‘உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பின்’ சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளியாகி விட்டன.
போட்டி குறித்த பதிவுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன: Snap Judgement: Uraiyadal: Jyovram Sundar & Paithiyakkaaran Short Story Contests: Tamil Bloggers Fiction Competition Results
இனி வென்றதிலும் கலந்து கொண்டதிலும் நான் படித்த சில கதைகளும் கருத்துகளும்:
- யோசிப்பவர்: பிரசன்னம்: கதை பிடித்திருக்கிறது; தலை பத்தில் இடம்பெற வேண்டும் என்று சொல்லுமளவு பிடித்திருக்கிறது. அறிவியல் இருந்தது. மாயாஜாலம் இருந்தாலும் நம்பக்கூடிய, அசர வைக்கும் முடிவு.
- அம்மாவுக்குப் புரியாது – RV « கூட்டாஞ்சோறு: ஆர்.வி. நிறைய வாசிப்பவர். அவ்வளவு பரந்த வாசிப்பு, நல்ல சிறுகதையைத் தரும் என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை என்பதற்கு இந்தக் கதை ஒர் உதாரணம். (உரிமைதுறப்பு: நானும் நிறைய இலக்கியம் படிப்பவன்; சிறுகதை எழுத வரவில்லை 😦 முடிவை மட்டும் நம்பும் புனைவு. தட்டையான விவரிப்பு. சுவாரசியமான வாசிப்பு என்பதாலும் இதை விட மோசமான கதைகள் கூட தலை 20ல் இடம் பிடித்திருப்ப்பதாலும், 250க்குள் பெஸ்ட் ஆக இருந்திருக்கும்!?
- கவிதா | Kavitha: அப்பா வருவாரா?: வலையில் எழுதுபவர்களில் பெண் பதிவர்கள் வெகு குறைவு. எனவே, இட ஒதுக்கீடு என்னும் எண்ணத்தில் இந்தக் கதை தெர்ந்தெடுக்கப்படலாம். பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது தவிர இந்த ஆக்கத்தில் கரு கிடையாது; முடிச்சு கிடையாது; ரொம்ப மேலோட்டமான விவரிப்பு. கிழக்கு பதிப்பகம் புத்தகம் போட்டு, இணைய அறிமுகம் இல்லாதவர் இந்த மாதிரி கதைகள்தான் இணையத்தில் வலம் வருகிறது என்று எண்ண நினைத்தால், அது மிகப் பெரிய துரதிர்ஷ்டம். ‘நான் ஆதவன்’ மறுமொழி அவசியம் வாசிக்க வேண்டும்.
- சேரல்: கருப்பு வெள்ளை: நீர் வழிப்படூஉம் புணை: எழுத்து என்றால் அப்படியே உள்ளே இழுக்கணும். இந்தக் கதை கொக்கி போட்டு கதையினுள் மூழ்க வைக்கிறது. தலை மூன்றில் இடம்பிடிக்கத்தக்க ஆக்கம். தெரிந்த பின்னணியைக் கூட வித்தியாசமான சித்தரிப்புகளும் விலாவாரியான விவரணைகளும் கொண்டு படம்பிடிக்கிறார். மேற்கோள் காட்ட தூண்டும் நடை:
- நந்தவேரன் :: அவளாக இருந்திருக்கலாம் « Associated Directors of Tamil Movies: சும்மா துள்ளிக் கொண்டு போகிறது. நெஞ்சை லபக்கும் ஒயில் ஓட்டம். இராஜேஷ் குமாரும் பட்டுக்கோட்டை பிரபாகரும் கலந்தாலோசித்து எழுதிய கதையின் முடிவை சுஜாதா கொடுத்தால் எப்படி இருக்கும். தலை பத்து நம்ம சாய்ஸ்.
- பட்டாம்பூச்சி விற்பவன் » Rejovasan » பெண்கள் இல்லாத ஊரின் கதை …: தலைப்பில் கதை சொல்லக் கூடாது என்பது எல்.கே.ஜி பாடம். அதுவும் இந்த , ¹ ‘??’ அடுக்கு கேள்விகளினால் தொக்கி நிற்கும் வினா, ² Ellipsis ‘…’, ³ ‘ஏதோ ஒரு உணர்வு’ போன்ற ஃபீலிங்ஸ் சிதறல், ஆகியவை தவிர்த்து, விரிவாக்கவேண்டும் என்பது அரிச்சுவடி. புதியவர்களுக்கான இட ஒதுக்கீடாக இந்த மாதிரி சின்ன விஷயங்களை விட்டுவிடலாம். மிக நல்ல முஸ்தீபு. அதை விட சிறப்பான premise. ஆனால், சொல்வதற்கு தடுமாறுகிறார். வார்த்தை தேர்வுக்கு அகராதியைத் துணைக்கழைக்கலாம்; அல்லது வாசிப்பை விரிவாக்கலாம். மிக மிக அருமையான முயற்சி. முயற்சி மட்டுமே.
நல்ல கதை என்பது பாஸ்டன் நகரத்து Deciduous மரம் போன்ற தன்மையுடையது. படிக்கும் போது பூப் பூக்கும் வசந்த காலம். முடிவு நெருங்க நெருங்க வண்ணம் மாறி மாறிக் காட்சியளிக்கும் இலையுதிர் காலம். பனிக்காலமாக கதை முடிந்த பிறகும், அந்த மரமாகிய புனைவு மனதில் நிற்க வேண்டும். வேறெங்கோ பச்சை பாசியைப் பார்க்கும் போதோ, சூரியோதய ஆரஞ்சை கவனித்தாலோ, அந்த மரம் உதிக்கும். கதையும் அது மாதிரி நிறம் பலகாட்டி நிலைத்து நிற்க வேண்டும்.
வேட்டியைத் தூக்கிக் கட்டி இருந்ததில் கால்களிரண்டும், எலும்பும் தோலுமாகச் சப்பிப்போட்டது போல் தெரிந்தன.
பார்ப்பதற்கு பளபளவென்றிருக்கும் பழுதாகிப்போன பார்க்கர் பேனாவை விட, படபடவென் எழுதும் பால்பாயின்ட் பேனாவே மேல். திறமை இருக்கிறது. ஆசை இருக்கிறது. அவசரமும் நிறையவே இருக்கிறது. உழைக்கத் தெம்பில்லை. உங்களுக்கு இராமநாதன் கிருஷ்ணன் தெரிந்திருக்கும். அமிர்தராஜ் சகோதரர்கள் கூட அறிந்திருப்பீர்கள். திறமை என்பது கஷ்டப்படுவதாலும், வாய்ப்பு கிடைப்பதாலும் மட்டும் எட்டப்படுவதில்லை.
- ஸ்ரீதர் நாராயணன் :: ஒருபக்கம்: காதோரமாய்: எனக்கு நரசிம்ம ராவைத் தெரியும் என்று பீற்றிக் கொள்வது மாதிரி, நான் orupakkam அறிவேன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்பட வைக்குமாறு கதைகள் எழுதுபவர். ‘என்னமா எழுதறாரு?!’ என்னும் மலைப்பிலேயே ஒட்டக்கூத்தராய், என் கதைகளை ட்ராஃப்டிலேயே வைத்திருக்க வைப்பவர். இது தலை மூன்றில் இடம்பிடிக்கத்தக்க கரு + விவரிப்பு + முடிவு.
- வெட்டிப் பயல்: வாழையடி வாழை: சென்ற ஆசிரியரின் இடுகை போலவே எதிர்பார்ப்புடன் எதிர்கொண்ட கதை. வெட்டி பாலாஜியின் குட்டிப் பாப்பா இதை விட சிறந்த ஆக்கம். விவாதப் பொருள் தரும் அழுத்தம், புதுமையான தற்காலச் சூழல் போன்றவற்றில் மேலும் சிறப்பானதால், அதுதான் தலை பத்தில் இடம்பிடிக்கும் என்று கணித்திருந்தேன். ஜெயகாந்தன் காலத்து சித்திரத்தை, இந்த இணையக் காலத்தில் எவரும் இவ்வளவு நேர்த்தியாய் தரவில்லை என்றாலும், ஃப்ரெஷ்னெஸ் லேது.
- இரா வசந்தகுமார் :: என் பயணத்தின் பிம்பங்கள்…!: மனையியல்.: வெளியானவுடன் வாசித்தது. அப்போதைக்கு இதுதான் #1. இப்போதைய வாசிப்பிலும் தலை மூன்றில் ஒன்று. மிக கச்சிதமாக, சொல்ல வந்ததை ஆயிரம் வார்த்தைக்குள் முழுமையாக கொடுப்பது லேசுப்பட்ட காரியம் இல்லை. வெகு நேர்த்தியாக செய்திருக்கிறார்.
- நுனிப்புல்: அவள் பத்தினி ஆனாள்- ராமச்சந்திரன் உஷா: நான் ரா.கா.கி., தமிழோவியம் எழுத ஆரம்பித்தபோது இவரும் திண்ணை, கல்கி என்று சூறாவளியாக நுழைந்ததால், ‘என்னோடு எழுத வந்தவர்’ என்று சொல்லிக் கொள்ளப் பிரியப்படுபவர். ஆனால், நான் இன்னும் ஆங்காங்கே எழுதிக்கொண்டிருக்க, இவரோ அமெரிக்காவின் ஆக்ரோஷத்தோடு புதிய எல்லைகளைத் தொட்டு, பன்னாட்டு இதயங்களைத் தொட்டு, பல எல்லைக்கோடுகளைத் தாண்டி எங்கும் ஆக்கிரமிக்கும் ஆற்றலுடையவர் என்பதற்கான ஒரு பதம், இந்த ஆக்கம். தலை மூன்று இடம்பிடிக்க வேண்டும்.
- மைய விலக்கு « இன்று – Today :: சத்யராஜ்குமார்: பரிந்துரை முன்பே எழுதியாச்சு
- அகநாழிகை: தற்செயலாய் பறிக்கப்பட்ட ஒரு மலர் – அகநாழிகை வாசுதேவன் : நான் கூட எதையாவது கிறுக்கியிருந்தால், பேரை வைத்து மிரட்டியே தலை இருபதிற்குள் இடம்பிடித்திருக்கலாம் என்னும் நப்பாசையைத் தூண்டிய புனைவு. அச்சுப் புத்தகத்தில் இடம்பெறும் அருமையான வாய்ப்பை கோட்டை விட்டுட்டோம் என்னும் வருத்தம் மட்டுமே இந்தப் புனைவைப் படித்தவுடன் மேலோங்கியது.
- இவள் என்பது பெயர்ச்சொல்: வழியனுப்பிய ரயில் – உமாசக்தி: வாசித்து ரொம்ப நாளாகி விட்டது. தேர்வாகும் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. ஓரளவு நல்ல கதை. ஆனாலும், முழுமை உணர்வு கிட்டவில்லை. ரொம்ப அவசரப்படுத்தும் அவஸ்தை. இன்னும் கொஞ்சமாவது காரண காரியங்களின் அஸ்திவாரம் இல்லாததால் ஆட்டம் கண்ட கதை.
- தமிழன் – காதல் கறுப்பி...: மலைகளில் காணாமல்போன தேவதைகள்…: இது மெஜிக்கல் ரியலிஸம் என்பதை விட உள்மன கிடக்கையை எழுத்தில் கொணரும் முயற்சி. வித்தியாசமான பெயர்கள், அதிகம் அறிந்திராத தலம் போன்றவற்றிற்காக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாம். மற்றபடிக்கு ‘பாய்ஸ்’ படத்தில் ஃபேண்டசி கதைகளை அவிழ்த்துவிடும் குண்டுப் பையனிடம் ஜொள்ளொழுக கேட்பதையொத்த அனுபவம்.
- நீரோடையில் தக்கை…: வள்ளியம்மையின் பழுப்பு கண்கள் – புபட்டியன்: பதின்ம வயதினரின் பருவக் கோளாறையும் ஃபேன்டசியையும் செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ முன்னோட்டத்தையும் பார்த்து சூடு போட்டுக் கொண்ட கதை.
- நந்தாவிளக்கு: நான் அல்லது நான் – நந்தா குமாரன்: அசத்தலான ஆரம்பம். அடைப்புக்குறி ஆரம்பத்தில் கடுப்பேற்றினாலும், போகப் போக சுவாரசியத்தைக் கூட்டியது. ஆனால், தமிழ்ப்படத்தில் இரு வேடம் தரிப்பது போல் இரண்டு ‘நான்’களுக்கும் போதிய கதாபாத்திர வடிவமைப்பு இல்லாமை அலுக்க வைக்கிறது. முடிவில் கொஞ்சம் தட்டி கொட்டி மேலும் உருப்படியாக கொணர்ந்திருக்கலாம். என்னுடைய தலை இருபதில் நிச்சயம் இடம் உண்டு.
- வெண்ணிலா பக்கங்கள்: நீரும் நெருப்பும்: பிடித்திருந்தது. ஏற்கனவே இது போன்று பல ஆக்கங்கள் வாசித்திருந்தாலும், போட்டிக்கு வந்ததில் இது போல் ஒன்று தேர்ந்தெடுக்கப்படுவது வெகு பொருத்தம். தலை பத்து.
- GURU: காத்திருத்தல் – சரவணன்.P: எளிமையான வடிவம்; உள்ளடக்கம். அதைக் கொணர்ந்த விதம் சிறப்பு. நடுவர்கள் தீர்ப்பளித்திருக்காவிட்டால் தவறவிட்டிருப்பேன். தலை பத்து.
- கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் – நிலா ரசிகன் :: சிறுகதைகள் & பாடல்கள: நிறைய கதை இருப்பதால் நிறைந்த உணர்வைக் கொணர முடியாது. வாய் முழுக்க தண்ணீரை வைத்துக் கொண்டு பேச முடியுமா? ‘அச்சமில்லை… அச்சமில்லை’ ஆரம்பித்து பார்த்த ஆதிகால ஆதிச்சநல்லூர் கருவின் அத்தியாய சுருக்கங்கள்.
- எண்ணச் சிதறல்கள்: அம்மாவின் மோதிரம் – எம் ரிஷான் ஷெரீப் : பிடித்திருந்தது. வித்தியாசமான பொறுமையான நடை. தலை பத்து.
ட்விட்டரில் சொன்னது: Tht piece lacked freshness, was more adjective oriented, pretentious & preachy.