Tag Archives: Movies

Designer Fashion houses: Indian Art vs US Capital Business

முதிய வயதினரின் குணாதிசயத்தை சொல்லும் இரண்டு படம் பார்த்தேன். அமெரிக்க புருஷ லட்சணத்தின் கோர முகத்தையும் ஏழை இந்திய கோதையின் சின்னச் சின்ன ஆசைகளையும் முன்னிறுத்தினார்கள்.

மேற்கத்திய உலகின் ஆண்மகனை பிரதிநிதித்துவப்படுத்தும் Arbitrage முதற் படம். சாதித்துக் காட்டிய தலைமகனின் கதை. எப்பொழுதும் வெற்றியே பார்த்தவன், தடுமாறாமல் எப்படி பார்த்துக் கொள்கிறான்? பெரிய பணக்காரர்களிடம் இன்றைய காலம் வரை, எவ்வாறு பொருட் பெண்டிரை வைத்துக் கொள்வது சாதாரணமாக இருக்கிறது? பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்பும், பெர்னீ மாடாஃப் தகிடிதத்தங்களுக்குப் பிறகும் கூட, இன்னும் பெரிய நிதி நிறுவனங்களில் கணக்கு வைப்பில் கண்துடைப்பு எங்ஙனம் நிறைவேறுகிறது?

மஹாராஷ்டிராவின் மலைகிராம சொகுசு பங்களாவில் வேலை பார்ப்பவர் ’கங்குபாய்’. இளவயதிலேயே கணவனை எழுந்தவர். ‘The Help’ கதையின் நாயகிகள் போல் அடிமை வாழ்வு. ஆண்டாண்டு காலமாக, தலைமுறை தலைமுறையாக குழந்தைகளைப் பேணி பராமரித்து வளர்த்து விட்டுக் கொண்டேயிருப்பவள். தினசரி இரண்டு வேளை கஞ்சி. எதிர்பார்ப்பு இல்லாத அன்றாடம்.

ஆரெம்கேவியின் ஐம்பதாயிரம் வண்ணம் கொண்ட பட்டுப் புடைவை போல் இல்லாமல், கலைநயம் நிறைந்த கதையோவியங்கள் கொண்ட சரிகையும் வேலைப்பாடும் மின்னும் பட்டுப் புடவையை பார்க்கிறார். ஆசைப் படுகிறார். டி.என்.எஸ்.சி. வங்கி விளம்பரத்தின் குருவிகள் போல் சிறுக சிறுக சேமித்து வாங்கியும் விடுகிறார்.

டிசைனர் கடைகள் எவ்வாறு இயங்குகின்றன? அசலான பேஷன் ஷோக்கள் எப்படி இருக்கும்? கொஞ்சம் உள்மாந்தரம் கிடைக்கிறது.

H&M, Forever 21, Zara என்று கோடிகளில் புழங்கும் அமெரிக்க ஆடை பாணிகள் சாதாரணருக்கும் எளிதாக கிடைக்கிறது. இந்திய வடிவமைப்பாளர்கள் இவ்வாறு அணுகக் கூடிய விலைகளில் தங்கள் உடை அலங்காரங்களை அமைப்பதில்லை. இந்தியாவில் அரசர்களுக்கு மட்டுமே நவநாகரிகம் சாத்தியம்.

ராஜசபையில் பகட்டாக புதுப்பாங்குகளை அணிவது அசோகர் கால பாரதத்தில் இருந்து வந்தாலும், தையற்காரி என்று சில்லறைக் காசு மட்டுமே சாத்தியம் என்கிறது ’கங்குபாய்’. அமெரிக்காவில் எல்லாமே வியாபாரம். இந்தியாவில் அது கலை வடிவம்.

சஞ்சலம் நீக்க சிறந்த உபாயம்: ரஜினியா? கமலா?

மன அழுத்தம் நீங்க நான் மூன்று உபாயங்களை பின்பற்றுகிறேன். எல்லோரும் சொல்கிற உடற்பயிற்சியை விட வீட்டை சுத்தம் செய்கிற பராமரிப்பு. அமைதியான இசையின் பின்னணியில் தியானம் என்பதை விட நிசப்தமான புத்தக அறையில் பூனையுடன் தஞ்சம். உளவியலாளரிடம் பகிர்வதை விட நாலு ஃபேஸ்புக் கருத்தாளர்களுக்கு கேள்வியாக பதில் போடுவது.

ரஜினி படம் பிடிக்குமா? கமல் படம் பிடிக்குமா? என்னுடைய இடையீடு சுணக்கங்களை களைவதற்குப் பின்னால் இந்தக் காரணமும் இருக்கிறது.

’நான் சிவப்பு மனிதன்’ அதிரடியாக இறங்குவார். ‘ராமன் ஆண்டாலும்’னு வாழ்க்கையை கொண்டாடுவார். ’நல்லவனுக்கு நல்லவ’னாக நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்துவார். ’பில்லா’ மாதிரி உளவாளியாக சென்றால் கூட ஆக்‌ஷன் இருக்கும்.

அந்த ஜென்மத்திலேயே பழிவாங்காமல் இன்னொருவரை எதிர்நோக்கும் ‘கல்யாணராமன்’. சிம்லா ஸ்பெஷல், உயர்ந்த உள்ளம் எல்லாமே நம்பக்கூடிய முகங்களின் பிரதிபலிப்பு. ’வாழ்வே மாயம்’ போல் உண்மையைப் போட்டு உடைக்க சஞ்சலப்படும் மனிதன். சகல கலா வல்லவன் முதல் விஸ்வரூபம் வரை கமல்ஹாசன் ஒற்றராக செல்வது கூட லாஜிக் நிறைந்ததாக இருக்கும்.

கமல் கதாபாத்திரங்கள் சாதுவானவை. நான் அன்றாடம் எதிர்கொள்கிறவர்கள். தொண்ணூறு சதவிகிதத்தினர் இவ்வாறே தங்கள் குணாதிசயங்கள வைத்திருக்கிறார்கள்.

ரஜினி நட்சத்திரம். கண்டிப்பு நிறைந்தவர். வாட்டத்தைப் போக்க நம்ப இயலாதவற்றை சாதிக்கிறார். என் கலக்கங்களை நீக்க முடியும் என உறுதியான உற்சாகம் தருகிறார்.

நீங்க ரஜினி விசிறியா? கமல் ஃபேனா?

Oscars: Academy awards 2013

“‘Zero Dark Thirty’ is an example of a woman’s innate ability to never let anything go.”

இந்த வருட ஆஸ்கார் விருதுகளில் எந்த ஆச்சரியமும் இல்லை. ‘அய்யோ பாவம்’ அனுதாப அலையில் பென் அஃப்லெக்கின் ’ஆர்கோ’ வென்றது. ஜாம்பவான்கள் நிறைந்த துணை நடிகர் பகுதியில் ’ஜாங்கோ அன்செயிண்ட்’ கிறிஸ் வால்ஸ் வென்றார். ‘தி ஹங்கர் கேம்ஸ்’ ஓடுவதற்காக ஜெனிஃபர் லாரென்ஸ்; கதாபாத்திரமாகவே வாழ்வதற்காக டேனியல் டே லூயிஸ்…

இயக்குநரில் மீண்டும் யார் வெல்வார் என்பதில் ’லைஃப் ஆஃப் பை’ ஆங் லீ வென்றது மட்டும் விதிவிலக்கு.

‘நான் முடி வெட்டிக் கொண்டேனாக்கும்’; ‘நான் இருபது கிலோ எடையை குறைத்தேனாக்கும்’; ‘நான் சரிகமபதநிச பாடக் கற்றுக் கொண்டேனாக்கும்’; ‘நான் அழகை கம்மியாக்கி உங்களுக்காக வாழ்ந்தேனாக்கும்’ என்று IIPM அரிந்தம் சவித்ரி போல் சந்தைப்படுத்தியே வென்ற ஆன் ஹாத்வே ஆட்டத்தில் சேர்த்தியில்லை.

விருது வென்றவர்களில் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் இருக்காது என்பதால், விழாவைத் தொகுத்தவரை அதிர்ச்சிகள் தர வைத்தார்கள்.

முன்னாள் தொகுப்பாளர்களான ஸ்டீவ் மார்ட்டின் போன்றோர் படு சைவம். தாத்தா/பாட்டியினரை ஆஸ்கார் பார்க்க வரவழைப்பார். ஆனால், பழங்கால தலைமுறையினரால் எதையுமே வாங்க வக்கில்லை. அவர்கள் வேஸ்ட்.

நடுவாந்தரமாக பில்லி கிறிஸ்டலும் ஜான் ஸ்டூவர்ட்டும் தொகுத்து வழங்கலாம். அந்தத் தலைமுறையினர் ஸாம்சங் கேலக்சி எஸ்4 எல்லாம் வாங்குவதில்லை.

குழந்தைகளுக்கான ‘ஹாப்’, ’ஆல்வின் அண்ட் தி சிப்மன்க்ஸ்’ போன்ற படங்களிலும் டிஸ்னியின் இனிப்பான சினிமாக்களிலும் அணிலும் கரடியும் மழலை பேசும். அதே போன்ற பொம்மைக் கரடியை டோப் அடிக்க வைத்தால் எப்படி இருக்கும்? பெரியவர்களின் வசை மொழியும் அலுப்பும் நிறைந்த வாழ்க்கையை சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கும் பொம்மைக் கரடிக்கு கொடுத்தால் எப்படி இருக்கும்? அதுதான் Ted.

அந்த ‘டெட்’ படத்தை இயக்கி, கரடி பொம்மைக்கு குரல் கொடுத்தவர்தான் இந்த வருட அகாதெமி விருது தொகுப்பாளர்.

பெண்களைக் கிண்டலடிப்பதும், விடலைத்தனமாக ஜொள்ளு விடுவதும், பேசப்பெறாத விவகாரங்களை முகத்திலறைவதும் திரைப்படத்திற்கு பொருந்தும்; ஸ்டாண்ட அப் காமெடியில் பொருந்தும். சுய எள்ளலும் புனிதங்களே அற்ற தன்மையும் பதின்ம வயதினருக்கு எப்பொழுதும் பொருந்தும். எனவே, யூத்திற்கு சேத் மெக்ஃபார்லேன் நகைச்சுவை பிடித்திருக்கும்.

பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்திருந்த பாம்பே ஜெயஸ்ரீ பாடாததை விட இது ஒன்றும் பெரிய குறை அல்ல.

Vanji Kottai Vaaliban and Braveheart: Historical Fiction in Movies

ராகா.காம் செய்யும் மிக உத்தமமான காரியம் என்பது நான்-ஸ்டாப் கன்னலில் பாடல்களை தொடர் ஒலிபரப்பாக கோர்ப்பதுதான். ஒரு நாள் சந்திரபாபு, இன்னொரு நாள் இசையமைப்பாளர் வேதா, என்னும் வரிசையில் இன்று கிளாசிக்ஸ் ஓடிக் கொண்டிருந்தது.

அப்பொழுது வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தில் கொத்தமங்கலம் சுப்பு எழுதி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ‘வெற்றிவேல்… வீரவேல்’ கிடைத்தது.

பல நல்ல புறநானூறு பாடல்களையும் பரணி பாடிய வரலாற்றையும் எழரை நிமிடத்திற்கான நாடகக் காட்சியாக ஒருங்கிணைத்திருக்கிறார்கள். சட்டென்று ‘பிரேவ் ஹார்ட்’ திரைப்படத்தை நினைவிற்கு கொண்டு வந்தது.

ஸ்காட்லாந்து மக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக ஏன் சண்டை போட்டார்கள்? போர்களுக்காக வில்லியம் வாலஸ் எவ்வாறு மக்களை சேர்த்தார்? Offence is the best defense என்பதை தற்கால விளையாட்டு பயிற்றுநர்களுக்கு, அக்கால வரலாறு கொண்டு விளக்கிய படம். மெல் கிப்சன் நடித்த ’பிரேவ்ஹார்ட்’டில் சிலந்தியைப் பார்த்து விடாமுயற்சியைக் கற்றுக் கொண்ட ராபர்ட் ப்ரூஸும் இருந்தார்.

இரண்டுமே பிரும்மாண்டமான போர்ப்படங்கள். வில்லன்களாக அரசர்களைக் கொண்டவை. காதல் நிறையவே உண்டு. இரண்டு நாயகிகள் கொண்ட கதை. வீரதீரம் நிறைந்த நாயகன். 1958ல் தமிழில் வெளியான ‘வ.கோ.வா.’ சூப்பர் ஹிட். ப்ரேவ்ஹார்ட்டும் நல்ல வசூல் கொடுத்தது.

மீண்டும் இந்த மாதிரி சரித்திரத்தையும் மசாலாவையும் தேசப்பற்றையும் சரியாக மிக்ஸ் செய்யும் மசாலாக்கள் எப்பொழுது வரும்?

கும்கி: பார்க்கலாமா? போரா?

பத்து நிமிடத்தில் எடுக்க வேண்டியதை முழு நீளப் படமாக்கினால் எப்படி எடுக்கக் கூடாது என்பதற்கு ‘கும்கி’ நல்ல உதாரணம்.

ஹிட் ஆன பாடல்கள். ஓவர் ஆக்டிங்கில் சீனியர் சிவாஜியாக மிளிரும் தம்பி ராமையா. முறைப்பும் உடற்பயிற்சியும் ஆகிய இரண்டு பாவங்கள் மட்டுமே அறிந்த ஜூனியர் சிவாஜியாக விக்ரம் பிரபு.

எருமையைக் கண்டு யானை பின்வாங்குவது படத்தின் ஹைலைட். யானைகளுக்கும் லைசன்ஸ் பேப்பர் வேண்டும் என்றறிய வைத்தார்கள். இவ்வளவு மரங்கள் நிறைந்த காடுகளுக்கு தப்பிச் செல்லாமல் போயிட்டோமே என்று வீரப்பன் & கோ வருந்தியிருப்பார்கள்.

என்னதான் செல்லப் பிராணி வளர்த்தாலும், காதலின் முன் அது தூசு என்பது படத்தின் நீதி. அடிதடியை விட பாசமும் ப்ளாக்மெயிலும் காதலை உடைக்க கை கொடுக்கும் என்பது கொசுறு மெஸேஜ்.

ஒரு படமோ, இரண்டு படமோ நன்றாக இயக்கிவிட்டு, அதன் பிறகு, அசிஸ்டெண்ட் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தயாரிப்பில் இறங்கி, பிறரின் படங்களை மெருகேற்றுவதுதான் இப்போதைய டிரெண்ட். பிரபு சாலமனும் அவ்வாறே ஷோ யானையாக மாறி கும்கிகளை அடையாளம் காட்டணும்.

Kamal’s விஸ்வரூபம் FAQ

அ) படம் எப்படி?
நல்லாருந்துச்சு. சுவாரசியமாப் போகுது.

ஆ) எது பிடிச்சிருந்தது?
பிராமணப் பொண்ணு சிக்கன் சாப்புடறது; முதல் சண்டைக் காட்சி; ஆப்கானிஸ்தான் லொக்கேஷன்

இ) என்ன இருந்திருக்கலாம்?
ஆண்ட்ரியாவுடன் டூயட்; கோடை கால ஆடை அணிந்த ஹீரோயின்; அப்புறமாய் கொஞ்சம் கதை

ஈ) குழந்தைகளைக் கூட்டிப் போலாமா?
செக்ஸ் வச்சுக்கறதுனா என்னன்னு கேப்பாங்க; கை வேறு கால் வேறா வருவதைப் பாத்து பயப்படலாம்

உ) இயக்குநர் கமலுக்கு எவ்வளவு மார்க்?
விருமாண்டி அளவு உணர்ச்சி இல்லை; ஹே ராம் அளவுக்கு சரக்கும் இல்லை. இருந்தாலும் ஃபோகஸ் இருப்பதால் எழுபது.

ஊ) இஸ்லாமியர்கள் ஃபீலிங் ஆகிறார்களே?
பனியில் நடந்தா பார்த்து நடங்க; அல்லது வழுக்கிரும்னு சொல்லுற மாதிரி, மார்க்கத்தில் பார்த்து நடக்க சொல்லுறாரோனு நெனச்சேன். அந்த மாதிரி அட்வைஸ் கூட இல்ல. டைட்டில் மட்டும் வலமிருந்து இடம் வருவது மாதிரி சின்னச் சின்ன நகாசு மட்டுமே.

எ) கார் சேஸிங் இருக்காமே?
அதற்கு பதிலா இன்னும் கொஞ்சம் கேரக்டர் டெவலப்மெண்ட் செஞ்சிருக்கலாம்.

ஏ) துப்பாக்கி, எந்திரன் – ஒப்பிடுக.
விஜய் படம் புத்திசாலித்தனம். ரஜினி படம் பிரமிப்பு. கமல் படம் இரண்டும் கலந்து வந்திருக்கணும்; ஆனா, டைரக்டர் பேச்ச கேட்கமாட்டாரே

ஐ) என்னோட அமெரிக்க நண்பருக்கு போட்டுக் காட்டலாமா?
இது தூய இந்தியருக்கு மட்டுமே ரசிக்கக் கூடியது. அவர்களுக்கு புதுசா எதுவும் சரக்கு இல்லை. போர்ன் ஐடெண்ட்டியும் ட்ராஃபிக்கும் பாக்குற கும்பலுக்கு விசுவரூபமெல்லாம் சரிப்படாது

ஒ) ஆக்டர் கமலுக்கு எவ்வளவு மார்க்கு?
உறுத்தாம வந்து போகிறார். தேய்வழக்காக வசனகர்த்தா சொல்லுறத கூட சகிக்க வைக்கிறார். முக்கியமா அந்த பயங்கரவாதி கெட்டப்புக்காகவே நூற்றுக்கு நூறு போடலாம்.

ஓ) நெஜத்தில் இப்படி எல்லாம் நடக்குமா?
தீவிரவாதிகளுக்கு புது புது ஐடியா எல்லாம் கொடுத்திருக்காரே

ஔ) “தூங்காத என் கண்ணில் துயில் உரித்த கண்ணன்… விதை இல்லாமல் வேர் இல்லையே’ போல் கவித்துவமாக சிந்தனை சொல்லுப்பா…

புறாவில் என்ன பாகுபாடு என்பது பயலாஜிஸ்டுக்குத்தான் தெரியும்; அது போல் மனிதனின் பிரிவுகள் அறிவியலாருக்கு மட்டுமே புலப்பட வேண்டும். புறா கோவில் மாடத்திலும் தங்கும்; அங்கிருந்து மசூதிக்கும் பறக்கும். நாயகனும் அவ்வாறே.

வாரிசு ஜெகன் மோகன் ரெட்டி அரசியலில் ஜாதியும் லஞ்சமும்

தெலுங்குப் படம் லீடர் பார்த்தேன். ‘முதல்வன்’ திரைப்படத்தின் இறுதி வசனமான ‘என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டாங்களே’ கால்கோளாக வைத்து எழுதியிருக்கிறார்கள்.

ஆந்திரா என்றால் இரண்டு ஹீரோயின். இங்கும் உண்டு. ஒருவர் ‘மயக்கம் என்ன’ ரிச்சா கங்கோபாத்யா. புடைவையில் லட்சணமாக ஹீரோவிடம் ஏமாறுகிறார். கொஞ்சம் ஒல்லியாகக் கூட கேமிரா காட்டுகிறது.

சுகாசினிக்கு பெரிய ரோல். கோட்டா ஸ்ரீனிவாசாவும் அலட்டாமல் வந்திருந்தார்.

தமிழில் இப்படி துளி வெளிப்படையாக பேசினால் கூட சத்யராஜ் மட்டுமே நாயகன் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பார்.

வீராணம், வளர்ப்பு மகன் கல்யாணம் & வீரப்பன்

’நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ ஏன் ஹிட் ஆனது?

இரு சாராருக்கு அந்தப் படம் பிடிச்சிருக்கும். செக்குமாடு வேலையில் ஓடும் நடுத்தர வயதினர் ஒரு இடைப்பட்ட காலகட்டத்திலேயே ஸ்தம்பிச்சு நின்னுட்டோம். அதை விட்டு வெளியே வரவேயில்ல. ரஜினி படம், (அ)திமுக ஆட்சி, டெண்டுல்கர் கிரிக்கெட்… இப்படியே தேங்கிட்டோம். இவங்களுக்கு ஹீரோவைப் பார்த்தா அப்படியே தங்களை பார்க்கிற மாதிரியே இருக்கு.

இன்னொரு சாரார்னு பார்த்தா அந்த நண்பர்கள் கூட்டம். தங்களை போராளிகளா உருவகிச்சு உலகை மாத்த நெனைக்கிறவங்க. கடுமையா முயற்சி எடுத்தாலும் எந்த பலனும் தராதவங்க. Efficent-ஆ இருப்பாங்க… ஆனா, effective-ஆ எதுவும் நடத்த மாட்டாங்க.

என்னை மாதிரி இவங்க ரெண்டு பேர் நடுவில் மாட்டிகிட்டு முழிக்கிற அந்த லேடி கேரக்டர்களும் இருக்கிறாங்க

உலகம் ஒரு நாடக மேடை; சினிமா ஒரு வாழ்க்கை பாதை

விஸ்வரூபம் வெளியிடுவதில் பிரச்சினை. இந்தியில் ‘ஓ மை காட்’ வெளியாவதில் பிரச்சினை எதுவுமே இல்லை.

விவகாரமான விஷயங்களை நாடகமாகப் போட்டால் எந்தப் பிரச்சினையும் வராது. கிரேசி மோகனின் ‘சாக்லேட் கிருஷ்ணா’ போல். அதை விட கதையாக எழுதி புத்தகமாகப் போட்டால் எந்த அரசியல்வாதியும் தடா போட மாட்டார்.

கடந்த இருபதாண்டுகளாகத்தான் பரேஷ் ராவல் படங்களுக்கு அறிமுகமாகி இருக்கிறேன். இதிலும் கலக்குகிறார். சிரமமான கருத்துகளை எதார்த்தமாக வாதாடுவதில் ஆகட்டும். புனித தொன்மங்களை இன்றைய நிலைக்கு ஏற்ப கேள்வி கேட்பதில் ஆகட்டும். காலத்திற்கு ஒவ்வாத கண்மூடி நம்பிக்கையை கிண்டல் அடிப்பதில் ஆகட்டும். வசனகர்த்தாவும் பரேஷும் பின்னுகிறார்கள்.

‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ படத்தில் வருவது போல், தெய்வத்துடன் டீல் போடாதீர்கள் என்கிறார்கள். ‘பித்தா புறைசூடி’ சுந்தரர் போல் கடவுளுடன் தோள் மேல் கை போடு என்கிறார்கள். தினகரன் & கோ, நித்தியானந்தா அண்ட் கோ மாதிரி சேல்ஸ் பசங்களை நம்பாமல் இறைவரை ஏழையின் சிரிப்பில் கண்டு கொள்ள அழைக்கிறார்கள்.

ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு எதிராகவும் தேவதூதர்களுக்கு போட்டியாகவும் விஸ்வரூபம் எடுக்க படத்தின் ஹீரோவிற்கும் மீடியா தேவைப்பட்டிருக்கிறது என்பதுதான் புதிய கடவுள் தரிசனம்.

கடல் திரைப்படம் – விமர்சனம், சுட்டிகள்

என்னைக் கவர்ந்த வசனங்களில் சில

* ‘கெட்டவங்களுக்குத்தான் கடவுள் துணை தேவை. நோயாளிதான் டாக்டர்கிட்ட போவாங்க… அது மாதிரி தப்பு செய்யறவங்கதான் தெய்வத்துகிட்ட வருவாங்க!.’

* சாத்தான் சொல்வதாக… ‘ஜீஸஸ் ஜெயிச்சுட்டார். என்னைக் கொல்வதன் மூலம் பாஸ்டர் சாமுவேல் போராளி ஆயிட்டார். சாத்தானை சாகடிப்பதன் மூலம் நேர்மையும் அமைதியும் வென்று விட்டதா?’

எல்லாம் நினைவில் இருந்து தோராயமாக எழுதியது. என்னுடைய புரிதலுக்கு ஏற்ப மாற்றி விட்டேன்.

அடுத்ததாக சமகால தமிழ்ப்படங்களை பார்க்கலாம். ஒரு வகை நவீன மொழியில் திரைக்கதையை நம்பி வருபவை. பீட்சா, நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம், நான் ஈ வகையறா.

இன்னொன்று எண்பதுகளின் தேய்வழக்கோடு வருபவை. தாண்டவம், ’கண்ணா லட்டு திங்க ஆசையா’, மாற்றான் போன்றவை.

இந்தச் சூழலில் கடல் போன்ற படங்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. எண்பதுகளின் காலகட்ட திரைப்படம், பீரியட் படம் என்றெல்லாம் சகஜமாக ஹாலிவுட்டில் வரும். அந்த மாதிரி ஒன்றாக கடல் படத்தைப் பார்க்கிறேன்.

சாதாரண கதை. வில்லன் மகளை ராபின்ஹுட் வளர்க்கும் அனாதை ஹீரோ காதலிக்கிறான். ரஜினி அல்லது கமல் நடித்து வெளியான பல படங்களில் சொல்லப்பட்ட விஷயம்.

அதை எப்படி புதுசாக சொல்வது?

ஆனால் முப்பதாண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையை சொல்வதா அல்லது கிறித்துவ இறையியலை மையப்படுத்துவதா என்று அங்குமிங்கும் அலைபாய்கிறது.

எதிர்பார்ப்புகளை பொய்ப்பதில் அர்விந்த்சாமி முன்னணியில் இருக்கிறார். டச் விட்டுப் போனதோ, அல்லது அடக்கி வாசித்தாரோ… தமிழருக்கு ஓவர் ஆக்டிங் பிடிக்கும்; அவர் தேமே என்று ஏம்போக்கி மாதிரி வந்து போகிறார்.

எவராலும் தவறு மட்டுமே செய்து வாழ முடியாது. உற்றார் உறவினருக்கோ அல்லது கூட்டாளிக்கோ… எங்காவது யாருக்காவது நன்மை செய்து விடுவார்கள். ஆனால், குற்றம் மட்டுமே வாழ்க்கையாக பெர்க்மான்ஸ் கொண்டிருக்கிறார்.

ஆனால், ஒரே ஒரு நன்மை செய்கிறார். மிக இறுதியில். தேவனின் பாதைக்கு வந்து விடுகிறார். ஒரு நல்ல காரியம் மட்டுமே போதும்… அதன் சுவை அப்படியே மெதுவாக நம்மை திருத்தி விடும் என்பதாக யேசுவின் வழியை குறிக்கிறார்கள். இதை பொருளாதாரத்தில் multiplier effect என்பார்கள்.

ஏ ஆர் ரெகுமானின் இசையைக் குறித்து விமர்சனம் செய்யும் முன் மூன்று விஷயம் செய்தாக வேண்டும்.

1. படத்தை இரு முறையாவது பார்த்திருக்க வேண்டும்
2. மூன்றாவது முறை படத்திற்கு நீங்கள் செல்லும்போது, தயவு செய்து கண்னை இறுகக் கட்டிக் கொண்டு முழுப்படமும் பார்க்க வேண்டும்.
3. இந்த மாதிரி குறைந்த பட்சம் ஏழெட்டு திரைப்படங்களையாவது பார்த்திருக்க வேண்டும்.

இப்படி எல்லாம் அனுபவிப்பதற்கு முன்பே, இங்கே வயலின் வந்திருக்கலாம்; அங்கே குழைந்திருக்கலாம் என்று அனுமாணிக்க இயலாது.

இரண்டாவதாக அருமையான நாவலை காட்சிப்படுத்தல். வசந்த பாலன் ஒரே ஒரு விஷயத்தைத்தான் ‘காவல் கோட்டம்’ போன்ற மிகப் பெரிய புத்தகத்தில் இருந்து எடுக்கிறார். மிக மிக ஜனரஞ்சகமாக ‘லிங்கன்’ எடுக்கும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் எப்பொழுதுமே ஒரே ஒரு குறிக்கோளை நோக்கித்தான் பயணிக்கிறார்.

சட்டதிருத்தத்தை கொண்டு வர லிங்கன் என்ன செய்கிறார் என்பதுதான் முக்கிய புள்ளி. அது செய்தார் என்பதை படம் பார்க்கும் அனைவருமே அறிந்திருந்தாலும், இருக்கை நுனிக்கு வரவைக்கிறார். கறுப்பர்களுக்கு நேர்ந்த அநீதிளை கொடூரமாக சித்தரிக்கவில்லை. தேர்தலில் எப்படி வென்றார் என்பதை விளக்கவில்லை. போரை எப்படி நடத்தினார் என்று காட்சியாக்கவில்லை. இந்த உபகதை அனைத்துமே தொட்டுக் கொள்ள கொஞ்சமாய் வைத்துக் கொண்டார்.

நாவலை ஒரே தினத்தில் வாசித்து முடிப்பதில்லை. திரைப்படத்தை இரண்டரை மணி நேரத்தில் முடித்து விடுகிறேன். அனேக திரைப்படங்களை ஒரு தடவைதான் பார்க்கிறேன். நாவல்களை இரண்டு முறையாவது படிப்பது சகஜம்.

அதனால், ‘கடல்’ திரைப்படத்தில் இந்த மாதிரி ஃபோகஸ் இல்லாதது என்னை அலைக்கழித்தது.

ஆய்வுகள், சுட்டிகள் & விமர்சனங்கள்:

1. மனவெளிப் பயணம்: கடல்:

அர்ஜுன், யாருடனோ தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருக்கும் வசனமிது. ”பாவம் செய்றது, மனுசன் இயல்பா நடக்குற மாதிரி.. ஈசியா பழக்கிடலாம்.. நன்மை செய்றதுதான் வானத்துலே பறக்க செய்ற மாதிரி.. ரொம்ப கஷ்டம்”. இந்த வசனம்தான் படத்தின் மூலம்.

களங்கமற்ற தன்மை, அறிவாளிகளை விட அசடுகளுக்கே கைக்கூடும். எனவே அவர்களின் களங்கமற்ற தன்மையால், எளிதாக இயேசுவை நெருங்குவார்கள். சாம் பாத்திரத்தால், ஒருபோதும் தீமையை செய்ய முடியாது என்று படம் முழுவதும் நாம் உணர்கிறோம். இறுதியில், அவனுடைய களங்கமற்ற தன்மை, சாத்தானால் பரிசோதிக்கப்பட்டு உடைக்கபடுகிறது. பரிதாபமாக தோல்வியை தழுவுகிறான் சாம். புனிதனான சாம் தனது நற்குணத்தை இழந்து, பெர்க்மான்ஸை தண்ணீரில் முழ்க விட எத்தனிக்கையில், சாத்தான் வெற்றி களிப்பில் எக்காளமிடுகிறான். தேவதை போன்ற பியாட்ரிஸினால் மன்னிக்கப்பட்டு தேவனான தாமஸ், பெர்க்மான்ஸை மன்னித்து மீட்கிறான். இப்போது, மன்னிக்கப்பட்டு உயிர்தெழும் பெர்க்மான்ஸால், இயேசுவை மிக எளிதாக நெருங்க முடியும்தானே.

2. கலங்கிய குட்டை: மணிரத்னத்தின் ‘கடல்’ | எம்.டி.முத்துக்குமாரசாமி:

சிறுவன் ‘அம்மா அம்மா’ என்று அலறுவது மணிரத்னத்தின் அஞ்சலி படத்தில் ‘எந்திரி அஞ்சலி எந்திரி அஞ்சலி’ என்று ஒரு அலறல் வருமே அது போல நீடிக்குமோ என்ற என் பீதியை ‘மகுடி மகுடி’ உற்சாகப்பாடல் நீக்கி என்னை அமைதிப்படுத்திவிட்டது.

பிணத்தின் காலை மண்வெட்டியால் உடைத்து சவப்பெட்டிக்குள் அலட்சியமாக இருத்தினானே அவனிடம் சாத்தானின் சாயல் இருக்கிறது

‘அடியே எங்கே கூட்டிப் போறெ’ என்று சித் ஶ்ரீராம் உருகி உருகி பாடும் காட்சியில் துளசி டிசைனர் சேலை கட்டிக்கொண்டு பாசி மணியெல்லாம் அணிந்து இடுப்பை நோக்கி முக்கோணமாய் வளைந்த இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு பூதகி போல நிற்கிறார். பூதகி நடனத்தில் எங்கே நீ கூட்டிபோறே அடியே என்று கேட்டு கதாநாயகன் பாடும்போது அவன் மேல் நமக்கு கழிவிரக்கம் பிறக்கிறது.

3. The Hindu : Life & Style / Metroplus : Sea of imagination:

According to him, Kadal narrates the “story of a wounded boy who is transformed or elevated to a higher spiritual plane by a girl called Beatrice who comes into his life. It is a film on two youngsters from the fishing community, but not in the genre of Malayalam films such as Chemeen and Amaram, which was on the fishing community. The sea in Kadalis merely a backdrop to the story of a man’s transformation.”

Pointing out that Beatrice was the name of the angel who takes Dante to heaven in the epic work Divine Comedy, he says that the movie’s theme is about how it takes just one step or action to turn man into God but it takes several steps to turn a man into the devil.

4. “Kadal”… Coast analysis « Baradwaj Rangan:

When done, they lower the body, now inside an open coffin, and find a leg sticking out – that old joke about the whore who couldn’t keep her legs crossed comes to mind – and one of them sets about breaking the limb, in order to make it fit inside.

5. கடல் – அலைகளைக்கடந்து ஆழம் ~ வேழவனம்:

தான் தான் மிகுந்த அறிவாளி, சைத்தானின் பிரதி என நினைக்கும் அவரை, தான் எதிரியாக நினைக்கும் அனைவரையும் அவர்கள் யோசிக்க இடம் கொடுக்காமல் தனது திறமையால் தோற்கடித்துக்கொண்டே வரும் அவரை, தன் அறிவால் யோசிக்க கூட முடியாத ஒரு சிறு பெண், எளிய அன்பினால் வெற்றி கொள்வதே இந்தக் கடல்.

துணை நடிகர்களின் பங்களிப்பு அபாரம். ஃபாதருக்கு உதவியாக வருபவர்(யேசுவையே நேருல பார்த்தவரு), மீன் விற்கும் பெண் என பலர்.

6. Karundhel:

தாந்தேவைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். புகழ்பெற்ற இடாலியன் கவிஞர். இவரது ‘Divine Comedy’ என்ற கவிதையைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கலாம். நரகம், சொர்க்கம் மற்றும் இதனிடையே இருக்கும் purgatory என்ற மூன்று உலகங்களுக்குள் தாந்தேவின் பயணத்தைப் பற்றிச் சொல்லும் ஒரு நீண்ட கவிதை இது. இந்தப் படத்துக்காக அந்தக் கவிதையைப் படித்துப் பார்த்தேன். மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ள இந்தக் கவிதையில், சொர்க்கத்தில் தாந்தேயின் பயணத்தை வழிநடத்திச் செல்லும் பெண்ணின் பெயர் – Beatrice. சொர்க்கத்தில் பல்வேறு புனிதர்களையும் சந்தித்துப் பேசுகிறார் தாந்தே. பியாட்ரிஸ் என்ற இந்தக் கதாபாத்திரம், தாந்தேவின் நிஜவாழ்வில் அவருக்கு மிகவும் பிடித்தமான பெண்ணின் பெயர். இந்தப் பெண்ணை தாந்தே இரண்டே தடவைகள் மட்டுமே சந்தித்திருக்கிறார். இருந்தும் பியாட்ரிஸின் மீதான அவரது காதலை அவரது படைப்புகளில் வெளியிடும் அளவு அவருக்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்துப் போயிருந்தது. அவரது டிவன் காமெடியில் பியாட்ரிஸ், அன்பின் மொத்த உருவமாக சித்தரிக்கப்படுகிறாள். அதேபோல், கடவுளிடம் நேரடியாகப் பேசக்கூடிய ஒரு உயரிய நிலைக்கு (beatific vision) தாந்தேவை உயர்த்தவும் செய்கிறாள் பியாட்ரிஸ்.

7. கடல் « Charu’s blog:

கடலின் முதல் பத்து நிமிடங்கள் ஜெயமோகனின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியைப் போல் இருந்ததும் “தொலைந்தோம்” என்று பயந்து விட்டேன். பாதிரியார் உடையில் எல்லோரும் அப்படித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். பாரதி மணியைப் பார்த்ததும் நம் நாஞ்சில் நாடனும் பாதிரியார் உடையில் வந்து பேசுவாரோ என்று நடுங்கி விட்டேன். அப்புறம் பார்த்தால் படம் வேறு எங்கோ போய் விட்டது. படத்தின் ஹீரோக்கள் என்று பலரைச் சொல்லலாம் போல் இருக்கிறது. முதல் ஹீரோ ஏ.ஆர். ரஹ்மான். இப்படி ஒரு பின்னணி இசையையும் பாடல்களையும் தமிழ் சினிமாவில் பார்த்து பல காலம் ஆகி விட்டது. பல இடங்களில் கண்களைக் கலங்கச் செய்து விட்டது இசை. ஒரு ஐரோப்பியப் படத்தைப் பார்ப்பது போல் இருந்தது இசை.

படத்தின் ஒரே குறை, அந்த ஹீரோயின். அவருடைய அபரிமிதமான எடை. அவர் கௌதமின் சைக்கிளில் முன் சீட்டில் உட்காரும் போது பார்வையாளர்கள் கேலிச் சிரிப்பு சிரிக்கிறார்கள். தமிழில் வேறு நடிகையா கிடைக்கவில்லை?

8. அந்த டேப் ரிகார்ட் சீன் போன்ற நிகழ்வுள்ள ஒரு கட்டுரை :: என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன? (16-1-07 அன்று பாளையங்கோடை தூய சவேரியார் கல்லூரி தமிழ்துறை சார்பில் ஆற்றிய நினைவுச்சொற்பொழிவு)

” ஏன் அவன் அழுகிறான்? குற்ற உணர்வாலா? இல்லை. அதைவிட நுட்பமான ஓர் உணர்வு. சிந்தனைகளின் உச்சியை அடையவும் ,பெரும் வல்லமையுடன் இயற்கையை வெல்லவும் பொருட்டு படைக்கப்பட்ட ஒரு மானுட ஆத்மாவான அவன் வெறுமொரு தெருவாழ் மிருகமாக வாழ நேரிட்டமை குறித்தே அவன் அழுதான். சற்றுமுன் கோபமாக வெளிப்பட்டதும் அந்த அழுகைதான்”

நித்யா தொடர்ந்தார்.” இந்த அழுகை மானுடனைப்பற்றி நான் என்றென்றும் கொண்டிருந்த அழுத்தமான நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை உறுதிசெய்கிறது. மனிதன் இயற்கையின் சாராம்சமான ஒரு வல்லமையை தன்னுள் கொண்டிருக்கிறான். இயற்கையின் உள்ளுறையாக ஒரு பெரும் கருணை, ஒரு மாபெரும் நன்மை உறைகிறது என நான் எப்போதுமே உணர்ந்துவருகிறேன். அதுவே நாம் காணும் இவையனைத்தையும் ஆக்கி நம் முன் விரித்துள்ளது. அந்த சாரம் மானுடனின் உள்ளும் உறைகிறது.”

9. பிச்சைக்காரன்: கடல் – மீட்பு அளிக்கும் தேவதை:

ஹிரோ ஒரு ரவுடியை போட்டு அடிப்பதில் இருந்து தமிழ் சினிமா காதல் ஆரம்பிக்கும். இதை இந்த படம் உடைத்து இருக்கிறது. யோசித்து பாருங்கள் . நம்முடைய சிறந்த நட்போ,. காதலோ காரணம் ஏதுமின்றி இயல்பாகத்தான் அமைந்து இருக்கும் . இயல்பான நெருக்கம் அருமையாக சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் கொஞ்சம் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படி இல்லாததைத்தான் படத்தின் பெரிய மைன்சாக சொல்ல முடியும்.

10. Dyno Buoy – Google+ – கடல் – http://www.imdb.com/title/tt2344672/ குருடர்கள்…:

இன்னொருத்தர் நஸரீன் (அதையும் ஒரு எலக்ஸ் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட “நஸ் ரீன்”றார் லூயின்றார். அது லுயிஸ்தான், ஃபிரெஞ்சு போல லூயி பண்ணவேண்டியதில்லை மிஸ்டர் எம்கே டீ காபிஜி). படத்தை பார்த்துட்டு வந்து அவசரசரமா விக்கிபீடியா ஐஎம்டிபி துலாவி அப்படிக்கா இப்படிக்கான்னு அடிச்சி விடவேண்டியது.

எனக்கு தெரிஞ்சது / புரிஞ்சது – ஒவ்வொரு நல்லவனுக்குள்ளயும் ஒரு கெட்டவன், ஒவ்வொரு கெட்டவனுக்குள்ளும் ஒரு நல்லவன். ஏதோ ஒன்னு இன்னொன்னை கொல்லும் அந்த ஒரு நொடிப்பொழுது அவரவர் வாழக்கையை நிர்ணயிக்குது.

ஹேமாமாலினி பொண்ணு போல் இருந்த அந்த பெண்மணி மோகன் பாபுவின் மகளாம். அவரும் கச்சிதமாய் மனதில் நிற்கும் கேரக்டர்.

எல்லாத்துக்கும் மேல் காமெடியன் ஒருவரை கூடவே சுத்தவிட்டு காட்சியில் வருவதை பார்வையாளனுக்கு விளக்காமல் பார்வையாளன் மேல் நம்பிக்கை வைத்ததிற்கு நன்றி மணி ரத்னம் (அந்த காமெடியன் இல்லாத்தால்தான் பலருக்கு படம் புரியவில்லையஓ என்றும் எண்ணம் வருகிறது).

லெ மிஸ்ஸரப் (Les Meserables) பார்த்திருந்தால், கடல் படத்தின் ஓட்டத்தில் சிலலிடங்களில் ஒத்து போவதை பார்க்கலாம்.

11. bogan R – Google+ – கடல் விமர்சனம் ஜான் ச்டீன்பேக்கின் East of Eden என்றொரு…:

நேரடியாக அறம் போதிப்பதை /விவாதிப்பதை பொதுவாகவே இளைஞர்கள் விரும்புவதில்லை .எதிர் அறம் தான் இன்று மிகப் பெரிய ஆளுமையை அவர்களிடம் செலுத்துகிறது.ஆரண்ய காண்டம் போன்ற படங்கள் பெற்ற பெரிய வரவேற்பைக் கவனத்தில் கொள்ளவும்

12. கடல் – சினிமா விமர்சனம் ~ உண்மைத்தமிழன்:

துளசியின் அறிமுகக் காட்சியிலேயே அவளது லேசான மனநிலை பிறழ்ந்த நிலை அறிமுகப்பட்டிருந்தாலும் பின்னாளில் கலைராணி சொல்லும்போதுதான் நமக்கு உணர முடிகிறது.. படம் பார்த்து 2 நாட்கள் கழித்துதான் இந்தக் காட்சியை மணி ஏன் வைத்திருக்கிறார் என்பதே புரிகிறது..!

13. Narendiran M – Google+ – கடல் வெயிலும் உதிர் மணலும் தினம் மீட்டெடுக்கும் கருவாட்டு…:

“எனக்கு வீட்ல சோறு இல்லை, அதான் விடுதியில சேர்ந்தேன்” – “எனக்கு வீட்ல தியானம் இல்லை. அதை தேடி தான் இங்க சேர்ந்தேன்”என வசனங்களிலேயே கதையின் தளங்களை நிறுவிக்கொண்டே செல்கிறார் ஜெ.எம். உன்னிப்பாக கவனித்தால் குறைந்தபட்சம் அறுபது நாகை வட்டார வசவு சொற்களை கற்கலாம். நாவல் வடிவிற்க்காக காத்திருப்போம்.

14. பிச்சைப்பாத்திரம்: கடல் – மணிரத்னத்தின் Intellectual menopause ..:

தீவிரவாதம்+காதல், நிஜ ஆளுமைகளின் நிழலுருவாக்கம் என்கிற வார்ப்புருக்களின் வரிசையில் மணிரத்னத்திற்கு பிடித்தமானது இதிகாச ரீமிக்ஸ். அவ்வகையில் விவிலியத்தின் சில கூறுகளை எடுத்துக் கொண்டு கிருத்துவப் பின்னணயில் உருவாக்க்கப்பட்டிருக்கும் ‘கடல்

அர்விந்த் தேவனின் மகிமையை தொண்டை நரம்பு புடைக்க உச்சஸ்தாயியி்ல் கத்திச் செல்வதோடு படம் நிறைவு பெறுகிறது.

15. ஆழமும் அலைகளும் அற்ற கடல் | தமிழ் பேப்பர்:

பொருளாதார பலத்தைப் பெற ஆரம்பித்ததும் மேற்கத்திய கிறிஸ்தவ நிறுவனங்கள் எப்படியாகத் தங்கள் மத மதிப்பீடுகளை வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல் ஏற்றுவார்கள் என்பதற்கு சமீபத்தில் வெளியாகும் படங்களே சான்று. கென்னி விக்ரம் – ஜீவா அன்கோவின் டேவிட் என்ற படமும் இதே நாளில்தான் வெளியாகியுள்ளது. விண்ணைத் தாண்டி வருவாயா, பயணம், நான் ஈ, நீர்ப்பறவை, தாண்டவம் என கிறிஸ்தவச் சார்பு படங்கள் சாரைசாரையாக வர ஆரம்பித்திருக்கின்றன. ஏற்கெனவே, பாரதிராஜாவில் ஆரம்பித்து கமலஹாசன் வரை கிறிஸ்தவ மென் சாய்வுடன் பழைய ஏற்பாட்டில் இயங்கிவந்திருக்கிறார்கள்.

இன்னும் பலர்: கடல் – Google Groups