா வருவதைப் பாத்து பயப்படலாம்

உ) இயக்குநர் கமலுக்கு எவ்வளவு மார்க்?
விருமாண்டி அளவு உணர்ச்சி இல்லை; ஹே ராம் அளவுக்கு சரக்கும் இல்லை. இருந்தாலும் ஃபோகஸ் இருப்பதால் எழுபது.

ஊ) இஸ்லாமியர்கள் ஃபீலிங் ஆகிறார்களே?
பனியில் நடந்தா பார்த்து நடங்க; அல்லது வழுக்கிரும்னு சொல்லுற மாதிரி, மார்க்கத்தில் பார்த்து நடக்க சொல்லுறாரோனு நெனச்சேன். அந்த மாதிரி அட்வைஸ் கூட இல்ல. டைட்டில் மட்டும் வலமிருந்து இடம் வருவது மாதிரி சின்னச் சின்ன நகாசு மட்டுமே.

எ) கார் சேஸிங் இருக்காமே?
அதற்கு பதிலா இன்னும் கொஞ்சம் கேரக்டர் டெவலப்மெண்ட் செஞ்சிருக்கலாம்.

ஏ) துப்பாக்கி, எந்திரன் – ஒப்பிடுக.
விஜய் படம் புத்திசாலித்தனம். ரஜினி படம் பிரமிப்பு. கமல் படம் இரண்டும் கலந்து வந்திருக்கணும்; ஆனா, டைரக்டர் பேச்ச கேட்கமாட்டாரே

ஐ) என்னோட அமெரிக்க நண்பருக்கு போட்டுக் காட்டலாமா?
இது தூய இந்தியருக்கு மட்டுமே ரசிக்கக் கூடியது. அவர்களுக்கு புதுசா எதுவும் சரக்கு இல்லை. போர்ன் ஐடெண்ட்டியும் ட்ராஃபிக்கும் பாக்குற கும்பலுக்கு விசுவரூபமெல்லாம் சரிப்படாது

ஒ) ஆக்டர் கமலுக்கு எவ்வளவு மார்க்கு?
உறுத்தாம வந்து போகிறார். தேய்வழக்காக வசனகர்த்தா சொல்லுறத கூட சகிக்க வைக்கிறார். முக்கியமா அந்த பயங்கரவாதி கெட்டப்புக்காகவே நூற்றுக்கு நூறு போடலாம்.

ஓ) நெஜத்தில் இப்படி எல்லாம் நடக்குமா?
தீவிரவாதிகளுக்கு புது புது ஐடியா எல்லாம் கொடுத்திருக்காரே

ஔ) “தூங்காத என் கண்ணில் துயில் உரித்த கண்ணன்… விதை இல்லாமல் வேர் இல்லையே’ போல் கவித்துவமாக சிந்தனை சொல்லுப்பா…

புறாவில் என்ன பாகுபாடு என்பது பயலாஜிஸ்டுக்குத்தான் தெரியும்; அது போல் மனிதனின் பிரிவுகள் அறிவியலாருக்கு மட்டுமே புலப்பட வேண்டும். புறா கோவில் மாடத்திலும் தங்கும்; அங்கிருந்து மசூதிக்கும் பறக்கும். நாயகனும் அவ்வாறே.