குறும்படத்தின் துவக்கத்தில் வரும் அறிவிப்புகள், இந்தப் படம் முழு நீள நகைச்சுவைப் படம் என கபர்தார் செய்கிறது.
வேட்டையாடு விளையாடு, சி.எஸ்.ஐ மியாமி போல் பதினாறு, முப்பத்திரண்டு என்று நொடிக்கு நொடி பல் அடுக்கு பிரிவாக விரிந்து மாறும் குட்டித்திரைகள், விலை உயர்ந்த மருத்துவ சாதனங்கள், என காட்சியமைப்பிலும் அரங்கப் பொருள்களிலும் நல்ல கவனம் செலுத்திய தயாரிப்பு.
கொலாஜ் போல் ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு துணுக்கு காட்சி, அதன் மேல் நாலைந்து சம்பவங்கள் என்று வசனங்கள் குறைவாக இருப்பது பலே!
ஒரே சமயத்தில் அஷ்டலஷ்மியாக நாலைந்து நபர்கள் வெவ்வேறு சட்டகங்களில் வெவ்வேறு லஷ்மிகளாக தோன்றியிருப்பது சிரத்தை.
உயிர்ப்போலி (க்ளோனிங் டிராக்கர்) உருவாக்கும் கணித்திரையாகட்டும்; அலுவல் திட்டத்தில் வரும் உளுத்தம் பருப்பு, தயிர் ஆகட்டும்; கோப்புகளையும் கணினி இடைமுகத்தையும் பாவ்லா காட்டாமல், உண்மையாகவே தயாரித்திருக்கிறார்கள்.
பெண்ணுக்கு ஆண் குரல் மாற்றம் எல்லாம் கச்சிதமாக இருந்தாலும், ஹேமா ஏன் அவ்வளவு மோதிரம் அணிந்திருக்கிறார் என்பதும், லஷ்மி ஏன் சீமந்தம் போல் அத்தனை வளையல் அணிந்திருக்கிறார் என்பதும் அவிழாத முடிச்சு.
உணர்ச்சிகரமான தருணங்களில் ஆங்கிலத்தில்தான் வசனம் அமைந்திருக்கிறது என்பது நெருடல்
நடிகையில் ஒரெழுத்தை எடுத்துவிட்டால் நகை கிடைத்துவிடும். விளம்பரம் என்னும் வார்த்தைக்கு வியாபாரம் என்னும் வார்த்தை மோனை சந்தத்துடன் அமைந்திருக்கும். நயந்தாரா என்றால் அட்டைப்படம் என்று சென்ற வாரம் காணப்பட்டது. கீழே கல்கி அட்டை கட்டுரை:
தமிழ் சினிமாவின் கோடி லேடி, சிங்கிள் பெண் சிங்கம், ட்ரெண்டிங் பியூட்டி, மாயாவன தேவதை, தனி ஒருத்தி… அவ்வளவும் நயன்தாராதான்!
ஒரு ஹீரோயினாக 10 வருடங்கள் கடந்தும் படபடக்கிறது நயன்தாரா கிராஃப். அடுத்தடுத்து ‘மாயா’, ‘தனி ஒருவன்’, ‘நானும் ரௌடிதான்’ என ஹாட்ரிக் ஹிட்ஸ் தட்டியவர். காதல் தோல்விகள், வீண் வம்புகள், உள்ளடி வேலைகள் கடந்தும் ஒரு படத்தின் வெற்றிதோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார் நயன். மாஸ் நடிகர்களே நயன் கால்ஷீட்டுக்காக மல்லுக்கட்டுகையில், ‘ரெஜினா’, ‘மாயா’, ‘மஹிமா’, ‘காதம்பரி’… என
சினிக்கூத்து, வண்ணத்திரை, சினிமா எக்ஸ்பிரெஸ் எல்லாம் பார்க்கவில்லை. அங்கும் அவர்தான் இருப்பார் என்பது சம்சயம். ஏன்?
எல்லாப் புகழும் ஜி.ஆர்.டி. தங்க மாளிகைக்கே!
மாநகராட்சி இடத்தையெல்லாம் பல கோடி கமிசன் பெற்று ஜி. ஆர்.டி வாங்கும் போது இந்த மாதிரி, தங்களுடைய பிராண்ட் அம்பாஸ்டரை முன்னிறுத்துவது ஜுஜுபி:
ஜூலை 2012 செய்தி: சென்னை மாநகர மேயருக்கு தொடர்புண்டா? சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ராபின்சன் பூங்கா அருகில் சுமார் பத்து கிரௌண்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் திமுகவினர் ஆக்கிரமித்து தங்களது கட்சி அலுவலகத்தை நடத்தி வருகின்றனர். இப்போது மீதம் உள்ள இடத்தில எம்சி சாலையை ஆக்கிரமித்து இருந்த நடைபாதை வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செயபட்டிருந்தது. இப்போது அந்த இடத்தை ஜி. ஆர். டி தங்க மாளிகை நிறுவனத்திற்கு லீஸ்கு விட சுமார் ஐந்து கோடிக்கு கமிசன் பெற்று கை மாற்றி விட வேலைகள் நடந்து முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நடைபாதை வியாபாரிகளுக்கு தலைக்கு ஒரு லட்சம் கொடுத்து விரட்டபடுவதாக தகவல். மேலும் முக்கிய புள்ளி ஒருவருக்கு பதினைந்து கோடி கைமாறப் போவதாக கூறப்படுகிறது. நீதித் துறையின் உத்தரவு மீறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இரண்டு கவுன்சிலர்கள் அம்மாவின் உத்தரவையும் மீறி தலா ஐந்து லட்சம் பெற்றுள்ளனர். இதனால் சென்னை மேயரும் பலன் பெற்றிருப்பார என்ற சந்தேகம் வலுத்துள்ளது
இவ்வளவு கோர்த்துவிட்டு, சமீபத்திய நயன் தாரா செய்தியை சொல்லாவிட்டால்… எப்படி?
சமீபத்தில் நயன் – விக்னேஷ் ஒன்றாக எடுத்துக்கொண்ட செல்பி வெளியாகியது. மேலும், விக்னேஷுக்கு நயன் அன்பளிப்பாக பி.எம்.டபிள்யூ கார் மற்றும் வீடு ஒன்றை வாங்கி கொடுத்ததாகவும் தகவல் வெளியானது.
தனது பிறந்தநாளை (18 நவம்பர்) முன்னிட்டு, ரோம் நகருக்கு சென்ற நயந்தாரா, அங்கு போப்பிடம் ஆசிர்வாதம் பெற்றார். அவருடன் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனும் சென்றிருந்தார். அப்படியே நயந்தாராவுக்காக கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய இயக்குநர் விக்னேஷ், தனது பெயரை விக்டர் என்று மாற்றிக்கொண்டாராம். இந்த பெயர் தேவு நயந்தராவின் சாய்ஸாம்.
பிரபு தேவாவுக்காக இந்து மதத்திற்கு மாறிய நயந்தாரா, காதல் முறிவுக்கு பிறகு மீண்டும் தனது தாய் மதமான கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்
அஜீத் நடிப்பில் ‘வேதாளம்’ வெளியான தீபாவளி அன்றே கமலின் ‘தூங்காவன’மும் வெளியாகி இருப்பது, காக்டெயில் விற்கும் இடத்தில் மாக்டெயில் அருந்துவது போல் அமைந்திருக்கிறது. விசைப்பலகை இடுக்குகளில் ஒளிந்திருக்க வேண்டிய துகள்கள், விஸ்வரூபமெடுத்து தமிழ் சினிமாவை ’வேதாளம்’ மாதிரி நிரப்பினால், அந்த பாலவனத்தில், கொஞ்சம் போல் துளிர்க்கும் சோலைவனமாக தூங்காவனம் இருக்கிறது.
சந்தானபாரதி இயக்கிய ‘கடமை… கண்ணியம்… கட்டுப்பாடு’ படத்தில் பாடல்கள் கிடையாது. தூங்காவனத்திலும் பாடல்கள் இல்லை. எனினும், இரண்டுமே பாடல்கள் நிறைந்த படங்களை விட நந்தவனம்.
தீவனம்
நிரலியை சி ஷார்ப்பில் எழுதிக் கொடுத்தால், அதே நிரலியை பைத்தான், ரூபி, ஜாவா போன்ற கணிமொழிகளில் எவ்வாறு எழுதுவது என்று செய்து பார்ப்பது கணி நிரலாளர்களுக்கு உவப்பான விஷயம். கொஞ்சம் சவாலான விஷயமும் கூட. கமல் இந்த மாதிரி உருமாற்றி, அதை தமிழ் மசாலா சேர்த்து நமக்கு தீவனம் ஆக்குகிறார்.
பார்வையாளர்களுக்கு விஷயம் வைக்க வேண்டும் என்று குவிமையம் இல்லாமல், சகல இடங்களுக்கும் பயணித்து குழப்பிக் கொள்ளாமல், எளிமையான பயணத்தில், சுருக்கமான நேரத்தில், பல இடங்களுக்கும் பாய்ந்து பறந்து திக்கின்றி திணறாமல், தீவனம் போடுகிற படம்
சஞ்சீவனம்
சோலையில் சஞ்சீவனம் என்பது உணவகம். இங்கே சாப்பாட்டுக் கடையில் பாதி படம் அரங்கேறுகிறது. சமையல் பொருள்களைக் கொண்டு சண்டைக்காட்சி நடக்கிறது.
சஞ்சீவியாக கமல் இந்தப் படத்திலும் உலாவுகிறார். அசல் படமான ஃபிரெஞ்சு படத்தில் இருந்து சற்றே விலகி, பெண்கள் கமலை மொய்க்கிறார்கள். வயிற்றில் குத்துப்பட்டாலும், சாவடி வாங்கினாலும் நிமிர்ந்து மீண்டெழுகிறார்.
சீவனம்
வேலையில் இருப்பது சம்பாத்தியத்திற்கா? பணியில் அமிழ்ந்து கிடப்பது மணவாழ்வை முறிக்குமா? குடும்பத்தை விட அலுவலில் பெயரெடுப்பது முக்கியமா? போன்ற ஜீவனம் சார்ந்த கேள்விகளை எழுப்பும் படம்.
இன்றைய இளைய தலைமுறை போதைக்கும் மதுவிற்கும் கொண்டாட்டத்திற்கும் அடிமையாகி இருப்பதை அமைதியாக சொல்லிச் செல்கிறது.
கவனம்
கூகுள் கொண்டு சகல தகவல்களையும் அறியும் காலத்தில், முன்னாள் மனைவிக்கு தொலைபேசி போட்டு, மருந்துகளையும் ஊசிகளையும் கேட்டறியும் நாயகன் சி.கே.டி, என்ன சி.ஐ.டி.?
மகனின் திறன்பேசியில், எங்கே இருக்கிறான் என்று கண்டறியும் எளிய ஜி.பி.எஸ். கூட இல்லாமல், என்ன ஐஃபோன்?
பிருந்தாவனம்
பூஜாகுமாரும் ஆண்ட்ரியாவும் இல்லாமல் இருப்பதே பிருந்தாவனம். மது ஷாலினி அளவாக நடிக்கிறார். வெள்ளித்திரைக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறார். மிடுக்கான த்ரிஷா அதனினும் சிறப்பு.
ஃப்ரெஞ்சு அசலில் கொஞ்சம் போல் உங்கள் ஊகத்திற்கு விட்டுச் சென்றிருப்பார்கள். தமிழில் தெள்ளத் தெளிவாக போட்டுடைப்பது, திரையரங்கு வருகையாளரை மட்டம் தட்டும் புவனம்.
யெளவனம்
நேற்று ஓய்வுபெற்ற 61 வயது காவல்துறை அதிகாரி மாதிரி கமல் இல்லாத யெளவனம். முன்னாள் மனைவி ஆஷா ஷரத்தைப் பார்த்தாலும் நாற்பதுகள் போல் தெரியும் யெளவனம். இந்த மாதிரி உடம்பை வைத்துக் கொள்வது தனி உஜ்ஜீவனம்
பாரதியை இன்று படித்தாலும் புத்துயிர் பெறுகிறோம்; மலைக்கள்ளனையும் தூக்கு தூக்கியையும் இன்று பார்த்தாலும் ரசிக்கிறோம். அது போல் பிறமொழிக்காரர்களிடம் போட்டுக் காண்பித்தாலும் காலா காலத்திற்கும் சுவாரசியமாக்கும் சொரூபம் கொண்டிருக்கும் படம்.
தாருகாவனம்
தாருகாவனத்தில் பல முனிவர்கள் வேள்வி செய்து கொண்டும் தவமியற்றியபடியும் வாழ்ந்தார்கள். தங்களது தவத்தின் வலிமையால் முக்தியினை நாடினார்கள். முனிசிரேஷ்டர்களுடைய மோனத்தையும், குருபத்தினிகளது கற்பையும் குலைக்க நாராயணரின் துணையோடு சங்கரன் சதி செய்கிறான். மும்மூர்த்திகளில் இருவரையும் ஒழித்துக் கட்ட அபிசார வேள்வியை நிகழ்த்தினார்கள். திடீரென்று வேள்வியின் அக்னி குண்டத்திலிருந்து மகா பயங்கரமான உருவத்தோடு ஒரு புலி உருமியபடி வெளியே வந்தது. அக்னியிலிருந்து அடுத்தடுத்துத் யானை, மான், பூதங்கள், மழு, முயலகன், கொடிய நாகங்கள் என்று ஏவினார்கள். ஏவப்பட்ட பூதங்கள் சிவனின் பூதகணங்கள் ஆகின. மழு அவருக்கே படைக்கலனாகி விட்டது. முயலகன் சிவனின் காலடியில் சிக்கி நகரவே முடியாதவனானான். நாகங்களுக்கு காளி, காளாங்திரி, யமன், யமதூதன் என்று நான்கு விதமான நச்சுப்பற்கள். அவற்றிலிருந்து விஷத்தைப் பீய்ச்சி அடித்தபடி அவை ஆக்ரோஷமாக சிவன் மீது பாய்ந்தன. ஏற்கெனவே, கருடனுக்கு அஞ்சித் தன்னிடம் சரண் புகுந்த பாம்புகள் அவருக்கு ஆபரணமாக விளங்கி வந்தன. இப்போது வந்த கொடிய நாகங்களையும் தம் கையில் பற்றி ”உம் குலத்தவர் ஏற்கெனவே இங்கே என்னுடன் இருக்கிறார்கள். நீங்களும் அவர்களுடன் கூடி வாழுங்கள்!” என்று கூறி அந்த நாகங்களைத் தமது கரம், திருவடி, திருவரை, திருமார்பு முதலிய இடங்களில் கங்கணம், காலணி, அரைஞாண் போன்ற ஆபரணங்களாக அணிந்து கொண்டார்.
Insomnia என்னும் கேளிக்கை மையமே தாருகாவனம். அங்கே இளைஞர்களும் இளைஞிகளும் களிவெறிப் பொருள் கொண்டு கூத்தாடி போதையின் துணையோடு முக்தியினை நாடினார்கள். அங்கே நிலவும் மயக்கத்தைப் போக்க காவல்துறை உயரதிகாரியான திவாகர் களமிறங்குகிறார். அவரை எதிர்க்க போதைத்தடுப்பு அதிகாரியான த்ரிஷா தோன்றுகிறார். திரிஷாவின் மேலிடமான கிஷோர் வருகிறார். அவர்களை ஆபரணமாகக் கொண்டு எவ்வாறு வில்லன்களை எதிர்கொள்கிறார் என்பதே திரைக்கதை.
உபசீவனம்
சௌந்தர்யலஹிரியையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தையும் எம்.எஸ். சுப்புலஷ்மியின் குரலுக்காகவும் அதன் மந்திர உச்சாடனத்திற்காகவும் கேட்பவர்கள் உண்டு. அட்சரம் பிசகாமல் சொல்பவர்களும் உண்டு. ஆனால், அர்த்தம் உணர்ந்து, பொருள் புரிந்து, அனுபவித்து வாழ்க்கையில் கடைபிடிப்பவர்கள் எவ்வளவு பேருண்டு? அதே போல், சுவாரசியமான படங்களை பார்ப்போர் நிறைய உண்டு. அதனை தமிழ் நாயகர் கொண்டு, மொழிமாற்றுவோர் கூட நிறைய உணடு. ஆனால், பொருத்தமான சினிமாவாகத் தேர்ந்தெடுத்து, அதன் கடுமையான வழிமுறைகளை தமதாக்கி, தமிழுக்குக் கொணர்வோர் மிகச் சிலரே உண்டு. அதற்கு, கமலின் தூங்காவனம் ஒரு சான்று.
கிரேசி மோகனின் கத்தி வசனமும் கிடைக்கிறது. காவல்துறையின் தகிடுதத்தங்களும் சத்தமின்றி பூடகமாக வெளிப்படுகிறது. விவாகரத்தான வாழ்க்கையில் மகனின் மேல் செலுத்தும் நேசமும் காணக்கிடைக்கிறது.
தான் மட்டும் தனியே எல்லா சட்டகத்திலும் காணக் கிடைத்தால் செல்ஃபி காலத்தில் புளித்துப் போகும் என்றறிந்த கமல், உமா, ஜெகன், பிரகாஷ்ராஜ், கிஷோர் என எல்லோருக்கும் கதாபாத்திரமும் அவர்களுடைய குணச்சித்திரமும் தனித்துவமாகத் தெரியுமாறு அமைத்திருக்கிறார். தானும் வந்துபோகிறார்.
கமல் படத்திற்கு விமர்சனம் எழுதுவதற்கு நிறைய பிரயத்தனம் வேண்டும். 1980ல் ஸ்டான்லி க்யூப்ரிக் ‘தி ஷைனிங்’ என்ற படம் எடுத்தார். அந்தப் படத்தில் என்னவெல்லாம் குறியீடுகள் இருந்தன, அந்தக் காட்சியமைப்பின் உள்ளே பொதிந்திருக்கும் விஷயங்கள் என்னவென்று சொல்வதற்காகவே ரூம் 237 என்ற ஆவணப்படத்தை சிரத்தையாக வெளியிட்டு இருக்கிறார்கள்.
உத்தம வில்லனுக்குக் கூட இந்த மாதிரி நிறைய கதை கட்டி விட்டிருக்கிறார்கள். வருடத்திற்கு மூன்று படம் என்றானபின், ஜெயமோகன் எழுதும் மஹாபாரதம் போல் கமலின் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் விலாவாரியான அலசல் தேவையிருக்காது.
பாபநாசம் போல் உன்னைப் போல் ஒருவன் போல் ஃப்ரெஞ்சுப் படமான ‘Nuit blanche’ம் அவ்வாறே ஒரு மறு-பதிப்பு. இந்தப் படத்தில் கமலைப் பார்ப்பதற்கு பதில் ஃபிரெஞ்ச் அசலை பார்ப்பது மேல் என்பது போன்ற விமர்சனங்கள் நாளைய தினங்களில் ஃபேஸ்புக்கில் உலாவுவதற்கு முன், அசல் படம் குறித்து பார்த்து விடுவோம்.
’வேட்டையாடு விளையாடு‘ போன்ற துள்ளல் போலீஸிற்கும், தூங்காவனம் படத்தின் காவல்துறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முன்னது நம்பவியலா சாகசங்கள் புரியும் கூரையேறி கோழி பிடிக்கும் இராமாயணம். ‘ஸ்லீப்லெஸ் நைட்’ உள்ளே அழுகிக்கிடப்பதை மெதுவாக அரங்கேற்றும் சண்டைப்படம்.
திருக்கடையூர் அபிராமி பட்டர் (இயற்பெயர்: சுப்ரமணிய ஐயர்) நினைவிற்கு வருகிறார். அவருக்கு இன்னல் வரும்போது அந்தாதி இயற்றினார். இன்றைய காலத்துப் பசங்களை அடுத்த மாதத்திற்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று குளிரூட்டப்பட்ட அறையில் உட்கார்த்தினால் கூட அந்தாதியை ‘கிட்-ஹப்’பில் தேடி, திருடத் தெரியாத அசமஞ்சங்கள் ஆக இருக்கிறார்கள். அவரோ, கீழே குழி, சுட்டெரிக்கும் நெருப்பு ஜ்வாலைகளைக் கக்க, அம்பிகை வருவாளோ என்னும் பயமும் துரத்த, அவர் பாட்டுக்கு தன் வேலையை, பாடல் புனைவதை செய்து முடிக்கிறார்.
ஸ்லீபெலெஸ் நைட் நாயகன் வின்செண்ட்டும் அம்பிகை பட்டர் போல், கடும் பிரச்சினைகளுக்கு நடுவில் சாந்தமாக செயல்படுகிறான். ஆனால், அபிராமி பட்டரைப் போல் உத்தமன் அல்லன். கொஞ்சம் கெட்டவன்; போதை மருந்து தடுப்புப் பிரிவில் இருந்தாலும், அதற்கு மாறாக, சொந்த ஆதாயத்திற்காக செயல்படுபவன். கள்ளக்கடத்தல் நடப்பதாக கிடைத்த துப்பை வைத்து, அந்த பரிமாற்றத்தைத் தடுத்து, போதைப் பொருள் அனைத்தையும் தனதாக்கிக் கொள்ளப் பார்க்கிறான்.
போதைப் பொருளின் அசல் உரிமையாளர் வெகுண்டு எழுகிறார். கதாநாயகன் வின்சென்ட்டின் மகனைக் கடத்துகிறார். தனக்குச் சொந்தமான போதைப் பொருளை தன்னிடமே ஒப்படத்துவிட்டால், வின்சென்ட் – தன்னுடைய மகனை மீட்டெடுக்கலாம்.
வின்சென்ட் மீது நம்பிக்கையில்லாமல், அவனுடைய காவல்துறையின் உயரதிகாரிகள், வின்செண்ட்டை பின் தொடர்கிறார்கள். ஆனால், அந்த உயரதிகாரியும் அத்தனை உத்தமரில்லை. அவரும் இன்னொரு வில்லன். வின்செண்ட் விற்பதாக இருந்த போதைப் பொருளை, வின்சென்ட்டின் காவல்துறை உயரதிகாரியே, திருடி, தனதாக்கப் பார்க்கிறார். அதற்கு, அப்பாவி த்ரிஷா போல் ஒரு அழகியை நியமிக்கிறார்.
த்ரிஷாவும் காவல்துறை உயரதிகாரியும் கமலை… அல்ல… வின்செண்ட்டை துரத்துகிறார்கள்.
தன்னுடைய மகனைத் தேடி, மதுபான சாலையெங்கும் வின்சென்ட் தேடியலைகிறான்.
வின்சென்ட் பதுக்கி வைத்திருக்கும் போதை சரக்கை, கள்ளக்கடத்தல்காரர்கள் தேடியலைகிறார்கள்.
மூவரும் ஒருவரை ஒருவர், மூர்க்கமாகத் தாக்குவது, உண்மையை அறிவது, கொஞ்சம் பாசத்தைக் கூட அவ்வப்போது பொழிவது எல்லாம் நடக்கிறது. தந்தை என்னும் பாசத்தைச் சொல்வதும் செயலில் காட்டி நிரூபிப்பதும் வின்சென்ட்டிற்கு அவசியம். புதியவளாக, பெண்ணாக, இளையவளாக இருந்தாலும் நேர்மையான கொம்பராக இருப்பது த்ரிஷாவிற்கு அவசியம். போதைப் பொருளைக் கடத்தி பணம் குவிப்பது அதன் உரிமையாளருக்கு அவசியம். மதுசாலை நடத்துபவருக்கு தன் உணவகத்தின் கெத்து அவசியம். சகுனியாக எட்டப்பனாக இருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி அவசியம். தாய்க்கு தன் மகனின் உயிர் அவசியம்.
இவர்களுக்குள் நடக்கும் போராட்டத்தை அன்றாட வாழ்வின் உபகரணங்களைக் கொண்டு அவர்கள் வெட்டிக் கொண்டு சாவதை கத்திக் குத்துக்களோடும், சுவாரசியமான சண்டைக்காட்சிகளுடனும் ஸ்லீப்லெஸ் நைட் காண்பிக்கிறது.
குழப்பமான சினிமா என்பது கவர்ச்சிகரமான மிக்சர் போல் மாதுளை காக்டெயில் போல் மயக்குறச் செய்யும். கோயன் சகோதரர்களின் ‘பர்ன் ஆஃப்டர் ரீடிங்’ கூட இதே வகையிலான ‘குழப்ப சினிமா’க்கள்தான். ஆனால், கோயன் சகோதரர்கள் மெதுவாக ஆற அமரச் செல்வார்கள். அவர்களுக்கு அவசரம் கிடையாது.
ஆனால், ஸ்லீப்லெஸ் நைட் போன்ற படங்கள் வேறு வகையான குழப்பங்களில் திளைப்பவை. எது நிஜம்… எது பொய்… எது சாத்தியம்… எது நடக்கவியலாது… யார் எங்கே இருக்கிறார்கள்… எவர் எங்கே வருவார்கள்… என்ன நடக்கும்… எப்பொழுது ஒழுங்கு பிறக்கும்? எல்லோரும் எல்லாவிடங்களிலும் பார்த்தாலும் யாருக்கும் எவரும் தெரிவதில்லை. இந்த உலகம் என்பது சந்து பொந்துகள் நிறைந்த ஹோட்டல் போல் அறைகளும் பாதைகளும் நிறைந்த கேளிக்கை மண்டபம். அங்கே ஒரு வாயிலில் நுழைந்தால் பார்; மற்றொரு வாயிலில் வெளியேறினால் சமையலறை. அவையிரண்டிற்கும் நடுவே ஓராயிரக்கணக்கானோர் கூத்தாடுகிறோம். சத்தத்தில் சுற்றிவர என்ன நடக்கிறது என்றறியாமல் திளைக்கிறோம். புறத்தோற்றத்தில் ஆடையின் நிறத்தில் மயங்குகிறோம். கேட்பதற்கு ஜென் தத்துவம் போல் ஜேகே சொற்பொழிவு போல் குழப்பம் ஏற்படலாம். படம் பார்த்தால் தெளிவு பிறக்கும்.
அந்தக் கால திரைப்படம், அக்கால வாழ்க்கை, எண்பதுகளின் உடைகளும் பாவனைகளும் என்று நொஸ்டால்ஜியாவில் மூழ்கினால், கைகொடுப்பதற்கு எப்பொழுதுமே பாலு மகேந்திரா இருக்கிறார்.
பள்ளிப்பருவத்தை திரும்பி பார்த்தால் ‘அழியாத கோலங்கள்’ கிடைக்கும். அந்தக் காலத்தில் ஸ்கூல் டீச்சரை நினைத்து ஏங்காத ஆண்கள், ரத்தம் உறிஞ்சாத கொசுக்கள் போல் காணக் கிடைக்க மாட்டார்கள்.
’மூடுபனி’ இன்னொரு விதமான பழைமை நினைவுகளைக் கிளறும் கதை. அம்மா கோந்து; தாய்மையை மனைவியிடம் தேடும் குழந்தை மனதுடன் சிக்கல்களும் நிறைந்த பிரதாப் போத்தன் கிடைத்தார்.
இந்த trilogyஇன் மூன்றாம் வடிவமாக ‘மூன்றாம் பிறை’. வளர்ந்த, நாகரிகமான பெண், தன்னுடைய பால்ய கால, சிறுவயதிற்கு திரும்ப நேரிடுகிறது. அதை அப்படியே கொண்டாடி, குட்டிப்பாப்பாவாகவே வைத்திருக்கும், ரசிக்கும் கமல் கிடைத்தார்.
இதன் முழுமையான இறுதி வடிவமாக ‘ரெட்டை வால் குருவி’ திரைப்படத்தைப் பார்க்கிறேன்.
இந்தப் படத்தின் துவக்கத்தில் வரும் ‘சுதந்திரத்தை வாங்கிப்புட்டோம்; அதை வாங்கி சுக்குநூறா உடைச்சுப்புட்டோம்’ பாடலில், பாலு மஹேந்திராவின் பிற்கால மனைவி மௌனிகா அறிமுகமாகிறார். இன்னொரு காட்சியில், ’மகராஜனோடு ராணி வந்து சேரும்’ என்று சதி லீலாவதியில் நாயகியான ஹீரா, ராதிகாவின் தோழியாக, ஹோட்டலில் உடன் சாப்பிடுபவராக எட்டிப் பார்க்கிறார். அந்தக் காலப் படங்களில், அந்தக் காலத்தில் பிரபலமாகாத பிரபலங்களின் அந்தக் கால தோற்றங்களை மேக்கப்பும் க்ளோசப்பும் இல்லாமல் பார்ப்பது, பாதி வெந்தும் வேகாத உருண்டோடும் மைசூர்பாகை சுடச்சுட வாயில் போட்டுக் கொள்வது போல் சுவையானது.
உதவி இயக்குநராக அறிவுமதி பணியாற்றி இருக்கிறார். பாஸ்டன் பக்கம் வந்தபோது விசாரித்து இருக்கலாம். தவறவிட்டுவிட்டேன்.
’தேவர் மகன்’ திரைப்படத்தில் “காத்துதாங்க வருது” என்று ரேவதி, திக்கித் திணறிப் பாடும் ‘இஞ்சி இடுப்பழகா’ பாடலுக்கு முன்னோடி போல் ‘திங்கார வேலனே… தேவா’ என்று காமெடி செய்கிறார்கள். எண்பதுகளில் வந்த படத்தில் கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் பற்றிய அசத்தலான டயலாக் வருகிறது. இனி யாராவது, “நீங்க எப்படி பிரொகிரமரா ஆனீங்க ப்ரோ?” எனக் கேட்டால், “ரெட்டை வால் குருவி படத்தில் ஓப்பனிங் சாங் முடிந்தவுடன் ஒரு விடலைப் பய சொல்வான். அதைக் கேட்டுத்தான்!” என்று தயங்காமல் பதில் சொல்லலாம்.
படம் முழுக்க எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள். பல் தெரிய, முகம் மலர்ந்து சிரிக்கிறார்கள். தானாகவே நடனமாடுகிறார்கள். பாடலைக் கேட்டால் உற்சாகம் அடைகிறார்கள். சாந்தமான துள்ளல் என்பதை குழந்தையின் கை கால் உதைத்து பொக்கைவாய் புன்னகையாகச் சொல்லத் தோன்றுகிறது.
படத்தில் இரு வீடுகள். பெரிய வீடு, அர்ச்சனாவின் வீடு. அந்த வீடு அந்தக் காலத்தில் மட்டுமல்ல, இந்தக் காலத்தில் கூட கனவு இல்லம். ’அஞ்சலி’ ரகுவரன் வருவதற்கு பன்னெடுங்காலம் முன்பே பந்தாவான, ஆனால் நடுத்தர வர்க்கத்தையும் பிரதிபலிக்கும் இல்லம். மினிமலிஸ்டிக் பொருள்கள். பார்த்து பார்த்து இருக்கும் அலங்காரம். ஐந்தாவது மாடியில் விசாலமான அறையும், திறந்த சமையல் வெளியும் கொண்ட அந்தப்புரம். வீட்டில் இருந்து பார்த்தால் தூய நதி (கூவம் தான்; அடையாறு அழுக்குதான்; ஆனால், தெளிவாக இருந்தது போல் கண்ணுக்குத் தெரியும் சென்னை). செக்ஸ் முடிந்தபிறகு பசிக்கு ஃப்ரிட்ஜைத் திறக்கும் தம்பதியினர். ’டூயட்’ பாட கதரி கோபால்நாத் சாக்ஸஃபோனில் ஜாஸ் இசைக்கிறார்.
அந்த வீட்டிற்கே பாந்தம் சேர்ப்பது ‘அர்ச்சனா’ கதாபத்திரம். “ஏன்யா…” என அவர் குழையும்போது பாதாம் அல்வாவை ஃபிரான்ஸில் கிண்டுவது போல் சுண்டியிழுக்கிறது. இந்த கதாபாத்திரம் ”மூன்றாம் பிறை”யின் சில்க் ஸ்மிதா போல் கவர்ச்சி கொண்டவள். ஆனால், ”மூடுபனி”யின் ஷோபா போல் இல்லத்தரசி பக்குவத்தில் இருப்பவள். பெஸ்ட் ஆஃப் எல்லா பாலு மகேந்திரா ஹீரோயின்ஸ்.
நான் பார்த்ததிலே இந்த துளசி கதாநாயகியைத்தான் ஏன் சிறந்தது என்று இப்படி சொல்கிறேன்?
இந்தக் கால மாந்தர் அணியும் பேண்டோரா போன்ற மரகதமும் மாணிக்கமும் பதித்த கல் வளையங்களை அன்றே அணிந்தவர் துளசி. அழகாக, நீட்டமாக, ‘இரண்டு குடங்களைக் கொண்ட தம்பூராவை மீட்டிச் செல்வதற்கான’ நாத தும்பிகளாக பின்னி, கருங்கூந்தல் கொண்டவர் துளசி. எப்பொழுதும் புடைவையிலே வலம் வருபவர். (அதற்காக, “அப்பொழுது கூடவா?” என்றால், அதற்கு பதில் இல்லைதான்) தலை நிறைய மல்லிகைப் பூ வைத்திருப்பவர் துளசி. தாயுமானவனாக கணவன் பின்னி விட தலை தருபவர் துளசி. பசியில் இருக்கும் கணவனுக்கு டைனிங் டேபிள் அமர்ந்து ஊட்டி விடுபவர் துளசி.
இரண்டாம் வீடு, சின்ன வீடு. அந்த வீட்டிற்கு, ராதிகா தலைவி. கள்ளக் காதலி. அம்மா இல்லாதவர். அப்பாவும் மைக்ரோ பருந்தாக கண்காணிக்கப் படாதவர். செக்ஸ் எஜுகேஷன் தேவையா என்னும் கேள்விக்கு பதில் சொல்லும் திராணி கொண்டவர் ’ராதா’ என்னும் ராதிகா கதாபாத்திரம். இன்றைய காலகட்டத்தில், பலான படம் பார்க்கத் தடை வரும் காலகட்டத்தில், இவ்வளவு தைரியமாக தொலைக்காட்சியில் முகம்காட்டி கருத்து சொல்லும் பெண்மணி என்பது மார்கழியில் மாம்பழம் கிடைப்பது போல் அரிய சீஸன்.
சில படங்களுக்கு பாடல்கள் பலம். சில படங்களுக்கு நாயகரோ, நாயகியோ பலம். சில படங்களுக்கு க்ளைமேக்ஸ் பலம். சில படங்களுக்கு சண்டைக்காட்சிகள் பலம். சில படங்களுக்கு மசாலா பலம். இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் – வசனம்.
இந்தப் படத்தில் விகே ராமசாமி பாடும் டைம்லியான பாடல்களை தனியாகப் பட்டியல் போட வேண்டும்:
– குற்றம் புரிந்தவன்… வாழ்க்கையில் நிம்மதி கொள்வது என்பது ஏது!?
– மன்மத லீலையை வென்றார் உண்டோ?
– சட்டி சுட்டதடா…
இதில் கிடைத்த மற்றொரு விநோதமான பாடல் ‘பூனைக் கண்ணை மூடிக் கொண்டால் இருண்டு போகுமோ… மியாவ்… மியாவ்!’
பல மணிரத்னம் படங்களுக்கு இந்தப் படம் முன்னோடியாக இருந்திருக்கிறது. ”அக்னி நட்சத்திரம்” படத்தில் ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா’ ஜனகராஜ் + வி கே ராமசாமி நகைச்சுவைக்கு, இந்தப் படம் கால்கோள் இட்டிருக்கிறது. ”ஓகே கண்மணி” படத்தில் லிவிங் டுகெதர், என்று கல்யாணம் ஆவதற்கு முன் சேர்ந்து வாழ்வதற்கான அஸ்திவாரங்கள், 1987ல் போடப்பட்டிருக்கிறது. கமல்ஹாசனின் எண்ணற்ற படங்களில் வந்த கிரேசி மோகன் ஸ்டைல் ஆள் மாறாட்ட பிரச்சினை நகைச்சுவை இங்கே வெள்ளித்திரை கண்டிருக்கிறது. காத்தாடி ராமமூர்த்தி போட்ட ‘அய்யா… அம்மா… அம்மம்மா’ நடை ஜோக்குகள் சரளமாக உருவப்பட்டு உலாவுகின்றன. நேற்றைய ஷங்கர் படமான ரஜினியின் ‘சிவாஜி’ படத்தில் டாக்ஸிக்குள் வேட்டி மாற்றும் நகைச்சுவை, இந்தப் படத்தில் தோன்றி இருக்கிறது.
‘காதலன்’ திரைப்படத்தில் எஸ்பிபி பாடியே கரைக்கும் “ஞாயிறு என்பது கண்ணாக” கூட இங்கே விகே ராமசாமியின் வெண்கலக் குரலில் “ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்க வந்தாள்” என்று ஒலிக்கிறது. அவரின் பாடல்கள் படம் நெடுக வருகின்றன.
மேலேயுள்ள பாட்டில் ‘சங்கர சங்கர சம்போ… இந்த சம்சாரி விஷயத்தில் ஏன் இந்த வம்போ?!’ என அவர் குத்தும்போது ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ சிந்து நிழலாடுகிறது.
அந்தக் காலத்தில் தமிழ் நன்றாகப் பேசினார்கள். சேரியில் தமிழ் நன்றாக புழங்கியது. குடிசை வாழ் மக்களுக்கு ‘செக்ஸ்’ என்னும் வார்த்தைக்கு அர்த்தமே தெரியவில்லை. பாலுறவு என்றாலும் புரியவில்லை. கலவி என்றாலும் தெரியவில்லை. அந்தக் காலத்தில் தமிழ் கொச்சைப்படுத்தவில்லை. எல்லோரும் டிரேட் ஃபேர் சென்றார்கள். வீட்டிற்கு ஒரு சாலிடேர் டிவி வைத்திருந்தார்கள்.
கிடைக்காததை எண்ணி ஏங்குவது என்பது நொஸ்டால்ஜியா எனப்படும். திருமணம் ஆனபின் இன்னொரு பெண்ணுக்கு ஆசைப்படுவது என்பது ‘கோபி’த்தனம் எனப்படும். சைக்கிளில் டபுள்ஸ் போகலாம். ரங்கராட்டினம் சுற்றலாம். பாடகியுடன் ஊர் சுற்றலாம். தட்டிக் கேட்பார் கிடையாது. அதிகாரபூர்வ மனைவியின் ஒப்புதலும் உண்டு. குழந்தை ஒன்றுக்கிருந்தால் டயாப்பர் மாற்றும் சிக்கலும் கிடையாது. வேலையில் அரட்டையும் உண்டு. இப்படி எல்லாம் கற்பனையில் வாழ்வதுதானே சினிமா? அந்தக் செல்லுலாயிட் கற்பனையை தமிழ் முலாம் பூசி கலைப்படைப்பாகத் தருவதற்காகத்தானே பாலு மகேந்திரா!
ஐ மிஸ் நொஸ்டால்ஜியா அண்ட் அன்கரப்டட் வுமன். ஐ மீன்… ஐ மிஸ் பாலு.
லாரி ஓட்டுபவரின் மகன், பல்லாயிரம் கோடி இரசிகர்களின் கனவு நாயகனாக மிளிர முடியுமா? கான்பூரின் அருகே உள்ள கிராமத்தில் இருப்பவரும்; லக்னௌவில் இருந்து காத தூரம் இருக்கும் குக்கிராமத்தில் இருப்பவரும்; அமெரிக்கா வந்து அங்கே பேஸ்பால் பந்து வீசும் நட்சத்திரங்கள் ஆவார்களா? ஒன்பது குழந்தைகள் உள்ள வீட்டில் ஒற்றை அறையில் வளர்பவர், அமெரிக்கர்களுக்கு சொந்தமான அவர்களுடைய விளையாட்டில், அவர்களுக்கு எதிராக மிளிர்வது சாத்தியமா?
இந்த மாதிரி சம்பவங்களைக் கோர்த்து எவராவது புனைவு அமைத்திருந்தால், இதெல்லாம் கதையிலும் சினிமாவிலும் மட்டுமே நடக்கும் என்றிருப்பேன். ஆனால், நிஜத்தில் நடந்திருக்கிறது. வாரநாசிக்கு அருகில் இருக்கும் ஊரில் பிறந்து வளர்ந்த தினேஷ் படேலும், ’கம்பள நகரம்’ என்றழைக்கப்படும் பாதோஹி நகரத்தில் ஒன்பதில் ஒருவராக பிறந்த ரிங்கு சிங்கும் – அமெரிக்கா வருகிறார்கள். பிட்ஸ்பர்க் நகர அணியில் பந்து போடுகிறார்கள்.
இந்த உண்மைக் கதையைப் பின்னணியாக வைத்து ”மில்லியன் டாலர் புஜம்” (Million Dollar Arm) வெளிவந்திருக்கிறது. இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரெஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்திற்கு இசையமைக்க ஒத்துக் கொண்டேபோது கொடுத்த பேட்டியில் ரெகுமான் இவ்வாறு சொல்கிறார்: ”ஸ்லம் டாக் மில்லியனரு’க்குப் பிறகு ஆங்கிலப் படங்களுக்கு இசையமைக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. ‘கப்பிள்ஸ் ரிட்ரீட்’, ’வாரியர்ஸ் ஆஃப் ஹெவன்’, ‘127 அவர்ஸ்’, ’எர்த்’, ‘பீப்பிள் லைக் அஸ்’னு இப்படி நிறைய நிறைய! அதில் நான் விரும்பித் தேர்ந்தெடுத்தது ‘127 அவர்ஸ்’ மட்டும்தான். அது ஆஸ்கர் பரிந்துரை வரை போனது. ஆனால், அடுத்த மூன்று வருடங்களுக்கு இந்தியாவை அடிப்படையாக வைத்து வரும் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்க நான் ஒப்புக்கொள்ளவில்லை. அப்படி, ஒத்துக் கொண்டால், ’ரெஹ்மானை – தெற்காசியா களத்தில் நடக்கும் கதைகளுக்குத்தான் பயன்படுத்தலாம்’ எனத் தேங்கிப் போயிருப்பேன். மேலும், இந்தியச் சூழலில் இசையமைக்க, எனக்கு தமிழும் ஹிந்தியும் இருக்கின்றன. அவற்றிலும் நான் தொடர்ந்து படங்கள் செய்து கொண்டுதானே இருக்கிறேன். நாலு வருடங்களுக்குப் பின்னால் மறுபடியும் ஒரு இங்கிலீஷ் படம் பண்ணலாம்னு நினைச்சேன். அந்த சமயத்தில் ‘மில்லியன் டாலர் ஆர்ம்’ படத்தின் இயக்குநர் கிரெய்க் கில்லஸ்ப்பியும் என்னை அணுகினார். இது இந்தியாவில் நடக்கும் கதை, வால்ட் டிஸ்னி தயாரிப்புனு நிறைய ஊக்கப்படுத்தும் விஷயங்கள் இந்தப் படைப்பில் இருந்தன. இது விளையாட்டு குறித்த திரைப்படம்தான். ஆனால், உள்ளுக்குள்ள ரொம்ப அற்புதமான இன்னொரு கதையும் மனித மனங்களின் ஊசலாட்டங்களும் ஓடுகிறது. ‘லகான்’ மாதிரினு சொல்லலாம்.”
படத்தில் எல்லா மொழிகளிலும் பாடல்கள் வருகிறது. படத்தின் இறுதியில் ‘என் சுவாசக் காற்றே’ படத்தில் இடம்பெற்ற சித்ராவும் உன்னிகிருஷ்ணனும் பாடிய ‘திறக்காதக் காட்டுக்குள்ளே’ பாடல் உணர்ச்சிப்பிழம்பான கணத்தில் ஒலிக்கிறது. படத்தின் நடுவே பாங்ரா பஞ்சாபி, டிஸ்கொத்தே ஹிந்தி, ஆங்கில ராப் என கலவையாக – எல்லா மொழிகளும் ரசனைகளும் இசைப்பிரிவுகளும் வருகின்றன.
இந்தப் படம் ஆஸ்கார் விருதுகளுக்கான நெடும் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், மூன்று/நான்கு பேர் மட்டுமே சொல்லப்படும் இறுதிப் பரிந்துரையில் இடம்பிடிக்கப் போவதில்லை என வல்லுநர்கள் கருதுகிறார்கள். ஸ்டீஃபன் ஹாகிங் வாழ்க்கையை சொல்லிய ‘தியரி ஆஃப் எவரிதிங்’ திரைப்படத்திற்கு இசையமைத்த யோஹான் ஜோஹான்ஸன், அல்லது இண்டெர்ஸ்டெல்லார் படத்தின் ஹான்ஸ் ஜிம்மர் அல்லது ஆலன் டூரிங் வாழ்க்கையை திரையாக்கிய ’தி இமிடேஷன் கேம்’ படத்தின் அலெக்ஸாண்டர் என முன்னிறுத்துகிறார்கள்.
ஆஸ்கார் விருதுகளுக்கு வாக்களிப்பவர்களுக்கு மறதி அதிகம். டிசம்பர் மாதத்தில் திரைப்படம் வெளியானால் மட்டுமே நினைவில் நிற்கும். ”மில்லியன் டாலர் புஜம்” திரைப்படமோ மே மாதமே வெளியாகி, இப்பொழுது திரையரங்குகளை விட்டு வெளியேறி விட்டது. இந்த நிலையில், அந்தப் படத்திற்கு எந்தப் பரிந்துரையும் கிடைப்பது சந்தேகமே. கோச்சடையான், ஐ போன்ற திரைப்படங்களுக்காகவும் ஏ ஆர் ரெஹ்மானின் பெயர் ஆஸ்கார் நீள்பட்டியல் பரிந்துரையில் இடம் பெற்றிருப்பதால், ‘மில்லியன் டாலர் ஆர்ம்’ பரிந்துரையையும் பத்தோடு பதினொன்றாகக் கருதி விட்டுவிடலாம்.
அது ஆஸ்கார் விருதிற்கான சாஸ்திரோப்தமான பட்டியல். இனி ஏ ஆர் ரெஹ்மானின் கோலோச்சல் குறித்த பாமரனின் பார்வை.
துவக்கத்தில் டிஸ்னியின் கோட்டை வரும்போதே பட்டாசு கிளம்பி விடுகிறது. இராணிகளும் மஹாராஜாக்களும் துள்ளலாக வெடி வெடிப்பது போல் ஐரோப்பிய பவனங்களுக்கு இந்திய ‘ஸ…ஸா… ஸரி’ வரும்போதே ”இது நம்ம இசை” என்று தோன்றவைத்து விடுகிறது. சிக்கன் டிக்கா மசாலாவில் இருக்கும் மணம் போல், பாரதத்திற்கேயுரிய வாசம்.
பதினான்காவது நிமிடத்தில் அந்த டிக்கா மசாலாவில் கொஞ்சம் சாம்பாரும் நிறைய தஹியும் கொத்து பரோட்டாவும் ஒருங்கே ஓங்கி ஒலிக்கிறது. சத்தமான இந்தியா. கசகச இந்தியா. சல்பேட்டா வாசனையான இந்தியா. கொண்டாட்ட இந்தியா. பரபர ஓட்டத்தின் நடுவே சாந்தமான இந்தியா. இப்படியெல்லாம் எழுத முடிகிறது… இதையெல்லாம் ஒலியில் கொண்டு வாருங்கள் என்று இயக்குநர் சொன்னாரா அல்லது இந்தியா என்றால் இதுதான் நாதம் என்று ஏ ஆர் ரெஹ்மான் சொன்னாரா? தெரியவில்லை. கேட்டுப் பார்த்தால் இந்தியா ஒலிக்கிறது. ஒளி கண்ணில் படாவிட்டால், மொழி புரியாவிட்ட்டால் கூட, அந்த லயம் காட்டிக் கொடுக்குமாறு அமைக்கப்பட்ட துள்ளலோசை.
அடுத்த ஓட்டம் இருபத்தி இரண்டாம் நிமிடம். ’சைய்யா சையா’ பாடிய சுக்விந்தர் சிங் ஒலிக்கிறார். அதே ஆட்டம்; பாட்டம். நிஜ நாடகம் தோன்றுவதற்கான ஒத்திகை நடக்கும் இடத்தை அறிமுகம் செய்யும் உறுமும் இசை.
அங்கே விட்டதை இருபத்தைந்தாம் நிமிடத்தில் சுக்வீந்த சிங் தொடர்கிறார். அவரை அப்படியே மாற்றி மேற்கத்திய இசைக்குத் தாவி விடுகிறார். இக்கி (Iggy Azalea) இங்கு வருகிறார்.
முப்பத்தி மூன்றில் ரெஹ்மானின் அமைதியான பாலட் ஒலிக்கிறது. பம்பாய் திரைப்படத்தில் ‘கண்ணாளனே’ துவக்கத்தில் வரும் இஸ்லாமிய சங்கீதம் போல்.
இனிமேல் திரைப்படத்தில் உற்சாகம் பிறக்க வேண்டும். ஏழைச் சிறுவர்கள் பந்து வீசும்போது அவர்களை ஒட்டி பாசமும், ஒட்டுதலும், ஜெயிக்க வேண்டுமே என்னும் ஏக்கமும் உண்டாக வேண்டும். டிஸ்னிக் கோட்டை வந்ததே… அதே இசை இப்பொழுது.
நாற்பதாவது நிமிடத்தில் நிஜப் போட்டி. இது ஏ ஆர் ரெஹ்மானின் சொந்த வீடு. முதல் படத்தில் ‘ஒட்டகத்தைக் கட்டிக்கோ’வில் ஆரம்பித்து மணி ரத்னத்திற்கு ’ருக்குமணி ருக்மிணி’ அயிட்டம் பாட்டு போட்டது போல் இலா அர்ஜுனும் அல்கா யாக்னிக்கும் குத்துகிறார்கள். அவர்கள் குத்துப்பாட்டு எப்பொழுது முடிகிறது, எப்பொழுது லகான் திரைப்படத்தில் வரும் “பார் பார் ஹோ…!! ஹஜார் பார் ஹோ!!!” வருகிறது என உணர முடியாத உருமாற்றம். அப்படியே, அந்த வீரர்களுக்காக கரகோஷமிடுகிறோம்.
நாற்பத்தியெட்டாம் நிமிடத்தில் வீடு திரும்புதல். அயல்நாடு செல்வதற்கு முன் வீட்டில் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டு விடை பெறும் தருணத்திற்கான முன்னுரையாக கொண்டாட்ட பாங்ரா. அது அப்படியே, உருக்கமான பிரிவுபசார பாந்தமாக மாறுகிறது. அங்கிருந்து அமெரிக்காவின் ராப், கெண்ட்ரிக் லமார் குரலில் தோன்றுகிறது.
இதன் பிறகு கிட்டத்தட்ட படம் முழுமையாக ஆட்கொள்கிறது. இசை தனியாக, பாடல் தனியாக, பாடகர் தனியாக துருத்திக் கொண்டு தெரிவதில்லை.
இசை ஒலிக்காமல் மௌனமாக இருக்க வேண்டிய நேரம். தோல்வியுறும் போது சந்திக்கும் நிசப்தம். அதிர்ச்சியும் பிரிவும் சொல்லும் குரல் எல்லாமே இருக்கிறது. ஆனால், இந்தியப் பகுதிகள் போல் “நான் ரெஹ்மான். நான் இங்கே இருக்கிறேன்” என்பது தெரிவதில்லை.
படத்தின் இறுதியில் இருவருக்கும் கடைசி வாய்ப்பு. இதில் வென்றால்தான் அமெரிக்கா கனவு பலிக்கும். தோற்றால் கூனிக் குறுக நேரிடும். இசை மெதுவாகவே ஆரம்பிக்கிறது. கொஞ்சம் ஹம்மிங். கொஞ்சம் ‘அ…ஆ…’. அப்படியே சட்டென்று ரிங்குவின் பந்து வேகமாகப் பாய்வது போல், தினேஷின் இதயம் துடிப்பது போல் துள்ளுகிறது. கையிலிருந்து ஏவப்பட்ட வில்லாக பாய்கிறது.
இந்தியர்கள் வெற்றிக்கான முதல் படியில் கால் வைத்ததை ஒலியிலும் திரையிலும் கலந்துருகிய உச்சகட்ட தருணமான படத்தின் இறுதியில் நிஜக்கதையிலும் வல்லவர்கள் வெற்றி கண்டார்கள் என்பதால் கண்கள் கலங்கியதா… அல்லது ரெஹ்மானின் இசையில் மனம் உருகியதா… தெரியவில்லை. ஆனால், ரெஹ்மான் தெரிந்தார். ஆஸ்கார் தெரியவில்லை. ஆனால், மீண்டும் மீண்டும் கேட்க வைத்து மயங்க வைக்கும் இசை தெரிந்தது. என்ன சுருதி, என்ன ராகம், என்ன தாளம், என்ன ஜானர் என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், இதயத்தைத் தொடும் இசை தெரிந்தது.
’கற்றது தமிழ் எம்.ஏ.’ இயக்குநர் ராமின் ’தங்க மீன்கள்’ இன்று வரவில்லை. எனவே, அதற்கு மாற்றாக That Girl In Yellow Boots படத்தைப் பார்த்தேன். இதுவும் தந்தைக்கும் மகளுக்குமான கதை.
ஸ்மிதா பட்டீலையும் ஷபனா ஆஸ்மியையும் எண்பதுகளில் கொண்டாடினால், கொன்கொனா சென்னையும் நந்திதா தாஸையும் இப்பொழுது இவர்கள் நடித்த படங்களை, ”இன்னார் இருக்கிறார்கள்… ஏமாற்ற மாட்டார்கள்” என்னும் நம்பிக்கையுடன் பார்க்க முடிகிறது. இருவரையும் அலேக்காக சாப்பிடுகிற மாதிரி வந்திருக்கிறார் கல்கி கோச்லின். அவரே கதை, வசனம் என்று சகல துறைகளிலும் நுழைந்திருக்கிறார்.
இயக்கத்தை மட்டும் Black Friday & தேவ் டி புகழ் புருஷன் அனுராக் கஷ்யபிற்கு விட்டுக் கொடுத்துவிட்டார். சப்பை மேட்டரை எடுத்துக் கொண்டு எப்படி படம் பண்ணுவது என்பதை அறிய வைக்கிறார். கல்கியின் ரூத் தசை பிடித்து விடுபவர். உடலுக்கு மட்டும் ஒத்தடம் கொடுக்காமல் சகலமும் கை வேலையாக செய்கிறார். ”உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி” பாடல் சொல்கிறது. ரூத் முகபாவத்திலேயே அருவறுப்பும் அசிரத்தையும் பதற்றமும் ஏக்கமும் திரைக்கதையை நகர்த்துகிறது.
முடிவை முன்பே யூகிக்க முடிகிறது. ஆனால், அதனூடாக சுவாரசியமான கதாபாத்திரங்களின் போக்கை ஊகிக்க முடியவில்லை. போதைக்கு அடிமையான காதலன் எப்படி எதில் இருந்து மீள்கிறான்? கண்டபடி மிரட்டி பணம் கறக்கும் கன்னட மாஃபியா தாதா-விடம் இருந்து எப்படி தப்பிப்பது?
மும்பையும் முக்கிய நடிகராக ஈடு கொடுத்திருக்கிறது. பணக்காரர்களின் வெர்ஸொவா, கப்பல் உடைக்கும் சேரி துறைமுகம், ஆட்டோவும் டாக்ஸியும் ஓடும் சந்துக்கள், ஆற அமர ஊழியம் செய்யும் அரசாங்கத்தின் முகம் எல்லாம் துணை நடிகர்கள். அன்னிய நகரத்தில் முகம் தெரியாத அப்பாவை தேடும் மகளின் துப்பறிதல் நடுவே ஓஷோ வருகிறார். மகளிரின் நிலை பேசப்படுகிறது. பதின்ம வயதின் குழப்பங்கள் உணர்த்தப்படுகின்றன.
நேர்க்கோட்டில் பிரசங்கம் கலந்த பிரச்சாரம் மட்டும் காணவில்லை.
மூன்று படங்கள் பார்க்கக் கிடைத்தது. எக்கச்சக்கமாக எல்லோராலும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய ‘சூது கவ்வும்’ ஏமாற்றியது. ‘நாளைய இயக்குநரில்’ குறும்படம் நிறைய எடுத்திருந்ததால், முதல் பகுதி இயல்பாக அமைந்திருந்தது. இண்டர்வலோடு படத்தை முடித்து அனுப்பி இருக்கலாம். அதன் பிறகு குழப்பமும் சொதப்பலும் திணிப்புகளும் “படத்தை ஏண்டா ஃப்ரீயா போட்டோம்” என்று மனைவியைக் கேட்கவைத்தது.
காரை வேகமாக ஓட்டுவது என்பது குறித்த இலக்கை சுருக்கமான நேரத்தில் கடப்பது. ஆரம்பமும், முடிவும் ஒன்றே என்பதற்காக, அங்கேயே நின்று கொண்டிருந்துவிட்டு, வெற்றியடைந்து விட முடியாது. நம்ப இயலாத கதாபாத்திரங்கள் பிரச்சினையில்லை. நடக்க இயலாத சம்பவங்கள் பிரச்சினையில்லை. லோ பட்ஜெட் பிரச்சினையில்லை. விறிவிறுப்பு என்னும் பேரில் யு டர்ன் மட்டுமே அடித்துக் கொண்டு ஜெர்க் மட்டுமே தருகிறது இரண்டாம் பகுதி.
இதற்கு வசனத்தாலேயே கொன்ற ‘மூன்று பேர்; மூன்று காதல்’ கொஞ்சம் தேவலாம். எதிர்பார்த்த பாதையில் பயணித்து, பாடலுடன் ஊடலும் கொடுத்த ‘எதிர் நீச்சல்’ எவ்வளவோ தேவலாம். வசந்த்திற்கு விஷுவல் மொழி கைகூடாமல் போயிருக்கலாம். தனுஷ் தயாரிப்பு மசாலாவாக இருந்திருக்கலாம். சிவ கார்த்திகேயனுக்கு ஆட்டம் வராமல் இருந்திருக்கலாம். அர்ஜூனுக்கு ஜோதிகாவின் டூப் தேவையாக இருந்திருக்கலாம். ஆனாலும், இரண்டரை மணி நேரத்திற்கு அலுக்காமல் பார்வையாளனை உட்கார வைக்கும் கர்ம்சுத்தத்தைப் பாராட்டலாம்.
நலனின் அடுத்த பிராஜெக்டாவது டெமொ பிராடக்ட் போல் புறத்தே மட்டும் மினுக்காமல், prototype போல் டிரெய்லர் மட்டும் ருசிக்காமல், முழுக்க வேகணும்.
வித்தியாசமாக முயன்றிருக்கிறார். ஒரு மணி நேரத்திற்கு சரக்கு வைத்திருக்கிறார். தமிழ் சினிமா நகைச்சுவையில் இருந்து விலகிச் சென்றிருக்கிறார். எனக்கும் இதெல்லாம் பிடித்திருக்கிறது.
எனக்கு கவுதம் மேனன் படங்கள் மிகவும் பிடிக்கும். ஆனால், ”நடுநிசி நாய்”களை மீண்டும் முழுவதுமாகப் பார் என்றால் வதை கலந்த சலிப்பு எழும். பலாப் பழத்தை வெட்டி உண்பது போல் சூது கவ்வும் சில பகுதிகள் மிக நன்று; சில பகுதிகள் பலாப்பழச்சுளை புதுசு. சிம்பு தேவனின் இம்சை அரசனை நினைவுறுத்தும் பாடல் எல்லாம் கூட போனால் போகிறது, பலாக் கொட்டை என்று சாம்பாராக்கி விட்டு விடலாம். ஆனால், இரண்டாம் பாதியில் ஒட்டிக் கொண்டிருக்கும் சகுனிகளும் குப்பைகளும் களைய மட்டுமே கோருகின்றன.
”மதுபானக் கடை” போல் நேர்மையும் இல்லை. பேசுபொருளை மட்டும் சொல்லிய படம். பாடல் வேண்டும், துரத்தல் காட்சி வேண்டும், இரண்டரை மணி நேரம் வேண்டும், நாயகியின் அரையாடை வேண்டும் என்று எதையும் திணிக்கவில்லை. சூது கவ்வும் புத்திசாலித்தனமான உப்புமா.
பாலு மகேந்திரா குறித்து சுஜாதா எழுதியது ஆழமாகப் பதிந்திருப்பதற்கு காரணம், அதில் இருக்கும் ஹீரோயினும் என்னுடைய ஆதர்சம் என்பதால் கூட இருக்கலாம். அதை விட வம்பு என்பதால் இருக்கலாம் என்பதை ஒப்புக் கொள்ள என்னுடைய சுய பிம்பம் மறுக்கிறது.
உதவி இயக்குநர்கள், நண்பர் குழாம், வாத்தியார் சுஜாதா என ஜமாபந்தியான கூட்டம். பாலு மகேந்திரா நடு நாயகமாக வீற்றிருக்கிறார். சுவாரசியமான அரட்டை. திடீரென்று ஹோட்டல் அறை படாரென்று திறக்கப்படுகிறது. மெல்லிய தட்டல் இல்லை; ‘உள்ளே வரலாமா’ அனுமதி கோரல் இல்லை. உள்ளே நுழைந்தவர் எவரையும் கவனிக்கவில்லை. நேரடியாக பாலுமகேந்திராவின் மடியில் சென்று அமர்கிறார். எல்லோருக்கும் சங்கடம். பேச்சு அமைதியாகிறது.
பாலுவும் “நான் இதோ வந்திடறேன். நீ உன் அறைக்குப் போ…” எனக் கெஞ்சுகிறார். அமர்ந்தவரோ அதை பொருட்படுத்தாமல், பாலு மகேந்திராவின் தாடையைக் கொஞ்சுகிறார். காதைக் கிள்ளுகிறார். கன்னத்தில் உரசுகிறார். ஒவ்வொருவராக இருக்கையை விட்டு நெளிந்து கொண்டே விலகத் துவங்குகிறார்கள். இப்பொழுது அலட்டலாக பாலு, “இப்போ இங்கே உனக்கென்ன வேலை? எங்களோட பேசணும்னா அந்தச் சேரை இழுத்துப் போட்டு உட்கார். இங்கிய விட்டு எந்திரி!” என்கிறார். அவளோ கண்டு கொள்ளவேயில்லை.
தர்மசங்கடத்தில் சுஜாதா விடை பெறாமல் வந்ததற்கான காரணம் நடிகை ஷோபா. அஞ்சலி.
மௌனிகாவும் என் மனைவி தான். இந்த இடத்தில் மௌனியைப் பற்றியும், எனக்கும் அவளுக்குமான உறவு பற்றியும் நான் கொஞ்சம் விரிவாகப் பேசவேண்டியிருக்கிறது. மௌனிக்கும் எனக்குமான உறவு ஒரு நடிகைக்கும், டைரக்டருக்குமான படுக்கையறை சம்பந்தப்பட்ட உறவு என்றுதான் பலர் நினைப்பார்கள். ஆனால், உண்மை அதுவல்ல!
ஏறக் குறைய இருபது வருஷங்களுக்கு முன் ஆரம்பித்த உறவு அது. இனியும் எதையும் நான் மறைப்பதற்கில்லை. ரொம்பவும் உடைந்துபோன ஒரு தருணத்தில், நான் உங்ககூடவே இருந்திரட்டுமா? என்று கண்கலங்கி நின்ற, அந்த சின்னப் பெண்ணுக்குப் புரியும்படி புத்திமதி சொல்லி, அந்த உறவை நான் முளையிலேயே கிள்ளிப் போட்டிருக்க வேண்டும். ஏனோ, அதை நான் செய்யவில்லை.
எனது ஷோபா பற்றிய ஒரேயொரு பதிவை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொண்டு நிறுத்திக் கொள்கிறேன். ஒரு மழைக் காலைப் பொழுது. குளித்துப், பூஜை முடித்து, அவளுக்குப் பிடித்தமான காட்டன் புடவையும், காலணா சைஸ் பொட்டும், ஈரத் தலையுமாக வந்து உட்கார்ந்தவளைப் பத்திரிகை நிருபர் ஒருவர் பேட்டி கண்டுகொண்டிருந்தார்.
அவர்கள் பேசுவது காதில் விழாத தொலைவில் உட்கார்ந்து நான் எதோ படித்துக்கொண்டிருந்தேன். அன்றைய பேட்டி அடுத்த வாரமே பிரசுரமாகியிருந்தது.
அதில் ஒரு கேள்வி: மற்றவர்கள் ஒளிப்பதிவில் படு சுமாராகத் தெரியும் நீங்கள் பாலு சார் ஒளிப்பதிவில் பேரழகியாகத் தோன்றுகிறீர்களே… எப்படி இது…?
ஷோபா சொல்லியிருந்த பதில்: “மற்றவர்கள் என்னை காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் கொண்டு ஒளிப்பதிவு செய்கிறார்கள். எங்க அங்கிள் என்னைக் காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் இந்த மூன்றோடும் நிறையப் பாசத்தையும் குழைத்து ஒளிப்பதிவு செய்கிறார். அவர் ஒளிப்பதிவில் நான் பேரழகியாக ஜொலிப்பதற்கு இதுதான் காரணம்.”
எடக்குமுடக்கான கேள்வி ஒன்றிற்கு ஷோபா சொல்லியிருந்த ஸ்பொன்டேனியசான பதிலில் தென்பட்ட அவரது அறிவுக் கூர்மை என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது.அதே போழ்தில், அவர்மீது நான் வைத்திருந்த அளவுகடந்த பாசத்தைப் பகிரங்கமாக மரியாதைப்படுத்துவதில் அவருக்கிருந்த ஆர்வம் என்னை நெக்கி நெகிழ வைத்தது.
என்ன செய்வதெனப் புரியாமல் தவித்தேன். ‘அம்மா இங்க வாங்க…’ என அழைத்தேன். அகிலாம்மாவும் டைரக்டரும் அவர்களுக்குள் பெரிதாகப் பேசிக்கொள்வது இல்லை அப்போது. ‘ந்தா போதும் போதும் உங்க சண்டை… புருஷனும் பொண்டாட்டியும் மொதல்ல நல்லா லவ் பண்ணுங்க…’ என்றதும் டைரக்டர் சிரித்துவிட்டார்.
நாலைந்து நாட்களுக்குப் பிறகு, டிஸ்சார்ஜ் செய்துவிட்டனர். சார் நார்மலாக இருந்தார். சரியாக 10-வது நாள் அதிகாலை 4 மணி… ஏனோ தூங்கப் பிடிக்காமல் அவஸ்தையான ஒரு மனநிலையில் அமர்ந்திருந்தபோது, அகிலாம்மாவிடம் இருந்து போன். பதறியபடி எடுத்தேன்… ‘உடனே ஆஸ்பத்திரிக்கு வாப்பா’ என்றார். வண்டி எதுவும் கிடைக்காமல், ஜெமினி மேம்பாலம் வரை ஓடி, கிடைத்த ஆட்டோ ஒன்றில் தொற்றிப் போய்ச் சேர்ந்தேன்.
அவள் பெயர் செல்வராணி என்று நினைக்கிறேன். ஒரு முப்பது முப்பத்தைந்து வயது இருக்கும். காதலன் வெளிநாட்டுக்கு அகதியாக போனவன். விசா கிடைக்கவில்லை. வருடக்கணக்காயிற்று. நாடு திரும்பமுடியாது. அவன் கடிதங்கள் வீட்டில் குவிந்துகிடக்கின்றன. தனிமையும் வயதும் பிரிவையும் தாண்டி தாபத்தை தூண்டுகிறது. காமத்துப்பாலில் பிரிவித்துயரால் வருகின்ற அத்தனை உடல் உபாதைகளும் செல்வராணிக்கு ஏற்படுகிறது. கட்டுப்படுத்த முடியவில்லை.
1970களில் வெளியான மலையாளப் படமான ” நெல்லு”வில் முதன் முதலில் ஒளிப்பதிவாளராக வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் படம் அவருக்குக் கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற விருதை பெற்றுத்தந்தது.
பின்னர் பல மலையாளப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய பாலு மகேந்திராவுக்கு, கன்னடப் படமான “கோகிலா”வின் மூலம் தேசிய விருதும் கிடைத்தது.
தமிழ்த் திரையுலகுக்கும் ஜே.மகேந்திரனின் “முள்ளும் மலரும்” படம் மூலம் அறிமுகமாகிய பாலு மகேந்திரா, 1979ல், தனது இயக்கத்தில் ” அழியாத கோலங்கள்” படத்தைத் தந்தார்.
பின்னர் தெலுங்கு திரைப்படங்களிலும் பணியாற்றிய பாலு மகேந்திரா, தமிழ்த் திரையுலகில், ‘மூடுபனி’, ‘மூன்றாம் பிறை’ ‘ நீங்கள் கேட்டவை’, ‘ரெட்டைவால் குருவி’, ‘வீடு’ ‘ மறுபடியும்’ , ‘சதி லீலாவதி’ போன்ற படங்களைத் தந்தார்.
அவரது படமான ‘மூன்றாம் பிறை’ சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதையும் அவருக்குப் பெற்றுத்தந்தது. மேலும் அந்தப் படம் ஹிந்தியிலும் ‘சத்மா’ என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
Cofee with Anu at Star Vijay TV – Balu Mahendra part 1
Cofee with Anu at Star Vijay TV – Balu Mahendra part 2
Cofee with Anu at Star Vijay TV – Balu Mahendra part 3
Cofee with Anu at Star Vijay TV – Balu Mahendra part 4
Cofee with Anu at Star Vijay TV – Balu Mahendra part 5
Director Balu mahendra talking about Tamiliam Subas`s short film Vanni Mouse on Makkal TV “Ten Minute Stories”
Balu Mahendra – An Era: STAR Vijay
Balu Mahendra – The Legendary Era Of Indian Film: Puthu Yugam TV
Balu Mahendra about Vaali -Vaali Birthday Special
New Year Special : Thalaimuraigal with Director Balu Mahendra
Director Balu Mahendira Special In Rewind Ep-64 Dt 06-10-13
Thalaimuraigal Tamil Movie Press Meet | Balu Mahendra
இயக்குனர் பாலு மகேந்திரா – நினைவுக் கூட்டம் நாள்: 23-02-2013, ஞாயிறு
இடம்: கோல்டன் ஜூப்ளி ஆடிட்டோரியம், சென்னை பல்கலைக் கழக மெரினா வளாகம், வள்ளுவர் சிலை எதிரில், எழிலகம் அருகில்.
நேரம்: மாலை 5.30 மணிக்கு.
நினைவை பகிர்பவர்கள்:
கவிஞர் & ஆவணப்பட இயக்குனர் ரவி சுப்பிரமணியம்
ஆவணப்பட இயக்குனர் அம்ஷன் குமார்
எழுத்தாளர் சந்திரா
எழுத்தாளர் தமயந்தி
தயாரிப்பாளர் UTV தனஞ்செயன்
பத்திரிகையாளர் ஞாநி
எழுத்தாளர் பவா செல்லத்துரை
எழுத்தாளர் மாலன்
ஒவியார் ட்ராட்ஸ்கி மருது
எழுத்தாளர் சா. கந்தசாமி
இயக்குனர் தாமிரா
எழுத்தாளர் & நடிகர் வ.ஐ.ச. ஜெயபாலன்
நடிகை ரோகினி
எழுத்தாளர் பிரபஞ்சன்
நடிகர் நாசர்
எழுத்தாளர் கவுதம சித்தார்த்தன்
ஒளிப்பதிவாளர் (திரைப்படக் கல்லூரி) ஜி.பி. கிருஷ்ணா
பத்திரிகையாளர் அசோகன் அந்திமழை
ஒளிப்பதிவாளர் சி.ஜெ. ராஜ்குமார்
ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கில் ரவிசங்கர்
எழுத்தாளர் கே.வி.ஷைலஜா
இயக்குனர் வஸந்த்
கல்வியாளர் எஸ்.கே.பி கருணா
கலரிஸ்ட் சிவராமன் (பிரசாத் லேப்)
எடிட்டர் லெனின்
ஒளிப்பதிவாளர் தேனீ ஈஸ்வர்
இயக்குனர் வெற்றிமாறன்
பாடலாசிரியர் ந. முத்துக்குமார்
ஒருங்கிணைப்பு: கன்னடத் துறை, சென்னைப் பல்கலைக் கழகம் & தமிழ் ஸ்டுடியோ & வம்சி புக்ஸ்
Never knew that “உறவுகள் தொடர்கதை” in “அவள் அப்படித்தான்” was written by ஜீனியஸ், மேதை என்னும் தோரணை இல்லாத கங்கை அமரன்.
முள்ளும் மலரும் படத்தின் ‘ராமன் ஆண்டாலும்’ பாடலை அசலாக எழுத இருந்தவர் கண்ணதாசன்.
அவரும் “வாழ்க்கையெனும் வட்டத்தில் விட்டதை வெல்லும் காலமும் மறக்கும் வேகமும் புத்தனாகினால் கிடைக்குமோ” என்பது போல் எழுதி வைத்திருக்கிறார். அதைப் படித்த மகேந்திரன், “தண்ணியைப் போட்டுட்டு மிகக் குறைந்த ஏட்டறிவே கொண்ட ‘காளி’ இப்படி தத்துவார்த்தமாகப் பாட மாட்டானே… வாய்க்கு வந்ததை கோபமாக சொல்லவேண்டும்.” என்கிறார்.
கண்ணதாசனைக் கூப்பிட்டு மாற்றச் சொல்ல அவகாசமில்லை. அப்போது எழுதிய எளிய வரிதான்
“ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
நான்தான்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன் கேக்குற வரத்தை கொடுப்பேன்
கேக்குற வரத்தை கேட்டுக்கடா”
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde