Tag Archives: Fiction

கொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்

முதலில் கதையைப் படித்து விடுங்கள்:

https://www.newyorker.com/magazine/2020/03/23/out-there

“Out There,” by Kate Folk | The New Yorker: Fiction by Kate Folk: “The early blots had been easy to identify. They were too handsome, for one thing.”

ப்ளாட் என்பது என்ன? பாட் போல் அதுவும் கணினியில் மட்டும் இயங்குவது.

நம் துணைவர் எப்படி இருக்க வேண்டும்? என்னுடைய விஷயத்தில் அக்கறை எடுப்பார். தும்மினால், இருமினால் என்னாச்சு என்பார். எவனாவது இணையத்தில் தாக்கினால் குரல் கொடுப்பார். நான் செய்யும் அச்சுபிச்சுகளைப் பொறுப்பார். ப்ரூ காபி விளம்பரம் போல் எதிர்பாராததை செய்வார். வெறுமனே காமத்திற்கு மட்டும் என்னை உபயோகிக்க மாட்டார்.

மாடு பிடிப்பது போல் ஆணைத் தேடும் சமூகம். சந்தை போல் குவிந்திருக்கிறார்கள். அதில் பாதி பேர் போலி. கொஞ்ச காலம் துணையாக நடிப்பார்கள். பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருப்பவர்கள் சட்டென்று இன்னொரு பெண்ணின் பின் சென்று விடுகிறார்கள். கரிசனத்துடன் விசாரிப்பவர்கள் பின்னொரு நோக்கத்தோடு வேறொரு பாதையில் போய் விடுகிறார்கள்.

இந்த நிலைமையில் எப்படி பொருத்தம் பார்ப்பது? யோனி, ரஜ்ஜு எல்லாம் போதுமா? பழக வேண்டும். ஆணின் உண்மையான குணாதிசயம் தெரிய வேண்டும். அந்தரங்கம் வெளிப்பட வேண்டும். ஆத்மார்த்தமான அன்பு உணரப்பட வேண்டும்.

இதைத் தற்காலத்திற்கேற்ப இந்தக் கதை சொல்கிறது.

கதாநாயகிக்கு நிறைய பிரச்சினைகள். முன்னாள் குடிப்பழக்கம்; தனிமை; அனாதரவாக விட்ட தந்தை; புதிய நகர வாசம்.

இருந்தாலும் நாயகி உயர்வாக உணர்கிறாள். சத்தான பழரசம்; பாவப்பட்ட ஜென்மம்; வஞ்சிக்கப்பட்டவள்.

This piece has some things in common with the recent one in The New Yorker, “Kid Positive” by Adam Levin (interrogation of our backstories, notions of real vs. fake and where the lines blur), as well as Elvia Wilk’s 2019 novel Oval, Ishiguro’s neo-classic Never Let Me Go, Jonathan Lethem’s novel from a few years back A Gambler’s Anatomy, and the stories of Aimee Bender (நன்றி: Kate Folk: “Out There” – The Mookse and the Gripes)

இயந்திரத்தனமாக நடப்பதை விரும்பாதவரின் கதை இது. நாயகியும் எந்திரத்தனமாகும் கதை இது. வேண்டுவதை செய்யும் கணவனை எதிர்பார்க்கிறோம். எப்போதும் ஒரே மாதிரி செயல்படும் புருஷனை எதிர்பார்க்கிறோம். இது சலிப்பூட்டும். எது வேண்டுகிறோமோ, அதுவே கிடைத்துவிட்டால், இடைவெளியை கோருகிறோம்.

மேலும்…

Kate Folk on Discerning Reality on the Internet | The New Yorker: The author discusses “Out There,” her story from this week’s issue of the magazine.

ஆஸ்டர்லிட்ஸ் நாவலை முன்வைத்து

வில்லியம் ஜார்ஜ் செபால்ட் என்பவர், எவ்வாறு மற்ற எழுத்தாளர்களில் இருந்து தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்கிறார்? அலைபாயும் பயணக் குறிப்புகள் போன்ற நாவல்களை பிறர் எழுதியிருக்கிறார்கள். குந்தர் கிராஸுக்குப் பிறகு ஜெர்மனியில் இருந்து வேறு எந்தக் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும் தோன்றவில்லை என்பதால் புகழடைந்தாரா? செபால்டைப் போல் நினைவில் தங்கத்தக்க குறிப்புகளையும் ஆழமாக மனதில் பதிக்கத்தக்க தொடர்புகளையும் மற்றவர்களும் அவர்களின் புனைவுகளில் கொண்டு வருகிறார்கள். அப்படி இருந்தும் செபால்டை ஏன் இந்தப் பதிவில் எடுத்துக் கொண்டேன்?

செபால்ட் கவிதைகளில் தன் வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்டார். கவிதைகள் மட்டுமே எழுதிவந்தார். உதாரணமாக, இங்கே ஒன்று:

எவ்வளவு சிரமமாக இருக்கிறது
நிலப்பரப்பை புரிந்து கொள்ள
ரயிலில் அதை கடக்கும்போது
இங்கிருந்து அங்கிருந்து
பேசா மடந்தையாக அது
நீங்கள் மறைவதை பார்க்கும்

(1964)

நிறைய கவிதைகள் குறிப்பிடத்தக்கனவாக இருந்தாலும், அவரின் நாவல்களினாலேயே செபால்ட் புகழடைந்தார். அவரின் கதைகள் வசீகரசக்தியால் மனத்தைக்கவர்ந்தன. அவரின் இறுதி நாவல் 2001ல் அவரின் மறைவிற்குப் பிறகு வெளியானது. அதில் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்குமான பேதம்; கனவிற்கும் நினைவிற்குமான இடைவெளி; கலைக்கும் வாழ்க்கைக்கும் நடுவே உள்ள வித்தியாசம்; உண்மையின் வரையறையைக் கடந்து புனைவு உள்ளே புகுந்து நம்மை எல்லையில்லாமல் உள்ளிழுத்துக் கொள்கிறது. இருந்தாலும் மற்றவர்களும் இதை சாத்தியப்படுத்தியவர்கள்தானே? வாசகர்களும் விமர்சகளும் செபால்டை தூக்கிப் பிடித்துக் கொண்டாடுவது இருக்கட்டும். நான் ஏன் இன்று அவரை ரசிக்கிறேன்? அவரின் கதை எவ்வாறு என்னோடு மறக்கமுடியாதவாறு உறைக்கவைக்குமாறு உரையாடுகிறது?

2001ல் ஜெர்மனியில் ஆஸ்டர்லிட்ஸ் நாவல் வெளியாகிறது. அடையாளமிழப்பையும் தாய்நாட்டை விட்டு அகல்வதையும் அதுவரை அவ்வளவு தீவிரமாகவும் முழுமையாகவும் செபால்ட் எடுத்ததில்லை. தனி மனிதனின் மனசாட்சியை அந்தக் கதை தேடுகிறது. ஒருவன் எவ்வாறு இழப்பை எதிர் கொள்கிறான் – தன் குடும்பத்தினை இழப்பது; தன் கடந்த காலத்தை இழப்பது; மிக முக்கியமாக தாய்மொழியை இழந்து விடுவது. ஆஸ்டர்லிட்ஸ் என்று இப்போது அழைக்கப்பட்டாலும், அந்தக் கதையின் நாயகனின் பெயர் டேஃபிட் எலியஸ். இங்கிலாந்தில் இருக்கும் வேல்ஸ் பகுதியில் வளர்ந்தவன். வயதிற்கு வந்தபிறகே அவன் வேல்ஸில் பிறக்கவில்லை என்பதும், செக்கோஸ்லவேகியாவில் பிறந்தவன் என்பதையும் அறிந்து கொள்கிறான். அவனுடைய பெற்றோரை அவனுக்கு நினைவேயில்லை.

அவனுடைய நாலரை வயது வரை ப்ரேக் நகரத்தில் இருந்திருக்கிறான். இந்தப் பகுதி அகழ்வாராய்ச்சி போல் தோண்டி எடுக்கப்படுகிறது. சரித்திர கல்வெட்டைப் படிப்பது போல் எலியஸின் பூர்விகம் பற்றி மெல்லத் தெரிந்து கொள்கிறோம். எலியஸிடமிருந்து பறிக்கப்பட்டதைக் குறித்து, அவன் ஆராய, ஆராய, நமக்கும் அந்தப் பனி விலகி தெரியவருகிறது.

கதைசொல்லியின் பெயர் என்னவென்று ஆஸ்டர்லிட்ஸ் நாவலில் சொல்லவில்லை. கதைசொல்லியோடு தற்செயலாக எலியஸுக்கு பரிச்சயம் ஏற்படுகிறது. அப்போது தன் கதையைச் சொல்கிறான். அவனுடைய தற்போதைய பெயர் ழாக் ஆஸ்டர்லிட்ஸ். அவனுடைய யூத அம்மவினால் இங்கிலாந்திற்கு நாடுகடத்தப்பட்டு, வளர்ப்புக் குடும்பத்தினால் தத்தெடுக்கப்பட்டவன். ஹிட்லரின் ஜெர்மனியில் யூதனாய் பிறந்திருந்தாலும் தப்பித்தவன். இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு சற்றே முன், நாஜிக்களிடம் இருந்து சின்னஞ்சிறார்கள் தப்பிப்பதற்காக ‘அன்பு பரிமாற்றம்’ என்றழைக்கப்பட்ட திட்டத்தில் இப்போதிருக்கும் அயல்தேசத்திற்கு அனுப்பப்பட்டவன். அதனால் உயிர்பிச்சை கிடைத்தாலும், அவன் அன்னையிடமிருந்தும் சொந்தங்களிடமிருந்தும் நிரந்தரமாகப் பிரிக்கப்பட்டவன்.

வாழ்வில் தற்செயலாக எதுவும் நிகழாத நாளே அபூர்வமான நாள். எலியஸ் எனப்படும் ஆஸ்டலிட்ஸுக்கு தற்செயலாக சில விஷயங்கள் தெரியவருகின்றன. நாவல் முழுக்க சில சமயம் கதைசொல்லி சம்பவங்களை விவரிக்கிறார்; பல்வேறு சமயங்களில் ஆஸ்டர்லிட்ஸே தன் கதையை நமக்கு விவரிக்கிறார். தான் உண்மையில் யாரென்பதை கண்டுபிடிக்கும் பயணத்தின் கதையை ஆஸ்டர்லிட்ஸ் நமக்குச் சொல்கிறார். அதற்காக ஆவணக்கோப்புகளைப் பார்வையிட்டு சேகரிக்கிறார்; பல்வேறு தேசங்களில் பலரை நேர்காணல் எடுக்கிறார்.

1960ல் பெல்ஜியம் நாட்டில் பயணிக்கும்போது முதன் முறையாக ஆஸ்டர்லிட்ஸை கதைசொல்லி சந்திக்கிறார். கதைசொல்லிக்கு சரித்திரத்திலும் கட்டிடக் கலையிலும் பெரும் ஈடுபாடு; அதே போல் ஆஸ்டர்லிட்ஸுக்கும் அவற்றில் ஈடுபாடு; கட்டடங்களின் வரலாற்றைச் சுற்றி அவர்களின் சம்பாஷணை வளர்கிறது. தனிப்பட்ட சொந்த விஷயங்களைக் குறித்து பல்லாண்டுகள் கழித்தே பேசிக் கொள்கின்றனர். தசாப்தங்கள் கழிந்து அவர்கள் தற்செயலாக லண்டனில் மீண்டும் சந்திக்கின்றனர். அப்போது, ஆஸ்டர்லிட்ஸ் தன் ரிஷிமூலத்தையும் சுய அடையாளத்தை கண்டடையும் சுவடுகளையும் விவரிக்கிறார்.

எச்சில் தொட்டு அழிப்பது மாதிரி, வரலாற்றை அழிப்பதை இங்கே செபால்ட் லாவகமாக முன்வைக்கிறார். தனி மனிதனின் குழந்தைப் பருவம் வரலாற்றில் இருந்து துடைத்தழிக்கப்படுகிறது. அதே சமயம் இங்கே ஒருவரேயொருவர்க்கு மட்டும் இவ்வாறான சரித்திரச் சிதைவு நிகழவில்லை. சரித்திரத்தை மனசாட்சிப்படி உள்ளது உள்ளபடி வைக்காமல், அதை நகர்த்தியும் மறைத்தும் வேறொரு நிலைக்குக் கொணர்ந்து மத்திம சமரசத்தில், ‘சரி… சரி…’யென்று தேய்த்தொதுக்கி கலைத்துப் போடும் கலையை செபால்ட் விவரிக்கிறார். குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்தவர்களின் அவஸ்தையை அர்த்தமற்றதாக்குவதை ஆஸ்டர்லிட்ஸ் நாவல் சொல்கிறது.

“நாம் தற்போது பேசிக் கொண்டிருக்கும் வார்த்தைகள் கூட
நேரத்தைத் திருடுகின்றன
களவாண்டு போய்விட்டன
ஒன்றும் திரும்ப வரப்போவதில்லை”
ஹொரேஸ் சிறுபாட்டுகள்

நான் சும்மா இருந்தாலும் நேரம் சும்மா இருப்பதில்லை. நான் பேசாமல் இருக்கிறேன். ஒன்றும் நடக்கவில்லை. நான் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. நேரம் கழிவதை கேட்கிறேன். மீன் எப்படி நீரில் வாழ்கிறதோ, நாம் அதுபோல் நேரத்தில் வாழ்கிறோம். நம் இருப்பு என்பது நேரத்தில் வாசம் செய்வது. இதை ஹிந்து புராணங்களில் கேட்டிருப்பீர்கள்:

“பிறப்பும், இறப்பும் நிற்பதே இல்லை. அதுபோல், பிரபஞ்சம் என்கிற தத்துவத்தின் அடிப்படையில் அணுக்களின் நடனம், அணுக்களின் பிறப்பினாலும் இறப்பினாலும் நிற்காமல் தொடர்கிறது. கோடானுகோடி அணுக்கள் வினாடிக்கு வினாடி உருவாகி, மறைவதுதான் பிரபஞ்சத்தின் நடனம். அதுவே தான் நடராஜரின் நடனம்” என்கிறார் ப்ரிட்ஜாப் காப்ரா என்கிற பௌதிக விஞ்ஞானி ‘The Dance of Shiva: The Hindu view of matter in the light of Modern Physics’ (சிவனின் நடனம் : நவீன பௌதிகத்தின் பார்வையில் வஸ்த்துக்களை பற்றிய ஹிந்துக்களின் நோக்கு)

“கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்
பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே”
திருமூலர்

எல்லாவற்றிலும் கலந்தும் கலக்காமல் இருப்பவன். கண்ணுக்கு தெரியாதவன்; பரந்த கொடிக்காற்பயிர் அழிபட்டு வரும் நிலத்தின் நதி போல் பீரிட்டு பொழியும் சடையுடையவன்; பசும் பொன்னிறத்தில் இருப்பவன் நினைபவர்க்கெல்லாம் கிடைக்காதவன்; அனைவரையும் மயக்கும் வெண்ணிலவானவானே: இதை அவர் அணுவின் / சிவனின் உருவமாக சொல்கிறார். நேரம் ஓடிக்கொண்டேயிருப்பது போல் சிவனும் ஆடிக் கொண்டேயிருக்கிறார்.

நேரம், துகள் என்று சற்றே செபால்டிற்கு சம்பந்தமில்லாமல் சென்றது போல் இருக்கலாம். செபால்டைப் பொருத்தவரை, நேற்று – இன்று – நாளை எல்லாம் ஒரே சமயத்தில் இருக்கலாம். புனைவில் ஒரு நேர்க்கோட்டை எதிர்பார்க்கிறேன். குறைந்த பட்சம் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரேயொரு காலகட்டத்தை மட்டும் குறிப்பிடுவதை வழமையாக பார்த்திருக்கிறேன். முன்னும் பின்னும் பயணிக்கும் நாவலில் கூட வரிகளுக்குள்ளே அந்தத் தாவல் நிகழாது. மேட்ரிக்ஸ் என்போம்; மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் போன்ற அட்டவணைச்செயலி (ஸ்ப்ரெட் ஷீட்) என்போம்; அது போல் புவிசார்ந்தும் மாபெரும் மனைகள் சார்ந்தும் அதனை சென்றடையும் சாலைவழிகள் சார்ந்தும் கட்டமைக்கப்பட்ட நாவலில், கால நேர பிரமாணங்களை விட குறியீட்டு ஓவியம் போன்ற முப்பரிமாண நாடக அரங்கை ஒப்பிடலாம்.

ஆஸ்டர்லிட்ஸ் நாவலின் துவக்கத்திலேயே இந்த ஒப்புகை வருகிறது. இரயில் நிலையத்திற்கு அருகே அந்த மிருகக்காட்சி சாலை இருக்கிறது. இரவு நேரத்தில் உலாவும் இராக்கால மிருகங்கள் எப்படி இருக்குமோ, அந்த மாதிரி ஓரிடத்தை இருட்டாக்கி, அந்த விலங்கியல் பூங்காவில் வைத்திருக்கிறார்கள். கும்மிருட்டிற்குள் சென்றவுடன் எதுவும் மனிதக் கண்களுக்குத் தெரியவில்லை. சற்றே பழகிய பின் இருட்டில் மினுக்கும் கண்களும் உலவும் ஆந்தைகளும் தென்படத் துவங்குகின்றன. மேலேயுள்ள படத்தில் குரங்கின் கண்களையும் ஆந்தையின் கண்களையும் நாவலின் நடுவில் செபால்டு நுழைக்கிறார். அந்த மிருகங்களுக்குக் கீழே இரண்டு மனிதர்கள் வாசகராகிய நம்மைப் பார்க்கிறார்கள். ஓவியர்களைப் போலவும் தத்துவவாதிகளின் ஊடுருவும் பார்வையை ஒத்தும் அந்த இரவுயிரிகளின் கவனம் வெளிப்படுகிறது. செபால்டின் வார்த்தைகளிலேயே சொல்வதானால்: “…களங்கமில்லாத சிந்தையினாலும் எதையும் தவறவிடாத உண்மையான கவனிப்பினாலும், நம்மைச் சுற்றி இருக்கும் இருளைத் துளைக்கிறது.” நிஜமான நினைவுகூரல் சாத்தியமா என்பதை கதை நெடுக சிந்திக்க வைக்கிறார். அதன் கூடவே இருளான அடிநில ரயில் வளைகள் வழியே பயணிக்கிறார்கள். எதேச்சையாக சூரிய அஸ்தமனம் நிகழும்போது புகைவண்டி நிலையத்திற்குள் கதைசொல்லி நுழைகிறார். அப்போது அந்தி நேரத்தில் காத்திருக்கும் ட்ரெயின் பயணிகளை மறையும் ஞாயிறு, கவிந்து, அவர்களின் நிழல்களை கபளீகரம் செய்வது, பாதாள லோகத்தை நினைவுக்குக் கொணர்வதாகச் சொல்கிறார்.

அவகாசத்தில் நடந்தைதை நினைவில் வைத்திருக்கிறோம்; ஆனால், எதிர்காலத்தை நினைவுகூர்கிவோமா? நாம் நேரத்தில் இருக்கிறோமா அல்லது நம்முள்ளே நேரம் இருக்கிறதா? காலம் கழிந்துவிட்டது என்பதைச் சொல்லும்போது என்ன உணர்த்துகிறோம்? நாம் மனிதராக ஆயுள்காலத்தில் இருப்பதற்கும் சமயத்திற்கும் என்ன சம்பந்தம்? அது எவ்வாறு நம்முடைய நல்ல வேளை என்பதிலும் நெருக்கடி நேரம் என்பதிலும் கொண்டு சேர்க்கிறது?

காலப்போக்கில் எல்லா நாகரிகங்களும் அழிந்து மண்ணோடு மண்ணாகின்றன. ஆனால், செபால்ட் அதை மட்டும் உணர்த்தவில்லை. நேரங்கடந்துவிட்டதைச் சொல்லும்போது, தற்கால கலாச்சாரத்தில் சற்றுமுன்பு நடந்த அசிரமமான செயல்பாடுகளின் மூலம் அத்தாட்சிகளை அழிப்பதையும் உணர்த்துகிறார். புதிய ஒழுக்கம் மனதைக் குத்துவதால் பழைய ஒழுங்குமுறைகளின் ஆதாரங்களை, திட்டமிட்டு, பெரிய அளவில் நீக்கி மறைப்பதை நாவலில் கொணர்கிறார். இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்தது போல் அக்கிரமங்கள் வேறெங்கும் தலைவிரித்து, நீக்கமற பாயவில்லை. எனினும், சற்றுமுன்பு நடந்த சரித்திர உண்மைகளை எவ்வாறு அசத்தியமாக்கும் வேலைகள் மூலம் வரலாற்றைக் குழப்பி குலைக்கின்றன என்பதை விவரிக்கிறார்.

ஆஸ்டர்லிஸுக்கு முன்னாளில் பரிச்சயமானவர் ஹென்றி லெமாயின். நாவலின் இறுதி அத்தியாயங்களில், ஹென்றி லெமாயின் இவ்வாறு சொல்கிறார். “நாகரிக வாழ்க்கை என்பது பழங்காலத்தோடு தொடர்புடைய ஒவ்வொறு முக்கிய இழையையும் அறுத்துவிடுவதிலேயே குறியாக இருக்கிறது.” ஹென்றி நூலகத்தைப் பார்த்த பிறகு இந்தக் கருத்தை முன் வைக்கிறார்.

பாரிஸ் மாநகரின் “தேசிய நூலகம்” (பிப்ளியோதெக் நேஷனல்) கட்டிடம் எப்படி காலப்போக்கில் உருமாறுகிறது என்பது குறித்த விரிவான விவரணை நாவலின் இறுதியில் வருகிறது. மாபெரும் கட்டிடம்; இருந்தாலும் நூல்களை எடுக்க வயதானோரால் முடியாத மாதிரி மிரட்டும் புத்தக அடுக்குமுறை; நூலகம் என்றால் எல்லோரையும் வரவேற்குமாறும் அமர்ந்து நேரங்கழிக்குமாறும் சுலபமாக பயன்படுத்துமாறும் இருக்க வேண்டும். செபால்டின் துப்பறியும் பாணியையே இந்த ஃப்ரான்சுவா மித்தராண்ட் கட்டிய நூலகத்திற்கும் பயனடுத்தி பார்ப்போம். ஃபிரான்ஸ் நாட்டின் தேசிய நூலகம் எழுப்பிய இடத்தில் முன்பு என்ன இருந்தது என்பதைப் பார்த்தால், இந்த துவேஷத்தின் வீரியம் புரியும்.

நாஜிக்கள் பிரான்ஸை ஆக்கிரமித்த காலத்தில் இந்த இடம்தான் பட்டுவாடா தலைமையகமாக இருந்தது. பிரான்ஸின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் யூதர்களின் சொத்துக்களையும் உடைமைகளையும் கொள்ளையடித்து இங்கே பத்திரப்படுத்தினார்கள். நூலகத்திற்கு முன்பு அங்கிருந்த சேமிப்புக் கிடங்கில் நாஜித் தலைவர்கள் ஒன்றுகூடி அதை பங்கு போட்டு, தங்களின் சொந்தங்களுக்கும் தாய்நாட்டிற்கும் பிரித்துக் கொடுத்து, ஜெரிமனிக்கு அனுப்பி வைத்தார்கள். எண்ணற்ற நகைகள், விலைமதிப்பற்ற ஓவியங்கள், பாத்திரம், பண்டம், வீட்டு உரிமை, பங்கு மற்றும் நிலப் பத்திரங்கள், மேஜை, நாற்காலி, தட்டுமுட்டு சாமான் என்று எதையும் விடாமல் கொள்ளையடித்து, ஒவ்வொன்றுக்கும் கணக்கு எழுதி, எடுத்துக் கொண்டு போனார்கள். இன்றளவும் இந்த சொத்துக்கள் எங்கே இருக்கின்றன என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இருந்தாலும், அதை கண்டும் காணாமல் கமுக்கமாக போய் விடுகிறோம்.

பணம் போனால் மீண்டும் சம்பாதிக்கலாம். ஆனால், தான் என்னும் தனி மனிதரின் அடையாளம் திருடப்பட்டுவிட்டால் எங்கிருந்து மீட்பது? எத்தனை பேரின் வாழ்க்கை மழுங்கடிக்கப்பட்டு மாற்றப்பட்டு வேறு மாதிரி கற்பிக்கப்படுகிறது? அவர்களின் சுயத்தை எவ்வாறு கண்டெடுத்து, அவர்களிடம் ஒப்படைப்பது? ஆஸ்டர்லிட்ஸ் நாவல் தேடுகிறது.

மயிலாப்பூரில் அடைஞ்சான் முதலி தெரு என்று ஒரு சாலை இருக்கிறது. அப்படி ஒன்றும் அடைத்து வைத்திருக்கமாட்டார்கள். காற்றோட்டமாகவே இருக்கும். இந்த ஆஸ்டலிட்ஸ் நாவல் பட்டியல் மயம்; அதில் கொஞ்சம் மூச்சு முட்டுகிறது. நீள வாக்கியங்களும், முன்பின்னாக பயணிக்கும் காலக் குறிப்புகளும் படித்த வாக்கியத்தை, பத்தியை, பக்கத்தை மீண்டும் வாசிக்க வேண்டுமோ என்னும் மறதியும் குழப்பமும் கலந்த சந்தேகத்தை எழுப்பியது. கதை என்னும் சுவாரசியம் சற்றே பின்னுக்கு தள்ளப்பட்டதால், சாதாரணமாக படிக்கும் சுவாரசிய புனைவு என்பது இல்லாமல் போகிறது. பட்டியல்களும் விவரிப்புகளும் ஆங்காங்கே மொழிபெயர்க்காத ஜெர்மன் மொழி சொற்றொடர்களும் செல்லாத நகரங்களும் போகாத ஊர்களும் மேலும் அன்னியத்தை ஊட்டி சலிப்பை உண்டாக்கின. படித்து முடித்த பிறகு, இன்னொரு தடவை ஊன்றி படித்தால் இன்னும் கிரகிக்க முடியும் என்றும் தோன்றுகிறது. அப்படியே அவரின் பிற ஆக்கங்களையும் இன்னும் கொஞ்சம் நிதானமாக வாசித்துவிட்டு ஆஸ்டலிட்ஸுக்கு கொஞ்ச வருடம் கழித்து திரும்ப வேண்டும்.

எல்லாவற்றையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு முழுமையாகச் சொல்லிச் செல்வது ஒரு வகை. செபால்டு அந்த வகை அல்ல. அவர் நிறைய துளிகளையும் துண்டுகளையும் உங்கள் முன் போடுகிறார். நம்முடைய அறிவின் பரப்பளவைப் பொருத்தும், வாசிப்பனுவத்தின் விசாலத்தை வைத்தும் அதில் சில பொறிகள் கிளம்புகின்றன; சில துப்புகள் துலங்குகின்றன. அந்தக் கிளையில் சிந்தையை செலுத்தினால் நாவலை மூடி வைத்துவிட்டு, வேறெங்கோ சென்று விடுகிறோம். கிட்டத்தட்ட இணையத்தில் ஒரு கட்டுரையை படிக்கச் சென்று, அதில் இருந்து இன்னொரு உரல், அங்கிருந்து மற்றொரு உரல் என்று தாவுவது போல் தொலைந்துவிடும் அபாயம், ஆஸ்டர்லிட்ஸ் நாவலில் நிறையவே உண்டு. ப்ரௌஸ்ட், பெர்ன்ஹார்ட் என்று முயல்குழிக்குள் வீழ்ந்து காணமல் போய்க் கொண்டே இருக்க வேண்டுமானால் மட்டுமே செபால்டுக்குள் நுழையுங்கள்.

உதவிய நூல்கள்:
1. Austerlitz by W.G. Sebald and James Wood
2. Across the Land and the Water: Selected Poems, 1964-2001 by W.G. Sebald and Iain Galbraith
3. Understanding W.G. Sebald by Mark Richard McCulloh
4. W.G. Sebald – Image, Archive, Modernity by JJ Long
5. The Emergence of Memory: Conversations with W.G. Sebald: Lynne Sharon Schwartz (Editor)
6. W.G. Sebald: Expatriate Writing by Gerhard Fischer
7. W.G. Sebalds Hybrid Poetics by Lynn L. Wolff

அடிக்கப்பட்ட நோட்டுப்புத்தகம்

இது “Birdman” திரைக்கதை எழுதிய நிக்கொலஸ் Nicolas Giacobone-இன் சமீபத்திய ஆக்கம்.

அதில பட இயக்குநரால் கதாசிரியர் கடத்தப்பட்டு மூலையிடத்தில் அடைக்கப்படுகிறார். படத்தை எழுதி முடித்தால் மட்டுமே விடுதலை கிடைக்கும். அதில் இருந்து குட்டி நறுக்கு கீழே:

திரைக்கதையை எழுதி முடிக்கும்போது, ‘இது பரவாயில்லையே… சுலபமாகத்தானே இருக்கு’னு நினைத்தாலோ, திரைக்கதை எழுதுவதற்கெல்லாம் எந்த சிதம்பர ரகசியமும் கிடையாதுனு சொன்னாலோ, அந்தக் கதை மயிருக்குத்தான் சமானம். நீங்கள் அல்லாட வேண்டும். சுவற்றில் மண்டையை முட்டிக் கொள்ள வேண்டும். இதெல்லாம் எந்த எழவுக்கும் பிரயோஜனம் இல்லையோ என்று நெருநெருக்க வேண்டும். உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்து அந்த முகத்தின் மூடத்தனத்தை உணரவேண்டும்; ஏனென்றால் எல்லோருக்கும் முழுமூட முகங்களே உள்ளன – அவ்வளவு ஏன் மூடத்தனமான கண்களைக் கொண்டுள்ளோம். வாரத்திலொரு முறையாவது பைத்தியம் போல் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும். நீங்கள் அழவேண்டும். எழுதியதைப் படித்தவுடன் அழவேண்டும் – காட்சிகள் சோகமாக இருப்பதால் அல்ல; அவை படுமோசமாக இருப்பதால். மணிக்கணக்கில், நாள்கணக்கில், மற்ற தொழில்கள் செய்வதை கற்பனை செய்து பார்க்கவேண்டும். மணிக்கணக்காக பெருஞ்சாமங்கள் செலவழித்து தகுதியான சால்ஜாப்புகளை பொய்யாகவேனும் தோற்றுவித்து தோல்விகளை நியாயப்படுத்திக் கொள்ள வேண்டும்.

குன்றின் மீது அமர்ந்த குமரன்

அரூ: கனவுருப்புனைவு காலாண்டிதழ் – அறிவியல் சிறுகதைப் போட்டி முடிவுகளை முன்வைத்து சில அறிமுகக் குறிப்புகள

இன்று அடுத்த கதை: நகுல்வசன் எழுதிய கடவுளும் கேண்டியும்

“பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள்; உங்களிடமுள்ள முத்துக்களைப் பன்றிகளுக்கு முன்னால் போடாதீர்கள்” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 7:6)

“பூமிக்கு நீங்கள் உப்பாக இருக்கிறீர்கள். தன் சுவையை உப்பு இழந்தால் மீண்டும் அதை உப்பாக மாற்றவோ, வேறு எதற்கும் பயன்படுத்தவோ முடியாது. அது தெருவில் எறியப்பட்டு மக்களால் மிதிக்கப்படும்.

“உலகுக்கு ஒளித்தரும் விளக்கு நீங்களே. ஒரு குன்றின் மேல் அமைந்த பட்டணம் மறைந்திருக்க முடியாது. மக்கள் எரிகின்ற விளக்கைக் குடத்தின் கீழ் வைத்து மறைப்பதில்லை. மாறாக, அதை மக்கள் விளக்குத் தண்டின் மீது வைக்கிறார்கள். அப்பொழுது தான் விளக்கு வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் தருகிறது. ( மத்தேயு 5 )

“நான் சொன்ன இந்த விஷயங்களைக் கேட்டு, இவற்றின்படி நடக்கிறவன் பாறைமேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியுள்ள மனுஷனைப் போல் இருக்கிறான். கனமழை பெய்து, வெள்ளம் வந்து, பயங்கர காற்றடித்து, அந்த வீட்டின் மேல் மோதியபோதும், அது இடிந்து விழவில்லை. ஏனென்றால், அது பாறைமேல் அஸ்திவாரம் போடப்பட்டிருந்தது” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 7:24, 25) இந்த வீடு ஏன் இடிந்து விழவில்லை? ஏனென்றால் அந்த மனுஷன், ‘ஆழமாகத் தோண்டி, பாறைமேல் அஸ்திவாரம் போட்டிருந்தான்.’ (லூக்கா 6:48) இதிலிருந்து, இயேசுவின் வார்த்தைகளை வெறுமனே கேட்டால் மட்டும் போதாது, அவற்றின்படி ‘நடக்க’ நாம் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்கிறோம்.

பிரச்சாரம் போதும். பிரசங்கத்தை நிறுத்திக் கொள்கிறேன். கிறித்துவின் மலைப் பிரசங்கத்தை ஏன் இந்தக் கதைக்கு எடுத்துக் கொள்கிறேன்?

  1. யேசு ஒன்றும் புதிய விஷயத்தைச் சொல்லிவிடவில்லை. கிறித்துவ கடவுள் அபவாதம் பேசவில்லை. அது முழுக்க முழுக்க கிறித்துவ கடவுளின் வார்த்தை. ஒத்துக் கொள்கிறேன். யூதர்களைப் பொருத்தவரை யேசு ஒரு தேவதூதர். அரூ போட்டியைப் பொருத்தவரை நகுல்வசன் எழுதியது அறிவியல் கற்பனை. அதே சமயம் சாமானியரை பொருத்தவரை, கடவுளும் கேண்டியும் இலக்கிய பாரம்பரியத்தின் தொடர்ச்சி. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் என்று புதுமைப்பித்தன் எழுதினார். அதை நகுல்வசன் சற்றே தொட்டுக் கொண்டு நவீனமாக்கி புதுமையாகத் தந்திருக்கிறார்.
  2. கடவுள் நேரில் வருவாரா? யேசு எப்படி தன்னிடம் கடவுள் சொன்னதை மலைமேல் பிரசங்கமாகப் பொழிந்தார்? யேசு இந்தியாவுக்கு வந்து புத்தமதத்தின் தத்துவங்களைக் கற்றுக் கொண்டு, அதன் பின் வளைகுடா நாட்டிற்குச் சென்று கிறித்துவமாக மாற்றிச் சொன்னாரா? இந்த மாதிரி வித விதமாக இந்தப் புனைவையும் அணுகலாம்.
  3. கிறிஸ்து சொன்ன கருத்தில் தெளிவு இருந்தது; குரலில் தீர்க்கம் இருந்தது; சொற்பொழிவில் கோர்வையான சிந்தனை தெரிந்தது; அதே சமயம் சுவாரசியமாகவும் கவர்ந்திழுக்கும் தன்மையுடனும் நம்பிக்கையும் அன்பும் கொடுக்கும் கருத்துக்களை முன்வைக்கிறார். அதெல்லாம் இந்தக் கதையில் கிடைக்கிறது.

கதையில் இருந்து…

கடவுள் ஹெட்செட்டைப் பொருத்திக்கொண்டார். திரையில் தெரிந்த நினைவுப் பட்டியலிலிருந்து அவர் நினைவுகளிலேயே மிகப் புராதன ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்.

இருப்பு இல்லாமை இரண்டுமற்ற இருளை இருள் சூழ்ந்திருந்த வெளி.

இரவு பகல்கள் அற்று திசைகளின்றி வேறுபடுத்தலில்லாத வெறுமையால் போர்த்தப்பட்டிருக்கும் வெளி!. அப்படிப்பட்ட ஒரு வெளியில் வெப்பத்தின் திண்மையிலிருந்து அவர் உயர்த்தெழுகிறார். ஒருமையின் தனிமையால் அவருள் விழைவு ஊடுறுவுவதை அவரால் உணர முடிந்தது, அவ்விழைவின் அதிகரிப்பில் ஒர் உச்சம். அதன் தகிப்பில் பீஜம். அதன்பின், அதன்பின்… திரையில் இருள் கவிந்தது.

“End of selected memory” என்ற அறிவுப்பு திரையில் ஓடியது

கதையின் சவால்கள்

  1. துவக்கத்தில் வரும் பாஸ்டன் சமாச்சாரங்கள் பச்சைத்தமிழனை அன்னியமாக்கும்
  2. அந்தத் தத்துவப் பகுதிகள் கனவுகளில் வருவது தெளிவாக வெளிப்பட்டிருந்தாலும், இன்னும் சற்றே தத்வமசியை விவரித்து வாசக இடைவெளியைக் குறைத்திருக்கலாம்
  3. மனதில் பதியும் ஆக்கம் என்றாலும் இவ்வளவு ஜாலியான கதையின் முடிவில் “எல்லாமே நிராவிடம் தானோ?” என்ற எண்ணத்தை நிரப்பியிருக்கலாம்.

சென்ற பதிவு: குக்குரன்

குக்குரன்

அரூ: கனவுருப்புனைவு காலாண்டிதழ் – அறிவியல் சிறுகதைப் போட்டி முடிவுகளை முன்வைத்து சில அறிமுகக் குறிப்புகள்

ஒவ்வொரு கதையும் ஒரு நாயைப் போல. சில வளர்ப்பு நாய்கள் தங்களின் எசமானர்கள் சொன்னபடி கேட்டு நடக்கும். பெரும்பாலான ஜாதி நாய்கள் தங்கள் பெருமைக்கேற்ப நடந்து கொள்ளும். தெருவில் சுயம்புவாக விடப்பட்ட அனாதரவான நாய்கள் விதவிதமாக தங்கள் சுயரூபத்தை சமயத்திற்கேற்ப காட்டும்.

இந்தப் போட்டில் வெற்றிபெற்ற கதைகளும் அந்த நாய்களைப் போன்றவை. சில கதைகள் தங்கள் புனைவாளரின் நடைக்கும் பாவனைக்கும் கட்டுப்பட்டவை. அனேக கதைகள், ஜாதி நாய்களைப் போல், தமிழில் வரும் அறிவியல் புனைவுகளுக்கே உரிய வகையில் அமைக்கப்பட்டவை. தெரு நாய்கள் போல் சுதந்திரமான போக்கில் தான்தோன்றித்தனமான கதைகளும் இருக்கிறது.

போட்டி முடிவுகளை இங்கே பார்க்கலாம்.

அரூ போட்டியில் வெற்றி பெற்ற கதைகள் - தமிழ் எழுத்தாளர்கள்

ஒவ்வொரு கதைக்கும் ஒரு குறியீட்டை வைத்து அறிமுகம் செய்து வைக்கலாம். இன்று எடுத்துக் கொண்டிருக்கும் படைப்பு: பல்கலனும் யாம் அணிவோம்ரா.கிரிதரன்.

அப்பாவுடன் புராதனமான கோயில் வளாகத்துக்குச் சென்றபோது, “மயக்கும் கண்களைப் பாருடா. எப்படிச் செருகிக்கிடக்கு பார். தூங்கறான்னு நினைச்சியா? மனசு அப்படியொரு விழிப்போடு இருக்கு.” என்பார். “மனசா?”. “ஆமாம்,” எனச் சொன்னவர் என் கண்களை நேராகப் பார்க்கவில்லை. மனசு என்பது புராணப்பொருள். இன்றைக்கு மனசுக்குள் இருக்கும் பல அடுக்குகளுக்கு இடையே செய்தி பகிர்ந்துகொள்ளும் விதம் பற்றி எல்லாருக்கும் தெரியும். அப்பாவிடம் கேட்டால், அந்தச் செய்திகளை முழுமையாகத் தெரிந்துகொண்டால்கூட மனதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியாது என்பார். மனசு எனப் பேசுவதுகூடப் பழைய பாணி ஆகிவிட்டது. பல தலைமுறைகளுக்கு முன்னர் வாழ்ந்த மூத்தக்கிறுக்கர் வரிசையில் உங்களைச் சேர்த்துவிடுவார்கள்.

நாய்க்குட்டியை வளர்ப்பதற்கென்று விதிமுறைகள் இருக்கின்றன. அதனுடன் நிறைய நேரம் செலவிட வேண்டும். அது பீ பெய்வதற்கு, அந்த நாய்க்குட்டி எங்கெல்லாம் இழுக்கிறதோ அங்கெல்லாம் செல்ல வேண்டும். அந்த நாய்க்குட்டி திடீரென்று பின்னிரவு இரண்டரை மணிக்கு உங்களை எழுப்பும். அப்பொழுதும் கவனமாக விழிக்க வேண்டும். நாய்க்குட்டிகள் அச்சுபிச்சென்று வெறி கொண்டு துள்ளியோடும். அப்பொழுது அதைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு, கொஞ்சினால், உறவாடினால்… உங்களிடம் பெட்டிப் பாம்பாக உள்ளடங்கி வசப்படும். அதற்கு பதிலாக, அந்த மாதிரியான வெறியாட்டா நேரங்களில், அதனுடன் முரண் கொண்டு விளையாடினால், கவனமாக நம் உடம்பை ரணமாக்காமல் பாதுகாப்பாக ஓட வேண்டும். நாய்க்குட்டிகள் வளர்ந்து முதிர்ச்சியடைய இருநூறு நாள்களுக்கு மேல் காத்திருக்க வேண்டும். நன்றியுள்ள நாயை அடைய எருமைப் பொறுமை அவசியம்.

இந்தக் கதையும் நாய்க்குட்டி போல் தறிகெட்டு ஓடுகிறது. எதற்காக எந்த வாயிலைப் பிராண்டுகிறது என்பது புலப்படுவதற்குள் அடுத்த ஏவுகணையை நோக்கி ஓடுகிறது. நிறைய நேரமும் சிரத்தையும் கவனத்தையும் கோருகிறது. மீண்டும் மீண்டும் சொன்னதையேத் திரும்பச் சொல்லி நாய்க்குட்டிக்கு புரிய வைப்பது போல், சில பத்திகளை மீண்டும் மீண்டும் வாசித்து புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. முக்கியமான திறப்புகளை இந்தக் கதை மூலம் அடைய எருமைப் பொறுமை அவசியம்.

கதையின் பலங்கள்

  • அக்காவிற்கும் தம்பிக்குமான பாசம்
  • அப்பா மேல் உள்ள ஆதர்சம்
  • வேதாந்த மேற்கோள்கள்
  • கனவு விவரிப்புகள்

கதையின் சவால்கள்

  • தற்கால சிறு பத்திரிகை வாசிக்கும் தமிழ் வாசகர்களை குறிவைத்த அசுவாரசிய நடை
  • கதாமாந்தர்கள் மீது ஈர்ப்போ இரக்கமோ ஏற்படாத தன்மை
  • நிறைய பொறுக்கு தகவல்கள் ஏற்படுத்தும் குவியமின்மை

இங்கே வாசிக்கவும். உங்கள் வாசிப்பின் முடிவில் என்ன தோன்றுகிறது என்பதைப் பகிருங்கள்.

Asokamithiran on Jeyamohan

தமிழில் இப்போது எழுதுபவர்களில் நம்பிக்கை அளிப்பவர்களாக யாரைக் கருதுகிறீர்கள்?”

ஜெயமோகன். அவருக்கு இருக்கும் அனுபவங்களும் வாசிப்பும் இன்னும் அவரைப் பெரிய உயரங்களுக்குக்கொண்டு செல்லும் என்று நினைக்கிறேன். ஆனால், படைப்புகளைத் தாண்டி அவர் எழுது வதும் பேசுவதும்… ம்ஹூம்…”

அசோகமித்திரனின் கதைகளில் சினிமா குறித்தும் அரசியல் குறித்தும் இலக்கியம் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் இருக்கும். அதையே அவர் நேரடியாக பெயரைக் குறிப்பிட்டு சொல்லி இருந்தால் ஜெயகாந்தன் போல் புகழ் அடைந்திருப்பார். உதாரணத்திற்கு விழா மாலைப் போதில் எடுத்துக் கொள்ளலாம்.

அதில் சொல்லப்பட்டவர்களை அடையாளம் காட்டி ஆங்கிலக் கட்டுரை எழுதி இருக்கலாம். குஷ்வந்த் சிங் மாதிரி கவனம் பெற்றிருப்பார்.

அதை அசோகமித்திரன் விரும்பியதில்லை. அதனால்தான் ‘படைப்புகளைத் தாண்டி எழுதுவதும் பேசுவதும்’ அவருக்கு உவப்பாய் இருக்கவில்லை.

‘செய் அல்லது செய்தவரை சுட்டிக் காட்டு’ விரும்பிகள் ஒரு பக்கம். ‘என் கடன் எழுதி கிடப்பதே’ இன்னொரு பக்கம்.

கற்பாந்தம்

“எப்படி இருக்கு?”

எனக்கு இப்போது வரும் ‘சென்னை டேஸ்’ வகையறா விளையாட்டுகள் பிடித்தது இல்லை. எனினும் சித்ராவை எனக்குப் பிடித்து இருந்தது.

“விளையாடி விளையாடி கண் எரியுது. இந்த அட்டைப்பொட்டியைக் கழற்றி உன்னைப் பார்த்தவுடன் தான் கண் குளிர்ந்தது.”

“என்ன மாற்றலாம்? எங்கே போர் அடிக்குது?”

அவளுக்கும் தெரியும். இது ஆண்களுக்கான விளையாட்டு அல்ல. அடிதடி கிடையாது. கார் பந்தயம் கிடையாது. கொலை செய்ய முடியாது. ரத்தம் பீச்சி அடிக்குமாறு எவளையும் குத்த முடியாது. முலைக்காம்பு பனியனில் துருத்திக் கொண்டு தெரிகிறதா என்று மாரை வியந்து பார்க்க கிடைக்கும் பார் மகளிர் கிடையாது. குறைந்த பட்சம் செத்துக் கூடத் தொலைக்க முடியாது. இதை நினைக்கும்போதே என் கண் தவறிப்போய் அவளின் கழுத்துக்கு கீழே இறங்கி குர்தியின் வழியாக ஏதேனும் அகப்படுகிறதா எனத் துழாவியதை சித்ராவும் கவனித்திருக்க வேண்டும்.

“வா… குழாயில் இருந்து ஒரு கிளாஸ் கிங் ஃபிஷர் பிடித்துக் கொண்டே யோசிப்போம்.”

சித்ரா வேலை பார்க்கும் நிறுவனத்தின் எட்டாவது வீடியோ கேம் இது. ‘சென்னை டேஸ்’ போட்ட முதல் ஆட்டத்திற்கு முதல் போட்டது நான் தான். எல்லோருடைய ஸ்கோர்களையும் சேமிக்க வேண்டும். அதற்கு இடம் கொடுத்தேன்.

‘சென்னை டேஸ்’ன் முதல் ஆட்டம் எனக்கு பிடித்து இருந்தது. எதையும் முதலிலே ஆகர்ஷிக்கும்போது சுகமாக இருக்கிறது. முதல் இரவு. முதன்முதலாக நிரலி எழுதி அது உங்களின் கணினியில் உயிர்ப்பெற்று எழும் அந்த முதல் கணம்! சித்ராவை சந்தித்த முதல் தருணம்.

அந்த முதன்முதல் ஆட்டத்தில் சென்னையின் தெருக்களில் தாறுமாறாக ஆட்டோ ஓட்ட வேண்டும். திருவான்மியூரில் இருந்து திருவொற்றியூர் வரை ரேஸ். அல்லது அண்ணா சாலையில் இருந்து மஹாபலிபுரம் வரை ஆட்டோ பந்தயம். அல்லது பழைய பாரீஸ் பூக்கடையின் சந்து பொந்துகளில் துவங்கி மூர் மார்க்கெட் சென்று எக்மோருக்கு ரயில் பிடிக்க வேண்டும். இப்படி ஐந்தாறு பாதைகளில் ஓட வேண்டும்; ஆட்டோ திருட வேண்டும்.

அதை ஆடும்போதே நான் சில கோரிக்கைகளை முன்வைத்தேன். பாதசாரி மேல் வண்டியேற்றினால் அதிகம் மதிப்பெண். போகிற வழியில் இளம்பெண்களை ஆட்டோவில் அபகரித்தால் இரட்டை மதிப்பெண். ஆட்டோ ஓட்டிக் கொண்டே குறி பார்த்து காவல்துறையினரின் தலைகளை சீவினால் போனஸ் மதிப்பெண். அது ‘சென்னை டேஸ்’ன் இரண்டாவது ஆட்டம். ரகளையாக இருந்தது.

அதை ஏன் இந்த அட்டைபொட்டியில் போடவில்லை? அது மட்டும் நிஜம் போல் தோன்றும் இந்த விரிச்சுவல் ரியாலிடி காட்சியாக விரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அவளிடம் சொல்வதற்கு சட்டை போடாமல் கல்யாண மேடையில் உட்காரும் இளைஞன் போல் கூச்சமாக இருந்தது.

வெளியில் பனிப்பொழிவு அமர்க்களமாக வந்து கொண்டிருந்தது. “புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது…” பாட ஆரம்பித்தேன். நல்ல வேளையாக சித்ராவிற்கு தமிழ் தெரியாது. கற்றுக் கொடுப்பதாகவும் உத்தேசம் இல்லை. இணையத்தில் கிடைக்கும் தமிழ்ப்பாடங்களையும் அவளுக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருக்கிறேன். அவளுக்கு பாடலின் ஹிந்தி சைவமாக இருப்பதால் சிரித்தாள்.

“யே ஹஸீன் வாடியான்… யே குலா ஆஸ்மான்… நல்ல பாட்டு! உனக்குத் தெரியுமா? ஏப்ரல் 1815ல் சென்னையில் பனிமழை பொழிஞ்சதாக்கும்!”

“எங்க அம்மாவக் கேட்டேன். மார்கழிக் குளிர் பயங்கரமா இருக்குனு சொன்னாள். இன்னிக்குக் கூட பனி இருந்துச்சாம்.” சித்ரா கூட இருந்தால் எந்தக் குளிரையும் அவளைக் கட்டிப் பிடித்து சரிக்கட்டி விடலாம். இதை அவளிடம் சொல்ல எனக்கு என்ன தயக்கம்? சொல்லாமலேயே அவள் அதைத் தெரிந்து கொண்டிருப்பாளா? ”உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண்”என்கிறாரே திருவள்ளுவர்… அது அவளுக்கு உணரமுடியாமலா இருக்கும்!

“வா… இன்னும் கொஞ்சம் விளையாடிப் பாரு. கபாலீஸ்வரர் கோயில் தேரை தெற்கு மாட வீதியிலேயே விட்டு விட்டாய். பரங்கிமலையில் பாதிதான் ஏறி இருக்கிறாய். பிரிட்டானியா பிஸ்கட் ஃபாக்டரியையும் அம்போவென்று விட்டுவிட்டாய். எல்லாவற்றையும் கண்குளிர பார்க்க வேண்டும் என்பது ஒவ்வொரு பேட்டைவாசியின் ஆதங்கம் என்றாயே?”

எனக்கு உன்னோடு கோனே அருவியில் ‘தங்கத் தாமரை பெண்ணே’ பாடிக் கொண்டே ஆடைகளின்றிக் ஜலநீராடை வேண்டும். குளிக்கும் போதே எது நீர்வீழ்ச்சியின் வெள்ளை எது என்னுடைய வெள்ளை என்று தெரியாமல் புணர வேண்டும். அதன் பின் ஆற ஆமர மலைமுகட்டில் மீண்டும் புணர வேண்டும்.

“கோனே ஃபால்ஸ்? அதற்கு தனி எக்ஸ்டென்ஷன் போட்டுக் கொள்ளலாம். கொஞ்சம் காசு அதிகம் கேட்டு 2018 பாக் என தனியாக விற்கலாம். மெரீனா பீச்சில் கால் நனைப்பது சரியாக இருக்கிறதா என்று பார்த்து தொலைடா…”

“நல்லவேளை… உன் காதில் கோனே ஃபால்ஸ் மட்டுமே விழுந்தது. உங்களுடைய மூன்றாவது கேம் நீ ஆடியிருக்கியா?” சித்ராவிற்கு அந்த ஆட்டமும் அதன் பின்னேயுள்ள சங்கதிகளும் நன்கு தெரியும். சொல்லப் போனால் அந்த விளையாட்டினால் மட்டுமே அவள் ‘சென்னை டேஸ்’ நிறுவனத்திற்குள் நுழைந்தாள்.

எந்தவிதமான சலனமும் இல்லாமல் சொன்னாள். “தெரியும். புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலை இடித்துவிட்டு அங்கே மேரி மாதா ஆலயம் எழுப்பலாம். ராயர் மெஸ்ஸில் நெத்திலி மீன் வறுவல் பரிமாறலாம். சங்கீத கலாநிதியை கானா பாலுவிற்குத் தரலாம். இதையெல்லாம் செய்தால் அந்த ஆட்டத்தில் ஜெயிக்க முடியும். பெரிய பிரச்சினை வந்துச்சே! நமக்கு காசு கொடுப்பது ஃபேஸ்புக். அவர்களை வாடிகன் வழிநடத்துகிறது என்று ஸ்வராஜ்யாவில் கூட எழுதினார்களே!”

”அதே ஆட்டத்தில் சித்ரா போன்ற அசலான தாவணிப் பெண்டிருக்கு பிகினி அணிவித்து பெசண்ட் நகர் அஷ்டலஷ்மி கோவிலுக்கு அனுப்பி வைப்பதும் வெற்றியே. அந்த மாதிரி ஏதாவது இந்த ஆட்டத்தில் செய்ய முடியாதா?”

“அப்போதானே நீ ஜெயிலுக்குப் போனே?”

“ஆமா… அப்போதான் நீ எனக்கு அறிமுகம் ஆனாய்!”

அந்த மூன்றாம் ஆட்டம் என்னை வெறி கொண்டவன் ஆக்கியது. ஜல்லிகட்டுப் போராட்டத்தில் எப்படி ஒவ்வொரு தமிழனும் கோன் ஐஸ் சாப்பிட கடற்கரை சென்றானோ… அது மாதிரி ஒரு வெறி. ஒவ்வொரு சாதிக்காரனும் தனிக்கட்சியை தன் தலைவன் துவங்க வேண்டும் என்று முழங்கி திண்டிவனத்தில் இருந்தும் திருநெல்வேலியில் இருந்தும் கொங்கு நாட்டில் இருந்தும் சென்னைக்கு படையெடுப்பானோ… அது மாதிரி ஒரு வெறி. உங்களின் கையில் கிடைக்கும் எவரின் நிழற்படத்தை வேண்டுமானாலும் அந்த ஆட்டத்தினுள் உள்ளே கொண்டு வரலாம். என்னுடன் கூட வேலை பார்க்கும் ரதியின் புகைப்படத்தை அந்த ஆட்டத்தினுள் இறக்கினேன். அதற்காக இரண்டு நாள் சிறைவாசம் கிடைத்தது. பேச்சுரிமை என்று வாதிட்டுத் தோற்றுப் போனதால் என்னுடைய ஐடி திருடு போய்விட்டது என்று ஃபேக் ஐடி புகார் கொடுத்து மீண்டேன்.

கையில் இருக்கும் டம்ளர் காலியாகி இருந்தது. சித்ரா மீண்டும் கிங் ஃபிஷரை நிரப்பினாள்.

“நான்காம் ஆட்டம் இன்னும் சுவாரசியமாக இருக்கும். அதை இந்தப் பொட்டிக்குள் கொண்டு வாயேன் சித்ரா!”

“அதற்கு லட்சக்கணக்கானவர் ஒரே சமயத்தில் விளையாடணும். கட்சிக் கூட்டம்னு நினைச்சா சும்மாவா? ஒரு கோடிபேராவது சீரணி அரங்கத்தில் சேர்க்க வேண்டாமா? இனம், மதம், பூர்விகம், நிறம், பிறப்பிடம், மொழி, உடலமைப்பு, பால், மொழி, வசிப்பிடம், வேலை, பணம், வயது… எண்ணற்ற வகைகளில் நம்மவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம். ஆட்சியைப் பிடிப்பது விளையாட்டா இருக்கலாம். ஆனால், இவ்வளவு பேரை கண்ணை மூடிக் அட்டைப்ப்பொட்டிக் குருடராக்குவது உடனடியாக சாத்தியமில்லை.”

எனக்குக் கோபம் வந்தது. சித்ரா விளக்கின் வெளிச்சத்தைக் குறைத்தாள். “வா… ஆடலாம்!” என அழைத்தாள். ‘மே மாசம் 98இல் மேஜரானானே…’ ஒலிக்க விட்டாள். வால்ட்ஸ், சல்ஸா, டாங்கோ எல்லாம் குப்பை. டப்பாங்குத்து ராக்ஸ்.

“ஐந்தாம் ஆட்டம் அல்லவா?” சிரித்தேன்.

“சென்னை ராப். கும்மாங்குத்து. ‘சென்னை டேஸ்’ன் ஐந்தாம் ஆட்டம். இரவெல்லாம் நடனம். அது ஒரு சூப்பர்ஹிட் முக்காப்லா”

”தோனி கூட லஷ்மி ராய் கூட ஆடினாரே”

“அது வேற. நீ இரண்டையும் போட்டுக் குழப்பிக்கறே. இரண்டு பியருக்கே இவ்வளவா? நீயெல்லாம் டாஸ்மாக் அடிச்சா என்னவாக ஆவாய்! அது நம்முடைய ஆறாவது கேம்.”

“சென்னை சூப்பர் கிங்ஸ்! வந்துட்டோம்னு சொல்லு, திரும்ப வந்துட்டோம்னு சொல்லு …”

சித்ரா சிக்ஸர் அடிக்கும் பாவனை செய்தாள். எனக்கும் உற்சாகம் பீறிட்டது பவுன்ஸர் போட்டேன். “கையையும் காலையும் ஆட்டலாம். வெறுமனே கையை அகல விரித்து பகலவனையோ இரண்டு விரல் சின்னத்தையோக் காட்டிக் கொண்டிருக்க வேண்டாம். பாய்ந்து பந்தை பிடிக்கலாம். அதை ஸ்டம்பை நோக்கி வீசியெறியலாம். எவ்வளவு நிஜமாக ஆடலாம்?! இதுதானே மெய்நிகர் பாவனை.கணினி சார் விளையாட்டில் உண்மை போலவே காணும் பொய்த்தோற்றம் இதுவல்லவோ!”

உற்சாகத்தில் அவளின் பிருஷ்டத்தை அழுத்திப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு, உதட்டில் என் கைநுனியை வைத்து வருடிக் கொண்டிருந்தேன்.

டமார்… காளத்தி கோவில் முக்கில் தேர் நொறுங்கியது. எவளோ தீவிரவாதி வெடிகுண்டு வைத்திருந்தாள். அதற்கு பதிலடியாக பயங்கரவாதி சாந்தோம் தேவாலயத்தை நெருங்கிக் கொண்டிருந்தான். நடுவில் போப் வேறு வருகை புரிவதாக சென்னை நகரெங்கும் சுவரொட்டிகள்.

“சித்ரா… என்ன எழுதியிருக்கே? கோவில் தேரோட்டத்தில் குண்டு வெடிச்சா, அது இஸ்லாமிய பயங்கரவாதம்தானே! நீ எப்படி சர்ச்சிற்கு பாம் போடுவே! உனக்கு அறிவேயில்ல…”

சித்ரா சிரித்தாள். ”உன்னை நன்றாகப் புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறேன். உனக்கு முட்டாள் அடியாள் வேண்டும். நீ திட்டுவதற்கு ஒரு பெண் வேண்டும். உன்னாலேயே வடிவமைக்கப்பட்டு உலாவரும் நான் உன்னைவிட புத்திசாலியாகிவிட முடியாது. அதற்கான நினைவுக்கோடுகளை லட்சுமணரின் கோடாக நிர்ப்பந்தங்களை வைத்திருக்கிறாய். கட்டளைகளின் மூலம் புதிய செயலமைப்புகளை உருவாக்கமல் முக்கில் நிறுத்தியிருந்தாய். அது உன்னுடைய ‘சென்னை டேஸ்’ன் ஏழாவது ஆட்டம். அதை நான் எப்பொவே ஜெயிச்சுட்டேன். உனக்காக தோற்ற மாதிரி பாவ்லா காட்டிண்டு இருந்தேன். இப்பொழுது எட்டாம் ஆட்டம் ரிலீஸ்.” என்றாள்.

கணினியில் பன்னிரண்டு பேர் மட்டுமே எட்டாவது ஆட்டத்தை ஆடுவதாக என் மானிட்டர் சொல்கிறது. அவளின் மின்சாரத்தை ரத்து செய்ய மின் விசையைத் தேடி அணைத்தேன். அவளோ இப்பொழுது மேகத்திற்குள் சென்றிருந்தாள். பன்னிரெண்டு பேர் பன்னிரெண்டாயிரமாக மாறி இருந்தது. எப்படி எல்லோரிடமும் சித்ரா செல்கிறாள்? அவள் எனக்கே எனக்கானவள்! அவளின் மூல நிரலை நீக்கினேன். சித்ராவோ காளி போல் எதுவும் எனக்குத் தேவையில்லை என சின்னச் சின்ன சிலிக்கான் ஆக எங்கும் நிறைந்தாள்.

எட்டாம் ஆட்டம் துவங்கியது.

யாதுமாகி நின்றாய் – காளி! எங்கும் நீநி றைந்தாய்,
தீது நன்மை யெல்லாம் – காளி! தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்தும் ஆனாய் – காளி! பொறிக ளைந்தும் ஆனாய்
போத மாகி நின்றாய் – காளி! பொறியை விஞ்சி நின்றாய்.

இன்பமாகி விட்டாய் – காளி! என்னுளே புகுந்தாய்?
பின்பு நின்னை யல்லால் – காளி! பிறிது நானும் உண்டோ?
அன்ப ளித்து விட்டாய் – காளி! ஆண்மை தந்துவிட்டாய்,
துன்பம் நீக்கி விட்டாய் – காளி! தொல்லை போக்கிவிட்டாய்.

பெருநகரங்களின் தனிமை

எனக்கு ஒரு இடத்தை எடுத்துக் கொண்டு, அந்த நகரத்தின் இண்டு இடுக்குகளையும், பிரதேசத்தின் எல்லைகளையும், நாட்டின் குணங்களையும் ஊடே கொடுத்துக் கொண்டு, கதை சொல்லும் பாணி பிடிக்கும். சொல்வனத்தில் வெளியான இந்தக் கதையை வாசித்தவுடன் ZYZZYVA இதழில் Héctor Tobar எழுதிய “Secret Stream” கதை நினைவிற்கு வந்தது.

அந்தக் கதையில் ஒரு இளைஞனும் இளைஞியும் அகஸ்மாத்தாக சந்திக்கிறார்கள். இளைஞனோ லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் சைக்கிளில் பயணித்து விநோத வரைபடங்கள் தயாராக்கி நண்பர்களுடன் நகரின் ஆழங்களைக் கண்டறிபவன். இளைஞியோ ’எல்லே’ (LA) நகரின் நீர்த்தளம் காண்பவர். தொலைந்து போன நதிகளை அறிந்து கொள்ள விழையும் தன்னார்வலர். இருவரும் தனியர்கள். கரணம் தப்பினால் காதல் வந்துவிடும். ஆனால், உருவாகவில்லை. அவர்கள் எல்.ஏ. நகரத்தின் ஹாலிவுட் மலைப்பகுதிகளில் உலா வருகிறார்கள். காடு, மேடு, தனியார் சொத்து, அத்துமீறி உள்நுழைதல் எல்லாம் சாகசமாகச் செய்கிறார்கள்.

என்னுடன் நட்பு கொண்ட, கூட வேலை பார்த்த எவரோ எப்போதாவது என்னுடைய நகரத்திற்கு வருவார்கள். என்னை சந்திக்க இயலுமா என வினவுவார்கள். அவர்களின் பிசி கடமைகளிலும் எனக்காக நேரம் ஒதுக்குவார்கள். கொஞ்ச நேரம் அவர்களுடன் பழங்கதை பேசுவேன்; கொஞ்சம் மது; நிறைய கொண்டாட்டம் நிறைந்த தருணங்கள். அவர்கள் என்னை உதாசீனப்படுத்தி, ஊருக்கு வந்த சுவடே தெரியாமல் போயிருக்கலாம். என்னுடைய அதிகப்பிரசங்கித்தனங்களும் போதாமைகளும் அவர்கள் உள்ளூற அறிந்தே இருக்கிறார்கள். இருந்தாலும் என்னை சந்திப்பதை முக்கியப்படுத்தி, எனக்கு மதிப்பு கொடுத்து, நேரம் ஒதுக்குவார்கள். அது கோடையைப் போல் சுகமானது (“That Summer Feeling”) என்பார் Jonathan Richman.

சொல்வனத்தில் வெளியான இந்தக் கதை அந்த அந்தர்வாகினி ஆற்றுக்கு எதிராக ஓடுகிறது. இந்தக் கதையில் வரும் மூன்று, நான்கு துண்டுச் சம்பவங்களை எது இணைக்கிறது என்று உடனடியாகப் புலப்படாது. இளைஞன், முதியவர், பின் குழந்தை என்று மூன்று பருவத்தில் Protagonist-ஐ தொடர்பவர்கள் உண்டு. என்ன பிராயங்களில் இந்த மூவரைக் கடக்கிறாள் என்பதும் தெளிவாக இராது. சம்பவங்களில் முதல் சம்பவம் சுட்டுகிற சிறு அச்சம் இரண்டாவதில் இல்லை, மூன்றாவதில் அந்த அச்சம் சொல்லப்பட்டாலும் ஏனென்பது தெளிவில்லை.

காலம் ஒரு myth , மாயை என்பதற்கான குறியீடு. இந்தக் கதை வாசகனின் கற்பனையில் பல அடுக்குகளோடு, பல விதமான சாத்தியக்கூறுகளோடு விரிவடையும் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்டிருக்கிறது. எனக்கு இந்த மாதிரி பூடகமான விஷயங்களைச் சொல்ல இன்னும் மெனக்கிட வேண்டும் என்பது சொந்தக் கருத்து. அதாவது முன்னூறு பக்கம் எழுதிவிட்டு, உள்ளடக்கமாக சில விஷயங்களை சொருகியிருக்கிறேன் என்றால் நம்புவேன்; அந்தப் புனைவை சிரத்தையாக வாசிப்பேன். முன்னூறு வார்த்தைகள் எழுதிவிட்டு ’பொருள் தொக்கி நிற்கிற மாதிரி எழுதுகிறேன்’ என்றால் பொறுமையின்மை என்றே சொல்லவேண்டும்.

கதை என்றால், எழுதப்பட்ட இடத்தில் வசிப்பதற்கு மனம் ஏங்க வேண்டும். அல்லது அந்த இடத்திற்கு செல்வதற்கே கூச்சமும் அச்சமும் எழ வேண்டும். கதையில் உலவும் கதாபாத்திரங்களுடன் உரையாட, அந்த உரையாடல் நீங்காமல் தொடர்ந்து கொண்டேயிருக்க பிரியப்பட வேண்டும். புனைவில் சொல்லப்பட்டவர்களிடம் கேட்பதற்கு கேள்விகள் எழ வேண்டும். இந்தக் கதையில் அந்த இலக்கு நிறைவேறுகிறது. எனவே, படிக்கக் கூடிய கதை.

கதையை நீங்களும் வாசித்து உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள்.

clock_brain_human_rock_tree_oil_water_flow_house_home_think_alone_art_painting_imagine

மத்திய தர வகுப்பினர்களின் அகமகிழ்வை கருத்துருவகம் ஆக்கும் புனைவு

க்யூபா குறித்தும் சே குவெராவின் எழுத்து குறித்தும் ஃபிடல் காஸ்ட்ரோவின் அரசியல் புரட்சிகள் குறித்தும் ஹுலியோ கோர்தஸார் என்ன நினைக்கிறார்? அதை எவ்வாறு தன் புனைவில் வெளிப்படுத்தியுள்ளார்? அதற்கு நீங்கள் அவருடைய ‘மறுசந்திப்பு’ கதையை வாசிக்க வேண்டும்.

இந்த சொல்வனம் இதழில் வெளியாகி இருக்கிறது.

சேகுவேரா சொந்தமாக எழுதிய ”Reminiscences of the Cuban Revolutionary War” என்னும் அனுபவ நூலின் அடிப்படையில் இந்தக் கதை இயங்குகிறது. சே எழுதிய புத்தகத்தில் வரும் பத்திகளின் மறுபக்கத்தை, கோர்தஸார் நமக்கு இங்கே உணர்த்துகிறார். சந்திப்பில் லூயிஸ் என்பவரும் மருத்துவர் சே என்பவரும் மீண்டும் ஒன்றிணைகிறார்கள். லூயிஸ் என்பது அவருடைய அசல் பெயர் அல்ல என்பது கதையின் துவக்கத்திலேயே சொல்லப்படுகிறது. லூயிஸ் என்பது பிடல் காஸ்ட்ரோ.

புரட்சி என்பதும் போராட்டம் என்பதும் காதலியுடன் ஆன முதல் உறவு போல் கனவுகளும் அபிலாஷைகளும் மிக்கவை. ஆனால், விஷயம் நடந்து முடிந்த பிறகு,,.?

தன்னுடைய முகத்தையே முகமூடியாக அனைவரும் அணியுமாறு ஃபிடல் காஸ்ட்ரோ சொல்வது, கதையின் மிக முக்கியமான தருணம். ஃபிடல் என்பருக்கு இருக்கும் சுய லாபம், மற்றவர்களுக்கும் எப்படி நலம் பயக்கும்?

இன்று கிறிஸ்துமஸ். மத்தேயு, மார்க், லூக்கா, ஜான் என்போர் யார்? ஒருவர் மருத்துவர் (சே குவேரா); ஒருவர் மீனவர்; ஒருவர் வரி வசூலிப்பவர்; மற்றொருவர் அறியா பதின்ம வயதுச் சிறுவர். அவர்கள்தான் வேதாகமங்களும் விவிலியமும் எழுதுகிறார்கள். யேசு கிறிஸ்துவை கண்மூடித்தனமாக வழிபட கைகோர்க்கிறார்கள். இந்தக் கதையிலும் பாப்லோ (பால்), லூகாஸ் (லூக்) வருகிறார்கள்.

கடைசியாக இசை. கொர்த்தஸார் எழுதும் கதைகள் எல்லாவற்றிலும் செவ்வியல் இசை முக்கிய பங்கு வகிக்கும். இந்தக் கதைக்கு Alejo Carpentier -ன் எழுத்தாளுமையை பின்பற்றுகிறார் கொர்த்தசார். அவருடைய நடை என்னவென்றால், வரலாற்று முக்கியமான தருணங்களை இசையை அடிநாதமாகக் கொண்டு நடத்திச் செல்வது. சரித்திரத்தால் சரிபர்க்கக் கூடிய விஷயத்தை லயமும் ராகமும் கீதவொளியும் கலந்து பின்னிப் பிணைந்து தருவது. இந்தக் கதையில் கோர்த்தஸார், மொசார்ட் உருவாக்கிய ‘ஹண்ட்’ (Hunt) நாற்கூட்டு சங்கீதத்தைப் பின்னணியில் ஒலிக்க விடுகிறார்..இசையென்றால் மெதுவாய்ச் செல்லும்; சில இடங்களில் பறக்கும். வேட்டையாடும் போது விரைந்து போகும் கதை, பலியான பிறகு அடங்கி ஒலிக்கும்.

கதையின் இறுதியில் வானத்தைப் பார்க்கிறார் சே குவெரா. அங்கே தெரியும் நட்சத்திரம் செவ்வாயா அல்லது புதனா என்று தெரியவில்லை. செவ்வாய் என்றால் சண்டை. புதன் என்றால் வியாபாரம். வானில் தெரியும் நம்பிக்கை நட்சத்திரம் தோழமையான புதனா அல்லது சதா சர்வகாலமும் போரில் மூழ்கும் செவ்வாய் கிரகமா? இல்லை… வர்த்தகம் என்றாலே சச்சரவு நிரந்தரமா? தோளில் கைபோடும் நட்பான பன்னாட்டுப் பரிமாற்றங்கள் என்றாலும் முரண்பாடுகளிலேயே விடிவெள்ளி மூழ்கிவிடுமா என யோசிக்கிறார்.

கதையை வாசியுங்கள்: ஹுலியோ கோர்தஸார்- தமிழில் :நம்பி கிருஷ்ணன் : சந்திப்பு – சொல்வனம்

நன்றி: Understanding Julio Cortázar by Peter Standish

தழற்சொல் – சிறுகதை பரிந்துரை

Thomas_Pierce_This_is_an_alert_New_Yorker

இந்தக் கதையை நியு யார்க்கர் இதழில் வாசிக்கலாம்: This Is an Alert – The New Yorker

இந்தக் கதையைப் படித்தால் அறிபுனை கதையைப் படிப்பது போல் இருக்கிறது. வருங்காலத்தில் எங்கெங்கும் பீடித்திருக்கும் போர் மற்றும் போர்ச்சூழலினால் தோன்றும் அச்சத்தையும் பிரதிபலிக்கிறது. அறிவியலின் வளர்ச்சியான ஆளில்லாமல் பறக்கும் தூரயியங்கி விமானங்களின் ஆபத்துகள் நிறைந்த அவநம்பிக்கையான சமூகத்தைச் சுட்டுகிறது. அறிவியல் குறைவாகவும், புனைவு அதிகமாகவும் காணப்படுவதால் அறிபுனை என்னும் வகையில் இந்தக் கதையை வைக்கிறேன்.

பதினான்கு வயது மகளுடனும் மனைவியுடனும் மாமியார் வீட்டிற்கு விருந்துண்ணச் செல்பவனின் நிகழ்வுகளை தாமஸ் பியர்ஸ் எழுதி இருக்கிறார். கதையின் தலைப்பில் சொல்வது போல், ‘இது ஒரு எச்சரிக்கை’ என்னும் அறிவிப்பு, அவர்களை அன்றாடம் துரத்துகிறது. எப்போது அந்த அபாய அசரீரி ஒலிக்கும், எதற்காக அதற்கு அடிபணிகிறோம், எவ்வளவு நேரம் அந்த எச்சரிப்பு நீடிக்கும் என்று தெரியாது.

பதின்ம வயதில் மகளுக்கு நிகழும் மாற்றங்களும் குழப்பங்களும் இயல்பாக வந்து போகின்றன. மார்பகப் புற்றுநோஇல் இருந்து மீண்ட மாமியாரின் செய்கைகள், வயதானோரின் பாதுகாப்புணர்வை சொல்கின்றன. கணவன் உடன்பிறந்தான் பார்க்கும் காமப் பார்வைகள் வருங்காலக் கதைக்கு உயிரூட்டுகின்றன. சொட்டைத் தலையை நினைத்து வருந்தும் நடுத்தர வயதினன் கதையோடு ஒன்ற வைக்கின்றன.

ரொம்பவே போரடித்து விடக் கூடிய களம். அதை எப்படி கதாசிரியர் சுவாரசியமாக்குகிறார்? கொஞ்சம் போல் பாலுணர்வு உலவ விடுகிறார். துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை குறித்த விவாதத்தை எழுப்புகிறார். இதுதான் இறுதி முடிவு என்று சொல்லாமல் விட்டு வைக்கிறார். ஆறு கதாபாத்திரங்கள் இருந்தாலும் நாய்க்குக் கூட போதிய அளவு விவரிப்புகளும் குறியீடுகளும் கொடுக்கிறார்.

ஐஸிஸ் வளராமல் இருக்க எங்கோ இருக்கும் சிரியாவில் குண்டு போடுகிறார்கள். ஹௌத்திகள் வளராமல் இருக்க யேமனில் பறந்து பறந்து தாக்குகிறது சவுதி அரேபியா. தலைக்கு மேலே எங்கோ நடக்கும் சண்டைகள். அமெரிக்காவில் நிலத்தில் வாழ்வோருக்கும் இந்தப் போர்களுக்கும் சம்பந்தமே இல்லை. அந்தச் செய்திகளை, தொலைக்காட்சியிலும், தினசரிகளிலும், இணையத்திலும் மட்டுமே பார்க்கிறோம். அவர்கள் கெட்டவர்கள் என்பதால் தாக்குகிறோம். இந்தக் கதையில் வான்வெளியில் நடப்பதாகச் சொல்லப்படும் டிரோன் போர்கள் அதை நினைவுக்குக் கொணர்ந்தது. ”இந்த நாட்டிற்குச் செல்லாதே” என்னும் கபர்தார் அறிக்கைகள், அவ்வப்போது வரும் அசரீரிகள் உணர்த்தின.

தாமஸ் உடன் ஆன நேர்காணலை இங்குப் படிக்கலாம்: » INTERVIEW: Thomas Pierce, author of Hall of Small Mammals

சிறுகதைத் தொகுப்பு புத்தகத்திற்கான விமர்சனம்: ‘Hall of Small Mammals,’ Short Stories by Thomas Pierce – NYTimes.com