Tag Archives: Movies

Paradesi – FIR: Quick Review

பரதேசி பாலாவின் படம். டிஸ்னி படம், ஜேம்ஸ் பாண்ட் படம், குவெண்டின் டாரெண்டினோ படம் என்று சொல்வது போல் பாலாவின் படம் பார்த்து கொஞ்ச நாளாச்சு.

ஆறு படம்தான் செய்திருப்பவருக்கு டிரேட்மார்க் இருக்குமா?

கடவுள் நம்பிக்கையை வைத்து ஏமாற்றுபவரை நையாண்டி செய்வது; ஒடுக்கப்படுபவர்களின் பரிதாப நிலையை கதைக்களானாக்குவது; புதிய முகங்களை கதாபாத்திரங்களாக்குவது; இளகிய மனம் படைத்தோரையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் சமரசமில்லா காட்சியாக்குவது… இவை இயக்குநர் பாலா பட முத்திரைகள்.

வலிந்து திணிக்கப்பட்ட நகைச்சுவை; சிம்ரன் போன்ற அயிட்டம் பாடல்; இவை எல்லாம் முந்தையவற்றில் துருத்தி நிற்கும்; இங்கே காணோம். ‘பரதேசி’யின் ஒவ்வொரு பாடலையும் திரையில் காண்பித்த விதத்தில் பாலு மகேந்திராவின் கோர்வையும் மணி ரத்னத்தின் செதுக்கலும் ஒருங்கே கிடைக்கின்றன.

எஸ் ராமகிருஷ்ணன் வசனம் எழுதும் படங்களில் சாதாரண தமிழ்ப்பட எழுத்து மட்டுமே தென்படும். ஜெயமோகன் சம்பந்தப்பட்ட படங்களில் மொழி ஆக்கிரமித்து நிற்கும். இரா முருகன் படங்களில் டைட்டிலில் மட்டுமே காணப்படுகிறார். ’பரதேசி’ நாஞ்சில் நாடனோ, “யாருங்க வசனம்” என்று விசாரிக்க வைக்கிறார்.

சமீபத்திய எதிர்பார்ப்புகளான ‘கடல்’ பல கோணங்களில் சென்று அலைபாய்ந்து மூழ்கடித்தும், ‘விஸ்வரூபம்’ சர்ச்சைகளில் மட்டும் பிரமிக்க வைத்தும் ‘நீதானே என் பொன் வசந்தம்’ சாக்லேட் கல்லூரி காதலை மறுஒளிபரப்பியும் குண்டுசட்டி கோடம்பாக்கத்தினுள் ஆமை ஓட்டிய நேரத்தில், உருப்படியான தமிழ் சினிமாவிற்கான அடி பரதேசி.

Designer Fashion houses: Indian Art vs US Capital Business

முதிய வயதினரின் குணாதிசயத்தை சொல்லும் இரண்டு படம் பார்த்தேன். அமெரிக்க புருஷ லட்சணத்தின் கோர முகத்தையும் ஏழை இந்திய கோதையின் சின்னச் சின்ன ஆசைகளையும் முன்னிறுத்தினார்கள்.

மேற்கத்திய உலகின் ஆண்மகனை பிரதிநிதித்துவப்படுத்தும் Arbitrage முதற் படம். சாதித்துக் காட்டிய தலைமகனின் கதை. எப்பொழுதும் வெற்றியே பார்த்தவன், தடுமாறாமல் எப்படி பார்த்துக் கொள்கிறான்? பெரிய பணக்காரர்களிடம் இன்றைய காலம் வரை, எவ்வாறு பொருட் பெண்டிரை வைத்துக் கொள்வது சாதாரணமாக இருக்கிறது? பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்பும், பெர்னீ மாடாஃப் தகிடிதத்தங்களுக்குப் பிறகும் கூட, இன்னும் பெரிய நிதி நிறுவனங்களில் கணக்கு வைப்பில் கண்துடைப்பு எங்ஙனம் நிறைவேறுகிறது?

மஹாராஷ்டிராவின் மலைகிராம சொகுசு பங்களாவில் வேலை பார்ப்பவர் ’கங்குபாய்’. இளவயதிலேயே கணவனை எழுந்தவர். ‘The Help’ கதையின் நாயகிகள் போல் அடிமை வாழ்வு. ஆண்டாண்டு காலமாக, தலைமுறை தலைமுறையாக குழந்தைகளைப் பேணி பராமரித்து வளர்த்து விட்டுக் கொண்டேயிருப்பவள். தினசரி இரண்டு வேளை கஞ்சி. எதிர்பார்ப்பு இல்லாத அன்றாடம்.

ஆரெம்கேவியின் ஐம்பதாயிரம் வண்ணம் கொண்ட பட்டுப் புடைவை போல் இல்லாமல், கலைநயம் நிறைந்த கதையோவியங்கள் கொண்ட சரிகையும் வேலைப்பாடும் மின்னும் பட்டுப் புடவையை பார்க்கிறார். ஆசைப் படுகிறார். டி.என்.எஸ்.சி. வங்கி விளம்பரத்தின் குருவிகள் போல் சிறுக சிறுக சேமித்து வாங்கியும் விடுகிறார்.

டிசைனர் கடைகள் எவ்வாறு இயங்குகின்றன? அசலான பேஷன் ஷோக்கள் எப்படி இருக்கும்? கொஞ்சம் உள்மாந்தரம் கிடைக்கிறது.

H&M, Forever 21, Zara என்று கோடிகளில் புழங்கும் அமெரிக்க ஆடை பாணிகள் சாதாரணருக்கும் எளிதாக கிடைக்கிறது. இந்திய வடிவமைப்பாளர்கள் இவ்வாறு அணுகக் கூடிய விலைகளில் தங்கள் உடை அலங்காரங்களை அமைப்பதில்லை. இந்தியாவில் அரசர்களுக்கு மட்டுமே நவநாகரிகம் சாத்தியம்.

ராஜசபையில் பகட்டாக புதுப்பாங்குகளை அணிவது அசோகர் கால பாரதத்தில் இருந்து வந்தாலும், தையற்காரி என்று சில்லறைக் காசு மட்டுமே சாத்தியம் என்கிறது ’கங்குபாய்’. அமெரிக்காவில் எல்லாமே வியாபாரம். இந்தியாவில் அது கலை வடிவம்.

சஞ்சலம் நீக்க சிறந்த உபாயம்: ரஜினியா? கமலா?

மன அழுத்தம் நீங்க நான் மூன்று உபாயங்களை பின்பற்றுகிறேன். எல்லோரும் சொல்கிற உடற்பயிற்சியை விட வீட்டை சுத்தம் செய்கிற பராமரிப்பு. அமைதியான இசையின் பின்னணியில் தியானம் என்பதை விட நிசப்தமான புத்தக அறையில் பூனையுடன் தஞ்சம். உளவியலாளரிடம் பகிர்வதை விட நாலு ஃபேஸ்புக் கருத்தாளர்களுக்கு கேள்வியாக பதில் போடுவது.

ரஜினி படம் பிடிக்குமா? கமல் படம் பிடிக்குமா? என்னுடைய இடையீடு சுணக்கங்களை களைவதற்குப் பின்னால் இந்தக் காரணமும் இருக்கிறது.

’நான் சிவப்பு மனிதன்’ அதிரடியாக இறங்குவார். ‘ராமன் ஆண்டாலும்’னு வாழ்க்கையை கொண்டாடுவார். ’நல்லவனுக்கு நல்லவ’னாக நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்துவார். ’பில்லா’ மாதிரி உளவாளியாக சென்றால் கூட ஆக்‌ஷன் இருக்கும்.

அந்த ஜென்மத்திலேயே பழிவாங்காமல் இன்னொருவரை எதிர்நோக்கும் ‘கல்யாணராமன்’. சிம்லா ஸ்பெஷல், உயர்ந்த உள்ளம் எல்லாமே நம்பக்கூடிய முகங்களின் பிரதிபலிப்பு. ’வாழ்வே மாயம்’ போல் உண்மையைப் போட்டு உடைக்க சஞ்சலப்படும் மனிதன். சகல கலா வல்லவன் முதல் விஸ்வரூபம் வரை கமல்ஹாசன் ஒற்றராக செல்வது கூட லாஜிக் நிறைந்ததாக இருக்கும்.

கமல் கதாபாத்திரங்கள் சாதுவானவை. நான் அன்றாடம் எதிர்கொள்கிறவர்கள். தொண்ணூறு சதவிகிதத்தினர் இவ்வாறே தங்கள் குணாதிசயங்கள வைத்திருக்கிறார்கள்.

ரஜினி நட்சத்திரம். கண்டிப்பு நிறைந்தவர். வாட்டத்தைப் போக்க நம்ப இயலாதவற்றை சாதிக்கிறார். என் கலக்கங்களை நீக்க முடியும் என உறுதியான உற்சாகம் தருகிறார்.

நீங்க ரஜினி விசிறியா? கமல் ஃபேனா?

Oscars: Academy awards 2013

“‘Zero Dark Thirty’ is an example of a woman’s innate ability to never let anything go.”

இந்த வருட ஆஸ்கார் விருதுகளில் எந்த ஆச்சரியமும் இல்லை. ‘அய்யோ பாவம்’ அனுதாப அலையில் பென் அஃப்லெக்கின் ’ஆர்கோ’ வென்றது. ஜாம்பவான்கள் நிறைந்த துணை நடிகர் பகுதியில் ’ஜாங்கோ அன்செயிண்ட்’ கிறிஸ் வால்ஸ் வென்றார். ‘தி ஹங்கர் கேம்ஸ்’ ஓடுவதற்காக ஜெனிஃபர் லாரென்ஸ்; கதாபாத்திரமாகவே வாழ்வதற்காக டேனியல் டே லூயிஸ்…

இயக்குநரில் மீண்டும் யார் வெல்வார் என்பதில் ’லைஃப் ஆஃப் பை’ ஆங் லீ வென்றது மட்டும் விதிவிலக்கு.

‘நான் முடி வெட்டிக் கொண்டேனாக்கும்’; ‘நான் இருபது கிலோ எடையை குறைத்தேனாக்கும்’; ‘நான் சரிகமபதநிச பாடக் கற்றுக் கொண்டேனாக்கும்’; ‘நான் அழகை கம்மியாக்கி உங்களுக்காக வாழ்ந்தேனாக்கும்’ என்று IIPM அரிந்தம் சவித்ரி போல் சந்தைப்படுத்தியே வென்ற ஆன் ஹாத்வே ஆட்டத்தில் சேர்த்தியில்லை.

விருது வென்றவர்களில் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் இருக்காது என்பதால், விழாவைத் தொகுத்தவரை அதிர்ச்சிகள் தர வைத்தார்கள்.

முன்னாள் தொகுப்பாளர்களான ஸ்டீவ் மார்ட்டின் போன்றோர் படு சைவம். தாத்தா/பாட்டியினரை ஆஸ்கார் பார்க்க வரவழைப்பார். ஆனால், பழங்கால தலைமுறையினரால் எதையுமே வாங்க வக்கில்லை. அவர்கள் வேஸ்ட்.

நடுவாந்தரமாக பில்லி கிறிஸ்டலும் ஜான் ஸ்டூவர்ட்டும் தொகுத்து வழங்கலாம். அந்தத் தலைமுறையினர் ஸாம்சங் கேலக்சி எஸ்4 எல்லாம் வாங்குவதில்லை.

குழந்தைகளுக்கான ‘ஹாப்’, ’ஆல்வின் அண்ட் தி சிப்மன்க்ஸ்’ போன்ற படங்களிலும் டிஸ்னியின் இனிப்பான சினிமாக்களிலும் அணிலும் கரடியும் மழலை பேசும். அதே போன்ற பொம்மைக் கரடியை டோப் அடிக்க வைத்தால் எப்படி இருக்கும்? பெரியவர்களின் வசை மொழியும் அலுப்பும் நிறைந்த வாழ்க்கையை சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கும் பொம்மைக் கரடிக்கு கொடுத்தால் எப்படி இருக்கும்? அதுதான் Ted.

அந்த ‘டெட்’ படத்தை இயக்கி, கரடி பொம்மைக்கு குரல் கொடுத்தவர்தான் இந்த வருட அகாதெமி விருது தொகுப்பாளர்.

பெண்களைக் கிண்டலடிப்பதும், விடலைத்தனமாக ஜொள்ளு விடுவதும், பேசப்பெறாத விவகாரங்களை முகத்திலறைவதும் திரைப்படத்திற்கு பொருந்தும்; ஸ்டாண்ட அப் காமெடியில் பொருந்தும். சுய எள்ளலும் புனிதங்களே அற்ற தன்மையும் பதின்ம வயதினருக்கு எப்பொழுதும் பொருந்தும். எனவே, யூத்திற்கு சேத் மெக்ஃபார்லேன் நகைச்சுவை பிடித்திருக்கும்.

பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்திருந்த பாம்பே ஜெயஸ்ரீ பாடாததை விட இது ஒன்றும் பெரிய குறை அல்ல.

Vanji Kottai Vaaliban and Braveheart: Historical Fiction in Movies

ராகா.காம் செய்யும் மிக உத்தமமான காரியம் என்பது நான்-ஸ்டாப் கன்னலில் பாடல்களை தொடர் ஒலிபரப்பாக கோர்ப்பதுதான். ஒரு நாள் சந்திரபாபு, இன்னொரு நாள் இசையமைப்பாளர் வேதா, என்னும் வரிசையில் இன்று கிளாசிக்ஸ் ஓடிக் கொண்டிருந்தது.

அப்பொழுது வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தில் கொத்தமங்கலம் சுப்பு எழுதி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ‘வெற்றிவேல்… வீரவேல்’ கிடைத்தது.

பல நல்ல புறநானூறு பாடல்களையும் பரணி பாடிய வரலாற்றையும் எழரை நிமிடத்திற்கான நாடகக் காட்சியாக ஒருங்கிணைத்திருக்கிறார்கள். சட்டென்று ‘பிரேவ் ஹார்ட்’ திரைப்படத்தை நினைவிற்கு கொண்டு வந்தது.

ஸ்காட்லாந்து மக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக ஏன் சண்டை போட்டார்கள்? போர்களுக்காக வில்லியம் வாலஸ் எவ்வாறு மக்களை சேர்த்தார்? Offence is the best defense என்பதை தற்கால விளையாட்டு பயிற்றுநர்களுக்கு, அக்கால வரலாறு கொண்டு விளக்கிய படம். மெல் கிப்சன் நடித்த ’பிரேவ்ஹார்ட்’டில் சிலந்தியைப் பார்த்து விடாமுயற்சியைக் கற்றுக் கொண்ட ராபர்ட் ப்ரூஸும் இருந்தார்.

இரண்டுமே பிரும்மாண்டமான போர்ப்படங்கள். வில்லன்களாக அரசர்களைக் கொண்டவை. காதல் நிறையவே உண்டு. இரண்டு நாயகிகள் கொண்ட கதை. வீரதீரம் நிறைந்த நாயகன். 1958ல் தமிழில் வெளியான ‘வ.கோ.வா.’ சூப்பர் ஹிட். ப்ரேவ்ஹார்ட்டும் நல்ல வசூல் கொடுத்தது.

மீண்டும் இந்த மாதிரி சரித்திரத்தையும் மசாலாவையும் தேசப்பற்றையும் சரியாக மிக்ஸ் செய்யும் மசாலாக்கள் எப்பொழுது வரும்?

கும்கி: பார்க்கலாமா? போரா?

பத்து நிமிடத்தில் எடுக்க வேண்டியதை முழு நீளப் படமாக்கினால் எப்படி எடுக்கக் கூடாது என்பதற்கு ‘கும்கி’ நல்ல உதாரணம்.

ஹிட் ஆன பாடல்கள். ஓவர் ஆக்டிங்கில் சீனியர் சிவாஜியாக மிளிரும் தம்பி ராமையா. முறைப்பும் உடற்பயிற்சியும் ஆகிய இரண்டு பாவங்கள் மட்டுமே அறிந்த ஜூனியர் சிவாஜியாக விக்ரம் பிரபு.

எருமையைக் கண்டு யானை பின்வாங்குவது படத்தின் ஹைலைட். யானைகளுக்கும் லைசன்ஸ் பேப்பர் வேண்டும் என்றறிய வைத்தார்கள். இவ்வளவு மரங்கள் நிறைந்த காடுகளுக்கு தப்பிச் செல்லாமல் போயிட்டோமே என்று வீரப்பன் & கோ வருந்தியிருப்பார்கள்.

என்னதான் செல்லப் பிராணி வளர்த்தாலும், காதலின் முன் அது தூசு என்பது படத்தின் நீதி. அடிதடியை விட பாசமும் ப்ளாக்மெயிலும் காதலை உடைக்க கை கொடுக்கும் என்பது கொசுறு மெஸேஜ்.

ஒரு படமோ, இரண்டு படமோ நன்றாக இயக்கிவிட்டு, அதன் பிறகு, அசிஸ்டெண்ட் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தயாரிப்பில் இறங்கி, பிறரின் படங்களை மெருகேற்றுவதுதான் இப்போதைய டிரெண்ட். பிரபு சாலமனும் அவ்வாறே ஷோ யானையாக மாறி கும்கிகளை அடையாளம் காட்டணும்.

Kamal’s விஸ்வரூபம் FAQ

அ) படம் எப்படி?
நல்லாருந்துச்சு. சுவாரசியமாப் போகுது.

ஆ) எது பிடிச்சிருந்தது?
பிராமணப் பொண்ணு சிக்கன் சாப்புடறது; முதல் சண்டைக் காட்சி; ஆப்கானிஸ்தான் லொக்கேஷன்

இ) என்ன இருந்திருக்கலாம்?
ஆண்ட்ரியாவுடன் டூயட்; கோடை கால ஆடை அணிந்த ஹீரோயின்; அப்புறமாய் கொஞ்சம் கதை

ஈ) குழந்தைகளைக் கூட்டிப் போலாமா?
செக்ஸ் வச்சுக்கறதுனா என்னன்னு கேப்பாங்க; கை வேறு கால் வேறா வருவதைப் பாத்து பயப்படலாம்

உ) இயக்குநர் கமலுக்கு எவ்வளவு மார்க்?
விருமாண்டி அளவு உணர்ச்சி இல்லை; ஹே ராம் அளவுக்கு சரக்கும் இல்லை. இருந்தாலும் ஃபோகஸ் இருப்பதால் எழுபது.

ஊ) இஸ்லாமியர்கள் ஃபீலிங் ஆகிறார்களே?
பனியில் நடந்தா பார்த்து நடங்க; அல்லது வழுக்கிரும்னு சொல்லுற மாதிரி, மார்க்கத்தில் பார்த்து நடக்க சொல்லுறாரோனு நெனச்சேன். அந்த மாதிரி அட்வைஸ் கூட இல்ல. டைட்டில் மட்டும் வலமிருந்து இடம் வருவது மாதிரி சின்னச் சின்ன நகாசு மட்டுமே.

எ) கார் சேஸிங் இருக்காமே?
அதற்கு பதிலா இன்னும் கொஞ்சம் கேரக்டர் டெவலப்மெண்ட் செஞ்சிருக்கலாம்.

ஏ) துப்பாக்கி, எந்திரன் – ஒப்பிடுக.
விஜய் படம் புத்திசாலித்தனம். ரஜினி படம் பிரமிப்பு. கமல் படம் இரண்டும் கலந்து வந்திருக்கணும்; ஆனா, டைரக்டர் பேச்ச கேட்கமாட்டாரே

ஐ) என்னோட அமெரிக்க நண்பருக்கு போட்டுக் காட்டலாமா?
இது தூய இந்தியருக்கு மட்டுமே ரசிக்கக் கூடியது. அவர்களுக்கு புதுசா எதுவும் சரக்கு இல்லை. போர்ன் ஐடெண்ட்டியும் ட்ராஃபிக்கும் பாக்குற கும்பலுக்கு விசுவரூபமெல்லாம் சரிப்படாது

ஒ) ஆக்டர் கமலுக்கு எவ்வளவு மார்க்கு?
உறுத்தாம வந்து போகிறார். தேய்வழக்காக வசனகர்த்தா சொல்லுறத கூட சகிக்க வைக்கிறார். முக்கியமா அந்த பயங்கரவாதி கெட்டப்புக்காகவே நூற்றுக்கு நூறு போடலாம்.

ஓ) நெஜத்தில் இப்படி எல்லாம் நடக்குமா?
தீவிரவாதிகளுக்கு புது புது ஐடியா எல்லாம் கொடுத்திருக்காரே

ஔ) “தூங்காத என் கண்ணில் துயில் உரித்த கண்ணன்… விதை இல்லாமல் வேர் இல்லையே’ போல் கவித்துவமாக சிந்தனை சொல்லுப்பா…

புறாவில் என்ன பாகுபாடு என்பது பயலாஜிஸ்டுக்குத்தான் தெரியும்; அது போல் மனிதனின் பிரிவுகள் அறிவியலாருக்கு மட்டுமே புலப்பட வேண்டும். புறா கோவில் மாடத்திலும் தங்கும்; அங்கிருந்து மசூதிக்கும் பறக்கும். நாயகனும் அவ்வாறே.

வாரிசு ஜெகன் மோகன் ரெட்டி அரசியலில் ஜாதியும் லஞ்சமும்

தெலுங்குப் படம் லீடர் பார்த்தேன். ‘முதல்வன்’ திரைப்படத்தின் இறுதி வசனமான ‘என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டாங்களே’ கால்கோளாக வைத்து எழுதியிருக்கிறார்கள்.

ஆந்திரா என்றால் இரண்டு ஹீரோயின். இங்கும் உண்டு. ஒருவர் ‘மயக்கம் என்ன’ ரிச்சா கங்கோபாத்யா. புடைவையில் லட்சணமாக ஹீரோவிடம் ஏமாறுகிறார். கொஞ்சம் ஒல்லியாகக் கூட கேமிரா காட்டுகிறது.

சுகாசினிக்கு பெரிய ரோல். கோட்டா ஸ்ரீனிவாசாவும் அலட்டாமல் வந்திருந்தார்.

தமிழில் இப்படி துளி வெளிப்படையாக பேசினால் கூட சத்யராஜ் மட்டுமே நாயகன் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பார்.

வீராணம், வளர்ப்பு மகன் கல்யாணம் & வீரப்பன்

’நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ ஏன் ஹிட் ஆனது?

இரு சாராருக்கு அந்தப் படம் பிடிச்சிருக்கும். செக்குமாடு வேலையில் ஓடும் நடுத்தர வயதினர் ஒரு இடைப்பட்ட காலகட்டத்திலேயே ஸ்தம்பிச்சு நின்னுட்டோம். அதை விட்டு வெளியே வரவேயில்ல. ரஜினி படம், (அ)திமுக ஆட்சி, டெண்டுல்கர் கிரிக்கெட்… இப்படியே தேங்கிட்டோம். இவங்களுக்கு ஹீரோவைப் பார்த்தா அப்படியே தங்களை பார்க்கிற மாதிரியே இருக்கு.

இன்னொரு சாரார்னு பார்த்தா அந்த நண்பர்கள் கூட்டம். தங்களை போராளிகளா உருவகிச்சு உலகை மாத்த நெனைக்கிறவங்க. கடுமையா முயற்சி எடுத்தாலும் எந்த பலனும் தராதவங்க. Efficent-ஆ இருப்பாங்க… ஆனா, effective-ஆ எதுவும் நடத்த மாட்டாங்க.

என்னை மாதிரி இவங்க ரெண்டு பேர் நடுவில் மாட்டிகிட்டு முழிக்கிற அந்த லேடி கேரக்டர்களும் இருக்கிறாங்க

உலகம் ஒரு நாடக மேடை; சினிமா ஒரு வாழ்க்கை பாதை

விஸ்வரூபம் வெளியிடுவதில் பிரச்சினை. இந்தியில் ‘ஓ மை காட்’ வெளியாவதில் பிரச்சினை எதுவுமே இல்லை.

விவகாரமான விஷயங்களை நாடகமாகப் போட்டால் எந்தப் பிரச்சினையும் வராது. கிரேசி மோகனின் ‘சாக்லேட் கிருஷ்ணா’ போல். அதை விட கதையாக எழுதி புத்தகமாகப் போட்டால் எந்த அரசியல்வாதியும் தடா போட மாட்டார்.

கடந்த இருபதாண்டுகளாகத்தான் பரேஷ் ராவல் படங்களுக்கு அறிமுகமாகி இருக்கிறேன். இதிலும் கலக்குகிறார். சிரமமான கருத்துகளை எதார்த்தமாக வாதாடுவதில் ஆகட்டும். புனித தொன்மங்களை இன்றைய நிலைக்கு ஏற்ப கேள்வி கேட்பதில் ஆகட்டும். காலத்திற்கு ஒவ்வாத கண்மூடி நம்பிக்கையை கிண்டல் அடிப்பதில் ஆகட்டும். வசனகர்த்தாவும் பரேஷும் பின்னுகிறார்கள்.

‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ படத்தில் வருவது போல், தெய்வத்துடன் டீல் போடாதீர்கள் என்கிறார்கள். ‘பித்தா புறைசூடி’ சுந்தரர் போல் கடவுளுடன் தோள் மேல் கை போடு என்கிறார்கள். தினகரன் & கோ, நித்தியானந்தா அண்ட் கோ மாதிரி சேல்ஸ் பசங்களை நம்பாமல் இறைவரை ஏழையின் சிரிப்பில் கண்டு கொள்ள அழைக்கிறார்கள்.

ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு எதிராகவும் தேவதூதர்களுக்கு போட்டியாகவும் விஸ்வரூபம் எடுக்க படத்தின் ஹீரோவிற்கும் மீடியா தேவைப்பட்டிருக்கிறது என்பதுதான் புதிய கடவுள் தரிசனம்.