Tag Archives: கதை

What have you read among Jeyamohan books?

ஜெயமோகன் எழுதிய புத்தகங்களின் பட்டியலை (http://www.jeyamohan.in/?p=11233) கொடுத்தார்.

எனக்கு மூன்று வினாக்கள் எழுந்தன:

1. உங்களுக்கு இந்த லிஸ்ட்டில் மிகவும் பிடித்தது எது?

2. அவசியம் இந்த வருடம் படிக்க வேண்டும் என்று நினைப்பது?

3. அனுராதா ரமணன்/சுஜாதா மட்டுமே அறிமுகமான நண்பருக்கு, பரிசாக எந்த படைப்பை கொடுப்பீங்க?

தர்மசங்கடத்திற்கு தயார் என்றால்… கொசுறு கேள்வி:
இவற்றுள் தங்களைக் கவராத நூல்?

வாக்கெடுப்பு (தற்போதைய நிலை) – தொகுக்கப்பட்ட பதில்:

மனதில் நிற்பவை

காடு – 7

பின் தொடரும் நிழலின் குரல் – 4

விஷ்ணுபுரம் – 3

சங்கச் சித்திரங்கள் – 3

இன்றைய காந்தி – 3

பனிமனிதன் – 2

ஏழாம் உலகம் – 2

நவீன தமிழிலக்கிய அறிமுகம் – 2

ஜெயமோகன் குறு நாவல் முழுத் தொகுப்பு – 2

சிறுகதைத் தொகுப்பு – 2

கொற்றவை

பத்ம வியூகம்

இலக்கிய முன்னோடிகள் வரிசை

நாவல் கோட்பாடு

ஊமைச்செந்நாய் (மத்தகம்)

வாசிக்க விழைபவை

கொற்றவை – 6

விஷ்ணுபுரம் – 4

ரப்பர் – 2

சங்க சித்திரங்கள்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

பின் தொடரும் நிழலின் குரல்

காடு

ஏழாம் உலகம்

குறுநாவல் தொகுப்பு

பரிந்துரை

ஜெயமோகன் குறு நாவல் முழுத் தொகுப்பு – 3

அனல்காற்று – 2

வாழ்விலே ஒருமுறை – 2

சங்கச் சித்திரங்கள் – 2

ஏழாம் உலகம் – 2

காடு

கன்னியாகுமரி

நிகழ்தல்

ஊமை செந்நாய் தொகுப்பு

நிழல் வெளி கதைகள்

நினைவின் நதியில்

இன்றைய காந்தி

தேவகி சித்தியின் டயரி, ஒன்றுமில்லை, விரல், மாடன் மோட்சம்

சிரமதசை

சங்கச் சித்திரங்கள்

இலக்கிய விமர்சனம் தொகுப்பு

ஏழாம் உலகம்

கொற்றவை

விஷ்ணுபுரம்

உங்கள் பதில்களை – https://groups.google.com/forum/#!topic/jeyamohan/R6CvIwQYmfM குழுமத்தில் தரலாம்.

Ravanan & Angaadi Theru

குரங்கு மாதிரி கார்த்திக் மட்டும் அல்ல; அங்காடித் தெரு இராமனின் உற்ற நண்பர் மாரிமுத்துவும் குதிக்கிறார் என்பது இந்தப் பதிவின் தோற்றுவாய். அங்காடித் தெருவிலும் தாழ்த்தப்பட்டவரை ‘பன்றி’ என்று விளிக்கும்போது வெகுண்டெழாத சமூகம் ஆசனவாய்.

இராவணன் பிரும்மாண்டம். அங்காடித் தெரு குடிசை வீடு. இருந்தாலும் இந்த வருடம் வந்ததில் இந்த இரண்டு மட்டுமே முக்கியமான ஆக்கம்.

இரஜினிகாந்த் படங்களில் வருவது போல் ஐஸ்வர்யா, விக்ரம், பிரபு, கார்த்திக் நட்சத்திரப் பட்டாளம் கொண்டது ராவணன். புதுமுகங்களும் கூடிய சீக்கிரமே கூத்துப் பட்டறை கலைராணி மாதிரி அலுத்துவிடக் கூடிய விக்கிரமாதித்யர்களும் நிறைந்தது ‘அங்காடி தெரு’.

அங்காடித் தெருவில் வசனம் பலம். சுஜாதா இல்லாத உயிர்மையை ஜெயமோகன் மட்டும் வாழவைக்காவிட்டாலும், சாரு நிவேதிதாவிற்கும் வசனம் வராதது மணி ரத்னத்தின் இராவணப் பிரச்சினை.

பவிசு, பரதேசம், சில்லாட்டை என்று வட்டார வழக்கு ஆகட்டும்; வேலையில் சக்கை பிழியபட்டு வீடு திரும்புபவரின் செல்பேசி அலறல் பதில் அன்யோன்யம் ஆகட்டும். வசந்தபாலன் இயக்கமும் ஜெயமோகன் உரையாடலும் நகைச்சுவையையும் வாழ்க்கையையும் இழையவிடுகிறது. இராவணனில் ‘வினவு‘ தளத்துக்கு நுழைந்துவிட்ட அஜீரணம் கலந்த பிரச்சாரப் போலி பித்தளை.

சகோதரிகளுக்கு அப்பாவின் சட்டை; சரவணா ஸ்டோர்சுக்கு ஜோதிலிங்கம் கிளம்பும்போது பள்ளிக்கூட சீராடை. கேரளா விளக்கைத் தூக்கும்போது நெருங்கும் கை; போன்ற நுணுக்கங்கள் நிறைந்தது ‘ரங்கநாதன் தெரு’. இராமாயணத்தில் அன்றும், இன்றும், என்றும் லாஜிக் இல்லா மேஜிக் ரியலிசம்.

இவ்வளவு வித்தியாசம் நிறைந்த படங்களை எப்படி ஒரே பதிவாக்கலாம்?

நான் அங்காடித் தெருவிற்கு விமர்சனம் எழுதவில்லை; படம் வந்தும் நாளாகி க்ளாசிக் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது முதல் காரணம்.

இரு படங்களுமே ஜாலியான மசாலா என்பது முக்கிய காரணம்.

இரண்டு படங்களிலும் அசல் வாழ்க்கை நாயகர்களான காவல்துறையும் தொழில் துறையும் வில்லன்கள்.

மெதுவாகத்தான் அறிமுகம் ஆகிறார்கள். மிடுக்கோடு; கொஞ்சம் அப்பாவியாக; அவர் தொழிலுக்கு பக்தி என்றால், அண்ணாச்சி இறைபக்தி.

அங்கே ராமர்/சீதை/அனுமன்/இலக்குவன்/ஜடாயு/சூர்ப்பநகை சொல்ல பிரும்மப் பிரயத்தனம் என்றால், இங்கே சரவணா ஸ்டோர்ஸுக்கு பல்வேறு முன்னிறுத்தல்.

சாதாரணமாக நாயகியின் அப்பா, எதிர்மறை கதாபாத்திரம் செய்வார். அங்கே நாயகியின் கணவன். இங்கே நாயகிக்கு சம்பளம் தருபவர். இந்த இடத்தில் பெரும்பாலான திரைப்படங்களை ஒத்தே அமைந்திருக்கிறது. மூவருமே நிஜ வாழ்வில் சிம்ம சொப்பனம். அவர்கள் கிண்டலடிக்கப்படும்போது ஒடுக்கப்பட்ட மனம் கிளர்வது இயல்பு.

‘ஓசியில கொடுக்க அரசாங்கமா’ என்னும் கலைஞர் டிவி நையாண்டி அங்கே; ‘எந்தப் பொந்தில் போய் ஒளிஞ்சுண்டிருக்கான்’ என்று வாலியை மறைந்தடித்த ராமரும் இராவணரில் உண்டு.

இரண்டு படத்திலும் மூலக்கதைக்கு சம்பந்தமில்லாத தொகுப்புக் காட்சிகளும் கதாபாத்திரங்களும் மான்டேஜ் சித்திரங்களாக எக்கச்சக்கம். அவை பிரமிக்க வைக்கின்றன; அல்லாட வைக்கின்றன.

சத்தமாக அருளாசி வழங்குவதில் அங்காடித் தெரு ஜொலி சொலிக்கிறது. இராவணனில் புனித பிம்பங்களைக் குறித்து வினா மட்டுமே வைக்கப்படுகிறது.

படத்திற்கும் பாடல்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், மணி ரத்தினம் அதற்கான கெத்தை நிலைநாட்டுகிறார். இரண்டாவது பல்லவியும் வராதா என்று ஏங்கவைக்கிறார். ‘நான் கடவுள்’இல் ‘பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்’ பாடல் எம்டிவி அடியொற்றி உண்டியல் குலுக்கியது. ஜெயமோகனின் இந்தப் படத்திலும் ‘கண்ணில் தெரியுது வானம்’ நீர் கோர்க்க வைக்கும் புலம்பல். அடுத்ததாக ஜெயமோகனார், சாஃப்ட்வேர் எஞ்சினீயர்களின் பிரச்சினைகளை முன்வைத்து அழுவாச்சி மூன்று நிமிஷம் கொடுக்க விண்ணப்பம் வைத்துவிடுகிறேன்.

இட்டமொழியில் பாரம்பரியச் சின்னம் போன்ற கோவில் இருப்பதை ஆராய முடியாது. அதே போல் திருநெல்வேலியில் வாரணாசி கோபுரமும் கிடைக்கும்.

அ.தெ.வில் ‘வானாகி மண்ணாகி’ காதல் ஊடல். இராவணனில் வீராப்புடன் கோபாவேச பாரதியார் வசன கவிதை.

சூர்ப்பனகைக்கு ஒரு நியாயம்? சீதைக்கு இன்னொரு கற்பு நிலையா? என்று கேட்பது மணிரத்னமாயணம். படி ஏறி இறங்காத நாயகி கனி (அஞ்சலி)க்கு ஒரு நியாயம்? நாயகன் அடி வாங்கும்போது மட்டும் இரக்கநிலையா என்று வினவுவது அங்காடி இராமாயணம்.

காதலியைக் காப்பாற்ற இயலாத கையாலாகாதவர்களினால்தான் இரு கதைகளுமே முன்னகருகிறது. ப்ரியாமணியின் கணவன் நடுங்குகிறான். கன்னுக்குட்டி செல்வராணி சௌந்தரபாண்டியனால் அனாதரவாகும் காட்சி அதனினும் மிரட்சி.

வேலையைத் தக்கவைத்துக் கொள்ளும் ஆபத்பாந்தவம் லிங்குவிடமும் உண்டு; எஸ்.பி.யும் அதே பயத்துடன் நாயகியை நிராகரித்து வீராவிடமே அனுப்பி வைக்கிறார். இரு இடங்களிலும் ஏமாற்றம்.

அண்ணாச்சி அறியாமல் கனியும் காதல் அங்கே; அண்ணன் ராமனுக்குத் தெரியாமல் மலரும் காதல் இங்கே.

சரி… காதல் எத்தனை வகை?

1. ஆசை: அங்காடித் தெருவில் அஸ்வினி வகை. இராவணனில் வீராவிற்கு வருவது – காமம்; உடல் சார்ந்தது.

2. உடைமை: இது வீராவிற்கும் கைக்கடிகாரத்திற்கும் இடையே உள்ளது. ‘என்னுடைய வாட்ச்’ என்னும் ஆக்கிரமிப்பு சார்ந்தது. பயம் கொணர்வது.

3. சார்புநிலை: அங்கே லிங்குவிற்கும் கனிக்கும் இடையே உள்ளது.

4. சுய அடையாளம்: எஸ்.பி பிருத்விராஜூக்கு இருக்கும் தொழில்பக்தி. காதலுக்கு பதில் அகந்தை தலைதூக்கும்.

சினேகாவின் ஒரிஜினல் பெயர் சுகாசினி. ராவண் வசனம் எழுதியவர் சுஹாசினி. இரண்டு பேருமே இரு படத்திலும் சம்பந்தமில்லை என்பதுதான் சம்பந்தம்.

ஆசாரக்கோவை கதைகள் 1 – ஆசார வித்து

தூரத்தில் விமானம் தெரிந்தது. அதில் அப்பா வருவார். தூங்குவதற்கு முன் கட்டியணைத்துப் போர்த்திவிட்டு ‘குட் நைட்’ சொல்வார். நாளைக்கு சனிக்கிழமை. வந்துவிடுவார்.

இப்பொழுது விமானம் நெருங்குகிறது. அல்ல… கலிஃபோர்னியா கான்டோர் வந்து இறங்கியது.

“நீ அழிந்து கொண்டிருக்கிறாயாமே”

“சேச்சே! உன் அப்பாவ கிட்டக்கயே வச்சுக்கணும்னு நீ கேட்ட இல்லியா! அதுக்காக வந்திருக்கேன்.”

“கருடன் மேல் பெருமாள் பறப்பது போல் நீதான் எங்கப்பாவ கூட்டிகிட்டு வரப்போறியா?”

“இல்ல… நான் படைச்ச மக்களையெல்லாம் அழிக்கணும்.”

“என்னது?”

“உனக்கு தெரியுமில்லியா? நாந்தான் இந்த உலகத்தை சிருஷ்டிச்சேன். முன்னுமொரு தினத்தில் மேலேயிருந்த முதியவர் பிரளயத்தை உண்டுசெஞ்சார். வாக்கு சாதுர்யம் இல்லாதவங்க எல்லாரும் அம்பேல். நான் மச்சாவதாரம் எடுத்து ஏட்டுச் சுரைக்காய்களைக் காப்பாற்றினேன். இப்பொழுதும் அந்த மாதிரி செய்யணும்”

“எனக்கு ஆசாரக்கோவை ஞாபகத்துக்கு வருது. உனக்கு நன்றி சொல்லணும்.”

நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவைஎட்டும்
சொல்லிய ஆசார வித்து

“இருக்கட்டும். உங்கப்பாவை அமெரிக்க ஜனாதிபதி ஆக்கட்டுமா? டைம்ஸ் பத்திரிகையின் ஆண்டுநாயகர் ஆக்கட்டுமா? முதலாவதாக ஆனால் உலக வெம்மையினால் பனிக்கட்டி உருகி, பூமிச்சூட்டினால் சுனாமி கொணர்ந்த கோபன்ஹேகான் நாயகர் என்று புராணம் பாடலாம். இரண்டாமவர் ஆனால், பணமுதலைகளுக்கு டாலர் மாலை தொடுக்கும் கஜேந்திர யானை என்று வரலாறு போடலாம்.”

“இது இட்லி-வடையில் வரும் முனி கடிதம் போல் விஷயக்கோர்வை ஆகிறது. எனக்குப் புரிகிற மாதிரி சொல்லு.”

“ரொம்ப சிம்பிள். கூடிய சீக்கிரமே ஹைதியில் பூகம்பம் வரப்போகிறது. அதற்கு முன் கடவுளுக்கு பலிகடா தேவை. உங்கப்பன் மேல் பழியைப் போடலாம் என்று யோசிக்கிறோம். போதிய பஞ்சப்படியும் பதவியும் கொடுத்து விடுவோம். ரெடியா?”

விக்கிக் குறிப்பு: The Wiyot tribe of California say that the condor recreated mankind after Above Old Man wiped humanity out with a flood.[49] However, other tribes, like California’s Mono, viewed the condor as a destroyer, not a creator. They say that Condor seized humans, cut off their heads, and drained their blood so that it would flood Ground Squirrel‘s home. Condor then seized Ground Squirrel after he fled, but Ground Squirrel managed to cut off Condor’s head when Condor paused to take a drink of the blood.

வாசக அனுபவம்: கன்னியாகுமரி: ஜெயமோகன்

தொடர்புள்ள பதிவு: நாவலில் என்னைக் கவர்ந்த சில இடங்கள், வரிகள், நிகழ்வுகள், கருத்துகள்

மூன்று என்பது முக்கியமான எண். ட்விட்டரில் கூட விசாரித்திருந்தேன்.

சைவத்தில் படுக்கப்போட்ட மூன்று பட்டை; வைணவத்தில் நிற்கும் நாமத்தில் 3 வரிகள்; ராமரும் அணில் முதுகில் 3 கோடு. முப்புரி நூலும் உண்டு. ஏன் #3 ?

orupakkam: 3றிற்கு ஒரு விளக்கம். முழுமையான வடிவை உருவாக்க குறைந்தபட்ச தேவை. triangle is the polygon with min sides. #trilogy

கன்னியாகுமாரியில் மூன்று கடல் சங்கமிக்கிறது. பிரம்மா, சிவன், விஷ்ணு மூன்று பேரும் சேர்ந்த ஸ்தாணுமாலயன். எல்லாம் 3. ஜெயமோகனின் கன்னியாகுமரி நாவலின் நாயகி அந்த இடத்தில்தான் படைக்கப்படுகிறாள்; காக்கப்படுவதாக வாக்களிக்கப் படுகிறாள். ருத்ரனால் சுட்டெரிக்கப்படுகிறாள்.

அந்த மூன்றும் நாயகனுக்கும் அரங்கேறுவதுதான் நாவலின் அபாரம்.

பெண்ணைக் குறித்து ஆண் தெரிந்துகொள்ள விரும்புகிறான். பெண்ணின் உடை புடைவைக்குள் சுருண்டு புதிராக இருக்கிறது என்பதில் ஆரம்பித்து, எதைக் கண்டு பயப்படுவாள்? எதை ரசிப்பாள்? என்பது போன்ற உளவியல் கூறுகள் தொட்டு அனைத்திலுமே ஆணுக்கு, பெண் புரியாத புதிர்.

இந்தப் புதிரைக் கண்டு கொண்டு, சினிமா மூலம் கொஞ்சமே கொஞ்சம் தொட்டுக் காட்டியவனின் கதை கன்னியாகுமரி.

பதின்ம வயதில் உண்டாகும் இனக் கவர்ச்சி. மணமாகியவளிடம் கிடைக்கும் நிபந்தனையற்ற திருமண பரமபத விளையாட்டு. முறை தவறி நடக்கும்போது கிளறும் குற்றநெஞ்சுறுத்தல். மூன்று நிலையிலும் பெண்களைக் கண்டு அச்சமுறும் ஆண் என்று கதையை சுருக்கலாம்.

சினிமாத் தொழிலில் இருக்கும் ஏற்றத்தாழ்வு. ஸ்டோரி டிஸ்கசன் என்றால் என்ன? அட்ஜஸ்ட்மென்ட் செய்துகொள்வது எப்படி? எங்ஙனம் திரைக்கதை – வசனம் – இயக்கம் உருவாகிறது? எவ்வாறு கதைக்காக அலைகிறார்கள் என்பது backdrop.

கன்னியாகுமரி அம்மன் ஆன்மிக புராண வரலாற்றின் குறியீடு — கதாநாயகி; அல்லது நாயகனின் மௌனசாட்சியான மனப்பிராந்தி. அவற்றில் மொழு மொழு கற்பாறைகள் என கட்டி தட்டிப் போன பிம்பங்கள். எத்தனை நாள் காத்திருந்தும் வராத மூர்த்தமாக அடுத்த சினிமாவுக்கான சூப்பர்ஹிட் கதை. உப்புக் கரிக்கும் கடல் அலைகளென மனதில் மீண்டும் மீண்டும் அடிக்கும் நினைவுகள். இந்த மாதிரி குறியீடுகள் மீள் வாசிப்பைக் கோரும் இலக்கியத்தன்மையைக் கொடுக்கிறது.

சினிமாவுக்குள் முழு மூச்சாக நுழைவதற்கு முன்பே ஜெயமோகன் இந்தக் கதையை நல்ல வேளையாக வெளியிட்டுவிட்டார். இல்லையென்றால் பா ராகவனின் ‘நிலா வேட்டை’யில் சொன்ன இயக்குநரின் மறுபாதி போல் இருக்கிறதே என்றெல்லாம் ஹேஷ்யங்கள் வந்திருக்கும். ஜெயமோகனை நான் சந்தித்த பிறகு, நான் படிக்கும் அவரின் முதல் நாவல் என்பதாலோ என்னவோ, பல இடங்களில் அவரே முன்னே வந்து என்னிடம் பேசுவது போல் எனக்குள் பாவனை எழுந்தது. எழுத்தாளரை சந்திப்பது அபாயகரமானது. 🙂

சமீபத்தில் பார்த்த படங்களை ஒப்புமைக்குக் கொன்டு வருவது என்னிடம் உள்ள கெட்ட பழக்கம். அந்த மாதிரி சில படங்களும் இந்த நாவலும்:

1. மௌன கீதங்கள்: ஆனாதிக்க மனோபாவத்தின் உச்சத்திற்கும், அத்தகைய வெளிப்படையான சிலாகிப்பின் பெருமிதங்களுக்கும் பாக்கியராஜ் என்றால், ஆணாதிக்க கோர முகத்தின் பல்லிளிப்புகளுக்கும், தலைதூக்கும் தருணங்களுக்கும் — கண்ணாடியாக கன்னியாகுமரி அமைகிறது.

தன் மனைவியைத் தவிர பிறிதொருவரை கணவன் சுகித்தால் கண்டுகொள்ளக் கூடாது என்பது மௌன கீதங்களின் சப்பைக்கட்டு. அதுவே, மனைவிக்கு என்றால், சட்டதிட்டங்கள் எவ்வாறு மாறும்? கன்னியாகுமரி போட்டு உடைத்தது போல் சொன்னாலும், அழுத்தந்திருத்தமாக உணர்வுபூர்வமாக சந்திக்கு கொண்டு வருகிறது.

2. சிவா மனசில சக்தி: இந்தப் படத்துடன் எல்லாம் ஒப்பிடுவதற்கு ஷமிக்க வேண்டும். என்றாலும், புத்திசாலி பெண் தன்னுடன் அறிவார்ந்த வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அதில் ஆண் சிந்தனை வெல்வது என்பது கன்னியாகுமரியின் ஹீரோ இயக்குநர் ரவிக்கு காமத்தின் உச்சம். ஷார்ப்பான வளைவுகளும் துடிப்பான மூளையும் கொண்டவள் ‘சிவா மனசுல சக்தி’யின் கதாநாயகி. இவ்வாறாகவே அனைத்து பெண்களும் அமைவதெல்லாம் கற்பனையின் உச்சம். வெள்ளித்திரையிலும் அச்சு இலக்கியங்களிலும் மட்டுமே நம்பக்கூடிய வகையில் வெளியாகும் fantasy ecstasy.

காதலைத் திரையில் காட்சியாக்குவது நிறைய பார்த்திருக்கிறோம். அந்தக் காதலை தமிழ் எழுத்தில் வடித்து பெரும்பாலும் படித்ததில்லை. கன்னியாகுமரியில் காமத்தின் உச்சகட்டங்கள் வருகின்றன. விவரிக்கப்படுகின்றன. விலாவாரியாக பின்னணியோடு சொல்லப்படுகின்றன. அவற்றை வெகு லாவகமாக கையாண்டதற்காகவே Hats off சொல்லவேண்டும்.

கன்னியாகுமரி இந்தியாவின் வேர். முக்கடல் சங்கமத்தில் உருவாகும் வித்தில், இந்தியாவே வளர்ந்து நிற்பதாகக் கொள்ளலாம். மூலஸ்தானம். எல்லாவற்றுக்கும் துவக்கமாக இருப்பதால் அங்கே வந்து தங்கள் படத்திற்கான கருவைத் தேடுகிறார்கள். கன்னியாகுமரியும் காத்திருக்கிறாள். இவர்களும் தக்க விதைக்காக காத்திருக்கிறார்கள். குமரியிடம் கருவைத் தேடுவதா? அவளே இன்னும் குமாரிதானே?

மேலே சொன்ன மாதிரி மொத்தமாக நாவல் எழுதினால் பெரும்பாலாரிடம் கொண்டு செல்ல இயலாது. அதை ஜெயமோகன் அறிந்தே இருக்கிறார். அதனால், தாய்மையைக் குறித்து, பாரதம் எழுந்து மரமாக கிளைவிடும் தோற்றுவாய் குறித்து, வாக்குவாதங்களில் ஈடுபடும் துணைவி அதில் சாமர்த்தியமாக தோற்பது குறித்து, நல்ல சினிமா குறித்து, மிட் லைஃப் போராட்டங்கள் குறித்து, வாழ்ந்து கெட்டது போல் பேர் வாங்கத் துடிக்கும் படைப்பாளியின் கோராமை குறித்து, முன்னேற வேண்டுபவர்களின் சமரசங்கள் குறித்து கதையாகவும் குறியீடுகளாகவும் பேசியிருக்கிறார்.

அ முத்துலிங்கத்தை சந்தித்தபோது ஜெயமோகன் குறித்து சொன்ன விஷயம் இது:

இன்னும் கொஞ்ச நேரத்தில் சென்னை ஒளிரும் பொற்கம்பளமாக கீழே இறங்கி இறங்கி காணாமல்போகும் நானும் சில அன்னியர்களும் இருண்ட வானில் மிதந்து கொண்டிருபோம் என நினைக்கிறேன்.

ஒரு சாதாரண வலைப்பதிவை முடிக்கும்போது கூட இவ்வாறு கவித்துவ எழுச்சியுடன், அசாதரணமான சித்தரிப்புடன், படம் பிடிக்கும் ஒளிக்கலைஞனின் சிரத்தையுடன் விட்டுச் செல்கிறார்!’ என்பது அ முத்துலிங்கத்தின் பாராட்டு. இந்த புனைவிலும் ஒவ்வொரு அத்தியாயத்தின் உச்சகட்டத்திலும் அதே போன்ற காட்சியமைப்பு இருக்கிறது. அந்தப் பகுதிக்கு முத்தாய்ப்பாக, எண்ணங்களை விட்டு அகலாத படிமமாக, நுரை என்னும் ட்விட் போன்ற வார்த்தைகளையும், அலை என்னும் அனுபவம் போன்ற நிகழ்வுகளையும், கடல் என்னும் வாழ்க்கை போன்ற புரிதல்களையும் மீண்டும் மீண்டும் எழுப்புகிறது.

ஜே ஜே சில குறிப்புகளின் ஜே ஜே போல் இங்கும் ஒரு அவார்டு டைரக்டர் இருக்கிறார். பெயர் கூட ஜார்ஜ். நாவலில் வரும் ஜார்ஜ் ஆதர்ச நெறியாளுநர். ஜோசப் ஜேம்ஸை ஒத்த குறிப்பிடத்தக்க படைப்பாளி.

எண்பதுகளில் வந்த தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கு மைக்கேல், சூசை என்று கிறித்துவப் பெயர் சூடப்பட்டிருக்கும். அதே போல், அனால், குமரி மாவட்டத்தில் நிறைய மைனாரிட்டி இருப்பதாலும் நாவலில் புழங்கும் எதிர்மறை கதாபாத்திரத்திற்கு ஸ்டீபன் என்று பேர் வைக்கப்பட்டிருக்கிறது.

புனைவு எழுத்தாளர்களுக்கு எழுதக் கற்றுத்தரமுடியாது என்பது என்னுடைய தீவிரமான நம்பிக்கை. விசிறியிலிருந்து காற்றை வரவழைக்கலாம். வெளியில் வெக்கையடித்தால், விசிறியும் வேகும். ஆனால், மாலை நேர கடற்கரைக் காற்றில் (என்னதான் கார்பன் நச்சு கலந்திருந்தாலும்), அந்தக் காற்றை வாங்கப் போகும் சுகமே அலாதி. உணர்ச்சிகளை, உள்ளப் பிரவாகத்தை, ஆழ்மனக் கிடக்கையை அப்படியே தங்குதடையின்றி சொல்லிக் கொண்டு போகிறார்.

கன்னியாகுமாரியின் பிரச்சினைகள் என்று பார்த்தால் முன்னுரையில் உரிமை துறப்புகள் (சற்று இளைப்பாறும் பொருட்டு நான் எழுதிய நாவல் இது. இதன் எளிய கதை நகர்வின்…), உத்தம தமிழச்சியாக வந்துபோகும் நாயகி, சினிமாத்தனமாக இயங்கும் சில பெண் கதாபாத்திரங்களை சொல்ல வேண்டும்.

உரையாடல்களினாலும் எண்ணவோட்டங்களினாலும் சம்பவங்களினாலும் இயக்குநரின் மனைவி இரமணிக்கு கொடுக்கும் விவரிப்பும் அழுத்தமான சித்தரிப்பும் பிற பெண்களுக்கு உருவாகவில்லை.

ஆண்களின் குழப்பங்களைக் குறித்து அறிந்துகொள்ள வேண்டுமா? அவர்களின் வெளிப்படையான புன்சிரிப்புக்கு கீழே புதைந்து கிடக்கும் அழுக்குகளை அவசியம் ஆராய வேண்டுமா? ஆணாகிய நீ படித்தாலும் தன்னிரக்கத்தோடு தன்னல செய்கையை புரிய வைக்க முடியுமா? ‘ஜெமோ’வின் கன்னியாகுமரியை எடுங்கள்.

பிற விமர்சனங்கள்:

1. வ.ந.கிரிதரன்: இந் நாவலிற்கான கரு கி.ராஜநாராயணின் கன்னியாகுமரியை மையமாக வைத்துப் ,பின்னப் பட்ட சிறுகதைகளிலொன்றான ‘கன்னிமை’ என்னுமொரு சிறுகதையினை மையமாக வைத்து உருவானதாக நாவலின் நாயகன் ரவிகுமாரினூடாக நாவலாசிரியர் ஜெயமோகன் நினைவு கூருகின்றார்.

2. ஹரி வெங்கட்: ரவி மற்றும் வேணு ஆகியோர் வார்த்தைகளில் அவர் அறிந்த சினிமாவை பேசுகிறார். மேலும், “அவளை துளைத்து மறுபக்கத்தை அடைந்து மெத்தையின் வெறுமையை அடையலாம்”, எனும் வரியில் ஜெயமோகனின் காமம் தெரிக்கிறது.

3. ஜெயக்குமார்: பொதுவாக ஆண்களுக்கு முதிர்ச்சியான மனநிலை கொண்ட பெண்களைப் பார்த்ததும் ஏற்படும் பயமும் அவர்கள் பால் ஏற்படும் இனம் புரியாத பயமும் அவர்களை தவிர்க்க முடியாமல் நேசிக்கவும் செய்யாமல் செய்துவிடுகிறது.

தமிழ்ச் சிறுகதைகள்: ஆகஸ்ட் 2009

இந்த மாதம் படித்த கதைகளில் என் மனதை அசைத்துப் பார்த்து, கவனத்தை ஈர்த்து, உங்களுக்கும் குறிப்பிடத்தக்கவையாக இருந்த சில:

1. ஹரன்பிரசன்னா :: சொல்வனம் » அலை

நாவல்களிலே ஃப்ளாஷ்பேக் என்னும் வஸ்து சிரமமானது. சிறுகதையிலேயே நிகழ்த்தி காட்டுகிறார். சில வார்த்தைகள் கதையில் வரும்போது, அப்படியே நெகிழச் செய்து விடும். இங்கே ‘கந்தரப்பம்’. அப்படியே என்னை எங்கோ கொண்டு போய் விட்டது.

வம்பு கேள்வி: அதெல்லாம் சரி… ஹரன் பிரசன்னா ஏன் பைத்தியக்காரன் நடத்திய ‘உரையாடல்‘ போட்டியில் பங்குபெறவில்லை?

2. வ. ஸ்ரீநிவாசன் ::சொல்வனம் » உயிரிழை

முதல் வரியில் கதை முடிஞ்சுடணும் என்னும் கோட்பாட்டை பின்பற்றுகிறார். அந்த ஆரம்பத்தை வாசித்தவுடன் மேஜிகல் நியலிசமோ, குறியீட்டு இம்சையோ என்னும் பயத்தை அறவே போக்கியும் விடுகிறார்.

வம்பு கேள்வி: கதை கூட புரிஞ்சுக்கலாங்க. அது என்னங்க! அப்ஸ்ட்ராக்டா தோட்டா வட்டம் போட்ட படம்?

3. கர்ட் வானகட் :: சொல்வனம் » ஹாரிசன் பெர்ஜரான்மொழிபெயர்ப்பு :: விஷ்வநாத் சங்கர்

இம்சை இல்லாத மொழிபெயர்ப்பு. கதை ரொம்ப கவலைப்படுகிறது. கனவு லோகத்தில் சஞ்சரிக்கிறது. வெகு தீவிரமாக பிரசாரிக்கிறது.

வம்பு கேள்வி: கர்ட் வானகட் இப்ப இருந்தா ஒபாமாவின் உடல்நலத் திட்டமான சம்ச்சீர் ‘சேமநலக் காப்பீடு’ குறித்து என்னங்க சொல்லியிருப்பார்? அதற்கும் கத விட்டிருப்பாரோ!

4. கிச்சாமி | சத்யராஜ்குமார்.காம்

அமெரிக்க வாழ்க்கையை இவ்வளவு வெளிப்படையாக எழுதினால் தாங்காது சாமீ. ஆனாலும், நம்ம இணைய வாசகர்கள், கதையை கதையாகப் பார்க்காமல், ‘நீங்களா?’, ‘அப்படி சட்டம் கிடையாதே?’, ‘என் மனைவி அவ்வாறு இல்லையாக்கும்‘ என்று மறுமொழிவது தனிக் கதை.

வம்பு கேள்வி: கதைக்கு கீழே கருத்து சொல்ல முடியாம, வலைப்பதிவிலே தனியா இன்னொரு இடத்திலே பதில்பொட்டிய வச்சிருக்கீங்களே! ஏனுங்க?

5. நாகார்ஜுனன் :: திணை இசை சமிக்ஞை: 108

ஒரு கதை. அதை எப்படியெல்லாம் சொல்லலாம்? நாகார்சுனன் மறுமொழியில் இருந்து: தமிழ் எழுத்தாளர்கள் ஒரே ஸ்டைலில் பல கதைகளை எழுதியதை, எழுதுவதை (இதற்கு ஒரே major விதிவிலக்கு புதுமைப்பித்தன்) வாசிக்கிற, எழுதப்போவதையெல்லாம் வாசிக்கப்போகிற நமக்கு ஒரே கதையை பல ஸ்டைலில் எழுதினால் ஏன் வாசிக்க முடியாது..

வம்பு கேள்வி: உங்களுக்கு கதைக்கான கரு பஞ்சமா சார்? வேணும்னா நான் ரெண்டு knot சொல்லட்டுமாங்க!

6. முரளிகண்ணன் :: நீரோடை: துண்டு சிகரெட்

வெட்டிப்பயல் மாதிரி சொல்ணுமின்னா, இவரோட எழுத்து ‘சும்மா நல்லா இருக்கு நல்லா இருக்குனு சொல்லி போர் அடிச்சி போச்சி...’

வம்பு கேள்வி: உங்களுக்கு மெய்யாலுமே கற்பனை ஜாஸ்தியா? அல்லது நாட்குறிப்பை அப்படியே எழுத சங்கோசமா?

7. சித்ரன் :: நீரோட்டம் « புள்ளி

சமீபத்திய ‘கல்கி’ பத்திரிகையில் வெளியான கதை. சோடை போகுமா? நல்ல வேளையாக இந்த மாதம் கதை எழுதியிருக்கிறார். இவரெல்லாம் நம்ம லிஸ்டில் இருப்பது லிஸ்ட்டுக்கு பெருமைங்க.

வம்பு கேள்வி: அந்தக் கடைசி திருப்பம்தான் இதனுடைய மிகப் பெரிய உச்சம் என்றாலும், அப்படிப்பட்ட இறுதிவரி திகில் இல்லாவிட்டால், இந்தக் கதையை எப்படி முடித்திருப்பிர்கள்?

8. ஆல்பர்ட்டோ மொராவியா :: பறவையின் தடங்கள் » Blog Archive » உத்தரவிடு பணிகிறேன்மொழிபெயர்ப்பு :: நாகூர் ரூமி

மொழியாக்கம் என்பதெல்லாம் சொன்னால்தான் தெரியும். அப்படியொரு அசல் படைப்புக்கு நிகரான மொழி லாவகம். இன்னொரு முறை ஆசுவாசப் படுத்திக் கொண்டு வாசித்தால் உள்ளே பொதிந்திருக்கும் மற்ற விஷயங்கள் புலப்படும்.

வம்பு கேள்வி: கப்பலுக்கு போன மச்சான்‘ மாதிரி அடுத்த நாவல் எப்பங்க?

9. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: மெளன கோபுரம்

பறவைகள் விமானத்தில் மோதுவதால் அறுநூறு மில்லியன் டாலர் சேதம் ஆகின்றன. வானூர்தியில் வந்து விழும் பறவைக் கூட்டத்தின் மேல் 583 விபத்துகளின் பழியைப் போட முடியும். செத்த கணக்கு சேர்க்கவில்லை. இப்படியெல்லாம் புள்ளி விவரம் அடுக்குபவரை நேர்த்தியாக எதிர்கொள்ள உதவுவது புனைவுலகம். வாழ்வை சொல்லி, அதன் நியாயங்களை சரித்திர பூர்வமாக, கலாச்சார ரீதியாக புரிய வைக்கும் முயற்சிதான் இலக்கியம். இந்தக் கதை அந்த ரகம்.

வம்பு கேள்வி: உங்களுக்கு கதை எழுதுவது தவிர வேற எதாவது வேல உண்டுங்களா?

10. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: நண்டு சொன்ன `பெரியவங்க` கதை

வித்தியாசமான, அநாயசமான ஆரம்பம். கதை சொல்லி முடிக்கும் அவசரத்தில் நண்டு இருப்பதால், ஆசிரியரைப் பழிக்க வேண்டாம்.

வம்பு கேள்வி: நண்டு சொன்ன நாவலின் சுருக்கம் என்பதுதானே உண்மை?


தொகையறா

அந்தக் கால கவிதைகளில் தொகை (எட்டுத்தொகை போன்ற) நூல்களில் இருப்பதுதான் புகழ்பெற்று கோலோச்சுக்கிறது. அதே போல், இந்தக் கால சிறுகதைகளுக்கும் அறிமுகம் வேண்டுபவர், ‘நெஞ்சில் நிறைந்தவை‘ (சிவசங்கரி வானதி பதிப்பகம்), ‘முத்துக்கள் பத்து‘ (அம்ருதா பதிப்பகம்), ஐம்பதாண்டு கால தமிழ்ச் சிறுகதைகள் (சா. கந்தசாமி கவிதா பப்ளிகேஷன்ஸ்), ‘எனக்குப் பிடித்த கதைகள்‘ (பாவண்ணன்) போன்ற தொகுப்புகளையும் எஸ் ராமகிருஷ்ணன், சுஜாதா, ஜெயமோகன், க.நா.சு. இரா முருகன், போன்றவர்களின் பரிந்துரைப் பட்டியலையும் நாடுகிறார்கள்.

இவர்கள் எல்லோருமே சொல்லி வைத்தது போல் தற்கால இணைய எழுத்துகளை, வலையில் மட்டும் புழங்கும் தமிழ்ச் சிறுகதைகளை முற்றாக புறக்கணித்துவிடுகிறார்கள். இதற்கு நிவர்த்தியாக, தமிழ் வலையகங்களில் (சொல்வனம், திண்ணை, உயிரோசை, நிலாச்சாரல், தமிழோவியம், தமிழ்ப்பதிவுகள், இன்ன பிற) கிடைப்பதில் குறிப்பிடத்தக்க ஆக்கங்களை ஒரு இடத்தில் சுட்டி கொடுத்து தொகுத்தால் செமையாக இருக்கும்.

இணையத்தில் தடுக்கி விழுபவர்களுக்கும் பயனாக இருக்கும். இணையமே கதியாக கட்டுரைகளையும் ட்விட்டுகளையும் மட்டுமே வாசிக்கும் என் போன்றோருக்கும் உருப்படியான விஷயமாக இருக்கும்.

எழுத்தாளர் பெயரோ, எழுதியவரின் மூலமோ கூட தெரியாமல் போகலாம். ஆனால், நாளைய பின்னும் ‘முக்கியமான புனைவு’ என்று தேடினால் எளிதில் மாட்டும்.

Top 3, 10, 20 in உரையாடல் போட்டிக்கான கதைகள்: Quick Reviews

‘உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பின்’ சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளியாகி விட்டன.

போட்டி குறித்த பதிவுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன: Snap Judgement: Uraiyadal: Jyovram Sundar & Paithiyakkaaran Short Story Contests: Tamil Bloggers Fiction Competition Results

இனி வென்றதிலும் கலந்து கொண்டதிலும் நான் படித்த சில கதைகளும் கருத்துகளும்:

  • யோசிப்பவர்: பிரசன்னம்: கதை பிடித்திருக்கிறது; தலை பத்தில் இடம்பெற வேண்டும் என்று சொல்லுமளவு பிடித்திருக்கிறது. அறிவியல் இருந்தது. மாயாஜாலம் இருந்தாலும் நம்பக்கூடிய, அசர வைக்கும் முடிவு.
  • அம்மாவுக்குப் புரியாது – RV « கூட்டாஞ்சோறு: ஆர்.வி. நிறைய வாசிப்பவர். அவ்வளவு பரந்த வாசிப்பு, நல்ல சிறுகதையைத் தரும் என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை என்பதற்கு இந்தக் கதை ஒர் உதாரணம். (உரிமைதுறப்பு: நானும் நிறைய இலக்கியம் படிப்பவன்; சிறுகதை எழுத வரவில்லை 😦 முடிவை மட்டும் நம்பும் புனைவு. தட்டையான விவரிப்பு. சுவாரசியமான வாசிப்பு என்பதாலும் இதை விட மோசமான கதைகள் கூட தலை 20ல் இடம் பிடித்திருப்ப்பதாலும், 250க்குள் பெஸ்ட் ஆக இருந்திருக்கும்!?
  • கவிதா | Kavitha: அப்பா வருவாரா?: வலையில் எழுதுபவர்களில் பெண் பதிவர்கள் வெகு குறைவு. எனவே, இட ஒதுக்கீடு என்னும் எண்ணத்தில் இந்தக் கதை தெர்ந்தெடுக்கப்படலாம். பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது தவிர இந்த ஆக்கத்தில் கரு கிடையாது; முடிச்சு கிடையாது; ரொம்ப மேலோட்டமான விவரிப்பு. கிழக்கு பதிப்பகம் புத்தகம் போட்டு, இணைய அறிமுகம் இல்லாதவர் இந்த மாதிரி கதைகள்தான் இணையத்தில் வலம் வருகிறது என்று எண்ண நினைத்தால், அது மிகப் பெரிய துரதிர்ஷ்டம். நான் ஆதவன்’ மறுமொழி அவசியம் வாசிக்க வேண்டும்.
  • நல்ல கதை என்பது பாஸ்டன் நகரத்து Deciduous மரம் போன்ற தன்மையுடையது. படிக்கும் போது பூப் பூக்கும் வசந்த காலம். முடிவு நெருங்க நெருங்க வண்ணம் மாறி மாறிக் காட்சியளிக்கும் இலையுதிர் காலம். பனிக்காலமாக கதை முடிந்த பிறகும், அந்த மரமாகிய புனைவு மனதில் நிற்க வேண்டும். வேறெங்கோ பச்சை பாசியைப் பார்க்கும் போதோ, சூரியோதய ஆரஞ்சை கவனித்தாலோ, அந்த மரம் உதிக்கும். கதையும் அது மாதிரி நிறம் பலகாட்டி நிலைத்து நிற்க வேண்டும்.

  • சேரல்: கருப்பு வெள்ளை: நீர் வழிப்படூஉம் புணை: எழுத்து என்றால் அப்படியே உள்ளே இழுக்கணும். இந்தக் கதை கொக்கி போட்டு கதையினுள் மூழ்க வைக்கிறது. தலை மூன்றில் இடம்பிடிக்கத்தக்க ஆக்கம். தெரிந்த பின்னணியைக் கூட வித்தியாசமான சித்தரிப்புகளும் விலாவாரியான விவரணைகளும் கொண்டு படம்பிடிக்கிறார். மேற்கோள் காட்ட தூண்டும் நடை:
  • வேட்டியைத் தூக்கிக் கட்டி இருந்ததில் கால்களிரண்டும், எலும்பும் தோலுமாகச் சப்பிப்போட்டது போல் தெரிந்தன.

  • நந்தவேரன் :: அவளாக இருந்திருக்கலாம் « Associated Directors of Tamil Movies: சும்மா துள்ளிக் கொண்டு போகிறது. நெஞ்சை லபக்கும் ஒயில் ஓட்டம். இராஜேஷ் குமாரும் பட்டுக்கோட்டை பிரபாகரும் கலந்தாலோசித்து எழுதிய கதையின் முடிவை சுஜாதா கொடுத்தால் எப்படி இருக்கும். தலை பத்து நம்ம சாய்ஸ்.
  • பட்டாம்பூச்சி விற்பவன் » Rejovasan » பெண்கள் இல்லாத ஊரின் கதை …: தலைப்பில் கதை சொல்லக் கூடாது என்பது எல்.கே.ஜி பாடம். அதுவும் இந்த , ¹ ‘??’ அடுக்கு கேள்விகளினால் தொக்கி நிற்கும் வினா, ² Ellipsis ‘…’, ³ ‘ஏதோ ஒரு உணர்வு’ போன்ற ஃபீலிங்ஸ் சிதறல், ஆகியவை தவிர்த்து, விரிவாக்கவேண்டும் என்பது அரிச்சுவடி. புதியவர்களுக்கான இட ஒதுக்கீடாக இந்த மாதிரி சின்ன விஷயங்களை விட்டுவிடலாம். மிக நல்ல முஸ்தீபு. அதை விட சிறப்பான premise. ஆனால், சொல்வதற்கு தடுமாறுகிறார். வார்த்தை தேர்வுக்கு அகராதியைத் துணைக்கழைக்கலாம்; அல்லது வாசிப்பை விரிவாக்கலாம். மிக மிக அருமையான முயற்சி. முயற்சி மட்டுமே.

பார்ப்பதற்கு பளபளவென்றிருக்கும் பழுதாகிப்போன பார்க்கர் பேனாவை விட, படபடவென் எழுதும் பால்பாயின்ட் பேனாவே மேல். திறமை இருக்கிறது. ஆசை இருக்கிறது. அவசரமும் நிறையவே இருக்கிறது. உழைக்கத் தெம்பில்லை. உங்களுக்கு இராமநாதன் கிருஷ்ணன் தெரிந்திருக்கும். அமிர்தராஜ் சகோதரர்கள் கூட அறிந்திருப்பீர்கள். திறமை என்பது கஷ்டப்படுவதாலும், வாய்ப்பு கிடைப்பதாலும் மட்டும் எட்டப்படுவதில்லை.

  • ஸ்ரீதர் நாராயணன் :: ஒருபக்கம்: காதோரமாய்: எனக்கு நரசிம்ம ராவைத் தெரியும் என்று பீற்றிக் கொள்வது மாதிரி, நான் orupakkam அறிவேன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்பட வைக்குமாறு கதைகள் எழுதுபவர். ‘என்னமா எழுதறாரு?!’ என்னும் மலைப்பிலேயே ஒட்டக்கூத்தராய், என் கதைகளை ட்ராஃப்டிலேயே வைத்திருக்க வைப்பவர். இது தலை மூன்றில் இடம்பிடிக்கத்தக்க கரு + விவரிப்பு + முடிவு.
  • வெட்டிப் பயல்: வாழையடி வாழை: சென்ற ஆசிரியரின் இடுகை போலவே எதிர்பார்ப்புடன் எதிர்கொண்ட கதை. வெட்டி பாலாஜியின் குட்டிப் பாப்பா இதை விட சிறந்த ஆக்கம். விவாதப் பொருள் தரும் அழுத்தம், புதுமையான தற்காலச் சூழல் போன்றவற்றில் மேலும் சிறப்பானதால், அதுதான் தலை பத்தில் இடம்பிடிக்கும் என்று கணித்திருந்தேன். ஜெயகாந்தன் காலத்து சித்திரத்தை, இந்த இணையக் காலத்தில் எவரும் இவ்வளவு நேர்த்தியாய் தரவில்லை என்றாலும், ஃப்ரெஷ்னெஸ் லேது.
  • இரா வசந்தகுமார் :: என் பயணத்தின் பிம்பங்கள்…!: மனையியல்.: வெளியானவுடன் வாசித்தது. அப்போதைக்கு இதுதான் #1. இப்போதைய வாசிப்பிலும் தலை மூன்றில் ஒன்று. மிக கச்சிதமாக, சொல்ல வந்ததை ஆயிரம் வார்த்தைக்குள் முழுமையாக கொடுப்பது லேசுப்பட்ட காரியம் இல்லை. வெகு நேர்த்தியாக செய்திருக்கிறார்.
  • நுனிப்புல்: அவள் பத்தினி ஆனாள்- ராமச்சந்திரன் உஷா: நான் ரா.கா.கி., தமிழோவியம் எழுத ஆரம்பித்தபோது இவரும் திண்ணை, கல்கி என்று சூறாவளியாக நுழைந்ததால், ‘என்னோடு எழுத வந்தவர்’ என்று சொல்லிக் கொள்ளப் பிரியப்படுபவர். ஆனால், நான் இன்னும் ஆங்காங்கே எழுதிக்கொண்டிருக்க, இவரோ அமெரிக்காவின் ஆக்ரோஷத்தோடு புதிய எல்லைகளைத் தொட்டு, பன்னாட்டு இதயங்களைத் தொட்டு, பல எல்லைக்கோடுகளைத் தாண்டி எங்கும் ஆக்கிரமிக்கும் ஆற்றலுடையவர் என்பதற்கான ஒரு பதம், இந்த ஆக்கம். தலை மூன்று இடம்பிடிக்க வேண்டும்.
  • மைய விலக்கு « இன்று – Today :: சத்யராஜ்குமார்: பரிந்துரை முன்பே எழுதியாச்சு
  • அகநாழிகை: தற்செயலாய் பறிக்கப்பட்ட ஒரு மலர் – அகநாழிகை வாசுதேவன் : நான் கூட எதையாவது கிறுக்கியிருந்தால், பேரை வைத்து மிரட்டியே தலை இருபதிற்குள் இடம்பிடித்திருக்கலாம் என்னும் நப்பாசையைத் தூண்டிய புனைவு. அச்சுப் புத்தகத்தில் இடம்பெறும் அருமையான வாய்ப்பை கோட்டை விட்டுட்டோம் என்னும் வருத்தம் மட்டுமே இந்தப் புனைவைப் படித்தவுடன் மேலோங்கியது.
  • ட்விட்டரில் சொன்னது: Tht piece lacked freshness, was more adjective oriented, pretentious & preachy.

  • இவள் என்பது பெயர்ச்சொல்: வழியனுப்பிய ரயில் – உமாசக்தி: வாசித்து ரொம்ப நாளாகி விட்டது. தேர்வாகும் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. ஓரளவு நல்ல கதை. ஆனாலும், முழுமை உணர்வு கிட்டவில்லை. ரொம்ப அவசரப்படுத்தும் அவஸ்தை. இன்னும் கொஞ்சமாவது காரண காரியங்களின் அஸ்திவாரம் இல்லாததால் ஆட்டம் கண்ட கதை.
  • தமிழன் – காதல் கறுப்பி...: மலைகளில் காணாமல்போன தேவதைகள்…: இது மெஜிக்கல் ரியலிஸம் என்பதை விட உள்மன கிடக்கையை எழுத்தில் கொணரும் முயற்சி. வித்தியாசமான பெயர்கள், அதிகம் அறிந்திராத தலம் போன்றவற்றிற்காக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாம். மற்றபடிக்கு ‘பாய்ஸ்’ படத்தில் ஃபேண்டசி கதைகளை அவிழ்த்துவிடும் குண்டுப் பையனிடம் ஜொள்ளொழுக கேட்பதையொத்த அனுபவம்.
  • நீரோடையில் தக்கை…: வள்ளியம்மையின் பழுப்பு கண்கள் – புபட்டியன்: பதின்ம வயதினரின் பருவக் கோளாறையும் ஃபேன்டசியையும் செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ முன்னோட்டத்தையும் பார்த்து சூடு போட்டுக் கொண்ட கதை.
  • நந்தாவிளக்கு: நான் அல்லது நான் – நந்தா குமாரன்: அசத்தலான ஆரம்பம். அடைப்புக்குறி ஆரம்பத்தில் கடுப்பேற்றினாலும், போகப் போக சுவாரசியத்தைக் கூட்டியது. ஆனால், தமிழ்ப்படத்தில் இரு வேடம் தரிப்பது போல் இரண்டு ‘நான்’களுக்கும் போதிய கதாபாத்திர வடிவமைப்பு இல்லாமை அலுக்க வைக்கிறது. முடிவில் கொஞ்சம் தட்டி கொட்டி மேலும் உருப்படியாக கொணர்ந்திருக்கலாம். என்னுடைய தலை இருபதில் நிச்சயம் இடம் உண்டு.
  • வெண்ணிலா பக்கங்கள்: நீரும் நெருப்பும்: பிடித்திருந்தது. ஏற்கனவே இது போன்று பல ஆக்கங்கள் வாசித்திருந்தாலும், போட்டிக்கு வந்ததில் இது போல் ஒன்று தேர்ந்தெடுக்கப்படுவது வெகு பொருத்தம். தலை பத்து.
  • GURU: காத்திருத்தல் – சரவணன்.P: எளிமையான வடிவம்; உள்ளடக்கம். அதைக் கொணர்ந்த விதம் சிறப்பு. நடுவர்கள் தீர்ப்பளித்திருக்காவிட்டால் தவறவிட்டிருப்பேன். தலை பத்து.
  • கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் – நிலா ரசிகன் :: சிறுகதைகள் & பாடல்கள: நிறைய கதை இருப்பதால் நிறைந்த உணர்வைக் கொணர முடியாது. வாய் முழுக்க தண்ணீரை வைத்துக் கொண்டு பேச முடியுமா? ‘அச்சமில்லை… அச்சமில்லை’ ஆரம்பித்து பார்த்த ஆதிகால ஆதிச்சநல்லூர் கருவின் அத்தியாய சுருக்கங்கள்.
  • எண்ணச் சிதறல்கள்: அம்மாவின் மோதிரம் – எம் ரிஷான் ஷெரீப் : பிடித்திருந்தது. வித்தியாசமான பொறுமையான நடை. தலை பத்து.

பரிந்துரை: இரண்டு இணையத்து சிறுகதைகள்

சமீபத்தில் இரு நல்ல புனைவு வாசிக்க கிடைத்தது. அவை:

1. சத்யராஜ்குமார் :: மைய விலக்கு « இன்று – Today

2. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: தேவதைகள் காணாமல் போயின – சிறுகதை

அவற்றை முடித்து விட்டு இந்தப் பதிவைப் படிப்பது கதைகளுக்கு நீங்கள் செய்யும் ஷேமம்.


மேற்கோள் மூலை

ச.ரா.குமார் கதையில் இருந்து கவர்ந்த இரு இடங்கள்:

அ) இன்பாக்சில் நிஷா அனுப்பிய மின்னஞ்சல். ரொம்பவும் கோபமாகி விட்டால் நிஷா இமெயிலில்தான் பேசுவாள். பத்து கிலோ பைட்களுக்கு திரையில் தெரிந்தது அவள் கோபம்.

ஆ) ‘நீயும், நிஷாவும் ஏன் இப்படி கஷ்டப்படணும்? பார்த்துக்க ஆயிரம் பேர் இருக்காங்க. இங்கே நிறைய சொகுசு இருக்கு. ஆனா லைஃப் இல்லை. நாலு சுவத்துக்குள்ள நாம நாலு பேருமே முகத்தைப் பார்த்துக்கிட்டு… மெட்ராசுக்குப் போயிரலாம்டா.’


ரா.கி.யில் கவர்ந்தவற்றிற்கு சாம்பிள்:

அ) ஜீரணமாகாத உணவை தள்ள முயற்சிப்பதுபோன்ற கடலின் முயற்சி ஒவ்வொறு முறையும் அலையென தோற்கும் காட்சி வியப்பானதே. எதைஎதையோ விழுங்குவதும், பின்னர் எதுவுமே தெரியாதுபோல் கிடப்பதும் இதற்கு வாடிக்கையாகிவிட்டது.

ஆ) ஜப்பான் நாட்டவர்களின் முகவடிவம், எங்கு ஆரம்பித்தாலும் கூர்மையான தாடையிலேயே விழும்.


ஆறு வித்தியாசங்கள்

இரு கதைகளுமே அதிர்ச்சி அல்லது வித்தியாசமான முடிவில் நம்பிக்கை கொண்டவை. இரு கதைகளுக்குமே அது தேவையில்லை என்பது வேறு விஷயம்.

ஒன்று போட்டிக்காக எழுதப்பட்டது. மற்றொன்று அந்தவித நிர்ப்பந்தங்களுக்குட்பட்டு உருவாகாவிட்டாலும், போட்டியில் கலந்துகொள்வதற்கான முஸ்தீபுகளும் முகாந்திரங்களும் நிறைந்தது.

வார்த்தைகளின் விளிம்பில் நிற்பவரிடம் கதை ஜாஸ்தி. இன்று – டுடேவிடம் மூக்கு மேல் வரவைக்கும் விவாதப்புள்ளிகள் ஜாஸ்தி.


விமர்சனம்

சத்யராஜ் கதையில் விமர்சிக்க விஷயம் ஏதுமில்லை. பட்டிமன்றம் மாதிரி இன்னும் கொஞ்சம் எண்ணவோட்டமோ, உரையாடல் மன்றமோ கட்டி, மெரீனா பீச் மணல் அளவு வியாபிக்க கூடிய சமாச்சாரத்தை சுண்டல் மாதிரி பொட்டலம் கட்டி இருக்கிறார்.

குறைந்த பட்சம் அந்த மின்னஞ்சலையாவது அனுபந்தம் ஆக்கி இருக்கலாம் என்னும் ஏக்கம் இருக்கிறது.

oOo

காதலியின் நினைவுகள் என்று இன்னொரு கதை எவராவது எழுதினால் அலுவலை நோக்கி(யே) வடக்கிருக்கலாம் என்று எண்ணுமளவு அலுத்துப் போன டாபிக்கில் பூந்து விளையாடியிருக்கிறார் கிரி. சம்பிரதாயமான ஆரம்பம்.

இத்தினியூண்டு கதையில் உலாவும் அத்தனை பாத்திரங்களுக்கும் மனதில் நிற்கும் அறிமுகங்கள். தண்ணீரில் மிதக்கும் ப்ளாஸ்டிக் ஆக, கவிஞர்களே உவமைகளுக்கு பஞ்சம் பாடும் இந்தக் காலத்தில் சக்கையான தக்கை கொண்ட மிதவையான உறுத்தாத பயன்பாடு அமர்க்களம்.

அப்படியே, ‘நான் அந்தக் காலத்தில் லால் கிலாவில் இப்படித்தான்…’ என்று காதலி காலடி தேட வைப்பதே கதையின் வெற்றி.

இருவருக்கும் என் நன்றி.

குத்திக்கல் தெரு – அறிமுகம்

இதற்கு முன்பு தமிழோவியத்தில் இரு குறுநாவல் வெளியாகியுள்ளது. அவை:
1. கங்கை இல்லாத காசி
2. சுய சாசனம்

இப்பொழுது ‘குத்திக்கல் தெரு‘:

அ) நாவல் – பாகம் 1

ஆ) இரண்டாம் பகுதி

நாவலின் முதல் பகுதிகளுக்கு உங்கள் விமர்சனம் என்ன?

ஆஸ்பத்திரி – சுதேசமித்திரன்: புத்தக விமர்சனம்

காக்டெயில் தந்த போதையில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு கலந்த ஆர்வத்துடன் வாங்கி, உடனடியாக வாசிக்கவும் எடுத்த புத்தகம்.

ஒரு தப்படி கூட தவறவிடாத நெத்தியடி. படித்து முடித்தவுடன் ட்விட்டியது:

சுதேசமித்திரனின் ‘ஆஸ்பத்திரி’ (உயிர்மை வெளியீடு) வாசிக்கிறேன். சாருவின் பாணி என்று சொல்லப்பட்டாலும் சாருவை விட 1001 தடவை நல்லாருக்கு. – February 9th, 2009


அம்ருதா – விஜய் மகேந்திரன்:

வெறும் கதை சொல்லல் மட்டும் நாவல் அல்ல. தமிழ் நாவல்களில் பல புதுவகையான உத்திகள் கையாளப்பட்டன. அதில் நான் லீனியரும் ஒன்று. கை போன போக்கில், எழுதிச் செல்வது, முன் மாதிரியான முடிவுகள் எதுவும் வைத்துக்கொள்ளாமலே, ஊடே ஆசிரியரின் மனமொழி இவற்றில் வெளிப்படும்.

பெரும்பாலும் நான் லீனியர் முறையில் எழுதப்படும் கதைகள் தமிழில் கவனத்தைப் பெறுவதில்லை. காரணம் இந்த எழுத்து முறையை கையாள்பவருக்கு அதீத மொழிநுட்பமும், சரளமான மொழிநடையும் அவசியம். அவ்வாறு இல்லாவிட்டால் ஆசிரியர் இதைத்தான் சொல்ல வருகிறார் என்பதே புரியாமல் போய் விட வாய்ப்புகள் அதிகம்.

சுதேசமித்திரனின் “ஆஸ்பத்திரி” நான்-லீனியர் முறைப்படி எழுதப்பட்டுள்ௗ நாவல் என்றாலும் அந்த முறைமைக்குள் மட்டும் முற்றிலும் அடக்கிவிட முடியாத நாவல். இரு மகன்கள் மற்றும் அவர்களது அப்பாவின் மரணம் நிகழும் ஆஸ்பத்திரியையும் மையமாக கொண்டு, முன், பின்னாக சம்பவங்களைக் கோர்த்து “ஆஸ்பத்திரி” என்ற ஸ்தாபனத்தின் மீதான தனது விமர்சனங்கௗயும், ஆற்றாமைகளையும் முன் வைக்கிறார்.

“கொலை செய்வதற்கு எனப் பிரேத்யேகமான சில இடங்கள் உண்டு” என்ற வாசகத்துடன் இந்நாவல் ஆரம்பமாகிறது.

அப்பா உயிருக்காக போராடிக் கொண்டிருந்த போது, நாங்கள் வீட்டில் இந்தியா-ஆஸ்திரேலியா இரவு மேட்ச் டிவியில் பார்த்துக் கொண்டிருந்தோம். ஸ்ரீகாந்த் பேட் செய்து கொண்டிருந்தார் எனவும் நாவலின் ஆரம்பத்தில் குறிப்பிடப்படுகிறது. இந்த ஒருவரி கதை நடைபெறுவது கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்பதைக் குறிப்பால் உணர்த்திவிடுகிறது.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ வசதிகள் இந்த அளவு எல்லா மருத்துவ மனைகளிலும் பரவலாக்கப்படவில்லை. முக்கியமாக, சென்னையில் இரு பெரும் மருத்துவமனைகள் அனைத்து வசதிகளையும் கொண்டிருந்தது என்பதையும் நாம் நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம். அந்த இரு மருத்துவமனைகளில் வசூலிக்கும் கட்டணங்கள் நடுத்தர வர்க்கத்தினரின் தரத்தை விட மிக அதிகமாக இருந்ததால் வேறு வழியில்லாமல், சொத்துக்களை விற்று, அங்கு மருத்துவம் பார்த்தவர்களையும் நானே கண்டிருக்கிறேன். அங்கு ஒரு நாளைக்கு ஐ.சி.யூ.வில் இருக்க வசூலிக்கப்படும் கட்டணம், இன்று சென்னையில் சாப்ட்வேர் இஞ்சினியராக இருப்பவரின் ஒரு மாதச் சம்பளம் ஆகும்.

நடுத்தர வர்க்கத்தினரின் தரவை மட்டுமே பெரும்பாலும் நம்பி நடைபெறும் இம்மருத்துவமனைகளில் அவர்கள் மருந்துக்குக் கூட மதிப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். அதை பல்வேறு இடங்களில் நாவலில் சுவாரசியமாக பதிவு செய்துள்ளார் சுதேசமித்தரன். பணக்காரராக இருப்பின் வெளிநாடுகளிலும், ஏழையாக இருப்பின் அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவம் பார்த்துக் கொள்வது சகஜம். ஆனால் நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டியுள்ளது. இதற்கு இந்நாவலில் தகுந்த காரணத்தையும் விளக்கியுள்ளார்.

சுதேசமித்திரனின் முந்தைய நாவலான “காக்டெய்லை” விட பல படிகள் உயர்ந்து நிற்கக் கூடியது ஆஸ்பத்திரி. மெல்லிய அங்கதமும், சுவாரஸ்யமான எழுத்தின் வேகத்தோடும் சேர்த்து சிறந்த கதை ஒன்றையும் சொல்லி விடுகிறார். நான்-லீனியரில் கதை சொல்வது கடினம், ஆனால் அதையும் இஇதில் செய்து காட்டியிருக்கிறார்.

உண்மைகள் உறவாடும் எழுத்துக்களில், நான்-லீனியரின் தனிக்குரலாக சுதேசமித்திரனின் ‘ஆஸ்பத்திரி’ நாவலை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

வௌயீடு : உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள் : 144
விலை : ரூ.80/-


நாஞ்சில் நாடன் முன்னுரையிலிருந்து:

நாவல் வடிவம் சர்வ சுதந்திரங்களையும் வழங்கும் ஒன்று. அந்தச் சுதந்திரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எழுதப்பெற்ற நாவல் ஆஸ்பத்திரி. சுதேச மித்திரனின் சிறப்பு என அவரது மொழியையும், கழிவிரக்கமற்ற சுயஎள்ளலையும், அங்கதத்தையும், வெளிப்படைத்தன்மையையும் கருதுவதுண்டு. அச்சமற்று நினைத்ததை எழுத்தில் கொணரும் நேர்மையும் அவருக்கு உண்டு. அவை யாவும் இந்த நாவலில் தருணம் தெர்ந்து வெளிப்பட்டுள்ளன.

இத்தனை வெளிப்படையான எழுத்து தமிழில் அபூர்வமானது. வாசகனைக் கூசச்செய்யும் உண்மை கொண்டு அறைவது. நேரடித்தன்மையும் நியாயமும் கொண்டது. மொழியைக் கையாளும் திறனும் தீவிரமும் கொண்டது எனவே தனித்தன்மையானது.

அவரது பாதிப்பு முன்னோடியின் சிறகுக் கதகதப்பில் முடங்கிக் கொள்வதல்ல. சுறுசுறுப்பாய் கொத்தித் திரிவது, சிறகடித்துப் பறக்க முயல்வது, சொந்தமாய் இரைதேட வல்லது.

பன்முகப்பட்ட உடல் சிக்கல்களுக்காக மருத்துவமனையும் வீடுமாக அலைக்கழியும் தகப்பனாரையும் மருத்துவமனையையும் அவரது இரண்டு மகன்களையும் முக்கியக் கதாபாத்திரங்களாகக் கொண்டது. மருத்துவமனைகளின் செயல்பாடுகளை அங்கதத்துடன் காட்டமாய் விமர்சனம் செய்வது. அதைப் பயன்படுத்தி சமூக விமர்சனம் செய்வது.

மருத்துவமனையில் அப்பாவை அனுமதித்ததே அவரைக் கொலை செய்வதற்கான முகாந்திரம்தானோ எனும் ஐயத்துடன் தொடங்கும் நாவல், அவரை மின் மயானத்தில் எரியூட்டி முடிந்த பின்பும் அந்தக் கேள்வியுடன்தான் முடிகிறது –

இந்த நாவலில் கொலை நடந்ததா இல்லையா என்று?


சுதேசமித்திரன் வலையுரை:

கவிஞர் விக்ரமாதித்யனுக்கு எனது அன்பு கலந்த நன்றியை இப்போதே வெளியிட்டு விடுகிறேன். எனது முதல் புத்தகமான அப்பா (கவிதைகள்) வெளிவந்தபோது விக்ரமாதித்யன் என்னிடம் தன் இசைவின்மையை மிகவும் மென்மையாக வெளியிட்டார்.

அயல் மொழிகளில் ஒரே வி்ஷயத்தை வேறு வேறு வடிவங்களில் எழுதிப் பார்க்கும் வழக்கம் உண்டு என்பதைக் குறிப்பிட்டு, நீங்கள் ஏன் இதை வேறு வடிவத்தில் எழுதிப் பார்க்கக்கூடாது என்று அவர் கேட்டார்.

‘அப்பா’வைப் பொறுத்தவரை அது அந்த வடிவத்தில் எழுதப்பட்டதுதான் புதிது என்பதை நான் நன்கறிவேன் என்பதால் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் (அப்பா எழுதிய காலத்திலிருந்து கணக்கிட்டால் 11 வருடங்கள்) கழித்து ஆஸ்பத்திரியை ஒரு சிறுகதையாக முதலில் எழுதினேன். சிறுகதை என்கிற அளவில் அது சிறப்பானதாகவே இருந்தபோதும் எழுதியவனின் மனத்துள் கொட்டிக் கிடக்கும் மிச்ச சொச்ச சரக்கை உத்தேசித்து அதை முழுமையாக எழுதி விடுவதுதான் சரியானது என்பதாக தோன்றிக்கொண்டேயிருந்தது. கிட்டத்தட்ட இருபதே நாட்களில் அதைச் செய்து முடித்துவிட்டேன். முடித்துவிட்டு ஒரு முறை வாசித்துப் பார்த்தபோது, விக்ரமாதித்யன் சொன்னதைத்தான் ஓரளவு முயன்று பார்த்திருக்கிறேனோ என்கிற வியப்பு என்னுள் எழுந்தது. அது உண்மையானால் அவருக்கு இன்னுமொரு முறை நன்றி.


என்னுரை

கதை சொல்லும் கலை என்றால்:

  • இயல்பு, எதார்த்தம் என்று உதார் விடுவிடாமல் உண்மை நிலையை பிரதிபலிக்குமா?
  • உவமை, ஒப்புமை, எடுத்துக்காட்டு எல்லாம் எப்பொழுது வெற்றிபெறும்?
  • எங்ஙனம் கதாபாத்திரத்தை மனசுக்குள் உட்கார்த்தி நிரந்தர படுக்கையறை உருவாக்குவது?
  • விவரணை எப்படி தேவையில்லாமல் போகிறது? விவரிப்புக்கும் தகவல்களுக்கும் எங்கே முக்கியத்துவம் கிடைக்கிறது?
  • கதாசிரியர் கருத்து, வாசகரின் எண்ணவோட்டம், கதைசொல்லியின் இயக்கம், கதாமாந்தரின் நியாயம் எல்லாம் எப்படி ஒன்றுக்கொன்று உரசாமல் உலாவுகிறது?
  • அட… கற்பனை மனிதர் மேல் கழிவிரக்கம் தோன்றுவது ஏன்?

இதெல்லாம் சுதேசமித்திரனின் ஆசுபத்திரியில் சாத்தியமாவதால் நிறைந்த வாசக அனுபவம் கிடைக்கிறது.

மூன்று கதைகள்: எஸ்ரா, அமி & ஹபி: மிக மிகச் சிறிய குறிப்புகள்

1. சிறுகதை: நாடக தினம் | காலச்சுவடு: அசோகமித்திரன்

இதே கதையை வேறு எவராவது எழுதியிருந்தால், புது எழுத்தாளர் கொடுத்திருந்தால், வலைப்பதிவர் மின்னஞ்சலாக அனுப்பியிருந்தால் எவரும் பிரசுரித்திருக்க மாட்டார்கள்.

ஃப்ரோசன் பரோட்டாவை மைக்ரோவேவில் வைத்து கொடுத்த மாதிரி வந்திருக்கும் இந்தப் புனைவில், அப்படி என்ன உள்ளே பொதிந்து உள்ளது என்று விளக்கினால், மறைபொருளை வெளிப்படுத்தினால் காலாகாலத்திற்கும் நன்றி சொல்வேன்.

~oOo~

2. உபதேசியார்: எஸ் ராமகிருஷ்ணன் – தி சன்டே இந்தியன்

முதல் தடவை வாசித்தால் எளிமையான செய்தியை எழுதியது போல் புரிகிறது.

கதையாக நினைத்து மீண்டும் படித்தால் என்னென்ன புரிகிறது என்று விலாவாரியாக சொல்லமுடியவில்லை. அவசியம் வாசிக்கவேண்டிய வெகு நேர்த்தியான ஆக்கம்.

பிரசங்கி. பெயர் எம். சிறுவர்களுக்கு சாத்தான். இரு வான்கோழி நைவேத்தியம். மகள்களின் மெழுகுவர்த்தி உற்பத்தி. பிச்சைக்கார கடவுள். கனவு நரகம்.

~oOo~

3. ஹரன்பிரசன்னா – வடக்கு வாசல் – “அங்குமிங்குமெங்கும்”

முஸ்தீபு படு ஜோர். முடிவு படு திராபை.

பதிவு எழுதும்போது பாதியில் ‘limit exceeded’ என்று கழுத்து நெறிப்பது போல் அசௌகரியமான மென்னிப் பிடித்து திருகி விட்டுச் சென்றுவிட்டார்.

வித்தியாசமான நாயகர். பழக்கமான குடும்பம். இலயிக்க வைக்கும் விவரிப்பு. இவ்வளவு இருந்தும் க்ளைமேக்ஸ் கொடுக்கத் தெரியாத பாரதிராஜா படம்.