Tag Archives: ஆக்கம்

Kutti Revathi: குட்டி ரேவதி

Kutti_Revathi

சித்த மருத்துவராய்ப் பணியாற்றும் இவர், சென்னையில் வசிக்கிறார். சில செய்திப் படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். 15-6-1974-இல் திருவெறும்பூரில் பிறந்தவர். இனவரை மருந்தியல் துறையில் (சித்த மருத்துவத் துறையில்) முனைவர் பட்ட ஆராய்ச்சி. இவர் 90களில் எழுதத் தொடங்கினார். ‘பனிக்குடம்’ எனும் இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்தார், பெண்சார் திரைப்படங்கள் குறித்துத் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். பெண்சார் திரைப்பட இயக்கமான ‘கண்ணாடி’யில் முனைப்பாகப் பங்கு கொண்டுள்ளார். சில செய்திப் படங்களின் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். தற்போது துணை இயக்குநராக இருக்கிறார். ஆங்கிலக் கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார்.

அவர் சிறந்ததொரு புகைப்படக் கலைஞர். காந்திக்கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையும் பாரதியார் ஆய்வகமும் நடத்திய “பாரதிக்குப் பின் : பெண்ணும் கவிதையும்” கருத்தரங்கில் “பெண்ணியக் கவிதை : அதன் கலைச்செயல்பாடும் சமூகப் பயன்பாடும்” தலைப்பில் பேசினார். இடிந்தகரை அணு உலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். 2011ல் Audi Ritz Icon விருது பெற்றார். சிவகாமியின், ‘கதவடைப்பு’ கவிதை நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கிறார்.

இவர் கவிதைகளில் பிரமிளை நினைவூட்டும் உணர்வுத் தீவிரம் தெரிகிறது. தேவதேவனின் இயற்கை ஈடுபாடு ஆகிய பாதிப்பும் உண்டு. இருவரும் இவருக்கு ஆதர்சங்கள். K.M. இசை நிறுவனத்தின், ‘பெண் எழுச்சியை’ மையமாகக் கொண்ட “இரசாயன ரோஜாக்கள்” ஆல்பத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இஷ்ரத், ரிஹானாவின் குரல்களில் ‘என்னிலே மகா ஒளியோ!’ என்றொரு பாடல் எழுதியிருக்கிறார். இவருடைய கவிதைகளை கல்யாணராமனும் லஷ்மி ஹோம்ஸ்ட்ரமும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

பரதவர்களின் வாழ்வியலை ‘ஆழி சூழ் உலகு’ புதினத்தில் பதிவு செய்த ஜோ.டி. குரூஸ் வசனகர்த்தாவாகப் பணியாற்றியுள்ள ‘மரியான்’ திரைப்படத்தில், இரண்டாண்டுகளுக்கு மேலாக கவிஞர் குட்டி ரேவதியும் இணை இயக்குநராகப் பணியாற்றியதோடு ஒரு பாடலையும் எழுதியுள்ளார். இயக்குநர்களுக்கு திரைக்கதையை எழுதும் பணியைச் செய்து வருகிறார். சில திரைப்படங்களுக்கும், ஆல்பங்களுக்கும் பாடல்கள் எழுதுகிறார். மெல்ல, தான் இயக்கவிரும்பும் திரைப்படத்திற்கான பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வேன் என்கிறார்.

பெண் இயக்குநர்களுடன் இணைத்து, ‘விறலி விடு தூது’ என்னும் திரைத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். மூலக்கதை ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர், திரை இயக்குநர், திரைத் தயாரிப்பாளர் இவர்களை ஒருங்கிணைத்துத் திரைப் படைப்புகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவதுதான் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் முதன்மையான நோக்கம். ’விறலி’ என்றால் கலைகளை வளர்ப்பவள் என்பது பொருள்.

கடவுள் நம்பிக்கை இல்லாத இவர், கௌதம புத்தரின் ‘விபாஸனா’ என்ற யோகக்கலையின் மீது விருப்பம்கொண்டு அதைக் கடைப்பிடித்து வருகிறார்.

Aan_Kuri_Maiya_Punaivai_Sithaitha_Pradhigal_kutti revathi

அவரின் குரலில், அவரைப் பற்றி:

” மலைகள் சூழ்ந்த இயற்கை சூழலில்தான் நான் வளர்ந்தேன். பதினைந்து வயது வரையில் எனக்கு திருவெறும்பூர் தவிர்த்து வேறு எந்த ஊருடனும் பெரிதாகத் தொடர்பு இல்லை. என்னுடைய அந்தக் காலகட்டங்களை முழுக்க முழுக்க திருவெறும்பூர்தான் ஆக்கிரமித்து இருந்தது. அங்குதான் நான் எட்டாம் வகுப்புவரை ஒய்.டபிள்யூ.சி.ஏ. எனும் தமிழ்ப் பயிற்றுப் பள்ளியில் படித்தேன். என்னுடைய இளமைப் பருவத்தில் எனக்குத் தேவையான நம்பிக்கையையும் தெம்பையும் அந்தப் பள்ளிதான் வழங்கியது. அங்கு இருந்த ஆசிரியர்கள் பள்ளிக் குழந்தைகளை தங்கள் குழந்தைகளாகப் பாவித்துக் கல்வி கற்பித்தனர். எங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே அப்படி ஓர் இணக்கமான சூழல் நிலவியது. கட்டுரை, பேச்சு என அனைத்து போட்டிகளிலுமே நான் பங்கெடுத்துப் பரிசுகள் பெற்றிருக்கிறேன். இன்றுகூட என்னால் 1,330 திருக்குறளையும் முழுதாகச் சொல்ல முடியும். இதற்கெல்லாம் காரணம், என் பள்ளி ஆசிரியர்கள்தான்.

திருவெறும்பூரில் எறும்பீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஆதிச்சசோழன் காலத்தில் அவன் பெற்ற வெற்றிகளைத் தொடர்ந்து காவிரிக் கரையோரம் வரிசையாகக் கட்டிய பல கோயில்களில் இதுவும் ஒன்று. மாலை நேரங்களில் பள்ளி முடித்துவந்து உடை மாற்றிவிட்டு எறும்பீஸ்வரர் கோயில் வளாகத்தில் எங்கள் அப்பாவோடு நானும் என் தம்பி தங்கையும் நடப்பதை வழக்கமாகவே வைத்து இருந்தோம். அப்போது என் தந்தை எனக்கு சொல்லிக்கொடுத்த தேவாரமும் திருவாசகமும் அப்படியே என் மனதில் பதிந்துள்ளது. பொதுவாக எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், அந்த இலக்கியங்களில் இருந்த மொழிநடை என்னை மிகவும் ஈர்த்தது. எறும்பீஸ்வரர் கோயில் பற்றிப் பேசும் இந்த நேரம் எனக்குக் கோயில் பிரகாரத்தில் வீசும் காற்றின் சுகந்தம் நினைவுக்கு வருகிறது.

பி.ஹெச்.எல். டவுன்ஷிப்பில் இருந்த நூலகம் எனக்கு இன்றியமையாத ஒன்று. பள்ளியில் படிக்கும்போது பேச்சு, கட்டுரை போட்டிகளுக்குத் தேவையான தகவல்களைச் சேகரிக்கச் சென்றபோதுதான் அந்த நூலகம் அறிமுகம் ஆனது. கூடவே எழுத்தின் வழி சுஜாதாவும் பாலகுமாரனும் அறிமுகமானார்கள். சங்க இலக்கியங்களைத் தேடித்தேடி படிக்க ஆரம்பித்தேன்.

பி.ஹெச்.எல். போகும் அந்தப் பிரதான சாலையை என்னால் மறக்கவே முடியாது. ஏனெனில், அங்குதான் நான் முதன்முதலாக சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டேன். இன்றும் அந்த இடத்தைப் பார்க்கும்போது என்னால் அந்த நினைவுகளை மீட்க முடிகிறது.

எனக்கு அப்போது வசந்தி, ஜோதி, மீனா என மூன்று நெருங்கிய தோழிகள் இருந்தனர். நாங்கள் மூவரும் திருச்சியின் அழகை முழுதாக ரசித்தோம். 80-களின் இறுதியில் அப்படி எல்லாம் பெண் பிள்ளைகள் சுதந்திரமாக இருப்பது சாதாரண விஷயம் இல்லை. அந்த விஷயத்தில் என் அப்பா எனக்கு முழு சுதந்திரத்தை அளித்திருந்தார்.

என் அப்பா சுயம்புலிங்கம் பி.ஹெச்.எல். நிறுவனத்தில் ஒரு சாதாரண கடைநிலை ஊழியராகப் பணியாற்றியவர். இருப்பினும் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க மிகவும் பாடுபட்டவர். அப்படிப்பட்ட என் தந்தையை நான் கடைசியாகப் பார்த்தது திருவெறும்பூர் ரயில் நிலையத்தில்தான். நான் சென்னையில் இருந்தபோது அவர் மாரடைப்பால் இறந்துபோனார். அதன் பிறகு நான்கு வருடங்கள் திருவெறும்பூருக்கு வரவே இல்லை. ஏனெனில், அவருடைய ஞாபகங்கள் என்னை மிகவும் பாதித்து இருந்தது. நான் மிகவும் நேசித்த திருவெறும்பூரை அந்தக் காலகட்டத்தில் கொஞ்சம் வெறுத்திருந்தேன் எனச் சொல்லலாம்.

இன்றும் திருவெறும்பூர் திருவேங்கட நகரில் எங்களுடைய சொந்த வீடு இருக்கிறது. வேலை காரணமாக அடிக்கடி ஊருக்கு வரமுடியவில்லை என்றாலும், வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் தவறாமல் இங்குவந்து திருவெறும்பூரின் அழகை ரசிக்க நான் மறப்பதில்லை!”

150256_525948294105568_268739038_n

2012 புத்தகக் கண்காட்சி

1. மாமத யானை – புதிய கவிதைத் தொகுப்பு (வம்சி வெளியீடு)
இது என்னுடைய ஆறாவது கவிதைத் தொகுப்பு! எத்தனை நூல்கள் வந்தாலும் கவிதை நூல் தரும் களிப்பை வேறு ஏதும் தர முடிவதில்லை!
கவிதைக்குள் தான், நான் என் முழு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் நிறைத்துத் தரமுடிகிறது! பல சமயங்களில், நான் கவிஞரின்றி வேறு யாருமல்ல என்று கூடத் தோன்றுகிறது! மற்ற எனது ஆளுமைகள் எல்லாம் அதை ஒட்டியிருக்கும் பிசிறுகள் தாம்! அடுத்தடுத்தக் கட்டத்திற்கான முந்தைய கட்டமாக ஒரு கவிதை நூல் மாறி, என் அகவெளியை உறுதிசெய்கிறது! உரமூட்டுகிறது! சகப் படைப்பாளிகளினும், வாசகர்கள் தாம் என்றும் என் ஊக்கமாயிருந்திருக்கிறார்கள்! எனக்கு நிழலாயிருந்திருக்கிறார்கள்! இந்தப் படைப்பும் அவர்களால் தான் சாத்தியமாயிற்று என்று நம்புகிறேன்!

2. ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப்பிரதிகள் – தம் உடலரசியலால் தமிழ் எழுத்தின் மரபை மாற்றியமைத்த தமிழ்ப்பெண் கவிதைகள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு (நாதன் வெளியீடு)

3. இந்தக் கோடைக்காலத்தை உனக்காகவே அழைத்துவந்தேன் – காதல் கவிதைகள் தொகுப்பு (ஆழி பப்ளிஷர்ஸ்)

4. முதல் காதல் அனுபவங்கள் – வெவ்வேறு படைப்பாளிகளின் உணர்ச்சிப்பூர்வமான முதல் காதல் அனுபவங்களின் தொகுப்பு (ஆழி பப்ளிஷர்ஸ்)

5. நிழல் வலைக்கண்ணிகள் – பெண்ணிய அரசியல் கட்டுரைகள் (வம்சி வெளியீடு)
– Book of feminist essays, predominantly discuss caste, gender and body.
பெண்ணியக் கட்டுரைகளளின் பெருந்தொகுப்பு. தமிழகத்தில் பெண் உரிமை கோரும் இயக்கங்கள், நிறுவனங்கள், தளங்கள், உரையாடல்கள் பலமுறை எழுந்தும் அவை முழுமையான வடிவம் எடுக்காதபடிக்கு, தனி நபர் அல்லது குழுவினரின் ஆதிக்கத்தால் தீவிரமாக ஒடுக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் அது சுயநலம், சுயலாபம் பொருட்டாகவே இருந்திருக்கிறது. இன்று அதற்கான விளைவுகளைப் பெருவாரியாக நாம் அனுபவித்தும் இறுக்கமான மெளனம் கடைபிடிக்கப்படுகிறது. அந்நிழல் வலைக்கண்ணிகளை எழுத்தின் வழியாக என் இடத்திலிருந்து பார்த்திருக்கிறேன். அவ்வலைக்கண்ணிகளை நாம் இனம் காண இந்நூல் ஒரு கையேடாக இருப்பின் மகிழ்வேன்!

புத்தகத்திற்கான முன்னுரை

Idintha_Karai_Kutty_Revathy_Kadal_Penngal_Kavidhaigal

6. யானுமிட்ட தீ – கவிதைத் தொகுப்பு (அடையாளம் வெளியீடு) (2010)
சாதியப்படுத்தப்பட்ட மூடுண்ட மனித உடலை இக்கவிதைகள் இயல்பூக்கத்துடன் திறக்கின்றன. உடலையே இயக்கமாக்கி அதை அதன் ஆதி நிலைக்குத் திருப்புகின்றன. தொல் அறத்தை மீட்டெடுக்கின்றன. வரலாற்றிலிருந்து உடலின் விடுதலை என்பது மோதலில் மட்டுமே நிகழ முடியும். அத்தகைய மோதலின் உக்கிரமான ஒரு புள்ளியில் இக்கவிதைகள் பீறிடுகின்றன. இதுவே இக்கவிதைகளை உயிர்த்துடிப்புடன் இயங்க வைக்கிறது.

7. ‘பூனையைப் போல அலையும் வெளிச்சம்’ (2000)
தொண்ணூறுகளில் கவனம் பெற்ற முக்கியமான கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இக்கவிதைகள் கோபம் கொள்கின்றன; காதல் வயப்படுகின்றன; காமம் துய்க்கின்றன.. வாழ்வின் வெம்மை பொறுக்க முடியாமல் போகும்போது நிழலைத் தேடும் மன நிலை, ஜீவிதத்தின் உயிர்த்துடிப்பு, பேரனுபவத்தை சுட்டிக் காட்டும் தன்மை; இருமை எதிர்வுகளை வெகு இயல்பாகப் படிமமாக்கிக் காட்டும் அழகியல் ஆகியவற்றுடன் இயங்கும் இக்கவிதைகள் தங்கள் அளவில் தனித்து நிற்கின்றன. ஆணால் வடிவமைக்கப்பட்டு பெண்ணுக்கு வழங்கப்பட்ட பெண் சிந்தனையைப் பார்த்து கெக்கலி கொட்டிச் சிரிக்கின்றன. புதிய சொல்லாட்சிகளும், புதுப்புது சொல்லிணைகளும், மின் தெறிப்பாய் தெரிந்து மறையும் படிமங்களும் இக்கவிதைகளை நினைவுகூறுமாறு செய்கின்றன.

8. ‘முலைகள்‘ (2002)
பெண்ணின் உடலரசியலைப் பேசும் இந்தப் பிரதி முலைகள் துடைத்தகற்ற முடியாத இரு கண்ணீர்த்துளிகள் என்று அறிவித்து பெண்ணை நுகரும் உடலாகப் பார்க்கும் ஆணாதிக்கப் பொதுப்புத்தியைத் தகர்க்கிறது. இத்தொகுப்பில் இயங்கும் கவிதை மனம் வாழ்க்கையின் முட்களில் சிராய்த்துக் கொண்டு கண்ணீர் வடிக்கிறது. அதே சமயத்தில் வாழ்வின் அதீதமான தருணங்களை போகிற போக்கில் தரிசிக்கவும் செய்கிறது. உத்வேகத்துடன் அலைவுறும் கவிதை மனம் விடுதலை வேட்கையுடன் இயங்கும் இக்கவிதைகளில் படிமங்கள் அழகாகக் கைகோர்க்கின்றன. இயல்பான தன்மையுடன் நடனமாடுகின்றன.

9. ‘தனிமையின் ஆயிரம் இறக்கைகள்’
நவீன தமிழ்க்கவிதை வெளியில் பெண் குரல், பெண் உடல், உடலரசியல் போன்ற தளங்களில் ஒலிக்கும் ஒரு குரலை இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பதிவு செய்திருக்கின்றன. ஏக்கம், நிராசை,காமம், மரணம் போன்ற அனுபூதிகள் இக்கவிதை வரிகளில் சாகாவரம் பெற்று இயங்குகின்றன. இயற்கையின் மீதான அவதானிப்பு இக்கவிதைகளில் பெண்ணியத்தின் குறியீடுகளாக மிளிர்கிறது. பெண்ணிடமிருந்து விலக்கப்பட்ட சொற்களை இவை துணிந்து உச்சரிக்கின்றன. அந்தச் சொற்கள் ஆணாதிக்க மனத்தின் செவிப்பறைகளில் போய் மோதி அதிர்கின்றன. இதுவே இத்தொகுப்பை பிற கவிதைத் தொகுப்புகளிலிருந்து வித்தியாசப்படுத்திக்காட்டுகிறது.

10. ‘உடலின் கதவு’ கவிதை நூல் அடையாளம் பதிப்பகத்தால் மறு பதிப்பும் பெற்றுள்ளன.
ஆணாதிக்கச் சமூகத்துக்கெதிரான ஒரு பெண் மனத்தின் சீற்றம் இக்கவிதைகளில் தெறிக்கிறது.காமம், புணர்ச்சி,கருவுறுதல் என்று விரியும் குறியீடுகள் இந்தப் பிரபஞ்சத்தையே ஒரு பெண்ணின் உடலாகவும், ஒரு பெண்ணின் உடலையே பிரபஞ்சமாகவும் உருவகித்துக் காட்டுகின்றன. கவிதை வரிகள் தோறும் படிமங்களும், தொடர் உருவகங்களும் காட்டாற்று வெள்ளம் போல் பிரவகித்துப் பாய்கின்றன. சில தருணங்களில் வெள்ளம் வடிந்த பின் படியும் நுரையாய் மனத்தில் ஒட்டிக் கொள்கின்றன. கவிதையில் உற்பவிக்கும் உணர்ச்சிப் பெருக்கு கவிஞரிடமிருந்து வாசகனையும் தொற்றிக் கொள்ளும் அதிசயம் இந்தத் தொகுப்பில் சாத்தியப்பட்டிருக்கிறது.

11. கட்டுரை நூல் – காலத்தைச் செரிக்கும் வித்தை (2009)

12. முத்தத்தின் அலகு

ஆழி பதிப்பகத்தின் செந்தில்நாதன், என் காதல் கவிதைகளை நூலாக வெளியிட தொகுத்துத் தரக் கேட்டபோது, உண்மையில் அது ஒரு விநோதமான அனுபவமாகவே இருந்தது. ‘காதல்’ பற்றிய நமது சமூகத்தின் குரல்களும் தனிமனிதக் குரல்களும் எப்போதுமே முரண்பட்டிருக்கின்றன. நுணுகிப் பார்த்தால், ஒடுக்குமுறையை ஆதரிக்குமொரு மனம் தான் காதலை எதிர்க்கிறது! அல்லது, தன்னளவில் உருவான ‘காதல் உணர்வை’ எதிர் நபருக்குச் சரியான முறையில் தெரிவித்து, அதைச் சாத்தியப்படுத்திக் கொள்ள முடியாமல் போனவர்கள் தாம் காதலை எதிர்த்திருக்கிறார்கள்! இன்னொரு மனிதருடன் என்றால், அம்மனிதரின் குடும்பம், வர்க்கம், சாதி, மதம், மனம், உடல், நிறம் என எல்லா பேதங்களுடனும் மோத வேண்டியிருக்கிறது, இல்லையா! ஆனால், இதையெல்லாம் தாண்டி காதல் என்பது தனிமனித அளவில் மிகவும் தூய்மையா கவும் நேர்மையுடனும் உணர்ச்சிப்பூர்வமாகவும் இருக்கிறது!

என்னளவில் காதல் இன்னும் இன்றும் அழகானதாகவே இருக்கிறது! என் காதல் கவிதைத் தொகுப்பிற்கு, ‘முத்தத்தின் அலகு’ என்று பெயரிட்டிருக்கிறேன்.

13. ‘இடிந்த கரை’ நூல் – கடல், பெண்கள், கவிதைகள்

14. ‘முள்ளிவாய்க்காலுக்குப் பின்’ என்ற பெயரில் ஈழத்து இனப்படுகொலையை வைத்து புலம்பெயர்ந்த ஈழப் படைப்பாளிகள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Tamil_poetess_Little_Revathy

 

காதல் குறித்து:

நான் எப்பொழுதும் காதலின் பக்கம்.

எல்லா ஆண்களும் ஒரே மாதிரி தான் என்பதே என்னுடைய கருத்து என்றாலும், பெண்ணிடம் காதலை வெளிப்படுத்துவதில் மட்டும் தான் ஒருவரிடமிருந்து மற்றவர் வேறுபடுகிறார் என்பது என் முடிந்த முடிபு.

வீட்டில் ‘தந்தை அன்பின்’ போதாமையால், ‘சகோதர அன்பின்’ போதாமையால், ‘ஆண் அன்பின்’ போதாமையால் மகளின் காதல் வேகம் பெறுகிறது, வீர்யம் பெறுகிறது. காதல் வழியாக எல்லா ஆண்களிடமும், மகள் தந்தையைத் தான் தேடுகிறாள். தவறாகி, பிழையாகி, பின் ஏதோ ஒரு மட்டில் காதல் நிறைவாகும் வழிகளைத் தேடிக் கொள்கிறாள். தந்தையின் முழுமையான அன்பைப் பெறும் மகளும் காதலில் தன் தந்தையைத் தான் தேடிக் கொண்டிருப்பாள், ஆண்களில் காதலைத் தேடுவதற்குப் பதிலாக.

நான் எப்பொழுதும் காதலின் பக்கம். இன்னும் மானுடம் வெல்ல நம்மிடம் இருக்கும் ஒரே அறிவு காதலே. இதே வார்த்தைகளில் அம்பேத்கர் சொல்லவில்லை என்றாலும், சாதியை வெல்லவும் நம்மிடம் இருக்கும் ஒரே வெளிப்பாடு காதலே.

Kutty_Revathy

அ) நேர்காணல்: கவிஞர் குட்டி ரேவதி-பகுதி-1
http://tamilnathy.blogspot.com/2007/03/blog-post_959.html
– இந்த நேர்காணல் இலங்கையில் வீரகேசரியின் வார வெளியீட்டில் தொடராக வந்தது.

பகுதி-2
http://tamilnathy.blogspot.com/2007/03/blog-post_05.html
– ”’நல்ல எழுத்துத்தான் கடைசிவரை நிக்கும்… அக்கப்போர்களைக் கண்டுகொள்ளாதீர்கள்’”

மறுமொழிகளில் இருந்து:

///ஆண்கள் எப்படி பெண்களைக் கொச்சைப்படுத்துகிறார்களோ பாலியல் உறுப்புகள் குறித்து எழுதுகிறார்களோ அதைப் போலத்தானே இவர்களும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்… இவர்கள் எப்படிப் பெண்ணியவாதிகளாக இருக்க முடியும் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். அதற்கு என்னுடைய பதில் என்னவென்றால் ‘நாங்கள் முன்வைக்கும் அரசியல் வேறு’என்பதாகும்.///

இதற்கு கவிஞர் சரியான பதிலை சொல்ல வில்லையோ என்று தோன்றுகிறது.

நிறைவுப்பகுதி
http://tamilnathy.blogspot.com/2007/03/blog-post_06.html
– திராவிட இயக்கங்கள் வந்த பிறகு இந்த அழகியல் என்பது அற்றுப்போய்விட்டது என்று சொல்லலாம்

ஆ) எஸ்.ஆர்.எம். எம்.ஏ. பாடப் புத்தகம்

http://www.srmuniv.ac.in/tamilperayam/tamil_courses/Lessons/MA_Tamil/I_Year/matt01/html/mat01007pp2b.htm
‘ஒளி சொட்டச் சொட்டக் குளித்து வந்தாய், பாதங்களில் வழிந்து பாதையெல்லாம் தீக்காயங்கள்’, ‘சுண்ணாம்பு வெயில்.. தன் ஒற்றைக் காலால் என் முகத்தின் மீது நடந்து சென்றது வெயில்’ என்பனபோன்ற அழகும் தீவிரமும் கொண்ட படிமங்களை இவர் கவிதைகளில் காணலாம். காலவெளி, பிரபஞ்ச ஓவியம், பாழ்விண், உட்குகை இருள், இருட்சுவர், காலாதீதம், உதிரநதி, புவனம் போன்ற சொல்லாட்சிகளும் படிமங்களும் பிரமிளின் செல்வாக்கைத் தெளிவாகக் காட்டுவன.

‘ஆண்டாள் தன் காதல்நோய் பற்றிப் பேசியதன் உணர்வுத் தொடர்ச்சியைப் பல நூற்றாண்டுகள் கழித்து ரேவதியிடம் கேட்கிறோம்’ என்கிறார் க.மோகனரங்கன். கவிதை சொல்லியின் பாலியல் அடையாளங்களுடன் தனித்துவமும் தீவிரமும் கூடிய பெண்குரலாக வருவது குட்டி ரேவதி கவிதை என்கிறார். சமூகத் தணிக்கைக்கு உட்படாத சுதந்திரமான ரேவதியின் மொழி, விமர்சனத்திற்கு உள்ளாகலாம் எனவும் அவர் குறிப்பிடுகிறார் (சொல் பொருள் மௌனம், ப.187)

இ) பிறவழிப் பாதைகள் : அன்புள்ள குட்டி ரேவதி
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20601202&edition_id=20060120&format=html
– கோபால் ராஜாராம்

ஈ) பெண்கவிகள் சந்திப்பு – 2002 இடம்-புதுவை நாள்-11.9.02
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60209171&edition_id=20020917&format=html
– இச்சந்திப்பில் பேசப்பட்ட பகிர்வுகளில் மிக முக்கியமாக கருதுகின்ற சில விவாதங்கள் அல்லது கேள்விகள்

உ) உடலின் மொழியும் மொழியின் உடலும் – குட்டி ரேவதியின் கவிதைகள் குறித்து
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60308224&edition_id=20030822&format=html
– எச் பீர்முகம்மது

ஊ) தலித்துகளைக் காப்பாற்றும் பொறுப்பு – கண்ணன்
http://www.kalachuvadu.com/issue-91/kannottam.asp
உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பெரும் பான்மை ஆட்சி, தலித்-உயர்சாதிச் சமூகக் கூட்டணியால் ஏற்பட்டுள்ள பின்னணியில் ‘அவுட்லுக்’ ஜூன் 24, 2007 இதழ், தெற்கில் மேற்படி நிகழ்வு ஏற்படுத்தியுள்ள எதிர்வினைகளைச் செய்திக் கட்டுரையாக வெளியிட்டுள்ளது. இக்கட்டுரையில் கவிஞர் குட்டி ரேவதி மேற்கோள்காட்டப்பட்டுள்ளார். அவரது கருத்து இது:
”பிராமணர்கள் உத்தரப் பிரதேசத்தில் ஆதிக்கம் செய்யத் தொடங்கிவிடுவார்கள். அவர்கள் தலித்துகளை விழுங்கிவிடுவார்கள் . . . இது பற்றி கருத்துக் கூறும் நேரம் வரவில்லை.”

எ) SEA, OH SEA YOU ARE MY BODY – documentary PMANE

in the background of the evocative song Kadale, Kadale by famous Tamil Poetess Kutti Revathi set to tune by S. Sreekumar of M.B.S.Youth Choir.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்கு மக்களின் குரலாய் எழுதிய பாடல் இது. கேரளத்து நண்பர்கள் சதீஷ், அனிதா மற்றும் நண்பர்கள் இணைந்து இதற்கு பாடல் வடிவம் கொடுத்துள்ளனர். இசையமைப்பாளர் எஸ். ஶ்ரீகுமார் அவர்கள் இசை அமைத்துள்ளார்

ஏ) interview to Vani Viswanathan of the Spark magazine:
http://www.sparkthemagazine.com/?p=4399
Language is the One Tool that can Liberate Women’s Bodies: Kutti Revathi

ஐ) உதிர்த்த வார்த்தைகளைத் திரும்பப் பெற இயலாது! சிவகாமி அவர்கள் கருத்தின் மீதான விவாதத்தை முன்வைத்து….
http://www.kuttyrevathy.blogspot.in/2013/09/blog-post_15.html

ஒ) பிடித்த புத்தகம்
http://www.amazon.com/dp/0571172865/ref=cm_sw_r_fa_dp_P20zpb0GH377Q/187-8838555-9646736
A graphic novel. The story can differ with each reader and each reading. The central imagery deals with winged dream-people, whose wings are opened books rather than feather and flesh.

Neraiya_Araigal_Ulla_Veedu

ஓ) ஒரு மேற்கோள்
“In writing about a woman’s body and its sexuality, one is also writing about the political history of the human body!”.

கொசுறு:

எழுத்தாளர் நிலையிலிருந்து, கட்சி அரசியல் நிலைக்கு நகர்ந்தது என்பது பெரும்பாலும் பெண் எழுத்தாளர்களுக்குத் தான் நடந்திருக்கிறது! சமூக அசைவின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படவேண்டும்! ஆனால், சமூகத்தின் அரசியல் ஊக்கத்தை மதிக்காத அப்பெண்கள், தன் சுயநிலைகளை மட்டுமே பொருட்படுத்தியவர்களாக இருந்த நிலை உள்ளங்கை நெல்லிக்கனி போல இன்று! எல்லா அரசியல் ஆதாயங்களையும் தன் தனிமனித கோபுரங்களை எழுப்பிக் கொள்ளவே பயன்படுத்தினர்! தி.மு. க. அரசியலின் அடித்தளம் ஆட்டம் கண்டிருக்கும் இந்நேரத்தில், அதில் ஈடுபட்டு முதுகெலும்பு இழந்தவர்கள், சமூகத்தின் பிற ஒடுக்கப்பட்டப் பெண்களின் குரலாய் மாறாத இந்த அரசியல் பெண்கள் இனி எப்படி தம் சமூகக் குரலை அடையாளப்படுத்துவார்கள்? ’அவர்கள் அறச்சீற்றம் கொண்டால் எத்தகையதொரு கேலிக்கூத்தாகிறது என்று சொல்லத்தேவையில்லை!”

கொசுறுக்கு கொசுறு:

‘தனித்த’ தமிழ்த்தேசியம் பேசுவோர் கொஞ்சம் எல்லாவற்றிலும் மிகையான உணர்ச்சிகளுடன் கொந்தளிப்பது, நடக்க இருப்பதையும் நடக்கவிடாமல் செய்துவிடுகிறது என்பதைப் பலமுறைப் பார்த்திருக்கிறேன். ‘தலித்தியம்’, அல்லது ‘சாதி மறுப்பியம்’ என்பதே தமிழ்த்தேசியம் என்று ஆகிவிடக்கூடாதே என்ற பதற்றம் தான் இந்தக் கொந்தளிப்பின் ரகசியம் என்பதையும் பலமுறைகள் உணரமுடிந்திருக்கிறது.

‘காமம் தாண்டி காதல்’ என்பதே கடுமையானதொரு சாதிய மனப்பான்மை. உடலை அவமதிக்கும் செயல். எப்படி தீண்டாமை உடலை அவமதிக்கிறதோ அதையே பின்பற்றும் ஒரு சாதிய மனநிலை தான் இது. காலங்காலமாக நம்மில் ஊறிய சாதிய மனநிலையே, ‘காமம் தாண்டிய காதல்’ என்ற கண்டுபிடிப்புகளை நிகழ்த்தத்தூண்டுகிறது.

தமிழ் இனம் – சாதி மறுப்பு = தமிழ்த்தேசியம், என்பதை பலரும் பல சமயங்களில் வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றனர்.

யாருக்கு இதனால் நட்டம்? நம்மைப் பிளவு படுத்திக் குளிர்காயும் சனாதனிகளுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியையும், கொண்டாட்டத்தையும் கொடுக்கும். தமிழகம் என்று தனியே ஒரு நாடு உருவானால் கூட, பின் இருக்கப்போகும் ஒரே பிரச்சனை நீங்கள் தாம்: தீண்டாமையின் புதிய வடிவமைப்பை, பெண் பாலியல் ஒடுக்குமுறையின் புதிய வழிமுறையை நீங்கள் செயல்படுத்துவீர்கள்!

இந்தியா சுதந்திரமடைந்து 67 ஆண்டுகளுக்குப்பின்னும் சாதிய வன்முறை பகிரங்கமாக, காட்டுமிராண்டித்தனத்தின் அடையாளமாக நடக்கிறது. தொடர்கிறது. சக மனிதனை மலம் அள்ள வைக்கிறோம். இசுலாமியர்கள் மீதான வன்முறைகளும் பாரபட்சமும் தொடர்கின்றன. பெண்கள் மீதான பாலியல் வன்முறை முன்னெப்பொழுதையும் விட தற்பொழுது அதிகமாயிருக்கிறது.

6400 சாதிப்பிரிவுகளையும் அதற்கான ஏற்றத்தாழ்வுகளையும் அது ஏற்படுத்தும் ஊழலையும் வைத்துக் கொண்டு ஒருமித்த இந்தியா என்று போற்றுவதும் பாராட்டுவதும் உணர்ச்சிப் பெருக்கெடுப்பதும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது இல்லையா? இது கண்டிப்பாக சுதந்திர இந்தியா இல்லை. இன்னொரு சுதந்திரத்திற்காக நாம் எல்லோரும் போராடவேண்டியிருக்கும் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்கிறேன்.

Nizhal_Valai_Kannigal_Book

ஔ) குட்டி ரேவதி – தீராநதி நேர்காணல்
http://ntmani.wordpress.com/2006/02/22/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF8/

க) கோவில்கள், சிற்பங்கள், ஓவியங்கள் – ஸ்ரீனிவாசனுடன் உரையாடல்
http://www.yaavarum.com/archives/2590

ங) ’இந்தியா டுடே’யின் ரஜினி சிறப்பிதழ் கட்டுரை
http://kuttyrevathy.blogspot.com/2011/12/blog-post.html
– ‘நான் நம்பர் ஒன், என் புருஷன் நம்பர் டூ’ என்ற வசனமும் ரஜினி என்ற கதாநாயகனும்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை, ரஜினி என்ற கதாநாயகனின் ஆணாதிக்க வசனங்களைப் பற்றிய சிறிய அலசல்!

Breasts: (original ‘Mulaigal’ by Kutti Revathi), translated by N. Kalyan Raman

Breasts are bubbles, rising
In wet marshlands
I wondrously watched- and guarded-
Their gradual swell and blooming
At the edges of my youth’s season
Saying nothing to anyone else,
They sing along
With me alone, always:
Of Love,
Rapture,
Heartbreak
To the nurseries of my turning seasons,
They never once failed or forgot
To bring arousal
During penance, they swell, as if
straining
To break free; and in the fierce tug of
lust,
They soar, recalling the ecstasy of music
From the crush of embrace, they distil
The essence of love; and in the shock
Of childbirth, milk from coursing blood
Like two teardrops from an unfulfilled
love
That cannot ever be wiped away,
They well up, as if in grief, and spill over

Ref: Literery review, The Hindu, January 1st 2006

Wild_Girls_Wicked_Words_Lakshmi_Holmstrom

ச) ‘புறனடை’ இதழில் வெளியான என் நேர்காணல்

இத்தகைய நிதானமான நேர்காணலை எடுக்கும் பணிக்கு நண்பர்கள் ரவிச்சந்திரன், பிரவீண், ராஜ், கஜேந்திரன், ஜே. ஜெய்கணேஷ் தங்களின் நிறைய நேரத்தைச் செலவழித்தார்கள். நான் முன்வைக்கும் அரசியல் நிலைப்பாடு குறித்தும், அதை நோக்கிய என் எழுத்துப் பயணம் குறித்துமான நேரடியான பதிலை திருத்தமானதோர் உரையாடல் வழியாக என்னிடமிருந்து பெற்றார்கள்! வழக்கத்திற்கு மாறாக, நிறைய நண்பர்கள் இந்நேர்காணலை வாசித்துவிட்டு தங்கள் வாழ்த்துகளையும் கருத்துக்களையும் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வழியாகப் பகிர்ந்து கொண்டார்கள்.

என்னை ஒரு தனிமனிதராகப் பார்க்காமல், எழுத்து இயக்கத்தின் ஒரு பகுதியாகவே என்னைப்புரிந்து கொண்டு, இதைத் தன் இணையத்தளத்தில் பதிப்பித்த, ‘தமிழ் ஸ்டுடியோ’ அருண் அவர்களுக்கும் என் நன்றி!

குட்டி ரேவதி (Kutti Revathi) கவிதை படைப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
http://eluthu.com/kavignar/Kutti-Revathi.php

அவரின் வலைப்பதிவு: http://www.kuttyrevathy.blogspot.com/

 

 

Fiction: Zadie Smith: “MOONLIT LANDSCAPE WITH BRIDGE”

ஜேடி ஸ்மித்தின் முழுக் கதையும் நியு யார்க்கரில் வாசிக்கக் கிடைக்கிறது.

Van_der_Neer_-_Moonlit_Landscape_with_Bridgeஇது தேர்தல் காலம். தர்மபுரி இளவரசன் இறந்தால், தொல் திருமாவளவன் தலைவராகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் தீக்குளித்தால், இரவிக்குமாருக்கு தொகுதி கிடைக்கிறது. அந்த மாதிரி மந்திரி ஒருவரின் வாழ்க்கையை இந்தப் புனைவு சித்தரிக்கிறது.

சிறுகதையை நீங்கள் எப்படித் துவங்குகிறீர்கள்? முடிவுக்கு மிக அருகேவா? அல்லது கதையின் சாரத்தைக் குறியீடாக முன்வைத்தா? பிணத்தை அலங்கரித்து நடுக்கூடத்தில் வைப்பது போன்ற தோரணையுடன் கதை துவங்குகிறது. ஆப்பிரிக்காவிலோ அல்லது ஃபிலிப்பைன்ஸிலோ அல்லது அது போன்ற சுரண்டல் தேசத்தின் தலைவர், தன்னுடைய சொந்த நாட்டை விட்டு சொர்க்கபுரிக்கு ஓடுவதுதான் கதை.

கதையின் நடுவில் தலைப்பு வந்து சேர்கிறது. வான் டெர் நீர் (Aert van der Neer) வரைந்த ஓவியத்தை எடுத்துப் போகிறார் அமைச்சர். அவருக்கு அது சொந்த ஊரை நினைவூட்டுகிறது. அயல்நாட்டு ஓவியனை வைத்துதான் தன்னுடைய பிறந்த கிராமத்தை அறியுமளவு அவர் அன்னியப்பட்டுப் போயிருக்கிறார். நெதர்லாந்து எப்படி இவ்வளவு பெரிய சக்தியாக மாறியது? கடல் கொள்ளையர்களாக இருந்த ஆதி டட்ச்காரர்கள், ஊர் விட்டு ஊர் வந்தவுடன் முதலீட்டாளராக மாறுகிறார்கள். அதே போல் லஞ்ச அமைச்சரும் தன்னுடைய திருட்டுப் பணத்தைக் கொண்டு பிரெஞ்சு நாட்டில் செல்வந்தராகிறார்.

ஏழ்மையை விவரிக்கும்போது பச்சாதாபத்தை சிலர் உருவாக்குவார்கள். அதன் மூலம் பணத்தை நன்கொடையாக வழங்கும் எண்ணம் உருவாகும். சிலர் பசியையும் பட்டினியையும் காரண காரியத்தோடு விளக்குவார்கள். அதன் மூலம் அறிவும் தர்க்கமும் பெருகுவதாக நினைப்பு உருவாகும். இந்தக் கதையில் வறியவர்களின் நிலை, இயற்கையைப் போல் சூறாவளியாக, இயற்கையாக தரப்படுகிறது. இயற்கை நிகழ்வு நடந்தபிறகுதான் தெரிந்து கொள்ள முடிகிறது. கொஞ்சம் அசௌகரியமாக இருக்கிறது. கொஞ்சம் போல் ஆத்திரமும் கோபமும் எழுகிறது. பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றுகிறது.

கதையின் உவமைகளும் செழுமையானவை.

தன்னுடைய கொட்டில் கதவை மெல்ல முட்டும் பசு போல் அமைச்சருடைய கையை வேலைக்காரி பற்றினாள்.

அமைச்சர் கட்டப் போவதாக சொல்லி பாதியில் நிற்கும் அணைக்கட்டைப் பார்த்தால் கிரேக்க காலத்து நாடக மேடையின் காலி இருக்கை போல் தென்பட்டது.

கதையின் முடிவு எல்லாவற்றையும் விட அதிர்ச்சியானவை. நல்லவன் வாழ்வான்; அல்லது செய்தவன் அழிவான என்னும் நீதிக்கதை படித்து வந்தவனுக்கு, இந்த முடிவு ஏற்பில்லைதான். ஆனால், நிஜத்தில் அதுதானே நடக்கிறது?

நன்றாக எழுத என்ன தேவை?

ஏழாம் வகுப்பு இறுதித் தேர்விற்கு மகள் தயாராகிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு உதவும் நோக்கில் சில கட்டுரைகள் படிக்க ஆரம்பித்தேன். அவள்தான் எடுத்துக்காட்டுகளை பரிந்துரைத்து படிக்க வைத்தாள்.

சென்ற வருடம் பரீட்சை எழுதியவர்களின் பதில்கள்தான் இந்தக் கட்டுரைப் பரீட்சையில் என்ன கேள்விகள் கேட்கிறார்கள்?

1) உங்கள் வாழ்வை இன்னொருத்தராக வாழ நினைத்தால், எவராக மாறுவீர்கள்?
2) மற்றொரு நாட்டில் பத்தாண்டுகளாவது வசிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டால், எந்த இடத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?
3) ஒருவரிடம் எந்த குணாதிசயம் அவசியம் அமைந்திருக்க வேண்டும்? ஏன்?
4) பள்ளி அல்லாமல், பிற இடங்களில் நீங்கள் கற்றுக் கொள்ளும் ஏதாவது ஒரு செயலையோ, கலையையோ, நுட்பத்தையோ, சொல்லுங்கள். அது எப்படி உபயோகமாகும் என்பதையும் எதனால் ஆர்வத்துடன் தெரிந்து கொள்கிறீர்கள் என்பதையும் சொல்லுங்கள்.

இப்படி, எல்லாமே சுயம் சார்ந்த கட்டுரைகள்.

பள்ளியில் இரண்டு மணி நேரம் தந்திருக்கிறார்கள். முதலில் ஒரு அரை மணி நேரம் குறிப்பெடுக்கிறார்கள். யோசிக்கிறார்கள். அதன் பிறகு கடகடவென எழுதி விடுகிறார்கள். நான் படித்தவை பெரும்பாலும் நல்ல கட்டுமானத்துடன் நீளமான கட்டுரைகள். 1500 வார்த்தைகளாவது இருக்கும்.

ஒருவர் Zeus ஆகப் போவதாக எழுதியிருந்தார். ஏ4ல் நான்கைந்து பக்கங்கள் நீளம். செம சுவாரசியம். நடை மட்டும் இனிப்பாக இல்லாமல், ஜீயஸ் பற்றிய தகவல்களும் எக்கச்சக்கம். சாதகங்களைப் பட்டியலிட்டார்; பாதகங்களையும் தற்குறிப்பேற்று விளக்குகிறார். இயல்பான நகைச்சுவை. முதல் இரண்டு பத்தியில் ‘யாராகப் போகிறாரோ!’ என்னும் ஆர்வத்தைத் தூண்டினார்.

இதே போல் பத்து, பனிரெண்டு கட்டுரைகளை வாசித்தேன். மேற்கத்திய உலகில் ‘எப்படி எழுதுவது?’ என்பதை சின்ன வயதில் இருந்தே கற்றுக் கொடுக்கிறார்கள். தொடர்ச்சியாக, ஒவ்வொரு வகுப்பிலுமே, எழுதுவதை ஊக்குவிக்கிறார்கள்.

நான் படித்த காலத்தில் திருக்குறளுக்கு உரையாகட்டும்; உரைநடைக்கு பதிலாகட்டும். இம்மி அகன்றால் கூட மதிப்பெண் கிடைக்காது. இப்பொழுதைய நிலை எப்படியோ!?

ஆங்கிலப் பாடத்திலும் கற்பனைக்கும் சொந்தத் திறமைக்கும் பதில் இலக்கணம் பிசகாத எழுத்தில் மட்டுமே கவனம் கொண்டிருப்போம். மேற்கிலும் இலக்கணத்திற்கு மரியாதை கொடுக்கிறார்கள். ஆனால், தன்னிலை சார்ந்த நீள் கட்டுரைகளையும், படித்துப் பார்த்து புரிந்து கொண்டதற்கான வாசக அனுபவங்களையும் விரிவாக எழுத வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இணையத்தில் தமிழ் எழுத்துகள் நிறைய கிடைக்கிறது. எனக்குத் தமிழில் எழுதத் தெரிவதால் தமிழ்ப்பதிவுகளை உருவாக்குகிறேன். சிந்திக்கத் தெரிந்ததாலோ, சிரிக்க வைக்கத் தெரிவதாலோ, தமிழ்ப்பதிவுகளை உருவாக்கவில்லை.

இது உருவாக்கும் சாராரின் நிலை. இதை உட்கொள்பவரின் மனநிலையில் இருந்து இன்னொரு தன்னிலை விளக்கம் கொடுப்பேன். ஆனால், இரண்டையுமே நான் சரியாக செய்வதில்லை என்றே எண்ணுகிறேன்.

சுயமனை புகுதல்: செய்தொழில் ஆக்கமும் தன்வினை ஊக்கமும்

எது வேலை செய்யாவிட்டாலும், யாரையாவது அழைத்து சரி செய்வது பால்ய கால வழக்கம். ஃப்யூஸ் போய் விட்டதா… எலெக்ட்ரீஷீயனை கூப்பிடு. மோட்டார் ஓடவில்லையா… ரிப்பேர் செய்பவர் வீடு வரை சென்று கையோடு அழைத்து வா.

இப்படி வளர்ந்தவனை, லைட் பல்ப் மாற்றுவது; உடைந்ததை சரி செய்வது என்று ஹாஸ்டல் வாசம் கொஞ்சமாக மாற்றியது. அமெரிக்கா வாசம் இன்னும் கொஞ்சம் மாற்றியிருக்கிறது.

கொஞ்சம் மாற்றியதற்கு அடையாளமாக பாத்ரூம் சிக்கல்களை சீர் செய்து, அதன் ஆய பயனைக் கண்டு பெருமிதமும் பெற ஆரம்பித்திருக்கிறேன்: Unclog a Stopped Bath Drain – Lowe’s Creative Ideas

ஒரு மணி நேரத்திற்கான சாஃப்ட்வேர் எஞ்ஜினீயர் சம்பளமும் தச்சர் சம்பளமும் கிட்டத்தட்ட சமம். என்னுடைய சனி, ஞாயிறுகளை சும்மா கழித்துக் கொண்டு வீணாக்காமல், நாலு காசு சேமிக்க வேண்டுமானால், நானே ப்ளம்பர் ஆகவும், நானே மர வேலை செய்பவன் ஆகவும் மாறுவதுதான் ஆக்கபூர்வமான செயல்.

இந்த மாதிரி அமெரிக்காவும் வரும் ஒவ்வொருவம் அமெரிக்கக் கலாச்சாரத்திற்கு மாறுவதற்கு பெயர் ‘மெல்டிங் பாட்’ – கலந்துருகும் கலயம்.

இதற்காகவே ஹோம் டிப்போவும் லோவ்சும் வாரயிறுதிகளில் பயிற்சி வகுப்பு எடுக்கிறார்கள். முற்றிலும் இலவசமாக. அதற்கு எல்லாம் போய் ’இயல், இசை, நாடகம் எல்லாம் அறிய வைத்தாய்… தேவீ’ என்று அறிவிப்பதற்கு பதில் சோபாவில் பஜ்ஜியும் தொலைக்காட்சியில் ‘கண்ணா லட்டு திங்க ஆசை’யும் பார்ப்பதற்கும் அமெரிக்காவில் பெயர் உண்டு – சாலட் பார் (பழ/காய்கறிக் கலவை சந்தை)

பொன்னம்மாள் பக்கம் in தீபம்

நன்றி: http://www.kalkionline.com/deepam/2012/sep/20092012/deepam0901.php

தென்றல் மாத இதழ்: மே 2012: ஆர். பொன்னம்மாள் – அரவிந்த்

நன்றி: எழுத்தாளர் பகுதி: அமெரிக்காவில் வெளியாகும் தென்றல் பத்திரிகை

தமிழ்ப் படைப்பிலக்கிய உலகில் வரலாறு, சமூகம், நகைச்சுவை போன்றவற்றைப் போலவே ஆன்மீகத்திற்கும் மிக முக்கிய இடமுண்டு. ஆறுமுக நாவலர் தொடங்கி வேதநாயக சாஸ்திரியார், ரா. கணபதி, பரணீதரன், மணியன், லக்ஷ்மி சுப்ரமணியம் எனப் பலர் இதன் வளர்ச்சிக்குப் பங்காற்றியுள்ளனர். இவர்கள் வரிசையில் மூன்று தலைமுறைகளாக எழுதி வருபவர் ஆர். பொன்னம்மாள். இவர், மே 21, 1937 அன்று சென்னை, திருவல்லிக்கேணியில் ராமசுப்ரமண்யம்-லக்ஷ்மி அம்மாள் தம்பதியினருக்கு மகளாகத் தோன்றினார். பள்ளிப்படிப்பு சென்னையில். ஏழு வயதில் தந்தையை இழந்தார். அதன் பின் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே இவரால் கற்க முடிந்தது. குடும்பம் கல்லிடைக் குறிச்சிக்குக் குடி பெயர்ந்தது. சிறுவயதில் படித்த அம்புலிமாமா, ஜில்ஜில், டமாரம், பாப்பா மலர், பாலர் மலர், கல்கண்டு போன்ற பத்திரிகைகள் இவரது வாசிப்பார்வத்தைத் தூண்டின. வளர வளர கல்கி, தேவன், பி.எஸ். ராமையா, எஸ்.வி.வி., எல்லார்வி, லக்ஷ்மி போன்றோர் எழுதிய நூல்கள் படிக்கக் கிடைத்தன. அவை இவரது அறிவை விசாலமாக்கியதுடன் எழுதும் ஆர்வத்தையும் தூண்டின.

தனது வீட்டைச் சுற்றி வசித்த குழந்தைகளுக்கு தினமும் கதைகள் சொல்வது வழக்கமானது. ‘தமிழ்நாடு’ இதழ் அறிவித்த சிறுகதைப் போட்டிக்கு சிநேகிதி ருக்மிணியின் தூண்டுதலால் ஒரு சிறுகதையை எழுதி அனுப்பினார். ஆசிரியரின் பாராட்டுதலுடன் ‘இரட்டைப் பரிசு’ என்ற அச்சிறுகதை பிரசுரமானது. தொடர்ந்து தமிழ்நாடு இதழிலேயே ‘அன்பு மனம்’, ‘வழிகாட்டி’, ‘இன்ப ரகசியம்’, ‘விதி சிரித்தது’, ‘கண் திறந்தது’, ‘சந்தேகப் பேய்’ போன்ற பல சிறுகதைகள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. 1958ல் எஸ்.எம்.சுப்ரமண்யத்துடன் திருமணம் நிகழ்ந்தது. குடும்பப் பொறுப்பு மிகுந்ததால் தொடர்ந்து எழுத இயலவில்லை என்றாலும் புத்தக வாசிப்பும் நேசிப்பும் தொடர்ந்தது. கணவர் ஒரு பத்திரிகை ஆர்வலராக இருந்ததால் பத்திரிகைகள், நாளிதழ்கள் வாசிக்கக் கிடைத்தன. கணவரின் உறுதுணையுடன் ஜோதிடம் மற்றும் சம்ஸ்கிருதத்தை நன்கு கற்றுத் தேர்ந்தார்.

1976ல் தினமணி நாளிதழ், குழந்தை எழுத்தாளர் சங்கப் போட்டி ஒன்றை அறிவித்தது. குடும்பச் சூழலால் அதுவரை எழுதாமலிருந்த பொன்னம்மாள் தனது குழந்தைகளின் தூண்டுதலால் ‘கடவுளின் கருணை’ என்ற சிறுகதையை எழுதி அனுப்பினார். அது பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் பரிசும் கிடைத்தது. தொடர்ந்து சில சிறுகதைகளயும் வானொலி நாடகங்களையும் எழுதிய போதும் முழுமையாக எழுத்தில் ஈடுபட இயலவில்லை. சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் எழுத ஆரம்பித்தார். 1983ல் இவர் எழுதிய ‘கருணை விழிகள்’ என்ற நாவல் தங்கப் பதக்கம் பெற்றது. அது பின்னர் கோகுலத்தில் தொடராக வெளிவந்து சிறுவர்களின் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து தீவிரமாக எழுத ஆரம்பித்தார்.

இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘கடவுளின் கருணை’யை பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டு ஊக்குவித்தது. இவர் எழுதிய ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ள ‘பாண்டுரங்க மகிமை’யை பிரபல கிரி டிரேடிங் நிறுவனம் வெளியிட்டது. தொடர்ந்து எழுதுமாறு அதன் உரிமையாளர் கிரி ஊக்குவிக்கவே பல நூல்களையும், ‘காமகோடி’ இதழுக்காகப் பல்வேறு, கதை, கட்டுரை, வரலாற்றுச் சம்பவங்களையும் எழுத ஆரம்பித்தார். குறிப்பாக இவர் குழந்தைகளுக்காக எழுதியிருக்கும் ‘கருணை விழிகள்’, ‘பறவைகள் பலவிதம்’, ‘பொன்மனம்’, ‘திருக்குறள் கதைகள்’, ‘பாட்டி சொன்ன கதைகள்’ (மூன்று பாகங்கள்) போன்ற 50க்கும் மேற்பட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கன. ‘ஸ்ரீமத் பாண்டுரங்க விஜயம்’, ‘சிவலீலை’, ‘நாராயணீயம்’, ‘தேவி திருவிளையாடல்’, ‘கருட புராணம்’, ‘நாலாயிர திவ்ய பிரபந்த விளக்கம்’, ‘பரமாச்சர்யாள் பாதையிலே’, ‘குரு ரத்னங்கள்’, ‘சத்ய சாயி வரலாறு’, ‘மகாபாரதக் கதைகள்’ போன்ற ஆன்மீக நூல்கள் பல பதிப்புகள் கண்டவையாகும். குறிப்பிடத்தக்க வகையில் சில நாடகங்களையும் பொன்னம்மாள் எழுதியிருக்கிறார். அவற்றில் சிலவற்றுக்குப் பரிசும் கிடைத்துள்ளது. குழந்தை இலக்கியம், ஆன்மீகம், நாவல், சிறுகதை, வாழ்க்கை வரலாறு என 90 நூல்கள் வரை எழுதியிருக்கும் பொன்னம்மாளின் படைப்புகளை வானதி பதிப்பகம், நியூ ஹொரைஸன் மீடியாவின் தவம் பதிப்பகம் போன்றவை தொடர்ந்து வெளியிட்டு ஊக்குவித்து வருகின்றன. இவரது நூல்களுக்கு தமிழக அரசுப் பரிசு, மத்திய அரசின் சிறந்த நூல் விருது, குழந்தை எழுத்தாளர்கள் சங்கப் பரிசு, ஏவிஎம்மின் தங்கப் பரிசு, ஸ்டேட் பாங்க் பரிசு, பபாசி விருது, குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா விருது போன்றவை கிடைத்துள்ளன.

“இன்றைக்கு டிவி மற்றும் பெரியவர்களின் ஒத்துழைப்பின்மை குழந்தை இலக்கியத்தை நசிய வைத்திருக்கிறது. குழந்தைகளும் சீரியல் பார்ப்பதற்கு ஃபோர்ஸ் செய்யப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் விளைவு குழந்தைகள் தங்களின் உலகத்தை இழக்கிறார்கள். முன்பு பெரியவர்கள் குழந்தைகளை ஒதுக்கும்போதோ, ஒதுங்கும்போதோ – புத்தகம் தோழன் ஆனது. புத்திசாலித்தனம் வளர்ந்தது. ஆனால், இன்று டிவி வீட்டுக்குள் வந்துவிட்டபின் நிலைமை மாறிப்போய் விட்டது” என்று கூறும் பொன்னம்மாள், “சிறுவர் இலக்கியத்தில் அழ. வள்ளியப்பாவுக்குப் பிறகு பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. அறிவியல் சமாசாரங்களை ஈ.எஸ். ஹரிஹரன் எளிய முறையில் கதைகள் மூலமாக சொல்கிறார். தாவரங்கள், மிருகங்கள் குறித்த வாண்டுமாமாவின் புத்தகங்கள் குறிப்பிடத்தக்கனவாய் இருக்கின்றன. மா.கோதண்டராமன் எழுதிய அறிவியல் கட்டுரைகள் ஆழமாகவும் சுவையாகவும் சிறுவர்களுக்கு ஏற்ற முறையில் இருக்கும். பூவண்ணன் நடைமுறைக்கு ஏற்ப புனைகதைகள் படைக்கிறார். சௌந்தர் எழுதும் குழந்தைகளுக்கான படைப்புகளும் அவசியம் சிறுவர்களின் புத்தக அலமாரியில் இருக்கவேண்டும். ஆனால் இன்று குழந்தை இலக்கிய வளர்ச்சி மிகவும் பின்தங்கியே இருக்கிறது” என்று வருந்துகிறார்.

இன்றைய சிறார் இதழ்கள் குறித்து, “குழந்தைகளே எழுதும் புதிர்கள், ஓவியங்கள் அவர்களின் திறமையை வெளிப்படுத்துகிறது. தமிழார்வத்தையும் வளர்க்கிறது. குழந்தைகளுக்கு மட்டும் நடத்தப்படும் சிறுகதைப் போட்டி, அறிவியல் போட்டி போன்றவையும் வரவேற்கத்தக்கன. சாதனை புரிந்தவர்கள், ரோல் மாடல்கள், பல்துறை விற்பனர்கள், உடல் ஊனமுற்றவர்கள் என பலரின் வாழ்க்கை குறிப்புகளும், சரிதைகளும் குழந்தைகளுக்கு ஊக்கம் கொடுக்கிறது. தூண்டுகோலாக அமைகிறது.” என்கிறார். “குழந்தைகள் ஈரமண். அனைத்து ஊடகங்களும் பத்து சதவீதமாவது முழுக்க முழுக்க வயதுவாரியாகக் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். பொறுமை, முன்னேற்றம், தன்னம்பிக்கை, அன்பு, பணிவு, சேமித்தல், ஆடம்பரம் தவிர்த்தல், நேரம் விரயமின்மை, காலங்கள் மாற்றம், கனவு, நம்பிக்கை போன்றவற்றை விதைத்து வருங்காலத்திற்குத் தயார் செய்ய வேண்டும்” எனச் சொல்லும் பொன்னம்மாளின் வேண்டுகோள் அவசியம் ஊடகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

இன்றும் இளைய தலைமுறையினருக்கு இணையாக எழுத்துப் பணியை மேற்கொண்டு வருகிறார் ஆர். பொன்னம்மாள். எழுத்தாளர், கட்டுரையாளர், விமர்சகர் பாஸ்டன் பாலாஜி இவரது மகன்.

S Ramakrishnan’s Felicitation Function: Canada’s Iyal Award Event at Chennai by Uyirmmai

’உலக நாயகன்’ விஸ்வரூபம் எடுக்கும் பத்மஸ்ரீ கமல் தோழர் கு ஞானசம்பந்தன் உரை

கவிப்பேரரசு வைரமுத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு

இரண்டாம் பாகம் (தொடர்ச்சி)

எஸ் ராமகிருஷ்ணன் ஏற்புரை

35th Chennai Book Fair: Videos and News: Inauguration by Speaker Jeyakkumar

முந்தையக் குறிப்பு: 35th Chennai Book Fair 2012: Inauguration And Award Function

தினமணி செய்திக் குறிப்பு

1. 35வது சென்னை புத்தகக் கண்காட்சி: தொடக்க விழா: விருது வழங்கல்: ஆர் பொன்னம்மாள் – குழந்தை எழுத்தாளர்

2. சென்னை நிகழ்வுகள்: புத்தக விழா: 2012: குத்துவிளக்கு தொடக்கம்: இலக்கிய நிகழ்வுகள்

3. 35th Chennai Book fair Videos: Youtube Links: Publisher Exhibitions: BAPASI: Best Children Writer Awards: Prizes for Kids’ Author

35th Chennai Book Fair 2012: Inauguration And Award Function

Earlier Post: அழ வள்ளியப்பா நினைவு விருது: சிறந்த குழந்தை எழுத்தாளர்

R Ponnammal: Awards, Prizes and Life Notes

முந்தைய குறிப்புகள்: ஆர் பொன்னம்மாள் விருதுகளும் அவார்டுகளும்

Noted Kids Author - Book Writer

Achievements - Prizes -Recognition - Josiyam - Jothidam - Aanmeegam - Religion

Ponnammal - Tamil author and Writer on Religion, Gokulam, Kamakoti, Vanathy

Ponnammal - Madras Kuzhandhai Ezhuthaalar sangam - AVM: Kizhakku Pathippagam

Kids and Children Writers: Tamil Authors: Book Publishers: Palaniappa Brothers: Giri Trading

Ponnammal - Thamil Publishers - Noted Writers and Authors