Tag Archives: Wars

ட்ரம்ப் ஏன் ஜெயித்து விடுவார்?

  1. ஏற்கனவே லோக்சபா (காங்கிரஸ் எனப்படும் ஹவுஸ் ஆஃப் ரெப்ரசேண்டேடிவ்ஸ்) அவரின் கட்சி கைவசம். செனேட் எனப்படும் மேல்சபையிலும் அவர்களே பெரும்பான்மை ஆகப் போகிறார்கள். ஜனாதிபதியும் ரிபப்ளிகன் ஆக இரண்டாண்டுகளாகவது இருக்கட்டும் என மாற்றம் வேண்டுவோரின் வாக்கு விழும்.
  2. வந்தாரை வாழவைக்கும் அமெரிக்கா – இப்பொழுது வந்தேறிகள் மேல் ஆத்திரம் கலந்த கலக்கத்தில் இருக்கிறது. கமலா இந்தியர் – புலம்பெயர்ந்தோர் தானே!? என எண்ணுவோரின் வாக்கு ட்ரம்பிற்குக் கிடைக்கும்.
  3. எங்கே பார்த்தாலும் வாய்க்கால் தகராறு; உலகெங்கும் குட்டி குட்டி சண்டைகள்; உக்ரெயின், இரான், இஸ்ரேல், சூடான், ஜோர்டான், லெபனான் – முடியலடா சாமீ. நிம்மதியா இருக்கணும்னா டொனால்டு வேணும்.
  4. வங்காளத்தில் போர் வேண்டாமா? மேகாலயா தனி நாடாக வேண்டாமா? தய்வான், கொரியா, மியான்மர், மாலி என உலகெங்கும் சின்னச் சின்ன சின்னாபின்னங்கள் உதயமாக வேண்டாம் என நினைக்கும் அமைதிப் பிரியர்களின் ஓட்டு டிரம்பிற்கு விழும்.
  5. பென்சில்வெனியா, நெவாடா, விஸ்கான்சின், மிச்சிகன், வட கரோலினா, ஜியார்ஜியா, அரிசோனா – எல்லாவற்றிலும் ஆண் வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ‘என் இனமடா!’ வர்க்க வங்கி.
  6. காசு… பணம்… .துட்டு… மணி… மணி – நான்காண்டுகளுக்கு முன்பு பணவீக்கம் இப்படி கேவலமாக இல்லை. வேலையில்லா நிரந்தர அன்றாடங்காய்ச்சி திரிசங்கு தொங்கல் இல்லை. அப்பொழுது நல்லா இருந்தோம் என நினைக்கும் வெள்ளையினத்தோரின் ஆதரவு.
  7. குழந்தைகளை தகாத இடத்தில் தொடுபவர் பைடன்; எப்ஸ்டெயின் போன்ற மாமாக்களோடு லீலை நடத்தியவர்கள் டெமொகிரட்ஸ்; ஆட்சியில் இருந்தபோதே அராஜகம் செய்தவர் பில் க்ளிண்டன். ட்ரம்ப் அப்படியெல்லாம் அனுமதியில்லாமல் அத்து மீறாத அழகிய அமெரிக்கமகன் என நினைக்கும் பெண்டிர்.
  8. ஐம்பதாண்டுகள் முன்பு கருப்பர்கள் இருந்த நிலை என்ன… பெண்கள் ஒழுங்காக வேலைக்கு போகாமல் வீட்டில் சமைத்து போட்ட காலம் திரும்ப வருமா! நனவோடையில் மூழ்கிய ‘பழைய நெனப்புதான் பேராண்டி’ வாக்காளர்கள்.
  9. ட்ரம்ப் செய்யாத தவறு கிடையாது; மாட்டாத இடம் இல்லை; அவரின் அந்தரஙம் என்று தெரியாத எந்தப் புதிரும் இல்லை. அவர் பொல்லாதவன் + போக்கிரி + பில்லா II வேண்டும் என நினைப்போர்
  10. துணை ஜனாதிபதியாக கடந்த நான்காண்டுகளாக என்னக் கிழித்து விட்டார் கமலா ஹாரிஸ் என கடுப்பானோர்.

கொசுறு: இப்பொழுது இந்தக் கருப்பர் ஜெயித்தால் மிஷேல் ஒபாமா ஜெயிக்க வாய்ப்பு கிட்டாது என நினைக்கும் உள்வட்ட உயர்மட்ட குழு. கிடைக்கிற வரைக்கும் கொடுக்கிற காசை வாங்கி வைத்தால் ஈரண்டு கழித்து அடுத்த தேர்தலுக்கு அன்னை மிஷேலுக்கு உதவுமே!

குரான்படி நடக்கும் இஸ்லாமியர் யார்?

ஐஸிஸ் பிடியில் இருந்து தப்பித்து வந்த இருபத்தியோரு யெஸிடி பெண்களுடன் ருக்மிணி கலிமாக்கி அவர்களுக்கு பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை நியு யார்க் டைம்ஸில் எழுதியிருக்கிறார். முஸ்லீம் இறையியலின்படி பெண்களை அடிமையாக நடத்துவது மட்டுமல்ல, வன்புணர்வையும் மதக் கடமையாக மேற்கொள்ளவேண்டும் என்பதை ஐஸிஸ் சட்டமாக வைத்திருக்கிறது.

போரின் போது பெண்கள் வன்முறைக்கு உள்ளாவது புதிது இல்லை. ஐ.நா. செயலர் பான் கி மூன் மாதந்தோறும் மன்னிப்புக் கேட்டுகொள்வது மாதிரி ஐ.நா. அமைதி காக்கும் படைகள் முதற்கொண்டு எந்த நாட்டு இராணுவம் அன்னிய நாட்டிற்குள் நுழைந்தால் – பெண்கள் மீது அத்துமீறல் சகஜமாக நிகழ்த்தப்படுகிறது. 2011ல் ஐக்கிய நாடுகள் சபை வெளியிடும் செய்தித்தாளில் இதுதான் தலைப்புச் செய்தி: “காங்கோவிலும் லைபீரியாவிலும் ஐ.நா. அமைதிப்படை மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் குறையத் துவங்கியிருக்கின்றன”

ஆனால், ஐஸிஸ் போர்க்குற்றமாக பெண்கள் மீதான வன்முறையை நடத்துவதில்லை. ஒரு ஊருக்குள் நுழைகிறார்கள். அந்த ஊரை ஆக்கிரமிப்பதற்கான முதல் படியாக, அந்த சிற்றூரில் இருக்கும் சிறுமிகளையும், பெண்டிர்களையும், லாரி லாரியாக அபகரிக்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் அனைவரிடமும் தங்களின் கேள்விப் பட்டியலில் இருந்து விடை கேட்டு குறித்துக் கொள்கிறார்கள். எப்போது மாதப்போக்கு வந்தது போன்ற அந்தரங்கங்களையும் விடாமல் ஒவ்வொன்றாக சொல்லச் சொல்கிறார்கள். ஏனென்றால் கருவுற்றிருக்கும் தாயை பலாத்காரம் செய்யக் கூடாது என்று இறைதூதர் காலத்தில் இருந்த வழக்கத்தை இன்றும் பின்பற்றுவதே காரணம்.

பிறகு, அந்தப் பெண்களை அடிமை ஏலம் விடுகிறார்கள். அடிமையைப் பெற்றுக் கொண்டவரின் கடமை என்ன? முதலில் நமாஸ் செய்யவேண்டும். தொழுகை முடிந்தவுடன் பன்னிரெண்டு வயதுச் சிறுமியை பலாத்காரம் செய்யவேண்டும். அதன்பின் குளித்துவிட்டு, மீண்டும் நமாஸ் செய்து இறைக்கடமையை முடித்துக் கொள்ள வேண்டும். அதன் பின், மீண்டும் அந்த குழந்தை விற்கப்படுகிறார்.

யெஸிடிகள் மீது இன்னும் கோபத்துடன் இந்த வன்முறையை ஐஸிஸ் செலுத்துகிறது. கிறித்துவர்கள் போல், இஸ்லாமியர்கள் போல் ஒரு இறைவர், அவர்களின் தூதர் என்று ஒற்றைப்படையில் இல்லாமல், ஏழு தெய்வங்களை யெஸிடிகள் வணங்குகிறார்கள். அவர்களின் புனித நூல் குரான் போல் பைபிள் போல் எழுத்தில் இல்லாமல், வழிவழியாக முன்னோர்களின் வாய்ப்பேச்சு மூலமாகவே தலைமுறை தாண்டி ஓதப்பட்டு வருகிறது. இதைக் கண்டு ஐஸிஸ், பன்கடவுள் கொண்ட சமூகம் மீது நபிகள் நாயகம் காலத்தில் விளங்கிய நிலையை விரிவாக எடுத்தோந்தும் நூல்களை வெளியிட்டிருக்கிறது. நபிகளும் அவர்களின் தோழர்களும் எவ்வாறு பலதெய்வ வழிபாடு செய்தவர்களை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கினார்கள் என்பதை வழிகாட்டி விளம்பரமாக வெளியிட்டு தங்களின் கோரத் தாக்குதலைத் தொடர்ந்து முன்னெடுக்கிறது.

இன்னும் இந்த நிலையில் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட யெஸிடி பெண்களை கொத்தடிமைகளாக ஐஸிஸ் வைத்திருக்கிறது. இவர்களை எப்படி விற்க வேண்டும், நபிகள் காலத்தில் நடந்த தொன்மையான வழக்கப்படி எவ்வாறு பலாத்காரம் செய்வது, அடிமை வர்த்தகத்தில் ஐஸிஸ் அரசிற்கு எவ்வளவு வரிகட்ட வேண்டும் என்பதை தங்களின் பிரதேசத்தில் சட்டமாக்கி இருக்கிறார்கள்.

முழுக் கட்டுரையை இங்கே வாசிக்கலாம்.

Vanji Kottai Vaaliban and Braveheart: Historical Fiction in Movies

ராகா.காம் செய்யும் மிக உத்தமமான காரியம் என்பது நான்-ஸ்டாப் கன்னலில் பாடல்களை தொடர் ஒலிபரப்பாக கோர்ப்பதுதான். ஒரு நாள் சந்திரபாபு, இன்னொரு நாள் இசையமைப்பாளர் வேதா, என்னும் வரிசையில் இன்று கிளாசிக்ஸ் ஓடிக் கொண்டிருந்தது.

அப்பொழுது வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தில் கொத்தமங்கலம் சுப்பு எழுதி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ‘வெற்றிவேல்… வீரவேல்’ கிடைத்தது.

பல நல்ல புறநானூறு பாடல்களையும் பரணி பாடிய வரலாற்றையும் எழரை நிமிடத்திற்கான நாடகக் காட்சியாக ஒருங்கிணைத்திருக்கிறார்கள். சட்டென்று ‘பிரேவ் ஹார்ட்’ திரைப்படத்தை நினைவிற்கு கொண்டு வந்தது.

ஸ்காட்லாந்து மக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக ஏன் சண்டை போட்டார்கள்? போர்களுக்காக வில்லியம் வாலஸ் எவ்வாறு மக்களை சேர்த்தார்? Offence is the best defense என்பதை தற்கால விளையாட்டு பயிற்றுநர்களுக்கு, அக்கால வரலாறு கொண்டு விளக்கிய படம். மெல் கிப்சன் நடித்த ’பிரேவ்ஹார்ட்’டில் சிலந்தியைப் பார்த்து விடாமுயற்சியைக் கற்றுக் கொண்ட ராபர்ட் ப்ரூஸும் இருந்தார்.

இரண்டுமே பிரும்மாண்டமான போர்ப்படங்கள். வில்லன்களாக அரசர்களைக் கொண்டவை. காதல் நிறையவே உண்டு. இரண்டு நாயகிகள் கொண்ட கதை. வீரதீரம் நிறைந்த நாயகன். 1958ல் தமிழில் வெளியான ‘வ.கோ.வா.’ சூப்பர் ஹிட். ப்ரேவ்ஹார்ட்டும் நல்ல வசூல் கொடுத்தது.

மீண்டும் இந்த மாதிரி சரித்திரத்தையும் மசாலாவையும் தேசப்பற்றையும் சரியாக மிக்ஸ் செய்யும் மசாலாக்கள் எப்பொழுது வரும்?

Steven Spielberg’s Lincoln Movie: Amendments, Wars and Elections

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் எடுத்த ’லிங்கன்’ திரைப்படத்தை தியேட்டரில் பார்த்தேன். ‘லைஃப் ஆஃப் பை’ படத்திற்கு பிறகு பார்த்த படம். உணர்ச்சிகரமாக எடுத்து இருக்கிறார்.

குழந்தைகளுக்கு ஆங்காங்கே அலுப்பு தட்டலாம். ஆங்கிலம் ஓரளவு புரிகிற எனக்கு கூட சில இடங்களில் கவனக்குறைவினால் வசனம் புரியாமல் தவறவிட்டேன். துணை எழுத்து இல்லாமல் படம் பார்ப்பதை தவிர்க்கலாம்.

ஏற்கனவே கென் பர்ன்ஸ் எடுத்தது, பி.பி.எஸ். தொலைக்காட்சியில் வந்தது என நாலைந்து லிங்கன் பார்த்தாலும் ஸ்பீல்பெர்க் லிங்கன் வித்தியாசமானவர். அரசியல்வாதி. சமரசங்கள் செய்து சாதுரியமாக முன்னேற்றத்திற்கு உழைப்பவர்.

போர் என்றால் லட்சக்கணக்கில் பொதுமக்கள் சாவார்கள்; தலைவர்கள் சௌகரியமாக தப்பிப் பிழைப்பார்கள்; பொருளாதார காரணங்கள் இருக்கும் என்றெல்லாம் திரையில் காட்ட ஸ்பீல்பெர்க் வேண்டும்; ஆனால், ஐம்பது மாநிலங்களுக்கு 50 நட்சத்திரங்கள் என்று 36 மாகாணக் கொடி ஏற்றாத சறுக்கல்களுக்கும் ஸ்பீல்பெர்க் மேல் பழி போடவேண்டும்.

வெள்ளையர் மட்டுமே கறுப்பின் சமத்துவத்திற்கு போராடியதாக நிலை நிறுத்துவது படத்தின் மிகப் பெரிய குறை அல்ல; The Last King of Scotland, Blood Diamond, The Help என அது என்றென்றும் ஹாலிவுட்டின் தேய்வழக்கு.

Volker Pispers: Sep 11, Iran vs Iraq, Chile Allende, USA & Germany: Read the Subtitle

தமிழகத்தின் ‘நீயா, நானா’ அரட்டை அரங்கங்களில் உணர்ச்சிமிகு வசனங்கள் நிறைந்திருக்கின்றன. அந்த நிகழ்ச்சி பேச்சாளர்களில் ஒரு சிலராவது இவ்வாறு கோர்வையாக ஒரு மணி நேரம் பேசக்கூடியவராக மாற வேண்டும். வரலாற்றுப் பார்வை, கலாச்சார பின்புலம், அரசியல் கோணங்கள், உலகளாவிய நோக்கு என்று சுவாரசியமான ஸ்டாண்டப்.

சிலியின் அலெண்டெ, சதாமின் இரான் போர், குவைத் எண்ணெய்க் கிணறு, அமெரிக்காவை நெருக்கியிருக்கும் இராணுவப் பொருளாதாரம்… பின்னிப் பிணைந்து நகைச்சுவையும் கலந்து உரையாற்றுகிறார்.

9/11: பத்தாண்டு பலன்

இந்தியாவில் தினசரி குண்டுவெடிப்புகள் நடக்கின்றன. பல்லாயிரக்கணக்கானோர் பசியினாலும் தீவிரவாதத்தினாலும் இறக்கின்றனர். அமெரிக்காவிற்கு அப்படி அல்ல. ஒரே ஒரு நாள். அது மட்டுமே நினைவுச் சின்னம்.

செப்டம்பர் 11, 2001.

பத்தாண்டுகளுக்குப் பிறகு அதன் ஆய பலன் என்ன? எது நடந்தது?

  1. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இராக் போர்
  2. இஸ்லாமிய வெறுப்பு
  3. பொருளாதாரப் பின்னடைவு

இஸ்லாமிய வெறுப்பு – அதீத பயம்

  • 88% – அமெரிக்காவில் அரசாங்கத்திற்கும் மதக்கோட்பாடிற்கும் சம்பந்தம் இல்லை; எனினும், 47% – இஸ்லாமிய சிந்தனைகளுக்கு அமெரிக்ககாவில் இடம் இல்லை.
  • 83% – நார்வே கிறித்துவர் மாதிரி கொலையாளிகளை கிறித்துவர் என்றே சொல்ல இயலாது; எனினும், 48% மட்டுமே – முஸ்லீம் தீவிரவாதிகளை, இஸ்லாமுடன் தொடர்புபடுத்தி, அடையாளம் காண முடியாது என்று எண்ணுபவர்கள்.

  • அமெரிக்காவின் பொது இடங்களில், இஸ்லாமியராகவோ இந்தியராகவோ தோற்றமளித்தால் நீங்கள் விசாரிக்கப் படலாம். உங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் உண்ணிப்பாக கவனிக்கப்படலாம். அதை பயத்தினால் எழுந்த பாதுகாப்புணர்ச்சி என்பதா அல்லது உருவபேதத்தினால் உண்டான நம்பிக்கையின்மை என்பதா? ‘மால் ஆஃப் அமெரிக்கா’ போன்ற புகழ்பெற்ற ஷாப்பிங் இடம் ஆகட்டும்; வருகையாளர்களும் சுற்றுலா விரும்பிகளும் புழங்கும் இடமாகட்டும் – உங்களின் நிறமும் முகமும் இறைச்சின்னங்களும் உங்களுக்கு உபத்திரவமாக அமையும்.

அயல்நாட்டுப் போர்

  • ஆறாயிரம் அமெரிக்க போர் வீரர்களின் மரணம் வெளிப்படையாகத் தெரிகிறது. நட்பு நாடுகளின் இருபத்தி ஆறாயிரத்து சொச்சம் இறப்பு அவ்வளவாக வெளியில் வருவதில்லை.
  • இராக்கில் மொட்டும் ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் குடிமக்கள் செத்திருக்கிறார்கள். அதே போல், பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் சேர்த்தால், மொத்தமாக 225,000 பொதுஜனம் மரித்திருக்கிறார்கள்.

  • இறந்தவர் நிம்மதியாக போய் சேர்ந்தார். ஆனால், குண்டடிப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் கைகளையும் கால்களையும் இழந்து நிற்பவர் எண்ணிக்கை? அமெரிக்க படையில் மட்டும் ஒரு லட்சம். இவர்களுக்கு
    • வேலைவாய்ப்பின்மை
    • மருத்துவ சிகிச்சை தராமை
    • குடும்பத்தினருக்கு ஏற்படும் பளு
    • மனநல மருத்துவம் – போன்றவற்றினால் ஏற்படும் பிரச்சினைகள் கண்டுகொள்ளப்படுவதில்லை.
  • வீடிழந்தோர் எண்ணிக்கை: 7.8 மில்லியன். அமெரிக்காவின் கனெக்டிகட்டும் கெண்டக்கியும் சேர்ந்தால் கூட இந்த மக்கள் தொகையை எட்ட முடியாது. இவ்வளவு சனங்கள், தங்கள் இருப்பிடத்தை விட்டு கூடாரத்தில் வசிக்கிறது.
  • போராளி உருவாக்கம்: பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தானில் தாயையும் தந்தையும் இழந்தவர்களின் மனப்பாங்கு எப்படி இருக்கும்? அமெரிக்காவிற்கு எதிரான் மனப்பான்மை எவ்வாறு வளரும்? தங்கள் உறவினரை பங்கம் செய்த கிறித்துவப் போர் என்னும் எண்ணம் விதைப்பு அவர்களை எப்படி பாதிக்கும்?

பொருளாதாரச் சீரழிவு – கடன் சுமை

இதைக் குறித்து ஒபாமா பேசுகிறார்; காங்கிரஸ் பாராளுமன்றத்தை மிரட்டுகிறார்; சாம, தான, பேத, தண்டம் முயல்கிறார்.
நிதி நிலவரத்தினால் பராக் ஒபாமா எளிதில் தோற்பார் என்று ரிபப்ளிகன் வேட்பாளர்கள் நம்பிக்கையாக இருக்கின்றனர்.

  • இது வரை அமெரிக்காவினால் தொடுக்கப்பட்ட, சிவில் போராட்டாம் முதல் குவைத் ஆக்கிரமிப்பிற்கான இராக் போர் வரை, அனைத்துமே நிதி ஆதாரத்தை அடிப்படையாக வைத்து தொடுக்கப்பட்டது. இரண்டாவது இராக் போர்/ஆப்கானிஸ்தான் படையெடுப்பு மட்டுமே எந்த வித பொருளாதார ஆதாரமும் இல்லாமல் தன்னிச்சையாக, கண்மூடித்தனமான செலவழிப்புகளுடன் நடக்கும் போர்.
    • ஒன்று வரி ஏற்றப்படும் – வருமானம் அதிகரிக்க வழி
    • அல்லது கடம் பத்திரம் வழங்கப்படும் – அதிகாரபூர்வமாக நிதிச்சுமையை தெரிவிப்பது
ஆரம்பித்த இடத்திலேயே முடிக்கலாம். உள்ளூரில் இத்தனை டிரிலியன் டாலர் செலவு; எல்லோருடைய வாழ்விலும் இவ்வளவு கெடுபிடி; உலகளவில் இம்புட்டு கெட்ட பெயர்.
ஆனால், ஒரு மதாலயத்தில் இன்னொரு குண்டு வெடிக்கவில்லை. இன்றும், எங்கும் எவரும் சென்றுவர சுதந்திரமும் பேச்சுரிமையும் இருக்கிறது!

மாலன்: பராக் ஒபாமா: கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையில்…

கறுப்பின அமெரிக்கர் ஒருவர் வெள்ளை மாளிகையில் குடியேறும் வாய்ப்பினைப் பெற்றார் என்ற ஒற்றைச் சரித்திர வரி ஒரு புள்ளி விபரமாக முடிந்துவிடுமா? அல்லது அமெரிக்காவிற்கும், உலகிற்கும் கூட, தேவைப்படும் ஒரு திருப்புமுனையாக மாறுமா?

ஒபாமாவினுடைய தேர்தல் வெற்றியை கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் ஊடகங்கள், முக்கியமாக இந்திய ஊடகங்கள், சித்தரிக்க விரும்புகின்றன. அங்கீகரிக்கப்பட்ட அடிமைத்தனம், பாரபட்சம், இனத்தைத் ‘தூய்மைப்படுத்தல்’ போன்ற இழைகள் கொண்ட அமெரிக்க வராலாற்றின் பின்னணியில் பார்த்தால் ஒபாமாவின் வெற்றி சிறப்பு மிக்கதுதான்.

அமெரிக்கக் கறுப்பினத்தவர்கள் இன ஒதுக்கலை எதிர்த்து மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்கள் போராடியது ஏதோ நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பல்ல, ஒரு தலைமுறைக்கு முன்னர்தான். இன்றும் கூட சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை உலக அளவில் மிக அதிகமாக (2.3 மில்லியன்) இருக்கும் நாடு அமெரிக்கா; அதில் 40 சதவீதம் பேர் கறுப்பினத்தவர்கள்.

ஆனால் ஒபாமாவின் வெற்றி முற்றிலும் இன ரீதியாக ஈட்டிய வெற்றியல்ல. அது ஒரு வகையில் அமெரிக்க நடுத்தர வர்கத்தின் ஆசைகள் விழைவுகள் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக அமைந்த வெற்றி. அதிபரை மையமாகக் கொண்ட அமெரிக்க அரசிய்ல் அமைப்பு பெருமள்விற்கு அங்குள்ள வணிக நிறுவனங்களின் பொருளுதவியைச் சார்ந்த அரசிய்ல் அமைப்பு. Corporate Funded) என்பது உலகறிந்த ரகசியம்.

இந்தப் பின்னணியில் மத்தியதர வர்க்கத்தின் குரலில் பேசும் ஒபாமாவின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் காரணமாகவே அதிபர் ஒபாமாவின் முன் நிற்கும் சவால்கள் வேட்பாளர் ஒபாமாவின் முன்னிருந்த சவாலகளைவிடக் கடுமையானவை. அவரே அவரது பிராசரத்தின் போது சொன்னதைப் போல, புஷ் இருந்த இடத்தில் ஒரு ஜனநாயகக் கட்சி வேட்பாளரை அமர்த்திவிடுவதன் மூலம் மட்டுமே தேவையான மாற்றங்களை ஏற்படுத்திவிடமுடியாது.

“உலகமயமான பொருளாதாரத்தில் சிலர் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு வளம் அடைந்திருக்கும் அதே வேளையில் மத்திய வர்க்க அமெரிக்கர்களது, மத்தியவர்க்கத்தை எட்டிவிட வேண்டும் எனக் கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பவர்களது அமெரிக்கக் கனவு மேலும் மேலும் நழுவிப் போய்க் கொண்டிருக்கிறது” (“While some have prospered beyond imagination in this global economy, middle-class Americans — as well as those working hard to become middle class — are seeing the American dream slip further and further away,”) இவை அயோவா மாநிலத்தில் பிரசராத்தின் போது ஒபாமா சொன்ன வார்த்தைகள்.

ஒரு நிலைக்கு மேல் வளர்ச்சி அடையமுடியாமல் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் நடுத்தர வர்க்கத்தின் இந்த யதார்த்தத்தை ஒபாமா நன்றாக அறிந்திருக்கிறார். இதற்கான தீர்வு என்ன என்பதையும் அவர் சிந்தித்திருக்கிறார்:

இந்த “முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கும் வணிக நிறுவனத் தரகர்களுக்கு எதிராக நாம் எழாதவரை நாம் அந்தக் கனவை மீட்டெடுக்கப் போவதில்லை.மக்கள் எதைக் கேட்கவிரும்புகிறார்களோ அதை அல்ல, அவர்கள் என்ன அறிந்து கொள்ள வேண்டுமோ அதைச் சொல்கிற தலைமை ஏற்படாதவரை நாம் அந்தக் கனவை மீட்டெடுக்கப் போவதில்லை.” (“We’re not going to reclaim that dream unless we stand up to the corporate lobbyists that have stood in the way of progress. Unless we have leadership that doesn’t just tell people what they want to hear but tells everyone what they need to know.”)

இன்று அமெரிக்கப் பொருளாதாரம் இருக்கும் நிலையில் ஓபாமாவால் ‘ முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கும் வணிக நிறுவனத் தரகர்களு’க்கு எதிராக எவ்வளவு தூரம் ஓபாமாவால் செயல்பட முடியும்?அப்படி செயல்பட ஆரம்பித்தால் அவரால் எத்தனை நாளைக்குத் தாக்குப் பிடிக்க முடியும்? முதலீட்டை முதன்மையாகக் கொண்ட (Captalist) பொருளாதார அமைப்பில் ‘கார்ப்போரேட்’களை எதிர்த்து – எதிர்க்கக் கூட் வேண்டாம், புறக்கணித்து விட்டு- செயல்படுவது சாத்தியமா? சாத்தியமில்லை என்றால், ‘கை நழுவிப் போன கனவை’ மீட்டெடுப்பது எப்படி?

இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒபாமா தன் பிராசாரத்தைத் துவக்கியபோது, இராக் போருக்கு எதிரான மனநிலை அமெரிக்க மத்தியதர வர்க்கத்திடம் விரவிக் கிடந்தது. அதிலும் தங்கள் பிள்ளைகளை போர்முனைக்கு அனுப்பிவிட்டு நெருப்பின் மேல் நின்று கொண்டிருந்த தாய்மார்களின் நம்பிக்கை ஒபாமா பக்கம் நின்றது.

இன்று, பொருளாதாரம் உருகி ஓடும் நிலையில், இராக் யுத்தம் நாளிதழ்களில் காணாமல் போய்விட்டது. 16ம் பக்கத்தில் ஆறாம் பத்தியில் 10 செ.மீ செய்தியாகக் கூட இடம் பெறுவதில்லை. ஆனால் அந்த யுத்தம் மக்கள் மனதில் இப்போதும் இருக்கிறது. அந்தத் தாய்மார்கள் நெஞ்சில் அந்த நெருப்பு இப்போதும் கனன்று கொண்டிருக்கிறது. ஆரம்ப நாள்களில் தனது பிரசாரத்தின் போது இராக் யுத்தத்தை வன்மையாகக் கண்டித்துப் பேசி வந்தார். ‘இந்த யுத்தத்தை முதலில் இருந்தே எதிர்த்து வந்திருக்கிறேன்’ என்ற ரீதியில் அவரது பேச்சுகள் இருந்து வந்தன. ஆனால் அண்மைக்காலமாக பேச்சின் தொனி மாறி வருகிறது.

‘தாக்குதல் நடத்தும் படைகள் மெல்ல மெல்ல 16 மாத காலத்தில் மெல்ல மெல்ல விலக்கிக் கொள்ளப்படும்’ என்று சொல்லும் அவர் அதே மூச்சில், ‘எனினும் பயங்கரவதத்திற்கு எதிரான பாசறைகள்’ (bases against counter terror) அங்கே தொடர்ந்து நீடிக்கும் எனறும் சொல்கிறார். அதை விடத் திடுக்கிட வைக்கும் விஷயம், ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானலும் யுத்தத்தை அதிகரிப்பேன் அவை ‘பயங்கரவாதத்திற்கு எதிரான மையமான புள்ளியாக’ விளங்கும் என்ற அவரது அறிவிப்பு.

இவற்றைக் கொண்டு பார்க்கும் போது அதிபர் ஒபாமா ஆட்சிப் பொறுப்பேற்றதும் சில அறிவிப்புக்களை – குவான்டநாமோ கொடுஞ்சிறையை மூடுவது, இராக்கிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவது போன்ற அறிவிப்புக்களை வெளியிடுவார். ஆனால் வெறும் அடையாள அறிவிப்புக்களாகவே (Tokenism)இருக்கும்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ வேறு ஏதோ ஒரு தேசத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.உலகில் உள்ள 195 நாடுகளில் 130 நாடுகளில் தன் ராணுவத்தை நிறுத்தி வைத்திருக்கும் நாடு அமெரிக்கா என்பதை நினைவில் கொண்டால் எந்த அமெரிக்க அதிபரும் சமாதானப் புறாவாக சிறகு விரிக்க முடியாது, பிணந்தின்னிக் கழுகாவே வட்டமுடியும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஒபாமா தனது ஆரம்ப நாட்களின் அடையாள அறிவிப்புகளுக்குப் பின் பொருளாதாரத்தின் பக்கம் தன் கவனத்தைத் திருப்புவார். வேலை வாய்ப்புக்களை அதிகரிக்கும் முயற்சிகளில் ஆர்வம் காட்டுவார். வசதிபடைத்தவர்களுக்கு அதிக வரி, மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் சலுகை, பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களின் சேமிப்பைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள், பலருக்கு மருத்துவக் காப்பீடு போன்ற சில திட்டங்களை அறிவிக்கலாம்.

ஆனால் அவற்றிற்கு அப்பால் பெரும் அற்புதங்கள் நடந்துவிடும் என நான் எதிர்பார்க்கவில்லை.

அற்புதங்கள் நிகழ்த்த அமெரிக்க அரசியல், அதன் அடிஆழத்தில் சுழித்தோடும் நீரோட்டங்கள் இடமளிக்காது. உலகெங்கும் உள்ள மத்தியதர வர்க்கத்து மனிதர்களைப் போல தனது கனவுகளுக்கும், யதார்த்தங்களுக்கும் இடையே ஒரு சம்ன்பாட்டைக் காணுவதிலேயே தனது ஆற்றல்களை செலவிட வேண்டிய ஒருவராகவே அதிபர் ஒபாமா ஆகக்கூடும்.

மாலன்

அரசியல் ஆழிப்பேரலை: மணி மு. மணிவண்ணன்

  • பொருளாதார வீழ்ச்சி.
  • பெட்ரோல் விலை எகிறல்.
  • ஜெனரல் மோட்டார்ஸ் தடுமாற்றம்.
  • அமெரிக்காவின் எதிரிகளின் ஏற்றம்.
  • மத்திய கிழக்கில் அமெரிக்கப் படையினரின் வலுவின்மை.
  • வருங்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மை.
  • அமெரிக்க அதிபரின் மீது ஏமாற்றம்.

இத்தனையும் இருந்தும் தேர்தல் நாள்வரை ஆளுங்கட்சியின் வேட்பாளர் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சியின் வேட்பாளர் மக்களின் முழுநம்பிக்கையைப் பெறவில்லை.

இது மெக்கேன் ஒபாமா போட்டியைப் பற்றிய செய்தியல்ல.

28 ஆண்டுகளுக்கு முன்னர், 1980இல் அதிபர் கார்ட்டர் – ஆளுநர் ரேகன் போட்டியின் கடைசிவாரச் செய்தி.
“நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட இப்போது நல்ல நிலையில் இருக்கிறீர்களா? நல்ல நிலையில் இருக்கிறீர்கள் என்றால் ஆளுங்கட்சிக்கு வாக்களியுங்கள். இல்லை என்றால் எனக்கு வாய்ப்பளியுங்கள்.” இது குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோனால்டு ரேகனின் அறைகூவல்.

எதிர்க்கட்சி வேட்பாளர் உலக அரசியல் அனுபவமில்லாதவர். அவரைத் தேர்ந்தெடுத்தால், அணுவாயுதங்கள் வெடிக்கும் மூன்றாம் உலகப் போருக்கு ஆயத்தமாகுங்கள். இது ஆளுங்கட்சியான மக்களாட்சிக் கட்சியினரின் மிரட்டல்.

தேர்தல் நாளான நவம்பர் முதல் செவ்வாய்க்கு மூன்று நாள் முன்னர் வரை மக்கள் வேண்டா வெறுப்புடன் அதிபர் கார்ட்டரைத்தான் ஆதரித்தார்கள். ஈரானில் சிக்கியிருந்த அமெரிக்கப் பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் கார்ட்டரின் தோல்வி, 23% அடமான வட்டி வீதம், வேலையில்லாத் திண்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம், பெட்ரோல் சிக்கனப் படுத்தும் சின்ன கார் உற்பத்தியில் அமெரிக்க நிறுவனங்களின் தடுமாற்றம் இவை எல்லாவற்றையும் விட மூன்றாம் உலகப் போரை முடுக்கி விடுவதைப் போல சோவியத் யூனியனை மிரட்டிக் கொண்டிருந்த ரோனால்டு ரேகனைத் தேர்ந்தெடுக்க பயமாகத்தான் இருந்தது. ஆனாலும், அவர் போர் வெறியை விட அமெரிக்காவின் ஏற்றத்தைப் பற்றிய அவரது நம்பிக்கையும், உறுதியும் மக்களை ஈர்த்தது.

தேர்தலுக்கு முந்திய மூன்று நாட்களில் ஓர் அரசியல் பேரலை எழும்பியது. அந்த அலையின் தாக்கத்தில்தான் அரசாங்கம் என்பது மக்களின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை என்ற கொள்கை அமெரிக்க அரசியலின் தாரக மந்திரமாயிற்று. தனி மனிதர்கள், அவர்களது நிறுவனங்கள், அவர்கள் பொருளாதாரச் சந்தை, இவை அரசாங்கத்தின் சங்கிலிகளிலிருந்து விடுவிக்கப் பட்டால் மாபெரும் பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற ஏயின் ரேண்ட் கொள்கைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அப்படி வந்தவர்களில் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேனும் ஒருவர்.

1929இல் பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்குப் பின்னர் அரசாங்கம் கொண்டு வந்த எல்லாக் கட்டுக்கோப்புகளையும் உடைத்தெறியும் முயற்சியில் இவர்கள் ஈடு பட்டனர். அரசு விதிக்கும் வரி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை போகும் முதலீட்டைப் பறித்து சோம்பேறிகள் சுகமாக வாழ வழிவகுக்கும் போதைப் பொருள் என்பது இவர்கள் வாதம். ஏழ்மைக்குக் காரணம் சோம்பல் என்பது இவர்கள் கூற்று. எதிரி நாட்டுகளைக் கட்டுப் படுத்தவும் அமெரிக்க நிறுவனங்களுக்கு உதவவும் மட்டுமே அரசாங்கம் தேவை என்ற பொருளாதார அடிப்படை வாதம் இவர்கள் அடிநாதம்.

1932-ல் அதிபர் பிராங்க்ளின் டெலினோ ரூசவெல்ட் உருவாக்கிய முற்போக்குக் கூட்டணியை உடைத்தெறிய இவர்கள் அதிபர் நிக்சன் தந்திரங்களைப் பயன்படுத்திப் பிற்போக்குச் சக்திகளைத் திரட்டி மாபெரும் கூட்டணி ஒன்றை அமைத்தார்கள்.

  • மதவாதப் பிற்போக்கு சக்திகள்,
  • இனவாதப் பிற்போக்கு சக்திகள்,
  • பொருளாதாரப் பிற்போக்கு சக்திகள்

இவை அனைத்தும் ஒரே கூடாரத்தில் ரேகன் தலைமையில் கூடின. ரூசவெல்ட் தலைமையில் உருவான முற்போக்கு அரசு அமைப்புகள் மக்களின் வரிப்பணத்தை அட்டை போல் உறிஞ்சிக் கொண்டு ஊழலில் ஊறியிருந்தது இவர்களுக்குச் சாதகமாக இருந்தது.

உழைப்பவர்களுக்கு வரி, சோம்பேறிகளுக்கு அரசு சலுகையா? என்ற இவர்கள் அறைகூவல் வரிகளை நம்பியிருந்த அரசாங்கத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்தது. “வரி விதி, செலவு செய்” என்பதுதான் மக்களாட்சிக் கட்சியின் கொள்கை என்று இவர்கள் கட்டிய பட்டம் இன்று வரை மக்களாட்சிக் கட்சியை மிரள வைத்துக் கொண்டிருக்கிறது. 1992-ல் அதிபரான பில் கிளின்டனும் கூட இந்தப் பேரலையின் தாக்கத்தை எதிர் கொள்ள முடியாமல் இவர்களோடு ஒட்டி உறவாடிக் கொண்டே முற்போக்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

ரேகனின் பேரலையை வானளாவ உயர்த்தும் முயற்சியில் எழுந்தவர்தாம் இன்றைய அதிபர் ஜோர்ஜ் டப்யா புஷ். ரேகனைப் போன்ற பேரலையில் ஆட்சிக்கு வராமல், தட்டுத் தடுமாறி ஆட்சிக்கு வந்தாலும் தன்னை ரேகனின் மறு அவதாரமாகக் கருதிக் கொண்டவர் டப்யா புஷ். ரேகனைப் போலவே அரசு அமைப்புகளைச் சற்றும் நம்பாதவர் இவர். வாஷிங்டன் மக்கள் வரிப்பணத்தில் வாழும் அட்டைகள் நிரம்பிய குட்டை என்பது இவர் கொள்கை.

ரேகன் கொள்கைகளின் அடித்தளமே ஆடத் தொடங்கியது இவரது ஆட்சியில்தான்.

“கடன் வாங்கு, செலவு செய்” என்ற இவரது பொறுப்பற்ற கொள்கையின் விளைவுகளப் பார்க்கும்போது “வரி விதி, செலவு செய்” என்பது மிகவும் பொறுப்பான செயல் என்றே தோன்றுகிறது. மக்கள் வங்கிக்கணக்குகளைப் பாதுகாக்கத் தனியார் நிதி நிறுவனங்களின் மீது ரூசவெல்ட் ஆட்சி விதித்திருந்த கட்டுப் பாடுகளை வெகுவாகத் தளர்த்தியதில் முன்னணியில் இருந்தவர்கள் டப்யா புஷ், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கேன், மற்றும் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேன்.

என்னென்ன காரணங்களால் 1929 பங்குச் சந்தை வீழ்ச்சி பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்கு வழி வகுத்ததோ அதே காரணங்கள் மீண்டும் மேலெழுவதைப் பற்றிக் கவலைப் படாமல் கிளிப்பிள்ளை போல் அரசுக் கட்டுப்பாடுகள் தளர்ச்சி, செல்வந்தர்கள் வரி குறைப்பு என்ற மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தவர்கள் இவர்கள். இதில் உண்மையிலேயே பொருளாதார நிபுணரான ஆலன் கிரீன்ஸ்பான் அண்மையில் தனது கொள்கைகளால் அமெரிக்க, மற்றும் உலகப் பொருளாதார அமைப்புகள் அனைத்துமே நொறுங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதை உணர்ந்து, தன் கொள்கைகள் இந்த வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதை உணராமல் போய் விட்டதைப் பற்றி வருத்தம் தெரிவித்தார்.

ஆனால், டப்யா புஷ்ஷோ, ஜான் மெக்கேனோ இதைப் பற்றிப் புரிந்து கொண்டிருப்பதாகவோ, வருந்துவதாகவோ தெரியவில்லை. ஒபாமாவைப் பற்றிய மெக்கேனின் குற்றச்சாட்டு என்ன – “ஒபாமாவின் கொள்கை ‘வரி விதி, செலவு செய்’ – ஒபாமாவைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் வரி கூடும்” என்பதே. புஷ் – மெக்கேனின் ‘கடன் வாங்கு, செலவு செய்’ கொள்கையால் மக்களின் 401(k) ஓய்வுநிதிக் கணக்குகள் பேரிழப்புக்கு ஆளாகிக் கொண்டிருப்பதைப் பற்றி இவர்கள் வாயைத் திறக்க மாட்டார்கள்.

செப்டம்பர் 11 தாக்குதல் இவர்கள் கண்காணிப்பில்தான் நடந்தது. நியூ ஆர்லியன்ஸ் நகர் இவர்கள் ஆட்சியின் கீழ்தான் மூழ்கியது. ஓசாமா பின் லாடனின் முடியைத் தொடக்கூட இவர்கள் வக்கற்றவர்கள். ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களிலும் இவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஆட்சியின் கீழ்தான் பங்குச் சந்தையின் பெரு வீழ்ச்சியும், பொருளாதாரப் பெருவீழ்ச்சியும் தொடங்கியுள்ளன. இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் அரசாங்கக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவதற்குப் பதிலாக அரசாங்கத்தையே தளர்த்தும் மனப்பான்மை.

இதை மாற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் எத்தைகைய மாற்றம்? மெக்கேனுக்கும், டப்யாவுக்கும் அரசாங்கத்தைப் பற்றிய கொள்கைகளில் வேறுபாடு இல்லை. கடன் வாங்கிச் செலவு செய்யும் கொள்கையிலும் வேறுபாடு இல்லை. புஷ்ஷுக்குப் பதிலாக மெக்கேன் வந்தால் மட்டும் பெரிதாக என்ன மாற்றம் இருக்க முடியும்?

ஆனால், மக்களாட்சிக் கட்சியின் கொண்டு வரும் மாற்றம் என்ன?

அதற்கு எடுத்துக்காட்டு ஒன்றைப் பார்ப்போம்.

1989-ல் டப்யா புஷ்ஷின் தந்தை ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் ஆட்சியின் கீழ் சான் ஃபிரான்சிஸ்கோ நகரம் நிலநடுக்கத்தால் விளைந்த சேதங்களால் திணறியது. முக்கியமான பல மேம்பாலங்கள் சுக்கு நூறாகின. அவற்றை மீண்டும் கட்டி முடிக்கப் பல ஆண்டுகளாகின. நகரத்தின் வளர்ச்சி மட்டுப் பட்டது. பின்னர் 1992-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகரம் இனக் கலவரத்தால் பற்றி எரிந்தது. நாட்டின் அதிபர் புஷ்ஷும் சரி, கலிஃபோர்னியா மாநில ஆளுநர் வில்சனும் சரி நகரத்தைக் காப்பாற்ற முன் வரவில்லை. லாஸ் ஏஞ்சலஸ் நாதியற்றுத் தவித்தது.

1994-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்குள்ளே நார்த்ரிட்ஜில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தால் மிகுந்த சேதம் அடைந்தது. நிலநடுக்கத்தின் சேதம் தெரிந்த சில மணி நேரத்துக்குள் அதிபர் பில் கிளின்டன் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் மீட்சித் திட்டத்துக்கு வழி வகுத்தார். அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் இவர்கள் அனைவரும் நிலநடுக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்போதும் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு விரைந்து மீட்சிப் பணிகளைத் தொடங்கினார்கள். சில மாதங்களுக்குள் நகரத்தின் உடைந்த மேம்பாலங்கள் மீண்டும் கட்டப் பட்டன. பெருவீதிகள் சீரமைக்கப் பட்டன. நில நடுக்கத்தின் அடையாளமே தெரியாத அளவுக்கு நகரமும் புத்துணர்ச்சி பெற்று வளரத் தொடங்கியது. நல்ல அரசாட்சி என்பதற்கு இலக்கணம் வகுத்தார் பில் கிளின்டன். அவரது ஆட்சியின் கீழ் அமெரிக்கப் பொருளாதாரம் பெரு வளர்ச்சி நிலையை எட்டியது. ஏனென்றால், அரசாங்கத்தின் தேவையை முற்றும் உணர்ந்தவர் அவர்.

2008 தேர்தலின் முக்கியக் கொள்கைப் போராட்டம் இதுதான். அரசாங்கத்தின் தன்மை என்ன? அதன் தேவை என்ன?

குடியரசுக் கட்சிக்காரர்கள், அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்கள் அரசியல் எதிரிகளைப் பழி தீர்த்துக் கொள்வார்கள். தங்கள் மத நம்பிக்கைகளை மேம்படுத்துவார்கள். ஊழல் செய்யும் பெரு நிறுவனங்களைச் செல்லமாகத் தட்டி அனுப்பி விடுவார்கள். ஆனால், வெளிநாட்டுக் கொள்கைகளிலும், பொருளாதாரக் கொள்கைகளிலும் கெட்டிக்காரர்கள் என்று எடுத்த பெயரைக் கெடுத்துக் கொண்டுவிட்டார்கள்.

மக்களாட்சிக் கட்சிக்காரர்கள், மக்களின் தனி வாழ்க்கையில் அரசாங்கம் குறுக்கிடுவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் வசதியுள்ளவர்கள் மீது வரி விதித்து வசதியற்றவர்களுக்கு வாழ்வு கொடுப்பது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமை என்று நம்புபவர்கள்.

பொருளாதார வீழ்ச்சி சமயத்தில் இவர்கள் இருவரில் எவர் கொள்கை மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்?

1980-ல் கார்ட்டர் காட்டிய பூச்சாண்டிகளையும் மீறி மக்கள் ரேகனை வாக்குப் பேரலை மூலம் தேர்ந்தெடுத்தார்கள். 2008-ல் ரேகன் பேரலை வடியும்போது மெக்கேன் காட்டும் பூச்சாண்டிகளையும் மீறி ஒபாமா பேரலை எழுந்து கொண்டிருப்பது புலப்படுகிறது.

அமெரிக்க வரலாற்றிலேயே முக்கியமான தேர்தல் இது என்று பலர் கருதுகிறார்கள். ஆனால், அமெரிக்க வரலாற்றிலேயே மிக முக்கியமான தேர்தல் எட்டாண்டுகளுக்கு முன்னர் நடந்தது. புதிய ஆயிரத்தாண்டு தொடங்கும்போது தேர்ந்தெடுக்கப் பட்ட ஜார்ஜ் டப்யா புஷ்ஷின் திறமையின்மை அமெரிக்க வல்லரசின் சறுக்கலுக்கு வித்திட்டு விட்டது. கடந்த எட்டாண்டுகளில் அவர் செய்தவற்றின் பின் விளைவுகளில் இருந்து மீளப் பெரு முயற்சி தேவைப்படும்.

ஒபாமா அதிபராகத் தேர்தெடுக்கப் பட்டால் குறைந்தது அமெரிக்கச் சறுக்கல் நிதானப் படலாம். புஷ்ஷின் கொடுங்கோலாட்சியின் கடுமையான விளைவுகளால் வாடும் அமெரிக்கா மட்டுமல்ல உலகமே ஒபாமாவின் வெற்றியை வரவேற்கும்.

மணி மு. மணிவண்ணன், சென்னை, இந்தியா.

அமெரிக்கா எங்கு பின்தங்கி இருக்கிறது? – வெங்கட்

4. வெற்றிபெற்ற அடுத்த அமெரிக்க ஜனாதிபதி உங்களை ஆலோசகராக நியமிக்கிறார். என்ன அட்வைஸ் கொடுப்பீர்கள்?

அமெரிக்காவின் உள்விவகாரங்களிலெல்லாம் என்னை ஆலோசனை கேட்கமாட்டார்கள் என்பது சர்வநிச்சயம். எனவே பொதுவில் அமெரிக்காவின் நடப்பு குறித்தும் உலகில் அமெரிக்காவின் பங்கு குறித்துக் கொஞ்சம் சொல்லலாம். இறுதியாக அறிவியல் தொழில் நுட்ப ஆலோசனை கொஞ்சம்.

அரசியல், மதம், ராணுவம், அறிவியலில் பொதுவாக அரை நூற்றாண்டுக்கு முந்தைய சிந்தனையில் தேங்கிப் போகிறார்கள் அமெரிக்கர்கள் என்ற வருத்தம் கலந்த மதிப்பீடு இருக்கிறது எனக்கு.

யுத்தங்கள்

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான உலகில் பரவலாக அமெரிக்காவிற்கு உன்னத பிம்பம் இருக்கிறது. அமெரிக்காவின் வெற்றிகளை (போர் வெற்றிகளையல்ல, ஈடுபட்ட போர்கள் எதிலுமே அமெரிக்கா தீர்மானமான வெற்றியடையவில்லை, இதில் வியட்நாம், குவைத், ஈராக், ஆப்கானிஸ்தான் இன்னும் ராணுவத் தலையீடுகளைக் கொண்ட க்யூபா, சிலி, நிகராகுவா, போன்ற பல விஷயங்களிலும் அமெரிக்கா பெரிதாகச் சாதிக்கவில்லை. ஆனால் சோகமான உண்மை, சரியாகப் பாதி அமெரிக்கர்கள் இந்தத் தோல்விகளையே வெற்றியாகக் கொண்டாடும் மயக்கத்திலிருக்கிறார்கள்).

போர்வீரர்களை முன்னிருத்தும் நிலை அமெரிக்காவில் ஒழிந்தாலேயொழிய அமெரிக்காவிற்கு உலகில் மதிப்பு கூடப்போவதில்லை, உலகிற்கும் அமெரிக்காவின் தொல்லை குறையப்போவதில்லை. எல்லாவற்றையுமே இராணுவத்தால் தீர்த்துவிட முடியும் என்ற அசட்டுத்தனத்தை அமெரிக்கா கைவிட்டாக வேண்டும். ஆனால் ஜார்ஜியாவை நேட்டோவில் கொண்டுவர ரஷ்யாவின் மீது போர் தொடுக்கலாம், அதன் மூலம் ரஷ்யாவிற்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று உளறும் ரிவால்வார் ரீட்டா ஸேரா பேலின் போன்றவர் துனை ஜனாதிபதியாக வந்தால் இதற்கெல்லாம் சந்தப்பம் குறைவுதான்.

புவி சூடேற்றம்

எண்ணைய்க்குத் துளையிடுவதன் மூலம் அமெரிக்கப் பொருளாதாரத்தை வளர்த்துவிட முடியும் என்பது அபத்தமானது. அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கும் உலகளாவியச் சூடேற்றத்திற்குச் செவிமடுப்பதன் மூலம் ஒரு புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும். சூடேற்றத்தின் அச்சுறுத்தலையே ஒரு புதிய துவக்கத்திற்கான வாய்ப்பாக மாற்றும் தீர்க்கம் வரவிருக்கும் அமெரிக்க அதிபருக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்.

மாசுகட்டுப்பாடுகளுக்குத் தடை விதிப்பதன் மூலம் பொருளாதாரம் சரியும் என்பது பொய்க்கூற்று. (குறிப்பிடத்தக் அமெரிக்க முதலாளிகளின் பொருளாதராம அச்சுறுத்தப்படும் என்பதே உண்மை). கடந்த இருபது வருடங்களாகத் தொடர்ச்சியாக மாசுக்கட்டுப்பாட்டை ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க், போன்ற நார்டிக் நாடுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அவர்களின் பொருளாதாரமும் வாழ்க்கைத் தரமும் பிரமிக்கத்தக்க அளவிற்கு முன்னேறியிருக்கிறது.

ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் புதுப் பொருளாதாரத்திற்குத் தங்களைத் தயார் செய்துவருகின்றன. ஆனால் அமெரிக்கா தேக்கநிலையை அடைந்திருக்கிறது. ஹைட் ரோ கார்பன் பொருளாதாரத்தில் விடிவில்லை என்பதை அமெரிக்க அதிபர் உணரவேண்டும். தவிர்க்க முடியாத பொருளாதாரச் சரிவிலிருக்கும் ஜப்பான் கூட இன்றைய பொருளாதார இறக்கத்தை மறுக்காமல் அதேசமயத்தில் வரவிருக்கும் புதுப் பொருளாதாரத்திற்குத் தன்னைத் தயார் செய்துகொள்கிறது.

வளர்நிலையிலிருக்கும் சீனா சில வியக்கத்தக்க முடிவுகளை எடுத்து வருகிறது. இவற்றுடன் ஒப்பிட அமெரிக்கா தேக்கச் சிந்தனையில் இருக்கிறது.

பொருளாதாரம்

வலதுசாரி பொருளாதாரக் கொள்கைகளில் எனக்கு ஓரளவுக்கு நம்பிக்கை உண்டு. ஆனால், இலக்கற்ற வலதுசாரித்தனம் அழிவிற்குக் கொண்டுசெல்லும் என்பதற்கு சமீபத்தில் சரிந்துகொண்டிருக்கும் வீட்டுச் சந்தை உதாரணம். ஃபானி மே, ஃப்ரெட்டி மாக் போன்ற ‘மொதலாளிகள்’ நேர்மையாக இருப்பார் என்று கருதி அவர்களுக்கு முழுச்சுதந்திரம் கொடுத்ததால் வந்த வினை இது. சந்தை தன்னைத்தானே சரி செய்துகொள்ளும் என்பது பெருமளவுக்கு உண்மை என்றாலும் அதற்கான காலத் தேவை மிக அதிகம், அந்த இடைவெளிகளில் பெரும்பாலும் அழிந்துபோகிறவர்கள் ஏழைகளாகத்தான் இருக்கிறார்கள்.

இடது சாய்வுள்ள சந்தைப் பொருளாதாரம் எப்படி சிறப்பாக நடக்க முடியும் என்பதற்கு , ஸ்விட்ஸர்லாந்து, ஃபின்லாந்து, ஸ்வீடனிலிருந்து உதாரணங்களைப் பெறமுடியும். உலகிலேயே இந்த நாடுகளில்தான் வரிகள் மிக அதிகம்; பொருளாதார வளர்ச்சியில் முதல் ஐந்து இடங்களில் இந்த நாடுகள் இருக்கின்றன.

அப்படியான அரசுகள் இரும்புக்கரத்துடன் உலக வல்லரசாக இருப்பது இயலாததுதான், ஆனால் உலக நண்பனாக, ஆதர்சமாக இருப்பது சாத்தியம். குறைகள் இல்லாத மனிதர்களே கிடையாது, எனவே தீர்மானமான வலது/இடது சாரி சிந்தனைகள் ஒருக்காலத்திலும் வெல்லமுடியாது. எப்படி தீர்மானமான கம்யூனிசம் படிப்பதற்குக் கவர்ச்சியாக, நடைமுறையில் சாத்தியமில்லாமல் இருக்கின்றதோ அதே போல முற்றான மூலதனவாதமும் வறட்டுக் கற்பனைதான்.

நெகிழ்ச்சியற்ற பொருளாதாரக் கொள்கைகளால் எந்தப் பயனுமில்லை என்பதை உணர்ந்து அமெரிக்க அதிபர் வறட்டுச் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டவராக இருப்பது அமெரிக்காவுக்கும், பொதுவில் உலகிற்கும் நல்லது.

அறிவியல்

ஊனமுற்றோர், வறியோர், முதியோர், வேலையிழந்தோர், போன்றவர்களைக் காலில் போட்டு நசுக்குவது வலதுசாரிகளின் பொழுதுபோக்கு. ஆனால், தமக்கென்று வரும்பொழுது தற்பால் நாட்டம் கொண்ட மகளை நெருக்கி அணைத்துக் கொள்வார்கள் (டிக் செய்னி), கரு ஆதாரச் செல்களில் (Embryonic Stem Cell) ஆராய்ச்சி நடத்தியாவது அல்ஸைமருக்கு மருந்து காணலாம் (நான்ஸி ரேகன்) என்பார்கள்.

தலைவலியும் திருகுவலியும் தனக்கென வரும்பொழுது தங்கள் குடும்பத்திற்கு மாத்திரம் இடதுசாரிகளாக மாறுவது இவர்கள் வழக்கம். தனிநபர் செல்வத்தாலும், ராணுவ பலத்தாலும் பணக்கார நாடாகவும், வல்லரசாகவும் இருக்கலாம், ஆனால் முழுக்க ஏழ்மையற்ற, அவலங்களற்ற, பயங்களற்ற நல்லரசாக இருப்பது சாத்தியமில்லை. வரப்போகும் அமெரிக்க அதிபர் உன்னதத்தை நாடுபவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

அயல்நாட்டுக் கொள்கை

இராக்கில் அமெரிக்கப் படைகளின் இருப்பை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. எனவே அதைவிட்டு விரைவில் வெளிவருவது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் நல்லது. ஆப்கானிஸ்தானில் படிப்படியாக வெளியேவர முயற்சிக்க வேண்டும்.

சீனாவைப் பற்றிய மயக்கங்கள் நிறைந்த தோற்றம்தான் அமெரிக்காவிலும் உலகிலும் இருக்கிறது; இது பொதுவில் யாருக்குமே நல்லதில்லை. தோழமைகாட்டி சீனாவை வெளியே அழைத்துவர முயற்சிக்க வேண்டும்.

வெனிசூலா, ஈரான் போன்ற நாடுகளிடம் மீசையை முறுக்குவதில் எந்த வீரமும் இல்லை. ஒன்றும் பேசாமலிருந்தாலே போதுமானது. இப்பொழுது இருக்கும் அரசாங்கம் மாறாக அவர்களை உசுப்பேற்றிவிடுவதிலேயே குறியாக இருக்கிறது.

பாரம்பரியம் (பழமைவாதம்)

சிறுவயது முதலிருந்தே அமெரிக்காவில் எனக்கு ஆர்வம் இருந்தது அறிவியல், நுட்பத்தில் அவர்களின் அபார சாதனைகள் வாயிலாகத்தான். தடைகளற்ற ஆர்வம் பெருகும் சிந்தனைகளினால் அமெரிக்கா அறிவியல் உலகிற்கு அளப்பரிய பங்காற்றியிருக்கிறது. கடந்த பத்து/பதினைந்து வருடங்களில் தொடர்ச்சியாக அமெரிக்காவில் அறிவியலுக்கு எதிரான அணுகுமுறை வளர்ந்து வருகிறது (இது ரீகன் காலத்தில் தொடங்கியது; புஷ் இளையர் காலத்தில் உச்சத்தை எட்டியிருக்கிறது).

மதத்தீவிரவாதம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டற்ற சிந்தனை என்ற அமெரிக்க வாழ்முறையை பாறையிடை வேராகப் பிளந்து வருகிறது. வலதுசாரி அரசியல் முழுக்க முழுக்க இதையே நம்பியிருக்கிறது. முன்னெப்போதுமில்லாத அளவிற்கு அறிவியல் சிந்தனைகள் மீது, கற்பித்தல் மீது, அறிவியல் நிர்வாகத்தின் மீது என்று பல முனைகளிலும் அறிவியல் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு வருகிறது.

நானோநுட்பம், உயிர்நுட்பம், மரபியல் தொடங்கி சூடேற்றம், மருத்துவ ஆய்வு என்று பல துறைகளில் இன்றைய ஆட்சியாளர் கேட்க விரும்புவதை மாத்திரமே அறிஞர்கள் சொல்ல வேண்டும் என்று வற்புத்தப்படுகிறார்கள். இந்தப் புற்று நோய் முற்றுமுன் இதிலிருந்து அமெரிக்கச் சிந்தனையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் வரவிருக்கும் அதிபருக்கு இருக்கின்றது. அடிப்படை அறிவியலுக்கான ஆதரவு அமெரிக்காவில் வெகுவாகக் குறைந்து வருகிறது (மறுபுறத்தில் ஜப்பான், சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இது அதிகரித்து வருகிறது).

அறிவியலுக்கு எதிராகத் திரும்பிவரும் அமெரிக்க சமூகத்தை ஒழுங்கமைக்க வேண்டியது வளமையான அமெரிக்க எதிர்காலத்திற்கு முக்கியம்.

5. ஜான் எட்வர்ட்ஸிடம் உங்களுக்கு மதிப்பு இருந்தது. திருமணத்திற்கு அப்பால் உறவு கொண்டதால் அது சரிந்துள்ளதா? அவரின் கொள்கைகள் அப்படியே இருக்கும் பட்சத்தில், பில் க்ளின்டன் பாதம் பணியும் ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சியும் — அவரை நிராகரித்து ஒதுக்குவது எப்படி சரியாகும்?

நாளையுடன் முடியும்

ஜான் மெகெயின் கருத்துப் படங்கள்: பாஸ்டன் க்ளோப்

நன்றி: Boston.com – Opinion – Globe: “Daniel Wasserman :: Globe cartoonist”